Showing posts with label எம்.கே.குமார். Show all posts
Showing posts with label எம்.கே.குமார். Show all posts

Monday, October 12, 2020

மணியுலகு

 https://www.jeyamohan.in/139210/

ஜெயமோகனின் இந்தப்பதிவைப் பார்த்ததும் மணி நினைவுக்கு வந்துவிட்டது. என்னுடன் (என்னைத்தவிர) பழகிய ஒரே நாய் மணிதான்.



மணி அண்ணன் இறந்துபோன சிலநாட்களுக்குள் எங்கிருந்தோ வந்துவிட்டது இந்த மணி. அண்ணனைப்போலவே அப்பாவிடம் அவ்வளவு பாசம். அப்பாவுடன் வயல், கொல்லை, காடு, கண்மாய் என எங்கும் உடன் செல்லும். என்னிடமும் பாசம் மிக அதிகம். ஒவ்வொருமுறை ஊருக்குச்செல்லும்போதும் என் காலடி ஊரைத்தொடுமுன் என்னைத்தேடி வந்துநிற்பது படைப்பின் பேரதிசயம். ஏறக்குறைய அதன் உடம்பு முழுவதும் தடவி, செல்லமாய்ச் சொறிந்துவிடுவேன். அதைத்தூக்கி தோளில் வைத்துக்கொண்டு ஓடவேண்டும்போல ஒருமுறை வினோத ஆசை வந்ததுண்டு. காட்டுப்பக்கம் சென்றாலும் கூடவே வரும். 

அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லையென்றானபோது முதலில் சுணங்கிப்படுத்தது மணிதான். ஒருசில மாதங்களில் அலைவதிலிருந்து தன்னைத்தானே சுருக்கிக்கொண்டது. 

சென்றமுறை அப்பாவைப்பார்க்க சென்றபோது மணியைக் காணவில்லையே எங்கே என்றுகேட்டேன். மூன்று நாட்களாக நம்கொல்லைக்கருகில், ஒரே இடத்தில் படுத்துக்கிடந்ததாகவும் வீட்டுக்கு அழைத்தும், சாப்பாடு கொண்டுவைத்தும் அதைத்தொடாமல் அப்படியே கண்ணுறங்கிவிட்டதாகவும் அப்பா சொன்னார். கண்ணீர் வந்து நின்றது.

அப்பாவின் ஆயுளை நீட்டிக்க தன்னை முன்வந்துகொடுத்ததாகவே நான் நினைத்தேன். ஆன்மா சாந்தியடையட்டும் மணி. மூக்குக்குமேலே என் செல்லமுத்தம் இப்போதும் ஒன்று உனக்கு.

Friday, September 25, 2020

"இடபம்" – நாவல் கலந்துரையாடல்

நாவல்களை வாசித்து விவாதிப்போம், அதுவே விமர்சன - வாசிப்பு-ரசனை சார்ந்த ஆழமான பார்வையைக்கொடுக்கும்’ என்ற வாசகர் வட்டத்தின் அடிப்படைக்கூறுகளில் ஒன்றை மீண்டும் இந்த ஆகஸ்ட் மாதம் முதல் செய்யலாம் என்று பேச்சு வந்தது. அண்மைக்கால அல்லது எப்போது வாசித்தாலும் ஏதாவதொன்றை புதியதாகக் கொடுக்கக்கூடிய நாவல்களைப் பட்டியலிட்டோம். அவ்வகையில் 'இடபம்' என்ற நாவலைப் பரிந்துரை செய்தார் அழகுநிலா. (அவருக்கு அந்நாவலைப் பரிந்துரைத்தவர் கவிஞர் சாம்ராஜ் என்று நிகழ்ச்சியின்போது சொன்னார்). நிகழ்ச்சி செய்தியை குழு மற்றும் பொதுவில் பகிர்ந்தோம்.

இலங்கேஷ் வாசகர் வட்ட உறுப்பினர்களில் ஒருவர். வாசிப்பில் பேரார்வம் உள்ளவர். அறிவித்த ஓரிரு நாட்களில் நாவலை அவர் வாசித்துவிட்டு அற்புதமான பங்கு வர்த்தகம் என்னும் கதை களம் அதை கொலை களமாக மாற்றியிருக்கும் கண்மணி யாரம்மா நீர், எங்கிருந்து வருகிறீர்கள் இப்படி எழுத! நவீன இலக்கிய வாசகனுக்கு கெட்ட வார்த்தை புதிதல்ல, ஆனாலும் அழகிய “மயிரான்” என்னும் தமிழ் வார்த்தையுடன் தொடங்கிய நாவலை வாசித்தவுடன் சுதாரித்து கொண்டிருக்க வேண்டும், பழக்க தோஷம் எடுத்ததை முடிக்க வேண்டுமென்று! விழுங்க முடியாமல் தவிக்கிறேன் இப்புத்தகத்தை ஏன் எடுத்தேன் என்று. இடபம் முழு அபத்தம். இது இலக்கியமே அன்று, இது என்ன குப்பையின் குவியல், இது பல புத்தகத்திற்கு நடுவே வைக்கபட வேண்டியவை அல்ல, பலான புத்தகத்தின் நடுவே இருக்க வேண்டியவை” என்று குழுவில் போட்டுவிட்டார். விவாதம் சூடுபிடித்தது.

இதற்கிடையில் சிவானந்தம் நீலகண்டன் “சந்தைக்குள் நுழைந்த சரசக்காளை” என்று கட்டம் கட்டி நிகழ்ச்சிக்கு முன்பே கட்டுரையை அவுத்துவிட்டுவிட்டார். பலர் படித்துவிட்டு நிகழ்ச்சியில் இதைப்பேசவேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டிருந்தனர்போலும். (நான் நிகழ்ச்சி முடிந்தபின்பே விமர்சனத்தைப் படிப்பேன் என (ஸ்பாய்லர்ஸ் காரணமாக) பிடிவாதமாய் இருந்தேன்.

இதற்கிடையில் இலங்கேஷ் அவர்களை ஒரு இஞ்சி டீயோடு வசிப்பிடத்துக்கருகில் சந்தித்து ’இடபம்’ நாவலையும் வாங்கிக்கொண்டேன்.

நாவலை வாசிக்கும்போதே வடிவேல் என்னும் மகானின் ’அழகர் ஆற்றில் இறங்கிய, எதார்த்த-பதார்த்த நல்ல சம்பவங்கள்’ நினைவுக்கு வந்தன’ என்றும் அதையே வீடியோவாகவும் எனக்கு அனுப்பி குதூகலமாக்கிவிட்டார் இலங்கேஷ். முகநூலிலும் போட்டுவிட்டேன்.

இவற்றையெல்லாம் பார்த்து அழகுநிலா ஹேப்பியாய் வாசகர்வட்டம் அனல் பறக்கும் என்று நினைத்திருப்பார்போலும். நிகழ்ச்சியும் வந்தது. அவர் சாமர்த்தியமாக மறைந்திருந்து தாக்கும் உத்தியை அன்று எடுத்துவிட்டார். நானும் அப்படி இருக்கவே எத்தனித்தேன். இடையில் ஓந்தியைக் கொண்டுவந்து என்னை நேரிடையாய் சமர் செய்ய மாட்டிவிட்டுவிட்டார்

முதலில் திரு. ரமேஷ் (சித்ரா) பேசினார். நாவல் ஏன் தன்னை ஈர்க்கவில்லை என்று சொன்னார். அடுத்ததாக சிவா பேசினார். தன் விமர்சனம் ஒருதலைப்பட்சம் என்று ’விமர்சனத்துக்கு விமர்சனம்’ வந்த கதையைச்சொல்லி விமர்சனம் செல்லவேண்டிய தூரமும் புரிந்துகொள்ளப்படவேண்டிய விதவித பாதைகளின் அவசியமும் பற்றிச் சொன்னார். விஜி என்ற வாசகர் நீண்ட விமர்சனம் வைத்தார். கவிஞர் பாரதி மூர்த்தியப்பன் அவர்களும், பங்குவர்த்தகம்-படுக்கை என இரு சம்பவங்கள் மட்டும் அடுத்தடுத்த வருவதாலும் வேறு எதுவும் நாவலில் இல்லாததால் என்னால் நாவலை ரசிக்கமுடியவில்லை என்றும், தான் செய்வதும் அடுத்தவர்களின்மேல் தன் கருத்தும் நாயகிக்கு உண்மைத்தன்மையாக நாவலில் வரவில்லை என்றும் சொன்னார்.

இதற்கிடையில் தான் ரயிலில் பயணம் செய்வதாலும் தன் கருத்து அவ்வப்போது தடைபட நேரும் என முன்னறிவிப்போடு லைனில் வந்தார் இலங்கேஷ்.

ரயிலின் டட் டட் டட் கதவு மூடி-திறக்கும் ஒலியிடையே நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இலங்கேஷ் ஒழுக்கம் என்ற வார்த்தையைச் சொன்னாரா தெரியவில்லை. பாய்ந்துவிட்டார்கள் ரமா சுரேஷும் அழகுநிலாவும். அதெப்படி ஒழுக்கம் குறித்து பேசுகிறீர்கள் என கத்த, கூச்சல் குழப்பம் நிகழ்ச்சியில். விர்ச்சுவல் என்பது எந்த ஒரு எழவுக்கும் சரியில்லை. ஒரு அடிபிடி சண்டையையாவது ஒழுங்காகப் போடமுடிகிறதா? என்ன இருந்தாலும் அடிபிடி சண்டைக்கு நிகழிடம்தான் நன்று. ஒழுக்கம் பற்றி ஒவ்வொருத்தருக்கும் ஒரு பிடிமானம் இருந்திருக்கும்போல. அவரவர் விமர்சனத்துக்குள் அதைப்புகுத்திகொண்டுவந்துவிட்டார்கள். இப்போதுவரை அது எப்படி நாவல் விமர்சனத்துக்குள் வந்தது என்று எனக்குப்புரியவில்லை. நான், குறுக்கே புகுந்து, ஐயாக்களே அம்மாக்களே, அது கதாநாயகியின் பிரச்சனை. நாம் நாவலைப்பற்றி மட்டும்பேசுவோமே என்று சொல்ல, ஆமாம் என்றனர் ஒருசிலர்.

இதற்கிடையில் நாவலைப்பற்றி பேச வந்தார், போராளி என அறியப்படும் செந்தில்குமார். ’நாவலை ஏன் ஒரு நாவலாக அதன்போக்கிலே நாம் ரசிக்கமறுக்கிறோம்?’ என்று கேட்டார். கேட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சி. என்னாச்சு என்று விஜய்சேதுபதியாய் நானும் நிமிர்ந்து உட்கார்ந்தேன். நாவலின் போக்கு, ஒழுக்கத்தின் அணிகலன்கள், ஆண்களின் மனநிலை, பெண்களின் மனநிலை என அட்டகாசமாக வகுப்பு எடுத்தார். ஒரு தோழிக்குச் சொல்ல வந்தததைப்போல (நமக்கு ஏன் சொல்கிறார் என்று நினைத்தாலும்) நறுவிசாக சொன்னார். ஒரு குறுக்குவெட்டுத்தோற்றத்தைக் கொடுத்தது அது.

எனக்கு இருந்த விமர்சனங்கள் எளியவை.

இந்நாவல் பெண்களுக்குப் பிடிக்கும் என்றேன். காரணம் தமக்கு நிகழாததை குடும்ப நாவல்களில் பார்த்து ரசிப்பதுபோல, சில விஷயங்களை இதுபோன்ற நாவல்கள் ரசிக்கவைக்கும். இரண்டாவது நாயகிக்கு நாவலில் வரும் எல்லா உறவும்  ’டச் அண்ட் கோ’ மட்டுமே. காதல் வலி, பிரிவு, பின்தொடர்தல், ஆசிட் வீசுதல், சோக கீதம் பாடுதல் என எதுவும் இல்லை. ’அவள் அப்படித்தான்’ படத்திலே இக்காட்சிகள் வந்துவிட்டாலும் நாவலாக பெண்களுக்குப் பிடிக்கலாம் என்றேன்.

மேலும் ’நாவலிலிருந்து எந்த அனுபவமும் எனக்குள் நிற்கவில்லை. கிளைக்கவுமில்லை’ என்றேன். ’பங்குச்சந்தை தகவல்கள் கூகுள்போல சொல்லப்பட்டும், படுக்கையறைச் சம்பவங்கள் சரோஜாதேவி போல குவிதலை நோக்கி மட்டும் சொல்லப்பட்டும் கடந்துபோகின்றன’ என்றேன். மேலும் உடலுறவை ”காத்ரீனா புயலாக அவன் தாக்க, நான் பிதற்றிக்கொண்டாடினேன். இரண்டாவது சுற்றில் அதுவே சாண்டி புயலாக வலுப்பெற திண்டாடித்தான் போனேன” என்ற வரிகளும் ”நான் காமுகியாக மாற, காட்டான் திணறித்தான்போனான்” போன்ற வரிகள் என்னை நிலைகுலைய வைத்தன’ எனச்சொன்னேன்.

மணிக்கு 140கிலோமீட்டர் வேகத்தில் படுக்கையில். என்ன அசுரத்தனம். நாயகிக்கே பெருமைபிடிபடாமல் புளகாங்கிதமடையில் நமக்கென்ன என்று விட்டுவிட்டேன். வடிவேலு சொல்வதைப்போல என் அக்கா சுண்டுனா ரத்தம் வரும் அளவுக்கு கிளிமூக்கு என்று நாயகியே சொல்லும்போது நமக்கென்ன பொறாமை. நான் எழுத்தாளரைத்தான் யோசித்தேன். ஏம்மா படுக்கையழகைச் சொல்றதுக்கு சாண்டிப்புயல் காத்ரீனா புயல்ன்னு சரோஜாதேவி மொழிக்கு கொண்டுவந்திட்டீங்களே என்று நினைத்துக்குறிப்பிட்டேன். (அதை கவிஞர் சாம்ராஜ் கண்டித்தார். சரோஜாதேவி என்பது தடித்தபண்டம் சாரி தடித்தவார்த்தை என்றார். அதுவும் சரிதான்.) ஒட்டுமொத்தமாக அப்படிச்சொல்லமுடியாது. ஓரிரு இடங்களில் அத்தகைய உணர்வு வந்தது என்பதையும் சொன்னேன்.

மேலும் ’அந்தரங்கப்பகுதியை சுத்தமாக வைத்திருத்தலும் நேசிக்கும் துணையை நேசிப்பதேயாகும்’ என்று ஒரு வரி நாவலில் வந்ததையும் நினைவு கூர்ந்தேன். (இப்படியெல்லாம் ஒருவர்கூட நாவலில் வந்த ஒரு நல்ல வரியைச்சொல்லவில்லை!) இறுதிக்காட்சிகளில் நாவலின் நாயகியின் மனம் ஒரு பணக்கார சீமாட்டியின் மேட்டிமைத்தனத்தோடு முடித்திருக்கிறார் நாவலாசிரியர் என்றேன். இனி அவள் அவ்வாறே பயணப்படக்கூடும் என்றேன்.

இறுதியாக பேச வந்தார் கவிஞர் சாம்ராஜ். புத்தகத்தை நிலாவுக்கு அறிமுகப்படுத்தி நிலா நமக்கு அறிமுகப்படுத்தி களேபரத்தை உருவாக்கியவர்.

அனைத்து கருத்துக்களையும் மறுத்தார் அவர். காரணம் ஒன்றே ஒன்றுதான் என்றார். அண்மையில் மலேசியாவில் வல்லினம் போட்டியில் முதற்பரிசு பெற்ற கதையை எழுதியவர் ஒரு பெண் என்றும் அது ஏறக்குறைய இத்தகைய கருப்பொருளைக் கொண்டதால் எதிர்ப்பும் ’அவரைப் பத்திரமாக கொண்டுபோய் வீட்டில் விட்டுவிடுங்கள் என்று நவீன் சொல்லுமளவுக்கு நடந்தது அதிர்ச்சி அளித்தது’ என்று நடப்பியலைச் சொல்லி, பாலியல் சம்பந்தப்பட்ட கதைகளைப் பெண்கள் எழுதுவதே இல்லை. உலகம் அவர்களை அப்படிப் பார்க்க எத்தனித்து அச்சமூட்டுகிறது. அத்தகைய போக்கில் இது நேரிடையான திறந்த வெளிப்பாதை. அதற்காகவே இதைப்பாராட்டலாம் என்றார். எனக்கு அதிர்ச்சி. பா.கண்மணி கணவருடன் பெங்களூருவில் வசித்துவருவதாக போட்டிருக்கிறதைப் படித்துவிட்டேன். கணவனோடு வசித்தாலும் கணவனாக வசித்தாலும் ஆணோ பெண்ணோ எனக்கெதுக்கு அந்த அடையாளம் என்று கேட்க சூம் வரை வந்துவிட்டது வாய். இருந்தாலும் அவருக்கு கண்மணி அவர்களைத் தெரிந்திருக்கலாம் என்பதாலும் திடீரென பெண் எழுத்தாளர்களின்மேல் பாசம் வந்ததாக நான் நினைத்ததாலும் அதைக்கேட்கவில்லை. மேலும் பங்குச்சந்தை செய்திகளே எனக்கு நாவலில் அவசியமில்லை. நான் நாயகியின் அச்சமில்லாத, யாரைப்பற்றியும் கவலையில்லாத, தனக்குப்பிடிட்த்ததைச் செய்யும் உண்மைத்தனத்தை மட்டுமே ரசிக்கிறேன், அதுவே போதும் என்றார்.

நிகழ்ச்சியில் காச்சர் கோச்சர் நாவலின் தமிழ்மொழிபெயர்ப்பாளர் நல்லதம்பி அவர்கள் கலந்துகொண்டார். பெங்களூர் நகரத்தைப் பற்றியும் இந்நாவலின் களம் மற்றும் விதம் பற்றியும் சுவையான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

மொத்தமாக இந்த கலந்துரையாடலில் நான் அறிந்துகொள்ள சிலவிஷயங்கள் நடந்தன.

முதலில் எல்லோரும் ஒழுக்கம் பற்றி பேச ஆசைப்படுகிறார்கள். இரண்டு, எல்லா ஆண்களுக்கும், ஒரு பெண்ணின் திறந்த வாழ்க்கையைப் பார்த்து அசூயை அல்லது அதிர்ச்சி அல்லது காட்டிக்கொள்ளாத அதிர்ச்சி அல்லது ஏதோ ஒரு வெண்ணெய் இருப்பதாக எல்லா ஆண்களும் பெண்களும் தனக்குத்தானே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். மூன்று, ஆண் எழுதினால் நாவல் விமர்சனம் வேறுமாதிரி செய்யவேண்டும் என்றும் பெண் எழுதினால் அதை வேறுமாதிரி விமர்சனம் செய்யலாம் என்றும் பொதுக்கருத்து இருப்பதாக தெரியவருகிறது. நான்காவது, சண்டைபோட ’சூம்’ கருவி சுத்த வேஸ்ட் என்பதாகும்..

’ஒரு சோட்டா கவர்மெண்டுக்காக, ஒரு எழுத்தாளன் நாவல் எழுதுவானா’ என்பார் ஜெயமோகன். நாவல் என்றாலே வாசிக்கும்போது விரியும் வாழ்வுக்கலையும் தரிசனமும் அப்படி. பெண்கள் எழுதினால் இது எதுவும் தேவையில்லை போலிருக்கிறது. குறிப்பாக சாருநிவேதிதா மட்டும் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் எவ்வ்ளவு நன்றாய் இருந்திருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். 

Monday, August 26, 2019

வாசகர் வட்ட ஆண்டு விழா மற்றும் "ஓந்தி" சிறுகதைத்தொகுப்பு வெளியீட்டுவிழா


வெற்றிகரமாக நிறைவு பெற்றது வாசகர் வட்ட ஆண்டு விழா மற்றும் என்னுடைய சிறுகதைத் தொகுப்பு "ஓந்தி" வெளியீட்டுவிழா.

நிகழ்ச்சிக்கு வந்து நாங்கள் நினைத்தபடியே ஆத்மார்த்தமாய் சிறப்பித்தனர் திரு தேவதேவன் மற்றும் திரு பவா செல்லத்துரை அவர்கள்.

வாசகர் வட்ட ஆண்டுவிழா எப்போதும்  மார்ச் மாதத்தில் நடக்கும். இம்முறை சில தவிர்க்க முடியாத காரணங்களால், ஆகஸ்டுமாதத்திற்குத் தள்ளிவைக்க நேரிட்டது. இதற்கிடையில் ஏப்ரல் தமிழ்மொழிமாத விழாவில்கவிதையும் காட்சியும்என்ற ஒரு நிகழ்ச்சியையும் வாசகர் வட்டம் செய்தது. ரோகிணி சிறப்பு விருந்தினராய் வந்தார். ஏறக்குறைய 160 புகைப்படங்களை போட்டிக்கு அனுப்பி அந்நிகழ்வை வெற்றியாக்கினர் மாணவர்கள். அதற்குப்பிறகு இந்நிகழ்ச்சிக்குத் திட்டமிட்டோம்.

 

தேவதேவன் அவர்களை மார்ச் மாதத்தில் தொடர்புகொண்டு அழைத்தோம்கடவுச்சீட்டு இல்லையென்றவுடன்அதற்கு விண்ணப்பிக்க ஏற்பாடுகள் நடந்தனவிஷ்ணுபுர நண்பர்கள் சரவணன்கூடலிங்கம் உள்ளிட்டோர் உறுதுணையாய் இருந்தனர்அவர் வருவது உறுதியானவுடன் இன்னொருவரையும் அழைக்கலாமா என்று யோசனை எழுந்ததுஆண்டுவிழாவின் சிறப்பம்சங்களில் ஒன்று இலக்கியச் சிறப்புரை.  2013ல் ஜெயமோகன் ஆரம்பித்து வைத்த அப்பேருரை வருடாவரும் சிறப்பாக இருக்கும்தேவதேவன் ஒப்பனைகளற்ற அகவயமாய் உரையாடக்கூடியவர்அவர் நீண்ட நேரம் பேசுவது சிரமம் என்றவுடன்சிறப்புரைக்கு இன்னொருவர் என சில எழுத்தாளர்கள் நினைவுக்கு வந்தனர்பேச்சாளர் மட்டும் நோக்கமல்லஎழுத்தாளராகவும் இருக்கவேண்டும்பவாசெல்லத்துரையை அழைக்கலாம் என்ற யோசனை வந்ததுநிதிஆதரவு ஒரு சிறப்பு விருந்தினருக்கே என்ற வகையில்இன்னொருவரின் செலவுகளை நண்பர்கள் பகிர்ந்துகொள்ளலாம் என முடிவுசெய்தோம்இதற்கிடையில் ”U Studios” சார்பில் சிங்கப்பூர் நண்பர்கள் உமா கதிர்பாண்டித்துரைநசீர் மற்றும் என்னுடைய பங்களிப்புகளில்எழுத்தாளர் ’அஷ்வகோஷ்’ குறித்த ஆவணப்படத்தை எடுத்து சென்னையில் வெளியிட்டிருந்தார் பவாவின் புதல்வன் வம்சிஅதைச் சிங்கப்பூரில் வெளியிடலாம் என்றும் யோசனை வந்தது.
 

      

     

  

 



 

சரியாக ஒருமாதத்திற்கு முன்புதான் ஆண்டுவிழா வேலைகள் துவங்கினசித்ரா ரமேஷ் கவிதைப்புத்தகம் வெளியீடு செய்வது குறித்து ஆரம்பித்துவைத்தார்மற்ற புத்தகங்கள் உடனே விழித்து எழுந்தன.

என்னுடைய கதைகளைத்தொகுத்தபின்முன்னுரை வாங்கலாமா வேண்டாமா என்ற யோசனைபத்துப்பதினைந்து நாட்களுக்குள் யாரைத் தொந்தரவுசெய்வது என்ற தவிப்புஒருமுறை இவரை கேட்கலாம்முடியாது என்றால் முன்னுரை இல்லாமலேயே வரட்டும் என்று திரு.சு வேணுகோபால் அவர்களைத் தொடர்புகொண்டேன்சிறந்த படைப்பாளிஇலக்கியத்தை மிக மிக நேர்மையாக அணுகும் மனிதர்களில் ஒருவர்ஒருபக்கம் தினசரி கல்லூரிவேலைகள்மறுபக்கம் நாகர்கோவில் இலக்கியச்சந்திப்பு வேலைகள்நேரிடையாக கைத்தொலைபேசியிலோ கணினியிலோ எழுத வராது அவருக்குஇந்நிலையில்கையால் எழுதி படம் எடுத்து எனக்கு அனுப்பிவைப்பார்அதை நான் தட்டச்சு செய்வேன்பிழைதிருத்தங்கள் செய்வோம்இப்படி இப்புத்தக ஆக்கத்தில் முன்னோடியாய் துணைநின்ற திரு சு.வேணுகோபால் அவர்களுக்கு என் முதல் நன்றி.
எல்லாம் ஒன்றையொன்று நெருங்கிசரியாக பத்துநாட்களுக்குமுன் அப்பாவைப் பார்க்க ஊருக்குச்செல்லவேண்டிய நிலைஎன் வீட்டில் இணைய இணைப்பு எடுக்காதுஎழுந்து எதிரிலிருக்கும் குளக்கரைக்கு வரவேண்டும்கோபியர்கள் குளித்துக்கரையேறாத அதே குளம்தான்இப்போது தண்ணியும் இல்லை, கோபியர்களும் இல்லை. நெட்டுக்காக அங்கு வரவேண்டியிருந்ததுஅங்கிருந்தே வேணுகோபால் சாருக்கு மெசேஜ் அனுப்புவேன்அங்கிருந்தே யாவரும் பதிப்பக ஜீவகரிகாலனுக்கும் பதில் அனுப்புவேன்.

அட்டைப்படத்தை அனுப்பிவைத்தார் ஜீவ கரிகாலன்இதை அப்பாவின் கையால் இவ்வுலகத்திற்கு வெளியிடவேண்டும் என்ற ஆசைஅப்பாவின் உடல்சோர்வுக்கிடையே அவரைக் கொஞ்சம் வெளியே அழைத்துச்செல்லவேண்டும் என்று முன்னமே யோசித்திருந்தேன்அப்பாஅம்மாவின் எழுபதாவது அகவைவிழாவுக்கு சென்றவருடமே திருக்கடையூர் செல்லவேண்டியதுஇம்முறை செல்லலாம் என்று கிளம்பினோம்முதல்நாள் திருக்கடையூர்இரண்டாம் நாள் வேளாங்கண்ணிதிருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயத்தில் வைத்து அந்த அட்டைப்படத்தை அவரை வெளியிடச்சொன்னேன்அபிராமி யும் மனதுக்கு நெருக்கமானவள்மிக மிக மகிழ்வான தருணமது.
 
 
 
 


 


இப்புத்தகத்தை வெளியிட்டயாவரும்பதிப்பக நண்பர்கள் ஜீவ கரிகாலன், கண்ணதாசன் உள்ளிட்டோருக்கு நன்றி. அட்டைப்படம் கோபு ராசுவேலின் அபாரமான உழைப்பு. அவருக்கும் என் நன்றி.

புத்தகத்தைப் பற்றிய நேர்மையான பார்வையாக ஓரிரு பின்னுரைகளை கடந்த என்னுடைய ’5.12pm’, புத்தகத்தில் வைத்திருந்தேன். ’ஓந்தி’க்கு அத்தகைய ஒரு மதிப்பீடாய், சிறந்த வாசகர், விமர்சகர், சிவானந்தம் நீலகண்டன் எழுதித்தந்தார். நிகழ்வில் அவரே புத்தக அறிமுகத்தையும் செய்தார். அவருக்கும் என் மரியாதையும் நன்றியும்.

புத்தக வெளியீட்டிற்கு இருநட்கள்வரை சிங்கப்பூருக்கு புத்தகம் வந்துசேர்வதில் தாமதம். நூலைக்கொண்டு வந்து சேர்க்க உதவினார்கள் என் மனைவியும் அவருடைய நண்பர்களும். அவர்களுக்கு என் நன்றி.

முதற்பிரதிக்குச் சிறப்புச்செய்த Avanta Global நிறுவனர் திரு. புவன் ஈஸ்வரன், அவர் சார்பாய் மேடையில் பெற்றுக்கொண்ட கவிமாலைக் காப்பாளர் அண்ணன் மா.அன்பழகன் ஆகியோருக்கு மிக்க நன்றி.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரு.ஜோதி மாணிக்கவாசகம், திரு அருண் மகிழ்நன் திருமதி ப்ரியா அருண்,  திரு. முகமது அலி, செல்வி கவிதா கரும், திரு இறை மதியழகன்,  தினமலர் ஐயா புருஷோத்தமன், ஆசிரியர் சோமு, சகோதரர் திரு ரவிச்சந்திரன் சோமு, திரு மதியழகன், கங்கைகொண்டான் கழக சகோதரர் புருஷோத்தமன், முனைவர் திருமதி & திரு வெங்கட்  சகோதரர் சிராஜுதீன், முனைவர் ராஜூ சீனிவாசன்,  சகோதரர் செட்டிநாடு கணேஷ், சகோதரர் அன்புச்செல்வன்இதழன், சகோதரர் தியாக ரமேஷ், கல்லூரி நண்பர் ஆனந்த் ஆகியோருக்கு என் அன்பு நன்றி.

சிங்கப்பூர் கவிஞர்கள், இலக்கியநண்பர்கள், தாம் சண்முகம், ராஜூ ரமேஷ், மெ.அழகப்பன், மதிக்குமார், கருணாகரசு, அருள்குமரன், செல்வராசு, கார்த்திக் அருண்குமார், பாலாஜி, தெய்வா, ஜோசப் சேவியர், செந்தில்குமார்- சுபா, கங்கா, ஹேமா, பிரியா கணேசன், அபிராமி சுரேஷ், மோகனப்பிரியா, வித்யா கிருஷ், சரஸ் வேல், சுபாஷினி கலைக்கண்ணன், தமிழ்ச்செல்வி ஆகியோரின் வருகைக்கும் ஆதரவுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.
அன்பு சகோதரர்கள் சுந்தரம், ராவ், சதீஷ், அன்பு மாணவர்கள் மன்னார்குடி கவி, திருவரங்குளம்-மேற்கு தேவன் அன்பு, தனபால், தஞ்சாவூர் மோகன் ஆகியோருக்கும் என் அன்பு நன்றி.

நிகழ்ச்சிக்கு ஆதரவு அளித்த தேசிய கலைகள் மன்றம், திரு அழகியபாண்டியன், செல்வி நிர்மலா உள்ளிட்ட தேசிய நூலகவாரியம், செய்திகளை வெளியிட்ட தமிழ்முரசு நாளிதழ், உதவி நல்கிய புரவலர்கள், நிகழ்வை புகைப்படமாக்கி நிலைத்து நிற்கச்செய்த சகோதரர் வெங்கட் ஆகியோருக்கும் நன்றி.

வாசகர் வட்டத்தின் நிகழ்வு எப்போதும் சிறப்பானதாய் அமைய அதன் இயல்பான ஒருங்கிணைப்பும் இணைந்து நிற்பவர்களின் ஆத்மார்த்தமான பங்களிப்பும் முக்கிய காரணம். தேவதேவன் மற்றும் பவா இந்த நிகழ்வில் கதாநாயகர்களாக, மூத்தோர்களாக தோள்நின்றார்கள். என் புத்தக வெளியீட்டில் உறுதுணையாய் நின்ற வாசகர் வட்ட நண்பர்கள் சித்ரா, ஷா நவாஸ், பாரதி, அழகுநிலா, சிவானந்தம், பாண்டித்துரை போன்றோருக்கு என் அன்பு.

ஒரு புத்தகம் என்றும் நிலைத்து நிற்கப்போகும் ஒரு படைப்பு. அதன் உருவில், வெளியீட்டில், பயணத்தில் இணைந்துநின்ற அத்துணை நல்லோருக்கும் நன்றி. இன்னொரு வெளியீட்டில் சந்திப்போம்.

அன்புடன்
எம்.கே.

Saturday, April 07, 2018

மார்ச் 25, 2017 அன்று நடைபெற்ற கவிதை விமர்சன வாசகர் வட்ட நிகழ்வு

மார்ச் 25 அன்று நடைபெற்ற கவிதை விமர்சன வாசகர் வட்ட நிகழ்வு மறைந்த எழுத்தாளர் அசோகமித்திரன் அவர்களுக்கான மவுன அஞ்சலியுடன் தொடங்கியது. அசோகமித்திரன் சில ஆண்டுகளுக்குமுன் வாசித்த அவருடைய கதையான "சேவை"யை, அவர் மீண்டும் வாசிக்க நாங்கள் கேட்டுக்கொண்டிருந்தோம். பொருட்காட்சியில் தொலைந்துபோகும் குழந்தை ஒன்றை பெற்றோரிடம் ஒப்படைக்கப்போராடும் ஒருவனைப் பற்றியகதை. கதையில் வரும் சிலவரிகளுக்கு நாங்கள் வாய்விட்டுச்சிரிக்க, அவரே அடக்கமுடியாமல் வாசிக்கும்போதே சிரிப்பதைக் கேட்க, அவருக்கான அஞ்சலியிலும் மன எழுச்சியாய் இருந்தது. பிறகு அவருடைய பிரயாணம், இன்று, புலிக்கலைஞன் கதைகள் சார்ந்தும் ஒற்றன், 18வது அட்சக்கோடு நாவல்களையும் சிலாகித்து அடுத்த நிகழ்வுக்கு நகர்ந்தோம். (கணேஷ் பாபு மற்றும் சிவாவின் அஞ்சலி மிகுந்த உள எழுச்சியாய் இருந்தது, அதை அவர்கள் தனிப்பதிவாக பதியவேண்டுகிறேன்.)
Image may contain: 2 people, including Manor Param, people sitting, laptop, screen and indoor
இம்மாத படைப்பாளர் அறிமுகத்தில் கவிஞர் போகன் சங்கர் குறித்து அறிமுகப்படுத்தினார் பாரதி மூர்த்தியப்பன். குன்னிமுத்தாய் மிளிரும் கூந்தலையும் நீர்ச்சொட்டும் சத்தத்தையும் மதனியின் அன்பையும் ஒரு கவிதையில் கண்டு, இவரை வாசிக்க ஆர்வம் கொண்டதாய்ச் சொல்லி, தடித்த கண்ணாடிப்போட்ட பூனை தொகுப்பிலிருந்து சிலகவிதைகள் வாசித்துப்பேசப்பட்டன. கோடைகால வேப்பம்பழம் பற்றிச் சொல்லி, சில அழகியல்பார்வைகளோ படிமமோ போதும், ஒரு கவிஞனை நினைவில் வைத்துக்கொள்ள என்று சொன்னார் கணேஷ்பாபு.
சூடான கவிதை விமர்சனங்கள் அடுத்து வந்தன. (விரிவான விமர்சனங்களை வாசகர் வட்ட இணையப்பக்கத்தில் ஒளிக்காட்சியாகக் காணலாம்.)
லதாவின் "யாருக்கும் இல்லாத பாலையில் 'மாட்டிக்கொண்ட கர்ணன்" (ஈழக்கவிதை) பற்றிய ஒரு கவிதையைப் படித்து மனதைக்கனக்கச்செய்தார் ஷா நவாஸ்.
ஷானவாஸின் 'சுவை பொருட்டன்று' எப்படி வாழ்வின் அழகியலைச் சொல்கிறது என்பதை விளக்கி அது இன்னும் ஆழமாக எழுதப்பட்டிருக்கலாம் என்று சொன்னார் பாண்டித்துரை.
Image may contain: 2 people, people sitting, table and indoor
நவீன கவிதையின் மூன்று வடிவப்பிரிவுகளைச் சொல்லி எம்.கே.குமாரின் 'சூரியன் ஒளிந்தணையும் பெண்' எவ்வாறு ஆழமான வரிகளும் எளிமையான வரிகளும் கொண்டு கவிதைஅழகியல், பாடுபொருள் ஆகியவற்றில் சிறந்துவிளங்குகின்றன என்பதை 'பாடு, புன்னகை, மிருகவதை' போன்ற கவிதைகளின் மூலம் விமர்சித்த கணேஷ்பாபு, 'நிலவு தோற்ற என் காதலியின் முகம்' போன்ற காதல் கவிதைகளை எழுத குமார் தேவையில்லை, நிறையப்பேர் இருக்கிறார்கள் என்றும் சொன்னார்.
Image may contain: 1 person, sitting and indoor
தான் கவிதையின் புதுவாசகன் என்று மாதங்கியின் 'மலைகளின் பறத்தல்' கவிதைத்தொகுப்பு பற்றிப்பேசினார் சிவாநந்தம். பிலிப்பினோ காதலியின் முன்னால் முள்கரண்டியில் சாப்பிட எத்தனிக்கும் இந்தியக்காதலர் ஒருவரைப்பற்றிய மாதங்கியின் கவிதையை நினைவுகூர்ந்தார் ஷாநவாஸ்.
Image may contain: 5 people, including Kalimuthu Ayyappan K, Sivanantham Neelakandan, Manor Param and Mohamed Kassim Shanavas, people smiling, people standing, beard and indoor
சித்துராஜின் ' காற்றாய் கடந்தாய்' கவிதைகளின் விதவிதமான பாடுபொருள், செப்டம்பர் மத்தியானம், நத்தையின் காமம் போன்ற திரும்பத்திரும்ப வரும் வார்த்தைகள், சவத்துக்கும் சேர்த்து சாப்பிட்டாகிவிட்டது, சதை சாப்பிடும் சாலை போன்ற சிறந்த இறுதிவரிகள் என விமர்சித்த எம்.கே.குமார், சில கவிதைகள் வாசகனுக்காக எழுதப்பட்டவை போலில்லை, வாசித்துவிட்டு மெலேநகர முடியாமல் முட்டுச்சந்தில் நிற்பதைப்போலிருக்கிறது என்றும் சொன்னார்.
பாண்டித்துரையின் ' அவநிதாவின் சொல்' எவ்வாறு ஒரு புதிய பாடுபொருளாக அமைந்திருக்கிறது என்று சொன்ன பாரதி, அந்த பாடுபொருளே இங்கும் வந்திருக்கிறது என்றும் சொல்லி, கலகலப்பாக்கினார். பாண்டித்துரையின் மூன்று வயது மகள் அவநிதா தன் தாய் மற்றும் அத்தையோடு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். 'அவநிதாவின் சிரிப்பில் அப்பா இருப்பதாய்ச்சொல்லி' வரும் ஒரு கவிதையை வாசித்துக் கண்கலங்கினார் பாரதி.
Image may contain: 5 people, including Kalimuthu Ayyappan K, Manor Param and Mohamed Kassim Shanavas, people smiling, people standing and indoor
எம்.சேகரின் 'கைவிளக்குக் கடவுள்' பற்றிய விமர்சனத்தை சித்ரா எழுதி, ஷா நிகழ்ச்சியில் வாசித்தார்.
விமர்சனத்துக்குத் தேர்ந்தெடுத்த தொகுப்புகளிலிருந்து தனக்குப்பிடித்த கவிதைகளைப் பகிர்ந்துகொண்டார் அழகுநிலா.
தேர்ந்தெடுக்கப்பட்ட விமர்சனங்களுக்கு சிராங்கூன் டைம்ஸ் புத்தக பரிசுகளை வழங்கினார் மூத்த வாசகர் அம்மா மனோரம் அவர்கள்.
Image may contain: Kalimuthu Ayyappan K, Manor Param, Bharathi Moorthiappan and Mohamed Kassim Shanavas, people smiling, people standing and indoor
அசோகமித்திரனின் சிரிப்பு, கவிதையின் அகரசனை கொண்ட ஒத்திசைவான மனங்கள் என மனதுக்கு மிகநெருக்கமான மாலையாய்க் கழிந்தன அத்தருணங்கள். கலந்துகொண்ட சத்யா உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
எம்.கே.குமார்.
Image may contain: 10 people, including Pandiidurai Neethipaandi, Manor Param, Mohamed Kassim Shanavas and Bharathi Moorthiappan, people smiling, indoor

Search This Blog