Monday, March 28, 2005

புதுமைப்பித்தன் யார்?

"புதுமைப்பித்தன் என்ற நபரை நான் அறிந்துகொள்ளும்பொழுது எனக்கு வயது 8. கையில் பெரிய வாளுடன் கம்பீரமாக நின்ற அவரைத்தான் புதுமைப்பித்தன் என்று அப்போது நான் உணர்ந்துகொண்டேன். பிறகுதான் அவர் புதுமைப்பித்தன் இல்லை 'தலீவர் எம்ஜிஆர்' என்று எனக்குத்தெரிந்தது." இப்படி இயல்பான நகையோடு தனது பேச்சை ஆரம்பித்தார் திரு.ரமேஷ் (மானசஸென்).

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் மாதமொருமுறை 'கதையும் காட்சியும்' என்றொரு 'கண்ணுக்கும்-காதுக்குமான' நிகழ்ச்சி ஒன்றை நடத்திவருகிறது. புகழ்பெற்ற எழுத்தாளர்களின் கதையைக்கொண்ட திரைப்படத்திலிருந்து சில காட்சிகளை ஒளிபரப்பி அவரின் மற்ற கதைகளையும் அவற்றின் இயங்குதளங்களைப் பற்றிய அறிமுகத்தையும் சிங்கப்பூரின் படைப்பாளர்கள்/ வாசகர்களுக்கு, விஷயமறிந்த ஒருவரைக்கொண்டு கலந்துரையாட வைத்து திறம்பட நடத்தி வருகிறது.

ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் அகிலன் முதல் அனுராதாரமணன் வரை பல பெயர்பெற்ற எழுத்தாளர்களைப் பற்றிய கலந்துரையாடல் நடந்திருக்கிறதாம்.

இந்நிலையில் நேற்று நடந்த அவ்விழாவில் 'புதுமைப்பித்தன்' எடுத்துக்கொள்ளப்பட்டார். அவரின் 'சிற்றன்னை' கதையை மூலக்கதையாகக் கொண்ட 'உதிரிப்பூக்கள்' திரைப்படம் காட்சிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

Image hosted by Photobucket.com

கரும்பைத் தின்ன கூலியெதற்கு என்பதாய் தனக்கு தரப்பட்ட வேலையை இன்பமுடன் ரமேஷ் எடுத்துக்கொண்டார் போலும். கத்தை கத்தையாய் பேசுவதற்கு தயார் செய்யப்பட்ட குறிப்புகள் மேஜையை ஆக்ரமிக்க, எழுந்து, "உங்களது பொன்னான இந்த மாலைப்பொழுதை இதுபோன்ற நல்ல நிகழ்ச்சிகளுக்காய் பயன்படுத்திக்கொண்டு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் எனது வணக்கங்களும் நன்றிகளும்" என்று ஆரம்பித்தார்.

புதுமைப்பித்தனைப் பற்றி ஒருவார்த்தையில் சொல்லவேண்டுமானால், நக்கல் என்றார். இரண்டு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் நக்கலோ நக்கல் என்றார். நக்கல், கேலி, குறும்பு, கிண்டல், நையாண்டி ( இன்னும் இதுபோல நிறைய சொன்னார்! எனக்கு மறந்துபோய் விட்டது!) இவற்றிற்கு என்னென்ன வார்த்தைகள் இருக்கின்றனவோ அவற்றையெல்லாம் புதுமைப்பித்தனுக்கு மொத்தமாக நாம் அர்ப்பணித்து விடலாமாம். அவைகளின் மொத்தம் தான் புதுமைப்பித்தனின் படைப்புகள் என்றார்.
Image hosted by Photobucket.com
"வாழ்க்கையில் நாம் காணும் ஒட்டுமொத்த முரண்பாடுகளின் மொத்த வடிவமாய் இருக்கிறது அவரின் படைப்புகளைக்கொண்டு நமக்கு அறிமுகமாகும் அவரது குணம். இத்தகைய முரண்பாடுகளைக் கொண்ட ஒருவன் இலக்கிய உலகில் முன்னுக்கு வருவதற்கு மிகப்பெரிய மேதமை வேண்டும். மேதைமையோடு நேர்மையும் புதுமைப்பித்தனிடம் இருந்திருக்கிறது, அதனால் அவர் ஜெயிக்க முடிந்திருக்கிறது.
Image hosted by Photobucket.com

ஒரு வெள்ளைத்தாளில் நீங்கள் காட்டக்கூடிய மிகப்பெரிய வெளிச்சமானது அதன் இயல்பான எதுவும் எழுதாத வெண்மையே ஆகும். அதற்கு மேலே அதைக்கொண்டு வெறுமனே அதிக வெளிச்சம் எதுவும் காட்டமுடியாது. அதைத் தருவிக்க வேண்டுமெனில் அதில் கருப்பு நிறத்திலான பரப்பை வரைய வேண்டும். இப்போது இன்னும் கொஞ்சம் வெளிச்சம் போல அதைக் காட்டமுடியும்; உணர்த்தமுடியும். அல்லது கருப்பு நிறத்திலான அப்பரப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெண்மையை எளிதாக உணரும்படி கொண்டுவரமுடியும். இதைத்தான் புதுமைப்பித்தன் செய்திருக்கிறார்." என்று தனது ஓவிய வாழ்வில் இருந்து மிகவும் எளிதாக விளங்கிக்கொள்ளும்படி ஒரு உதாரணத்தை எடுத்து வைத்தார்.

"ஜாதிக்குள்ளே நடக்கும் திருமணம் பற்றி கதை எழுதிய அவர், ஜாதிவிட்டு நடக்கும் திருமணங்களைப் பற்றியும் கதை எழுதியிருக்கிறார். இரண்டிலும் திருமண வாழ்வின் நிதர்சனங்களை முன் வைக்கிறார். இதற்கு ஜாதீயவாதி என்ற முத்திரையை அவர்மேல் குத்தமுடியாது" என்றார்.

"எல்லா முரண்பாடுகளையும் தனக்குள்ளே கொண்டவரைப்போல இருந்த அவர் எத்திசையையும் எக்கருத்துகளையும் சார்ந்து வாழாது தன் ஆத்மரசனைக்கு மட்டுமே அடிபணிந்து வேறெதற்கும் சாயாது வாழ்ந்திருக்கிறார். அதுவே அவருடைய வாழ்க்கைக்கும் படைப்புகளுக்கும் வெற்றியின் சாட்சியாக இப்போதும் சிறந்துவிளங்கி வருகிறது. புதுமைப்பித்தனுக்கு கதை எழுதுவதற்கென்று இருந்த வரம்புகளெல்லாம் ஏட்டுச்சுரைக்காயாகவே இருந்திருக்கிறது. அதை அவர் ஒரு பொருட்டாக எப்படைப்பிலும் எடுத்துக்கொள்ளவில்லை. இப்படித்தான் ஆரம்பிக்கவேண்டுமென்றோ இப்படித்தான் முடிக்கவேண்டுமென்றோ எந்த இடையூறும் இல்லை அவருடைய மனதுக்குள். நீண்ட அறிமுகத்தைக் கொடுத்துவிட்டு படக்கென்று கதையை முடிக்கும் தைரியமும் துணிவும் அவருக்கு இருந்திருக்கிறது.

தமிழ் இலக்கிய வரலாற்றில் மொழியை நவீனப்படுத்துதலில் ஆளுமையை அதிகமாக்கியதில் அவருக்கு மிகப்பெரிய பாராட்டும் பங்கும் இருக்கிறது. நடைமுறை விஷயங்களை எழுதுவதில் கௌரவக்குறைச்சல் ஒன்றும் இல்லை. சென்னை நகர வாழ்க்கையில் தான் கண்டவைகளைச் சார்ந்தே அவரது கதைகள் இருக்கின்றன. நகர வாழ்க்கை ஒரு அவலமாகவே அவருக்குள் தொக்கி நின்றிருக்கிறது. அதற்கு மாறாக, நெல்லைப்பகுதி கிராம வாழ்க்கை ஒரு மிகப்பெரிய ஏக்கமாகவே அவருக்குள் போராடிக்கொண்டிருந்திருக்கிறது. அவருடைய கதைகளில் பலவற்றில் அவ்வேதனையும் ஏக்கமும் தவழ்ந்து கிடக்கின்றன. கதை சொல்வதில் புதிய புதிய யுக்திகளையும் சொல்வதை நவீனமாகச் சொல்வதிலும் மிகுந்த அக்கறை கொண்டிருந்திருக்கிறார்.

இன்றைய இலக்கியவாதிகள் பலர் புதுமைப்பித்தனை வித வித கோணங்களில் பிரித்து எடுத்துகொண்டார்கள். 'விந்தன், ஜெயகாந்தன், சு.ரா, சுஜாதா, கு.அழகிரிசாமி, கி.ரா, அசோகமித்திரன், நா.முத்துச்சாமி, வண்ணநிலவன், எம்.வி.வெங்கட்ராமன்' என பலபேர் அவரிலிருந்து தமக்கான வழிகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள்."

"சிற்றன்னை கதைக்கும் உதிரிப்பூக்கள் படத்துக்கும் இருக்கும் ஒரே சம்பந்தம் இரு படைப்பாளிகளின் ஒத்த எண்ண அலைகளே தவிர கதைப்படி எதுவுமில்லை. சிற்றன்னை கதையின் ஃபிளாஸ்பேக்காக உதிரிப்பூக்களை மகேந்திரன் எழுதி இயக்கியிருந்தாலும் சிற்றன்னை கதையை தமது படத்தின் மூலக்கதை என்று குறிப்பிட்டது இன்றைய காலகட்டத்தில் சினிமா உலகில் நாம் காணக்கிடைக்காத, மகேந்திரனின் பெருந்தன்மை மட்டுமே" என்று முத்தாய்ப்பாய் முடித்தார் ரமேஷ்.

நிகழ்ச்சியை கவரேஜ் செய்துகொண்டிருந்த உள்ளூர் தொலைக்காட்சியான 'வசந்தம் சென்ரல்' நேற்றிரவு செய்திகளில் அதைக்காட்டியது.

Image hosted by Photobucket.com

புதுமைப்பித்தனின் பல்வேறு முகங்களையும் அவருடைய படைப்புகளின் விதவிதமான இயங்குதளங்களையும் விரிவாக சிறப்பாக அறிந்து கொள்ள முடிந்ததில் மனமும் மகிழ்ந்தது . இந்நிகழ்ச்சியை முதலிலிருந்து முன்னின்று நடத்தி வரும் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகமும் நிகழ்ச்சியின் அமைப்பாளர் திருமதி.சித்ரா ரமேஷ்ம் பாராட்டுக்குரியவர்கள்.

நன்றி: சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம்
திரு. ரமேஷ் (மானசஸென்)
திரு. இந்திரஜித் (மீடியாகார்ப்ஸ் தொலைக்காட்சி)

(செவி வழி கேட்டதிலிருந்து எழுதியவை. வார்த்தைகளும் பொருளும் முன்பின் மாறியிருக்கலாம்.)

அன்புடன்
எம்.கே.குமார்

விட்டகுறை தொட்ட குறை: காலச்சுவடு பதிப்பித்த புதுமைப்பித்தனின் சிறு கதைகள் தொகுப்பு மிகவும் நேர்த்தியாக இருப்பதாக ரமேஷ் உட்பட பலரும் பேசிக்கொண்டது காதில் விழுந்தது.

இளையபாரதி தொகுத்த 'கண்மணி கமலாவுக்கு' என்ற புத்தகம் 'ஒரு அந்தரங்க டயி்ரியைப் படிப்பது போலவும் எல்லோருக்கும் உள்ளார்ந்த ஒரு வேதனையையே தருவதாகவும்' கூட்டத்துக்குப் பிந்தைய பேச்சுகளில் பலரும் சொன்னார்கள்.

நீங்கள் அப்புத்தகம் படிக்காதவராயின் அது, அவர் 'தனது மனைவிக்கு எழுதிய அந்தரங்க கடிதங்களின் தொகுப்பு' என்பதை அறிவீர்களாக! இத்தகைய படைப்புகள் தமிழ் இலக்கியத்துக்குள் அமைவது சரியா தவறா என்பதையும் பின்னூட்டமிட்டுச் செல்வீர்களாக!

நன்றி!

12 comments:

Vijayakumar said...

குமார் நன்றாக கவர் செய்து எழுதியிருக்கிறீர்கள். ராமேஷ் அவர்களுடன் தொடர்ந்த ஆப்-லைன் உரையாடல் மிக சுவையானதாக இருந்தது. ஏனென்றால் உருளைக்கிழங்கு மசாலா தோசையுடன் கோழி குருமா சேர்த்து சாப்பிட்டுக் கொண்டே ரமேஷ் பேசியதைக் கேட்டதால்.Take it easy ramesh.

ரமேஷ் பேச்சை கேட்டு அதே ஆர்வத்தில் நூலகத்தில் தேடியதில் புதுமை பித்தனின் 'அன்னையிட்ட தீ' கிடைத்தது. லெண்டிங் மெஷினில் அந்த புத்தகம் டிடெக்ட் ஆகவில்லை. நல்ல பிள்ளையாக அதை கவுண்டரில் கொடுத்து விட்டு வந்துவிட்டேன். அப்படியே சுட்டுக் கொண்டு வந்திருக்கலாம் (ஐடியா கொடுத்த செந்திலுக்கு நன்றி). ஆயிரக்கணக்கில் ரூபாய் கொடுத்து படித்தாலும் சுட்ட புத்தகம் தரும் படிப்பின்பம் மற்றவை தருவதில்லை ஏனோ?

மேஜைக்கு நடுநாயகமாக கூட்டத்தோடு கூட்டமாக உட்கார்ந்திருக்கும் என்னையும் டிஜிட்டல் படம் பிடித்து பதிவில் போட்டதிற்கு நன்றி.

Thangamani said...

நல்ல பதிவு. வலைப்பதிவுகள் இப்படிப்பட்ட செய்திகளை உலகெங்கும் தரச்செய்வதன் மூலம் ஊடகங்கள் செய்யாத/செய்ய முடியாத வேலையைச் செய்கின்றன. இது வலைப்பதிவகளுக்கே உரிய தனித்துவம் இல்லையா?

பாலு மணிமாறன் said...

Nice Coverage ... Ramesh's efforts are admirable... and i am not surprised by " vasantham's" coverage... Good effort!!!!!

பாலு மணிமாறன் said...

Nice Coverage ... Ramesh's efforts are admirable... and i am not surprised by " vasantham's" coverage... Good effort!!!!!

எம்.கே.குமார் said...

பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி, மூர்த்தி, விஜய், தங்கமணி, பாலுமணிமாறன்.

இதுமட்டுமல்ல, இன்னும் என்னென்னவோ செய்யப்பொகின்றன இந்த வலைப்பதிவுகள். பொறுத்திருந்து பார்ப்போம் தங்கமணி.

பாலு மணிமாறன், ரமேஷ் பட்டையைக் கிளப்பினார். புதுமைப்பித்தனை அக்கு அக்காக அலசிவிட்டார். ஏதோ நினைவிலிருந்தவரை எழுதினேன்.

நன்றி.
எம்.கே.

எம்.கே.குமார் said...

//ஆயிரக்கணக்கில் ரூபாய் கொடுத்து படித்தாலும் சுட்ட புத்தகம் தரும் படிப்பின்பம் மற்றவை தருவதில்லை ஏனோ?//

விஜய், திருட்டு மாம்பழம் டேஷ்ட்டு எப்படி இருக்கும்ன்னு நமக்கெல்லாம் தெரியாதா மக்கா, அந்த ருசியே வேற!
அனுபவிங்க, ஆராயாதீங்க!

எம்.கே.

பாலு மணிமாறன் said...

நிஜம்தான் குமார்... ரமேஷால் நிறைய சாதிக்க முடியும்... சிங்கப்பூர் சூழலை உள்வாங்கி நிறைய எழுதத் துவங்கினால் இலக்கிய உலகம் வியக்கும் பல புதிய உச்சங்களை அவரால் தொட முடியும் என்பது என் தாழ்மையான கருத்து.

dondu(#11168674346665545885) said...

"வந்ததால் வரவில்லை; வாராவிட்டால் வந்திருப்பேன்!!!" ஒரு நிமிடம் இதைப் படித்து மலைத்துப் போனேன். "அச்சமில்லை, அச்சமில்லை" படத்தில் ஒரு காதலி தன் காதலனுக்கு எழுதி அனுப்ப அவன் சரிதாவிடம் காட்டி விளக்கம் கேட்க, பதிலைக் கேட்டு நொந்துப் போகிறான்.
அடுத்த மூன்று நாட்கள் வர முடியாது என்பதை நாசூக்காகத் தெரிவித்திருப்பார் காதலி.
அன்புடன்,
டோண்டு ராகவன்

Unknown said...

//"வந்ததால் வரவில்லை; வாராவிட்டால் வந்திருப்பேன்!!!" ஒரு நிமிடம் இதைப் படித்து மலைத்துப் போனேன். "அச்சமில்லை, அச்சமில்லை" படத்தில் ஒரு காதலி தன் காதலனுக்கு எழுதி அனுப்ப அவன் சரிதாவிடம் காட்டி விளக்கம் கேட்க, பதிலைக் கேட்டு நொந்துப் போகிறான்.
அடுத்த மூன்று நாட்கள் வர முடியாது என்பதை நாசூக்காகத் தெரிவித்திருப்பார் காதலி.//

:)), டோண்டு சார், நானும் உங்க நிலைமையிலே தான் இருந்தேன்.

எம்.கே.குமார் said...

அண்ணே, மூர்த்தி அண்ணே, பாருண்ணே, இந்தக் கவிதையில இவ்ளொ அர்த்தம் இருக்காம்! எனக்கே இப்பொதான் தெர்து!

கலக்குண்ணெ கலக்கு!

எம்.கே.

Anonymous said...

புதுமைப்பித்தன் பத்தி இந்தப்பதிவுனால கொஞ்சம் புரியவெச்சதுக்கு தண்ணி (நன்றியை விட விலை ஜாஸ்திபா).

ஒரு முறை முயன்றேன், பிறகு ரொம்ப negativeஆ இருக்கற கதைகள்ன்னு ஒரு நாலஞ்சு கதைகளுக்கு அப்பறம் படிக்கலை ('புரியலை'ன்னும் புரிஞ்சுக்கலாம்).

ஏதோ, அல்வாவோட படத்தையும் பாத்துட்டேன். ஆமா, அல்வாக்குப் பக்கத்துல இருக்கறது அருள்குமரன் தான?

எம்.கே.குமார் said...

மறுமொழிக்கு 'ரொம்ப தண்ணி' க்ருபா.

புதுமைப்பித்தனைப் பத்தி ரொம்ப தெளிவா சொன்னார். அவர் பேசியதைக்கேட்டு உடனே லலப்ரேரில புக் தேடுன ஆளெல்லாம் இருக்கு.!

அவரேதான் அருள்குமரன்! பக்கத்துல "கை கட்டுவோர் சங்கத்துல" இன்னொரு மெம்பரா இருக்குறது செந்தீல்நாதன் ன்னு ஒருத்தர். 'பிளாக்' வெச்சிருக்கார், மரத்தடில இருக்கார் ஆனா ஒண்ணும் எழுதமாட்டார்! நம்ம 'கேவீஆரோட' கல்லூரி தோஸ்து!

எம்.கே.குமார்.

Search This Blog