Friday, May 27, 2011

பயணம் - பறக்க மறந்த உச்சம்

ஒரு விஷயத்தை முதலில் சொல்லவேண்டும். அது, ’மொழி’ படம் ஏன் மகத்தான வெற்றிபெற்றது என்பது, அதை தயாரித்த பிரகாஷ்ராஜுக்கும் இயக்கிய ராதாமோகனுக்கும் தெரியவில்லை. ஆனால், அவர்கள் அதை அறிந்துகொண்டதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் போலும்.

அதை அறிந்துகொண்டதாக இருவரும் நினைத்துக்கொண்டிருப்பதாலோ என்னவோ ’அபியும் நானும்’ ’பயணம்’ போன்ற அரைகுறைகளை அவர்கள் முன்னெடுத்துச் செல்கிறார்கள். அரைகுறை ஆனாலும், தற்போதைய சமூக, சினிமா சார்ந்த அபத்தங்களுக்கும் ஆபாசங்களுக்குமிடையில் இவை, புறங்கையால் அப்புறப்படுத்தவேண்டியவை அல்ல என்பதை நாம் சொல்லியே ஆக வேண்டும். காரணம், ஒரு கல்யாணமண்டபம் கட்டலாம், அல்லது கட்சி ஆரம்பிக்கலாம் என்பதையெல்லாம் விடுத்து, சொந்த பணத்தில் ’நல்ல படம்’ எடுக்கவேண்டும் என்று நினைக்கும் ’பாவம்’ பிரகாஷ்ராஜுக்காக.

சென்னையிலிருந்து டெல்லி கிளம்பும் ஒரு விமானம் கடத்தப்படுவதும் அதை மீட்க, அதிரடிப்படை அதிகாரியும் தலைமைச் செயலாளரும் போராடுவதும் தான் கதை.

ராதாமோகனும் பிரகாஷ்ராஜும் தமிழ்ப்பட உலகில் நகைச்சுவை நுண்ணுணர்வு கொண்டவர்களில் சிலர் என்பது தொடர்ந்து வரும் அவர்களது எல்லாப்படங்களிலும் சில காட்சிகளை உருவாக்குவதையும் அதை ஆதரிப்பதையும் அறிந்திருந்தால் நாம் உணரமுடியும். கீழே விழுந்த கைக்குட்டையை எடுத்துத் தருவதாலேயேஒரு பெண்ணுக்கு காதல் வந்துவிடும் அளவுக்கு நாமும் இந்த சமுதாயமும் உருவாகியிருப்பதை அவர்கள் கையாண்டதும் இந்த நுண்ணுணர்வின் அடிப்படையில் தான்.

பத்திரிக்கை தர்மத்தை உயிரோடு கொளுத்தி ’கருமாதி’ பண்ணி பலவருடங்கள் ஆகிவிட்ட வேளையில், பத்திரிக்கைகள் படுத்தும் பாட்டை இப்படத்தில் காட்ட முனைந்ததில் உச்சம் இல்லை. மேலோட்டமே முன்னிற்கிறது. நான் பார்க்கவில்லை, இருந்தாலும் படித்த விமர்சனங்களிலிருந்து, ”பீப்ளி லைவ்” திரைப்படம் அதை மிகச்சிறப்பாக தோலுரித்துக்காட்டியிருக்கிறது என்றறிகிறேன். வசனங்களாலும் நேர்த்தியான காட்சிகளாலும் ”உன்னைப்போல் ஒருவன்” இதை சிறப்பாகக் கையாண்டதாக நினைக்கிறேன்.

சினிமாவில் இருந்துகொண்டே சினிமாவைக் கிண்டலடிப்பது, கலைஞரைத் திட்டிக்கொண்டே ’இலவச டிவி’க்கு நாம் வரிசையில் நிற்பதைப்போன்றது மட்டுமல்லாமல், கிண்டலடிக்கும் சினிமாவை ரசித்துவிட்டு வெளியில் வந்து “தலைவனுக்கு” பாலாபிஷேகம், பீராபிஷேகம் அல்லது கொடியாபிஷேகம் பண்ணுவதும் போலத்தான். தியேட்டரில் இது சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு மிகுந்த வரவேற்பு. தமிழர்களுக்கு தமிழில் ’பிடிக்காத’ வார்த்தை ’திருந்துவது’. நாமும் திருந்தமாட்டோம், நம்மைத் திருத்த வருவதாக நினைத்துக்கொண்டு வருபவர்களையும் திருத்த மாட்டோம்.

இப்படத்தில் வரும் ’ஷைன்ஸ்டார்’ ’காந்த்’ நடிகரும் அவரது பக்கத்து இருக்கைக்காரர் செய்யும் அபிநயங்களும் ரசிக்கத்தான் வைக்கின்றன.
போட் கவிழ்கிறது, கேப்டன் கடலில் குதிக்கச்சொல்கிறார் எனச்சொல்லவும், உடனே ஒருவன், கேப்டன்னா விஜயகாந்தா என்று சீரியசாய் கேட்பதும் நம் நினைவில் வரும் பிரகாஷ்ராஜ்ஜின் இன்னொரு படம். (இனிமேல் அப்படிக் கேட்கமுடியாது நண்பரே, 42 சீட்டாம்; டவுன் ஏரியாவில் தோற்றதெல்லாம் போக, பாதியாவது தேறும் போல இருக்கிறது.) ஆக, பிரகாஷ்ராஜ் ராதாமோகன் கூட்டணி இதைத் தொடர்ந்து செய்து வருகிறது என்பதே ஒரு கவன ஈர்ப்புதான்.

படைப்பாளர்களைக் குழுவாக்குவதில் பல உத்திகள் காலம்காலமாய்க் கையாளப்படுகின்றன. சில ’சுய’ உதவிக்குழுக்களை அவர்களே தமக்குள் உருவாக்கிக்கொள்கிறார்கள். கழிப்பறை, நவீனகழிப்பறை, அதிநவீன கழிப்பறை போல இலக்கியவாதி, நவீன இலக்கியவாதி, பின் நவீனத்துவ இலக்கியவாதி என, நண்பர் ”மானஸாசென்”னின் ஒரு கவிதையைப்போல குழு உருவாக்கம் படைப்பாளர்களிடையே விரிகிறது.

இது தவிர தற்போதைய படைப்பாளிகளில் படைப்பாளி, சுயசாதி மறுப்பாளரோ அல்லது சுயசாதி சார்புடையவரா என்பதும் அண்மையில் நடக்கும் ஒரு நவீனத்துவம். காண்க (http://www.kalachuvadu.com/issue-134/page22.asp)

இந்நிலையில் ராதாமோகன் போன்ற படைப்பாளிகளை எந்தக்கட்டுக்குள் கொண்டுவருவது எனத்தெரியவில்லை. கிறித்துவ மத கட்டமைப்பில் மன்னிப்பு வழங்குதலும் தன்னை இகழ்ந்தவனை பொறுத்து அமைதி காத்தலும் பெரும்பான்மையானவைகளாக நீண்டகாலம் முன்னிருத்தப்பட்டு வருகின்றன. இவற்றை இப்படத்திலும் பயன்படுத்தியிருப்பது மூலம் படைப்பாளி ராதாமோகன், எந்தக் குழுவுக்குள் வருகிறார் எனத்தெரியவில்லை. எந்த மதத்துக்கும் இழிவு வராது (கடத்துவது முஸ்லீம், மன்னிப்பது கிறித்துவம், நடப்பது திருப்பதியில்) என்பதாக இதை ஒரு ’பொதுப்புத்தியாக’ வடிவமைத்தாலும் விமான நிலையத்திற்கருகில் தேவாலயம் இருப்பதும் அதன் மணியொலியை ரகசிய ஒலியாக்க முனைவதும் ராதாமோகன் என்ற படைப்பாளியையும் அவரது இப்படைப்பையும் ஒரு குழுவுக்குள்ளே அடக்க ஏதுவாக அமைகின்றன.

ஒரு மாற்றத்துக்காக, ஒரு சாமியாரை விமானத்துக்குள்ளே வைத்து, அவசர நேரத்தில் தியானம் செய்யச்சொன்னால் என்ன என்ற குறுக்குச்சிந்தனைக்கு, சாமியார், சல்லாபம் செய்யாமல், தியானம் செய்வதாய்க் காட்டினால் நம்பிக்கைக்குறைவாக இருந்தாலும் இருக்குமோ என சம்பந்தப்பட்டவர்கள் நினைத்திருப்பார்களோ என்னவோ.

கார்ல்மார்க்சையும் காந்தியையும் படித்தவன் ’அல்பாயுசு’வில் போவான் என்பதும் காலங்காலமாக கொள்ளப்படும் புரட்சியாளனின் / புரட்சியின் முடிவுக்கு எடுத்துக்காட்டு என்பதாகவே அதையும் முன்மொழிந்திருக்கிறார் ராதாமோகன்.

விமானத்துக்குள்ளே அச்சச் சூழ்நிலை நிகழாதது பெருங்குறை, இறுதிக்காட்சிகளைத் தவிர.

ஒட்டுமொத்த இந்தியாவே உற்றுநோக்கும் இதுபோன்ற ஒரு அவசர நிலையை ஒரு அறைக்குள் உட்கார்ந்துகொண்டு பிரகாஷ்ராஜும் நாகார்ஜூனாவும் முடிப்பது போன்ற பிரமை, நிஜ உணர்வைக் குறைக்கிறது. பிரதமர் பேசுகிறார் என்று போனைக் கொடுக்கிறார்கள், அவ்வளவுதான்.

ஒருகாலத்தில் தான் அடித்த மனைவியிடம் இப்போது மன்னிப்புக் கேட்பது, கணவனிடம் கோபித்துக்கொண்டு சென்ற மனைவி திருந்தி திரும்பி வருவது போன்ற காட்சிகளை நினைத்தால் ’பெருமையாக’ இருக்கிறது.

விமானத்திற்குள் வேலைக்காரப்பெண்ணை, மிகுந்த எச்சரிக்கையோடும் அக்கறையோடும் முதன்முறை அனுப்பும் நாகார்ஜூனாவிற்கு, அந்தப்பெண் திரும்பி வந்து மறுமொழி எதுவும் கொடுத்ததாக காட்சி இல்லாமல் தொங்கி நிற்கிறது. அதேபோல போதை மருந்து வாலிபன். எதற்காக வந்தான், ஏன் வந்தான், ஏன் குதித்தான் என்ற கேள்விகள் போக, இவனும் கடத்தல்வாதிகளில் ஒருவனைப் போல இருப்பதும் குழப்பக்குறி.

நாகார்ஜுனா நச்சென்று பொருந்துகிறார். வேறு யாரையும் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. பாடல் இல்லாததும், வெடிச்சிரிப்புக்கு குறைவிருந்தாலும் ஆங்காங்கு அடிநாதமாய் நகரும் நகையும் புன்னகையை வரவழைக்கின்றன.

பிணைக்கைதி இறந்துபோவதும் அதற்குப்பதில் ஏற்பாடு செய்வதும் காமெடிக்கும் கதையின் போக்குக்கும் வழிவிடுகின்றன.

எல்லா ”சுய” போதைகளையும் அபிலாஷைகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு, கிரேசிமோகன் போன்றவர்களுடன் கூட்டணி கொண்டால், ராதாமோகன் மிகச்சிறந்த ஒரு காமெடிப்படத்தைக் கொடுக்கமுடியும் என்று தோன்றுகிறது.

பாட்டுக்கள் இல்லாது, ஒரே களத்தை அடிப்படையாகக் கொண்டு, தமிழில் இதுபோன்ற படங்களை எடுக்க முடியுமா என்பதே கமல்ஹாசன் உட்பட்ட சிலருக்கு மட்டுமே சிந்தனைக்குரியதாயும் செயலுக்குரியதாயும் சில காலங்களுக்கு முன்பிருந்த நிலையில், அத்தகைய முயற்சிகள் தமிழில் பிற தயாரிப்பாளர்களிடமிருந்தும் இயக்குனர்களிடமிருந்தும் வரத்தொடங்கியிருப்பது வரவேற்புக்குரியதுதான். இதையே நச்சென்று பொட்டில் அடித்தார்போல சொல்லவும் முடியும்.

கடல் பயணம், விமானப்பயணம், பேருந்துப்பயணம், ரயில்பயணம் என்பவைகளெல்லாம் போக, வாழ்க்கையே ஒரு பயணம் தானே. எல்லாப் பயணத்திலும் காலமாகவும் தூரமாகவும் உணர்வாகவும் ஏதோ ஒரு உச்சம் இருக்கிறது. அந்த உச்சத்தை இந்த ”பயணம்” எட்டாவிட்டாலும், இது எட்டிக்காய் இல்லை என்பது ஆறுதலே.


எம்.கே.குமார்

தங்கமீன் இதழில் வெளிவந்தது. (வெட்டப்பட்ட பகுதிகளும் இங்கே சேர்க்கப்பட்டிருக்கின்றன)

ஆடுகளம் – சொல்ல மறந்த இன்னொரு கதை

ஆடுகளம் படத்தைப் பற்றி பலர் பேசி எழுதிய பிறகும், நான் எழுதவும் இன்னும் சில விஷயங்கள் இருப்பது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தாலும் அதுபற்றி எழுதாவிட்டால் நானும் கச்சேரிக்குச் சென்றேன் என்பதை இந்த அகில உலகத்திற்குச் சொல்லாமல் விட்டுவிடுவது போலாகும் என்பதால் இந்த குறும்பகிர்வு.

உண்மையில் பொல்லாதவனையும் ஆடுகளத்தையும் உற்றுநோக்கினால், இயக்குநரின் மேலாண்மையில் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. தனுஷைத் தவிர்த்து, நட்பு அல்லது அன்பு தோரணையில், நெருங்கிய ஒருவர் துரோகம் செய்வதும் அதில் ஒன்று. மேலும் பொல்லாதவனைப் போலவே இப்படமும் கிளைமேக்ஸுக்கு சிறிது முன்னால் ஆரம்பிக்கிறது. பிறகு கதைசொல்லியின் வழியாக பின்நோக்கலாக கதை நகர்கிறது.

ஒரே மாதிரி கதையைக் கொண்டுபோவது நீண்ட காலத்துக்கு சரிப்பட்டு வராது. வெற்றிமாறன் அடுத்த படத்தில் யோசிக்கவேண்டும்.

சேரனை நினைக்கும்போதெல்லாம் “என் பேரு சிவக்குமாரு, அப்போ நான் பத்தாங்கிளாஸ், போரூர்ல படிச்சுக்கிட்டிருந்தேன், அப்போத்தான் அந்த பொண்ணு எங்க ஸ்கூலுக்கு வந்தான்னு” அவர் சொல்றமாதிரி ஒரு பிளாஷ்பேக் ஞாபகம் வருகிறதல்லவா? அதுமாதிரி ஆகிவிடக்கூடாது.

டாவடிக்கும் பெண்ணிடம் காசு வாங்கி (சத்தியமா இல்லேடா, சத்தியமா இல்லேங்க, அட சத்தியமா இல்லேங்க என்று எத்தனை சத்தியம் செய்தாலும் எங்கிருந்தாவது எடுத்துக்கொடுக்கும் காதலிகள் கிராமத்திலே மட்டும் உண்டு; டவுன் காதலிகள் எப்படி என்பதை அடுத்த பிறவியில் தான் தெரிந்துகொள்ளவேண்டும்) ஒரு ’நல்ல’ காரியத்தில் இறங்குவது என்பது எப்போதும் எல்லா மனிதர்களுக்கும் அவர்தம் உணர்வுகளுக்கும் நடைமுறைச் சபலம். எத்தனை படம் ஓட்டியிருக்கோம்!!!

’யாருப்பா அது? முத்துராமன் மவனா?’
’இல்லே, இது நமக்கு வேண்டிய பையன்; நம்ம பையன்.’
’அப்பிடியா, நம்மாளுங்களாப்பா? ஒண்ணு மண்ணா நின்னு இந்த சேவல்பந்தயத்துல ஜெயிச்சுப்புடுங்கப்பா..’ என்று சொல்வது மிகவும் சக்திவாய்ந்த அணுகுண்டை அன்பில் தோய்த்து ஒருவனுக்குள் ஒளித்து வைப்பதற்குச் சமம் என்பதை அதுபோன்றதொரு சூழ்நிலையில் இருந்தவர்களுக்குத்தான் தெரியும். படத்தில் வரும் போலீஸ்காரரின் கிராமத்து அம்மா சொல்கிற வசனம்.

’வாட் டு யு வாண்ட்? வாட் இஸ் யுவர் ப்ராப்ளம்? என்று நாயகி கேட்கும்போது, ’கருப்பு, கே பி கருப்பு’ என்று (இங்கிலீஷ் கெட்ட கேட்டுக்கு இனிஷியல் வேற!) தனுஷ் கூறுவது தமாஷூ.

‘என்னய்யா வேணும்’ என்று வீட்டுக்குள் வந்த பந்தை நினைத்து நாயகி கேட்கும்போது, நம்ம தனுஷ், இங்கிலீசுல ’புலி’ கணக்கா, பால்ஸ், பால்ஸ் வேணும் என்று ’மெதப்பா’ கூறுவதும் (ஒரு பந்துக்கு, ரெண்டு பால்ஸ்ஸா?) அந்தப்பெண் அதைக்கேட்டு ஒரு நொடி அதிர்வதும் எப்போதும் என்னை புன்முறுவலிக்கச்செய்யும் ஒரு காட்சி.

வாழ்க்கையில பாதி தூரம் வந்துபுட்டோம்டா, மீதிய எப்படிச் சேக்குறதுங்குறது நம்ம வாழ்க்கையில் வரப்போறவ கையிலதாண்டா இருக்கு என்று பேட்டைக்காரன் சொல்வது இன்னொரு மிக இயல்பான வசனம். பேட்டைக்காரனுக்கு ரெண்டு ’ப்ளக்ஸ் போர்டு கட் அவுட்’ வைங்கப்பா.

அத்தாச்சியாய் வரும் அத்தாச்சி அசல் அத்தாச்சி. தீராத கலைவெறியால் மட்டுமே இப்படிக் காதல்கள் சாத்தியமாகும். பேட்டைக்காரனுக்கு (கிழவனாயிருந்தாலும்) பொண்டாட்டியாய் வாழ்த்தீர்மானிப்பது சொல்லமறந்த இன்னொரு கதை படத்தில். அவளுக்கு நாயகனுடன் கள்ளத்தொடர்பு (தமிழில் எனக்குப் பிடிக்காத வார்த்தை இது) என்றதும், போய்யா, இதுக்கு மேல இங்க நான் இருக்கவே வேண்டாம்ன்னு போறா பாருங்க, அந்தக்கதை!!)

இன்னொரு முறை பெரியகருப்புத் தேவனுக்கு நல்ல வேடமும், வசனமும். இந்தியாவிற்கு வரும்போது இவரைக் கூட்டிப்போய் ஒரு பார்ல பார்ட்டி கொடுக்கணும் போல இருக்கு!

மீண்டும் மீண்டும் பார்க்கிறேன். வெற்றிமாறனுக்கு நன்றி.

எம்.கே.குமார்.

தங்கமீன் மார்ச் இதழில் வெளிவந்தது.

நடுநிசி நாய்கள் – ஒரு சிறப்புப்பார்வை

தமிழ் வலைப்பூக்களை அண்மையில் அதிகமாய் மேய்ந்ததில், சூடும் காற்றும் மெல்ல சேர்ந்தேறி, நடுநிசி நாய்கள் என்ற புதிய படத்தை எப்படியாவது பார்த்துவிடவேண்டும் என, வயிறு உப்பி, கும்பி சூடு கண்டிருந்தது. இதற்கு மேலும் காயவிட்டால் கும்பி என்னாவது என்பதால் பார்த்துவிடத் தீர்மானித்தேன்.

நடுநிசியில் தான் இப்படத்தைப் பார்க்கவேண்டும் என எனக்கு இருந்தது போலும். நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்கு சிங்கப்பூரின் ரெக்ஸ் திரையரங்க வாயிலை அடைந்து டிக்கெட் கேட்டேன். நள்ளிரவு1215க்கு காட்சி. அவர் என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு, ’இந்த நட்ட நடுராத்தியில படத்துக்கு வந்திருக்கு பாரு நாயி’ என்பதாய் கூடலின் உச்சஸ்தானத்தின் எரிச்சல் அடைந்தவரைப் போல பார்த்தார்.

நடுநிசி நாயின் இயக்குனர் ’கௌதம் வாசுதேவ மேனனை’ ’மின்னலே’ படம் வந்ததிலிருந்து எனக்குத்தெரியும். (அவருக்கு என்னைத் தெரியுமா எனக்கேட்பவர்களை ஆண்டவன் தண்டிக்கட்டும்.) அப்போது அவர் கௌதமாய் இருந்தார். அதற்குப்பிறகு சில போலீஸ் குட்டிக்கரணங்களையும், சித்தப்பாவை வைத்து ஒரு விரும்பத்தகாத படத்தையும், தனது அப்பாவை வைத்து ஒரு பாடல்படத்தையும் எடுத்த பின்பு, இந்த ந.நி.நா படத்துக்கு வந்திருக்கிறார். இந்த இடைப்பட்ட காலத்தில், இந்த “மேனனை” அவர் தன் பெயருடன் சேர்க்க பட்ட பாடு, எந்த நடுநிசி நாயும் படாத, வார்த்தையால் சொல்லமுடியாத பாடு. அதை விடுங்கள்.

கௌ.வா.மே மிகவும் நல்லவர். உணர்வுகளை அழகாய்ச் சொல்பவர். பெண்களை மதிப்பவர். எனக்கு அவரைப் பிடிக்கக்காரணம் ஜோதிகாவுக்கும் திரிஷாவுக்கும் புடவை கட்டிப் பார்த்தவர் என்பதால் மட்டுமல்ல; தாமரை என்ற பெண்கவிஞரை உச்சம் கொள்ளச்செய்தவர் என்பதால் மட்டுமல்ல; நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே என்று சூடேற்றியவர் என்பதால் மட்டுமல்ல; அவர் செம்மொழிப்பாடலுக்கு இயக்குனர் என்பதால் தான். அந்த வகையில் தமிழர்களுக்கு விஜய் நம்பியார், சிவசங்கர மேனன் போல இவரும் நண்பர்தான்.

இந்த நடுநிசி நாய்கள் என்ற தலைப்பைப் பற்றி ரெண்டு வரியில் சொல்லிவிடலாம் எனத்தோன்றுகிறது. சுந்தர ராமசாமி என்று தென்தமிழ்நாட்டில், மலையாள தேசத்திற்கருகில் ஒரு மனிதர் இருந்தார். அவருடைய ’உடம்பில்’ பிறந்தவர்களில் மிக முக்கியமான இருவர் அண்ணன் பசுவய்யாவும் தம்பி ஜேஜேயும். அண்ணன் பசுவய்யா பெரிய கவிஞன். தம்பி ஜே ஜே பெரிய சிந்தனாவாதி. அந்த அண்ணன் படைத்து, 1975ல் முதற்பதிப்பாய் வந்த 29 கவிதைகளைக் கொண்டதுதான் இந்த நடுநிசிநாய்கள் கவிதைத்தொகுப்பு. (நடுநிசி நாய்கள் என்று எங்கே தேடினாலும் வாசுதேவ மகா மேனன் தான் தற்போது கிடைக்கிறார்; பசுவய்யாவை புத்தக புழுதிகளில் தான் எங்காவது தேடவேண்டும் போலிருக்கிறது.)

அடுத்து குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவர், இப்படத்தில் நடித்த நடிகை சமீரா ரெட்டி. அவர் ஒன்றும் அழகெல்லாம் இல்லை என்று நான் சொன்னால் நீங்கள்தான் நம்பப்போகிறீர்களா இல்லை கௌதம் வாசுதேவ மேனன் தான் ஒத்துக்கொள்ளப்போகிறாரா? அண்மையில் ஒரு தொ.கா நிகழ்ச்சியில் பேசிய கௌ.வா.மே, தனக்கு சமீராவைப் பிடிக்கும் என்றார். அதனால் எனக்கும் பிடித்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர், உடலுக்கு மூஞ்சியைப் போல படத்துக்கு முக்கியமானவர். அந்த வகையில் மனோஜ் பரமஹம்சா விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்குப்பிறகு கௌ.வா.மேயின் இப்படத்திலும் ஒளிஓவியம் செய்திருக்கிறார். (முதல் ஒளி ஓவியரே, எங்கேயிருக்கீங்க, 9ரூபாய் நோட்டு, பள்ளிக்கூடத்துக்கு அப்புறம் ஆளக்காணோம்?)

படம் தகாத உறவு பற்றியும் எல்லோருக்கும் கிடைக்காத தகுந்த உறவு பற்றியும் என்று சொல்லியது போதாதென்று, கலாச்சாரக்காவலர்களை மிகவும் அதிர்ச்சியாக்கும் என்று வேறு சொல்லியிருந்தார்கள். இதனால் எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியானது. நான் கலாச்சாரக் ’காவலன்’ இல்லை, அது விஜய். இருந்தாலும், எனக்குக் கிடைக்காத எதுவும் அடுத்தவர்களுக்குக் கிடைத்தால் அந்த அதிர்ச்சி ஏற்படும். குறிப்பாய்....வேண்டாம் விடுங்கள். அதைப்பற்றியா பேசுகிறோம்?

சரி, ரெண்டு டிக்கெட் என்றேன். அருகிலிருந்த இன்னொரு ’கவுண்டர்’ பெண் (கவுண்டரா தெரியவில்லை, வேறு ஜாதியாகவும் இருக்கலாம்) அதே தியேட்டரில் ஓடும் ஒரு மலாய் படத்துக்கு (மலாய் ந.நி.நாயாய் இருக்குமோ) வந்த கூட்டத்துக்கு டிக்கெட் கொடுத்துக்கொண்டிருந்தார்.

மீண்டும் ரெண்டு டிக்கெட் என்றேன். அந்த நண்பர் எழுந்து உள்ளே சென்றார். இப்போது என் பக்கம் திரும்பிய அந்தப்பெண் (மலேசியப்பெண்ணாக இருக்கவேண்டும்; அவ்வளவு அழகு!) சாரி டிக்கெட் இல்லை என்றார்.

என்ன? ஏன் டிக்கெட் இல்லை? நடு நிசி நாய்கள் படத்துக்கு நடுநிசியில் கூட கூட்டம் வருகிறதா, ஆச்சர்யமாய் இருந்தது.

மீண்டும் அதிர்ச்சியுடன் கேட்டேன். அவர் மீண்டும் என்னைப் பார்த்துவிட்டு, குழந்தைகள் அனுமதி இல்லை என்றார். என்ன நானா குழந்தை, என் மனசைச் சொல்கிறாரோ என்று குழம்பிய வேளையில், அவன் தான் தூங்குகிறானே என்றார் என் மனைவி.

அவன் திடீரென விழித்து எழுந்து விட்டால், என்ன செய்வது என்று கேட்டார் அப்பெண்.

ம்ஹூம், என்ன சொல்வது, பெண்கள் தான் எவ்வளவு புத்திசாலிகளாய் இருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டு ’பயணம்’ ஆனேன்.

நடுநிசி நாய்கள் படத்தை நான் மட்டுமே செல்லும் ’சிறப்புப்பார்வை’யில் தான் பார்க்கவேண்டும் போலிருக்கிறது.

எம்.கே.குமார்.

தங்கமீன் மார்ச் இதழில் வெளியானது

Search This Blog