ஜனநாயகமும் 'சன் டிவி' குழுமமும்!
ஒலி, ஒளிபரப்பு, அச்சு மற்றும் அரசியல் என அனைத்து துறைகளிலும் சன் டிவி குழுமத்தின் அதிகாரப்போக்கை இந்திய அச்சுப்பதிப்பு உலகில் முதன் முறையாக கொஞ்சம் காட்டமாகவே கண்டித்துள்ளது காலச்சுவடு. இந்தமாத காலச்சுவடின் தலையங்கப் (பக்கத்திற்கு பக்கத்துப்) பக்கத்தில் 'சூரியன் விழுங்கும் நாடு' என்று தலைப்பிட்டு விளக்கமாகவும் காரமாகவும் எழுதியுள்ளார் காலச்சுவடு கண்ணன்.
உண்மையில் அக்கட்டுரையின் தன்மை 100 % ஏற்றுக்கொள்ளப்படவேண்டியதே! முரசொலி மாறனின் இந்திய நற்பணிகளில் ஆரம்பித்து அவருக்காக அல்லது அவருடைய லாபத்திற்காக, தி.மு.கவின் கொள்கைகளை 'சங் பரிவாரோடு' பறக்கவிட்டு, 'கமாலாலயம்' பக்கத்தில் படுத்து கைகோர்த்துக்கொண்டது வரை அரசியல் சார்ந்தும், ஒரு ஒளிபரப்பு ஊடகமாக அப்போது அப்பாவின் தயவால் ஆரம்பிக்கப்பட்டு, இப்போது ஒளிபரப்பு ஊடகங்களாக விரவிக்கிடப்பதும் ஒலிபரப்புத்துறையில் விரிந்து போய்க்கொண்டிருப்பதும் அத்துடன் விட்டுவைக்காது 'பராசக்தி' கொண்ட 'குங்கும'த்தைக் கவர்ந்து தனது எல்லாக்கரங்கள் கொண்டும் அதை விற்று வருவது வரையென நீளும் அதன் போக்கு எல்லோரையுமே உள்ளுக்குள் அசைத்துப்பார்க்க ஆரம்பித்துவிட்டது.
அடுத்த முறை 'வணக்கம் தமிழகத்திற்கு' தங்களை அழைத்தாலும் அழைப்பார்கள் எதற்கு இப்போது ஏதாவதுசொல்லி அதில் கொள்ளிவைத்துக்கொள்ளவேண்டுமென்றோ இல்லை 'விளம்பரமோ தொடர்நாடகமோ படவிமர்சனமோ' போட்டு நாலு காசு பார்க்கலாம் அதையேன் கெடுத்துக்கொள்ளவேண்டுமென்றோ இல்லை உலகத்தமிழர்களிடையே உறவை இணைக்கும் பாலமாக இருக்கிற ஒன்றில்(!?) இடறுகள் செய்து தமிழ்த்தாயின் குரல்வளையைப்பிடித்து ஏன் நெறிக்கவேண்டும் என்றோ அமைதியாய் இருந்துவிட்டார்கள் தமிழர்களில் பலர். இன்னும் சிலர், 'சன்' யானைக்காலில் மிதிபட்டு 'வைகோ' போன்ற 'புலி'களெல்லாம் காணாமல் போய்விட்டார்கள், எங்களைப்போன்ற எலிகளெல்லாம் எம்மாத்திரம் அவர்களுக்கு? என்று அமைதியாய் இருந்துவிட, இந்தப் பூனைக்கு மணிகட்ட ஏன் இவ்வளவு தயக்கம் என்று தயங்காமல் முன் வந்து மணியையும் கட்டிவிட்டிருக்கிறது 'எஸ். ஆர். எஸ்' (கண்ணன்) என்ற எலி.
உண்மைதான், அண்மையில் படித்தேன். பினாமி மற்றும் போலிப்பெயரில் கடன் கொடுத்து ஊழல் செய்துவிட்ட கூட்டுறவு சங்க அலுவவலர்களை காவல்துறை கைது செய்ய, அதை, 'விவசாயிகள் கைது' என்று சன் டிவி அரசுக்கு எதிராக முழக்கமிட்டதாம். இதைப்பற்றி ஜு.வி யிலோ துக்ளக்கிலோ படித்ததாக ஞாபகம். இதுமட்டுமா? ஒரு பேச்சுக்குச் சொல்லவில்லை, இன்று இரவு சன் செய்தியைப்பாருங்கள்! எத்தனை போராட்டங்கள், ஊர்வலங்கள், உண்ணாவிரதங்கள், கருப்புக்கொடிகாட்டுதல், பேருந்தை வழிமறித்தல் மற்றும் அரசு அலுவலர்களை 'கேரோ' செய்த காட்சி (என்று நால்வர் நின்று பேசிக்கொண்டிருப்பதைக் காண்பிப்பார்கள்.) என்று தமிழ்நாட்டில் ஏதாவது 'முக்கு முடுக்கில்' நடக்கும் அரசுக்கெதிரான மாபெரும் (!?) போராட்டங்களைக் காட்டுவார்கள், எண்ணிக்கையில் இவற்றை வைத்துக்கொள்ளுங்கள்! எலக்ஷன் நெருங்கும்போது இது இரண்டு, நான்கு அல்லது பதினாறு மடங்காகளாம்!
அடுத்து தினகரன் வந்துவிட்டது. இனி நாளுக்கு 24*60/10 தடவை, வாங்கிவிட்டீர்களா தினகரன்? மும்தாஜ் கர்ப்பமா, திரிஷா தமிழ்ப்பெயரில்லையா? சிவகாசி ஜெயலட்சுமியின் உண்மைக்கதையை அவரே எழுதுகிறார்! பக்கத்திற்குப்பக்கம் இலவச இணைப்பு.! என்று விளம்பரங்கள் வரலாம். (இனாமாய் தரப்படும் பொருட்களின்) விற்பனையில் தினகரன் டாப்புக்கு வரலாம். தினகரன் வசந்தத்தில் வரும் கேள்விக்கு பதில் சொல்லி இமயமலைக்கு ரஜினியுடன் சென்றுவிட்டு வரலாம்! இன்னும் என்னென்ன இருக்கிறதோ?
குங்குமத்தை என் வாழ்க்கையில் நான் காசுகொடுத்து வாங்கியதே கிடையாது, அப்படிப்பட்ட என்னையே 'ரஜினியின் அடுத்தபடம் ஆதிசேஷா, கௌதமி பற்றி கமல் பதில்!' என்ற இரண்டு வாக்கியங்களைச்சொல்லி வாங்க வைத்துவிட்டார்கள். (கடைசியில் இரண்டும் ஒருவரிச்செய்திகள் உள்ளே! இந்தப்பாவம் அவர்களைச் சும்மா விடாது!)
அரசியல் துறையில், தி.மு.கவின் எதிர்காலம் இருக்கட்டும். தளபதி ஸ்டாலினின் எதிர்காலம் முழுவதும் சன் டி வின் செய்திகளுக்குப்பின்னே தான் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும் நிலையிலும், குறைந்தது இன்னும் நாற்பது ஆண்டுகளுக்கு அதாவது தயாநிதி மாறன் வாய் குழறி நடை பிறளும் வரை டெல்லி அதிகாரத்தில் எப்பாடு பட்டாவது (எவர் கொள்கையை பட்டத்தில் விட்டு அல்லது ஏதாவது மாலையை எவர் படத்தில் மாட்டிவிட்டாவது) இருப்பார் என்ற நிலையிலும் சன் டி வி குழுமத்தின் அதிகாரம் இப்போது முடிவுக்கு வருவது அல்லது நேர்கோட்டுக்கு வருவது அசாத்தியம் என்பதும் எல்லோரும் அறிந்திருக்கும் விஷயம்.!
இந்நிலையில் அச்சு ஊடகமும் முழுவதும் அவர்களால் வளைக்கப்பட்டுவிட்ட (இப்போது கால்கட்டைவிரல் மாட்டிவிட்டது!) சூழ்நிலை வருமாயின் அது தமிழக அரசியலுக்கு மட்டுமின்றி இந்திய அரசியல் மற்றும் இந்திய ஜனநாயகத்திற்கும் கூட ஆபத்தாய் இருக்கலாம் என்பதும் அப்போது இருட்டை மட்டுமே கக்கும் சூரியனாய் கூட அது மாறிவிடலாம் என்பதும் காலச்சுவடு மட்டுமல்ல நாம் எல்லோரும் கூட அறிந்துகொள்ள உணர்ந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்!
எம்.கே.குமார்

