இலங்கை- நான் நினைத்தது சரிதானா?
இலங்கை என்ற நாடு உலக வரைபடத்தில் உதித்த நாளிலிருந்து இன்றுவரை அங்கு நிம்மதியான, நிலையான ஆட்சி என்பதே இல்லை எனவும் இது பரமசிவனின் போக்கால் கோபம் கொண்ட பார்வதியோ இல்லை ஏதோ ஒரு தேவதையோ போட்ட சாபமாகும் எனவும் ரஜினி முன்பொரு "அரசியல் கதாநாயக" மேடையில் கதையாகச் சொன்னார்.
ரஜினியின் அரசியல் பிரவேஷங்களும் அது தொடர்பான பேச்சுகளும் இன்று முடிவுக்கு வந்த நிலையில் அந்த கதையை மட்டும் என்னால் மறக்கமுடியவில்லை.
மறக்கமுடியாததற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அது, அன்றைய காலத்தில் அதாவது ரஜினி அக்கதையைச் சொல்லிய காலத்தில் நான் இலங்கையின் அரசியல் வரலாறு பற்றிய புத்தகமொன்றை படித்துக்கொண்டிருந்தேன். அதிலும் அப்படித்தான் இருந்தது.
தந்தையை வெட்டிக் கொலை செய்துவிட்டு அண்ணன் ஆட்சிக்கு வருவது; தம்பியின் ஆட்கள் அண்ணனை வெட்டிக்கொலை செய்வது; தாய்மாமனின் ஆட்சி. அதுவும் துர்கொலைகளால் முடிவுக்கு வருவது. இப்படியாகத்தொடர்ந்து படுகொலைகள், துரோகங்கள், ஆட்சிக்கவிழ்ப்புகள் என கிபி. 5 ஆம் நூற்றாண்டு தொடங்கி ஒரு நிலையான ஆட்சி என்பது அங்கு இல்லை என்பதை உணரமுடிந்தது.
அண்மையில் ஊருக்குச் சென்றபோது இலங்கை வழியாகச் செல்லநேர்ந்தது. தாவணி போட்ட பெண்கள் அனைவருமே அழகாய் இருப்பதைப்போல இலங்கையும் வானத்திலிருந்து பார்க்க மிக அழகாய் இருந்தது. பண்டாரநாயகா சர்வதேச விமானநிலையத்தில் கால் வைத்தபோது அதன் அழகையும் சுறுசுறுப்பையும் ரசிக்கும் ஆவலையும் மீறி இந்த 'ஆட்சி பற்றிய எண்ணங்களே' என்னுள் வந்து நின்றன.
இப்போதுதான் விமான நிலையம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் மிகவும் அழகாக எல்லாவித வசதிகளையும் கொண்ட ஒரு விமான நிலையமாய் நேர்த்தியாக வடிவமைத்து முடியும் தருவாயில் இருக்கிறது அதன் கடைசிகட்ட வேலைகள். அழகான எல்லாவித வசதிகளையும் கொண்ட ஒரு கட்டிடமாய் விமான நிலையம் இருந்தால் மட்டும் போதுமா? அங்கே வேலை செய்வதற்கு சிங்கப்பூரிலிருந்தா ஆட்களை அனுப்பமுடியும்?
ஆம்! இமிக்ரேஷனில் இருப்பவர்கள் அனைவரும் ஒருமாதிரியாகத்தான் என்னைப் பார்த்தார்கள். வேறு ஏதாவது ஜாடை(!) என்மீது இருக்கிறதா எனவும் நான் கண்ணாடியில் பார்த்துவிட்டேன். அப்படியெல்லாம் ஒன்றும் தெரியவில்லை. வழக்கமான 'மூஞ்சியாக' த்தான் இருந்தது. நான் சென்ற இமிக்ரேஷன் கவுண்டரில் இருந்தவரும் அதை உண்மை என்றே நிரூபித்தார். மூஞ்சியை 'உராங் உடான்' போல வைத்திருந்தார் அவர். ( அவர் பெயரும் பணி எண்ணும் இன்னும் ஞாபகத்தில் இருக்கின்றன.!)
விண்ணப்பப்படிவத்தில் ஹோட்டல் பெயரை ஒரு கட்டம் விட்டு எழுதவில்லை என்பதற்காக 16 கேள்விகள் கேட்டார். ' டிரான்ஸிட் பயணி' என்பதைச் சொல்லியும் முடிந்த அளவுக்கு கேவலப்படுத்திவிட்டுத்தான் என்னை வெளியில் விட்டார். போதாதற்கு சிங்கப்பூரில் நான் பணி்புரியும் 'வேலை உரிமைச் சீட்டைக்கூட' கேட்டு வாங்கிப்பார்த்தார். வெளியில் இருந்தவர்கள் ஏதோ எதிரி முகாமிலிருந்து நேரே புறப்பட்டு வந்தவனைப்போல என்னைப் பார்வையால் குடைந்துவிட்டார்கள்.
தமிழனின் அடையாள உணர்வோடு(!) வீரநடை போட்டு வெளியே வந்து ஹோட்டலுக்குச் செல்வதற்குள் 'நாக்கு' தள்ளிவிட்டது. பேசாமல் சென்னை சென்று அங்கிருந்தே திருச்சி சென்றிருக்கலாமோ எனவும் யோசித்தேன். டிக்கெட் விலையும் ரொம்பவெல்லாம் அப்போது வித்தியாசமில்லை. (சிங்கப்பூரிலிருந்து கொழும்பு வழியாக திருச்சிக்கு நேர்பயணம்!)
ஒரு பயணியை தகுந்த காரணங்கள் இன்றி இந்த அளவுக்கு அவமதிக்கும் அவரது செய்கை எனக்கு நியாயமாகப்படவில்லை. எனது பாஸ்போர்ட்டிலோ அல்லது வேறெதிலுமோ அவருக்குச் சந்தேகம் வந்து கேட்டிருந்தால் கூட அமைதியாக இருந்திருப்பேன். (தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் என பல முத்திரைகள் இருக்கின்றன அதில்! எங்கும் இத்தகைய அனுபவம் நேர்ந்ததில்லை!) அவர் பேசிய விதமும் எந்தளவிலும் சரியாக இல்லை.
'எந்தவொரு சுற்றுலாப் பயணியையும் இப்படி நடத்தாதீர்கள்' என்ற ஒரு வேண்டுகோளையும் வேதனையையும் மட்டும் 'பெட்டியில்' எழுதிப்போட்டுவிட்டு வந்து விட்டேன். இந்தியாவாயிருந்தால் 'Goடா Hair!' என்று அலட்சியமாக வந்திருப்பேன். இலங்கை, கொஞ்சம் முயன்றால் சிங்கப்பூரைப் போல அது என்ன, அதை விட செல்வம் கொழிக்க வாய்ப்பிருக்கும் நாடு என்று ஒரு மரியாதையோடு காலடி வைத்தேன்.
முதல் அனுபவம் இப்படி முடிந்ததில் மிகவும் வருத்தம். ஏற்கனவே மனதில் இருந்ததோ என்னவோ 'இவ்வளவு அடிப்படை வசதிகளையும் வாய்ப்புகளையும் கொண்டு இன்னும் முன்னேறாமல் அப்படியே நீங்கள் வைத்துக்கொண்டிருப்பதை விட இலங்கை முன்னேற வேண்டுமென்பதில் மிகவும் சிரத்தையும் ஆர்வமும் கொண்டிருக்கும் சக நாட்டவர்கள் 'யாரிடமாவது' விட்டுக்கொடுத்துவிடலாமே!' என என்னையும் அறியாமல் ஒரு எண்ணம் வந்து நின்றது. 'துரோகங்களுக்காகப் பழிவாங்குதலைத்' தவிர இத்தகைய காரியங்கள் எதையும் 'அவர்கள்' செய்யமாட்டார்கள் என்பதும் நாடு முன்னேறுவதில் நேர்மையாக உழைப்பார்கள் என்பதும் என் மனதில் மலர்ந்திருக்கும் இன்னொரு எண்ணம்.
பாவம்! சாரை சாரையாக, பாவப்பட்ட பெண்கள் மத்தியக் கிழக்கு நாடுகளுக்கும் மற்ற நாடுகளுக்கும் வீட்டு வேலைக்குச் செல்வதைப்பார்த்தபோது இன்னும் கொஞ்சம் கோபம் வந்தது உண்மை! கையாளாகாத கோபம்! யார் மீது என்று தெரியவில்லை. தூங்கியும் தூங்காத கண்களோடு வாழ்க்கையின் அவல நிலைகளை வெளிச்சம் போட்டவாறு கையில் எளிய ஒரு பெட்டியோடு வாழ்க்கை தேடிச்செல்லும் அவர்களைப் பார்த்து கண்ணீர் வந்தது உண்மை!
ஆனால் ஒருமாதம் கழித்து அதே வழியில் திரும்பி வந்தபொழுது எனது கடவுச்சீட்டை சோதித்தவர் ஒரு பெண்மணி! 20 வினாடிக்குள் வேலையை முடித்து அனுப்பிவைத்தார், அவர் பெயரைப் பார்த்தேன் வசந்தா அல்லது வசந்தி! இலங்கைக்கு வாழ்வு தரும் வசந்திகள்! வாழ்க நீவிர்!!
எம்.கே.குமார்!





