Monday, July 30, 2007
Rate this post at
www.thamizmanam.com
Current rating is:
Click on the stars for voting pad.
Wednesday, July 18, 2007
புத்தக வெளியீடு- நன்றி நவிலல்!
புத்தக வெளியீடு முடிந்து ரொம்ப நாளாகிவிட்டது. எனினும் அதைப்பற்றி எழுதாதது ஒரு குறையாகவே இருந்தது. எனவே அதை இன்று எழுதிவிடலாம் என்றிருக்கிறேன்.
புத்தகத்தின் வடிவமைப்பு மிகவும் மெச்சும்படியாய் இருப்பதாய் பலர் சொன்னார்கள். இதை இவ்வளவு அழகாய் வடிவமைத்த வகையில் முதலில் நன்றி சொல்லவேண்டிய ஒருவர் திரு. சி.மோகன் அவர்கள். அவருடைய முழுமுயற்சி இல்லாவிட்டால் இந்த அளவிற்கு சிறப்பாய் அது இருந்திருக்காது. எனது நெஞ்சார்ந்த நன்றி இவருக்கு.
சென்னையில் வெளியிட்டு பல நாட்களுக்குப்பிறகே சிங்கப்பூரில் என் கைகளுக்கு இது கிடைத்தது. புத்தகத்தைக் கண்ட தருணம் மறக்கமுடியாததாய் இருக்கிறது. 'அடடா, ஒரு போட்டோ பிடித்திருக்கலாமே' என்றார் ரமேஷ். இதை தவறவிடக்கூடாது என்பதற்காகவே அப்பாவின் கையில் புத்தகத்தைக் கொடுத்து அவரைப்பற்றிய குறிப்பை வாசிக்கச்சொல்லி வாசிக்கும்போது படம்பிடித்தேன்.
சிங்கப்பூரில் புத்தக வெளீயீடு செய்வது என்றவுடன் நானும் நண்பர் ரமேஷும் நூலகத்தையே அணுகலாம் என முடிவு செய்தோம். இதற்கு பெருமளவில் உதவிய கவிஞர் இந்திரஜித், தேசிய நூலக அதிகாரிகள் திருமதி.புஷ்பலதா மற்றும் திரு.மணியம் ஆகியோருக்கும் இநேரத்தில் நன்றி.
புத்தக அறிமுகம் செய்து பேசவேண்டும் என்றவுடன் எவ்வித தயக்கமும் இல்லாமல் இசைந்த சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளர் திரு. இராம.கண்ணபிரான் அவர்கள், முனைவர். எம்.எஸ்.ஸ்ரீலஷ்மி அவர்கள், எழுத்தாளர் மற்றும் வழக்கறிஞர் திருமதி. ரம்யாநாகேஸ்வரன் மற்றும் கவிஞர் ரெ.செல்வம் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி. எனது வரவேற்புரையில் திருமதி.ரம்யா அவர்களையும் திரு.செல்வம் அவர்களையும் தவறவிட்டதற்காய் இப்போதும் வருந்துகிறேன்.
இயற்கைக்கும், தமிழுக்கும் வணக்கம் சொல்லி ஆரம்பித்த என் வரவேற்புரையில் இத்திசைக்கு வந்து இசைவாய் தமிழ்வளர்த்த தமிழவேள்.கோ.சாரங்கபாணி அவர்களையும் அமரர்.நா.கோவிந்தசாமி அவர்களையும் வணங்கினேன்.
ரமேஷின் சித்திரம் கரையும் வெளி கவிதைத்தொகுப்பை திரு.இராம.கண்ணபிரான் வெளியிட நூலக முதன்மை அதிகாரி திருமதி.புஷ்பலதா பெற்றுக்கொண்டார். எனது மருதம் சிறுகதைத்தொகுப்பை சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளர்களான திரு.பொன்.சுந்தரராசு வெளியிட, திரு.மா.இளங்கண்ணன் பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியை மிக நிறைவாய் வழிநடத்தினார் திருமதி.சித்ரா ரமேஷ். எந்தவித பாசாங்கும் இல்லாமல் மிக இயல்பாய் நடக்க ஆவனசெய்தார்.
ரமேஷின் சில கவிதைகளை மிகவும் ரசித்து அது தரும் பொருளை சிலாகித்துப்பேசினார் திரு. கண்ணபிரான் அவர்கள். அவர் வாசிக்கும்போதே ஒரு கவிதை மனதில் படிந்துபோனது. எனது புத்தகத்தை மிகவும் ரசித்துப் படித்ததை அப்படியே பகிர்ந்துகொண்ட முனைவர் எம்.எஸ்.எஸ், குறிப்பை எடுக்காமலேயே பல கதைகளின் பெயரையும் அது எழுதப்பட்டிருக்கும் உத்தியையும் சொன்னார். 'எல்லா புன்னகைகளும் எலும்புக்கூட்டில் போர்த்தப்பட்டிருக்கும் முகமூடிகளே' என்று கவிஞர் சுகுமாரனை மேற்கோள் காட்டி பேச வந்த கவிஞர் திரு.ரெ.செல்வம் தனது பேச்சின் மூலம் சிந்தனையை ஊற்றினார். இக்கதைத் தொகுப்பைப் பற்றிப்பேச சிலமணி நேரங்கள் வேண்டும் எனவும் ஆனால் தான் பேச நினைத்ததையெல்லாம் முனைவர் பேசிவிட்டதாய்ச் சொல்லி ஒரு எழுத்தாளராய் இக்கதைகளின் போக்கை விவரித்தார் திருமதி.ரம்யா. நகைச்சுவைக்கதை எழுதுவது என்பது எவ்வளவு கடினம் எனவும் அது இதில் எவ்வாறு வெற்றிகொள்ளப்பட்டிருக்கிறது என்பதையும் சொன்னார்.
எண்பது பேர் அமரக்கூடிய அரங்கத்தில் ஏறக்குறைய அறுபத்தைந்து பேர் வந்திருந்தார்கள். சிங்கப்பூரின் இதுபோன்ற புத்தக வெளியீட்டு நிகழ்வில் (சினிமா/முக்கிய பிரபலங்கள் கலந்துகொள்ளாத வகையில்) இது பெரும் எண்ணிக்கைதான் என நினைக்கிறேன். அன்று மாலை நடந்த "மீடியா கார்ப்" நிறுவனத்தின் குடும்பவிருந்து நிகழ்வால் பலர் வரமுடியாமல் போய்விட்டது. எனினும் பல புது நண்பர்களையும் இலக்கியதாகம் மிகுந்தவர்களையும் அன்று சந்திக்க நேர்ந்ததில் இறைவனுக்கு நன்றி.
திரு.ரெ.பாண்டியன், திரு.இராம.வைரவன், சிறந்த ஓவியரான திரு.பாஸ்கர்(அவர்தான் இவர் என்று அப்போது தெரியாததில் கொஞ்சம் வருத்தமே!) தமிழாசிரியர் திரு.சோமு அவர்கள், மறைந்த நடிகர் எம்.கே.ராதாவின் குடும்பத்தினர் எனப்பலரும் கலந்துகொண்டது நிறைவாக இருந்தது.
நான் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு நீங்கள் வராவிட்டால் என்ன, நான் வருகிறேன் என்று வந்தார் கவிஞர் பாலு மணிமாறன். அன்புக்குரிய எழுத்தாளர்கள் திருமதி.ஜெயந்திசங்கர், திருமதி.மாதங்கி, நண்பர்களும் முக்கிய வலைப்பதிவாளரான திரு.அன்பு, (எனது ஆசிரியரும் தனது தந்தையுமான திரு.ரகுநாதன் அவர்களுடன் கலந்துகொண்ட) திரு.அருள்குமரன், சென்னையிலிருந்து வந்திருந்த தாய்-தந்தையரை 'சர்ப்ரஸாய்' அனுப்பிவைத்த நண்பர் திரு.ஜயராமன், தம்பி நீதிப்பாண்டி, நண்பர் இரா.பிரவீன் ஆகியோருக்கும் இந்நேரத்தில் நன்றி.
செய்தி வெளியிட்ட தமிழ்முரசு நாளிதழுக்கும் விளம்பரம் வெளியிட்ட திரு.ராஜேந்திரன் அவர்களுக்கும் நன்றி.
நன்றி சொல்லி தூரத்தில் இருப்பவர்களை அருகில் கொண்டுவரவும் அருகில் இருப்பவர்களை தூரத்தில் போகச் செல்லவும் முடியும் என்று தனது நன்றியுரையில் சொல்லி, நன்றி சொல்ல விரும்பாத ரமேஷ்க்கு நான் நன்றி சொல்ல வேண்டும். காரணங்கள் பல இருக்கின்றன. அதில் ஒன்று, தனது அயராத பணிகளுக்கிடையிலும் புத்தகத்திற்கு அட்டைப்படம் செய்து, பதினைந்து இருபது படங்களை மளமளவென்று அனுப்பி ஏதாவது மூன்றை 'செலெக்ட்' செய்யுங்கள் என்றவராயிற்றே!
நிகழ்ச்சியின் ஒட்டுமொத்த அளவில் எல்லாவிதத்திலும் துணைநின்ற திருமதி.ஷீலாரமேஷ் மற்றும் திருமதி.நிர்மலாகுமார் ஆகியோருக்கும் இங்கு நன்றி சொல்வது அவசியம்.
அன்புடன்
எம்.கே.
18/07/07
Rate this post at
www.thamizmanam.com
Current rating is:
Click on the stars for voting pad.
Friday, July 06, 2007
Rate this post at
www.thamizmanam.com
Current rating is:
Click on the stars for voting pad.
Rate this post at
www.thamizmanam.com
Current rating is:
Click on the stars for voting pad.


