Tuesday, May 24, 2005

உங்களுக்கு ஒரு வேண்டுகோள்- கமலஹாசனிடமிருந்து(ம்)!

சன் டிவியின் 'மே தின' சிறப்பு நிகழ்ச்சியில் கமல் அவர்கள் பேசியதைப் பார்த்திருப்பீர்கள்! இரண்டு வாரத்திற்கு முன் வந்த வந்த கல்கி பத்திரிகையில் அவரது பேட்டியையும் படித்திருப்பீர்கள்! இந்த இரண்டிலிருந்து மட்டுமல்ல; அண்மையில் அவர் கொடுத்த தெலுங்கு பத்திரிகைப் பேட்டியிலும் கூட, கமல் என்ற ஒரு கலைஞனின் மனதிற்குள்ளேயான தொழிலியல் நடைமுறை இயலாமைகளும் அவனது வாழ்வு மீதான அடக்குமுறைகளின் வீரியமும் வருத்தத்தின் விழிகளில் தொக்கி நின்றதை நம்மால் கண்டிருக்க முடியும். 'ஒரு சாதிக்கும் கலைஞனுக்கு சமுதாயத்தின் மரியாதைப் பங்களிப்பு இறப்புக்குப் பின் தானா இன்னும்' என்று இன்றும் வருத்தப்படவைக்கின்றன இவைகள்.

காந்தியைச் சுடச்சொல்லி ஆளனுப்பி காரியம் முடிந்தபின் அவருக்கு ஆங்காங்கு ஒரு சிலை வைத்துவிட்டோம். 'பாரதி' என்ற 'பா பைத்தியக்காரனுக்கு அன்று சாப்பாடு போடக்கூட விரும்பாமல் இறுதிக் காரியத்திலும் கூட இணைந்துகொள்ள அருவருத்து ஒதுங்கி நின்றுவிட்டு இன்று அவனைத் 'தேசியக்கவி' ஆக்கிவிட்டோம். அது யாரப்பா புதுமைப்பித்தனா? ரேஷன் கார்டு வைத்திருக்கிறாயா? இது யார் வலம்புரி ஜானா? உடம்புக்கு சரியில்லையின்னு ஆஸ்பத்திரிக்கி வரியேப்பா, கையில காசு வெச்சுருக்கியா? ஏய் தம்பி, குடும்பம் குட்டியெல்லாத்தையும் விட்டுபுட்டு வெள்ளக்காரனுக்கு குண்டு வெச்சி தூக்குல தொங்குறீயே? தேவையாவெ உனக்கு இது? பகத்சிங்காம் பகத்சிங்கு, பைத்தியசிங்கா நீ?

ஏம்பா முக்கோண வெண்தாடி நாதா, செவாலியேவெல்லாம் வாங்கியிருக்கியாமே, ஹிந்தி தெரியுமா உனக்கு? அது யாருப்பா அந்தப்பக்கம் மதிய உணவுத்திட்ட நாயகனா? வெட்டி வேலையப்பா உன்னது!

உங்களது கரங்கள் பெரியதாய் என்ன செய்துவிடப்போகின்றன? அடிக்கடி முதுகில் குத்தும் அல்லது ஒரே ஒருமுறை ஒருத்தருக்கு என, பல மலர் வளையங்கள் வைக்கும். உங்களது இதழ் எப்போது திறந்து மூடப்போகின்றன? மலர் வளையம் வைத்த கையோடு மைக் பிடிக்கும் உங்களுக்கு, இரண்டே இரண்டு வார்த்தைகள் புகழ்ந்து பேசுவதற்கு திறந்து மூடும்.

ஆயிரம் மலர் வளையங்களை விட ஒரே ஒரு மலர்மாலையும் மனம் நிறைந்த பாராட்டும் சாதிக்கக்கூடியவை எத்தனை எத்தனை நண்பர்களே!

இறந்த பின் மட்டும் வெளியில் காட்டுவதற்கென உங்கள் கைகளும் வாயும் இருந்தால் இனிமேல் அவை இரண்டும், அவற்றுக்கு(ம்) பயன்படாமல் போகட்டும்!

கல்கி பேட்டியிலிருந்து....

"தனிப்பட்ட முறையில் பிராமணர்கள் பால் எந்தவித காழ்ப்பும் பெரியாருக்கு இல்லை"

"பகுத்தறிவுப்பாதையை பெரியார் மட்டும் தான் கொண்டு வரவேண்டுமென்பதில்லை. சுபிட்சமே கொண்டு வரும்"

"மேஜை மீது கிடக்கிற தண்ணீரை தள்ளிவிட்டால் மற்றொரு பக்கம் போய்விடும். அப்படித்தான் மும்பை முழுவதுமே இப்போது தாராவியாகிவிட்டது"

"ஆபத்தின் விளிம்புவரை சென்று எட்டிப்பார்க்கும் ஒரு முனைப்பு எனக்கு எப்போதும் உண்டு."

"வர்த்தகக் கோட்பாடுகளிலிருந்து தமிழ் சினிமாவின் திரைக்கதையை மீட்டெடுக்கவில்லை. சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டெஸ்ட்! அதில் கொஞ்சம் தீவிரம் இருக்கத்தான் செய்யும்; கொஞ்சம் ரத்தம் கசியத்தான் செய்யும். நோ பெயின் நோ கெயின்! புத்தர் சொன்னதாக எடுத்துக்கொண்டாலும் சரி; ஆர்நால்டு சொன்னாலும் சரி. வலி இல்லாமல் வாழ்க்கை இல்லை! "

"இது ஒரு தொழிலாக வியாபாரமாக இருக்கும்போது, புரட்சிகளில் ஈடுபடும் தியாகம் என்னிடமில்லை."

"நேர்மை ஜெயிக்குமா என்று தெரியாது. ஆனால் நியாயம் கண்டிப்பாக உலகத்துக்குப் புரியும். நேர்மை புரிய கொஞ்சம் நேரம் ஆகும். நேர்மமயானவனா இல்லையா என்பதை அவன் வாழ்ந்துதான் காட்டவேண்டும். அது ஒரு பெரிய கொடுமை!"

"மாற்றம் வேண்டும், மாற்றம் வேண்டும் என்று கேட்காதே..அந்த மாற்றமாக நீயே மாறி விடு!
என்பார் காந்தி. நான் காந்தியின் மிகப்பெரிய ரசிகன். கொடுமை என்னவென்றால், காந்தியைப் பற்றி நான் தப்பாக படம் எடுத்தேன் என்கிறார்கள். காந்தியின் உருவத்தைச் சிதைக்கும் படமா ஹேராம்?"

"தமிழர்கள் எனக்கு கைதட்டாவிட்டாலும் பரவாயில்லை. இப்படி எதிர்பாராத நேரத்தில் அதுவும் பின்புரத்திலிருந்து பொறடியில் தட்டாமல் இருக்கலாம் இல்லையா? முதுகில் குத்துவதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?"

"அழும் கோழைத்தனம் எனக்கு இல்லை. ஆனால் சிரிக்கும் பக்குவத்தை மட்டும் நான் இழந்துவிட்டேன் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்'

"கலைஞன் என்பவன் சாந்தமான மனநிலையில் இருந்துகொண்டு செயல்படவேண்டும். வேலை செய்கிற உச்சகட்டத்தில் என்னைத் தொந்தரவு பண்ணிவிட்டு, ஓய்வு பெறும்போது நீங்கள் பாராட்டுவது எனக்கு வேண்டாம்."

கடைசி வரிகள் நமக்கு மிகவும் முக்கியம் நண்பர்களே! இனிமேலும் இறந்த காலத்திற்காய் ஏங்காதீர்! நிகழ்காலத்தின் சக சாதனையளர்களை போற்றுங்கள், மதியுங்கள்!

எம்.கே.குமார்

நன்றி: கல்கி!

Wednesday, May 11, 2005

சொல்லாடல்!

காலங்காலமா
கையிடுக்குத் துண்டு
செட்டியாரு
கலியாணத்து
ரெண்டாம் பந்தில
உக்காந்தவனை
சொக்கா பிடிச்சி எழுப்பிவிட்டது.
வெசனத்துல
போதையில
வண்ணான் முதல்
வாத்தியார் வரை
ஊர்லெ எல்லார்ட்டேயும்
படுத்து வருவாளுக
அவனைச் சுமந்தவளும்
அவனதைச் சுமந்தவளும்.
சாராயத்து மானியத்துல
அவென்
பொண்டாட்டி புட்டக்கதை
பொண்ணோட மாருக்கதை
எல்லாஞ் சொல்ல
ரசிச்சிப் போகும்
என்னோட சேந்த செட்டு.
முன்னடியாஞ் சாமிக்கு
மொதப்பூசாரி அவந்தான்
சாமி வர சொணக்கமானா
சாராய மீதி
சம்சார மீதி
சகவாச மீதின்னு
கேலிக்கி ஆளாவான்
சாமிக்கி முன்னாடி.
அத்தனையும் மனசுல வெச்சி
எதிர்ல நாம வரும்போது
எப்படியிருக்கீங்கய்யான்னு கேப்பான்
அனுசரனையா வெட்டியான்,
எப்படா அங்கெ வருவேன்னு
வாய்க்குள்ளே மட்டும் கேட்டு!

வெண்ணிலாப்ரியன்.

நன்றி: அமுதசுரபி மே 2005

Tuesday, May 10, 2005

நெடு பயணத்தில் ஓர்நாள்-குறும்பட இயக்குனர் அஜீவன்!

அஜீவனுக்கும் ஊடகத்திற்குமான புரிதல் பதின்ம வயதினிலே ஆரம்பித்திருக்கிறது. இலங்கையில் பிறந்து, இயந்திர பட்டப்படிப்பு பயின்று, ஊடகம் சுழலும் வாழ்வில் மனம் நுழைந்து கிடந்தாலும் சிங்கப்பூருக்கு வந்து சில ஆண்டுகள் படிப்பு சார்ந்த வேதியியல் தொழிற்நுட்பத்தில் பிழைத்து, பிறகு சில ஆண்டுகள் நிரந்தரமாக தன்னை தனக்குப் பிடித்த வேலைக்குள் இழைத்திருக்கிறார். சீன முதலாளியிடம் வேலை செய்ய, நேர்மை, நம்பிக்கை மற்றும் திறமை ஆகியவற்றை அதிகமாகக் கொண்டிருக்கவேண்டியதன் அவசியத்தைச் சொல்லும் அவர், தனது பழைய முதலாளி 14 வருடங்கள் கழிந்தும் இன்னும் தன் மேல் கொண்டிருக்கும் அன்புக்கு அவற்றை சாட்சியாக்குகிறார். அஜீவனின் அன்றைய வழிகாட்டுதல் அந்த சீனரின் இன்றைய மாபெரும் வெற்றி!
Image hosted by Photobucket.com

'கல்யாணத்தில் வீடியோ எடுப்பதற்கும் விதவிதமான உடைகளில் மரத்தைச் சுற்றி வந்து காதல் புரியும் கலைக்கும் எனக்கும் வெகு தூரம். அதற்கெல்லாம் அப்பால் மனித உணர்வுகளுக்கு மத்தியில் நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.' என்கிறார். 'அரசியல் போராட்டங்களோ அது சார்ந்த சூழ்நிலைகளோ இந்தக் கலைஞனுக்கு அவசியமில்லை. அவைகளுக்கு மத்தியில் எனக்கு வேலையில்லை. எனது தலைவிதியை சரியாக நான் வைத்துக்கொண்டால் அதுவே எனது வாழ்தல். நான்கு பேரைத் திருத்துவதற்கோ நாட்டைத்திருத்துவதற்கோ என்னால் முடியாது. அது எனது வேலையும் இல்லை. தான் வாழும் குறும்பட உலகிலும் அத்தகைய சூழ்நிலை நிலவுவது எனக்குப்பிடிக்காது.' கேமிராவின் பார்வை நீண்ட சாலையைத் தேடுகிறது.

'லண்டன் குறும்பட விழாவுக்கு' நடுவராய் வந்த திரு. தங்கர்பச்சானை மிகவும் இகழ்கிறார் அஜீவன். அவருக்கு இப்படங்களைப் பற்றி என்ன தெரியும் என்றும் கேட்கிறார். 'எதுவும் தெரியாமல் சிறந்ததைத் தேர்ந்தெடுத்த அவரது நடுநிலைமையின் பின்னே ஏதோ நிழலாடுகிறது' என்கிறார். நிழல் நிஜமாகி இப்போது அது மறைந்ததும் எல்லோருக்கும் தெரிந்துவிட்டது என்கிறார் நிஜமான வேதனையுடன்.

லீலா மணிமேகலையின் 'கனவுப்பட்டறை'க்கும் தனக்கும் நிகழ்ந்த பிரச்சனைகள் எந்தவொரு அப்பாவிக்கும் நேரக்கூடாது என்கிறார். அது பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது என்பது பற்றியும் தான் எப்படி அங்கே புறக்கணிக்கப்பட்டேன் என்பதையும் வருத்தமாகச் சொல்கிறார். இலக்கியத்தில் 'ஒற்றையிலை(யென)', வியாபாரத்தில் இவ்வளவு படுத்துமா என்று யோசிக்க நேருகிறது.

குறும்படம் மட்டுமல்ல, சினிமா உலகிலும் கொடிகட்டிப்பறக்கும் பெண்போகங்களுக்கும் அது தொடர்பான விஷயங்களுக்கும் தனது கடுமையான கோபத்தை முன் வைக்கிறார். 'பதினைந்து டாலருக்கு' தாராளமாய் கிடைக்கும் 'வெளிச்சமாச்சாரம்' ஒன்றை, இங்கே வந்து ஏன் தேடுகிறார்கள் என்று விசனப்படுகிறார். தயவுசெய்து அதற்கெல்லாம் இங்கு வராதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறார். கேமராவிற்கும் பெண்போகத்திற்கும் இருக்கும் தவறான சிந்தனைகள் களையப்படவேண்டும் என்கிறார்.

சிங்கப்பூரில் தமிழர்களின் வாழ்வியலில் நடைபெறும் சமூகச்சீரழிவுகளை குறும்படமாக எடுத்து வெளியிடலாமே என்ற தனது நண்பரின் கோரிக்கையைத் திட்டவட்டமாக நிராகரிக்கிறார். 'சமூகச்சீரழிவுகள் எங்குதான் இல்லை? அவற்றை மட்டும் காண்பிப்பது அநாகரிகம். மறுமுறை நான் சிங்கப்பூருக்கு வரமுடியுமா? எனது உலகில், போராட்டத்தின் உக்கிரமோ சமூகச்சீரழிவுகள் அல்லது அதற்கு என் போதனைகள் ஆகியனவெல்லாம் இல்லவே இல்லை. இது ஒருவரின் அல்லது இருவரின் தனிமன விதிகளின் விளையாட்டுக்களம்' என்கிறார்.

'இலங்கையிலிருந்து வந்த ஆண்கள் என்றாலே ஓரின உறவுக்காரர்கள் என்று எண்ணும் சுவிஸ், அங்கு பிழைக்க வரும் இலங்கை ஆடவர்கள், அல்லது அவர்கள் துரத்தும் பெண்களின் பாடுகள், அல்லது வெள்ளைக்காரன் வந்து உடைந்த வீட்டையும் பிணங்களையும் அப்புறப்படுத்த அவற்றை வேடிக்கை பார்க்கும் சுனாமியின் உள்ளூர்வாசிகள்- இவைகளுக்குப்பின்னே சில இதயங்கள் கிடந்து குமுறலாம். அவைகள்தாம் எனது களம்' என்கிறார். இலங்கையில் சுனாமியின் கோரத்தை டாகுமெண்டரியாக்கியும் குறும்படமாக்கியும் அதனுடன் 'என் ஜி ஓ'க்களோடு இணைந்து சுவிஸிலிருந்து வந்து நிவாரணப்பணிகளில் பங்குகொண்டதையும் குறிப்பிடுகிறார்.

'சிங்களம் வழியில் படித்து வந்தமையால் சிங்கப்பூரில்தான், தமிழ் எழுதப் படிக்க கற்றுக்கொண்டேன். அதில் எனக்குப் புலமை கிடையாது. சிங்களம் நன்றாகப் பேசுவேன். விமான நிலையத்தில், 'தமிழ்ச்செல்வன்' என்ற எனது பெயரைப் படித்துவிட்டு நிமிர்ந்து அவர் பார்க்கும்பொழுது நான் சிங்களம் பேசுவது இனிமையாய் இருக்கிறது. இலங்கையில் பிறந்த அனைவருக்கும் சிங்களம் தெரிந்திருப்பது நல்லது' என்கிறார்.

'ஜெர்மானியர்களுடன் வேலை செய்யும் அனுபவம் அலாதியானது. மோதல் இல்லை; ஈகோ இருக்காது. எனக்குத்தெரியாததை அவர்களிடம் கேட்கலாம்; அவர்களுக்குத்தெரியாததை நம்மிடம் கேட்பார்கள். பரஸ்பரம் கருத்துப்பரிமாற்றம் இருக்கும். ஏராளமான ஜெர்மன் படங்களுக்கு ஒளிப்பதிவு, எடிட்டிங், கோ-டைரக்ஷன் செய்திருக்கும்/செய்யும் ரகசியம் அதுதான்! ஒரு சின்ன விஷயத்திற்கு ஆயிரம் கேள்விகளும் விவாதங்களும் செய்யும் நம்மாட்கள் சிலருடன் எனக்கு எப்போதும் ஒத்துவராது. பெரியவர்களை விட மாணவர்களையும் இளைஞர்களையும் என்னிடம் விட்டால் நன்றாகச் செயல்படமுடியும்' என்று தனது ஆதங்கத்தையும் விருப்பத்தையும் வெளிப்படுத்துகிறார்.

கமலுடன் வேலை செய்த அனுபவங்கள், கன்னட படத்தில் பணிபுரிந்தது, திரையுல தனது நண்பர்கள், ஆபாவாணன் டீமில் வேலை செய்த தனது சிநேகிதர்கள் பற்றியெல்லாம் நம்மிடம் அளவளாகிறார். தான் நிறைய ஜெர்மன் படங்களில் வில்லனாக நடித்திருப்பதையும் மாணவர்களின் குறும்பட இயக்கத்தில் தனது ஈடுபாட்டையும், சுவிஸ் பட கழகத்தில் தனது பங்கு மற்றும் ஜூரியாக தான் ஆற்றிவரும் பணியைப் பற்றியும் குறிப்பிடுகிறார்.

ஆங்கிலத்திலும் ஜெர்மன்மொழியிலும், தான் இப்போது குறும்படங்கள் தயார் செய்வது பற்றியும் சிங்களத்தில் ஒரு படம் செய்து அதைத் தமிழில் மொழிமாற்றம் செய்வது குறித்தும் பேசுகிறார். 'தமிழில் அல்லது தமிழ்நாட்டினருக்கென படம் செய்வது பெரியவிஷயமா என்ன' என்று கேட்கிறார். (ஹி..ஹி, மன்னிச்சுக்குங்க மானஸஜென்!)
'சிங்கப்பூரில் குறும்படங்கள் தயாரிப்பது தொடர்பாக, என்னால் எல்லாவித உதவிகளையும் வழங்கமுடியும்' என்கிறார் ஆர்வமாக. 'கதைகளைத் தயார் செய்துகொண்டு, திரைக்கதையை எனக்கு அனுப்பி வையுங்கள், என்னால் முடிந்த உதவிகளை உங்களுக்குச் செய்கிறேன், கதைகளில் நிறைய பாத்திரங்கள் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்' என்கிறார். சிங்கப்பூரில், 1981 வாக்கில், சிங்கப்பூர் பிராட்கேஸ்டிங் கார்ப்பொரேஷனிலும் (SBC), தமிழ் முரசில் சினிமா செய்திகள் எழுதியதையும், வானொலியில் பங்குபெற்றதையும் இனிமையாகப் பகிர்ந்துகொள்கிறார்.

சிங்கப்பூரில் அவருக்கு நடிகர்-நடிகைகள் தேவை எனச்சொன்னார்! அப்படியே மென்பொருள் வல்லுனராய் இன்னொரு பெண்ணும் பார்க்கிறாராம்! முன்னது 'தான் இயக்க', பின்னது 'தன்னை இயக்க'வாம்! அட்டகாசச் சிரிப்புடன் சொல்கிறார் பிரம்மச்சாரியான அஜீவன் தமிழ்ச்செல்வன்!

(நேரிடையாக உரையாடியதன் ஞாபகத்திலிருந்து எழுதியவை. கருத்துகளோ வார்த்தைகளோ மாறியிருக்கலாம்!)

எம்.கே.குமார்

Search This Blog