Tuesday, August 24, 2004

ஐத்தான்....

வெண்ணிலா(ப்ரியன்)

ஆச வெச்ச ஐத்தானே அரும்பு மனசு ஐத்தானே
மீச வெச்ச ஐத்தானே மெட்டி போட்ட ஐத்தானே
காசு மால வாங்கித்தந்த ஏங் கண் நெறஞ்ச ஐத்தானே
நேசம் மறந்து நெலை மறந்து போனதெங்கே ஐத்தானே

தோளு பட்ட நம்பட்டியும் ஒங்ககாலு பட்ட தோல்செருப்பும்
வாளு பட்ட வாழ மரமா வாழ்வழிஞ்சி கெடக்குதைத்தான்
ஆளு நீங்க நடக்கயில ஆறடி போயி நின்னவன்ல்லாம்
தேளு மாதிரி வேட்டி தூக்கி தெருவுக்குள்ளே போறானுக

ஊருக்குள்ளெ ஒங்க மொகம் பாக்காத செடியும் கொடியும்
சேறுக்குள்ளெ ஒங்க பாதம் தழுவாத நாத்தும் நடவும்
தேருக்குள்ளெ இருந்தாலும் தெருவுலெ கெடந்தாலும்
மாருக்குள்ளே என்னப்போல உங்க மனசெ வெச்சிக் காத்துருக்கு

போன எடம் சொல்லலியே பொரண்டு படுத்தா விடியலியே
ஆன மட்டும் சொல்லிப்பாத்தும் அழுத மாரு தூங்கலியே
போன கதை வந்த கதை பொழுது சாஞ்சி பாத்த கதை
வானம் பாத்த நெஞ்சில் சாஞ்சு வசதியாத்தான் பேசலியே

அழுக்கு திண்ணா அயிர கொழம்பும் முருங்கப்பூ ரசமும் வெச்சி
பழுப்பில்லாத முல்லப்பூவா புது அரிசிச் சோறும் வெச்சி
முழு நெலவு ராத்திரில கண் விழிச்சிக் காத்திருக்கேன்
முழுகாம இருக்கு மனசு முங்கிக் குளிக்க ஆச ஐத்தான்

ஆத்துக்கர ஆலமரம் ஏம் முதுகு தொட்ட ஆலம்பழம்
ஒத்தவீட்டு மாட்டுவண்டி அது ஏத்தி வந்த வெக்கெ கட்டு
மத்தியான வெய்யிலிலே எம்மாரு பாத்த மாங்கா மரம்
பத்த வெச்சி விட்டுட்டீகளே இனி எம்புட்டு ரா கூப்பாடோ

அச்சப்படும் பச்சக்கிளி கோபக்கார மச்சாங்கிளி
இச்சையோட தவிக்கையில எம்மனசு ஊருதைத்தான்
எச்சி பட்டு பூத்த பூவு ஏகத்துக்கும் ஏங்குதைத்தான்
மச்சான் நீங்க வந்தீயன்னா மறுபடியும் நா வயசுக்கு வாறேன்

வெண்ணிலா(ப்ரியன்)

Monday, August 23, 2004

முதல் அனுபவம்..

எம்.கே.

நேரம் மதியம் இரண்டு மணி. முதல் அனுபவம். கொஞ்சம் படபடப்பு இருக்கிறது.

பின்னாலிருந்து என் தோள் மீது விழுகிறது கை. சிரித்துக்கொண்டே சிநேகமாய் அவர். எதிர்பார்த்தவர்தான். புது அறிமுகமாய் ஒரு சிலர். நேரம் ஆகிறது. அந்த அறையின் குளிரூட்டிகள் தற்காலிகமாய் யிரூட்டப்படுகின்றன. அவரவர் மனநிலைக்கேற்றவாறு இருக்கைகள் நிரம்புகின்றன. இரண்டாவது இடத்தில் அமர்ந்திருக்கிறேன் நான். கடைசியில் இருந்து இரண்டாவது இடம்.

சுற்றும் முற்றும் பார்த்த பிறகு தெரிந்த முகங்களாய், எங்கேயோ பார்த்த முகங்களாய் சிலர். படக்கென்று வந்தமர்கிறது 'கல்கி' கூட்டணி. வெற்றிக்கூட்டணி. என்னோடு இருந்தவருடன் அறிமுகங்கள் நடக்கின்றன. நான் அமைதியாக இருக்கிறேன். ஒருசில நிமிடங்களுக்குப்பிறகு வரவேண்டிய வி.ஐ.பி.வருகிறார்.

எல்லா இருக்கைகளும் நிரம்புகின்றன. வட்டமேஜை மாநாடாய் இருக்கிறது அறை. ஆடியோ பதிவுக்கருவிகளும் புகைப்படக்கருவிகளும் ஆயத்தப்படுகின்றன. அருகில் வந்தமர்கிறது கூட்டம். இக்கூட்டத்தை சந்திப்பை ஒருங்கிணைத்த திரு. ரெ.பாண்டியன் பேசுகிறார். தெளிவான ஆரம்பத்தோடு பேச்சு. நான் நிமிர்ந்து உட்காருகிறேன்.

முன்னுரை முடிந்த கையோடு நமக்குள் நாமே அறிமுகம் செய்துகொள்ளலாமே என்று ரெ.பாண்டியன் சொல்ல, கூட்டம் கடிகாரச்சுற்றில் அறிமுகப்படுத்திக்கொள்கிறது. தெளிவான ஈழத்தமிழில் திரு.ஈழநாதன். அடுத்து சிங்கப்பூரின் பத்திரிக்கை ஆசிரியர் சிலர், கட்டுரையாளர்கள் சிலர். அவர்களைத்தொடர்ந்து கலைஞரின் மருமகன்..திரு.அரவிந்தன். அவரைத்தொடர்ந்து வருகிறது கல்கி கூட்டணி. திருமதி. ஜெயந்தி ஷங்கர் மற்றும் திருமதி.ரம்யா நாகேஸ்வரன். கடந்த கல்கி கதைப்போட்டியில் பரிசு பெற்ற கதைகளை எழுதியவர்கள். அவர்களைத் தொடர்ந்து புன்னகையும் சிரிப்புமாய் கணவரோடு வந்திருந்த மரத்தடியின் புதுவரவு திருமதி. சித்ரா ரமேஷ்.

அறிமுகப்படலத்தின் இறுதிப்பகுதியை நெருங்குகிறது நேரம். என் தோளில் கை போட்ட நண்பர், தன்னை அருள் குமரன் என்றும் இனிமேல்தான் காலம் ஒதுக்க வேண்டியிருக்கிறது காலச்சுவடு படிப்பதற்கு என்பதாயும் அறிமுகம் செய்து கொள்கிறார். அடுத்தது கஜேந்திரன் என்றொரு அருப்புக்கோட்டை நண்பர். சிறிது காலம் 'சும்மா' என்றொரு சிறுபத்திரிகை நடத்தியவர்.

இறுதியில் அந்த வி.ஐ.பி, தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறார். கண்ணன். காலச்சுவடு இதழின் எடிட்டர். உலகத்தமிழ்.காமிலும் எழுதுபவர்.

நிகழ்ச்சி முறைப்படி ஆரம்பிக்க, காலச்சுவடு இதழ் பற்றிய தனது எண்ணங்களையும் அது சார்ந்த விமர்சனங்களையும் தனது இனிய ஈழத்தமிழில் நிறைவாக எடுத்து வைத்துப்பேசுகிறார் ஈழநாதன். பேச்சில் நிரம்பி ததும்பி வழிகிறது இனிமையான ஈழத்தமிழ். கேட்கவே சுகமாயிருக்கிறது. செய்திகளின் சாராம்சத்தைக் குறித்துக்கொண்டு பதில் சொல்ல வருகிறார் திரு. கண்ணன்.

அடுத்து திரு.கண்ணபிரான். சிங்கப்பூரின் கட்டுரையாளர். இனிய தமிழில் வாயார வாசிக்கிறார். கமலின் குருவான பாலச்சந்தரின் நினைவை எழுப்புகிறது அவரது குரல். 1988 ஆம் ஆண்டு வெளிவந்த முதல் காலச்சுவடின் ஆசிரியர் பக்கத்தில் காலச்சுவடு ஆரம்பிக்கப்படும் நோக்கம் பற்றி திரு.சுந்தர ராமசாமியின் கட்டுரையின் ஒரு பகுதி வாசிக்கப்படுகிறது. தீர்க்கமான ஒரு முடிவின் ஆரம்பம் மிகத்தெளிவாய் இருக்கிறது அவற்றில்.

மூன்றாவதாய் வாசிக்க வருகிறார் திருமதி.சித்ரா ரமேஷ். ஆங்காங்கு நையாண்டித்தூறல்களையும் கிண்டல்களையும் தெளித்துவிட்டு சொல்ல வந்த கருத்துகளுக்கு உரமூட்டி நிமிர்கிறார். கேள்விகள் சுகிர்தா ராணியையும் அது சார்ந்த பாலியல் கவிதைகளையும் பிற விமர்சனங்களை உள்ளடக்கியதாயும் இருக்கிறது. கண்ணன் பதிலளிக்க வேண்டிய தருணம் இது.
கேள்விகள் சூழ்ந்துகொண்டன. சூழ்ந்திருந்தது புயலானாலும் பதில்கள் தெளிவாய் வருகின்றன.

முதலில் கேள்விகளின் சாராம்சம்.

1. காலச்சுவடின் முதன்மையான நோக்கம் என்ன? இன்றைய இளைய தலைமுறைக்காக ஏதேனும் செய்கிறதா அது?
2. காலச்சுவடில் ஒரு பக்கம் சார்ந்த குழு மனப்பான்மை இருப்பது போலிருக்கிறதே..நிஜம் தானா இது? எப்படி இடமளிக்கிறீர்கள்?
3. அண்மையில் வெளியான சுகிர்தராணியின் பாலியல் கவிதை வெறுமனே விரசமாய் எழுதப்பட்ட கவிதையே அன்றி வேறொன்றுமில்லை. காலச்சுவடு எப்படி இதை அனுமதிக்கிறது? பாலியல் சம்பந்தப்பட்ட கவிதைகளும் கதைகளுமே நிறைய இருப்பதாகத்தோன்றுகிறது? ஏன் இப்படி?
4. சாகித்ய அகாடமி கொடுக்கப்பட்டதற்காக வைரமுத்துவை வாங்கு வாங்கென்று வாங்கிவிட்டது காலச்சுவடு. ஏன் இதற்கு அவர்மேல் இத்தனை கடுப்பு? அவர் தகுதியற்றவரா? சாகித்ய அகாடமியின் வரையறைகள்தான் என்ன??
5. மூன்று இதழில் ஒருமுறையேனும் ஜெயமோகனைத் தொடாமல் எழுதமுடிவதில்லையே..என்ன காரணம்?
6. சுஜாதா எழுதிய புறநானூற்று உரையின் மேல் காலச்சுவடுக்கு என்ன கோபம்? ஏன் இப்படித் தாளிக்கிறது? (உண்மையில் அந்த உரையில் சில தவறுகள் இருப்பதை கேள்வியாரே ஒப்புக்கொள்கிறார்.)
7. கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போகலாமா பாடலை எழுதிய சினேகன் மன்னிப்புக்கேட்டது தவறு என்கிறீர்கள்..அப்படியானால் அது நல்ல பாடலா?
8. உலகத்தமிழ். காமில் இன்னும் கொஞ்சம் சிறப்புகள் செய்யலாமே?!
9. இணையத்து எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பிதழ் ஏதும் கொண்டு வரும் திட்டம் இருக்கிறதா?
10. இளைஞர்களுக்கு காலச்சுவடில் இடமளிப்பீர்களா?
11. ஒரு எழுத்தாளர் என்பதை விடுத்து தங்களது தந்தையாய் அவரிடம் தங்களுக்குப் பிடித்ததைப் பற்றிச்சொல்ல முடியுமா?

பதில்களின் சாராம்சம்.

கேள்விகள் பெரிதாய்த் தோன்றினாலும் மூன்று விஷயங்கள் மட்டும் விவாதத்தில் சூடு பறக்குமளவுக்கு முன்னேற்றம் கண்டன.

1. பாலியல் தொடர்பு கதை/கவிதை
2. வைரமுத்து-சாகித்ய அகாடமி
3. சுஜாதா- புறநானூறு

இனி விரிவான பதிலகளைப் பார்ப்போம்.

காலச்சுவடு ஆரம்பிக்கட்டதன் நோக்கம் இன்றுவரை அதன் முதல் பதிப்பில் சொல்லப்பட்டது போல கலை, கலாசார, சமுதாய மேம்பாடுகளை மேம்படுத்துவதில் முழுக்கவனமும் எடுத்து திறம்பட செயலாற்றி வருகிறது. மொத்தம் இதுவரை வந்துள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட எல்லா இதழிலும் ஒரு புதிய இளைஞருக்காவது வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

காலச்சுவடில் எப்போதும் ஒருதலைப்பட்சமான குழுமனப்பானமை இருந்ததில்லை. ஆசிரியர் குழுக்கள் அடிக்கடி மாற்றப்படுகின்றன. கதைகளைத்தேர்ந்தெடுப்பவர்களும் கவிதைகளைத்தேர்ந்தெடுப்பவர்களும் கூட மாறுவார்கள். நானறிந்தவரை அப்படி இல்லை என நிச்சயமாகச்சொல்லமுடியும். இருப்பினும் கேள்வியாளர் உறுதியோடு சொல்வதால் கவனிக்கிறேன்.

பாலியல் பற்றிய கருத்து நிதர்சனமான ஒரு கருத்து அல்ல. கோயில் சிற்பங்களிலிருந்து ஆண்டாள் வரை கம்பரிலிருந்து நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர்கள் வரை எல்லாமே இங்கு வெளிச்சம். எல்லா கருத்துக்களும் எப்போதும் சொல்லப்பட்டு வருகின்றன. இப்போது மட்டுமே இக்கூச்சல்கள் எழுவது வேடிக்கை மட்டுமேயன்றி வேறொன்றுமில்லை.
கலாப்ரியா எழுதாத பாலியல் வார்த்தைகள் இல்லை. அப்போது யாரும் எதுவும் சொல்வதும் இல்லை. ஆனால் ஒரு சுகிர்தரானியோ ஒரு மாலதி மைத்ரியோ ஒரு சல்மாவோ என்றால் கட்டையைத்தூக்கிக்கொண்டு வருகிறார்கள். ஏன் பெண்கள் அப்படியெல்லாம் எழுதக்கூடாது?புதுமைப்பெண்களாய் காட்டிக்கொள்ளும் மாதர் சங்கங்கள்தான் இன்னும் இச்சண்டைக்கு புடவையைத் தூக்கிக்கொண்டு வருகின்றன. காரணம் என்ன தெரியவில்லை.

சுகிர்தராணியின் கவிதையில் ஒன்றுமில்லை என்பதாய் சொல்வது சரியானது அல்ல. கவிதை என்பது ஒரு வாசிப்பில் புரிதல் நிகழ்ந்துவிடக்கூடிய அல்லது எல்லொருக்குமே புரிதல் ஏற்படுத்தக்கூடிய வரையறை கொண்டது அல்ல. படைத்தவரின் பார்வையில் ஒரு அர்த்தமோ, தேர்ந்தெடுத்தவரின் பார்வையில் வேறொரு அர்த்தமோ படிப்பவர்களின் மனதில் வேறொரு புரிதல்களையோ ஏற்படுத்தக்கூடியன. ஒன்றுமேயில்லை என்பது சரியில்லை. இது குறித்த திலகபாமாவின் கடிதம் எனக்கு வந்தது, அடுத்த காலச்சுவடில் அது இடம்பெறலாம்.

சாகித்ய அகாடமியின் வரையறைகள் யாருக்கும் தெரிவதில்லை. அது ஒரு அரசாங்கத்தால் நிறுவப்பட்ட அமைப்பு. ஆனால் சாகித்ய அகாடமியில் தேர்ந்தெடுக்கப்பட்டவரின் கதை 22 மொழிகளில் மொழிபெயர்ப்பாகும். அத்தகைய சூழ்நிலையில் தமிழில் தேர்ந்தெடுக்கப்படும் நூலுக்கு நல்ல தகுதிகள் இருக்கவேண்டும். தேர்ந்தெடுக்கப்படுபவரும் நல்ல இலக்கியவாதியாக இருந்தால் எல்லோருக்கும் சந்தோசம் காலச்சுவடுக்கும் சந்தோசம். கள்ளிக்காட்டு இதிகாசம் நல்ல புத்தகம். ஆனால் அந்த வரிசையில் இதை விட நல்ல புத்தகங்கள் இருக்கின்றன. நாவல்கள் வந்திருக்கின்றன. மேலும் வைரமுத்து சினிமாவிலிருந்து வந்தவர். இன்னும் சொல்லப்போனால் அவர் எழுதிய முதல் நாவலே இதுதான். இந்த தகுதிகளை முன்னிறுத்தி கட்டுரைகள் எழுதுகிறது காலச்சுவடு. மற்றபடி யாரையும் வெறுமனே தூற்ற வேண்டிய அவசியம் காலச்சுவடூக்கு இல்லை.

ஜெயமோகனின் சிலகருத்துகள் எப்போதும் விமர்சனத்துக்கு உட்பட்டன. அவற்றை எடுத்துக்காட்டுகிறது காலச்சுவடு. இதில் வேறெதுவுமில்லை.

சுஜாதாவின் புறநானூறு உரை ஏகப்பட்ட பிழைகளைக் கொண்டிருக்கிறது என்பதை நான் சொல்லவில்லை. இந்தியாடுடேயில் தொ.பரமசிவன் எழுதினார். இன்னும் அறிஞர்கள் பெரியவர்கள் எத்தனையோ பேர் சொல்லிவிட்டார்கள். அவற்றின் தரம் குறித்து சமுதாயத்திற்கு உணர்த்தவேண்டிய பொறுப்பு காலச்சுவடுக்கு இருக்கிறது. இதில் எந்த கல்லெறிதலும் இல்லை. அதிலும் முதற்பாகம் போட்டுவிட்டு, இரண்டாம் பாகம் போடாமல், முழுப்பாகத்தையும் கொண்டு வந்தது இன்னும் ஒரு பெரிய தவறு. இதற்காகத்தான் அவர் எழுதப்படுகிறாரே தவிர வேறொன்றுமில்லை.

கல்யானந்தான் பாடலால் தான் கெட்டுப்போய் விட்டதாக யாரும் சொல்ல மாட்டார்கள். ஈவ் டீசிங்கிற்கு வழி வகுக்கும் என்பதிலும் முழு உண்மை இல்லை. இதற்கு முன் எத்தனையோ பாடல்கள் வந்துவிட்டன. எம்.ஜி.ஆர் தன் பாடல்களில் காட்டிய அழகிய தமிழ் மகள்களை விட இது எவ்வளவோ பரவாயில்லை. ஆனால் அவை எம்.ஜி.ஆர் தனது கனவில் செய்வார். இப்போது அபப்டி இல்லை.

இதற்காக சினேகன் மன்னிப்புக்கேட்டது தவறுதான் எனினும் அதே பேட்டியில் பாலியல் கவிதைகளை எழுதும் பெண்களை தீயில் போட்டு பொசுக்க வேண்டும் என்று அவர் சொன்னது சினிமாக்காரர்களின் பிழைப்புக்கேற்ற நிலைதானே தவிர வேறெதுவும் சொல்ல முடியாது.

இணையத்து எழுத்தார்களுக்கான சிறப்பிதழ் போடுவது பற்றி யோசிக்கப்படும். உலகத்தமிழ்.காமில் எதிர்வினைகள் வருவது சுத்தமாக இல்லை. அதனால் அதை மேம்படுத்த இயலவில்லை. கடந்த ஐம்பது இதழ்களிலும் காலச்சுவடு புதிது புதிதான இளைஞர்களுக்கு வாய்ப்பு அளித்து வருகிறது இனிமேலும் அது தொடரும். தந்தையைப் பற்றி இங்கு பேச முடியாது. அதற்காக நாம் இங்கே அமர்ந்திருக்கவில்லை.

எல்லாம் முடிந்து எழுந்தபின் கண்ணன் எழுதிய 'வன்முறை வாழ்க்கை' அவரது கையெழுத்துடன் இலவசமாக வினியோகிக்கப்பட்டது.

இதில் எழுதப்பட்ட கட்டுரைகளில் ஜான் டேவிட் பற்றிய கட்டுரை ஒன்று இருக்கிறது. நக்கீரனும் ஜூனியர் விகடனும் நினைத்தால் எப்படி ஒரு சுவாரஸ்யமான கதை எழுதி ஒரு அப்பாவியை கொலையாளியாகவும் ஒரு கொலையாளியை நல்லவனாகவும் மாற்ற முடியும் என்பதைத் தெளிவாக சொல்கிறார் கண்ணன் அதில்.

எம்.கே.

நன்றி: திரு. ரெ.பாண்டியன். அமைப்பாளர், வாசகர் வட்டம். சிங்கப்பூர்.

(கேள்வி மற்றும் பதில்கள் அனைத்தும் செவிவழி கேட்டு எழுதிய விஷயங்கள். வார்த்தைகள் மாறியிருக்கலாம்.)

Search This Blog