Sunday, December 26, 2004

ஒரு உயிரும் ஒரு பிளாக்கும்! (A Blog with A Soul!)

கடந்த வாரங்களில் ஒருநாள் சி·பி தளம், சமாச்சார் ஆகியவற்றின் ஆசிரியர் ஆர்.வெங்கடேஷ் சிங்கப்பூருக்கு வந்திருந்தார். இங்கு நடந்தஅவரது 'நேசமுடன்' புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துரையாடலும் இடம்பெற்றிருந்தது. (இதையெல்லாம் பற்றி எழுதியிருக்கிறேன் இதற்கு முந்தைய பதிவில்!) கலந்துரையாடலில் 'இணையம்' வந்து 'பிளாக்குகளில்' கலந்த போது, நான் எழுந்து அக்கேள்வியைக் கேட்டேன். 'ஆளாளுக்கு இப்படிப் பிளாக்குகளைப் பதிவுசெய்துகொண்டு எழுத ஆரம்பித்தால் இந்த பிளாக்குகளால் என்ன தான் பெரிதான நன்மை இருந்துவிடக்கூடும்? பிளாக்கு..பிளாக்குகள் பிளாக்குகளின் கூட்டம் இப்படியாய் இது தொடர்ந்தால் இதன் முடிவு என்னவாய் இருக்கும்? எழுதுகிற எல்லோரும் வருகிற எதிர்வினைகளைக் கண்டு (அடிப்படையான விவாதம்) கொள்ளாமல் இப்படியே எழுதிக்கொண்டு போவதின் முடிவுதான் என்ன?'

ஆர்.வெங்கடேஷ் என்ன பதில் சொன்னார் என்பது இருக்கட்டும். இக்கேள்விக்கு எனக்கு இவ்வளவு சீக்கிரத்தில் கடவுள், மனம் கசியும் படி பதிலைக்காட்டுவார் என்று நான் நினைக்கவேயில்லை. ஒருவரின் அந்தரங்கமான டயிரியை 'மேற்கோளாய்' காட்டி விடைளித்திருக்கிறார் அவர்.

சிங்கப்பூர் சீனப்பெண்மனி அவர். சிங்கப்பூரில் மாஸ்டர்ஸ் முடித்து டச்சுக்காரர் ஒருவரை மணந்து நெதர்லாண்ட்லில் வாசமாகிவிட்டார். இணையத்தில் அவ்வப்போது எழுதி வந்த 32 வயதான அவர், தன்னைப்பற்றி கொஞ்சம் ஏனோ எழுதவேண்டும் என்று தோன்ற, ஒரு 'பிளாக்' ஆரம்பித்து இதோ மொத்தம் 11 பதிவுகள். அதிலும் பத்து மட்டுமே அவருடையது. பதினோராவது பதிவை முடித்துவைக்க அவரால் முடியவில்லை.

மிகவும் அமைதியான முறையில் கடந்த வாரத்தில் மரணமடைந்து விட்டார். பத்தே பதிவுகள்! இன்று உலகம் முழுவதும் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்படுகிறது!
http://dyingis.blogspot.com/

டச்சு நாட்டுப்பிரஜையாகிவிட்ட அவர் தனது வேதனைகள் பற்றி 169 பக்கங்களில் புத்தகம் ஒன்றையும் எழுதி முடித்திருக்கிறார். அது இங்கே! http://www.gracechow.info/

அகால மரணமைடைந்த 'கிரேஸ் சோ' விற்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்!
சக வலைப்பதிவாளன்.

Monday, December 20, 2004

'மாலன்' மற்றும் 'இருவர்' -விழாக்கள்!

மாலன் மற்றும் வெங்கடேஷ் - புத்தக வெளியீட்டு விழாக்கள்.

இடம்: சிங்கப்பூர்.

முதல் நாள்: 13/12/2004 மாலனின் புத்தக வெளீயீடு.

கூட்டம் தொடங்க அரைமணித்துளிகள் இருந்த வேளையில் நான் உள்ளே நுழைந்தேன். எனக்கு சற்று முன்னால் சென்ற ஜெயந்தி சங்கரி அப்போது மாலனிடம் பேசிக்கொண்டிருந்தார். படியை விட்டுக் கீழே இறங்கும்போதே என்னைப் பார்த்துவிட்ட மாலன், இனிய புன்னகையோடு எனக்கு 'பதில் வணக்கம்' சொன்னார். அறிமுகப்படுத்திக்கொண்டேன்.

இளமையாக இருக்கிறார் மனிதர். இனிமையாகப் பேசுகிறார். அழகாக புன்னகைக்கிறார். பாரதியை மூச்சாகக் கொண்ட ஒரு மனிதருக்கு முன்னால் நாம் நிற்பதே ஒரு பெருமைதானே! நேற்றுத்தான் மின்வெளியில் பாரதி மணி மண்டபம் திறந்ததைப் பற்றிச்சொன்னார். இரண்டு நாட்கள் நடந்து முடிந்த இணைய மாநாடு பற்றியும் பேசினார். முக்கியமான ஒரு கேள்வியை அவரிடம் கேட்க வேண்டும் என்றிருந்தேன். என்ன கேள்வி என்பது தெரிந்தால் நீங்களும் கூட ஆர்வமாகிவிடுவீர்கள். அதற்குள் சாப்பாட்டு அயிட்டங்கள் (உளுந்துவடை, லட்டு, பெயர் தெரியாத கார அயிட்டம் ஒன்று, உப்புமா, சட்னி, கா·பி, டீ. இதுதான் மெனு. மு. மேத்தா வந்திருந்த பொழுது 'கேசரியும்' வைத்திருந்தார்கள். இப்போது இல்லை. தனிப்பட்ட முறையில் எனக்கு இதில் வருத்தம்!) மெதுவாக வர ஆரம்பித்திருக்க முதலில் வயிற்றுக்குணவு என்று அதனை நோக்கி நடந்தோம்.

சிங்கப்பூர் தமிழ்ச்சூழலின் அனைத்து பெரிய தலைகளும் தவறாமல் ஆஜராயிருந்தார்கள். மூத்த பத்திரிகை ஆசிரியரும் சிங்கப்பூர் தமிழ்ச்சூழலின் முக்கிய கர்த்தாக்களில் ஒருவரும் இந்தமாத 'காலச்சுவடி'ல் கவர் ஸ்டோரியாய் சிங்கப்பூரின் தமிழ் சார்ந்த சூழல் பற்றி பேட்டி காணப்பட்டிருப்பவருமான திரு.வை. திருநாவுக்கரசு அவர்கள், 'உத்தமம்' அமைப்பின் தலைவரும் இணைய மாநாட்டைத் தலைமையேற்று நடத்தியவருமான திரு. அருண் மகிழ்நன் (எவ்வளவு அருமையான பெயர்! இவரைப்பற்றி எப்போதாவது ஒரு தனிக்கட்டுரை வரைவேன் என்று தோன்றுகிறது!), 'ஒலி 96.8'ன் தலைவர் திரு. அழகிய பாண்டியன், தேசிய நூலகச் சேவைகளுக்கான தலைமைப்பொறுப்பு பொறுப்பு வகிக்கும் திருமதி. புஷ்பலதா, எழுத்தாளரும் வழக்கறிஞருமான திரு.உதுமான் கனி, எழுத்தாளரும் கலைஞர் எம்ஜிஆரின் முன்னிலையில் சீர்திருத்தத் திருமணம் செய்துகொண்டவரும் பாலச்சந்தரிடம் உதவியாளராய் இருந்தவரும் தற்போதைய தொழிலதிபருமாகிய மா.அன்பழகன், 'முரசு அஞ்சல்' நிறுவனர் முத்து நெடுமாறன் அவர்கள், தேசியப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியரான திரு. திண்ணப்பன், சிறந்த உள்ளூர் கவிஞரான திரு.க.து.மு இக்பால், கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ மற்றும் இன்னபிற எல்லா முக்கியத்தமிழர்களும் இலக்கிய ஆர்வலர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

"கங்கைக்கரைத் தோட்டம் ...கூட்டம்... கண்ணன் நடுவினிலே.." என்ற பாடல்தான் நினைவுக்கு வந்தது ஆர். வெங்கடேஷ் அவர்களைப் பார்த்தபோது. பிரபல இணைய மகளிரணி கூட்டம் கொஞ்ச நேரத்திற்கு அவரை மொய்த்திருந்தது. பத்ரி தன் மனைவியோடும் மகளோடும் ஆடைக்குறைப்போடும் வந்திருந்தார். எம்.கே.குமார் என்று அறிமுகப்படுத்திக்கொண்டவுடன் ஏனோ கொஞ்சம் பின் வாங்கியது போலிருந்தது. என்ன காரணமோ தெரியவில்லை.

ஒருவழியாக வெங்கடேஷ் அவ்வளையத்தை விட்டு வெளியே வந்தார். அறிமுகப்படுத்திக்கொண்டேன். ஈழநாதனும் சேர்ந்துகொண்டார். பேச்சு அவரது வலைக்குறிப்பு பக்கமாய்த் திரும்பியது. கமலைப் பற்றிய அவரது ஒரு பதிவுக்கு வந்திருந்த பின்னூட்டங்கள் பற்றிப்பேசினோம். பிறகு பத்ரியும் இணைந்துகொண்டார். இந்தியாவிலிருந்து புத்தகங்கள் தருவிப்பது பற்றி பேச்சு நிலவியது. முடிவாக எல்லோரும் அரங்கத்திற்குள் நுழைய ஆரம்பிக்க, அப்போதுதான் பார்த்தேன். ஜெயந்தி சங்கரியும் ரம்யா நாகேஸ்வரனும் வியாபாரத்தில் வெற்றிக்கொடி நாட்டிக்கொண்டிருந்தார்கள். 'சொல்லாத சொல்லும் சிறுகதைத் தொகுப்புகளும்' குறைந்த விலைக்கு விற்கப்பட்டன.

கூட்டம் ஆரம்பித்தது. கவிஞர் நெப்போலியன் (நானும் எனது கருப்புக்குதிரையும் கவிதைத் தொகுதியின் ஆசிரியர்.) நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். திருமதி புஷ்பலதா, திருவாளர்கள்.அருண் மகிழ்நன், அழகிய பாண்டியன், உதுமான் கனி, திண்ணப்பன், க.து.மு.இக்பால், ஆர்.வெங்கடேஷ் மற்றும் ஜெர்மனியிலிருந்து வந்திருந்த சுபாஷினி கனகசுந்தரம் ஆகியோர் 'வாழ்த்தியும் வாழ்த்தியும் வாழ்த்தியும்' (தட்டுறான், தட்டுறான், தட்டிக்கிட்டே இருக்குறான்னு எழுத்தாளர் பைரவன் சொல்றது மாதிரி படிச்சுக்குங்க!) பேசினார்கள். மாலனே அவ்வப்போது கொஞ்சம் வெட்கத்தில் குறுகிக்கொண்டிருந்தார். 'இரண்டாம் பாரதிதாசனே' என்றழைத்தார் திரு.இக்பால்.!

மரத்தடி நண்பர்கள் பலரையும் பார்க்கும் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஈழநாதன், அருள்குமரன், ஜெயந்தி, ரம்யா, மூர்த்தி (வேலைப்பணி காரணமாக தாமதமாக வந்து என்னுடன் சீக்கிரமாக கிளம்பி விட்டார்) , பத்ரி, நம்பி, (நிறைய பேச வேண்டும் என நினத்திருந்தேன். எழுந்து கிளம்பும்போதுதான் கவனித்தேன்.) வலைப்பூ நண்பர் அன்பு எல்லோரிடமும் பேச வாய்ப்புக் கிடைத்தது. கூட்டத்தை திறம்பட முன்னின்று நடத்திக்கொண்டிருந்த திருமதி. ரமா சங்கரன் அவர்களுக்கு என்னிடம் பேச நேரமில்லை. என்னையும் தெரியவில்லை.

எல்லாவற்றிற்கும் அடிப்படையான 'நேரம்' சீக்கிரம் நழுவிக்கொண்டிருக்க, மாலனின் ஏற்புரை தாமதமாகவே, நான் இரவுப்பணி செல்ல வேண்டி இருந்ததால் 2035க்கு கிளம்பி விட்டேன். மாலனின் உரையை நான் இழப்பது ஒரு பக்கம் வேதனையாய் இருந்தாலும் அந்நேரத்தில் கிளம்பியுமே கடைசியில் டாக்ஸி பிடிக்க வேண்டி வந்துவிட்டது. இவையெல்லாம் போக அவரிடம் நான் கேட்கவேண்டிய கேள்வியையும் கேட்க முடியவில்லையே என்ற வருத்தம் வேறு மண்டைக்குள் குடைந்துகொண்டேயிருந்தது.

அதனால் என்ன? இப்போது கேட்டு விடுகிறேன், கேள்வி இதுதான். 'விருமாண்டிக்கு தூக்கு தண்டனை ரத்தாகி விட்டதா சார்?'

இதுபோன்ற ஒவ்வொரு கூட்டத்தில் நான் கலந்துகொள்ளும் போதும் ஏதோ ஒரு வெற்றிடம் எங்கோ நிரப்பப்படுவது போலத்தான் இருக்கிறது. அது வயிறாகக் கூட இருக்கலாம்.!

*******************
ஆர்.வெங்கடேஷ் அவர்களின் புத்தக வெளியீடு.

நாள்:14/12/2004

நானும் நண்பர் மானஸசென்னும் அம்மோக்கியோ நூலக அரங்கத்திற்குள் நுழைந்த நேரம் ஏறக்குறைய சிற்றுண்டி அயிட்டங்கள் தீர்ந்திருந்தன. இம்மாதிரிக் கூட்டங்களுக்கு இதுக்காகவேணும் இனிமேல் முதலிலேயே செல்லவேண்டும் என்பதை உணர்ந்துகொண்டு கண்ணில் தெரிந்த எல்லா நண்பர்களையும் நலம் விசாரித்துக்கொண்டிருந்தேன். நேற்று மாலன் புத்தக வெளியீட்டு விழாவில் என்னைப்பார்த்திருந்த 'இன்றைய விழா நாயகர்' ஆர். வெங்கடேஷ், 'வாங்க குமார்' என்று பெயரைச் சொல்லி அழைத்தார். சிங்கப்பூரின் சில பெரிய தலைகளும் பெரிய கவிஞர்களுமாய் களை கட்டியிருந்த கூட்டம் 'நேசமுடன்' புத்தகம் வாங்குதலிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தது.

வழக்கம் போல புத்தக விற்பனைப் பிரிவை மகளிர் அணி கைப்பற்றிக்கொண்டது. ஜெயந்தி சங்கரியும் ரம்யா நாகேஸ்வரனும் காரியத்தில் கண்ணாயிருந்தார்கள்; காசாயிருந்தார்கள்.

கூட்டம் ஆரம்பிக்க, மேடையில் இருந்தவர்கள் திருவாளர்கள் முத்து நெடுமாறன், உதுமான் கனி மற்றும் சிங்கப்பூர் வசந்தம் சென்ட்ரல் தொலைக்காட்சி தலைவர் முகமது அலி ஆகியோர். புத்தகத்தை முத்து நெடுமாறன் வெளியிட முகமது அலி பெற்றுக்கொண்டார். வரவேற்புரையை உதுமான் கனி ஆற்ற, அவர் தனக்கு இதற்கு இருக்கும் தகுதி என்ன என்பதை மீண்டும் இரண்டாம் முறையாகச் சொன்னார். அமரர் நா.கோவிந்தசாமி அவர்களுக்கு இவர் நன்றி சொல்லியாகவேண்டுமாம்.

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய பிச்சினிக்காடு இளங்கோ அவர்கள் (கவிஞர், இரவின் நரை கவிதை நூலுக்குச் சொந்தக்காரர். பட்டுக்கோட்டைக்காரர்) கவிதை எழுதுவது சுலபம் கட்டுரை எழுதுவதுதான் கடினம் என்றார். அப்படித்தானா என்பதை ஆர்.வெங்கடேஷ் சொலியிருக்கலாம். அவரே முதலில் கவிஞர் அல்லவா?. பிறகுதானே இதெல்லாம்.

வாழ்த்தியவர்களின் பேச்சுகளுக்குப் பிறகு நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக அமைந்த கலந்துரையாடல் நடைபெற்றது. அண்மையில் 'திசைகள்' பேட்டியில் அவர் சொல்லியிருந்ததை மீண்டும் 'ஒலி அன் ஒளி' பரப்பினார் வெங்கடேஷ். தான் மிகவும் சந்தோசமாகவும் மனத்திருப்தியோடும் இருப்பதாக சொன்னார் ஒரு கேள்விக்கான பதிலாக. (உண்மையிலேயே நல்ல உற்சாகத்தோடுதான் இருந்தார்.) 'பாரா' (பா.ராகவன்) வின் படைப்பு வேகத்தை மெச்சினார். வலைப்பூக்களின் எதிர்காலம் குறித்தான போக்கு எப்படியாகவும் அமையலாம் என்றார். இலக்கியப்படைப்புகள் எதுவும் இணையத்தில் இல்லை என்றே இவரும் சொன்னார். (எழுத்தாளர் பா. ராகவன் அவர்களும் இதையே ஒரு பேட்டியில் சொல்லியிருந்ததை நினைவு கூறவும்!) இணையத்தில் வரும் மறுமொழிகளுக்கு எப்போதும் தான் முக்கியத்துவம் தருவதில்லை என்றும் தனது கட்டுரை கருத்து சார்ந்து அது இருக்கும் வரை அதுவே தனக்கு மகிழ்ச்சி தருவதாகவும் சொன்னார். கார்ஸியா மார்குவேஸ் பற்றியும் (ஒரு) கருத்து சொன்னார். எனக்கு கார்ஸியாவையும் கார்ஸியாவுக்கு என்னையும் தெரியாததால் நான் இதில் தலையிடவில்லை.

பெரிய தலைகள் போக, மரத்தடி நண்பர்கள் பலரும் வந்திருந்தனர். நம்பி வரவில்லை, மூர்த்தி வந்ததை நான் கவனிக்க வில்லை.
அருள்குமரன் தனது குடும்பத்தோடு வந்திருந்தார். 'தமிழ் இனியனு'க்கு மேடைப்பேச்சில் அவ்வளவு ஆர்வமில்லை போலும். தயங்காமல் தடங்கலை ஏற்படுத்தினார். (தமிழ் இனியன் அருள்குமரனின் அப்பாவுக்கு பேரன்.)

நிகழ்ச்சி முடிந்தபின் ஆர்.வெங்கடேஷ், காலச்சுவடு சிபிச்செல்வன், ரமா சங்கரன், புஷ்பலதா, ஜெயந்தி சங்கர், ரம்யா நாகேஸ்வரன், மானஸஜென், ஈழநாதன், பனசை நடராஜன் (மரத்தடியில் 'நட்டு') ஆகியோர் பேசிக்கொண்டிருந்தோம். நூலகம் மூடும் நேரம் முடிந்தும் உள்ளே இலக்கியம் பேசிக்கொண்டிருந்த எங்களை நூலகப்பெண் பரிதாபத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார். பாவம் அவருக்கு என்ன அவசரமோ?

சிபிச்செல்வன் கொடுத்த காலச்சுவடு காலண்டர், ஜே.கிருஷ்ணமூர்த்தி, மறைந்த எம்.எஸ் அம்மா, அபுல்கலாம் ஆசாத், ஈ.வெ.ரா, சி.வி.தாமோதரம் பிள்ளை, குமரப்பா, காந்தி, அம்பேத்கர், என்.எஸ்.கே போன்ற மிக அழகானவர்களின் அழகான ஓவியங்களோடு இருந்தது. கிடைத்தால் விடாதீர்கள்!
நன்றி வணக்கம்.
எம்.கே.


Friday, December 10, 2004

'இஸ்லாம்- ஒரு எளிய அறிமுகம்' -- எனது பார்வை!

எம்.கே.

"எனது பால்ய காலத்து நெருங்கிய நண்பன் ஒரு இஸ்லாமியன். எனது பக்கத்துவீட்டுக்காரர் கூட முஸ்லீம் நண்பர்தான். இன்றும் கூட எனக்கு நான்கைந்து இஸ்லாமிய நண்பர்கள் இருக்கிறார்கள். எனது அலுவலகத்தில் எனக்கு நெருக்கமானவர்கள் முஸ்லீம் அன்பர்கள் தான். நான் வளர்ந்த எனது பெரியம்மாவின் வீட்டருகில் சர்க்கரைவள்ளிக்கிழங்கு விற்று பிழைப்பை நடத்தினாலும் எனக்கும் ரெண்டு இனாமாய்த் தரும் கிழவியைக் கூட நாங்கள் துலுக்கர் வீட்டு 'அம்மா' என்றுதான் அழைப்போம். அவ்வளவு ஏன் இன்றும் இணையத்தில் ஐந்து இஸ்லாமிய நண்பர்கள் எனக்கு இருக்கிறார்கள்!" இப்படியெல்லாம் சொல்லிவிட்டுத்தான் 'இஸ்லாம் - ஒரு எளிய அறிமுகம்' புத்தகத்துக்கான எனது பார்வையை இங்கு நான் எழுதவேண்டுமென்றால் மன்னித்துக்கொள்ளுங்கள் சகோதரரே, நீங்கள் இஸ்லாம் சொல்லும் 'நிஜத்தின்' படி முழுமையாக வாழவில்லை என்றுதான் என்னால் சொல்ல இயலும். ஏனெனில் இதுவரை நானும் ஓரளவிற்காவது இறைவனின் சொல்படிதான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பது இப்போது எனக்குத்தெரிகிறது. இறைவனுக்கு நன்றி.

'அட! யானை ரொம்பப் பெரியது என்றார்கள், வால் சின்னதாக இருக்கிறதே?!', 'என்னப்பா இது.. யானைக்காது இப்படியா இருக்கும்?' 'இதெல்லாம் பொய், இவ்ளோ பெரிய யானை இத்தனூண்டு வாழைப்பழத்தையா சாப்பிடும்?' 'யானையால் வேகமாக ஓட முடியாதா? அதற்கெதுக்கு இவ்வளோ பெரிய கால்?' 'யானை வரும் முன் மணிச்சத்தம் வருமென்றார்கள், அப்படி எதுவும் கேட்கவில்லை?!' 'ஓஹோ..நாலு காலும் ஒரு தும்பிக்கையும் இருக்கிறது. இதுதான் யானை போல!' 'இல்லை இல்லை நாலு கால்கள் எல்லாவற்றிற்கும் தான் இருக்கிறது, தந்தம் இருந்தால் தான் அது யானை!' இப்படியாய் குருடர்கள் யானையைப் பற்றித் தடவிப் பார்த்து பேசிக்கொண்டிப்பது போலத்தான் மதிப்பிற்குரிய பெருமானார் அருளிய இஸ்லாம் பற்றி நாம் எல்லோரும் பேசிக்கொண்டிருப்பதும்.

கடற்கரையில் தான் நிற்கிறேன். இங்கிருந்து கடலின் ஆழம் சொல்வது அபத்தமாயினும் கடலுக்குள் கொஞ்சமேனும் பயணம் செய்துவிட்டு வந்தவர்களின் அனுபவ வழி அதன் பிரமிப்போடு காலடி நனைக்கிறேன். கடலுக்குள் போய் வந்தார்கள் சரி. நிஜமான ஆழம் தெரியுமா அவர்களுக்கு என்ற சந்தேகமும் கொஞ்சம் எட்டிப்பார்த்து போனாலும் அதை அப்படியே விட்டு விட்டும் நாம் கடலின் ஆழத்தைப் பற்றிப்பேசிக்கொண்டிருக்க முடியாது. எல்லாம் நம்பிக்கையின் அடிப்படையில் தான் என்ற ஒரு வாக்கியத்தோடு எதையும் முடித்து விடலாம். தாயின் கற்பிலிருந்து இறந்த பின் வரும் வாழ்க்கை வரை! ஆனால் நம்பிக்கைக்கும் ஒரு காலவெளி இடவெளி இருக்கிறதல்லவா?

ஏறக்குறைய முன்னுரையிலேயே தனது புத்தகத்தின் தலைப்பை முடித்து விட்டார் திரு.ரூமி அவர்கள். அதற்குப்பின் வருபவன யாவும் என்னைப் பொருத்த வரை புத்தகத்தலைப்புக்குச் சம்பந்தம் இல்லாதவைகளாகும். நபி(ஸல்) கண்ட இஸ்லாம் இன்று வாழ்கிறதா? என்று புதுத்த¨லைப்பை வைத்து விவாதிக்கலாம்.

'இதோ..பாருங்கள், வால்! இதுதான் முதலை! இதை வைத்துக்கொண்டு எப்படி இது ஆளை விழுங்கும்?' என்று ஆச்சரியத்துடனான கேள்வியோடு ஆரம்பிக்கும் ரூமி அவர்கள் மெல்ல உடலுக்கு வந்து 'பாவம் கரடுமுரடாய் இருக்கிறது இதைப்போய் இப்படிப்பேசுகிறார்களே!' என்று இரக்கப்படுகிறார். பிறகு அகலமான வாய்ப்பகுதிக்கு வந்தவுடன், 'பாருங்கள், மனிதர்களை விழுங்கவா இது? ஏதாவது சாப்பிட வேண்டுமல்லவா அதற்குத்தான் இந்த வாய்..பாவம் இதுவும் உயிர் வாழ வேண்டுமல்லவா?' என்ற இயற்கையின் அபிமானியாய் முதலையின் படைப்பிலக்கணம் பேசுகிறார்.

மேலே சொன்ன உதாரணம் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் தீவிரவாதம் பற்றியது. ரூமி அவர்களே ஓரிடத்தில் சொல்லியிருக்கும்படி 'இஸ்லாத்தில் தீவிரவாதம் என்பதே இல்லை. நபி (ஸல்) அவர்களின் வாழ்வும் வாக்கும் அடங்கிய ஹதீதுகள் அதைத்தான் சொல்கின்றன' என்று சொல்லிவிட்டுப் பிறகு அதற்கான எதிர்முனைப்புக்கான காரணத்தை ஏதாவது ஒரு பத்திரிகையின் எட்டாம்பத்தி மூலைச் செய்தியை எடுத்துக்கொண்டு வலு சேர்க்கும் வித்தை படைப்பது நியாயமான உணர்வுடையதாய் இல்லை. தன்னைக்கொல்ல தன் எதிரே வாளோடு நிற்பவனையே நேசித்து மனிதராக்கிய மதிப்பிற்குரிய பெருமானார் எங்கே? இவர்கள் எங்கே? யாராயினும் சரி தான் வாழ்ந்து வரும் நம்பிக்கைகளில் சப்பைக்கட்டு கட்டுவது இம்மைக்கு வேண்டுமானால் விளைச்சல் தருவதாய் அமையும். மறுமைக்கு? 'நீங்கள் வரம்பு கடந்து விடவேண்டாம், ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறியவர்களை நேசிப்பதில்லை' (சூரா பகரா. 02:190) என்று சொல்லும் பெருமானாரா இத்தகைய வன்முறைகளுக்கும் வானுயர கோபுரங்களுக்கு விமான முத்தம் கொடுக்கும் செயலுக்கும் துணை நிற்கப்போகிறார்? இதை ஏன் ரூபி அவர்கள் அடிக்கடி தலையைச் சுற்றி வந்து முக்கைத் தொடப்பார்க்கிறார் என்று தெரியவில்லை.

திருமறை அருளப்பட்ட ஒன்று. மிக நேர்த்தியான கட்டமைப்போடு 23 வருடங்களாய்த் தொகுத்த ஒன்றுதான் திருமறையாம். வானவர் ஜிப்ரயீல் ஹீராகுகையில் தனிமையில் இருந்த நபி (ஸல்) அவர்களிடம் வந்து 'வஹி' (இந்து மதத்தில் ஞானதீட்சை) மூலம் ஆரம்ப ஐந்து வசனங்கள் அவருக்குச் சொல்லியதும் பிறகு அவ்வப்பொழுது அவருக்குச் சொல்லப்பட்டதையெல்லாம் அவரது நண்பர்கள் மனதிலும் கையில் இருந்த பொருட்களனைத்திலுமாக எழுதிக்கொண்டனர் என்றும் கூறப்படுகிறது. பிறகு வந்த நபி(ஸல்) அவர்களின் தோழர்களும் மனைவிமாரும் அவைகளை திறம்படத் தொகுத்திருக்கின்றனர்.

சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்கிற மனநிலைதான் தூய்மையான மனநிலை என்றும் அதையே இறைவன் விரும்புகிறார் என்றும் ஒரு திடமான 'விமர்சன-சுய சிந்தனையின்' ஏற்பு கொள்ளாத வெளிகளால் சூழப்பட்ட தளத்திலே இயங்குவதை நாம் உணர்ந்துகொள்ள முடிகிறது. ஜிகாத் என்கிற அருமையான ஒரு வார்த்தையும் பொருளும் இப்படித்தான் மாற்றுரு கொண்டு விட்டது போலும். ஜிகாத் என்ற வார்த்தைக்கு 'அமைதியான மனப்போராட்டம்' என்பதுதான் திருமறை சொல்லும் பொருளாம்! தனக்குத்தானே தீமைக்கெதிராய் ஒருவர் கொள்ளும் மனப்போராட்டம் என்பது இன்று எப்படி ஆகியிருக்கிறது பாருங்கள். இந்த மாற்றுருவுக்கு ரூமி அவர்கள் கொடுக்கும் வாதங்கள் பாசாங்குத்தன்மை கொண்டிருக்கின்றன.

சமயம் என்ற வார்த்தைக்கு பொருள் தரும் அர்த்தம் எதுவும் இல்லை எனச் சொல்லும் ருமி அவர்கள் மார்க்கம் என்கிறார். சமயம் என்பது சமைதல் என்ற வார்த்தையிலிருந்து வந்திருக்க வேண்டும். தகுதிப்படுத்துதல், வழிப்படுத்துதல், ஏற்றதாக்குதல் என்பதெல்லாம் இதற்கு சரிவராது என்று எப்படித்தோன்றியது? மனிதனை நெறிப்படுத்துவதற்காகத்தானே மதங்களும் இறையச்ச உணர்வுகளும் தோன்றின. '(இவ்வுலகில்) நேர்மையும் இறையச்சமும் கொண்டவர்களுக்கே அவ்வுலகம்' என்றுதானே திருமறையும் சொல்கிறது.

எந்த மதத்தோடும் ஒப்பிட்டு இஸ்லாமிற்கு பெருமையும் தகுதியும் மேன்மையும் தர வேண்டிய அவசியம் இல்லை என்னும் திரு.ருமி அவர்கள், பிறகு ஏன் அடிக்கடி சிலைகளை வைத்து வணங்குபவர்களையும் சிலுவைகளை வைத்துக்கொண்டிருப்பவர்களையும் இன்னபிற யூதர்களையும் விவாதக்களத்திற்கு கொண்டு வந்திருக்கிறார் என்று தெரியவில்லை. வாளால் இஸ்லாம் வாழவில்லை, பரப்பப்படவில்லை என்பதைச்சொல்ல படாதபாடு பட்ட போதும் அதைச் சொல்வதற்கு போர்களையும் ஔரங்கசீப், திப்பு சுல்தான்களையும் சார்ந்து வருகிறார். கஜினி, கோரி முகமதுகள் திறமையாக மறைக்கப்பட்டிருக்கிறார்கள். பாபரையும் காணவில்லை. மூன்று சகோதரர்க¨யும் தந்தையையும் காவலில் வைத்த ஔரங்கசீப் நல்லவராகிவிட்டார். வரலாற்றாசிரியர்கள் கெட்டவர்களாகவும் வினோதமானவர்களாகவும் ஆக்கப்பட்டிருக்கின்றனர். (இவை எல்லாம் வாளால் வெல்லவில்லை என்பதைச் சொல்லவும் சமய சகிப்புத்தன்மைக்கும் இஸ்லாம் பரவ வழிவகுத்தவர்களுக்காகவும் சொல்லப்பட்டிருக்கின்றன. வேண்டியவர்கள் வேண்டிய உதாரணங்களுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.)

இஸ்லாம் பரவிய விதத்திற்கு ஏ.ஆர். ரகுமானும் காந்தியின் மகனும் கூட விளம்பரமாக வருகிறார்கள். இவைகளெல்லாம் தான் சொல்ல வந்த கருத்திற்கு எவ்வகையில் அவசியமாய் இருக்கிறது என்று ரூமி அவர்கள் சொல்லலாம். ஏனெனில் 1400 ஆண்டுகளாக வாழும், இன்னும் அசுரவேகத்தில் மனித இதயத்தில் குடிகொள்ளும் இஸ்லாத்திற்கு இவர்களெல்லாம் எவ்வகையில் உதாரண புருஷர்கள்? இவர்களையெல்லாம் காட்டி ரூமி அவர்கள் என்ன சொல்ல வருகிறார்? இவர்களையெல்லாம் (தனிமனிதர்களையெல்லாம்) வைத்தா இஸ்லாம் புனிதமானது என்று சொல்லவேண்டும்?

சமுதாய ஏற்றத்தாழ்வுகள் இஸ்லாம் சமுதாயத்தில் இல்லை என்பதை இஸ்லாத்தின் பரவுதலுக்கும் உலக மக்களுக்கு மிகவும் ஏற்றத்தக்கதாய் சொல்வதற்கும் அச்சாணியாய் பயன்படுத்திக்கொண்டிருக்கும் ஆசிரியர் ஈராக்கிலும் பாகிஸ்தானிலும் நடக்கும் சன்னி, ஷியா கலவரங்களுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்?

இறைத்தூதராகிய நபி(ஸல்)களின் தவறுகளைக்கூட வான்தூதராகிய ஜிப்ரயீல் (வான்தூதர்) கண்டித்திருக்கிறார். (அக்கண்டிப்புகளைக் கூட நபி(ஸல்) அவர்கள் திருமறையில் தொகுத்திருக்கிறார் இது மிகவும் நல்ல விஷயம்.) இதிலிருந்து தவறு செய்பவர் எவராயினும் தண்டனைக்கு உரியவரே என்னும் இறைவனின் போக்கும் உணர்த்துதலும் எல்லோரும் உணர்ந்துகொள்ளவேண்டிய இன்னொரு உண்மை.

நவீன விஞ்ஞானம் கண்டுபிடித்த சில அறிய செய்திகளை திருமறையில் அன்றே இறைவன் சொல்லியிருக்கிறான் என்பதாய்ச் சில விஷயங்களைச் சொல்லியிருக்கிறார் ரூமி அவர்கள். குழந்தை பிறப்பு பற்றி (துளி நீரால் படைத்தோம்.), வானம் பூமி அதனதன் பாதையில் சுழல்வது பற்றி [அவனே இரவையும் பகலையும் (உண்டாக்கினான்.) சூரியனையும் சந்திரனையும் சிருஷ்டித்தான். இவை வானத்தில் (தங்களுடைய வட்டவரையறைக்குள்) நீந்திச்செல்கின்றன. (சூரா அல் அன்பியா 21: 33)], நிழல்கள் தோன்றுவது பற்றி [(நபியே) உம் இறைவன் நிழலை எவ்வாறு (குறைக்கவும்) கூட்டவும் செய்கிறான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அவன் நாடியிருந்தால் அதனை நிலை பெறச்செய்திருக்க முடியும். சூரியனை நிழலுக்கு முன்னோடியாக நாம் தான் ஆக்கினோம். (சூரா ·புர்கான் 25:45)] இப்படியாக விஞ்ஞானத்தை சுமார் 1425 ஆண்டுகளுக்கு முன் உரைத்திருப்பதாக ரூமி அவர்கள் எடுத்துக்காட்டியிருக்கிறார்.

இத்தகைய இறை வசனங்கள் மேன்மையானதுதான். ஆனால் அவற்றை இருவிதமாக நாம் பார்க்க வேண்டும். ஒன்று அவை அருளப்பட்ட காலத்திற்கு முன்பாகவே எகிப்து நாகரிங்களிலும் சிந்து சமவெளி நாகரிங்களிலும் மக்கள் இவை எல்லாம் உணர்ந்து தெளிந்து வாழ்ந்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் எப்போது எத்தனை மணிக்கு சூரிய ஒளி இக்குகையில் விழும் என்பதைக்கூட உணர்ந்து கோபுரங்களையும் பிரபிடுகளையும் கட்டியிருக்கிறார்கள். கி.மு வில் வாழ்ந்த திருவள்ளுவர் கூட மிகத்தெளிவான சில கருத்துக்களைக் கூறியிருக்கிறார். அதேபோல சித்தர்களும் (பிற) ஞானிகளும் கூட குழந்தை பிறப்பையும் உலக இம்மை மறுமை வாழ்க்கையையும் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். எனவே இவைகளில் பிரமிப்பு உண்டாக்கும் வகையில் எதுவும் இருக்கிறதா எனவும் ரூமி அவர்கள் சொல்லலாம். இரண்டாவது, திருமறையின் இக்கருத்துகளில் ஒருவித மேலோட்டத்தன்மையே நிறைய காணக்கிடைக்கிறது. இரு பொருள்களில் அர்த்தம் தரும் வகையில் (பகவத் கீதையிலும் பைபிளிலும் இது போல நிறைய இருக்கின்றன.) இங்கு அதிகம் காணப்படுவதால் இறைவன் எல்லாவற்றுக்கும் பொருந்தும்படியாகவே இக்கருத்துகளை அளித்திருக்கிறான் என்றும் ஏற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.
'நம்பிக்கை' என்ற ஒற்றை வார்த்தைக்குள் இவ்வுலகின் எல்லா விவாதத்திற்குறிய விஷயங்களையும் அடைத்து அமைதியாய் இருந்துவிடலாம். ஆனால் விளக்கம் எதுவும் அறியாது தவறான வழியில் போய்க்கொண்டிருப்பவர்களை அவை சம்பந்தப்பட்ட தெளிவான விவாதங்கள் மீட்டுக்கொண்டு வரும் அல்லவா? அதுதானே எத்தகைய நேர்மையான வாழ்வியலுக்கான உறுதியான நிலைப்பாடும்.?! நேர்மையாக விவாதிப்பதால் அத்தகைய அர்த்தமுள்ள விவாதங்கள் எதுவும் யாரையும் எப்போதும் நம்பிக்கை இழக்க வைப்பதில்லை என்பதை எல்லோரும் உணர்ந்துகொள்ளவேண்டும். அத்தகைய 'மாற்றுக்கருத்துகளற்ற நம்பிக்கை' என்னும் வட்டத்தின் வெளி வந்து நின்று கொண்டு வட்டத்தின் செயல்பாடுகளையும் கோட்பாடுகளையும் பேசப்போகிறோம். நல்லதுதானே இது? ஆனால் நண்பர்களில் சிலர் (ஏன் இந்து மதத்தில் கூட அண்மையில் கைது செய்யப்பட்ட துறவி ஒருவரின் பிரச்சனையில் ஒருசிலர் அத்தகைய ஒரு வட்ட நிலைப்பாட்டைக் தமது நிலையாகக் கொண்டிருந்தனர்! இதுவும் தவறுதான்!) அது பற்றிப் பேசினாலே இறைத்தூதர்கள் சொல்லும் வழியை விட்டு கோபத்தின் வழி வெகு தூரம் போய்விடுகிறார்கள். அதுவே சரியானதாயும் சிலர் எண்ணுகிறார்கள்.

எவ்வாறு இந்து மதத்தில் சிலர் அதன் அடிப்படையான விஷயங்களை மறந்து அடிப்படையின் வெளி நிலைகளில் நேசம் கொண்டு அதையே முதன்மையானதாய் ஆக்கிக்கொண்டாடுகிறார்களோ அதே நிலை இன்றைய உலகின் எல்லா மதங்களிலும் ஆட்டுவித்துக்கொண்டிருக்கிறது என்பதை ரூமி அவர்களின் எழுத்து, நாமும் ஆங்காங்கு உணர்ந்து கொள்ள ஏதுவாகிறது. நபி(ஸல்) அவர்கள் சொன்னதின் அடிப்படையான கருத்துகள் தடம் மாறி விட்டனவோ என்பதும் இப்புத்தகத்தைப் படித்தபின் எனக்குத்தோன்றிய இன்னொரு கிளை எண்ணம்.

இறைவனுக்கு நன்றி.

எம்.கே.குமார்.

நன்றி:
திரு. நாகூர் ரூமி அவர்கள் ஆசிரியர், "இஸ்லாம் ஒரு எளிய அறிமுகம்"


கிழக்குப் பதிப்பகம், மைலாப்பூர். சென்னை.



Search This Blog