Friday, October 29, 2004

வாழ்க நீர் எம்மான்!

"என்னப்பா டியூன் இது??? இதுக்கு என்னத்தை எழுதுறது? எப்படி எழுத முடியும்? மூணாங்கிளாஸ் வாய்ப்பாட்டைத் திருப்பிப் போட்டு வாசிக்கிறமாதிரி இருக்கு?"

"சார் அப்படில்லாம் சொல்லாதீங்க! மியூசிக் டைரக்டர் கேட்டா கோபிச்சுக்கப்போறாரு!"

"கிழிச்சான்! எம் எஸ் வி, ராஜா, தேவா, சந்திரபோஸ், கங்கை அமரன் எல்லாரையும் மிக்ஸ் பண்ணி ஒரு டியூனு போட்டு வெச்சிருக்கான்! இதுக்கு பல்லவி எப்படி எழுத முடியும்?"

"ஆரியமாலா ஆரியமாலான்னு ஏதாவது போடச்சொல்லு. இல்லாட்டி மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன்னு ஏதாச்சும் போடச்சொல்லு. டென்ஷன் பண்ணுறாங்கெ!"
****
மியூசிக் டைரக்டர் உதவியாளரைக் கூப்பிடுகிறார்.

"யோவ்..இந்த ஆளு சரி வரமாட்டான். அவரைக்கூப்பிடு. அவர்தான் லாயக்கு."

"சார் அவரு வயசானவரு."

"இருக்கட்டுமேய்யா!"

"இல்லே சார்! இது காதலைச் சொல்லி அவஸ்தை படுகிற காதலன் பாடுற பாட்டு. அவருக்கு முடியுமா?"

"யோவ்..'தொட்டால் பூ மலரும்' யார் தெரியுமா? 'மல்லிகை என் மன்னன் மயங்கும்', 'நீ எங்கே..என் நினைவுகள் அங்கே', 'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம், அட! 'நான் ஆணையிட்டால்' கூட அவருதான்யா எழுதுனது."

"அப்படியா சார்? இருந்தாலும் இதெல்லாம் பழைய படம் சார். புதுப்படம்ன்னு.."

"யோவ்...எழுபத்தி மூணுலயும் இளமையோடு இருக்க ஆளுய்யா அவரு. விகடன் படிக்கிறியா? நளதமயந்தி, ஹேராம், பாய்ஸ், காமராஜ், மின்னலே இன்னும் எத்தனை படம்ய்யா வேணும். எல்லாம் அவருதான். இன்னிக்கும் எழுத்துல இளமையை ஊத்தி எழுதுற ஆளு!"

"அப்படியா சார்? நடு நடுவுலே இங்கிலீஸ் வார்த்தையெல்லாம் போடணும். தேவைப்பட்டா தத்துவத்தையும் எழுதணும் சார்."

"அட! 'தரைமேல் பிறக்க வைத்தான்'னு எழுதணுமா? கலக்குவார்யா அவரு. 'சமஞ்சது எப்படி'ன்னு எழுதணுமா அசத்துவாருய்யா அவரு. இல்லை 'ஓ..மரியா ஓ..மரியா'ன்னு ரம்மியமா எழுதணுமா? இல்லை 'கட்டம் கட்டி கலக்கணு'மா? இல்லை 'சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது'ன்னு இன்னிக்கும் எழுதுவாருய்யா."

"அவ்வளவு பெரியாளா சார் அவரு?"

"என்னய்யா இப்படிக் கேட்டுட்டே? இன்னக்கி 73 வயசாம் அவருக்கு. வாழ்கன்னு மனதார வாழ்த்திட்டு இந்தப்பாட்டை அவரை வெச்சே எழுத வெச்சிடுவோம். என்னய்யா சொல்லுறே?"

"கண்டிப்பா சார். வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்ன்னு நான் சொன்னதா சொல்லிட்டு கூப்பிடுங்க சார்."

எம்.கே.

1 comment:

Boston Bala said...

வாலிக்கு ஹேப்பி பர்த்டே! சந்திரமுகியில்(உம்) நல்ல பாடல்கள் அமைய ஆசை.

Search This Blog