Monday, June 23, 2014

பெண் எழுத்தாளர்களின் கூட்டறிக்கை – ஒரு பார்வை

ஜெயமோகனுக்கு எதிரான பெண் எழுத்தாளர்களின் கூட்டறிக்கையை வாசித்தேன். (ஜெயமோகனுக்கு எதிரான என்றுதான் சொல்லவேண்டும். ஜெயமோகனின் கருத்துக்கு எதிர்வினையாற்றிய என்று சொல்வது பெரிய அபத்தமாய் இருக்கும்.) சேற்றில் கல் எறியக்கூடாது என்பது ஜெயமோகனுக்கு இப்போது தெரிந்திருக்கும். பெயரிடப்பட்ட படைப்பாளிகளில் சிலர் எனது முகநூலிலும் நண்பர்கள் என்பதைப் பார்த்தபோது அதிர்ச்சியாய் இருந்தது.

பெண் எழுத்தார்களே, ஜெயமோகன் எந்தவொரு பெண்ணையும் இதன்மூலம் அவமானப்படுத்தவில்லை. அவர்களின் இலக்கியப்பங்களிப்பும் அதன் மூலம் மட்டுமே உருவானதாகச் சொல்லப்படும் அவர்களின்  அங்கீகாரங்களையும் யோசிக்கச்சொல்கிறார். இலகுவாகக் கொள்ளப்படும் புதுக்கவிதை வடிவங்களைத் தாண்டி வேறொரு இலக்கியத்தளத்தில் அவர்களின் படைப்புகள் என்ன என்கிறார்.

இத்தகைய ஒரு படைப்பு/விமர்சன இயங்கு தளத்தில் உரையாற்றத் திராணியற்றவர்களாக, கவிதை மொழிக்குப் பயன்படுத்தும் அதே மொழியைக் கொண்டு (இதைக் கூட கவனிக்க இயலாத மொழிவளம் கொண்ட(?) படைப்பாளிகள்!) ஒரு கூட்டறிக்கை என்ற பெயரில் பெண்ணியத்தை அவமானப்படுத்தும் ஜெயமோகனை அவமானப்படுத்தும் போலிபாசாங்கில் அல்லது புரிந்துகொள்ள இயலாத பின்புத்தியில், அவர்களை அவர்களே அவமானப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றே இந்த அறிக்கையின் மூலம் எனக்குத் தோன்றுகிறது.

நிறையப் பெண்கள் எழுதவேண்டும். சமகால இலக்கிய உலகில் அவர்கள் இன்னும் ஆழமாகவும் அகலாமகவும் வேறூன்ற அவர்களை அவர்களே சோதனைசெய்துகொள்வது ஒன்றே பொருத்தமானதாக இருக்கும். அதை நோக்கிய முன் உந்துதலாகவே ஜெயமோகன் செய்தார். ஆனால் நடந்திருப்பது வேறு. இது அவர்களின் மிக மோசமான இன்னும் சொல்லப்போனால் அரைவேக்காட்டுத்தனமான புறப்பாடாகவே அல்லது உளறல்களாக இதை நான் பார்க்கிறேன்.

இந்த கூட்டறிக்கையின் மூலம் இரண்டு விஷயங்கள் தமிழ் கூறும் நல்லுலகத்திற்குக் கிடைத்திருக்கின்றன

ஒன்று தமிழில் எழுதும் பெண்கள் என்று நிறையப்பேர் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. பல பெயர்களை முகநூலில் மட்டுமே பார்த்திருக்கிறேன். (இதில் முக்காலெ மூணு வீசம் கவிஞர்களே!)

இரண்டு, யாருமே ஜெயமோகனைப் படித்ததில்லை. அவருடைய படைப்புத்திறனிலும் படைப்புகளின் தரத்தையும் உள்வாங்கிக் கொள்ளவேயில்லை. கூட்டறிக்கையில் பெயரிட்ட அத்தனை பேரில் ஒரே ஒருவர், அவருடைய படைப்புகளில் பெண்களில் நிலையை அல்லது நிஜத்தில் பெண்சார்ந்த அவரது நடவடிக்கைகளில் ஒரு சிறுபகுதியையேனும் அலசி ஆராய்ந்திருந்தால் கூட இப்படிப்பட்ட ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கமாட்டார்கள்.

அண்மையில் சிங்கப்பூர் வந்திருந்த பெருமாள் முருகனிடம் இதுசம்பந்தமாக ஒரு கேள்வியை முன்வைத்தபோது ’யாருடைய இடத்தையும் பிடுங்கிக்கொள்ளாமல் அவர்களே முன்னுக்குச் சென்றால் அல்லது முன்னிறுத்தப்பட்டால் இருக்கட்டுமே’ என்றும், ’இப்பொழுதுதான் பெண்கள் எழுத வந்திருக்கிறார்கள், முழுமையாக வரட்டுமே, பிறகு தரம் பற்றிப்பேசுவோம்’ என்றும் சொன்னார். ஆக, தரம் என்னும் அடையாளப்படுத்தும் தளத்துக்குள், இப்போது முன்னிலைப்படுத்தப்பட்டவர்கள் வரவில்லையெனினும் அவர்களை வரவேற்போம் என்றாலும் இது சார்ந்த முன்னெடுப்புகளின் ஒரு பகுதிதான் அல்லது தரவுதான் இந்த விவாதம் என்றே நான் நினைக்கிறேன்.

ஜெயமோகன் அளவுக்கு பல தளங்களில் விரியும் இலக்கியப் படைப்புகளைக் கொண்ட உச்சங்களை பெண் எழுத்தாளர்கள் படைக்க இயலாது என அவர்களே முடிவுகட்டிக்கொண்டாலும் (அறிக்கையிலிருந்து அதுதான் தெரிகிறது!) பெண் உலகம் சார்ந்த சில அற்புதங்களை சிறந்த படைப்புகளை பெண் எழுத்தாளர்களே படைக்கமுடியும் என்பதை உறுதியாக நான் நம்புகிறேன்.

அதற்கு வேண்டிய உழைப்பும் மெனக்கெடலும் கொண்ட பெண் எழுத்தாளர்களை வரவேற்போம், வாழ்த்துவோம்; வெறுமனே அறிக்கை என்ற பெயரில் தங்களைத் தாங்களே கொச்சைப்படுத்தும் பெண் எழுத்தார்களையல்ல.


எம்.கே.குமார்

சிங்கப்பூர்

பிகு. சாரு நிவேதிதாவின் இந்த அறிக்கை குறித்தான பதிவையும் படிக்கவும்.

Search This Blog