Friday, May 27, 2011

ஆடுகளம் – சொல்ல மறந்த இன்னொரு கதை

ஆடுகளம் படத்தைப் பற்றி பலர் பேசி எழுதிய பிறகும், நான் எழுதவும் இன்னும் சில விஷயங்கள் இருப்பது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தாலும் அதுபற்றி எழுதாவிட்டால் நானும் கச்சேரிக்குச் சென்றேன் என்பதை இந்த அகில உலகத்திற்குச் சொல்லாமல் விட்டுவிடுவது போலாகும் என்பதால் இந்த குறும்பகிர்வு.

உண்மையில் பொல்லாதவனையும் ஆடுகளத்தையும் உற்றுநோக்கினால், இயக்குநரின் மேலாண்மையில் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. தனுஷைத் தவிர்த்து, நட்பு அல்லது அன்பு தோரணையில், நெருங்கிய ஒருவர் துரோகம் செய்வதும் அதில் ஒன்று. மேலும் பொல்லாதவனைப் போலவே இப்படமும் கிளைமேக்ஸுக்கு சிறிது முன்னால் ஆரம்பிக்கிறது. பிறகு கதைசொல்லியின் வழியாக பின்நோக்கலாக கதை நகர்கிறது.

ஒரே மாதிரி கதையைக் கொண்டுபோவது நீண்ட காலத்துக்கு சரிப்பட்டு வராது. வெற்றிமாறன் அடுத்த படத்தில் யோசிக்கவேண்டும்.

சேரனை நினைக்கும்போதெல்லாம் “என் பேரு சிவக்குமாரு, அப்போ நான் பத்தாங்கிளாஸ், போரூர்ல படிச்சுக்கிட்டிருந்தேன், அப்போத்தான் அந்த பொண்ணு எங்க ஸ்கூலுக்கு வந்தான்னு” அவர் சொல்றமாதிரி ஒரு பிளாஷ்பேக் ஞாபகம் வருகிறதல்லவா? அதுமாதிரி ஆகிவிடக்கூடாது.

டாவடிக்கும் பெண்ணிடம் காசு வாங்கி (சத்தியமா இல்லேடா, சத்தியமா இல்லேங்க, அட சத்தியமா இல்லேங்க என்று எத்தனை சத்தியம் செய்தாலும் எங்கிருந்தாவது எடுத்துக்கொடுக்கும் காதலிகள் கிராமத்திலே மட்டும் உண்டு; டவுன் காதலிகள் எப்படி என்பதை அடுத்த பிறவியில் தான் தெரிந்துகொள்ளவேண்டும்) ஒரு ’நல்ல’ காரியத்தில் இறங்குவது என்பது எப்போதும் எல்லா மனிதர்களுக்கும் அவர்தம் உணர்வுகளுக்கும் நடைமுறைச் சபலம். எத்தனை படம் ஓட்டியிருக்கோம்!!!

’யாருப்பா அது? முத்துராமன் மவனா?’
’இல்லே, இது நமக்கு வேண்டிய பையன்; நம்ம பையன்.’
’அப்பிடியா, நம்மாளுங்களாப்பா? ஒண்ணு மண்ணா நின்னு இந்த சேவல்பந்தயத்துல ஜெயிச்சுப்புடுங்கப்பா..’ என்று சொல்வது மிகவும் சக்திவாய்ந்த அணுகுண்டை அன்பில் தோய்த்து ஒருவனுக்குள் ஒளித்து வைப்பதற்குச் சமம் என்பதை அதுபோன்றதொரு சூழ்நிலையில் இருந்தவர்களுக்குத்தான் தெரியும். படத்தில் வரும் போலீஸ்காரரின் கிராமத்து அம்மா சொல்கிற வசனம்.

’வாட் டு யு வாண்ட்? வாட் இஸ் யுவர் ப்ராப்ளம்? என்று நாயகி கேட்கும்போது, ’கருப்பு, கே பி கருப்பு’ என்று (இங்கிலீஷ் கெட்ட கேட்டுக்கு இனிஷியல் வேற!) தனுஷ் கூறுவது தமாஷூ.

‘என்னய்யா வேணும்’ என்று வீட்டுக்குள் வந்த பந்தை நினைத்து நாயகி கேட்கும்போது, நம்ம தனுஷ், இங்கிலீசுல ’புலி’ கணக்கா, பால்ஸ், பால்ஸ் வேணும் என்று ’மெதப்பா’ கூறுவதும் (ஒரு பந்துக்கு, ரெண்டு பால்ஸ்ஸா?) அந்தப்பெண் அதைக்கேட்டு ஒரு நொடி அதிர்வதும் எப்போதும் என்னை புன்முறுவலிக்கச்செய்யும் ஒரு காட்சி.

வாழ்க்கையில பாதி தூரம் வந்துபுட்டோம்டா, மீதிய எப்படிச் சேக்குறதுங்குறது நம்ம வாழ்க்கையில் வரப்போறவ கையிலதாண்டா இருக்கு என்று பேட்டைக்காரன் சொல்வது இன்னொரு மிக இயல்பான வசனம். பேட்டைக்காரனுக்கு ரெண்டு ’ப்ளக்ஸ் போர்டு கட் அவுட்’ வைங்கப்பா.

அத்தாச்சியாய் வரும் அத்தாச்சி அசல் அத்தாச்சி. தீராத கலைவெறியால் மட்டுமே இப்படிக் காதல்கள் சாத்தியமாகும். பேட்டைக்காரனுக்கு (கிழவனாயிருந்தாலும்) பொண்டாட்டியாய் வாழ்த்தீர்மானிப்பது சொல்லமறந்த இன்னொரு கதை படத்தில். அவளுக்கு நாயகனுடன் கள்ளத்தொடர்பு (தமிழில் எனக்குப் பிடிக்காத வார்த்தை இது) என்றதும், போய்யா, இதுக்கு மேல இங்க நான் இருக்கவே வேண்டாம்ன்னு போறா பாருங்க, அந்தக்கதை!!)

இன்னொரு முறை பெரியகருப்புத் தேவனுக்கு நல்ல வேடமும், வசனமும். இந்தியாவிற்கு வரும்போது இவரைக் கூட்டிப்போய் ஒரு பார்ல பார்ட்டி கொடுக்கணும் போல இருக்கு!

மீண்டும் மீண்டும் பார்க்கிறேன். வெற்றிமாறனுக்கு நன்றி.

எம்.கே.குமார்.

தங்கமீன் மார்ச் இதழில் வெளிவந்தது.

No comments:

Search This Blog