Tuesday, July 03, 2012

கோடியக்கரை & வேதாரண்யம் - தொட்டுவிடும் தூரத்தில் தொலையும் அடையாளம்

எனது நம்பிக்கையை கிஞ்சித்தும் பொய்யாக்கவில்லை இந்திய அரசியல்வாதிகள். எந்த நாட்டுக்குச்சென்றாலும் எத்தனையோ முறை அடடா, இதைவிட அருமையான படகுப்பயணம் ஒன்று தமிழநாட்டில் நடத்தாலாமே, இடம் இருக்கிறதே, இதைவிட அருமையான ஒரு சிற்றாறு ஒன்றை திருநெல்வேலி நவ திருப்பதிப்பக்கம் பார்த்திருக்கிறோமோ, இதைவிட அருமையான கடற்கரை விருந்தை நமது ஊர் கடற்கரையில் நடத்தலாமே என்று ஏங்கிய தருணங்கள் எத்தனையோ முழுகிப்போய்விட்டன. சரி, நவீன வளர்ச்சியால் பொருளாதார மேம்பாட்டால் இதையாவது உருப்படியாய் வைத்திருப்பார்களோ என்ற நப்பாசையிருந்தாலும் அவர்களின் சுற்றுச்சூழல் குறித்த அறிவின் மீதும் அக்கறையின் மீதும் கொண்ட நம்பிக்கையோடு சென்ற எனக்கு எமது ஆட்சியாளர்கள் எப்போதும் எமது மக்களின் நம்பிக்கையைக் குலைக்கமாட்டார்கள் எனக் காட்டிவிட்டார்கள்.

அண்மையில் ஊருக்கு வந்தபோது, சொந்த அலுவல் காரணமாய் திருத்துறைப்பூண்டி பக்கம் செல்ல வேண்டிவந்தது. வேளாங்கண்ணிக்கு செல்லும்போது அங்கு செல்வது வழக்கம். அதுவும் ஏறக்குறைய பத்து பதினைந்து வருடங்களாகிவிட்டது. திருச்சியிலிருந்து தஞ்சாவூர், மன்னார்குடி வழியே திருத்துறைப்பூண்டி பயணம். ஏறக்குறைய நான்கு மணிநேரப்பயணத்தில் இரண்டு நண்பர்களின் ஞாபகம் தவிர்க்கமுடியாமல் வந்தது. ஒருவர் வடுவூர் குமார்
. சிங்கப்பூரில் வசிக்கும் அவர் பெயரில் இருக்கும் வடுவூர் வழியே பஸ் சென்றதும் "ஓ, இதுதான் அவர் ஊரா" எனக் கேட்டுக்கொண்டேன். (வடுவூர் குமார் இதைப் படித்தால், அது வேறு ஒரு வடுவூர் என்று சொல்லாமல் இருந்தால் சரி). இன்னொருவர் நண்பர் சுப்புரத்தினம். திருத்துறைப்பூண்டியை அடுத்த ஆயக்காரன்புலத்தைச் சேர்ந்தவர். தூத்துக்குடியில் ஒன்றாக வேலை செய்தோம். இப்போது மத்தியகிழக்கு நாடு ஒன்றில் பணிபுரிகிறார். 'சிங்கப்பூரை விட உலகம் பெரியது; வெளியில் வாருங்கள் குமார்' என்று அடிக்கடி ஆஃப்லைனில் செய்தி கொடுத்துவிட்டுசெல்வார்.

திருத்துறைப்பூண்டி வரை வந்துவிட்டீர்கள், அருகிலிருக்கும் வேதாரண்யமும் கோடியக்கரையும் சென்றுவிட்டுச் செல்லலாமே; பிறகு எப்போது பார்க்கமுடியும் அவைகளை' என்று ஏதோ மாயமாகப்போகும் பொருளைப்பற்றி பேசுவது போன்ற நண்பரின் வேண்டுகோளை அரைகுறை மனதாய் ஏற்றேன். வேதாரண்யம் என்றதும் உப்புச்சத்தியாகிரகம் செய்த இடம் என்பது மட்டுமே ஞாபகம் வருகிறது. அதேபோல கோடியக்கரை என்றதும் வெகு அருகிலே யாழ்ப்பாணம் என்பதும் கோடியக்கரை சண்முகம் அவர்களும் ஞாபகத்திற்கு வருகிறார்கள், கூட சில தவிர்க்க முடியாத சம்பவங்களும்.

திருத்துறைப்பூண்டியிலிருந்து வேதாரண்யம் எவ்வளவு தூரம் என்ற கேள்விக்கு அட, பத்து நிமிஷந்தான் என்றதும் அங்கிருந்து கோடிக்கரை, அட, அங்கிருந்து கோடிக்கரை நடக்கும் தூரம்தான் என்பதும் தமிழர்களின் தூரத்து அளவிடும் முறையைக் காட்டுகின்றன என்றுதான் சொல்லவேண்டும். வேதாரண்யம் 31கி.மீ என்பதும் அங்கிருந்து கோடிக்கரை 14கி.கீ என்பதும் அங்கு செல்லும்போதுதான் தெரிந்தது.

(திருமறைக்காடு) வேதாரண்யம் கோயில் நான்கு வீதிகளுடன் அழகாய் இருக்கிறது. உள்ளே இருக்கும் வேதாரண்யீசுவரர் மாமன்னராம் கலைஞரின் ஆட்சியிலும் சந்தோசமாய் இருப்பாரென நம்புகிறேன். பஸ் நிலையத்திற்கு முந்தைய சாலை 'வழக்கம்போல்' இருக்கிறது.

பார்ப்பதற்கு வேறென்ன முக்கியமான இடங்கள் வேதாரண்யத்தில், என்ற கேள்விக்கு அம்பாசமுத்திரம் அம்பானி பார்க்கலாம், தியேட்டர் இருக்கிறது, என்றவரை நாம் கோபிக்கக்கூடாது. அதுவும் தற்கால தமிழனின் அடையாளம் தான் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

கோடியக்கரையின் உள்ளே நுழையும்போதே இடதுபுறத்தில் கையைக் காட்டிய நண்பர், 'உள்ளேதான் சண்முகம் வீடு' என்றார். பரவாயில்லை, கேட்காமலேயே சொல்லிவிட்டார். கோடியக்கரை (கள்ளிமேடு முனையாம், Point Calimere) சுனாமிக்கு முன்னாடியும் இப்படித்தான் இருந்ததா என்று கேட்டேன். சுனாமியடித்த தடம் இன்னும் மாறாதது போலவே இன்றும் இருக்கிறது. சாதாரண ஓட்டுவீடுகளும் ஆங்காங்கு சில வெளிநாட்டு ஊழியத்தின் பலனாய் முளைத்திருக்கும் கான்கிரீட் வீடுகளுக்கும் (கலைஞரும், ஈவிகேஎஸ்இளங்கோவனும் கோபித்துக்கொள்ளக்கூடாது, இந்திரா காந்தி அல்லது கலைஞர் கான்கிரீட் வீடு திட்டத்தால் வந்ததா இவை என எனக்குத்தெரியவில்லை; வீட்டின் உரிமையாளர்கள் இந்த திட்டத்தின் ஒப்பந்தக்காரர்களாயும் இருக்கலாம்) மத்தியில் ஊருக்கே கட்டியம் கூறுவது போல ஒரு மூன்றுமாடிக்கட்டிடம். ஆச்சரியமாய்ப் பார்த்தேன். இந்திய சுங்கத்துறை! அப்படிப்போடு. என்னவாம் என்றேன். 'எல்டிடியீ' நிறைய கடத்துறாங்கன்னு கட்டுனதாம்' என்றார் நண்பர். வயிறு எரிகிறது.

சரி, கோடியக்கரை கடற்கரையைப் பார்க்கலாமா? பொன்னியின் செல்வனில் ஏதோ இதுபற்றி படித்ததாய் ஞாபகம் என்றேன். பூங்குழலி எங்களை மன்னித்துவிடு. அயர்ந்து படுத்திருக்கும் குடியானவனைப்போல நாலைந்து சிறு படகுகள் அலையடியில் கிடக்கின்றன. தமிழ்நாட்டின் வரைபடத்தில் குறுக்கு வெட்டாய் கிழக்கிலிருந்து மேற்காய் திரும்பும் ஒரு துறைமுகம் கிடைக்கும் கோலத்தைப் பார்த்தால் என்ன சொல்வது?




அடுத்தது கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம். 1967ல் உருவாக்கப்பட்டதாம் இது. உலர்பசுமைக் காடுகளும், மாங்குரோவ் காடுகளும், வெட்லாண்ட்ஸ் எனச்சொல்லப்படும் சதுப்புநிலப்பகுதிகளையும் உள்ளடக்கியதாம் இது. மொத்தம் 377 சதுரகிலோமிட்டர்களாம். (தகவல்கள் வனவிலங்கு சரணாலயத்தில் கிடைத்தவை அல்ல! இணையம்)

பொது நுழைவாயிலைப் பூட்டிவைத்திருக்கிறார்கள். வண்டி வரும்போது நுழைவுச்சீட்டு கொடுத்துவிட்டு திறந்துவிடுகிறார்கள். நுழைவுச்சீட்டு வழங்குமிடத்துக்கும் நுழைவாயிலுக்கும் 100 மீட்டர் தூரம். நாம் போய் காத்து இருக்கவேண்டும். எப்போதாவது வரும் வண்டிக்கு ஏன் நுழைவாயிலேயே காத்து இருக்க்வேண்டும் என்பதால் அங்கு போய் விடுவார்களென நினைக்கிறேன். அதிகாரி வந்து நேரத்தைக் குறித்துக்கொண்டு உள்ளே அனுப்புவார். திரும்பி வரும்போது சமைத்த அல்லது பச்சை மான்கறி ஏதும் இருக்கிறதா என எப்போதும் ஆராய்வார்களாம். திரும்பி வரும் நேரத்தைப் பொறுத்ததாம் அது.

வெட்லாண்ஸ் பகுதியில் பாதிக் காட்டை அழித்துவிட்டார்களென நினைக்கிறேன். வரண்டு கிடைக்கிறது மொத்தப்பகுதியும். மான்கள் பொட்டை வெயிலிலும் ஆங்காங்கு நடமாடுகின்றன. இக்காலத்தில், அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் மீறி, மான்களை இன்னும் அங்கு பார்க்க நேருவது சந்தோசமாக இருக்கிறது. குதிரைகள் எருதுகளும் உலவுகின்றன. குதிரைகள் காட்டுக்குதிரைகளா இல்லை வளர்ப்புக்குதிரைகளா எனத்தெரியவில்லை. ஏனெனில் ராமர் பாதம் அருகில் உள்ள உப்பளங்களில் குதிரைகளை சிலர் கட்டிவைத்திருந்தார்கள்.

தண்ணீர்த்தொட்டி வைத்திருக்கிறார்கள். அவைகள் கிடக்கும் அவலத்தைப் பாருங்கள்.




திரும்பி வரும்போது சாப்பிடலாமா எனக்கேட்டேன். சூப்பர் மான்கறிபிரியாணிக் கடை ஒன்று இருக்கிறது போகலாமா என்றார் நண்பர். ம்ஹ்ஹூம், வேண்டாம், 'அசைவம்' சாப்பிட்டு சாப்பிட்டு நாக்குச்செத்துக்கிடக்கிறது, நல்ல சைவ ஹோட்டல் ஏதாவது என்றேன் நான்.

வேதாரண்யம் பேருந்து நிலையம் அருகில், இடதுபுறத்தில் திரும்பி ஒரு மெஸ்ஸுக்கு அழைத்துசென்றார்.

கீரை இங்கு நன்றாயிருக்கும் என்பதால் இவரை இங்கு கூட்டிவந்தேன், கீரை இல்லையா இன்று என்று கேட்டார் நண்பர் அந்த மெஸ் உரிமையாளரிடம். கீரை இப்போதெல்லாம் அவ்வளவாய் கிடைப்பதில்லை. அதுதான் கத்தரிக்காய் கூட்டு என்றார் அவர். ம்ம், அடுத்து "கீரை விவசாயியின் காவியம்" என்று ஒன்று எழுதலாம் என இருக்கிறேன்.


பிகு: கோடிக்கரையா அல்லது கோடியக்கரையா? எனக்கே குழப்பம். அதுதாம் இரண்டையும் ஆங்காங்கு பயன்படுத்தியிருக்கிறேன். அறிவிப்புப்பலகைகள், பேருந்து அனைத்திலும் இரண்டையும் பார்த்ததாய் ஞாபகம்.


அன்பன்
எம்.கே.குமார்

ஜெயமோகன மதன காவியம் – 'கொஞ்சம் பழசு!'

ஜெயமோகன்  படலம்

ஜெயமோகன் எழுதிய ’கற்பழித்ததா இந்திய ராணுவம்?’ என்ற குறிப்பு அவல அதிர்ச்சியலைகளை உலகுக்கு  அறிமுகப்படுத்தியிருக்கிறது. உண்மையில், அக்குறிப்பை விட,  அதற்கு பதில் எழுதிய கவிஞர் திருமாவளவனுக்கு, ஜெயமோகன் எழுதிய புதிய பதிலில்தான் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அடுக்கி நிற்கிறது.

காந்தி, கலைஞர், எம்ஜிஆர், சிவாஜி, சுந்தர ராமசாமி, சுஜாதா என்ற ’மக்களின் மன மல்டிபிளெக்ஸ் கார்டுகளை’ பொதுவெளியில் வைத்து அகம்-புறம் என அநாவசிய நாகரிகம் பார்க்காமல் பிரித்துமேய்ந்து பிம்பம் களைப்பதை ’மாலையில் ஒரு மல்லிக் காஃபி’ குடிப்பதைப்போல இலகுவாய்ச் செய்துவிட்டுப்போனாலும் ஏதாவது ஒருவரியில் இத்துனூண்டு அறவியல் இருக்கும் எப்போதும், அட்லீஸ்ட், முடித்துவைக்கும்போதாவது.

ஆனால், நேற்று சாப்பிட்டது தயிர்சாதமா இல்லை புளிச்சாதமா என்பது போல ஒரு குறிப்பை எழுதிவிட்டு சாதாரணமாய் எழுந்துபோய்விட்டார்.

கலைஞர் டெசோவை கையில் எடுத்ததும் ஜெயமோகனும் ஈழத்தை எடுத்துவிட்டார் என நினைக்கிறேன்.

பொதுவெளியில் பேசும்போது கவனமாக இருப்பார் ஜெயமோகன். அதுவும் இதுபோன்ற வரலாற்றுத் திரித்தல்களின் அடையாளத்தைக் கவனமாக முன்வைப்பார். பாவம், தூக்கத்தில் எழுந்துவந்து அட்டைக்கத்தியுடன் போரிட்டதைப்போல பின்வாங்குகிறார், இதில்.

’தனது நெடுநாள் வாசகர்’ சொல்வதற்காகவே, ’இந்திய ராணுவம் கற்பழிக்கவில்லை’ என்று அதை முன்மொழிய முயலும் போது அவரது அறவியல் நேர்மை நடுங்கவைக்கிறது. தூக்கத்திலேயே எழுதிவிட்டாரோ என்றும் யோசிக்கவைக்கிறது. செத்தால்தான் தெரியும் சாவு என்பது என்ன வாழ்வைய்யா?

நல்லவேளை, ஷோபாசக்தியும் திருமாவளவனும் பெண்களாய் பிறந்து வன்கலவியில் சிக்கி சாவாது போய்விட்டார்கள்; தாங்களே சாட்சி என்று நேரே வந்து நின்று பேச அவர்களும் இல்லையெனில் இவ்விவாதம் என்ன ஆகியிருக்குமோ என்று அஞ்சவைக்கிறது.

தான் மிகவும் நேசிக்கும் படைப்புத்திறன் கொண்ட இருவர், சிறுகுறிப்புகளுடன் ’நடமாடும் சாட்சிகளாக’ குறுக்கே வந்தபின் குறுகுறுப்பு கொள்கிறார்;  சாமன்யனாகிறார்; சறுக்கிவிட்டதாகச்சொல்கிறார்; இந்தியாவையே அவர்கள் மன்னிக்கவேண்டும் என்கிறார்.

மிகவும் மதிக்கப்பட்ட இந்த இருவரையும் பொதுவெளியில் அதிதீவிரமாய் பந்திவைத்து பிம்பத்தைக் கரைத்துக் காயடித்தபின், குறுக்கே வர சாட்சிகளும் இல்லாத தேசத்தில் இந்திய ராணுவத்தினர் கற்பழிக்கவே லாயக்கில்லாதவர்கள் என்று வரலாற்றுத்திரிபு நடந்தால் என் செய்வது?

அமைதிப்படை அங்கே போர்க்கொடுமைகளைச் செய்யவில்லை என்று சொல்ல வரவில்லை’ என்று ஒரு சப்பைக்கட்டு வேறு. 

கவிஞர் வா மணிகண்டன் சொல்வது போல ’சர்ச்சையில் இருக்கிறது தன் இலக்கிய இருப்பிடம்’  என்று அவர் முடிவெடுத்துவிட்டால் என்னைப்போன்றவர்களுக்கும் வருத்தமே மிஞ்சுகிறது.

என்னாச்சு ஜெயமோகன்?

தீர்ப்புகள் திருத்தப்படலாம். ஐயத்தின் வீரியத்தில் அவலமாக்கிய வாழ்வைத் திருப்பித்தர யார் இயலும்?

மதன் அத்தியாயம்

கார்ட்டூன், கட்டுரை, ஜோக்ஸ், சின்னத்திரை,பெரிய திரை என்று எல்லாவற்றிலும் ரவுண்டு கட்டி அடிக்கும் மாடபூசி கிருஷ்ணஸ்வாமி கோவிந்தகுமாரைத்’ தெரியாதவர்களுக்குக் கூட ’மதன்’ என்றால் யார் எனத்தெரியும். இதில் ஆனந்தவிகடன் பங்களிப்பு என்பது நான்குக்கு நாலே முக்கால் சதவீதம் என்பது நல்லுலகிற்குத் தெரியும்.

தான் எழுதிய ஒரு பதிலுக்கு (ஆனந்தவிகடன் பாணியில் சொல்வதானால்) சுவாரஸ்யம் கூட்ட சேர்க்கப்பட்ட, ’உட்கார்ந்திருக்கும் ஜெயலலிதாவின் காலடியில் தலைவணங்கி  ஒரு தொண்டர்’ ஆசிவாங்கும் படம் அவருக்கு அதிர்ச்சியையும் தேவையற்ற மனச்சோர்வையும் கொடுத்ததாய்ச்சொல்லி ’அது தன்னுடைய வேலையல்ல’ என்று ஒரு அறிவிப்பு வேண்டுமெனக் கேட்டிருக்கிறார்.

’டிவி’ வேலை போய்விடுமே என்று பயப்படும் ’பத்திரிகையாளர் மதன்’ அரசியல் சார்பற்று நடுநிலைமையுடன் கேள்விபதிலையும் சரி, கார்ட்டூனையும் சரி காபந்து பண்ணமாட்டார் என்று விகடனே அவருக்கு ’குட்பை’ சொல்லிவிட்டது.

இத்துனூண்டு சம்பவம் இது என்று நினைக்கமுடியவில்லை. மதனின் கேள்வி-பதில் சுவாரஸ்யமற்றுப்போய் பல மாதங்கள் ஆகிவிட்டன. வலைப்பூக்களில் வரும் கார்ட்டூனாவது பரவாயில்லை, அந்த அளவிற்குக்கூட அவரது கார்ட்டூன்களில் “காரம்” இல்லை.

மாற்றம் ஒன்றே மாறாதது என்பதில் விகடன் எப்போதும் நடுநிலைமை. மாற்றம் தேடிக் காத்திருந்தவேளையில் ’படம் நழுவிக் காலில் விழுந்து’ பாதகம் செய்துவிட்டது மதனுக்கு.

விகடன் வாசகர்கள் ஏறக்குறைய எல்லோருமே விகடன் செய்தது சரிதான் என்று தீர்ப்புச்சொல்லிவிட்டார்கள்

ஒரு முகபுத்தக நண்பர், ’உட்கார்ந்திருப்பது ஜெயலலிதா; குனிந்து வணங்குபவர் மதன்’ என்றும் இன்னொருவர், “ரஃபி பெரனார்டுப்போல அதிமுகவின் அடுத்த எம்.பி மதன் தான்” என்றும் சொல்லிவிட்டார்கள்.

எனக்கு இரண்டு விஷயங்கள் தொண்டையை அடைக்கின்றன.

ஒன்று, ஆ.வி. வாசகர்களின் பார்வையில் ’அடுத்த சுஜாதா’ என்ற “அரை-பிம்பத்தில்” இருந்த மதன் மாயச்சுழலில் சிக்கிவிழுந்துவிட்டார். இனி சராசரிகளில் ஒரு சராசரியாய் சிக்கக்கூடும். (’சான்ஸ் கிடைச்சா தான் சார் சச்சின் டெண்டுல்கரே’ என்ற டயலாக்கில் எனக்கு நம்பிக்கையுண்டு.)

இரண்டு, மதனை நினைக்கும்போது உண்மையில் எனக்கு, ’மாட்டுக்கறி திங்கும் மாமி’ என்று அட்டைப்படத்தில் போடுமளவுக்கு ’தில்’ இருக்கும் ’நக்கீரனைப்’ பார்க்க திகில்லாயிருக்கிறது.

எம்.கே.குமார்.

Search This Blog