Tuesday, April 26, 2016

மடையைத் திறப்பவர் மடையரா? ஒரு சர்ச்சையும் எனது சாட்சியமும்!

மடையர்கள் என்ற சொல், ஏரிகளின் மடைகளைத் திறப்பவர்களைச் சொல்லும்பொருட்டு உருவாக்கப்பட்டது என்பது பற்றி வரலாறு சொல்லுவதாகச் சொன்ன தொ.பரமசிவன் தகவலை, தி இந்து டி.எல்.சஞ்சீவிகுமார் எடுத்தாண்டு, அதை பேராசிரியர் ராமசாமி கிண்டல்செய்து, ஜெயமோகன் அதற்கு, நாகாக்க உரைத்திருக்கும் நான்கு இணைப்புகளையும் இங்கே கொடுத்துள்ளேன். வாசிப்பவர்கள் கவனத்தில் கொள்ளலாம்.

உண்மையைச்சொல்லவேண்டுமானால்,  இரண்டு விஷயங்கள் இவற்றில் உள்ளன.
1. மடையைத் திறப்பவர்கள் மடையர் என்று அழைக்கப்பட்டார்கள் என்று தொ.ப , எந்த சான்றுகளும் இன்றிநிறுவுவது.
2. இரண்டாவது நீர்நிலைகளின் மடை செய்யப்பட்ட விதமும் அதைத் திறக்கும் முறையும் பற்றி தொ.ப சொல்வது

இவற்றில் முதலாவதைப் பற்றிச் சொல்ல எனக்கு ஒன்றும் இல்லை. நான் சங்ககாலத் தகவல்களில் பாண்டித்யம் பெற்றவன் இல்லை. ஜெ.மோவோ, மு.ராவோ, நாஞ்சில் நாடனோ இதுபற்றிவிளக்கலாம். அதுதான் வரலாறுக்கும் நாட்டுக்கும் நல்லது.

ஆனால், இரண்டாவது தகவலைப் பற்றிச் சொல்ல என்னிடம் சிலவிஷயங்கள் இருக்கின்றன. அது, தொ.ப சொல்லும் மடை திறக்கும் மற்றும் மடையில் செருகச்செய்யப்படும் பனைமரம் பற்றிய தகவல்கள் கிட்டத்தட்ட சரியானதுதான்.

காரணம், இம்மடைகளை நான் பார்த்திருக்கிறேன். எப்படித் திறப்பார்கள் என அறிந்திருக்கிறேன்.

எனது கிராமத்தில், மிக மிக ஆபத்தான இவ்வேலையைச்செய்ய, யாரும் முன்வராத பலவேளைகளில், நீருக்குள் இறங்கி மடையைத் திறந்தவர் எனது தந்தையார் என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன்.

பொதுவாக, சமூகக்கீழ்த்தட்டு மக்களில் திறமையான ஒருவரையோ  அல்லது அனுபவமும் கிராம சிறுதெய்வங்களின் அருள்பெற்றவர்கள் என்று பேணப்படும் சிலரையோ அல்லது ’சேதம் பார்ப்பவர்’ என்று சொல்லப்படும் ‘குடிவானவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட, நீர்மேலாண்மை செய்யும் பொதுவான ஒருவரையோ தான் இவ்வேலைக்குச் செலுத்துவர்.

பலவேளைகளில் பெரும்பாலும் அவர்களில் சிலர், குடித்துவிட்டு நிலையற்று இருக்கும்போது, தைரியமாக இவ்வேலையைச் செய்ய, என் தந்தையர் தானே முன்வந்து,  உள்ளே மூழ்கிச் சென்று மடையைத்திறந்துவிட்டு அதே வேகத்தில் மேலே வருவார்.

தி ஹிந்துவில் சஞ்சீவிகுமாரின் கட்டுரையைப் படித்துவிட்டு, அண்மையில் நான் ஊருக்குச்சென்றபோது, அவரிடம், இந்த வேலையின் அதிபயங்கர ஆபத்து பற்றிப் பேசிக்கொண்டும் இருந்தேன்.

இப்போது மடைகள் மாறிவிட்டன.

அடுத்தமுறை, மடைசெய்வது பற்றியும், திறப்பது பற்றியும் இதுபற்றி விளக்கமாக அவரிடம் பேசி,  காணொளிசெய்யவேண்டும் என்று ஆசை., பார்க்கலாம்.

வேளாண் சமுதாயத்திற்காக, உயிராசை அகற்றி, மூச்சை அடக்கி, அடியாழ நீருக்குள் சென்று மதகை அசைத்துத் திறந்து, நீர்ப்பாய்தல் வேகம் கொள்ளும்முன், சடுதியில் வெளியே வந்து மூச்சை இழுத்து உயிர் கொள்பவரை, மடையர் என்றால், உங்களைக் கொலை செய்யாமல் விடமட்டேன். :-)


ஆனால் இவர் பனைமரத்தைப் பற்றி எழுதியிருக்கும் விஷயத்தை மட்டும் எடுத்துக்கொள்கிறேன்… ஏனெனில், கண்டமேனிக்கும் அட்ச்சுவுடுவது என்பது ஒரு ஆராய்ச்சியாளப் பெருந்தகைக்குச் சரியேயல்ல.

தேக்குமரம், பலாமரம், வேங்கைமரம் என்பவை போலல்லாமல் – பனை மரம் போன்ற அரிக்காஷீ (=Arecaceae) குடும்ப மரங்களின் தண்டுகளில் ‘வைரம் பாய்வது‘ என்பது நடக்கவே நடக்கமுடியாத விஷயம். ஏனெனில் அவற்றின் உள்ளமைப்பே வேறு!(தவறு) 
இவற்றில் நார்களும், சிறுகுழாய்களும், சுற்றுப்புறத்தில் ஒலைப் பிணைப்புகளும் (fibro vascular bundles and frond bases) நிரம்பியிருக்கும். இவற்றின் பலம் அதிகமில்லை. ஆனால் வளைந்துகொடுக்கும் தன்மை அதிகம். என் சொந்த அனுபவத்திலுருந்து சொல்கிறேன்:  நான் பனைமரத் தண்டுகளிலிருந்து பலகைகளை வெட்டியெடுத்து மரவேலை செய்ய முயன்று தோற்றவன்; ஆனால் தென்னை மரத் தண்டுப்பலகைகளிலிருந்து ஊஞ்சல்பலகைகளையும், புத்தக அலமாரிகளையும் வெற்றிகரமாகச் செய்திருப்பவன். (தென்னை மரத்திலும் ‘வைரம் பாய’ முடியாது)
இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் –‘வைரம் பாய்ந்த’ பனைமரக் கட்டை என்பது சுத்த கப்ஸா.
அதன் உள்தண்டை நீக்கிவிட்டால்‘ என்றெல்லாம் தொபெ எழுதுகிறார். அப்படி சர்வசாதாரணமாக புடலங்காயிலிருந்து அதன் குடலை நீக்குவதுபோலச் செய்துவிடமுடியாது என்றாலும், ஒரு பேச்சுக்கு இதனைச் சரியென்று கிண்டலாக ஒப்புக்கொண்டாலுமே – இப்படி குழாய் போல ஆக்கப்பட்ட தண்டிற்கு சக்தியோ தாங்குதிறனோ இருக்கவேயிருக்காது!
அதனை ஏரியின் அடியாழத்தில் பதித்து‘ என்று எழுதுகிறார். மடைகளோ மதகுகளோ, அப்படி ‘அடியாழத்தில்’ உருவாக்கப்படுபவையே அல்ல!  (தவறு) இம்மாதிரி நீராவாரிக் கட்டமைப்புகள் மேல்மட்டத்திலிருந்து கீழ்வரை (அடிமட்டம் வரையல்ல) அமைக்கப்பட்டிருக்கின்றன. நான் பார்த்திருக்கும் வரையில் அவை, மிகக் கவனமாக, நீர் நிலைகளில் குறைந்த பட்சம் சில அடிகளாவது நீர் ‘நிரந்தரமாகத்’ தேங்கும்படிதான் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மழையால் ஏரியில் தண்ணீர் நிரம்பி, கரையை உடைத்துக்கொண்டு செல்வதற்குமுன், ஒரே ஒருவர் மட்டும் ஏரிக்கரைக்குச்சென்று கடல்போல் கொந்தளிக்கும் ஏரிக்குள் குதிப்பார். மூச்சடக்கி நீரில் மூழ்கி அடியாழத்தில் இருக்கும் மடையின் அடைப்பை திறந்துவிடுவார். மடை திறந்ததும் புயல்வேகத்தில் வெளியேறும் வெள்ளம் மடைத்திறந்தவரையும் இழுத்துச்செல்லும். அந்த வேகத்திலிருந்து தப்பி பிழைப்பது மிகவும் கடினம்.‘ 
என்னமாதிரிக் கற்பனைச் சோகக்கதையிது! ஆனால், பனங்குழாய்களினூடே ஒருமனிதன் அடித்துச் செல்லப்படமுடியுமா என்ன? பனை மரத் தண்டுகளின் விட்டம் சுமார் ஒரு அடிதான்.  அதிலும் தொப அவர்களின் கண்டுபிடிப்பான பனைமரக் குழாய்களின் உள்விட்டம் சுமார் முக்கால் அடிதான் இருக்கமுடியும்!  (தவறான புரிதல்)
இத்தனூண்டு குழாய்க்குள், ஒரு மனிதன் வெள்ளத்தில் புயல்வேகமாக அடித்துச்செல்லப் படக்கூடுமானால் – பழந்தமிழ் மடையர்கள், ஓமப்பொடி அல்லது காராசேவு அளவே ‘குண்டு’ எனக் கருதப்படவேண்டுமா என்ன?

http://www.jeyamohan.in/87317#.Vx67pvl97Z4

https://othisaivu.wordpress.com/2016/04/24/post-634/#comment-5278

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/article7883303.ece

http://www.jeyamohan.in/8219#.Vx6z0vl97Z4

Thursday, April 21, 2016

1. எதிர்-அலையில்லாத(?!) அதிமுக கரையேறுமா? - தமிழ்நாடு 2016சட்டசபைத் தேர்தலைப் பற்றி நாலுவார்த்தை!

தமிழ்நாடு 2016 சட்டசபைத் தேர்தலைப் பற்றி ஏதாவது எழுதாமல்போனால் சாமி குத்தமாகிவிடும். சாமன்யனுக்கு தேர்தலையும் திரைப்படத்தையும் விட்டால் போக்கிடம் ஏது? அதனால், இந்ததேர்தலைப்பற்றி நாலுவார்த்தை எழுதிவைத்துவிடலாம் என்று நள்ளிரவில் தோன்றியதால் இங்கே எழுதிவைக்கிறேன்.



1. எதிர்-அலையில்லாத(?!) அதிமுக கரையேறுமா?
முதலில் ’எந்தவித எதிர்அலையும் அடிக்காத, அல்லது சிக்கலிலும் சிக்காத அதிமுக’ என்று சிலர்சொல்வதைக் கேட்பது அபத்தமாக இருக்கிறது. சாவு வரவில்லையாதலால் சுடுகாடு சுத்தம் செய்யப்படவில்லை என்று கூறும் பாக்கியவான்கள் அவர்கள். நிற்க.

தமிழக வரலாற்றில் எந்தவித வளர்ச்சியும் இல்லாத ஐந்து வருடங்கள் என்பது, கடந்த ஐந்து வருடங்கள்தான். ஐந்து வருடத்தில் ஒரு குடியானவனுக்கு, ஒரு மாணவனுக்கு, ஒரு இல்லத்தரசிக்கு, ஒரு பெண்குழந்தைக்கு எதுவுமே நடக்காதா? உங்களுக்கு கடந்த ஐந்து வருடங்கள் நாட்டில் எதுவுமே நடக்காமல் உங்களுக்குச் சோறுமட்டும் கிடைத்தால் அலையடிக்காத வாழ்க்கை என்று ஆனந்தப்படுவீர்களா?? எதிர்காலத்தில் அந்தச்சோறுக்கே வழி செய்யவில்லையென்றாலும்?

ஒரு மாநிலத்தைப் பிரித்து இரண்டாக்கினார்கள். புதுதலைநகரம் வேண்டும். சிங்கப்பூர் அரசுடன் ஒப்பந்தம் செய்தார். ஆற்றின் கரையில் மிகவும் திட்டத்தோடு உருவாகிக்கொண்டிருக்கிறது அமராவதி நகர். ஆந்திரப்பிரதேசத்தின் புதுதலைநகர். கனவுடன் முன்செல்கிறார் சந்திரபாபு நாயுடு, எடுத்துக்கொண்ட காலம் இரண்டு ஆண்டுகள். அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதியில்லை என்றது அந்நாடு. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைமகனாய் வருகிறேன், இல்லையென்று சொல் பார்க்கலாம், என்று சென்றார் மோடி. இன்று அவர் உலக நாடுகளின் செல்லப்பிள்ளை. எடுத்துக்கொண்ட காலம் மூன்று ஆண்டுகள். தமிழ்நாட்டில்??

ஐந்து ஆண்டுகள்? ஒரு அழுகாச்சி அரசவை நாடகமும் சில கூனிச்சமூகமும் உருவானதைத்தவிர வேறுஎதுவும் நடக்கவில்லை. அளவுக்கதிகமாய் காசு கொடுத்து மின்சாரம் வாங்கி கடனை ஏற்றுகிறார்கள். கட்டப்போவது யார்? அது ஆட்சிக்கு நாம் வரமுடியாதபோது, அடுத்துவருபவனின் தலையெழுத்து, நமக்கென்ன? இப்போது குவிப்போம். தவிப்போர் தவிக்கட்டும். காணொளி இருக்கிறது கட்டிடத்தைத் திறந்துவைக்க, இன்னோவா இருக்கிறது எடுபிடிகளை உருவாக்க.  புயலா மழையா வெள்ளமா வேனைவிட்டு இறங்காமல் அருள்பாலிக்கலாம். சின்னத்தை மறந்துவிடுவார்களா ஸ்டிக்கர் ஒட்டலாம். வேறென்ன, பெரிதாய் வேலையில்லை, அலையும் இல்லை அலைச்சலும் இல்லை. வருமானத்திற்கு வழி? டாஸ்மாக் இருக்கிறது. வாழைமரமாய்க் கொட்டுகிறது. ஓடட்டும் வண்டி. குடிகுடியைக் கெடுக்குமே? கெடுக்கட்டுமே? நம் குடியா, எவனோ ஒருவன். 1000ரூபாய் வாங்கிக்கொண்டு ஓட்டுபோட்டவன். அவன் குடித்தால் நமக்கு என்ன? கோபுரத்தில் ஏறி விழுந்துசெத்தால் நமக்கு என்ன?

ஆக, ஒரு ஆளுங்கட்சியாய் எல்லா விதத்திலும் தோல்வியுற்ற, ஆனாலும் எந்தவித நற்பெருமைகளும் இல்லாத எதிர் அணியோடு போட்டி போடுகையில் எப்படி இயங்கவேண்டும்? சரியாகச்செய்தாரா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

இதுவரைக்குமான மற்ற எல்லாத்தேர்தல்களையும் விட, ஜெயலலிதாவிற்கு மிகச் சவாலானது இத்தேர்தல். ஆளுங்கட்சியாய் இருந்தால் எதிர்ப்புக்கிளம்பிவருவது தெரிந்து விடும். எதிர்க்கட்சியாய் இருந்தால் ஆளுங்கட்சியின் பலவீனம் புலப்பட்டுவிடும். இந்தத்தேர்தலில் இரண்டும் இல்லாமல் கடலில் போட்ட கல்லாய்க் கிடக்கிறது நிலவரம்.

ஒருகாலக்கட்டத்தில் வெளிச்சமாய்க்கிடந்த சென்னை வெள்ளவிவகாரமும் ’பீப் சாங்கில்’ மறந்துபோய்விட்டது. ஆளுக்குஆள் மதுவிலக்கு, மதுவிலக்கு என்று சொல்லி அதற்கிருந்த மரியாதையும் போய்விட்டது. இப்போது என்ன சொல்வது என்றே புரியவில்லை.

அனைத்துத்தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் தேர்தலைச் சந்திப்பது, நிச்சயமாக ஜெ.யின் தைரியமும் சாதனையும் பெருமையும்தான். ஆனால் இச்சூழ்நிலையில் அது அத்தியாவசியமா என்ற கேள்வி எழாமலில்லை.  பெரும்பான்மையமைக்க அல்லது ஆதரவளிக்க ஒரே சின்னத்தில் வெற்றிபெற்றவர்கள் உதவலாம். அதற்காகக் கூட்டணியைத் தவிர்க்கலாமா? நான்கு-முனை, ஐந்து-முனைப் போட்டி என்று வந்தபின் நூறு இருநூறு வாக்குகளில்கூட வெற்றி தோல்வி அமையக்கூடிய தேர்தல் சூழ்நிலையில், வாசனின் த.மா.காவையும் வேல்முருகனின் த.வா.கவையும், ஜான்பாண்டியனின் கட்சியையும் கழட்டிவிட்டுவிட்டுத் தேர்தலைச் சந்திக்கும்  ஜெ, மிகப்பெரும் தவறு செய்துவிட்டார்.

அதிலும் இப்போது, ஒவ்வொரு சீட் கொடுத்திருக்கும் விசுவாச காமெடியர்களைவிட, கடந்தசிலமாதங்களில் மிகச்சிறந்த விசுவாச அடிமைகளாய் இருந்தவர்களுக்குக் கொடுக்கவேண்டியதைக் கூட்டிக்குறைத்துக் கொடுத்து, ஒவ்வொரு தொகுதியிலும் ஆயிரம் இரண்டாயிரம் வாக்குகள் அதிகம் விழுவதை அவர் வீணாக்கியிருக்கவேண்டாம். சாம,பேத,தான,தண்ட வழிகளில், கட்சித்தலைவர்களைத் தன் வழிக்குக்கொண்டுவரும் ஜெயலலிதா, வாசனையும் வேல்முருகனையும் கூட்டணிக்குக்கொண்டுவர ஆர்வமில்லாமல் போனது அதிசயம்தான். திமுகவின் இப்போதைய பலத்திற்கு இதுவே போதும் என்று நினைத்துவிட்டாரோ என்னவோ? திமுக கூட்டணியில் இணைந்துவிடாதவகையில் அவர்களை ’டீல்’ செய்தது இராஜதந்திரம்தான் எனினும், அவசியமில்லாமல், வெறும் பகட்டுப்பீதாம்பரத்துக்காய் ஓட்டுகள் பிரிந்துபோவது அவசியமில்லை.

வேட்பாளர்களின் தேர்விலும் அதே தந்திரத்தோடு ஜெ இறங்கியுள்ளார் என்றே தோன்றுகிறது. காரணம், வேட்பாளர்களை அறிவித்துவிட்டு பிறகு வரும் ரிப்போர்ட்டுகளுக்கு ஏற்ப மாற்றிக்கொள்வதும் பொதுசமூகத்தின் பார்வையில் நல்ல அபிப்பிராயத்தையே கொண்டுவரும் எனினும் வாய்ப்பிழந்த வேட்பாளர்கள் முழுமனத்தோடு தேர்தல் வேலைசெய்ய முன்வரவேண்டும். அதற்கு ஜெ.நேரிடையாக அவர்களை அழைத்துப்பேசினால்தான் உண்டு. முன்னால் அமைச்சர்கள் உள்ளிட்ட பழைய ஆட்களுக்கு அல்லது அவர்களின் வாரிசுகளுக்குக் வாய்ப்புக்கொடுப்பது, அறிந்தமுகங்கள் என்றவகையில் சிலவாக்குகளைக் கூடுதலாய்ப் பெற்றுத்தரும். அண்மையில் வாய்ப்பளிக்கப்பட்ட முன்னால் அமைச்சர்களின் மாற்றமும் இன்னும் எதிரணியின் வேட்பாளர்களைப் பார்த்து, அவர்களுக்கேற்றவாறு மாற்றம் செய்வதும் நல்லதுதான்.

மக்கள் எளிமைத்தனத்தை விரும்புகிறார்கள் என்பதைக் காலம் கடந்தாவது ஜெயலலிதா உணர்ந்துகொள்ளவேண்டும். கொடும்வெயிலில் மக்களை வாட்டிக்கொண்டிருக்கிறார் என்பதை யாராவது அவருக்கு எடுத்துச்சொன்னால் நன்றாயிருக்கும். நேற்றுவரைக்கும் அவரது கூட்டணிக்காக அலைந்துவிட்டு இன்று அவரை எதிர்த்துப்பேசுபவர்களின் அறிவிலித்தனத்தை மக்கள் உணர்ந்துகொள்வார்கள் எனினும், அந்த காமெடியர்களின் பேச்சுக்கு எதிராய்ப் பரப்புரை செய்ய கட்சிஆட்களையும் இன்னும் இறக்கிவிட்டதாய்த் தெரியவில்லை. ஹெலிபேடு அமைக்க விவசாய நிலங்களில் தார் ஊற்றுவது உள்ளிட்ட வேலைகளைச்செய்யாமலும் இருக்கவேண்டும். விஜயகாந்த என்னும் காமெடியரையோ அல்லது குடும்ப ஆதிக்கமாய் ஒரு ஆட்சியையோ தமிழகமக்கள் இப்போதைக்கு விரும்பவில்லை எனினும், தானும் களத்திலும் மக்களிடத்திலும் அனுசரனையாய் நடந்துகொள்ள அவர் முன்வரவேண்டும், இவையெல்லாம் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்று அவர் விரும்பினால் மட்டுமே.

எம்.கே.குமார்

Search This Blog