Friday, November 10, 2006

அமரர் கா.காளிமுத்து - சில நினைவுகள்!

Photobucket - Video and Image Hosting

தமிழகத்தில் பல்வேறு துறைகளில் சிறந்துவிளங்கிய முக்கியமானவர்களையும் தலைவர்களையும் அறிஞர்களையும் ஒவ்வொருவராக மரணம் கவ்வத்தொடங்கியிருப்பதிலிருந்து ஒரு தேர்ந்த காலம் பின் நகரத்தொடங்கியிருப்பதை உணர முடிகிறது.

சினிமாவில் ஆரம்பித்து கலை, இலக்கியம், அரசியல் என அனைத்து துறைகளிலும் அதன் ஆதிக்கம் மெல்லப் பரவத்தொடங்கிவிட்டது. தேர்ந்திருந்த அத்தகையவர்களின் இடத்தை இன்றோ நாளையோ ஆக்கிரமிக்கப்போகிறவர்களின் தரமும் ஞானமும் எத்தன்மை என்பதில் ஏற்படும் பற்றாக்குறைகளையும் அதன் வழிக்காட்டலையும் நினைத்து கலங்கத் தொடங்கியிருக்கிறது காலம்.

Photobucket - Video and Image Hosting

அ.தி.மு.க என்ற கட்சியைபொறுத்தவரை திரு. கா.காளிமுத்து அவர்களின் மரணம் மிகப்பெரிய இழப்பேயாகும். அக்கட்சியின் மேலிருந்த ஜெண்டில்மேன் பார்வையும் இலக்கிய-வாசக ஞானமும் திரு.காளிமுத்து அவர்களோடு அதிகம் சம்பந்தப்பட்டிருந்தது என்பது உண்மை. திரு.காளிமுத்து அவர்களைத்தவிர மேடைப்பேச்சில் சிறந்தும் தமிழிலக்கிய ஆர்வலராயும் இருக்கும் அ.தி.மு.க.கார்கள் சட்டென்று எனக்கு ஞாபகத்திற்கு வர மறுக்கிறார்கள். அரசியல், வன்முறையோடு கலந்துவிட்ட இக்கால்நூற்றாண்டில் இலக்கியத்தோடு அரசியலைப் இணைத்துக்கொண்டிருந்தவர்களின் காலம் மலையேறத்துவங்கிவிட்டதே அதற்கு காரணம் எனச் சொல்லலாம்.

முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அளப்பறிய தன்னம்பிக்கையுடையவரினும் அடிக்கடி நிதானம் தவறுபவர் என்பது பலரது கருத்து. அத்தகையவருக்கருகில் இருந்து ஆலோசனை சொல்வதிலும் வழிகாட்டுவதிலும் இருக்கும் பாரம்பரிய தகுதியுடைவர்களில் ஒருவராயும் திரு.கா.காளிமுத்து விளங்கினார். மனச்சாட்சிப்படி ஜானகியணியில் சேர்ந்திருந்த அவர் எம்ஜிஆருடைய அ.தி.மு.க.வின் நலன்கருதி செல்வி ஜெயலலிதாவுடன் இணைந்துகொண்டதும் முக்கியத்தருணங்களில் அவருக்குத் துணைநின்றதும் தேர்தல் காலங்களில் கூட்டத்தின் கவனத்தைத் திருப்பும் மிகச்சிறந்த பேச்சாளராய் இருந்த வகைகளிலும் செல்வி ஜெயலலிதாவுக்கும் இது தனிப்பட்ட முறையில் பேரிழப்பு.

கடந்த சட்டமன்றத்தேர்தலில் தொண்டர்களின் வேண்டுகோளால் அ.தி.மு.க பக்கமும் அப்போதைய கூட்டணியில் தி.மு.க பக்கமும் என மதில்மேல் பூனையாக அரசியல்நிலைமை கொண்டிருந்த திரு. வைகோ அவர்களை, 'இன்னும் எதற்கு கௌரவர்களின் பக்கம், பாண்டவர்களின் பக்கம் வா கர்ணா!' என்று மேடைக்கு மேடை கூவியழைத்து நீண்டநாள் நண்பனான கர்ணனை தம்பக்கம் வரவழைத்ததில் இவருக்கு பெரும்பங்கு உண்டு. மாபெரும் பேச்சாளர்களான இவ்விருவரும் சேர்ந்து ஒரு மேடையில் பேசினால் எப்படி இருக்கும் என்பதை அடிக்கடி நினைத்து வியந்திருக்கிறேன். அத்தகு தருணம் வாய்க்காமலே போய்விட்டது.

Photobucket - Video and Image Hosting

பாவப்பட்ட அரசியலில் பழிவாங்கும் எண்ணங்களுக்கு குறைவேது? புதிதாக ஆட்சிப்பொறுபேற்ற தி.மு.க அரசு, ஊழல் தடுப்பு வழக்கில் இவர் மேல் இரண்டு வழக்குகளைத் தாக்கல் செய்தது. சட்டசபை வளாக அன்பகம் உணவகத்தை வாடகைக்கு விட்டதில் இவர் தலையிட்டு அரசுக்கு வருமானத்தை இழக்கவைத்ததாக இவரது மேல் வழக்கு தொடரப்பட்டு வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. உடல்நிலை பாதிக்கப்பட்டவர் என்பதையும் மறந்து கலைஞரும் இப்படிச்செய்தார் என்பது வருத்தத்திற்குரியது. மதுரை கோர்ட்டில் ஆஜராகி வந்தார். இதனால் தற்போதையை அரசியலிலிருந்து ஓய்வு பெற்றிருந்தவர் இப்போது நிரந்தரமாய் ஓய்வும் பெற்றுவிட்டார்.

சில வருடங்களுக்கு முன் இதயநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவர்களின் உதவியால் அதிலிருந்து மீண்டு வந்தவர், 'திரு.வைரமுத்து எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசத்தைப் படிக்காமல் இறந்துவிட்டிருப்பேனோ' என்று மனம் நெகிழ்ந்து பேசியது இவரது இலக்கிய உணர்வுக்கும் ஆர்வத்திற்கும் பெரும் சான்று.

கடந்த வருடத்தில் சிங்கப்பூரில் ஒரு விழாவிற்குச் சிறப்புறை ஆற்ற வந்திருந்தார் திரு.கா.காளிமுத்து. பெருமாள் கோயிலின் கோவிந்தசாமி மண்டபத்தில் நடந்தது அக்கூட்டம். நானும் சென்றிருந்தேன். அடடா! அவர் நாவிலிருந்து கரை புரண்டோடிய அகநானூறென்ன, புறநானூரென்ன! தமிழைப் பிழையின்றிப் பெருமையுடன் பேசும் இத்தகையவர்களால் அல்லவா தமிழன்னை மகிழ்ந்து போயிருக்கிறாள்! கூட்டம் முடிந்தவுடன் கைகுலுக்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. மாபெரும் வரவேற்பு பெற்ற அவரது உரைக்கு நன்றி தெரிவித்துப் பேசிய விழாக் குழுவினர், 'இன்றுபோல நாம் தீராத தமிழ்ச்சுவை பருக மீண்டும் அவரை இங்கு வரவழைப்போம்' என்று கூட்டத்தின் கரகோஷங்களுக்கிடையில் சொன்னது இன்றும் ஞாபகம் இருக்கிறது. ராமுத்தேவன் பட்டி விடுமா அவரை?

தமிழார்வலராயும் தேர்ந்த அரசியல் மற்றும் பேச்சாளாராயும் விளங்கிய திரு. கா.காளிமுத்து அவர்களுக்கு எனது அஞ்சலி. அன்னாரது குடும்பத்திற்கும், அ.தி.மு.க விற்கும், அருமைப்புதல்வனை இழந்து தவிக்கும் தமிழ்த்தாய்க்கும் எனது ஆறுதல்.

அன்பன்
எம்.கே.குமார்

Monday, October 30, 2006

அதிமுகவுடன் கூட்டு வைத்த திமுக செயலாளர்!

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஒன்றியத்திற்கு நடந்த தேர்தலில், ஒன்றியத்தலைவர் தேர்வின்போது தமக்கு துணைத்தலைவர் பதவி வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க.வை ஆதரித்து, தி.மு.க.தலைவர் மற்றும் தளபதி உட்பட கழகத்தினர் அனைவருக்கும் எதிர்பாராத அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் ஒன்றிய தி.மு.க செயலாளர் ஒருவர். மற்ற இடங்களில் கூட்டணியில் பிரச்சனை ஏற்படுவதற்கு காரணமாய் இருந்த தி.மு.க.காரர்களை விலக்கியும் விளக்கம் கேட்டும் உள்ள தி.மு.கழகம், இங்கு பரம வைரியான அ.தி.மு.க.விற்கே தி.மு.க செயலாளர் ஒருவர் ஆதரவு அளித்ததை உணர்ந்து ஆடித்தான் போய்விட்டது.

தளபதி ஸ்டாலின் நேரில் தொடர்பு கொண்டு பேசியும் கேட்காமல் அறந்தாங்கி எம்.எல்.ஏவும் (உதயம் சண்முகம்) இதற்கு உடந்தையாக இருந்ததையடுத்து கட்சித்தலைவர்கள் அதிர்ச்சியிலுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அத்தனை ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் நகராட்சி மன்ற தலைவர் தேர்தல்களிலும் தி.மு.க வெற்றிபெற்று சாதனை படைக்க ஒரே ஒரு யூனியனான ஆவுடையார்கோயிலை அ.தி.மு.கவிற்கு தமது கட்சியாளரே தாரை வார்த்ததை அடுத்து அதிமுகவிற்கு ஆதரவளித்த அந்த ஒன்றியச்செயலாளரை அதிரடியாய் பதவி நீக்கம் செய்துள்ளது தி.மு.க.

அறந்தாங்கி எம்.எல்.ஏ உதயம் சண்முகம்விடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ என்பதற்காய் அவரை கட்சியிலிருந்து நீக்குவதற்கு கழகம் யோசித்துக்கொண்டிருக்கிறது போலும்.

***********
இதுபற்றிய தினமலர் செய்திகள்.

தி.மு.க., கையில் புதுகை உள்ளாட்சி அதிகாரம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே ஒரு பஞ்சாயத்து யூனியனை தவிர மீதமுள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கான ஆட்சி அதிகாரத்தை போட்டியின்றி தி.மு.க., கைப்பற்றியுள்ளது.

இந்த இடங்களில் தி.மு.க., சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு தி.மு.க., சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த தி.மு.க., நகரச் செயலாளர் முத்துசாமி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதுபோன்று துணைத் தலைவராக தி.மு.க., மாவட்ட பொருளாளர் சந்திரசேகர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புதுக்கோட்டை நகராட்சி தலைவராக ராமதிலகம் (தி.மு.க), துணைத் தலைவராக நைனா முகம்மது (தி.மு.க) ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அறந்தாங்கி நகராட்சி தலைவராக மாரியப்பன் (தி.மு.க), துணைத் தலைவராக ஹாஜி முகம்மது (காங்கிரஸ்) ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பஞ்சாயத்து யூனியன்களில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள் விபரம் கீழ்வருமாறு:

* புதுக்கோட்டை: தலைவர் ஜெயா (தி.மு.க), துணைத் தலைவர் மகமாயி (தி.மு.க).

* அறந்தாங்கி: தலைவர் மெய்யனாதன் (தி.மு.க), துணைத்தலைவர் வெள்ளைச்சாமி (காங்கிரஸ்).

* கறம்பக்குடி: தலைவர் ஃபர்னட் மேரி (தி.மு.க), துணைத்தலைவர் ராமைய்யன் (சுயே)

* ஆவுடையார்கோயில்: தலைவர் ராஜேஸ்வரி (அ.தி.மு.க), துணைத்தலைவர் ராமனாதன் (தி.மு.க)

* கந்தர்வக்கோட்டை: தலைவர் மாரி அய்யா (தி.மு.க), துணைத்தலைவர் ராமைய்யா (காங்கிரஸ்)

* குன்னாண்டார்கோயில்: தலைவர் போஸ் (தி.மு.க), துணைத்தலைவர் அமுதாராணி(சுயே)

* திருமயம்: தலைவர் துரைராஜ் (தி.மு.க), துணைத்தலைவர் ஆவுடையப்பன் (தி.மு.க)

* திருவரங்குளம்: தலைவர் தங்கவேலு (தி.மு.க), துணைத்தலைவர் வடிவேலு (தி.மு.க)

*
* மணமேல்குடி: தலைவர் மஹமூதா பீவி (தி.மு.க), துணைத்தலைவர் முகம்மது அப்துல்லா (தி.மு.க)

* பொன்னமராவதி: தலைவர் ராஜு (தி.மு.க), துணைத்தலைவர் பழனியப்பன் (தி.மு.க)


கூட்டணி கட்சிகளுக்கு "வேட்டு' வைத்த விவகாரம் ஒன்றிய செயலர்கள் இருவர் உட்பட 21 பேர் நீக்கம்

சென்னை:கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக இரு ஒன்றியச் செயலர்கள் உள்ளிட்ட 21 பேர் தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தி.மு.க., பொதுச்செயலர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்தை சேர்ந்த ஜெயலலிதா மோகன், சுஜாதா, சோழவரம் ஒன்றியத்தை சேர்ந்த கோபிநாத், ஆர்.கே.பேட்டை ஒன்றிய பொதுக்குழு உறுப்பினர் கன்னியப்பன், திருவண்ணாமலை கீழ்பென்னாத்துõர் ஒன்றிய துணைச் செயலர் பன்னீர் செல்வம் ஆகியோர் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் கட்சியில் இருந்து நீக்கப்படுகின்றனர்.

அதேபோல், விழுப்புரம் ஒலக்கூர் ஒன்றிய செயலர் சொக்கலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் முருகேசன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஏழுமலை, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சீதாபதி, தினகரன், சண்முகம், தியாக துருகம் ஒன்றியத்தை சேர்ந்த காந்திமதி, முருகாயி, அண்ணாமலை ஆகியோரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையர்கோவில் ஒன்றிய செயலர் ராமநாதன், இலுப்பூர் செயலர் பூபதி, நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் ஒன்றியத்தை சேர்ந்த குப்புசாமி, விவசாய அணி அமைப்பாளர் நவலடி, நாமகிரிப்பேட்டை ஒன்றியம் சுலோசனா, பொத்தனுõர் பேரூர் செந்தமிழ்செல்வன், திருச்சி மாவட்டம் துவாக்குடி நகர செயலர் காயாம்பூ உள்ளிட்டோர் கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.இவர்களோடு தி.மு.க.,வினர் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.இவ்வாறு அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தி.மு.க., தலைமையின் சார்பில் தேர்தல் தொடங்கிய நாளில் இருந்து கூட்டணி கட்டுப்பாட்டை மீறுவோர் மீது கண்டிப்பான நடவடிக்கை எடுக்கப்படுமென கூறி வந்ததை அனைத்துக் கட்சியினரும் அறிவர். "கூட்டணிக்கு துரோகம் செய்து வெற்றி பெற்று பதவிக்கு வந்தாலும், அப்படி வந்த பதவி அற்ப ஆயுளில் முடிக்கப்பட்டு விடும் என்பதால் அதை அற்ப சந்தோசம் என்று சொல்லலாம்' என்றே நான் எச்சரிக்கை விடுத்ததையும் மீறி ஒவ்வொரு கட்சியிலும் இருப்பதைப் போல தி.மு.க.,விலும் உள்ள சிலர் தவறு செய்திருக்கலாம்.

அப்படி செயல்ப்பட்டவர்கள் மீதும், தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அப்பாவு, உதயம் சண்முகம், கே.பி.ராமசாமி ஆகியோர் மீதும், ஒன்றிய செயலர்கள், வெற்றி பெற்ற வேட்பாளர்கள் உட்பட 20 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, கட்சியில் இருந்து அவர்களை நீக்க நேற்றைக்கே முடிவெடுக்கப்பட்டது. முடிவுகள் முழுவதுமாக வருவதற்கு முன்பாகவே மூன்று எம்.எல்.ஏ.,க்கள் உட்பட 20 முக்கியஸ்தர்கள் மீது தி.மு.க., நடவடிக்கை எடுத்திருப்பதில் இருந்தே, எந்த அளவுக்கு கூட்டணிக் கட்டுப்பாட்டை காப்பாற்ற கட்சித் தலைமை முன் வந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும்.
***********

அதிமுகவை திமுக ஆதரித்ததன் மூலம், தலைவர் பதவியைப் பெற்றிருக்கவேன்டிய முன்னாள் ஒன்றியத்தலைவர் திரு.சுந்தரராஜன் வெற்றிபெறமுடியாமல் போனதும் திமுகவிலிருந்த தீயத்தூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலரான எனது அண்ணன் பெற்றிருக்கவேண்டிய ஆவுடையார்கோயில் ஒன்றிய துணைத்தலைவர் பதவி அநியாயமாய் தட்டிப்போய்விட்டதே என்பதும் எனக்கு மிகவும் வருத்ததிற்குரியதாய் இருக்கிறது.

காத்திருக்கலாம்.


அன்பன்,
எம்.கே.

Friday, September 08, 2006

செந்நீர் விட்டே வளர்க்கிறோம் சர்வேசா!

கண்ணிவெடியில் சிதறியும் ஷெல்மழையில் சிதைந்ததும் போக
மீதமிருக்கும் எந்தமிழரினம் செந்தமிழரினம்
வாழ்வைத் தேடி உயிரைச் சிறையிட்டு
நீர்ப்பாதை நகரும் வாழ்க்கைப்படகுகளேறி!


சிந்திய செந்நீரெல்லாம் நிலமதற்குத்தானே என
நீயும் கேட்டா நீரன்னையே
உனது பங்குக்கு என்னினத்தைக்
கடலில் கரைத்து விழுங்கிச் சுவைக்கிறாய்!


சிசு இழந்து மனையிழந்து மாடு கன்று உறவிழந்து
கனவுகளின் அதிர்ச்சியிலும் கண்ணிவெடிகள் ஷெல்மழைகள்!
உரிமை கேட்கும் மனித இனத்தை
ஒடுக்க நினைக்கும் பேரினப்பேய்களே
உத்தமன் புத்தனின் ஒருவழிப் பிறப்புகள்தானா நீவிர்?


எந்தமிழர் ரத்தம் இனிப்புச்சுவையா இனவெறியர்காள்!
ஷெல்லால் சிதைத்து சிசு ரத்தம் குடித்த பின்
எனதருமை குலவிளக்குகளின் கருவறைக்குள்ளும்
துப்பாக்கி முனைகொண்டு இரத்தம் தேடுகிறீர்களே
இதென்னவோ அஃறிணைக் கொடுமை!


மொத்தத்தைத் துறந்த புத்தா
ரத்தம் குடிப்பதை மட்டுமா போதித்துச்சென்றாய் நீ

எங்களின் இருப்பிடத்திற்காய் ஆன இந்த இரத்தக்குளிப்பை
எடுத்துச்சொல்வாயா இவர்களுக்கு?


வாழுதடம் தெரியாமல் ஒழிக்க நினைக்கும்
துரோக வெறியர்களை மேடையேற்றி
உயிர் வாழ உயிர் துறக்கும் வாழ்க்கை -வேட்கைப் பரிகளை
கண்மூடி கைதடவி யானை காணும் குருடன் போல
பயங்கரவாதி என்றாக்குதல் தகுமா
பகுத்தறிவற்ற பன்னாட்டினரே?


உயிர்வாழப் போராடுவது உரிமைவாதமா
இல்லை தீவிரவாதமா?
குலம் வாழ உயிர் மரிப்பவர்கள் உரிமைவாதிகளா
இல்லை பயங்கரவாதிகளா?
சாத்தானின் வாய்ப்பூச்சுக்கு செவிட்டுப்பேய்கள் மயங்கிக்கிடக்கலாம்
சமதர்ம சமுதாயமே உனக்குமா உரைக்கவில்லை?


செந்நீர் விட்டே வளர்க்கிறோம் சர்வேசா
செந்நீர் விட்டே வளர்க்கிறோம் எனதருமை சர்வேசா!
சீக்கிரம் வேண்டும் நீதி செய்துகொடு சர்வேசா!
சீக்கிரம் வேண்டும் நீதி; செய்துகொடு எங்கள் சர்வேசா!


(நண்பரிடமிருந்து)

Friday, August 04, 2006

ஒரு நதியின் கரையில் - எழுத்தாளர் ஜெயமோகனுடன்!

ஜெயமோகன் - தற்கால தமிழிலக்கியப் படைப்பாளி; விவாதத்தின் விஸ்வரூபம்; கருத்துரைகளின் அடைமழை; ஒரு வரிக்கேள்விக்கு பக்கங்கள் தொடரும் பதில்கள் தருபவர். அயராமல் எழுதுபவர். இலக்கியத்தின் போலி முகங்களைத் தயங்காமல் தோல் உரிப்பவர்.

இப்படியான சில எண்ணங்களோடு மட்டுமே திரு.ஜெயமோகனை நான் அறிந்திருந்தேன். கடந்த சில நாட்களாக அவருடம் பழகும் பேரதிர்ஷ்டம் கிடைத்தமைக்கு இறைவனுக்கு நன்றி கூறுகிறேன்.

உள்ளே நுழையுமுன்.......

கடந்த எழுபத்தைந்து கால சிறுகதை வரலாற்றில் ஒரு திறனாய்வுப் பட்டியலாய் மிகச்சிறந்த கதைகளும் அவற்றின் படைப்பாளிகளுமாய் எழுபத்தைந்து பேரைச் சொன்னார் திரு. ஜெயமோகன். இங்குதான் போட்டி. ஜெயமோகன் குறிப்பிட்ட சிறுகதையாசிரியர்களில் அதிகச்சிறந்த கதைகளை எழுதி முதல் இடத்தைப் பிடித்திருப்பவர் யாரென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அல்லது முதல் மூன்று இடம் யாருக்கு? மனதில் வைத்துக்கொள்ளுங்கள்! விடைகள் கீழே.! சரியாகக் கணிப்பவர்களுக்கு (இந்த வருடத்தில்) ஒரு கலர் டிவியும் (ஐந்தாண்டு கழித்து) கம்யூட்டரும் அரைபவுன் தாலியும் பரிசாக வழங்கப்படும்!


இனி, பின் தொடர்ந்த உணர்வின் பதிவுகள்!


Photobucket - Video and Image Hosting

ஜெயமோகனின் உலகம் மிகப்பெரியதாய் இருக்கிறது. எந்தத்தலைப்பில் இவருடன் பேச ஆரம்பித்தாலும் சிந்தனைகள் பலவாறாக பின்னோக்கி அல்லது முன்னோக்கி ஓடுகின்றன.கடந்த வந்த பாதையின் ஒவ்வொரு அடிகளையும் ஞாபகம் வைத்திருக்கிறார். தன் வாழ்க்கையின் சில சிறந்த அத்தியாயங்களை உருவாக்கிய திரு.சுந்தர ராமசாமியை அடிக்கடி நினைவு கூறுகிறார். தான் கற்றுக்கொடுத்த சீடனே தன்னை மிஞ்சும் சூழ்நிலையில் சு.ராவைப்போல ஏற்றுக்கொள்ளக்கூடிய சிறந்த குருக்கள் தமிழிலக்கிய உலகில் காண்பதறிது என்கிறார். அவருடைய 'குழந்தைகள் பெண்கள் ஆண்களுக்கு' தன்னுடைய விமர்சனத்தை நேரடியாக அவர் ஏற்றுக்கொண்டது அதற்குச் சான்று என்கிறார். தொடர்ந்து பதினான்கு மணி நேரங்களெல்லாம் அவருடன் பேசிக்கொண்டிருந்ததை எண்ணும்போது மேடையில் இரண்டு மணிநேரம் பேசுவது சிரமமில்லை என்கிறார்.

ஜெயமோகன் தன்னுடைய தாயாரின் புலமைமீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார். இடதுசாரி சிந்தனைகள் கொண்ட குடும்பத்திலிருந்து வந்த பெண் அவர் என்பதால் இருக்கலாம் என்கிறார். ஓரிரு வருடங்களே வித்தியாசமிருப்பினும் தன்னுடைய அண்ணன் இன்னும் தன்னை ஒரு குழந்தையைப்போல நேசிப்பதை அக்கறைப்படுவதைச் சொல்கிறார். இவர்களைனைவரும் அசோகவனத்தில் இருக்கிறார்களாம். 'அசோகவனம்' அவருடைய அடுத்த படைப்பு மட்டுமல்ல நீண்டகாலத்தவம் என்பது உங்களுக்குத்தெரிந்திருக்கும். தன்மனைவி அருண்மொழி, குழந்தைகள் அஜிதன், சைதன்யா ஆகியோருடைய அன்புகளையும் சந்தோசங்களையும் ஒரு சராசரி மனிதனாய் பகிர்ந்துகொள்கிறார். சின்னச்சின்ன உணர்வுகளையும் இலக்கிய உதாரணங்களையும் இவர்கள் தொடர்பான பேச்சுகளிலிருந்தும் பெறமுடிகிறது.

முத்தமிழ் விழா முடிந்து கூட்டத்தினர் ஆங்காங்கு நின்றுகொண்டு கதைக்கும்பொழுது 'சங்க சித்திரங்கள் படித்தேன், ஒவ்வொரு வாரமும் அருமை, அருண்மொழியும் நீங்களும் காதலித்து திருமணம் செய்துகொண்ட கதைகூட வந்ததே!' என்றெல்லாம் சூழ்ந்துகொண்டிருந்த இளைஞர்குழாம் ஒன்று புளகாங்கிதமடைந்து கொண்டிருக்க, வெட்கப்பட்டு நிற்கும் அருண்மொழியவர்களை, இதோ இருக்கிறார் அருண்மொழி என்று கைகாட்டுகிறார். தன்னிடம் அறிமுகம் கொள்ளும் எவருக்கும் தனது மனைவியையும் அறிமுகப்படுத்துகிறார். எல்லாவற்றிற்கும்பின்னே இருக்கும் அவரது அருமை புரிகிறது நமக்கு.

நண்பர்கள் கூடிய ஒரு பொழுதில் சிறுகதையின் சாரம், நாவல், தனது நாவல்களுக்குப் பின்னேயான நாட்கள், மனம் உருகி கண்ணீர் உருண்டோட எழுதிய வரிகள், என்பனபற்றியெல்லாம் விரிவாகச்சொல்கிறார். சிறுகதையின் வடிவம் அதன் நுட்பம் சார்ந்த விஷயங்கள் சிறுகதைப்பட்டறையில் விளக்கப்படும் என்பதால் நாவலில் பேச்சு திரும்புகிறது. ஒரு முடிச்சை அவிழ்ப்பது போன்று, ஒரு கயிற்றைப் பிரிப்பது போன்று பலவேறு கோணங்களில் பிரித்து எழுதப்படவேண்டியது அது! நாவல் முடியவேண்டும் என்று எந்தச்சட்டமும் இல்லை என்கிறார். காட்டில் தானிருந்த அந்த அனுபவங்கள் அளப்பறிய ஞானங்களைத் தரவல்லது, ஒவ்வொரு சத்தமும் ஒவ்வொரு அசைவும் ரசிக்கக்கூடியது, பிரமிப்பூட்டக்கூடியது என்கிறார். காடு நாவலில் கிடைத்த குட்டப்பன், ரெசாலம், ரெஜினாமேரி யாவரும் தானாய் வந்து சேர்ந்த பாத்திரங்களே என்றும் அப்படி யாரையும் நேரில் பார்த்து எழுதவில்லை என்கிறார். தேவாங்கைப் பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டு அதைப்பற்றி நகையாக விரிவாகப்பேசுகிறார்.

பின்தொடரும் நிழலின் குரல் நாவலில் ஓரிடத்தில் தனது இதயம் குழைந்து கண்ணீர் பொங்கிட வந்த வரிகள் சில இருக்கின்றன என்கிறார். கொற்றவை நாவலிலும் சில இடங்களில் அமாதிரி அனுபவம் வாய்த்ததை விவரிக்கிறார். கொற்றவை முழுக்க முழுக்க தமிழ்வார்த்தைகளால் எழுதப்பட்டது, எங்காவது ஓரிரு சமஸ்கிரீத வார்த்தைகள் வந்திருந்தால் கூட அது கவனக்குறைவால் வந்திருக்கவேண்டும் என்கிறார். (கடந்த ஜனவரியில் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கொற்றவை வாங்கிக்கொண்டு கிழக்குப் பதிப்பக வாசலுக்கு வந்தபோது அங்கே ஒரு நண்பர், 'அப்படி என்ன இருக்கிறது இதில், ஏன் எல்லோரும் இதில் போய் விழுகிறார்களோ' என அங்கலாப்போடு சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது!)

நண்பர் தமிழினி வசந்தகுமாரைப் போன்ற வாசக பூரணத்துவம் பெற்றவர்கள் எவரும் இருக்கமுடியாது. மிகச்சிறந்த வாசகர் அவர் என்பதாலாலேயே மிகச்சிறந்த புத்தகங்களை அவரால் போடமுடிகிறது என்கிறார். மற்ற பதிப்பக புத்தகங்கள் அல்லது இணையத் தகவல்களின் புத்தகத் திரட்டிகளைப்பற்றிக் கேட்கும்பொழுது, எல்லாம் வருவது நல்லதுதான், யாருக்காவது எப்போதாவது பயன்படுமல்லவா என்கிறார். ஆனால் சிலரின் முக்கியப் புத்தகங்கள் சுமாரான பதிப்பகம் வெளியிட்டதால் அடையவேண்டிய இடத்தை அவை அடையாமல் போனதும் நடந்திருக்கிறது என்று எஸ்.ராமகிருஷ்ணனின் உதாரணம் கொண்டு விளக்குகிறார்.

தற்காலப் படைப்பாளிகளில் தனக்குத்தெரிந்து எஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர் ஆகியோர் நிறையப்படிக்கிறார்கள்; நன்றாகவும் எழுதுகிறார்கள் என்கிறார். ஆழிசூழ் உலகு புகழ் ஜோ டி குரூஸ் இன்னும் ஏழு எட்டு நாவல்களை எழுதலாம், அந்த அளவிற்கு அவரிடம் திறமை, விஷயம் இருக்கிறது என்கிறார்.

ஒரு நாவல் எழுதுவதற்கு முன், இது யாருடையது, எதைப்பற்றி எழுதுகிறோம், எங்கே ஆரம்பித்து எப்படி முடிப்பது என்பதை மட்டும் கொண்டால் போதும். ஒட்டுமொத்த காதாபாத்திரங்களையும் முதலில் உள்வாங்கிக்கொண்டு எழுதினால் ஒரு செயற்கைத்தன்மை வந்து ஒட்டிக்கொள்ளலாம். ஆனால் அதற்கு முன் நிறைய நாவல்களை படிக்கவேண்டும் என்கிறார்.
Photobucket - Video and Image Hosting

நான் வெளியிலோ யாரிடமோ பேசுவது என்பது மிகக்குறைவு என்றும் ஆனால் என் காதுகள் எப்போதும் எவற்றையாவது கேட்டுக்கொண்டே இருக்கும் என்கிறார். டீக்கடையில் புழங்கும் சாதாரண உரையாடல்களிலும் பல நாவலுக்குரிய விஷயங்கள் கிடைக்கவாய்ப்பிருக்கலாம், நாஞ்சில் நாட்டு மக்களின் எல்லாப் பேச்சுகளிலுமே அவர்களறியா ஏதாவது ஒரு நையாண்டித்தனம், நறுக்கென்று வலிக்காமல் கொட்டும் தன்மை ஆகியவை இருப்பதாகவும் அவற்றைக் கேட்டுக்கொண்டிருப்பதே பெரிய விஷயஞானம் அளிக்கும் என்கிறார். ஒரு நல்ல எழுத்தாளன் காதுகளை எப்போதும் திறந்து வைத்திருக்கவேண்டும் என சுராவோ யாரோ சொன்னதாகச்சொன்னார்.

மதுரையில் ஒரு கல்லூரியில் பேச வந்திருந்தபோது மனுஷ்யபுத்திரன், சு.வேணுகோபால் மற்றும் பல இன்றைய எழுத்தாளர்கள் அன்றைய மாணவர்களாய்ச் சூழ்ந்துகொண்டு கேள்விகேட்டதை ஞாபகம் வைத்திருக்கிறார்.

நான் கடவுள் படத்திற்கு வசனம் எழுதும் அனுபவத்தை சந்தோசமாக விவரிக்கிறார். பாலாவின் சாப்பாடான ஒரே ஒரு இட்லியைப் பார்த்து ஆச்சர்யப்படுகிறார். பாலாவும் அவரது டீமும் கொள்ளும் சுவாரஸ்யமான பிணைப்பைச் சொல்கிறார். மதுரை ஏரியாவில் மரியாதையின் முக்கியத்துவத்தையும் பாலாவிடம் தான் கண்டமையையும் கூறுகிறார். ஒரே இரவில் இருபத்தியிரண்டு பக்கங்கள் கொண்ட வசனத்தை அவரிடம் எழுதிக்கொடுத்ததையும் பாலா தன் பேட்டியில் அதைப்பற்றிச்சொன்னதையும் சொல்கிறார்.


சிறுகதைப்பட்டறைக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடங்கள் அறுபது. கடைசிநேர ஆர்வத்தாலும் திடுமெனச் செய்தி கேட்டு வந்தவர்களுமாய் ஒரு பத்து பேர் சேர்ந்துகொள்ள எழுபது (பிளஸ்) நபர்களுடன் சிறுகதைப்பட்டறை தொடங்கியது. சிறுகதை என்பது என்ன என்பதில் ஆரம்பித்து அதன் தோற்றம், முடிவு, வடிவம், உரையாடல், கவித்துவ உணர்வு ஆகிய அனைத்து மூலக்கூறுகளையும் விரிவாகச்சொன்னார். பரிசுவாங்கிய எழுத்தாளர்கள், பரிசுவாங்கப்போகும் எழுத்தாளர்கள், எதிர்கால எழுத்தாளர்கள், விமரிகர்கள், மாணவர்கள் என்று பலவாறாய் வந்திருந்த அக்கூட்டத்திற்கு அவரது உரை மிக மிகப் பயனுள்ளதாய் இருந்ததாகச்சொல்லப்பட்டது. சிங்கப்பூர் தமிழ் வானொலியான ஒலி 96.8ல் சிங்கப்பூரின் (சிறுகதை) இலக்கிய உலகை அடுத்த தளத்திற்கு எடுத்துச்செல்லும் வடிவில் மிக அருமையாய் இது இருந்ததாக திரு. பொன் மகாலிங்கம் செய்தியில் சொன்னார்.

ஜெயமோகனின் இப்பட்டறை குறித்தான பேச்சுகள், கருத்துகள் பிரிண்ட் செய்தும் கொடுக்கப்பட்டது. செவ்வியல் (classic) வடிவ சிறுகதையின் பலகூறுகளை மிகச்சிறப்பாக விளக்கும் அக்கட்டுரையை இங்கு போட்டால் மிகப்பயனுள்ளதாக இருக்கும் என்று உறுதியாக நான் நம்புகிறேன்.

விலாவாரியாக இல்லாவிட்டாலும் சுருக்கமாக அதுபற்றிப் பார்ப்போம்.

"சிறுகதையில் முடிவில் இருக்கிறது அதன் உயிர். அவ்வுயிரைக்கொண்டே சிறுகதை தனது வடிவத்தைப் படைத்துக்கொள்கிறது. முடிவு ஒரு திருப்பமாகவோ அல்லது அதிர்ச்சியடையவைக்கும் படியாகவோ அல்லது வாசகன் இதுகாரும் படித்து யூகித்து வந்தபடியில்லாமல் படித்துமுடித்ததும் வேறு சிந்தனையைத் தூண்டும் விதத்திலோ இருக்கவேண்டும் என்பதில் மிக மிக உறுதியாக இருக்கவேண்டும். இதற்காய் குமுதத்தில் எழுதப்படும் ஒருபக்கக் கதையில் வரும் திருப்பத்தைக்கொண்டு அது சிறந்த கதையாய் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. அது அத்திருப்பத்திற்காகவே படைக்கப்பட்டது என்பதால் அதில் அவ்வுயிர் இல்லை. சிறுகதையின் முதல்வரி எப்போதும் வித்தியாசமாய் கவர்ந்திழுக்கக்கூடியதாய் இருக்கவேண்டும். இதற்கு எனது மாடன் மோட்சம் கதையின் முதல்வரி மிகச்சிறந்த உதாரணம். சிறுகதையின் வடிவம் வேறு எங்கும் இழுத்துச் செல்லாவண்ணம் கட்டப்பட்டிருக்க வேண்டும்; முடிவை நோக்கியே அது ஓடவேண்டும்.

"சிறுகதையில் பின்னோக்கு உத்திகளைப் பயன்படுத்துதல் கதையைக் குலைத்துவிடும். பின்னோக்கு உத்தியைப் பயன்படுத்தாமல் உரையாடல்கள் மூலம் கடந்தகாலத்தைக்கொண்டு வருவது மிகச்சிறப்பு, அதையே நானும் வரவேற்கிறேன். இதில் அசோகமித்திரன் சுஜாதா மாஸ்டர்கள். கதையின் உரையாடல்கள் முடிவை நோக்கி இழுத்துச்செல்லும் வண்ணம் இருத்தல் அவசியம்; அதைவிடுத்து வழவழாகொழகொழா இருக்கவேகூடாது. பேச்சும் சுவாரஸ்யம் மிக்கதாய் செயற்கைத்தன்மை அற்று இருத்தல் மிக அவசியம்."

உதாரணத்திற்காய் வந்து விழும் பெயர்களில் புதுமைப்பித்தன், அசோகமித்திரன், சுஜாதா, சுந்தரராமசாமி, நாஞ்சில்நாடன், வண்ணதாசன் ஆகியன அடிக்கடி வருகின்றன.

"முடிவிற்குப்பிறகு அல்லது திருப்பத்திற்குப்பிறகு கதையை இழுத்தல் என்பது வாசகனுக்குச்செய்யும் மிகப்பெரிய துரோகம். அவனைச் சிந்திக்க விடாது நீங்கள் படுத்தும் பாடு. எழுத்தாளனுடன் வாசிக்கும் வாசகத்தன்மையை கதைகள் பெற்றிருக்கவேண்டும். வாசக இடைவெளியுடனும் கதைகள் படைக்கப்படுவதுண்டு. கோணங்கியின் கதைகள் இவ்வகையைச்சார்ந்தவை."

"கதையின் நாயகன் யார் என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். அவனை/அவளை/அதை அவ்வபோது குறுக்குவெட்டு வெட்டிச்செல்லும் பாத்திரங்களை பிறகு அறிமுகப்படுத்தவேண்டும். நாயகனைத்தவிர வேறு எவற்றையும் விலாவாரியாய் விளக்கவேண்டிய அவசியமில்லை. சிலசமயங்களில் நாயகன்/நாயகியைக் கூட மாமி எழுத்தாளர்கள் மாதிரி ஒவ்வொன்றாய் விவரிக்காமல் சரேலென கதைக்குள் புகுந்து ஒரே ஒரு வரியில் அவரது அழகை இயல்பை வெளிக்காட்டிக் கதைக்குள் இழுத்துச்செல்லும் வைபவமும் அசோகமித்திரனால் நடப்பதுண்டு."

"இரு கதாநாயகர்கள்/ அல்லது மூன்று கதை நாயகிகள் ஆகியன சிறுகதையின் செவ்வியல் அழகை குலைக்கலாம். அது அழகும் இல்லை. புதுமைப்பித்தன் போன்ற ஜாம்பவான்களால் அது முடியும். கதையின் தலைப்பு ஒருபோதும் உள்ளடக்கத்தை நேரிடையாய் சொல்வதாய் இருக்கக்கூடாது. கதையின் தலைப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. கதையின் முதல்வரி கதையின் செறிவை எடுத்துக்காட்டுவதாய் இருக்கவேண்டும் "

"கதையை டுவிஸ்ட் எனப்படும் திருப்பத்தோடுதான் முடிக்கவேண்டும் என்பதையே வளர்ந்துவரும் இலக்கியச்சூழல் மாறுபடுத்துகிறது. கவித்துவமான முடிவுகளை அது கொண்டிருந்தால் அதுவும் சிறந்த முடிவுகளாய் உருவாகும். உதாரணமாக சுந்தரராமசாமியின் பிரசாதம் கதை, வண்னதாசனின் நிலை கதை, தி.ஜானகிராமனின் ஒரு கதை, அசோகமித்திரனின் ஒரு கதை. ஆனால் இது மிகச்சிறந்த கவித்துவ வடிவத்தைத் தரவேண்டும். பொதுவாக மாஸ்டர்கள் உருவாக்கும் வடிவம் இது."


மக்களே, இது பற்றி விரிவாய் எழுத அல்லது அல்லது கட்டுரையை டைப் பண்ண இப்போது நேரமில்லை. இதுபோக, ஏற்கனவே சொல்லியவாறு கடந்த எழுபத்தைந்தாண்டுகால மிகச்சிறந்த சிறுகதைகளும் அவற்றைப் படைத்தவர்களும் என ஒரு 75 பேர் அடங்கிய பட்டியலையும் ஜெயமோகன் எல்லோருக்கும் அப்பட்டறையில் கொடுத்தார். (இரண்டையும் அவரிடமும் கேட்டுவிட்டு நேரமிருக்கும்போது தட்டச்சு செய்கிறேன்)

(அதை முழுவதுமாகத் தெரிந்துகொள்ளவேண்டும் என்று விரும்புபவர்கள் நூறு ரூபாய்க்கு மணியார்டர், புத்தகஆர்டர், சாப்பாடு ஆர்டர், ஏதாவது ஒரு ஆர்டரை எனக்கு (இம்சை அரசன் 23ம் சிங்கப்பூர்வாசி) அனுப்பவும். எனது முகவரியை பின்னூட்டமிடுகிறவர்களுக்கு பிறகு சொல்கிறேன். ஆஸ்திரேலிய நியூஸிலாந்து ஆடு எனக்குப்பிடிக்காது. எனவே அங்கிருப்பவர்கள் 'மட்டன் ஆர்டர்' அனுப்பவேண்டாம். தாய்லாந்திருப்பவர்கள் என்ன ஆர்டர் அனுப்பவேண்டும் என நான் சொல்லாத வேளையிலும் ரத்தத்தின் ரத்தமே உடன் பிறப்பே உனக்கா தெரியாது? இலங்கை நண்டு பிடிக்கும். வேண்டாம் மக்களே, இலங்கை என்றவுடன் மனசு பாரமாகிவிடும்)

ஈழத்தமிழர்கள் மீது மிகப்பெரிய மரியாதை வைத்திருக்கிறார் திரு.ஜெயமோகன். அவர்களது வாசிப்பனுபவத்தின் மீது அதீதப்பிரியம் வைத்திருக்கிறார். கனடாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து ஜெயகாந்தனை மட்டுமே பார்த்துவிட்டுச் செல்லக்கூடிய ஈழத்தமிழர்களைப்பற்றி பேசும்போது அவர்களது இலக்கிய உலகத்தில் பிரமித்துப்போகிறார். ஆரம்பத்திலிருந்தே ஈழநாடு அப்படியான இலக்கிய உணர்வுகளை மேம்படுத்திக்கொண்டு வந்திருக்கிறது என்கிறார். ஈழத்தமிழர்களைப் பற்றிப் பேசப்பேச நமக்கே அவர்களைப் பார்த்து பொறாமை வந்துவிடுகிறது. (கடந்த வருடம் சாருநிவேதிதா இங்கு வந்தபோது ஈழநாதன் ஒரு கேள்வி கேட்டார். ஒரு நிமிடம் ஆடிப்போன சாரு, 'அடடா! இந்தக்கேள்வியை ஒரு தமிழ்நாட்டு வாசகன் கேட்டிருந்தால் நான் எப்படி புளகாங்கிதம் அடைந்திருப்பேன், இவற்றையெல்லாம் இவர்கள்தானே ஊன்றிப் படிக்கிறார்கள்' என மனமறிந்து ஆச்சர்யப்பட்டார்.)

இன்றும் யாழ்ப்பாணத்தின் எல்லா ஊர்களிலிருந்தும் பல கடிதங்கள் தனக்கு வருவதாயும் அவர்களின் பெயர்களைக்கூட எதிர்ப்படும் ஈழநாட்டு வாசகர்களிடம் கேட்டுப்பார்க்கிறார் ஜெயமோகன். எல்லோருக்கும் எல்லோரையும் பெரும்பாலும் தெரிந்திருக்கிறது என்கிறார்.
Photobucket - Video and Image Hosting

தான் அடிக்கடி ஜெயகாந்தனைப் போய்ப் பார்ப்பதையும் அவரைப்போன்ற (எத்தகைய அரசாட்சிக்கு முன்னாலும்) கம்பீரமாய் நிற்கக்கூடிய எழுத்தாளுமை கொண்டவர்கள் அரிது என்பதையும் ஒப்புக்கொள்கிறார்.

புதுப்பேட்டை படம் பற்றி உயிர்மை, காலச்சுவடு முன்வைத்த கருத்துக்களை நான் கேட்க, சில கவித்துவ பார்வைகளை ஏற்றுக்கொண்டு கதையைப் பற்றி கிண்டலடிக்கிறார். ஒருலட்சம் அடிக்கு படம் எடுத்தவர்கள் கதையைத் தொலைத்ததுதான் பாவம் என்கிறார். (புதுப்பேட்டைக்கு சாருவின் விளக்கத்தில், அவருக்கு வசன வாய்ப்பு தரவில்லையே என்கிற ஏக்கம் பொங்கி கொட்டுவதாய் நான் சொன்னேன்.)

குமரிக்கண்டம், கொற்றவை, புத்தர் மற்றும் சமண வைணவ மதங்கள் (விஷ்ணுபுரம்), சாவித்திரியின் நடிப்பு, அஜீத் பாலா பிரச்சனை, பதினெட்டுப்பட்டி நாட்டார்கள், கீரிப்பட்டி, பாப்பாபட்டி பிரச்சனைகள்(இது பற்றி கேட்கவேண்டும் என்று இவர் இங்கு வந்தபோதே நினைத்துவிட்டேன்!), மறைந்த உவமைக்கவிஞரின் (சுரதா) தனித்தமிழ் நேசம், மூடிய கதவுகளுக்குப்பின் சில எழுத்தாளர்களது ஆளுமைகள்(!) என்பனபற்றியெல்லாம் பேச்சு சுவாரஸ்யமாய் இருந்தது. நேசக்குமாருடன் தான் ஒரே ஒருமுறை பேசியதாய்ச் சொல்கிறார். (திண்ணை வாசகர்கள் கவனிக்கவும்!)

இந்தியாவிலே அதிக வார இதழ்களைக் கொண்டிருந்தாலும் கேரளாவில் நல்ல இலக்கியத்திற்கென்று ஒரு மரியாதை இருக்கிறது. அங்கிருக்கும் சில படைப்பாளிகளும் அதனைச் சிறப்பாய் வெளிக்கொணர்கிறார்கள் என்கிறார். ஒரு பத்திரிகை ஆசிரியப்பணி கேரளாவில் கிடைத்தபோது (அப்போதிருந்த சம்பளத்தை விட பத்து மடங்கு அதிகமாய் இருந்தாலும்) அதில் தான் எழுதுவதற்கு அதிகம் நேரமிருக்காது என்பதாய் அதை உதறியதைப் பெருமையாய்ச் சொல்கிறார்.

உணவுக்கட்டுப்பாட்டில் மிகுந்த சிரத்தையாய் இருக்கிறார் திரு.ஜெயமோகன். எண்ணையில் பொறித்த உணவுகளைக் கண்டு காததூரம் போகிறார். பேசிக்கொண்டிருக்கும்பொழுதே அவரது சிந்தனைகள் வேறொரு உலகத்தின் அடி ஆழத்துக்குச் சென்றுவிடுகின்றன. ஜீவன்தாரா அவரை நனவோடைக்குள்ளும் சிந்தனைச்சுரங்கத்துக்குள்ளும் அவ்வப்போது வயப்படுத்திவிடுகிறாள்.

முத்தமிழ் விழா, இலக்கிய நண்பர்கள் சார்ந்த கூட்டங்கள் மற்றும் உரையாடல்கள், சிறுகதைப்பட்டறை என எல்லா வகையான இலக்கிய சமாச்சாரத்திற்குள்ளும் (எழுத்தாளரின் மனைவி என்பதற்கப்பால்) ஒரு மேம்பட்ட வாசகியாய் பங்காற்றிய திருமதி. அருண்மொழிநங்கை ஜெய மோகனைப் பார்த்து பிரமித்தது உண்மை! எத்தனை இலக்கியவாதிகளுக்கு கிடைக்கும் இத்தகைய பேறு!

தமிழிலயக்கிய உலகில் மிகச்சிறந்த விமர்சகராயும் மிகச்சிறந்த படைப்பாளியாயும் இருந்தும் ஒரு சராசரி மனிதராய் எல்லோரிடமும் கலக்கும் திரு.ஜெயமோகனைச் சந்திக்கும் வாய்ப்பு பெற்றமைக்காக இறைவனிடம் மீண்டும் நன்றி சொல்லி எல்லாம் வல்ல ஆதிபகவன் அவருக்கு நல்ல சுகங்களைத்தரவேண்டும் என வேண்டிக்கொண்டு தற்போதைக்கு உங்களிடமிருந்தும் விடைபெறுகிறேன்.

அன்பன்,
எம்.கே.குமார்.



விடைகள்:

அ). மிகச்சிறந்த கதைகள்.
12 கதைகள் பெற்று முதலிடத்தைப் பிடிப்பவர்கள் இருவர். ஒருவர் புதுமைப்பித்தன் மற்றவர் அசோகமித்திரன்.

ஆ). மிகச்சிறந்த கதைகள்.
8 கதைகள் எழுதி இரண்டாமிடத்தைப் பிடிப்பவர்கள் பலர். 1.கு.அழகிரிசாமி 2.தி.ஜானகிராமன் 3.கி.ராஜநாராயணன் 4.சுந்தர ராமசாமி 5.ஜெயகாந்தன் 6.கோணங்கி

இ)ஏழு கதைகளுடன் மூன்றாமிடத்தில் சுஜாதா

ஈ) ஆறு கதைகளுடன் அடுத்த இடத்தில் லாசரா, ந.பிச்சமூர்த்தி, அ.முத்துலிங்கம், ஆ.மாதவன், வண்ணதாசன், ஜெயமோகன் மற்றும் எம்.யுவன்


நன்றி:
திரு & திருமதி ஜெயமோகன்,
தமிழ் எழுத்தாளர் கழகம் சிங்கப்பூர்.

Wednesday, August 02, 2006

முத்தமிழ் விழா

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்திய தமது முப்பதாம் ஆண்டு நிறைவு விழா, முத்தமிழ் விழாவாக சிங்கப்பூர் பாலிடெக்னிக்கின் கலையரங்கில் கடந்த 29ம் தேதி மாலை சிறப்பாக நடந்தேறியது.

விழாவிற்குத் தலைமைதாங்கி கொஞ்சும் தமிழிலும் மேதமை ஆங்கிலத்திலும் அசத்தி அமர்ந்தார் திரு.தர்மன் ஷண்முகரத்னம், சிங்கப்பூரின் கல்வியமைச்சர் மற்றும் உதவி நிதி அமைச்சர். கருத்துரையை திரு.ஜெயமோகனும் இலக்கியப்பேருரையை திரு.வைரமுத்துவும் ஆற்றுவதாய் அழைப்பிதழில் போடப்பட்டிருந்தது. அதைப்பற்றி பிறகு பார்ப்போம்.

விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தை மிக அழகான உச்சரிப்புகளோடு ஒரு மாணவி பாடினார். மிகக்குறைந்த வயதிலேயே பாட்டுவட்டுகளும் அவர் வெளியிட்டிருக்கிறாராம்.

Photobucket - Video and Image Hosting
அதற்குப்பிறகு கதைசொல்லும் போட்டியில் வென்ற சிறுவயது மாணவி பெத்தனாட்சி கதை சொல்ல மேடையேறினார். அடடா! என்ன உச்சரிப்பு, என்ன அபிநயம்! வாரி அணைத்துக்கொள்ளவேண்டும் போலிருந்தது அக்குழந்தையை. மிக எளிமையான உடையில் இருந்ததால் எனக்கு இன்னும் பிடித்துப்போனது.

அதனைத் தொடர்ந்து செல்வி ஸ்ருதி ரமேஷ் மற்றும் அவருடைய தோழி இருவரும் இணைந்து வழங்கிய கண்ணோடு காண்பதெல்லாம் பாடலுக்கான நடனநிகழ்ச்சி பாராட்டக்கூடியதாய் இருந்தது.
Photobucket - Video and Image Hosting

அதற்குப்பிறகு ஆரம்பித்தது பாலர் மற்றும் தொடக்கப்பள்ளி மாணவமாணவிகளுக்கான மாறுவேட இறுதிப்போட்டி. கட்டபொம்மன்களும் கண்ணகிகளும் திருவள்ளுவரும் தமிழ்த்தாயும் வீரசிவாஜியும் வெறுமனே வந்துவிட்டுச்செல்லாமல் அழகுமொழியில் அதிரவைத்து அனைவரின் நெஞ்சையும் கவர்ந்தார்கள் என்றுதான் சொல்லவேண்டும். கட்டபொம்மனாய் நடித்த செவாலியே கூட இம்மாதிரி கையைச் சொடுக்கிப் பேசவில்லை என்னுமளவுக்கு அசரவைத்தார்கள் சிறுவர்கள். கண்ணகி சிலம்பை மன்னன் எதிரில் வீசியதில் எதிரில் அமர்ந்திருந்த அமைச்சர் அவர்கள் கொஞ்சம் திணறித்தான் போனார். அருகிலிருந்த தனது சீன உயர் அதிகாரிக்கு அவர் அதை விளக்கிச்சொன்னது தெரிந்தது. முத்துகளும் மாணிக்கங்களும் மேடைக்குக்கீழே சிதறிக்கிடந்தன.

எழுத்தாளர் கழகத்தில் பொருளாளர் பதவி வகிக்கும் திருமதி. சித்ரா ரமேஷ் மற்றும் செயலாளர் திரு.சுப.அருணாசலம் ஆகியோர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்கள்.

சிங்கப்பூரில் தமிழுக்கு அடையாளம் கொடுத்த தமிழவேள் திரு.கோ.சாரங்கபாணி அவர்களுடைய நினைவாக ஒவ்வொரு வருடமும் தமிழ்வேள் விருது வழங்கும் பணியும் நடந்தேறிவருகிறது. இம்முறை கவிஞரேறு அமலதாசு அவர்களுக்கு அவ்விருது வழங்கப்பட்டது. ஐந்தரை பவுனும் பாராட்டுச்சிறப்பிதழையும் பெற்ற அவர் குரல் தழுதழுக்க கண்கள் சலசலக்க உணர்ச்சிப்பிழம்பானார்.

1967லே என்று ஆரம்பித்த அவர், அதற்குப்பிறகு பலவருடங்கள் முந்திபிந்தி பல உதாரணங்களைக் கூற ஆரம்பித்தார். முடிக்கவும் என்று நிகழ்ச்சி நெறியாளர் கொடுத்த குறிப்புகளையெல்லாம் நிராகரித்து முடிக்க மறுத்தவர், வைரமுத்து அவர்களை கலைஞருக்கு மிக நெருக்கமானவர் என்றும் வைரமுத்து சொன்னால் எது வேண்டுமானாலும் கலைஞர் செய்வார் என்றும் முன்மொழிந்து அப்படியே இந்திய ஜனாதிபதி திரு. ஏ.பி.ஜெ.எ அவர்களுக்கும் வைரமுத்து அவர்கள் எவ்வளவு நெருங்கிய நண்பர் என்பதையும் கூட்டத்திற்குச்சொன்னார்.

தமிழ்வேள் திரு. கோ.சா வுக்கு சென்னை மெரீனாவில் ஒரு சிலை வைக்கத்தான் இத்தனை கூப்பாடும் என்பது பிறகு தெரிந்தது.அமரர். கோ.சா அவர்களுக்கு உரிய மரியாதையை தமிழகத்தில் (திராவிடர் கழகத்தின் ஒரு கல்லூரி கட்டிடத்திற்கு கோ.சாரங்கபாணி அரங்கம் என்று பெயர் பொறித்து திரு.வீரமணி அவர்கள் கௌரவப்படுத்தியது ஞாபகம் இருக்கலாம்) அவர் எதிர்பார்ப்பதில் ஒரு நியாயம் இருப்பதை உணரமுடிந்தாலும் மெரீனாவில் இன்னொரு சிலை என்பதை இப்போதெல்லாம் கோர்ட்டுகளே தீர்மானிக்கின்றன.

எழுத்தாளர் கழகத்தின் தலைவர் திரு. ஆண்டியப்பன் அவர்கள் தனது வரவேற்புரையில் (தலைமையேற்கும் அரசு ஆட்களை எளிதாக மடக்கும் வழக்கமான காரியத்தில் தானும் நுழைந்து) அமைச்சரிடம் ஒரு வேண்டுகோளை வைத்தார்.

அதற்குப்பிறகு அமைச்சர் பேசியது போக, வெற்றிபெற்ற குழந்தைகளுக்கும் சிறுகதை, கவிதைப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

அடுத்துவந்தார் திருமதி சித்ரா ரமேஷ், திரு.ஜெமோவை பேச அழைக்க. ஜெ.மோவைப்பற்றிய ஒரு விசாலமான கவனமறிதலை வீசியவர் மறக்காமல் கஸ்தூரிமானையும் நான் கடவுளையும் சேர்த்துக்கொண்டார்.கூட்டம் சிறிது சலசலப்புடனும் ஏனோதானோவென்றும் ஆரம்பித்த வேளை, ஜெயமோகன், 'மற்ற மேடைப்பேச்சாளர்களைப்போல நான் பேச முடியாமல் போகலாம், எனது பேச்சும் அப்படிப்பட்டது இல்லை' என்று ஒரு ஜெர்க் கொடுத்து பேச்சை ஆரம்பிக்க, கூட்டம் நிதானித்து பேச்சுக்குள் இறங்க எத்தனித்தது.
Photobucket - Video and Image Hosting

'இலக்கியம் என்பது எதற்காக' என்ற தலைப்பில் பேச ஆரம்பித்தவர், காந்தியை எடுத்தாண்டு, கோபல்லகிராமத்தின் மூதாட்டியின் வாக்கை முன்வைத்து, இந்திய நாட்டின் அடிப்படையை ஆராய்ந்து, இலக்கியங்கள் இருப்பது மன அறம், மனித அறம், சமூக அறம் ஆகியவற்றை வளர்க்கத்தான் அல்லது பேணத்தான் என்றார். பலவாழ்க்கையில் தன்னை நுழைத்துப்பார்க்க இயலாத வாசகன் இலக்கியத்தின் வாயிலாக அவற்றைச்செய்துகொள்ள விரும்புகிறான் என்றும் சொன்னார். ஆண்முகத்தில் முடி இருக்கும், பெண்முகத்தில் இருக்காது, பெண் சருமம் மிருதுவாய் இருக்கும், இவற்றிற்கு தன் உடலை விதவிதமான அலங்காரங்களில் தானே பார்த்துக்கொள்ளப்பிடிக்கும் என்று இப்பூமியில் வாழும் மனிதர்களை குரங்குகளாய் எண்ணி ஆய்வு மேற்கொள்ளும் ஒரு இன்னொரு கிரகவாசி உதாரணத்தையும் சொன்னார்.

இவ்வாழ்வியல் அறத்தில் முழுதும் நிற்கும் காந்தி போன்றவர்களுக்கு இலக்கியமே தேவையில்லை என்றும் காந்தி தன் வாழ்நாளில் (டால்ஸ்டாயின்(என நினைக்கிறேன்) ஒரே ஒரு புத்தகம் தவிர) எந்த இலக்கியத்தையும் படிக்கவில்லை என்றும் அவர் சொன்னார். ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வந்தபோது முதன்முதலில் அவர்களை வரவேற்று உபசரித்தது இந்திய தேச அறவாழ்வின் அடையாளம் என்றும் அவர்களும் அதற்கேற்றவர்களாய் தம்மை (முதலில்) காட்டிக்கொண்டதும் காரணமென்றார். (இதைச்சரியாகப் புரிந்துகொள்ளாத வைரமுத்து அவர்கள் என்ன செய்தார் என்பது அடுத்து வருகிறது.) தாய் தந்தையரை இழந்து ஒரு நாடோடிபோல தான் அலைந்த காலத்தில் இந்தியதேசம் எங்கும் ஒருவேளைச்சாப்பாட்டுக்குக்கூட தான் பட்டினியாக இருந்ததில்லை என்றும் காரணம் இந்தியாவில் இருக்கும் எல்லாத் தாய்மார்களும் அவ்வளவு அறநெறி வாய்ந்தவர்கள் என்று அவர் சொன்னபோது அரங்கமே கரவொலியால் அதிர்ந்து அடங்கியது. இன்னும் சில இடங்களில் கைத்தட்டலையும் பெற்ற அவருக்கு இது ஒரு நிறைவான பேச்சாகவும் கேட்டவர்களுக்கும் திருப்தியாகவும் இருந்திருக்கும் என உறுதியாக நம்பலாம்.

Photobucket - Video and Image Hosting
கவிப்பேரரசு அதற்கடுத்த நாள் நடத்திய கவியரங்கத்தில் மிகச்சிறப்பாகச் செய்ததாக எல்லோரும் சொன்னார்கள். அந்த அளவுக்கு முதல்நாள் அவர் பேசிய பேச்சு, அபத்தமோ அபத்தம் என்பதை அவர் நன்றாக உணர்ந்துகொண்டார் போலும்!

'வடக்கிலிருந்து வரும் வாடை, தெற்கிலிருந்து வரும் தென்றல், கிழக்கிலிருந்து வரும் கோடை, மேற்கிலிருந்து வரும் கூதல்' என்று பேசி, 'ஆகவே தமிழர்களே'( ம்ம், கை தட்டுங்கள் என்பதற்காய்) என ஒரு நிறுத்து நிறுத்தி பிறகு இணையத்திலும் பலகாலமாய கேட்டுக்கேட்டுப் புளித்துப்போன சில டாக்டர் ஜோக்குகளையும் சொல்லி 'பேசு தமிழா பேசு' என்றார்.கவிப்பேரரசு தான் கவிழ்வது தெரிந்ததாலோ என்னவோ, 'நண்பர் ஜெயமோகனின் இக்கருத்தில் முரண்படுவதற்கு வருந்துகிறேன் எனச்சொல்லி, ஆங்கிலேயர்கள் வந்து வெற்றிபெற்றது நம்முடைய அறத்தாலல்ல, பிளவால், ஒற்றுமையின்மையால் என்று சொன்னார். இதை சில நிமிடங்கள் வலியுறுத்திச்சொன்னார். மறக்காமல் கலைஞரைப் பாராட்டினார்.

இந்தியக்கூட்டங்களுக்கே உரித்தான சில 'நல்ல' விஷயங்கள் சிங்கப்பூர இந்தியர்கள் கூட்டத்திலும் இருக்காது என்று நான் நம்பியதை கான்கிரீட் போட்டு சமாதியாக்கினார்கள் சிலர்.

அமைச்சர் வரும்போது அரங்கமே எழுந்துநின்று கரவொலி எழுப்பவும் என்று சொன்னவர்கள், அமைச்சர் வந்தபிறகு ஜெயமோகனை அழைத்துவந்து அமரச்செய்துவிட்டு நிகழ்ச்சிகளை ஆரம்பித்துவிட்டார்கள். திடீரென 'ம்ம், எல்லோரும் எழுந்து நின்று கரவொலி எழுப்புங்கள்' என மயில்சாமி ஒரு படத்தில் சொல்வதுபோல கவிப்பேரரசு வைரமுத்து வருவதை பறையறிவித்தார்கள். கூட்டமே எழுந்து வெள்ளையாடையில் வந்த தேவனை தரிசித்தது. மிடுக்கு குலையாமல் வந்தமர்ந்தார் அவர். தாமதத்திற்கு காரணமோ வருத்தமோ அவரும் சொல்லாத நிலையில் வைரமுத்து அவர்களுக்கு மட்டும் இத்தகையை அதீத வரவேற்பு ஏன் என்பதாய் சில சலசலப்புகள்.

நிகழ்ச்சி நடத்துதலில், பரிசு வழங்குதலில் என முன்னுக்குப்பின்னாய் பல தவறான அறிவிப்புகள்.அமைச்சரின், வைரமுத்து அவர்களின் இடத்தை அடைத்து குழந்தைகளும் பெரியவர்களும் போட்டோ எடுத்துக்கொண்டிருக்க மேடைக்குக் கீழேயும் புரோகிராம் நடந்தது. மேடை நிகழ்ச்சியைப் பார்ப்பதா இல்லை கீழே போட்டோஷெஷனை பார்ப்பதா என எல்லோரும் விழித்தனர்.

எனினும் ஒட்டுமொத்த முத்தமிழ்விழாவில் குழந்தைகளின் வாயிலாகத் தமிழ்த்தாய் சிரித்துமகிழ்ந்திருப்பாள். அவளின் அறஉணர்வு, உண்மைகளை அவளுக்கும் உணர்த்தியிருக்கும்.

(குறிப்பெடுக்காமல் எழுதியது. கருத்துகளில் ஏதேனும் தவறிருக்கலாம்!)

Friday, July 28, 2006

கண்டேன் திரு.ஜெயமோகனை!

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் தனது முப்பதாம் ஆண்டு நிறைவு விழாவை நாளை சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக கொண்டாட இருக்கிறது.

சனிக்கிழமை மாலை 'சிங்கப்பூர் பாலிடெக்னிக்' வளாகத்தில் நடைபெறும் முத்தமிழ் விழாவில் மூன்று 'பெரும்புள்ளிகள்' கலந்துகொள்வதாய் ஏற்பாடு.

முதலாவதாய் சிங்கப்பூரின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரும் கல்வி அமைச்சர் மற்று உதவி நிதி அமைச்சரான திரு. தர்மன் ஷண்முக ரத்தினம்.

இரண்டாவதாய், எப்போதெல்லாம் தமிழ்த்தாய் தனது புதல்வர்களை இலக்கிய ரசனைக்குள் இழுத்துச்செல்ல விரும்புகிறாளோ அப்பொழுதுதெல்லாம் ஆட்கொள்ளுபவர்களில் ஒருவரான இலக்கியத்திலகம் திரு. ஜெயமோகன்.

மூன்றாவது, தமிழ்த்தாயின் செல்லக்குழந்தைகளில் ஒருவரும் இன்பப் பாட்டுகளுக்குச் சொந்தக்காரருமான தமிழினமுரசு கவிப்பேரரசு திரு. வைரமுத்து.

முத்தமிழ் சங்கமத்தைப் பார்த்துவிட்டு வந்து பிறகு இது தொடர்பாய் எழுதலாம் என இருக்கிறேன்.

ஆனால், வாழ்வில் மறக்கமுடியாத மாபெரும் நாவல்கள் படைத்த, நான் மிகவும் மதிக்கும் ஒரு நாவலாசிரியரை-கதைஞரைச் சந்திக்கும் ஒரு இனிய அனுபவம் நேற்று வாய்த்தது. இச்சந்திப்பு பற்றியும் இன்னபிற பின் தொடரும் நிகழ்வுகளின் தளம் பற்றியும் விரிவாக எழுத ஆசைப்படுகிறேன். பார்க்கலாம்.

Photobucket - Video and Image Hosting

Sunday, July 09, 2006

வன்மையாக கண்டிக்கப்படவேண்டியது இது!

கடந்த 2004 ஆம் ஆண்டிலிருந்து போலீசாரை மண்டைகாய வைத்ததும், தமிழகத்தை ஆட்டிவந்த பிரபல முக்கியமான செ, ஜெ, வழக்குகளைப்போல புகழ்பெற்று விளங்கியதும், அனுமார் வாலென நீண்டு, விசாரணை முடிவற்று இலக்கின்றி அலைந்து கொண்டிருந்ததுமான குளித்தலை ஆசிரியை மீனாட்சி கொலை வழக்கு ஒருவழியாய் இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது.

மீனாட்சி டீச்சர் தினமும் நிறைய நகை அணிந்துகொண்டு பள்ளிக்குச் செல்வது வழக்கம் என்றும், சாராயம் குடிப்பதற்காக அவரின் நகைகளைக் கொள்ளையடிக்க தீர்மானித்து எப்போதும் அவர் செல்லும் வழியை கவனமாய் நோட்டமிட்டோம் என்றும் அப்படியே ஒருநாள் அங்கேயே அவரை மடக்கி வாழைத் தோட்டத்திற்குள் இழுத்துச்சென்று நகைகளைப் பறித்து, விடாது பெய்த மழையிலும் அவரை மாறி மாறி கற்பழித்தோம் எனவும் இவைகளை மறைக்க கொலையும் செய்ததாகவும் போலீசில் வாக்குமூலம் தந்திருக்கின்றனர் கொலையாளிகளான இருவர்.

தமிழ்நாட்டில் நடக்கும் மிகச் சாதாரணமான கொலைகளில் ஒன்றைப் போல தோன்றும் இக்கொலை முக்கிய ஒரு கொலையாக இடம் மாறத்துவங்கியது யாரால், எப்போது, எப்படி?

இக்கொலை செய்ததாக இப்போது கைது செய்யப்பட்டிருக்கும் இருவரும் பெரிய கேடிகளெல்லாம் இல்லை. பெரிதாகத் ஸ்கெட்ச் போட்டு கொலை செய்பவர்களும் இல்லை. அதுவும் அவ்வூரிலேயே இருப்பவர்கள். டீச்சரின் நகை அவர்களது மனைவிகளுக்கே வந்திருக்கிறது குடிப்பதற்காய் விற்றது போக. இப்படியெல்லம் பல பாயிண்டுகளைக் குறிவைக்காத இந்தியாவின் ஸ்காட்லான்ட் யார்டாம் தமிழக கேவலத்துறை சாரி காவல்துறை திட்டமிட்டு ஒரு குட்ம்பத்தைப் பழிவாங்கியிருப்பது, வெறுமனே அவமானகரமானது என்பதாய்ச் சொல்லிவிட்டுச் செல்லமுடியாதது.

தமிழ் சினிமாவில் வரும் கதாநாயக பழிவாங்கல் படலம் போல, கொலை செய்தவர்களை விட்டு சில அப்பாவிகளைப் பிடித்து விசாரணை என்ற பெயரிலும் உண்மை கண்டறியும் சோதனை என்பதாயும் மனவேதனைக்கு உட்படுத்திய காவல்துறையை என்ன செய்வது? ஒரு ஆளுங்கட்சி எம்.எல்.ஏவிற்கே இந்நிலையெனில் (அதுகூடவே காரணமாயிருந்தாலும்) சாமான்யர்களின் கதி என்ன? ஹேபியஸ் கார்பஸ் மனு எப்படியெல்லாம் படுத்தும் ஒரு அப்பாவிக் குடியானவனை? போலீசாரின் அராஜகம் அத்துமீறல் முடியாதபொழுது கிடைத்தவனைப் பழிவாங்குதல் என்ற இத்துறையின் மூலக்கூறுகள் எத்துணை பொறுப்பற்றவை!

இதுகாறும் போலீசாரால் புழுகப்பட்டு வந்த அப்பாவிகள் விடுவிக்கப்பட்ட வுள்ளனர். தெரியாமல் பிடித்துவிட்டோம், மன்னித்துவிடுங்கள் என்று மட்டும் சொல்லி இரு வருடங்களாய் படுத்திய கொடுமையை எளிதாக மறைத்துவிட முயலலாம் தமிழக காவல்துறை! ஆனால் இது நியாயமா என்பதுதான் நம் கேள்வி.

மரபணுச்சோதனை, மயக்கவிசாரணை என்பவையெல்லாம் போக முன்னாள் எம்.எல்.ஏவான திரு. பாப்பா சுந்தரம், 2006 தேர்தலில் சில ஓட்டுகளில் தோற்பதற்குக்கூட போலீசாரின் பொறுப்பற்ற இக்கொலை வழக்கு விசாரணைதான் காரணமாயிருந்திருக்கிறது.

காரணகாரியமில்லாமல் பொதுமக்களையும் போக்கத்தவர்களையும் பொறுப்பற்றதனமாய் கைதுசெய்து அதனால் அவர்கள் தம் வாழ்விழந்து, மானமிழந்து, மரியாதையிழந்து, குடும்பமிழந்து இறுதியில் நிரபராதியாய் நிற்பது எப்பேர்ப்பட்ட கொடுமை என்பதை எப்போது இக்காவல்துறை உணரும்?

அன்பன்,
எம்.கே.

Tuesday, March 07, 2006

T.N Assembly Election- An Exclusive View!

தமிழக தற்போதைய அரசியலும் எதிர்காலத் தேர்தல் முடிவுகளும்- ஒரு பார்வை!

அமைதிப்படையில் அமாவாசை ஆசைப்படும் சட்டமன்ற அரண்மனை(க்குள்) மகாராணி ரெடி. தார தம்பட்டையுடனும் வல்லிய கோஷம் மற்றும் வாழ்க முழக்கமுடன் நுழைய, மாப்பிள்ளையும் அவரது வீட்டார்களுமே பாக்கி. ராணியை அடைய 80 வயதுக்காரர்களில் இருந்து எல்லோருக்கும் ஆசை. ராணியை ஏன் வழக்கம்போல் வளமையான தமது தோழியாக்கக்கூடாது என்று தோழியர் கூட்டம் ஒன்றும் களத்தில் குதித்துவிட்டது. ஏத்தனை முறை தோழியாய் இருந்தோம், இப்போது மட்டும் என்ன? எல்லோரும் ஆசைப்படலாம்; தவறில்லை. ராணிக்கு இப்போது என்ன பிரியம்? மீண்டும் தோழியா? இல்லை மீண்டும் ஆசைநாயகியா?
கடந்தமுறை ராணியை தோழியாக்கி வைத்திருந்தவர்களுக்கு அவ்வுறவை எப்படியும் தக்கவைக்க ஏகத்திட்டங்கள்; தந்திரங்கள்; செயல்முறைகள் என ஒருபக்கம். மறுபக்கம் பதினெட்டுப்பட்டி நாட்டாமைகளும் ஒன்றிணைந்து ராணியை மீட்டே தீருவது என்று கங்கணம். ஏற்கனவே ஒரு பஞ்சாயத்தில் ஒன்றிணைந்து வெற்றிபெற்ற ஆசை நாக்கிலே எச்சிலை ஊற்றுவித்தாலும் நாட்டாமைகளுக்குள்ளே இருக்கும் சுய அதிகார சுயலாப எண்ணங்கள் இனிய நாற்பதுவானதை இன்னா 234 என்றாக்கிவிடுமோ என்னவோ!

தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் பெற்றதில் ஆரம்பித்து தலைகீழாய் நின்றும் இதுவரைக்கும் அங்கீகாரம் பெறமுடியாதது, யானைச் சின்னம் முதல் பூனைச் சின்னம் வரை கொண்டது, வட்டார கட்சி முதல் தேசிய கட்சி வரை என தமிழகத்தில் இருக்கும் பல்வேறு கட்சிகளுக்கும் இருக்கும் ஒரு முக்கிய ஒற்றுமை தேர்தல் நேரத்தில் அவர்களாகவே பறையடித்துக்கொள்ளும் அவர்களது ஒட்டு வங்கிப்பலமும் (பிச்சை கேட்டு வாங்கும்) உரிய மரியாதையும் தான்!

நிலைமை இப்படியெல்லாம் இருக்க, முதலில் அ.தி.மு.க வை எடுத்துக்கொள்வோம். இதன் சாதக பாதகங்களை இனி அலசுவோம்.

தமிழ்நாட்டின் கடலோரப்பகுதி அரசியல்வாதிகளில் பலர் (கட்சிபேதமின்றி) ஒரு விஷயத்தைப் பற்றி லேசாக ஒரு காலத்தில் கனவுகூடகண்டனர். இது மிகைப்படுத்துதல் இல்லை. உண்மை. வருத்தங்களில் தவித்தது போக, இன்னொரு சுனாமி வந்தால் நன்றாயிருக்குமோ என்பதுதான் அது.

சுனாமி நிவாரணத்தின் போது கலெக்டரும் மற்ற அதிகாரிகளும் ரேஷன் கார்டை அல்லது அதுபோன்ற ஒன்றைக் கையில் வைத்திருந்தவர்களுக்கெல்லாம் அவர்களது வாயில் அப்போது வந்ததை வைத்து அள்ளித்தள்ளியிருக்கின்றனர். அரிசியும் பணமும் அப்படி அரசாங்கம் அள்ளி வீசியது போல இதுவரைக்கும் யாரும் எப்போதும் தந்ததில்லை அல்லது தரமுடியாது என்கின்றனர். பல அரிசி லாரிகளை அரபிக்கடற்கரைபக்கம் வேறு அனுப்பியும் வைத்திருக்கின்றனர்.

சுனாமி நிவாரணத்தில் அரசு மிகுந்த அக்கறையுடனும் தீவிரத்துடனும் ஈடுபட்டிருக்கிறது. நடுநிலைமையாளர்கள் அனைவராலும் இதில் அரசின் செயல்பாடுகள் பாராட்டப்பட்டவையாக இருக்கின்றன. இது ஆளும் அதிமுகவிற்கு பெரும் பலம்.

வெள்ளம் மற்றும் அது சார்ந்த நிவாரணங்கள்:
சென்னையின் மிகத்தாழ்வான ஒரு பகுதி. ஒருவாரம் படகில் போக்குவரவு. எல்லோருக்கும் உணவு. ஒருவாரம் அப்பகுதியில் எந்தக்குழந்தையும் பள்ளிக்கு விடுமுறை எடுக்கவில்லை; எவரும் அலுவலகத்திற்கு செல்லாமல் இல்லை. ஏந்த யுவதியும் சமைக்க இயலவில்லை எனினும் சாப்பிடாமல் அல்லது தனக்கு வேண்டியவர்களைப் பட்டினியாய்ப் பார்க்கவில்லை. அந்த அளவுக்கு ஒட்டு மொத்த அரசாங்க இயந்திரங்களும் முழுமூச்சாய்ப் போராடி போர்க்கால அடிப்படையில் பணியாற்றி மக்களின் துயரைத் துடைத்திருகின்றன.

தமிழகத்தின் பலபகுதிகளில் கலெக்டர்களை வெள்ளத்திலும் மழையிலும் பார்க்கமுடிந்ததாம். அவர்களுடன் கடலோரக்காவல்படையினரும் பாதுகாப்பு கெலிகாப்டர்களும் காணப்பட்டனவாம்.

கார்த்திகையில் அல்லது ஐப்பசியில் விதைத்த சம்சாரிகளைப் பார்த்தால் உங்களுக்குத் தெரியும், மார்கழி மாதத்தில் பிச்சை எடுக்கும் நிலையை ஒத்த்ப்ருப்பர். Pஊச்சிக்கு மருந்தடிக்கவோ உரம் போட்டு பயிரை செழுப்பி விடவோ வழியில்லாமல் தவிக்கும் நடுத்தர விவசாயிகள் கையில் இரு ஐந்நூறு தாள்! ல்லது ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டு.!

1000 ரூபாய் வாங்க வருபவர்கள் கையில் ஐம்பது ரூபாயைச் சில்லறையாக கொன்டுவந்து விடவும் என்று அதிகாரிகள் சொல்லியது போக, போற வழியில் செலவு செய்துவிடமுடியாதபடி ஒரு தாளோ அல்லது இரு தாளோதான் கொடுக்கவேண்டும் என்று முதல்வர் கேட்டுக்கொண்டதாக ஒரு பேச்சும் இருந்ததாம். அந்த அளவுக்கு அதிரடி. அரு ரேஷன் கார்டுக்கு 2000, 1000 பத்து கிலோ அரிசி சேலை வேட்டி மண்ணென்னை இப்படி. இன்னும் சில மாதங்களுக்கு யாரும் மறக்கமாட்டார்கள்.

சேலையை வாங்கி வைத்துக்கொண்ட பெண்களுக்கு இன்னுமொரு அதிர்ச்சி இன்பமாய்! மறுபடியும் இன்னொரு வேட்டி சேலை! தரமும் பரவாயில்லாமல்! பொங்கலுக்கு!

இவையெல்லாம் 'மே'யில் வரும் தேர்தல் வெள்ளத்திற்கு நிவாரணநிதியப்பா என்பவர்களுக்கெல்லாம் யாரும் காதுகொடுப்பதாகத்தெரியவில்லை! "எவுக குடுத்தியே? போங்கப்பா!" என்கின்றனர்.

சரி இதெல்லாம் இப்போது, ஒட்டுமொத்த 5 ஆண்டு நன்மைகள் என்ன என்பவர்களுக்கு, ஜெ.யின் சில அதிரடிகளை எடுத்துக்கூறுவது பொருத்தமாயிருக்கும்.

முதலில் நான் அப்படி நினைப்பது,
1. "டாஸ்மாக்"- ரவுடிகளும் அரசியல் செல்வாக்குப்பெற்ற பொறுக்கிகளுமாய் இணைந்து கொள்ளைக்கூட்டம் நடத்திய ஒயின்ஷாப் மற்றும் சாராய வியாபாரத்திற்கு சம்பட்டியால் சமாதி! மிக மிக போற்றத்தக்க ஒரு நிர்வாகத்திறமையாய் அதுமட்டுமல்ல தைர்யமாயும் கூறலாம். அடிக்கடி செய்யவேன்டிய செக்கிங், போலிகலப்பு, பாரில் முறைகேடு ஆளும் கட்சி தலையீடு என்பனவற்றையெல்லாம் (வரும்) அரசு இன்னும் கொஞ்சம் முறைப்படுத்தினால் மிகப்பெரிய வருமானத்தை பவிசாய் பாக்கெட்டில் போட்டுக்கொள்ளலாம்.

உடனே, டாஸ்மாக் சப்ளை செய்யும் ஆலை யாருடையது? சசிகலாவின் கணவர் நடராஜனின் அக்காள் புருஷனுடைய சகலையின் மாமா தம்பி மனைவியின் அக்கா புருஷனுடையது என்று சொல்லுவது சரியாகாது. ஆலையை ஏன் அரசு எடுத்துக்கொள்ளக்கூடாது என்றால், ஒரே பதில் வேண்டாம். அரசு தயாரிப்பின் அவலம் எல்லோருக்கும் தெரியும், விறபனையுடன் போகட்டும் அது என்பேன் நான். இது, அரசு கோட்டா, ரெக்கமென்டேஷன், யூனியன், ஸ்டிரைக், போனஸ் கேட்டு உண்ணாவுரதம் ஊர்வலம் மொட்டையடித்தல் வேலை நிறுத்தம், உற்பத்திக்குறைவு, நஷ்டம், தனியாருக்கு தாரை வார்ப்பு என்பதாய் முடியவேண்டாம்.

2. மணற்கொள்ளைகளுக்கு முடிவு. அரசே நடத்தும் திட்டம். அட்டகாசம்!

3. தொழிற்படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு ரத்து- எதிர்கால மனநோயாளிகளை உருவாக்கும் கல்வித்திட்டத்திற்கு மரண அடி. ஏகோவை அரசு கைவிட்டு தகுதிவாய்ந்த கல்வியாளர்களுடன் பேசி இதை எளிமையாக்கி எல்லோருக்கும் உகந்ததாய் நிரந்தரமாக்கவேண்டும். அப்படிச்செய்தால் பெற்றோர்களும் குழந்தைகளும் அடையும் சந்தோசத்திற்கு அளவு இருக்காது.

4. விவசாயிகள்: கடன் தள்ளுபடி கடன் வட்டி குறைப்பு உழவர் அடையாள அட்டை (ஐடி) ஐடி வைத்திருப்பவர்களுக்கு இன்சூரன்ஸ். கு.தலைவர் இறந்தால் ஒரு இலட்சம். காயங்களுக்கு நிவாரணம். பிரீமியம் அரசே கட்டும்! ஐட்ட் வைத்திருப்பவரின் மனைவி கர்ர்பமாக இருந்தால் அரசு உதவித்தொகை, பெண் குழந்தை பிறந்தால் உதவி. கரும்பு கொள்முதல் விலை ஏற்றம்

விவசாயிகள் காட்டில் அடைவிளைச்சல் என்றால் மற்ற எல்லா உழைப்பாளிகளுக்கும் இது போன்று இருக்கிறது. அரசு அலுவலர்கள் முதல் நெசவாளிகள் வரை அனைவைரையும் கவனித்தாகிவிட்டது. விடுதலைப்போராட்ட வீரர்களின் மனைவிகள் முதல் மாணவர்கள் வரை ஏகப்பட்ட சலுகைகள். நானெல்லாம் படிக்கும்போது ஒரு சைக்கிள் வாங்குவதன்பது எவ்வளவு பெரிய உள்ளக்கிடைக்கை! அருமையான சைக்கிள்! ம்ம்ம்.

5.வீரப்பன் மற்றும் வீராணம் ஆகியவற்றையும் (அதி.மு.க காரர்கள் சேர்ட்துக்கொள்ளலாம்.) யோசிக்காமல் விட்டுவிடமுடியாது. முடியாது என்ற ஒன்றை சாதித்துக்காட்டியதற்காக அவரைப்பாராட்டித்தான் ஆகவேண்டும்.
ஆளும் (அதிமுக) அரசின் வெற்றி தொடரவேன்டுமானால் அதன் ஐந்து வருட சாதனைகளைச் சொல்லிவிட்டுச்செல்லலாம். ஆனால் எதிர்க்கட்சிக்கு? ஒரே ஒரு சொல்தான்; ஒற்றைச்சொல். ஆது கூட்டணி!

ஏந்தக்கட்சிக்கும் தேர்தல் நேரத்தில் கொள்கைகள் கிடையாதெனினும் ஏதிர்க்கட்சியான தி.மு.கவிற்கு ஒவ்வொரு தேர்தல் முடிவுக்குப்பின்னும் கொள்கையுண்டு. சென்ற நாடாளுமன்றத்தேர்தலில் 40 சீட்டுகளையும் வென்ற மயக்கத்தில் ஏழு கட்சிகளையும் ஒருங்கிணைத்து மாநில தேர்தலுக்கு வித்திட்டு வெற்றியாசை காண்கிறார்காள். ஆனால் 40ஐப் பிரிப்பது எளிது. 234ஐ?

எல்லோருக்கும் ஏதாவதொரு ஆசை இருக்கிற பட்சத்தில் கூட்டணிக்குழப்பங்கள் வர பெருமளவு இடமுன்டு. இதைப்பயன்படுத்த ஆளும் கட்சி கடைவிரித்துக் கொண்டிருக்கிறது. அங்கு திருப்தியில்லாதவர்கள் இங்கு விலைபோகலாம்.

அவ்வகையில் தமிழக தேர்தலில் ஏற்பட வாய்ப்புள்ள கூட்டணிகள் பற்றிப் பார்ப்போம்.
1.அதிமுக கூட்டணி: (மதச்சார்பற்றா (அ) ஜனநாயக (அ) ஐக்கிய இப்படி ஏதாவது ஒன்றைப் போட்டுக்கொள்ளுங்கள்.
அ. அ.தி.மு.க.
ஆ. பாரதிய ஜனதா (கூட்டணி ஜெயித்தால் வீராப்பாய் வெளியில் போய் சொல்லிக்கொள்ளலாம், தமிழகத்தில் தாங்களில்லாமல் எதுவும் இல்லை என்று. தோற்றால் வழக்கம்போல சத்தம் போடாமல் உட்கட்சிப்பூசலை கூறிவிட்டுக் கலைந்துவிடலாம்!)இ. ம.தி.மு.க (அண்ணன் தம்பி பாசம் தலைவருக்கிருக்கலாம், தொண்டனுக்கு? கட்டியணைப்பவர்களாயினும் தலைக்கு கடைசியில் கத்தியைத்தான் வைப்பார்கள் என்பது முன்னாள் தி.மு.க தொண்டனுக்குத்தெரியாதா என்ன? சன்டிவியின் மறைப்புகள் வேகம் கொடுக்கும். தன்மானம் என்பதாய் சில கோடிகளையும் சேர்த்து நின்று சில எம்.எல்.ஏக்கலைக் கண்டெடுக்கலாம்.)
ஈ. தின்டிவனம் காங்கிரஸ்
உ. கம்யூனிஸ்ட் வலது அல்லது இடது(கடைசியில் தொகுதி கூடுதலாய் கிடைக்கலாம்.)
ஊ. தீரன் பா.ம.க மற்றும் இதர உதிரிக்கட்சிகள். (புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, வன்னியர் சங்கம், பிரிந்த முஸ்லீம் லீக், பிரிந்த பார்வார்டு பிளாக் இதர)

2. தி.மு.க கூட்டணி: (அதேதான். தேசிய ஜனநாயக் கூட்டணி இல்லாவிட்டால் வேறு பெயர். பி.ஜே.பி அங்கு இருப்பதால் இங்கு மதச்சார்பற்ற சேர்த்துக்கொள்ளப்படவேண்டும்.)
அ. தி.மு.க
ஆ. காங்கிரஸ் (இப்போதைக்கு வெளியில் வராது! காரணம் இருப்பதைக்கெடுத்து வெறுப்பை விரும்பவில்லை)
இ. பா.ம.க. (காரணம், ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் அன்புமணிசாரை மறப்பதற்கில்லை. வந்தவர்கள் போனவர்கள் போக தன்மானத்தொகுதிகள் கிடைக்கும்.எந்தக்கட்சி ஆட்சியமைப்பும் கவலையில்லை. கையில் நாலு உப்புக்குச் சப்பில்லாத எம் எல் ஏக்கள் இருந்தால் போதும்.)
ஈ. கம்யூனிஸ்ட் இடது அல்லது வலது
உ. ம.தி.மு.க, தி.மு.க வைவிட்டு வெளிவரும் பட்சத்தில் விடுதலைச்சிறுத்தைகள் ஐயாவின் தயவால் உள்ளே நுழையலாம். மீண்டும் உதயசூரியன் சின்னம் வேன்டாம் என்பதைக் கெஞ்சிக்கேட்டுக்கொள்ளலாம்.
எ. அ.தி.மு.கவில் இல்லாத முஸ்லீம் கட்சி, மற்ற கட்சிகள்.

3. விஜயகாந்த் கட்சி:

அ. கடைசி நேரத்தில் சில சங்கங்கள்; லெட்டர்பேட் கட்சிகள்


இவைகளைத் தவிர்த்து இன்னபிற கட்சிகள் சேர்ந்து நான்காம் அணியோ இல்லை வேறு கூட்டணிகளோ ஏற்பட இப்போதைக்கு வாய்ப்பில்லாதது போலத்தான் தெரிகிறது. ஏறக்குறைய கூட்டணிகள் முடிவாகிவிட்ட நிலையில் விஜயகாந்த் கட்சியை இழுக்க அதி.மு.க பேரம் நடத்தும் அல்லது மிரட்டும். எனினும் விஜயகாந்திற்கு காரியசித்தி ஏற்பட வழியில்லை என்றே தோணுகிறது.

பி.கு: இப்பதிவு எழுதியபோது வைகோவும் அதிமுக பக்கம் வரவில்லை; வி.சிறுத்தைகளும் வரவில்லை.

அன்பன்
தேர்தல்கிறுக்கன்.

Saturday, January 07, 2006

"உயிர் காக்கும் கடிதம்" - உண்மையா இது?

நண்பர்களுக்கு,

செய்திதாள்களில் வரும் செய்திகளை எந்த அளவுக்கு உண்மையென நம்புகிறோமோ அதே அளவுக்கு அதில் உதவிகேட்டு வரும் சில விஷயங்களையும் நாம் நம்பத்தான் வேண்டியுள்ளது. சமீப காலமாக தினமலரில் அத்தகைய (உயிர்காக்க உதவி கேட்டு வரும்) சில விளம்பரங்களை அடிக்கடி காண நேர்கிறது. பின்வருவன, அப்படியாக வந்த சில கடிதங்கள். ஒரு உயிருடன் விளையாடும் இச்செய்தியின் உண்மை நிலை, உதவ நினைக்கும் நண்பர்கள் எவருக்கும் கூட சந்தேகத்தில் நிறுத்திவிடத்தோணலாம்.

Image hosted by Photobucket.com Image hosted by Photobucket.comImage hosted by Photobucket.com

இக்கடிதங்களில் கூறிப்பிடப்பட்டுள்ள முகவரியிருகில் வசிப்பவராகவோ வேறேதும் தொடர்பின் வழி யாரும் இதுபற்றி தெரிந்திருந்தால் நண்பர்கள் யாவரும் அறியத்தரலாம்.

சில மாதங்களுக்கு முன் இப்படி வந்த இரு கடிதங்களுக்கு நண்பரொருவர் செய்த உதவிகளின் நிலையும் உணரக்கூடும்.

நன்றி.

எம்.கே.

Search This Blog