கரை கடந்த அலைகளின் தொகுப்பு.

Thursday, March 31, 2005

இலங்கை- நான் நினைத்தது சரிதானா?

இலங்கை என்ற நாடு உலக வரைபடத்தில் உதித்த நாளிலிருந்து இன்றுவரை அங்கு நிம்மதியான, நிலையான ஆட்சி என்பதே இல்லை எனவும் இது பரமசிவனின் போக்கால் கோபம் கொண்ட பார்வதியோ இல்லை ஏதோ ஒரு தேவதையோ போட்ட சாபமாகும் எனவும் ரஜினி முன்பொரு "அரசியல் கதாநாயக" மேடையில் கதையாகச் சொன்னார்.

ரஜினியின் அரசியல் பிரவேஷங்களும் அது தொடர்பான பேச்சுகளும் இன்று முடிவுக்கு வந்த நிலையில் அந்த கதையை மட்டும் என்னால் மறக்கமுடியவில்லை.

மறக்கமுடியாததற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அது, அன்றைய காலத்தில் அதாவது ரஜினி அக்கதையைச் சொல்லிய காலத்தில் நான் இலங்கையின் அரசியல் வரலாறு பற்றிய புத்தகமொன்றை படித்துக்கொண்டிருந்தேன். அதிலும் அப்படித்தான் இருந்தது.

தந்தையை வெட்டிக் கொலை செய்துவிட்டு அண்ணன் ஆட்சிக்கு வருவது; தம்பியின் ஆட்கள் அண்ணனை வெட்டிக்கொலை செய்வது; தாய்மாமனின் ஆட்சி. அதுவும் துர்கொலைகளால் முடிவுக்கு வருவது. இப்படியாகத்தொடர்ந்து படுகொலைகள், துரோகங்கள், ஆட்சிக்கவிழ்ப்புகள் என கிபி. 5 ஆம் நூற்றாண்டு தொடங்கி ஒரு நிலையான ஆட்சி என்பது அங்கு இல்லை என்பதை உணரமுடிந்தது.

அண்மையில் ஊருக்குச் சென்றபோது இலங்கை வழியாகச் செல்லநேர்ந்தது. தாவணி போட்ட பெண்கள் அனைவருமே அழகாய் இருப்பதைப்போல இலங்கையும் வானத்திலிருந்து பார்க்க மிக அழகாய் இருந்தது. பண்டாரநாயகா சர்வதேச விமானநிலையத்தில் கால் வைத்தபோது அதன் அழகையும் சுறுசுறுப்பையும் ரசிக்கும் ஆவலையும் மீறி இந்த 'ஆட்சி பற்றிய எண்ணங்களே' என்னுள் வந்து நின்றன.

இப்போதுதான் விமான நிலையம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் மிகவும் அழகாக எல்லாவித வசதிகளையும் கொண்ட ஒரு விமான நிலையமாய் நேர்த்தியாக வடிவமைத்து முடியும் தருவாயில் இருக்கிறது அதன் கடைசிகட்ட வேலைகள். அழகான எல்லாவித வசதிகளையும் கொண்ட ஒரு கட்டிடமாய் விமான நிலையம் இருந்தால் மட்டும் போதுமா? அங்கே வேலை செய்வதற்கு சிங்கப்பூரிலிருந்தா ஆட்களை அனுப்பமுடியும்?

ஆம்! இமிக்ரேஷனில் இருப்பவர்கள் அனைவரும் ஒருமாதிரியாகத்தான் என்னைப் பார்த்தார்கள். வேறு ஏதாவது ஜாடை(!) என்மீது இருக்கிறதா எனவும் நான் கண்ணாடியில் பார்த்துவிட்டேன். அப்படியெல்லாம் ஒன்றும் தெரியவில்லை. வழக்கமான 'மூஞ்சியாக' த்தான் இருந்தது. நான் சென்ற இமிக்ரேஷன் கவுண்டரில் இருந்தவரும் அதை உண்மை என்றே நிரூபித்தார். மூஞ்சியை 'உராங் உடான்' போல வைத்திருந்தார் அவர். ( அவர் பெயரும் பணி எண்ணும் இன்னும் ஞாபகத்தில் இருக்கின்றன.!)

விண்ணப்பப்படிவத்தில் ஹோட்டல் பெயரை ஒரு கட்டம் விட்டு எழுதவில்லை என்பதற்காக 16 கேள்விகள் கேட்டார். ' டிரான்ஸிட் பயணி' என்பதைச் சொல்லியும் முடிந்த அளவுக்கு கேவலப்படுத்திவிட்டுத்தான் என்னை வெளியில் விட்டார். போதாதற்கு சிங்கப்பூரில் நான் பணி்புரியும் 'வேலை உரிமைச் சீட்டைக்கூட' கேட்டு வாங்கிப்பார்த்தார். வெளியில் இருந்தவர்கள் ஏதோ எதிரி முகாமிலிருந்து நேரே புறப்பட்டு வந்தவனைப்போல என்னைப் பார்வையால் குடைந்துவிட்டார்கள்.

தமிழனின் அடையாள உணர்வோடு(!) வீரநடை போட்டு வெளியே வந்து ஹோட்டலுக்குச் செல்வதற்குள் 'நாக்கு' தள்ளிவிட்டது. பேசாமல் சென்னை சென்று அங்கிருந்தே திருச்சி சென்றிருக்கலாமோ எனவும் யோசித்தேன். டிக்கெட் விலையும் ரொம்பவெல்லாம் அப்போது வித்தியாசமில்லை. (சிங்கப்பூரிலிருந்து கொழும்பு வழியாக திருச்சிக்கு நேர்பயணம்!)

ஒரு பயணியை தகுந்த காரணங்கள் இன்றி இந்த அளவுக்கு அவமதிக்கும் அவரது செய்கை எனக்கு நியாயமாகப்படவில்லை. எனது பாஸ்போர்ட்டிலோ அல்லது வேறெதிலுமோ அவருக்குச் சந்தேகம் வந்து கேட்டிருந்தால் கூட அமைதியாக இருந்திருப்பேன். (தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் என பல முத்திரைகள் இருக்கின்றன அதில்! எங்கும் இத்தகைய அனுபவம் நேர்ந்ததில்லை!) அவர் பேசிய விதமும் எந்தளவிலும் சரியாக இல்லை.

'எந்தவொரு சுற்றுலாப் பயணியையும் இப்படி நடத்தாதீர்கள்' என்ற ஒரு வேண்டுகோளையும் வேதனையையும் மட்டும் 'பெட்டியில்' எழுதிப்போட்டுவிட்டு வந்து விட்டேன். இந்தியாவாயிருந்தால் 'Goடா Hair!' என்று அலட்சியமாக வந்திருப்பேன். இலங்கை, கொஞ்சம் முயன்றால் சிங்கப்பூரைப் போல அது என்ன, அதை விட செல்வம் கொழிக்க வாய்ப்பிருக்கும் நாடு என்று ஒரு மரியாதையோடு காலடி வைத்தேன்.

முதல் அனுபவம் இப்படி முடிந்ததில் மிகவும் வருத்தம். ஏற்கனவே மனதில் இருந்ததோ என்னவோ 'இவ்வளவு அடிப்படை வசதிகளையும் வாய்ப்புகளையும் கொண்டு இன்னும் முன்னேறாமல் அப்படியே நீங்கள் வைத்துக்கொண்டிருப்பதை விட இலங்கை முன்னேற வேண்டுமென்பதில் மிகவும் சிரத்தையும் ஆர்வமும் கொண்டிருக்கும் சக நாட்டவர்கள் 'யாரிடமாவது' விட்டுக்கொடுத்துவிடலாமே!' என என்னையும் அறியாமல் ஒரு எண்ணம் வந்து நின்றது. 'துரோகங்களுக்காகப் பழிவாங்குதலைத்' தவிர இத்தகைய காரியங்கள் எதையும் 'அவர்கள்' செய்யமாட்டார்கள் என்பதும் நாடு முன்னேறுவதில் நேர்மையாக உழைப்பார்கள் என்பதும் என் மனதில் மலர்ந்திருக்கும் இன்னொரு எண்ணம்.

பாவம்! சாரை சாரையாக, பாவப்பட்ட பெண்கள் மத்தியக் கிழக்கு நாடுகளுக்கும் மற்ற நாடுகளுக்கும் வீட்டு வேலைக்குச் செல்வதைப்பார்த்தபோது இன்னும் கொஞ்சம் கோபம் வந்தது உண்மை! கையாளாகாத கோபம்! யார் மீது என்று தெரியவில்லை. தூங்கியும் தூங்காத கண்களோடு வாழ்க்கையின் அவல நிலைகளை வெளிச்சம் போட்டவாறு கையில் எளிய ஒரு பெட்டியோடு வாழ்க்கை தேடிச்செல்லும் அவர்களைப் பார்த்து கண்ணீர் வந்தது உண்மை!

ஆனால் ஒருமாதம் கழித்து அதே வழியில் திரும்பி வந்தபொழுது எனது கடவுச்சீட்டை சோதித்தவர் ஒரு பெண்மணி! 20 வினாடிக்குள் வேலையை முடித்து அனுப்பிவைத்தார், அவர் பெயரைப் பார்த்தேன் வசந்தா அல்லது வசந்தி! இலங்கைக்கு வாழ்வு தரும் வசந்திகள்! வாழ்க நீவிர்!!

எம்.கே.குமார்!

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, March 29, 2005

சாருவை டென்ஷனாக்கிய அந்த 'ரஞ்சிதா' யார்?

'சிங்கப்பூர் எலீசா' சொல்ற கிசுகிசுவைக் கேளுங்க!

சாரு சிங்கப்பூர் வந்தபொழுது, எதேச்சையாக அவருடன் நான் 'சாட்' செய்ய, அவர் சிங்கப்பூரில் அவருடைய நண்பர் ராபின் வீட்டில் தான் தங்கியிருக்கிறார் என்பது எனக்குத் தெரியவந்தது. (ராபினை ஒரு கவிஞராக ஏற்கனவே எனக்குத்தெரியும். திண்ணையில் கவிதைகள் எழுதியிருக்கிறார்.) இருமுறை தொலைபேசினேன். இருமுறை சந்திக்க முயற்சி செய்தேன், அவருக்கு உடம்பு சரியில்லை என்று பதில் வந்ததால் முடியவில்லை. பிறகு உட்லாண்ஸ் நூலகத்தில் நடந்த கலந்துரையாடலில் அவரைச்சந்தித்தேன் கேள்விகளும் கேட்டு அவரைத் தொந்தரவும் செய்தேன். இதெல்லாம் இருக்கட்டும்.

"நேற்றுவரை "சும்மாவும் பிஸியாவும்" இருக்கும்போதெல்லாம் சாருவிடம் பேசிவிட்டு இன்று மட்டும் சாரு "சும்மா" இருக்கும்போது, வேலை இருக்கிறதென்று அந்த நபர் பேசாமல் போனால் எப்படி? ஒரு இலக்கியவாதி என்ன அந்தளவுக்கா இழிநிலைக்குப் போய்விட்டான்.?" அண்மைக்காலமாக சாரு இப்படி அடிக்கடி எழுதுவது போல ஒரு எண்ணம் தோன்றியது. இதுவும் இருக்கட்டும்.

இந்நிலையில் சிங்கப்பூருக்கு வந்திருந்த அவரிடம், "ராபின்-- ஸ்ரீகணேஷ்--அரவிந்தன்(அந்தப்பெண்ணை யாரோ தெரியவில்லை என்கிறாராம். விட்டுவிடலாம் இவரை!)--ஒரு நண்பர்-- ''அவர்''-- லியோ---சாரு நிவேதிதா---" இப்படியானதொரு வட்டத்திற்குள் உலவும் 500 மடல்களும் அடிக்கடி 'சாட்டும்' செய்த (எத்தனை மணி, நிமிட, நொடித்துளிகள்? தெரியவில்லை! சாரு ஞாபகம் வைத்திருப்பார்!) ஒரு பெண் நாகரிகமில்லாமல் நடந்துகொண்டாராம். சாருவின் பக்கத்தில் இப்படி எழுதியிருக்கிறார்.

இடையில் நடப்பது என்னவென்று யாருக்கும் தெரியவில்லை. இவருக்கு வேண்டியதை இவரும் அவருக்கு வேண்டியதை அவரும் பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் திரிவதாக எனக்கு இதைப் படிக்கும்பொழுது தோன்றியது. எது உண்மையோ தெரியவில்லை. இந்நிலையில் யார் அந்தப்பெண் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

http://charuonline.com/kp130.html

//சிங்கப்பூர் ஒரு சின்ன ஊர். அதிலும் இலக்கியம் வாசிப்பவர்கள் நூறு பேர். அந்த நூறு பேருக்குள் இத்தனை விளையாட்டு விளையாடினால் அது சாத்தியமா? "ராபினோடு பேசி ஒரு ஆண்டு ஆகிறது."-- ரஞ்சிதா. "போன வாரம் கூட ரஞ்சிதா இங்கு வந்தார்களே!"--- லியோ. (ராபினின் சகஅறைவாசி!) /// -- சாருநிவேதிதா.

அத்தனை பேரையும் ஒரு 'சுத்து சுத்தி' ரவுண்டில் விடும் பெண்ணைப்போல அப்பெண்ணைச் சித்தரித்து சாரு எழுதியிருக்கிறார். அப்பெண்ணின் உண்மையான நிலை என்னவோ? யார் அவர் என்பது எனக்குத்தெரிந்தால் நிம்மதியாகத்தூங்குவேன் என நினைக்கிறீர்களா? நமக்கெதுக்கு அது? யாராயிருந்தால் எனக்கென்ன? என் வேலை எழுதிக்கிடப்பதே!

எம்.கே.குமார்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, March 28, 2005

புதுமைப்பித்தன் யார்?

"புதுமைப்பித்தன் என்ற நபரை நான் அறிந்துகொள்ளும்பொழுது எனக்கு வயது 8. கையில் பெரிய வாளுடன் கம்பீரமாக நின்ற அவரைத்தான் புதுமைப்பித்தன் என்று அப்போது நான் உணர்ந்துகொண்டேன். பிறகுதான் அவர் புதுமைப்பித்தன் இல்லை 'தலீவர் எம்ஜிஆர்' என்று எனக்குத்தெரிந்தது." இப்படி இயல்பான நகையோடு தனது பேச்சை ஆரம்பித்தார் திரு.ரமேஷ் (மானசஸென்).

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் மாதமொருமுறை 'கதையும் காட்சியும்' என்றொரு 'கண்ணுக்கும்-காதுக்குமான' நிகழ்ச்சி ஒன்றை நடத்திவருகிறது. புகழ்பெற்ற எழுத்தாளர்களின் கதையைக்கொண்ட திரைப்படத்திலிருந்து சில காட்சிகளை ஒளிபரப்பி அவரின் மற்ற கதைகளையும் அவற்றின் இயங்குதளங்களைப் பற்றிய அறிமுகத்தையும் சிங்கப்பூரின் படைப்பாளர்கள்/ வாசகர்களுக்கு, விஷயமறிந்த ஒருவரைக்கொண்டு கலந்துரையாட வைத்து திறம்பட நடத்தி வருகிறது.

ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் அகிலன் முதல் அனுராதாரமணன் வரை பல பெயர்பெற்ற எழுத்தாளர்களைப் பற்றிய கலந்துரையாடல் நடந்திருக்கிறதாம்.

இந்நிலையில் நேற்று நடந்த அவ்விழாவில் 'புதுமைப்பித்தன்' எடுத்துக்கொள்ளப்பட்டார். அவரின் 'சிற்றன்னை' கதையை மூலக்கதையாகக் கொண்ட 'உதிரிப்பூக்கள்' திரைப்படம் காட்சிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

Image hosted by Photobucket.com

கரும்பைத் தின்ன கூலியெதற்கு என்பதாய் தனக்கு தரப்பட்ட வேலையை இன்பமுடன் ரமேஷ் எடுத்துக்கொண்டார் போலும். கத்தை கத்தையாய் பேசுவதற்கு தயார் செய்யப்பட்ட குறிப்புகள் மேஜையை ஆக்ரமிக்க, எழுந்து, "உங்களது பொன்னான இந்த மாலைப்பொழுதை இதுபோன்ற நல்ல நிகழ்ச்சிகளுக்காய் பயன்படுத்திக்கொண்டு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் எனது வணக்கங்களும் நன்றிகளும்" என்று ஆரம்பித்தார்.

புதுமைப்பித்தனைப் பற்றி ஒருவார்த்தையில் சொல்லவேண்டுமானால், நக்கல் என்றார். இரண்டு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் நக்கலோ நக்கல் என்றார். நக்கல், கேலி, குறும்பு, கிண்டல், நையாண்டி ( இன்னும் இதுபோல நிறைய சொன்னார்! எனக்கு மறந்துபோய் விட்டது!) இவற்றிற்கு என்னென்ன வார்த்தைகள் இருக்கின்றனவோ அவற்றையெல்லாம் புதுமைப்பித்தனுக்கு மொத்தமாக நாம் அர்ப்பணித்து விடலாமாம். அவைகளின் மொத்தம் தான் புதுமைப்பித்தனின் படைப்புகள் என்றார்.
Image hosted by Photobucket.com
"வாழ்க்கையில் நாம் காணும் ஒட்டுமொத்த முரண்பாடுகளின் மொத்த வடிவமாய் இருக்கிறது அவரின் படைப்புகளைக்கொண்டு நமக்கு அறிமுகமாகும் அவரது குணம். இத்தகைய முரண்பாடுகளைக் கொண்ட ஒருவன் இலக்கிய உலகில் முன்னுக்கு வருவதற்கு மிகப்பெரிய மேதமை வேண்டும். மேதைமையோடு நேர்மையும் புதுமைப்பித்தனிடம் இருந்திருக்கிறது, அதனால் அவர் ஜெயிக்க முடிந்திருக்கிறது.
Image hosted by Photobucket.com

ஒரு வெள்ளைத்தாளில் நீங்கள் காட்டக்கூடிய மிகப்பெரிய வெளிச்சமானது அதன் இயல்பான எதுவும் எழுதாத வெண்மையே ஆகும். அதற்கு மேலே அதைக்கொண்டு வெறுமனே அதிக வெளிச்சம் எதுவும் காட்டமுடியாது. அதைத் தருவிக்க வேண்டுமெனில் அதில் கருப்பு நிறத்திலான பரப்பை வரைய வேண்டும். இப்போது இன்னும் கொஞ்சம் வெளிச்சம் போல அதைக் காட்டமுடியும்; உணர்த்தமுடியும். அல்லது கருப்பு நிறத்திலான அப்பரப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெண்மையை எளிதாக உணரும்படி கொண்டுவரமுடியும். இதைத்தான் புதுமைப்பித்தன் செய்திருக்கிறார்." என்று தனது ஓவிய வாழ்வில் இருந்து மிகவும் எளிதாக விளங்கிக்கொள்ளும்படி ஒரு உதாரணத்தை எடுத்து வைத்தார்.

"ஜாதிக்குள்ளே நடக்கும் திருமணம் பற்றி கதை எழுதிய அவர், ஜாதிவிட்டு நடக்கும் திருமணங்களைப் பற்றியும் கதை எழுதியிருக்கிறார். இரண்டிலும் திருமண வாழ்வின் நிதர்சனங்களை முன் வைக்கிறார். இதற்கு ஜாதீயவாதி என்ற முத்திரையை அவர்மேல் குத்தமுடியாது" என்றார்.

"எல்லா முரண்பாடுகளையும் தனக்குள்ளே கொண்டவரைப்போல இருந்த அவர் எத்திசையையும் எக்கருத்துகளையும் சார்ந்து வாழாது தன் ஆத்மரசனைக்கு மட்டுமே அடிபணிந்து வேறெதற்கும் சாயாது வாழ்ந்திருக்கிறார். அதுவே அவருடைய வாழ்க்கைக்கும் படைப்புகளுக்கும் வெற்றியின் சாட்சியாக இப்போதும் சிறந்துவிளங்கி வருகிறது. புதுமைப்பித்தனுக்கு கதை எழுதுவதற்கென்று இருந்த வரம்புகளெல்லாம் ஏட்டுச்சுரைக்காயாகவே இருந்திருக்கிறது. அதை அவர் ஒரு பொருட்டாக எப்படைப்பிலும் எடுத்துக்கொள்ளவில்லை. இப்படித்தான் ஆரம்பிக்கவேண்டுமென்றோ இப்படித்தான் முடிக்கவேண்டுமென்றோ எந்த இடையூறும் இல்லை அவருடைய மனதுக்குள். நீண்ட அறிமுகத்தைக் கொடுத்துவிட்டு படக்கென்று கதையை முடிக்கும் தைரியமும் துணிவும் அவருக்கு இருந்திருக்கிறது.

தமிழ் இலக்கிய வரலாற்றில் மொழியை நவீனப்படுத்துதலில் ஆளுமையை அதிகமாக்கியதில் அவருக்கு மிகப்பெரிய பாராட்டும் பங்கும் இருக்கிறது. நடைமுறை விஷயங்களை எழுதுவதில் கௌரவக்குறைச்சல் ஒன்றும் இல்லை. சென்னை நகர வாழ்க்கையில் தான் கண்டவைகளைச் சார்ந்தே அவரது கதைகள் இருக்கின்றன. நகர வாழ்க்கை ஒரு அவலமாகவே அவருக்குள் தொக்கி நின்றிருக்கிறது. அதற்கு மாறாக, நெல்லைப்பகுதி கிராம வாழ்க்கை ஒரு மிகப்பெரிய ஏக்கமாகவே அவருக்குள் போராடிக்கொண்டிருந்திருக்கிறது. அவருடைய கதைகளில் பலவற்றில் அவ்வேதனையும் ஏக்கமும் தவழ்ந்து கிடக்கின்றன. கதை சொல்வதில் புதிய புதிய யுக்திகளையும் சொல்வதை நவீனமாகச் சொல்வதிலும் மிகுந்த அக்கறை கொண்டிருந்திருக்கிறார்.

இன்றைய இலக்கியவாதிகள் பலர் புதுமைப்பித்தனை வித வித கோணங்களில் பிரித்து எடுத்துகொண்டார்கள். 'விந்தன், ஜெயகாந்தன், சு.ரா, சுஜாதா, கு.அழகிரிசாமி, கி.ரா, அசோகமித்திரன், நா.முத்துச்சாமி, வண்ணநிலவன், எம்.வி.வெங்கட்ராமன்' என பலபேர் அவரிலிருந்து தமக்கான வழிகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள்."

"சிற்றன்னை கதைக்கும் உதிரிப்பூக்கள் படத்துக்கும் இருக்கும் ஒரே சம்பந்தம் இரு படைப்பாளிகளின் ஒத்த எண்ண அலைகளே தவிர கதைப்படி எதுவுமில்லை. சிற்றன்னை கதையின் ஃபிளாஸ்பேக்காக உதிரிப்பூக்களை மகேந்திரன் எழுதி இயக்கியிருந்தாலும் சிற்றன்னை கதையை தமது படத்தின் மூலக்கதை என்று குறிப்பிட்டது இன்றைய காலகட்டத்தில் சினிமா உலகில் நாம் காணக்கிடைக்காத, மகேந்திரனின் பெருந்தன்மை மட்டுமே" என்று முத்தாய்ப்பாய் முடித்தார் ரமேஷ்.

நிகழ்ச்சியை கவரேஜ் செய்துகொண்டிருந்த உள்ளூர் தொலைக்காட்சியான 'வசந்தம் சென்ரல்' நேற்றிரவு செய்திகளில் அதைக்காட்டியது.

Image hosted by Photobucket.com

புதுமைப்பித்தனின் பல்வேறு முகங்களையும் அவருடைய படைப்புகளின் விதவிதமான இயங்குதளங்களையும் விரிவாக சிறப்பாக அறிந்து கொள்ள முடிந்ததில் மனமும் மகிழ்ந்தது . இந்நிகழ்ச்சியை முதலிலிருந்து முன்னின்று நடத்தி வரும் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகமும் நிகழ்ச்சியின் அமைப்பாளர் திருமதி.சித்ரா ரமேஷ்ம் பாராட்டுக்குரியவர்கள்.

நன்றி: சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம்
திரு. ரமேஷ் (மானசஸென்)
திரு. இந்திரஜித் (மீடியாகார்ப்ஸ் தொலைக்காட்சி)

(செவி வழி கேட்டதிலிருந்து எழுதியவை. வார்த்தைகளும் பொருளும் முன்பின் மாறியிருக்கலாம்.)

அன்புடன்
எம்.கே.குமார்

விட்டகுறை தொட்ட குறை: காலச்சுவடு பதிப்பித்த புதுமைப்பித்தனின் சிறு கதைகள் தொகுப்பு மிகவும் நேர்த்தியாக இருப்பதாக ரமேஷ் உட்பட பலரும் பேசிக்கொண்டது காதில் விழுந்தது.

இளையபாரதி தொகுத்த 'கண்மணி கமலாவுக்கு' என்ற புத்தகம் 'ஒரு அந்தரங்க டயி்ரியைப் படிப்பது போலவும் எல்லோருக்கும் உள்ளார்ந்த ஒரு வேதனையையே தருவதாகவும்' கூட்டத்துக்குப் பிந்தைய பேச்சுகளில் பலரும் சொன்னார்கள்.

நீங்கள் அப்புத்தகம் படிக்காதவராயின் அது, அவர் 'தனது மனைவிக்கு எழுதிய அந்தரங்க கடிதங்களின் தொகுப்பு' என்பதை அறிவீர்களாக! இத்தகைய படைப்புகள் தமிழ் இலக்கியத்துக்குள் அமைவது சரியா தவறா என்பதையும் பின்னூட்டமிட்டுச் செல்வீர்களாக!

நன்றி!

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Sunday, March 27, 2005

வணக்கம்... வணக்கம்... வணக்கம்!

வணக்கம் நண்பர்களே! நீண்ட நாட்களுக்குப்பிறகு மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. ஒரு மாதம் கழித்து வந்தபொழுதில் இங்கே நிறைய படைப்புகளையும் பதிவுகளையும் காணமுடிகிறது. தமிழ்மணம் காசி அவர்கள், புதிதாய்த் தொடங்கப்பட்ட வலைப்பதிவுகளில் நம்பிக்கை அளிக்கும் இருபது வலைப்பதிவுகளைக் குறிப்பிட்டுள்ளார். சிங்கப்பூரிலிருந்து கலக்கிக்கொண்டிருக்கும் நண்பர்கள் அல்வாசிட்டி விஜய், பாலுமணிமாறன் சிங்கப்பூர்-மலேசிய நண்பர் மூர்த்தி, அண்மைய சிங்கப்பூர் விருந்தினர் துளசியக்கா ஆகியோருடைய பதிவுகளும் அவற்றில் இடம்பிடித்திருந்தது கண்டு மெத்த மகிழ்ச்சி. வாழ்த்துகள். அதிலும் நண்பர் பாலு மணிமாறன் நான் இந்தியாவிற்குச்செல்லும் பொழுதுதான் ஒரு பதிவு போட்டிருக்கிறேன், படித்துவிட்டுச்சொல்லுங்கள் என்று முதல் பதிவைப் போட்டுவிட்டிருந்தார். ஒருமாதம் கழித்து வந்து பார்க்கும் பொழுது 'குட்டியும் குழுவானுமாய், கவர்ச்சிநடிகையும் கனவுமாய், அத்தையும் ·பிகருமாய்' ஏகப்பட்ட பதிவுகள்! கலக்கியிருக்கிறார் மனிதர்.

ஊரிலிருந்து வந்தவுடன் எல்லோருக்கும் தோன்றுவதைப்போலத்தான் எனக்கும் இரண்டு விஷயங்கள் தோன்றின. ஒன்று ஊரில் பார்த்த நிறைய விஷயங்களை எழுதவேண்டும் என்பது! இரண்டாவது அதற்கு நேர்மாறாய் வேலைப்பளு அழுத்துவது! :-)

ஊரிலிருந்து வந்தவுடன் சிங்கப்பூர் இணைய நண்பர்கள் கூட்டம் துளசியக்காவின் வருகையை ஒட்டி நடப்பதாய் ஒரு இனிப்பான செய்தி கேட்டு அதிலும் கலந்துகொண்டேன். இரண்டாவது கூட்டம் இது. இக்கூட்டத்தின் உருப்படியான சில விஷயங்கள் விரைவில் சிங்கப்பூரிலிருந்து இணைய உலகில் பிரகாசிக்கலாம். ஏற்பாடுகள் நடக்கின்றன.

துளசியக்கா, ஜெயந்திசங்கரி கொண்டு வந்த கேசரியைப்போல மிகவும் இனிமையானவராக இருந்தார். முதல்கூட்டத்தைத் தவறவிட்ட மானஸசென் ரமேஷ் இதில் நிறை(வாக)ய பேசினார். 'குப்பை-குப்பை மட்டுமல்ல' அன்பு உருப்படியாய் ஒரு காரியம் செய்தார். அவள் விகடன் சமையல் முதல் ஆங்கிலம்-தமிழ் அகராதி, கம்பராமாயணம், தினம் ஒரு கவிதை, புதிய திரைப்பாடல்கள், 'நிலாமுகத்து' நயனதாரா, 'காதல்'-சந்தியா வரை நிறைய விஷயங்களை ஒரு குறுந்தகட்டில் போட்டு அடைத்துக் கொடுத்தார், வாழ்க நீர் ஜெம்குப்பை!

'முக்கிய பேச்சுகள்' இருந்தால் மட்டுமே வருவதாக அறிவித்திருந்த திரு. மா.கோவிந்தராஜ் (நிறைய யாஹ¥ குழுமங்கள் வைத்திருக்கிறார்) 'தமிழா' என்றொரு புத்தகத்தை 10 டாலருக்கு பரிமாறினார். புத்தகத்தை வாங்கியவர்கள் நேற்று கூட முணுமுணுத்தார்கள். நல்ல புத்தகம் போலும். முன்னுரையும் நன்றியுரையும் மட்டும் பல பக்கங்களுக்கு எழுதப்பட்டிருந்ததைக் கண்டு எனக்கு பேராச்சரியம் எற்பட்டது. இப்போதேல்லாம் யார் இப்படி தமக்கு உதவியவரை நன்றியோடு நினைவு கூறுகிறார்கள். 'தமிழா'வின் ஆசிரியர் தமிழாசிரியர். திரு.சிவசாமி அவர்கள் மாகோ வின் நண்பர் போலும். மாகோ அவர்கள் இன்னொரு 'முக்கிய வேலை' இருப்பதாக உடனே கிளம்பிவிட்டார்.

எழுத்தாளர் ரம்யாநாகேஸ்வரன், எழுத்தாளர்-கவிஞர் பனசை நடராஜன் ஆகியோர் முதன்முறையாக கலந்துகொண்டார்கள். எழுத்தாளர் துளசிகோபால் அவர்களின் மகளான கவிஞர் மதுமிதா (ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதியிருக்கிறாராம்!) தமிழைக் 'கொன்சம் கொன்சம்' மட்டுமே புரிந்துகொள்வாராம். ஆங்கிலத்தில் 'ஸ்வீட்டாக' பேசுகிறார்.

ஒரு இனிய மாலைப்பொழுதாக நிறைவாக இருந்தது அது! ஊரிலிருந்து வந்த 10 நாட்களுக்குள் 8 நாட்கள் வேலை போக இரு நாளில் ஒரு இனிய மாலை இது. இன்னும் ஒரு இனிய மாலை நேற்று அமைந்தது. அடுத்தது அது!

எம்.கே.குமார்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.