Showing posts with label commonwealth. Show all posts
Showing posts with label commonwealth. Show all posts

Thursday, October 14, 2010

மண்ணாய்ப்போவார்கள் இவர்கள்.

ராஜபக்ஷே காமன்வெல்த் நிறைவு விழாவிற்கு வருகிறார் என்று கேள்விப்பட்டதிலிருந்து தூக்கம் இல்லை. மனம் எரிகிறது.

காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவின் செயல்பாடு மற்றும் ஒருங்கிணைப்புகளின் குளறுபடி அலங்கோலங்களை உலகமே கைகொட்டிச்சிரிக்கும் காட்சிகள் மனவேதனை அளிக்கும்
வேளையில், இந்த செய்தி என் நெஞ்சை உலுக்குகிறது. சீனாவின் பிடியிலிருக்கும் இலங்கையை கைக்குள் அடக்குகிறேன் பேர்வழி என்று இந்தியா ராணுவத்தடவாளங்களையும்
ரேடார்களையும் பல மில்லியன் பணத்தையும் அளித்து பல உயிர்கள் அழிப்புக்கும் துணைநின்றது போதாதென்று இப்போது காமன்வெல்த் நிறைவுவிழாவுக்கு கொலைமன்னன்
ராஜபக்ஷேவை அழைத்திருக்கிறதாம். சுயபுத்தியுள்ள எந்த நாடாள்பவனும் இதைப்போன்ற முட்டாள்தனங்களைச் செய்யமாட்டான்.

இவ்வாறு செயல்படுவது மூலம் என்ன செய்யப்பார்க்கிறது இந்தியா? சீனாவை கோபப்படுத்த அல்லது அட, உன் கைப்பாவை என்கைப்பாவைக்குள் என்று காட்ட, அல்லது, பார்
அண்டை நாட்டுடன் நான் எவ்வளவு அன்னியமாய் இருக்கிறேன் என்று காட்ட, அல்லது ஒரு வெற்றிவீரனை விளையாட்டுவீரனை கௌரவப்படுத்த அல்லது ஒரு மகாத்மாவை
கௌரவிக்க... இப்படி எது செய்யநினைத்தாலும் அது ராஜபக்ஷேவை அழைத்துவருவதன் மூலம் நடக்காது என்பது என்னைப்போன்ற அரசியல் தந்திர ஞானசூன்யங்களுக்கே புரியும்போது மன்மோகன் ஐயாவுக்கு புரியாமல் போனதென்ன? பக்கத்து வீட்டுக்காரன் கொழுந்தியாளைக் கொஞ்சுகிறான் என்று இவன் நல்லபாம்பை எடுத்து கொஞ்சினானாம். அந்தக் கதைதான்.

சீனாவைக் கோபப்படுத்தவேண்டுமா? தற்போது நோபல் பரிசு வாங்கியிருக்கும் அந்த சீன அமைதிபோராட்ட வீரரை அழைத்துவா, நிறைவு விழாவுக்கு. பாகிஸ்தானின் அதிபரை
அழைத்து வந்து 'பார் நான் சமாதானப்புலி' என்று காண்பி. மாமனிதரைக் கௌரவிக்க வேண்டுமா? மியான்மரின் மேடம் ஆங் சு கியை அழைத்துவா, திபெத்தின் திரு. தலாய்லாமை அழைத்துவா. சிங்கப்பூரின் திரு. லீகுவான்யூவைக் கூப்பிடு. இதையெதையும் செய்யாமல் ஒட்டுமொத்த உலகமே அறியும் அதிலும் ஐ.நா சபையே அங்கீகாரம் அளிக்க மறுக்கும் ஒருவனுக்கு இந்தக் கௌரவத்தை அளிப்பது இந்தியா செய்ய நினைக்கும் எதிலும் அடங்காது ஒட்டுமொத்த தமிழினத்தின் மனத்தையும் ரணமாக்கவே செய்யும்.

திருமாவளவன் போராட்டமாம். ராஜபக்சேயை நேருக்கு நேர் சந்தித்து கைகுலுக்கிவிட்டு இப்போது போராட்டமாம். கொழும்பில் குலுக்கிய கையை டெல்லியிலும் போய் குலுக்கிவிட்டுவா. என்ன இருக்கிறது?

கலைஞர் ஐயா, தமிழ்நாட்டில் கூட்டணி பற்றி காங்கிரஸ் "ஒருமாதிரி" பேசிக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் உங்களுக்கு வந்திருக்க வேண்டாமோ தமிழ்ப்பற்று? என் நெஞ்சம் எரிகிறதே,
ஒரு கொலைஞனை எப்படியய்யா கலைஞன் என காமவெல்த்திற்கு தலைமை தாங்கச்செய்யலாம், என் நெஞ்சு பதறுகிறதே என டெல்லிக்கு அனுப்பியிருக்கவேண்டாமோ உங்களது மந்திரிகளையும் எம்.பி.களையும்?

ஒன்று மட்டும் புரிகிறது. இந்தியாவிற்கு எதிரி பாகிஸ்தான் என நினைத்துக்கொண்டிருந்தேன். அது இல்லை! இந்தியாவிற்கு எதிரி தமிழினம் தான் என்று இப்போதுதான் புரிகிறது. என்ன
செய்ய? எமது தலையெழுத்து அப்படி, தமிழ் தலையெழுத்தல்லவா?

Search This Blog