Friday, June 24, 2005

அந்நியன் - எனது பார்வையில்!

(முன்குறிப்பு: அல்வாசிட்டி அண்ணாச்சி ஒழிக! :-) முழுக்கதையைச் சொன்னதற்கும், ஜிகிர்தண்டாவையும் கேஎ·ப்சி சிக்கனையும் (காதலையும் அந்நியனையும்) ஒப்பிட்டதற்கும்! )

ஷங்கருக்கு இது மறுபடியும் முதல்படம்! அதன் பிரதிபலிப்பு ·பிரேம் பை ·பிரேம் தெரியும் கவனமும் ஆழமும்! காட்சியமைப்புகளில் நிதானமும் பரபரப்பும்! கதைக்கோர்ப்பில் பழைய வெற்றிகளின் வாசனை! தரத்தில் பிரம்மாண்டம்! மொத்தத்தில் மிரட்டல்! படம் முடிந்து வெளிவருகையில் குப்பை போடத் தயங்கும் மனசு! அந்நியன் நம் எல்லோருக்குள்ளும்!

ஜென்டில்மேனின் நான்காம் பாகம், இந்தியனின் மூன்றாம் பாகம், முதல்வனின் இரண்டாம் பாகம் என்பவர்களுக்கெல்லாம் எனது ஒரே கேள்வி, 'வி.ஐ.பி' படத்தில் காட்டிய சிம்ரனின் சேலை மறைக்கும் மார்பை அல்லது இடுப்பை, எப்படி அதற்கடுத்து வந்த ஐம்பது படங்களிலும் உங்களால் ஆர்வத்துடன் காணமுடிந்தது? எத்தனை முறை பார்த்தாலும் சிம்ரனும் ஒருவர்தான் அவரது மார்பும் (நிஜமானாலும் நகலானாலும்) இடுப்பும் அதேதானே அல்லது பழையதுதானே?!'

இந்தியா முழுக்கப் பிரச்சனைகள்! இப்படியே போனால் இன்னும் இருபது வருடங்களில் குடிநீருக்குக் கொலைகள் நடக்கலாம்; கை நிறைய பணத்தை அள்ளிக்கொடுத்து அரிசி வாங்குவதற்கு வரிசையில் நிற்கலாம். பணக்காரர்கள் இந்தோனேசியாவிலும் தாய்லாந்திலும் வீடுகள் வாங்கி பயிர் செய்யலாம். இந்தியாவில் திருவாளர் லல்லுவும் அவரது சக தோழர்களும் அரச அரியணையில் அமர்ந்து புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருப்பார்கள்; எதிரில் மாடுகள் அசைபோடும்!

'ஜென்டில்மேன்' பார்த்துவிட்டு வந்து கௌதமியைப் புகழ்ந்துகொண்டிருந்தவர்களல்லவா நாம்? 'இந்தியன்' பார்த்துவிட்டு வந்து ஜாகீர் உசேனின் தபேலாவை ஞாபகம் வைத்திருப்பவர்களல்லவா நாம்? முதல்வன் பார்த்துவிட்டு வந்த கண்ணோடு ஐம்பது ரூபாய் சேலைக்கும் வேட்டிக்கும் ஓட்டுப்போட்டவர்களல்லவா நாம்? எப்படி இருப்போம்?

சந்திரமுகி வருவதற்குமுன் வந்திருக்கவேண்டிய படம்; வந்திருந்தால் வசூலில் இமாலய சாதனை நிகழ்த்தியிருக்கும். தமிழக மக்களுக்கு இப்போது இந்த 'மல்டிபிள் பெர்சனாலிட்டி தியரி' எல்லாம் கொழுக்கட்டைக்குள் இனிப்பு வைக்கும் சமாச்சாரம். நாசர் முதுகு வளைத்து சொல்லித்தரும் விஷயமெல்லாம் ஜோதிகா, வினீத்தின் கையைப்பிடித்து அழைத்துச்சென்றதில் எப்போதோ அவர்களுக்குப் புரிந்துபோனது. விவேக்கிற்கும் 'மல்டிபிள் பெர்சனாலிட்டியோ' என்ற சந்தேகம் வந்தது படத்தின் ஆரம்பத்தில். திரைக்கதையில் தொய்வு!

அம்பியாக அப்பாவியாகவும் ரெமோவாக குதூகலமாகவும் அந்நியனாக ஆக்ரோஷமாகவும் முகம் மாற்றி உடல் மாற்றி குரல் மாற்றி நடிக்க இன்னொரு கமல் வந்திருக்கிறார். பிரகாஷ்ராஜ் உடனான காட்சிக்கு விக்ரமிற்கு அவார்டு கிடைக்கலாம். லகலகல ஜோதிகமுகிக்கு இணையாக மிரட்டுகிறார் ஒரு கட்டத்தில்!

விக்ரம்தான் ஹீரோ என்பதில் எனக்கு இரண்டாம் கருத்து இல்லை. ஆனால் இன்னொரு ஹீரோவும் இருக்கிறார், அது பீட்டர் ஹெய்ன்! இவரது மகுடத்தில் சிகரம் இப்படம்! விதவிதமான மோதல்கள். ஹாலிவுட் படங்களைப் பார்ப்பது போலிருந்தது.

சதா அழகாயிருக்கிறார். விஜய் படத்து த்ரிஷாக்களை விட சில காட்சிகளிலாவது அதிகம் வருகிறார். பரவாயில்லை. பட்டுப்புடவையிலும் ஐயங்கார் வீட்டு அழகாகவும் கண்ணுக்கு விருந்தளிக்கிறார்.

நாசர், பிரகாஷ்ராஜ்(அண்ணனின் இறப்பில் இவரது ஆக்டிங் கிளாஸ்! கையை ஆட்டி அல்லது நீட்டி நடிப்பதை எப்போது விடப்போறீங்க தலை?!), ஷண்முகராஜன், நல்லது செய்பவர்கள், கெட்டது செய்பவர்கள் என நிறையப்பட்டாளம். கிளைமேக்ஸில் தங்கையின் கொலையாளியையே தேர்ந்தெடுத்தது புத்திசாலித்தனம். விவேக் காமெடி செய்கிறாரா அல்லது மற்றவர்களைக் கிண்டல் செய்கிறாரா?

இரு கேமிராமேன்கள். ஒப்படைத்த வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்கள். எவ்வளவு நேரம் தான் ஒரு இடத்தையே (ஸ்டெல்லா மேரீஸ் காலேஜாகவே இருக்கட்டும்; பொழுது போகும் வரை அங்கேயே நின்றுகொண்டிருந்தால் பசிக்காமலா போகும்?) காட்டுவது? முதல் பாடலில் பூக்களின் பின்னணி முதலில் ஆச்சரியமும் பிறகு அலுப்பும் உண்டாக்குகிறது. ஐயங்கார் பாடல் மற்றும் காதல் யானை, நோக்கியா பாடல்களை விடுத்து கடைசிப்பாடலுக்கு 'அக்மார்க் ஷங்கர்' பிரமாண்டமாய் உருவெடுக்கிறார். ரோடு, மலை, கார், பேருந்து, லாரி, மனிதர்கள் எல்லாவற்றிலும் பணம்!

வசனகர்த்தாவே (சுஜாதா) ஒரு 'மல்டிபிள் பெர்சனாலிட்டி' கொண்டவராகையால் வசனத்தில் அடைமழை! இசை சில இடங்களில் மிரட்டல். பாடல்கள் பாதிப்பரவசம்.

கதை, திரைக்கதை, டைரக்ஷன் ஷங்கரைப் பற்றி பாராட்ட ஒன்றுமில்லை. பெர்பெக்ஷனிஸ்ட்.! புதுமை விரும்பி, பிரம்மாண்டம் விரும்பி! 'ஜீன்ஸி'ற்குப்பிறகு டபுள் ரோல் செய்வது எப்படி தமிழ் சினிமாவில் எடுபடவில்லையோ அதுபோல இனிமேல் யாரும் இந்த 'ஸ்பிளிட் பெர்சனாலிட்டி' பற்றி ஒன்றும் பேசமுடியாது. சதாவை அந்நியன் துரத்தும்போது எனக்கு 'ஆளவந்தான்' ஞாபகம் வந்தது தவிர்க்க இயலாதது.

மாறுவேடத்தில் புலனாய்வுப்போலீசார் உலாவருவதும், நாயகி பாடுவார் என்பதைக்காட்ட குன்னக்குடி, சுதாரகுநாதன் தலைமையில் கூட்டம் சேர்த்துச் செலவு செய்ததும் திரைக்கதைப்பஞ்சம்; பணவிரயம்! சட்டம் வரை படித்த இந்திய நடுத்தர குடும்பத்து வாலிபனுக்கு, அவன் சட்டம் படிக்கும்வரை உலகம் நேர்மையாக இருந்ததா என்ன? திடீரென்று வானத்திலிருந்து குதித்து தமிழ்நாட்டில் விழுந்தது போல அம்பி 'பிஹேவ்' பண்ணுவது அசடு!!

கிளைமேக்ஸ் லட்டுக்குள் வைத்துத்தந்த மூக்குத்தி.

கொஞ்சம் குறைத்திருக்கவேண்டிய கிராபிக்ஸ், கொஞ்சம் தவிர்த்திருக்கவேண்டிய ஷங்கரின் பழைய ஆனால் இந்தியாவின் மார்க்கண்டேய விஷயங்கள், கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கவேண்டிய போலீஸ் சார்ந்த திரைக்கதை, கொஞ்சம் ஞாபகத்தில் வைத்திருந்திருக்கவேண்டிய சுஜாதாவின் செல்ல கிறுக்குத்தனம் ('டேய் பாடு' என்று கூப்பிடுகிறார் அந்நியன்! அருமையான அக்காரவடிசலில் ஆங்காங்கு தென்படும் கற்களைப்போல!), கொஞ்சம் (சந்திரமுகிக்கு) முன்னால் ரிலீஸ் செய்திருக்கவேண்டிய தருணம்! இவைகளைக் கவனத்தில் கொண்டிருந்தால் வசூலில் மெகா சாதனை படைத்திருக்கவேண்டிய அந்நியன் இப்போது கையைக்கடிக்காமல் பயணிப்பான்.

இரண்டாம் முறை படத்தைப்பார்க்க தியேட்டருக்குப் புறப்பட்ட நண்பரிடம், இந்தியாவிற்குச் செல்லும் போது குப்பை போடாமல் இருக்க முயலுங்கள் என்றேன், பார்க்கலாம் என்றார்! 'அந்நியன்'தான் பார்க்கவேண்டும்!

எம்.கே.குமார்.

19 comments:

குழலி / Kuzhali said...

//ஒரே கேள்வி, 'வி.ஐ.பி' படத்தில் காட்டிய சிம்ரனின் சேலை மறைக்கும் மார்பை அல்லது இடுப்பை, எப்படி அதற்கடுத்து வந்த ஐம்பது படங்களிலும் உங்களால் ஆர்வத்துடன் காணமுடிந்தது? எத்தனை முறை பார்த்தாலும் சிம்ரனும் ஒருவர்தான் அவரது மார்பும் (நிஜமானாலும் நகலானாலும்) இடுப்பும் அதேதானே அல்லது பழையதுதானே?!'
//
சிந்திக்க வேண்டியது!! அதானே எனக்கு இத்தனை நாள் இது தோனவேயில்ல,

கொமாரு ஆனாலும் நீ எழுதறது ஒரு கலக்கல்தான்பா யின்னா விசயம்னாலும் கலக்கிபுடற போ

Kangs(கங்கா) - Kangeyan Passoubady said...

விரிவான விமர்சனம். இன்னும் படத்தை பார்க்கவில்லை. குப்பையை பற்றி சொல்லி இருந்திர்கள். குப்பைத் தொட்டியையும், நல்ல (காசு கொடுத்தாலும் கிடைக்க வில்லை) சுகாதாரமான கழிப்பறையையும் போதிய அளவில் மக்கள் தொகைக்கு ஏற்ப இன்னும் வைக்கப் படவில்லை என்பது தான் உண்மை.

NambikkaiRAMA said...

என்னது அல்வா சிட்டிக்கே அல்வாவா? கலக்கிபுட்டீங்க அண்ணாச்சி

ஜெ. ராம்கி said...

//நாசர் முதுகு வளைத்து சொல்லித்தரும் விஷயமெல்லாம் ஜோதிகா, வினீத்தின் கையைப்பிடித்து அழைத்துச்சென்றதில் எப்போதோ அவர்களுக்குப் புரிந்துபோனது.//

Pl. explain.

Boston Bala said...

அமர்க்களம்

Anonymous said...

Ellam sarithan MK. Athu eppadi vimarisanam ezuthara ellarum oru matter ai vitudareenga? Doctor ku padikkira heroine ku Mutliple Personality Disorder na ennanu theriyalaiyam. Appadina paithiyama nu kaekarangale. Ithu Sujatha/Shankar ku sarukkal illaiya?
Priya

Vijayakumar said...

//அல்வாசிட்டி அண்ணாச்சி ஒழிக! :-) முழுக்கதையைச் சொன்னதற்கும், ஜிகிர்தண்டாவையும் கேஎ·ப்சி சிக்கனையும் (காதலையும் அந்நியனையும்) ஒப்பிட்டதற்கும்//

யோவ் புதுமாப்பிள்ளை, நான் எங்கைய்யா காதலையும், அந்நியனை ஒப்பிட்டிருக்கிறேன். அந்நியன் மாதிரி குப்பையை கொடுக்கிறதை விட காதல் மாதிரி லோ பட்ஜட் படம் சங்கர் கொடுக்கலாமுன்னு தான் சொன்னேன்.

கே.எப்.சில அழுகுன சிக்கன்னா கொடுத்த எப்படிய்யா சாப்பிடுறது?

அது என்ன சிம்ரன் இடுப்பு லாஜிக்??? :-)))

//எத்தனை முறை பார்த்தாலும் சிம்ரனும் ஒருவர்தான் அவரது மார்பும் (நிஜமானாலும் நகலானாலும்) இடுப்பும் அதேதானே அல்லது பழையதுதானே?!'//

அதே சிம்ரனை 10 வருசம் கழிச்சி பார்ப்பீங்களா? கவனிக்க கூட மாட்டீங்கள்ல்ல. அதே மாதிரி நிலமை தான் சங்கர் பட கதைகளுக்கும் ஆகப் போகுது. May be அடுத்த படத்துல...

Boston Bala said...

>>அதே சிம்ரனை 10 வருசம் கழிச்சி பார்ப்பீங்களா

நேற்று ரிமோட் எக்சர்சைஸ் (ரிமோட்டுக்கு பட்டன் பயிற்சி கொடுப்பது) செய்து கொண்டிருந்தபோது. கே டிவி தடுக்கி விழுந்தது. ஜெய் கணேஷுடன் ஸ்ரீவித்யா பேசிக் கொண்டிருந்தார்கள்.

பார்த்தவுடனேயே ஒரு பாந்தம், கனிவு, பாசம் எல்லாம் தோன்றியது. சிம்ரனும் அந்த மாதிரிதாங்க....

யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; சிம்ரன் (ஹீரோவுக்குதான் ;-) அம்மாவானாலும் ஆயிரம் பொன்.

Arun Vaidyanathan said...

Good ..:)

எம்.கே.குமார் said...

பின்னூட்டத்திற்கு, அன்பின் குழலி, கங்கா மற்றும் பாஸிட்டிவ் ராமா ஆகியோருக்கு நன்றி.

கங்கா, உண்மைதான். கட்டணக்கழிப்பறைகள் கூட இப்போதெல்லாம் படுகேவலமாகி வருவது அருவருப்பாக இருக்கிறது.

பாஸிட்டிவ்(அட!)ராமா, அல்வாசிட்டிக்கு அல்வா கொடுக்க யாராலும் முடியாது! ஒரு வாரத்திற்கு எத்தனை பதிவு போடுகிறார் பார்த்தீர்களா? :-)

எம்.கே.

எம்.கே.குமார் said...

வலைப்பதிவுலகின் விஐபிக்கள் (அடுத்த பதிவுக்கும் வந்து பின்னூட்டம் கொடுங்கன்னு அர்த்தம்!) ராம்கி, பாஸ்டன் பாலா, அல்வாசிட்டி, அருண் ஆகியோருக்கு நன்றி.

'தெய்வமே' பாண்டிக்கும், பிரியாவுக்கும் (எம்.கே என்று என்னை அழைப்பதைப் பார்த்தால் குண்டான் பிரியா இவர் என்று நினைக்கிறேன்) ஆகியோருக்கும் நன்றி.

எம்.கே.

எம்.கே.குமார் said...

//அவர்களுக்குப் புரிந்துபோனது.//

Pl. explain.//

ராம்கி, இது உங்க படத்து வெவகாரம். காதலிச்சு கல்யாணம் பண்ணின நல்ல பொண்ணு கங்கா எப்படி, பக்கத்துவீட்டுக்கு வந்த அந்த டான்ஸர் பயல கையப்புடிச்சி இழுத்துட்டு மறைவிடத்துக்கு ஓடும்ன்னு மக்களும் கங்காவின் கணவனும் குழம்ப, உங்க 'சரவணன்', 'உண்மைதான்! கங்கா அப்படித்தான் நடந்துக்குச்சின்னு' சொல்ல சரவணரஜினிய எல்லாரும் அடித்து விரட்டும்போது(ரஜினி படத்தில் இந்தமாதிரிக் காட்சி இது 25வது தடவையின்னு நான் சொன்னதா தலீவர்ட்டெ சொல்லிடுங்க!) அது வேற கங்கா, இது வேற கங்கான்னு தலீவர் நிருபிப்பாரே...அப்போவே மக்களுக்குப்புரிஞ்டுச்சி இந்த பெர்சனாலிட்டி சமாச்சாரமெல்லாம் பேய் புடிக்கிற சமாச்சராமுன்னு.

அதைச்சொல்ல வந்தேன்.

அந்நியனில் ப்ரொஃபசராக வரும் நாசர் முதுகை லேசாக குவித்து, ஆராய்ச்சி அதிகம் செய்த ஒரு டாக்டராக இந்த பெர்சனாலிட்டி விஷயத்தை உக்காந்து வெலாவாரியாக விளக்குவார். நமக்கு 'யப்பா, போதும்டெ விடுங்க, இதெல்லாம் தலீவர் சொல்லிட்டார்'ன்னு தோணும். அதைத்தான் இங்கும் சொன்னேன்.

போதுமாப்பா விளக்கம், நான் ரஜினிய திட்டலேப்பா! கோபப்படாதீங்க! :P

எம்.கே.

எம்.கே.குமார் said...

///Ithu Sujatha/Shankar ku sarukkal illaiya?
Priya///

பிரியா, கரெக்டா புடிச்சிங்க பாருங்க. எனக்குக்கூட அந்த பொண்ணு டாக்டருக்கு படிக்கிதுன்னு கடைசி வரைக்கும் ஸ்டிரைக் ஆகவேயில்லை. வீட்டுல இருந்துண்டு யார்ட்டேயோ பாட்டு கத்துக்கிதுன்னு நெனச்சேன்.

டாக்டருக்கு படிக்கிற பொண்ணுக்கு அதெல்லாம் தெரியாதுன்னு சொல்லமுடியாது, இருந்தாலும் கிளாஸ்ல சொல்லித்தரும்போது ரெமோவை நெனச்சிக்கிட்டு மறந்திருக்கலாம். ஆனா.....அந்த பொண்ணு அதாவது சதா, சந்திரமுகியையுமா பார்க்கவில்லை?! அதில் கூடச்சொல்லியிருப்பார்களே? :P

அல்வாசிட்டி மக்கா, காதல் மாதிரி ஷங்கர் கொடுக்கமுடியாது. கைக்காசு போடுறமாதிரி இருந்தா லவ்ஜோடிக்கு கரியையும் கிரீஸையும் தடவி மேக்கப் முடிச்சுடுற ஆளு அவரு!

ஆனா அதே காதலர்களை ஒன்பது அதிசயங்களிலும் சுத்தி வர வைக்க்றது அடுத்தவர் காசுல!

பிரம்மாண்டம் என்ற புலிவாலை பிடிச்சவங்க விடுவாங்கங்கிறீங்க, எனக்குத்தோணலை!

மக்கா, எத்தனை தடவை பாத்தாலும் சலிக்காத விஷயத்தைப் பத்தி எங்கள் கொள்கை பரப்புச்செயலாளர் பாபா சொன்ன 'ஷ்ரிவி' மேட்டர் தான் எனதும்! இன்னும் பத்து வருடங்கள் கழித்து வந்தாலும் 'அடடா, என்னமா இடுப்பை ஆட்டுறா பாரு'ன்னுதான் அல்வாசிட்டி அப்பவும் சொல்வாரு.

அதெல்லாம் அப்படி ரசிக்கப்படும்போது இந்தியாவில் இளமையாய் என்றும் இருக்கும் ஊழல்களும் கேவலங்களும் திரும்பத் திரும்ப படத்தில் காட்டப்படும்போது நமக்கெல்லாம் போரடித்துவிடுகிறது. திருந்துகிறோமா? ம்ஹூம்.

நாடோடி மன்னன்' என்றொரு தலைவர் படம். தலைவர்ன்னா அவர்தான் தலைவர்! 1950 களீல் வந்த படம். முதல் பாதி கருப்பு வெள்ளை-இரண்டாம் பாதி கலர். சரோஜா தேவி 'அபப்டித்தான்' இருப்பார். அதில் சொன்ன டயலாக்குகள் இன்றைக்கும் எந்தவித ஊழல் அரசை எதிர்க்கும் மக்களுக்கும் பொருந்தும்; பிடிக்கும்.

அதற்குப்பிறகு எவ்வளோ படம் வந்தும் ஊழலும் குறையவில்லை, வசனமும் ரசிக்கப்படாமல் இல்லை. அதே கதைதான் இங்கும்!

தெய்வமேஏஏ பாண்டி, சாமிக்கி கூட கெடா கேக்குது! நாமெல்லாம் சாதியோட திரியுற சாதா மனுஷங்க. கூல் ஆகுங்க. :-)

எம்.கே.

Vijayakumar said...

//அதெல்லாம் அப்படி ரசிக்கப்படும்போது இந்தியாவில் இளமையாய் என்றும் இருக்கும் ஊழல்களும் கேவலங்களும் திரும்பத் திரும்ப படத்தில் காட்டப்படும்போது நமக்கெல்லாம் போரடித்துவிடுகிறது. திருந்துகிறோமா? ம்ஹூம்.//

யோவ் கொமாரு, இதெல்லாம் படம் பார்த்து திருந்த வேண்டிய விசயமாய்யா? சிங்கப்பூர்ல எத்தனை அந்நியன் மாதிரி படம் எடுத்து திருத்துனாங்க? சொல்லுங்க. அதுவும் அந்நியன் நியதிபடி கையேந்தி பவன்ல காக்கா பிரியாணி போடுறாங்கன்னு சொத்தை விசயத்துக்கு எல்லாம் கொலைபண்ணலாமுன்னு நீதி வேற. படம் எடுத்து திருத்திறதை விட சட்டம்போட்டு பைன் போட்டு தப்பு பண்றவனை நோண்டி நொங்கெட்டுத்தா உண்டு.

அஜீவனை சந்திச்சீங்கள்ளே? அவரு என்ன சொன்னாரு. படம் எடுத்து எதையும் திருத்த முடியாதுன்னு சொன்னாருல்ல. படம் எங்கிறது சிந்திக்க வைக்கிற மாதிரி எடுக்கனுங்க.அவன் சிந்திக்கிறதுக்கு படம் ஒரு காரணியா இருக்கனுமே தவிர அவனை அடிமைப்படுத்துற மாதிரி இருந்த ஒரு எழவும் நடக்காது. அறிவுரை சொல்ற மாதிரி எடுத்த குற்றம் தான் பெருகும். அதெல்லாம் வேலைக்காகத விசயம்.

இந்த ஜிகினா வேலையெல்லாம் ரொம்ப நாளைக்கு தாங்காது கண்ணா.

அட போவே! அந்நியன் படத்துக்காக இந்த மாதிரி எழுத வேண்டியிருக்குதேன்னு எனக்கே வெறுப்பா இருக்கு.

Jeevan said...

நன்றி குமார்

Chandravathanaa said...

விக்ரத்தின் நடிப்பு அபாரம்.
சுஜாதாவின் வசன நடையம் படத்துக்கு மெருகூட்டியது.

அன்பு said...

குமார்,
உங்கள் அன்னியன் அனுபவத்துக்கு நன்றி. எப்படியோ பார்க்கவேண்டாம்னு விட்ட படத்தை - மறுபரிசீலனை பண்ண வச்சுட்டீர், நல்லா இருந்தா சரி.

அருமையான அக்காரவடிசலில் ஆங்காங்கு தென்படும் கற்களைப்போல!
பாத்தீங்களா... இப்ப வீட்ல சோறுகிடைக்குதுன்னு - கல்லு கிடந்ததெல்லாம் பொதுவுல சொல்றீங்க. படிக்கவேண்டியவங்க படிச்சாங்களா தெர்ல... கேட்டுச்சொல்றேன்:)

-அன்புடன்
அன்பு

Ramya Nageswaran said...

Dear Kumar,

Sorry to type in English because I am posting from office.

Good analysis. What saddened me was the depiction of the cop as a villian (who supports his brother). In 'Indian' nedumudi Venu was shown as a brilliant cop who also had values. I suppose it is just another characterization but I expected Prakash Raj to be unscrupulous.

Good job again!!

எம்.கே.குமார் said...

பின்னூட்டமிட்ட மூர்த்தி, அஜீவன், சந்திரவதனா, அன்பு, ரம்யா மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர்களுக்கு எனது நன்றி.

ராமகிருஷ்ணன் சார், திரும்பத்திரும்ப சொல்லப்படும் விஷயம் தமிழ் மக்களுக்கு போரடித்தால் எந்த சினீமாவும் இப்போது ஓடக்கூடாது. காதலும் வீரமும் நகைச்சுவையும் எத்தனை நூற்றாண்டுகளாக நம்மக்களிடையே இருந்துவருகிறது. எல்லாப்படமும் புதிய மொந்தையில் பழைய கள்தானே சார்?!

ஷங்கர் புதிய மொந்தைக்கு 30 கோடி செலவு செய்கிறார். அதைத்தான் சொன்னேன்.

எம்.கே.

Search This Blog