Thursday, August 18, 2005

கீரிப்பட்டி & பாப்பாபட்டி - தீர்வுதான் என்ன?

சென்ற வாரத்தில் ஒருநாள், விஜய் டிவியின் "குற்றம்- நடந்தது என்ன?" நிகழ்ச்சியில், மதுரை-மேலூர் பகுதியைச்சேர்ந்த கீரிப்பட்டி, பாப்பாபட்டி மற்றும் நாட்டார் மங்கலம் ஆகிய கிராம ஊராட்சிகளில் நடக்கும் பிரச்சனைகள் பற்றிக் காண்பித்தார்கள். ஆதிக்க சாதியினரின் அடக்குமுறைகளையும் அவர்களது வெறிச்செயல்களையும் மக்களுக்குக் காட்டி, ஆதிக்க சாதியினரின் அடக்குமுறைகளை எதிர்ப்பவர்களையும் அதற்காகப் போராடுபவர்களையும் மகிழச்செய்வார்கள், மக்களுக்கு உண்மையைப் புரியவைப்பார்கள் என்று நிகழ்ச்சியைப்பார்க்க ஆரம்பித்தேன். ஆனால் 'நடந்தது என்ன?'

ஆதிக்க சாதியினரின் அட்டகாசம், கொலைவெறிகள், மிரட்டல் இப்படியெல்லாம் அறியத்தரப்பட்டிருந்த அப்பிரச்சனையின் தன்மையை வெகு அழகாக அலசினார்கள் அவர்கள். தமிழ்நாட்டில் தனித்தொகுதிகள் ஆரம்பிக்கப்பட்ட வரலாறு, அப்போதிருந்த மக்களின் சராசரி விகிதம் அவர்கள் சார்ந்திருந்த இனங்கள் இவற்றையெல்லாம் விலாவாரியாக விளக்கியவர்கள், இப்போதிருக்கும் இம்மூன்று ஊராட்சிகளின் நிலையையும் சொன்னார்கள்.

அதன்படி, கீரிப்பட்டியில் இருக்கும் மொத்த ஓட்டுக்களில் மூன்றில் ஒருபங்கு மட்டுமே தாழ்த்தப்பட்ட மக்களின் ஓட்டுகள் என்பதையும் மீதமுள்ள ஓட்டுகள் மற்றசாதிகளைச் சார்ந்தவர்கள் என்பதையும் கூறினார்கள் அவர்கள். இரு விகிதத்தாரிடேயும் கலந்து பேசியபோது, தாழ்த்தப்பட்ட மக்களே இவற்றை ஒப்புக்கொண்டார்கள். மேலும் 'இவற்றாலெல்லாம் எங்களுக்கோ எங்களது பிள்ளை குட்டிகளுக்கோ கிடைப்பது, கிடைக்கப்போவது எதுவுமில்லை' என்பதையும் இப்போதுள்ள இப்பிரச்சனைகளால் அவர்களது தற்போதைய வாழ்வும் கருகிக்கொண்டிருக்கிறது என்பதையும் வேதனையாக முன்வைத்தார்கள். ஆக அவர்களைப்பொறுத்தவரை ஆதிக்க சாதியினரின் அடக்குமுறைகளுக்குப்பயப்படுவது என்பதைவிட தற்போதுள்ள உண்மைச்சூழலை உள்வாங்கிக்கொள்வது என்பதில் அவர்கள் அக்கறையாக இருக்கிறார்கள் என்று சொல்வதே சரியாகப்படும் போலிருந்தது.

அடுத்த ஊரான பாப்பாபட்டிக்குச் சென்று அங்கிருக்கும் நிலைமையையும் தெளிவாக விளக்கினார்கள் இவர்கள். அனைத்து இன மக்களிடமும் பேசிப்பார்த்ததில் இவ்வூரிலும் அதேபோல தாழ்த்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை, மொத்த கிராம மக்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்குதான். தாழ்த்தப்பட்ட இன முன்னால் தேர்தல் போட்டியாளர்கள் மற்றும் உயர்சாதியின இளைஞர்கள் ஆகியோரிடமும் பேசிப்பார்த்தார்கள். தாழ்த்தப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிடாததற்கு 'சாமி குத்தம்' ஏற்படுவதும் ஒரு காரணம் என்றும் சொன்னார்கள். தேர்தலில் நின்ற பலருக்கு அவ்வாறு 'தெய்வ குத்தம்' ஏற்பட்டு அவர்களின் 'ஆடுமாடுகள்' இறந்ததையும் முன்னுதாரணமாய் சில இளைஞர்கள் சொன்னார்கள். இந்த 'குத்தம் - கித்தம்' கதையெல்லாம் இருக்கட்டும்; உண்மை நிலவரம் அங்கு தாழ்த்தப்பட்ட இனத்தினர் குறுகிய அளவில் இருப்பதே!

'ஆதிக்க சாதியினத்தினர் இந்த அளவுக்கு வெறியோடு, 'இதில்' இயங்கத்தான் வேண்டுமா?' என்ற கேள்வி எழும்போது, 'நிலைமை தலைகீழாய் இருக்கும்போது தாழ்த்தப்பட்டவர்கள் இங்கு போட்டியிடத்தான் வேண்டுமா?' என்ற கேள்வியும் அவர்களது பேச்சின் உள்ளாடல்களிலிருந்து நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.

"எலக்ஷனும் வேண்டாம்; ஒரு எளவும் வேண்டாம். பிழைக்கக்கூட வழியில்லை; இருக்கும் பிள்ளை குட்டிகளோடு இருப்பதை வைத்து, எப்போதும்போல சந்தோசமாக வாழவிரும்புகிறோம் எங்களை வாழவிடுங்கள்!" என்பதாக இருந்தது போராடியவர்களின் எண்ணங்கள். "இருக்கும் நிலைமையைச் சரிவரப்புரிந்துகொண்டு பிறகு புத்திசொல்ல வாருங்கள் ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள் எல்லோரும்!" என்பதாயிருந்தது தனித்தொகுதியை எதிர்ப்பவர்களின் குரல்கள்.

இக்கிராம மக்களுடன் நில்லாது, சில பல அரசியல் தலைவர்களையும் இந்நிகழ்ச்சியினூடே பேட்டி கண்டார்கள் விஜய் டிவியினர். பேசியவர்கள் எல்லோரும், ஆட்சியாளர்களுக்கும் அமைச்சர்களுக்கும் 'ஜனநாயகத்தை வாழவிடுங்கள்; நியாயத்தை ஆட்சிக்கட்டிலில் ஏற்றுங்கள்' என்பதைப்போன்ற 'யாருக்கும் தெரியாத கோரிக்கைகளையும் உலகமறியாத நியாயத்தையும்' எடுத்துச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். இருந்தாலும் நிகழ்ச்சியின் முடிவை பின்வருமாறு சொன்னது நிகழ்ச்சியைப் படைத்த குழு.

"சில பத்தாண்டுகளுக்கு முன், தமிழகத்திலிருந்த நிலைமையை கணக்கில் கொண்டு தயாரிக்கப்பட உள்ளாட்சி, ஊராட்சி சட்டங்கள் மற்றும் வரையறைகள் இன்றுவரை திருத்தப்படாமலே இருந்துவருகின்றன. அதனால், அதனடிப்படையில் உருவாக்கப்பட்ட சில தனித்தொகுதிகளின் சூழல் தற்போது முழுவதுமாக மாறிவிட்டிருக்கிற பின்னும், இன்னும் அது அப்படியே கடைபிடிக்கப்பட்டுவருவதால் இப்பிரச்சனைகள் தோன்றியிருக்கின்றன. இச்சட்டங்களையும் வரையறைகளையும் மீண்டும் திருத்தி இன்றுள்ள அடிப்படைகளின் படி ஊராட்சி சட்டங்கள் மற்றும் வரையறைகள் கொண்டுவருவதால் இப்பிரச்சனைகளை எளிமையாக தீர்த்துவைக்கமுடியும்!"
இப்படியாய் அமைந்தது அந்த நிகழ்ச்சியின் முடிவு.

ஆக இன்றுவரை அதை தனித்தொகுதியாய் வைத்திருப்பது யாருடைய தவறு? சமாதானம் பேசச் செல்லும் அரசியல்வாதிகளுக்கு எது எளிது என்பது தெரியாமலா நடந்துகொள்கின்றனர்? அதையெல்லாம் விடுங்கள், சில ஆதிக்க சாதியினருக்கும் தலித்திய போராளிகளுக்கும் இனிமேலாவது அங்கு என்ன நடக்கிறது என்பது தெரியவந்தால் மெத்த சந்தோசம்!

எம்.கே.குமார்

2 comments:

Anonymous said...

senRa maatha kalachuvadu padiththiirkaLaa? athil ravikkumar enbavarathu katturai irunthathe!

எம்.கே.குமார் said...

இல்லை, நண்பரே நான் படிக்கவில்லை.

எம்.கே.குமார்

Search This Blog