Tuesday, December 28, 2010

பறக்கும் முன் மடிந்த, மறக்க முடியாத மைனா!

குறிப்பிட்ட தமிழ்ப்படம் சிங்கப்பூரில் எந்த தியேட்டரில் ஓடுகிறதென்பதை 'தமிழ்முரசி'ல் தேடுவதுதான் என் வழக்கம். 'நல்ல' படம் எதுவும் சிங்கப்பூரில் நிறைய நாட்கள் ஓடாதே; மைனாவும் அந்த வரிசையில் சேர்ந்துவிட்டதோ' என்றவாறு தேடினால், "ரசிகர்களின் விரும்பத்திற்கிணங்க, மீண்டும், ரெக்ஸ் திரையரங்கம்-1ல் மாபெரும் திரைக்காவியம் - மைனா" என்றிருந்தது. தோமஸைப் போன்றவன் நான். ரெக்ஸ் திரையிரங்கிற்குத் தொலைபேசினேன். படம் ஓடுகிறதா, எத்தனை மணிக்குக் காட்சி, கட்டணம் எவ்வளவு. சந்தேகம் தீர்ந்தது. மைனாவைப் பார்த்துவிடுவது என்றுமுடிவுசெய்துவிட்டேன்.

அண்மைக்காலமாக எந்த தமிழ்ப்படத்தைப் பார்த்தாலும் எனக்கு கமல்ஹாசன் ஞாபகம் வருவது நல்லதா கெட்டதா என்பதை செராங்கூன் ரோடு 'மணி' கிளிதான்சொல்லவேண்டும். 'மைனா'வைப் பார்த்துவிட்டு அன்றிரவு நிம்மதியாகத் தூங்கினேன் என்று 'கமல்' சொல்லியிருந்தது வேறு 'கூடுதல்' ஆவலை என்னுள் புகுத்தியிருந்தது.

ஓடும் ரயிலில் 'எழுத்தும் இயக்கமும் - பிரபு சாலமன்' என்ற நிலையில்'மைனா'வுக்குள் இணைந்தேன்.

கதையை வானத்திலிருந்தோ அல்லது கற்பனைக்கெட்டாத ஒன்றிலிருந்தோ எடுக்கவில்லை என்பதே ஒரு மிகப்பெரிய அண்மைய ஆறுதல்களில் ஒன்று.

படிப்பு வராமல் வெட்டியாய்த் திரியும் சிறுவன் ஒருவன், தெருவில் நிற்கும் ஆதரவற்ற தாயையும் மகளையும் தனது மலைக்கிராமத்தில் குடியேற்றுகிறான். அப்பெண்ணின் மேல் உயிராய் இருக்கும் அவன், வருடங்கள் கடந்து, அவளையே மணக்க வேண்டும் எனக் காதல் பைத்தியமாய் திரியும் போது அந்தப்பெண்ணின் அம்மா, அவனுக்கு அவளைக் கட்டி வைக்க முடியாது என்று வெகுண்டெழுகிறாள். காதல் ஜோடி ஓடுகிறது; போலீஸ் துரத்துகிறது. முடிவு என்ன? இதுதான் கதை. இவ்வளவு சாதாரண ஒரு கதையைத் திரைக்கதையின் மூலம் பறக்க வைத்திருக்கும் இயக்குனருக்கு வாழ்த்துகள்.

மலைப்பிரதேசத்தில் நடக்கும் கதைகளைப் பதிவு செய்வது ஒரு மாபெரும் வேலை. படம் முழுக்க வரும் பச்சையும் ஈரமும் கடைசிக்காட்சி வரை தொடர்கிறது. பிரபுசாலமன் சொன்னது போல இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் கணவன் மனைவி போல இருக்க வேண்டும். அப்போதுதான் அசலான பதிவு கிடைக்கும். இயக்குநருக்கும் ஒளிப்பதிவாளருக்கும் நன்றி.

குணா படம் நினைவுக்கு வந்தது ஏனென்று தெரியவில்லை. மலையை, இயற்கையைப் பின்னணியாகக் கொண்டு புகைப்படம் எடுப்பவர்கள் இப்படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கவேண்டும்; அவ்வளவு அழகு காட்சிக்கு காட்சி.

கதையை ஏன் தீபாவளிக்கு முன் ஆரம்பிக்கவேண்டும் என்று நினைத்தபோது வில்லனே தீபாவளிதான் என்பது அதிர்ச்சி. தலைதீபாவளி கொண்டாட முடியவில்லையே என்றெல்லாம் வன்முறையில் இறங்கும் கும்பல் தமிழ்நாட்டில் இருப்பது அதிர்ச்சியாயிருந்தாலும் கொலை மற்றும் தற்கொலைக்கான காரண காரியங்களைப் பகுத்தறிய முயன்றால்தான் அச்சம்பவமே நடக்காதே?! அந்த நேரத்தில், அந்த மனிதன்,அப்படி இருந்தான்; அவ்வளவுதான்!

மிகப்பெரிய ஆச்சரியம் நாயகி அமலா பால். இத்தனை குட்டியூண்டு (19 வயதுதானாம்),புதுமுக நடிகை எல்லாம் காமிரா முன்னால் நிற்கிறோம் என்ற சொரணை '1 சதவீதம்'கூட இல்லாமல் இப்படி (அ)சாதாரணமாக இருக்க (நடிக்கிறார்கள் எனச்சொல்ல முடியவில்லை!) முடிகிறதே, அது எப்படி என்பதுதான்.

நாயகி அமலா பால் பெரிய அழகியெல்லாம் இல்லை. (அவரை விட பெரிய அழகி, படம் பார்த்துவிட்டு வெளியில் வரும்போது, ரெக்ஸ் திரையரங்கு வாசலில்,எனதுமுன்னால் சென்றார்; நாம் பார்ப்பதை யாரும் பார்க்காமல் பார்ப்பது எப்படி என்று நிறையப்பேருக்கு "கிளாஸ்" எடுக்கவேண்டும்) ஆனால் படத்தில் மைனாவாகவே வாழ்ந்திருக்கிறார். சிந்துசமவெளியில் நடித்த பாவத்திற்கு இது விமோசனம்என்கிறார்கள் சிலர். அப்படத்திலும் எனக்கு அவரைப் பிடித்திருந்தது. நல்ல நடிகை என்பவள் எல்லாவிதக் கதைகளிலும்தானே நடிக்கவேண்டும்.

விதார்த் கதையின் நாயகன்; ஒரு கதையை உருவமாக்க, பொருத்தமான ஆள்தான் தேவை; நடிகருக்குக் கதை இல்லை. அந்த வகையில் விதார்த் பட்டையைக்கிளப்புகிறார். கூத்துப்பட்டறை பாசறையிலிருந்து வந்தாலும் கதைக்கேற்றவர். அடுத்தடுத்துப் படங்கள் வருவது கஷ்டம் தான், காரணம், கதை நாயகனாகிவிட்டிருப்பது.

தம்பி ராமையாவின் காமெடி மீது எனக்குப் பெரிதாய் அபிப்பிராயம் இருந்ததில்லை. காமெடிக்கு முயற்சிக்கிறார் என்றே நினைந்திருந்தேன். இப்படம் அவருக்கு ஒரு மைல்கல். காமெடிக்கும் குணச்சித்திரத்திற்கும் ஏற்றவாறு ஒரு நடிகர். மணிவண்ணனின் (இல்லாத) இடத்தைப் பிடிக்கலாம்.

அறிமுக நடிகர் சேது (போலீஸ்) அபாரம். ஹோட்டலில் சாப்பிடும் பொழுது இவர் கோபம் பொங்கப் பேசும் உணர்வுகள் ஒவ்வொருவருக்கும் உண்டாவது. இவரைக்கதாநாயகனாக வைத்து 'விருமாண்டி' ஸ்டைலில் மற்றொரு பார்வையில் கதையைச் சொன்னால் எப்படி இருக்கும்? நேற்றுவரை அந்த ஞாபகம் தான். படம் பார்த்தவர்களும் யோசிக்கலாம்.

படத்தின் நாயகன் கொலைகாரக் கும்பலில் ஒருவனோ அல்லது ரௌடியோ இல்லை என்பது மிக மிக மிகப்பெரிய ஆறுதல். இயக்குனருக்கு நன்றி.

போலீஸ்காரர்கள் அனைவரும் மனிதர்களே; மனிதர்கள் அனைவரும் பழிவாங்குபவர்களே என்பதைச் சொல்லும் காட்சி. (சோத்துல வெஷத்தை வெச்சி கொன்றுடுவேன், என்கவுண்டரில் போட்டுருவேன்) பழிவாங்கக் காத்திருப்பவர்கள்,மன்னிப்பும் வழங்குவார்கள்; மன்னிக்க முடிந்தவர்கள் பழியும் வாங்குவார்கள்;பழிவாங்கியவர்கள் மனிதனாகவும் ஆவார்கள் எனப் போலீஸ்காரர்களைச் சுற்றி வெறொரு உலகத்தை காண்பித்த இயக்குனருக்கு இன்னொரு நன்றி.

முரட்டு மீசை, பெரிய மச்சம், கனத்த சரீரம், பரட்டை முடி, விரிந்த கிருதா வரிசையில்'அம்மை போட்ட தழும்பு முகம்' என்பதும் வில்லன்களின் உருவகமாக ஆக்கமுற்படுவது தவிர்க்கப்படவேண்டும். அப்படி ஒரு படிமத்தை பார்ப்பவர்கள் மனதில் உருவாக்க அவசியமில்லை என்றே நினைக்கிறேன். எனக்குத்தெரிந்த பல வில்லன்கள் எப்போதும் "ஒயிட் அண்ட் ஒய்ட்" ஆடையில் அழகாகவும் சிவப்பாகவும் இருக்கிறார்கள், அமைதிப்படை ராஜராஜசோழனைப்போல! இன்றுவரை மனதில் நிற்கும் கொடூர வில்லன்களில் "சத்யா" கிட்டியும், "மகாநதி" ஹனிஃபாவும் தான் முதலிடத்தில் இருக்கிறார்கள். கமல்ஹாசனுக்கு நன்றி.

சினிமாவில் நல்ல இயக்குனர்கள் தென்படுவது ஒரு ஆறுதல். பிரபு சாலமன் அந்த முயற்சியில் வெற்றிபெற்றாலும், அந்த வரிசையில் சேர்ந்துவிட்டார் என்று இப்போதைக்குச் சொல்லமாட்டேன். காரணம், இப்படி ஒரு படத்தை மீண்டும் அவர் கொடுக்க வேண்டும். படத்தில் சில காட்சிகள் நிறைவற்று இருந்ததாக அல்லது ஏதோ ஒன்று குறைந்ததாக நினைவு. எனது அளவுகோல், இயக்குனர் பாலாவினுடையதும் கமலுடையதும் ஆகும்.

மிகுந்த நிறைவுணர்வை அளிப்பதில் பின்னணி இசை முன்னுக்கு நிற்கிறது. பாடல்களில் மைனா மைனா பாடல் நெஞ்சை உரசுகிறது. (மீண்டும்) நல்வரவு டி.இமான்.

தோல்விப்பட(ல)த்திலிருந்து பிரபுசாலமன் மீண்டுவந்ததிற்கு அவரது கடின உழைப்பில் மிளிர்ந்த, பின்வருவனவற்றைச் சொல்லமுடியும்.

o ஒரு சாதாரண கிராமத்துக் காதல் கதையாய் இல்லாமல் புதியதொரு மலையும் மலை சார்ந்த காதலுமாய் முன்னிருத்தியதால்

o மிக மிக நேர்த்தியான திரைக்கதை

o உணர்வுகளோடு ஒத்துப்போகும் ஒளிப்பதிவும் இசையும்

o கதைக்கேற்ற பொருத்தமாய் நட்சத்திரங்கள்

o ரசனையாயும் புதுமையாயும் படத்தில் வரும் சிறு சிறு காட்சிகள் (உதாரணம்,மனித உரிமை ஆர்வலர், பல் டாக்டர்)

o எதிர்பாராத இடத்திலிருந்து வரும் முடிவுகள்

o நாயகன் - நாயகியின் மிக மிக இயல்பான நடிப்பும் கதைகேற்ற பொருத்தமும்(நாயகியின் பருவமும் ஹி..ஹி..ஹி..)

தமிழ் சினிமா நண்பர்களுக்கு எனது நாலணா அறிவுரைகள்...

1. இன்னும் ஒரு நான்கு வருடங்களுக்காவது சிறு பருவத்து நட்பு, காதல், அன்பு,வண்டி ஓட்டுதல், கூட்டாஞ்சோறு ஆக்குதல் என்பதாய் எடுத்துத் தொலைக்காதீர்கள். அப்படியே எடுத்தாலும் கிராமத்தை விட்டு விட்டு நகரத்துக்கு வாருங்கள். (ஆமாம், நகரத்தில் வளர்ந்த பசங்களெல்லாம் ஏழு எட்டு வயதில் என்னதான் செய்வார்கள்? அப்பா அம்மா விளையாட்டு, ஓணானை விரட்டுதல், பக்கத்து வீட்டு அண்ணனுக்கு காதல் தூது செல்லுதல்..இப்படி ஏதும்...உண்டா? எனக்குத் தெரியவில்லை.)

2. சாதாரண காதல் கதையை எடுத்து, கிளைமேக்ஸில் உணர்ச்சியை ஊற்றி,வெற்றியைப் பிழிந்து விடலாம் என கனவு கண்டு அப்படிப் படம் எடுக்காதீர்கள். படம் கண்டிப்பாய் ஃபிளாப் ஆகும்.

3. மைனாவைக் காப்பி அடிக்காதீர்கள்.

*******

இது, இப்படி நடந்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே என்று, 'மைனா' பார்த்துவிட்டு வருபவர்கள் அனைவருமே நினைப்பார்கள். அதுதான் வாழ்க்கை என்பது நம் வாழ்க்கையிலிருந்து கூட நாம் அறிய இயலும், ஆனால் அறியாத ஒன்று. அதுதான் வெற்றிக்கான பாதை என்பது தமிழ் சினிமாவில் தெரியத்தொடங்கியிருப்பது "சேது" கொடுத்த தைரியம். தைரியம் தரும் பாதை சிறக்கட்டும். எம்.கே.குமார்.

நன்றி: தங்கமீன்

மிகச்சிறந்த கதாபாத்திரங்கள் - ஒரு பகிர்வு

துணை நடிகர்களைத் தேடுவதில் ஒரு இயக்குநரின் பங்கு என்ன என்பது எனக்குச் சரிவர தெரியவில்லை. அவர்களே தேடுவார்களா, இல்லை துணை நடிகர் ஏஜெண்ட்டிடம் சொல்லி, இந்த மாதிரி ஆள் வேண்டும் எனப் பிடித்துதரச்சொல்வார்களா என்பதும் தெரியவில்லை. ஆனால், ஒன்று மட்டும் சத்தியமாய்த் தெரிகிறது. சிலர் இதில் கடுமையாய் உழைக்கிறார்கள். இது இவர்தான் என்று முழுமையாய் தான் நம்பும் அளவுக்கு அக்கதாபாத்திரத்தை அவர்கள் தேடுகிறார்கள் அல்லது உருவாக்குகிறார்கள்.

அத்தகைய தூண்டுதலில், சில பேரை சில வேடங்களில் அவர் "நடிக்கவில்லை; அவரேதான் அது" என்று மனம் ஒருங்கிணைத்துக்கொள்ளும். அவரைப் பின்னாளில் வேறொரு படங்களில் பார்த்தால் கூட அவ்வளவாக மனம் ஒப்புக்கொள்ளாது.

அந்த வரிசையில் எனக்கு பல பொருத்தங்கள் உண்டு.

  • 'பருத்திவீரனில்' வரும் பொணந்தின்னி (மைனாவில் நாயகனின் அப்பா),
  • 'நான் கடவுளில்' வரும் அம்பானி பற்றி கமெண்ட் அடிக்கும் மாற்றுதிறன் சிறுவன் (பின்னாளில் ஒரு படத்தில் கல்லூரி மாணவனாக நடித்திருப்பார்)
  • 'விருமாண்டி'யில் கொலையைப் பார்த்துவிட்டு, பார்க்கவில்லை என்று பொய்ச்சாட்சி சொல்ல வரும் ஒரு புதுமுகம் (பின்னாளில் இவர் 'திருட்டுப்பயலே' படத்தில் நாயகனின் நண்பராக ஆஸ்திரேலியாவில் இடுப்பு டான்ஸ் தேடுவார்)
  • 'விருமாண்டி'யில் வரும் சண்முகராஜன் நல்லகாமன் போலீஸ்.. அதற்குப்பிறகு பல படங்களில் இவரை வில்லனாகப் பார்த்தாலும் அந்த வேடமும் அவருடைய ஒரு நக்கலான சிரிப்பும் கண்ணை விட்டு மறையவில்லை.
  • 'அயன்' படத்தில் சேட்டு வீட்டு கணக்குப்பிள்ளை (இவர், 'பிதா மகன்' படத்தில், சூர்யா ரயிலில் விற்பனை செய்யும்பொழுது அருகில் அமர்ந்திருப்பார். இவரை எப்படி கரெக்டாக அயன் படத்தில் பிடித்துப்போட்டார் இயக்குனர் என்பது எனக்கு ஒரு ஆச்சரியம்)
  • 'அங்காடித்தெரு' நாயகன் மகேஷ் (அங்காடித்தெருவில், வெங்கடேஷ், பழ. கருப்பையா இவர்களையெல்லாம் அந்தந்த கேரக்டராகவே மனசு ஒப்புக்கொள்கிறது)
  • 'மைனா'வின் நாயகன் விதார்த்
  • 'பருத்திவீரன்' ப்ரியாமணி அம்மா (கமல்தான் இவரை விருமாண்டியில் அறிமுகப்படுத்தினார்)
  • 'எம்டன் மகன்' சரண்யா (அ) 'களவாணி' சரண்யா
  • 'பூ' படத்தின் நாயகி
  • 'பிதா மகன்' விக்ரம் (இந்த வேடம் அவர்தான், இதற்குப்பிறகு எத்தனையில் அவர் நடித்தாலும் இதுவே அவர் உச்சமாக இருக்கும்!)

- இன்னும் நிறையப்பேர் இவ்வரிசையில் உண்டு. ஒரு அனுபவத்தின் முழுமையில் இதை உள்வாங்கும்போது இவர்கள் அந்த வேடத்தின் ஆளுமையாய் ஆகிவிட்டது உண்மையாய் இருக்கிறது.

மிகச்சிறிய கதாபாத்திரமேனும் அதற்குத்தகுந்த ஆட்களைத் தேர்வு செய்வதில் எனது சினிமா ரசிப்புத்தன்மையின் அனுபவத்தில், கமல் முதலில் நிற்கிறார். அதற்கடுத்த நிலையில் பாலா. அமீர், செல்வராகவன், வசந்தபாலன் ஆகியோரும் இந்த லிஸ்டில் உண்டு.

கமலின் அற்புதமான திறமைகளில் இதுவும் ஒன்று என்பதை அவருடைய படங்களை உன்னிப்பாய்க் கவனிப்பதன் மூலம் நாம் உணரமுடியும்.

அயன் படத்தில் பல கதாபாத்திரங்கள் 100 சதவீத வெற்றித்தேர்வாய் இருந்தது என்பதை நான் இங்கே பதிவு செய்கிறேன். சூர்யாவின் அம்மா முதல், சேட்டு மகன் அவருடைய குரல் வரை, அனைத்தும் கச்சிதப்பொருத்தம்!

இந்த கதாபாத்திர - தேர்வில், மிகவும் கடைசியில் இருப்பது கே.எஸ். ரவிகுமார் என்பதாக நான் நினைக்கிறேன். காரணம், எந்த கழுதையாய் இருந்தாலும் அதை நடிக்கவைத்து எடிட்டிங்கில் ஏற்றிவிட்டு விடலாம் என்பது அவர் எண்ணமாய் இருக்கலாம், இதற்கெல்லாம் அவர் அவ்வளவு முக்கியத்துவம் தருவதில்லை என்பது பல படங்களில் தெரியும்.

இந்த கதாபாத்திர முழுமையில் இயக்குனரின் ஈடுபாட்டுக்கும் அற்புத தேர்வுக்காகவும் ஒரு விருது வழங்கப்படலாம்.

எம்.கே.

Saturday, December 18, 2010

சிங்கப்பூரில் சாரு நிவேதிதா கலந்துகொண்ட பூப்பெய்தல் விழா - ஒரு மீள்பார்வை

சிங்கப்பூரில் இருந்த போது நான் ஒரு எழுத்தாளரைக் கூட சந்திக்கவில்லை. நான் வந்திருப்பது அவர்களுக்குத் தெரிந்திருக்காது. இருந்தும் ஒருநாள் சிங்கப்பூர் நூலகத்தில் ஒரு கலந்துரையாடல் நடந்தது. நமக்குத் தெரிந்த நண்பர் ஒருவரின் மகள் பூப்பெய்திய சடங்கு நிகழ்ச்சிக்குச் சென்று வந்தது போல் இருந்தது." என்று அண்மையில் "தங்கமீன்" மின்னிதழில் எழுதியிருந்தார் சாரு.


நிரந்தர நண்பர்களும் நிரந்தர எதிரிகளும் இல்லாத அன்பர் சாரு கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியில் சாருவுடன் நான் எடுத்துக்கொண்ட நெருங்கிய போட்டோ...
சிங்கப்பூர் நூலக அதிகாரி புஷ்பலதா அவர்களுக்கு இந்நேரத்தில் நன்றி.

Tuesday, December 14, 2010

'எந்திரன்' தலைவனுக்கு ரஜினி ராக்கப்பன் எழுதும் கடிதம்

ஷ்ஹோஒ........ஷ்ஹோஓஓ....ஷ்ஹோஓஓஒ...............

வணக்கம் தலைவா. நான் தான் ரஜினி ராக்கப்பன், சிங்கப்பூர்ல இருந்து எழுதுறேன். மொத வரி ஏதோ புரியாத மாதிரி இருக்கேன்னு கொழம்பாதே தலைவா. தலைவருக்கு மொதமொறையா ஒரு கடுதாசி எழுதுறோமேன்னு ஒரு 'சீட்டி' அடிச்சுட்டு எழுத ஆரம்பிச்சேன், அதுதான் அது. விசில் சத்தம்.

வந்து பாரு தலைவா, நாடு விட்டு நாடு வந்தாலும் தலைவரு பாசம் போகுமா தலைவா. பிச்சுப்புட்டோம். தலைவர் படம்ன்னா தலைவர் படந்தான் சொல்லவைக்கிற அளவுக்கு நடத்திக்காட்டிப்புட்டோம் தலைவா.

ஒருவாரத்துக்கு முன்னாடியே, வுட்லாண்ட்ஸ் காஸ்வேபாயிண்டு தியேட்டர்ல போயி டிக்கட்டு புக் பண்ணச்சொல்லி நம்ம பாண்டிப்பயல அனுப்பி வெச்சிட்டோம். ரெண்டு நாளு பொயிட்டு, சும்மாவே திரும்பி வந்தான், என்னடான்னு கேட்டதுக்கு இன்னும் புக்கிங் ஆரம்பிக்கலையாம்ன்னு சொன்னான். இவன் ஒரு வெளங்காத பய தலைவா. பாபாவுக்கு அவனைத்தாம் அனுப்பிவெச்சோம். பாபா கதைதான் தெரியும்ல. அதனால திரும்பி மூணாவது நாளு நம்ம சேகரு பயல போகச்சொன்னோம்.

சேகரு நாட்டரசன் கோட்டை தலைவா. ஊர்ல 'பாட்ஷா ரஜினி ரசிகர் மன்றத்துல' உபதலைவர். நீலாம்பரிங்கிற மாமா பொண்ண விட, வீட்டுவேலைக்கார பொண்ணுதான் நல்லபொண்ணுன்னு நீ ‘படையப்பா’ல கல்யாணம் கட்டுனதுமாதிரி, மாமா பொண்ணை விட்டுட்டு, வீட்டுக்கு வேலைக்கி வந்த பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு, இப்போ சிங்கப்பூர்ல கொத்துவேலை பாக்குறான். ஊருலேயிருந்து வந்த மொத நாளு கேட்டான், 'பாஸ், கன்ஷ்ட்ரக்ஷன் வேலை, கன்ஷ்ட்ரகக்ஷன்ல வேலையின்னு சொல்றாய்ங்களெ, அப்படின்னா என்ன வேலை பாஸ்ன்னு. அட கருமாந்திரம் புடிச்சவனே, ஊர்ல கொத்துவேலை இருக்குல, அந்தவேலைதானு சொன்னேன். ரஜினி ரசிகனாச்சே தலைவா. அன்னிக்கி களத்துல குதிச்சவன் தான். கம்பி கட்டுறதுல அவன அடிக்க ஆளு இல்லெ இன்னக்கி; நாட்டாங்கெல்லாம் அவனுக்குட்ட வேலை கத்துக்கணும். வேலை தலைவா வேலை; கடமை தலைவா கடமை; உழைப்பு தலைவா உழைப்பு.

ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, பதினாறு அடி உயரத்திலேயிருந்து ஒரு நாளு விழுந்ததுல கொஞ்சம் இடுப்பெலும்புல காயம். மத்தபடி இன்னக்கிம் மலை. அண்ணாமலை! படையப்பன்; ஆறு படையப்பன்! உன் கட் அவுட்டுக்கு பாலு ஊத்தும்போது இப்படி விழுந்திருந்தாகூட சந்தோசப்பட்டிருப்பனேன்னு அவன் ஒரு மாசம் பினாத்திக்கிட்டிருந்தான். நாட்டரசன் கோட்டை போனா மறக்காமெ பாரு தலைவா, பஸ் ஸ்டாண்டுக்கு பக்கத்துல பதினாறு அடில ஃபிளக்ஸ் போர்டு உனக்கு, அவந்தான் வெச்சிருக்கான். அவன் பொண்டாட்டிய நாய் கடிச்சி நாட்டரசன் கோட்டை ஆசுபத்திரில வெச்சிருக்கானுவ நாலுமாசமா. போன மாசம் பாக்கப்போயிருந்தான். அப்போ வெச்ச போர்டு தலைவா அது.

உன் போஸ்டரைக்கூட கையெடுத்து கும்பிடுற பயகள்ல அவனும் ஒருத்தன் தலைவா. வந்தா டிக்கட்டோட வா இல்லாட்டி வராதேன்னு போகச்சொன்னோம். அன்னக்கி அவனுக்கு 4 மணி டு 8 மணி வரைக்கும் ஓவர்டைம்; பாத்திருந்தா 12 வெள்ளி சம்பளம் கூட கெடச்சிருக்கும். என்னடா, இன்னக்கி ஓவர்டைம் பாத்துட்டு நாளைக்கிப் போயி வாங்கிக்கலாமான்னு கேட்டேன். 'படுத்திருந்த நாயி வால்ல வெடியக்கொழுத்தி வெச்சதுமாதிரி' பயலுக்கு வந்திருச்சி கோபம். என்னைப் பாத்து, என்னப்பாத்து எப்படிடா இப்படிக் கேக்கலாம்ன்னு சொல்லிட்டு வேலைக்கி அரை நாள் லீவு போட்டுட்டு வுட்லாண்ட்ஸ் தியேட்டருக்கு கெளம்பிட்டான். தலைவருன்னா சும்மாவா. பாசக்கார பய தலைவா.

படத்துக்கு மொத்தமா கெளம்பிட்டு இருக்கும் போது இந்த ‘விக்ரம்’ பய ஒரு கமெண்டு விட்டான் பாரு. எல்லோரும் அவனை சாத்தலாமான்னு பாத்தோம், அப்படியான கமெண்டு தலைவா அது, என்னன்னு கேக்குறியா? “என்னடா பன்னிங்க எல்லாம் கூட்டம் கூட்டமா கெளம்பிண்டிங்க போலயிருக்கு”ன்னு தான்.

சிங்கப்பூர்ல 10 தியேட்டர்ல போட்டுருந்தாங்க தலைவா. என்னுடைய சிங்கப்பூரு 10 வருஷ வாழ்க்கையில இதுதான் தலைவா பத்து தியேட்டர்ல போட்ட மொத படம். அப்படியே மெரள வெச்சிட்டே தலைவா. டிக்கட்டுதான் 15வெள்ளி வாங்கிப்புட்டானுக. முக்கால் நாள் சம்பளம். போகட்டும் தலைவா, இதையெல்லாம் கணக்கு பண்ணலாமா?

படத்தைப்பத்தி என்ன சொல்ல தலைவா. வாற சீன்லையெல்லாம் உன்னையே பாத்துக்குட்டு இருந்ததால, படத்துல என்ன நடந்ததுன்னு ஒண்ணூமே ஞாபகம் இல்லை தலைவா. ஆனாலும் 'புதுக்கோட்டை பிரஹதம்மாள்' தியேட்டர்ல 'பாட்ஷா' படத்துக்கு அடிச்ச விசிலை விட அஞ்சு விசிலு அதிகமாத்தான் அடிச்சிருப்பேன்னு தோணுது. நல்லவேளை, தியேட்டர்ல இருந்தவங்க யாரும், இந்த "ஊர்ப்பயலுக" தொல்லை தாங்கமுடியலைன்னு பொலம்பா, சந்தோசமா குதூகலமா இருந்ததா ஒரு மனநிறைவு தலைவா. உன்னால, ரஜினியால தான் இந்த நிறைவு, ஒற்றுமை எல்லாம் சாத்தியம், நடக்கும் தலைவா.

படத்துல சிட்டிங்கிற எந்திரன் தன்னைத்தானே வெட்டிக்கிட்டு சாவுற காட்சியில பொலபொலன்னு அழுதுட்டேன் தலைவா. மனசைக் கரைக்கிற சீனு தலைவா அது. அது மாதிரி மனுசனை வெட்டுறதைக் கூட தாங்கிக்கிடுவோம் தலைவா; ஆனா மிஷினா இருந்தாலும் அது ரஜினி மெஷினா இருந்தா தாங்க முடியல தலைவா. இந்தமாதிரி சீனு இனிமே வெக்காத தலைவா. கடைசி இருபது நிமிஷம் 'டாம் அண்ட் ஜெர்ரி' மாதிரி சூப்பரு தலைவா.

கலாநிதிமாறன்கிட்டெ சம்பளம் கூட வாங்காம நடிச்சிருக்கேன்னு கேள்விப்பட்டேன் தலைவா. புல்லரிக்குது தலைவா. பணமா முக்கியம் தலைவா. பாசம் தலைவா; பாசம்!!. இதுதான் தலைவர்ங்கிறது. இந்த குணம் இல்லாமெ, பூஜை போடும்போதே, எந்த ஏரியான்னு வாங்கிக்கிட்டு, அட்வான்ஸையும் அள்ளிக்கிறதுனாலதான், சூப்பரு ஆக்டருன்னு சொல்லிக்கிட்டு திறியிறவங்க படமெல்லாம் பாக்ஸ் ஆஃபீலே படுத்துக்குது. மனசு வேணும், தலைவா, பணமா முக்கியம்.

எனக்கு இன்னும் ஒரு சந்தேகம் இருந்துகிட்டே இருக்கு தலைவா. தலைவனுக்காக படமா, இல்ல சன் டிவிக்கான்னு. சன் டிவி உன்னைக் கூவி கூவி வித்துட்டாய்ன்ங்களோன்னு வேற யோசிக்கத்தோணுது. என்னவா இருந்தா என்ன தலைவா? வீட்டுக்காரன், வீட்டுக்கு உள்ளே வெச்சி சோறு போட்டா என்ன, இல்லெ, வெளியே வெச்சி சோறு போட்டா என்ன.? அந்த சோறு எங்களுக்கு கெடைக்கிறது பெரிய விஷயம் தானே. சந்தோசம் தானே.

அண்மையில பாலச்சந்தர் சார் உன்னைப் பேட்டி கண்டதா படிச்சேன், தலைவா.

நீ நடிச்ச படத்துல காலம் கடந்து நிக்கிற படம் எதுவா இருக்குமுன்னு கேட்டதுக்கு ராகவேந்திரா, பாட்ஷா, எந்திரன்னு சொல்லியிருக்கியே தலைவா? நல்ல படத்தையெல்லாம் சொல்லாம எப்படித் தலைவா, இப்படி படமா சொல்றே? இன்னக்கிம் என் பொண்டாட்டியக் கேட்டா ஆறிலிருந்து அறுபது வரைக்கும், முள்ளும் மலரும், ஜானின்னு சொல்லிக்கிட்டு திரிவா. அவ என்னைவிட அதிகமா உன் விசிறி தலைவா.

பொண்டாட்டிக்கிட்ட தோத்துட்டா வாழ்க்கையில ஜெயிச்சுடலாம்; பொண்டாட்டிக்கிட்டெ ஜெயிச்சுட்டா வாழ்கைக்கையில தோத்துடுவோம்னு மேடையில சொல்ல, நீ கையை மேலே தூக்கி தட்டுனதா கேள்விப்பட்டேன். லதா அண்ணி கையை இறக்கச்சொன்னதாவும் படிச்சேன். பொண்டாட்டி சொன்னதைக் கேட்டிருந்தா சிங்கப்பூருக்கே வராம ஊர்ல கடையாவது வெச்சிப் பொழச்சிருப்பேன் தலைவா. பொண்டாட்டி சொன்னதையெல்லாம் கேக்காம, ரசிகர் மன்றம், ரசிகர் மன்றம்ன்னு அலைஞ்சி கைக்காசெல்லாம் செலவு பண்ணி கடன்காரன்னா அல்லாடிக்கிட்டிருந்தேன். ஆனாலும் நீ சொன்னது சரிதான் தலைவா. கடைசியா, பொண்டாட்டிதான் புடிச்சி சிங்கப்பூருக்கு அனுப்பிவெச்சுட்டா.

ரத்தினம் ன்னு ஒரு பய தலைவா. இங்கதான் 'காடி' கழுவிக்கிட்டு இருந்தான். ரெண்டு வருஷ பெர்மிட் முடிஞ்சதும் அவன் மொதலாளி சீனன் அவனுக்கு பெர்மிட்டை நீட்டிக்கலை, அந்த அளவுக்கு ரத்தினம் வேலைக்காரன்னா பாத்துக்கோயேன். இந்த தடவை ஊருக்கு போனப்போ பாத்தா, டொயோட்டா குவாலிஸ் கார்லெ, 'கருப்பு மஞ்சள் சிவப்பு ' கொடி கட்டிக்கிட்டு போய்க்கிட்டு இருக்கான். என்னடா கேட்டதுக்கு விஜயகாந்த் கட்சியிலே மாவட்டச்செயலாளராம். இந்த தடவை தேர்தல்லெ கூட நிக்கப்போறானாம். எப்படிடான்னு கேக்கமுடியுமா? எப்படிங்கன்னு கேட்டேன். ரியல் எஸ்டேட் பிஸினசாம். அவனுக்கு முன்னாடி, ரசிகர் மன்றம் ஆரம்பிச்சது நான் தலைவா எங்க ஊர்ல. இங்க, இந்த வார கார்டுக்கு 300வெள்ளியாவது எடுக்க முடியுமான்னு அல்லாடுறேன். பணமா தலைவா முக்கியம், சொல்லு தலைவா.

சிவகுமார் பையன் சூர்யான்னு ஒரு பய தலைவா. நடிப்புல இப்பவே பயங்கரமா பாயுறான். இருபத்தஞ்சி படம் தான் நடிச்சிருக்கான். என்னடான்னு பாத்தா, எங்க ஏரியாவுல கஷ்டப்படுற குடும்பத்து பிள்ளைங்க, நல்ல மார்க் வாங்கி படிக்க வைக்க முடியலைன்னா, அவனே படிக்க வெக்கிறான்னாம். தலைவா, நாம 154 படம் நடிச்சுட்டோமே, ஏதாவது இப்படி பண்ணியிருந்தா ஒரு சந்தோசம் வருமுன்னு தோணுது தலைவா. லதா அண்ணியும் ஸ்கூல் நடத்துறதா கேள்விப்பட்டேன். என்ன ஸ்கூல்ல்ன்னு தெரியலை.

இந்தா, இந்தக் கடுதாசி எழுதும்போது பக்கத்துல படுத்து 'ஹான்ஸ்' போட்டுக்கிட்டு இருக்கானே, நம்ம ரவி, இப்பவே ஊர்ல கொடிகம்பம் நட்டு, ரெடியா நிக்கிகிறான். அண்ணன், கட்சி ஆரம்பிச்ச உடனே, நான்தான் மாவட்டச்செயலாளர் (அ) வட்டச்செயலாளர்ன்னு சொல்லிக்கிட்டு இருக்கான், பேரு கூட 'விஜய்' ரவி ன்னு மாத்திக்கிட்டான்.

சாரி தலைவா, நீ பாட்டுக்கு இமயமலைக்கி கெளம்பிக்கிட்டு இருப்பே, இந்த நேரம் போயி உன்னை, என் கடுதாசிக் குடுத்து படிக்கச்சொல்லிட்டனேன்னு வருத்தமா இருக்கு. இமயமலையில எல்லாரையும் கேட்டதாச் சொல்லு தலைவா.

தொழில், குடும்பம், குழந்தை, கல்யாணம், பேரன் பேத்திகள், ஆன்மீக பயணங்கள், அரசியல் அன்புன்னு நீ, நிறைஞ்ச குடும்பஸ்தனா இருக்குறது மன நிறைவா இருக்கு தலைவா. அதுதான் எங்க சந்தோசம்மும். சரி தலைவா, அடுத்த படத்துலே பாப்போம்.

காலேஜ் படிக்கிற எம்பையனுக்கு பணம் கட்டணும்ன்னு நாலு தடவை பொண்டாட்டி போன் போட்டுட்டா. என்ன பண்றதுன்னு தெரியலை. 'விஜய்'ரவி கிட்டே கேக்கலாமான்னு பாத்தா நாலு காசு வட்டி கேக்குறாங்கண்ணோவ்.

பாப்போம், சரியா வரலையின்னா, படிப்ப நிறுத்திப்புட்டு, நம்ம பயலை இந்தப்பக்கம் இழுத்துட்டு வந்துருவோம். நமக்கும் வயசாயிருச்சில.

இப்படிக்கு
தலைவா உன் ரசிகன்,

ரஜினி ராக்கப்பன்
சிங்கப்பூர்

நன்றி:தங்கமீன்

Friday, November 19, 2010

டைரக்டர் ஷங்கர் பதில் சொல்வாரா?

'எந்திரன்' பார்த்ததிலிருந்து ரஜினியை எங்கு, எந்த படத்தில் பார்த்தாலும் 'ரோபோ' என்று அழுத்தமாக பதிந்துவைந்திருக்கும் ஆதித்யா, கடந்த புதன் அன்று சிங்கப்பூரின் அறிவியல் நிலையத்திற்குச்சென்ற போது, அங்கிருந்த 'ரோபோ' ஒன்றின் கையைப் பார்த்து பிரமித்து, அதிர்ச்சியுற்று கேட்ட கேள்விக்கு, நான் எப்படிப் பதில் சொல்வதென்று தெரியவில்லை.

டைரக்டர் ஷங்கர் தான் பதில் சொல்லணும்.

கேள்வி என்ன என்பதை படத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

Friday, October 29, 2010

உலகம் சுற்றும் 'களவாணிகள்'

(நாலு காசு OT பாத்தாதான் கடனைக்கிடனை அடைச்சு, கரைசேர முடியும் என்று நிலையில் இருக்கும் மாப்பிள்ளையும், மாமனும், ஒரு ஞாயிற்றுக்கிழமைத் தேக்காவில், லேட்டா சந்திச்சு, லேட்டாஸ்டா 'களவாணி' படத்தைப் பற்றி பகிர்ந்து கொண்ட விஷயங்கள். இது விமர்சனமல்ல - அவர்களது வாழ்க்கை!)

என்ன மாப்ளே, 'களவாணி'ல உன் கதையைப் படமா எடுத்திருக்காங்கெ போல, டைரக்டர் சற்குணம் உங்களுக்குச் சொந்தக்காரரா?

ஏ மாமா, இப்புடி நீ வேற நான் வேறன்னு பிரிச்சிப்பேசுற, நம்ம கதைய எடுத்திருக்காங்கென்னு சொல்லு.

அடங்கொங்காமக்கா, என்னைய ஏன் மாப்ளே இதுல இழுக்குற? படிச்சுட்டு இருந்த புள்ளைய பல்லக்காட்டி பல்லக்காட்டி கெடுத்து ராத்திரி கடைசி பஸ்ஸுல போயி கூட்டியாந்து குடும்பம் நடுத்துறது யாரு, நானா மாப்ளே?

அட, அது என்னவோ நாந்தான் மாமா; ஆனா, பஞ்சாயத்து பஞ்சாயத்துன்னு சொல்லிக்கிட்டு ஊர்ல வெள்ளையுஞ்சொள்ளையுமா திரிஞ்சிபுட்டு இப்போ சிங்கப்பூர்ல கப்பலுக்குக் கீழே படுத்து காஞ்ச நத்தையை தேய்க்கிறது யாரு மாமா, நீருதானே! அதைத்தான் சொன்னேன்.

காய்ஞ்ச நத்தையோ, கரி மண்ணை கூட்டி அள்ளுறதோ, கப்பல்கட்டுற தொறக்கி வேலைக்கின்னு வந்துட்டா இதெல்லாம் செஞ்சுதானெ மாப்ளே ஆகணும்.

அதுசரி மாமா. படத்துல கஞ்சா கருப்பு காமெடி, உங்க காமெடி போல கல்லா கட்டுது.

பிச்சுப் புட்டாய்ங்க மாப்ளே. கஞ்சா கருப்பு செத்துப்போனதா வெளம்பரம் பண்ணிக்கிட்டு போறதும் கதாநாயகி மருந்தக்குடிச்சுட்டுதா கெடக்கும்போது அவ குடிக்கலடா, நடிப்புன்னு உண்மையைச் சொல்ல, ஒருபயலும் கண்டுக்காம இருக்குறதப் பாத்துட்டு, அதுதான் நா அப்போவே சொன்னேன்லடா என்கிறதும் கலக்கல் மாப்ளே.

இது போதாதுன்னு சரண்யா, அதான் கதாநாயகன் அம்மா, புள்ளய காப்பாத்த தற்கொலைன்னு ஒரு நாடகத்தப் போடுறதும் நல்லாத்தான் மாமா இருக்கு.

இதெல்லாம் நம்ம ஊர்க்காட்டுல நடக்குறதானே மாப்ளே. உலகம் பூரா இதுதானே நடக்குது. வீட்டுக்கு வீடு வாசப்படி. சிங்கப்பூர்லயும் ஒரு காரியம் ஆகணும்ன்னா, பன்னெண்டாவது மாடியிலெர்ந்து குதிச்சிருவேன்னு சொல்லுற ஆளுங்களும் இருக்கத்தானே செய்யுறாக.

அதேதான், அதேதான். படம் முழுக்க காமெடி ரவுண்டி கட்டி கலக்குறது மாதிரி இந்த தற்கொலை, வெத்து மிரட்டல் செஞ்சி காரியம் சாதிக்கிறதுங்குறதும் பொளந்துகட்டிதான் வருது.

கரெக்டாச் சொன்னே மாப்ளே. வீட்டுல உள்ள சாமான ஒடச்சி ஒடச்சி அல்லது ஒடைக்கிற மாதிரி மிரட்டியே பொழப்ப ஓட்டுற கதாநாயகன் விமலும் அப்படித்தான்.

மெரட்டி மெரட்டி காரியம் சாதிக்கிறது புதுசா மாமா, உங்க சூப்பர்வைசரு என்ன சொல்லுவான்? நாம என்ன கேட்டாலும், ஒழுங்கா இரு, இல்லாட்டி பெர்மிட்டை வெட்டி ஊருக்கு அனுப்பிருவென்னு சொல்லிச்சொல்லியே ஓட்டலையா..அந்த மாதிரிதான்.

செரி செரி மாப்ளே.. உன்போனைக்குடு, ஒரு போன் போட்டுட்டுத்தாரேன் ஊருக்கு..

பெர்மிட்டை வெட்டுறதுன்னும் உமக்கு ஊரு ஞாபகம் வந்திருச்சாக்கும். காசு கொஞ்சந்தான் மாமா இருக்கு. இன்னும் டோப்-அப் பண்ணல. அதுசரி, ஊர் ஞாபகமா இல்லை பொஞ்சாதி ஞாபகமா மாமா?

யாம் மாப்ளே இப்புடிக்கேக்குறெ, படத்துல வாறது மாதிரி, துபாய், சிங்கப்பூர், மலேசியா-ன்னு கெடக்குற பயலுக நாம. நாலைஞ்சி வருஷம் அப்புடி இப்புடி கெடந்து போராடி கொஞ்சம் காசுபணம் சேத்துப்புட்டு ஊருபக்கம் போறதுதானே மாப்ளே நம்ம பொழைப்பு.

அதைத்தான் படத்துலே ஒரு கேரக்டராவே செஞ்சு காட்டிப்புட்டாங்களெ மாமா. அப்பன் போயிக்கெடக்குறான் துபாயில. அவன் காலத்துக்கப்புறம் மவன் போறான். இப்படியே இவங்க பொழப்பு போகுதுன்னு.

சரியாச் சொன்னே மாப்ளே, இதுக்குப்பின்னாடி உள்ள சோகத்தையும் சொமையையும் சொல்லாம சொல்லிப்புட்டாய்ங்க மாப்ளே.

சோகம் இருக்கட்டும் மாமா, படத்துல வாற கதாநாயகி ஓவியா பத்தி சொல்லுங்க..

ஏலேய் மாப்ளே, என்ன சொல்லச் சொல்லுறெ, எம்ப்பொண்ணு வயசுடெ அந்தப்பொணுக்கு..

அடடா, கலைக்கண்ணோட பாத்து ஏதாச்சும் சொல்லுங்க மாமா.,

ஓவியாவும் கிராமத்துக்கு ஏத்த முகம், நடிப்புன்னு நல்லாத்தான் இருக்கு மாப்ளே.. அதுமட்டுமில்லாம 'வெதை நெல்லு விக்கிற அவுங்க அப்பா', 'தனியா வளர்ந்து நிக்கிற கதாநாயகி வெச்ச நெல்லுப்பயிறு', அதை தனியா அக்கறையோட வளக்குற கதாநாயகன்'ன்னு 'பாரதிராஜா'வோட ஐட்டமும் நெறையத்தான் இருக்கு.

உங்களுக்கு 'பாரதிராஜா' ஞாபகம் வெந்துச்சாகும். எனக்கு 'ஆண்பாவம்' படம் தான் ஞாபகத்துக்கு வந்தது. அந்த மாதிரி படம்ன்னு தோணுச்சி மாமா.
அதுமாதிரி, கலகலன்னு போற படம் தான். வெட்டருவா, வீச்சுக்கம்பு இல்லாம நல்லாத்தான் போகுது.

அதுமட்டுமில்லாம, எததுக்கெல்லாம் மாலைய கழட்டி வெச்சிட்டு நம்ம பயலுக களத்துல எறங்குறானுவ, எததுக்கெல்லாம் நம்ம பயலுவ சண்டைக்கி நிக்கிறானுவ, எப்போல்லாம் சிங்கப்பூர் மாப்புளக்கி பொண்ணு தாறான்னுவன்னு கரெக்டா காட்டிப்புட்டாய்ங்க மாமா.

வெளிநாட்டுல வேலை பார்த்துட்டுப் போறவங்களுக்கெல்லாம் இந்தமாதிரி காதல்ல மாட்டுனது கசங்குனதத்தான் கட்டிவெக்கிறங்கெ போலெ; அப்புடித்தானெ மாப்ளே சொல்றே.

மாமோய்.. 'பதினாறு வயதினிலே' படம் வந்தபோது நீ ஆரம்பிச்ச தொழிலு, இன்னும் 'பத்தவெக்கிறதே' நீரும் விடவேயில்லையா?

எங்குட்டு மாப்ளே விடுறது. விட்டுட்டா பொழைப்பு ஓடாதே, சரி, படத்துல பாட்டு ஒண்ணும் மனசுல நிக்கலயே மாப்ளே..

ஆமாம் மாமா, பாட்டு மட்டும் இன்னும் கொஞ்சம் நல்லாயிருந்தா படம் 'எவர்கிரீன் மெஹா ஹிட்' ஆயிருக்கும் தோணுது. ஒரே ஒரு பாட்டு மட்டும் மனசுல நிக்கிது மாமா...அதான்... நம்ம ஏரியாவுல நடக்குற வள்ளி திருமணம், அரிச்சந்திரா மயான காண்டம் நாடங்கங்கல்ல வாற "ஊரடங்கும் சாமத்துல ஒருத்தி மட்டும் விளிச்சிருந்தா ஒருத்தி மட்டும் விளிச்சிருந்தா ஒறங்காம தவிச்சிருந்தா" பாட்ட எடுத்து படத்துல போட்டுட்டாய்ங்க. அந்தப் பாட்டுதான் இன்னும் மனசுல நிக்கிது.

சரி மாப்ளே...போனு கேட்டேனே... குடு மாப்ளே, ஒரு கால் போட்டுட்டுத்தாரேன்.

அட, இருங்க மாமா, ஊரை விட்டு வந்து ஒரு நாலைஞ்சி வருஷமாச்சிம் இருக்கும்ல நீங்க.

ஆமாம் மாப்ளே, நாலு வருஷம் ஆச்சு. நாலு வருஷம் என்ன மாப்ளே, ஒரு வீட்டைக் கட்டிப்புட்டு, நம்ம பயல ஒரு நல்ல படிப்பு படிக்கவெச்சுப்புட்டா ஊரு பக்கம் போயிரலாம்ன்னு பாக்குறேன்.

(மனசுக்குள்) ம்ம்..வரும்போது எல்லாரும் இதச்சொல்லிக்கிட்டே வாங்கடே...வந்து பதினாலு வருஷம் ஆனாலும் திரும்பிப்போகாதீங்க.)

என்ன மாப்ளே யோச்சிக்கிறெ....?

இல்ல மாமா.. உங்க பையன் என்ன படிக்கிறான்னு சொன்னீரு?

கும்பகோணத்து காலேஜ்ஜுல ஏதோ கம்புயூட்டர் படிக்கிறான்னு சொன்னா எம்பொஞ்சாதி.

இந்தப் பொஞ்சாதிய நம்பாதீரும்.. இந்தப் படத்துல வாறது மாதிரி பயலுகள கண்டிக்காம கோயில்காளை மாதிரி விட்டுப்புட்டு நம்மகிட்ட நல்லாப் படிக்கிறாய்ங்கன்னு சொல்லியே ஏமாத்திருவாங்க மாமா. எப்போதும் புள்ளங்க மேல ஒரு கண்ணு வெச்சுக்கணும் போல மாமா.

சரிதான் மாப்ளெ.. இருந்தாலும் அந்த வயசுல இதெல்லாம் சகஜம்ன்னுதான் தோணுது மாப்ளே. கொஞ்சம் காலநேரம் ஒத்துவந்தா சரியாயிருவாய்ங்க.

சரி நமக்கும் அந்த ஞாபகம் வெந்துருச்சி மாமா... படத்துல வாற 'ஆடல் பாடல்' பாத்தியளா?

ஆடல் பாடலுக்கு பாய் விரிச்சிப்போடுறதும் அதிலே உக்காந்து ரவுசு விடுறதும் பாத்தேன் மாப்ளே. என்னதான் ஆடல் பாடல்ன்னாலும் நம்ம 'மதுர அகல்யா குரூப்' மாதிரி வருமா மாப்ளே?

அப்படிச்சொல்லும் மாமோய்.. வெட வெடன்னு ஒரு குட்டி, கூந்தலை எடுத்து முன்னாடி போட்டுக்குட்டு, கழுத்தச் சாச்சி, ஒரு வெட்டு வெட்டுவாளெ ஞாபகம் இருக்கா?

ம்ம் ஞாபகம் இருக்கு மாப்ளே.. என்ன, ரொம்ப ஏக்கமா பேசுறது மாதிரி இருக்கு.
அட என்ன மாமா? எங்க இருந்தாலும் நம்ம ஊரு ஞாபகம் போகுமா?

களவாணிப்பயலுக மாப்ளே... நீங்கள்ளாம்.

என்ன மாமா…. நாமெல்லாம்ன்னு சொல்லும் மாமா..

ஏண்டா மாப்ளே என்னைச் சேக்குறே..? நானு நெனைக்கிறேன்... நீரு பேசலை மாப்ளே; படத்துல சரண்யா சொல்லுற மாதிரி, வாற ஆனி போயி ஆடி முடிஞ்சி ரெண்டு வருஷம் போனா எல்லாம் உமக்கு செரியாயிரும்.

அடடா, ஆனி முடிஞ்சி ஆடி போனா இல்ல மாமா... வாற மே, ஜூன் முடிஞ்சு 'ரெண்டு வருஷ பெர்மிட் முடிஞ்சா' எல்லாம் சரியாயிப்போயிரும்..

அது....!

நன்றி: தங்கமீன் மின்னிதழ்
http://www.thangameen.com

தங்கமீன் மின்னிதழில் (அக்டோபர்) வெளியானது.

Monday, October 25, 2010

டயலாக் 25/10

நியாயம் மனுஷனுக்கு மனுஷன் மாறலாம்ன்னு நான் நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா, ஊருக்கு ஊரு அது மாறும்னு இப்போ நம்புறேன்டா பாபு.

எப்படிடா, இப்போ மட்டும் நம்பிக்கை வந்ததுட்டதா சொல்றெ கோபு?

அட, தர்மபுரி பேருந்தில் 3 உயிர்களை தீவைத்துக்கொளுத்திய மூவருக்கும் மணதண்டனையாம். மதுரை தினகரன் அலுவலகத்தில் 3 உயிர்களைத் தீவைத்துக் கொளுத்தியவர்களுக்கு பதவியும் பரிசுமாம்.

இப்போ புரியுதா ஊருக்கு ஊரு நியாயம்? அது தர்மபுரி; இது மதுரை!

தங்கமீன் முதல் இதழ்- ஒரு பார்வை.

சிங்கப்பூரிலிருந்து வரும் ஒரு இதழில் சிங்கப்பூரைப் பற்றிய செய்திகளும் சிங்கப்பூர் படைப்பாளிகளின் பங்களிப்பும் இருக்கவேண்டும் என நான் ஆசைப்பட்டவாறே வந்திருக்கிறது தங்கமீன் முதல் இதழ்.

கவிதை முதல் கட்டுரை, கதை, சமூகம், பொது, இளைஞர் பக்கம் என அனைத்திலும் சிங்கப்பூர் செய்திகளும் தளமுமாய் இருப்பது நிறைவு. சிங்கப்பூரில் இத்தனை படைப்பாளிகளா என ஆச்சரியமும் வந்தது. இந்த ஆச்சரியத்தை பாலுமணிமாறன் இன்னும் தொடர்வார் என நம்புகிறேன்; வாழ்த்துகிறேன்.

சில கட்டுரைகள் ரொம்பவும் நிறைவு.

வள்ளல் கோவிந்தசாமி பற்றிய செய்திகள் எனக்குப்புதிது.

மரத்தைப் பற்றி எழுதியவர் முதலில் புளிய மரத்தை எடுத்தது எனக்கு ஆச்சரியம். ஏனெனில் சிங்கப்பூரில் புளியமரம் காணக்கிடைப்பது மிகவும் அரிது என நினைத்திருந்தேன். ஆனால் அதில் சொல்லியிருக்கின்றபடி இப்போது கூர்ந்து கவனித்தால் நிறைய புளிமரங்கள் காணக்கிடைக்கின்றன. நேற்று மாலை நடந்துவரும்போது கவனித்த விஷயம், முஸ்தபாவிற்கு எதிரில் இருக்கும் மசூதி அருகே ஒரு 'வெடல' புளியமரம் இருக்கிறது.

"மினி என்விரான்மெண்ட் செர்வீஸஸ்" உரிமையாளர் திரு அப்துல் ஜலீல் அவர்களின் பேட்டி சிறப்பாயிருந்தது. நோன்பு விருந்துக்கென ஆஸ்திரேலியாவிலிருந்து கப்பலில் வரும் ஆடுகளை கொட்டும் மழையில், கப்பலின் மேல் நின்றுகொண்டு இறக்கிக்கொண்டிருந்தவாறு, ஒரு புகைப்படம் கடந்த வருடம் ஒன்றில், ஆங்கிலநாளிதழில் பார்த்தேன். கோடீஸ்வரரான பிறகும் இப்படி "தரையில் இறங்கி" வேலை பார்ப்பவர்கள் அடிமட்டத்திலிருந்து முன்னுக்கு வந்தவர்களாக இருக்கக்கூடும். கோடீஸ்வரராயிருந்தாலும் இன்னும் 10 வெள்ளியே செலவு செய்யும் அசாத்தியம் அறிந்துகொள்ளவேண்டியதே.

தமிழகத்திலுருந்து தேர்தல் வருகிறது மாலனின் கட்டுரையும் சாருவின் சமகாலத்து இலக்கியவாதிகளின் தொடர்பு குறித்தான பங்களிப்பும் சிறப்பு.

இந்திரஜித்தின் கட்டுரை எனக்குப்பிடித்திருந்தது. 'அறச்சீற்றமாக' இருந்தபோது எழுதியது என நினைக்கிறேன்.

இளவழகன் முருகன் எழுதிய எந்திரன் விமர்சனம் நிறைய கவனிப்புகளுடன் நிறைவாக இருந்தது.

சுப்ரமணியன் ரமேஷின் குட்டி தேவதை திரும்பவும் தீண்டிய தென்றல்.

டாக்டர் சபா நடராஜன், ஷானவாஸ் கட்டுரைகளும் யதார்த்தம் கலந்த இனிமை.

புதுமைத்தேனியாரின் சினிமா அனுபவங்கள் படிப்போரை மகிழ்விக்கும் என நம்பலாம். கிசுகிசு அல்லது சொல்லாத சேதிகள் இருந்தால் அள்ளிவிடுங்கள் என 'தெரிந்த நண்பர் ஒருவர்' சொல்லச்சொன்னதை அவரிடம் சொல்லலாமா எனத்தெரியவில்லை.

கேள்வி பதில், சினிமா செய்திகள், நிகழ்வுகள், இளைஞர் பக்கம், வசந்தம், ஒலி & ஓளி என அனைத்தையும் இணைத்திருக்கும் போக்கு பாராட்டக்கூடியது.

சிறுகதைகளை இனிமேல் தான் படிக்கவேண்டும்.

தங்கமீன் இணைய இதழ் வெளியீட்டில் தமது பத்தாண்டு கனவு என்று திரு ஆண்டியப்பன் அவர்களும், சிங்கப்பூர் மார்க்கண்டேயர் (எப்படி சார் எப்பவும் இளமையோட இருக்கீங்க என நான் பார்க்கும்போதெல்லாம் கேட்கும்) திரு. அருண்மகிழ்நன் அவர்களும் சொன்னதாகப் படித்தேன். உண்மையாகத்தான் இருக்கவேண்டும். அக்கனவு இன்று நிஜமாயிருப்பதில் மகிழ்வு.

முதல் பக்கம் பளிச்சென்று இருந்தால் நன்றாயிருக்கும் என நினைக்கிறேன்.

தங்கமீன் மென்மேலும் பலவெற்றிகளைப்பெற வாழ்த்துகள்.

அன்பன்
எம்.கே.குமார்.

Thursday, October 14, 2010

மண்ணாய்ப்போவார்கள் இவர்கள்.

ராஜபக்ஷே காமன்வெல்த் நிறைவு விழாவிற்கு வருகிறார் என்று கேள்விப்பட்டதிலிருந்து தூக்கம் இல்லை. மனம் எரிகிறது.

காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவின் செயல்பாடு மற்றும் ஒருங்கிணைப்புகளின் குளறுபடி அலங்கோலங்களை உலகமே கைகொட்டிச்சிரிக்கும் காட்சிகள் மனவேதனை அளிக்கும்
வேளையில், இந்த செய்தி என் நெஞ்சை உலுக்குகிறது. சீனாவின் பிடியிலிருக்கும் இலங்கையை கைக்குள் அடக்குகிறேன் பேர்வழி என்று இந்தியா ராணுவத்தடவாளங்களையும்
ரேடார்களையும் பல மில்லியன் பணத்தையும் அளித்து பல உயிர்கள் அழிப்புக்கும் துணைநின்றது போதாதென்று இப்போது காமன்வெல்த் நிறைவுவிழாவுக்கு கொலைமன்னன்
ராஜபக்ஷேவை அழைத்திருக்கிறதாம். சுயபுத்தியுள்ள எந்த நாடாள்பவனும் இதைப்போன்ற முட்டாள்தனங்களைச் செய்யமாட்டான்.

இவ்வாறு செயல்படுவது மூலம் என்ன செய்யப்பார்க்கிறது இந்தியா? சீனாவை கோபப்படுத்த அல்லது அட, உன் கைப்பாவை என்கைப்பாவைக்குள் என்று காட்ட, அல்லது, பார்
அண்டை நாட்டுடன் நான் எவ்வளவு அன்னியமாய் இருக்கிறேன் என்று காட்ட, அல்லது ஒரு வெற்றிவீரனை விளையாட்டுவீரனை கௌரவப்படுத்த அல்லது ஒரு மகாத்மாவை
கௌரவிக்க... இப்படி எது செய்யநினைத்தாலும் அது ராஜபக்ஷேவை அழைத்துவருவதன் மூலம் நடக்காது என்பது என்னைப்போன்ற அரசியல் தந்திர ஞானசூன்யங்களுக்கே புரியும்போது மன்மோகன் ஐயாவுக்கு புரியாமல் போனதென்ன? பக்கத்து வீட்டுக்காரன் கொழுந்தியாளைக் கொஞ்சுகிறான் என்று இவன் நல்லபாம்பை எடுத்து கொஞ்சினானாம். அந்தக் கதைதான்.

சீனாவைக் கோபப்படுத்தவேண்டுமா? தற்போது நோபல் பரிசு வாங்கியிருக்கும் அந்த சீன அமைதிபோராட்ட வீரரை அழைத்துவா, நிறைவு விழாவுக்கு. பாகிஸ்தானின் அதிபரை
அழைத்து வந்து 'பார் நான் சமாதானப்புலி' என்று காண்பி. மாமனிதரைக் கௌரவிக்க வேண்டுமா? மியான்மரின் மேடம் ஆங் சு கியை அழைத்துவா, திபெத்தின் திரு. தலாய்லாமை அழைத்துவா. சிங்கப்பூரின் திரு. லீகுவான்யூவைக் கூப்பிடு. இதையெதையும் செய்யாமல் ஒட்டுமொத்த உலகமே அறியும் அதிலும் ஐ.நா சபையே அங்கீகாரம் அளிக்க மறுக்கும் ஒருவனுக்கு இந்தக் கௌரவத்தை அளிப்பது இந்தியா செய்ய நினைக்கும் எதிலும் அடங்காது ஒட்டுமொத்த தமிழினத்தின் மனத்தையும் ரணமாக்கவே செய்யும்.

திருமாவளவன் போராட்டமாம். ராஜபக்சேயை நேருக்கு நேர் சந்தித்து கைகுலுக்கிவிட்டு இப்போது போராட்டமாம். கொழும்பில் குலுக்கிய கையை டெல்லியிலும் போய் குலுக்கிவிட்டுவா. என்ன இருக்கிறது?

கலைஞர் ஐயா, தமிழ்நாட்டில் கூட்டணி பற்றி காங்கிரஸ் "ஒருமாதிரி" பேசிக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் உங்களுக்கு வந்திருக்க வேண்டாமோ தமிழ்ப்பற்று? என் நெஞ்சம் எரிகிறதே,
ஒரு கொலைஞனை எப்படியய்யா கலைஞன் என காமவெல்த்திற்கு தலைமை தாங்கச்செய்யலாம், என் நெஞ்சு பதறுகிறதே என டெல்லிக்கு அனுப்பியிருக்கவேண்டாமோ உங்களது மந்திரிகளையும் எம்.பி.களையும்?

ஒன்று மட்டும் புரிகிறது. இந்தியாவிற்கு எதிரி பாகிஸ்தான் என நினைத்துக்கொண்டிருந்தேன். அது இல்லை! இந்தியாவிற்கு எதிரி தமிழினம் தான் என்று இப்போதுதான் புரிகிறது. என்ன
செய்ய? எமது தலையெழுத்து அப்படி, தமிழ் தலையெழுத்தல்லவா?

Tuesday, October 05, 2010

எந்திரன் - 25 (விமர்சனமல்ல)

எந்திரன் - 25

1. ரஜினி நாமம் வாழ்க! ஷங்கர் நாமம் வாழ்க! மாறன் குடும்பம் வாழ்க!!

2. ரஜினி படத்தை இப்படி முதல் இரண்டு நாட்களில் தியேட்டர்க்குச் சென்று பார்ப்பது எனக்கு இது முதல் முறை. எப்போதும் ஆகாத ஒன்று என்று நினைத்திருந்தாலும் எந்திரனுக்குச் செல்ல நேர்ந்தது குடும்பத்தினருக்காக.

3. செல்லக்குட்டி ஆதித்யா(3) இது திரையில் பார்க்கும் முதல்படம். சேட்டை பண்ணுவான் என நினைத்து பயந்திருந்த வேளையில் படம் முழுவதும் கண்களை திரையில் விட்டு அகலாமல் பார்த்தது எங்களுக்கே ஆச்சரியம். ரஜினியா கொக்கா அல்லது கார்ட்டூனா கொக்கா?

4. சிங்கப்பூரிலும் ரஜினி ரசிகர்கள் குடும்பத்தோடு வந்து குதூகலிக்கிறார்கள் தியேட்டரில். வழக்கம்போல விசில் சத்தம் காதைப் பிளந்தது.

5. ரஜினியின் அறிமுகம் படத்தில் மிக இயல்பாக இருந்தது. வண்டுசிண்டு பண்ணுவது போல பறந்து வராமல், தாவிக்குதிக்காமல், விரலை ஒடித்து வித்தை காட்டாமல் சாதாரண அறிமுகம் சிறப்பாய் இருந்தது.

6. ஐஸ்வர்யா ராய் மிக அழகாக இருந்தார். மனம் லயித்து அவர் ஒவ்வொரு காட்சியிலும் இணைந்திருந்தார் என்று தோன்றியது.

7. சுஜாதா என்ற மேதைக்கு எப்போதும் ஒரு குறும்புத்தனம் உண்டு. சீரியஸான நேரத்தில் சிறுபிள்ளைத்தனமோ என்று சந்தேகிக்கும் அளவு அவர் அதை வெளிக்காட்டுவார். அதை அவரிடமிருந்து கற்ற ஷங்கர், அமரராகிவிட்ட அவருக்கு ஒரு நன்றியைச் சொல்லியிருக்கலாம்.

8. என்னதான் 'ரஜினி ரோபோ'வாக இருந்தாலும் இப்படியெல்லாம் உடலை வளைத்து பிரபுதேவா மாதிரியெல்லாம் ஒரு ரோபோ செய்யுமா என்ன? (சோனி நிறுவனத்தார் கவனித்திற்கு)

9. சுல்தான் த வாரியர் படத்திலிருந்து பல காட்சிகளைச் சுட்டு விட்டார்களோ எனத் தோன்றுகிறது.

10. ரஜினியின் குரல் கதாநாயகனுக்குப் பொருத்தமாக இல்லாமல் வில்லனுக்குப் பளிச்சென பொருந்துகிறது.

11. ரஜினி மிகச்சிறந்த வில்லன் நடிகர் என்பதை நான் இன்னொருமுறை இங்கே பதிவு செய்கிறேன்.

12. பிண்ணனி இசை, ஒளிப்பதிவு, டெக்னிக் சமாச்சாரங்கள் தமிழ் சினிமாவுக்குப் புதியதும் உலகத்தரத்துக்கு இணையானதும் ஆகும். ஆனால் ஆங்கிலப்படங்களை ஒப்பிடக்கூடாது.

13. ரோபோவின் செயல்பாடுகளைத் திரையில் ஆங்கில எழுத்தாகக் காட்டுவதால் (உதா. மேக்னெட் மோட் ஆக்டிவேடெட்) சி சென்டரில் புரிவதில் சிக்கல் ஆகலாம்.

14. கொசு தேசியபறவையாக ஆசைப்படுவது (சுஜாதாவின் குறும்புத்தனம் என நினைக்கிறேன்) என்ன, கொடுத்தே விடலாம். நாடு அப்படித்தான் இருக்கிறது. டெங்குலட்சுமி பாத்தும்மா.

15. ஒண்ணுமேயில்லாததை இப்படிச்செய்ய முடியுமாதலால், "தசாவதாரத்தை" ஷங்கர் இயக்கியிருந்தால் இன்னும் பெரிதாய் இருந்திருக்குமோ என்ற எண்ணம் வந்தது ஆச்சர்யம் அல்ல.

16. செல்வராகவனின் "ஆயிரத்தில் ஒருவன்" படத்துக்கு இப்படி யாரும் பணம் செலவு பண்ண முன்வந்திருந்தால் அது உலகத்தரத்துக்கு எட்டியிருக்கும் என்பதும் எனக்கு வந்த இன்னொரு எண்ணம்.

17. வசனம் சுஜாதா, ஷங்கர் மற்றும் கார்க்கி. ஜெயமோகனையும் சேர்த்திருக்கலாம், 90சதவீத வசனங்களில் நகைச்சுவையே மிஞ்சியிருக்கும் இந்தப் படத்துக்கு அவர் பொருந்தியிருப்பார்.

18. கலாபவன் மணி, கொச்சின் ஹனிஃபா, சந்தானம், கருணாஸ் ஆகியோரும் உண்டு. கொடுத்ததை நிறைவாக செய்திருக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் கொடுத்திருக்கலாம்.

19. உணர்வுகளைப் பரிணமிக்கும் சினிமா என்கிற கலையில் காசு பண்ணிக்கொடுப்பது என்பதைத் தொடர்ந்து காட்டிக்கொடுத்து ஆதரவளித்துவரும் ரஜினி, இனி உண்மையிலேயே நல்ல கதையை தேடி நடிப்பது காலம் கடக்கும் அவசியம்.

20. இயந்திரத்தையும் மனிதன் தனது காமகுரோத பேராசை எண்ணங்களினால் கெடுத்துவிடுகிறான் என்பதே ஷங்கர் சொல்லவரும் கடைசிச்செய்தி.

21. கமல் நாயகனாகவும் ரஜினி வில்லனாகவும் ஓர் படம் வந்தால் (என்னிடமும் ஒரு கதை இருக்கு) அது தமிழ்சினிமாவின் மகா வெற்றியாக இருக்கும்.

22. எந்திரன் - காஸ்ட்லி கார்ட்டூன்.

23. லாஜிக் பார்க்காவிட்டால் மேஜிக்.

24. சிவாஜி மறந்துபோனது போல எந்திரனும் மறந்து போகும்.

25. ரஜினி நாமம் வாழ்க! ஷங்கர் நாமம் வாழ்க! மாறன் குடும்பம் வாழ்க!!

Saturday, October 02, 2010

சிங்கப்பூரிலிருந்து புதிய மின்னிதழ் - எனது எண்ணங்கள்

சிங்கப்பூரில் தமிழ் பற்றிய கட்டுரைகளையும் நிகழ்வுகளையும் கூர்ந்து கவனிக்கும் யாருக்கும் ஒன்று மட்டும் புலப்படும். அது, சிங்கப்பூரில் தமிழைச் செம்மைப்படுத்தும் முயற்சிகளை முன்னெடுத்துச்செல்வதில், தமிழ் பயன்படுத்துதலை மேம்படுத்துதலில், ஒருங்கிணைப்பை அதிகரித்தலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வெற்றிவணிகர்களும் தமிழ்த்தொண்டர்களும் தொடருவதைத் தவிர மிகப்பெரிய வெற்றிடம் ஒன்று ஆழ்ந்துகிடக்கிறது என்பதுதான்.

தமிழ்முரசு அவ்வெற்றிடத்தை நிரப்பலாம் என்பதுதான் எனக்கிருந்த காலகால நப்பாசை. காரணம் அமரர்கள் கோ.சாவும், வி.டி.அரசு போன்றவர்களும்.

இதற்கிடையில், “பத்திரிகை மற்றும் இதழ்கள் மூலம் சிங்கப்பூரில் படைப்பிலக்கத்தை வளர்க்கமுடியாது” என்பதாக தமிழ்முரசு நாளிதழில் பணிபுரியும் கவிஞர் லதா ‘வல்லினம்’ இதழில் எழுதியபோது அசாதரண வியப்பும் அதிர்ச்சியுமாயிருந்தது எனக்கு. சிங்கப்பூரின் கவனித்தக்க கவிஞர்களில் அவர் ஒருவர். தமிழ்முரசுவில் வேறு பணிபுரிகிறார். தமிழ் முரசால் அவர் இப்படிச்சொல்கிறாரா இல்லை அதில் பணிபுரிவதால் இப்படிச்சொல்கிறாரா எனத்தெரியவில்லை.

ஆனால், என்னைப்பொறுத்தவரை சிங்கப்பூர் தமிழர்களின் வாழ்வுக்கும் இருப்புக்கும் தமிழ்முரசு ஆணிவேரைப்போன்றது. தமிழ் மொழியின் வளர்ச்சியும் இலக்கிய இருப்பும் சிங்கப்பூரில், தமிழ்முரசை அச்சாணியாகக் கொண்டே தொடங்கியது. தொடரவேண்டும். தொடரும்.

தமிழ் முரசுவின் புதுவடிவம், மாறுபட்ட தோற்றம் குறித்தான எனது பார்வையை நான் முன்வைக்கவிரும்பவில்லை. 2005ல் திண்ணையில் எழுதிய கட்டுரை முதல், கலைஞருக்கு ஆகாத காலச்சுவடு போல ஆகிவிட்டது எனது நிலைமை. ஆனால் தலையங்கம், வாசகர் கடிதம் என தொடரும் அதன் மாற்றங்களை நான் கவனித்துவருவது எனக்குப்போதுமானதாக இருக்கிறது.

‘ஒலி 96.8 விமலா’வின் வலைப்பக்கத்துக்கு வருபவர்களில் 10% பேர் கூட சிங்கப்பூரின் தமிழ்முரசுவின் வலைப்பக்கத்துக்கு வரமாட்டார்கள். இணையமும் கணினியுமே யுகமாகிவிட்ட இக்காலத்தில் தமிழை முன்னெடுத்துச்செல்லும் பொறுப்புகொண்ட தமிழ்முரசு போன்றவை அதன் இணையப் பங்களிப்பை அதிகப்படுத்தவேண்டும்.

சிங்கப்பூரில் தொடரும் இலக்கியவறுமையை தனிமனிதர்களால் அல்லது குழுவால் தொடங்கப்பட்ட சில அச்சுபத்திரிகைகள் (உதா. நாம், செராங்கூன் டைம்ஸ்) களைய முயற்சித்தாலும் அது தொடருவது பல ஆண்டு நடத்துதலில் இருக்கும் சிரமத்தைப் பொறுத்தது.

இந்நிலையில் நண்பர் பாலுமணிமாறன் நாளை (அக்டோபர் 3 முதல்) தொடங்கும் புதிய மின்னிதழ் “தங்கமீன்” வெற்றிபெற பல சாத்தியங்கள் இருப்பது என் கண்கூடு.

காரணம், தமிழ் இணையவெளியில் “அ” போட்ட நா.கோவிந்தசாமி நாட்டில் இப்போதைய தமிழ் வளர்ச்சி இணையத்தில் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அதன் முதல் குறையை இது களையும்.

இணையத்தில் சிங்கப்பூர் தமிழ் இளையர்கள் கோலோச்சுகிறார்கள். அவர்களின் விருப்பத்திற்கிணங்க நடந்துகொண்டால் தமிழையும் வளர்க்கமுடியும்.

அச்சு இதழ்களில் இருக்கும் பல சிக்கல்கள் இதில் இல்லை. அதனால் தொடருவதில் சிரமம் இல்லை.

கடைசியாக, பாலுமணிமாறன் திட்டமிட்டு தெளிவாகச் செயல்படுத்தும் ஒரு சிறந்த காரியக்காரர். பாரதிராஜாவின் வருகை முதல் மனுஷ்யபுத்திரன், புத்தக பதிப்பு, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என தொடர்புகளைத் தன்னகத்தே கொண்டு துல்லியமாய் செயல்படுபவர். அவரின் முயற்சி ஜெயிக்கும்.

அன்பன்
எம்.கே.குமார்.

Wednesday, September 01, 2010

வல்லினம் இதழுக்கு அனுப்பிய கடிதம்

பின்வரும் கடிதம் வல்லினம் இதழுக்கு அனுப்பப்பட்டது. என்ன காரணத்தாலோ அது அவ்விதழில் இடம்பெறாததால் இங்கு பதிவு செய்கிறேன்.
****************

சென்ற மாத வல்லினத்தில் வந்த லதா அவர்களின் “ம‌ண்ணின்றி வ‌ள‌ரும் ம‌ர‌ங்க‌ளும் சிங்கை இல‌க்கிய‌மும்” கட்டுரையில், நான் 2005ஆம் ஆண்டில் “தமிழோவியம்” இணைய இதழில் எழுதிய “மாஜுலா சிங்கப்புரா” தொடர்கட்டுரையின் ஒரு பகுதியில் “மக்கள் செயல் கட்சி 1959ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதாக எழுதியிருப்பது சுட்டிக்காட்டப்பட்டது.

தவறுக்கு வருந்துகிறேன். அதே கட்டுரையில் 12-ஆம் பத்தியில் அது சரியாக சொல்லப்பட்டிருக்கிறது. [1]

சிங்கப்பூரின் வரலாறு குறித்த தகவல் தேடலில் எனது இத்தொடர் காணக்கிடைப்பது எனக்கு மகிழ்ச்சியே; எனினும், சிங்கப்பூரில் ஆவணப்படுத்துதலின் மேலோட்டத்தன்மையை நானும் உணர்ந்திருப்பதால், (காண்க: [2] ஆவணப்படுத்தும் ஆபத்தும் அதுகுறித்த எனது ஆதங்கமும்) அத்தொடர் ஆவணமாக்கும் முயற்சி மேற்கொள்ளப்படும்போது தவறுகள் இருப்பின் திருத்தப்பட்டு தகுந்த தரவுகளுடன் அளிக்க முயற்சிக்கப்படும்.

நன்றி.

எம்.கே.குமார்

1.http://www.tamiloviam.com/unicode/search.asp?ss=?????%20???????????
2.http://yemkaykumar.blogspot.com/2010/06/blog-post.html


லதா அவர்களின் கட்டுரை http://www.vallinam.com.my/issue20/essay3.html

Friday, June 18, 2010

முனைவர் எம்.எஸ். ஸ்ரீலஷ்மியின் வல்லினம் இதழ் விமர்சனக் கட்டுரை - எனது பார்வையில்

நீண்டகாலமாய் பதிவெதுவும் போடாமல் கிடந்த எனக்கு இதைப்பற்றி எழுதவேண்டும் ஒரு உந்துதலை ஏற்படுத்தியதற்காக, வல்லினம் இதழில் "சிங்கப்பூரில் கவிதையின் போக்கு 90களுக்குப்பிறகு" என்ற கட்டுரையின் படைப்பாளர், முனைவர் எம்.எஸ்.ஸ்ரீலஷ்மி அவர்களுக்கு நான் முதலில் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

சிங்கப்பூரில் உள்ள (ஒரு கை விரல் மட்டுமே கொள்ளக்கூடிய) விமர்சன முனைவர்களில் எம்.எஸ்.
ஸ்ரீலஷ்மியும் ஒருவர். தொடர்ந்து அவர் புத்தகங்களை சேகரிக்கிறார் அல்லது வாசிக்கிறார் அல்லது விமர்சனமிடுகிறார் என்பதும் தொடர்ந்து அவர் இத்துறையில் இயங்குவதும் சிறப்பு! ஆனால் விமர்சனம் என்ற பெயரில் நெறியற்ற மேதைமையையும் போலி அக்கறையையும் தரமற்ற தகவல்களையும் தரும்போது கொஞ்சம் வருத்தமாய் இருக்கிறது.

எம்.எஸ்.ஸ்ரீலஷ்மி தொன்னூறுகளூக்குப்பிறகு வந்த அத்தனை கவிதைப் புத்தகங்களையும் படித்தாரா அல்லது 90களுக்குப்பிறகு எழுதிய நிரந்தரவாசிகள்/வேலை அனுமதிச்சீட்டு உடையோர் எழுதியவைகளை மட்டுமே படித்தாரா தெரியவில்லை. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் மேலே சொன்ன வகையறாவைச் சேர்ந்தவர்கள்.

இன்னொரு ஐயமும் எனக்கு உண்டு. நான்கு கட்டுரைகளை எழுதி அதை அப்படியே இடியாப்பம் பிய்ப்பது போல் பிய்த்துப்போட்டு ஒன்றாக்கிவிட்டாரா என்றும். காரணம், நிரந்தரவாசிகள்/வேலை அனுமதிச்சீட்டு கவிஞர்கள், நிரந்தரவாசிகள்/வேலை அனுமதிச்சீட்டு கவிஞர்களின் வாழ்வு வந்ததும் - சென்றதும், கவிமாலை / கவிச்சோலை தோற்றமும் வளர்ச்சியும், நிரந்தரவாசிகள்/வேலை அனுமதிச்சீட்டு கவிஞர்களால் ஏற்பட்ட வயித்தெரிச்சல் என நான்கு கட்டுரைகளை எழுதி அதைப் பொதுத்தலைப்பாக்கி விட்டது போல இருக்கிறது.

கட்டுரையில் தொடர்ந்து பரவிக்கிடக்கும் குடியுரிமைச்சிக்கலும் எடுத்துக்காட்டப்பட்டிருக்கும் கவிதை உதாரணங்களும் ஒரு அந்நியத்தனமாய் நேர்மையின்மையாய் துருத்திக்கொண்டிருக்கின்றன.

பல இடங்களில் கட்டுரையாளர் சாடுகின்ற விஷயங்கள் உலகச் செம்மொழியாம் தமிழ் மொழியில் எக்காலத்திலும் பாடு பொருளாகவே இருந்திருக்கின்றன. புதுக்குடியேறி, உள்ளத்தை அங்கு வைத்து உடலை இங்கு வைக்கும் போக்கு, குடும்பத்தைப் பிரிந்திருக்கும் வலி, வாழூரில் ஏற்படும் உணர்வுகளை சேகரித்தல் என்பன எல்லாப்படைப்பிலும் காணப்படுபவையே.

கட்டுரையின் பல இடங்களில் சம்பந்தேமே இல்லாத தகவல்கள் நெருடுகின்றன. சொந்த விருப்பு வெறுப்பின் பேரில் எழுதப்பட்டிருக்குமோ எனவும் யோசிக்கவைக்கின்றன்.

எடுத்துக்காட்டுகள் பல,.

1. சம்பந்தமேயில்லாமல் மலேசியாவின் கே.பாலமுருகன் இக்கட்டுரையில் சாடப்பட்டிருப்பது.
2. ஜெயந்தி சங்கரைப் பற்றிய அவதானிப்புகள். (நிறைய முயற்சிகள் எடுத்து அவர் சீனக்கவிதைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்து தந்திருக்கிறார் என்பதையும் மறந்து)
3. சுப்ரமணியம் ரமேஷ் காசு சம்பாதித்துவிட்டு ஊருக்குச் சென்றுவிட்டது
4. கவிமாலை மற்றும் கவிச்சோலையைப் பற்றி கூறுகையில் காசுக்காக / பணத்துக்காக அங்கே கவிதை எழுதச்செல்வார்கள் என்ற தொணியில் சொல்லப்பட்டிருக்கும் கருத்து. (உண்மையில் ஒரு பரிசுபெறும் சந்தோசத்திற்காக, ஒரு மோட்டிவேஷனுக்காக, அவர்களுக்குள்ளே யாராவது ஒருவர் பரிசை ஸ்பான்சர் செய்வார். நாள் ஒன்றுக்கு பதினெட்டு வெள்ளி சம்பளம் வாங்கும் நண்பர் தனது இலக்கிய ஆர்வத்திற்காக ஐம்பது வெள்ளி பரிசுத்தொகையை ஸ்பான்சர் செய்வது எவ்வளவு பெருந்தன்மையான விஷயம். அதைத் தவறான தகவல்களாக கொசைப்படுத்துவதா மேடம்?)
5.புத்தக வெளியீடு கண்டு காசு பணத்தை அள்ளிக்கொள்கிறார்கள், அட ஜெயந்தா! ராமா, நிறைய எழுத்தாளர்கள் புத்தக வெளியீடு விழாவையே விட்டுவிட்டார்கள்.

இன்னும் நிறைய.....

சிங்கப்பூரிலுள்ள சில முனைவர்களில் ஒருவர் என்ற முறையில், சிங்கப்பூரிலுள்ள சில இலக்கிய விமர்சகர்களில் ஒருவர் என்ற முறையில், சிங்கப்பூரில் எந்த முனைவரோ படைப்பாளரோ எப்படி வாந்தியெடுத்தாலும் அது பிற்காலத்திற்காக ஆவணப்படுத்தப்படும் என்பதாலும் நான் தங்களை அன்புடன் வேண்டிக்கொள்வது இதுதான்.

வருங்கால சிங்கப்பூருக்கு தவறான தகவல்களைத் தராதீர்கள். அல்லது தகவல்களை சொந்த விருப்பு வெறுப்பின் பேரில் தகனம் செய்யாதீர்கள்; தாராளம் செய்யாதீர்கள். தகவல்களை தகவல்களாக தராமல் தான்தோன்றித்தனமாக உங்களது மன ஓட்டங்களை இணைக்காதீர்கள். இவையெல்லாம் தமிழுக்கும் சிங்கப்பூருக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் நீங்கள் செய்யும்
துரோகங்களே.

தங்களது மேன்மையான படைப்பையும் அக்கறையையும் எதிர்நோக்கும்,

எம்.கே.குமார்.


வல்லினம் இதழில் வெளியான முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ.லஷ்மி – யின் கட்டுரைக்கான இணைப்பு
http://www.vallinam.com.my/issue18/essay5.html

முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ.லஷ்மி-யின் கட்டுரைக்கு பிற எழுத்தாளர்கள் அவர்களின் விமர்சனத்தை பதிவு செய்துள்ளனர் அதற்கான இணைப்பினையும் இங்கு கொடுத்துள்ளேன்.

கே.பாலமுருகன் (மலேசியா)
http://bala-balamurugan.blogspot.com/2010/06/blog-post_03.html

பாலுமணிமாறன் http://baalu-manimaran.blogspot.com

அப்துல்காதர் ஷாநவாஸ் https://shaanavas.wordpress.com

சூன்யா http://soonya007.blogspot.com

இந்திரஜித் http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3016

தம்பி பாண்டித்துரையின் மடல்.
http://pandiidurai.wordpress.com/2010/06/14

Tuesday, February 16, 2010

அஞ்சலி: VMC ஹனீபா





மகாநதியில் முதன்முதலாய் கொச்சின் ஹனிஃபாவைப் பார்த்தேன். கமல்ஹாசனுக்கே உரிய கதாபாத்திர தேர்வுகளின் முழுமையாய் ஹனிஃபா இருந்தார். படம் நினைவிருக்கும்வரை ஹனீஃபாவைத் திட்டிக்கொண்டேயிருப்பேன். அந்த அளவுக்கு அவரின் பாத்திரம். நிறைவாய்ச் செய்திருப்பார்.

கமல்ஹாசன் அவரைப் பல படங்களில் நன்கு பயன்படுத்தியிருப்பார்.

அதற்குப்பிறகு பல படங்கள். படக்கென்று நினைவுக்கு வருவது பட்டியல் படத்தில் வரும் வேடமும், முதல்வனில் வரும் முதல்வரின் தொண்டரும்.

கள்ளத்தனமும் வெகுளித்தனமும் நிறைந்த முகபாவத்தையும் புன்னகையையும் ஒருங்கே கொண்டவர். அப்பாவிக்கும் அடப்பாவிக்கும் பொருத்தமானவர்.

அமரர் ஹனீஃபாவின் மறைவு நல்ல திரைப்படங்களுக்கும் பொருத்தமான கதாபாத்திரங்களும் ஒரு பேரிழப்பு. நமக்கும்தான்.

அவரது குடும்பத்தாரின் வருத்தத்தில் இணைகிறேன். அவரது ஆத்மா சாந்தியடைக.

அன்பன்
எம்.கே.

Search This Blog