Friday, October 29, 2010

உலகம் சுற்றும் 'களவாணிகள்'

(நாலு காசு OT பாத்தாதான் கடனைக்கிடனை அடைச்சு, கரைசேர முடியும் என்று நிலையில் இருக்கும் மாப்பிள்ளையும், மாமனும், ஒரு ஞாயிற்றுக்கிழமைத் தேக்காவில், லேட்டா சந்திச்சு, லேட்டாஸ்டா 'களவாணி' படத்தைப் பற்றி பகிர்ந்து கொண்ட விஷயங்கள். இது விமர்சனமல்ல - அவர்களது வாழ்க்கை!)

என்ன மாப்ளே, 'களவாணி'ல உன் கதையைப் படமா எடுத்திருக்காங்கெ போல, டைரக்டர் சற்குணம் உங்களுக்குச் சொந்தக்காரரா?

ஏ மாமா, இப்புடி நீ வேற நான் வேறன்னு பிரிச்சிப்பேசுற, நம்ம கதைய எடுத்திருக்காங்கென்னு சொல்லு.

அடங்கொங்காமக்கா, என்னைய ஏன் மாப்ளே இதுல இழுக்குற? படிச்சுட்டு இருந்த புள்ளைய பல்லக்காட்டி பல்லக்காட்டி கெடுத்து ராத்திரி கடைசி பஸ்ஸுல போயி கூட்டியாந்து குடும்பம் நடுத்துறது யாரு, நானா மாப்ளே?

அட, அது என்னவோ நாந்தான் மாமா; ஆனா, பஞ்சாயத்து பஞ்சாயத்துன்னு சொல்லிக்கிட்டு ஊர்ல வெள்ளையுஞ்சொள்ளையுமா திரிஞ்சிபுட்டு இப்போ சிங்கப்பூர்ல கப்பலுக்குக் கீழே படுத்து காஞ்ச நத்தையை தேய்க்கிறது யாரு மாமா, நீருதானே! அதைத்தான் சொன்னேன்.

காய்ஞ்ச நத்தையோ, கரி மண்ணை கூட்டி அள்ளுறதோ, கப்பல்கட்டுற தொறக்கி வேலைக்கின்னு வந்துட்டா இதெல்லாம் செஞ்சுதானெ மாப்ளே ஆகணும்.

அதுசரி மாமா. படத்துல கஞ்சா கருப்பு காமெடி, உங்க காமெடி போல கல்லா கட்டுது.

பிச்சுப் புட்டாய்ங்க மாப்ளே. கஞ்சா கருப்பு செத்துப்போனதா வெளம்பரம் பண்ணிக்கிட்டு போறதும் கதாநாயகி மருந்தக்குடிச்சுட்டுதா கெடக்கும்போது அவ குடிக்கலடா, நடிப்புன்னு உண்மையைச் சொல்ல, ஒருபயலும் கண்டுக்காம இருக்குறதப் பாத்துட்டு, அதுதான் நா அப்போவே சொன்னேன்லடா என்கிறதும் கலக்கல் மாப்ளே.

இது போதாதுன்னு சரண்யா, அதான் கதாநாயகன் அம்மா, புள்ளய காப்பாத்த தற்கொலைன்னு ஒரு நாடகத்தப் போடுறதும் நல்லாத்தான் மாமா இருக்கு.

இதெல்லாம் நம்ம ஊர்க்காட்டுல நடக்குறதானே மாப்ளே. உலகம் பூரா இதுதானே நடக்குது. வீட்டுக்கு வீடு வாசப்படி. சிங்கப்பூர்லயும் ஒரு காரியம் ஆகணும்ன்னா, பன்னெண்டாவது மாடியிலெர்ந்து குதிச்சிருவேன்னு சொல்லுற ஆளுங்களும் இருக்கத்தானே செய்யுறாக.

அதேதான், அதேதான். படம் முழுக்க காமெடி ரவுண்டி கட்டி கலக்குறது மாதிரி இந்த தற்கொலை, வெத்து மிரட்டல் செஞ்சி காரியம் சாதிக்கிறதுங்குறதும் பொளந்துகட்டிதான் வருது.

கரெக்டாச் சொன்னே மாப்ளே. வீட்டுல உள்ள சாமான ஒடச்சி ஒடச்சி அல்லது ஒடைக்கிற மாதிரி மிரட்டியே பொழப்ப ஓட்டுற கதாநாயகன் விமலும் அப்படித்தான்.

மெரட்டி மெரட்டி காரியம் சாதிக்கிறது புதுசா மாமா, உங்க சூப்பர்வைசரு என்ன சொல்லுவான்? நாம என்ன கேட்டாலும், ஒழுங்கா இரு, இல்லாட்டி பெர்மிட்டை வெட்டி ஊருக்கு அனுப்பிருவென்னு சொல்லிச்சொல்லியே ஓட்டலையா..அந்த மாதிரிதான்.

செரி செரி மாப்ளே.. உன்போனைக்குடு, ஒரு போன் போட்டுட்டுத்தாரேன் ஊருக்கு..

பெர்மிட்டை வெட்டுறதுன்னும் உமக்கு ஊரு ஞாபகம் வந்திருச்சாக்கும். காசு கொஞ்சந்தான் மாமா இருக்கு. இன்னும் டோப்-அப் பண்ணல. அதுசரி, ஊர் ஞாபகமா இல்லை பொஞ்சாதி ஞாபகமா மாமா?

யாம் மாப்ளே இப்புடிக்கேக்குறெ, படத்துல வாறது மாதிரி, துபாய், சிங்கப்பூர், மலேசியா-ன்னு கெடக்குற பயலுக நாம. நாலைஞ்சி வருஷம் அப்புடி இப்புடி கெடந்து போராடி கொஞ்சம் காசுபணம் சேத்துப்புட்டு ஊருபக்கம் போறதுதானே மாப்ளே நம்ம பொழைப்பு.

அதைத்தான் படத்துலே ஒரு கேரக்டராவே செஞ்சு காட்டிப்புட்டாங்களெ மாமா. அப்பன் போயிக்கெடக்குறான் துபாயில. அவன் காலத்துக்கப்புறம் மவன் போறான். இப்படியே இவங்க பொழப்பு போகுதுன்னு.

சரியாச் சொன்னே மாப்ளே, இதுக்குப்பின்னாடி உள்ள சோகத்தையும் சொமையையும் சொல்லாம சொல்லிப்புட்டாய்ங்க மாப்ளே.

சோகம் இருக்கட்டும் மாமா, படத்துல வாற கதாநாயகி ஓவியா பத்தி சொல்லுங்க..

ஏலேய் மாப்ளே, என்ன சொல்லச் சொல்லுறெ, எம்ப்பொண்ணு வயசுடெ அந்தப்பொணுக்கு..

அடடா, கலைக்கண்ணோட பாத்து ஏதாச்சும் சொல்லுங்க மாமா.,

ஓவியாவும் கிராமத்துக்கு ஏத்த முகம், நடிப்புன்னு நல்லாத்தான் இருக்கு மாப்ளே.. அதுமட்டுமில்லாம 'வெதை நெல்லு விக்கிற அவுங்க அப்பா', 'தனியா வளர்ந்து நிக்கிற கதாநாயகி வெச்ச நெல்லுப்பயிறு', அதை தனியா அக்கறையோட வளக்குற கதாநாயகன்'ன்னு 'பாரதிராஜா'வோட ஐட்டமும் நெறையத்தான் இருக்கு.

உங்களுக்கு 'பாரதிராஜா' ஞாபகம் வெந்துச்சாகும். எனக்கு 'ஆண்பாவம்' படம் தான் ஞாபகத்துக்கு வந்தது. அந்த மாதிரி படம்ன்னு தோணுச்சி மாமா.
அதுமாதிரி, கலகலன்னு போற படம் தான். வெட்டருவா, வீச்சுக்கம்பு இல்லாம நல்லாத்தான் போகுது.

அதுமட்டுமில்லாம, எததுக்கெல்லாம் மாலைய கழட்டி வெச்சிட்டு நம்ம பயலுக களத்துல எறங்குறானுவ, எததுக்கெல்லாம் நம்ம பயலுவ சண்டைக்கி நிக்கிறானுவ, எப்போல்லாம் சிங்கப்பூர் மாப்புளக்கி பொண்ணு தாறான்னுவன்னு கரெக்டா காட்டிப்புட்டாய்ங்க மாமா.

வெளிநாட்டுல வேலை பார்த்துட்டுப் போறவங்களுக்கெல்லாம் இந்தமாதிரி காதல்ல மாட்டுனது கசங்குனதத்தான் கட்டிவெக்கிறங்கெ போலெ; அப்புடித்தானெ மாப்ளே சொல்றே.

மாமோய்.. 'பதினாறு வயதினிலே' படம் வந்தபோது நீ ஆரம்பிச்ச தொழிலு, இன்னும் 'பத்தவெக்கிறதே' நீரும் விடவேயில்லையா?

எங்குட்டு மாப்ளே விடுறது. விட்டுட்டா பொழைப்பு ஓடாதே, சரி, படத்துல பாட்டு ஒண்ணும் மனசுல நிக்கலயே மாப்ளே..

ஆமாம் மாமா, பாட்டு மட்டும் இன்னும் கொஞ்சம் நல்லாயிருந்தா படம் 'எவர்கிரீன் மெஹா ஹிட்' ஆயிருக்கும் தோணுது. ஒரே ஒரு பாட்டு மட்டும் மனசுல நிக்கிது மாமா...அதான்... நம்ம ஏரியாவுல நடக்குற வள்ளி திருமணம், அரிச்சந்திரா மயான காண்டம் நாடங்கங்கல்ல வாற "ஊரடங்கும் சாமத்துல ஒருத்தி மட்டும் விளிச்சிருந்தா ஒருத்தி மட்டும் விளிச்சிருந்தா ஒறங்காம தவிச்சிருந்தா" பாட்ட எடுத்து படத்துல போட்டுட்டாய்ங்க. அந்தப் பாட்டுதான் இன்னும் மனசுல நிக்கிது.

சரி மாப்ளே...போனு கேட்டேனே... குடு மாப்ளே, ஒரு கால் போட்டுட்டுத்தாரேன்.

அட, இருங்க மாமா, ஊரை விட்டு வந்து ஒரு நாலைஞ்சி வருஷமாச்சிம் இருக்கும்ல நீங்க.

ஆமாம் மாப்ளே, நாலு வருஷம் ஆச்சு. நாலு வருஷம் என்ன மாப்ளே, ஒரு வீட்டைக் கட்டிப்புட்டு, நம்ம பயல ஒரு நல்ல படிப்பு படிக்கவெச்சுப்புட்டா ஊரு பக்கம் போயிரலாம்ன்னு பாக்குறேன்.

(மனசுக்குள்) ம்ம்..வரும்போது எல்லாரும் இதச்சொல்லிக்கிட்டே வாங்கடே...வந்து பதினாலு வருஷம் ஆனாலும் திரும்பிப்போகாதீங்க.)

என்ன மாப்ளே யோச்சிக்கிறெ....?

இல்ல மாமா.. உங்க பையன் என்ன படிக்கிறான்னு சொன்னீரு?

கும்பகோணத்து காலேஜ்ஜுல ஏதோ கம்புயூட்டர் படிக்கிறான்னு சொன்னா எம்பொஞ்சாதி.

இந்தப் பொஞ்சாதிய நம்பாதீரும்.. இந்தப் படத்துல வாறது மாதிரி பயலுகள கண்டிக்காம கோயில்காளை மாதிரி விட்டுப்புட்டு நம்மகிட்ட நல்லாப் படிக்கிறாய்ங்கன்னு சொல்லியே ஏமாத்திருவாங்க மாமா. எப்போதும் புள்ளங்க மேல ஒரு கண்ணு வெச்சுக்கணும் போல மாமா.

சரிதான் மாப்ளெ.. இருந்தாலும் அந்த வயசுல இதெல்லாம் சகஜம்ன்னுதான் தோணுது மாப்ளே. கொஞ்சம் காலநேரம் ஒத்துவந்தா சரியாயிருவாய்ங்க.

சரி நமக்கும் அந்த ஞாபகம் வெந்துருச்சி மாமா... படத்துல வாற 'ஆடல் பாடல்' பாத்தியளா?

ஆடல் பாடலுக்கு பாய் விரிச்சிப்போடுறதும் அதிலே உக்காந்து ரவுசு விடுறதும் பாத்தேன் மாப்ளே. என்னதான் ஆடல் பாடல்ன்னாலும் நம்ம 'மதுர அகல்யா குரூப்' மாதிரி வருமா மாப்ளே?

அப்படிச்சொல்லும் மாமோய்.. வெட வெடன்னு ஒரு குட்டி, கூந்தலை எடுத்து முன்னாடி போட்டுக்குட்டு, கழுத்தச் சாச்சி, ஒரு வெட்டு வெட்டுவாளெ ஞாபகம் இருக்கா?

ம்ம் ஞாபகம் இருக்கு மாப்ளே.. என்ன, ரொம்ப ஏக்கமா பேசுறது மாதிரி இருக்கு.
அட என்ன மாமா? எங்க இருந்தாலும் நம்ம ஊரு ஞாபகம் போகுமா?

களவாணிப்பயலுக மாப்ளே... நீங்கள்ளாம்.

என்ன மாமா…. நாமெல்லாம்ன்னு சொல்லும் மாமா..

ஏண்டா மாப்ளே என்னைச் சேக்குறே..? நானு நெனைக்கிறேன்... நீரு பேசலை மாப்ளே; படத்துல சரண்யா சொல்லுற மாதிரி, வாற ஆனி போயி ஆடி முடிஞ்சி ரெண்டு வருஷம் போனா எல்லாம் உமக்கு செரியாயிரும்.

அடடா, ஆனி முடிஞ்சி ஆடி போனா இல்ல மாமா... வாற மே, ஜூன் முடிஞ்சு 'ரெண்டு வருஷ பெர்மிட் முடிஞ்சா' எல்லாம் சரியாயிப்போயிரும்..

அது....!

நன்றி: தங்கமீன் மின்னிதழ்
http://www.thangameen.com

தங்கமீன் மின்னிதழில் (அக்டோபர்) வெளியானது.

No comments:

Search This Blog