Sunday, December 16, 2007
காகிதமலர்கள் நாவல் - மூன்றாவது கோணம்
பாக்கியம் மாமி:
ஆனாலும் இந்த மிஸஸ் பசுபதிக்கு இவ்வளவு ஆகாதாக்கும். பத்மினி இந்தக்காலத்தவ, அவ ஆடுறான்னு இவாளும் ஆடலாமா? பத்மினிக்கு போட்டியா வாறா, மனசாலே நாமளும் அழகிதான்னும் நமக்கும் நாலாம்பளையை பாக்கவைக்கிற, கவனிக்கவைக்கிற சொரூபங்கள் இருக்குறதா மனசாலே நெனச்சுண்டு இப்படிக் காலம் போகுற போக்குல சுத்துனா கலிகாலம் ஆகாம என்னதான் ஆகும்? பத்துப்பேரு வந்தாலும் ஹிஹின்னு பேசிச் சமாளிச்சுண்டு போற இக்காலத்து பொண்ணுக்குப் போட்டியாய் பத்து ஆம்பளைங்களை இவளும் சமாளிக்க இறங்குனா, முடியுமா? அந்தளவுக்கு அவாளுக்கு மனதைர்யம் இருக்கா சொல்லுங்கோ? ஒரு ஆம்பிளை ரெண்டு ஆம்பிளை சரி; இத்தனை ஆம்பிளையைப் பாத்தபின்னும் இத்தனை வயசு ஆனபின்னும் மனசுல ஒரு பக்குவம் வராம இருபத்தஞ்சாட்டம் மந்திரியைப்பாத்ததும் மோகவெறி வருமோ சொல்லுங்கோ?
பாருங்கன்னா, பதினாறு வயசுப்பொண்ணாட்டம், இன்ஃபேச்சுவேஷன்ல மாட்டிண்டவாளாட்டம், மந்திரி ஏமாத்திட்டாருன்னு மண்டையப் போட்டுக் குழப்பிண்டு படக்குன்னு போயி மோதிண்டா! பாவம், இந்த ஆதவன்அம்பியும் என்னதான் பண்ணுவான்? இப்படிக்குழப்பிண்ட, வாழ்க்கையைப் பொசுக்கிண்ட பொண் ஜென்மத்தையெல்லாம் படக்குன்னு கொன்னுடவேண்டும் இல்லாட்டி மனநலகாப்பகத்தை முன்புறம் காட்டி கதையை முடிச்சுக்கவேண்டும். வேறு என்னதான் எங்க பொறப்புக்கெல்லாம்? அந்த சண்டாளன் பசுபதி ஆரம்பிச்சு வைச்சான். இந்த ஆதவன் அம்பி முடிச்சுவைச்சான். ம்க்கும்!
பத்மினியப் பாத்து பொறாமப்பட்டு பழமைக்குள்ளேயும் புதுமைக்குள்ளேயும் மாட்டிண்டு அவ படுறத விடுங்கன்னா, அவாளும் பொம்பளதானே, தாய்தானேன்னா, விசுவம் தன்மேல பாசம் வைக்கலேன்னு பொலம்பித்திரியுறா, செல்லப்பா மேல இருக்கும் பாசத்தை வெளிப்படுத்த வழியில்லாமயும் விட்டேற்றியா வளந்துட்ட பத்ரி மேல பாசத்தை எப்படிக் காட்டுறதுன்னா தெரியாமயும் தடுமாறுறா, தேவையின்னா வாறவன்னா இருக்கான் புருஷன் (யாருடைய தேவைக்கும்!), நாடகத்துல நடிக்கிறதுல ஒரு நிம்மதி, அங்கேயும் ஆம்பிளைங்க தானெ, அவாளும் எல்லாரும் மாதிரிதானே! அட, புருஷன் மட்டுமே பாக்கணுன்னாதான் எந்தப்பொண்ணும் வீட்டுக்குள்ளே அழகா மேக்கப் போட்டுட்டு உக்காந்துடலாமேன்னா, வெளியில வாறபோது எதுக்காக அழகா வாறோம்? நாலு பேரோட வெளிப்படையான மதிப்பீட்டுக்கு அர்த்தம் சொல்லத்தானேன்னா. அந்த நாலு பேரோட மதிப்பீடும் புதுமையோடு நம்மைப் பொருத்திப்பாத்தா எப்படித்தான் நம்ம தரத்தை ஏத்திக்கிறது சொல்லுங்கன்னா. மிஸஸ் பசுபதி, இந்த மதிப்பீட்டை வேற மாதிரி நெனச்சிண்டு செயலாக்கிண்டா, பாவம்!
விசுவத்தின் அப்பா:
ஆக்சுவல்லி.... உங்களையும் என்னையும் போல பசுபதியும் நல்லவர்தான் சார். என்ன, சான்ஸ் கெடைக்காதவரைக்கும் நாம நல்லவனா இருக்கோம். சான்ஸ் கெடச்சிதுன்னா நாமளும் சறுக்கிடுறோம். எங்காவது இருக்குற ஒண்ணுரெண்டைப் பாக்காதீங்க. நம்ம ஐயரை எடுத்துக்குங்க, மனுஷனுடைய போக்கு சுத்தமா பசுபதிக்குப் பிடிக்காது, தன்னளவில அவர் ரொம்ப நல்லவர்ன்னு நெனச்சிண்டு வாழ்றார், ஆனா எதுவரைக்கும் வாழ்றார்? சான்ஸ் கெடைக்கிறவரைக்கும்.! சத்தியமாச் சொல்லுறேன் சார், பசுபதிகூடவே அவரும் ஸ்டெனோவா சேர்ந்திருந்தா, அய்யரு பசுபதியை விட மோசமா இருந்திருப்பாருன்னு நான் நெனைக்கிறேன். இந்நேரம் மந்திரி லிஸ்ட்ல கூட அவரு பேரு இருந்திருக்குமோ என்னவோ!
வாழ்க்கையோட கடைசிவரைக்கும் எதுதான் சார் நம்மள ஓட்டிட்டுப்போவுது? புரோகிரஸ், வளர்ச்சி, இன்பமயமான வாழ்க்கை, உயர்ந்த பதவி, நல்ல குடும்பம் இப்படி எதுன்னு எடுத்துண்டாலும் பணம் முக்கியம் சார். நம்மள மாதிரி ஒரு பிற்போக்கான சமூகத்துல இருந்துகிட்டு முற்போக்கான வாழ்க்கைக்கு வரணுமுன்னா நம்ம மனைவிங்களையும் அதுக்கு கொண்டுவரணுமுன்னு அவர் மனைவி மனைவி பாக்கியத்தைக் கொண்டுவந்தார், பாருங்க, சீறுகெட்ட சமுதாயத்துல ஒரு எஸ்.கே, ஒரு மந்திரின்னு எல்லாரும் ஒரு அங்கம் சார். ஸ்டெனோவா அவர் வேலையை அவங்க பாத்துருக்கலாம்; பாராட்டியிருக்கலாம், கூட்டத்துக்கு வந்த அவரு பொண்டாட்டிய பாத்து அவரைப் பாராட்டினா பசுபதி என்ன சார் செய்யமுடியும்? பாக்கியமும் பளார்ன்னு ரெண்டு அறை அறைஞ்சி வாழ்க்கையோட ஸ்ருதி எதுன்னு பசுபதிக்குக் காட்டியிருக்கலாம். அவ என்ன பண்ணினா, வாழ்க்கையோட அடிப்படை மூலக்கூறுகள் பெண்ணழகோட இணைஞ்சதுன்னு முடிவு பண்ணிட்டா, எப்படி பணம் பதவியோட அது இணைஞ்சதுன்னு பசுபதி முடிவு பண்ணினமாதிரி!
நீங்க சொல்லுங்க சார், இங்க உங்க முன்னாடி உக்காந்திருக்க எத்தனை பேரை உங்களுக்குப்பிடிக்கிது? அதோ அவரைப் பிடிக்குமா உங்களுக்கு? எது சார் அதைத் தீர்மானிக்கிது? அந்தாளு கருப்புச்சட்டை போட்டுவந்ததாலே பிடிக்காதுப் போயிருக்கலாம், அட ஒண்ணும் வேண்டாம். நீங்க பாக்கும்போது ஒரு இஞ்ச் விரியிற சிரிப்புக்குப்பதிலா அரை இஞ்ச் விரிஞ்சதாலே 'மூடி'ன்னு அவரை உங்களுக்குப் பிடிக்காம போகலாம். ஆனா ஒண்ணு சார், ஆதவன் சொன்னதுமாதிரி, ஒரு மாநிலத்தோட, மக்களோட பிரச்சனைக்குத்தீர்வு ஒரு ஸ்டேனோவால மாறுது பாருங்க. இதுதான் சார் வாழ்க்கை! அந்த ஸ்டேனோக்கள் நல்லவரா இருந்தா போதும், இந்தியா மட்டுமில்லை எந்த நாடும் முன்னுக்கு வந்துடலாம்.
விசுவத்தின் மனைவி:
யு பெலீவ் ஆர் வோண்ட் பெலீவ் ஐ டோண்ட் நோ, ஆல் மென் ஆர் ஸ்டுபிட்; அசடுங்க! நிஜமாச் சொல்லுறேன். அதிலேயும் பத்மினியின் கணவர்...விசுவம்! அய்யோ..! அவர்கூடல்லாம் வாழவேண்டியிருக்கேனு ரொம்ப நாள் அவ நொந்திருப்பாள்ன்னு நெனைக்கிறேன்! ஆனா சில நேரங்கள்லெ பாருங்க, இந்தமாதிரி அசடுங்களாலெ சில நன்மைகள் இருக்கும். நமக்கு வேண்டியதை நாம ஈஸியா அடஞ்சிக்கலாம்.
யு மைட் ஹேவ் நோட்டீஸ்டு, பத்மினியும் விசுவமும் காரசாரமா விவாதம் பண்னிண்டு இருப்பா ஒரு கட்டத்துல, எந்த ஹஸ்பெண்ட் - ஒய்ப்ப்புக்கும் இந்த ஆர்க்யூமெண்ட் வந்தப்பறம் சேர்ந்து படுக்குறது பேசுறது ஏன் வாழறது கூட கஷ்டமாகலாம், ஆனா அவங்க சேர்ந்துக்குறாங்க, ஏன்? ரெண்டு பேருக்கும் தெரியுது, இந்த அசடைவிட்டா எந்த அசடை நாம புடிக்கிறதுன்னு அவ யோசிக்கிறா! இப்போது இருக்குற அரைகுறை நிம்மதியும் போகனுமான்னு அவன் நெனைக்கிறான். அப்புறம் எப்படி பிரிவாங்க. என்ன, அவங்களுக்குள்லே இருக்குற அந்நியோன்யமும் அப்பப்போ மாறி மாறி வந்துபோகும்; அவ்வள்வுதான்! அதானே மிஸ்டர் இந்த இடியட் குடும்ப வாழ்க்கைக்கி ஆதாரம்?! அதை வெச்சித்தானே ஏகப்பட்ட திருமண வாழ்க்கைங்க ஓடிட்டு இருக்கு? கரெக்ட் ஒர் னோட்?
விசுவத்தோட அக்கப்போர் தாங்க முடியலேன்னு பாத்தா, அவங்க அம்மா பாக்கியம்மாமி அய்யோ..! ஏந்தான் இந்த கிழவிக்கு இப்படிப்புத்தி போகுதோ தெரியலை! ஒரு ஆம்பளையோட பார்வையை தன்னை நோக்கி அடைய வைக்கிறதுதுதான் பொண்ணோட அழகுக்கும் / அலங்காரத்திற்கும் வெற்றின்னு நெனச்சிக்கலாம். பத்மினிகூட பலசமயங்கள்லெ பலபார்ட்டிகள்லெ அந்தமாதிரி நடந்திருப்பா, அந்த மெடிக்கல் ரெப்புகூட பேசினது மாதிரி! ஆனா இந்தமாமியார் இருக்காங்களெ அவங்க, பத்மினிகூட போட்டிபோடுறதா நெனச்சிண்டு அந்த ஆம்பளையை தன்னை அடைய வைக்கிறதுதான் தன்னோட வெற்றின்னு நெனச்சிட்டாளே பாவம்! எல்லா ஆம்பளைங்களும் கோகுலகண்ணனா என்ன?
பாக்கவைக்கிறது ரிசல்டா இருக்கிறதை மாத்தி படுக்கைக்கு வாற வைக்கிறதை அவங்க வெற்றியின்னு நெனச்சி ஏமாந்திட்டாங்க, அதுக்கு அனுசரனையா எரியுற தீபத்துக்கு எண்ணெய் ஊத்திட்டார் நம்ம பசுபதி அங்கிள்! நல்லவேளை, பத்மினியும் அவர்கூட ஏதாவது மந்திரி மீட்டிங்குப்போகலை, போயிருந்தால் அவ பேசுற தத்துவமெல்லாம் இப்போ எடுபட்டிருக்குமோ என்னவோ?!
சமத்துன்னா, காகிதமலர்கள்லெ எனக்குத்தெரிஞ்சு யாரும் இல்லே. படிக்கிறவங்கள்ளெ(?!) வேணுன்னா யாராச்சும் இருக்கலாம். பத்ரி ஒரு யூஸ்லெஸ். லைஃப் ஜாலியா போய்க்கிட்டு இருக்கும்போது மாணவர் அணி, கட்சி, போராட்டம்! கடைசில எல்லாரையும் விட பெரிய போக்கிரியா அரசியல்ல வந்து நிக்கலாம் அவன். அல்லது வெட்டிக்கொல்லப்படலாம்! யார் கண்டது?
செல்லப்பா...chikky fellow. ஒரு தைர்யம் ம்ஹூம், மண்ணு! வெறுங்கையாலே உலகத்தைப்பிடிக்க முடியுமா? யாராவது ஒரு பொண்ணு வந்து மாரு காட்டி மயக்கி கல்யாணம் பண்ணவெச்சி முதுகுல ரெண்டு போட்ட புத்தி வரும்..இவன மாதிரி கேசுங்கள்லாம் இப்படித்தான் மாறும். இல்லாட்டி வானத்தைப் பிடிக்கிறேன், பூனையைப்பிடிக்கிறேன்னுட்டு அலையும். இவனோட அம்மாவா நான் இருந்தா இந்நேரம் படக்குன்னு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வெச்சி சுகமான சுமையை போட்டு மடக்கி வெச்சிருப்பேன்.
மெடிக்கல் ரெப் - நான் சென்ஸ். ரெண்டு மூணு காஸ்ட்லி ஹோட்டலுக்குக் கூட்டிட்டுப்போயி பில்ல பல ஆயிரத்துக்கு எகிறவிட்டா அடுத்த தடவை அப்பீட்டாயிடுவான். கொஞ்சம் வெவரம்ன்னா, கணேசன். யா.... ஐ திங் பத்மினி வில் லைக் தேட் ஃபெல்லோ.
செல்லப்பாவின் அண்ணன்:
இந்த விசுவத்தைப்பத்தி கொஞ்சம் பேசலாம் இப்போ. இவனைபாக்கும்போது சார், ரெண்டு விஷயம் தான் ஞாபகத்து வருது, ஒண்ணு 'ஜானி' படத்து ரஜினி வசனம், வாழ்க்கையில ஒன்னைவிட ஒன்னு எப்பவும் பெட்டராத்தான் தெரியும். ரெண்டு, கமல் பாடும் பாட்டு வாழ்வே மாயம்..இந்த வாழ்வே மாயம்!
பத்மினிய முதன்முதலா பாத்தபோது வந்த அந்த ஒரு நிமிடநெகிழ்ச்சி அவன் நண்பன் உண்ணி 'ஒய்ஃபைப்' பாக்கும்போது வாறதாம். ஹம்பக். அந்த நிமிடம் ஏன் தப்பானது? இந்த நிமிடம் எப்படி சரியாகும், சொல்லத்தெரியுமா இவனுக்கு?
புவியின் அறிவியலை முழுக்க முழுக்க புரிந்துகொண்ட இவன் பெண்களையும் அப்படிப்புரிந்துகொள்ள முயல்கிறானா? பெண்ணையும் பூமியையும் ஒப்பிடுவது சரி. பருவகால மாற்றத்தை புரிந்துகொள்ளும் வரையறுக்க முயலும் இவனுக்கு பத்மினியின் மனதில் என்ன இருக்கிறது என்பதைச் சொல்ல முடியுமா? பத்மினி மட்டுமல்ல; எந்தப்பெண்ணையும் அப்படிச் சொல்லமுடியுமா? பத்மினி, மெடிக்கல் ரெப்பிடம் அந்நியோன்யமாய் பேசினபிறகே ஏதோ கொஞ்சம் வாழ்க்கைப்பக்கம் வருகிறான். பத்மினிக்கு இவனைப்பற்றித் தெளிவாகத் தெரிந்திருக்கிறது, இந்தமாதிரி அசடுகளை இப்படித்தான் வழிக்கு வரவைக்கவேண்டும் என்று. அதான் தனிவீடு! ம்..தூக்கு தண்ணீரை! கழுவு பாத்திரத்தை!
கிரீன்ஹவுஸ் எஃபெக்டால், மரம் வெட்டுதலால், குளங்களைப் பாழ்படுத்துவதால், பிளாஸ்டிக்குகளை அதிகமாய்ப் பயன்படுத்தவதால், ஆழமாய்த்தோண்டி எண்ணெயையும் தண்ணீரையும் நிலக்கரியையும் எடுப்பதால் புவிக்கு வரப்போகும் ஆபத்தை பத்மினி போன்ற பெண்ணுடன் அல்லது ஒரு பெண்ணுடன்(?!) வாழ முனைந்தவன் ஆராய முயலலாமா? இல்லை கீழ்த்தர சுயலாபங்கள் நிறைந்த அரசியல் விளையாடும் இந்தியப்பதவி ஒன்றில் நேர்மையை எதிர்பார்க்கலாமா? இவனது தாத்தா திரும்பி எழுந்து வந்தால் ஏதாவது நடக்கும். ம்க்கூம்!
பத்ரியின் நடு அண்ணன்:
இந்த செல்லப்பா இருக்கானே சார், கொஞ்சம் நல்லவன்சார். என்ன..எந்த நேரம் பாத்தாலும் ஒரே ஃபீலீங்க்ஸ். செக்ஸூவல் ஃபீலிங்க்ஸ்! இருக்கட்டுமே சார், ஃபீலீங்க்ஸ் இல்லாம யாருதான் இருக்கா? இவனையெல்லாம் கவிதை எழுத விடணும் சார். என்ன சொல்றீங்க. இந்த மாதிரி அணிலோடவும் புல்லோடவும் மரத்தோடவும் ரசனையா கெடக்குற ஒருத்தன் என்னடா பொண்னோட ஒடம்பு மேல படுற அந்த சொகத்துக்கே ஏகப்பட்ட பஸ் ஏறி அலையுறான்னு நாம நெனைக்கக்கூடாது சார். அது ஒரு ரசனை! அளவுக்கு மீறிய ரசனை! அந்த ரசனையின் வேகம்; இன்னும் அதிகமானா வெறி!
படிப்பை விட்டுடா என் செல்லம்ன்னு சொல்லி (மனுஷன் எவ்வளவு சந்தோசப்படுவான்!), நல்ல ஒரு அழகியாப் பாத்து இவனுக்கு கல்யாணம் பண்ணிவெச்சிட்டீங்கன்னு வெச்சீங்க, நாலு வருஷத்து ரெண்டு கவிதைப்புத்தகம் அல்லது மூணு புள்ளையப்பெத்துடுவான். கூட, வாற பொண்ணும் நம்ம தாரா மாதிரி வெவெரமா இருந்ததுன்னு வெச்சுக்குங்க, ஏதாவது வேலயைப்புடிச்சு முன்னேறிடுவான் சார். செக்ஸூவல் ஃபீலிங்க்ஸ் அதிகமானா தப்பா நெனக்கக்கூடாது சார். அததுக்கு நாட்ல மனுஷன் மாத்திரயெல்லாம் வாங்கிச்சாப்பாடுறான் நாம என்னடான்னா? சார், செல்லப்பாவோட தாத்தா இருந்தாருன்னா கண்டிப்பா இவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணிவெச்சிருப்பாரு. சீக்கிரமா கல்யாணம் பண்ணுறதும் நல்லதுதானே சார். புத்தகத்தைப் படிச்சு வாழ்க்கையைப் புரிஞ்சுக்குறது ஒரு வகை! பொண்ணைப்படிச்சு வாழ்வைப் புரிஞ்சுக்கிறது (புரிஞ்சும் என்ன புண்ணியம்!) இன்னொரு வகை! செல்லப்பாவுக்கு ரெண்டாவது நல்லா ஒர்க்அவுட் ஆகும் சார்.
எல்லா இடத்திலேயும் ஏதாவது அன்பையோ அரவணைப்பையோ எதிர்பாக்குறோம், அது இல்லாட்டி ஏமாத்தமா வாறது, எல்லாரும் ஏமாத்த வந்தவங்கன்னு தோணுறது. கொஞ்சம் பக்குவப்பட்டா போதும். அனுசரனையா பேசுறார்ன்னு உக்காந்து பேசுனா காலுக்கெடையில் கையை விட்டுத் தடவுறாரு அந்த குண்டு மனுஷன். இந்த ஸ்ரீதர் இன்னொரு செல்லப்பா. என்னன்னா கொஞ்சம் வெவரமான செல்லப்பா! எல்லோருக்கும் ஏதாவது தேவை. அதை நம்ம தேவையோட ஒத்தி தேடிக்கிறாங்க! நாம அதை அடையமுடியாம ஏமாந்து நிக்கிறோம், அவங்களெல்லாம் அதை எடுத்துட்டுபோனப் பின்னால!
செல்லப்பாவின் தம்பி:
இப்போ பத்ரியைப் பத்தி பேசுவோம் மிஸ்டர். 'அம்மா ஒரு இடியட் - அப்பா ஒரு ஜெண்டில்மேன். அண்ணன் ஒருத்தன் படிச்ச கிறுக்கு இன்னொருத்தன் படிக்காத கிறுக்கு. யாருக்காவது வாழ்க்கையோட நிஜம் புரியுதா? அம்மா - நாடகம், பார்ட்டி! விசுவம் - புவியியல், பொண்டாட்டி பத்மினி, செல்லப்பா-செக்ஸ் படத்து தியேட்டர் இல்லை எக்ஸாம், அப்பா-பதவி அன் வேலை (அட்லீஸ்ட் ஹி இஸ் ஓகே!).
ஒரு காலேஜ் இருக்கு, அங்க பிராப்ளம்ஸ் இருக்கு, ஒரு கட்சி தலையிடுது, மாணவர்களோட எதிர்காலம் தடுமாறுது! என்ன செய்யலாம் என்ன இதில சாதிக்கலாம்? யாருக்காவது அக்கறை! கணேசன் நல்லா பேசுறான். இவனையே பேச வெச்சுக்கலாம். கணேசன் சொன்னதுமாதிரி நாமளே தலைவராயிடவேண்டியதுதான். அப்பா இருப்பார் ஃபுல் சப்போர்ட்டுக்கு. ஆளுங்கட்சி மந்திரி வேற அப்பாவுக்கு குளோஸ்.'
பாத்தீங்களா மிஸ்டர், பத்ரியும் மிஸ்டர் பசுபதி மாதிரி ஒருகட்டத்துல ஆயிடுவான்னு தோன்றது. அவன் அப்பாவெ ரொம்ப சார்ந்திருக்கான்; அப்பா அரசியலையும் அதன் சூழ்ச்சிச்சுழற்சியையும் சார்ந்திருக்கார்; அதே சூழ்ச்சிதான் பத்ரியையும் சூழ்ந்திருக்கு; இப்போ என்ன ஆகும்? இன்னொரு மிஸ்டர் பசுபதி இல்லாட்டி மரத்தில் மோதும் மிஸஸ் பசுபதி.
காகிதமலர்கள் டைட்டில் பேசுகிறது:
அண்ணே, எனக்கெதுக்குன்னே காகிதமலர்கள்ன்னு பேரு வெச்சிருக்காங்கெ? வாசம் இல்லாத மலர்கள்ன்னா? நாமளும் சிறந்து விளங்குற உயர்ந்த மனிதர்கள்ன்னு சில பேரு நெனைச்சிக்கிற மாதிரி இக்கதையில் வாற மலர்களும் நெனைக்கிதுனா? என்னவோ இருந்துட்டுப் போகட்டும்ண்ணே, மனிதர்கள்ன்னே தலைப்பு வெச்சிருக்கலாம். இந்தியாவில மட்டுமான்னே இப்படி, 12,756.3 கி.மீட்டரை விட்டமாகக்கொண்ட இந்தப் பூமியில எங்கேயும் இப்படித்தானேன்னெ மனுசங்கெ இருக்காய்ங்கெ.
ஆளுக்கொரு தேவை, அதற்கொரு முகம், அது அசிங்கமானதுன்னா அதுக்கொரு முகமூடி! கண்டதுக்கெல்லாம் அலையிறாங்கண்ணே. காசுபணம், காமம், அங்கீகாரம், பீடம், அலங்காரம், பாசம், பந்தம் எல்லாத்துக்கும் பலமுகமா அலையிறாய்ங்கண்ணே! ஒருமுகத்தை மறைக்க இன்னொரு முகம்! அந்த முகத்தை மறைக்க அடுத்த இடத்தில் இன்னொரு முகம், அதுவும் சரிவரவில்லையென்றால் ஓரு அழகான முகமூடி. முகமூடின்னு பேரு வெச்சிருக்கலாமோ நாவலுக்கு?
சிறந்த முகமூடிக்காரர்ன்னு யாருக்குண்ணே பட்டம் கொடுக்கலாம்? மிஸ்டர் பசுபதி? பாவம்ணே அவரு! பல இடங்கள்லே அவரு முகமூடி கிழிஞ்சி தொங்கி அசிங்கப்படுறார்ணே. மிஸஸ் பசுபதி? கொடுக்கலாம்ணே, ஆனாலும் அந்தம்மாவுக்கே தெரிஞ்சும் தெரியாம இருக்குண்ணே அது முகமூடின்னு. அநியாயமா செத்துப்போயிட்டதாலே 'போஸ்துமஸ் அவார்ட்' வேண்டாம் ண்ணே. பத்மினிக்கு..அருமையான சாய்ஸ்ண்ணே. ஆனா பத்மினிக்கி கொடுத்தா நாட்டுல இருக்க எல்லா பொண்ணுங்களுக்கும் கொடுக்கணுமுண்ணே, கட்டுபடியாகாது. விசுவம்...இல்லேண்ணெ, இந்தாளுக்கு முகமூடி போட்டாலும் வேலைக்கு ஆவாது. செல்லப்பா..சிறந்த ஏமாளின்னு வேணா பட்டம் கொடுக்கலாம்ணே! பத்ரி...சிறந்த அப்பாவின்னு பட்டம் கொடுக்கலாம்ணே!
டென்ஷன் ஆகாதீங்கண்ணே, இன்னும் எத்தனை பேர் இருக்காங்க? செல்லப்பாவின் சைட்டு, ஸ்ரீதர், குண்டு ஆள், ஐயர், ஐயரோட எடுபிடி சிங், கிருஷ்ணன், எஸ்.கே, மந்திரி, சமையல்காரர் நரசிம்மையர், பத்திரிகையாசிரியர், தாத்தாவின் வேலையாள், ஜோசியர், பத்ரியின் சைட்டு, ஆங்..முக்கியமான ஆள் கணேசன்...அவனோட அம்மா, தங்கச்சி, அப்பா அந்த குடும்பம்....
ம்ம். இந்தாங்கண்ணே...மூன்றாம் பரிசு.. ஸ்ரீதருக்கு கொடுக்கலாம்ண்ணே... படவா. பெரிய ஆளுண்ணே அவன். செல்லப்பாவிற்கு நல்ல முகமூடி போடும் அவன், செல்லப்பா அம்மாவுக்கொரு முகமூடி போடுறான் பாருங்க. அது அசத்தல்ண்ணே. அப்படியே அவன் மன்னிக்கும்.
இரண்டாம் பரிசு..சில காட்சிகள்லெ வந்து போனாலும் பத்ரியோட கேர்ள்ஃபிரெண்டுக்குண்ணே! நடு ரோட்ல இறங்கி மவனேன்னு அவனை அல்லாட விட்டு படக்குன்னு அவனைப்பாத்து சிரிச்சி மயக்குறா பாருங்க...இது சூப்பருண்ணே!
முதல்பரிசு ஐயருக்கு கொடுக்கலாம்ன்னா, அவருக்கு வயசாயிருச்சுண்ணே! அதனாலே வேற யாருக்குன்னு எப்பவோ முடிவு பண்ணியாச்சுண்ணே...வீட்டுக்குள்ளேயும் காலேஜ்லேயும் நண்பர்கள்ட்டேயும் என எல்லா இடத்திலும் முகமூடியோடு அலையும் திரு. கணேசன்! பெரிய ஆளுண்ணே அவரு!
அன்பன்
யெம்.கே.குமார்.
நன்றி: வாசகர் வட்டம், சிங்கப்பூர்.
Friday, November 16, 2007
சிங்கப்பூரில் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் தொடக்க நிகழ்வுகள் பற்றிய கலந்துரையாடல்!
சிங்கப்பூர், நவம்பர் 11, சிங்கப்பூரின் சையத் ஆல்வி ரோட்டில் இருக்கும் ஆனந்தபவன் ரெஸ்டாரண்டின் மாடியில் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் தொடக்கநிகழ்வுகள் பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது. கூட்டத்தில் சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். கூட்டத்தை சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் செயலாளர் சுப.அருணாச்சலம் நெறிப்படுத்தினார்.
மேடையில் அமர்ந்திருந்த மூவர் - புகழ்பெற்ற வழக்கறிஞர் திரு.கலாமோகன், முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் நிறுவனர் திரு.முஸ்தபா மற்றும் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் திரு.ஆண்டியப்பன்.
முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் நிறுவனரை வரவேற்புரை வழங்க அழைத்தார் திரு. அருணாச்சலம். தனது நீண்ட நாள் கனவை மிகுந்த அக்கறையோடு சட்டரீதியாக வடிவமைத்துத் தந்த கலாமோகன் அவர்களுக்கும் பல்வேறு உதவிகளை வழங்கிய திரு.ஆண்டியப்பன் அவர்களுக்கும் நன்றி சொன்ன திரு.முஸ்தபா அவர்கள், இவைகளைப்பற்றி பேசுமாறு அவர்களை வேண்டிவிட்டு, இந்த அறக்கட்டளை சிறப்பாகச் செயல்பட அனைவரது ஆதரவையும் வேண்டி அமர்ந்தார்.
வழக்குரைஞர் திரு. கலாமோகன், சிங்கப்பூரில் அரசு சாராது அறக்கட்டளைகள் இயங்குவதன் சிரமத்தைச் சொல்லி, அதுவும் தமிழிலேயே அதன் கொள்கைகளை வரையறுத்திருப்பதையும் சொன்னார். அடுத்துப் பேசிய திரு.ஆண்டியப்பன், முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் நோக்கங்களை விரிவாக எடுத்துரைத்தார்.
தஞ்சைப் பல்கலைக்கழக நூலகத்தில் சிங்கப்பூர்-மலேசிய நூல்களுக்காகவே அமையும் தனிப்பிரிவிற்கு நூல்களைப் பெற்றுக்கொள்ளும் பணி அடுத்து தொடங்கியது. முதல் நூலை கவிஞரேறு அமலதாசன் அவர்கள் வழங்க திரு.முஸ்தபா பெற்றுக்கொண்டார். அந்நூல் தமிழவேள் திரு.கோ.சாரங்கபாணி பற்றியதாக இருக்க திரு.முஸ்தபா அவர்களின் முகத்தில் திருப்தியான புன்னகை ஒன்று வெளிப்பட்டது.
கலந்துரையாடலுக்கு முப்பது நிமிடம் என்றார்கள். திரு. முஸ்தபா அவர்களை அனைவரும் புகழ்ந்தனர். சிங்கப்பூர இளையர்களை தமிழ்பக்கம் இழுக்க ஏதாவது செய்யவேண்டும் என்றார் ஒருவர். இதுபற்றி விரிவான தளத்திற்கு திட்டங்கள் செயலாக்கம் நடந்துகொண்டிருப்பதகச் சொன்னார் திரு. முஸ்தபா. இதன் பொறுப்புகளை திரு.சிவசாமி அவர்கள் செய்வதாய் சொன்னார். நாளிதழ் வெளியிடும் யோசனையைச் சொன்னாரொருவர். காலாண்டிதழ் வெளியிடும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாய்ச் சொன்னார் திரு. முஸ்தபா.
மனமும் பணமும் ஒருங்கே இருப்பதால் தமிழுக்கு மணம் கிடைப்பது உறுதி என்றார் ஒருவர். மறைந்த எழுத்தாளர் உதுமான் கனியின் கவிதை நூல்களை வெளியிட உதவி கேட்டார் அவர். உடனுக்குடன் அவைகளை ஆமோதித்து ஆவன செய்தார் திரு.முஸ்தபா. ஏதோ "ஒருநாள் முதல்வன்" படம் பார்ப்பது போலிருந்தது. உண்மையில் பெரிய மனதுதான் அவருக்கு.
சிங்கப்பூர் "சிம்" பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பிரிவுக்கும் ஏதாவது செய்யவேண்டும் என்றார் ஒருவர். கலைஞரைச் சந்தித்து தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்களின் தபால்தலையை வெளியிட ஆவன செய்யவேண்டும் என்றார் ஒருவர். சிங்கப்பூரில் உள்ள அனைத்து எழுத்தாளர்களின் நூல்களையும் தாம் பெற்றுத்தருவதாக ஒருவர் பொறுப்பேற்றுக்கொண்டார். மலேசியாவின் நூல்களைப் பெற்றுத்தர தாம் முயற்சி செய்வதாக இன்னொருவர் சொன்னார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் முருகன் என்பவர் முனைவருக்காய சிங்கப்பூர இலக்கியம் பற்றிச் செய்யும் ஆய்வுக்கு உதவும்படி கேட்டர் ஒருவர்.
திரு. முஸ்தபா அவர்களின் பல ஆண்டு கனவு இது என்றார் ஒருவர். தமிழ் வளர தமிழில் பேசுவோம் என்று கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்னே திரு.முஸ்தபா அவர்களின் நிறுவன ரசீதுகளில் அச்சடித்திருப்பதைச் சொன்னார். சென்னையில் இருக்கும் அவரது கண்ணாடி நிறுவனத்தில் "தாய்மொழி கண் போன்றது; பிறமொழி கண்ணாடி போன்றது" என்ற புகழ்பெற்ற வாசகத்தை வடிவமைத்ததிலிருந்து அவரது ஆர்வத்தை எடுத்துச்சொன்னார்.
நிறுவனரான திரு.முஸ்தபா தலைவராய் இருந்து பல்வேறு குழுக்களை ஏற்படுத்தி மேலும் இவற்றை மேம்படுத்தவேண்டும் என்று சொன்னார் ஒருவர். இதற்கு பதில் சொன்ன திரு.கலாமோகன், ஏறக்குறைய எல்லா தமிழ் பற்றாளர்களும் ஏதாவது ஒரு முழுவில் அல்லது பல குழுவில் இருக்கின்றனர். "இருக்கின்றனர் என்றால் வெறுமனே இருக்கின்றனர்"- அப்படிப்பட்டவர்கள் தயவுசெய்து இங்கேயும் இணையவேண்டாம் என்றார். உண்மையிலே ஆக்கப்பூர்வமாய் இயங்க முனைந்தால் இணையலாம் என்றார் அவர்.
இஸ்லாம் எங்கள் வழி; தமிழ் எங்கள் மொழி என்பதாய்ச் சொன்னார் ஒருவர்.
இறுதியில் பொதுமக்களிடமிருந்து அல்லது நன்கொடையாளர்களிடமிருந்து அன்பளிப்பு வந்தால் ஏற்றுக்கொள்ளலாமே; சிறப்பாய் இயங்க அது உதவுமே என்றார் ஒருவர். பட்டென்று பதில் சொன்ன திரு. முஸ்தபா, எல்லாம் வல்ல இறைவன் எனக்கு நீண்ட ஆயுளையும் நிறைய செல்வத்தையும் அளிக்கும்படி வேண்டிக்கொள்ளுங்கள்; எல்லாவற்றையும் நான் செய்கிறேன் என்றார்.
யோசனை என்றால் கேட்கவே வேண்டாம் என்ற அளவுக்கு தமிழ் மக்கள் அள்ளித்தருவார்கள் போலும். கலந்துரையாடலில் சில காமெடி டயலாக்குகளும் வெளிப்பட்டன.
எல்லாவற்றையும் விடுங்கள். இந்த அறக்கட்டளையின் துவக்கம் பற்றியும் சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் பற்றியும் பேசலாம் கொஞ்சம்.
சிங்கப்பூரில் அரசாங்கம் சாராது இயங்கும் அறக்கட்டளைகள் மிகவும் அரிது; சிரமமிக்கது. அதிலும் தமிழுக்காய் இயங்கும் அறக்கட்டளை இல்லவே இல்லை. இந்நிலையில் தமிழுக்காய் தனியொரு மனிதரால் புத்தம் புதியதாய் உருவெடுத்திருக்கிறது இந்த முஸ்தபா தமிழ் அறக்கட்டளை. நிறுவனரான திரு. முஸ்தபா அவர்களை நெஞ்சார பாராட்டலாம்!
முஸ்தபா தமிழ் அறக்கட்டளையானது தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன் கடந்த செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியது.
அதன்படி,
1. சிங்கப்பூர், மலேசியத்தமிழர்களின் வாழ்க்கை பற்றியும் தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் பற்றியும் தமிழ்நாட்டில் ஆய்வு செய்யும் நிரைஞர், முனைவர் ஆகியோருக்கு உதவித்தொகை வழங்குதல்
2. தெற்காசிய, குறிப்பாக சிங்கப்பூர் மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் சிறந்த நூலுக்கு ஆண்டுக்கொருமுறை பரிசு வழங்குதல்
3. சிங்கப்பூர், மலேசியத் தமிழ் இலக்கியம் தொடர்பான கருத்தரங்கம் ஒன்றை தஞ்சைப் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்தல்.
4. சிங்கப்பூர், மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்களைத் தனிப்பிரிவாக தஞ்சை பல்கலைக்கழக நூலகத்தில் உருவாக்குதல்.
இவைகளையே தற்போது ஆய்விருக்கையின் குறிக்கோள்களாகக் கொண்டு இவ்வொப்பந்தம் செயல்படும்.
தமிழ்ப்பற்றாளர்களை விட தமிழ்ச்சங்கங்கள் அதிகமாய் இருக்கும் சிங்கப்பூரில் தமிழுக்காய் தனியொரு மனிதராய் தனது சொந்த பணத்திலிருந்து இதுபோன்ற அறக்கட்டளைகளை அமைப்பது மிகுந்த சிறப்புடையது. குறிப்பாய் எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெரும் தமிழணங்கை இத்திசையில் ஆட்சி மொழியாக்கிப் பார்த்த திரு.கோ.சாரங்கபாணி அவர்களைப்போல எந்தவித பாசாங்கும் இன்றி, தனிப்பட்ட புகழுக்காய் அன்றி மிகுந்த மன ஒன்றுதலோடு மன விருப்பத்தோடு இக்காரியத்தில் திரு. முஸ்தபா அவர்கள் இறங்கியிருப்பதாய்த் தெரிகிறது.
மேற்சொன்ன ஒப்பந்தம் மற்றும் இந்த முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் தோற்றம் மூலம் என்னென்ன பயன்கள் நேரலாம் என்பதைப் பார்ப்போம்.
v தமிழக இலக்கிய உலகிற்கும் சிங்கப்பூர் இலக்கிய உலகிற்கும் பூதாகர இடைவெளி உள்ளது. அதை இவ்வொப்பந்தம் குறைக்கும். அல்லது அதற்கான தளத்தை கொஞ்சமாது நிறுவ முயலும்.
v தஞ்சைப் பல்கலைக்கழகத்தில் தனிப்பிரிவாக்குவதன் மூலம் சிங்கப்பூர மலேசிய இலக்கிய நிலைகளை யாவரும் எளிதில் உணரும் வாய்ப்பமையும்.
v சிங்கப்பூர மலேசிய இலக்கிய நிலைகளை ஆய்வு செய்யும் மாணவர்கள் தரும் முடிவுகள் அதன் தற்போதையை நிலையை எடுத்துச்சொல்லும்; விளைவு தரம் மேம்படலாம்.
v தமிழவேள் கோ சாரங்கபாணி பெயரில் அமையும் விருது அவரது சிறப்பை இன்னும் எடுத்துக்கூறும். தமிழுக்கென வாழ நினைக்கும் மற்றவர்களுக்கு வழிகாட்டும்.
v சிறந்த நூலுக்குப் பரிசு தருவதன் மூலம் மேலும் எழுத்தாளர்கள் உருவாவார்கள். (பரிசு கொடுக்கப்படும் நூலின் தரம் கணக்கெலெடுக்கப்பட்டால்!)
v சங்கம் அமைத்து நடிகைகளை அழைத்து டிக்கெட் அடித்து கூட்டம் போடுவதைத் தவிர்த்து தனிமனித சேவைகள் மூலமும் வருமானம் மூலமும் தமிழுக்குச் சேவை செய்யலாம் என்ற ஒரு பார்வையை விதைக்கும்.
v சிங்கப்பூர் - மலேசிய எழுத்தாளர்களின் கருத்தரங்கம் நடத்துவதன் மூலம் அடுத்த கட்டத்தை அது அடைய முற்படலாம்.
v வெறும் பேச்சு மூலமே போய்க்கொண்டிருக்கும் தமிழ் வளர்ப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள் செயல்வடிவில் நிலைமாற்றம் அடைய தன்னலமற்ற இதுபோன்ற சேவைகள் உதவும்.
v பல்வேறு நபர்களை இணைத்து செயல்படும் அமைப்புகளின் செயல்பாடு திருப்திகரமாய் இல்லாதபோது இதுபோன்ற அறக்கட்டளைகள் சிறப்பாக இயங்கலாம்.
v எல்லாவற்றிற்கும் மேலாய் குழு மனப்பான்மைகளையும் சச்சரவுகளையும் இதுபோன்ற தனிநபர் சம்பந்தப்பட்ட அறக்கட்டளைகள் ஊக்குவிக்காது உண்மையிலேயே நல்ல மனமிருந்து ஆரம்பிக்கப்பட்டால் நல்லது நடக்க முயற்சி செய்யும்.
சிங்கப்பூர்த் தமிழ்மக்கள் இதுபோன்ற சந்தர்ப்பங்களை எடுத்துக்கொண்டு தமிழை மேம்பட்டதொரு நிலைக்கு எடுத்துச்செல்லவும் படைப்புகளில் அதன் தரத்தை உயர்த்தவும் முயலலாம். முயன்றால் நம்மால் முடியாதது என்ன?
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு-
என்ற குறளுக்கேற்ப தனது வியாபாரத்தின் மூலம் அடைந்த பொருளாதார நிலையின் மூலம் தமிழுக்குத் தொண்டு செய்ய நினைக்கும் திரு.முஸ்தபா அவர்களுக்கு எல்லாம் வல்ல தமிழணங்கு நீண்ட ஆயுளையும் செல்வத்தையும் கொடுக்கட்டும்.
அன்பன்
எம்.கே.குமார்
நன்றி: திண்ணை.காம்.
Tuesday, November 13, 2007
குறள் வெண்பா - ஒரு முயற்சி (தவறுகள் திருத்திக்கொள்ளப்படும்!)
1 பொதிகை மலையின் புதுத்தென்றல் தாம்உணர
ஆதியாம் தாய்மொழியில் பேசு.
2 அகத்தியன் தந்த அருமை தமிழ்த்தேன்
உகந்து பருகு உணர்ந்து
3 தொல்காப்பு செய்தான் துறைசீர் இலக்கணம்
தோழனே தூயதமிழ் பேசு
4 வள்ளுவம் கூறும் அறம்பொருள் யாவையும்
அள்ளக் குறையுமோ சொல்
5 கல்தோன்றாக் காலத்தின் முன்தோன்றி மூத்ததேனும்
சொல்லினிமை குன்றாத் தமிழ்
6 ஆயுதம் மெய்யுயிர் ஆக்கும் உயிர்மெய்யாம்
பாய்ச்சுமே காதினில் தேன்
7 சொன்னால் சுவைக்கும் இனிக்கும் தமிழமுதம்
கன்னல் சுவைதான் உணர்
8 பிறமொழி பேசுபவர் மேலோராம் என்னும்
அறியாமைக் கீழ்மை அகற்று
9 மண்ணும் மரமும் மரித்திடினும் இன்றுபோல்
என்றும் சிறக்கும் தமிழ்.
10 அம்மா ஒருவார்த்தை அன்புடன் சொல்லிப்பார்
சும்மா கிடைக்கும் சுகம்
11 எத்தனை பேச்சுமொழி எங்கெல்லாம் வாழ்ந்திடினும்
அத்தனைக்கும் மேலே தமிழ்
12 பேசு தமிழா தமிழில் பெருமையாய்
காசுபணம் தாரா தது
Monday, November 12, 2007
அழகிய தமிழ்மகன் - அபத்தம்!
சிரிப்பு வரவைக்கவேண்டும் என்பதற்காய் ஷகீலா அவர்களை வீட்டுக்கார முதலாளியாய் வைத்து
அடிக்கப்படும் பரங்கிமலை ஜோதி டயலாக்குகள் அபத்தம்.
சின்ன ஸ்டிக்கர் மச்சம் கூட வைக்காது டுயூவல் கேரக்டர் பண்ணியிருக்கும் விஜய் - (ஸ்டைல் செய்வதற்காய் ரஜினி, சிவாஜி படங்களின் படிகளை ஏறியிறங்கியிருப்பதைத் தவிர ஏனுங்கண்ணா, இன்னும் கொஞ்சம் யோசிக்கக்கூடாதா? சும்மா, எவ்வளவோ பண்ணுறோம், இது பண்ண மாட்டோமான்னு எங்களை ஏமாத்துறீங்களே!
இரட்டையரில் ஒருவரைக் கண்டுபிடிக்க நடத்தப்படுபவை ஆண்டாண்டுகால அபத்தங்கள்.
ஸ்ரேயா- பின்பக்கத்தை ஆட்டுவதற்காய் மட்டுமே ஒரு ஹீரோயின். நல்லா பண்ணுறீங்கம்மா!
இசை யாரோ ஏஆர் ரகுமானாம்? புதுசா?
முன்கூட்டியறியும் வித்தை - எடிட்டர் ஆண்டனிக்கும் பின்னணி இசையாளருக்கும் ஒரு ஷொட்டு.
புதுக்கவிதைத்தாத்தா - அழகிய தமிழ்மகன் பட்டம் தருகிறார்! நியாயமா இது மு.மேத்தா?
எப்போது வில்லனாவாரோ - என பணக்கார கதாநாயகியின் தந்தை! நல்லவேளை!
நமீதா - இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து சென்னை மாநகர காவல்துறையில் மாட்டாமல் இருந்தால் சரி.
பொன்மகள் வந்தாள் - ஏஆர் ரகுமான் மீது எரிச்சலாய் வருகிறது.
கதாநாயகன் - நாயகி, தோளோடு தோள் உரசினதும் - ஒரு டூயட்! திருந்தவே மாட்டீங்களாடா?
திருவான்மியூர் குளத்துல ராதா விட்ட குடத்தை மைசூர்ல திரும்ப எடுத்தது பாரதிராஜா காலம். காட்சிகளின் தொடர்ச்சியில் முதிர்ச்சியில்லை. அறிமுக இயக்குனர் அறிந்துகொள்ளவும்.
எப்படா படத்தை முடிப்பீங்கன்னு - ஒரு குரல்
கதாநாயகி - மருத்துவமனைக் கட்டிலில் - கற்பு வசனம் - ஞப்பா, விடுங்கடா!
வசனகர்த்தா பரதன் - பாராட்டுகள் உங்களுக்கு!
இயக்குனர் பரதன் - பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!
அன்புடன்,
எம்.கே.
Saturday, November 03, 2007
நெஞ்சை எரிக்கிறது நீயில்லாது போன இத்தருணம்!
Monday, July 30, 2007
பாலி - 6
Wednesday, July 18, 2007
புத்தக வெளியீடு- நன்றி நவிலல்!
புத்தக வெளியீடு முடிந்து ரொம்ப நாளாகிவிட்டது. எனினும் அதைப்பற்றி எழுதாதது ஒரு குறையாகவே இருந்தது. எனவே அதை இன்று எழுதிவிடலாம் என்றிருக்கிறேன்.
புத்தகத்தின் வடிவமைப்பு மிகவும் மெச்சும்படியாய் இருப்பதாய் பலர் சொன்னார்கள். இதை இவ்வளவு அழகாய் வடிவமைத்த வகையில் முதலில் நன்றி சொல்லவேண்டிய ஒருவர் திரு. சி.மோகன் அவர்கள். அவருடைய முழுமுயற்சி இல்லாவிட்டால் இந்த அளவிற்கு சிறப்பாய் அது இருந்திருக்காது. எனது நெஞ்சார்ந்த நன்றி இவருக்கு.
சென்னையில் வெளியிட்டு பல நாட்களுக்குப்பிறகே சிங்கப்பூரில் என் கைகளுக்கு இது கிடைத்தது. புத்தகத்தைக் கண்ட தருணம் மறக்கமுடியாததாய் இருக்கிறது. 'அடடா, ஒரு போட்டோ பிடித்திருக்கலாமே' என்றார் ரமேஷ். இதை தவறவிடக்கூடாது என்பதற்காகவே அப்பாவின் கையில் புத்தகத்தைக் கொடுத்து அவரைப்பற்றிய குறிப்பை வாசிக்கச்சொல்லி வாசிக்கும்போது படம்பிடித்தேன்.
சிங்கப்பூரில் புத்தக வெளீயீடு செய்வது என்றவுடன் நானும் நண்பர் ரமேஷும் நூலகத்தையே அணுகலாம் என முடிவு செய்தோம். இதற்கு பெருமளவில் உதவிய கவிஞர் இந்திரஜித், தேசிய நூலக அதிகாரிகள் திருமதி.புஷ்பலதா மற்றும் திரு.மணியம் ஆகியோருக்கும் இநேரத்தில் நன்றி.
புத்தக அறிமுகம் செய்து பேசவேண்டும் என்றவுடன் எவ்வித தயக்கமும் இல்லாமல் இசைந்த சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளர் திரு. இராம.கண்ணபிரான் அவர்கள், முனைவர். எம்.எஸ்.ஸ்ரீலஷ்மி அவர்கள், எழுத்தாளர் மற்றும் வழக்கறிஞர் திருமதி. ரம்யாநாகேஸ்வரன் மற்றும் கவிஞர் ரெ.செல்வம் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி. எனது வரவேற்புரையில் திருமதி.ரம்யா அவர்களையும் திரு.செல்வம் அவர்களையும் தவறவிட்டதற்காய் இப்போதும் வருந்துகிறேன்.
இயற்கைக்கும், தமிழுக்கும் வணக்கம் சொல்லி ஆரம்பித்த என் வரவேற்புரையில் இத்திசைக்கு வந்து இசைவாய் தமிழ்வளர்த்த தமிழவேள்.கோ.சாரங்கபாணி அவர்களையும் அமரர்.நா.கோவிந்தசாமி அவர்களையும் வணங்கினேன்.
ரமேஷின் சித்திரம் கரையும் வெளி கவிதைத்தொகுப்பை திரு.இராம.கண்ணபிரான் வெளியிட நூலக முதன்மை அதிகாரி திருமதி.புஷ்பலதா பெற்றுக்கொண்டார். எனது மருதம் சிறுகதைத்தொகுப்பை சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளர்களான திரு.பொன்.சுந்தரராசு வெளியிட, திரு.மா.இளங்கண்ணன் பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியை மிக நிறைவாய் வழிநடத்தினார் திருமதி.சித்ரா ரமேஷ். எந்தவித பாசாங்கும் இல்லாமல் மிக இயல்பாய் நடக்க ஆவனசெய்தார்.
ரமேஷின் சில கவிதைகளை மிகவும் ரசித்து அது தரும் பொருளை சிலாகித்துப்பேசினார் திரு. கண்ணபிரான் அவர்கள். அவர் வாசிக்கும்போதே ஒரு கவிதை மனதில் படிந்துபோனது. எனது புத்தகத்தை மிகவும் ரசித்துப் படித்ததை அப்படியே பகிர்ந்துகொண்ட முனைவர் எம்.எஸ்.எஸ், குறிப்பை எடுக்காமலேயே பல கதைகளின் பெயரையும் அது எழுதப்பட்டிருக்கும் உத்தியையும் சொன்னார். 'எல்லா புன்னகைகளும் எலும்புக்கூட்டில் போர்த்தப்பட்டிருக்கும் முகமூடிகளே' என்று கவிஞர் சுகுமாரனை மேற்கோள் காட்டி பேச வந்த கவிஞர் திரு.ரெ.செல்வம் தனது பேச்சின் மூலம் சிந்தனையை ஊற்றினார். இக்கதைத் தொகுப்பைப் பற்றிப்பேச சிலமணி நேரங்கள் வேண்டும் எனவும் ஆனால் தான் பேச நினைத்ததையெல்லாம் முனைவர் பேசிவிட்டதாய்ச் சொல்லி ஒரு எழுத்தாளராய் இக்கதைகளின் போக்கை விவரித்தார் திருமதி.ரம்யா. நகைச்சுவைக்கதை எழுதுவது என்பது எவ்வளவு கடினம் எனவும் அது இதில் எவ்வாறு வெற்றிகொள்ளப்பட்டிருக்கிறது என்பதையும் சொன்னார்.
எண்பது பேர் அமரக்கூடிய அரங்கத்தில் ஏறக்குறைய அறுபத்தைந்து பேர் வந்திருந்தார்கள். சிங்கப்பூரின் இதுபோன்ற புத்தக வெளியீட்டு நிகழ்வில் (சினிமா/முக்கிய பிரபலங்கள் கலந்துகொள்ளாத வகையில்) இது பெரும் எண்ணிக்கைதான் என நினைக்கிறேன். அன்று மாலை நடந்த "மீடியா கார்ப்" நிறுவனத்தின் குடும்பவிருந்து நிகழ்வால் பலர் வரமுடியாமல் போய்விட்டது. எனினும் பல புது நண்பர்களையும் இலக்கியதாகம் மிகுந்தவர்களையும் அன்று சந்திக்க நேர்ந்ததில் இறைவனுக்கு நன்றி.
திரு.ரெ.பாண்டியன், திரு.இராம.வைரவன், சிறந்த ஓவியரான திரு.பாஸ்கர்(அவர்தான் இவர் என்று அப்போது தெரியாததில் கொஞ்சம் வருத்தமே!) தமிழாசிரியர் திரு.சோமு அவர்கள், மறைந்த நடிகர் எம்.கே.ராதாவின் குடும்பத்தினர் எனப்பலரும் கலந்துகொண்டது நிறைவாக இருந்தது.
நான் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு நீங்கள் வராவிட்டால் என்ன, நான் வருகிறேன் என்று வந்தார் கவிஞர் பாலு மணிமாறன். அன்புக்குரிய எழுத்தாளர்கள் திருமதி.ஜெயந்திசங்கர், திருமதி.மாதங்கி, நண்பர்களும் முக்கிய வலைப்பதிவாளரான திரு.அன்பு, (எனது ஆசிரியரும் தனது தந்தையுமான திரு.ரகுநாதன் அவர்களுடன் கலந்துகொண்ட) திரு.அருள்குமரன், சென்னையிலிருந்து வந்திருந்த தாய்-தந்தையரை 'சர்ப்ரஸாய்' அனுப்பிவைத்த நண்பர் திரு.ஜயராமன், தம்பி நீதிப்பாண்டி, நண்பர் இரா.பிரவீன் ஆகியோருக்கும் இந்நேரத்தில் நன்றி.
செய்தி வெளியிட்ட தமிழ்முரசு நாளிதழுக்கும் விளம்பரம் வெளியிட்ட திரு.ராஜேந்திரன் அவர்களுக்கும் நன்றி.
நன்றி சொல்லி தூரத்தில் இருப்பவர்களை அருகில் கொண்டுவரவும் அருகில் இருப்பவர்களை தூரத்தில் போகச் செல்லவும் முடியும் என்று தனது நன்றியுரையில் சொல்லி, நன்றி சொல்ல விரும்பாத ரமேஷ்க்கு நான் நன்றி சொல்ல வேண்டும். காரணங்கள் பல இருக்கின்றன. அதில் ஒன்று, தனது அயராத பணிகளுக்கிடையிலும் புத்தகத்திற்கு அட்டைப்படம் செய்து, பதினைந்து இருபது படங்களை மளமளவென்று அனுப்பி ஏதாவது மூன்றை 'செலெக்ட்' செய்யுங்கள் என்றவராயிற்றே!
நிகழ்ச்சியின் ஒட்டுமொத்த அளவில் எல்லாவிதத்திலும் துணைநின்ற திருமதி.ஷீலாரமேஷ் மற்றும் திருமதி.நிர்மலாகுமார் ஆகியோருக்கும் இங்கு நன்றி சொல்வது அவசியம்.
அன்புடன்
எம்.கே.
18/07/07
Friday, July 06, 2007
Thursday, June 14, 2007
தயாநிதி என்னைத் திட்டலாம், நல்லா வெச்சாய்ங்கய்யா வாயையின்னு!
இப்போது படிக்க சுவாரஸ்யமாய் இருக்கிறது.
நீங்களும் படித்துப்பாருங்கள், மறக்காமல் பின்னூட்டங்களையும்!
http://yemkaykumar.blogspot.com/2005/08/blog-post_21.html
"பிரின்ஸ், கலைஞர் என்னை தம்பி என்றழைப்பது இருக்கட்டும். கட்சியைக் காப்பாற்றிக்கொள்ளட்டும் முதலில் அவர்!
தி.மு.க வின் கிளைகளில் ஒன்றாக இருந்த சன் டிவிகுழுமம போய் சன்டிவியின் அதிகாரமையங்களூல் ஒன்றாக தி.மு.க ஆகிவிடப்போகிறது பாவம்!"
எம்.கே.குமார்
(ஆகஸ்டு 2005)
அன்புடன்,
எம்.கே.
Thursday, May 10, 2007
புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழ்!
சுப்பிரமணியன் ரமேஷின் "சித்திரம் கரையும் வெளி" கவிதைத்தொகுப்பும்
எனது "மருதம்" சிறுகதைத்தொகுப்பும் வருகிற 19, சனிக்கிழமையன்று மாலை ஐந்து மணியளவில் பீஷான் சமூக நூலகத்தில் வெளியீடு காண்கின்றன.
சிங்கப்பூரின் மூத்த படைப்பாளரும் சிறந்த இலக்கிய விமர்சகருமான திரு. இராம கண்ணபிரான் அவர்களும், பல்வேறு திறனாய்வுகள் படைத்த முனைவர் எம்.எஸ்.ஸ்ரீலஷ்மி அவர்களும், கவிஞர் திரு. ரெ.செல்வம் அவர்களும் எழுத்தாளர்/கட்டுரையாளர்/வழக்கறிஞர் திருமதி. ரம்யா நாகேஸ்வரன் அவர்களும் இப்புத்தகங்களை அறிமுகப்படுத்தி தங்களது வாசகப்பார்வையை பகிர்ந்துகொள்ள விழைந்துள்ளனர்.
நண்பர்களைனைவரும் தங்களது குடும்பத்துடன் இந்நிகழ்வில் பங்குகொள்ள வேண்டுகிறோம்.
நன்றி.
அன்புடன்
எம்.கே.
Friday, April 20, 2007
பாலி- புகைப்படக்கண்காட்சி (3)

இடதுபுறம் சிலையின் கைகளிலிருக்கும் குடத்திலிருந்து 'சப்தகங்கை' வழிகிறது.
வலதுபுறம் மண்டபத்தின் உள்ளே அமைந்த அரியணையில் சோழர்குலத்தின் மாணிக்கமாம் கடாரம் வென்ற ராஜேந்திர சோழன் அமர்ந்திருக்கிறார். (!)
அன்பன்
எம்.கே.
Friday, April 13, 2007
பாலி - புகைப்படக்கண்காட்சி (2)
Tuesday, April 10, 2007
வியர்டு-கிறுக்குத்தனமும் மனநோயும்
ரெண்டு பேரு ஒருத்தர ஒருத்தர் ரொம்ப விரும்புனாங்க. ரெண்டு பேருல ஒருத்தரான அந்தப்பொண்ணுக்கு அவங்க வீட்ல வேற மாப்பிள்ளையப் பாத்து கல்லாணம் கட்டிவெச்சுட்டாங்க. மனசொடிஞ்ச போன அந்த நபர் வேற ஊருக்கு இல்லெ, வேற நாட்டுக்கே போய் மொத்தமா செட்டிலாயிட்டார்.
காலம்போன போக்குல பதினைஞ்சு வருஷம் கழிச்சி, அந்தப்பொண்ணு, கணவனை இழந்துட்டு ரெண்டு கொழந்தையோடவும் இவரு இன்னும் தனிமரமாவும் சந்திக்கிறாங்க ஒருநா. மனசு விட்டுப்பேசி மீண்டும் அந்தப்பொண்ண கல்லாணம் கட்டிக்கலாம்ன்னு அந்த நபர் முடிவு பண்ணி, நம்ம சுஜாதா சார்ட்டெ சொல்ல, சுஜாதா சார் அவருக்குத்தெரிஞ்ச டாக்டர்ட்ட சொல்ல, அந்த டாக்டர் சொன்னாராம், இதெல்லாம் ஒருவித மனநோயின் அறிகுறின்னு!
கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி சுஜாதா சார் எழுதுன ஒரு தொடர்ல, டாக்டர் சொன்னதோட ஒரு தொடரும் போட்டு அடுத்தவாரம் அதுபத்தி எழுதுறேன்னு முடிச்சுட்டார். அடுத்தவாரம் நானும் படிக்கலை. ஏன் அப்படின்னு இதுவரைக்கும் காரணமும் புரியலை.
மூக்கன் சார் சொன்னமாதிரி தேடிச்சோறு நிதந்தின்று..ன்னு யார் பாடும்போதும் சரி, ஒரு சரவெடிய உசுருக்குள்ளெ கொளுத்துன மாதிரி சரட்டுன மனசும் உடம்பும் எம்பி உக்காந்தது ஒரு காலம். மனநோயி கொண்டலைஞ்ச காலம். கமல் கட்டக்குரல்லெ வாசிக்கும்போது அலைகளெல்லாம் ஆர்ப்பரிக்க கடல்மேலே இருக்குற மணப்பாடு பாறை மேல நின்னுக்கிட்டு நானே பாடுறதா அலைஞ்ச மனநோயிக்காலம்.
விவேகானந்தர் பாறையில மனசெல்லாம் காத்தோட பறக்குற வேளையில செவப்பு விரிப்பு பரவியிருக்கும் தியானஞ்செய்யுற ரூமுக்குள்ளெ மோகத்தைக் கொன்றுவிடு இல்லை மூச்சை அடக்கிவிடுன்னு கண்ணைமூடி காட்டெருமையோட கட்டிப்புரண்டதொரு காலம். காட்டெருமை, கிராமத்தை கவுச்சி வாசனையோட விட்டுப்புட்டு நகரத்துக்கு வந்து கனவுல பொரண்டு நகரத்துல இருந்து வேற நாட்டுக்கு வந்து இப்போ காடேறவும் ஆரம்பிச்சிடுச்சி. காட்டெருமைக்கிம் பசி. காட்டுக்கும் பசி. எப்பவும்!
மூஞ்சப்பாத்து வாறது காதலா? மனசப்பாத்து வாறது காதலா? காதல் வாறதுக்கும் அதுக்குப்பின்னே கல்லாணம் வாறதுக்கும் இடையில கணக்குப்புள்ளை படும் பாடு எதுக்குச்சொந்தம், காதலுக்கா, கல்லாணத்துக்கா? பொன்னை விரும்பும் பூமியிலேன்னு டிஎம்எஸ் உருகும்போதும் பிறக்கும்போதும் அழுகின்றார்ன்னு சந்திரபாபு அழும்போதும் உன்னைவிட இந்த ஒலகத்தில் ஒசந்தது ஒண்ணுமில்லேன்னு கமல் மருகும்போதும் உனக்கென இருப்பேன்னு ஹரிசரண் தாலாட்டும்போதும் மனசுக்குள்ளேயிருந்து எழுந்து ஓடிவந்து கண்ணுல கலங்கி நிக்கிறது என்னன்னு இந்த மனநோயிக்காலத்துல எப்பவும் புரியலை.
வேடிக்கை மனுஷனல்லடா, விதியோடும் மதியோடும் போராடி இந்த வேஷங்காட்டும் சமுதாயத்தின் முன்னே 'மாதிரியா' மறுமலர்ச்சி படைக்கப்போறேண்டான்னு சொன்னபோது செந்தூர் நண்பனொருவன் விதியைக் கண்ணுமுன்னாடி விரிச்சிக் காட்டுனத மறுத்தது, மனப்புண்ணு கண்ட கனவுக்காலம்ன்னா, அகஅழகு கொண்ட பொண்ணை உயிரோட இணைச்சுக்கிட்டதும் உயிரோட இணைஞ்சதைப் பிரிய நேர்ந்ததும் கைப்புண்ணு கண்ட இன்னொரு கனவுக்காலம். போறவழி வேறன்னாலும் போறஊரு ஒண்ணுதான்னு மண்ணு மக்களை விட்டுவிலகி மாற்றாந்தோட்டம் போனதும் குரோட்டன்ஸ் பார்க்குக்குப் போனாலும் கோயிலையும் குளத்தையும் அது நிறைக்கும் மீனையும் மருதாணியையும் மறக்கவே முடியாது என்பதும் நேற்றுவரையான காலத்தின் காட்சி.
சலசலக்கும் காட்டோடைக்குள்ளே முங்கி குளிந்து கெடக்கும் கூழாங்கல்லாட்டம் ஜில்லுன்னு இருக்குறதும் இன்னொரு நொடிமுனையில எரிமலையாப் பொங்கி உமிழ்ந்து அடங்கிப்போவதும் எனக்குள்ளே நடக்கும். மொதல்ல பாக்குறப்போ வழிஞ்ச எண்ணத்தாலே பத்து வருஷமானாலும், கண்ணெதிரிலெ திரிஞ்சாலும் சிலர்கூட பேச மறுக்குறதும் கண்மறைவிலே இருந்தாலும் அம்மாவப்பத்தி எப்பவோ சொன்ன ஒரு வார்த்தைக்காக மனசுல வெஞ்சினத்தோட அவனுக்காகக் காத்திருக்கிறதும் எனக்குன்னே இருக்குற இன்னொரு கிறுக்குத்தனம். குப்புறக்கவுத்த கூடை மாதிரி மனசு நெறைய அன்பை வெச்சிக்கிட்டு அடிக்கடி சீண்டுறதும் சின்னதா ஊசி வெச்சி அப்பப்போ குத்திக்கிட்டே இருக்குறதும் கூடப்பொறந்த இன்னொரு கொணம். அதுல அடிக்கடி படுறது அம்மா.
வெவரம் தெரிஞ்ச நாள்ளெயிருந்து என்னப்பாங்குறதைத் தவிர்த்து என்னடா, ஏண்டான்னு ஒரு வார்த்தை கூட வையாத அப்பாவைப் பாத்து பெத்துக்க/தத்துக்கப்போற கொழந்தைங்ககிட்டே அப்படியே காட்டணும்ன்னு நெனைக்கிறதும் குழந்தைங்ககிட்டே அப்படியே குழந்தையா உருமாறி மனமாறுறதும் குட்டிங்கிற அண்ணமககிட்டேயும் ஸ்னேக்ஸ்ன்ற தோழர் மககிட்டேயும் எப்போ பேசுனாலும் மனசுல ஒரு இலை உதிர்கிற அதிர்வை உணரும்போதும் இன்னும் நான் குழந்தைதானோன்னு ஒரு கிறுக்கு இருக்கு.
அம்மா திட்டுனுச்சுன்னு காட்டுக்குள்ளே போயி மணிக்கணக்கா இருந்து திரும்புறதும் பட்டை வளந்து பெயர் சுருங்கிப்போனாலும் அங்கே இருக்குற மரத்து மேல இன்னைக்கிம் எம்பெயரைப்பாக்க முனையுறதும் பனைமரமா தேடிப்பாத்து அரசங்கன்னு பிடுங்கி கோயிலுக்கெதிரே நட்டுவெச்சி இன்னைக்கி பெரியமனுசனானவனை செல்லமா தடவிப்பாக்குறதும் சிலிர்ப்பா இருக்குற கிறுக்கு. நடுராத்திரிலெ எழுந்து சித்தார்த்தனா கிளம்ப ஆசைப்படுறதும் அடுத்த நிமிஷமே ஊறுதராத விலங்கு, கையால பறிக்கிற அளவுக்குத் தொங்குற சாப்பிடுறபழம், பாக்க மட்டுமில்லாம குளிக்கவும் முடியுற அருவி, பாம்பு பூச்சி, வண்டு இல்லாத காடு இதெல்லாம் எப்போ கெடைக்குதோ அப்பொ ஆகலாம்னுன்னு பூனை வளத்து அதுக்கு பாலுக்கு மாடு வளர்த்து மாட்டைப் பாத்துக்க ஒரு பொம்பளைய வெச்சிக்கிட்டு, சாமியாரு சம்சாரி ஆன கதை மாதிரியும் இருக்கு இன்னொருபக்கம் கிறுக்கு.
தேங்கா புடுங்கிப்போடும்போது சத்தம் கேக்காம இருக்க எல்லாரும் கத்தணும், மாங்கா புடுங்கி துண்டுல கட்டி வெரணும்ன்னு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்து தண்ணி இல்லாத கெணத்துக்குள்ளே அடுப்பு செஞ்சி மாங்கா பச்சடியும் முருங்கைக்கீரையும் அவிச்சு திண்ண கதைக்கி முன்னால பொத்திப் பாதுகாத்த நல்ல பைய, பலவருஷம் பள்ளிக்கூடத்திலே மொதல்மாணவன்ற மூடி. அதனாலேயே பல அழகிங்க. சாவுறவரைக்கும் மறக்காத ஆம்பளைச்சட்டை அழகிங்களும் உலகத்திலேயே அழகுன்னு நெனைக்கிற அவங்களோட மொட்டு பார்வைங்களும் வாழ்க்கையில அனுபவச்ச வரம். ரே, சை, ஷினின்னு மனசைப் பிசைந்த தோழிகள்ன்னு வாழ்க்கை ரயில் ஓட்டம். எல்லாரும் அங்கங்கே எறங்கிப்போக இது மட்டும் இன்னும் ஓட்டம்.
உயரமான கெளைமேல உக்காந்து ஓ தோழர்களேன்னு காட்டுக்குள்ளே தனிமையில் மாநாடு போடுறது சிங்கப்பூரின் புகித்பாதோக் வரைக்கும் உண்டான கதை.
யோசிச்சி யோசிச்சு நாமே முடிவு பண்ணுனதா இருந்தாலும் நேத்துவரைக்கும் செஞ்ச பலகாரியங்கள் நாந்தாண்ட்டா உன்னை அப்படிச் செய்யவெச்சேன்னு இன்னைக்கிச் சொல்லிக்காட்டுறமாதிரி இருக்க, இதோ அடுத்து செய்யப்போறதை நாம தீர்மானிக்கணுமா இல்லை அது தீர்மானிக்குமான்னு குழம்புறதும் விதவிதமான வழிகளைத்தேடி ராமகிருஷ்ணம், காயகல்பம், வாழும்கலை, சகஜமார்க்கம், அம்மான்னு அலையிறதும் ஆனாலும் வளைவுகளையும் அது தரும் வாழ்க்கையையும் தொடர்றதும் எங்க புடிச்ச கிறுக்குன்றதும் எப்போ அது தெளியின்றதும் இன்னக்கி வரைக்கிம் தெரியலை!
நெனச்சிப்பாத்தா எல்லாம் ஒருமாதிரி கிறுக்குத்தனமாத்தான் இருக்கு, இல்லெ?!
அன்பன்
எம்.கே.
இந்த விளையாட்டுக்கு என்னைக் கூப்பிட்ட மூக்கன் அவர்களுக்கு நன்றி.
Monday, April 09, 2007
பாலி - ஒரு புகைப்படக்கண்காட்சி (1)
Sunday, January 14, 2007
சென்னைப் புத்தகக்காட்சியில் எனது புத்தகம்.
சிங்கப்பூரிலிருந்து இன்னும் இரண்டு வெளியீடாக சுப்பிரமணியன்ரமேஷ்(மானஸஜென்) எழுதியிருக்கும் கவிதைத்தொகுப்பு ஒன்றும் திரு.இந்திரஜித் அவர்களின் சிறுகதைத்தொகுப்பு ஒன்றும் வெளிவந்திருக்கிறது.
புத்தகக் காட்சிக்குச் செல்லும் நண்பர்கள் கவிஞர் மீராவின் அன்னம் பதிப்பகத்தில் இப்புத்தகங்களைக் காணலாம்/வாங்கலாம். நன்றி.
வாழ்வின் நெகிழ்ச்சியான இத்தருணத்தில் 'கை நிறைய கோதுமை அள்ளிக்கொடுத்தவர்களுக்கு' நான் நன்றி சொல்லுவது அவசியமாகிறது. அது தனிமடலாய் வரும்.
அன்புடன்
எம்.கே.குமார்.
Friday, November 10, 2006
அமரர் கா.காளிமுத்து - சில நினைவுகள்!

தமிழகத்தில் பல்வேறு துறைகளில் சிறந்துவிளங்கிய முக்கியமானவர்களையும் தலைவர்களையும் அறிஞர்களையும் ஒவ்வொருவராக மரணம் கவ்வத்தொடங்கியிருப்பதிலிருந்து ஒரு தேர்ந்த காலம் பின் நகரத்தொடங்கியிருப்பதை உணர முடிகிறது.
சினிமாவில் ஆரம்பித்து கலை, இலக்கியம், அரசியல் என அனைத்து துறைகளிலும் அதன் ஆதிக்கம் மெல்லப் பரவத்தொடங்கிவிட்டது. தேர்ந்திருந்த அத்தகையவர்களின் இடத்தை இன்றோ நாளையோ ஆக்கிரமிக்கப்போகிறவர்களின் தரமும் ஞானமும் எத்தன்மை என்பதில் ஏற்படும் பற்றாக்குறைகளையும் அதன் வழிக்காட்டலையும் நினைத்து கலங்கத் தொடங்கியிருக்கிறது காலம்.

அ.தி.மு.க என்ற கட்சியைபொறுத்தவரை திரு. கா.காளிமுத்து அவர்களின் மரணம் மிகப்பெரிய இழப்பேயாகும். அக்கட்சியின் மேலிருந்த ஜெண்டில்மேன் பார்வையும் இலக்கிய-வாசக ஞானமும் திரு.காளிமுத்து அவர்களோடு அதிகம் சம்பந்தப்பட்டிருந்தது என்பது உண்மை. திரு.காளிமுத்து அவர்களைத்தவிர மேடைப்பேச்சில் சிறந்தும் தமிழிலக்கிய ஆர்வலராயும் இருக்கும் அ.தி.மு.க.கார்கள் சட்டென்று எனக்கு ஞாபகத்திற்கு வர மறுக்கிறார்கள். அரசியல், வன்முறையோடு கலந்துவிட்ட இக்கால்நூற்றாண்டில் இலக்கியத்தோடு அரசியலைப் இணைத்துக்கொண்டிருந்தவர்களின் காலம் மலையேறத்துவங்கிவிட்டதே அதற்கு காரணம் எனச் சொல்லலாம்.
முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அளப்பறிய தன்னம்பிக்கையுடையவரினும் அடிக்கடி நிதானம் தவறுபவர் என்பது பலரது கருத்து. அத்தகையவருக்கருகில் இருந்து ஆலோசனை சொல்வதிலும் வழிகாட்டுவதிலும் இருக்கும் பாரம்பரிய தகுதியுடைவர்களில் ஒருவராயும் திரு.கா.காளிமுத்து விளங்கினார். மனச்சாட்சிப்படி ஜானகியணியில் சேர்ந்திருந்த அவர் எம்ஜிஆருடைய அ.தி.மு.க.வின் நலன்கருதி செல்வி ஜெயலலிதாவுடன் இணைந்துகொண்டதும் முக்கியத்தருணங்களில் அவருக்குத் துணைநின்றதும் தேர்தல் காலங்களில் கூட்டத்தின் கவனத்தைத் திருப்பும் மிகச்சிறந்த பேச்சாளராய் இருந்த வகைகளிலும் செல்வி ஜெயலலிதாவுக்கும் இது தனிப்பட்ட முறையில் பேரிழப்பு.
கடந்த சட்டமன்றத்தேர்தலில் தொண்டர்களின் வேண்டுகோளால் அ.தி.மு.க பக்கமும் அப்போதைய கூட்டணியில் தி.மு.க பக்கமும் என மதில்மேல் பூனையாக அரசியல்நிலைமை கொண்டிருந்த திரு. வைகோ அவர்களை, 'இன்னும் எதற்கு கௌரவர்களின் பக்கம், பாண்டவர்களின் பக்கம் வா கர்ணா!' என்று மேடைக்கு மேடை கூவியழைத்து நீண்டநாள் நண்பனான கர்ணனை தம்பக்கம் வரவழைத்ததில் இவருக்கு பெரும்பங்கு உண்டு. மாபெரும் பேச்சாளர்களான இவ்விருவரும் சேர்ந்து ஒரு மேடையில் பேசினால் எப்படி இருக்கும் என்பதை அடிக்கடி நினைத்து வியந்திருக்கிறேன். அத்தகு தருணம் வாய்க்காமலே போய்விட்டது.

பாவப்பட்ட அரசியலில் பழிவாங்கும் எண்ணங்களுக்கு குறைவேது? புதிதாக ஆட்சிப்பொறுபேற்ற தி.மு.க அரசு, ஊழல் தடுப்பு வழக்கில் இவர் மேல் இரண்டு வழக்குகளைத் தாக்கல் செய்தது. சட்டசபை வளாக அன்பகம் உணவகத்தை வாடகைக்கு விட்டதில் இவர் தலையிட்டு அரசுக்கு வருமானத்தை இழக்கவைத்ததாக இவரது மேல் வழக்கு தொடரப்பட்டு வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. உடல்நிலை பாதிக்கப்பட்டவர் என்பதையும் மறந்து கலைஞரும் இப்படிச்செய்தார் என்பது வருத்தத்திற்குரியது. மதுரை கோர்ட்டில் ஆஜராகி வந்தார். இதனால் தற்போதையை அரசியலிலிருந்து ஓய்வு பெற்றிருந்தவர் இப்போது நிரந்தரமாய் ஓய்வும் பெற்றுவிட்டார்.
சில வருடங்களுக்கு முன் இதயநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவர்களின் உதவியால் அதிலிருந்து மீண்டு வந்தவர், 'திரு.வைரமுத்து எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசத்தைப் படிக்காமல் இறந்துவிட்டிருப்பேனோ' என்று மனம் நெகிழ்ந்து பேசியது இவரது இலக்கிய உணர்வுக்கும் ஆர்வத்திற்கும் பெரும் சான்று.
கடந்த வருடத்தில் சிங்கப்பூரில் ஒரு விழாவிற்குச் சிறப்புறை ஆற்ற வந்திருந்தார் திரு.கா.காளிமுத்து. பெருமாள் கோயிலின் கோவிந்தசாமி மண்டபத்தில் நடந்தது அக்கூட்டம். நானும் சென்றிருந்தேன். அடடா! அவர் நாவிலிருந்து கரை புரண்டோடிய அகநானூறென்ன, புறநானூரென்ன! தமிழைப் பிழையின்றிப் பெருமையுடன் பேசும் இத்தகையவர்களால் அல்லவா தமிழன்னை மகிழ்ந்து போயிருக்கிறாள்! கூட்டம் முடிந்தவுடன் கைகுலுக்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. மாபெரும் வரவேற்பு பெற்ற அவரது உரைக்கு நன்றி தெரிவித்துப் பேசிய விழாக் குழுவினர், 'இன்றுபோல நாம் தீராத தமிழ்ச்சுவை பருக மீண்டும் அவரை இங்கு வரவழைப்போம்' என்று கூட்டத்தின் கரகோஷங்களுக்கிடையில் சொன்னது இன்றும் ஞாபகம் இருக்கிறது. ராமுத்தேவன் பட்டி விடுமா அவரை?
தமிழார்வலராயும் தேர்ந்த அரசியல் மற்றும் பேச்சாளாராயும் விளங்கிய திரு. கா.காளிமுத்து அவர்களுக்கு எனது அஞ்சலி. அன்னாரது குடும்பத்திற்கும், அ.தி.மு.க விற்கும், அருமைப்புதல்வனை இழந்து தவிக்கும் தமிழ்த்தாய்க்கும் எனது ஆறுதல்.
அன்பன்
எம்.கே.குமார்
Monday, October 30, 2006
அதிமுகவுடன் கூட்டு வைத்த திமுக செயலாளர்!
தளபதி ஸ்டாலின் நேரில் தொடர்பு கொண்டு பேசியும் கேட்காமல் அறந்தாங்கி எம்.எல்.ஏவும் (உதயம் சண்முகம்) இதற்கு உடந்தையாக இருந்ததையடுத்து கட்சித்தலைவர்கள் அதிர்ச்சியிலுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அத்தனை ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் நகராட்சி மன்ற தலைவர் தேர்தல்களிலும் தி.மு.க வெற்றிபெற்று சாதனை படைக்க ஒரே ஒரு யூனியனான ஆவுடையார்கோயிலை அ.தி.மு.கவிற்கு தமது கட்சியாளரே தாரை வார்த்ததை அடுத்து அதிமுகவிற்கு ஆதரவளித்த அந்த ஒன்றியச்செயலாளரை அதிரடியாய் பதவி நீக்கம் செய்துள்ளது தி.மு.க.
அறந்தாங்கி எம்.எல்.ஏ உதயம் சண்முகம்விடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ என்பதற்காய் அவரை கட்சியிலிருந்து நீக்குவதற்கு கழகம் யோசித்துக்கொண்டிருக்கிறது போலும்.
***********
இதுபற்றிய தினமலர் செய்திகள்.
தி.மு.க., கையில் புதுகை உள்ளாட்சி அதிகாரம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே ஒரு பஞ்சாயத்து யூனியனை தவிர மீதமுள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கான ஆட்சி அதிகாரத்தை போட்டியின்றி தி.மு.க., கைப்பற்றியுள்ளது.
இந்த இடங்களில் தி.மு.க., சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு தி.மு.க., சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த தி.மு.க., நகரச் செயலாளர் முத்துசாமி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதுபோன்று துணைத் தலைவராக தி.மு.க., மாவட்ட பொருளாளர் சந்திரசேகர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
புதுக்கோட்டை நகராட்சி தலைவராக ராமதிலகம் (தி.மு.க), துணைத் தலைவராக நைனா முகம்மது (தி.மு.க) ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அறந்தாங்கி நகராட்சி தலைவராக மாரியப்பன் (தி.மு.க), துணைத் தலைவராக ஹாஜி முகம்மது (காங்கிரஸ்) ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பஞ்சாயத்து யூனியன்களில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள் விபரம் கீழ்வருமாறு:
* புதுக்கோட்டை: தலைவர் ஜெயா (தி.மு.க), துணைத் தலைவர் மகமாயி (தி.மு.க).
* அறந்தாங்கி: தலைவர் மெய்யனாதன் (தி.மு.க), துணைத்தலைவர் வெள்ளைச்சாமி (காங்கிரஸ்).
* கறம்பக்குடி: தலைவர் ஃபர்னட் மேரி (தி.மு.க), துணைத்தலைவர் ராமைய்யன் (சுயே)
* ஆவுடையார்கோயில்: தலைவர் ராஜேஸ்வரி (அ.தி.மு.க), துணைத்தலைவர் ராமனாதன் (தி.மு.க)
* கந்தர்வக்கோட்டை: தலைவர் மாரி அய்யா (தி.மு.க), துணைத்தலைவர் ராமைய்யா (காங்கிரஸ்)
* குன்னாண்டார்கோயில்: தலைவர் போஸ் (தி.மு.க), துணைத்தலைவர் அமுதாராணி(சுயே)
* திருமயம்: தலைவர் துரைராஜ் (தி.மு.க), துணைத்தலைவர் ஆவுடையப்பன் (தி.மு.க)
* திருவரங்குளம்: தலைவர் தங்கவேலு (தி.மு.க), துணைத்தலைவர் வடிவேலு (தி.மு.க)
*
* மணமேல்குடி: தலைவர் மஹமூதா பீவி (தி.மு.க), துணைத்தலைவர் முகம்மது அப்துல்லா (தி.மு.க)
* பொன்னமராவதி: தலைவர் ராஜு (தி.மு.க), துணைத்தலைவர் பழனியப்பன் (தி.மு.க)
கூட்டணி கட்சிகளுக்கு "வேட்டு' வைத்த விவகாரம் ஒன்றிய செயலர்கள் இருவர் உட்பட 21 பேர் நீக்கம்
சென்னை:கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக இரு ஒன்றியச் செயலர்கள் உள்ளிட்ட 21 பேர் தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தி.மு.க., பொதுச்செயலர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்தை சேர்ந்த ஜெயலலிதா மோகன், சுஜாதா, சோழவரம் ஒன்றியத்தை சேர்ந்த கோபிநாத், ஆர்.கே.பேட்டை ஒன்றிய பொதுக்குழு உறுப்பினர் கன்னியப்பன், திருவண்ணாமலை கீழ்பென்னாத்துõர் ஒன்றிய துணைச் செயலர் பன்னீர் செல்வம் ஆகியோர் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் கட்சியில் இருந்து நீக்கப்படுகின்றனர்.
அதேபோல், விழுப்புரம் ஒலக்கூர் ஒன்றிய செயலர் சொக்கலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் முருகேசன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஏழுமலை, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சீதாபதி, தினகரன், சண்முகம், தியாக துருகம் ஒன்றியத்தை சேர்ந்த காந்திமதி, முருகாயி, அண்ணாமலை ஆகியோரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையர்கோவில் ஒன்றிய செயலர் ராமநாதன், இலுப்பூர் செயலர் பூபதி, நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் ஒன்றியத்தை சேர்ந்த குப்புசாமி, விவசாய அணி அமைப்பாளர் நவலடி, நாமகிரிப்பேட்டை ஒன்றியம் சுலோசனா, பொத்தனுõர் பேரூர் செந்தமிழ்செல்வன், திருச்சி மாவட்டம் துவாக்குடி நகர செயலர் காயாம்பூ உள்ளிட்டோர் கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.இவர்களோடு தி.மு.க.,வினர் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.இவ்வாறு அன்பழகன் தெரிவித்துள்ளார்.
தி.மு.க., தலைமையின் சார்பில் தேர்தல் தொடங்கிய நாளில் இருந்து கூட்டணி கட்டுப்பாட்டை மீறுவோர் மீது கண்டிப்பான நடவடிக்கை எடுக்கப்படுமென கூறி வந்ததை அனைத்துக் கட்சியினரும் அறிவர். "கூட்டணிக்கு துரோகம் செய்து வெற்றி பெற்று பதவிக்கு வந்தாலும், அப்படி வந்த பதவி அற்ப ஆயுளில் முடிக்கப்பட்டு விடும் என்பதால் அதை அற்ப சந்தோசம் என்று சொல்லலாம்' என்றே நான் எச்சரிக்கை விடுத்ததையும் மீறி ஒவ்வொரு கட்சியிலும் இருப்பதைப் போல தி.மு.க.,விலும் உள்ள சிலர் தவறு செய்திருக்கலாம்.
அப்படி செயல்ப்பட்டவர்கள் மீதும், தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அப்பாவு, உதயம் சண்முகம், கே.பி.ராமசாமி ஆகியோர் மீதும், ஒன்றிய செயலர்கள், வெற்றி பெற்ற வேட்பாளர்கள் உட்பட 20 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, கட்சியில் இருந்து அவர்களை நீக்க நேற்றைக்கே முடிவெடுக்கப்பட்டது. முடிவுகள் முழுவதுமாக வருவதற்கு முன்பாகவே மூன்று எம்.எல்.ஏ.,க்கள் உட்பட 20 முக்கியஸ்தர்கள் மீது தி.மு.க., நடவடிக்கை எடுத்திருப்பதில் இருந்தே, எந்த அளவுக்கு கூட்டணிக் கட்டுப்பாட்டை காப்பாற்ற கட்சித் தலைமை முன் வந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும்.
***********
அதிமுகவை திமுக ஆதரித்ததன் மூலம், தலைவர் பதவியைப் பெற்றிருக்கவேன்டிய முன்னாள் ஒன்றியத்தலைவர் திரு.சுந்தரராஜன் வெற்றிபெறமுடியாமல் போனதும் திமுகவிலிருந்த தீயத்தூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலரான எனது அண்ணன் பெற்றிருக்கவேண்டிய ஆவுடையார்கோயில் ஒன்றிய துணைத்தலைவர் பதவி அநியாயமாய் தட்டிப்போய்விட்டதே என்பதும் எனக்கு மிகவும் வருத்ததிற்குரியதாய் இருக்கிறது.
காத்திருக்கலாம்.
அன்பன்,
எம்.கே.
Friday, September 08, 2006
செந்நீர் விட்டே வளர்க்கிறோம் சர்வேசா!
மீதமிருக்கும் எந்தமிழரினம் செந்தமிழரினம்
வாழ்வைத் தேடி உயிரைச் சிறையிட்டு
நீர்ப்பாதை நகரும் வாழ்க்கைப்படகுகளேறி!
சிந்திய செந்நீரெல்லாம் நிலமதற்குத்தானே என
நீயும் கேட்டா நீரன்னையே
உனது பங்குக்கு என்னினத்தைக்
கடலில் கரைத்து விழுங்கிச் சுவைக்கிறாய்!
சிசு இழந்து மனையிழந்து மாடு கன்று உறவிழந்து
கனவுகளின் அதிர்ச்சியிலும் கண்ணிவெடிகள் ஷெல்மழைகள்!
உரிமை கேட்கும் மனித இனத்தை
ஒடுக்க நினைக்கும் பேரினப்பேய்களே
உத்தமன் புத்தனின் ஒருவழிப் பிறப்புகள்தானா நீவிர்?
எந்தமிழர் ரத்தம் இனிப்புச்சுவையா இனவெறியர்காள்!
ஷெல்லால் சிதைத்து சிசு ரத்தம் குடித்த பின்
எனதருமை குலவிளக்குகளின் கருவறைக்குள்ளும்
துப்பாக்கி முனைகொண்டு இரத்தம் தேடுகிறீர்களே
இதென்னவோ அஃறிணைக் கொடுமை!
மொத்தத்தைத் துறந்த புத்தா
ரத்தம் குடிப்பதை மட்டுமா போதித்துச்சென்றாய் நீ
எங்களின் இருப்பிடத்திற்காய் ஆன இந்த இரத்தக்குளிப்பை
எடுத்துச்சொல்வாயா இவர்களுக்கு?
வாழுதடம் தெரியாமல் ஒழிக்க நினைக்கும்
துரோக வெறியர்களை மேடையேற்றி
உயிர் வாழ உயிர் துறக்கும் வாழ்க்கை -வேட்கைப் பரிகளை
கண்மூடி கைதடவி யானை காணும் குருடன் போல
பயங்கரவாதி என்றாக்குதல் தகுமா
பகுத்தறிவற்ற பன்னாட்டினரே?
உயிர்வாழப் போராடுவது உரிமைவாதமா
இல்லை தீவிரவாதமா?
குலம் வாழ உயிர் மரிப்பவர்கள் உரிமைவாதிகளா
இல்லை பயங்கரவாதிகளா?
சாத்தானின் வாய்ப்பூச்சுக்கு செவிட்டுப்பேய்கள் மயங்கிக்கிடக்கலாம்
சமதர்ம சமுதாயமே உனக்குமா உரைக்கவில்லை?
செந்நீர் விட்டே வளர்க்கிறோம் சர்வேசா
செந்நீர் விட்டே வளர்க்கிறோம் எனதருமை சர்வேசா!
சீக்கிரம் வேண்டும் நீதி செய்துகொடு சர்வேசா!
சீக்கிரம் வேண்டும் நீதி; செய்துகொடு எங்கள் சர்வேசா!
(நண்பரிடமிருந்து)
Tuesday, August 22, 2006
Friday, August 04, 2006
ஒரு நதியின் கரையில் - எழுத்தாளர் ஜெயமோகனுடன்!
இப்படியான சில எண்ணங்களோடு மட்டுமே திரு.ஜெயமோகனை நான் அறிந்திருந்தேன். கடந்த சில நாட்களாக அவருடம் பழகும் பேரதிர்ஷ்டம் கிடைத்தமைக்கு இறைவனுக்கு நன்றி கூறுகிறேன்.
உள்ளே நுழையுமுன்.......
கடந்த எழுபத்தைந்து கால சிறுகதை வரலாற்றில் ஒரு திறனாய்வுப் பட்டியலாய் மிகச்சிறந்த கதைகளும் அவற்றின் படைப்பாளிகளுமாய் எழுபத்தைந்து பேரைச் சொன்னார் திரு. ஜெயமோகன். இங்குதான் போட்டி. ஜெயமோகன் குறிப்பிட்ட சிறுகதையாசிரியர்களில் அதிகச்சிறந்த கதைகளை எழுதி முதல் இடத்தைப் பிடித்திருப்பவர் யாரென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அல்லது முதல் மூன்று இடம் யாருக்கு? மனதில் வைத்துக்கொள்ளுங்கள்! விடைகள் கீழே.! சரியாகக் கணிப்பவர்களுக்கு (இந்த வருடத்தில்) ஒரு கலர் டிவியும் (ஐந்தாண்டு கழித்து) கம்யூட்டரும் அரைபவுன் தாலியும் பரிசாக வழங்கப்படும்!
இனி, பின் தொடர்ந்த உணர்வின் பதிவுகள்!

ஜெயமோகனின் உலகம் மிகப்பெரியதாய் இருக்கிறது. எந்தத்தலைப்பில் இவருடன் பேச ஆரம்பித்தாலும் சிந்தனைகள் பலவாறாக பின்னோக்கி அல்லது முன்னோக்கி ஓடுகின்றன.கடந்த வந்த பாதையின் ஒவ்வொரு அடிகளையும் ஞாபகம் வைத்திருக்கிறார். தன் வாழ்க்கையின் சில சிறந்த அத்தியாயங்களை உருவாக்கிய திரு.சுந்தர ராமசாமியை அடிக்கடி நினைவு கூறுகிறார். தான் கற்றுக்கொடுத்த சீடனே தன்னை மிஞ்சும் சூழ்நிலையில் சு.ராவைப்போல ஏற்றுக்கொள்ளக்கூடிய சிறந்த குருக்கள் தமிழிலக்கிய உலகில் காண்பதறிது என்கிறார். அவருடைய 'குழந்தைகள் பெண்கள் ஆண்களுக்கு' தன்னுடைய விமர்சனத்தை நேரடியாக அவர் ஏற்றுக்கொண்டது அதற்குச் சான்று என்கிறார். தொடர்ந்து பதினான்கு மணி நேரங்களெல்லாம் அவருடன் பேசிக்கொண்டிருந்ததை எண்ணும்போது மேடையில் இரண்டு மணிநேரம் பேசுவது சிரமமில்லை என்கிறார்.
ஜெயமோகன் தன்னுடைய தாயாரின் புலமைமீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார். இடதுசாரி சிந்தனைகள் கொண்ட குடும்பத்திலிருந்து வந்த பெண் அவர் என்பதால் இருக்கலாம் என்கிறார். ஓரிரு வருடங்களே வித்தியாசமிருப்பினும் தன்னுடைய அண்ணன் இன்னும் தன்னை ஒரு குழந்தையைப்போல நேசிப்பதை அக்கறைப்படுவதைச் சொல்கிறார். இவர்களைனைவரும் அசோகவனத்தில் இருக்கிறார்களாம். 'அசோகவனம்' அவருடைய அடுத்த படைப்பு மட்டுமல்ல நீண்டகாலத்தவம் என்பது உங்களுக்குத்தெரிந்திருக்கும். தன்மனைவி அருண்மொழி, குழந்தைகள் அஜிதன், சைதன்யா ஆகியோருடைய அன்புகளையும் சந்தோசங்களையும் ஒரு சராசரி மனிதனாய் பகிர்ந்துகொள்கிறார். சின்னச்சின்ன உணர்வுகளையும் இலக்கிய உதாரணங்களையும் இவர்கள் தொடர்பான பேச்சுகளிலிருந்தும் பெறமுடிகிறது.
முத்தமிழ் விழா முடிந்து கூட்டத்தினர் ஆங்காங்கு நின்றுகொண்டு கதைக்கும்பொழுது 'சங்க சித்திரங்கள் படித்தேன், ஒவ்வொரு வாரமும் அருமை, அருண்மொழியும் நீங்களும் காதலித்து திருமணம் செய்துகொண்ட கதைகூட வந்ததே!' என்றெல்லாம் சூழ்ந்துகொண்டிருந்த இளைஞர்குழாம் ஒன்று புளகாங்கிதமடைந்து கொண்டிருக்க, வெட்கப்பட்டு நிற்கும் அருண்மொழியவர்களை, இதோ இருக்கிறார் அருண்மொழி என்று கைகாட்டுகிறார். தன்னிடம் அறிமுகம் கொள்ளும் எவருக்கும் தனது மனைவியையும் அறிமுகப்படுத்துகிறார். எல்லாவற்றிற்கும்பின்னே இருக்கும் அவரது அருமை புரிகிறது நமக்கு.
நண்பர்கள் கூடிய ஒரு பொழுதில் சிறுகதையின் சாரம், நாவல், தனது நாவல்களுக்குப் பின்னேயான நாட்கள், மனம் உருகி கண்ணீர் உருண்டோட எழுதிய வரிகள், என்பனபற்றியெல்லாம் விரிவாகச்சொல்கிறார். சிறுகதையின் வடிவம் அதன் நுட்பம் சார்ந்த விஷயங்கள் சிறுகதைப்பட்டறையில் விளக்கப்படும் என்பதால் நாவலில் பேச்சு திரும்புகிறது. ஒரு முடிச்சை அவிழ்ப்பது போன்று, ஒரு கயிற்றைப் பிரிப்பது போன்று பலவேறு கோணங்களில் பிரித்து எழுதப்படவேண்டியது அது! நாவல் முடியவேண்டும் என்று எந்தச்சட்டமும் இல்லை என்கிறார். காட்டில் தானிருந்த அந்த அனுபவங்கள் அளப்பறிய ஞானங்களைத் தரவல்லது, ஒவ்வொரு சத்தமும் ஒவ்வொரு அசைவும் ரசிக்கக்கூடியது, பிரமிப்பூட்டக்கூடியது என்கிறார். காடு நாவலில் கிடைத்த குட்டப்பன், ரெசாலம், ரெஜினாமேரி யாவரும் தானாய் வந்து சேர்ந்த பாத்திரங்களே என்றும் அப்படி யாரையும் நேரில் பார்த்து எழுதவில்லை என்கிறார். தேவாங்கைப் பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டு அதைப்பற்றி நகையாக விரிவாகப்பேசுகிறார்.
பின்தொடரும் நிழலின் குரல் நாவலில் ஓரிடத்தில் தனது இதயம் குழைந்து கண்ணீர் பொங்கிட வந்த வரிகள் சில இருக்கின்றன என்கிறார். கொற்றவை நாவலிலும் சில இடங்களில் அமாதிரி அனுபவம் வாய்த்ததை விவரிக்கிறார். கொற்றவை முழுக்க முழுக்க தமிழ்வார்த்தைகளால் எழுதப்பட்டது, எங்காவது ஓரிரு சமஸ்கிரீத வார்த்தைகள் வந்திருந்தால் கூட அது கவனக்குறைவால் வந்திருக்கவேண்டும் என்கிறார். (கடந்த ஜனவரியில் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கொற்றவை வாங்கிக்கொண்டு கிழக்குப் பதிப்பக வாசலுக்கு வந்தபோது அங்கே ஒரு நண்பர், 'அப்படி என்ன இருக்கிறது இதில், ஏன் எல்லோரும் இதில் போய் விழுகிறார்களோ' என அங்கலாப்போடு சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது!)
நண்பர் தமிழினி வசந்தகுமாரைப் போன்ற வாசக பூரணத்துவம் பெற்றவர்கள் எவரும் இருக்கமுடியாது. மிகச்சிறந்த வாசகர் அவர் என்பதாலாலேயே மிகச்சிறந்த புத்தகங்களை அவரால் போடமுடிகிறது என்கிறார். மற்ற பதிப்பக புத்தகங்கள் அல்லது இணையத் தகவல்களின் புத்தகத் திரட்டிகளைப்பற்றிக் கேட்கும்பொழுது, எல்லாம் வருவது நல்லதுதான், யாருக்காவது எப்போதாவது பயன்படுமல்லவா என்கிறார். ஆனால் சிலரின் முக்கியப் புத்தகங்கள் சுமாரான பதிப்பகம் வெளியிட்டதால் அடையவேண்டிய இடத்தை அவை அடையாமல் போனதும் நடந்திருக்கிறது என்று எஸ்.ராமகிருஷ்ணனின் உதாரணம் கொண்டு விளக்குகிறார்.
தற்காலப் படைப்பாளிகளில் தனக்குத்தெரிந்து எஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர் ஆகியோர் நிறையப்படிக்கிறார்கள்; நன்றாகவும் எழுதுகிறார்கள் என்கிறார். ஆழிசூழ் உலகு புகழ் ஜோ டி குரூஸ் இன்னும் ஏழு எட்டு நாவல்களை எழுதலாம், அந்த அளவிற்கு அவரிடம் திறமை, விஷயம் இருக்கிறது என்கிறார்.
ஒரு நாவல் எழுதுவதற்கு முன், இது யாருடையது, எதைப்பற்றி எழுதுகிறோம், எங்கே ஆரம்பித்து எப்படி முடிப்பது என்பதை மட்டும் கொண்டால் போதும். ஒட்டுமொத்த காதாபாத்திரங்களையும் முதலில் உள்வாங்கிக்கொண்டு எழுதினால் ஒரு செயற்கைத்தன்மை வந்து ஒட்டிக்கொள்ளலாம். ஆனால் அதற்கு முன் நிறைய நாவல்களை படிக்கவேண்டும் என்கிறார்.

நான் வெளியிலோ யாரிடமோ பேசுவது என்பது மிகக்குறைவு என்றும் ஆனால் என் காதுகள் எப்போதும் எவற்றையாவது கேட்டுக்கொண்டே இருக்கும் என்கிறார். டீக்கடையில் புழங்கும் சாதாரண உரையாடல்களிலும் பல நாவலுக்குரிய விஷயங்கள் கிடைக்கவாய்ப்பிருக்கலாம், நாஞ்சில் நாட்டு மக்களின் எல்லாப் பேச்சுகளிலுமே அவர்களறியா ஏதாவது ஒரு நையாண்டித்தனம், நறுக்கென்று வலிக்காமல் கொட்டும் தன்மை ஆகியவை இருப்பதாகவும் அவற்றைக் கேட்டுக்கொண்டிருப்பதே பெரிய விஷயஞானம் அளிக்கும் என்கிறார். ஒரு நல்ல எழுத்தாளன் காதுகளை எப்போதும் திறந்து வைத்திருக்கவேண்டும் என சுராவோ யாரோ சொன்னதாகச்சொன்னார்.
மதுரையில் ஒரு கல்லூரியில் பேச வந்திருந்தபோது மனுஷ்யபுத்திரன், சு.வேணுகோபால் மற்றும் பல இன்றைய எழுத்தாளர்கள் அன்றைய மாணவர்களாய்ச் சூழ்ந்துகொண்டு கேள்விகேட்டதை ஞாபகம் வைத்திருக்கிறார்.
நான் கடவுள் படத்திற்கு வசனம் எழுதும் அனுபவத்தை சந்தோசமாக விவரிக்கிறார். பாலாவின் சாப்பாடான ஒரே ஒரு இட்லியைப் பார்த்து ஆச்சர்யப்படுகிறார். பாலாவும் அவரது டீமும் கொள்ளும் சுவாரஸ்யமான பிணைப்பைச் சொல்கிறார். மதுரை ஏரியாவில் மரியாதையின் முக்கியத்துவத்தையும் பாலாவிடம் தான் கண்டமையையும் கூறுகிறார். ஒரே இரவில் இருபத்தியிரண்டு பக்கங்கள் கொண்ட வசனத்தை அவரிடம் எழுதிக்கொடுத்ததையும் பாலா தன் பேட்டியில் அதைப்பற்றிச்சொன்னதையும் சொல்கிறார்.
சிறுகதைப்பட்டறைக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடங்கள் அறுபது. கடைசிநேர ஆர்வத்தாலும் திடுமெனச் செய்தி கேட்டு வந்தவர்களுமாய் ஒரு பத்து பேர் சேர்ந்துகொள்ள எழுபது (பிளஸ்) நபர்களுடன் சிறுகதைப்பட்டறை தொடங்கியது. சிறுகதை என்பது என்ன என்பதில் ஆரம்பித்து அதன் தோற்றம், முடிவு, வடிவம், உரையாடல், கவித்துவ உணர்வு ஆகிய அனைத்து மூலக்கூறுகளையும் விரிவாகச்சொன்னார். பரிசுவாங்கிய எழுத்தாளர்கள், பரிசுவாங்கப்போகும் எழுத்தாளர்கள், எதிர்கால எழுத்தாளர்கள், விமரிகர்கள், மாணவர்கள் என்று பலவாறாய் வந்திருந்த அக்கூட்டத்திற்கு அவரது உரை மிக மிகப் பயனுள்ளதாய் இருந்ததாகச்சொல்லப்பட்டது. சிங்கப்பூர் தமிழ் வானொலியான ஒலி 96.8ல் சிங்கப்பூரின் (சிறுகதை) இலக்கிய உலகை அடுத்த தளத்திற்கு எடுத்துச்செல்லும் வடிவில் மிக அருமையாய் இது இருந்ததாக திரு. பொன் மகாலிங்கம் செய்தியில் சொன்னார்.
ஜெயமோகனின் இப்பட்டறை குறித்தான பேச்சுகள், கருத்துகள் பிரிண்ட் செய்தும் கொடுக்கப்பட்டது. செவ்வியல் (classic) வடிவ சிறுகதையின் பலகூறுகளை மிகச்சிறப்பாக விளக்கும் அக்கட்டுரையை இங்கு போட்டால் மிகப்பயனுள்ளதாக இருக்கும் என்று உறுதியாக நான் நம்புகிறேன்.
விலாவாரியாக இல்லாவிட்டாலும் சுருக்கமாக அதுபற்றிப் பார்ப்போம்.
"சிறுகதையில் முடிவில் இருக்கிறது அதன் உயிர். அவ்வுயிரைக்கொண்டே சிறுகதை தனது வடிவத்தைப் படைத்துக்கொள்கிறது. முடிவு ஒரு திருப்பமாகவோ அல்லது அதிர்ச்சியடையவைக்கும் படியாகவோ அல்லது வாசகன் இதுகாரும் படித்து யூகித்து வந்தபடியில்லாமல் படித்துமுடித்ததும் வேறு சிந்தனையைத் தூண்டும் விதத்திலோ இருக்கவேண்டும் என்பதில் மிக மிக உறுதியாக இருக்கவேண்டும். இதற்காய் குமுதத்தில் எழுதப்படும் ஒருபக்கக் கதையில் வரும் திருப்பத்தைக்கொண்டு அது சிறந்த கதையாய் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. அது அத்திருப்பத்திற்காகவே படைக்கப்பட்டது என்பதால் அதில் அவ்வுயிர் இல்லை. சிறுகதையின் முதல்வரி எப்போதும் வித்தியாசமாய் கவர்ந்திழுக்கக்கூடியதாய் இருக்கவேண்டும். இதற்கு எனது மாடன் மோட்சம் கதையின் முதல்வரி மிகச்சிறந்த உதாரணம். சிறுகதையின் வடிவம் வேறு எங்கும் இழுத்துச் செல்லாவண்ணம் கட்டப்பட்டிருக்க வேண்டும்; முடிவை நோக்கியே அது ஓடவேண்டும்.
"சிறுகதையில் பின்னோக்கு உத்திகளைப் பயன்படுத்துதல் கதையைக் குலைத்துவிடும். பின்னோக்கு உத்தியைப் பயன்படுத்தாமல் உரையாடல்கள் மூலம் கடந்தகாலத்தைக்கொண்டு வருவது மிகச்சிறப்பு, அதையே நானும் வரவேற்கிறேன். இதில் அசோகமித்திரன் சுஜாதா மாஸ்டர்கள். கதையின் உரையாடல்கள் முடிவை நோக்கி இழுத்துச்செல்லும் வண்ணம் இருத்தல் அவசியம்; அதைவிடுத்து வழவழாகொழகொழா இருக்கவேகூடாது. பேச்சும் சுவாரஸ்யம் மிக்கதாய் செயற்கைத்தன்மை அற்று இருத்தல் மிக அவசியம்."
உதாரணத்திற்காய் வந்து விழும் பெயர்களில் புதுமைப்பித்தன், அசோகமித்திரன், சுஜாதா, சுந்தரராமசாமி, நாஞ்சில்நாடன், வண்ணதாசன் ஆகியன அடிக்கடி வருகின்றன.
"முடிவிற்குப்பிறகு அல்லது திருப்பத்திற்குப்பிறகு கதையை இழுத்தல் என்பது வாசகனுக்குச்செய்யும் மிகப்பெரிய துரோகம். அவனைச் சிந்திக்க விடாது நீங்கள் படுத்தும் பாடு. எழுத்தாளனுடன் வாசிக்கும் வாசகத்தன்மையை கதைகள் பெற்றிருக்கவேண்டும். வாசக இடைவெளியுடனும் கதைகள் படைக்கப்படுவதுண்டு. கோணங்கியின் கதைகள் இவ்வகையைச்சார்ந்தவை."
"கதையின் நாயகன் யார் என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். அவனை/அவளை/அதை அவ்வபோது குறுக்குவெட்டு வெட்டிச்செல்லும் பாத்திரங்களை பிறகு அறிமுகப்படுத்தவேண்டும். நாயகனைத்தவிர வேறு எவற்றையும் விலாவாரியாய் விளக்கவேண்டிய அவசியமில்லை. சிலசமயங்களில் நாயகன்/நாயகியைக் கூட மாமி எழுத்தாளர்கள் மாதிரி ஒவ்வொன்றாய் விவரிக்காமல் சரேலென கதைக்குள் புகுந்து ஒரே ஒரு வரியில் அவரது அழகை இயல்பை வெளிக்காட்டிக் கதைக்குள் இழுத்துச்செல்லும் வைபவமும் அசோகமித்திரனால் நடப்பதுண்டு."
"இரு கதாநாயகர்கள்/ அல்லது மூன்று கதை நாயகிகள் ஆகியன சிறுகதையின் செவ்வியல் அழகை குலைக்கலாம். அது அழகும் இல்லை. புதுமைப்பித்தன் போன்ற ஜாம்பவான்களால் அது முடியும். கதையின் தலைப்பு ஒருபோதும் உள்ளடக்கத்தை நேரிடையாய் சொல்வதாய் இருக்கக்கூடாது. கதையின் தலைப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. கதையின் முதல்வரி கதையின் செறிவை எடுத்துக்காட்டுவதாய் இருக்கவேண்டும் "
"கதையை டுவிஸ்ட் எனப்படும் திருப்பத்தோடுதான் முடிக்கவேண்டும் என்பதையே வளர்ந்துவரும் இலக்கியச்சூழல் மாறுபடுத்துகிறது. கவித்துவமான முடிவுகளை அது கொண்டிருந்தால் அதுவும் சிறந்த முடிவுகளாய் உருவாகும். உதாரணமாக சுந்தரராமசாமியின் பிரசாதம் கதை, வண்னதாசனின் நிலை கதை, தி.ஜானகிராமனின் ஒரு கதை, அசோகமித்திரனின் ஒரு கதை. ஆனால் இது மிகச்சிறந்த கவித்துவ வடிவத்தைத் தரவேண்டும். பொதுவாக மாஸ்டர்கள் உருவாக்கும் வடிவம் இது."
மக்களே, இது பற்றி விரிவாய் எழுத அல்லது அல்லது கட்டுரையை டைப் பண்ண இப்போது நேரமில்லை. இதுபோக, ஏற்கனவே சொல்லியவாறு கடந்த எழுபத்தைந்தாண்டுகால மிகச்சிறந்த சிறுகதைகளும் அவற்றைப் படைத்தவர்களும் என ஒரு 75 பேர் அடங்கிய பட்டியலையும் ஜெயமோகன் எல்லோருக்கும் அப்பட்டறையில் கொடுத்தார். (இரண்டையும் அவரிடமும் கேட்டுவிட்டு நேரமிருக்கும்போது தட்டச்சு செய்கிறேன்)
(அதை முழுவதுமாகத் தெரிந்துகொள்ளவேண்டும் என்று விரும்புபவர்கள் நூறு ரூபாய்க்கு மணியார்டர், புத்தகஆர்டர், சாப்பாடு ஆர்டர், ஏதாவது ஒரு ஆர்டரை எனக்கு (இம்சை அரசன் 23ம் சிங்கப்பூர்வாசி) அனுப்பவும். எனது முகவரியை பின்னூட்டமிடுகிறவர்களுக்கு பிறகு சொல்கிறேன். ஆஸ்திரேலிய நியூஸிலாந்து ஆடு எனக்குப்பிடிக்காது. எனவே அங்கிருப்பவர்கள் 'மட்டன் ஆர்டர்' அனுப்பவேண்டாம். தாய்லாந்திருப்பவர்கள் என்ன ஆர்டர் அனுப்பவேண்டும் என நான் சொல்லாத வேளையிலும் ரத்தத்தின் ரத்தமே உடன் பிறப்பே உனக்கா தெரியாது? இலங்கை நண்டு பிடிக்கும். வேண்டாம் மக்களே, இலங்கை என்றவுடன் மனசு பாரமாகிவிடும்)
ஈழத்தமிழர்கள் மீது மிகப்பெரிய மரியாதை வைத்திருக்கிறார் திரு.ஜெயமோகன். அவர்களது வாசிப்பனுபவத்தின் மீது அதீதப்பிரியம் வைத்திருக்கிறார். கனடாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து ஜெயகாந்தனை மட்டுமே பார்த்துவிட்டுச் செல்லக்கூடிய ஈழத்தமிழர்களைப்பற்றி பேசும்போது அவர்களது இலக்கிய உலகத்தில் பிரமித்துப்போகிறார். ஆரம்பத்திலிருந்தே ஈழநாடு அப்படியான இலக்கிய உணர்வுகளை மேம்படுத்திக்கொண்டு வந்திருக்கிறது என்கிறார். ஈழத்தமிழர்களைப் பற்றிப் பேசப்பேச நமக்கே அவர்களைப் பார்த்து பொறாமை வந்துவிடுகிறது. (கடந்த வருடம் சாருநிவேதிதா இங்கு வந்தபோது ஈழநாதன் ஒரு கேள்வி கேட்டார். ஒரு நிமிடம் ஆடிப்போன சாரு, 'அடடா! இந்தக்கேள்வியை ஒரு தமிழ்நாட்டு வாசகன் கேட்டிருந்தால் நான் எப்படி புளகாங்கிதம் அடைந்திருப்பேன், இவற்றையெல்லாம் இவர்கள்தானே ஊன்றிப் படிக்கிறார்கள்' என மனமறிந்து ஆச்சர்யப்பட்டார்.)
இன்றும் யாழ்ப்பாணத்தின் எல்லா ஊர்களிலிருந்தும் பல கடிதங்கள் தனக்கு வருவதாயும் அவர்களின் பெயர்களைக்கூட எதிர்ப்படும் ஈழநாட்டு வாசகர்களிடம் கேட்டுப்பார்க்கிறார் ஜெயமோகன். எல்லோருக்கும் எல்லோரையும் பெரும்பாலும் தெரிந்திருக்கிறது என்கிறார்.

தான் அடிக்கடி ஜெயகாந்தனைப் போய்ப் பார்ப்பதையும் அவரைப்போன்ற (எத்தகைய அரசாட்சிக்கு முன்னாலும்) கம்பீரமாய் நிற்கக்கூடிய எழுத்தாளுமை கொண்டவர்கள் அரிது என்பதையும் ஒப்புக்கொள்கிறார்.
புதுப்பேட்டை படம் பற்றி உயிர்மை, காலச்சுவடு முன்வைத்த கருத்துக்களை நான் கேட்க, சில கவித்துவ பார்வைகளை ஏற்றுக்கொண்டு கதையைப் பற்றி கிண்டலடிக்கிறார். ஒருலட்சம் அடிக்கு படம் எடுத்தவர்கள் கதையைத் தொலைத்ததுதான் பாவம் என்கிறார். (புதுப்பேட்டைக்கு சாருவின் விளக்கத்தில், அவருக்கு வசன வாய்ப்பு தரவில்லையே என்கிற ஏக்கம் பொங்கி கொட்டுவதாய் நான் சொன்னேன்.)
குமரிக்கண்டம், கொற்றவை, புத்தர் மற்றும் சமண வைணவ மதங்கள் (விஷ்ணுபுரம்), சாவித்திரியின் நடிப்பு, அஜீத் பாலா பிரச்சனை, பதினெட்டுப்பட்டி நாட்டார்கள், கீரிப்பட்டி, பாப்பாபட்டி பிரச்சனைகள்(இது பற்றி கேட்கவேண்டும் என்று இவர் இங்கு வந்தபோதே நினைத்துவிட்டேன்!), மறைந்த உவமைக்கவிஞரின் (சுரதா) தனித்தமிழ் நேசம், மூடிய கதவுகளுக்குப்பின் சில எழுத்தாளர்களது ஆளுமைகள்(!) என்பனபற்றியெல்லாம் பேச்சு சுவாரஸ்யமாய் இருந்தது. நேசக்குமாருடன் தான் ஒரே ஒருமுறை பேசியதாய்ச் சொல்கிறார். (திண்ணை வாசகர்கள் கவனிக்கவும்!)
இந்தியாவிலே அதிக வார இதழ்களைக் கொண்டிருந்தாலும் கேரளாவில் நல்ல இலக்கியத்திற்கென்று ஒரு மரியாதை இருக்கிறது. அங்கிருக்கும் சில படைப்பாளிகளும் அதனைச் சிறப்பாய் வெளிக்கொணர்கிறார்கள் என்கிறார். ஒரு பத்திரிகை ஆசிரியப்பணி கேரளாவில் கிடைத்தபோது (அப்போதிருந்த சம்பளத்தை விட பத்து மடங்கு அதிகமாய் இருந்தாலும்) அதில் தான் எழுதுவதற்கு அதிகம் நேரமிருக்காது என்பதாய் அதை உதறியதைப் பெருமையாய்ச் சொல்கிறார்.
உணவுக்கட்டுப்பாட்டில் மிகுந்த சிரத்தையாய் இருக்கிறார் திரு.ஜெயமோகன். எண்ணையில் பொறித்த உணவுகளைக் கண்டு காததூரம் போகிறார். பேசிக்கொண்டிருக்கும்பொழுதே அவரது சிந்தனைகள் வேறொரு உலகத்தின் அடி ஆழத்துக்குச் சென்றுவிடுகின்றன. ஜீவன்தாரா அவரை நனவோடைக்குள்ளும் சிந்தனைச்சுரங்கத்துக்குள்ளும் அவ்வப்போது வயப்படுத்திவிடுகிறாள்.
முத்தமிழ் விழா, இலக்கிய நண்பர்கள் சார்ந்த கூட்டங்கள் மற்றும் உரையாடல்கள், சிறுகதைப்பட்டறை என எல்லா வகையான இலக்கிய சமாச்சாரத்திற்குள்ளும் (எழுத்தாளரின் மனைவி என்பதற்கப்பால்) ஒரு மேம்பட்ட வாசகியாய் பங்காற்றிய திருமதி. அருண்மொழிநங்கை ஜெய மோகனைப் பார்த்து பிரமித்தது உண்மை! எத்தனை இலக்கியவாதிகளுக்கு கிடைக்கும் இத்தகைய பேறு!
தமிழிலயக்கிய உலகில் மிகச்சிறந்த விமர்சகராயும் மிகச்சிறந்த படைப்பாளியாயும் இருந்தும் ஒரு சராசரி மனிதராய் எல்லோரிடமும் கலக்கும் திரு.ஜெயமோகனைச் சந்திக்கும் வாய்ப்பு பெற்றமைக்காக இறைவனிடம் மீண்டும் நன்றி சொல்லி எல்லாம் வல்ல ஆதிபகவன் அவருக்கு நல்ல சுகங்களைத்தரவேண்டும் என வேண்டிக்கொண்டு தற்போதைக்கு உங்களிடமிருந்தும் விடைபெறுகிறேன்.
அன்பன்,
எம்.கே.குமார்.
விடைகள்:
அ). மிகச்சிறந்த கதைகள்.
12 கதைகள் பெற்று முதலிடத்தைப் பிடிப்பவர்கள் இருவர். ஒருவர் புதுமைப்பித்தன் மற்றவர் அசோகமித்திரன்.
ஆ). மிகச்சிறந்த கதைகள்.
8 கதைகள் எழுதி இரண்டாமிடத்தைப் பிடிப்பவர்கள் பலர். 1.கு.அழகிரிசாமி 2.தி.ஜானகிராமன் 3.கி.ராஜநாராயணன் 4.சுந்தர ராமசாமி 5.ஜெயகாந்தன் 6.கோணங்கி
இ)ஏழு கதைகளுடன் மூன்றாமிடத்தில் சுஜாதா
ஈ) ஆறு கதைகளுடன் அடுத்த இடத்தில் லாசரா, ந.பிச்சமூர்த்தி, அ.முத்துலிங்கம், ஆ.மாதவன், வண்ணதாசன், ஜெயமோகன் மற்றும் எம்.யுவன்
நன்றி:
திரு & திருமதி ஜெயமோகன்,
தமிழ் எழுத்தாளர் கழகம் சிங்கப்பூர்.
Wednesday, August 02, 2006
முத்தமிழ் விழா
விழாவிற்குத் தலைமைதாங்கி கொஞ்சும் தமிழிலும் மேதமை ஆங்கிலத்திலும் அசத்தி அமர்ந்தார் திரு.தர்மன் ஷண்முகரத்னம், சிங்கப்பூரின் கல்வியமைச்சர் மற்றும் உதவி நிதி அமைச்சர். கருத்துரையை திரு.ஜெயமோகனும் இலக்கியப்பேருரையை திரு.வைரமுத்துவும் ஆற்றுவதாய் அழைப்பிதழில் போடப்பட்டிருந்தது. அதைப்பற்றி பிறகு பார்ப்போம்.
விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தை மிக அழகான உச்சரிப்புகளோடு ஒரு மாணவி பாடினார். மிகக்குறைந்த வயதிலேயே பாட்டுவட்டுகளும் அவர் வெளியிட்டிருக்கிறாராம்.

அதற்குப்பிறகு கதைசொல்லும் போட்டியில் வென்ற சிறுவயது மாணவி பெத்தனாட்சி கதை சொல்ல மேடையேறினார். அடடா! என்ன உச்சரிப்பு, என்ன அபிநயம்! வாரி அணைத்துக்கொள்ளவேண்டும் போலிருந்தது அக்குழந்தையை. மிக எளிமையான உடையில் இருந்ததால் எனக்கு இன்னும் பிடித்துப்போனது.
அதனைத் தொடர்ந்து செல்வி ஸ்ருதி ரமேஷ் மற்றும் அவருடைய தோழி இருவரும் இணைந்து வழங்கிய கண்ணோடு காண்பதெல்லாம் பாடலுக்கான நடனநிகழ்ச்சி பாராட்டக்கூடியதாய் இருந்தது.

அதற்குப்பிறகு ஆரம்பித்தது பாலர் மற்றும் தொடக்கப்பள்ளி மாணவமாணவிகளுக்கான மாறுவேட இறுதிப்போட்டி. கட்டபொம்மன்களும் கண்ணகிகளும் திருவள்ளுவரும் தமிழ்த்தாயும் வீரசிவாஜியும் வெறுமனே வந்துவிட்டுச்செல்லாமல் அழகுமொழியில் அதிரவைத்து அனைவரின் நெஞ்சையும் கவர்ந்தார்கள் என்றுதான் சொல்லவேண்டும். கட்டபொம்மனாய் நடித்த செவாலியே கூட இம்மாதிரி கையைச் சொடுக்கிப் பேசவில்லை என்னுமளவுக்கு அசரவைத்தார்கள் சிறுவர்கள். கண்ணகி சிலம்பை மன்னன் எதிரில் வீசியதில் எதிரில் அமர்ந்திருந்த அமைச்சர் அவர்கள் கொஞ்சம் திணறித்தான் போனார். அருகிலிருந்த தனது சீன உயர் அதிகாரிக்கு அவர் அதை விளக்கிச்சொன்னது தெரிந்தது. முத்துகளும் மாணிக்கங்களும் மேடைக்குக்கீழே சிதறிக்கிடந்தன.
எழுத்தாளர் கழகத்தில் பொருளாளர் பதவி வகிக்கும் திருமதி. சித்ரா ரமேஷ் மற்றும் செயலாளர் திரு.சுப.அருணாசலம் ஆகியோர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்கள்.
சிங்கப்பூரில் தமிழுக்கு அடையாளம் கொடுத்த தமிழவேள் திரு.கோ.சாரங்கபாணி அவர்களுடைய நினைவாக ஒவ்வொரு வருடமும் தமிழ்வேள் விருது வழங்கும் பணியும் நடந்தேறிவருகிறது. இம்முறை கவிஞரேறு அமலதாசு அவர்களுக்கு அவ்விருது வழங்கப்பட்டது. ஐந்தரை பவுனும் பாராட்டுச்சிறப்பிதழையும் பெற்ற அவர் குரல் தழுதழுக்க கண்கள் சலசலக்க உணர்ச்சிப்பிழம்பானார்.
1967லே என்று ஆரம்பித்த அவர், அதற்குப்பிறகு பலவருடங்கள் முந்திபிந்தி பல உதாரணங்களைக் கூற ஆரம்பித்தார். முடிக்கவும் என்று நிகழ்ச்சி நெறியாளர் கொடுத்த குறிப்புகளையெல்லாம் நிராகரித்து முடிக்க மறுத்தவர், வைரமுத்து அவர்களை கலைஞருக்கு மிக நெருக்கமானவர் என்றும் வைரமுத்து சொன்னால் எது வேண்டுமானாலும் கலைஞர் செய்வார் என்றும் முன்மொழிந்து அப்படியே இந்திய ஜனாதிபதி திரு. ஏ.பி.ஜெ.எ அவர்களுக்கும் வைரமுத்து அவர்கள் எவ்வளவு நெருங்கிய நண்பர் என்பதையும் கூட்டத்திற்குச்சொன்னார்.
தமிழ்வேள் திரு. கோ.சா வுக்கு சென்னை மெரீனாவில் ஒரு சிலை வைக்கத்தான் இத்தனை கூப்பாடும் என்பது பிறகு தெரிந்தது.அமரர். கோ.சா அவர்களுக்கு உரிய மரியாதையை தமிழகத்தில் (திராவிடர் கழகத்தின் ஒரு கல்லூரி கட்டிடத்திற்கு கோ.சாரங்கபாணி அரங்கம் என்று பெயர் பொறித்து திரு.வீரமணி அவர்கள் கௌரவப்படுத்தியது ஞாபகம் இருக்கலாம்) அவர் எதிர்பார்ப்பதில் ஒரு நியாயம் இருப்பதை உணரமுடிந்தாலும் மெரீனாவில் இன்னொரு சிலை என்பதை இப்போதெல்லாம் கோர்ட்டுகளே தீர்மானிக்கின்றன.
எழுத்தாளர் கழகத்தின் தலைவர் திரு. ஆண்டியப்பன் அவர்கள் தனது வரவேற்புரையில் (தலைமையேற்கும் அரசு ஆட்களை எளிதாக மடக்கும் வழக்கமான காரியத்தில் தானும் நுழைந்து) அமைச்சரிடம் ஒரு வேண்டுகோளை வைத்தார்.
அதற்குப்பிறகு அமைச்சர் பேசியது போக, வெற்றிபெற்ற குழந்தைகளுக்கும் சிறுகதை, கவிதைப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
அடுத்துவந்தார் திருமதி சித்ரா ரமேஷ், திரு.ஜெமோவை பேச அழைக்க. ஜெ.மோவைப்பற்றிய ஒரு விசாலமான கவனமறிதலை வீசியவர் மறக்காமல் கஸ்தூரிமானையும் நான் கடவுளையும் சேர்த்துக்கொண்டார்.கூட்டம் சிறிது சலசலப்புடனும் ஏனோதானோவென்றும் ஆரம்பித்த வேளை, ஜெயமோகன், 'மற்ற மேடைப்பேச்சாளர்களைப்போல நான் பேச முடியாமல் போகலாம், எனது பேச்சும் அப்படிப்பட்டது இல்லை' என்று ஒரு ஜெர்க் கொடுத்து பேச்சை ஆரம்பிக்க, கூட்டம் நிதானித்து பேச்சுக்குள் இறங்க எத்தனித்தது.

'இலக்கியம் என்பது எதற்காக' என்ற தலைப்பில் பேச ஆரம்பித்தவர், காந்தியை எடுத்தாண்டு, கோபல்லகிராமத்தின் மூதாட்டியின் வாக்கை முன்வைத்து, இந்திய நாட்டின் அடிப்படையை ஆராய்ந்து, இலக்கியங்கள் இருப்பது மன அறம், மனித அறம், சமூக அறம் ஆகியவற்றை வளர்க்கத்தான் அல்லது பேணத்தான் என்றார். பலவாழ்க்கையில் தன்னை நுழைத்துப்பார்க்க இயலாத வாசகன் இலக்கியத்தின் வாயிலாக அவற்றைச்செய்துகொள்ள விரும்புகிறான் என்றும் சொன்னார். ஆண்முகத்தில் முடி இருக்கும், பெண்முகத்தில் இருக்காது, பெண் சருமம் மிருதுவாய் இருக்கும், இவற்றிற்கு தன் உடலை விதவிதமான அலங்காரங்களில் தானே பார்த்துக்கொள்ளப்பிடிக்கும் என்று இப்பூமியில் வாழும் மனிதர்களை குரங்குகளாய் எண்ணி ஆய்வு மேற்கொள்ளும் ஒரு இன்னொரு கிரகவாசி உதாரணத்தையும் சொன்னார்.
இவ்வாழ்வியல் அறத்தில் முழுதும் நிற்கும் காந்தி போன்றவர்களுக்கு இலக்கியமே தேவையில்லை என்றும் காந்தி தன் வாழ்நாளில் (டால்ஸ்டாயின்(என நினைக்கிறேன்) ஒரே ஒரு புத்தகம் தவிர) எந்த இலக்கியத்தையும் படிக்கவில்லை என்றும் அவர் சொன்னார். ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வந்தபோது முதன்முதலில் அவர்களை வரவேற்று உபசரித்தது இந்திய தேச அறவாழ்வின் அடையாளம் என்றும் அவர்களும் அதற்கேற்றவர்களாய் தம்மை (முதலில்) காட்டிக்கொண்டதும் காரணமென்றார். (இதைச்சரியாகப் புரிந்துகொள்ளாத வைரமுத்து அவர்கள் என்ன செய்தார் என்பது அடுத்து வருகிறது.) தாய் தந்தையரை இழந்து ஒரு நாடோடிபோல தான் அலைந்த காலத்தில் இந்தியதேசம் எங்கும் ஒருவேளைச்சாப்பாட்டுக்குக்கூட தான் பட்டினியாக இருந்ததில்லை என்றும் காரணம் இந்தியாவில் இருக்கும் எல்லாத் தாய்மார்களும் அவ்வளவு அறநெறி வாய்ந்தவர்கள் என்று அவர் சொன்னபோது அரங்கமே கரவொலியால் அதிர்ந்து அடங்கியது. இன்னும் சில இடங்களில் கைத்தட்டலையும் பெற்ற அவருக்கு இது ஒரு நிறைவான பேச்சாகவும் கேட்டவர்களுக்கும் திருப்தியாகவும் இருந்திருக்கும் என உறுதியாக நம்பலாம்.

கவிப்பேரரசு அதற்கடுத்த நாள் நடத்திய கவியரங்கத்தில் மிகச்சிறப்பாகச் செய்ததாக எல்லோரும் சொன்னார்கள். அந்த அளவுக்கு முதல்நாள் அவர் பேசிய பேச்சு, அபத்தமோ அபத்தம் என்பதை அவர் நன்றாக உணர்ந்துகொண்டார் போலும்!
'வடக்கிலிருந்து வரும் வாடை, தெற்கிலிருந்து வரும் தென்றல், கிழக்கிலிருந்து வரும் கோடை, மேற்கிலிருந்து வரும் கூதல்' என்று பேசி, 'ஆகவே தமிழர்களே'( ம்ம், கை தட்டுங்கள் என்பதற்காய்) என ஒரு நிறுத்து நிறுத்தி பிறகு இணையத்திலும் பலகாலமாய கேட்டுக்கேட்டுப் புளித்துப்போன சில டாக்டர் ஜோக்குகளையும் சொல்லி 'பேசு தமிழா பேசு' என்றார்.கவிப்பேரரசு தான் கவிழ்வது தெரிந்ததாலோ என்னவோ, 'நண்பர் ஜெயமோகனின் இக்கருத்தில் முரண்படுவதற்கு வருந்துகிறேன் எனச்சொல்லி, ஆங்கிலேயர்கள் வந்து வெற்றிபெற்றது நம்முடைய அறத்தாலல்ல, பிளவால், ஒற்றுமையின்மையால் என்று சொன்னார். இதை சில நிமிடங்கள் வலியுறுத்திச்சொன்னார். மறக்காமல் கலைஞரைப் பாராட்டினார்.
இந்தியக்கூட்டங்களுக்கே உரித்தான சில 'நல்ல' விஷயங்கள் சிங்கப்பூர இந்தியர்கள் கூட்டத்திலும் இருக்காது என்று நான் நம்பியதை கான்கிரீட் போட்டு சமாதியாக்கினார்கள் சிலர்.
அமைச்சர் வரும்போது அரங்கமே எழுந்துநின்று கரவொலி எழுப்பவும் என்று சொன்னவர்கள், அமைச்சர் வந்தபிறகு ஜெயமோகனை அழைத்துவந்து அமரச்செய்துவிட்டு நிகழ்ச்சிகளை ஆரம்பித்துவிட்டார்கள். திடீரென 'ம்ம், எல்லோரும் எழுந்து நின்று கரவொலி எழுப்புங்கள்' என மயில்சாமி ஒரு படத்தில் சொல்வதுபோல கவிப்பேரரசு வைரமுத்து வருவதை பறையறிவித்தார்கள். கூட்டமே எழுந்து வெள்ளையாடையில் வந்த தேவனை தரிசித்தது. மிடுக்கு குலையாமல் வந்தமர்ந்தார் அவர். தாமதத்திற்கு காரணமோ வருத்தமோ அவரும் சொல்லாத நிலையில் வைரமுத்து அவர்களுக்கு மட்டும் இத்தகையை அதீத வரவேற்பு ஏன் என்பதாய் சில சலசலப்புகள்.
நிகழ்ச்சி நடத்துதலில், பரிசு வழங்குதலில் என முன்னுக்குப்பின்னாய் பல தவறான அறிவிப்புகள்.அமைச்சரின், வைரமுத்து அவர்களின் இடத்தை அடைத்து குழந்தைகளும் பெரியவர்களும் போட்டோ எடுத்துக்கொண்டிருக்க மேடைக்குக் கீழேயும் புரோகிராம் நடந்தது. மேடை நிகழ்ச்சியைப் பார்ப்பதா இல்லை கீழே போட்டோஷெஷனை பார்ப்பதா என எல்லோரும் விழித்தனர்.
எனினும் ஒட்டுமொத்த முத்தமிழ்விழாவில் குழந்தைகளின் வாயிலாகத் தமிழ்த்தாய் சிரித்துமகிழ்ந்திருப்பாள். அவளின் அறஉணர்வு, உண்மைகளை அவளுக்கும் உணர்த்தியிருக்கும்.
(குறிப்பெடுக்காமல் எழுதியது. கருத்துகளில் ஏதேனும் தவறிருக்கலாம்!)
Friday, July 28, 2006
கண்டேன் திரு.ஜெயமோகனை!
சனிக்கிழமை மாலை 'சிங்கப்பூர் பாலிடெக்னிக்' வளாகத்தில் நடைபெறும் முத்தமிழ் விழாவில் மூன்று 'பெரும்புள்ளிகள்' கலந்துகொள்வதாய் ஏற்பாடு.
முதலாவதாய் சிங்கப்பூரின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரும் கல்வி அமைச்சர் மற்று உதவி நிதி அமைச்சரான திரு. தர்மன் ஷண்முக ரத்தினம்.
இரண்டாவதாய், எப்போதெல்லாம் தமிழ்த்தாய் தனது புதல்வர்களை இலக்கிய ரசனைக்குள் இழுத்துச்செல்ல விரும்புகிறாளோ அப்பொழுதுதெல்லாம் ஆட்கொள்ளுபவர்களில் ஒருவரான இலக்கியத்திலகம் திரு. ஜெயமோகன்.
மூன்றாவது, தமிழ்த்தாயின் செல்லக்குழந்தைகளில் ஒருவரும் இன்பப் பாட்டுகளுக்குச் சொந்தக்காரருமான தமிழினமுரசு கவிப்பேரரசு திரு. வைரமுத்து.
முத்தமிழ் சங்கமத்தைப் பார்த்துவிட்டு வந்து பிறகு இது தொடர்பாய் எழுதலாம் என இருக்கிறேன்.
ஆனால், வாழ்வில் மறக்கமுடியாத மாபெரும் நாவல்கள் படைத்த, நான் மிகவும் மதிக்கும் ஒரு நாவலாசிரியரை-கதைஞரைச் சந்திக்கும் ஒரு இனிய அனுபவம் நேற்று வாய்த்தது. இச்சந்திப்பு பற்றியும் இன்னபிற பின் தொடரும் நிகழ்வுகளின் தளம் பற்றியும் விரிவாக எழுத ஆசைப்படுகிறேன். பார்க்கலாம்.
Sunday, July 09, 2006
வன்மையாக கண்டிக்கப்படவேண்டியது இது!
மீனாட்சி டீச்சர் தினமும் நிறைய நகை அணிந்துகொண்டு பள்ளிக்குச் செல்வது வழக்கம் என்றும், சாராயம் குடிப்பதற்காக அவரின் நகைகளைக் கொள்ளையடிக்க தீர்மானித்து எப்போதும் அவர் செல்லும் வழியை கவனமாய் நோட்டமிட்டோம் என்றும் அப்படியே ஒருநாள் அங்கேயே அவரை மடக்கி வாழைத் தோட்டத்திற்குள் இழுத்துச்சென்று நகைகளைப் பறித்து, விடாது பெய்த மழையிலும் அவரை மாறி மாறி கற்பழித்தோம் எனவும் இவைகளை மறைக்க கொலையும் செய்ததாகவும் போலீசில் வாக்குமூலம் தந்திருக்கின்றனர் கொலையாளிகளான இருவர்.
தமிழ்நாட்டில் நடக்கும் மிகச் சாதாரணமான கொலைகளில் ஒன்றைப் போல தோன்றும் இக்கொலை முக்கிய ஒரு கொலையாக இடம் மாறத்துவங்கியது யாரால், எப்போது, எப்படி?
இக்கொலை செய்ததாக இப்போது கைது செய்யப்பட்டிருக்கும் இருவரும் பெரிய கேடிகளெல்லாம் இல்லை. பெரிதாகத் ஸ்கெட்ச் போட்டு கொலை செய்பவர்களும் இல்லை. அதுவும் அவ்வூரிலேயே இருப்பவர்கள். டீச்சரின் நகை அவர்களது மனைவிகளுக்கே வந்திருக்கிறது குடிப்பதற்காய் விற்றது போக. இப்படியெல்லம் பல பாயிண்டுகளைக் குறிவைக்காத இந்தியாவின் ஸ்காட்லான்ட் யார்டாம் தமிழக கேவலத்துறை சாரி காவல்துறை திட்டமிட்டு ஒரு குட்ம்பத்தைப் பழிவாங்கியிருப்பது, வெறுமனே அவமானகரமானது என்பதாய்ச் சொல்லிவிட்டுச் செல்லமுடியாதது.
தமிழ் சினிமாவில் வரும் கதாநாயக பழிவாங்கல் படலம் போல, கொலை செய்தவர்களை விட்டு சில அப்பாவிகளைப் பிடித்து விசாரணை என்ற பெயரிலும் உண்மை கண்டறியும் சோதனை என்பதாயும் மனவேதனைக்கு உட்படுத்திய காவல்துறையை என்ன செய்வது? ஒரு ஆளுங்கட்சி எம்.எல்.ஏவிற்கே இந்நிலையெனில் (அதுகூடவே காரணமாயிருந்தாலும்) சாமான்யர்களின் கதி என்ன? ஹேபியஸ் கார்பஸ் மனு எப்படியெல்லாம் படுத்தும் ஒரு அப்பாவிக் குடியானவனை? போலீசாரின் அராஜகம் அத்துமீறல் முடியாதபொழுது கிடைத்தவனைப் பழிவாங்குதல் என்ற இத்துறையின் மூலக்கூறுகள் எத்துணை பொறுப்பற்றவை!
இதுகாறும் போலீசாரால் புழுகப்பட்டு வந்த அப்பாவிகள் விடுவிக்கப்பட்ட வுள்ளனர். தெரியாமல் பிடித்துவிட்டோம், மன்னித்துவிடுங்கள் என்று மட்டும் சொல்லி இரு வருடங்களாய் படுத்திய கொடுமையை எளிதாக மறைத்துவிட முயலலாம் தமிழக காவல்துறை! ஆனால் இது நியாயமா என்பதுதான் நம் கேள்வி.
மரபணுச்சோதனை, மயக்கவிசாரணை என்பவையெல்லாம் போக முன்னாள் எம்.எல்.ஏவான திரு. பாப்பா சுந்தரம், 2006 தேர்தலில் சில ஓட்டுகளில் தோற்பதற்குக்கூட போலீசாரின் பொறுப்பற்ற இக்கொலை வழக்கு விசாரணைதான் காரணமாயிருந்திருக்கிறது.
காரணகாரியமில்லாமல் பொதுமக்களையும் போக்கத்தவர்களையும் பொறுப்பற்றதனமாய் கைதுசெய்து அதனால் அவர்கள் தம் வாழ்விழந்து, மானமிழந்து, மரியாதையிழந்து, குடும்பமிழந்து இறுதியில் நிரபராதியாய் நிற்பது எப்பேர்ப்பட்ட கொடுமை என்பதை எப்போது இக்காவல்துறை உணரும்?
அன்பன்,
எம்.கே.
Tuesday, March 07, 2006
T.N Assembly Election- An Exclusive View!
அமைதிப்படையில் அமாவாசை ஆசைப்படும் சட்டமன்ற அரண்மனை(க்குள்) மகாராணி ரெடி. தார தம்பட்டையுடனும் வல்லிய கோஷம் மற்றும் வாழ்க முழக்கமுடன் நுழைய, மாப்பிள்ளையும் அவரது வீட்டார்களுமே பாக்கி. ராணியை அடைய 80 வயதுக்காரர்களில் இருந்து எல்லோருக்கும் ஆசை. ராணியை ஏன் வழக்கம்போல் வளமையான தமது தோழியாக்கக்கூடாது என்று தோழியர் கூட்டம் ஒன்றும் களத்தில் குதித்துவிட்டது. ஏத்தனை முறை தோழியாய் இருந்தோம், இப்போது மட்டும் என்ன? எல்லோரும் ஆசைப்படலாம்; தவறில்லை. ராணிக்கு இப்போது என்ன பிரியம்? மீண்டும் தோழியா? இல்லை மீண்டும் ஆசைநாயகியா?
கடந்தமுறை ராணியை தோழியாக்கி வைத்திருந்தவர்களுக்கு அவ்வுறவை எப்படியும் தக்கவைக்க ஏகத்திட்டங்கள்; தந்திரங்கள்; செயல்முறைகள் என ஒருபக்கம். மறுபக்கம் பதினெட்டுப்பட்டி நாட்டாமைகளும் ஒன்றிணைந்து ராணியை மீட்டே தீருவது என்று கங்கணம். ஏற்கனவே ஒரு பஞ்சாயத்தில் ஒன்றிணைந்து வெற்றிபெற்ற ஆசை நாக்கிலே எச்சிலை ஊற்றுவித்தாலும் நாட்டாமைகளுக்குள்ளே இருக்கும் சுய அதிகார சுயலாப எண்ணங்கள் இனிய நாற்பதுவானதை இன்னா 234 என்றாக்கிவிடுமோ என்னவோ!
தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் பெற்றதில் ஆரம்பித்து தலைகீழாய் நின்றும் இதுவரைக்கும் அங்கீகாரம் பெறமுடியாதது, யானைச் சின்னம் முதல் பூனைச் சின்னம் வரை கொண்டது, வட்டார கட்சி முதல் தேசிய கட்சி வரை என தமிழகத்தில் இருக்கும் பல்வேறு கட்சிகளுக்கும் இருக்கும் ஒரு முக்கிய ஒற்றுமை தேர்தல் நேரத்தில் அவர்களாகவே பறையடித்துக்கொள்ளும் அவர்களது ஒட்டு வங்கிப்பலமும் (பிச்சை கேட்டு வாங்கும்) உரிய மரியாதையும் தான்!
நிலைமை இப்படியெல்லாம் இருக்க, முதலில் அ.தி.மு.க வை எடுத்துக்கொள்வோம். இதன் சாதக பாதகங்களை இனி அலசுவோம்.
தமிழ்நாட்டின் கடலோரப்பகுதி அரசியல்வாதிகளில் பலர் (கட்சிபேதமின்றி) ஒரு விஷயத்தைப் பற்றி லேசாக ஒரு காலத்தில் கனவுகூடகண்டனர். இது மிகைப்படுத்துதல் இல்லை. உண்மை. வருத்தங்களில் தவித்தது போக, இன்னொரு சுனாமி வந்தால் நன்றாயிருக்குமோ என்பதுதான் அது.
சுனாமி நிவாரணத்தின் போது கலெக்டரும் மற்ற அதிகாரிகளும் ரேஷன் கார்டை அல்லது அதுபோன்ற ஒன்றைக் கையில் வைத்திருந்தவர்களுக்கெல்லாம் அவர்களது வாயில் அப்போது வந்ததை வைத்து அள்ளித்தள்ளியிருக்கின்றனர். அரிசியும் பணமும் அப்படி அரசாங்கம் அள்ளி வீசியது போல இதுவரைக்கும் யாரும் எப்போதும் தந்ததில்லை அல்லது தரமுடியாது என்கின்றனர். பல அரிசி லாரிகளை அரபிக்கடற்கரைபக்கம் வேறு அனுப்பியும் வைத்திருக்கின்றனர்.
சுனாமி நிவாரணத்தில் அரசு மிகுந்த அக்கறையுடனும் தீவிரத்துடனும் ஈடுபட்டிருக்கிறது. நடுநிலைமையாளர்கள் அனைவராலும் இதில் அரசின் செயல்பாடுகள் பாராட்டப்பட்டவையாக இருக்கின்றன. இது ஆளும் அதிமுகவிற்கு பெரும் பலம்.
வெள்ளம் மற்றும் அது சார்ந்த நிவாரணங்கள்:
சென்னையின் மிகத்தாழ்வான ஒரு பகுதி. ஒருவாரம் படகில் போக்குவரவு. எல்லோருக்கும் உணவு. ஒருவாரம் அப்பகுதியில் எந்தக்குழந்தையும் பள்ளிக்கு விடுமுறை எடுக்கவில்லை; எவரும் அலுவலகத்திற்கு செல்லாமல் இல்லை. ஏந்த யுவதியும் சமைக்க இயலவில்லை எனினும் சாப்பிடாமல் அல்லது தனக்கு வேண்டியவர்களைப் பட்டினியாய்ப் பார்க்கவில்லை. அந்த அளவுக்கு ஒட்டு மொத்த அரசாங்க இயந்திரங்களும் முழுமூச்சாய்ப் போராடி போர்க்கால அடிப்படையில் பணியாற்றி மக்களின் துயரைத் துடைத்திருகின்றன.
தமிழகத்தின் பலபகுதிகளில் கலெக்டர்களை வெள்ளத்திலும் மழையிலும் பார்க்கமுடிந்ததாம். அவர்களுடன் கடலோரக்காவல்படையினரும் பாதுகாப்பு கெலிகாப்டர்களும் காணப்பட்டனவாம்.
கார்த்திகையில் அல்லது ஐப்பசியில் விதைத்த சம்சாரிகளைப் பார்த்தால் உங்களுக்குத் தெரியும், மார்கழி மாதத்தில் பிச்சை எடுக்கும் நிலையை ஒத்த்ப்ருப்பர். Pஊச்சிக்கு மருந்தடிக்கவோ உரம் போட்டு பயிரை செழுப்பி விடவோ வழியில்லாமல் தவிக்கும் நடுத்தர விவசாயிகள் கையில் இரு ஐந்நூறு தாள்! ல்லது ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டு.!
1000 ரூபாய் வாங்க வருபவர்கள் கையில் ஐம்பது ரூபாயைச் சில்லறையாக கொன்டுவந்து விடவும் என்று அதிகாரிகள் சொல்லியது போக, போற வழியில் செலவு செய்துவிடமுடியாதபடி ஒரு தாளோ அல்லது இரு தாளோதான் கொடுக்கவேண்டும் என்று முதல்வர் கேட்டுக்கொண்டதாக ஒரு பேச்சும் இருந்ததாம். அந்த அளவுக்கு அதிரடி. அரு ரேஷன் கார்டுக்கு 2000, 1000 பத்து கிலோ அரிசி சேலை வேட்டி மண்ணென்னை இப்படி. இன்னும் சில மாதங்களுக்கு யாரும் மறக்கமாட்டார்கள்.
சேலையை வாங்கி வைத்துக்கொண்ட பெண்களுக்கு இன்னுமொரு அதிர்ச்சி இன்பமாய்! மறுபடியும் இன்னொரு வேட்டி சேலை! தரமும் பரவாயில்லாமல்! பொங்கலுக்கு!
இவையெல்லாம் 'மே'யில் வரும் தேர்தல் வெள்ளத்திற்கு நிவாரணநிதியப்பா என்பவர்களுக்கெல்லாம் யாரும் காதுகொடுப்பதாகத்தெரியவில்லை! "எவுக குடுத்தியே? போங்கப்பா!" என்கின்றனர்.
சரி இதெல்லாம் இப்போது, ஒட்டுமொத்த 5 ஆண்டு நன்மைகள் என்ன என்பவர்களுக்கு, ஜெ.யின் சில அதிரடிகளை எடுத்துக்கூறுவது பொருத்தமாயிருக்கும்.
முதலில் நான் அப்படி நினைப்பது,
1. "டாஸ்மாக்"- ரவுடிகளும் அரசியல் செல்வாக்குப்பெற்ற பொறுக்கிகளுமாய் இணைந்து கொள்ளைக்கூட்டம் நடத்திய ஒயின்ஷாப் மற்றும் சாராய வியாபாரத்திற்கு சம்பட்டியால் சமாதி! மிக மிக போற்றத்தக்க ஒரு நிர்வாகத்திறமையாய் அதுமட்டுமல்ல தைர்யமாயும் கூறலாம். அடிக்கடி செய்யவேன்டிய செக்கிங், போலிகலப்பு, பாரில் முறைகேடு ஆளும் கட்சி தலையீடு என்பனவற்றையெல்லாம் (வரும்) அரசு இன்னும் கொஞ்சம் முறைப்படுத்தினால் மிகப்பெரிய வருமானத்தை பவிசாய் பாக்கெட்டில் போட்டுக்கொள்ளலாம்.
உடனே, டாஸ்மாக் சப்ளை செய்யும் ஆலை யாருடையது? சசிகலாவின் கணவர் நடராஜனின் அக்காள் புருஷனுடைய சகலையின் மாமா தம்பி மனைவியின் அக்கா புருஷனுடையது என்று சொல்லுவது சரியாகாது. ஆலையை ஏன் அரசு எடுத்துக்கொள்ளக்கூடாது என்றால், ஒரே பதில் வேண்டாம். அரசு தயாரிப்பின் அவலம் எல்லோருக்கும் தெரியும், விறபனையுடன் போகட்டும் அது என்பேன் நான். இது, அரசு கோட்டா, ரெக்கமென்டேஷன், யூனியன், ஸ்டிரைக், போனஸ் கேட்டு உண்ணாவுரதம் ஊர்வலம் மொட்டையடித்தல் வேலை நிறுத்தம், உற்பத்திக்குறைவு, நஷ்டம், தனியாருக்கு தாரை வார்ப்பு என்பதாய் முடியவேண்டாம்.
2. மணற்கொள்ளைகளுக்கு முடிவு. அரசே நடத்தும் திட்டம். அட்டகாசம்!
3. தொழிற்படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு ரத்து- எதிர்கால மனநோயாளிகளை உருவாக்கும் கல்வித்திட்டத்திற்கு மரண அடி. ஏகோவை அரசு கைவிட்டு தகுதிவாய்ந்த கல்வியாளர்களுடன் பேசி இதை எளிமையாக்கி எல்லோருக்கும் உகந்ததாய் நிரந்தரமாக்கவேண்டும். அப்படிச்செய்தால் பெற்றோர்களும் குழந்தைகளும் அடையும் சந்தோசத்திற்கு அளவு இருக்காது.
4. விவசாயிகள்: கடன் தள்ளுபடி கடன் வட்டி குறைப்பு உழவர் அடையாள அட்டை (ஐடி) ஐடி வைத்திருப்பவர்களுக்கு இன்சூரன்ஸ். கு.தலைவர் இறந்தால் ஒரு இலட்சம். காயங்களுக்கு நிவாரணம். பிரீமியம் அரசே கட்டும்! ஐட்ட் வைத்திருப்பவரின் மனைவி கர்ர்பமாக இருந்தால் அரசு உதவித்தொகை, பெண் குழந்தை பிறந்தால் உதவி. கரும்பு கொள்முதல் விலை ஏற்றம்
விவசாயிகள் காட்டில் அடைவிளைச்சல் என்றால் மற்ற எல்லா உழைப்பாளிகளுக்கும் இது போன்று இருக்கிறது. அரசு அலுவலர்கள் முதல் நெசவாளிகள் வரை அனைவைரையும் கவனித்தாகிவிட்டது. விடுதலைப்போராட்ட வீரர்களின் மனைவிகள் முதல் மாணவர்கள் வரை ஏகப்பட்ட சலுகைகள். நானெல்லாம் படிக்கும்போது ஒரு சைக்கிள் வாங்குவதன்பது எவ்வளவு பெரிய உள்ளக்கிடைக்கை! அருமையான சைக்கிள்! ம்ம்ம்.
5.வீரப்பன் மற்றும் வீராணம் ஆகியவற்றையும் (அதி.மு.க காரர்கள் சேர்ட்துக்கொள்ளலாம்.) யோசிக்காமல் விட்டுவிடமுடியாது. முடியாது என்ற ஒன்றை சாதித்துக்காட்டியதற்காக அவரைப்பாராட்டித்தான் ஆகவேண்டும்.
ஆளும் (அதிமுக) அரசின் வெற்றி தொடரவேன்டுமானால் அதன் ஐந்து வருட சாதனைகளைச் சொல்லிவிட்டுச்செல்லலாம். ஆனால் எதிர்க்கட்சிக்கு? ஒரே ஒரு சொல்தான்; ஒற்றைச்சொல். ஆது கூட்டணி!
ஏந்தக்கட்சிக்கும் தேர்தல் நேரத்தில் கொள்கைகள் கிடையாதெனினும் ஏதிர்க்கட்சியான தி.மு.கவிற்கு ஒவ்வொரு தேர்தல் முடிவுக்குப்பின்னும் கொள்கையுண்டு. சென்ற நாடாளுமன்றத்தேர்தலில் 40 சீட்டுகளையும் வென்ற மயக்கத்தில் ஏழு கட்சிகளையும் ஒருங்கிணைத்து மாநில தேர்தலுக்கு வித்திட்டு வெற்றியாசை காண்கிறார்காள். ஆனால் 40ஐப் பிரிப்பது எளிது. 234ஐ?
எல்லோருக்கும் ஏதாவதொரு ஆசை இருக்கிற பட்சத்தில் கூட்டணிக்குழப்பங்கள் வர பெருமளவு இடமுன்டு. இதைப்பயன்படுத்த ஆளும் கட்சி கடைவிரித்துக் கொண்டிருக்கிறது. அங்கு திருப்தியில்லாதவர்கள் இங்கு விலைபோகலாம்.
அவ்வகையில் தமிழக தேர்தலில் ஏற்பட வாய்ப்புள்ள கூட்டணிகள் பற்றிப் பார்ப்போம்.
1.அதிமுக கூட்டணி: (மதச்சார்பற்றா (அ) ஜனநாயக (அ) ஐக்கிய இப்படி ஏதாவது ஒன்றைப் போட்டுக்கொள்ளுங்கள்.
அ. அ.தி.மு.க.
ஆ. பாரதிய ஜனதா (கூட்டணி ஜெயித்தால் வீராப்பாய் வெளியில் போய் சொல்லிக்கொள்ளலாம், தமிழகத்தில் தாங்களில்லாமல் எதுவும் இல்லை என்று. தோற்றால் வழக்கம்போல சத்தம் போடாமல் உட்கட்சிப்பூசலை கூறிவிட்டுக் கலைந்துவிடலாம்!)இ. ம.தி.மு.க (அண்ணன் தம்பி பாசம் தலைவருக்கிருக்கலாம், தொண்டனுக்கு? கட்டியணைப்பவர்களாயினும் தலைக்கு கடைசியில் கத்தியைத்தான் வைப்பார்கள் என்பது முன்னாள் தி.மு.க தொண்டனுக்குத்தெரியாதா என்ன? சன்டிவியின் மறைப்புகள் வேகம் கொடுக்கும். தன்மானம் என்பதாய் சில கோடிகளையும் சேர்த்து நின்று சில எம்.எல்.ஏக்கலைக் கண்டெடுக்கலாம்.)
ஈ. தின்டிவனம் காங்கிரஸ்
உ. கம்யூனிஸ்ட் வலது அல்லது இடது(கடைசியில் தொகுதி கூடுதலாய் கிடைக்கலாம்.)
ஊ. தீரன் பா.ம.க மற்றும் இதர உதிரிக்கட்சிகள். (புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, வன்னியர் சங்கம், பிரிந்த முஸ்லீம் லீக், பிரிந்த பார்வார்டு பிளாக் இதர)
2. தி.மு.க கூட்டணி: (அதேதான். தேசிய ஜனநாயக் கூட்டணி இல்லாவிட்டால் வேறு பெயர். பி.ஜே.பி அங்கு இருப்பதால் இங்கு மதச்சார்பற்ற சேர்த்துக்கொள்ளப்படவேண்டும்.)
அ. தி.மு.க
ஆ. காங்கிரஸ் (இப்போதைக்கு வெளியில் வராது! காரணம் இருப்பதைக்கெடுத்து வெறுப்பை விரும்பவில்லை)
இ. பா.ம.க. (காரணம், ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் அன்புமணிசாரை மறப்பதற்கில்லை. வந்தவர்கள் போனவர்கள் போக தன்மானத்தொகுதிகள் கிடைக்கும்.எந்தக்கட்சி ஆட்சியமைப்பும் கவலையில்லை. கையில் நாலு உப்புக்குச் சப்பில்லாத எம் எல் ஏக்கள் இருந்தால் போதும்.)
ஈ. கம்யூனிஸ்ட் இடது அல்லது வலது
உ. ம.தி.மு.க, தி.மு.க வைவிட்டு வெளிவரும் பட்சத்தில் விடுதலைச்சிறுத்தைகள் ஐயாவின் தயவால் உள்ளே நுழையலாம். மீண்டும் உதயசூரியன் சின்னம் வேன்டாம் என்பதைக் கெஞ்சிக்கேட்டுக்கொள்ளலாம்.
எ. அ.தி.மு.கவில் இல்லாத முஸ்லீம் கட்சி, மற்ற கட்சிகள்.
3. விஜயகாந்த் கட்சி:
அ. கடைசி நேரத்தில் சில சங்கங்கள்; லெட்டர்பேட் கட்சிகள்
இவைகளைத் தவிர்த்து இன்னபிற கட்சிகள் சேர்ந்து நான்காம் அணியோ இல்லை வேறு கூட்டணிகளோ ஏற்பட இப்போதைக்கு வாய்ப்பில்லாதது போலத்தான் தெரிகிறது. ஏறக்குறைய கூட்டணிகள் முடிவாகிவிட்ட நிலையில் விஜயகாந்த் கட்சியை இழுக்க அதி.மு.க பேரம் நடத்தும் அல்லது மிரட்டும். எனினும் விஜயகாந்திற்கு காரியசித்தி ஏற்பட வழியில்லை என்றே தோணுகிறது.
பி.கு: இப்பதிவு எழுதியபோது வைகோவும் அதிமுக பக்கம் வரவில்லை; வி.சிறுத்தைகளும் வரவில்லை.
அன்பன்
தேர்தல்கிறுக்கன்.








