Tuesday, December 28, 2010

பறக்கும் முன் மடிந்த, மறக்க முடியாத மைனா!

குறிப்பிட்ட தமிழ்ப்படம் சிங்கப்பூரில் எந்த தியேட்டரில் ஓடுகிறதென்பதை 'தமிழ்முரசி'ல் தேடுவதுதான் என் வழக்கம். 'நல்ல' படம் எதுவும் சிங்கப்பூரில் நிறைய நாட்கள் ஓடாதே; மைனாவும் அந்த வரிசையில் சேர்ந்துவிட்டதோ' என்றவாறு தேடினால், "ரசிகர்களின் விரும்பத்திற்கிணங்க, மீண்டும், ரெக்ஸ் திரையரங்கம்-1ல் மாபெரும் திரைக்காவியம் - மைனா" என்றிருந்தது. தோமஸைப் போன்றவன் நான். ரெக்ஸ் திரையிரங்கிற்குத் தொலைபேசினேன். படம் ஓடுகிறதா, எத்தனை மணிக்குக் காட்சி, கட்டணம் எவ்வளவு. சந்தேகம் தீர்ந்தது. மைனாவைப் பார்த்துவிடுவது என்றுமுடிவுசெய்துவிட்டேன்.

அண்மைக்காலமாக எந்த தமிழ்ப்படத்தைப் பார்த்தாலும் எனக்கு கமல்ஹாசன் ஞாபகம் வருவது நல்லதா கெட்டதா என்பதை செராங்கூன் ரோடு 'மணி' கிளிதான்சொல்லவேண்டும். 'மைனா'வைப் பார்த்துவிட்டு அன்றிரவு நிம்மதியாகத் தூங்கினேன் என்று 'கமல்' சொல்லியிருந்தது வேறு 'கூடுதல்' ஆவலை என்னுள் புகுத்தியிருந்தது.

ஓடும் ரயிலில் 'எழுத்தும் இயக்கமும் - பிரபு சாலமன்' என்ற நிலையில்'மைனா'வுக்குள் இணைந்தேன்.

கதையை வானத்திலிருந்தோ அல்லது கற்பனைக்கெட்டாத ஒன்றிலிருந்தோ எடுக்கவில்லை என்பதே ஒரு மிகப்பெரிய அண்மைய ஆறுதல்களில் ஒன்று.

படிப்பு வராமல் வெட்டியாய்த் திரியும் சிறுவன் ஒருவன், தெருவில் நிற்கும் ஆதரவற்ற தாயையும் மகளையும் தனது மலைக்கிராமத்தில் குடியேற்றுகிறான். அப்பெண்ணின் மேல் உயிராய் இருக்கும் அவன், வருடங்கள் கடந்து, அவளையே மணக்க வேண்டும் எனக் காதல் பைத்தியமாய் திரியும் போது அந்தப்பெண்ணின் அம்மா, அவனுக்கு அவளைக் கட்டி வைக்க முடியாது என்று வெகுண்டெழுகிறாள். காதல் ஜோடி ஓடுகிறது; போலீஸ் துரத்துகிறது. முடிவு என்ன? இதுதான் கதை. இவ்வளவு சாதாரண ஒரு கதையைத் திரைக்கதையின் மூலம் பறக்க வைத்திருக்கும் இயக்குனருக்கு வாழ்த்துகள்.

மலைப்பிரதேசத்தில் நடக்கும் கதைகளைப் பதிவு செய்வது ஒரு மாபெரும் வேலை. படம் முழுக்க வரும் பச்சையும் ஈரமும் கடைசிக்காட்சி வரை தொடர்கிறது. பிரபுசாலமன் சொன்னது போல இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் கணவன் மனைவி போல இருக்க வேண்டும். அப்போதுதான் அசலான பதிவு கிடைக்கும். இயக்குநருக்கும் ஒளிப்பதிவாளருக்கும் நன்றி.

குணா படம் நினைவுக்கு வந்தது ஏனென்று தெரியவில்லை. மலையை, இயற்கையைப் பின்னணியாகக் கொண்டு புகைப்படம் எடுப்பவர்கள் இப்படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கவேண்டும்; அவ்வளவு அழகு காட்சிக்கு காட்சி.

கதையை ஏன் தீபாவளிக்கு முன் ஆரம்பிக்கவேண்டும் என்று நினைத்தபோது வில்லனே தீபாவளிதான் என்பது அதிர்ச்சி. தலைதீபாவளி கொண்டாட முடியவில்லையே என்றெல்லாம் வன்முறையில் இறங்கும் கும்பல் தமிழ்நாட்டில் இருப்பது அதிர்ச்சியாயிருந்தாலும் கொலை மற்றும் தற்கொலைக்கான காரண காரியங்களைப் பகுத்தறிய முயன்றால்தான் அச்சம்பவமே நடக்காதே?! அந்த நேரத்தில், அந்த மனிதன்,அப்படி இருந்தான்; அவ்வளவுதான்!

மிகப்பெரிய ஆச்சரியம் நாயகி அமலா பால். இத்தனை குட்டியூண்டு (19 வயதுதானாம்),புதுமுக நடிகை எல்லாம் காமிரா முன்னால் நிற்கிறோம் என்ற சொரணை '1 சதவீதம்'கூட இல்லாமல் இப்படி (அ)சாதாரணமாக இருக்க (நடிக்கிறார்கள் எனச்சொல்ல முடியவில்லை!) முடிகிறதே, அது எப்படி என்பதுதான்.

நாயகி அமலா பால் பெரிய அழகியெல்லாம் இல்லை. (அவரை விட பெரிய அழகி, படம் பார்த்துவிட்டு வெளியில் வரும்போது, ரெக்ஸ் திரையரங்கு வாசலில்,எனதுமுன்னால் சென்றார்; நாம் பார்ப்பதை யாரும் பார்க்காமல் பார்ப்பது எப்படி என்று நிறையப்பேருக்கு "கிளாஸ்" எடுக்கவேண்டும்) ஆனால் படத்தில் மைனாவாகவே வாழ்ந்திருக்கிறார். சிந்துசமவெளியில் நடித்த பாவத்திற்கு இது விமோசனம்என்கிறார்கள் சிலர். அப்படத்திலும் எனக்கு அவரைப் பிடித்திருந்தது. நல்ல நடிகை என்பவள் எல்லாவிதக் கதைகளிலும்தானே நடிக்கவேண்டும்.

விதார்த் கதையின் நாயகன்; ஒரு கதையை உருவமாக்க, பொருத்தமான ஆள்தான் தேவை; நடிகருக்குக் கதை இல்லை. அந்த வகையில் விதார்த் பட்டையைக்கிளப்புகிறார். கூத்துப்பட்டறை பாசறையிலிருந்து வந்தாலும் கதைக்கேற்றவர். அடுத்தடுத்துப் படங்கள் வருவது கஷ்டம் தான், காரணம், கதை நாயகனாகிவிட்டிருப்பது.

தம்பி ராமையாவின் காமெடி மீது எனக்குப் பெரிதாய் அபிப்பிராயம் இருந்ததில்லை. காமெடிக்கு முயற்சிக்கிறார் என்றே நினைந்திருந்தேன். இப்படம் அவருக்கு ஒரு மைல்கல். காமெடிக்கும் குணச்சித்திரத்திற்கும் ஏற்றவாறு ஒரு நடிகர். மணிவண்ணனின் (இல்லாத) இடத்தைப் பிடிக்கலாம்.

அறிமுக நடிகர் சேது (போலீஸ்) அபாரம். ஹோட்டலில் சாப்பிடும் பொழுது இவர் கோபம் பொங்கப் பேசும் உணர்வுகள் ஒவ்வொருவருக்கும் உண்டாவது. இவரைக்கதாநாயகனாக வைத்து 'விருமாண்டி' ஸ்டைலில் மற்றொரு பார்வையில் கதையைச் சொன்னால் எப்படி இருக்கும்? நேற்றுவரை அந்த ஞாபகம் தான். படம் பார்த்தவர்களும் யோசிக்கலாம்.

படத்தின் நாயகன் கொலைகாரக் கும்பலில் ஒருவனோ அல்லது ரௌடியோ இல்லை என்பது மிக மிக மிகப்பெரிய ஆறுதல். இயக்குனருக்கு நன்றி.

போலீஸ்காரர்கள் அனைவரும் மனிதர்களே; மனிதர்கள் அனைவரும் பழிவாங்குபவர்களே என்பதைச் சொல்லும் காட்சி. (சோத்துல வெஷத்தை வெச்சி கொன்றுடுவேன், என்கவுண்டரில் போட்டுருவேன்) பழிவாங்கக் காத்திருப்பவர்கள்,மன்னிப்பும் வழங்குவார்கள்; மன்னிக்க முடிந்தவர்கள் பழியும் வாங்குவார்கள்;பழிவாங்கியவர்கள் மனிதனாகவும் ஆவார்கள் எனப் போலீஸ்காரர்களைச் சுற்றி வெறொரு உலகத்தை காண்பித்த இயக்குனருக்கு இன்னொரு நன்றி.

முரட்டு மீசை, பெரிய மச்சம், கனத்த சரீரம், பரட்டை முடி, விரிந்த கிருதா வரிசையில்'அம்மை போட்ட தழும்பு முகம்' என்பதும் வில்லன்களின் உருவகமாக ஆக்கமுற்படுவது தவிர்க்கப்படவேண்டும். அப்படி ஒரு படிமத்தை பார்ப்பவர்கள் மனதில் உருவாக்க அவசியமில்லை என்றே நினைக்கிறேன். எனக்குத்தெரிந்த பல வில்லன்கள் எப்போதும் "ஒயிட் அண்ட் ஒய்ட்" ஆடையில் அழகாகவும் சிவப்பாகவும் இருக்கிறார்கள், அமைதிப்படை ராஜராஜசோழனைப்போல! இன்றுவரை மனதில் நிற்கும் கொடூர வில்லன்களில் "சத்யா" கிட்டியும், "மகாநதி" ஹனிஃபாவும் தான் முதலிடத்தில் இருக்கிறார்கள். கமல்ஹாசனுக்கு நன்றி.

சினிமாவில் நல்ல இயக்குனர்கள் தென்படுவது ஒரு ஆறுதல். பிரபு சாலமன் அந்த முயற்சியில் வெற்றிபெற்றாலும், அந்த வரிசையில் சேர்ந்துவிட்டார் என்று இப்போதைக்குச் சொல்லமாட்டேன். காரணம், இப்படி ஒரு படத்தை மீண்டும் அவர் கொடுக்க வேண்டும். படத்தில் சில காட்சிகள் நிறைவற்று இருந்ததாக அல்லது ஏதோ ஒன்று குறைந்ததாக நினைவு. எனது அளவுகோல், இயக்குனர் பாலாவினுடையதும் கமலுடையதும் ஆகும்.

மிகுந்த நிறைவுணர்வை அளிப்பதில் பின்னணி இசை முன்னுக்கு நிற்கிறது. பாடல்களில் மைனா மைனா பாடல் நெஞ்சை உரசுகிறது. (மீண்டும்) நல்வரவு டி.இமான்.

தோல்விப்பட(ல)த்திலிருந்து பிரபுசாலமன் மீண்டுவந்ததிற்கு அவரது கடின உழைப்பில் மிளிர்ந்த, பின்வருவனவற்றைச் சொல்லமுடியும்.

o ஒரு சாதாரண கிராமத்துக் காதல் கதையாய் இல்லாமல் புதியதொரு மலையும் மலை சார்ந்த காதலுமாய் முன்னிருத்தியதால்

o மிக மிக நேர்த்தியான திரைக்கதை

o உணர்வுகளோடு ஒத்துப்போகும் ஒளிப்பதிவும் இசையும்

o கதைக்கேற்ற பொருத்தமாய் நட்சத்திரங்கள்

o ரசனையாயும் புதுமையாயும் படத்தில் வரும் சிறு சிறு காட்சிகள் (உதாரணம்,மனித உரிமை ஆர்வலர், பல் டாக்டர்)

o எதிர்பாராத இடத்திலிருந்து வரும் முடிவுகள்

o நாயகன் - நாயகியின் மிக மிக இயல்பான நடிப்பும் கதைகேற்ற பொருத்தமும்(நாயகியின் பருவமும் ஹி..ஹி..ஹி..)

தமிழ் சினிமா நண்பர்களுக்கு எனது நாலணா அறிவுரைகள்...

1. இன்னும் ஒரு நான்கு வருடங்களுக்காவது சிறு பருவத்து நட்பு, காதல், அன்பு,வண்டி ஓட்டுதல், கூட்டாஞ்சோறு ஆக்குதல் என்பதாய் எடுத்துத் தொலைக்காதீர்கள். அப்படியே எடுத்தாலும் கிராமத்தை விட்டு விட்டு நகரத்துக்கு வாருங்கள். (ஆமாம், நகரத்தில் வளர்ந்த பசங்களெல்லாம் ஏழு எட்டு வயதில் என்னதான் செய்வார்கள்? அப்பா அம்மா விளையாட்டு, ஓணானை விரட்டுதல், பக்கத்து வீட்டு அண்ணனுக்கு காதல் தூது செல்லுதல்..இப்படி ஏதும்...உண்டா? எனக்குத் தெரியவில்லை.)

2. சாதாரண காதல் கதையை எடுத்து, கிளைமேக்ஸில் உணர்ச்சியை ஊற்றி,வெற்றியைப் பிழிந்து விடலாம் என கனவு கண்டு அப்படிப் படம் எடுக்காதீர்கள். படம் கண்டிப்பாய் ஃபிளாப் ஆகும்.

3. மைனாவைக் காப்பி அடிக்காதீர்கள்.

*******

இது, இப்படி நடந்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே என்று, 'மைனா' பார்த்துவிட்டு வருபவர்கள் அனைவருமே நினைப்பார்கள். அதுதான் வாழ்க்கை என்பது நம் வாழ்க்கையிலிருந்து கூட நாம் அறிய இயலும், ஆனால் அறியாத ஒன்று. அதுதான் வெற்றிக்கான பாதை என்பது தமிழ் சினிமாவில் தெரியத்தொடங்கியிருப்பது "சேது" கொடுத்த தைரியம். தைரியம் தரும் பாதை சிறக்கட்டும். எம்.கே.குமார்.

நன்றி: தங்கமீன்

மிகச்சிறந்த கதாபாத்திரங்கள் - ஒரு பகிர்வு

துணை நடிகர்களைத் தேடுவதில் ஒரு இயக்குநரின் பங்கு என்ன என்பது எனக்குச் சரிவர தெரியவில்லை. அவர்களே தேடுவார்களா, இல்லை துணை நடிகர் ஏஜெண்ட்டிடம் சொல்லி, இந்த மாதிரி ஆள் வேண்டும் எனப் பிடித்துதரச்சொல்வார்களா என்பதும் தெரியவில்லை. ஆனால், ஒன்று மட்டும் சத்தியமாய்த் தெரிகிறது. சிலர் இதில் கடுமையாய் உழைக்கிறார்கள். இது இவர்தான் என்று முழுமையாய் தான் நம்பும் அளவுக்கு அக்கதாபாத்திரத்தை அவர்கள் தேடுகிறார்கள் அல்லது உருவாக்குகிறார்கள்.

அத்தகைய தூண்டுதலில், சில பேரை சில வேடங்களில் அவர் "நடிக்கவில்லை; அவரேதான் அது" என்று மனம் ஒருங்கிணைத்துக்கொள்ளும். அவரைப் பின்னாளில் வேறொரு படங்களில் பார்த்தால் கூட அவ்வளவாக மனம் ஒப்புக்கொள்ளாது.

அந்த வரிசையில் எனக்கு பல பொருத்தங்கள் உண்டு.

  • 'பருத்திவீரனில்' வரும் பொணந்தின்னி (மைனாவில் நாயகனின் அப்பா),
  • 'நான் கடவுளில்' வரும் அம்பானி பற்றி கமெண்ட் அடிக்கும் மாற்றுதிறன் சிறுவன் (பின்னாளில் ஒரு படத்தில் கல்லூரி மாணவனாக நடித்திருப்பார்)
  • 'விருமாண்டி'யில் கொலையைப் பார்த்துவிட்டு, பார்க்கவில்லை என்று பொய்ச்சாட்சி சொல்ல வரும் ஒரு புதுமுகம் (பின்னாளில் இவர் 'திருட்டுப்பயலே' படத்தில் நாயகனின் நண்பராக ஆஸ்திரேலியாவில் இடுப்பு டான்ஸ் தேடுவார்)
  • 'விருமாண்டி'யில் வரும் சண்முகராஜன் நல்லகாமன் போலீஸ்.. அதற்குப்பிறகு பல படங்களில் இவரை வில்லனாகப் பார்த்தாலும் அந்த வேடமும் அவருடைய ஒரு நக்கலான சிரிப்பும் கண்ணை விட்டு மறையவில்லை.
  • 'அயன்' படத்தில் சேட்டு வீட்டு கணக்குப்பிள்ளை (இவர், 'பிதா மகன்' படத்தில், சூர்யா ரயிலில் விற்பனை செய்யும்பொழுது அருகில் அமர்ந்திருப்பார். இவரை எப்படி கரெக்டாக அயன் படத்தில் பிடித்துப்போட்டார் இயக்குனர் என்பது எனக்கு ஒரு ஆச்சரியம்)
  • 'அங்காடித்தெரு' நாயகன் மகேஷ் (அங்காடித்தெருவில், வெங்கடேஷ், பழ. கருப்பையா இவர்களையெல்லாம் அந்தந்த கேரக்டராகவே மனசு ஒப்புக்கொள்கிறது)
  • 'மைனா'வின் நாயகன் விதார்த்
  • 'பருத்திவீரன்' ப்ரியாமணி அம்மா (கமல்தான் இவரை விருமாண்டியில் அறிமுகப்படுத்தினார்)
  • 'எம்டன் மகன்' சரண்யா (அ) 'களவாணி' சரண்யா
  • 'பூ' படத்தின் நாயகி
  • 'பிதா மகன்' விக்ரம் (இந்த வேடம் அவர்தான், இதற்குப்பிறகு எத்தனையில் அவர் நடித்தாலும் இதுவே அவர் உச்சமாக இருக்கும்!)

- இன்னும் நிறையப்பேர் இவ்வரிசையில் உண்டு. ஒரு அனுபவத்தின் முழுமையில் இதை உள்வாங்கும்போது இவர்கள் அந்த வேடத்தின் ஆளுமையாய் ஆகிவிட்டது உண்மையாய் இருக்கிறது.

மிகச்சிறிய கதாபாத்திரமேனும் அதற்குத்தகுந்த ஆட்களைத் தேர்வு செய்வதில் எனது சினிமா ரசிப்புத்தன்மையின் அனுபவத்தில், கமல் முதலில் நிற்கிறார். அதற்கடுத்த நிலையில் பாலா. அமீர், செல்வராகவன், வசந்தபாலன் ஆகியோரும் இந்த லிஸ்டில் உண்டு.

கமலின் அற்புதமான திறமைகளில் இதுவும் ஒன்று என்பதை அவருடைய படங்களை உன்னிப்பாய்க் கவனிப்பதன் மூலம் நாம் உணரமுடியும்.

அயன் படத்தில் பல கதாபாத்திரங்கள் 100 சதவீத வெற்றித்தேர்வாய் இருந்தது என்பதை நான் இங்கே பதிவு செய்கிறேன். சூர்யாவின் அம்மா முதல், சேட்டு மகன் அவருடைய குரல் வரை, அனைத்தும் கச்சிதப்பொருத்தம்!

இந்த கதாபாத்திர - தேர்வில், மிகவும் கடைசியில் இருப்பது கே.எஸ். ரவிகுமார் என்பதாக நான் நினைக்கிறேன். காரணம், எந்த கழுதையாய் இருந்தாலும் அதை நடிக்கவைத்து எடிட்டிங்கில் ஏற்றிவிட்டு விடலாம் என்பது அவர் எண்ணமாய் இருக்கலாம், இதற்கெல்லாம் அவர் அவ்வளவு முக்கியத்துவம் தருவதில்லை என்பது பல படங்களில் தெரியும்.

இந்த கதாபாத்திர முழுமையில் இயக்குனரின் ஈடுபாட்டுக்கும் அற்புத தேர்வுக்காகவும் ஒரு விருது வழங்கப்படலாம்.

எம்.கே.

Saturday, December 18, 2010

சிங்கப்பூரில் சாரு நிவேதிதா கலந்துகொண்ட பூப்பெய்தல் விழா - ஒரு மீள்பார்வை

சிங்கப்பூரில் இருந்த போது நான் ஒரு எழுத்தாளரைக் கூட சந்திக்கவில்லை. நான் வந்திருப்பது அவர்களுக்குத் தெரிந்திருக்காது. இருந்தும் ஒருநாள் சிங்கப்பூர் நூலகத்தில் ஒரு கலந்துரையாடல் நடந்தது. நமக்குத் தெரிந்த நண்பர் ஒருவரின் மகள் பூப்பெய்திய சடங்கு நிகழ்ச்சிக்குச் சென்று வந்தது போல் இருந்தது." என்று அண்மையில் "தங்கமீன்" மின்னிதழில் எழுதியிருந்தார் சாரு.


நிரந்தர நண்பர்களும் நிரந்தர எதிரிகளும் இல்லாத அன்பர் சாரு கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியில் சாருவுடன் நான் எடுத்துக்கொண்ட நெருங்கிய போட்டோ...
சிங்கப்பூர் நூலக அதிகாரி புஷ்பலதா அவர்களுக்கு இந்நேரத்தில் நன்றி.

Tuesday, December 14, 2010

'எந்திரன்' தலைவனுக்கு ரஜினி ராக்கப்பன் எழுதும் கடிதம்

ஷ்ஹோஒ........ஷ்ஹோஓஓ....ஷ்ஹோஓஓஒ...............

வணக்கம் தலைவா. நான் தான் ரஜினி ராக்கப்பன், சிங்கப்பூர்ல இருந்து எழுதுறேன். மொத வரி ஏதோ புரியாத மாதிரி இருக்கேன்னு கொழம்பாதே தலைவா. தலைவருக்கு மொதமொறையா ஒரு கடுதாசி எழுதுறோமேன்னு ஒரு 'சீட்டி' அடிச்சுட்டு எழுத ஆரம்பிச்சேன், அதுதான் அது. விசில் சத்தம்.

வந்து பாரு தலைவா, நாடு விட்டு நாடு வந்தாலும் தலைவரு பாசம் போகுமா தலைவா. பிச்சுப்புட்டோம். தலைவர் படம்ன்னா தலைவர் படந்தான் சொல்லவைக்கிற அளவுக்கு நடத்திக்காட்டிப்புட்டோம் தலைவா.

ஒருவாரத்துக்கு முன்னாடியே, வுட்லாண்ட்ஸ் காஸ்வேபாயிண்டு தியேட்டர்ல போயி டிக்கட்டு புக் பண்ணச்சொல்லி நம்ம பாண்டிப்பயல அனுப்பி வெச்சிட்டோம். ரெண்டு நாளு பொயிட்டு, சும்மாவே திரும்பி வந்தான், என்னடான்னு கேட்டதுக்கு இன்னும் புக்கிங் ஆரம்பிக்கலையாம்ன்னு சொன்னான். இவன் ஒரு வெளங்காத பய தலைவா. பாபாவுக்கு அவனைத்தாம் அனுப்பிவெச்சோம். பாபா கதைதான் தெரியும்ல. அதனால திரும்பி மூணாவது நாளு நம்ம சேகரு பயல போகச்சொன்னோம்.

சேகரு நாட்டரசன் கோட்டை தலைவா. ஊர்ல 'பாட்ஷா ரஜினி ரசிகர் மன்றத்துல' உபதலைவர். நீலாம்பரிங்கிற மாமா பொண்ண விட, வீட்டுவேலைக்கார பொண்ணுதான் நல்லபொண்ணுன்னு நீ ‘படையப்பா’ல கல்யாணம் கட்டுனதுமாதிரி, மாமா பொண்ணை விட்டுட்டு, வீட்டுக்கு வேலைக்கி வந்த பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு, இப்போ சிங்கப்பூர்ல கொத்துவேலை பாக்குறான். ஊருலேயிருந்து வந்த மொத நாளு கேட்டான், 'பாஸ், கன்ஷ்ட்ரக்ஷன் வேலை, கன்ஷ்ட்ரகக்ஷன்ல வேலையின்னு சொல்றாய்ங்களெ, அப்படின்னா என்ன வேலை பாஸ்ன்னு. அட கருமாந்திரம் புடிச்சவனே, ஊர்ல கொத்துவேலை இருக்குல, அந்தவேலைதானு சொன்னேன். ரஜினி ரசிகனாச்சே தலைவா. அன்னிக்கி களத்துல குதிச்சவன் தான். கம்பி கட்டுறதுல அவன அடிக்க ஆளு இல்லெ இன்னக்கி; நாட்டாங்கெல்லாம் அவனுக்குட்ட வேலை கத்துக்கணும். வேலை தலைவா வேலை; கடமை தலைவா கடமை; உழைப்பு தலைவா உழைப்பு.

ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, பதினாறு அடி உயரத்திலேயிருந்து ஒரு நாளு விழுந்ததுல கொஞ்சம் இடுப்பெலும்புல காயம். மத்தபடி இன்னக்கிம் மலை. அண்ணாமலை! படையப்பன்; ஆறு படையப்பன்! உன் கட் அவுட்டுக்கு பாலு ஊத்தும்போது இப்படி விழுந்திருந்தாகூட சந்தோசப்பட்டிருப்பனேன்னு அவன் ஒரு மாசம் பினாத்திக்கிட்டிருந்தான். நாட்டரசன் கோட்டை போனா மறக்காமெ பாரு தலைவா, பஸ் ஸ்டாண்டுக்கு பக்கத்துல பதினாறு அடில ஃபிளக்ஸ் போர்டு உனக்கு, அவந்தான் வெச்சிருக்கான். அவன் பொண்டாட்டிய நாய் கடிச்சி நாட்டரசன் கோட்டை ஆசுபத்திரில வெச்சிருக்கானுவ நாலுமாசமா. போன மாசம் பாக்கப்போயிருந்தான். அப்போ வெச்ச போர்டு தலைவா அது.

உன் போஸ்டரைக்கூட கையெடுத்து கும்பிடுற பயகள்ல அவனும் ஒருத்தன் தலைவா. வந்தா டிக்கட்டோட வா இல்லாட்டி வராதேன்னு போகச்சொன்னோம். அன்னக்கி அவனுக்கு 4 மணி டு 8 மணி வரைக்கும் ஓவர்டைம்; பாத்திருந்தா 12 வெள்ளி சம்பளம் கூட கெடச்சிருக்கும். என்னடா, இன்னக்கி ஓவர்டைம் பாத்துட்டு நாளைக்கிப் போயி வாங்கிக்கலாமான்னு கேட்டேன். 'படுத்திருந்த நாயி வால்ல வெடியக்கொழுத்தி வெச்சதுமாதிரி' பயலுக்கு வந்திருச்சி கோபம். என்னைப் பாத்து, என்னப்பாத்து எப்படிடா இப்படிக் கேக்கலாம்ன்னு சொல்லிட்டு வேலைக்கி அரை நாள் லீவு போட்டுட்டு வுட்லாண்ட்ஸ் தியேட்டருக்கு கெளம்பிட்டான். தலைவருன்னா சும்மாவா. பாசக்கார பய தலைவா.

படத்துக்கு மொத்தமா கெளம்பிட்டு இருக்கும் போது இந்த ‘விக்ரம்’ பய ஒரு கமெண்டு விட்டான் பாரு. எல்லோரும் அவனை சாத்தலாமான்னு பாத்தோம், அப்படியான கமெண்டு தலைவா அது, என்னன்னு கேக்குறியா? “என்னடா பன்னிங்க எல்லாம் கூட்டம் கூட்டமா கெளம்பிண்டிங்க போலயிருக்கு”ன்னு தான்.

சிங்கப்பூர்ல 10 தியேட்டர்ல போட்டுருந்தாங்க தலைவா. என்னுடைய சிங்கப்பூரு 10 வருஷ வாழ்க்கையில இதுதான் தலைவா பத்து தியேட்டர்ல போட்ட மொத படம். அப்படியே மெரள வெச்சிட்டே தலைவா. டிக்கட்டுதான் 15வெள்ளி வாங்கிப்புட்டானுக. முக்கால் நாள் சம்பளம். போகட்டும் தலைவா, இதையெல்லாம் கணக்கு பண்ணலாமா?

படத்தைப்பத்தி என்ன சொல்ல தலைவா. வாற சீன்லையெல்லாம் உன்னையே பாத்துக்குட்டு இருந்ததால, படத்துல என்ன நடந்ததுன்னு ஒண்ணூமே ஞாபகம் இல்லை தலைவா. ஆனாலும் 'புதுக்கோட்டை பிரஹதம்மாள்' தியேட்டர்ல 'பாட்ஷா' படத்துக்கு அடிச்ச விசிலை விட அஞ்சு விசிலு அதிகமாத்தான் அடிச்சிருப்பேன்னு தோணுது. நல்லவேளை, தியேட்டர்ல இருந்தவங்க யாரும், இந்த "ஊர்ப்பயலுக" தொல்லை தாங்கமுடியலைன்னு பொலம்பா, சந்தோசமா குதூகலமா இருந்ததா ஒரு மனநிறைவு தலைவா. உன்னால, ரஜினியால தான் இந்த நிறைவு, ஒற்றுமை எல்லாம் சாத்தியம், நடக்கும் தலைவா.

படத்துல சிட்டிங்கிற எந்திரன் தன்னைத்தானே வெட்டிக்கிட்டு சாவுற காட்சியில பொலபொலன்னு அழுதுட்டேன் தலைவா. மனசைக் கரைக்கிற சீனு தலைவா அது. அது மாதிரி மனுசனை வெட்டுறதைக் கூட தாங்கிக்கிடுவோம் தலைவா; ஆனா மிஷினா இருந்தாலும் அது ரஜினி மெஷினா இருந்தா தாங்க முடியல தலைவா. இந்தமாதிரி சீனு இனிமே வெக்காத தலைவா. கடைசி இருபது நிமிஷம் 'டாம் அண்ட் ஜெர்ரி' மாதிரி சூப்பரு தலைவா.

கலாநிதிமாறன்கிட்டெ சம்பளம் கூட வாங்காம நடிச்சிருக்கேன்னு கேள்விப்பட்டேன் தலைவா. புல்லரிக்குது தலைவா. பணமா முக்கியம் தலைவா. பாசம் தலைவா; பாசம்!!. இதுதான் தலைவர்ங்கிறது. இந்த குணம் இல்லாமெ, பூஜை போடும்போதே, எந்த ஏரியான்னு வாங்கிக்கிட்டு, அட்வான்ஸையும் அள்ளிக்கிறதுனாலதான், சூப்பரு ஆக்டருன்னு சொல்லிக்கிட்டு திறியிறவங்க படமெல்லாம் பாக்ஸ் ஆஃபீலே படுத்துக்குது. மனசு வேணும், தலைவா, பணமா முக்கியம்.

எனக்கு இன்னும் ஒரு சந்தேகம் இருந்துகிட்டே இருக்கு தலைவா. தலைவனுக்காக படமா, இல்ல சன் டிவிக்கான்னு. சன் டிவி உன்னைக் கூவி கூவி வித்துட்டாய்ன்ங்களோன்னு வேற யோசிக்கத்தோணுது. என்னவா இருந்தா என்ன தலைவா? வீட்டுக்காரன், வீட்டுக்கு உள்ளே வெச்சி சோறு போட்டா என்ன, இல்லெ, வெளியே வெச்சி சோறு போட்டா என்ன.? அந்த சோறு எங்களுக்கு கெடைக்கிறது பெரிய விஷயம் தானே. சந்தோசம் தானே.

அண்மையில பாலச்சந்தர் சார் உன்னைப் பேட்டி கண்டதா படிச்சேன், தலைவா.

நீ நடிச்ச படத்துல காலம் கடந்து நிக்கிற படம் எதுவா இருக்குமுன்னு கேட்டதுக்கு ராகவேந்திரா, பாட்ஷா, எந்திரன்னு சொல்லியிருக்கியே தலைவா? நல்ல படத்தையெல்லாம் சொல்லாம எப்படித் தலைவா, இப்படி படமா சொல்றே? இன்னக்கிம் என் பொண்டாட்டியக் கேட்டா ஆறிலிருந்து அறுபது வரைக்கும், முள்ளும் மலரும், ஜானின்னு சொல்லிக்கிட்டு திரிவா. அவ என்னைவிட அதிகமா உன் விசிறி தலைவா.

பொண்டாட்டிக்கிட்ட தோத்துட்டா வாழ்க்கையில ஜெயிச்சுடலாம்; பொண்டாட்டிக்கிட்டெ ஜெயிச்சுட்டா வாழ்கைக்கையில தோத்துடுவோம்னு மேடையில சொல்ல, நீ கையை மேலே தூக்கி தட்டுனதா கேள்விப்பட்டேன். லதா அண்ணி கையை இறக்கச்சொன்னதாவும் படிச்சேன். பொண்டாட்டி சொன்னதைக் கேட்டிருந்தா சிங்கப்பூருக்கே வராம ஊர்ல கடையாவது வெச்சிப் பொழச்சிருப்பேன் தலைவா. பொண்டாட்டி சொன்னதையெல்லாம் கேக்காம, ரசிகர் மன்றம், ரசிகர் மன்றம்ன்னு அலைஞ்சி கைக்காசெல்லாம் செலவு பண்ணி கடன்காரன்னா அல்லாடிக்கிட்டிருந்தேன். ஆனாலும் நீ சொன்னது சரிதான் தலைவா. கடைசியா, பொண்டாட்டிதான் புடிச்சி சிங்கப்பூருக்கு அனுப்பிவெச்சுட்டா.

ரத்தினம் ன்னு ஒரு பய தலைவா. இங்கதான் 'காடி' கழுவிக்கிட்டு இருந்தான். ரெண்டு வருஷ பெர்மிட் முடிஞ்சதும் அவன் மொதலாளி சீனன் அவனுக்கு பெர்மிட்டை நீட்டிக்கலை, அந்த அளவுக்கு ரத்தினம் வேலைக்காரன்னா பாத்துக்கோயேன். இந்த தடவை ஊருக்கு போனப்போ பாத்தா, டொயோட்டா குவாலிஸ் கார்லெ, 'கருப்பு மஞ்சள் சிவப்பு ' கொடி கட்டிக்கிட்டு போய்க்கிட்டு இருக்கான். என்னடா கேட்டதுக்கு விஜயகாந்த் கட்சியிலே மாவட்டச்செயலாளராம். இந்த தடவை தேர்தல்லெ கூட நிக்கப்போறானாம். எப்படிடான்னு கேக்கமுடியுமா? எப்படிங்கன்னு கேட்டேன். ரியல் எஸ்டேட் பிஸினசாம். அவனுக்கு முன்னாடி, ரசிகர் மன்றம் ஆரம்பிச்சது நான் தலைவா எங்க ஊர்ல. இங்க, இந்த வார கார்டுக்கு 300வெள்ளியாவது எடுக்க முடியுமான்னு அல்லாடுறேன். பணமா தலைவா முக்கியம், சொல்லு தலைவா.

சிவகுமார் பையன் சூர்யான்னு ஒரு பய தலைவா. நடிப்புல இப்பவே பயங்கரமா பாயுறான். இருபத்தஞ்சி படம் தான் நடிச்சிருக்கான். என்னடான்னு பாத்தா, எங்க ஏரியாவுல கஷ்டப்படுற குடும்பத்து பிள்ளைங்க, நல்ல மார்க் வாங்கி படிக்க வைக்க முடியலைன்னா, அவனே படிக்க வெக்கிறான்னாம். தலைவா, நாம 154 படம் நடிச்சுட்டோமே, ஏதாவது இப்படி பண்ணியிருந்தா ஒரு சந்தோசம் வருமுன்னு தோணுது தலைவா. லதா அண்ணியும் ஸ்கூல் நடத்துறதா கேள்விப்பட்டேன். என்ன ஸ்கூல்ல்ன்னு தெரியலை.

இந்தா, இந்தக் கடுதாசி எழுதும்போது பக்கத்துல படுத்து 'ஹான்ஸ்' போட்டுக்கிட்டு இருக்கானே, நம்ம ரவி, இப்பவே ஊர்ல கொடிகம்பம் நட்டு, ரெடியா நிக்கிகிறான். அண்ணன், கட்சி ஆரம்பிச்ச உடனே, நான்தான் மாவட்டச்செயலாளர் (அ) வட்டச்செயலாளர்ன்னு சொல்லிக்கிட்டு இருக்கான், பேரு கூட 'விஜய்' ரவி ன்னு மாத்திக்கிட்டான்.

சாரி தலைவா, நீ பாட்டுக்கு இமயமலைக்கி கெளம்பிக்கிட்டு இருப்பே, இந்த நேரம் போயி உன்னை, என் கடுதாசிக் குடுத்து படிக்கச்சொல்லிட்டனேன்னு வருத்தமா இருக்கு. இமயமலையில எல்லாரையும் கேட்டதாச் சொல்லு தலைவா.

தொழில், குடும்பம், குழந்தை, கல்யாணம், பேரன் பேத்திகள், ஆன்மீக பயணங்கள், அரசியல் அன்புன்னு நீ, நிறைஞ்ச குடும்பஸ்தனா இருக்குறது மன நிறைவா இருக்கு தலைவா. அதுதான் எங்க சந்தோசம்மும். சரி தலைவா, அடுத்த படத்துலே பாப்போம்.

காலேஜ் படிக்கிற எம்பையனுக்கு பணம் கட்டணும்ன்னு நாலு தடவை பொண்டாட்டி போன் போட்டுட்டா. என்ன பண்றதுன்னு தெரியலை. 'விஜய்'ரவி கிட்டே கேக்கலாமான்னு பாத்தா நாலு காசு வட்டி கேக்குறாங்கண்ணோவ்.

பாப்போம், சரியா வரலையின்னா, படிப்ப நிறுத்திப்புட்டு, நம்ம பயலை இந்தப்பக்கம் இழுத்துட்டு வந்துருவோம். நமக்கும் வயசாயிருச்சில.

இப்படிக்கு
தலைவா உன் ரசிகன்,

ரஜினி ராக்கப்பன்
சிங்கப்பூர்

நன்றி:தங்கமீன்

Search This Blog