Thursday, January 29, 2009
கவிஞர் லதா (சிங்கப்பூர்)அவர்களுக்கு வாழ்த்துகள்!
எம்.கே.குமார்.
29/01/09
K. Kanagalatha
Kanagalatha (Latha) is a News Editor with the Tamil Murasu, the national Tamil daily of Singapore. She has been with the daily from 1990. She has been a prolific contributor of poems, short stories, and literary and arts reviews.
Her poems have been anthologized in Journeys: Words, Home and Nation, a multilingual anthology published by The Centre for the Arts, National University of Singapore (1995), Rhythms-A Singaporean Millennial Anthology of Poetry, published by the National Arts Council (2000), and Kanavum Vidiyum - Anthology of Contemporary Tamil Poetry by Women Poets by the Sahitya Academy of India (2003). Her bilingual poem Still Human was also featured in the MRT: Poems on the Move series on the MRT trains by the National Arts Council.
A short story, Identity, was published in English and Tamil in SINGA (Jan 1999), the Journal of the arts and literature in Singapore. Her poems and short stories have also appeared in prominent overseas Tamil literary journals like Kanayaazhi (India), Kaalachuvadu (India), Uyirnizhal (France) and Sarinigar (Sri Lanka).
நன்றி:http://www.bookcouncil.sg/swc/writersa-k.htm
Wednesday, January 28, 2009
பசுபதியைப் பற்றிய சிறுகுறிப்புகள் - 4
காதைத்தீட்டிக்கொண்டேன். ஆண்டு இறுதி விடுமுறைக்காக சென்னை சென்று திரும்பி வந்திருந்த அவனுடைய தோழி மீனாட்சி அவர்களைப் பார்த்தானாம் பசுபதி. மீனாட்சி அவர்களின் ஆதங்கமாய் பசுபதி சொன்னதன் சுருக்கமான விவரணங்கள் இவை.
கூவம் ஆற்றில் ஒரு பதின்ம வயதுப்பெண் மழைவெள்ளத்தில் அடித்துச்செல்லப்படுகிறாள், ஆயிரம்பேர் கரையில் வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்கின்றனர். ஒருவர் கூட காப்பாற்ற முயற்சிக்கவில்லை.
வங்கிக்கிளைக்கு அக்கவுண்ட் அப்டேட் செய்யச்சென்றால் இரண்டு நாட்கள் கழித்து வரும்படி தலையை நிமிர்த்தி பார்க்காமலேயே சொல்கிறார் வங்கி அதிகாரி.
வீட்டிலிருந்த தமிழ்ப்புத்தகங்களை கோணியில் அடைத்து கிணற்றுக்கருகில் போட்டு விட்டார்கள் வீட்டிலுள்ளவர்கள். மனது கேட்காமல் ராமகிருஷ்ணா மிஷனுக்கு அள்ளிச்சென்று கொடுத்துவிட்டு வந்தாராம் தனது நண்பரொருவர். மணிமேகலையை கொடுக்கும்போது மட்டும் கண்களில் ஜலம். காரணம் அவருடைய இளங்கலை மற்றும் முதுகலையில் மணிமேகலை அவருக்கு மிகவும் பிடித்த பாடம். 94 மதிப்பெண்கள் எடுத்திருக்கிறாம்.
ஹார்ட் பாதிக்கப்பட்டிருந்த உறவினர் ஒருவருக்கு ஹார்ட் தேடி அலைந்து 24 மணி நேரத்துக்குள் ஒருவர் ஹார்ட் கொடுக்க முன்வந்துவிட்டார். ஹார்ட்டைக் கொடுக்க முன்வருபவர்கள் இந்தியாவில் இவ்வளவு எளிதாக கிடைக்கிறார்கள் என்றால் எங்கோ ஏதோ தவறு நேருகிறது என மீனாட்சி நினைப்பதாக அவன் சொன்னான்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உறவினர் ஒருவருக்கு உயிர் போய் இரண்டு நாட்களாகியும் வெண்டிலேஷன் செட்டப்போடு ஆஸ்பத்திரியிலே வைத்துக்கொண்டு போராடுவதாய் நாடகம் நடத்தியிருக்கிறார் ஒரு தனியார் மருத்துவமனை டாக்டர். ரமணா தோற்றது போங்கள்!!!
அண்மையில் இறந்துபோன புகழ்பெற்ற எழுத்தாளர் ஒருவரின் மனைவியைச் சந்தித்தாராம் மீனாட்சி. வீட்டில் அப்பா சேர்த்துவைத்திருக்கும் குப்பையையெல்லாம் தூக்கியெறிந்து விட்டு வா; உனக்கு நானிருக்கும் இடத்தில் வீடு வாங்கித்தருகிறேன் என்கிறாராம் அவரது பையன்.
மிகவும் புகழ்பெற்ற இருமனைவி கொண்ட எழுத்தாளர் ஒருவர் ஹாஸ்பிட்டல் செலவுக்கே கலைஞரிடம் கையேந்திக்கிடக்கிறாம். பெற்ற பையன்களும் மனைவிகளும் கண்டுக்காமல் விட்டுவிட்டார்களாம்.
சிறிது நேர அமைதிக்குப்பிறகு பசுபதி சொன்னான், பணம் மட்டும் சார்ந்து அமைவதா வாழ்க்கை?
Tuesday, January 06, 2009
பசுபதியைப் பற்றிய சிறுகுறிப்புகள் - 3
அபிராமி சிங்கப்பூரின் பத்திரிகைத்துறையில் உயர்ந்த பதவியிலிருக்கும் ஒரு பெண். குருவிக்கூட்டைப் பிரித்தெடுத்தது போல நெளிநெளியான நீண்ட கூந்தலுடன் பார்த்ததும் மோகிக்க வைக்கும் இயல்பான அழகு. இன்னாருடன்தான் வாழ்கிறார் என்று உறுதிபடாத பலருடன் உறுதிபடாத தகவல்கள் நிறைய உலவி வந்தாலும் பசுபதி அவரிடம் நெருங்கியிருக்கிறான் என்பதை எப்போதோ ஒரு தருணத்தில் அவனே என்னிடம் சொல்லியதுண்டு. நெளிநெளியாய் அசைந்தன நினைவலைகள்.

அபிராமி நலமாய் இருக்கிறார்; பத்திரிகைத்துறையில் இருந்து இப்போது தொலை ஊடகத்துறைக்கு மாறிவிட்டார். நிகழ்ச்சிகளுக்கு தானே முதன்மை நிர்வாகியாகவும் தயாரிப்பாளராகவும் பணிபுரிவதாகவும் சொன்னான்.
ஏதோ நான் ஏமாற்றமடைந்ததைக் கண்டவனாய், "என்ன சொல்லச்சொல்கிறாய்?
அநாகரிகமான விஷயங்களை என்னிடம் கேட்காதே; மூக்குவரை போகலாம்; மூக்கைத்தொட உரிமையில்லை" என்றான் அமைதியான குரலில்.
எம்.கே.குமார்.
Saturday, January 03, 2009
பசுபதியைப் பற்றிய சிறுகுறிப்புகள்-2
என்ன பார்ட்டி என்று கேட்டேன்.
நீரும் நியூடும் என்றான் அவன்.
அப்படின்னா??
ஆண்கள் எவ்வாடையும் அணிய அனுமதியில்லை; பெண்கள் ஜி ஸ்டிரிங்க்ஸ் மட்டும் மட்டும் மட்டும்; அதுவும் 12 மணிக்குப்பிறகு களையப்படவேண்டும்.
எவ்வளவு கட்டணம் என்றேன்.
250 ரிங்கிட்; 100 சிங்கப்பூர் வெள்ளி!
போகலாம் என்றேன்.
போய் வந்தபிறகு அதுபற்றி எதுவும் எழுதக்கூடாது, சரியா?
எம்.கே.குமார்.
Friday, January 02, 2009
பசுபதியைப் பற்றிய சிறுகுறிப்புகள்
பசுபதி என் பழைய சிநேகிதன். சிங்கப்பூரில் அவனை இந்நிலையில் சந்திப்பேன் என்று நான் கனவிலும் நினைத்திருக்கவில்லை. அவனது கதையைப் பின்னொரு நாளில் ஆற அமர உங்களிடம் தொடர்கிறேன். இப்போது அவனைச் சந்தித்த கதை!
ஃபேரர் பார்க் ரோட்டிலிருந்து சந்தர் ரோடு பிரியும் இடத்தில் இருக்கும் ஒரு விடுதி வாசலை நான் கடக்கும்பொழுது ஒரு கணவனும் மனைவியும் அவ்விடுதியை விட்டு வெளியே வந்தார்கள். பரிச்சயமான முகங்களாய்த் தென்பட, மீண்டும் நோக்கியதில் பசுபதி கொஞ்சம் முன்வழுக்கையோடு எனக்குக் கிடைத்தான்.
கொஞ்சம் செழித்த நடையுடன் முன் நோக்கி விரைந்து நகர்ந்த பெண்ணைப்பற்றி கேட்டபோது, "பார்த்தும் உன் ஞாபகத்துக்கு வரவில்லையா? சரத்குமாருக்குக் கூட ஜோடியாய் நடித்திருக்கிறார் அப்பெண். நடிகை ..... என்றான். அவர் சென்ற திசையை நோக்கினேன்.
எம்.கே.குமார்
Thursday, January 01, 2009
Monday, October 27, 2008
தினக்குரல் கருத்தோவியர் மூர்த்திக்கு தங்கப்பதக்கம்
நாளை 28 ஆம் திகதி மாலை 6 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் மேற்படி ஊடக அமைப்பு நடத்தும் பரிசளிப்பு விழாவில் கலைஞர் மூர்த்திக்கு சான்றிதழ் மற்றும் தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார்.
எனக்குப்பிடித்த கேலிச்சித்திரக்காரர்களில் ஒருவர். வாழ்த்துகள்!!
அன்பன்,
எம்.கே.
நன்றி: தினக்குரல்
Sunday, June 01, 2008
"நாம்" - நற்புடை நாற்றங்கால்!


தமிழ் இலக்கிய உலகிற்கு இது புதுவரவுகளை ஆரத்தழுவும் காலம். தமிழ்நாட்டிலிருந்து தமிழினி வெளியிடும் "தமிழினி" மாத இதழ், எனி இந்தியன் வெளியிடும் "வார்த்தை" மாத இதழ், மலேசியாவிலிருந்து சிலமாதங்கள் வெளிவந்த 'காதல்' மாத இதழின் டீம் மறுபடியும் களம் இறங்கியிருக்கும் "வல்லினம்-காலாண்டிதழ்", மற்றுமொரு மலேசிய சிற்றிதழ் "அநங்கம்" ஆகியவை திறல் காட்ட தீரத்தோடு உலகத் தமிழ் இலக்கியக்களத்தில் குதித்திருக்க சிங்கப்பூரிலிருந்தும் அத்தகைய முனைப்போடு களம் கண்டிருக்கிறது "நாம்" - என்றொரு காலாண்டிதழ்.
தமிழ்நாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு வந்திருக்கும் இளைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து இந்த புதிய காலாண்டிதழை வெளிக்கொணர்ந்திருக்கிறார்கள். இதழ் ஒன்றைத் தொடங்குதல் என்பது இலக்கிய ஆர்வம் கொண்ட பல இளைஞர்கள் / அறிஞர்களின் தனிப்பட்ட / இணைந்த கனவாகவே இருந்து வந்திருக்கிறது. அதற்கேற்றவாறே சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதும் நாட்பொழுதில் அவை மறைந்துபோன தடத்தையும் தமிழிலக்கிய வரலாற்றில் நிறைய காணலாம். உருப்பெற ஏற்பட்ட காரணங்களில் நூற்றில் ஒரு பங்குகூட அதன் வீழ்ச்சிக்கு வழிவிடமுடியும் என்பதால் தோன்றுவதும் தொடர்வதும் சார்ந்தவர்களின் மன உறுதியில் அமைந்திருக்கிறது.
பன்னெடுங்காலமாய் பொருளாதாரத்திற்கென புலம்பெயர்ந்த தமிழர்கள், போகுமிடங்களிலெல்லாம் இரு விஷயங்களைச் செய்தார்கள். ஒன்று கோவில் கட்டுவது, இரண்டாவது வட்டிக்கடை வைப்பது. மூன்றாவதாய் ஒன்றைச் செய்வதற்கும் இளைஞர்குழாம் சார்ந்த மனமொத்த இயக்கம் சிலதும் எப்போதும் முன்னெடுத்தே நின்றிருக்கிறது. சிங்கப்பூரிலும் ஆதிகாலம் தொட்டு அதற்கான சான்றுகள் நிறைய இருக்கின்றன. 29 வயதிலேயே பத்திரிகை ஆசிரியரான தமிழவேள் கோ. சாரங்கபாணி முதல், பட்டுக்கோட்டையையடுத்த பிச்சினிக்காட்டிலிருந்து வந்த திரு. இளங்கோ வரை பலர் இவ்வனுபவத்தில் வாழ்ந்திருக்கின்றனர். (இதுதொடர்பான தமது அனுபவத்தை திரு. பிச்சினிக்காடு இளங்கோ அவர்கள் நிகழ்ச்சியிலும் பகிர்ந்துகொண்டார்.)
"நாம்" இதழை எதனடிப்படையில் வரையறுப்பது என்பதில் சில சிக்கல்கள் நீடிக்கின்றன. வடிவமைப்பில் உயிர்மையைக்கொண்டும் கூறுபொருளில் சிற்றிதழா அல்லது வெகுஜன இதழா என்பது சார்ந்தும், சிங்கப்பூர் வாழ் நண்பர்கள் வெளியீடு எனினும் வெளியீட்டு முகவரி இந்தியாவிலிருந்தும்/ தனிச்சுற்றுக்கு மட்டும் என முழுமையை அடைவதில் சில குறைபாடுகள் உள்ளன. இணைய நண்பர்களின் ஆக்கங்களையே பொதுவாகக் காணமுடிகிறது எனினும் இணைய எழுத்துகளின் மேம்பட்ட உள்ளீடுகளைக்கொண்டு அதுவே அதன் சிறப்பம்சமாக மாற நேரலாம்.
முதல் இதழின் அச்சகம், முதன்முதலில் புத்தகம் தயாரித்திருக்கிறது என நினைக்கிறேன். ஆங்காங்கு பக்கங்கள் "மை"யிட்டுக்கொண்டிருப்பதும், புகைப்படங்கள் தெளிவற்றிருப்பதும் முதல் இதழின் திருஷ்டிக்காக என்று எடுத்துக்கொள்வோம். அடுத்தடுத்த இதழ்கள் முக்கிய அச்சகங்கள் வழியாக முழுமைபெற்று வரும் என்று உறுதி தெரிவித்தார்கள் "நாம்" குழுவினர்.
இதழ் வெளியீட்டு நிகழ்வில் சிங்கப்பூரிலிருக்கும் அனைத்து தமிழ் அமைப்புகளும் அல்லது அதன் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர் என்பதிலும் வெளியிடப்பட்ட இடத்திற்காகவும் வெளியீட்டு நிகழ்வில் நான் கலந்துகொண்டமையில் களிப்படைகிறேன். முதல் இதழில் எனது ஒரு கதையும் வந்திருக்கிறது. கற்பனையாய் எழுதிய கதை, வெளியான தருணத்தில் உண்மையாய் ஆனதை செய்தியாய்க் கண்டு திரு. பாண்டித்துரை அழைத்து ஆச்சரியப்பட்டார்.
சிங்கப்பூரை உருவாக்கிய சர். ஸ்டாம்ஃபோர்டு ராஃபிள்ஸ், 1822ல் உருவாக்கியதும் அவரது மறைவுக்குப்பின் 1859ல் மீண்டும் உருப்பெற்றதுமான 149 ஆண்டுகால வரலாற்றுச்சிறப்புடைய சிங்கப்பூர் பொட்டானிக் கார்டனில் வைத்து "நாம்" இதழ் வெளியிடப்பட்டது.
நிகழ்ச்சி முடிந்து, சிங்கப்பூரின் மூத்த தமிழார்வலர்கள் திரு. கண்ணபிரான் மற்றும் திரு. செ.ப.பன்னீர் செல்வம் ஆகியோருடன் பேசிக்கொண்டிருக்கையில், தமிழகத்திலிருந்து எடுத்துவரப்பட்ட ரப்பர் மரக்கன்றுகள் மலேயா முழுக்க நடுவதற்கு முன்பாக, இந்த பொட்டானிக் கார்டனில்தான் முதன்முதலாக சோதனையின் பொருட்டு நடப்பட்டது என்றார்கள். அத்தகு பெருமைமிக்க இத்தோட்டத்தில் இன்னொருமுறை ஒரு இலக்கியச்செடியை நட்டுவைத்திருக்கிறார்கள். நிகழ்ச்சியை குனிந்து உற்றுநோக்கிக்கொண்டிருந்த அந்த நீண்ட நெடிய மரத்தைப்போல இவ்விதழும் எல்லாவித சிறப்புகளும் பெற்று வளரவேண்டும்; வாழவேண்டும்.
எந்தவொரு இதழ் ஆரம்பிக்கப்பட்டாலும் அதனை மையமாக வைத்து குறைந்தது பத்து எழுத்தாளர்களாவது உருவாவார்கள் என்று தனது அனுபவத்தை வைத்துச்சொல்வாராம் திரு. மனுஷ்யபுத்திரன். அந்த வகையில் இந்த இதழ் பத்து எழுத்தாளர்களால் அல்லது எழுத்தார்வம் மிக்கவர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது; இன்னும் பல பத்துப்பேர்களைக் கொண்டு சேர்க்கும் என நம்புவோம்.
(பத்து, பத்து என்றதும், சம்பந்தமில்லையெனினும் இது ஞாபகத்திற்கு வருகிறது. புரசைவாக்கம் குமுதம் அலுவலகத்திற்கு வெளியே "பத்து ரூபாய் நோட்டே, நீ போய் ஆயிரம் பேருக்கு உதவி செய்துவிட்டு பத்தாயிரம் ரூபாயாகத் திரும்பிவா" என்று எழுதப்பட்டிருக்கும். யாராவது இதை கவனித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.)
அன்பன்
எம்.கே.குமார்
Saturday, May 03, 2008
இருட்டை வெறும் இருட்டு என்றுதான் நினைத்திருந்தேன் - வண்ணதாசனுக்கு நன்றி!
வண்ணதாசனின் சிறுகதைத்தொகுப்புகளில் 'நடுகை' (பாதிமட்டுமே) மற்றும் 'கிருஷ்ணன் வைத்த வீடு' ஆகிய இரண்டை மட்டும் வாசிக்கும் பாக்கியம் இக்காலத்தில் எனக்கு கிட்டியிருந்தது.
தனது திருமணத்திற்கு மேளம் வாசித்தவரைப் பற்றிய ஒரு கதை, அமரர் ஊர்தியைப் பின்தொடருபவனைப் பற்றிய இன்னொரு கதை, தனது மாமரத்திலிருந்து சிறுகுச்சி ஒன்று ஒடிக்கப்படுவதை உணர்ந்து வீட்டிலிருந்து எழுந்து வரும் கிழவியின் கதை, வெறும் மின்மினிப்பூச்சிகளின் வெளிச்சத்தில் அலசப்படும் "தாழம்பூ" தாத்தாவின் கதை, நகர வாழ்க்கையில் நிலை தடுமாறி ஊர் திரும்ப ஏங்கும் 'நெல்லை சிவாஜி' குத்தாலிங்கம் அண்ணாச்சியின் கதை என கதை என்ற பெயரில் நிகழ்வுகள் பதியப்படுவதை நெகிழ்ச்சியுடன் ஆமோதிக்கிறேன்.
நினைவில் ஒரே மாதிரியாகத்தான் நகர்ந்து போகிறார்கள் - மேளம் வாசிப்பவர்கள் அனைவரும் எனக்கு; தரையில் சிந்தும் பூக்களைத் தவிர்த்துக்கொண்டே அமரர் ஊர்தியைப் பின் தொடர்ந்து சென்றவர்களில் நானும் ஒருவன்; கிழவியினுடைய மாமர குச்சியின் வாசனையை குழந்தையின் காதுக்கடியில் கிடைக்கும் பால்வாசனையாய் உணர நேர்ந்தமையில் ததும்பிய மகிழ்வு; நீளமான கூந்தலைக்கொண்ட தலையில் தவழும் தாழம்பூவின் நறுமணத்தில் தாத்தாவை விட நான் திளைத்திருந்தமையில் கிடைத்த மோகம்; சில பேருடைய குடிவாசனை மட்டும் எப்போதுமே எனக்கு பிடித்திருந்தாய் இருக்கும் நிலைமை என மனம் இளகும் உயிர் நெகிழும் ஐம்புலன்களும் ஏங்கும் இலக்கிய சுகத்தை சில கதைகள் ஏற்படுத்திச்சென்றிருக்கின்றன.
அடுக்கி வைக்கும் செங்கல்களைப்போல நிகழ்வுகளால் கதையைக் கட்டமைக்கும் கலையைக் காண நேருவதுண்டு. ஒரே ஒரு செங்கல்லைக்கொண்டு தாஜ்மஹாலையே கட்ட முயலும் சம்பவத்திற்கிணையான இலக்கியங்களுமுண்டு. செங்கல்லையே காட்டாது அதைப்பற்றிய உலகை அலசும் கதைகளுமுண்டு. ஒரே ஒரு செங்கல்லைத் திரும்ப திரும்பப் பார்த்து அதன் செம்மைத்தனத்தை பதிய முற்படுவதும் உண்டு. வண்ணதாசனின் கதைகள் இதை அடிப்படையாகக்கொண்டது என நினைக்கிறேன். பலமுறை பார்ப்பதால் உண்டாகும் இயற்கையான சலிப்பையும் மீறி ஏதோ ஒன்று தர முயலுவது இவரது படைப்புகளின் வெற்றிக்கதையாகும்.
'யாருக்கும் தெரியாது என்று நினைத்திருந்த', நடந்து பார்க்காத சசிப்பெண்ணின் பாதத்தை துணியால் வேலைக்காரன் மூடுவதை மறக்க நினைத்தும் முடியாத 'கிருஷ்ணன் வைத்த வீடு' மறக்க முடியாத ஒரு கதை மட்டுமல்ல; செவ்வியல் சிறுகதையின் கட்டுமான வடிவத்திற்கு மிகச்சிறந்த ஒரு உதாரணமும் என்பேன். சிறந்த வாசகனை இக்கதை தத்தெடுத்துக்கொள்ளும் என்பதை உணர நேருகையில் மகிழ்கிறேன்.
அப்போது எனக்கு பத்து வயதிருக்கும். மாமா வீட்டிற்கு எதற்காகவோ சென்றிருந்தேன். அங்கு என்ன நடந்தது என்பதும் ஞாபகமில்லை. ஆனால் நான் திரும்ப வேண்டும். இரவு எட்டு-ஒன்பது மணிக்கு காட்டின் வழியே எனது வீட்டுக்கு நான் திரும்பவரவேண்டிய சூழ்நிலை. யாரும் துணைக்கு இல்லை. எதற்கு துணை என்று இப்போது நினைத்தாலும் அன்று அந்த இருளைக் கடந்து வீட்டுக்கு வந்துசேர்ந்த சம்பவத்தையே நான் அடைந்த மிகப்பெரிய வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாக இன்றுவரை நினைத்துக்கொண்டிருக்கிறேன். வெற்றி என்றால் யாரை எதிர்த்து? இருட்டையா? இருட்டு எனக்கு என்ன செய்தது? இருட்டு எப்படி எனக்கு எதிரியானது? இருட்டை ஜெயித்தேன் என்றால் இருட்டுக்கா நான் பயந்தேன்? இல்லை இருட்டின் அடையாளங்களுக்கா? இருட்டின் அடையாளங்கள்தான் என்ன? பூச்சி, பாம்பு, பேய், பூதம், திருடர்கள்? அதுசரி, இருட்டின் அடையாளங்கள் இவைகள் மட்டும் தானா?
இருட்டை தேர்ந்த புகைப்படக்கலைஞனைப்போல, ஓவியனைப்போல அடிக்கடி அலசுகிறார் வண்ணதாசன். சாலாச்சி அக்காவும், திலகா அக்காவும், சந்திமுனைப் பிள்ளையாரும் இருளும் வெளிச்சமும் போல எங்கும் நிறைந்திருக்கிறார்கள்.
இவ்விரு தொகுப்புகளிலும் கதைகளை எங்கும் நான் காணவில்லை. வெறும் புனைவு மட்டுமே கதை என்று கொண்டோமானால் அவைகள் எவற்றையும் இத்தொகுப்புகளில் நான் காணவில்லை. புனைவுகளின் தட்டையான தடங்களை எங்கும் நான் தரிசிக்கவில்லை. வாழ்க்கை, வாழ்க்கை, வாழ்க்கை மட்டுமே கதைக்களங்களில் விரவிக்கிடக்கின்றன.
நண்பர் மானசாஜென்னிடம் பேசிக்கொண்டிருந்தபொழுது 'நிலை' என்று வண்ணதாசனின் ஒரு கதை இருப்பதாய்ச் சொன்னார். நான் இப்போது அதைப்படிக்கவில்லை. ஆனால் 'நிலை' என்ற பெயரில் ஏறக்குறைய ஏழுவருடங்களுக்கு முன் ஒரு கதை படித்தேன். சிறந்த சிறுகதைகளாய் யாரோ ஒருவர் தொகுத்த அத்தொகுப்பில் அதுவும் ஒன்று. நள்ளிரவு வரை வேலை செய்துவிட்டு தீபாவளிக்கு முந்தைய இரவில் வீடு திரும்பும் ஒருவனின் கதை அது. அந்தக் கதையும் அதில் வரும் லாரியில் அடிபட்டுச் செத்துக்கிடக்கும் ஒரு எலியும் இன்றுவரை நினைவிலாடுகின்றன.
இரண்டு விஷயங்களுக்காய் திரு. வண்ணதாசனுக்கு நான் நன்றி சொல்ல விழைவது எதார்த்தமானது என நினைக்கிறேன்.
ஒன்று, நேற்றுவரை இருட்டு, வெறும் இருட்டாகவே எனக்கு இருந்திருக்கிறது - இப்போது அது, நெருங்கிய ஒரு உறவாகி விட்டிருக்கிறது -
இரண்டாவது, எப்போதும் பார்வையிலிருந்து எளிதாய் நகர்ந்துவிடும் எந்த ஒன்றையும், இப்போது மீண்டும் ஒருமுறையாவது பார்க்க ஆரம்பித்திருக்கிறேன் - வண்ணதாசனால்!
அன்பன்,
எம்.கே.குமார்.
நன்றி: வாசகர் வட்டம், சிங்கப்பூர்.http://vasagarvattam.blogspot.com/
Thursday, April 24, 2008
நெடு நாட்களுக்குப்பிறகு எனக்குப்பிடித்த கலைஞர்!
மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
கருணாநிதி கொண்டு வந்த தீர்மானம் சட்டசபையில் நிறைவேறியது
இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டசபையில் முதல் - அமைச்சர் கருணாநிதி தீர்மானம் கொண்டு வந்தார். அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
சென்னை, ஏப்.24-
தமிழக சட்டசபையில் நேற்று இலங்கை பிரச்சினை பற்றி பேசுவதற்காக பா.ம.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன.
அப்போது நடந்த விவாதத்தில் ஜி.கே.மணி (பா.ம.க.) கண்ணப்பன் (ம.தி.மு.க.) சுதர்சனம் (காங்கிரஸ்) ஆகியோர் காரசாரமாக பேசினார்கள். அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் கருணாநிதி பதில் அளித்து பேசியதாவது:-
வருந்துகிறேன்
இலங்கைப் பிரச்சினைக்காக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை பரிவு உணர்வோடும், இரக்க சிந்தனையோடும், தமிழர்களுக்கு உதவிட வேண்டும் என்கின்ற பாச மனப்பான்மையோடும் கொண்டு வந்து, அதே அடிப்படையிலே விவாதம் நடைபெற்றிருந்தால் நான் மிகுந்த ஆறுதல் அடைவேன்.
ஆனால், எந்த நோக்கத்திற்காக ஜி.கே.மணி இந்தத் தீர்மானத்தை கொண்டு வருவதாகச் சொல்லி முன்மொழிந்தாரோ அந்த நோக்கம் சிதைகின்ற வகையில் சில வார்த்தைப் பிரயோகங்கள் அமைந்ததற்காக நான் வருத்தப்படுகிறேன்.
ஆணிவேரை அசைக்கக் கூடாது
இந்த அவையை இந்திய அரசின் ஆதிக்கத்திலே உள்ள ஒரு நிர்வாகத்தின் அடிப்படையில் நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். இங்கு நாம் எழுப்புகின்ற கருத்துக்கள், நிறைவேற்றுகின்ற தீர்மானங்கள், அந்த ஆணிவேரை அசைத்துவிடக் கூடாது.
இங்கே கண்ணப்பன், சுதர்சனத்தின் கருத்துக்கு மாறுபட்ட கருத்து சொல்ல எழுந்து உணர்ச்சி வேகத்தில், இலங்கையிலே உள்ள தமிழர்களைக் கொல்வதற்கு இந்திய அரசு சாதகமாக இருக்கிறது அல்லது தூண்டுகோலாக இருக்கிறது என்பது போன்ற கருத்து அமைந்த வாசகத்தை அவர் சொன்னதை நான் அவரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.
அவர் துடிப்பாகப் பேசக் கூடியவர். தீவிரமாகச் சிந்திக்கக் கூடியவர். நான் மறுக்கவில்லை. ஆனால், இப்படி கடுப்பாகப் பேசக் கூடியவர் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை. அந்த வகையிலே அவர் சொன்ன அந்த வார்த்தைகளை அவைக் குறிப்பிலே இருந்து நீக்குவதற்கு நான் பரிந்துரை செய்கிறேன். (கண்ணப்பன் சொன்ன சில வாசகங்களை அவைக் குறிப்பிலிருந்து சபாநாயகர் ஆவுடையப்பன் நீக்கினார்).
ஒரே குழுவாக இருந்தால்
இதிலே ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதிலே எந்தவிதமான கருத்து மாறுபாடும் இந்த அரசுக்கு இல்லை. ஆளுங்கட்சிக்கும் எனக்கும் இல்லை. ஏனென்றால், இலங்கைப் பிரச்சினை ஆரம்பமான அந்தக் காலத்திலே இருந்து, தந்தை செல்வா அவர்களுடைய காலத்திலேயிருந்து நடைபெறுகின்ற போராட்டம், இந்த உரிமைப் போராட்டம். செல்வா மறைந்த பிறகு அவருடைய வழித் தோன்றல்களாக பல பேர் இந்தப் போராட்டத்திலே ஈடுபட்டு அறவழியிலே அவர்கள் நடத்திய கிளர்ச்சிகளெல்லாம் பயனற்றுப் போய்விட்டன.
பிறகு, விடுதலை பெற்றே தீரவேண்டும் என்று கிளம்பி அவர்கள் போராளிகளாக மாறினார்கள். போராளிகளாக மாறியவர்கள் ஒரு குழுவாக இருந்து அந்தப் போராட்டத்தை நடத்தியிருந்தால் இந்நேரம் அவர்கள் நேபாளத்தைப் போல வெற்றியினை ஈட்டியிருக்க முடியும். வேறு பல நாடுகளிலே நடந்த விடுதலைக் கிளர்ச்சிக்கு கிடைத்த வெற்றியைப் போல வெற்றி பெற்றிருக்க முடியும்.
குழுவுக்குள் ஏற்பட்ட மோதல்
போராளிகளுடைய முக்கிய குறிக்கோளே, போராளிகளுக்குள் போராடுவது என்ற இந்த போராளிகளுக்குள்ளே நடந்த போராட்டம் தான் இன்றைக்கு நாம் இந்த அவையிலே அவர்களுக்காக பரிந்துரை செய்து பேச வேண்டிய ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால்தான், இடைக்காலத்திலே நாம் விடுதலைப் போராளிகளுக்குச் சொன்ன அறிவுரை, `சகோதர யுத்தத்தை நிறுத்துங்கள்' என்பதுதான்.
அந்தப் போராளிக் குழு, ஒரே போராளிக் குழுவாக இருந்து ஒரே ஒற்றுமையோடு இலங்கையிலே நடைபெறுகின்ற அக்கிரமங்களைக் கண்டிக்க வேண்டும்; தமிழர்களுக்கு உரிமைகளைப் பெற வேண்டும் என்ற எண்ணத்திலே செயல்பட்டதா என்றால் எதுவும் இல்லை. ஒரு குழுவை இன்னொரு குழு வீழ்த்த வேண்டும்; ஒரு குழுவை இன்னொரு குழு மாய்க்க வேண்டும்; ஒரு குழுவுக்கு செல்வாக்கு இல்லாமல் செய்ய வேண்டும் என்ற முறையிலே தான் ஒவ்வொரு குழுவின் தலைவர்களும் அங்கே கொல்லப்பட்டார்கள், வெட்டப்பட்டார்கள், சுடப்பட்டார்கள் என்பதையெல்லாம் மறந்து விடக் கூடாது. அமிர்தலிங்கம் கொல்லப்பட வேண்டியவரா? ம.பொ.சிவஞானம் போல விளங்கியவர். அவர் ஏன் கொல்லப்பட்டார்?
பலவீனப்படுத்திய ஒற்றுமையின்மை
இப்படி பல போராளிகள் அவர்களுக்குள்ளே அடித்துக் கொண்டு, சுட்டுக் கொண்டு செத்திருக்கிறார்கள். இவைகளெல்லாம்தான் இந்தப் போராட்டத்தை பலகீனப்படுத்தியது. இத்தகைய விடுதலைப் போராட்டம் உலகத்திலே எல்லா இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கும்போது இந்த சின்னஞ்சிறு நாடு இலங்கையிலே வலுவிழந்ததற்குக் காரணம் நமக்குள்ளே ஒற்றுமை இல்லாதது தான். நாம் வலுவிழந்து போய் பகைவர்களுக்கு இடம் கொடுத்து விட்டோம்.
சிங்கள ராணுவம் இன்றைக்கு நம்மை ஏறி மேய்கிறது என்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இருந்தாலும் அதற்காக, நம்முடைய வீட்டுப் பிள்ளை கிணற்றோரத்திற்கு சென்று அதிலே விழுந்து விடுகின்ற நிலை வரும் போது அதைத் தாங்கிப் பிடிக்கின்ற அந்தத் தாய் உள்ளமாக, தமிழர்களுடைய உள்ளமாக, தமிழ்நாட்டிலே வாழ்கின்றவர்களின் உள்ளமாக இருக்கின்ற காரணத்தினால்தான், தொப்புள்கொடி உறவு உள்ளவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இங்கே ஒரு தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டுமென்று ஜி.கே.மணி எண்ணினார். நானும் அதை ஆதரிக்கிறேன். அதே நிலையிலே கண்ணப்பன் ஆதரித்தால் நானும் அவ்வாறே ஆதரிக்கிறேன்.
மத்திய அரசை குறை கூறாதீர்
ஆனால், இதிலே இந்திய அரசை குறை கூறிப் பயனில்லை. அவர்கள் ஏற்கனவே பெரும் இழப்புக்கு ஆளானவர்கள். அவர்களுடைய பெருந்தலைவர் ராஜீவ்காந்தியை இந்தக் காரணத்திற்காக இழந்தவர்கள். அவர்களை நாம் பழி சொல்லியோ குறை கூறியோ பயனில்லை. இருந்தாலும், அந்தக் குடும்பத்திலே இன்னமும் அந்த மனித நேயம் உண்டு என்பதை சமீப காலத்து செய்திகளெல்லாம் நமக்கு விளக்குகின்றன.
அது வேலூர் சிறைச்சாலை செய்தியாக இருந்தாலும் சரி. அல்லது அன்றைக்கு சோனியாகாந்தி மன்னிப்பு கொடுத்த செய்தியாக இருந்தாலும் சரி. அந்த அம்மையார் தூக்கிலிடப்பட்டால் அவரின் குழந்தை என்ன கதி ஆவது என்று சிந்தித்தார் என்ற செய்திகளை எல்லாம் பார்க்கும் போது அவர்களிடத்திலே மனித நேயம் குடி கொண்டிருப்பதைக் காண்கிறோம். அந்த மனித நேயத்தின் அடிப்படையில், நாம் நிறைவேற்றுகின்ற தீர்மானத்தை எண்ணிப் பார்ப்பார்கள். அங்கே வாழ்கின்ற தமிழர்களுடைய உயிர்களுக்கு பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையோடு இந்தத் தீர்மானத்தை முன்மொழிகிறேன்.
தீர்மானம்
``இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அங்கே மோதலில் ஈடுபட்டு வரும் இரு பிரிவினர் இடையேயும் பேச்சுவார்த்தைகளுக்கு இந்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இலங்கையில் அமைதியை ஏற்படுத்த, முறையானதொரு அரசியல் தீர்வு எட்டப்படுவதற்காக பயனுள்ள பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பாடு செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும்'' என வலியுறுத்துகின்ற தீர்மானத்தை முன்மொழிகிறேன். நீங்கள் அதை ஆதரித்துத் தர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏகமனதாக நிறைவேற்றம்
அதைத் தொடர்ந்து சுதர்சனம், ஜி.கே.மணி, கண்ணப்பன் ஆகியோர் இந்த தீர்மானத்தை முழுமனதோடு ஆதரிப்பதாக தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் கருணாநிதி கொண்டு வந்த அந்த தீர்மானம் ஏகமனதாக சட்டசபையில் நிறைவேறியது.
நன்றி: தினத்தந்தி.
Friday, December 21, 2007
சிங்கப்பூரில் தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்தும் விழா - பதில்!

நன்றி "டுடே" (Today)
இதுவரை நடந்த எல்லா விழாவும் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் கலைவிழா என்ற பெயரிலேதான் நடந்தன. கட்டிடம் கட்டுவதற்கு என்று சரத்குமார் அவ்வப்போது சொன்னதைத் தவிர வேறு எங்கும் அவ்வாறு எழுத்துப்பூர்வமாய் குறிப்பிடப்படவில்லை. அதனால் இவ்விழா நடக்கலாம்.
Tuesday, December 18, 2007
தென்னிந்திய நடிகர் சங்கம் சிங்கப்பூரில் நடத்தும் நிகழ்ச்சி - நடக்குமா?

நன்றி: "டுடே"
எனக்குத் தெரிந்தவரை தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் திரட்டும் நிதியைத்தவிர மற்ற நிதிக்காக நிகழ்ச்சி ஏதும் நடத்தக்கூடாது. காவல்துறை என்ன சொல்கிறது, பார்ப்போம்.
Sunday, December 16, 2007
காகிதமலர்கள் நாவல் - மூன்றாவது கோணம்
பாக்கியம் மாமி:
ஆனாலும் இந்த மிஸஸ் பசுபதிக்கு இவ்வளவு ஆகாதாக்கும். பத்மினி இந்தக்காலத்தவ, அவ ஆடுறான்னு இவாளும் ஆடலாமா? பத்மினிக்கு போட்டியா வாறா, மனசாலே நாமளும் அழகிதான்னும் நமக்கும் நாலாம்பளையை பாக்கவைக்கிற, கவனிக்கவைக்கிற சொரூபங்கள் இருக்குறதா மனசாலே நெனச்சுண்டு இப்படிக் காலம் போகுற போக்குல சுத்துனா கலிகாலம் ஆகாம என்னதான் ஆகும்? பத்துப்பேரு வந்தாலும் ஹிஹின்னு பேசிச் சமாளிச்சுண்டு போற இக்காலத்து பொண்ணுக்குப் போட்டியாய் பத்து ஆம்பளைங்களை இவளும் சமாளிக்க இறங்குனா, முடியுமா? அந்தளவுக்கு அவாளுக்கு மனதைர்யம் இருக்கா சொல்லுங்கோ? ஒரு ஆம்பிளை ரெண்டு ஆம்பிளை சரி; இத்தனை ஆம்பிளையைப் பாத்தபின்னும் இத்தனை வயசு ஆனபின்னும் மனசுல ஒரு பக்குவம் வராம இருபத்தஞ்சாட்டம் மந்திரியைப்பாத்ததும் மோகவெறி வருமோ சொல்லுங்கோ?
பாருங்கன்னா, பதினாறு வயசுப்பொண்ணாட்டம், இன்ஃபேச்சுவேஷன்ல மாட்டிண்டவாளாட்டம், மந்திரி ஏமாத்திட்டாருன்னு மண்டையப் போட்டுக் குழப்பிண்டு படக்குன்னு போயி மோதிண்டா! பாவம், இந்த ஆதவன்அம்பியும் என்னதான் பண்ணுவான்? இப்படிக்குழப்பிண்ட, வாழ்க்கையைப் பொசுக்கிண்ட பொண் ஜென்மத்தையெல்லாம் படக்குன்னு கொன்னுடவேண்டும் இல்லாட்டி மனநலகாப்பகத்தை முன்புறம் காட்டி கதையை முடிச்சுக்கவேண்டும். வேறு என்னதான் எங்க பொறப்புக்கெல்லாம்? அந்த சண்டாளன் பசுபதி ஆரம்பிச்சு வைச்சான். இந்த ஆதவன் அம்பி முடிச்சுவைச்சான். ம்க்கும்!
பத்மினியப் பாத்து பொறாமப்பட்டு பழமைக்குள்ளேயும் புதுமைக்குள்ளேயும் மாட்டிண்டு அவ படுறத விடுங்கன்னா, அவாளும் பொம்பளதானே, தாய்தானேன்னா, விசுவம் தன்மேல பாசம் வைக்கலேன்னு பொலம்பித்திரியுறா, செல்லப்பா மேல இருக்கும் பாசத்தை வெளிப்படுத்த வழியில்லாமயும் விட்டேற்றியா வளந்துட்ட பத்ரி மேல பாசத்தை எப்படிக் காட்டுறதுன்னா தெரியாமயும் தடுமாறுறா, தேவையின்னா வாறவன்னா இருக்கான் புருஷன் (யாருடைய தேவைக்கும்!), நாடகத்துல நடிக்கிறதுல ஒரு நிம்மதி, அங்கேயும் ஆம்பிளைங்க தானெ, அவாளும் எல்லாரும் மாதிரிதானே! அட, புருஷன் மட்டுமே பாக்கணுன்னாதான் எந்தப்பொண்ணும் வீட்டுக்குள்ளே அழகா மேக்கப் போட்டுட்டு உக்காந்துடலாமேன்னா, வெளியில வாறபோது எதுக்காக அழகா வாறோம்? நாலு பேரோட வெளிப்படையான மதிப்பீட்டுக்கு அர்த்தம் சொல்லத்தானேன்னா. அந்த நாலு பேரோட மதிப்பீடும் புதுமையோடு நம்மைப் பொருத்திப்பாத்தா எப்படித்தான் நம்ம தரத்தை ஏத்திக்கிறது சொல்லுங்கன்னா. மிஸஸ் பசுபதி, இந்த மதிப்பீட்டை வேற மாதிரி நெனச்சிண்டு செயலாக்கிண்டா, பாவம்!
விசுவத்தின் அப்பா:
ஆக்சுவல்லி.... உங்களையும் என்னையும் போல பசுபதியும் நல்லவர்தான் சார். என்ன, சான்ஸ் கெடைக்காதவரைக்கும் நாம நல்லவனா இருக்கோம். சான்ஸ் கெடச்சிதுன்னா நாமளும் சறுக்கிடுறோம். எங்காவது இருக்குற ஒண்ணுரெண்டைப் பாக்காதீங்க. நம்ம ஐயரை எடுத்துக்குங்க, மனுஷனுடைய போக்கு சுத்தமா பசுபதிக்குப் பிடிக்காது, தன்னளவில அவர் ரொம்ப நல்லவர்ன்னு நெனச்சிண்டு வாழ்றார், ஆனா எதுவரைக்கும் வாழ்றார்? சான்ஸ் கெடைக்கிறவரைக்கும்.! சத்தியமாச் சொல்லுறேன் சார், பசுபதிகூடவே அவரும் ஸ்டெனோவா சேர்ந்திருந்தா, அய்யரு பசுபதியை விட மோசமா இருந்திருப்பாருன்னு நான் நெனைக்கிறேன். இந்நேரம் மந்திரி லிஸ்ட்ல கூட அவரு பேரு இருந்திருக்குமோ என்னவோ!
வாழ்க்கையோட கடைசிவரைக்கும் எதுதான் சார் நம்மள ஓட்டிட்டுப்போவுது? புரோகிரஸ், வளர்ச்சி, இன்பமயமான வாழ்க்கை, உயர்ந்த பதவி, நல்ல குடும்பம் இப்படி எதுன்னு எடுத்துண்டாலும் பணம் முக்கியம் சார். நம்மள மாதிரி ஒரு பிற்போக்கான சமூகத்துல இருந்துகிட்டு முற்போக்கான வாழ்க்கைக்கு வரணுமுன்னா நம்ம மனைவிங்களையும் அதுக்கு கொண்டுவரணுமுன்னு அவர் மனைவி மனைவி பாக்கியத்தைக் கொண்டுவந்தார், பாருங்க, சீறுகெட்ட சமுதாயத்துல ஒரு எஸ்.கே, ஒரு மந்திரின்னு எல்லாரும் ஒரு அங்கம் சார். ஸ்டெனோவா அவர் வேலையை அவங்க பாத்துருக்கலாம்; பாராட்டியிருக்கலாம், கூட்டத்துக்கு வந்த அவரு பொண்டாட்டிய பாத்து அவரைப் பாராட்டினா பசுபதி என்ன சார் செய்யமுடியும்? பாக்கியமும் பளார்ன்னு ரெண்டு அறை அறைஞ்சி வாழ்க்கையோட ஸ்ருதி எதுன்னு பசுபதிக்குக் காட்டியிருக்கலாம். அவ என்ன பண்ணினா, வாழ்க்கையோட அடிப்படை மூலக்கூறுகள் பெண்ணழகோட இணைஞ்சதுன்னு முடிவு பண்ணிட்டா, எப்படி பணம் பதவியோட அது இணைஞ்சதுன்னு பசுபதி முடிவு பண்ணினமாதிரி!
நீங்க சொல்லுங்க சார், இங்க உங்க முன்னாடி உக்காந்திருக்க எத்தனை பேரை உங்களுக்குப்பிடிக்கிது? அதோ அவரைப் பிடிக்குமா உங்களுக்கு? எது சார் அதைத் தீர்மானிக்கிது? அந்தாளு கருப்புச்சட்டை போட்டுவந்ததாலே பிடிக்காதுப் போயிருக்கலாம், அட ஒண்ணும் வேண்டாம். நீங்க பாக்கும்போது ஒரு இஞ்ச் விரியிற சிரிப்புக்குப்பதிலா அரை இஞ்ச் விரிஞ்சதாலே 'மூடி'ன்னு அவரை உங்களுக்குப் பிடிக்காம போகலாம். ஆனா ஒண்ணு சார், ஆதவன் சொன்னதுமாதிரி, ஒரு மாநிலத்தோட, மக்களோட பிரச்சனைக்குத்தீர்வு ஒரு ஸ்டேனோவால மாறுது பாருங்க. இதுதான் சார் வாழ்க்கை! அந்த ஸ்டேனோக்கள் நல்லவரா இருந்தா போதும், இந்தியா மட்டுமில்லை எந்த நாடும் முன்னுக்கு வந்துடலாம்.
விசுவத்தின் மனைவி:
யு பெலீவ் ஆர் வோண்ட் பெலீவ் ஐ டோண்ட் நோ, ஆல் மென் ஆர் ஸ்டுபிட்; அசடுங்க! நிஜமாச் சொல்லுறேன். அதிலேயும் பத்மினியின் கணவர்...விசுவம்! அய்யோ..! அவர்கூடல்லாம் வாழவேண்டியிருக்கேனு ரொம்ப நாள் அவ நொந்திருப்பாள்ன்னு நெனைக்கிறேன்! ஆனா சில நேரங்கள்லெ பாருங்க, இந்தமாதிரி அசடுங்களாலெ சில நன்மைகள் இருக்கும். நமக்கு வேண்டியதை நாம ஈஸியா அடஞ்சிக்கலாம்.
யு மைட் ஹேவ் நோட்டீஸ்டு, பத்மினியும் விசுவமும் காரசாரமா விவாதம் பண்னிண்டு இருப்பா ஒரு கட்டத்துல, எந்த ஹஸ்பெண்ட் - ஒய்ப்ப்புக்கும் இந்த ஆர்க்யூமெண்ட் வந்தப்பறம் சேர்ந்து படுக்குறது பேசுறது ஏன் வாழறது கூட கஷ்டமாகலாம், ஆனா அவங்க சேர்ந்துக்குறாங்க, ஏன்? ரெண்டு பேருக்கும் தெரியுது, இந்த அசடைவிட்டா எந்த அசடை நாம புடிக்கிறதுன்னு அவ யோசிக்கிறா! இப்போது இருக்குற அரைகுறை நிம்மதியும் போகனுமான்னு அவன் நெனைக்கிறான். அப்புறம் எப்படி பிரிவாங்க. என்ன, அவங்களுக்குள்லே இருக்குற அந்நியோன்யமும் அப்பப்போ மாறி மாறி வந்துபோகும்; அவ்வள்வுதான்! அதானே மிஸ்டர் இந்த இடியட் குடும்ப வாழ்க்கைக்கி ஆதாரம்?! அதை வெச்சித்தானே ஏகப்பட்ட திருமண வாழ்க்கைங்க ஓடிட்டு இருக்கு? கரெக்ட் ஒர் னோட்?
விசுவத்தோட அக்கப்போர் தாங்க முடியலேன்னு பாத்தா, அவங்க அம்மா பாக்கியம்மாமி அய்யோ..! ஏந்தான் இந்த கிழவிக்கு இப்படிப்புத்தி போகுதோ தெரியலை! ஒரு ஆம்பளையோட பார்வையை தன்னை நோக்கி அடைய வைக்கிறதுதுதான் பொண்ணோட அழகுக்கும் / அலங்காரத்திற்கும் வெற்றின்னு நெனச்சிக்கலாம். பத்மினிகூட பலசமயங்கள்லெ பலபார்ட்டிகள்லெ அந்தமாதிரி நடந்திருப்பா, அந்த மெடிக்கல் ரெப்புகூட பேசினது மாதிரி! ஆனா இந்தமாமியார் இருக்காங்களெ அவங்க, பத்மினிகூட போட்டிபோடுறதா நெனச்சிண்டு அந்த ஆம்பளையை தன்னை அடைய வைக்கிறதுதான் தன்னோட வெற்றின்னு நெனச்சிட்டாளே பாவம்! எல்லா ஆம்பளைங்களும் கோகுலகண்ணனா என்ன?
பாக்கவைக்கிறது ரிசல்டா இருக்கிறதை மாத்தி படுக்கைக்கு வாற வைக்கிறதை அவங்க வெற்றியின்னு நெனச்சி ஏமாந்திட்டாங்க, அதுக்கு அனுசரனையா எரியுற தீபத்துக்கு எண்ணெய் ஊத்திட்டார் நம்ம பசுபதி அங்கிள்! நல்லவேளை, பத்மினியும் அவர்கூட ஏதாவது மந்திரி மீட்டிங்குப்போகலை, போயிருந்தால் அவ பேசுற தத்துவமெல்லாம் இப்போ எடுபட்டிருக்குமோ என்னவோ?!
சமத்துன்னா, காகிதமலர்கள்லெ எனக்குத்தெரிஞ்சு யாரும் இல்லே. படிக்கிறவங்கள்ளெ(?!) வேணுன்னா யாராச்சும் இருக்கலாம். பத்ரி ஒரு யூஸ்லெஸ். லைஃப் ஜாலியா போய்க்கிட்டு இருக்கும்போது மாணவர் அணி, கட்சி, போராட்டம்! கடைசில எல்லாரையும் விட பெரிய போக்கிரியா அரசியல்ல வந்து நிக்கலாம் அவன். அல்லது வெட்டிக்கொல்லப்படலாம்! யார் கண்டது?
செல்லப்பா...chikky fellow. ஒரு தைர்யம் ம்ஹூம், மண்ணு! வெறுங்கையாலே உலகத்தைப்பிடிக்க முடியுமா? யாராவது ஒரு பொண்ணு வந்து மாரு காட்டி மயக்கி கல்யாணம் பண்ணவெச்சி முதுகுல ரெண்டு போட்ட புத்தி வரும்..இவன மாதிரி கேசுங்கள்லாம் இப்படித்தான் மாறும். இல்லாட்டி வானத்தைப் பிடிக்கிறேன், பூனையைப்பிடிக்கிறேன்னுட்டு அலையும். இவனோட அம்மாவா நான் இருந்தா இந்நேரம் படக்குன்னு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வெச்சி சுகமான சுமையை போட்டு மடக்கி வெச்சிருப்பேன்.
மெடிக்கல் ரெப் - நான் சென்ஸ். ரெண்டு மூணு காஸ்ட்லி ஹோட்டலுக்குக் கூட்டிட்டுப்போயி பில்ல பல ஆயிரத்துக்கு எகிறவிட்டா அடுத்த தடவை அப்பீட்டாயிடுவான். கொஞ்சம் வெவரம்ன்னா, கணேசன். யா.... ஐ திங் பத்மினி வில் லைக் தேட் ஃபெல்லோ.
செல்லப்பாவின் அண்ணன்:
இந்த விசுவத்தைப்பத்தி கொஞ்சம் பேசலாம் இப்போ. இவனைபாக்கும்போது சார், ரெண்டு விஷயம் தான் ஞாபகத்து வருது, ஒண்ணு 'ஜானி' படத்து ரஜினி வசனம், வாழ்க்கையில ஒன்னைவிட ஒன்னு எப்பவும் பெட்டராத்தான் தெரியும். ரெண்டு, கமல் பாடும் பாட்டு வாழ்வே மாயம்..இந்த வாழ்வே மாயம்!
பத்மினிய முதன்முதலா பாத்தபோது வந்த அந்த ஒரு நிமிடநெகிழ்ச்சி அவன் நண்பன் உண்ணி 'ஒய்ஃபைப்' பாக்கும்போது வாறதாம். ஹம்பக். அந்த நிமிடம் ஏன் தப்பானது? இந்த நிமிடம் எப்படி சரியாகும், சொல்லத்தெரியுமா இவனுக்கு?
புவியின் அறிவியலை முழுக்க முழுக்க புரிந்துகொண்ட இவன் பெண்களையும் அப்படிப்புரிந்துகொள்ள முயல்கிறானா? பெண்ணையும் பூமியையும் ஒப்பிடுவது சரி. பருவகால மாற்றத்தை புரிந்துகொள்ளும் வரையறுக்க முயலும் இவனுக்கு பத்மினியின் மனதில் என்ன இருக்கிறது என்பதைச் சொல்ல முடியுமா? பத்மினி மட்டுமல்ல; எந்தப்பெண்ணையும் அப்படிச் சொல்லமுடியுமா? பத்மினி, மெடிக்கல் ரெப்பிடம் அந்நியோன்யமாய் பேசினபிறகே ஏதோ கொஞ்சம் வாழ்க்கைப்பக்கம் வருகிறான். பத்மினிக்கு இவனைப்பற்றித் தெளிவாகத் தெரிந்திருக்கிறது, இந்தமாதிரி அசடுகளை இப்படித்தான் வழிக்கு வரவைக்கவேண்டும் என்று. அதான் தனிவீடு! ம்..தூக்கு தண்ணீரை! கழுவு பாத்திரத்தை!
கிரீன்ஹவுஸ் எஃபெக்டால், மரம் வெட்டுதலால், குளங்களைப் பாழ்படுத்துவதால், பிளாஸ்டிக்குகளை அதிகமாய்ப் பயன்படுத்தவதால், ஆழமாய்த்தோண்டி எண்ணெயையும் தண்ணீரையும் நிலக்கரியையும் எடுப்பதால் புவிக்கு வரப்போகும் ஆபத்தை பத்மினி போன்ற பெண்ணுடன் அல்லது ஒரு பெண்ணுடன்(?!) வாழ முனைந்தவன் ஆராய முயலலாமா? இல்லை கீழ்த்தர சுயலாபங்கள் நிறைந்த அரசியல் விளையாடும் இந்தியப்பதவி ஒன்றில் நேர்மையை எதிர்பார்க்கலாமா? இவனது தாத்தா திரும்பி எழுந்து வந்தால் ஏதாவது நடக்கும். ம்க்கூம்!
பத்ரியின் நடு அண்ணன்:
இந்த செல்லப்பா இருக்கானே சார், கொஞ்சம் நல்லவன்சார். என்ன..எந்த நேரம் பாத்தாலும் ஒரே ஃபீலீங்க்ஸ். செக்ஸூவல் ஃபீலிங்க்ஸ்! இருக்கட்டுமே சார், ஃபீலீங்க்ஸ் இல்லாம யாருதான் இருக்கா? இவனையெல்லாம் கவிதை எழுத விடணும் சார். என்ன சொல்றீங்க. இந்த மாதிரி அணிலோடவும் புல்லோடவும் மரத்தோடவும் ரசனையா கெடக்குற ஒருத்தன் என்னடா பொண்னோட ஒடம்பு மேல படுற அந்த சொகத்துக்கே ஏகப்பட்ட பஸ் ஏறி அலையுறான்னு நாம நெனைக்கக்கூடாது சார். அது ஒரு ரசனை! அளவுக்கு மீறிய ரசனை! அந்த ரசனையின் வேகம்; இன்னும் அதிகமானா வெறி!
படிப்பை விட்டுடா என் செல்லம்ன்னு சொல்லி (மனுஷன் எவ்வளவு சந்தோசப்படுவான்!), நல்ல ஒரு அழகியாப் பாத்து இவனுக்கு கல்யாணம் பண்ணிவெச்சிட்டீங்கன்னு வெச்சீங்க, நாலு வருஷத்து ரெண்டு கவிதைப்புத்தகம் அல்லது மூணு புள்ளையப்பெத்துடுவான். கூட, வாற பொண்ணும் நம்ம தாரா மாதிரி வெவெரமா இருந்ததுன்னு வெச்சுக்குங்க, ஏதாவது வேலயைப்புடிச்சு முன்னேறிடுவான் சார். செக்ஸூவல் ஃபீலிங்க்ஸ் அதிகமானா தப்பா நெனக்கக்கூடாது சார். அததுக்கு நாட்ல மனுஷன் மாத்திரயெல்லாம் வாங்கிச்சாப்பாடுறான் நாம என்னடான்னா? சார், செல்லப்பாவோட தாத்தா இருந்தாருன்னா கண்டிப்பா இவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணிவெச்சிருப்பாரு. சீக்கிரமா கல்யாணம் பண்ணுறதும் நல்லதுதானே சார். புத்தகத்தைப் படிச்சு வாழ்க்கையைப் புரிஞ்சுக்குறது ஒரு வகை! பொண்ணைப்படிச்சு வாழ்வைப் புரிஞ்சுக்கிறது (புரிஞ்சும் என்ன புண்ணியம்!) இன்னொரு வகை! செல்லப்பாவுக்கு ரெண்டாவது நல்லா ஒர்க்அவுட் ஆகும் சார்.
எல்லா இடத்திலேயும் ஏதாவது அன்பையோ அரவணைப்பையோ எதிர்பாக்குறோம், அது இல்லாட்டி ஏமாத்தமா வாறது, எல்லாரும் ஏமாத்த வந்தவங்கன்னு தோணுறது. கொஞ்சம் பக்குவப்பட்டா போதும். அனுசரனையா பேசுறார்ன்னு உக்காந்து பேசுனா காலுக்கெடையில் கையை விட்டுத் தடவுறாரு அந்த குண்டு மனுஷன். இந்த ஸ்ரீதர் இன்னொரு செல்லப்பா. என்னன்னா கொஞ்சம் வெவரமான செல்லப்பா! எல்லோருக்கும் ஏதாவது தேவை. அதை நம்ம தேவையோட ஒத்தி தேடிக்கிறாங்க! நாம அதை அடையமுடியாம ஏமாந்து நிக்கிறோம், அவங்களெல்லாம் அதை எடுத்துட்டுபோனப் பின்னால!
செல்லப்பாவின் தம்பி:
இப்போ பத்ரியைப் பத்தி பேசுவோம் மிஸ்டர். 'அம்மா ஒரு இடியட் - அப்பா ஒரு ஜெண்டில்மேன். அண்ணன் ஒருத்தன் படிச்ச கிறுக்கு இன்னொருத்தன் படிக்காத கிறுக்கு. யாருக்காவது வாழ்க்கையோட நிஜம் புரியுதா? அம்மா - நாடகம், பார்ட்டி! விசுவம் - புவியியல், பொண்டாட்டி பத்மினி, செல்லப்பா-செக்ஸ் படத்து தியேட்டர் இல்லை எக்ஸாம், அப்பா-பதவி அன் வேலை (அட்லீஸ்ட் ஹி இஸ் ஓகே!).
ஒரு காலேஜ் இருக்கு, அங்க பிராப்ளம்ஸ் இருக்கு, ஒரு கட்சி தலையிடுது, மாணவர்களோட எதிர்காலம் தடுமாறுது! என்ன செய்யலாம் என்ன இதில சாதிக்கலாம்? யாருக்காவது அக்கறை! கணேசன் நல்லா பேசுறான். இவனையே பேச வெச்சுக்கலாம். கணேசன் சொன்னதுமாதிரி நாமளே தலைவராயிடவேண்டியதுதான். அப்பா இருப்பார் ஃபுல் சப்போர்ட்டுக்கு. ஆளுங்கட்சி மந்திரி வேற அப்பாவுக்கு குளோஸ்.'
பாத்தீங்களா மிஸ்டர், பத்ரியும் மிஸ்டர் பசுபதி மாதிரி ஒருகட்டத்துல ஆயிடுவான்னு தோன்றது. அவன் அப்பாவெ ரொம்ப சார்ந்திருக்கான்; அப்பா அரசியலையும் அதன் சூழ்ச்சிச்சுழற்சியையும் சார்ந்திருக்கார்; அதே சூழ்ச்சிதான் பத்ரியையும் சூழ்ந்திருக்கு; இப்போ என்ன ஆகும்? இன்னொரு மிஸ்டர் பசுபதி இல்லாட்டி மரத்தில் மோதும் மிஸஸ் பசுபதி.
காகிதமலர்கள் டைட்டில் பேசுகிறது:
அண்ணே, எனக்கெதுக்குன்னே காகிதமலர்கள்ன்னு பேரு வெச்சிருக்காங்கெ? வாசம் இல்லாத மலர்கள்ன்னா? நாமளும் சிறந்து விளங்குற உயர்ந்த மனிதர்கள்ன்னு சில பேரு நெனைச்சிக்கிற மாதிரி இக்கதையில் வாற மலர்களும் நெனைக்கிதுனா? என்னவோ இருந்துட்டுப் போகட்டும்ண்ணே, மனிதர்கள்ன்னே தலைப்பு வெச்சிருக்கலாம். இந்தியாவில மட்டுமான்னே இப்படி, 12,756.3 கி.மீட்டரை விட்டமாகக்கொண்ட இந்தப் பூமியில எங்கேயும் இப்படித்தானேன்னெ மனுசங்கெ இருக்காய்ங்கெ.
ஆளுக்கொரு தேவை, அதற்கொரு முகம், அது அசிங்கமானதுன்னா அதுக்கொரு முகமூடி! கண்டதுக்கெல்லாம் அலையிறாங்கண்ணே. காசுபணம், காமம், அங்கீகாரம், பீடம், அலங்காரம், பாசம், பந்தம் எல்லாத்துக்கும் பலமுகமா அலையிறாய்ங்கண்ணே! ஒருமுகத்தை மறைக்க இன்னொரு முகம்! அந்த முகத்தை மறைக்க அடுத்த இடத்தில் இன்னொரு முகம், அதுவும் சரிவரவில்லையென்றால் ஓரு அழகான முகமூடி. முகமூடின்னு பேரு வெச்சிருக்கலாமோ நாவலுக்கு?
சிறந்த முகமூடிக்காரர்ன்னு யாருக்குண்ணே பட்டம் கொடுக்கலாம்? மிஸ்டர் பசுபதி? பாவம்ணே அவரு! பல இடங்கள்லே அவரு முகமூடி கிழிஞ்சி தொங்கி அசிங்கப்படுறார்ணே. மிஸஸ் பசுபதி? கொடுக்கலாம்ணே, ஆனாலும் அந்தம்மாவுக்கே தெரிஞ்சும் தெரியாம இருக்குண்ணே அது முகமூடின்னு. அநியாயமா செத்துப்போயிட்டதாலே 'போஸ்துமஸ் அவார்ட்' வேண்டாம் ண்ணே. பத்மினிக்கு..அருமையான சாய்ஸ்ண்ணே. ஆனா பத்மினிக்கி கொடுத்தா நாட்டுல இருக்க எல்லா பொண்ணுங்களுக்கும் கொடுக்கணுமுண்ணே, கட்டுபடியாகாது. விசுவம்...இல்லேண்ணெ, இந்தாளுக்கு முகமூடி போட்டாலும் வேலைக்கு ஆவாது. செல்லப்பா..சிறந்த ஏமாளின்னு வேணா பட்டம் கொடுக்கலாம்ணே! பத்ரி...சிறந்த அப்பாவின்னு பட்டம் கொடுக்கலாம்ணே!
டென்ஷன் ஆகாதீங்கண்ணே, இன்னும் எத்தனை பேர் இருக்காங்க? செல்லப்பாவின் சைட்டு, ஸ்ரீதர், குண்டு ஆள், ஐயர், ஐயரோட எடுபிடி சிங், கிருஷ்ணன், எஸ்.கே, மந்திரி, சமையல்காரர் நரசிம்மையர், பத்திரிகையாசிரியர், தாத்தாவின் வேலையாள், ஜோசியர், பத்ரியின் சைட்டு, ஆங்..முக்கியமான ஆள் கணேசன்...அவனோட அம்மா, தங்கச்சி, அப்பா அந்த குடும்பம்....
ம்ம். இந்தாங்கண்ணே...மூன்றாம் பரிசு.. ஸ்ரீதருக்கு கொடுக்கலாம்ண்ணே... படவா. பெரிய ஆளுண்ணே அவன். செல்லப்பாவிற்கு நல்ல முகமூடி போடும் அவன், செல்லப்பா அம்மாவுக்கொரு முகமூடி போடுறான் பாருங்க. அது அசத்தல்ண்ணே. அப்படியே அவன் மன்னிக்கும்.
இரண்டாம் பரிசு..சில காட்சிகள்லெ வந்து போனாலும் பத்ரியோட கேர்ள்ஃபிரெண்டுக்குண்ணே! நடு ரோட்ல இறங்கி மவனேன்னு அவனை அல்லாட விட்டு படக்குன்னு அவனைப்பாத்து சிரிச்சி மயக்குறா பாருங்க...இது சூப்பருண்ணே!
முதல்பரிசு ஐயருக்கு கொடுக்கலாம்ன்னா, அவருக்கு வயசாயிருச்சுண்ணே! அதனாலே வேற யாருக்குன்னு எப்பவோ முடிவு பண்ணியாச்சுண்ணே...வீட்டுக்குள்ளேயும் காலேஜ்லேயும் நண்பர்கள்ட்டேயும் என எல்லா இடத்திலும் முகமூடியோடு அலையும் திரு. கணேசன்! பெரிய ஆளுண்ணே அவரு!
அன்பன்
யெம்.கே.குமார்.
நன்றி: வாசகர் வட்டம், சிங்கப்பூர்.
Friday, November 16, 2007
சிங்கப்பூரில் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் தொடக்க நிகழ்வுகள் பற்றிய கலந்துரையாடல்!
சிங்கப்பூர், நவம்பர் 11, சிங்கப்பூரின் சையத் ஆல்வி ரோட்டில் இருக்கும் ஆனந்தபவன் ரெஸ்டாரண்டின் மாடியில் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் தொடக்கநிகழ்வுகள் பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது. கூட்டத்தில் சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். கூட்டத்தை சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் செயலாளர் சுப.அருணாச்சலம் நெறிப்படுத்தினார்.
மேடையில் அமர்ந்திருந்த மூவர் - புகழ்பெற்ற வழக்கறிஞர் திரு.கலாமோகன், முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் நிறுவனர் திரு.முஸ்தபா மற்றும் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் திரு.ஆண்டியப்பன்.
முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் நிறுவனரை வரவேற்புரை வழங்க அழைத்தார் திரு. அருணாச்சலம். தனது நீண்ட நாள் கனவை மிகுந்த அக்கறையோடு சட்டரீதியாக வடிவமைத்துத் தந்த கலாமோகன் அவர்களுக்கும் பல்வேறு உதவிகளை வழங்கிய திரு.ஆண்டியப்பன் அவர்களுக்கும் நன்றி சொன்ன திரு.முஸ்தபா அவர்கள், இவைகளைப்பற்றி பேசுமாறு அவர்களை வேண்டிவிட்டு, இந்த அறக்கட்டளை சிறப்பாகச் செயல்பட அனைவரது ஆதரவையும் வேண்டி அமர்ந்தார்.
வழக்குரைஞர் திரு. கலாமோகன், சிங்கப்பூரில் அரசு சாராது அறக்கட்டளைகள் இயங்குவதன் சிரமத்தைச் சொல்லி, அதுவும் தமிழிலேயே அதன் கொள்கைகளை வரையறுத்திருப்பதையும் சொன்னார். அடுத்துப் பேசிய திரு.ஆண்டியப்பன், முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் நோக்கங்களை விரிவாக எடுத்துரைத்தார்.
தஞ்சைப் பல்கலைக்கழக நூலகத்தில் சிங்கப்பூர்-மலேசிய நூல்களுக்காகவே அமையும் தனிப்பிரிவிற்கு நூல்களைப் பெற்றுக்கொள்ளும் பணி அடுத்து தொடங்கியது. முதல் நூலை கவிஞரேறு அமலதாசன் அவர்கள் வழங்க திரு.முஸ்தபா பெற்றுக்கொண்டார். அந்நூல் தமிழவேள் திரு.கோ.சாரங்கபாணி பற்றியதாக இருக்க திரு.முஸ்தபா அவர்களின் முகத்தில் திருப்தியான புன்னகை ஒன்று வெளிப்பட்டது.
கலந்துரையாடலுக்கு முப்பது நிமிடம் என்றார்கள். திரு. முஸ்தபா அவர்களை அனைவரும் புகழ்ந்தனர். சிங்கப்பூர இளையர்களை தமிழ்பக்கம் இழுக்க ஏதாவது செய்யவேண்டும் என்றார் ஒருவர். இதுபற்றி விரிவான தளத்திற்கு திட்டங்கள் செயலாக்கம் நடந்துகொண்டிருப்பதகச் சொன்னார் திரு. முஸ்தபா. இதன் பொறுப்புகளை திரு.சிவசாமி அவர்கள் செய்வதாய் சொன்னார். நாளிதழ் வெளியிடும் யோசனையைச் சொன்னாரொருவர். காலாண்டிதழ் வெளியிடும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாய்ச் சொன்னார் திரு. முஸ்தபா.
மனமும் பணமும் ஒருங்கே இருப்பதால் தமிழுக்கு மணம் கிடைப்பது உறுதி என்றார் ஒருவர். மறைந்த எழுத்தாளர் உதுமான் கனியின் கவிதை நூல்களை வெளியிட உதவி கேட்டார் அவர். உடனுக்குடன் அவைகளை ஆமோதித்து ஆவன செய்தார் திரு.முஸ்தபா. ஏதோ "ஒருநாள் முதல்வன்" படம் பார்ப்பது போலிருந்தது. உண்மையில் பெரிய மனதுதான் அவருக்கு.
சிங்கப்பூர் "சிம்" பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பிரிவுக்கும் ஏதாவது செய்யவேண்டும் என்றார் ஒருவர். கலைஞரைச் சந்தித்து தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்களின் தபால்தலையை வெளியிட ஆவன செய்யவேண்டும் என்றார் ஒருவர். சிங்கப்பூரில் உள்ள அனைத்து எழுத்தாளர்களின் நூல்களையும் தாம் பெற்றுத்தருவதாக ஒருவர் பொறுப்பேற்றுக்கொண்டார். மலேசியாவின் நூல்களைப் பெற்றுத்தர தாம் முயற்சி செய்வதாக இன்னொருவர் சொன்னார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் முருகன் என்பவர் முனைவருக்காய சிங்கப்பூர இலக்கியம் பற்றிச் செய்யும் ஆய்வுக்கு உதவும்படி கேட்டர் ஒருவர்.
திரு. முஸ்தபா அவர்களின் பல ஆண்டு கனவு இது என்றார் ஒருவர். தமிழ் வளர தமிழில் பேசுவோம் என்று கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்னே திரு.முஸ்தபா அவர்களின் நிறுவன ரசீதுகளில் அச்சடித்திருப்பதைச் சொன்னார். சென்னையில் இருக்கும் அவரது கண்ணாடி நிறுவனத்தில் "தாய்மொழி கண் போன்றது; பிறமொழி கண்ணாடி போன்றது" என்ற புகழ்பெற்ற வாசகத்தை வடிவமைத்ததிலிருந்து அவரது ஆர்வத்தை எடுத்துச்சொன்னார்.
நிறுவனரான திரு.முஸ்தபா தலைவராய் இருந்து பல்வேறு குழுக்களை ஏற்படுத்தி மேலும் இவற்றை மேம்படுத்தவேண்டும் என்று சொன்னார் ஒருவர். இதற்கு பதில் சொன்ன திரு.கலாமோகன், ஏறக்குறைய எல்லா தமிழ் பற்றாளர்களும் ஏதாவது ஒரு முழுவில் அல்லது பல குழுவில் இருக்கின்றனர். "இருக்கின்றனர் என்றால் வெறுமனே இருக்கின்றனர்"- அப்படிப்பட்டவர்கள் தயவுசெய்து இங்கேயும் இணையவேண்டாம் என்றார். உண்மையிலே ஆக்கப்பூர்வமாய் இயங்க முனைந்தால் இணையலாம் என்றார் அவர்.
இஸ்லாம் எங்கள் வழி; தமிழ் எங்கள் மொழி என்பதாய்ச் சொன்னார் ஒருவர்.
இறுதியில் பொதுமக்களிடமிருந்து அல்லது நன்கொடையாளர்களிடமிருந்து அன்பளிப்பு வந்தால் ஏற்றுக்கொள்ளலாமே; சிறப்பாய் இயங்க அது உதவுமே என்றார் ஒருவர். பட்டென்று பதில் சொன்ன திரு. முஸ்தபா, எல்லாம் வல்ல இறைவன் எனக்கு நீண்ட ஆயுளையும் நிறைய செல்வத்தையும் அளிக்கும்படி வேண்டிக்கொள்ளுங்கள்; எல்லாவற்றையும் நான் செய்கிறேன் என்றார்.
யோசனை என்றால் கேட்கவே வேண்டாம் என்ற அளவுக்கு தமிழ் மக்கள் அள்ளித்தருவார்கள் போலும். கலந்துரையாடலில் சில காமெடி டயலாக்குகளும் வெளிப்பட்டன.
எல்லாவற்றையும் விடுங்கள். இந்த அறக்கட்டளையின் துவக்கம் பற்றியும் சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் பற்றியும் பேசலாம் கொஞ்சம்.
சிங்கப்பூரில் அரசாங்கம் சாராது இயங்கும் அறக்கட்டளைகள் மிகவும் அரிது; சிரமமிக்கது. அதிலும் தமிழுக்காய் இயங்கும் அறக்கட்டளை இல்லவே இல்லை. இந்நிலையில் தமிழுக்காய் தனியொரு மனிதரால் புத்தம் புதியதாய் உருவெடுத்திருக்கிறது இந்த முஸ்தபா தமிழ் அறக்கட்டளை. நிறுவனரான திரு. முஸ்தபா அவர்களை நெஞ்சார பாராட்டலாம்!
முஸ்தபா தமிழ் அறக்கட்டளையானது தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன் கடந்த செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியது.
அதன்படி,
1. சிங்கப்பூர், மலேசியத்தமிழர்களின் வாழ்க்கை பற்றியும் தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் பற்றியும் தமிழ்நாட்டில் ஆய்வு செய்யும் நிரைஞர், முனைவர் ஆகியோருக்கு உதவித்தொகை வழங்குதல்
2. தெற்காசிய, குறிப்பாக சிங்கப்பூர் மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் சிறந்த நூலுக்கு ஆண்டுக்கொருமுறை பரிசு வழங்குதல்
3. சிங்கப்பூர், மலேசியத் தமிழ் இலக்கியம் தொடர்பான கருத்தரங்கம் ஒன்றை தஞ்சைப் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்தல்.
4. சிங்கப்பூர், மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்களைத் தனிப்பிரிவாக தஞ்சை பல்கலைக்கழக நூலகத்தில் உருவாக்குதல்.
இவைகளையே தற்போது ஆய்விருக்கையின் குறிக்கோள்களாகக் கொண்டு இவ்வொப்பந்தம் செயல்படும்.
தமிழ்ப்பற்றாளர்களை விட தமிழ்ச்சங்கங்கள் அதிகமாய் இருக்கும் சிங்கப்பூரில் தமிழுக்காய் தனியொரு மனிதராய் தனது சொந்த பணத்திலிருந்து இதுபோன்ற அறக்கட்டளைகளை அமைப்பது மிகுந்த சிறப்புடையது. குறிப்பாய் எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெரும் தமிழணங்கை இத்திசையில் ஆட்சி மொழியாக்கிப் பார்த்த திரு.கோ.சாரங்கபாணி அவர்களைப்போல எந்தவித பாசாங்கும் இன்றி, தனிப்பட்ட புகழுக்காய் அன்றி மிகுந்த மன ஒன்றுதலோடு மன விருப்பத்தோடு இக்காரியத்தில் திரு. முஸ்தபா அவர்கள் இறங்கியிருப்பதாய்த் தெரிகிறது.
மேற்சொன்ன ஒப்பந்தம் மற்றும் இந்த முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் தோற்றம் மூலம் என்னென்ன பயன்கள் நேரலாம் என்பதைப் பார்ப்போம்.
v தமிழக இலக்கிய உலகிற்கும் சிங்கப்பூர் இலக்கிய உலகிற்கும் பூதாகர இடைவெளி உள்ளது. அதை இவ்வொப்பந்தம் குறைக்கும். அல்லது அதற்கான தளத்தை கொஞ்சமாது நிறுவ முயலும்.
v தஞ்சைப் பல்கலைக்கழகத்தில் தனிப்பிரிவாக்குவதன் மூலம் சிங்கப்பூர மலேசிய இலக்கிய நிலைகளை யாவரும் எளிதில் உணரும் வாய்ப்பமையும்.
v சிங்கப்பூர மலேசிய இலக்கிய நிலைகளை ஆய்வு செய்யும் மாணவர்கள் தரும் முடிவுகள் அதன் தற்போதையை நிலையை எடுத்துச்சொல்லும்; விளைவு தரம் மேம்படலாம்.
v தமிழவேள் கோ சாரங்கபாணி பெயரில் அமையும் விருது அவரது சிறப்பை இன்னும் எடுத்துக்கூறும். தமிழுக்கென வாழ நினைக்கும் மற்றவர்களுக்கு வழிகாட்டும்.
v சிறந்த நூலுக்குப் பரிசு தருவதன் மூலம் மேலும் எழுத்தாளர்கள் உருவாவார்கள். (பரிசு கொடுக்கப்படும் நூலின் தரம் கணக்கெலெடுக்கப்பட்டால்!)
v சங்கம் அமைத்து நடிகைகளை அழைத்து டிக்கெட் அடித்து கூட்டம் போடுவதைத் தவிர்த்து தனிமனித சேவைகள் மூலமும் வருமானம் மூலமும் தமிழுக்குச் சேவை செய்யலாம் என்ற ஒரு பார்வையை விதைக்கும்.
v சிங்கப்பூர் - மலேசிய எழுத்தாளர்களின் கருத்தரங்கம் நடத்துவதன் மூலம் அடுத்த கட்டத்தை அது அடைய முற்படலாம்.
v வெறும் பேச்சு மூலமே போய்க்கொண்டிருக்கும் தமிழ் வளர்ப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள் செயல்வடிவில் நிலைமாற்றம் அடைய தன்னலமற்ற இதுபோன்ற சேவைகள் உதவும்.
v பல்வேறு நபர்களை இணைத்து செயல்படும் அமைப்புகளின் செயல்பாடு திருப்திகரமாய் இல்லாதபோது இதுபோன்ற அறக்கட்டளைகள் சிறப்பாக இயங்கலாம்.
v எல்லாவற்றிற்கும் மேலாய் குழு மனப்பான்மைகளையும் சச்சரவுகளையும் இதுபோன்ற தனிநபர் சம்பந்தப்பட்ட அறக்கட்டளைகள் ஊக்குவிக்காது உண்மையிலேயே நல்ல மனமிருந்து ஆரம்பிக்கப்பட்டால் நல்லது நடக்க முயற்சி செய்யும்.
சிங்கப்பூர்த் தமிழ்மக்கள் இதுபோன்ற சந்தர்ப்பங்களை எடுத்துக்கொண்டு தமிழை மேம்பட்டதொரு நிலைக்கு எடுத்துச்செல்லவும் படைப்புகளில் அதன் தரத்தை உயர்த்தவும் முயலலாம். முயன்றால் நம்மால் முடியாதது என்ன?
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு-
என்ற குறளுக்கேற்ப தனது வியாபாரத்தின் மூலம் அடைந்த பொருளாதார நிலையின் மூலம் தமிழுக்குத் தொண்டு செய்ய நினைக்கும் திரு.முஸ்தபா அவர்களுக்கு எல்லாம் வல்ல தமிழணங்கு நீண்ட ஆயுளையும் செல்வத்தையும் கொடுக்கட்டும்.
அன்பன்
எம்.கே.குமார்
நன்றி: திண்ணை.காம்.
Tuesday, November 13, 2007
குறள் வெண்பா - ஒரு முயற்சி (தவறுகள் திருத்திக்கொள்ளப்படும்!)
1 பொதிகை மலையின் புதுத்தென்றல் தாம்உணர
ஆதியாம் தாய்மொழியில் பேசு.
2 அகத்தியன் தந்த அருமை தமிழ்த்தேன்
உகந்து பருகு உணர்ந்து
3 தொல்காப்பு செய்தான் துறைசீர் இலக்கணம்
தோழனே தூயதமிழ் பேசு
4 வள்ளுவம் கூறும் அறம்பொருள் யாவையும்
அள்ளக் குறையுமோ சொல்
5 கல்தோன்றாக் காலத்தின் முன்தோன்றி மூத்ததேனும்
சொல்லினிமை குன்றாத் தமிழ்
6 ஆயுதம் மெய்யுயிர் ஆக்கும் உயிர்மெய்யாம்
பாய்ச்சுமே காதினில் தேன்
7 சொன்னால் சுவைக்கும் இனிக்கும் தமிழமுதம்
கன்னல் சுவைதான் உணர்
8 பிறமொழி பேசுபவர் மேலோராம் என்னும்
அறியாமைக் கீழ்மை அகற்று
9 மண்ணும் மரமும் மரித்திடினும் இன்றுபோல்
என்றும் சிறக்கும் தமிழ்.
10 அம்மா ஒருவார்த்தை அன்புடன் சொல்லிப்பார்
சும்மா கிடைக்கும் சுகம்
11 எத்தனை பேச்சுமொழி எங்கெல்லாம் வாழ்ந்திடினும்
அத்தனைக்கும் மேலே தமிழ்
12 பேசு தமிழா தமிழில் பெருமையாய்
காசுபணம் தாரா தது
Monday, November 12, 2007
அழகிய தமிழ்மகன் - அபத்தம்!
சிரிப்பு வரவைக்கவேண்டும் என்பதற்காய் ஷகீலா அவர்களை வீட்டுக்கார முதலாளியாய் வைத்து
அடிக்கப்படும் பரங்கிமலை ஜோதி டயலாக்குகள் அபத்தம்.
சின்ன ஸ்டிக்கர் மச்சம் கூட வைக்காது டுயூவல் கேரக்டர் பண்ணியிருக்கும் விஜய் - (ஸ்டைல் செய்வதற்காய் ரஜினி, சிவாஜி படங்களின் படிகளை ஏறியிறங்கியிருப்பதைத் தவிர ஏனுங்கண்ணா, இன்னும் கொஞ்சம் யோசிக்கக்கூடாதா? சும்மா, எவ்வளவோ பண்ணுறோம், இது பண்ண மாட்டோமான்னு எங்களை ஏமாத்துறீங்களே!
இரட்டையரில் ஒருவரைக் கண்டுபிடிக்க நடத்தப்படுபவை ஆண்டாண்டுகால அபத்தங்கள்.
ஸ்ரேயா- பின்பக்கத்தை ஆட்டுவதற்காய் மட்டுமே ஒரு ஹீரோயின். நல்லா பண்ணுறீங்கம்மா!
இசை யாரோ ஏஆர் ரகுமானாம்? புதுசா?
முன்கூட்டியறியும் வித்தை - எடிட்டர் ஆண்டனிக்கும் பின்னணி இசையாளருக்கும் ஒரு ஷொட்டு.
புதுக்கவிதைத்தாத்தா - அழகிய தமிழ்மகன் பட்டம் தருகிறார்! நியாயமா இது மு.மேத்தா?
எப்போது வில்லனாவாரோ - என பணக்கார கதாநாயகியின் தந்தை! நல்லவேளை!
நமீதா - இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து சென்னை மாநகர காவல்துறையில் மாட்டாமல் இருந்தால் சரி.
பொன்மகள் வந்தாள் - ஏஆர் ரகுமான் மீது எரிச்சலாய் வருகிறது.
கதாநாயகன் - நாயகி, தோளோடு தோள் உரசினதும் - ஒரு டூயட்! திருந்தவே மாட்டீங்களாடா?
திருவான்மியூர் குளத்துல ராதா விட்ட குடத்தை மைசூர்ல திரும்ப எடுத்தது பாரதிராஜா காலம். காட்சிகளின் தொடர்ச்சியில் முதிர்ச்சியில்லை. அறிமுக இயக்குனர் அறிந்துகொள்ளவும்.
எப்படா படத்தை முடிப்பீங்கன்னு - ஒரு குரல்
கதாநாயகி - மருத்துவமனைக் கட்டிலில் - கற்பு வசனம் - ஞப்பா, விடுங்கடா!
வசனகர்த்தா பரதன் - பாராட்டுகள் உங்களுக்கு!
இயக்குனர் பரதன் - பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!
அன்புடன்,
எம்.கே.
Saturday, November 03, 2007
நெஞ்சை எரிக்கிறது நீயில்லாது போன இத்தருணம்!
Monday, July 30, 2007
பாலி - 6
Wednesday, July 18, 2007
புத்தக வெளியீடு- நன்றி நவிலல்!
புத்தக வெளியீடு முடிந்து ரொம்ப நாளாகிவிட்டது. எனினும் அதைப்பற்றி எழுதாதது ஒரு குறையாகவே இருந்தது. எனவே அதை இன்று எழுதிவிடலாம் என்றிருக்கிறேன்.
புத்தகத்தின் வடிவமைப்பு மிகவும் மெச்சும்படியாய் இருப்பதாய் பலர் சொன்னார்கள். இதை இவ்வளவு அழகாய் வடிவமைத்த வகையில் முதலில் நன்றி சொல்லவேண்டிய ஒருவர் திரு. சி.மோகன் அவர்கள். அவருடைய முழுமுயற்சி இல்லாவிட்டால் இந்த அளவிற்கு சிறப்பாய் அது இருந்திருக்காது. எனது நெஞ்சார்ந்த நன்றி இவருக்கு.
சென்னையில் வெளியிட்டு பல நாட்களுக்குப்பிறகே சிங்கப்பூரில் என் கைகளுக்கு இது கிடைத்தது. புத்தகத்தைக் கண்ட தருணம் மறக்கமுடியாததாய் இருக்கிறது. 'அடடா, ஒரு போட்டோ பிடித்திருக்கலாமே' என்றார் ரமேஷ். இதை தவறவிடக்கூடாது என்பதற்காகவே அப்பாவின் கையில் புத்தகத்தைக் கொடுத்து அவரைப்பற்றிய குறிப்பை வாசிக்கச்சொல்லி வாசிக்கும்போது படம்பிடித்தேன்.
சிங்கப்பூரில் புத்தக வெளீயீடு செய்வது என்றவுடன் நானும் நண்பர் ரமேஷும் நூலகத்தையே அணுகலாம் என முடிவு செய்தோம். இதற்கு பெருமளவில் உதவிய கவிஞர் இந்திரஜித், தேசிய நூலக அதிகாரிகள் திருமதி.புஷ்பலதா மற்றும் திரு.மணியம் ஆகியோருக்கும் இநேரத்தில் நன்றி.
புத்தக அறிமுகம் செய்து பேசவேண்டும் என்றவுடன் எவ்வித தயக்கமும் இல்லாமல் இசைந்த சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளர் திரு. இராம.கண்ணபிரான் அவர்கள், முனைவர். எம்.எஸ்.ஸ்ரீலஷ்மி அவர்கள், எழுத்தாளர் மற்றும் வழக்கறிஞர் திருமதி. ரம்யாநாகேஸ்வரன் மற்றும் கவிஞர் ரெ.செல்வம் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி. எனது வரவேற்புரையில் திருமதி.ரம்யா அவர்களையும் திரு.செல்வம் அவர்களையும் தவறவிட்டதற்காய் இப்போதும் வருந்துகிறேன்.
இயற்கைக்கும், தமிழுக்கும் வணக்கம் சொல்லி ஆரம்பித்த என் வரவேற்புரையில் இத்திசைக்கு வந்து இசைவாய் தமிழ்வளர்த்த தமிழவேள்.கோ.சாரங்கபாணி அவர்களையும் அமரர்.நா.கோவிந்தசாமி அவர்களையும் வணங்கினேன்.
ரமேஷின் சித்திரம் கரையும் வெளி கவிதைத்தொகுப்பை திரு.இராம.கண்ணபிரான் வெளியிட நூலக முதன்மை அதிகாரி திருமதி.புஷ்பலதா பெற்றுக்கொண்டார். எனது மருதம் சிறுகதைத்தொகுப்பை சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளர்களான திரு.பொன்.சுந்தரராசு வெளியிட, திரு.மா.இளங்கண்ணன் பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியை மிக நிறைவாய் வழிநடத்தினார் திருமதி.சித்ரா ரமேஷ். எந்தவித பாசாங்கும் இல்லாமல் மிக இயல்பாய் நடக்க ஆவனசெய்தார்.
ரமேஷின் சில கவிதைகளை மிகவும் ரசித்து அது தரும் பொருளை சிலாகித்துப்பேசினார் திரு. கண்ணபிரான் அவர்கள். அவர் வாசிக்கும்போதே ஒரு கவிதை மனதில் படிந்துபோனது. எனது புத்தகத்தை மிகவும் ரசித்துப் படித்ததை அப்படியே பகிர்ந்துகொண்ட முனைவர் எம்.எஸ்.எஸ், குறிப்பை எடுக்காமலேயே பல கதைகளின் பெயரையும் அது எழுதப்பட்டிருக்கும் உத்தியையும் சொன்னார். 'எல்லா புன்னகைகளும் எலும்புக்கூட்டில் போர்த்தப்பட்டிருக்கும் முகமூடிகளே' என்று கவிஞர் சுகுமாரனை மேற்கோள் காட்டி பேச வந்த கவிஞர் திரு.ரெ.செல்வம் தனது பேச்சின் மூலம் சிந்தனையை ஊற்றினார். இக்கதைத் தொகுப்பைப் பற்றிப்பேச சிலமணி நேரங்கள் வேண்டும் எனவும் ஆனால் தான் பேச நினைத்ததையெல்லாம் முனைவர் பேசிவிட்டதாய்ச் சொல்லி ஒரு எழுத்தாளராய் இக்கதைகளின் போக்கை விவரித்தார் திருமதி.ரம்யா. நகைச்சுவைக்கதை எழுதுவது என்பது எவ்வளவு கடினம் எனவும் அது இதில் எவ்வாறு வெற்றிகொள்ளப்பட்டிருக்கிறது என்பதையும் சொன்னார்.
எண்பது பேர் அமரக்கூடிய அரங்கத்தில் ஏறக்குறைய அறுபத்தைந்து பேர் வந்திருந்தார்கள். சிங்கப்பூரின் இதுபோன்ற புத்தக வெளியீட்டு நிகழ்வில் (சினிமா/முக்கிய பிரபலங்கள் கலந்துகொள்ளாத வகையில்) இது பெரும் எண்ணிக்கைதான் என நினைக்கிறேன். அன்று மாலை நடந்த "மீடியா கார்ப்" நிறுவனத்தின் குடும்பவிருந்து நிகழ்வால் பலர் வரமுடியாமல் போய்விட்டது. எனினும் பல புது நண்பர்களையும் இலக்கியதாகம் மிகுந்தவர்களையும் அன்று சந்திக்க நேர்ந்ததில் இறைவனுக்கு நன்றி.
திரு.ரெ.பாண்டியன், திரு.இராம.வைரவன், சிறந்த ஓவியரான திரு.பாஸ்கர்(அவர்தான் இவர் என்று அப்போது தெரியாததில் கொஞ்சம் வருத்தமே!) தமிழாசிரியர் திரு.சோமு அவர்கள், மறைந்த நடிகர் எம்.கே.ராதாவின் குடும்பத்தினர் எனப்பலரும் கலந்துகொண்டது நிறைவாக இருந்தது.
நான் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு நீங்கள் வராவிட்டால் என்ன, நான் வருகிறேன் என்று வந்தார் கவிஞர் பாலு மணிமாறன். அன்புக்குரிய எழுத்தாளர்கள் திருமதி.ஜெயந்திசங்கர், திருமதி.மாதங்கி, நண்பர்களும் முக்கிய வலைப்பதிவாளரான திரு.அன்பு, (எனது ஆசிரியரும் தனது தந்தையுமான திரு.ரகுநாதன் அவர்களுடன் கலந்துகொண்ட) திரு.அருள்குமரன், சென்னையிலிருந்து வந்திருந்த தாய்-தந்தையரை 'சர்ப்ரஸாய்' அனுப்பிவைத்த நண்பர் திரு.ஜயராமன், தம்பி நீதிப்பாண்டி, நண்பர் இரா.பிரவீன் ஆகியோருக்கும் இந்நேரத்தில் நன்றி.
செய்தி வெளியிட்ட தமிழ்முரசு நாளிதழுக்கும் விளம்பரம் வெளியிட்ட திரு.ராஜேந்திரன் அவர்களுக்கும் நன்றி.
நன்றி சொல்லி தூரத்தில் இருப்பவர்களை அருகில் கொண்டுவரவும் அருகில் இருப்பவர்களை தூரத்தில் போகச் செல்லவும் முடியும் என்று தனது நன்றியுரையில் சொல்லி, நன்றி சொல்ல விரும்பாத ரமேஷ்க்கு நான் நன்றி சொல்ல வேண்டும். காரணங்கள் பல இருக்கின்றன. அதில் ஒன்று, தனது அயராத பணிகளுக்கிடையிலும் புத்தகத்திற்கு அட்டைப்படம் செய்து, பதினைந்து இருபது படங்களை மளமளவென்று அனுப்பி ஏதாவது மூன்றை 'செலெக்ட்' செய்யுங்கள் என்றவராயிற்றே!
நிகழ்ச்சியின் ஒட்டுமொத்த அளவில் எல்லாவிதத்திலும் துணைநின்ற திருமதி.ஷீலாரமேஷ் மற்றும் திருமதி.நிர்மலாகுமார் ஆகியோருக்கும் இங்கு நன்றி சொல்வது அவசியம்.
அன்புடன்
எம்.கே.
18/07/07




