Friday, September 21, 2012

சிங்கப்பூர் டைம்ஸ் 2012

அரசியல், சினிமா என்கிறவகையில் பொழுதுபோக்குக்கு பஞ்சம் என்பதால் வெளிநாட்டு ஊழியர்கள், பணிப்பெண்கள் தொடர்பான விஷயம் எப்போதும் பரபரப்பாக பேசப்படும் சிங்கப்பூரில். அத்தகு செய்திகள் இரண்டு, சென்றமாதம் சிங்கப்பூரைப் பரபரப்பாக்கின.

சிங்கப்பூரில் இருக்கும் 200,000 வெளிநாட்டுப் பணிப்பெண்களுக்கும் 2013 ஆன் ஆண்டிலிருந்து வார விடுமுறை அளித்து சட்டமியற்றி இருக்கிறது சிங்கப்பூர் அரசு. வீட்டுவேலைக்கென வந்த பெண்களை குறிப்பிட்ட வேலைநேரம், ஓய்வுநேரம் என எதுவுமே இல்லாமல் வேலைவாங்கிக்கொள்வதையே குறியாய்க் கொண்டு ’அடிமைகள்’ என நினைத்தே செயல்படும் சிலருக்கு இது எரிச்சலை ஏற்படுத்தலாம். ஆனால் நியாயமான எல்லா உழைப்பாளிகளையும் போலவே அவர்களையும் நாம் அணுகவேண்டும்.

பணிப்பெண்கள் விஷயத்தில் அண்மையில் வாங்கிக்கட்டிக்கொண்ட நாடு மலேஷியா. பணிப்பெண்களை மலேஷியா தரக்குறைவாக நடத்தியதற்காக ஒட்டு மொத்தமாக பணிப்பெண்களை அங்கு அனுப்புவதை நிறுத்தியது இந்தோனேஷியா. இப்போது சில சட்டப் பாதுகாப்பு இறுக்கமாக்களுக்குப்பின் மீண்டும் அனுப்ப முன்வந்துள்ளது. சவூதி அரேபியா, தாய்லாந்து, தென்கொரியா, எமிரேட்ஸ் மற்றும் மலேஷியா நாடுகளில் மட்டுமே பணிப்பெண்களுக்கு விடுமுறை இல்லை. அதிலும்  மலேஷியாவில் தற்போது சில சட்ட மாற்றங்கள்.

இனி ஞாயிற்றுக்கிழமைகளில் தேக்காவிலும், ஆர்ச்சர்ட் ரோட்டிலும், லக்கி ப்ளாசாவிலும் நடக்கவே முடியாத அளவிற்கு இவர்கள் குவிந்துவிடுவார்கள். விளைவு, கருத்தரிப்பும் கள்ளத்தொடர்புகளும் கொலைகளும் பெருகும் என்றெல்லாம் ஒரு சிலர் இப்போதே புலம்ப ஆரம்பித்துவிட்டனர்.

இந்த பணிப்பெண் விடுமுறைச்செய்தியை கேள்விக்குள்ளாக்கியது அதே வாரம் நடந்த இந்த சம்பவம்.

மார்ச் 4 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு கேலாங் பகுதி பட்ஜெட் விடுதியொன்றில் ’பங்களாதேஷைச் சேர்ந்த 22வயது திரு. முகமது ருமோன்’ மற்றும் ’பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 33வயது மிஸ் ரெஸிலின் வினிகஸ்’ இருவரும் இரவு 11.30 மணிவாக்கில் கழுத்தறுபட்டு வெட்டுக்காயங்களோடு ரத்தவெள்ளத்தில் பிணமாய்க்கிடந்தார்கள். ருமோன் கட்டிடவேலைக்கும் ரெஸிலின் வீட்டு வேலைக்கும் நாடுவிட்டு நாடு வந்தவர்கள்.

ஆறுமாதத்திற்கு முன் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி ஒருவரையொருவர் காதலித்ததாகவும் மோதிரம் மாற்றிக்கொண்டதாகவும் நண்பர்கள் சொல்ல, இருவரும் இணைந்திருந்த புகைப்படங்களையும் அப்பெண் தனது ஃபேஸ்புக்கில் போட்டிருந்தார்.

அப்பையனைச் சந்திக்கச்சென்ற அந்த மாலையில் அதாவது ஒரு மணிநேரத்திற்கு முன்பு கூட தனது முகப்பக்கத்தில் தனது புகைப்படத்தைப் போட்டுவிட்டு ஜாலியாகச் சென்ற அந்தப்பெண் இறந்துபோயிருந்தார். அப்பையன் வழக்கத்திற்கு மாறாக அன்று காலைமுதல் அமைதியாக இருந்ததாகவும் மசூதிக்கும் சென்றதாகவும்  அறை நண்பர்கள் சொல்கிறார்கள்.

இரு தற்கொலை, ஒரு கொலை-ஒரு தற்கொலை, இரு கொலை என வெவ்வேறு யூகங்கள் ஆட்டிப்படைக்கின்றன. "Go for someone whose not only proud and glad to have u, but will also take the risk and effort just to be with u என்பதுதான் தனது பேஸ்ஃபுக்கில் எழுதியிருந்த கடைசி வாக்கியம்.

இருவரது குடும்பத்தாருக்கும் எனது அனுதாபங்கள்.

@@@
கங்கை அமரனுக்கு ’வாழ்நாள் சாதனையாளர்’ விருது, வெங்கட் பிரபுவிற்கு ’சிறந்த இயக்குனர்’ விருது, பிரேம்ஜி அமரனுக்கு ’துணைநடிகர் விருது’ என கங்கைஅமரனின் ’கலைக்குடும்ப விழாவாக’ கலக்கியது சிங்கப்பூரில் நடந்த ’அனைத்துல தமிழ்ப்பட விருது’ (International Tamil Film Awards – 2012) விழா. ’மங்காத்தாவும்’ சிறந்த படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

சூர்யா, ஆர்யா, சிம்பு, அமலாபால், சந்தானம் வருவார்கள் என நடுநாக்கை ’தக்காளிச்சாஸில்’ நனைத்துக்கொண்டு வந்தவர்களை எமாற்றினார்கள் வந்திருந்த ஒரே ஒரு ஹீரோ ’ஜெய்’ மற்றும் ஹீரோயின்ஸ் ’ஸ்ரேயா’ மற்றும் ’ஹன்ஷிஹா..!

வந்தவர்களுக்குத்தான் விருது என்று ஏதும் சொன்னார்களோ என்னவோ? ஜெய்க்கு சிறந்தநடிகர் விருதும் ஸ்ரேயாவிற்கு சிறந்தநடிகை விருதும் கொடுக்கப்பட்டது.

அடுத்தமுறை ”இண்டெர்னேஷனல் ஆஸ்கார் தமிழ்ப்பட விருது” என்ற ஒன்றை யாராவது ஏற்பாடு செய்து, அதை உலகநாயகன் கமலஹாசனுக்கு கொடுத்து  அவரை ”ஆஸ்கார் வென்ற நாயகன்” என்றாக்கும்படி விருது வழங்கும் கமிட்டியை ”பெடோக் நீர்த்தேக்க ஆவிநண்பர்கள் குழு” சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.

வசந்தம் தொலைக்காட்சியில் “மெகா ஸ்டார் புரடக்‌ஷன்ஸ்” சார்பில் வரப்போகும் ”கேட்டது கிடைக்கும் - 2” நிகழ்ச்சிக்கு ’audition’ நடந்தது. Auditionக்கு வந்தவர்களுக்கு வந்தநேரத்தைக்கொண்டு வரிசை எண் தரப்பட்டது. இறுதியில் அகரவரிசைப்படி பெயரைக் கூப்பிட்டுக் கேள்விகேட்டார்கள்.
                                                                                                      
சென்றமுறை நடந்த இந்நிகழ்ச்சியில் இறுதிப்போட்டியில் தங்கமும் பரிசுகளும் வென்றவருக்குக் கேட்கப்பட்ட கேள்வி  ”முத்து திரைப்படத்தின் தயாரிப்பாளர் யார்” என்பதாகும்! அவருக்கும் விடைதெரியாமல் அவருடைய போட்டியாளரும் தெரியாமல் முழிக்க, அந்தக்கேள்விக்கு கொஞ்சம் ”concession” வழங்கி ’முத்து படத்தின் இயக்குனர் யார்’ என்று கேட்கப்பட்டு இறுதியாக தங்கம் வழங்கப்பட்டிருந்தது வேறு எனக்கு கொஞ்சம் ஆசை காட்டியது.

’இந்தமுறை அப்படியெல்லாம் செய்து எங்களை நாங்களே அசிங்கப்படுத்திக் கொள்ளமாட்டோம்’ என்று, தயாரிப்பாளர் திரு கலைச்செல்வன் சொல்லி முதல் அதிர்ச்சியைக் கொடுத்தார் எனக்கு. சென்றமுறை வென்ற தள்ளுவண்டிக்குழந்தையோடு வந்த குடும்பமும் இந்தமுறை கலந்துகொண்டு இறுதிப்போட்டிக்குச் செல்லும் உத்வேகத்தோடு இருந்ததைக் கண்டு கொஞ்சம் கலவரம் ஆனேன்.

20கேள்விகளைக் கொண்ட ஒரு வினாத்தாளில் சில கேள்வி- பதில்கள் என்னைக் கவர்ந்தன. ’சிங்கப்பூரின் கோடு எண் எது’ என்ற கேள்விக்கு ஒரு  நண்பர் ’64’ என்று எழுதியிருந்தார். அவர் சிங்கப்பூரிலே பிறந்துவளர்ந்தவர், தெரிந்திருக்க நியாமில்லை. வெளிநாட்டிலிருந்து அழைத்தால்தானே அந்த எண் தேவைப்படும்? முத்தமிழ் யாவை என்ற கேள்விக்கு அப்படியென்றால் என்ன என்று கேட்டார் ஒரு இளம்பெண். ’மூன்று தமிழ்’ என்று கேட்டிருந்தால் எழுதியிருப்பேன் என்றும் சொன்னார். அடடா, வடை போச்சே!

நிறைய இளையர்களைக் கண்டது உற்சாகமாய் இருப்பதாய் திரு கலைச்செல்வனும் சொன்னார். நானும் சொல்கிறேன்.

Audition இறுதியில் எல்லோரிடமும் கேட்கப்பட்ட முக்கிய கேள்வி, ’நிகழ்ச்சி நடக்கும் கூட்டத்திற்கு எத்தனை பேரைக் கூட்டிவருவீர்கள்?’ என்பதுதான். அந்தக்கேள்விதான் ஒரு கோடி பரிசு வெல்லப்போகும் கேள்வி என்பது எனக்கு அப்போது தெரியவில்லை. எத்தனை பேர் வேண்டும் என்று ஒருவர் திருப்பிக்கேட்டார். ஆள் சப்ளை செய்யும் வியாபாரம் எதுவும் செய்கிறார் போலும்!  அடுத்த ’எலக்‌ஷனுக்கு’ இந்த நபர் தேவைப்படுவார்; தேடி வைத்துக்கொள்ளவேண்டும் என நினைத்தேன்.

20பேருக்கு மேலே என்று சொல்லியவர்களை திரு கலைச்செல்வம் குறித்துக்கொண்டார்.  நான் என்ன சொன்னேன் என்று எனக்கே ஞாபகமில்லை.

”கேட்டது கிடைக்கும்” என்ற நிகழ்ச்சிக்குச் சென்ற எனக்கு ’இரண்டு கேள்விகள் கிடைத்தன’. ஒன்று, A, b என்ற அகர வரிசையில் பெயரைக் கூப்பிடுவதற்கு எதற்கு வரிசை எண் சீட்டு கொடுத்தார்கள்? (12மணிக்குச் சென்ற நான், 4 மணிக்கு நாக்கு வெளியே தொங்க, பசியோடு வெளியே ஓடிவரவேண்டியதாயிற்று).

இரண்டாவது கேள்வி, ’எத்தனை பேரைக்கூட்டி வரமுடியும், சரி. டிக்கெட்டு விலை எவ்வளவு?’ - நிகழ்ச்சியைப் பார்க்கக் காத்திருக்கிறேன்.

அரவான் திரைப்படம் அண்மையில் நான் மிகவும் ரசித்துப்பார்த்த படம். ’கோல்டன் டிஜிட்டர்’ தியேட்டரில் படம் பார்க்கையில் என் மனம் வழக்கத்திற்கு மாறாய் குதூகலித்திருந்தது. காரணம் தெரியாத குதூகலம் இது. வருவதும் போவதும் அதிசயம்தான்.

படம் முடிந்து வெளியே வரும்போது ஒரே ஒரு வார்த்தையில் அந்த ஒட்டுமொத்த உணர்வையும் மழுங்கடித்துவிட்டுச் சென்றுவிட்டார் என் முன்னால் சென்ற ஒரு கொலைகாரப்பாவி.’அவனும் கழுத்த அறுத்துக்கிட்டு நம்மளையும் அறுத்துட்டாண்டா!’

நல்லவேளை என் கையில் கத்தி இல்லை.

எம்.கே.குமார்.

Thanks: Thangameen.com

Search This Blog