Tuesday, January 04, 2005

ஆத்மா சாந்தியடையட்டும்!

எதுவும் நிச்சயமில்லை. நேற்று மாலை 6 மணிக்கு ஆரம்பித்த நேரடி ஒளிபரப்பான "சூப்பர் நண்பர்கள் 2004/05" நிகழ்ச்சிக்கு பொறுப்பேற்ற ஐந்து நடுவர்களில் தலைமையானவராக 'டை'யோடு இருந்தார் அவர். முதல் இரண்டு சுற்றுகள் முடிந்து, இருபதில் பத்து, பத்தில் ஐந்து என ஐந்து ஜோடி நண்பர்கள் கடைசிச் சுற்றுக்காக காத்திருந்தார்கள்.

ஐந்து ஜோடிகளும் ஐந்து நடுவர்களில் எவரையாவது ஒருவரை எடுத்துக்கொள்ளவேண்டும். அந்த நடுவர் கேட்கும் கேள்விக்கு அச்சோடி பதில் சொல்லவேண்டும். இதுதான் கடைசிச் சுற்று.

நான்கு நடுவர்கள் முடிந்துவிட்டார்கள். ஐந்தாவது நடுவரிடம் கேள்வி வந்தது. 'டை' யை இழுத்துவிட்டு, அவர் அக்கேள்வியைக் கேட்டார்.'இந்த சூப்பர் நண்பர்கள் என்பதெல்லாம் வெறும் போலித்தனம் என்று நான் நினைக்கிறேன். இதை இல்லையென்று எப்படி மறுப்பீர்கள்.?' இதுதான் கேள்வி.
"என்னம்மா கேட்டாரு பாருய்யா கேள்வி.! வக்கீல்ன்னா சும்மாவா இருக்கு? மத்தவங்க கேட்டதெல்லாம் கேள்வியா" என்று எனதருகில் இருந்த சக அறைவாசியிடம் சொல்லிக்கொண்டே நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

நிகழ்ச்சி முடிந்து வெற்றிபெற்றவர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் நடுவர்கள் எழுவது வரை பார்த்துக்கொண்டிருந்தேன். பிறகு 'லைவ்' முடிந்ததால் டிவியில் அடுத்த நிகழ்ச்சி தொடங்க இருந்த தருணத்தில் சூப்பர் நண்பர்கள் நிகழ்ச்சிக்கு சென்றிருந்த நண்பரிடமிருந்து அழைப்பு. 'உதுமான் கனி காலமாகிவிட்டார்.'
அவர் கேள்வி கேட்ட தோரணையையும் அந்த மென்மையான புன்முறுவலையும் சற்றுமுன் வரை ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு எப்படி இருந்திருக்கும்?

இதோ கைகளில் தவழ்கிறது சென்றவாரம் தேசிய நூலகத்திலிருந்து நான் எடுத்து வந்த "அ·றிணை உயர்திணை" என்ற அவரது சிறுகதைத் தொகுதி. இருகதைகளையும் முன்னுரையையும் மட்டுமே இதுவரை படித்திருந்தேன். அவர் எழுதிய கதையை படிப்பதற்குள் அவர் கதை முடியுமென்று எப்படி நினைக்கமுடியும் என்னால்?

1957 ஆம் ஆண்டு டிசம்பர் 28, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒப்பிலான் என்ற கிராமத்தில் பிறந்து ஐந்து வயதில் சிங்கை வந்து வழக்குரைஞருக்கு படித்து, லண்டன் சென்றும் படித்து வந்து 'உதுமான் கனி & அசோசியேட்ஸ்' என்று வழக்குரைஞர் பணி செய்து, இனியவன் என்ற பெயரில் சில காலமும் பிறகு 'இளையவன்' என்ற பெயரில் 12 சிறுகதைகளும் எழுதியவர்.

அண்மையில் நடந்த மாலன் மற்றும் வெங்கடேஷ் புத்தக வெளியீட்டு விழாக்களில் மட்டுமே எனக்கு அவர் பரிச்சயமாகியிருந்தாலும் இதோ அந்த மென்மையான யாருக்கும் தீங்கிழைக்காத தன்மை கொண்ட நகையும் எளிமையாக பேசிய வார்த்தைகளும் கண்ணுக்குள்ளேயும் நெஞ்சுக்குள்ளேயும் நின்றுகொண்டிருக்கின்றன.

"தற்போது ஆங்கிலம் பேசித்தான் பிழைக்கிறேன். தினமும் தமிழில் தான் சுவாசிக்கிறேன். ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன நான் முதன்முதலாக சிறுகதை எழுதத்துவங்கி. என்னை எழுதத்தூண்டியவர் இன்று என்னோடு இல்லை. என் எழுத்தில் அம்பலத்தில் ஏற்றிப்பெருமிதம் கொண்டவனும் என்னுடன் இல்லை. இன்றைய நிலைமை இப்படித்தான் இருக்கும் என்று நான் அன்று கற்பனை செய்தது இல்லை. நிஜ வாழ்க்கை கற்பனையை விட அதீதமான திருப்பங்கள் நிறைந்தது என்பதை அனுபவப்பூர்வமாக கற்றிருக்கிறேன். நான் ஒரு தமிழ் வெறியன் அல்ல. தமிழ்ப்பிரியன் என்று அடையாளம் காட்டவே ஆசைப்படுகிறேன்"

அ·றிணைகளும் உயர்திணைகளும் அடங்கிய ஒன்றுக்கு அவரின் முன்னுரை!

கற்பனையை விட, பலமடங்கு கொடுமையான திருப்பங்களும் கொண்டதய்யா வாழ்க்கை! இதோ இன்றும் உணர்ந்துகொண்டேன்!

உங்களின் ஆத்மா சாந்தியடையட்டும். இருவேறு மதங்கள் இணைந்த உமது வாழ்வில் 'இன்று நடப்பன' இருக்கட்டும். உமது ஆத்மா சாந்தியடையட்டும்!
எம்.கே.குமார்.


No comments:

Search This Blog