Saturday, December 14, 2019

புதிய வானம் புதிய பூமி

அக்பர் வடிவமைத்ததாய்ச் சொல்லப்படும் ஸ்ரீநகர் நகரம் உண்மையில் இயற்கை எழில்கொஞ்சும் நகரம்தான். 45கிமீ பரப்பளவுக்கு சுற்றி விரிந்துகிடக்கும் தால் ஏரி. Abode of love என்று சொல்லக்கூடிய மொகல் தோட்டம் இன்னொரு வரலாற்றுப்பாரம்பரியம். அழகும் வரலாறும் மிளிர்ந்துகிடக்கும் இடம் கஷ்மீர்.

Chinar இலைகள் மொகல் தோட்டம் எங்கும் பரவிக்கிடக்கின்றன. இலைகளை உதிர்த்து பனிக்காலத்துக்குத் தன்னை இணைத்துக்கொள்ளும் மரங்களின் உணர்வு. வருமுன் காத்துக்கொள்ளும் உத்தி. இந்திரா காந்தி அவர்களுக்கு மிகவும் பிடித்த மரங்களாம் இவை. ரசனைமிகுந்தவர் இந்திராகாந்தி. குளிர்காலத்தில் அவர் இங்கு வராமல் இருக்கவே மாட்டாராம். சுடப்படுவதற்கு சிலநாட்களுக்கு முன்கூட அவர் ஸ்ரீநகர் சென்றுவிட்டு வந்தாராம். 

ஃபிரன் எனப்படும் டிரெஸுக்குள் கைகளை விட்டுக்கொண்டு நடந்துபோய்க்கொண்டேயிருக்கிறார்கள். சட்டென ஒரு பார்வைக்கு கையில்லாதவர்கள் போல் தெரிகிறது. வசதியான ஒரு ஆடை. துவைக்கவும் தேவையில்லை என நினைக்கிறேன்.

நாய்வாலைப்போல வெந்துகொண்டிருந்த குழாயை நறுக்கி கெபாப் என்று கொண்டுவந்து தந்தார்கள். நல்ல ருசி. ஆட்டின் நெஞ்செலும்பை 4-5 மணி நேரம் நெய்யில் வேகவைத்துக்கிடக்கும் தமக்மாஸ் என்ற ஆட்டிறைச்சி எலும்பைக்கூட கடிக்கமுடிகிறது அவ்வளவு சுவை. ஒரு பீஸ் ₹200. 

காஷ்மீரி கேவா எனப்படும் குங்குமப்பூ டீ  அபார சுவை. குல்மார்க் ஏரியாவில் சிறுகுவளையொன்று 30ரூபாய். நான் வாங்கி வானத்துக்குக் காட்டிக் குடித்துக்கொண்டிருந்தேன். வானகமே வையகமே பனிச்செருவே... இந்த தேசத்தின் குளிரில் என் மனச்சூட்டையும் உடற்சூட்டையும் இணைத்துக்கொள்கிறேன்.

கஷ்மீரில் பிச்சைக்காரர்களை எங்கும் பார்க்கமுடியவில்லை. மனநலம் குன்றியவர் போலிருந்த ஒரே ஒரு முதியவர் வந்து காசுகேட்டார். 20 ருபாய் கொடுத்ததும் கையை தன் phiran உடுப்புக்குள்ளே விட்டு, அதை வைத்துக்கொண்டு போனார்.

ஸ்ரீநகர் எங்கும் எந்த தலைவர்களின் படங்களையும் பார்க்கவில்லை. ஒரே ஒரு இடத்தில்  வன இலாகா சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனரில் முதல்வர் திருமதி மகபூப் படமும் அவருடைய தந்தை படமும் இருந்தது. ஒரே ஒரு பெட்ரோல் பங்கில் மோடி அவர்களின் படம் இருந்தது.

இந்நாள் முதல்வர் மகபூப், முன்னாள் முதல்வர் என அனைவருடைய வீடும் ஒரே தெருவில் இருக்கிறது. பாதுகாப்பு பலம்.

ஸ்ரீநகரின் முக்கிய தெருக்களில் பத்தடிக்கு ஒரு பாதுகாப்புப்படை வீரர் நிற்கிறார். விமானநிலையத்திற்குள்ளேயும் வெளியேயும் கடும்பாதுகாப்பு. பயணிகளை இறக்கிவிடும் டாக்ஸி கூட முழு ஸ்கேனுக்குப்பிறகே உள்ளே செல்லமுடியும் திருப்பதிமலையடிவாரத்தில் லக்கேஜையெல்லாம் செக் செய்வதுபோல செய்கிறார்கள். லக்கேஜை ஸ்கேன் செய்யும்போது, எனக்கு  உதவிய வடகிழக்கு இந்திய முகஜாடைகொண்ட பாதுகாப்பு வீரர் ’நன்றி சென்றுவருக’ என்று என்னைப்பார்த்து தமிழில் சொன்னார். இந்திய உச்சியில் உடல்சிலிர்த்துப் புளகாங்கிதமடைந்த இரண்டாவது தருணம் அது. ஆக இன்னொரு முதல் தருணமும் இருக்கிறது..

என் கார் ஓட்டுநர் பர்வேஸ் மூன்று மாடி வீடுகட்டி குடும்பத்தோடு வசிக்கிறாராம். யாரும் இங்கு வாடகைக்கு வசிப்பதில்லை என்றார். வாஜ்பாய் வெரி குட்மேன் என்றார். இந்தியாவின் 4 முக்கிய தீவிரவாதிகள் என்று அத்வானி, முரளிமனோகர் ஜோசி, ராஜ்தாக்கரே, மற்றும் மோடியைச்சொன்னார்.

டிசம்பர் ஆறு காலையில் கிளம்பி குல்மார்க் சென்றேன். தேசிய நெடுஞ்சாலை 1-இல் பயணம் செய்யும் வாய்ப்பு. வாஜ்பாயின் கனவு இது என்றும் அவரை மிக நல்ல மனிதன்..குட்மேன் குட்மேன் என்று சொல்லிக்கொண்டே வந்தார் என் ஓட்டுநர். வழியெங்கும் நகரமாதலின் அறிமுகங்களாய் விளைநிலங்கள் கடைகள் மற்றும் வீடுகளாக மாறுவதைக் காணமுடிந்தது. இடையில் ஓரிடத்தில் காஷ்மீரி ஆடைகள் மற்றும் தரமான கொட்டைகள் மற்றும் குங்குமப்பூ கிடைக்கும் என்று ஓரிடத்தில் நிறுத்தினார். அவர் நண்பர் கடை என்றும் சொல்லிக்கொண்டார்.  விலை கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. கார்பெட் தரையில் சோபாவில் அமரச்சொல்லி அரைமணிநேரம் காஷ்மீரி கார்பெட்டுகள் எப்படிச்செய்யப்படுகின்றன என்பதை விளக்கினார். வெள்ளைக்காரர்களுக்கேத்த வியாபார உத்தியும் பாவனையும். நான் இறங்கி வெளியே வந்துவிட்டேன்.

வழியில் சாப்பாட்டிற்காக ’பாரத் தாப்பா’ என்ற கடையில் நிறுத்தினார் ஓட்டுநர். உடனுக்குடன் சமைப்பதால் கொஞ்சம் தாமதமாகும் ஆனாலும் சுவை அதிகம் என்றார். உண்மைதான். அபார சுவை.

சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது  பக்கத்தில் தமிழ்க்குரல்கள். திருநெல்வேலிப்பையனும் கோயம்புத்தூர் பொண்ணும் அவர்களது சிறுபெண்ணுமாக ஒரு எஞ்சினியர் தம்பதி. கட்டாரில் வசிப்பதாய்ச்சொன்னார்கள். ஹிந்தியில் நன்றாய்ப்பேசிக்கொண்டார்கள். 

குல்மார்க்கில் ராஜா ஹரிசிங்கின் அரண்மனைக்குக் குதிரையில்தான் செல்லவேண்டும் என்று உள்ளூர் வணிக ஏற்பாடு. என் அரண்மனைக்கு நான் குதிரையில் செல்வதற்கு என்ன கட்டுப்பாடு என்று வாய்வரை வந்தாலும் குதிரையைப்பிடித்துக்கொண்டு என்னோடு நடந்துவருபவர் ரோஜா படத்தில் வரும் வில்லன் போலிருந்ததால் எதுவும் சொல்லவில்லை. 

குல்மார்க்கில் சிறுமலை ஒன்றின் உச்சியில் சிவாலயம் ஒன்று இருக்கிறது. படிகளில் ஏறி உள்ளே சென்றால் பூட்டியிருந்தது. கதவின் கம்பிகளுக்கிடையே சிவலிங்கம் நெய்யால் செய்ததுபோன்று காட்சிதந்தது. அதைச்சுற்றி இலைகளை வைத்து அழகான அலங்காரம். வெளியிலிருந்த உண்டியலுக்கு எடைக்கு எடையில் பூட்டு இருந்தது. நூறு ரூபாயைப் போட்டேன்.

டிசம்பர் 6 மாலை, குல்மார்க்கிலிருந்து ஸ்ரீநகர் வரும்போதும் மட்டும், மாகம் என்ற ஒரே ஒரு இடத்தில், ஈரான் அதிபர் ஹாசன் ருஹானியின்  படங்களை வைத்து நன்கொடை கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஷியா முஸ்லிம்கள் அதிகம் கொண்ட பகுதி இது என்றார் ஓட்டுநர்.

ஹ்ஸ்ரத்பால் மசூதிக்குச்சென்றேன். மிகப்பழமையானது என்று  ஓட்டுநர் அழைத்துச்சென்றார். ஆயிரத்துக்குமேற்பட்ட புறாக்கள் பறந்தமர்ந்து விளையாடின. இந்தப்பெயரை எங்கோ கேட்டிருக்கிறோமே என்று உள்ளுக்குள் யோசித்துக்கொண்டேயிருந்தேன். மஜீத்துக்கு வெளியிலிருந்து படம் எடுத்துவிட்டு காரில் திரும்பிக்கொண்டிருந்தபோது, இந்தமசூதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்தார்கள் அல்லவா என்று கேட்டேன். ஓட்டுநர் ஒருநிமிடம் அதிர்ச்சியாகி, உங்கள் ஞாபகசக்தி நன்று என்றார். ஆமாம், 1989ல் தீவிரவாதிகள் இந்தமசூதிக்குள் புகுந்து பாதுகாப்புப்படையினருடன் பெரும்தாக்குதல் நடத்தினர். வரலாற்றில் சிக்கிய பெரும் பழமையான நல்ல மசூதி.

குஜார் இனமக்கள் வாழும் காங்கன் பகுதிவழியே சோனாமார்க் சென்றோம். ’பாம்பையும் பாப்பானையும் கண்டால்’ என்ற தமிழகப் பழமொழிபோல குஜாரையும் கோப்ராவையும் பார்த்தால் குஜாரை அடி என்று காஷ்மீரிகள் சொல்வதாய்ச் சொன்னார் ஓட்டுநர். காரணம் கேட்டதற்கு அவர்கள் நம்பிக்கையற்றவர்கள் என்றார். தேர்தலில் இவர்களே அதிகம் நீண்ட வரிசையில் நின்று ஓட்டுப்போடுவதாகவும் காசுவாங்குவதாகவும் சொன்னார்.

18950 அடி உயரம் சோனாமார்க் அருமையான பனி சூழும் இன்னொரு இடம்.. லே, கார்கில், லடாக் செல்லும் பாதை இதுதான். உறையும் பனி காரணமாக, ஆறுமாதம் இச்சாலை மூடிவைக்கப்படும் என்றார்கள். எந்த வாகனமும் செல்லமுடியாது. மோடி ஆட்சிக்கு வந்தபின், இப்போது 6 கிலோமீட்டருக்கு சுரங்கப்பாதை செய்கிறார்கள். இன்னும் சிலவருடங்களில் இது முழுப்பயன்பாட்டுக்கு வரும் என்றார்கள். ட்ரில்லிங் மெஷின் உள்ளிட்ட வாகனங்களும் வேலை செய்யும் பணியாளர்களுமாக இருந்தது அந்த இடம். தூரத்தில் நான்கைந்து கஷ்மீர் இளைஞர்கள் ஒரு காரின் அருகில், கேவா டீ அருந்திக்கொண்டிருந்தார்கள். அது ஒரு நகரும் கடை என்பதையும் அறிந்தேன். அன்பாகப்பேசினார்கள். பாகிஸ்தானும் வேண்டாம், இந்தியாவும் வேண்டாம், தனி கஷ்மீர் என்பதே எங்கள் ஆசை என்றார்கள். 

டால் ஏரி அழகியலின் உச்சம். ஏரியின் கரையில் முதியவர்கள் சிலர் ஆங்காங்கே வால்நட் கொட்டைகளை வைத்து விற்றுக்கொண்டிருந்தார்கள். உடைத்தும் உடைக்காமலும். 

ஷிகாரா படகுப்பயணம் கமல், ஸ்ரீதேவி, எம்.ஜி.ஆர் சரோஜாதேவி, நம்பியார் என பல நினைவுகளைக் கிளறிவிட்டது. ஒற்றைத்துடுப்பால் தள்ளிக்கொண்டுபோகும் படகில் பயணம். வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும் படகுவீடுகளைக்கடந்தது செல்லும் படகு. தானே தள்ளிக்கொண்டு வரும் சிறுசிறுபடகுகளில், நம் படகுக்கருகில் வந்து சிக்கன் டிக்கா, மட்டன் டிக்கா, கெபாப், பழங்கள், குங்கப்பூ,  கைவினைப்பொருட்கள் விற்கிறார்கள். நடுத்தர வயதுள்ள ஒருபெண் தன்படகைத் தானே தள்ளிக்கொண்டுபோகிறார், வாழ்க்கையென்னும் ஏரியைப்போன்ற டால் ஏரியில்.

படகுவீட்டில் நுழைந்தோம். ஏரியில் மிதக்கும் பங்களா. படகுவீட்டில் முதலில் வரவேற்பறை. பிறகு சப்பாட்டு அறை, பிறகு சிறு அறைகள், இறுதியில் மாஸ்டர் அறை. ஏர்கான் அளவு 28 வைத்தும் குளிராக இருக்கிறது.

ஸ்ரீநகர் ஏர்போர்ட்டுக்குள் காபி 60 ரூபாய் என்றார்கள். ஒரு காபி வாங்கிவிட்டு சிறந்த ஏர்போர்ட் என்ற இரண்டாவது விருதுவாங்கிய அதனுள் உலாவிக்கொண்டிருந்தேன். என்னை நோக்கி வந்தார் அந்த பாதுகாவலர். குறுகுறு பார்வையில் கோபமோ கட்டளையிடும் அதிகாரமோ ஏதும் தெரியவில்லை. எங்கு செல்கிறீர்கள் என்று கேட்டார். டெல்லி என்றேன். தமிழ்நாடா? என்றார். ஆமாம், ஆனால் சிங்கப்பூரில் செட்டில் ஆகிவிட்டேன் என்றேன். பேச ஆரம்பித்தார். சிறுதுநேரம் பேசிவிட்டு அவர் சொல்லிச்சென்றதுதான் இந்த சுற்றுலா முடிந்த இந்தநாள்வரை மனதுக்குள்ளேயே ஓடிக்கொண்டிருக்கிறது. காமராஜர் ஞாபகம் வந்தார்; கமல்ஹாசன் ஞாபகம் வந்தார். இன்னும் என்னென்னமோ ஞாபகம் வந்தது. அவர் அப்படி என்னதான் சொல்லியிருப்பார் என்று யோசிக்கிறீர்களா? தென் இந்தியர்கள் நல்லவர்கள், அமைதியானவர்கள், விட்டுக்கொடுப்பவர்கள் என்றார். 

கொடுமை கொடுமையின்னு ஸ்ரீநகருக்குப்போனா அங்கே ஒரு கொடுமை!




 மூத்த தேவி ஆலயத்துக்குச் செல்லும் வழி
மிகப்பழமையான மஜீத் முன்பு

பனியிலிருந்தும் நீரிலிருந்தும் காக்க கால்நடை தட்டை உணவுகளை மரக்கிளைகளுக்குள் சேர்த்து வைக்கின்றனர்.

ஆறு கிலோ மீட்டருக்கு தரையடிப்பாதை அமைக்கும்பணி

இரண்டு தரையடிப்பாதை

சோனாமார்க். கார்கில்  செல்லும் வழி
மூத்த தேவியை வணங்கியபின் மேலும் காட்டுக்குள் மேலேறிச்சென்றால் தரிசனம் தரும் சிவா.

மூத்த தேவி.

ச்சினார் இலைகளுடன் ஒரு அழகன் (கவிஞனும்)

சாப்பாட்டுக்கடையில் காலுக்கருகில் வைத்துக்கொள்ளும் சூடேற்றி

காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே?

இராஜாவின் பாதை

குல்மார்க் -ல் உள்ள சிவனாலயம்

கஷ்மீர் ஸ்ரீநகரில் எங்குமே காணப்படாத திரு மோடியின் படம். இங்கு மட்டும்

விளைநிலங்கள் வசிப்பிடங்களாக மாறும் நிகழ்காலங்கள்

கார்கில் செல்லும் பாதை. 

பனி மேலே நான்

சோனா மார்க்கில் வழிகாட்டும் நண்பர்கள்குழு. சூடாக டீ விற்கிறார்கள். 

இந்த குளிருக்கு இந்த டீ அற்புதம் மட்டுமல்ல; ஆனந்தம்

பிள்ளைக்கூட்டங்களைப்  பார்க்கையிலே

தால் ஏரி

இராஜ  ராஜ சோழன் நான்

வாழ்க்கையென்னும் ஓடம்

ஒட்டுமொத்த கஷ்மீர் பயணத்திலும் இரண்டு முறை உளஎழுச்சியடைந்தேன்.
திடுமென எதிர்பாராத ஒரு ரெஸ்டாரண்டில் ஏ.ஆர் ரகுமானின் பாடல். அவரே பாடுவது. சக தமிழனாக ஏதோ ஒரு உணர்வாக இருந்தது. இரண்டாவது ஸ்ரீநகர் விமான நிலைய காவல் அதிகாரி ஒருவர் தமிழில்,’நன்றி மீண்டும் வருக’ என்னும்போது.

ஒட்டுமொத்தமாக, இது ஒரு மாபெரும் தேசத்தின் கலாச்சாரம் பொங்கிய தலைப்பகுதியென உணர்ந்தேன். இதன் அழகியலிலும் சமூக வாழ்வியல்களிலும் எளிதாக இணைந்துகொண்டேன். ஒவ்வொரு மனிதர்களிலும் ஒரு சகோதரத்தன்மையை உணர்ந்தேன். ஒருவகையில் தமிழர்கள் உள்ளிட்ட விதவிதமான இந்திய இராணுவ முகங்கள்கூட எனக்குள் இதைக் கடத்தியிருக்கக்கூடும்.

(டிசம்பர் 2017ல் எழுதியது)

No comments:

Search This Blog