Tuesday, January 25, 2011

சென்னை டைம்ஸ் 2015 இதழில் இருந்து

தமிழகம் வந்தார் பிரதமர்!

சென்னை. மே 20. சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கருகில், கடலுக்கடியில் ஏற்பட்ட அதிபயங்கர நில அதிர்வினால், 'சுனாமி' எனப்படும் ஆழிப்பேரலைகள் உருவாகி, இந்தோனேசியா, இந்தியா, இலங்கை, மலேசியா மற்றும் தாய்லாந்து பகுதிகளை மிகவும் கொடூரமாகத் தாக்கியது பலருக்கும் நினைவிருக்கலாம். இந்தியாவில் இது, தமிழ்நாட்டின் கிழக்குப்பகுதியான நாகப்பட்டினம் மாவட்டத்தில் கோரத்தாண்டவம் ஆடியதில் ஏராளமானோர் தங்களது உயிர்களையும் உடமைகளையும் இழந்தனர். இந்திய அரசும் இந்திய மக்களும் இதன் மீட்புப்பணியில் அப்போது மிகத் தீவிரமாக ஈடுபட்டு சிறந்த செயலாற்றினர்.

இந்நிலையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட அம்மக்களுக்கென, அதி நவீன வசதிகளைக்கொண்ட அடுக்குமாடி வீடுகளை இந்திய அரசும் தமிழக அரசும் இப்போது கட்டி முடித்திருக்கின்றன. இவைகளைத் திறந்து வைப்பதற்கும் பாதிக்கப்பட்ட மக்களூக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும் இந்தியாவின் பிரதமர் நேற்று சென்னை வந்தார். வீடுகளை மக்களுக்கு அளித்த அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், 'புயலாலும் கடலலைகளாலும் எளிதில் தாக்கமுடியாத அளவிற்கு ஜப்பானிய அரசின் திட்ட உதவியோடு இவ்வீடுகள் அமைந்திருக்கின்றன' என்று சொன்னார்.

இதற்கிடையில், நேற்றிரவு சன் டிவி செய்திகளில், 'நாகப்பட்டினத்திற்கு அருகேயுள்ள, காணாம்பட்டினம் கிராமத்தில் 'சுனாமி' தாக்கி பத்தாண்டுகள் கடந்தும் இதுவரை எந்தவித நலத்திட்ட உதவியும் வழங்கப்படவில்லை' எனவும் 'ஆட்சியிலிருக்கும் அரசு இவற்றையெல்லாம் கண்டுகொள்ளவில்லை' எனவும் காட்டப்பட்டது.

முன்னதாக, விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் அவர்களுக்கு, கட்சியில் ஒரு கோஷ்டிக்கு ஆதரவாகச் செயல்படும் தமிழக கட்சித்தலைவரை பதவியிலிருந்து நீக்க வலியுறுத்தி கட்சியின் மற்றொரு கோஷ்டியைச் சேர்ந்தவர்கள், பிரதமருக்கு கறுப்புக்கொடி காட்டினார்கள்.

(2005ல் எழுதியது!)

No comments:

Search This Blog