Wednesday, February 02, 2011

கமல்ஹாசனுக்கு ஒரு கடிதம்

வண்க்கம் தலீவா,

நாந்தான் கமல் குமார் பேசுறேன். சிங்கப்பூர்ல இருந்துதான். அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்துல உன்னை நேர்ல பாத்தது. அப்போ, நம் சிங்கப்பூர் சித்ரா உன்னுகிட்ட கேட்ட கேள்வியில டென்ஷனாகிப்போன உன்னை பாக்கவே பயந்துட்டேன் தலீவா. அதுக்குப்பின்னாடி நாலைஞ்சி படம் நடிச்சிப்புட்டே. படத்துல பாக்குறதோட சரி. எப்புடிக்கீற தலீவா. கௌதமியக்கா நல்லா பாத்துக்குறாங்களா?

மன்மதன் அம்புன்னு ஒரு படம், நம்ம ஊர்ல ஆடியோ ரிலீஸ்ன்னு, ’வசந்தம்’ டிவிலெ, கூவிக்கூவி வித்தானுக. தலிவனை நேர்ல பாத்து ரொம்ப நாளாச்சே, நேர்ல பாக்காலாமேன்னு டிக்கெட் கேட்டேன் தலீவா. 37வெள்ளிதான் கொறைஞ்ச டிக்கெட்டேன்னானுக. நானும் என் சம்சாரம், ஒரு கொழந்த, கட்டுபடியாகாது தலீவான்னு வசந்தம் டிவி பொட்டி முன்னாடி உக்காந்துட்டேன் தலீவா.

சரி, பாட்டு கச்சேரிக்குத்தான் போகலை. சாரி....பாட்டு வெளியீட்டுக்குத்தான் போகலை, படம் வந்தா ஒடனே பாத்துடணும்ன்னு ஒரு ஆசை தலீவா. உட்லாண்ட்ஸ்லெ ”கதே” கொட்டகையில முன்னாடியே புக் பண்ணிட்டேன். 2 பேருக்கு 24வெள்ளி, புக்கிங் பணம் 1வெள்ளின்னு 25வெள்ளி மொத்தம். இன்னொரு சேதி என்னன்னா, என் சம்சாரத்துக்கும் காமெடிக்கும் காத தூரம். அவங்களோடு போறோமேன்னு வேற மனசுக்குள்ளே ஒரு ‘கிலி’ இருந்தாலும், தலீவனாச்சேன்னு போனேன்.

மிலிட்டரில ஓய்வுவாங்கிக்கினு வந்து பிரைவேட்டா டிடெக்டிவ் நடத்திக்கினு வாற உன்னை (மேஜர் ராஜ’மன்’னார்), சினிமா நாயகி ’அம்பு’ஷாக்ஸி (எ) நிஷாவை (த்ரிஷாவை) காதலிக்கும் கோடீஸ்வர ’மதன்’கோபால் (ஆர்.மாதவன்), அவள் மேல சந்தேகப்பட்டுக்கினு, அவளை ஃபாலோ பண்ணச்சொல்லி, பிரான்ஸில இருக்கும் தன்னோட தோழி தீபா வீட்டுக்கு அவ ரெஸ்ட்டுக்குனு போகச்சொல்ல, அவளுக்கே தெரியாமெ அனுப்புறான். அங்கே நீ எதுக்குப் போனே, என்னெ பண்ணுனே, இந்த கல்யாணம் நடந்தா இதுதான் கதை; கரெக்டா தலீவா?

முதல்லெ ஒண்ணே ஒண்ணு சொல்லிக்கிறேன் தலீவா. எல்லாப்படத்திலேயும் ஏதாவது ஒரு சாகசம் செய்யணும்; இல்லாட்டி உன் உச்சி மண்டையில சுர்ருங்கும்ங்கிறது எனக்குத் தெரியும் தலீவா.

அதுல ஒண்ணா, இந்தப்படத்துல உன்னோட காதலு மற்றும் கல்யாணத்து ஃப்ளாஷ்பேக்கை ’ரிவர்ஸில்’ காட்டி மஜா பண்ணியிருக்க தலீவா. உண்மையிலே புதுசு தலீவா; அதுக்காக ஒன்னைப் பாராட்டிக்கிறேன். ஆரம்பிக்கச்சொல்ல கொஞ்சம் குழப்பமோட இருந்தாலும் முடியச்சொல்ல மனசைக் கரைக்கிது தலீவா அந்தக் காட்சி. உன் குரல்லெ பின் பாட்டு வேற! சொல்லவா வேணும். சூப்பர் தலீவா. பாட்டு வரிதான் ஞாபகம் இல்லை.

திரிஷாவோட சொந்தக்குரல்ன்னு சொன்னாய்ங்கெ. மாருல குத்தியிருக்கும் பச்சையைப் போல பளிச்சினு இருக்கு. இதுகூட உன்னோட புதுமைதான் தலீவா.

ஒளிப்பதிவிலும் வசனப்பதிவிலும் என்னமோ புதுமை தெரியுது தலீவா. ஆனா, டைரக்டா ஒலிப்பதிவு செஞ்சதாலே, அங்கங்கே ’எக்கோ’ அடிச்சு, கொஞ்சம் சுரத்து கம்மியாயிருச்சு தலீவா.

உன் வசனத்த (கொஞ்சம்) எப்பவும் பிடிக்கும் தலீவா. அதுவும் பார்லெ தண்ணி அடிச்சிக்கிட்டு, மதனகோபால் அண்ட் பிரண்ட்ஸ் பேசுற வசனம் சிறப்பு வசனம் தலீவா. சிரிப்பு வசனம் தலீவா. மூதலிக்கிறதுன்னா 'ப்ரூஃவ்' பண்றதுங்குற வார்த்தைய வெச்சி பண்ணின காமெடி கலக்கல் தலீவா.

ஒரு கப்பலெ காட்டியிருக்கெ. அதுவும் சொகுசுக் கப்பலெ.. ஊர் நாட்டுலெ உள்ளவனுங்க வாயத்தொறந்து பாக்குறங்குறதுக்காக. உன் புதுமையில இதுவும் ஒண்ணு தலீவா.

ஓரளவுக்கு சிரிப்பு வருது, மத்தபடி, படத்தப் பத்தி என்னத்த தலீவா சொல்றது?

ஒத்த வாக்கியத்துல சொல்லணும்னா, சிங்கத்துக்கு ஏன் இந்த ’சேவிங் செய்யிற வேலை’யின்னு தோணுது தலீவா.

கொஞ்சம் எலக்கியமா சொல்லணும்ன்னா, நம்ம ’கவிக்கோ’ சொன்னதுமாதிரி, ’அம்மிக்கொத்துறதுக்கு எதுக்கு சிற்பி’ன்னு சொல்லணும் தலீவா.

கதை, திரைக்கதை, வசனம், கவிதை மற்றும் பாடல்கள்ன்னு எல்லாத்தையும் நீயேதான் பாத்துக்கிட்ட போலயிருக்கு தலீவா, பெருமையா இருக்கு; ஆனா பெருமைப்படும்படியா இல்லியே தலீவா. இயக்கம் கே.எஸ். ரவிக்குமார் ன்னு போட்டான்ய்ங்களே உண்மையா தலீவா. இல்லெ முதல் சீன்லே, கே.எஸ். ரவிக்குமாரு மாதவன்ட்டெ ஏதோ பேச, அவரு அதைக் கண்டுக்காம போக, ரவிக்குமாரும் அடப்போங்கடான்னு, அப்படியே நழுவிடுறாரே...அதுதான் உண்மையிலே நடந்ததா தலீவா?

பாட்டு எழுதியிருக்கே...ஏன் தலீவா இப்படி சோதிக்கிறே?

கவிதை எழுதியிருக்கே, கல்லு மாதிரி மாரு வேணும், பளிங்கு மாதிரி நாத்தம் இல்லாத பல்லோட பொண்ணு வேணும் முத்தம் குடுக்க, படுத்து எந்திரிச்ச உடனே கழுவ கூட வரணும், எப்பவும் படுத்துக்கினே இருக்கானே அரங்கநாதன் சாமி, அவென் உன் ஆசையைத் தீத்து வைச்சானா லெட்சுமி சாமி, கல்லுல பதிச்ச காமத்த உங்கிட்ட செஞ்சு காட்டுனானான்னு கவிதை எழுதிப் படிக்கிறே, திரிஷாப் பொண்ணையும் படிக்க வைக்கிறியே தலீவா... என்னத்தை தலீவா சொல்ல.. சிங்கப்பூர்ல இருக்க 'கவிமாலைக் கவிஞர்கள்'ட்டே இதே தலைப்பைக் குடுத்தாக்கூட கலக்கிப்புடுவாங்கெ. நீ என்னடான்னா? இதெ கேட்டு வேற அந்தப்பொண்ணு உன்னை லவ் பண்ணுதுன்னு காட்டுறாய்ங்களே... என்னத்தெ தலீவா சொல்ல?

திரைக்கதையில உம்பேரு. நடிகையை அவ காதலன் சந்தேகப்படுறான்னு எங்களுக்குச் சொல்றதுக்கே பாதிப்படமா? உனக்கே இது நியாயமா தலீவா?

டிவில, விளம்பரத்துக்கு இடையில ’சீரியல்’ வாற மாதிரி, ரமேஷ் அரவிந்தும், ஊர்வசியும் அப்பப்போ வந்து அழுதுட்டும் சிரிச்சுட்டும் போறாங்கெளே..என்ன தலீவா இது. நாப்பது வருஷத்துக்கு முன்னாடி வந்த படங்கள்லெ கூட இப்படி ஒரு சீனு இருக்காது தலீவா.

என்ன தலீவா ஆச்சு. சோற்றுக்கா வந்ததிங்கு பஞ்சம்ன்னு ஒரு பட்டாபட்டி மீசைக்காரன் சொன்னதுமாதிரி, நடிப்புக்கா வந்துருச்சி உனக்கு பஞ்சம்?

பாட்டுக்கு ஆடுனா ’பஞ்ச தந்திரம்’ ஞாபகம் வருது. பொண்டாட்டிய நாயி கடுச்சுடுச்சினு நீ அழுதா..சாரி.. பொண்டாட்டி தவறிட்டான்னு நீ அழுதா, எத்தனை படம்...இருந்தாலும் ’வேட்டையாடு விளையாடு’ ஞாபகம் வருது. ஆள்மாறாட்டக் காமெடின்னு நீ அரம்பிச்சா..சொல்லணுமா தலீவா..எத்தனை படம், எத்தனை படம்?

காந்தியெ ஒனக்கு புடிக்கும்ன்னு தெரியும் தலீவா, அதுக்காக ஒரு படம் கூட எடுத்தியே...ராணி மொகர்ஜியா, அபர்ணாவா அந்தப்பொண்ணை ஒரு பொட்டி மேல படுக்க வெச்சிக்கிட்டு மியூசிக் வாசிச்சியே...அந்தமாதிரி ஒரு காட்சியை எவனாவது இதுவரைக்கும் யோசிச்சுருப்பானா தலீவா. அஜந்தா, எல்லோராவிலேயே இல்லையாம்.

சரி, மேட்டருக்கு வாரேன். காந்தியெ உனக்குப் பிடிக்கும்கிறதுக்காக எத்தனை தடவைதான் அஹிம்சை... அஹிம்சையே வீரத்தின் உச்சம்ன்னு டயலாக் எழுதுவே தலீவா.

சரி, அதை விடு. மனசாட்சிதான் மண்ணாங்கட்டி..சாரி.. ’மனசாட்சிதான் சாமி’ன்னு எப்பவோ எங்களுக்குச் சொல்லிப்புட்டே... விருமாண்டில நெப்போலியன் சொல்வாறே...நா இன்னக்கி நிம்மதியாத் தூங்கிடுவேன்..பொய்ச்சாட்சி சொல்லிட்டு நீ நிம்மதியா தூங்க முடியுமான்னு... அதையே இன்னும் மறக்கமாம இருக்கோம், நீ அதையே திரும்பத் திரும்ப வசனமா சொன்னா நாங்க தூங்கமுடியுமா தலீவா?

அரசியல்வாதிங்களுக்கு ஆப்பு வெக்கிறது, சாமிய வசனத்துல கொண்டு வாறது, இதெல்லாம் இனிமே நீ செய்யவேணான்னு தோணுது தலீவா. எந்தப்பயலுகளும், உன் பேச்சை கேட்டு ஒட்டு போடாம இருக்கமாட்டானுவ. நம்பு தலீவா. பாகிஸ்தானெ நீங்க பிரிச்சா, அந்த சகோதரன் கூட சண்டை போடணும், நீங்களே சமரசமா போனீங்கன்னா, நாமளும் சகோதரன்னுனு நிக்கணும்ன்னு நீ எழுதுன/பேசுற வசனம் நல்லாத்தான் இருக்கு. ஆனா, சொன்னா கோச்சுக்காத தலீவா, ஒரு நாவலா எழுது தலீவா, சினிமாவுல வேணாம்.

கிளைமேக்ஸே குழப்பம். நீங்க போடுற நாடகமே எங்களுக்கு சுத்தமாப் புரியலை. வசனத்துனால காமெடி வருது. சிரிப்பு வருது.

ஜோடிய இப்படி மாத்திப்புட்டியே தலீவா. நீயாவது ஒரு கவித படிச்ச..காதல் வந்துச்சி. மதன்கோபால் என்ன தலீவா பண்ணுனாரு? அவருக்கு எப்படி அந்த தீபா (சங்கீதா) மேல காதல் வந்துச்சி. என்ன தலீவா இது திரைக்கதை?

வீட்ல காத்திருக்குற சுனந்தாவும் (ஓவியா) இந்த்ரா மாமியும் (உஷா உதுப்) சும்மா விடுவாங்களா அந்த மதனகோபால பயலை?

கொஞ்சம் யோசிச்சி பாரு தலீவா, திரைக்கதைய கே.எஸ் ரவிக்குமார்ட்டெ குடுத்துட்டு, வசனத்தை கிரேஸி மோகனையோ அல்லது வேற யாரையாவது எழுதச்சொல்லிட்டு நீ "சப்போர்ட்" மட்டும் பண்ணியிருந்தா எப்படி இருந்துருக்கும் இந்தப் படம் தலீவா? என்னமோ போ.

@@@@@

உனக்கு இன்னாதான் தலீவா வேணும்? இன்னாத்துக்கு தான் இப்புடிப்போராடுறே? நீயே தான் சினிமா; சினிமாதான் நீன்னு தெரியும். அதுல இன்னாதான் உனக்கு வேணும்?

இருக்கிறவரைக்கும் பரீட்சார்த்த முயற்சியா இல்லெ, சினிமாவில மொத்தமா மூழ்கி முத்தெடுக்குறதா, இல்லெ, ஊர் ஒலகமே மெச்சுறமாதிரி ஒரு படத்தைக் கொடுக்குறதா இல்லெ, ஒலக நாயகனா ஆகுறதா இல்லெ ஆஸ்காரு வாங்குறதா, இல்லெ பெரியாருக்கு பேரன்னு பட்டம் வாங்குறதா, இல்லெ, தேசப்பற்று தியாகின்னு பேரு எடுக்குறதா இல்லெ பாரத ரத்னாவா, இல்லெ, சொல்றேன்னு கோச்சுக்காதெ தலீவா, இன்னொரு சின்னப்பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி காதல்கீதல்ன்னு என்சாய் பண்றதா...இன்னாதான் தலீவா வேணும் உனக்கு?

பா’ படத்தையும் ’தாரே ஜமின் பர்’படத்தையும் ரசிக்கிற நம்ம கூட்டம் ’உன்னைப்போல் ஒருவனை’ ஏன் ரசிக்கலைன்னு யோசிச்சியா தலீவா?

லாஜிக்குன்னு ஒரு கருமமும் இல்லாத ’பாஸ் (எ) பாஸ்கரன்’ காமெடியில் கலக்கும்போது நம்ம ’மும்பை எக்ஸ்பிரஸ்’ ஏன் தலீவா டிரெய்லு ஆகணும்?

படம் பாக்கவே லாயக்கில்லாத பயலுகன்னு நாம மண்ணுமுட்டித்தனமா திட்டுற நம்ம ஊர்க்காரப்பயலுக ’களவாணி’யையும், ’பருத்திவீரனையும்’ தூக்கிவெச்சிக் கொண்டாடுறப்போ நம்ம ’விருமாண்டி’ஏன் தலீவா மண்ணக் கவ்வணும்?

பருத்திவீரன்லெ பிரியாமணி கசக்கப்படுறப்போ துடிக்கிற மனசு, விருமாண்டியில அபிராபி தூக்குல தொங்கையில, துடிக்கலயே ஏன் தலீவா?

என்னமோ தெர்யலை தலீவா, கொஞ்சம் 'ரிஸர்ச்' பண்ணிப்பார்க்கச்சொல்ல, ரீசண்டா வந்த படங்கள்ல, நீ, 'நடிப்ப மட்டுமே' குடுத்து இன்னோரு டைரக்டரு கையில் உன்னைக் கொடுத்த படமெல்லாம் நல்லாப்போயிருக்கிறதா தோணுது தலீவா. உதா. இந்தியன், தெனாலி, அவ்வை ஷண்முகி, வசூல்ராஜா, வேட்டையாடு விளையாடு. ஆனா, நீ காலு வெச்சதெல்லாம், அல்லது கூப்பிட்டுக் கொடுத்ததெல்லாம் கொஞ்சம் பிகிலாயிறுச்சி, கண்டுக்கினியா தலீவா. உ.தா.. ஆளவந்தான், விருமாண்டி, மும்பை எக்ஸ்பிரஸ், அன்பே சிவம், காதலா காதலா, பம்மல் கே சம்பந்தம், தசாவதாரம.

தசாவதாரம் மாதிரி பெரிய பரொட்டா ரொட்டியை மனசுல நிக்க வெக்காட்டியும் ருசிச்சு சாப்பிடக்கொடுத்த ஆளு நம்ம கே. எஸ். ரவிக்குமார். அவரு மட்டும் இல்லேனா, நெனச்சி பாக்கமுடியுமா தலீவா, அந்தப் படத்த ரெண்டரை மணி நேரத்துல முடிச்சிப் பாக்குறதே? ஆனா, மன்மதன் அம்புல, அந்த ஆளையே காணோம்?

என்னத்த தலீவா சொல்ல?

வேணாம் தலீவா. இப்படியேப் போனா, பாரதிராஜா, பாலச்சந்தர், பாலுமகேந்திரா போல ”அது ஒரு வசந்த காலமாய்” நிகழ்காலத்தில் போய்விடுவியோன்னு பயமாயிருக்குத் தலீவா.

உனக்குத்தெரியாததுல்லெ தலீவா. ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்லிக்கிறேன் தலீவா. நம்ம 'சிவாஜிராவ் கெய்க்வாட்' மாதிரி இல்லாட்டியும், டைரக்டரு ஷங்கரு மாதிரி, அவரு வழில போறதுதான் இருக்குற மிச்ச சொச்ச காலத்துக்கும் உனக்கு ஏத்ததுன்னு நெனைக்கிறேன் தலீவா.

என்ன வழின்னு தெரியுதா தலீவா? கதையில ஆரம்பிச்சு, கொட்டகையில படம் ஓட்டுறதுவரைக்கும் சினிமாவுல, உனக்கு எல்லாமே முடியும், தெரியும் தலீவா, ஒத்துக்கினம். ஆனா, நாங்க உங்கிட்டே எதை ரசிக்கிறோமோ, அதை மட்டும் சினிமாவில செஞ்சு, வேற எதிலேயும் 'இன்வால்வ்' ஆகாமே, கொஞ்சம் 'துட்டு' பாத்துக்கினு, ரெண்டு பொடிப்பசங்கள கூப்பிட்டு, உன்பேர்ல, நாலு நல்லபடம் குடுக்கச்சொல்லு தலீவா. அப்போத்தான் நீ நிம்மதியோடும் நாட்டத்தோடும் தொடர்ந்து வேலை பாக்க முடியும் தலீவா. அதை விட்டுப்புட்டு, அது பண்றேன் இது பண்றேன்னு கழுதை கணக்கா திரிஞ்சியனா, என் வாயாலே நான் சொல்லமாட்டேன் தலீவா. மன்னிச்சுரு.

கொஞ்சம் ஞாபகம் வெச்சுக்க தலீவா. குசேலனையும் பாபாவையும் கூட கவுத்த பயலுக நம்ம பயலுக. சூப்பரு ஸ்டாருன்னுல்லாம் படத்த ஓட்டமாட்டாய்ங்க. ஆனா, புதுசா வந்த பயலுகளக் கூட (மகேஷ் -அங்காடித்தெரு, விதார்த்-மைனா) வெற்றிப்பயலுகளா ஆக்கிப்புடுறானுக தலீவா.

இனிமேலும் ரசிகப்பயலுகளை, ரசிக்கத்தெரியாத மண்ணுமுட்டிகள்ன்னு மட்டம் தட்டுறதுல ஞாயம் இல்லை தலீவா.

ரொம்ப காலம் உன்னோட தோஸ்த்தா, ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்லிக்கிறேன் தலீவா, உனக்கு என்னதான் வேணும்ன்னு நீயே உன்னை "ரீ-டெஸ்ட்" பண்ணிக்கவேண்டிய நேரம் வந்தருச்சி தலீவா.

இல்லாட்டி கத கந்தல் தான்.

சாரி தலீவா, உனக்குப் பிடிக்காதுதான், இருந்தாலும் உன்னை மறுத்துப்பேசுனதா நீ நினைச்சா என்னை மன்னிச்சுக்க தலீவா.

இப்படிக்கு
காமெடிக்கும் கமலஹாசனுக்கும் தாசன்,

கமல் குமார்.


தங்கமீன் ஜனவரி 2011 இதழில் எழுதியது.

Search This Blog