கரை கடந்த அலைகளின் தொகுப்பு.

Thursday, September 23, 2004

எனக்குப்பிடித்த மனிதர்களில் ஒருவர்.

தெருவில் ஐஸ் அல்லது பொறி உருண்டை விற்றுச்செல்பவரைப் போலத்தான் உங்களுக்கும் ஏன் எனக்கும் கூட அவரைப்பார்த்தால் தோன்றும். அன்னாருடைய தோற்றம் அப்படி. தோற்றம் மட்டுமே எப்படி ஒரு மனிதனுக்குத் தவறான முதல் முகவரியையோ அல்லது முதல் அபிமானத்தையோ தரவல்லது என்பதை அவரைக்கொண்டும் நான் அறிந்துகொள்ளும்படி இயற்கை எனக்கு கற்றுவித்திருக்கிறது.
மாதத்தின் முப்பது நாட்களில் இருபத்தைந்து நாட்கள் வெளியூர்ப்பயணம். தொடர்ந்த சிலமணி நேர பயணங்களுக்கே நாமெல்லாம் நொந்து நூலாகிப்போகிறோம். தண்ணீர் முதல் வாந்தி எடுத்தால் பிடித்து வைப்பதற்கு பிளாஸ்டிக் கவர் வரை சேகரித்துக்கொண்டு கிளம்புகிறோம். இதற்கிடையில் ஜன்னலோர இருக்கைகளுக்காக குருஷேத்திரங்களையும், பாபர், அக்பர்களை மிஞ்சும் வகையில் பானிபட்டுகளையும் கூட நம்மில் பலர் நடத்துகிறோம். ஆனால் இவர்?
அறுபத்தொன்பது வயது. உடலுக்குத்தான் அது. மனதுக்கு? இருபத்தைந்துதான் இருக்க வேண்டும். கோட்டை முதல் குமரி வரைஇன்னும் பொதுக்கூட்டங்கள், பேரணிகள்; ஊர்வலங்கள். கலைஞரைப்போல வயதுக்குகந்த கார்களையோ இருக்கைகளையோ பயன்படுத்துவதில்லை இவர். கார்களைப் பயன்படுத்தும் அளவுக்கு வசதியும் இல்லாதவர், அவற்றைக்கொடுக்கும் நிதி படைத்த கட்சிகளையும் சாராதவர். பதினெட்டு வயதிலிருந்து ஒரே கட்சி கம்யூனிஸ்ட் கட்சி; ஒரே பணி மக்கள் பணி. வாரிசுகளை ஓட்டுச்சாவடிக்கே செல்லவிடாமல் மத்திய மந்திரிகளாக்கும் மரபு தலைவிரித்தாடும் வகையில் இவர் எல்லா அரசியல்வாதிகளையும் விட புனிதமானவர்.
அண்மையில் அவருடைய மனைவியின் பேட்டி ஒன்றைப் பத்திரிகைகளில் படித்தேன். செல்லம்மாவின் வழி வாரிசுகளில் இன்னும் ஒருவர். அறுபத்தொன்பது வயதிலும் மக்கள் பணியாற்றும் ஒரு மகானுக்கு மனைவி. நல்லதுக்கும் கெட்டதுக்கும் கணவன் அருகினிலே இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கும் சராசரிப்பெண்களின் ஒருத்தியாய் எதிர்பார்த்து வந்திருப்பார். நடப்பதை முழுமனதோடு ஏற்றுக்கொண்டு எங்கிருந்தாலும் உடம்பைக் கொஞ்சம் கவனித்துக்கொள்ளுங்கள் என்றவாறு அன்போடு அரவணைத்துப்போகும் இல்லத்தரசியாய் இப்போது அவர். நான்கு வேட்டிகள் மட்டுமே தன் கணவர் வைத்திருப்பதாகச் சொன்னார். நான்கு வேட்டிகள்! கம்பிகளில் தொங்கும் ஆடை வகைகளைக் கொஞ்சம் பார்த்தபடி இதை நாமும் கொஞ்சம் யோசிக்கவேண்டும்.
இலக்கியவாதிகளின் பின்பாகத்தையும் அரசியல்வாதிகளின் முன்பாகத்தையும் கொண்டு அரசியலில் நீச்சலடிப்பார் பலர். வெஞ்சினத்தைப் பின்புறம் வைத்து வெற்றிச்சிரிப்பை முன்புறம் வைத்தும் அரசியல் நடத்துவார் சிலர். எப்போதும் ஆணவத்தின் முகமாக தலைநிமிர்ந்து அகங்காரத்தின் உருவமாக இருப்போரும் கூட அரசியலில் இருக்கிறார்கள். ஆனால் இவர்?
ஆத்மார்த்தமாக நாம் ஆசைப்படும் எந்த நல்லவிஷயமும் நமது முயற்சியின்றியும் கூட நம்மிடம் வந்துசேருமாம்; நடக்குமாம்.
எப்போதாவது இவரைச் சந்திப்பேன் என நினைத்துக்கொண்டே இருக்கிறேன். அப்போது சாஷ்டாங்கமாய் காலில் விழுந்து வணங்க வேண்டும்.மக்கள் மனங்களின் மந்திரி திரு. நல்லகண்ணு அவர்களுக்கு என் வணக்கங்கள்.
எம்.கே.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, September 16, 2004

எனக்குப்பிடித்த நாட்களில் ஒன்று.

எம்.கே.
செப்டம்பர் மாதத்தில் எனக்கு எப்போதும் பிடித்த நாட்கள் இரண்டு. ஒன்று ஈஸ்வரன் சாருடைய மூத்த பையன் தினமாக வரும் சதுர்த்தி நாள். அன்று பெரிதாக ஏதும் செய்யாவிட்டாலும் கொஞ்ச நேரமாவது 'சும்மா' உட்காந்திருப்பேன். இரண்டாவது நாள் செப்டம்பர் பதினாறு.
இந்த பதினாறுக்கென்று எப்போதும் ஒரு 'கிக்கு' உண்டு. பன்னிக்குட்டி கூட பமீலா ஆண்டர்சன் மாதிரி தெரியுமாம் 16 ல். (நன்றி: ரங்கண்ணா) நான் பார்த்ததில்லை. அதுபற்றியும் ஏதும் தெரியாது. பதினாறு வயதில் வந்துபோன சீப்புக்கொடுத்த 'மயில்கள்' தெரியும். கோபாலகிருஷ்ணன் என்று எனக்கு பெயர் வைக்க வரவில்லை அந்த மயில்கள். சப்பாணி என்று வைக்க (அட! செல்லமாத்தான்ப்பா!) வந்த மயில்கள் அவை. மயில்கள் இருக்கட்டும், அது எப்போதும் வரும்; போகும்; இருக்கும். கதைக்கு வருவோம்.
செப்டம்பர் பதினாறில் அப்படி என்ன விஷேசம்? தி.மு.க வருடா வருடம் முப்பெரும் விழா கொண்டாடுகிறதே அதுதான் ஸ்பெசலா? செப்டம்பர் 15 ல் பிறந்தார் ஒரு அண்ணா தெரியுமா? அந்த அண்ணா பண்ணிய நல்ல வேலைகளில் ஒன்று 17 ல் நடந்தது. திராவிட முன்னேற்ற கழகம் பிறந்தது. பிற்காலத்தில் கீதைக்கு புது விளக்கம் சொல்லும் அளவுக்கு(!?) பல நல்ல தலைவர்களை உருவாக்கி விடும் அளவுக்கு கழகம் வளர்ந்தது. ஆக செப்டம்பர் 15 அண்ணா, செப். 17 திமுக. முப்பெரும் விழாவுக்கு இருகாரணங்கள் ரெடி. மூன்றாம் காரணம் வேண்டாமா? வந்தாரய்யா வந்தார் வெண்தாடி வேந்தர். தி.மு.க பிறந்த அதே 'செப்டம்பர் 17' ல் பிறந்தார். தி.மு.க வுக்கு முப்பெரும் விழா. அது சரிப்பா. 16 க்கு என்ன விஷேசம்?
இந்தியாவின் பொருளாதரப்புலி மன்மோகன்சிங். அவருக்கடுத்த பொருளாதார 'அஸிஸ்டண்ட் புலி'யான ப.சிதம்பரம் செப் 16 ல் பிறந்தார். புதிய பொருளாதாரக்கொள்கை பிறந்தது. பெப்சி வந்தது. சரி சந்தோசம். அது மட்டும்தானா?
அட! அதையெல்லாம் விடுங்கள். மீராவைத்தெரியுமா உங்களுக்கு? மீராவாக நடித்த எம்.எஸ்.எஸ் அம்மாவை? கேட்காத காதுகளிலும் புகுந்து செவியின்பம் தரவல்ல பாரதரத்னா எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா பிறந்த நாளாம் இன்று. ஆஹா! பாரதரத்னாவா? ம்ம். வேறு ஏதேனும்?
இருக்கிறதே, இந்திய காளைகளின் ஒரு காலத்து கனவு கன்னியும் இன்றைக்கு ஜப்பானிய இளவல்களின் கனவுலா நாயகியுமான 'கண்ணே மீனா, மீனே கண்ணா?' கவிதையின் மீன் கண்கள் நாயகி மீனா செப்டம்பர் 16 ல் பிறந்தாராம். ஆஹா! கொடுத்த வைத்த பதினாறய்யா! வேறு ஏதும் இருக்கிறதா? இருக்கத்தான் வேண்டுமா? அட! அவசரப்படாதீங்க!
இதெல்லாம் ரெக்கார்டுகள் சொல்வது. எனக்குத்தெரிந்த (ஆனால் அவருக்கு என்னைத் தெரியாத) ஒருவருக்கும் இன்றைக்குத்தான் பிறந்த நாளாம். சிங்கப்புராவை சிங்கப்பூராக்கியவர். இப்படி ஒருவர்தான் இப்போது இந்தியாவுக்கு வேண்டும் என்று நான் நினைக்கும் மிகச்சிறந்த தலைவர்களில் ஒருவரான மூத்த அமைச்சர் லீ குவான் கியூ. ஆஹா! இந்த தினத்தில் ஏதோ விஷயமிருக்கிறது! அது நிச்சயம் தெரிகிறது. ஆனால்..?
'அட...எல்லாம் சரிப்பா! இன்றைய இன்று உனக்கேன் பிடித்தது? அதற்கு காரணம் சொல்லு!?' என்று நீங்கள் கேக்கலாம். என்ன சொல்வது? ஏதோ பிடித்திருக்கிறது.
(பின்னணியில், 'எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்...'பாடல் ஒலிக்கிறது!)
எம்.கே.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, September 15, 2004

திருந்துங்கள் தந்தைகளே!

கடந்த ஒரு வார காலத்தில் நான் படிக்கும் இரண்டாவது செய்தி இது. காதலித்துத் திருமணம் செய்துகொண்ட தனது பெண்ணின் தலையை வெட்டிய தந்தையர்கள். காரணம் என்ன பெரிதாய் இருக்கப்போகிறது? வேற்று ஜாதிகள். வேறு உறவுமுறைகள்.
கம்ப்யூட்டரில் பார்த்து கம்ப்யூட்டர் வழியே பேசி கண்டம் விட்டு கண்டம் தாண்டியெல்லாம் திருமணம் நடந்துகொண்டிருக்கும் இக்காலத்தில் இன்னும் காதலுக்குப் பகைவர்களாய் இருந்துகொண்டிருக்கும் இவர்களை நினைத்தால் அய்யோ பாவம் என்றும் அவர்கள் செய்யும் செயலை நினைத்தால் ஆத்திரமும் கோபமும் வருகிறது.
அண்மையில் சென்னை விமான நிலையத்தில் ஒரு காட்சி என்னைக் கொஞ்சம் சுவாரஸ்மாக்கியது. ஐரோப்பிய தேசத்துப்பெண் டார்க்புளூ ஜீன்ஸ¤ம் வெளிர் ஊதா டிஷர்ட்டும் போட்டுகொண்டு மலங்க மலங்க விழித்துக்கொண்டிருக்கிறார். மலங்க மலங்க விழித்தலில் பயமோ அல்லது வேறு எந்த நடுநடுக்கமோ இல்லை. பார்க்கும் எல்லோரிடமும் சின்ன வாஞ்சையோடு அல்லது எதிர்பார்க்கும் உறவுப் பாளமான சிறிய புன்னகையோடும் நிற்கிறார். அருகில் நின்றிருக்கும் வாலிபர் முகத்தில் 'ஹாலிவுட் படத்தை டைரக்ட் செய்யும் பொறுப்பு' வந்துவிட்டதைப்போன்று முதிர்வு. புன்னகையை எதிர்பார்த்துக்காத்திருக்கும் அவருக்கு அங்கீகரிக்கப்பட்டதன் அடையாளமாக நானும் ஒரு மெல்லிய புன்னகையை நழுவி விட்டுச் செல்கிறேன். அவருக்குப் பெருமை. தனது கணவரின் முகத்தைப் பார்த்துவிட்டு டார்க்புளூ டி ஷர்ட்டுக்கு மேலே தொங்கும் மஞ்சள் நிறத்தாலியை விரல்களால் இதமாகத் தடவிக்கொள்கிறார். ஆஹா!
மேல்தட்டு மக்கள். வாழ்க்கையில் எது முக்கியம் என்பதைப் புரிந்துகொண்டவர்கள். இச்சமுதாயத்தின் வாய்ப்பூச்சுகளுக்கும் வாய்ப்பேச்சுகளுக்கும் 'ஸீயு' என்ற ஒற்றை வார்த்தையைப் பதிலாக்கி விட்டுச்செல்பவர்கள். வெளிநாடுகளில் இருந்து வரும்பொழுது ஏதும் வாங்கிவராவிட்டாலும் வாங்கி வந்தாலும் ஏதாவது குறை சொல்லும் இவர்களைப் பற்றி அவர்களுக்கு நன்றாகத்தொ¢ந்திருக்கிறதன் விளைவே இந்த ஜஸ்ட் ஸீயூ.
சாராயக்கடையின் நேற்றைய பாக்கியை ஓடிப்போன மகளின் வழி சொல்லிக்கேட்டிருப்பான் சாராயக்கடைக்காரன். அவனை ஒன்றும் செய்யமுடியாது. வீட்டில் வந்து மூளை சாய்ந்த நிலையில் நல்ல பசி மயக்கத்தில் திடுமென்று ஆவேசம் வந்து எழுந்து அரிவாளை எடுத்திருப்பார்கள். பொத்தி பொத்தி வளர்த்த கணங்கள் கண்ணுக்குள் வராது. வயிற்றின் நாளைய கூப்பாடுகளும் தேடுதல் தேவைகளும் அப்போது தோணாது.
வெட்டிய பிறகு அவரது நிலையில் அதிரடி மாற்றங்களோ அல்லது மனசு சமாதானக்கூண்டாகவோ ஆகிவிடாது. அல்லது அவரை அந்நிலைக்குத்தள்ளிய இச்சமுதாயத்தின் வாயிலும் அடப்பாவி என்ற ஆச்சரியக்குறியும் பழிச்சொல்லும் மட்டுமே வந்து நிற்கப்போகிறது. அப்படியிருக்க என்ன காரணத்தினால் இப்படிச்செய்கிறோம் என்பதை அவர்கள் ஒரு நிமிடம் யோசித்தால் போதாதா?
அட, என்னய்யா வேண்டும் உமக்கு? நன்றாய் உமது மகள் வாழவேண்டும் அவ்வளவுதானே? கூப்பிடு. உனது பெண் காதலிக்கும் பையனைக் கூப்பிடு. மனதாரப் பேசு. அவளை வளர்த்த கதையைச்சொல். கஷ்டத்தைச் சொல். உனது தேவையைச் சொல். புரிந்துகொள்கிறானா பார். உனது மகளின் மனதைப் பக்குவப்படுத்து. நிதானமாகப் பேசு. இதிலெல்லாமா உனது மகளிடம் நீ பேசக்கூடாது?
காதல் என்பது என்ன ஐயா? அழகான உணர்வுகளின் நீட்சி இல்லையா? உனது உண்மையான உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமலா இருப்பாள் நீ பதினைந்து வருடங்கள் பொத்திப்பொத்தி வளர்ப்பவள்? காதல் உணர்ச்சி கொண்டவள்? ஜாதி மாறிப்போவதைச் சாடி ஏசும் சமுதாய மாக்களா உனக்குச் சோறு போடப்போகிறார்கள்? உனக்கு நல்லது கெட்டது செய்யப்போகிறார்கள்?
ஒரே ஒரு நிமிட யோசனை எவ்வளவு அழகான வாழ்வை நிர்மாணிக்கிறது பாருங்கள்!
எம்.கே.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, September 13, 2004

புதுசா கண்ணா புதுசா?

எம்.கே.
ஆனந்த விகடனின் பின் தொடரும் வாசிப்பாளர்களுக்கு நான் சொல்லாவிட்டாலும் கூட அழகான மயிற்தோகையில் ஆங்காங்கு வெளுத்த நிறம் மருகி மிகுந்து வருவது போல ஒரு நுழைவு மனதில் ஏற்படக்கூடும். இந்த வெளுப்பு ஏதோ திடீரென்று தோன்றியதாயல்லாமல் சாயம் போவது போன்று காலத்தோடும் பயன்பாட்டோடும் பின்னிப்பிணைந்து உருமாறி வருகிறது என்பதைக் கொஞ்சம் ஆழ்ந்து கவனிக்க வேண்டியுள்ளது.
அட்டை டு அட்டை வரை கிளுகிளுப்புப்படங்களையும் அதுசார்ந்த விவரிப்புகளையும் தாங்கி வந்த பத்திரிகைகளின் வரிசையிலிருந்து கொஞ்சமேனும் விலகி 'நாடார் கடையில் வாங்கும் விளம்பரமற்ற தரம் படைத்த பொருட்கள்' போல இருந்து வந்த அதன் இடம் இப்போது சராசரிக்கடையை ஒத்திருக்கிறது. சிலசமயங்களில் சாக்கடையையும்.
சிறுகதைகளைக் குறுக்காக வெட்டி புதுச்சிறுகதைகளைப் படைக்க ஆரம்பித்துவிட்டார்கள். படிக்கவே வெறுப்பாயிருக்கிறது. ஹாலிவுட், ரொமான்ஸ், விகடன் க·பே மற்றும் இன்னபிற நாகரீக தலைப்புகளின் வழியே இன்றைய மல்லுக்கட்டுக்குள் அவர்களும் தாவிக்குதித்து விட்டார்கள். செய்தி இல்லாமல் வரும் பின் அப் படங்களும் கூட ஏதாவது வழிந்தோடும் விமர்சனத்தோடு வளைய வர ஆரம்பித்துவிட்டன. இதுபோக மற்றவைகளும் சினிமா வழியாய் டிவி வழியாய் அனு அக்கா ஆன்ட்டி வழியாய் எளிதாக மேலாடையின்றி நடனமாடத் துவங்கிவிட்டன.
இந்த மல்லுக்கட்டுக்கிடையில் இலக்கிய உலகிலும் நிற்பதாய் காட்டவேண்டிய அவசியம் அதற்கு. ஜெயமோகனும் எஸ் ராமகிருஷ்ணனும் கொஞ்ச காலம் அந்த வேலையைச் சிறப்பாகச்செய்தார்கள். இதுபோக சன் டிவியில் மாதச்சம்பளம் வாங்கும் சாலமன் அய்யா போல விகடனில் சுஜாதா தாத்தா கண்ணில் கிடைத்ததை, காதில் கிடைத்ததை மற்றும் இன்னபிற அ, ஆ கதைகளையும் நடப்புகளையும் எழுதி இலக்கியப் பங்கு படைத்து வருகிறார். (இருமகன்கள் அமெரிக்காவில் இருக்கிறார்கள். எழுபதாயிரத்துக்கு இந்த இதழ் வழி கையேந்துகிறார்!)
இந்த இலக்கியப்பங்கை இன்னும் சிறப்பாகச்செய்ய அவ்வப்போது முயன்று கேவலப்படுத்திக்கொள்கிறது விகடன். இதன் தொடர்ச்சியாய் இப்போது பிரபல கவிஞர்களின் கவிதைகள் வாரா வாரம் வருகின்றன. அந்த வரிசையில் கபிலன், யுகபாரதி, பழனி பாரதி இன்னும் சிலரது கவிதைகளைப் படைக்கும் வாய்ப்புக் கிடைத்தது அண்மையில். எப்படிசொல்வது? கேவலம். சில கவிதைகளைக் கவிதைகள் என்று சொல்வதற்கே மனம் கூசுகிறது. மிகவும் சாதாரண வரிகளாய் ஒப்புக்கு மாவிடிக்கும் உப்பாத்தா போல வந்து போகின்றன அவை. கவிதைகள் வேண்டும் என்று கவிஞர்களிடம் கேடபதற்கு முன்னால் சற்று காலம் கொடுத்தாவது நல்ல கவிதைகளாய்க் கொடுங்கள் என்று கூற வேண்டாமா?
அன்மையில் நான் படித்த சில மரத்தடிக்கவிதைகள் கூட இந்த வரிசையில் மிக உயரத்தில் நன்றாக இருப்பதாய்த்தோணுகிறது. குறிப்பிடத்தகுந்தவர்களாய்ச் சொல்லவேண்டுமெனில் மீனாக்ஸ்ஸினுடையதும் ஷக்தியினுடையதும் ஆகும். இதுபோக இணையத்தில் இன்னும் சில எதிர்பாராத இடங்களில் செந்தாமரைகள் போலக் காணக்கிடைக்கின்றன சில அழகான கவிதைகள். இந்த வரிசையில் கவிதைகள் மட்டுமின்றி கட்டுரைகளும் உண்டு.
அவை பற்றிப் பிறகு பேசலாம். இப்போது விகடனுக்கு வருவோம். என்ன ஆனது விகடனுக்கு? இருப்பவர்கள் எல்லோர் பெயரும் ஏதாவதொரு ஆசிரியப்பொறுப்பில் இருக்கின்றன. எல்லா நிருபர்களையும் ஆசிரியராக்கிவிட்டார்களா? என்ன நடக்கிறது என்பது புரியவில்லை.
பின்னொரு நாளில் தொகுப்பாய் விற்றுக் காசு பண்ணும் வகையில் விகடனுக்கே உரிய புதுப்புது தொடர் கட்டுரைகளில் மட்டுமே அதிக கவனம் எடுத்து வரும் விகடன் இதுபோன்ற மற்ற விஷயங்களிலும் கொஞ்சம் கவனமெடுத்துச் செய்யவேண்டும். ஒரு சாதாரண வாசகனின் விருப்பம் அதுதான்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.