Tuesday, January 25, 2011

சென்னை டைம்ஸ் 2015 இதழில் இருந்து

பொங்கல் பண்டிகை உற்சாகக் கொண்டாட்டம்.

மதுரை. ஜன. 15. (இந்தியா) தமிழ்நாட்டின் தெற்கு மாவட்டமான மதுரையின் தல்லாகுளம் பகுதியில் நேற்று பொங்கல் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் பதினான்கு மற்றும் பதினைந்து தேதிகளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. மதுரை தல்லாகுளத்தில் நேற்று முன்தினம் ரேஷன் அரிசிக்கடை திடீர் என்று பூட்டப்பட்டதால் இப்பகுதிகளில் பொங்கல் பண்டிகை 'கொண்டாடப்படுமோ படாதோ' என்ற சந்தேகம் 'சமுதாய கவனிப்பாளர்களின்' பார்வையில் இருந்தது. மாவட்ட ஆட்சியாளரிடம் இதுபற்றி மக்கள் முறையிட்டுக்கொண்டிருந்த நேரம், அவர் இடமாற்றம் குறித்து செய்தி வந்த நிலையில் அவர் அப்பேச்சினை முடிக்காமல் எழுந்து சென்றுவிட்டார்.

இந்நிலையில் நேற்றிரவு திடீரென்று வந்த மர்மக்கும்பல் ஒன்று ஒவ்வொரு தெருவுக்கும் இரண்டு மூட்டை அரிசியினை வீசிவிட்டுச்சென்றது. இதை அள்ளிக்கொண்ட மக்கள் சந்தோச பெருக்கோடு பொங்கலைக் கொண்டாட ஆரம்பித்தனர். பொங்கலில் போடுவதற்கு சர்க்கரை மூட்டைகளை வீசாத அம் மர்மக்கும்பலின் மேல் விசனப்பட்டும் அவர்களில் சிலர் திட்டித்தீர்த்தனர்.


இதற்கிடையே வீடுகளுக்கு 'குடிநீர் பாக்கெட்' போடும் தண்ணீர்வண்டி நேற்று வராததைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். 'வீட்டிற்கு மூன்று பாக்கெட் இலவச தண்ணீர்' என்ற திட்டத்தைச் சொல்லி ’ஆட்சிக்கு வந்தவர்கள்’ இன்று அதைச் செயல்படுத்தவில்லை என்றும் அவர்களில் சிலர் கூறினர். மேலும் சிலர், சென்ற வாரம் கொடுத்த ’தண்ணீர் பாக்கெட்டின்’ அளவு குறைந்திருந்தது என்றும் புகார் செய்தனர்.



2005ல் எழுதியது

No comments:

Search This Blog