Saturday, October 02, 2004

ஒரு ஷாம்பும் ஒரு நிகழ்வும்

சென்ற வாரத்தில் ஜெயலட்சுமி எத்தனை முறை தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் வந்தார் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். (தெரியவேண்டுமல்லவா?! சரித்திரத்தில் இடம் பிடிக்கும் முக்கிய நிகழ்வு அல்லவா அது?) ஜெயலட்சுமி கமகமவென்று ஷாம்பு போட்டு குளித்து கூந்தல், காற்றில் மோகனராகம் பாட பளிச்சென்று காட்டன் சேலையில் வந்து விரிந்த இதழ்களோடு சென்னை உயர்நீதிமன்றத்தில் இறங்கிய செய்தியை படித்தபோதும் பார்த்தபோதும் எரிச்சல் அதிகமாக, அட! என்னமா (இன்னும்) இருக்காய்யா என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள் சக அறைவாசிகள். அதெல்லாம் இன்றைய இன்றுக்கு நிரம்ப முக்கியம் பாருங்கள்! இனி என்ன ஷாம்பூ போட்டார், எப்போது குளித்தார், எத்தனை முறை குளித்தார் என்றெல்லாம் விளம்பரம் வரலாம். சினிமாவில் நடிப்பீர்களா என்று வேறு அந்த மாதுவிடம் கேட்கிறார்கள்!

அதெல்லாம் பற்றி நான் சொல்ல வரவில்லை.

ராஜா ராமண்ணா என்றொருவர் கடந்த வாரம் இறந்து போனார் அது எத்தனை பேருக்குத் தெரியும் இங்கே? அந்த ராஜா ராமண்ணா யார் தெரியுமா?

1925 ல் கர்நாடகாவில் பிறந்தவர். சென்னைப் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்று லண்டன் சென்று ஆராய்ச்சியில் டாக்டர் பட்டம் பெற்று மீண்டும் இந்தியாவிற்கு வந்து (கவனிக்கவும், மீண்டும் இந்தியாவிற்கு வந்து) டாக்டர் பாபா ஆராய்ச்சிக்கூடத்தில் இணைந்தவர்.

1965 முதல் 1968 வரை இந்திய அணுகுண்டு வளர்ச்சியில் முக்கியப்பங்காற்றியவர்.

1974ல் இந்தியா முதல் அணுகுண்டு சோதனை நடத்தியபோது (இந்திராவின் ஆட்சிக்காலத்தில்) முக்கிய பொறுப்பில் இருந்தவர்களில் அவரும் ஒருவர்.

1990களில் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு தொழில்நுட்ப ஆலோசகராகவும் இருந்தவர்.

எல்லாவற்றிற்கும் மேலாக நமது பாரத முதல் குடிமகனின் ஆசான் வேறு!

அப்படிப்பட்டவர் இறந்து போன செய்தி ஜெயலட்சுமியின் கூந்தல் வாசத்தில் தடம் பிறழ்ந்து போகிறது! என்னே மரபு இது! கேவலம்!

எம்.கே.

ஒரு கவிதை

என் நண்பன் யாரென்று சொன்னால்
என்னைப் பற்றிச் சொல்வேன்என்றார்கள்.

குருதி தோய்ந்த காயங்களை
மௌனம் தைத்த உதடுகளுக்குள்
புதைத்துவிட்டு,
வார்த்தைகள் இழந்து
ஜன்னலின் இந்தப் பக்கம் நான்!

வைத்துக்கொள்ள ஏதுமின்றி
எல்லாம் கொட்டித் தீர்க்கும்
ஜன்னலின் அந்தப் பக்கம் மழை!

அறுக்க முடியாத ஆயிரமாண்டு இழை
நீடிக்கிறது மழைக்கும் பெண்களுக்கும்!


இந்த கவிதையை எழுதியவர் தாமரை! கவிதையில் பூதாகரம் காட்டும் விஷயம் எதுவுமில்லை என்னும் போதிலும் ஒரு நிமிடம் கவிதை ரசிக்க வைக்கிறது. இந்த வார விகடனில் தாமரையின் மற்ற கவிதைகளை விட இது கொஞ்சம் பரவாயில்லை.
எம்.கே.

Thursday, September 23, 2004

எனக்குப்பிடித்த மனிதர்களில் ஒருவர்.

தெருவில் ஐஸ் அல்லது பொறி உருண்டை விற்றுச்செல்பவரைப் போலத்தான் உங்களுக்கும் ஏன் எனக்கும் கூட அவரைப்பார்த்தால் தோன்றும். அன்னாருடைய தோற்றம் அப்படி. தோற்றம் மட்டுமே எப்படி ஒரு மனிதனுக்குத் தவறான முதல் முகவரியையோ அல்லது முதல் அபிமானத்தையோ தரவல்லது என்பதை அவரைக்கொண்டும் நான் அறிந்துகொள்ளும்படி இயற்கை எனக்கு கற்றுவித்திருக்கிறது.
மாதத்தின் முப்பது நாட்களில் இருபத்தைந்து நாட்கள் வெளியூர்ப்பயணம். தொடர்ந்த சிலமணி நேர பயணங்களுக்கே நாமெல்லாம் நொந்து நூலாகிப்போகிறோம். தண்ணீர் முதல் வாந்தி எடுத்தால் பிடித்து வைப்பதற்கு பிளாஸ்டிக் கவர் வரை சேகரித்துக்கொண்டு கிளம்புகிறோம். இதற்கிடையில் ஜன்னலோர இருக்கைகளுக்காக குருஷேத்திரங்களையும், பாபர், அக்பர்களை மிஞ்சும் வகையில் பானிபட்டுகளையும் கூட நம்மில் பலர் நடத்துகிறோம். ஆனால் இவர்?
அறுபத்தொன்பது வயது. உடலுக்குத்தான் அது. மனதுக்கு? இருபத்தைந்துதான் இருக்க வேண்டும். கோட்டை முதல் குமரி வரைஇன்னும் பொதுக்கூட்டங்கள், பேரணிகள்; ஊர்வலங்கள். கலைஞரைப்போல வயதுக்குகந்த கார்களையோ இருக்கைகளையோ பயன்படுத்துவதில்லை இவர். கார்களைப் பயன்படுத்தும் அளவுக்கு வசதியும் இல்லாதவர், அவற்றைக்கொடுக்கும் நிதி படைத்த கட்சிகளையும் சாராதவர். பதினெட்டு வயதிலிருந்து ஒரே கட்சி கம்யூனிஸ்ட் கட்சி; ஒரே பணி மக்கள் பணி. வாரிசுகளை ஓட்டுச்சாவடிக்கே செல்லவிடாமல் மத்திய மந்திரிகளாக்கும் மரபு தலைவிரித்தாடும் வகையில் இவர் எல்லா அரசியல்வாதிகளையும் விட புனிதமானவர்.
அண்மையில் அவருடைய மனைவியின் பேட்டி ஒன்றைப் பத்திரிகைகளில் படித்தேன். செல்லம்மாவின் வழி வாரிசுகளில் இன்னும் ஒருவர். அறுபத்தொன்பது வயதிலும் மக்கள் பணியாற்றும் ஒரு மகானுக்கு மனைவி. நல்லதுக்கும் கெட்டதுக்கும் கணவன் அருகினிலே இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கும் சராசரிப்பெண்களின் ஒருத்தியாய் எதிர்பார்த்து வந்திருப்பார். நடப்பதை முழுமனதோடு ஏற்றுக்கொண்டு எங்கிருந்தாலும் உடம்பைக் கொஞ்சம் கவனித்துக்கொள்ளுங்கள் என்றவாறு அன்போடு அரவணைத்துப்போகும் இல்லத்தரசியாய் இப்போது அவர். நான்கு வேட்டிகள் மட்டுமே தன் கணவர் வைத்திருப்பதாகச் சொன்னார். நான்கு வேட்டிகள்! கம்பிகளில் தொங்கும் ஆடை வகைகளைக் கொஞ்சம் பார்த்தபடி இதை நாமும் கொஞ்சம் யோசிக்கவேண்டும்.
இலக்கியவாதிகளின் பின்பாகத்தையும் அரசியல்வாதிகளின் முன்பாகத்தையும் கொண்டு அரசியலில் நீச்சலடிப்பார் பலர். வெஞ்சினத்தைப் பின்புறம் வைத்து வெற்றிச்சிரிப்பை முன்புறம் வைத்தும் அரசியல் நடத்துவார் சிலர். எப்போதும் ஆணவத்தின் முகமாக தலைநிமிர்ந்து அகங்காரத்தின் உருவமாக இருப்போரும் கூட அரசியலில் இருக்கிறார்கள். ஆனால் இவர்?
ஆத்மார்த்தமாக நாம் ஆசைப்படும் எந்த நல்லவிஷயமும் நமது முயற்சியின்றியும் கூட நம்மிடம் வந்துசேருமாம்; நடக்குமாம்.
எப்போதாவது இவரைச் சந்திப்பேன் என நினைத்துக்கொண்டே இருக்கிறேன். அப்போது சாஷ்டாங்கமாய் காலில் விழுந்து வணங்க வேண்டும்.மக்கள் மனங்களின் மந்திரி திரு. நல்லகண்ணு அவர்களுக்கு என் வணக்கங்கள்.
எம்.கே.

Thursday, September 16, 2004

எனக்குப்பிடித்த நாட்களில் ஒன்று.

எம்.கே.
செப்டம்பர் மாதத்தில் எனக்கு எப்போதும் பிடித்த நாட்கள் இரண்டு. ஒன்று ஈஸ்வரன் சாருடைய மூத்த பையன் தினமாக வரும் சதுர்த்தி நாள். அன்று பெரிதாக ஏதும் செய்யாவிட்டாலும் கொஞ்ச நேரமாவது 'சும்மா' உட்காந்திருப்பேன். இரண்டாவது நாள் செப்டம்பர் பதினாறு.
இந்த பதினாறுக்கென்று எப்போதும் ஒரு 'கிக்கு' உண்டு. பன்னிக்குட்டி கூட பமீலா ஆண்டர்சன் மாதிரி தெரியுமாம் 16 ல். (நன்றி: ரங்கண்ணா) நான் பார்த்ததில்லை. அதுபற்றியும் ஏதும் தெரியாது. பதினாறு வயதில் வந்துபோன சீப்புக்கொடுத்த 'மயில்கள்' தெரியும். கோபாலகிருஷ்ணன் என்று எனக்கு பெயர் வைக்க வரவில்லை அந்த மயில்கள். சப்பாணி என்று வைக்க (அட! செல்லமாத்தான்ப்பா!) வந்த மயில்கள் அவை. மயில்கள் இருக்கட்டும், அது எப்போதும் வரும்; போகும்; இருக்கும். கதைக்கு வருவோம்.
செப்டம்பர் பதினாறில் அப்படி என்ன விஷேசம்? தி.மு.க வருடா வருடம் முப்பெரும் விழா கொண்டாடுகிறதே அதுதான் ஸ்பெசலா? செப்டம்பர் 15 ல் பிறந்தார் ஒரு அண்ணா தெரியுமா? அந்த அண்ணா பண்ணிய நல்ல வேலைகளில் ஒன்று 17 ல் நடந்தது. திராவிட முன்னேற்ற கழகம் பிறந்தது. பிற்காலத்தில் கீதைக்கு புது விளக்கம் சொல்லும் அளவுக்கு(!?) பல நல்ல தலைவர்களை உருவாக்கி விடும் அளவுக்கு கழகம் வளர்ந்தது. ஆக செப்டம்பர் 15 அண்ணா, செப். 17 திமுக. முப்பெரும் விழாவுக்கு இருகாரணங்கள் ரெடி. மூன்றாம் காரணம் வேண்டாமா? வந்தாரய்யா வந்தார் வெண்தாடி வேந்தர். தி.மு.க பிறந்த அதே 'செப்டம்பர் 17' ல் பிறந்தார். தி.மு.க வுக்கு முப்பெரும் விழா. அது சரிப்பா. 16 க்கு என்ன விஷேசம்?
இந்தியாவின் பொருளாதரப்புலி மன்மோகன்சிங். அவருக்கடுத்த பொருளாதார 'அஸிஸ்டண்ட் புலி'யான ப.சிதம்பரம் செப் 16 ல் பிறந்தார். புதிய பொருளாதாரக்கொள்கை பிறந்தது. பெப்சி வந்தது. சரி சந்தோசம். அது மட்டும்தானா?
அட! அதையெல்லாம் விடுங்கள். மீராவைத்தெரியுமா உங்களுக்கு? மீராவாக நடித்த எம்.எஸ்.எஸ் அம்மாவை? கேட்காத காதுகளிலும் புகுந்து செவியின்பம் தரவல்ல பாரதரத்னா எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா பிறந்த நாளாம் இன்று. ஆஹா! பாரதரத்னாவா? ம்ம். வேறு ஏதேனும்?
இருக்கிறதே, இந்திய காளைகளின் ஒரு காலத்து கனவு கன்னியும் இன்றைக்கு ஜப்பானிய இளவல்களின் கனவுலா நாயகியுமான 'கண்ணே மீனா, மீனே கண்ணா?' கவிதையின் மீன் கண்கள் நாயகி மீனா செப்டம்பர் 16 ல் பிறந்தாராம். ஆஹா! கொடுத்த வைத்த பதினாறய்யா! வேறு ஏதும் இருக்கிறதா? இருக்கத்தான் வேண்டுமா? அட! அவசரப்படாதீங்க!
இதெல்லாம் ரெக்கார்டுகள் சொல்வது. எனக்குத்தெரிந்த (ஆனால் அவருக்கு என்னைத் தெரியாத) ஒருவருக்கும் இன்றைக்குத்தான் பிறந்த நாளாம். சிங்கப்புராவை சிங்கப்பூராக்கியவர். இப்படி ஒருவர்தான் இப்போது இந்தியாவுக்கு வேண்டும் என்று நான் நினைக்கும் மிகச்சிறந்த தலைவர்களில் ஒருவரான மூத்த அமைச்சர் லீ குவான் கியூ. ஆஹா! இந்த தினத்தில் ஏதோ விஷயமிருக்கிறது! அது நிச்சயம் தெரிகிறது. ஆனால்..?
'அட...எல்லாம் சரிப்பா! இன்றைய இன்று உனக்கேன் பிடித்தது? அதற்கு காரணம் சொல்லு!?' என்று நீங்கள் கேக்கலாம். என்ன சொல்வது? ஏதோ பிடித்திருக்கிறது.
(பின்னணியில், 'எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்...'பாடல் ஒலிக்கிறது!)
எம்.கே.

Wednesday, September 15, 2004

திருந்துங்கள் தந்தைகளே!

கடந்த ஒரு வார காலத்தில் நான் படிக்கும் இரண்டாவது செய்தி இது. காதலித்துத் திருமணம் செய்துகொண்ட தனது பெண்ணின் தலையை வெட்டிய தந்தையர்கள். காரணம் என்ன பெரிதாய் இருக்கப்போகிறது? வேற்று ஜாதிகள். வேறு உறவுமுறைகள்.
கம்ப்யூட்டரில் பார்த்து கம்ப்யூட்டர் வழியே பேசி கண்டம் விட்டு கண்டம் தாண்டியெல்லாம் திருமணம் நடந்துகொண்டிருக்கும் இக்காலத்தில் இன்னும் காதலுக்குப் பகைவர்களாய் இருந்துகொண்டிருக்கும் இவர்களை நினைத்தால் அய்யோ பாவம் என்றும் அவர்கள் செய்யும் செயலை நினைத்தால் ஆத்திரமும் கோபமும் வருகிறது.
அண்மையில் சென்னை விமான நிலையத்தில் ஒரு காட்சி என்னைக் கொஞ்சம் சுவாரஸ்மாக்கியது. ஐரோப்பிய தேசத்துப்பெண் டார்க்புளூ ஜீன்ஸ¤ம் வெளிர் ஊதா டிஷர்ட்டும் போட்டுகொண்டு மலங்க மலங்க விழித்துக்கொண்டிருக்கிறார். மலங்க மலங்க விழித்தலில் பயமோ அல்லது வேறு எந்த நடுநடுக்கமோ இல்லை. பார்க்கும் எல்லோரிடமும் சின்ன வாஞ்சையோடு அல்லது எதிர்பார்க்கும் உறவுப் பாளமான சிறிய புன்னகையோடும் நிற்கிறார். அருகில் நின்றிருக்கும் வாலிபர் முகத்தில் 'ஹாலிவுட் படத்தை டைரக்ட் செய்யும் பொறுப்பு' வந்துவிட்டதைப்போன்று முதிர்வு. புன்னகையை எதிர்பார்த்துக்காத்திருக்கும் அவருக்கு அங்கீகரிக்கப்பட்டதன் அடையாளமாக நானும் ஒரு மெல்லிய புன்னகையை நழுவி விட்டுச் செல்கிறேன். அவருக்குப் பெருமை. தனது கணவரின் முகத்தைப் பார்த்துவிட்டு டார்க்புளூ டி ஷர்ட்டுக்கு மேலே தொங்கும் மஞ்சள் நிறத்தாலியை விரல்களால் இதமாகத் தடவிக்கொள்கிறார். ஆஹா!
மேல்தட்டு மக்கள். வாழ்க்கையில் எது முக்கியம் என்பதைப் புரிந்துகொண்டவர்கள். இச்சமுதாயத்தின் வாய்ப்பூச்சுகளுக்கும் வாய்ப்பேச்சுகளுக்கும் 'ஸீயு' என்ற ஒற்றை வார்த்தையைப் பதிலாக்கி விட்டுச்செல்பவர்கள். வெளிநாடுகளில் இருந்து வரும்பொழுது ஏதும் வாங்கிவராவிட்டாலும் வாங்கி வந்தாலும் ஏதாவது குறை சொல்லும் இவர்களைப் பற்றி அவர்களுக்கு நன்றாகத்தொ¢ந்திருக்கிறதன் விளைவே இந்த ஜஸ்ட் ஸீயூ.
சாராயக்கடையின் நேற்றைய பாக்கியை ஓடிப்போன மகளின் வழி சொல்லிக்கேட்டிருப்பான் சாராயக்கடைக்காரன். அவனை ஒன்றும் செய்யமுடியாது. வீட்டில் வந்து மூளை சாய்ந்த நிலையில் நல்ல பசி மயக்கத்தில் திடுமென்று ஆவேசம் வந்து எழுந்து அரிவாளை எடுத்திருப்பார்கள். பொத்தி பொத்தி வளர்த்த கணங்கள் கண்ணுக்குள் வராது. வயிற்றின் நாளைய கூப்பாடுகளும் தேடுதல் தேவைகளும் அப்போது தோணாது.
வெட்டிய பிறகு அவரது நிலையில் அதிரடி மாற்றங்களோ அல்லது மனசு சமாதானக்கூண்டாகவோ ஆகிவிடாது. அல்லது அவரை அந்நிலைக்குத்தள்ளிய இச்சமுதாயத்தின் வாயிலும் அடப்பாவி என்ற ஆச்சரியக்குறியும் பழிச்சொல்லும் மட்டுமே வந்து நிற்கப்போகிறது. அப்படியிருக்க என்ன காரணத்தினால் இப்படிச்செய்கிறோம் என்பதை அவர்கள் ஒரு நிமிடம் யோசித்தால் போதாதா?
அட, என்னய்யா வேண்டும் உமக்கு? நன்றாய் உமது மகள் வாழவேண்டும் அவ்வளவுதானே? கூப்பிடு. உனது பெண் காதலிக்கும் பையனைக் கூப்பிடு. மனதாரப் பேசு. அவளை வளர்த்த கதையைச்சொல். கஷ்டத்தைச் சொல். உனது தேவையைச் சொல். புரிந்துகொள்கிறானா பார். உனது மகளின் மனதைப் பக்குவப்படுத்து. நிதானமாகப் பேசு. இதிலெல்லாமா உனது மகளிடம் நீ பேசக்கூடாது?
காதல் என்பது என்ன ஐயா? அழகான உணர்வுகளின் நீட்சி இல்லையா? உனது உண்மையான உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமலா இருப்பாள் நீ பதினைந்து வருடங்கள் பொத்திப்பொத்தி வளர்ப்பவள்? காதல் உணர்ச்சி கொண்டவள்? ஜாதி மாறிப்போவதைச் சாடி ஏசும் சமுதாய மாக்களா உனக்குச் சோறு போடப்போகிறார்கள்? உனக்கு நல்லது கெட்டது செய்யப்போகிறார்கள்?
ஒரே ஒரு நிமிட யோசனை எவ்வளவு அழகான வாழ்வை நிர்மாணிக்கிறது பாருங்கள்!
எம்.கே.

Monday, September 13, 2004

புதுசா கண்ணா புதுசா?

எம்.கே.
ஆனந்த விகடனின் பின் தொடரும் வாசிப்பாளர்களுக்கு நான் சொல்லாவிட்டாலும் கூட அழகான மயிற்தோகையில் ஆங்காங்கு வெளுத்த நிறம் மருகி மிகுந்து வருவது போல ஒரு நுழைவு மனதில் ஏற்படக்கூடும். இந்த வெளுப்பு ஏதோ திடீரென்று தோன்றியதாயல்லாமல் சாயம் போவது போன்று காலத்தோடும் பயன்பாட்டோடும் பின்னிப்பிணைந்து உருமாறி வருகிறது என்பதைக் கொஞ்சம் ஆழ்ந்து கவனிக்க வேண்டியுள்ளது.
அட்டை டு அட்டை வரை கிளுகிளுப்புப்படங்களையும் அதுசார்ந்த விவரிப்புகளையும் தாங்கி வந்த பத்திரிகைகளின் வரிசையிலிருந்து கொஞ்சமேனும் விலகி 'நாடார் கடையில் வாங்கும் விளம்பரமற்ற தரம் படைத்த பொருட்கள்' போல இருந்து வந்த அதன் இடம் இப்போது சராசரிக்கடையை ஒத்திருக்கிறது. சிலசமயங்களில் சாக்கடையையும்.
சிறுகதைகளைக் குறுக்காக வெட்டி புதுச்சிறுகதைகளைப் படைக்க ஆரம்பித்துவிட்டார்கள். படிக்கவே வெறுப்பாயிருக்கிறது. ஹாலிவுட், ரொமான்ஸ், விகடன் க·பே மற்றும் இன்னபிற நாகரீக தலைப்புகளின் வழியே இன்றைய மல்லுக்கட்டுக்குள் அவர்களும் தாவிக்குதித்து விட்டார்கள். செய்தி இல்லாமல் வரும் பின் அப் படங்களும் கூட ஏதாவது வழிந்தோடும் விமர்சனத்தோடு வளைய வர ஆரம்பித்துவிட்டன. இதுபோக மற்றவைகளும் சினிமா வழியாய் டிவி வழியாய் அனு அக்கா ஆன்ட்டி வழியாய் எளிதாக மேலாடையின்றி நடனமாடத் துவங்கிவிட்டன.
இந்த மல்லுக்கட்டுக்கிடையில் இலக்கிய உலகிலும் நிற்பதாய் காட்டவேண்டிய அவசியம் அதற்கு. ஜெயமோகனும் எஸ் ராமகிருஷ்ணனும் கொஞ்ச காலம் அந்த வேலையைச் சிறப்பாகச்செய்தார்கள். இதுபோக சன் டிவியில் மாதச்சம்பளம் வாங்கும் சாலமன் அய்யா போல விகடனில் சுஜாதா தாத்தா கண்ணில் கிடைத்ததை, காதில் கிடைத்ததை மற்றும் இன்னபிற அ, ஆ கதைகளையும் நடப்புகளையும் எழுதி இலக்கியப் பங்கு படைத்து வருகிறார். (இருமகன்கள் அமெரிக்காவில் இருக்கிறார்கள். எழுபதாயிரத்துக்கு இந்த இதழ் வழி கையேந்துகிறார்!)
இந்த இலக்கியப்பங்கை இன்னும் சிறப்பாகச்செய்ய அவ்வப்போது முயன்று கேவலப்படுத்திக்கொள்கிறது விகடன். இதன் தொடர்ச்சியாய் இப்போது பிரபல கவிஞர்களின் கவிதைகள் வாரா வாரம் வருகின்றன. அந்த வரிசையில் கபிலன், யுகபாரதி, பழனி பாரதி இன்னும் சிலரது கவிதைகளைப் படைக்கும் வாய்ப்புக் கிடைத்தது அண்மையில். எப்படிசொல்வது? கேவலம். சில கவிதைகளைக் கவிதைகள் என்று சொல்வதற்கே மனம் கூசுகிறது. மிகவும் சாதாரண வரிகளாய் ஒப்புக்கு மாவிடிக்கும் உப்பாத்தா போல வந்து போகின்றன அவை. கவிதைகள் வேண்டும் என்று கவிஞர்களிடம் கேடபதற்கு முன்னால் சற்று காலம் கொடுத்தாவது நல்ல கவிதைகளாய்க் கொடுங்கள் என்று கூற வேண்டாமா?
அன்மையில் நான் படித்த சில மரத்தடிக்கவிதைகள் கூட இந்த வரிசையில் மிக உயரத்தில் நன்றாக இருப்பதாய்த்தோணுகிறது. குறிப்பிடத்தகுந்தவர்களாய்ச் சொல்லவேண்டுமெனில் மீனாக்ஸ்ஸினுடையதும் ஷக்தியினுடையதும் ஆகும். இதுபோக இணையத்தில் இன்னும் சில எதிர்பாராத இடங்களில் செந்தாமரைகள் போலக் காணக்கிடைக்கின்றன சில அழகான கவிதைகள். இந்த வரிசையில் கவிதைகள் மட்டுமின்றி கட்டுரைகளும் உண்டு.
அவை பற்றிப் பிறகு பேசலாம். இப்போது விகடனுக்கு வருவோம். என்ன ஆனது விகடனுக்கு? இருப்பவர்கள் எல்லோர் பெயரும் ஏதாவதொரு ஆசிரியப்பொறுப்பில் இருக்கின்றன. எல்லா நிருபர்களையும் ஆசிரியராக்கிவிட்டார்களா? என்ன நடக்கிறது என்பது புரியவில்லை.
பின்னொரு நாளில் தொகுப்பாய் விற்றுக் காசு பண்ணும் வகையில் விகடனுக்கே உரிய புதுப்புது தொடர் கட்டுரைகளில் மட்டுமே அதிக கவனம் எடுத்து வரும் விகடன் இதுபோன்ற மற்ற விஷயங்களிலும் கொஞ்சம் கவனமெடுத்துச் செய்யவேண்டும். ஒரு சாதாரண வாசகனின் விருப்பம் அதுதான்.

Tuesday, August 24, 2004

ஐத்தான்....

வெண்ணிலா(ப்ரியன்)

ஆச வெச்ச ஐத்தானே அரும்பு மனசு ஐத்தானே
மீச வெச்ச ஐத்தானே மெட்டி போட்ட ஐத்தானே
காசு மால வாங்கித்தந்த ஏங் கண் நெறஞ்ச ஐத்தானே
நேசம் மறந்து நெலை மறந்து போனதெங்கே ஐத்தானே

தோளு பட்ட நம்பட்டியும் ஒங்ககாலு பட்ட தோல்செருப்பும்
வாளு பட்ட வாழ மரமா வாழ்வழிஞ்சி கெடக்குதைத்தான்
ஆளு நீங்க நடக்கயில ஆறடி போயி நின்னவன்ல்லாம்
தேளு மாதிரி வேட்டி தூக்கி தெருவுக்குள்ளே போறானுக

ஊருக்குள்ளெ ஒங்க மொகம் பாக்காத செடியும் கொடியும்
சேறுக்குள்ளெ ஒங்க பாதம் தழுவாத நாத்தும் நடவும்
தேருக்குள்ளெ இருந்தாலும் தெருவுலெ கெடந்தாலும்
மாருக்குள்ளே என்னப்போல உங்க மனசெ வெச்சிக் காத்துருக்கு

போன எடம் சொல்லலியே பொரண்டு படுத்தா விடியலியே
ஆன மட்டும் சொல்லிப்பாத்தும் அழுத மாரு தூங்கலியே
போன கதை வந்த கதை பொழுது சாஞ்சி பாத்த கதை
வானம் பாத்த நெஞ்சில் சாஞ்சு வசதியாத்தான் பேசலியே

அழுக்கு திண்ணா அயிர கொழம்பும் முருங்கப்பூ ரசமும் வெச்சி
பழுப்பில்லாத முல்லப்பூவா புது அரிசிச் சோறும் வெச்சி
முழு நெலவு ராத்திரில கண் விழிச்சிக் காத்திருக்கேன்
முழுகாம இருக்கு மனசு முங்கிக் குளிக்க ஆச ஐத்தான்

ஆத்துக்கர ஆலமரம் ஏம் முதுகு தொட்ட ஆலம்பழம்
ஒத்தவீட்டு மாட்டுவண்டி அது ஏத்தி வந்த வெக்கெ கட்டு
மத்தியான வெய்யிலிலே எம்மாரு பாத்த மாங்கா மரம்
பத்த வெச்சி விட்டுட்டீகளே இனி எம்புட்டு ரா கூப்பாடோ

அச்சப்படும் பச்சக்கிளி கோபக்கார மச்சாங்கிளி
இச்சையோட தவிக்கையில எம்மனசு ஊருதைத்தான்
எச்சி பட்டு பூத்த பூவு ஏகத்துக்கும் ஏங்குதைத்தான்
மச்சான் நீங்க வந்தீயன்னா மறுபடியும் நா வயசுக்கு வாறேன்

வெண்ணிலா(ப்ரியன்)

Monday, August 23, 2004

முதல் அனுபவம்..

எம்.கே.

நேரம் மதியம் இரண்டு மணி. முதல் அனுபவம். கொஞ்சம் படபடப்பு இருக்கிறது.

பின்னாலிருந்து என் தோள் மீது விழுகிறது கை. சிரித்துக்கொண்டே சிநேகமாய் அவர். எதிர்பார்த்தவர்தான். புது அறிமுகமாய் ஒரு சிலர். நேரம் ஆகிறது. அந்த அறையின் குளிரூட்டிகள் தற்காலிகமாய் யிரூட்டப்படுகின்றன. அவரவர் மனநிலைக்கேற்றவாறு இருக்கைகள் நிரம்புகின்றன. இரண்டாவது இடத்தில் அமர்ந்திருக்கிறேன் நான். கடைசியில் இருந்து இரண்டாவது இடம்.

சுற்றும் முற்றும் பார்த்த பிறகு தெரிந்த முகங்களாய், எங்கேயோ பார்த்த முகங்களாய் சிலர். படக்கென்று வந்தமர்கிறது 'கல்கி' கூட்டணி. வெற்றிக்கூட்டணி. என்னோடு இருந்தவருடன் அறிமுகங்கள் நடக்கின்றன. நான் அமைதியாக இருக்கிறேன். ஒருசில நிமிடங்களுக்குப்பிறகு வரவேண்டிய வி.ஐ.பி.வருகிறார்.

எல்லா இருக்கைகளும் நிரம்புகின்றன. வட்டமேஜை மாநாடாய் இருக்கிறது அறை. ஆடியோ பதிவுக்கருவிகளும் புகைப்படக்கருவிகளும் ஆயத்தப்படுகின்றன. அருகில் வந்தமர்கிறது கூட்டம். இக்கூட்டத்தை சந்திப்பை ஒருங்கிணைத்த திரு. ரெ.பாண்டியன் பேசுகிறார். தெளிவான ஆரம்பத்தோடு பேச்சு. நான் நிமிர்ந்து உட்காருகிறேன்.

முன்னுரை முடிந்த கையோடு நமக்குள் நாமே அறிமுகம் செய்துகொள்ளலாமே என்று ரெ.பாண்டியன் சொல்ல, கூட்டம் கடிகாரச்சுற்றில் அறிமுகப்படுத்திக்கொள்கிறது. தெளிவான ஈழத்தமிழில் திரு.ஈழநாதன். அடுத்து சிங்கப்பூரின் பத்திரிக்கை ஆசிரியர் சிலர், கட்டுரையாளர்கள் சிலர். அவர்களைத்தொடர்ந்து கலைஞரின் மருமகன்..திரு.அரவிந்தன். அவரைத்தொடர்ந்து வருகிறது கல்கி கூட்டணி. திருமதி. ஜெயந்தி ஷங்கர் மற்றும் திருமதி.ரம்யா நாகேஸ்வரன். கடந்த கல்கி கதைப்போட்டியில் பரிசு பெற்ற கதைகளை எழுதியவர்கள். அவர்களைத் தொடர்ந்து புன்னகையும் சிரிப்புமாய் கணவரோடு வந்திருந்த மரத்தடியின் புதுவரவு திருமதி. சித்ரா ரமேஷ்.

அறிமுகப்படலத்தின் இறுதிப்பகுதியை நெருங்குகிறது நேரம். என் தோளில் கை போட்ட நண்பர், தன்னை அருள் குமரன் என்றும் இனிமேல்தான் காலம் ஒதுக்க வேண்டியிருக்கிறது காலச்சுவடு படிப்பதற்கு என்பதாயும் அறிமுகம் செய்து கொள்கிறார். அடுத்தது கஜேந்திரன் என்றொரு அருப்புக்கோட்டை நண்பர். சிறிது காலம் 'சும்மா' என்றொரு சிறுபத்திரிகை நடத்தியவர்.

இறுதியில் அந்த வி.ஐ.பி, தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறார். கண்ணன். காலச்சுவடு இதழின் எடிட்டர். உலகத்தமிழ்.காமிலும் எழுதுபவர்.

நிகழ்ச்சி முறைப்படி ஆரம்பிக்க, காலச்சுவடு இதழ் பற்றிய தனது எண்ணங்களையும் அது சார்ந்த விமர்சனங்களையும் தனது இனிய ஈழத்தமிழில் நிறைவாக எடுத்து வைத்துப்பேசுகிறார் ஈழநாதன். பேச்சில் நிரம்பி ததும்பி வழிகிறது இனிமையான ஈழத்தமிழ். கேட்கவே சுகமாயிருக்கிறது. செய்திகளின் சாராம்சத்தைக் குறித்துக்கொண்டு பதில் சொல்ல வருகிறார் திரு. கண்ணன்.

அடுத்து திரு.கண்ணபிரான். சிங்கப்பூரின் கட்டுரையாளர். இனிய தமிழில் வாயார வாசிக்கிறார். கமலின் குருவான பாலச்சந்தரின் நினைவை எழுப்புகிறது அவரது குரல். 1988 ஆம் ஆண்டு வெளிவந்த முதல் காலச்சுவடின் ஆசிரியர் பக்கத்தில் காலச்சுவடு ஆரம்பிக்கப்படும் நோக்கம் பற்றி திரு.சுந்தர ராமசாமியின் கட்டுரையின் ஒரு பகுதி வாசிக்கப்படுகிறது. தீர்க்கமான ஒரு முடிவின் ஆரம்பம் மிகத்தெளிவாய் இருக்கிறது அவற்றில்.

மூன்றாவதாய் வாசிக்க வருகிறார் திருமதி.சித்ரா ரமேஷ். ஆங்காங்கு நையாண்டித்தூறல்களையும் கிண்டல்களையும் தெளித்துவிட்டு சொல்ல வந்த கருத்துகளுக்கு உரமூட்டி நிமிர்கிறார். கேள்விகள் சுகிர்தா ராணியையும் அது சார்ந்த பாலியல் கவிதைகளையும் பிற விமர்சனங்களை உள்ளடக்கியதாயும் இருக்கிறது. கண்ணன் பதிலளிக்க வேண்டிய தருணம் இது.
கேள்விகள் சூழ்ந்துகொண்டன. சூழ்ந்திருந்தது புயலானாலும் பதில்கள் தெளிவாய் வருகின்றன.

முதலில் கேள்விகளின் சாராம்சம்.

1. காலச்சுவடின் முதன்மையான நோக்கம் என்ன? இன்றைய இளைய தலைமுறைக்காக ஏதேனும் செய்கிறதா அது?
2. காலச்சுவடில் ஒரு பக்கம் சார்ந்த குழு மனப்பான்மை இருப்பது போலிருக்கிறதே..நிஜம் தானா இது? எப்படி இடமளிக்கிறீர்கள்?
3. அண்மையில் வெளியான சுகிர்தராணியின் பாலியல் கவிதை வெறுமனே விரசமாய் எழுதப்பட்ட கவிதையே அன்றி வேறொன்றுமில்லை. காலச்சுவடு எப்படி இதை அனுமதிக்கிறது? பாலியல் சம்பந்தப்பட்ட கவிதைகளும் கதைகளுமே நிறைய இருப்பதாகத்தோன்றுகிறது? ஏன் இப்படி?
4. சாகித்ய அகாடமி கொடுக்கப்பட்டதற்காக வைரமுத்துவை வாங்கு வாங்கென்று வாங்கிவிட்டது காலச்சுவடு. ஏன் இதற்கு அவர்மேல் இத்தனை கடுப்பு? அவர் தகுதியற்றவரா? சாகித்ய அகாடமியின் வரையறைகள்தான் என்ன??
5. மூன்று இதழில் ஒருமுறையேனும் ஜெயமோகனைத் தொடாமல் எழுதமுடிவதில்லையே..என்ன காரணம்?
6. சுஜாதா எழுதிய புறநானூற்று உரையின் மேல் காலச்சுவடுக்கு என்ன கோபம்? ஏன் இப்படித் தாளிக்கிறது? (உண்மையில் அந்த உரையில் சில தவறுகள் இருப்பதை கேள்வியாரே ஒப்புக்கொள்கிறார்.)
7. கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போகலாமா பாடலை எழுதிய சினேகன் மன்னிப்புக்கேட்டது தவறு என்கிறீர்கள்..அப்படியானால் அது நல்ல பாடலா?
8. உலகத்தமிழ். காமில் இன்னும் கொஞ்சம் சிறப்புகள் செய்யலாமே?!
9. இணையத்து எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பிதழ் ஏதும் கொண்டு வரும் திட்டம் இருக்கிறதா?
10. இளைஞர்களுக்கு காலச்சுவடில் இடமளிப்பீர்களா?
11. ஒரு எழுத்தாளர் என்பதை விடுத்து தங்களது தந்தையாய் அவரிடம் தங்களுக்குப் பிடித்ததைப் பற்றிச்சொல்ல முடியுமா?

பதில்களின் சாராம்சம்.

கேள்விகள் பெரிதாய்த் தோன்றினாலும் மூன்று விஷயங்கள் மட்டும் விவாதத்தில் சூடு பறக்குமளவுக்கு முன்னேற்றம் கண்டன.

1. பாலியல் தொடர்பு கதை/கவிதை
2. வைரமுத்து-சாகித்ய அகாடமி
3. சுஜாதா- புறநானூறு

இனி விரிவான பதிலகளைப் பார்ப்போம்.

காலச்சுவடு ஆரம்பிக்கட்டதன் நோக்கம் இன்றுவரை அதன் முதல் பதிப்பில் சொல்லப்பட்டது போல கலை, கலாசார, சமுதாய மேம்பாடுகளை மேம்படுத்துவதில் முழுக்கவனமும் எடுத்து திறம்பட செயலாற்றி வருகிறது. மொத்தம் இதுவரை வந்துள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட எல்லா இதழிலும் ஒரு புதிய இளைஞருக்காவது வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

காலச்சுவடில் எப்போதும் ஒருதலைப்பட்சமான குழுமனப்பானமை இருந்ததில்லை. ஆசிரியர் குழுக்கள் அடிக்கடி மாற்றப்படுகின்றன. கதைகளைத்தேர்ந்தெடுப்பவர்களும் கவிதைகளைத்தேர்ந்தெடுப்பவர்களும் கூட மாறுவார்கள். நானறிந்தவரை அப்படி இல்லை என நிச்சயமாகச்சொல்லமுடியும். இருப்பினும் கேள்வியாளர் உறுதியோடு சொல்வதால் கவனிக்கிறேன்.

பாலியல் பற்றிய கருத்து நிதர்சனமான ஒரு கருத்து அல்ல. கோயில் சிற்பங்களிலிருந்து ஆண்டாள் வரை கம்பரிலிருந்து நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர்கள் வரை எல்லாமே இங்கு வெளிச்சம். எல்லா கருத்துக்களும் எப்போதும் சொல்லப்பட்டு வருகின்றன. இப்போது மட்டுமே இக்கூச்சல்கள் எழுவது வேடிக்கை மட்டுமேயன்றி வேறொன்றுமில்லை.
கலாப்ரியா எழுதாத பாலியல் வார்த்தைகள் இல்லை. அப்போது யாரும் எதுவும் சொல்வதும் இல்லை. ஆனால் ஒரு சுகிர்தரானியோ ஒரு மாலதி மைத்ரியோ ஒரு சல்மாவோ என்றால் கட்டையைத்தூக்கிக்கொண்டு வருகிறார்கள். ஏன் பெண்கள் அப்படியெல்லாம் எழுதக்கூடாது?புதுமைப்பெண்களாய் காட்டிக்கொள்ளும் மாதர் சங்கங்கள்தான் இன்னும் இச்சண்டைக்கு புடவையைத் தூக்கிக்கொண்டு வருகின்றன. காரணம் என்ன தெரியவில்லை.

சுகிர்தராணியின் கவிதையில் ஒன்றுமில்லை என்பதாய் சொல்வது சரியானது அல்ல. கவிதை என்பது ஒரு வாசிப்பில் புரிதல் நிகழ்ந்துவிடக்கூடிய அல்லது எல்லொருக்குமே புரிதல் ஏற்படுத்தக்கூடிய வரையறை கொண்டது அல்ல. படைத்தவரின் பார்வையில் ஒரு அர்த்தமோ, தேர்ந்தெடுத்தவரின் பார்வையில் வேறொரு அர்த்தமோ படிப்பவர்களின் மனதில் வேறொரு புரிதல்களையோ ஏற்படுத்தக்கூடியன. ஒன்றுமேயில்லை என்பது சரியில்லை. இது குறித்த திலகபாமாவின் கடிதம் எனக்கு வந்தது, அடுத்த காலச்சுவடில் அது இடம்பெறலாம்.

சாகித்ய அகாடமியின் வரையறைகள் யாருக்கும் தெரிவதில்லை. அது ஒரு அரசாங்கத்தால் நிறுவப்பட்ட அமைப்பு. ஆனால் சாகித்ய அகாடமியில் தேர்ந்தெடுக்கப்பட்டவரின் கதை 22 மொழிகளில் மொழிபெயர்ப்பாகும். அத்தகைய சூழ்நிலையில் தமிழில் தேர்ந்தெடுக்கப்படும் நூலுக்கு நல்ல தகுதிகள் இருக்கவேண்டும். தேர்ந்தெடுக்கப்படுபவரும் நல்ல இலக்கியவாதியாக இருந்தால் எல்லோருக்கும் சந்தோசம் காலச்சுவடுக்கும் சந்தோசம். கள்ளிக்காட்டு இதிகாசம் நல்ல புத்தகம். ஆனால் அந்த வரிசையில் இதை விட நல்ல புத்தகங்கள் இருக்கின்றன. நாவல்கள் வந்திருக்கின்றன. மேலும் வைரமுத்து சினிமாவிலிருந்து வந்தவர். இன்னும் சொல்லப்போனால் அவர் எழுதிய முதல் நாவலே இதுதான். இந்த தகுதிகளை முன்னிறுத்தி கட்டுரைகள் எழுதுகிறது காலச்சுவடு. மற்றபடி யாரையும் வெறுமனே தூற்ற வேண்டிய அவசியம் காலச்சுவடூக்கு இல்லை.

ஜெயமோகனின் சிலகருத்துகள் எப்போதும் விமர்சனத்துக்கு உட்பட்டன. அவற்றை எடுத்துக்காட்டுகிறது காலச்சுவடு. இதில் வேறெதுவுமில்லை.

சுஜாதாவின் புறநானூறு உரை ஏகப்பட்ட பிழைகளைக் கொண்டிருக்கிறது என்பதை நான் சொல்லவில்லை. இந்தியாடுடேயில் தொ.பரமசிவன் எழுதினார். இன்னும் அறிஞர்கள் பெரியவர்கள் எத்தனையோ பேர் சொல்லிவிட்டார்கள். அவற்றின் தரம் குறித்து சமுதாயத்திற்கு உணர்த்தவேண்டிய பொறுப்பு காலச்சுவடுக்கு இருக்கிறது. இதில் எந்த கல்லெறிதலும் இல்லை. அதிலும் முதற்பாகம் போட்டுவிட்டு, இரண்டாம் பாகம் போடாமல், முழுப்பாகத்தையும் கொண்டு வந்தது இன்னும் ஒரு பெரிய தவறு. இதற்காகத்தான் அவர் எழுதப்படுகிறாரே தவிர வேறொன்றுமில்லை.

கல்யானந்தான் பாடலால் தான் கெட்டுப்போய் விட்டதாக யாரும் சொல்ல மாட்டார்கள். ஈவ் டீசிங்கிற்கு வழி வகுக்கும் என்பதிலும் முழு உண்மை இல்லை. இதற்கு முன் எத்தனையோ பாடல்கள் வந்துவிட்டன. எம்.ஜி.ஆர் தன் பாடல்களில் காட்டிய அழகிய தமிழ் மகள்களை விட இது எவ்வளவோ பரவாயில்லை. ஆனால் அவை எம்.ஜி.ஆர் தனது கனவில் செய்வார். இப்போது அபப்டி இல்லை.

இதற்காக சினேகன் மன்னிப்புக்கேட்டது தவறுதான் எனினும் அதே பேட்டியில் பாலியல் கவிதைகளை எழுதும் பெண்களை தீயில் போட்டு பொசுக்க வேண்டும் என்று அவர் சொன்னது சினிமாக்காரர்களின் பிழைப்புக்கேற்ற நிலைதானே தவிர வேறெதுவும் சொல்ல முடியாது.

இணையத்து எழுத்தார்களுக்கான சிறப்பிதழ் போடுவது பற்றி யோசிக்கப்படும். உலகத்தமிழ்.காமில் எதிர்வினைகள் வருவது சுத்தமாக இல்லை. அதனால் அதை மேம்படுத்த இயலவில்லை. கடந்த ஐம்பது இதழ்களிலும் காலச்சுவடு புதிது புதிதான இளைஞர்களுக்கு வாய்ப்பு அளித்து வருகிறது இனிமேலும் அது தொடரும். தந்தையைப் பற்றி இங்கு பேச முடியாது. அதற்காக நாம் இங்கே அமர்ந்திருக்கவில்லை.

எல்லாம் முடிந்து எழுந்தபின் கண்ணன் எழுதிய 'வன்முறை வாழ்க்கை' அவரது கையெழுத்துடன் இலவசமாக வினியோகிக்கப்பட்டது.

இதில் எழுதப்பட்ட கட்டுரைகளில் ஜான் டேவிட் பற்றிய கட்டுரை ஒன்று இருக்கிறது. நக்கீரனும் ஜூனியர் விகடனும் நினைத்தால் எப்படி ஒரு சுவாரஸ்யமான கதை எழுதி ஒரு அப்பாவியை கொலையாளியாகவும் ஒரு கொலையாளியை நல்லவனாகவும் மாற்ற முடியும் என்பதைத் தெளிவாக சொல்கிறார் கண்ணன் அதில்.

எம்.கே.

நன்றி: திரு. ரெ.பாண்டியன். அமைப்பாளர், வாசகர் வட்டம். சிங்கப்பூர்.

(கேள்வி மற்றும் பதில்கள் அனைத்தும் செவிவழி கேட்டு எழுதிய விஷயங்கள். வார்த்தைகள் மாறியிருக்கலாம்.)

Friday, July 02, 2004

மீண்டும் சந்திப்போம்.

வணக்கம் நண்பர்களே!
ஆண்டு விடுமுறைக்கு இந்தியா செல்கிறேன். இணையத்துக்கும் என் இருப்பிடத்துக்கும் இருபது மைல் தொலைவு. முக்கியமான மடல்கள் மட்டுமே பார்க்க முடியும் படிக்கமுடியும்.

ஆகையால் இன்றிலிருந்து ஒரு முப்பது நாட்களுக்கு எனது வலைக்குறிப்பில் பெரிதாய் ஏதும் செய்திகள் இருக்காது என்பதை வருத்தமுடன் தெரிவித்துக்கொள்கிறேன். (இப்போ மட்டும் எழுதிக் கிழிக்கிறியாக்கும்!?).

முக்கியமான விஷயங்கள் இருப்பின் வலைப்பூ வழி ஆஜராகிறேன். எனது பக்கத்திற்கு வந்து பழைய கஞ்சியை வேண்டுமானால் பார்த்து விட்டுச்செல்லுங்கள்.:)

அடிக்கடி வந்து பார்த்து எவரும் ஏமாற வேண்டாம் என்பதால் இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன்.

வாய்ப்புகளுக்கு நன்றி.
வாழ்க வளமுடன்.
மீண்டும் சந்திப்போம்.

எம்.கே.குமார்.

Wednesday, June 23, 2004

ஒரு பெப்சி நேரம்....

ஹெல்லோ பெப்சி உங்கள் ஜாய்ஸ்....

ஹெல்லோ யாருங்க..உமாங்களா? பெப்சி உமாங்களா? சன் டிவி பெப்சி உமாங்களா? உண்மையாத்தானே சொல்லுறீங்க, ஐயோ சந்தோசமா இருக்கே! ஏங்க, உண்மையிலே பெப்சி உமாங்களா? ஐயோ..நிஜமாவே பெப்சி உமாங்களா?

ஹா ஹா ஹா (சிரிக்கிறார்)

ஆமாங்க, நான் தான். சொல்லுங்க, உங்க பேரு என்ன? எங்கேயிருந்து பேசுறீங்க. என்ன பண்ணிண்டுருக்கேள்?

ஐயோ..சந்தோசமா இருக்கே! ஏலே சொக்கா, இங்க வாங்கடா, உமாடா..நம்ம உமாடா, ஐயோ சந்தோசத்துலெ கை காலெல்லாம் டைப்படிக்குதே!

சார், உங்களுக்கே இது நல்லாயிருக்கா? முதல்லே பேர் சொல்லுங்க. எங்கேயிருந்து பேசுறேன்னு சொல்லுங்க.

ஐயோ!! மேடம் நீங்க அழகா சிரிக்கிறீங்க, அழகா இருக்கீங்க, உங்க குரல் ரொம்ப இனிமை மேடம். ஐயோ!! ஏங்க பொய் சொல்லிடாதிங்க, நீங்க பெப்சி உமாதானுங்களே! நம்பமுடியலையே!

ரொம்ப தாங்க்ஸ்ங்க. ரொம்ப ரொம்ப ரொம்ப தாங்க்ஸ். இன்னுமா நம்ப முடியலை? பெப்சி உமாதான்.

ரொம்ப நாளா உங்ககிட்டே பேசணுமுன்னு இருந்தேன். இப்போதான் கெடைச்சிருக்கு. ஐயோ இன்னும் நம்ப முடியலையே! பெப்சி உமாங்களா? உண்மையைத்தானே சொல்லுறீங்க?

ஏங்க, இதெல்லாம் கொஞ்சம் ஓவராத்தெரியலை! பெப்சி உமாதான். உங்களுக்குக் கல்யாணம் ஆகிடுத்தா? எத்தனை குழந்தைகள்?

ஐயோ அதெல்லாம் இருக்கட்டும். நீங்க பெப்சி உமாதானுங்களே! உங்க பையன் ஆதர்ஷ் எப்படியிருக்குறான், அவரோட அப்பா எப்படி இருக்கார்? உங்க ஆத்துக்காரர் நல்லாயிருக்காரா?

சார். எல்லாம் நல்லா இருக்கா. நீங்க சொல்லுங்க, நீங்க சமத்தா, அசடா?

சமத்தா? அப்படின்னா? அதிருக்கட்டும். ஐயோ பெப்சி உமா தானுங்களே! பெப்சி உமா எங்கூட பேசுறாங்களே! ஐயோ இந்த நேரம் பாத்து வீட்டுல யாரும் இல்லையே!!!!!!!

சரி, சொல்லுங்க. என்ன பாட்டு வேணும்?

இருங்க, இப்ப பாட்டா முக்கியம். ஐயோ பெப்சி உமா பேசுறாங்களே! உங்க புடவை ரொம்ப நல்லாயிருக்கும்ன்னு எல்லாரும் சொல்லுறாங்க. நீங்க அழகா சிரிப்பீங்க. உங்க வாய்ஸ் ரொம்ப ஸ்வீட். ஐயோ.. பெப்ப்சி உமா எங்கூட பேசுறாங்களே! எத்தனை தடவை உங்ககூட பேசணுமுன்னு நெனைச்சேன். கடைசியா பேசிட்டேன்.

ரொம்ப ரொம்ப தாங்க்ஸ்ங்க. இதெல்லாத்துக்கும் நீங்கதான் காரணம். உங்களோட அன்பு. உங்களோட ஆதரவு. இந்த நிகழ்ச்சிக்கு நீங்க கொடுக்குற ஆதரவும் அனுசரனையும்தான் காரணம். ரொம்ப ரொம்ப தாங்க்ஸ். டிரை பண்ணிண்டே இருங்க. டிரை. டிரை...கீப் ஆன் டிரையிங்க். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

(பின்குரல்: ஏம்மா, இதையே எத்தனை தடவைதான் சொல்லிண்டு இருப்பே? எல்லாம் சரி. அந்த புடவைத்தலைப்பை பிராண்டிண்டு இருக்கியே! அதை மட்டும் விடக்கூடாதா?)

இல்லேங்க. பெஸ்ட் லக் திஸ் டைம். கிடைச்சிருச்சே! உங்க கூட பேசிட்டேனே...ஆஹா! ஏங்க, கடைசியா உண்மையாச்சொல்லுங்க. நீங்க பெப்சி உமாதானுங்களே!

போன் அறைந்து சாத்தப்படுகிறது.

எம்.கே.குமார்.

Saturday, June 12, 2004

தம்பிக்கு ஒரு கடிதம்...

உடன்பிறப்பே,

நலம்தானே! நலமில்லாமல் எப்படி இருக்கும்? வலிவுடைய நம் தோள்கள் நிலைநிறுத்திருக்கும் ஆட்சியல்லவா இது! மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழி என்பதை அறியாத மூடர்களா நாம்? நாற்பதிலும் வென்று நான்கிரண்டு திசைகளிலும் வெற்றி முரசு கொட்டியல்லவா நாம் வீற்றிருக்கிறோம். நமது ஆட்சி நாடெங்கும் நம் புகழ் பரப்பும் ஆட்சியாக அல்லவா நடந்துகொண்டிருக்கிறது! எப்படி நமக்கில்லாமல் போகும் நலம்? நெஞ்சினிக்கும் இவ்வேளையில் தமிழ் வாழும் செய்தி கேட்டு நலமில்லாமல் இருப்பாயா நீ? தமிழென்றால் நலம்தானே! நாமென்றால் தமிழ்தானே!

எத்தனை சதிக்கூட்டங்கள்? பழுவூர் சதியாலாசனைகளைக் குழிதோண்டிக் குப்புறப் புதைக்கும் அளவுக்கல்லவா அதைவிட பெரிய சதியாலோசனைகள் இங்கே நடைபெற்றன. சதிகாரத் தலைவிகளின் சவுரி முடி கூட நம்மை ஒன்றும் செய்ய முடியாது என்பதைத் தெள்ளிய நீரோடை போலல்லவா நாற்பதும் நமக்குக்காட்டியது! பேதைப் பெண்பூச்சிகளின் ஆதிக்கச் சூத்திரங்கள். நியாயங்கள் அறியாத நடுநாயகங்கள். பிராமணத்துவங்களின் பெருங்கூட்டங்கள். காவிகளின் மயானக்கூக்குரல்கள். நாமென்ன வரலாறியாத வெள்ளாடுகளா? வீரமில்லாத விட்டில் பூச்சிகளா? நயவஞ்சக நரிக்கூட்டங்களா? நாற்பதும் பறை சாற்றியதே நமது வீரத்தை! புறமுதுகு காட்டியல்லவா ஓடினார்கள் பெண்புலிகள்! அந்தோ! அஞ்சறைப்பெட்டியாடிய கைகள் ஆட்சிக்கட்டிலில் நடத்திய இடுகைகளெல்லாம் இதோ இன்று ஒன்றன் பின் ஒன்றாகவல்லவா புறமுதுகிட்டு ஓடுகின்றன்.

இதோ! வங்காள விரிகுடா எழுந்து வருகிறதே! அரபிக்கடலின் மீன்கள் கூட்டம் மொத்தமாக முத்தமிட்டுக் கொண்டல்லவா ஆடிப்பாடி சந்தோசத்தில் முழங்குகின்றன. தென்திசையிலிருந்து அதோ! வருகிறது! வருகிறது! அண்டார்டிக்கா கண்டம் வான் பிளந்து நமக்கு வாழ்த்துச்சொல்ல வருகிறது! இந்தியப்பெருங்கடல் போடும் முழக்கம் என்னவென்று கேட்கிறதா உனக்கு? வருகிறார்கள், மொத்தமாக வருகிறார்கள். வள்ளுவப்பெருந்தகை முதல் வாரியார் வரை வெற்றிக்களிப்பில் அவர்கள் ஆடிப்பாடி அகமகிழும் வாழ்த்தொலி கேட்கிறதா உனக்கு? வானமே எழுந்து வந்து வாழ்த்தும் குரல் கேட்கிறதா உனக்கு?

காவியங்கள் கொண்டதும் காவியங்கள் படைத்ததுமான நம் தமிழுக்கு வந்துவிட்டது அது. நேற்றுப்பெய்த மழையில் இன்று பூத்த காளானல்ல அது. எத்தனை தியாகம் செய்திருக்கிறோம் என்பதை நீ அறிவாயா தம்பி? 6-6-66 ல் அண்ணா அவர்கள் ஆரணியில் பேசிய கூட்டத்திலே எழுப்பிய அத்தீர்மானத்திற்கு எழுந்த ஆதரவுகளை இமயமலையிலும் எழுதமுடியாது தம்பி. இடிமுழக்கமென எத்தனை விண்ணைப்பிளக்கும் வாழ்த்துகள் எழுந்தது தெரியுமா உனக்கு? நெஞ்சு நெருப்பினிலே எரிந்த காலமல்லவா அது!

காவியத்தமிழில் இனி ஓவியங்கள் படைக்கலாம் வா. நடுவண் அரசு நம்முடையதாக இருக்கையில் எத்தனை இடையூறுகள் வந்து இவைகளைத்தடுத்து விடும் பார்க்கலாம். நாற்பது கோடி கொடுத்த பேசமுடியாத சமஸ்கிருதத்தை விட வாயினிக்கும் மொழியினிக்கும் வையகமாளும் தமிழுக்கு எப்படியும் அதன் இருமடங்காவது கிடைக்குமல்லவா? வையகத்தை கதைகளாலும் கவிதைகளாலும் கட்டுரைகளாலும் பெருக்கி இன்பத்தமிழுக்கு இன்னுயிர் கூட்டி வானம் வரைக்கும் அதன் புகழ் பரப்பலாம் வா.

திருப்பதிநாயகர் நேசமுடன் ஆங்கிலம் படிக்கப்போகலாம், காஞ்சிபுர கடவுளர்கள் அரசாங்கத்தை நடத்த ஆசைப்படலாம். இதெல்லாம் எவ்வகையில் நம் கொள்கைகளை கோலமிழக்கசெய்யும்.? கொடிபிடிக்கும் தடியர்கள் தமிழை விட்டு ஆங்கிலம் படிக்கப்போனால் என்ன? கோலெடுத்தால் நடனமாடும் இக்கோமான்கள் படிக்காவிட்டால் என்ன? தமிழ் வளர்ந்துவிடாதா? இல்லை கோடிகள்தான் கிடைக்காதா? கனடா முதல் கைலாயம் வரை செம்மொழியை சேர்க்காமல் நாம் சோர்ந்து விடுவோமா என்ன? சிந்திய ரத்தத்தில் சிலப்பதிகாரம் எழுதி இமயமலை வரை அடுக்கி வைத்திருக்கலாமே தம்பி! செம்மொழியை இகழ்ந்து வெம்மொழியை படித்தால் கோட்டையைப்பிடித்து விட முடியுமா இவர்களால்? கொள்கைக்கோமான்களா இவர்கள்? கோபுரத்தூசி தம்பி இவர்கள்!

சிந்திய குருதியில் ஹிந்தியை அழித்தோமே! செப்பு மொழியாளுக்காகத்தானே தம்பி! சீற்றம் கொண்ட காளைகளாய் அன்று நாம் கொண்ட புரட்சி, பிணம் தின்னும் பேய்களை தண்டவாளயங்களை விட்டல்லவா விரட்டி அடித்தோம்! தலை வைத்தல்லவா காத்தோம் அதை! இன்று இதோ செப்பு மொழி நம் மொழி. சாதித்து விட்டோமடா தம்பி நாம் சாதித்து விட்டோமடா! ஹிந்தி வேண்டாம், வேற்று மொழிக்கு விசிறியாக வேண்டாம். காதலிப்போம் தமிழை. காப்போம் செம்மொழியை. பெறுவோம் பேறுகளையும் கோடிகளையும்!

ஹிந்தி அழித்ததற்காக நாம் என்ன கோட்டை வாயிலிலேயே நின்று விட்டோம்? செங்கோட்டை நமக்கு வெறுங்கோட்டை ஆகிவிட்டதா? நிதியும் வனமும் கிடைக்காமலா போய்விட்டது? தொலைத்தொடர்பும் கப்பலும் இல்லாமலா ஆகிவிட்டோம்? நமக்கு வேண்டாம் தம்பி அது. தமிழைப்படிப்போம். தமிழால் இணைவோம். தரணி போற்றும் தமிழ் என் தாயினுடையது என்போம். தாயை இகழ்ந்தவனை தமிழ் தடுத்தாலும் விடோம். தமிழை இகழ்ந்தவனை தாய் தடுத்தாலும் விடோம்.

முரசொலி மாறன் தமிழ் வளர்க்கப் பட்டபாடு தெரியுமல்லவா உனக்கு. செம்மொழியாக்கிப் பார்க்க அன்னாருக்குக் கொடுத்து வைக்கவில்லையே தம்பி! இதோ சேரமானின் வழித்தொன்றலாய் வந்துவிட்டானே தயாநிதி. விடுவானா தமிழை. தொடுப்பானா பிழையை.? எடுத்தானே! முடிப்பானே! கோடிகளல்லவா! கொடுத்து வைத்தவர்கள் நாமல்லவா? வருவது தமிழால்தானே! நாம் வாழ்வதும் அதனால்தானே!
வேண்டுமா பிறமொழி? கொடுக்குமா அது வெகுமதி?

வா தம்பி! உன் வாரிசுகளுக்காகவே தமிழாசிரியர்களை நியமிக்கிறேன். அவர்களின் வாசிப்புக்காகவே மாநகராட்சிப்பள்ளிகள் நின்றுகொண்டிருக்கின்றன. தமிழால் வா. தமிழ் படித்து வா. ஆங்கிலம் என்ன தரும்? ஹிந்தி என்ன தரும்? சப்பாத்திகள் செய்வதற்கு ஹிந்தி எதற்கு? சம்பாத்தியங்கள் தருவதற்கு அதெல்லாம் வேண்டுமா என்ன? நாம் வாழவில்லையா? வேட்டிக்குள்ளே புகுந்த வேங்கையை விரலால் கொன்றவர்களல்லவா நாம்! தமிழைப்படி. மடிப்பிச்சை எடுத்தாகிலும் தமிழைப்படி. மடிப்பிச்சை மட்டுமே வாழ்வாகும் பரவாயில்லை. மடிப்பிச்சை எடுத்து மடிப்பிச்சையால் மட்டுமே வாழ தமிழ் படி. எக்களம் கண்டாலும் வெறுங்கையோடு திரும்புமா வேங்கை?

கண்ணிலே கோளாறு சிலருக்கு. ஹிந்தி வேண்டுமாம். ஆங்கிலம் வேண்டுமாம். அதெல்லாம் எதற்கு? ஆங்கிலக்கல்வியிலா படித்தோம் நீயும் நானும்? பொன்னர் சங்கரும் புலவர் தொல்லும் ஹிந்தி படித்தா நாட்டையாண்டார்கள்? பண்பாடற்றவர்கள் பகலுவார்கள் அப்படி! காதிலே வாங்கினாலும் பாவம் தம்பி! காலைக்கடன் முடித்தவுடன் காலைக்கழுவுவது போல காதைக் கழுவி விடு தம்பி! செம்மொழி கேட்கும் இக்காதுகளுக்கு அம்மொழி வேண்டாம், அறிவுரைத்துவிடு.

காலம் போயினும் ஞாலம் அழியினும் ஞாயிறு காணும் பகலைப்போல தமிழைப்பார்த்து வளர்வோம் தம்பி. தமிழைக்காக்க வாழ்வோம் தம்பி!

அன்புடன்,
ம.கா.(கு)

மத்தியப்பிரதேசம்.

இருபத்தைந்து வயதுக்கு உட்பட்டவரா/ மேற்பட்டவரா நீங்கள்?

திருமணம் முடித்தவரா/ முடிக்காதவரா (ஹனிமூன் முடிந்து இப்போதுதான் வந்திருப்பவரா) நீங்கள்?

சிவாஜி கோட் போட்டுக்கொண்டு நடித்த 'லாரி டிரைவர் ராஜாக்கண்ணு' மாதிரியான படங்களை விரும்புவரா/ வெறுப்பவரா நீங்கள்?

அனுபவித்ததை, தான் பெற்ற உடற்செல்வங்களை, மறைக்க முடியாத விஷயங்களை மற்றவர்களுக்கும் சொல்ல விரும்புவரா/ விரும்பாதவரா நீங்கள்?

நேராக நிமிர்ந்து நின்றுகொண்டிருக்கும்பொழுது உங்களது கால் கட்டைவிரலைப் பார்க்க முடிந்தவரா/ முடியாதவரா நீங்கள்?

வாங்க! வாங்க! உங்களைப்பத்தித்தான் பேசுறோம். படிச்சுட்டு உங்க கருத்தைச்சொல்லுங்க.


மத்தியப்பிரதேசம்.

காஷ்மீரை தலையாக்கி விட்டு கன்யாகுமரியை பாதமாக இந்தியாவை நிற்கவைத்துப் பார்த்தோமாகில் மத்தியப்பிரதேசம் என்னவாகும் என்று நான் சொல்லாமல் உங்களுக்கு விளங்கிவிடும். மத்தியப்பிரதேசம் சில சமயங்களில் செழிப்பான வளமான பகுதி. சில சமயங்களில் மெலிந்திருந்தாலும் தாகமூட்டும் பிரம்மனின் கஞ்சத்தனம் வழுக்கியோடும் வளைவுப்பகுதி. இயற்கையின் நியதியில் 'இது போதும்' என்று 'பிடி' மட்டுமே கொடுக்கும் படைப்புகள் கூட வஞ்சகமில்லாமல் வாழ்வை ரசிக்க வைப்பன என்பதற்கு இதுவும் ஒரு சான்று. இனி மத்தியப்பிரதேசத்திற்கு வருவோம்.

மத்தியப்பிரதேசத்தின் எல்லைகள் நாமறிந்ததுதான். மேலே மேடான பகுதிகளையும் கீழே சரிவான பகுதிகளையும் கொண்ட இத் தக்காணபீடபூமி உருவானது எப்படி அறிவியலாரும் ஆன்மீகரும் ஆளுக்கொரு தியரிகளைச் சொல்லிக்கொண்டிருந்தாலும் திலீப்குமார் சொல்வது மிகவும் எளிமையானதும் சரியாகப்பொருந்தும் என நினைக்கிறேன். மேல் பாகத்தில் ரகசியமாய்த்துவங்கி, அமைதியாய் முன் எழுந்து, அவசரமில்லாமல் முன் வட்டம் போட்டு, பின் வெடுக்கென்று இறங்கிச்சரிந்து உருவாகியிருக்குமாம் அது. உருவாகும் தருணம் எது தெரியுமா? வைகறைக்கு முன்பான அந்த இளம் இருட்டில் ஒளியின் முதல் கீற்று சந்தடியின்றி திடீரென்று இழைந்து பகலாக்கி விடுவதைப்போன்றதாம் அத்தருணம். உண்மைதானா? வருவதறியாமல் வருவதா அது? காதல் மட்டும் தான் 'அப்படி' என்று படித்ததும் படங்களில் பார்த்ததும் தவறா? இல்லை காதல் தான் தவறா? காதல் தவறெனில் காதல் மூலம் வருவதனைத்தும் தவறா? மனைவியிடம் 'விழுவதறியாமல் விழுவதைப்போல' வருவதறியாமல் வந்து வற்ற மறுக்கிறதா அது? மனைவியிடம் மாட்டியவர்கள் வற்றிப்போகிறார்களே! இது மட்டும் எப்படி?

மோதகம், தலையில் குட்டு, அருகம்புல், மாம்பழம், தந்தம் என்பதையெல்லாம் தாண்டி மத்தியப்பிரதேசம்தான் நினைவுக்கு வரும் அவனைக் காணும் பொழுதும் நினைக்கும் பொழுதும் எனக்கு. 'அது' கொஞ்சம் அழகுதானோ என்று உள்ளுணர்வில் தோன்றுவதும் கூட அவனால் தானோ என நினைக்கிறேன். செல்லமாய்த்தட்டி அதை அசைத்துப்பார்க்கவேண்டும் என அவ்வப்பொழுது வரும் ஆசையையும் உண்மையில் மறைக்கமுடியாது. தட்டிப்பார்க்கவேண்டும் என்று ஆசை வருவதே தவறு. இன்று இங்கே வரும் 'தட்டிப்பார்க்கும் ஆசை', நாளை சென்னைப் பேருந்தில் வந்தால்? மோதகம், தலையில் குட்டு இதுமட்டுமில்லாமல் இன்னபிற 'வீங்கு' 'உள்காய வெளிக்காய' சமாச்சாரங்களும் இலவசமாய்க் கிடைத்துவிடும் ஆன் தி ஸ்பாட். இதெல்லாம் தேவையா? தட்டிப்பார்ப்பது அவ்வளவு நல்லதில்லை என்றுதான் உடம்பு சொல்கிறது..மனது? எருதின் நோய் காக்கைக்குத்தெரியுமா? அதுவும் கருங்காக்கைக்கு?

காக்கையைக் கூட இம்மாதிரி விஷயங்களுக்கு இழுப்பதெல்லாம் தவறு. எந்தக்காக்கை பேருந்தில் பயணிக்கும் பக்கத்து சீட்காரனுக்கு இடமில்லாமல் வயிற்றை வைத்து நிரப்பிக்கொண்டிருக்கிறது? எந்தக்காக்கை தூக்கிக்கொண்டு பறக்க முடியாமல் அதிகாலை மெரீனாவில் வாக்கிங் போகிறது அதைக்குறைக்க? எந்தக்காக்கை மல்லாக்கப் படுத்துக்கொண்டிருக்கும்பொழுது குழந்தைகள் ஏறி சறுக்கு விளையாட்டு விளையாடுகிறார்கள் அதன்மீது?

எப்படி உருவாகிறது என்பதைச் சுருக்கமாக நாம் சொல்லிகொண்டாலும் மத்தியப்பிரதேசத்தை விலாவாரியாக விரித்துப்பேச நம்மால் இயலும். இளம் மத்தியப்பிரதேசம் அழகானது என்று நகரத்திலே சொல்லிகொள்கிறார்கள். நடிகர் ஒருவருக்கு அதுவே அழகு என்றும் இளம் நடிகைக்கு அதுவே அவலம் என்றும் உழைப்பின் ஊதியத்தை அதை வைத்தும் கணிக்கிறார்கள். லேசாக அசைத்தால் நடிகை என்றும் நன்றாய் அசைத்தால் நாட்டியசுந்தரி என்றும் அதுவே பெயரை அறிவிக்கிறது. நடன இயக்குனருக்கும் நடிகைக்கும் காதல் வருவதில் கூட காரணமாகி விடுகிறது அது. பிறகு பிரிவுகள். பிரச்சனைகள்.

ரேமண்ட், ஆல்லென் சோலி, பீட்டர் இங்கிலாண்ட், ஆரோ, டெனிம் இன்னபிற இத்தியாதிகள் தராத இமேஜைக்கூட 'இளம் மத்தியப்பிரதேசம்' தந்து விடுவதுண்டு. அயலூரிலிருந்து வீடு திரும்பும்போதோ அயல்நாட்டிலிருந்து நாடு திரும்பும்போதோ 'சம்பந்தப்பட்ட பகுதிகள்' மப்பும் மந்தாரமுமாய் செழிப்பாயிருந்தால் 'பயல் செழுப்பம். பொண்ணு குடுக்கலாம்' என்பார்கள் எனது ஊரில். மத்தியப்பிரதேசத்தைப்பார்த்து மயங்குகிறார்கள் இப்படி. பொண்ணு படும் பாடு இவர்கள் அறிவார்களா தெரியவில்லை.

இதெல்லாம் ஒரு புறமிருக்க இல்லத்தரசிகள் பலருக்கு இதுவென்றால் அலர்ஜி என்கிறது ஒரு ஆதாரம் தராத தகவல் களம். காலையில் ஐந்து மணிக்கு கட்டிலை விட்டு எழுப்பி சாலையோரமும் கடலோரமும் ஓட வைப்பதில் பரங்கியர்களைப்போல இரக்கமில்லாமல் கணவர்கள்மேல் அவர்கள் நடந்துகொள்வதாகவும் அத்தகவல்களம் சொல்கிறது. சிலபெண்கள் அவ்வளவெல்லாம் கஷ்டப்படுத்தாமல், போனால் போகிறதென்று சமைப்பது, வீடு கிளீன் செய்வது, குழந்தைகளைக் கவனித்துக்கொள்வது, சென்னையாய் இருந்தால் நள்ளிரவு இரண்டு மணிக்கு ஷகீலாவோடு புரண்டு கொண்டிருந்த கணவரை புரட்டி, எழுப்பி பத்து குடம் (மட்டுமே) 'அடித்து' எடுக்க வைப்பது போன்ற 'எளிதான' வீட்டு வேலைகளை மட்டும் செய்யச்சொல்லி விடுகிறார்களாம். 'மத்தளமாவது பரவாயில்லை எங்களுக்கு எல்லா பக்கமும்' என்கிறது ஆணுரிமைச்சங்க தகவல்களை மேற்கோள் காட்டிய அத்தகவல்களம். நிஜத்தில் அப்படியெல்லாம் இருக்கிறதா? எத்தனை பேர் உண்மையை ஒத்துக்கொள்வார்கள்?

தேனிலவு முடிந்து வரும்பொழுதே அதற்கான அறிகுறிகள் தெரிந்துவிடுவதாக ஒரு தரப்பு சொல்கிறது. எவ்வளவு நிஜமிருக்கிறது இக்கூற்றில்? ஒரு இன்னிங்ஸ் மட்டுமே முடிந்த வேளையில் இத்தகைய சமாசாரங்கள் எப்படி நிஜமாகும் என்பதைத் தெரிந்தவர்கள் சொல்லலாம். அப்படியே நிஜமானாலும் இத்தகைய நிகழ்வுகளுக்கு எவை முக்கியக் காரணமாயிருக்கின்றன? திடீரென்று வந்து சேர்ந்த சந்தோசங்களும் சொந்தங்களுமா? இல்லை முழு நேரமும் சும்மாயிருந்து(!?) மாமியாரின் அன்புக்கட்டளைக்கு ஆட்பட்டு நடக்கும் வரவேற்புகளிலினாலா? இல்லை 'மச்சினி கிச்சினி' சம்பந்தபட்ட வேறெதுவும் காரணங்களா?

நிலைமை இப்படியிருக்க, சீன நண்பனொருவன், 'இந்தியப்பெண்களுக்கு மட்டும் எப்படி ஆண்களுக்கு நிகராக 'மேலே சொன்ன மேட்டர்' விரைவில் வளர்ந்து சீக்கிரமாக செழிப்பாகிவிடுகிறது என ஒரு சந்தேகத்தை என்னிடம் வைத்தான். யோசிக்க வேண்டியதுதான். ஜோதிகாக்களையும் கிரண்களையும் பேட்டி எடுத்துப்பார்க்கலாம். மும்தாஜ்வேறு எந்த வாய்ப்புகளும் இல்லாமலிருக்கிறாராம். ஏதாவது கலைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யுங்களேன் என்று யாரையும் கேட்க நமக்குத்தைரியம் இல்லாத வேளையில் வெறுமனே பேட்டி எடுத்து ம.பி மட்டுமின்றி அருணாச்சல, உத்தரப்பிரதேச, ஹிமாச்சல 'மலை'ப்பிரதேசம் பற்றியும் நலம் விசாரிக்கலாம்.

குற்றவாளிகளையும் 'அன்பளிப்பு'களையும் கையாளுவதில் மட்டுமில்லாமல் இந்தமாதிரி விஷயத்திற்கும் எடுத்துக்காட்டாய் எப்போதும் நமக்கு உணர்த்தப்படுபவர்கள் காவல்துறை நண்பர்கள். இதை வைத்துக்கூட நாம் ஒருமாதிரி காரணங்களை யோசிக்க முடியும். ஊரான் காசில் உடம்பு வளர்த்தால் இப்படியெல்லாம் நடக்க வாய்ப்பிருக்கிறதா, நின்றுகொண்டே எந்த வேலை பார்த்தாலும் இதுமாதிரி வர வாய்ப்பிருக்கிறதா? இல்லை இவையெல்லாம் காரணமில்லையெனில் என்னதான் காரணம் என்று காவல்துறையின் மத்தியப்பிரதேசத்தைக் களமாக்கி காமெடி செய்யும் விவேக நடிகரைக்கேட்கலாம். விவேக நடிகருக்கும் உற்சாகபானத்தின் காரணமாக அண்மையில் அப்படி இப்படி ம.பி வளர்ந்து வருவதாக ஒரு நாளேட்டு வாரச்செய்திமலரில் கருப்புப்பூனை சொல்கிறது. ஆக அனைத்திற்கும் உற்சாக பானம் தான் காரணமா? இல்லை உற்சாகம் காரணமா.? யோசிக்க வேண்டியதுதான்.

திருமணம் முடியாத நண்பனொருவனுக்கும் இடைப்பகுதி செழிப்பாகி வருகிறது என்ற ஆச்சரிய செய்தி கேட்டு ஆடிக்காற்றில் சருகு போல பறந்து சென்றேன். காரணம் யாதுவென்று விசாரித்தேன். சரியான காரணங்கள் இல்லை. ஆக தேனிலவு மட்டுமே ம.பி. செழிப்பாவதற்கு காரணமில்லை என்பது மட்டும் புரிகிறது. வேறு என்னதான் காரணம். (பி.கு: நண்பன் என்றால் நண்பன்தான்) நண்பன் தாய்லாந்துப்பக்கம் கூட செல்லவில்லை என்பது அவனிடமிருந்து நான் பெற்ற உபரி தகவல். இதற்கிடையில் கொடியிடை நூலிடை பற்றியெல்லாம் விசாரித்து பெண்பார்க்கபோவதாக அவன் சொல்லியபோது 'மைக்ரோ அவனில்' பாப் கார்ன் வெடித்தது எனக்குள். என்ன செய்ய?

எப்படித்தான் வருகிறது இது? எங்கிருந்து உதயமாகிறது? கிழக்கு எப்போது வெளுக்கிறது? மறையுமா இது? வழி இருக்கிறதா இதற்கு? நிமிர்ந்து நின்று கட்டை விரலைக் கூட பார்க்க முடியாதவாறு படுத்தும் இதற்கு என்னதான் தீர்வு? வருமுன் காப்பவன் அறிவாளியாம், அவ்வைப்பாட்டி சொல்லிவிட்டாள். எப்படிக் காப்பது? வந்த பின் எப்படிக்குறைப்பது? உங்களிடம் இது எப்போவாவது மாட்டியிருக்கிறதா? வந்து விட்டுப்போயிருக்கிறதா? போய் விட்டு வந்திருக்கிறதா? வருவதாகச்சொல்லியிருக்கிறதா? மத்தியப்பிரதேசத்தை செழிப்பாக்குவதுதான் எங்கள் ஆட்சியின் குறிக்கோள் என்கிறார் செல்வி உமாபாரதி. சீன நண்பன் ஞாபகத்துக்கு வருகிறான் எனக்கு. உங்களுக்கு?

ஒரு இளம்பிராயத்து ம.பி வாசி.

Monday, June 07, 2004

குடிமுந்திரி மற்றும் ஒன்பது ரூபாய் நோட்டு.

புத்தகப் பார்வை-- குடிமுந்திரி மற்றும் ஒன்பது ரூபாய் நோட்டு. தங்கர்பச்சான்.

எம்.கே.குமார்.

அழகி படத்தைப்பார்த்துவிட்டு நண்பர்களில் சிலர் 'ஓகேடா..'என்றவாறு போக நான், 'உன் குத்தமா' பாடலிலும் இன்னும் ஒரு இடத்திலும் கண்கலங்கினேன். மனதைப்பாதித்த சிறுவயது ஞாபகங்கள் அலைகளாய் ஓடிவந்து நின்றன. குழந்தைப்பருவத்தில் விளையாடியவர்களுக்கு மட்டும்தான் அந்த இழப்பின் வலி தெரியும். அதன் வீரியம் தெரியும்.

சென்ற மாதத்தில் ஒருநாள் நண்பர் ஒருவர், அந்தப்புத்தகத்தைக்கொடுத்தார். சிறுகதைத்தொகுப்பு. ஐந்து அல்லது ஆறு கதைகள் இருந்தன அவற்றில். ஒரு சில பக்கங்களைப்புரட்டியபோது நான் எங்களது 'வாழ்க்கைமீட்டான்' வயலின் மேலவரப்பில் ஓடிக்கொண்டிருந்தேன். அப்பா தூக்கமுடியாமல் கால் தாங்கிக்கொண்டு நெல்லுக்கட்டை தூக்கிக்கொண்டு நடக்கிறார். அது எனது பள்ளிக்குப் பணம் கட்டுவதற்காக வயலிலிருந்து வீட்டிற்குச்செல்லாமல் விற்பனைக்குச்செல்லும் கருதுக்கட்டு.

நெல்லுக்கட்டுக்கும் முந்திரி மரத்துக்கும் ரொம்ப வித்தியாசமில்லை. வாழ்க்கையை சுமந்து செல்லும் ஒரு முந்திரி மரத்தை வெட்டி விற்று தன் மகன் மிகவும் ஆசைப்பட்டவாறு புதிய ஷ¥ ஒன்றை வாங்கித்தருகிறார் அவனது அப்பா. எத்தனை வீடு மாறிய போதிலும் எதற்கும் உதவாது என்ற நிலையிலும் அந்த ஷ¥க்களை தாங்கிக்கொண்டே போகிறான் அவரது மகன். இது குடிமுந்திரியின் கதை.

அறிஞர் அண்ணாவின் சிறுகதை ஒன்று செவ்வாழை. குடியானவன் ஒருவனது வீட்டில் மிகவும் அன்போடு வளர்க்கப்படும் ஒரு செவ்வாழை மரம். ஒவ்வொரு நாளும் அதிகாலை எழுந்து செவ்வாழை மரத்தைப்பார்த்து எப்படா காய் காய்க்கும் என்று ஆவலோடு இருப்பார்கள் குடியானவனின் பிள்ளைகள். செவ்வாழையும் வயதுக்கு வந்து ஒரு நாள் குலை ஒன்றும் தள்ளிவிடும். அவ்வளவுதான். அடுத்து வரும் நாட்கள் அத்தனையும் குழந்தைகளுக்கு செவ்வாழைப்பழ கனவுதான். அவனுக்கும் மனைவிக்கும் சந்தோசம் தாங்கமுடியாது. குழந்தைகள் பக்கத்துவீட்டு பிள்ளைகளுடன் திடீர் ஒப்பந்தம் செய்துகொள்வார்கள். அவர்களின் மதிப்பு திடீரென்று கூடிவிடும். காயாகியதைக்கண்டு கனியாகும் நாளை எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்திருக்க, அதிகாலை ஒன்றில் வந்து அறுத்துக்கொண்டு போய்விடுவார் குடியானவனின் முதலாளி. கதை முடிந்தது.

கி. ரா அவர்களின் 'கதவு' என்றொரு கதை. ஏறக்குறைய இதே போன்றதொரு சூழ்நிலை கதை முடியும்பொழுது.

மனத்தின் வலி பார்ப்பவர்களுக்குப்புரியாது. குடிமுந்திரியின் நிகழ்வும் அப்படித்தான். கதை முடியும்போது கண் கலங்கி விடுகிறது. 'அழகி'கள் போல அப்பாக்கள் வந்துபோகிறார்கள். வாழ்க்கைத்தோப்பில் இறைவன் விளையாடுவதைப்போல முந்திரித்தோப்பில் ஒளிந்து விளையாடுகிறான் ஒரு படங்காட்டி...கதைசொல்லி வழியாக. தான் என்ன தொழில் செய்கிறேன் என்றே தெரியாமல் மறைந்துபோன தன் அப்பாவுக்கு சமர்ப்பிக்கிறார் 'குடிமுந்திரி' என்ற இச்சிறுகதைத்தொகுப்பை.

குடிமுந்திரியில் இன்னும் இருக்கும் கதைகளில் இரண்டு கதைகள் மனதுக்கு நல்ல கதையைப்படித்த திருப்தியைத் தருகின்றன.
அவற்றில் ஒன்று 'பசு.'

கல்யாணம் செய்துகொள்ளாமல் வாழும் ராயன் செத்துப்போகிறான் ஒருநாள். ராத்திரியிலே ஒண்ணுக்கிருக்க வந்தவர் வழி தவறி கெணத்துக்குள்ளெ விழுந்துவிட்டதாக ஊரார் நினைக்க, அதன் காரணம் அவனுக்கு மட்டும் தெரிகிறது. காரணம் ஜீரணிக்கமுடியாதது. மிகவும் அதிர்ச்சிதரக்கூடியது. இந்த மனுட வாழ்வில் இப்படியெல்லாம் நடக்குமா என்று நாம் யோசித்தாலும் 'உண்மை சுடும்' என்கிறார் ஆசிரியர்.

முடிவு? சுபமில்லை. சிவக்கொழுந்தும் செத்துப்போகிறான். அடிவாங்கிய பசு பிடரி சரிந்து கால் தாங்கித்தாங்கி நடந்துபோகிறது.

இரா.முருகன் அவர்களின் கதைகளில் ஒன்று அது. பெயர் மறந்துவிட்டது. தியேட்டரில் வேலை பார்க்கும் மேனேஜர் ஒருவர், படம் பார்க்க வந்த சீமாட்டிகள் இருவரின் உதவியாளிடம் தியேட்டர் சைக்கிளைக்கொடுத்து தனது வீட்டில் போய் முறுக்கு வாங்கி வரச்சொல்வார். முதலில் முடியாது என்று மறுக்கும் அவனிடம் அப்படி இப்படி சொல்லி அனுப்புவார். படம் முடிந்தும் அவன் திரும்பி வராத நிலையில் போலீசு மேனேஜரைத்தேடி வரும். அவன் ஏரிக்கரையில் லாரியில் அடிபட்டு இறந்து கிடப்பதாக. சைக்கிளை வைத்து தியேட்டருக்கு வந்தததாக.

மேனேஜர் படக்கென்று சொல்வார். அவன் தியேட்டர் சைக்கிளைத்திருடிக்கொண்டு போய்விட்டவன் என்று. செத்துப்போனவனா வந்து இல்லை, இவர்தான் முறுக்கு எடுத்து வர அனுப்பினார் என்று சொல்லப்போகிறான் என்று நினைத்துக்கொண்டு. ஆனால் விதி வேறு ரூபத்தில் வரும் அவருக்கு. எப்போதும் அவர் மதிக்காத தியேட்டரின் சிப்பந்திக்கு எல்லாம் விவரமும் தெரிந்து அவர் முன் மிகப்பிரமாண்டமாய் நிற்பான்.

யாருக்கும் தெரியாத தவறுதான் எப்போதும் ஆபத்து நிறைந்தது. எதிர்பார்க்காத நேரத்தில் எதிர்பாராது வெடிக்கும் இயல்புடையது. அந்த தவறின் நி¢ஜ இயல்பை நாம் தெரிந்துகொள்வதில்லை. தெரிந்துகொள்ளும்போது அந்த வெடிப்பை நம்மால் தாங்க முடிவதில்லை. மறைத்துவைத்த குண்டு வெடிக்காது என்று யார் சொல்லமுடியும்?

பசு கதையை படித்து முடிக்கும்போது நமது கண்களில் ஒரு கலக்கம். யாருடைய தவறு இது? எப்போது எவ்வளவு பெரிய மனிதர்களும் சறுக்குகிறார்கள் என்று ஆயிரக்கணக்கான கேள்விகள். மிக அருமையான கதை.(புத்தகத்தில் பக்கங்கள் மாறியுள்ளன.)

கதையில் குடித்துவிட்டு கோழிக்கறிக்காகச்சண்டை போடும் எமன் இருக்கிறான். காத்தவராயன் இருக்கிறான். கோயில் கிணத்தை தூறு எடுக்கும்போது அதன் நாற்றம் தாங்கமுடியாமல் யாருக்கும் தெரியாமல் அதில் ஒண்ணுக்கடித்து விடும் சாதாரணன் இருக்கிறான்.

கதையில் நாடகம் வரும் பகுதிகள் நகைச்சுவை.

அடுத்து வரும் கதைகளில் ஏழ்மை எழுத்தாளன் அவன் வயிற்றுப்பாட்டுக்கு வழிதேடி லண்டன் செல்லும் கதையும் ஒன்று. கதை முழுவதும் கதையாசிரியரின் வாழ்க்கையின் ஏழ்மை குறித்தான அங்கலாய்ப்புகள் தொடர்கின்றன.

இன்னொரு கதையில் தமிழ் மாநாடுகளின் உண்மைத்தோற்றம் என்ன என்பதைத்தர முயல்கிறார் ஆசிரியர். ஆசிரியருக்கு அதன் பால் மிஞ்சியது வெறும் ஊசிப்போகாத சாப்பாடு மட்டும்தான். அதுவாவது மிஞ்சுகிறதே என்று கிடைக்கும் ஒருவன் மகிழ்ச்சியோடு செல்கிறான்.

கதைகளில் வெறுமனே கற்பனைகள் மட்டுமே பயணிக்கவில்லை. எதார்த்தங்கள் இயல்பான வடிவிலே வந்து பிரச்சனைகளை நமக்குச்சொல்லிச்செல்கின்றன. ஆசிரியரின் உண்மையான வருத்தங்கள் அருமையாக பிரதிபலிக்கின்றன. சொல்ல வந்ததை வட்டார வழக்குகளோடும் சொல்லி முடிக்கின்றன.

இந்த வாரம் படிக்க நேர்ந்த தங்கர் பச்சானின் இன்னொரு படைப்பு. ஒன்பது ரூபாய் நோட்டு. நாவல்.

மிரட்டும் கதைக்களங்கள் இல்லை. சொந்தங்களாய் பந்தங்களாய் வந்து குழப்பும் பாத்திரப்படைப்புகள் இல்லை. கதாநாயகன் இல்லை. கதாநாயகியும் இல்லை. பேருந்திலே பயணிக்கும் ஒரு எழுபது பிளஸ் வயதுடைய மாதவப்படையாட்சியின் வாழ்க்கை கதை. கதை ஆரம்பம் கொஞ்சம் இழுப்பது போல இருந்தாலும் சில பக்கங்களைத்தாண்டிய பிறகு ஜெட் வேகத்தில் பறக்கிறது.

தன் மானம் கருதி சில நொடிகளில் ஒரு முடிவை எடுத்துவிட்ட பெரிய மனிதர் ஒருவர் அதனின்று மீள முடியாமல் போக, அனைத்தையும் இழந்து மீண்டும் வாழ்ந்த மண்ணுக்கே வருகிறார்..மண்ணோடு மனம் மகிழ்ந்து உறவு கொண்டாடும் வேளையில் அவரது சிதறிப்போன குடும்பம் நெஞ்சைக்கிள்ளுகிறது. தான் நட்ட பலா மரத்திற்கு அடியில் அதிகாலையில் அவரைப்பார்க்கிறார்கள் பிணமாக.

பேருந்தில் வரும் உரையாடல்களும் பயணங்களின் சகிப்பதற்கற்ற போக்குகளும் உணர்ந்து எழுதப்பட்டிருக்கின்றன. கதையெங்கும் பத்திரக்கோட்டை, புலியூர் மண்ணின் மணம் பலாப்பழச்சுவையாய் இனிக்கிறது. மாதவப்படையாட்சி மனதில் நிற்கிறார்.

ஒருசில இடங்களில் நகரம் வான்வில்லாய் வந்து போனாலும் முந்திரித்தோப்புகளும் புத்தம் புதிய சிவப்பு நிற மாங்காய்களும் முள் விரிந்து மணம் பரப்பக்காத்திருக்கும் பலாக்களுமாய் கதை முழுவதும் அவைகளின் வாசனை.

படங்காட்டி ஒளிந்துகொண்டிருக்கிறார். வெளியில் வந்தால் இன்னும் 95% வாசனை வெளியே வரலாம்.

வணக்கங்களுடனும் நன்றிகளுடனும்,
எம்.கே.குமார்.
தாடியாரு.

எனக்கும் அவருக்கும் ரொம்ப வயசு வித்தியாசம். தாடியத்தடவிக்கிட்டே அவரு பேசுறக்கேக்குறதுன்னா எனக்கு அப்படி ஒரு சந்தோசம். ஆனா இன்னக்கி அப்படி ஒரு சந்தோசமே என்கிட்டே இல்லை. மனசு கஷ்டமாகத்தான் இருந்தது. தாடியாரும் வந்தார்.

என்னவே...என்ன பண்ணுதெ?

வருத்தத்தைக்கலைத்துக்கொண்டு அவர் பக்கம் திரும்பி ஒண்ணுமில்லெ, சும்மா உக்காந்திருக்கேன்னேன்.

இல்லையே..மக்கா மொகத்துலெ என்னமோ தெரியுதே. என்னலே பிரச்சனையின்னார்.

இல்லே..ஒரு தப்பு பண்ணிட்டேன். வருத்தமா இருக்குன்னேன்.

தப்பு பண்னிட்டேலெ. விட்டுடு. வருத்தமும் படுறேலெ..அது போதும். ஆனா என்ன காரணமுன்னு மட்டும் நெனச்சி பொழச்சிக்கோன்னார்.

காரணத்தை அவரிடம் சொன்னேன். காலதாமதத்தால் வந்த வெனையின்னேன்.

வழக்கம்போல ஆரம்பிச்சார்.

ஏலே..காலம் ரொம்ப முக்கியமானதுலெ. நா இருப்பேன். போயிருவேன். நீ இருப்பே போயிருவே. காலம் இருக்குமுடோய். நேத்தக்கின்னு சொல்லுறோமே என்னலெ அது? நாளக்கின்னு சொல்லுறோமே என்னலெ அது. வயசாருச்சின்னு சொல்லுறோமே என்னலெ அது? எளமையின்னு சொல்லுறோமே என்னலெ அது? எல்லாமே காலமிலெ. காலந்தான் முக்கியம்ன்னார்.

மேலே தொடர்ந்தவர், கொக்கெ பாத்திருக்கியாலே? ஆத்தோரத்திலெ அதுபாட்டுக்கு நின்னுக்கிட்டே இருக்கும். பாக்க ஒனக்கு அப்படித்தான் இருக்கும். ஆனா பட்டென்னு கொத்துமுல்லெ, மீனைக் கண்டவோடனே.

காக்கையப்பாத்திருக்கியாலெ, பகல்லே..கோட்டானை வெரட்டி வெரட்டிக்கொத்தும். ஆனா ராத்திரின்னு ஒன்னு வரும் பாத்தியா. அதுக்காகத்தான் காத்திருக்கும் கோட்டான். ராத்திர்லெ வெச்சித்திருப்பிக்கொடுக்கும். காலத்தை நோக்கிக்காத்திருக்கணுமில்லெ. கரெக்டா கொத்திடனும். விட்டுப்போச்சின்னோ வரவேயில்லையினோ வருத்தப்படக்கூடாது.

இப்பொ பேசி என்ன பண்ண? எல்லாந்தான் முடிஞ்சிப்போச்சேன்னேன். எடமறிச்சிப்பேசினாரு.

ஏலெ, செல நேரத்துலெ முட்டாப்பயலுக செயிச்சுருவானுக. அதெல்லாம் எப்புடின்னு நெனக்கிறெ? காலம் பாத்து குத்துன கத்திலெ. வேலைய நேரத்தோடு கட்டிப்போட்ட கயிறுலெ. அதுலதான் ஜெயிச்சானுக. ஏன்லெ கலங்குறெ? ஏன் கலங்குறெ? வந்தது போகும்லெ. போனது வரும்லெ. முடியாததுன்னு ஒன்னு இல்லவே இல்லைலெ. ஒலகம் உன் கைக்கி வரணுமாலெ? எல்லாத்தையும் எடுத்துக்குட்டு ரெடியா இருலெ. வரும்போது அடிலெ. நீ ஜெயிப்பே.

செலபேரப்பாரு. அமைதியா இருப்பானுவ. என்னதான் தேருன்னாலும் பாருன்னாலும் மொகத்தத்திருப்ப மாட்டானுவெ. என்னன்னு நெனக்கிறெ? நேரம் வரும்போது பாருலெ. மொத்த ஆம்பளத்தனத்தையும் காட்டுவானுவ. ஜெயிப்பானுவ. அது அடக்கமுல்லலெ. எதிர்பாத்துக்காத்திருக்கது. குறிவெச்சி அடிக்கிறது. ஒன்னை விட பலமான ஒருத்தன் உன்ன அடிக்க வாரானா, அடிவாங்கிட்டுப்போலெ. ஆனால் மறந்துறாதெலெ. நேரம் வரும்போது திருப்பி அடிலெ. புழுங்கணுமுல்லெ. ஜெயிக்கிறவரைக்கும் அடங்கி இருக்கனுமுல்லெ. ஆனா அந்தக்காலம் வந்து உன் கையிலெ நிக்குது பாரு., அப்போ மட்டும் விட்டுறாதெலெ. தொவச்சிரு. காலத்தே ஜெயிச்சுருலே....ன்னு என்னன்னமோ சொல்லிட்டுப்போனாரு மனுசர்.

நா வானத்தையே பாத்துக்குட்டு இருந்தேன்.

The whole world is his who chooses the right time and right place.

எம்.கே.குமார்.

Thursday, June 03, 2004

அது மலரும் நேரமிது!

வெண்ணிலாப்ரியன்.

என் காலுக்கடியில்
சாம்பல்மண்நிறத்தில் ஒரு ஒளிவட்டம்
தாய்மடி தேடும் ஆர்வத்தோடு
வரும்--போகும்.

எச்சில் பட்ட புறங்கை
எப்போதும் இனிக்கும் அதற்கு.
ஒற்றைக்காலில்
வன வாசம் போகும் நேரம்
என்னைச்சிறிது புணரும்.

வயதாகிப்போனதாய் உணரும் வேளையில்
இயலாமை வெறுக்கும்--இருப்பு தேடும்
நொந்த வெந்த நெஞ்சோடு
கழிவிரக்கத்தாயின் கருப்பையில்
நிராதரவாய் சூழ் கொள்ளும்.

மெல்ல மோகச்சூரியன் எட்டிப்பார்க்க
மீண்டும் ஓடி வரும் இறந்ததறியாமல்.
இறந்தவை இறந்தபடியிருக்க
எப்போதும் தெரிவதில்லை அதற்கு
ஒவ்வொரு முறையும்
எப்படி இறந்தோம் என்பது.

என்றாவது ஒருநாள்
கன்னிப்பெண்கள் இல்லாத நாளில்
கனவில் பெண்கள் வராத இரவில்
உணர்ந்துகொள்ளும்
எப்படி இறக்கிறோம் என்பதை!

அதுவரை தினமும் மலரும்!

வெண்ணிலாப்ரியன்.



>>>>
எஸ்.எஸ்.எல்.சி.தேர்வில் புதுக்கோட்டை மாவட்டத்தில்
முதல் இடம் பெற்ற மாணவி சரண்யா பேட்டி
டாக்டருக்கு படிக்க விரும்புகிறேன்


புதுக்கோட்டை, மே.28-

எஸ்.எஸ்.எல்.சி.தேர்வில் புதுக்கோட்டை மாவட் டத்தில் முதல் இடம் பெற்ற திருப்புனவாசல் மாணவி எம்.சரண்யா டாக்டருக்கு படிக்க விரும்புவதாக தெரிவித் தார்.

முதல் மாணவி

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் ஆவுடையார்கோவில் அருகே உள்ள திருப்புன வாசல் ராமகிருஷ்ண வித் யாலயா மேல் நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி எம்.சரண்யா 486 மார்க்கு பெற்று புதுக்கோட்டை மாவட்டத்திலேயே முதலா வதாக தேர்ச்சி பெற்றுள்ளார்.

அவர் பெற்ற மார்க்கு விவரம் பாடம் வாரியாக வருமாறு:-

தமிழ்_96,

ஆங்கிலம்_94,

கணிதம்_99,

அறிவியல்_99,

சமூக அறிவியல்_98,

மொத்தம்_486

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாவட்ட அளவில் முதல் இடம் பிடித்தது பற்றி மாணவி எம்.சரண்யா `தினத்தந்தி' நிருபரிடம் கூறியதாவது:-

எனது தாயார் பெயர் ராணி, விவசாய கூலி வேலை செய்து வருகிறார். தந்தை க.மணிமுத்து திருப்பூரில் உள்ள ஆவின் பால் பூத்தில் வேலை செய்து வருகிறார். நான் மாநிலத்தில் முதலிடம் பெறுவேன் என்று நினைத்து இருந்தேன். ஆனால் மாவட் டத்தில் முதலிடம் கிடைத்து இருக்கிறது. பள்ளியில் நான் தொடர்ந்து முதல் மார்க்கு பெற்று வந்தேன். நான் பிளஸ்-1ல் சேர்ந்து தொடர்ந்து படித்து டாக்ட ராகி கிராமமக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித் தார்.

2-வது இடம்

ஆலங்குடி அருகே உள்ள வேங்கிட குள
>>>>>>>>>>>>>>>>>
நன்றி தினத்தந்தி.

Sunday, May 30, 2004

<<<
புதுக்கோட்டை மாவட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 70 சதவீதம் தேர்ச்சி!: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்தாண்டும் மாணவிகள் சாதனை


புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக்குலேஷன் தேர்வுகளில் இந்த ஆண்டும் வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே மாவட்ட அளவில் முதலிடம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் 8 ஆயிரத்து 235 மாணவர்கள், 8 ஆயிரத்து 397 மாணவிகள் உட்பட மொத்தம் 16 ஆயிரத்து 632 பேர் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 5 ஆயிரத்து 660 பேர், மாணவிகள் 6 ஆயிரத்து 43 பேர் உட்பட மொத்தம் 11 ஆயிரத்து 703 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் புதுக்கோட்டை மாவட்டம் 70 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

வழக்கம் போல் இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 68 சதவீதம் பேரும், மாணவிகள் 72 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் நகர்ப்பகுதிகளை விட கிராமப்பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்களே மாவட்ட அளவில் முதல் இரண்டு இடத்தை பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளனர்.

அறந்தாங்கி கல்வி மாவட்டத்திற்குட்பட்ட திருப்புனவாசல் ராமகிருஷ்ணா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவி சரண்யா 486 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இவர் பெற்றுள்ள மதிப்பெண்கள் முறையே தமிழ்96, ஆங்கிலம்94, கணிதம்99, அறிவியல்99, சமூக அறிவியல்98.

இதுபோன்று இதே கல்வி மாவட்டத்தை சேர்ந்த வேங்கிடகுளம் துõய வளனார் மேல்நிலைப்பள்ளி மாணவி இனிக்கோஸ் சித்ரா மற்றும் கோனக்கொல்லைப்பட்டி ஜீவன் ஜோதி உயர்நிலைப்பள்ளி மாணவர் தாமரை செல்வன் ஆகியோர் 484 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்றுள்ளனர்.

இவர்களில் மாணவி இனிகோஸ் சித்ரா பெற்றுள்ள மதிப்பெண்கள் முறையே தமிழ்96, ஆங்கிலம்90, கணிதம்100, அறிவியல்100, சமூக அறிவியல்98. மாணவர் தாமரை செல்வன் பெற்றுள்ள மதிப்பெண்கள் முறையே தமிழ்92, ஆங்கிலம்95, கணிதம்100, அறிவியல்99, சமூக அறிவியல்98.

மேலும் கொத்தமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, காரக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி, தாஞ்சூர் அரசு உயர்நிலைப்பள்ளி, பெருங்குடி அரசு உயர்நிலைப்பள்ளி, மிரட்டுநிலை அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

புதுக்கோட்டை துõய இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி சந்தான ஜோல்றின் 483 மதிப்பெண்கள் பெற்று புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார். இவர் பெற்றுள்ள மதிப்பெண்கள் முறையே தமிழ்95, ஆங்கிலம்92, கணிதம்100, அறிவியல்99, சமூக அறிவியல்97. மேலும் இந்த பள்ளியில் தேர்வு எழுதிய 270 மாணவிகளில் 267 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதன் மூலம் இந்த பள்ளி எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் 99 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. 118 மாணவிகள் 400க்கு மேல் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியை இருதயமேரி மற்றும் ஆசிரியைகள் பாராட்டினர்.


புதுகை மாவட்ட மெட்ரிக் தேர்வில் "">>>


மேலே உள்ள செய்தி 28 மே 2004 ல் தினமலரில் புதுக்கோட்டை மாவட்டப்பிரிவில் வந்த செய்தி.

அதில் இடம்பெற்றிருக்கும் எம். சரண்யா எனது சொந்த அண்ணன் மகள். நான் படித்த பள்ளியில் சுமார் பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன் நான் ஏற்படுத்திய சாதனையை முறியடித்து வெற்றி கண்டிருக்கிறாள். எனது 'பெட்'டில் நான் தோற்றுவிட்டாலும் அவளின் கடின உழைப்பை மிகவும் பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன். எனது அன்பு குட்டிக்கு வாழ்த்துகள். ஒரு கிராமத்து மாணவியின் சாதனை என்பதில் நீங்களும் பாராட்டுவதில் பங்கு கொள்வீர்கள் என நம்புகிறேன்.

நன்றி.

எம்.கே.குமார்.

Thursday, May 27, 2004

· இளமையான பழைய(ஆயுத) எழுத்து.

எம்.கே.குமார்.

மூன்று இளைஞர்கள். வித்தியாச பிறப்பிடங்கள் கொண்டவர்கள். பிறப்பிடம் மட்டுமே வேறு. இளமையின் வீரியங்கள் ஒன்று. வாழ்க்கையை வெல்லவேண்டும் என்ற வயதுக்கே உரிய வேகத்தில் களத்தில் குதிக்கின்றனர். பணம் மட்டுமே பிரதானமாகிப்போன ஒருவன். தாய்நாட்டின் முன்னேற்ற வேட்கையில் ஒருவன். அமெரிக்க வாழ்க்கையின் பிடிப்பில் மூன்றாமவன். ஒவ்வொருவரும் தங்களுடையதை லட்சியமாகக்கொண்டு போராட விழைகின்ற கணத்தில் அவர்கள் செல்லும் பயணம் ஓரிடத்தில் எதிர்பாராமல் சந்தித்துக்கொள்கிறது. பயணம் சந்தித்தபோதிலும் பாதைகள் வேறல்லவா? வெவ்வேறான பாதைகள் ஒரே பயணத்தைத்தருமா என்ன? ஒருவர் பயணத்தில் ஒருவர் தடைக்கல்லாகிறார்கள். விளைவு? படம் சொல்கிறது.

வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்கே எட்டு வயதிலிருந்து அல்லாடிய ஒருவன் தனது வாழ்க்கையில் அடுத்த தளங்களை அப்படி அமைத்துக்கொள்ள விரும்பாமல் பணத்தை நாடுகிறான். அது வரும் வழி அவனுக்கு சிறந்த வழி. எத்தகைய பாப தருணங்களும் அவனுக்கு அவசியமில்லை. அருவருப்பில்லை. பணம் மட்டுமே தேவை. அவனது வாழ்க்கையில் வருகிறாள் சராசரியான ஒரு மனைவி. கணவனின் மூடத்தனமான மூர்க்கத்தனமான பாதையை தடுத்து நிறுத்தும் வேகத்தோடு அரவணத்துக்கொள்கிறாள். அணைந்துபோகும் ஆளா அவன்? கரைகள் அறியுமா அலையின் வலிகளை!

இரண்டாமவன் காலங்காலமாக போராடிய குடும்பத்திலிருந்து வருகிறவன். அவனது டி.என்.ஏ அதன் வேலையைக் கவனிக்கிறது. கணவனைப்போலவே மகனையும் இழந்து விடுவோமோ எனதஞ்சினாலும் தான் வாழ்க்கையில் பட்ட அனுபவங்களை தனது மன உறுதியில் காட்டிக்கொண்டிருப்பவள் அவன் தாய். வாழ்க்கையின் நிதர்சனங்களை முழுமையாக உணர்ந்துகொண்டவன் இவன். எதுவரை தொடரும் வாழ்க்கை என்பதறியாத வேளையில் இன்றைய நிதர்சனத்தைக்கொண்டு போராடுபவன். இன்றைய விதையின் மூலம் நாளைய மரத்திற்கு வித்திடுபவன். வித்திடுகிறான். வித்திடுவது ஜனநாயகத்தின் அடிப்படை நிலத்தில். விடுவார்களா காலம் காலமாய் நிலத்தையாண்ட அதிபதிகள்? விளைவு? பணத்திற்காக அலையும் ஒருவனை கையிலெடுத்துக்கொள்கிறார்கள் காரியத்தை முடிக்க. கயல்கள் மாட்டிக்கொள்ளலாம்; அலைகள் மாட்டுமா என்ன வலையில்?

அண்ணா மேம்பாலத்தின் அடியில் அதிகாலை நாலு மணிக்கு விழித்துக்கிடக்கும் மேல்தட்டு வாரிசுகளில் மூன்றாமவனும் ஒருவன். ரயிலில் முத்தமிட்ட அந்தப் பெண்ணுக்கும் சேர்த்து நாற்பத்திரண்டாவது முறையாக கல்யாணம் பற்றி சத்தியம் செய்துவிட்டு மாலை விடுதிகளில் நடனமாடி நள்ளிரவுகளில் பெண்ணாண்டு அதிகாலை பறக்கும் லு·ப்தான்ஸா விமானத்தில் விழித்து அமெரிக்க முருகன் கோயிலையும் அங்கு போடவேண்டிய மொட்டையையும் நினைத்து வளரும் அவனுக்கு தந்தையானவர் ஒரு ஐஏஎஸ் அதிகாரி. தந்தையின் ஐஏஎஸ் வாரிசு கனவில் அவரறியாமல் மண் விழுகிறது. அமெரிக்காவிலிருந்து வரும் மண்ணல்ல அது. சென்னை மண். மனம் மயக்கும் மணம் தருவதல்லவா மண்? வருகிறது. தருகிறது. ஆனால் அவனது அமெரிக்க கனவு?

மாதவனுக்கு தனது கேரீயரில் இன்னொரு நல்ல படம். நல்ல(!?)வில்லன்கள் பயப்படும் அளவுக்கு பின்னுகிறார். பார்த்து இன்பா! இனி உனக்கு வில்லன் வேஷம் மட்டுமே வரப்போகிறது! காதலியைக்கொஞ்சுவதாயிருக்கட்டும், கொஞ்சிய மறுகணத்தில் அவளைச் செவிட்டில் அறைந்து காலால் உதைப்பதாகட்டும், நண்பனையே சுட்டுக்கொல்வதாகட்டும் எட்டு வயது ஏற்படுத்திய அடிப்படைத்தேவைகளின் பாதிப்பு அவனின் காட்டுகோபமாய் நெஞ்சில் அறைய வைக்கிறது.

அடுத்தவர் மைக்கேல். மைக்கேல் வசந்தாக வரும் சூர்யா. காட்சிகளுக்கு இவரும் இவருக்கு காட்சிகளும் வசனமும் இட்லியும் சாம்பாரும் போல சரி விகிதத்தில் கலந்துகொள்கின்றன. படம் முடிந்த கணங்களிலும் இவரது பிம்பங்கள் கண்ணுக்குள் நிற்கின்றன. அம்மாவிடம் அனுசரனையாக பேசும் போதும் சரி, தங்கைகளிடம் பாசத்தை வெளிப்படுத்தும்போதும் சரி, அரசியல்வாதி '(சப்பாணி)அண்ணன்' செல்வநாயகத்திடம் கண்கள் குரூரத்தில் கலக்க பேசும்போது சரி, காதலில் ஹார்மோன்களின் பங்கு பற்றி காதலியிடம் பேசிவிட்டு அவளது கண்களை ஆழமான காதலில் பார்க்கும்போதும் சரி சூர்யா நல்ல நடிகராகத் தேறிவிட்டார். மிகவும் இளமையாக வேறு இருக்கிறார். இப்போதுள்ள ஹீரோக்களில் இந்தளவுக்கு பெர்சனாலிட்டி பிளஸ் நடிப்பு இவரிடத்தில் மட்டுமே மேலோங்கி நிற்பது மிகவும் நல்ல விஷயம். வாய்ப்புக்களைச் சரியாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

பாய்ஸ் நாயகன் சித்தார்த் அமெரிக்க கனவு கண்டு சென்னையில் வாழும் வாசி. அழகாக சிரிக்கிறார். அடுத்த இளம்பெண்களின் கனவுவாரிசாக அட்டகாசமாக வரலாம். வாய்ப்பிருக்கிறது. இவரெல்லாம் எம் எல் ஏ என்பது
மணிரத்னத்தின் செயற்கை குறும்பு.

பிரமிட் நடராஜனின் வரிசையில் சில 'கெட்டப்' கதாபாத்திரங்களுக்கு அட்டகாச நடிகர் கிடைத்து விட்டார். சப்பாணி படைத்த என் இனிய தமிழ் மக்கள் ·பேமஸ் பாரதிராஜா. சராசரி அரசியல் வில்லன்களின் வசனம் இவருக்கு எடுபடாது என்பததைத்தெளிவாக உணர்ந்திருக்கிறார் இயக்குநர். கொஞ்சம் மண்வாசனை தெளிக்க மிகவும் நன்றாக ஒர்கவுட் ஆகியிருக்கிறது. முதல் மரியாதையில் 'தயவுசெய்து நீங்கள் நடிக்கவேண்டாம், அமைதியாக இயல்பாக நடந்துவாருங்கள்
உட்கார்ந்து இருங்கள்' என்று சொல்லி பாரதிராஜா, நடிகர்திலகத்தை நடிக்க வைத்ததைப்போன்று பாரதிராஜாவிடமும்
மணிரத்னம் சொல்லியிருப்பார் போலும். முகத்தை கடுகடுக்காமல் கன்னங்களை அசைத்து இம்சிக்காமல் கண்கள் மூலமும் வசன வெளிப்பாடு மூலமும் நடிக்க வைத்திருக்கிறார்.

ஐம்பதிலும் ஆசை வருமாம். வருகிறது. ஐம்பதைத்தாண்டி எழுபதுகளில் பயணிக்கும் ஒருவருக்கு அது அலையலையாய் கரை புரண்டு வருகிறது. ஐம்பது வயது இளைஞன் போல தன்னை உணர்வதாக நெல்சன் மண்டேலா சொல்கிறார்; இவர் எழுதுகிறார். அவர் வசனகர்த்தா சுஜாதா. படம் இயல்புகளைத்தொலைத்து நின்றாலும் எக்கணத்திலும் போரடிக்காமல் போவதற்கும் ரசிக்கவைப்பதற்கும் அவர் மட்டுமே காரணம். சுஜாதாவின் தட்டச்சு விரல்களுக்கு நல்ல தீனி!(பின்னே! அவர்தான் பேனாவால் எழுவதில்லையே!) புகுந்து விளையாடுகிறார் மனிதர். ஜெண்டில்மேன் பாய்ஸ் கணேஷ் வசந்த் என அத்தனை கூட்டணிகளும் அவருக்கு புதுத்தெம்பை அளிக்க மூன்று வித்தியாச கதாநாயர்களுக்கும் முழுமையான வசனங்களை அள்ளி இறைத்திருக்கிறார். படம் வெற்றி என்றால் முதற்காரணம் சுஜாதா மட்டுமே! 50 மிலி சாராயத்திற்காக எவனாவது மொத்த சாராயக்கடையையும் வாங்குவானா என்பது அவர் எழுதிய ஒரு டயலாக். கால்கட்டு வாசலில் இருப்பவர்கள் கவனிக்கலாம்.

நான்கு என் ஆர் ஐக்கள் சேர்ந்து சித்தார்த்தை கதாநாயகனாக்கி திரிஷாவை கதாநாயகியாக்கி ஒரு அடல்ஸ் ஒன்லி படம் எடுத்தார்கள் என்றால் தைரியமாக சுஜாதாவை வசனகர்த்தாவாக்கிவிடலாம். முதலிலேயே அவரிடம் அது ஏ படம் என்று சொல்லிவிட்டால் பிரச்சனையேயில்லை. படம் வசூலில் சாதனைதான். கவர்ச்சிக்காட்சிகள் இல்லாமலேயே அப்படி எழுத இப்போதும் முடியும்போல இவரால்.

மணிரத்னத்தின் வயதைச்சொல்லி அண்மையில் வியந்தது விகடன். அவ்வளவு இளமையாக இருப்பதாக. அதை நிருபிக்க வேண்டும் என்று மெனக்கெட்டிருக்கிறார் அவர். ஆனால் பழைய சரக்குகளைத் தவிர்த்திருந்தால் நிறையவே பாராட்டியிருக்கலாம். மாதவனையும் பாரதிராஜாவையும் அக்கதாபாத்திரங்களுக்கு போட்டது மட்டுமே அவர் செய்த புதுமை. மற்றபடி காட்சிகளும் கதையும் இளமையானாலும் பழமை.

மணிரத்ன ரசனையாகத் தோன்றிய ஒரு காட்சியாக சூர்யாவும் ஈஷா தியோலும் ரயிலில் சந்திக்கும் காட்சியைச் சொல்லலாம். மற்றவை அனைத்திலும் அது மிஸ்சிங்.

இசை பரவாயில்லை. மணிரத்னத்திற்கென்று நிறையவே கஷ்டப்பட்டு போட்டிருப்பார் போல ரகுமான். தேறுகிறது. பாடல்கள் சில கதையோடு ஒன்றவில்லை. ஜன கண மண வைத்தவிர. வைரமுத்துவின் இளமை வரிகளுக்கு நெஞ்சமெல்லாம் பாடல் உதாரணம். வழக்கமான வைரமுத்து வரிகள் ஆங்காங்கு வந்து போகின்றன. அவர் கொஞ்சம் மாறலாம். புதுமையாக சிந்திக்கலாம்.

படத்தின் முதல் காட்சி மீண்டும் மீண்டும் ஐந்து முறை வருகிறது. அகிரா குரோசோவாவோ அலைபாயுதேவோ எது ஏற்படுத்திய பாதிப்பு தெரியவில்லை. படம் பார்க்கிறவர்கள் லேசாக உச்சுக்கொட்டுவது தீனமாக காதில் விழுகிறது. முழுக்காட்சியையும் மீண்டும் மீண்டும் போடுமளவுக்கு மக்களை முட்டாளாக நினைத்திருக்க வேண்டாம் இயக்குனர். சமீப கால வெற்றிகள் தந்த ஆர்வமா இல்லை பயமா இது?

அழகான வைரமுத்துவின் யாக்கை--திரி, காதல்-சுடர் பாடலை இப்படி கேவலப்படுத்தியிருக்கவேண்டாம். ஒரு ரீ-மிக்ஸ் பாடலைப் போடவேண்டிய இடத்திற்கு வைரமுத்து என்ன பாவம் பண்ணினாரோ தெரியவில்லை. வைரமுத்துவின் கவிதை எதற்கென்றும் தெரியவில்லை.

பெண்கள் தங்களது மேலாடை கிழிக்கப்படவேண்டும் என்றுதான் விரும்புகிறார்களா என்று மணிரத்னம் சொல்ல வேண்டும். ரோஜாவிலிருந்து வரும் வாரிசு காட்சி இது. காதலன், காதலியின் மடியில் புரளுவதும் அவளைப்போன்ற அழகான பெண்குழந்தைகளைத் தன் தேவையாகக் கூறுவதும் பம்பாயிலிருந்து பிரதிபலிக்கும் இன்னொரு காட்சி. மாமியாரிடம் தான் மாசமாவதற்கு தயார் என்று பேசும் மருமகள்கள் மணிரத்னம் படத்தில் மட்டுமே வருவார்கள். அப்படியே இரு தங்கைகள் இருக்கும் காதலனின் வீட்டிற்குச் சென்று அவனை அதற்கு தயார்செய்யும் காட்சிகளும்!

படுக்கையறைக் காட்சிகள் மட்டுமே இளமையையும் காதலின் ஆழத்தையும் சொல்லும் என்று மணிரத்னம் இன்னும் நினைக்கிறாரா?

சிவகாசியில் மாப்பிள்ளை பார்த்த பிறகு (முதலில் அது கதாநாயகி அவனை வெறுமனே ஏமாற்றுகிறாளோ என்று தோன்றுகிறது) இன்னொருவனுடன் கடற்கரையில் புரண்டாடும் பெண்கள் சென்னையில் இருக்கிறார்களா என்பது எனக்கேற்பட்ட மிகப்பெரிய ஆச்சரியம். நிஜமாகவே அப்படியானதொரு சூழ்நிலை நிலவுமானால் அது எல்லோருக்குமே வெட்கக்கேடு!

'மிஸ்டர் சந்திரமௌலி'யில் ஆரம்பித்து 'ஓடிப்போகலாமா' வழி வந்து ஜாக்கெட் கிழித்து போர்வைகளையும் சேலைகளையும் இழுத்து போர்த்தி அள்ளிவீசி பெண்ணை நவீன ஓவியமாக்கி பெண்குழந்தைகள் பற்றிப்பேசி என் புருஷன் எனக்கு வேணும் என்பதாய் முடிப்பதற்கு இன்னொரு புதுப்படம் எதற்கு?

இளமையாய் இருக்கிறது. கனமில்லை. மணிரத்ன சினிமா வரிசையில் திருடா திருடாவிற்கு முந்தையது!

எம்.கே.குமார்.

Thursday, March 18, 2004

ஆட்டோகிரா·ப். - 1.

செந்திலுக்குத்திருமணம். திருமண அழைப்பிதழை தனது பழைய நண்பர்களுக்குக் கொடுப்பதற்காக சென்னையிலிருந்து திண்டுக்கல் மாவட்டம் நெய்க்காரன்பட்டி கிளம்புகிறார். நெய்க்காரன் பட்டி ஓடைப்பாலத்தில் அமருகிறார். காய்ந்து கிடந்த ஓடைப்பாலத்தில் சலசலவென அலைபாய்ந்து வருகிறது தண்ணீர். கூடவே நினைவுகளும்.

மூச்சடைக்க ஓடி வந்து நிகழ்காலத்தில் கலக்கிறது வழியெங்கும் வாசம் வீசும் இனிமையான நினைவுகள். மல்லிகாவின் மேல் இயல்பாக வருகிறது முதற்காதல். காமமறியாத காதல். என்ன நடக்கிறது என்பதறிவிக்காமல் அப்படியே வந்த வழி போகும் காதல். இருவருமே தங்களுக்கு முடிந்ததை கைக்கொண்டு கனத்த மௌனங்களாய் இடைவெளி இயங்க பிரிகிறார்கள்.

மூன்று குழந்தைகளுக்குத் தாயான மல்லிகா கண்கள் விரிய அவனைப்பார்க்கிறாள். படக்கென்று வீட்டுக்குள் ஓடி பொட்டு வைத்துக்கொண்டு வருகிறாள். 'என்ன செந்திலு..எப்புடி இருக்கே..'என்று மனதுக்குள்ளிருந்து வருகிறது முகமறியாத முடிச்சு. அவிழ்ந்து போகாத முடிச்சு. கணங்கள் கட்டிச்சென்ற உணர்வுகளின் முடிச்சு.

கேரளாவின் ஆலப்புழாவிற்கு செல்கிறார் செந்தில். கண்கள் குளிரும் கேரளாவின் இயற்கை கொஞ்ச படகில் பயணிக்கும்பொழுது சப்பனங்களில் சல்லியம் செய்த லத்திகா மறுபடியும் வருகிறாள்.

அப்பாவின் உத்தியோக மாறுதலுக்காக கேரளா ஆலப்புழாவிற்கு நகர்கிறது அவரது குடும்பம். மேகத்திற்கிடையே நகர்ந்து கண்களில் தவழும் நிலவாய் கல்லூரிக்காலத்தில் அவனின் இதயத்திற்குள் விழுகிறாள் லத்திகா. தேவதையே நேரில் வந்ததுபோல வருகிறாள் அவள். விலங்கினத்திலே புள்ளிமான் புலியிடம் மாட்டிக்கொள்கிறது..ஆனால் மனித இனத்தில்..?

முடிந்ததை கைக்கொண்டு மௌனங்களோடு நழுவும் காலமல்ல இது. உற்சாகம் கொப்பளிக்கும் இளங்கன்று பருவம். அவளின் பார்வையையே வரமாய் வேண்டி அலையும் பருவம். எல்லாம் தன்னால் முடியும் என்று வெளியுலகம் அறியாது காதலில் மட்டுமே மூழ்கிக்கிடக்கும் காதற்பருவம். மனசு மட்டுமே மருகி அலையும் கணங்கள் இல்லை இவை. இரண்டாவதும் எதையும் நினைக்காது செய்துவிட்டு பிறகு முடிவெடுக்கத்தூண்டும் கூறுகள் கொண்டதுமான உடலும் ஏங்கும் காதல். தான் கடித்த ஆப்பிளை அவனிடம் கொடுக்கிறாள் அவள். அவன் ஆதாமாய் ஆகிறான். உலகின் முதல் இன்பம் அரங்கேறுகிறது இருவர் உடலுக்குள்ளும். முதல் முத்தம். வாழ்க்கையில் இதைவிட சுவை ஏதிலும் இருக்கிறதா என்ன?

இது போதுமல்லவா ஒருவனை தன்னிலை இழக்க வைப்பதற்கு. இழக்கிறான். அவளோடு வீணை வாசிக்கிறான். வீணைகளும் மாறுகின்றன. வாசிப்பது மட்டும் குறையவில்லை. ஆனால் இருவர் உலகமா இது? உலகம் தலையிடுகிறது. கோயிலுக்குச்செல்கிறேன் என்பதாய் நம்பிச் சொல்லிச் செல்லும் அவள், கண்களில் மாலையாய் நீரோடும் கழுத்தில் மாலையாய் பூவோடும் திரும்பி வருகிறாள். இவனை அடித்து நொறுக்குகிறார்கள்... மொத்தமாய் நொறுங்கிப்போகிறான்.

கோயமுத்தூருக்கு நகர்கிறது குடும்பம். குடிக்கும் விரக்திக்கும் நகர்கிறான் செந்தில். மனமுடைந்து அழுகிறார் அப்பா. துடுப்பைக்கரையில் போட்டுவிட்டு கடலுக்குள் செல்வது போல சென்னைக்குள் பிரவேசிக்கிறான் வாழ்க்கை தேடி. மூன்றாவதாய் வருகிறாள் அவள். துடுப்பு! திவ்யா. பூக்களின் வாழ்க்கையிலும் கூட போராட்டம் உண்டென்பதை உணர்த்தி காயங்களை பூக்களால் வருடுபவள்.

கோயிலின் கர்ப்பக்கிரகத்தினுள் இருக்கும் தூய்மை கொண்டது இந்நட்பு. ஆணும் பெண்ணும் கொள்ளும் அக நட்பு. திவ்யா சராசரிப்பெண்ணிலிருந்துதான் வந்திருக்கிறாள் என்பது புரிகிறது அவனுக்கு. தனது மனதைப்பற்றி தன்னைப்பற்றி இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளாத கோபத்தில் பொது இடமென்றும் பாராது படபடவென்று அவனை அறையும் அளவுக்கு அவர்களின் நட்பு இறுகிப்போகிறது.

ரொம்ப தூரம் வந்து நண்பனுக்கு மட்டும் அழைப்பிதழ் கொடுத்து திவ்யா பற்றிச்சொல்லிவிட்டு லத்திகாவைப்பார்க்காமல் போவதை அவன் விரும்பவில்லை. லத்திகாவை பார்க்கச்செல்கிறான் அவன். திருமணக்கோலத்தில் கண்களில் நீரோடு கடைசியாய் பார்த்த லத்திகாவை
மீண்டும் பார்க்க மனம் தாவிச்செல்ல உடல் தரையோடு வழுக்குகிறது. பார்க்கிறான். உலகமே இடிந்து அவன் தலையில் விழுகிறது. கதறிக்கதறி அழுகிறான்.

வாழ்க்கை தனது அடுத்த தளத்திலும் தனக்கு எதிராகவே இயங்குகிறது என்பதையறிகிறான். மனதிலிருக்கும் ஒட்டுமொத்த துயரங்களையும் அடக்கிக்கொண்டு லத்திகா அவனுக்கு நிதர்சனத்தைச்சொல்கிறாள். இத்தகைய தருணங்களில்லாமல் எவர் வாழ்க்கையுமில்லை என்கிறாள். விடைபெறுகிறார்கள்.

திருமண மேடை. புதுக்கனவுகளோடு இன்னொரு பெண். மல்லிகாவின் குஞ்சம் பற்றியோ லத்திகாவின் மூக்குத்தி மற்றும் கைக்குட்டை பற்றியோ திவ்யாவின் புனிதமான நட்பின் ஆழத்தைப்பற்றியோ அறியாமல் இன்னொரு பெண் அவனோடு இணைகிறாள்.

நாளை அவர்களும் இவைகளைப்பற்றிப்பேசிக்கொண்டே இப்படி ஒரு படத்தைப்பார்க்கலாம்.

முதல் சபாஷ் சேரனுக்கு. கேமராவைப்பின்னால் வைத்து கதாநாயகி மேல் தண்ணீரையடித்து ஓட விட்டு, கேமராவை முன்னால் வைத்து வெள்ளைத்துணியைக்கொடுத்து நனைத்து ஓடி வரசொல்லி, நாயகன் நாயகி இருவரையும் ஆழம் குறைந்த கடலுக்குள் அல்லது ஆற்றுக்குள் இறக்கிவிட்டு கெட்ட ஆட்டம் போடச்சொல்லி கேமராவை சுத்தி விட்டு, ஊஞ்சலில் ஆடும்பொழுது கேமராவை பாவாடைக்குக்கீழே தரையில் வைத்து...அல்லது அவளை சுத்த விட்டு டாப் ஆங்கிளில் கேமராவை கீழே இறங்கி வரவைத்து, கேமராவை நேரில் வைத்து அவளைக்குனியச்சொல்லி இல்லை இரட்டை அர்த்தங்களால் காட்சியை நிரப்பி கத்தி கபடா போன்றவைகளால் ரத்தம் சிந்தி இப்படி எவையுமில்லாமல் "நல்ல தரமான வியாபார ரீதியாக வெற்றியும் பெறும்" ஒரு படத்தைக்கொடுக்க நினைத்து அதை சாதித்தும் காட்டியதற்காக சேரனை இறுக அணைத்து வாழ்த்தலாம். இவரது தரம் இப்படத்திலும் தொடர்கிறது. சொந்தப்படம் என்றாலே கவர்ச்சியை வாறி இறைக்கும் அல்லது அவரே நடிகர் என்றால் மொத்தமாய் அனுபவித்துவிட்டுப்போவோமே என்றிருக்கும் சிலருக்கு மத்தியில் இந்த இளைய இயக்குனர்+நடிகர் எல்லோராலும் பாராட்டப்பட வேண்டியவர். இளைய இயக்குனர்களே பொறாமைப்படும் சமுதாய அக்கறை கொண்ட இயக்குனர் சேரனுக்கு எனது வாழ்த்துகள். படம் நன்றாயிருக்கிறது என்பதை விட, ஓடுகிறது என்பதில் நான் மிகவும் மகிழ்கிறேன்.

காட்சியின் ஒளிப்பதிவுகளில் கவிதைகள். ரவி வர்மன், விஜய்மில்டன், துவாரகாநாத், ஷங்கி மஹேந்திரா நால்வர் கூட்டணி. வெற்றி பெற்றிருக்கிறார்கள். 4 பருவங்களும் கண்ணுக்குள் நிற்கின்றன. காட்சிகள் மட்டுமின்றி வசனங்களும் கவிதைகள்.

மல்லிகா- இரு பெண்கள் போல நடித்த ஒருவர். தாவணி கட்டிவிடும் நேரத்தில் வெட்கப்படும் கண்களுக்கும் திருமண மேடையில் திரும்பிப்பார்க்கும் கண்களுக்கும் இடையே இருக்கும் காதல், காலம் அதிகமானாலும் சாகாததுதான் என்பதை நிரூபிக்கிறது.
வயதுக்கு வந்த ஒரு கிராமத்துப்பெண்ணின் வெட்கங்களும் எந்தவித கபடங்களும் இல்லாத ஒரு புன்னைகயுமாய் மல்லிகா கலக்குகிறாள்.

அடுத்ததாய் லத்திகா(கோபிகா). தேவதை என்றால் அது சிறிதும் மிகையில்லை. அப்படி ஒரு அழகு. கொஞ்சும் கிளி கோவம்பழம் சாப்பிடுவது மாதிரி தமிழ் பேசுகிறார். வீணையை மடியில் வைத்து அவர் வாசிக்கும்போது இன்னும் கொஞ்ச நேரம் வாசிக்க மாட்டாரா என்றிருக்கிறது. கொடுத்து வைத்த வீணை! வீணை வாசிக்கும் இடத்திலும் வீணை கற்றுத்தரும் இடத்திலும் காட்சியமைப்புகளும் இசையும் மனதுக்குள் ரம்மியத்தை உண்டு பண்ணுகின்றன.

சினேகா அண்மைக்காலங்களில் நன்றாக நடிக்கவும் செய்கிறார். இப்படத்தில் மிகவும் பண்பட்ட நடிப்பு. கொஞ்சம் கூட ஓவர் ஆக்டிங் இல்லாத அவரது நடிப்பை, வெறுமனே நடிப்பென்று ஜீரணிக்க கொஞ்சம் நேரம் ஆகிறது. நேரில் பார்ப்பது போன்ற ஒரு பதிவு. ஒருவேளை எனக்கு அப்படியாய் இருக்கலாம். திவ்யா (எனக்கும்) திவ்யமானவள்.

இரண்டு பாடல்கள் சூப்பர் ரகம். மற்ற பாடல்கள் ஓகே ரகம். பூக்களின் வாழ்க்கையிலும் போராட்டம் உண்டென்பதாய் வரும் பாடல் சாதிக்க நினைக்கும் இதயங்களுக்கு உற்சாக டானிக். ஞாபகம் வருதே பாடல் எங்கேயோ கேட்ட ஞாபகம் வரவைக்கிறது. வந்தல்லோ பாடல் ரசிக்க வைக்கிறது.

காதலில் தோற்றவன் தம்மடித்துக்கொண்டே தானா இருக்கவேண்டும்? மீண்டும் மீண்டும் அதையே கொஞ்ச நேரம் காட்டியிருப்பது அலுப்பை ஏற்படுத்தினாலும் மற்ற எங்கேயும் மருந்துக்கும் அலுப்பில்லை. காட்சிகளின் நீளம் அதிகமாய் சிலரின் குற்றச்சாட்டு. பௌர்ணமி இரவில் மணற்படுக்கையில் படுத்துக்கொண்டு வானத்தை ரசிப்பதில் எத்தனை இரவுகள் நீண்டால் என்ன?

காதல் கவிதைகள், இளமையோடு போன வசந்த காலக் கவிதைகள், இயற்கையின் எழிலைச்சொல்லும் ரசனைக்கவிதைகள், தோழமைக்கு சான்றாய் வரும் உற்சாகக்கவிதைகள், வாழ்க்கையை வெல்லும் எழுச்சிக்கவிதைகள் என காட்சிகளிலும் வசனங்களிலும் ஏகக்கவிதை மயம்.

யானை கட்டிய இடங்களில் மாடு கட்டிக்கிடப்பதும், நீரோடிய ஓடைகளில் காற்று தவழ்ந்து ஓடுவதுமாக காலம் செய்யும் மாயங்களும் கண்ணுக்குள் நிற்கின்றன.

படம் பார்த்துவிட்டு எழுந்து போகும் கணவன்மார்களின் காயங்களுக்கு மனைவியிடம் மருந்து கிடைக்கிறது. எத்தனை மல்லிகாக்களுக்கும் திவ்யாக்களுக்கும் அப்படி ஒரு மருந்து கணவர்களிடமிருந்து கிடைக்கிறது?

காலம் சொல்லும். சொல்கிறது. திரும்பிப்பார்க்கும் கண்களின் வழியாக!

எம்.கே.குமார்.


ஆட்டோகிரா·ப் - 2

நெலவாய் வந்தவளே!

நெலவாய் வந்தவளே...நேசமாய் நின்னவளே
நேத்து மொத காணலியே நீ எங்கே போனாயடி
பாவி என்னெ தவிக்கவிட்டு பட்டணந்தான் போனாயோ
பாவிமக போனீயடி பாவிமனம் வாடுதடி!

காடுகரை தூங்கலடி கட்டுச்சோறு கசக்குதடி
ஏறுமலை நீ இல்லாமெ ஏமாந்து நிக்குதடி
ஓடை மீனு போல நானு உள்ளுக்குள்ளே அழுவுறேன்டி
ஒன்னக்கண்ட கண்ணு ரெண்டும் தண்ணிக்குள்ளே முங்குதடி!

கம்மாக்கரை சொன்ன பாடம் கள்ளி ஒனக்கு மறந்துடுச்சா
கம்மாத்தண்ணி சொல்லுமடி அது காலாட்டி விட்ட கதை
ஆக்கி வெச்ச மீங்குழம்பும் அவிச்சப்போட்ட முட்டக்கூடும்
ஆலமரத்தடிலெ என்னப்போல அம்போன்னு கெடக்குதடி!

குறிஞ்சாக்கீரை கசக்கும் கோவம்பழம் இனிக்கும்
கோவம்பழம் நா...கொத்தும் கிளி நீன்னு
சொல்லிச்சொல்லி தந்தவளே சொல்லிவிட்டுப்பறந்துட்டியா
சொன்னவார்த்தை நிக்குதடி சொன்னகிளி காணலடி!

அப்பா அம்மா வெளயாட்டு ஆசையோடு ஆடினோமே
அஞ்சுபுள்ளெ பெத்துப்போட்டு தூளியிலே ஆட்டினோமே
அதுலெ ரெண்டை பெருமாப்பய தண்ணிக்குள்ளே வீசிப்புட்டான்
மிச்சமூனை பத்தரமா வளக்குறேனே பையுக்குள்ளே!

கூட்டாஞ்சோறு செஞ்சோமே கோயிலுக்கும் படச்சோமே
கட்டுச்சோறும் பசியோட காத்திருக்கே ஒனக்காக
எலந்தப்பழம் ஏத்தம்பழம் எல்லாம் எனக்கு கசக்குதடி
ஒன் எச்சிபட்ட ஈச்சம்பழம் தந்தசொவை தேடுதடி!

காலாற நடந்துக்கிட்டே கதெ கதையா சொன்னாயே
சொன்ன கதை நிக்குதடி சொன்னகிளி காணலடி

அப்பா வேசம் போட்ட நானு சாராயம் குடிச்சிவர
சண்டைக்கு வந்தியேடி சாராயம் வேணுமுனு
சரக்கு இல்லயின்னு சரசமா நா கிட்டெ வர
ஏறுமலை போனியடி எங்கப்பன் வீட்டுக்குன்னு

ஆத்தா நீ போகாதெ அப்படின்னு நா ஒங்கால்பிடிக்க
என்னத்தான் நீங்க எங்கால்லெ விழுவுறீக
சிங்கமுள்ளெ நீங்க.....சுண்டெலியா மாறலாமோ
அப்படித்தான் நீ சொல்ல அசட்டுசிரிப்பு சிரிச்சேனே

ஏழுமலை நாயி வந்து எதுத்து நின்னு பேசயிலெ
நா அவனெ மொறக்கையிலெ நீ எதுரே வந்து
கோபப்படாதீங்க அத்தான் கொறஞ்சிடும் ஆயிசு
புத்திகொண்டு அவனை பொறகு அடியுங்கோ

சொல்லிச்சொல்லி தந்தாயே சொல்லிவிட்டு போனாயே
சொன்ன வார்த்தை நிக்குதடி சொன்னகிளி காணலடி

இப்பத்தான் வந்து கருத்தப்பாண்டி சொன்னான்
பேச்சியம்மா வந்து பெரியமனுஷி ஆயிடுச்சின்னு
பெரியமனுஷி ஆனா என்னெ பேசக்கூடாதா பொண்ணு
ஓடி வா கண்ணே ஒனக்காக காத்திருக்கேன்.

வெண்ணிலாப்ரியன்.

Tuesday, February 17, 2004

ஓநாயிடம் மண்டியிடும் சிங்கம்.

உ.பி. யிலிருந்து இன்னும் நாலு சீட் கூடுதலாக வந்தால் போதும். இல்லையேல் மஹாரஷ்டிராவிலிருக்கும் அரசியல் குழப்பத்தையும் காங்-தேசிய காங்கிரஸ் பிரச்சினைகளையும் நன்றாகப் பயன்படுத்தி சிவசேனா - பி.ஜே.பி கூட்டணி நாலு சீட் அதிகம் பெற்று விட்டாலும் ஓகேதான். இல்லை பி.ஜே.பி நல்ல வளர்ச்சி பெற்றிருக்கும் கர்நாடகத்தில் ஒரு இரண்டு மூன்று சீட் பெற்றால் போதும். அதுவும் இல்லையா.. இருக்கவே இருக்கிறது பா.ம.க.

ரஜினி ரசிகர்களும் ரஜினியை மாதிரி மறப்போம் மன்னிப்போம் என்று ஆறு தொகுதிகளிலும் மறந்து ஓட்டுப்போட்டார்கள் என்றால் புதுச்சேரியை விட்டுவிடாலும் கூட ஐந்தில் எப்படியும் மூன்று நான்கு ஜெயித்துவிடும். பிறகு, வேறென்ன? அதில் ஒருவரான அன்புமணிக்கு மந்திரி பதவி தருகிறேன் என்றால் டாக்டரய்யாவுக்கு கூலி வேறு கொடுக்க வேண்டுமா என்ன? கரும்புக்கு! பறந்து வருவார்.

இதற்கிடையில் வட மாநிலங்களில் இம்முறை பி.ஜே.பி வழக்கத்தை விட பெரிய அலை கொண்டதாக ஜெயித்து 350 தொகுதிகள் கிடைக்கும் என்பதாயும் பத்திரிகை கருத்துக்கணிப்புகள் சொல்கின்றன.

நிலைமை இப்படியிருக்க, கிடைக்கும் பத்தோ ஆறோ எப்படியாயினும் அதில் இரண்டு மூன்றுதான் பி.ஜே.பி ஜெயிக்கப்போகிறது தமிழ்நாட்டில். இதற்கு ஏன் தமிழ்நாட்டு மக்களுக்கு பெரிய உதவித்திட்டங்கள் எதுவும் செய்யாத மக்கள் விரோத ஆட்சி என்று ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டும் அதிமுக வுடன், வாஜ்பாய் ஆட்சியை முன்னால் கவிழ்த்த, அத்வாணியை செலக்டிவ் அம்னீஷியா கொண்டவர் என்று திட்டிய, கூட்டணி தர்மங்களும் நட்புகளும் உணரத்தெரியாத அதிமுக வுடன் அதன் தலைவி ஜெயலலிதாவுடன் மத்திய பி.ஜே.பி (மத்தியில் உண்மையில் வெற்றிகொடி நாட்டி வரும்) கூட்டணிக்காக ஏன் அலைகிறது, அவரிடம் மண்டியிட்டுக்கிடக்கிறது என்பது தெரியவில்லை.

நிலைமையை நன்கு பி.ஜே.பி உணருமானால் தமிழ்நாட்டில் தனித்து போட்டியிடுதல் மிக நலம். யாருடைய தயவையும் கோராமல்.

அதிமுக வுடன் கூட்டு வைத்து (அவருக்கு கண்டிஷன் போடுவதென்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி.) அவர் போடும் கண்டிஷன்களுகெல்லாம் கட்டுப்பட்டு மீண்டும் ஒருமுறை அவரிடம் குட்டு வாங்கித்தான் உணருவேன் என்று பி.ஜே.பி அடம் பிடிப்பது அதன் தனித்துவத்துக்கு அழகல்ல. அப்படியே கூட்டணி வைத்து ஜெயித்து 'அரசில் அதிமுக வை சேர்த்தால்தான்' ஏன் 'எனக்கு துணைப்பிரதமர் தந்தால்தான் ஆதரிப்பேன்' என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இவை அனைத்தையும் உணர்ந்து, பி.ஜே.பி தேர்தலை எதிகொள்ளுதல் நலம்.

(நண்பரிடமிருந்து)

Monday, February 16, 2004

மதச்சார்பற்ற கூட்டணியா? மானங்கெட்ட கூட்டணியா?

ஆஹா. மறுபடியும் அந்த வார்த்தையைக் காதார கேட்டுவிட்டேன். எங்கே தமிழ்நாட்டில் இந்த வார்த்தை இல்லாமல் ஒரு கூட்டணியோ அரசியல் நிகழ்ச்சிகளோ நிகழ்ந்துவிடுமோ என்று எனக்கு உண்மையிலே கொஞ்சம் கிலியும் வந்துவிட்டது. அப்படியெல்லாம் நடந்தால் அப்புறம் என்னாகும் தாய்த்தமிழ்நாட்டின் தெருக்கோலங்கள்.?

ஐந்து வருடங்கள் தன்னை அதுக்குள்ளே நுழைத்துக்கொண்டு செல்வச்செழிப்பாக்கிவிட்டு (தமிழ்நாட்டையோ இந்தியக்கண்டத்தையோ அல்ல!) கழன்று கொண்டது தி.மு.க. நுழையும் போதும் வெளியேறும்போதும் என்ன சொல்ல வேண்டும் என்பதைத் தானைத்தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள், தமிழருக்கும் தமிழ் நெஞ்சங்களின் அடுத்த தலைவரான தளபதிக்கும் விளக்கி டியூசனெல்லாம் எடுக்க அவசியமில்லாமல் இப்போதும் சொல்லிவிட்டார்.

செத்துப்போன மாறனுக்கு அளித்த அமெரிக்க பயணமும் இன்னபிற வஸ்துகளும் செய் நன்றி மறவாத கலைஞருக்கு மாறன் தான் வந்துதான் சொல்ல வேண்டும் கனவில்.

'நேருவின் மகளே வருக.. நிலையான ஆட்சி தருக' என்பதெல்லாம் பழைய வாசகம் இல்லை. அடுத்து கொஞ்சம் பொலிவுற்று வருகிறது. 'நேருவின் பேத்தியே வருக..நிலையான ஆட்சி தருக.' என்ற அந்த வாசகம். கலாநிதிமாறனின் தம்பிக்கு தென்சென்னையை(அல்லது மத்தியசென்னையை) ஒதுக்கி இத்தாலிய ராணிக்கு இந்திய மகுடத்தை அள்ளித்தலையில் வைத்துவிட்டு டி ஆர் பாலுவுக்கு ஏதாவது சுற்றுப்புறத்தைக்கொடுத்துவிட்டு தென்(மத்திய)சென்னைக்கு தொழில்துறையைக்கேட்பார் தானைத்தலைவர். அப்படியே சில மாதங்களில் சரத் பவாரின் உதவியாலோ இல்லை மாயாவதியின் திடீர்ப் பேராசையாலோ சோனியா ஆட்சி கவிழ்ந்து நிற்கும்போது நிறங்கள் மீண்டும் மாறும்.

ராஜூவின் மரணத்துக்கும் தி.மு.க வுக்கும் 0.0000001 அளவு கூட சம்பந்தம் இல்லை என்று சத்தியம் செய்வார்கள் ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ்காரர்கள். அதை ம.தி.மு.க பொதுச்செயலர் வை.கோ புலி போல முழங்கி தனது துண்டை இருக்கிக்கட்டி நாலு பக்கமும் இழுத்து இருமாப்போடு ஆமோதிப்பார். ஆமோதித்துவிட்டு "ஆகவே, ஈழத்தில் நமது பிரபாகர வழிச்சொந்தங்கள் இன்னும் அமைதியாக வாழ இப்போது நமக்கு வேண்டும் நமது ஆட்சி" என்று முழங்குவார். வாசனும் இளங்கோவனும் எதிர் எதிர் திசையில் நின்றுகொண்டு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாமல் தலையை ஆட்டுவார்கள்.

ஓடுகிற நாயின்...... சேர்ந்து ஆடுவது போல இப்போதுதான் திடீரென்று புத்தி வந்தது போல பா.ம.க வும், ம.தி.மு.க வும்.

ம.தி.மு.க வின் லெட்சணத்துக்கு அவர்களை வாஜ்பாயைத்தவிர யாரும் இந்த அளவுக்குக் கண்டுகொள்ளமாட்டார்கள். இது அவர்களுக்குத்தெரிய காலம் வரும். நரியின் விளையாட்டு நயம் படத்தான் தெரியும் போல மெதுவாக தன் வாலைத்தூக்கிக் காட்டி ஹெ..ஹெ. எனச்சிரிப்பார் கலைஞர்.

செத்து மண்ணோடு மண்ணாகி விட்ட வைகோவின் ரத்தத்¢லகங்கள் பூரிப்பார்கள் தலைவரின் முடிவைக்கேட்டு. "தி.மு.க.வின் தோழமையை தாங்கள் இழந்துவிடுவோம் எனப்பயமாயிருப்பதால், அதுவும் அ.தி.மு.க பி.ஜே.பியை நெருங்கி வருவதால் நாங்கள் தி.மு.க பக்கம் சாய்கிறோம்" ஆஹா! என்ன உணர்வுப்பூர்வமான வாசகமடா இது! எச்சில் தெறிக்க எல்.கணேசன் பேசும்போது எரிச்சல் தான் மிஞ்சுகிறது.

தோழமை எதற்கய்யா உமக்கு? தாய்க்கட்சியோடு தோழமை வைத்துக்கொள்ள ஏன் தனிக்கட்சி.? தாய்க்குணம் படைத்தவர்களுடன் சேர்ந்து விட வேண்டியதுதானே! மேடையில் சிங்கம் போல முழங்க ஸ்டாலினிக்குத்தெரியுமா? சின்னப்பையன்! 'வா சிங்கமே!' வந்து விட்டார் வைகோ. ரொம்ப நாளாய் வரமாட்டேன் என்று சொன்னவர். கூப்பிடுவது யார்? தனக்குத்தானே எரித்துக்கொண்ட சாந்தனும் உதயனுமா? குலம் காத்த ( வைகோ வின் பிச்சைக்காரக்கதையைச்சொன்ன) கோமான். கலைஞர்.

உங்களோடு சேர்ந்து கொள்ளையடித்தால் எவ்வளவு தருவீர்கள்? பத்து சதவீதம்? உடனே களத்தில் குதித்தார் தன்மானத்துக்குப்பெயர் போன டாக்டரய்யா. வந்த வேகத்தில் அவரும் சொல்வார்... நான் கேட்க ஆசையாயிருந்த வார்த்தையை......"மதச்சார்பற்ற கூட்டணி"

தயவுசெய்து பெயரை மாற்றிக்கொள்ளுங்கள். "மானங்கெட்ட கூட்டணி" இது நன்றாயிருக்கும் உங்களுக்கு.

(நண்பரிடமிருந்து.)

Friday, February 06, 2004

ஒரு அயோக்கியனும் சில நல்லவர்களும். (!?)

மூன்று சாமியார்கள் மௌனவிரதம் இருக்க நினைத்தார்கள். மூவரும் அப்படியே இருந்துகொண்டிருந்தபொழுது ஒரு அழகான பெண் வந்து முகவரியைக்காட்டி வழி கேட்டாள் அவர்களிடம். முதலாமவர் சற்று யோசித்து, தான் மௌனவிரதம் இருப்பதாகவும் அதனால் முகவரியைச்சொல்ல முடியாமைக்கு வருந்துவதாகவும் சொல்லி வருத்தப்பட்டார்.

இரண்டாமவர் லேசாகப் புன்னகைத்து, 'பார்த்தாயா நீ அப்படி சொல்லிவிட்டு வாய் திறந்து பேசி விட்டாயே இப்போது மௌனவிரதம் கலைந்து விட்டதே' என்று நக்கலாகச் சொல்லிச்சிரித்தார்.

மூன்றாமவர் மெதுவாகப்புன்னகைத்து, 'அடப்பாவிகளா எல்லோரும் பேசிவிட்டீர்களா? நல்லவேளை. நான் மட்டுமே கொஞ்சமாய்ப்பேசியிருக்கிறேன்' என்றார் அப்பாவியாக.

கமலஹாசனை வன்முறையின் உச்சம் என்கிறார் வரதன் என்பவர். கமல் மிகவும் வக்கிர புத்தி கொண்டவராம். வெட்டவெளியில் உடலுறவு கொள்ளும் காட்சி வக்கிரத்தின் உச்சமாம். சம்பந்தாசம்பந்தமேயில்லாமல் கிருஷ்ணசாமி எதிர்த்தது சரிதான் என்கிறார். இன்னும் திருமாவளவன் ஏன் இதையெல்லாம் எதிர்க்கவில்லை என்றும் அவர் கேட்கிறார். (படிக்க: திண்ணை- விருமாண்டி கட்டுரை.)

மதுரை உருப்படாமல் போனதற்கு கமலும் காரணம் என்பதாயும் குற்றஞ்சாட்டுகிறார். மொத்தத்தில் கேணத்தனத்தின் உச்சகட்டமாக இதை நான் கருதுகிறேன். விருமாண்டி படத்திற்குப்பதிலாக வேறு எதையவது பார்த்து விட்டு வந்து பினாத்துகிறாரா இவர்?

அய்யா, புண்ணியவான்களே.....ஒத்துக்கொள்கிறோம். திருமாவளவனும் கிருஷ்ணசாமியும் நல்லவர்கள். கமல் கெட்டவர்தான்.

கிருஷ்ணசாமி உண்மையிலே டாக்டருக்குப்படித்தவர்தான் என்றால் அவர் கமலிடம் போய் மன்னிப்புக்கேட்கவேண்டும். எதுவுமே தெரியாமல் படப்பிடிப்பை நிறுத்தி ஒரு கோடி ரூபாய் அவருக்கு இழப்பு ஏற்படுத்தியதற்காக. இப்போது போய் படத்தைப்பார்த்துவிட்டாவது.

செய்வாரா டாக்டருக்குப்படித்தவர்? இல்லை கோட்டாவில் படித்தவர்தான் என்பதை தனது முட்டாள்த்தனத்தால் இதிலும் நிரூபிப்பாரா?

எம்.கே.குமார்.
நல்ல ஆரம்பம்.

எந்தவித தயக்கமுமில்லாமல் என்னால் சொல்லமுடியும். இளைய எழுத்தாளர்களுக்கு இவர் ஒரு 'முதன்மைவழிகாட்டி' என்று.

இன்றைய தலைமுறை எழுத்தாளர்களுக்கு இவரைப்போன்றவர்கள் மிகவும் அவசியம். வளரும் இளைய தலைமுறையினரை எந்தவித மேதாவித்தனங்களும் மேற்பார்வைத்தனங்களும் இன்றி தன்னோடு சகதோழனாய் ஊக்கங்காட்டி அழைத்துச்செல்பவர்களில் இவரது ஈடுபாட்டைக் கண்டு நான் வியந்திருக்கிறேன். வாய்யா..என்று தோழமையோடு தோளில் கை போட்டுச்செல்லும் நேரத்திலும், 'எழுதுய்யா..ஒரு புதுப்புரட்சியை சக்தியை நாமெல்லாம் சேர்ந்து கொண்டுவரணும்'ங்கிற அவரது உணர்வு என்னை நிறைய யோசிக்க வைத்திருக்கிறது.
இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற வகையில் மாலனுக்கு அடுத்தபடியாக இவரது நடவடிக்கைகள் என்னைப்போன்றவர்களுக்கு
மிகவும் சந்தோசத்தையும் வழிக்காட்டுதல்களையும் அளித்துக்கொண்டிருக்கின்றன என்றால் அதில் துளியும் மிகையில்லை.

இளைய தலைமுறைக்கு இவரது தேர்ந்த எழுத்தும் சரளமான நடையும் எப்போதும் கவனிக்கக்கூடியன. பாகிஸ்தான் ஒரு புதிரின் சரிதம் படித்து வரலாற்றின் முனைகளில் இவரது விஷய ஞானத்தை அறிந்து கொண்ட நான், '154 கிலோபைட்' புத்தகத்தைப்படித்துவிட்டு இவரது நகைச்சுவை உணர்ச்சி குறித்து மிகவும் சிலாக்கியமடைந்தேன்.

இப்போது பாரதிய பாஷா பரிஷத் கிடைத்திருக்கிறது. ஜெ.கே, சிவசங்கரி, பிரபஞ்சன், ராஜம் கிருஷ்ணன் போன்றவர்களுக்கு அடுத்து தமிழில் இவருக்காம்.

தயங்காமல் சொல்வேன், இது ஒரு ஆரம்பம்தான்.

வாழ்க.. பாரா அவர்களின் எழுத்துப்பணி.

எம்.கே.குமார்.

Monday, January 19, 2004

ஒரு நிரபராதியின் வேண்டுதல்..

கதை 1.

லாயருக்குப் படிக்கவேண்டும் என்றிருக்கிற அஞ்சலா காத்தமுத்து, ஜேம்ஸைக் காதலித்து மணம் செய்துகொண்டு அஞ்சலாஜேம்ஸ் ஆகிறார். இருவருக்குமிடையில் பிரச்சனைகள் பெரிதாக ஜேம்ஸைக் கொலைசெய்துவிடுகிறார் (வேண்டுமென்றேயில்லை). தானே அக்கொலையைச்செய்ததாக காத்தமுத்து சொல்ல, போலீஸ் அவரைக்கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துகிறது. மரணதண்டனை விதிக்கப்பட்டு காத்தமுத்து உயிர்விடுகிறார். அஞ்சலா மறுபடியும் அஞ்சலா காத்தமுத்தாகி, பி.எச்.டி முடித்துவிட்டு, நீதிமன்ற தீர்ப்புகளிலிருந்தே தூக்குத்தண்டனையை தூக்கவேண்டும் என்று அது சம்பந்தமாகப்போராடுகிறார். அதனடிப்படையில் ஓய்வு பெற்ற நீதிபதி சிலரையும் இன்னபிற தூக்குத்தண்டனைக்கைதிகளையும், மற்ற கைதிகளையும் அதிகாரிகளையும் பேட்டி காண்கிறார். அப்படிப் பேட்டி காணும்போது எதிர்பாராவிதமாக ஒரு வழக்கின், தண்டனையின் முக்கிய சாட்சியாகி எதிரிகளிடம் மாட்டிக்கொள்ள, உயிருக்குப்போராடும் வேளையில் நல்லவனான தூக்குத்தண்டனைக் கைதி ஒருவன் அவரைக்காப்பாற்றுகிறான்.

கதை 2.
திரைகடல் தாண்டி திரவியம் தேட சிங்கப்பூருக்குச்செல்கிறான் ஒரு தேனிப்பகுதி கிராமவாசி. நண்பனொருவன் செய்த தவறைத் தான் செய்ததாக ஏற்றுக்கொண்டு தண்டனை பெற்று சிங்கப்பூரிலிருந்து ஊர் திரும்புகிறான். பத்து லட்சத்தைப் பேங்கில் போட்டுவிட்டு சின்னதாய் வீடு ஒன்றும் அருகில் உள்ள நகரத்தில் வாங்கி விட்டு தனது சொந்த கிராமத்தில், முறுக்கி விட்ட மீசையோடும் கிருதாவோடும் யாருக்கும் அடங்காத காளையாக தனது அப்பத்தாவோடு வாழ்ந்து வருகிறான் அவன்.

சுத்துப்பட்டு கிராமத்தில் ஜல்லிக்கட்டு எங்கு நடந்தாலும் முதலில் சென்று களத்தில் இறங்கும் ஆளாக அலையும் அவன், ஒரு போட்டியில் தனது கிராமத்து மாட்டையே 'யாரும் அடக்க முடியாது' என்ற சவால் வர, தனது ஊர்ப்பெரியவரான கொத்தாளத்தேவரின் அந்த மாட்டைப்பிடிக்க களம் இறங்குகிறான். கொத்தாளத்தேவரின் அண்ணன் மகளான அன்னலஷ்மி வளர்க்கும் மாடு அது. மாட்டைப்பிடித்து மெதுவாக கொத்தாளத்தேவரின் பகை வட்டத்துக்குள் நுழைகிறான். அப்படியே அன்னலஷ்மியின் காதல் வட்டத்துக்குள்ளும் சண்டியராய்ப்போய் விழுந்து சபலம் கொள்ள, கொத்தாளத்தேவர் யோசிக்கிறார். நல்ல நீர் கிடைக்கும் அவனது கிணற்றையும் வயல்களையும் கணக்குப்போட்ட கொ.தேவர், அப்படியே அவனையும் கணக்குப்பண்ணுகிறார்.

கணக்குப்பண்ணுவது மாப்ளே ஆக்குவதற்காகத்தான் என அவன் நினைக்க, ஆனால் அவனை வைத்து பக்கத்து ஊரின் தனது பரம வைரியான நல்லம்ம நாயக்கரைத்தீர்க்கத்தான் என்பது அவனுக்குத்தெரியவில்லை. திட்டமெல்லாம் சரியாகி, அவனை வைத்தே அத்தனை கொலைகளையும் செய்து (உண்மையில் செய்பவர் கொ.தேவர். மாட்டிக்கொள்வது அவன்.) அவனை மாட்டிவிடுகிறார்.

இதற்கிடையில் சித்தப்பாவின் முகமூடி கிழிந்து பொங்கியெழுந்து அவனோடு செல்லும் அன்னலஷ்மியும் முதலிரவு முடிந்த கையோடு கொ.தேவரால் கொல்லப்பட, விருமாண்டி பொங்கியெழுந்து கொத்தாளத்தேவரின் ஆட்களை வெட்டிக்கொல்கிறான்.

போலீசாரால் பிடித்துச்செல்லப்படும் விருமாண்டி, மொத்தகொலைகளுக்கும் பலிகடாவாக்கப்பட்டு மரணதண்டனையை எதிர்பார்த்துக்காத்திருக்கிறான். அப்போதுதான் முதல் கதையில் சொல்லப்பட்ட அஞ்சலா காத்தமுத்து அவனைச்சந்திக்கிறாள். இருவரும் சேர்ந்து உண்மைகளை எப்படி வெளிக்கொணர்கிறார்கள், எப்படி எதிரிகளைப் பழிவாங்குகிறார்கள் என்பது கிளைமேக்ஸ்.

படம் ஆரம்பித்த ஐந்து நிமிடங்கள், மரணதண்டனை எப்படி எதற்காக விலக்கப்படவேண்டியது என்பது குறித்து செய்திப்படம் போல தனது கருத்துக்களைச்சொல்கிறார்கள் சிலர். காமிரா சிறைச்சாலைக்குள் நுழைந்து ஆங்காங்கு திரும்ப, 'மை நேம் இஸ் பேய்க்காமன். 2000 லே பாஸ் பண்ணி தேனிலெ கொஞ்ச நாள் வேலைபாத்துட்டு இப்போ இங்கே ஜெயிலரா இருக்கேன்' என்றவாறு அறிமுகமாகிறார் சண்முகராஜன். (அறிமுகம்) மிரட்டும் கண்களும் பயமுறுத்தும் தோரணையுடனான முகத்துடன் பேய்க்காமன் கதிகலங்க வைக்கிறான்.

முறுக்கி விடப்பட்ட மீசை, கிருதாவுடன் கைகோர்த்து வாலிப விளையாட்டு ஆடும் விளையாட்டுக்கமல், அப்பத்தா இறக்கும்போது மொட்டைக்கமல், அஞ்சலாவுடம் தனது கதையைச்சொல்லும் சத்யாக்கமல், கூண்டில் இருந்துதாவி கொத்தாளத்தேவரை எட்டிப்பிடிக்கும் தாடிக்கமல், கொலைவெறியோடு பேய்க்காமனைத்தாக்கும் முடிவளர்ந்த தாடிக்கமல் என ஏராளமான கெட்டப்புகள்.

கமல் நன்றாக நடித்திருக்கிறார் என்பதெல்லாம் எப்போதுமே சொல்லத்தேவையில்லாத விஷயம். ஆனால் அப்பத்தா சாவும்போது மண்ணை அள்ளிபோட்டுக்கொண்டு போடும் ஆட்டம் அசத்துகிறார் மனிதர். மாட்டுக்கொம்பில் சுழன்று விளையாடும் அந்தக்கமலுக்கு ஐம்பது வயது என்று யாராவது சொன்னால் காதைப்பிடித்து திருகலாம். அந்த அளவுக்கு இளமை ஊஞ்சலாடுகிறது.

மறக்கமுடியா நடிப்பை அள்ளி வழங்கியிருக்கும் இன்னும் சிலரில் முதன்மையானவர் கொத்தாளத்தேவர். பசுபதி. என்ன எகத்தாளம்! என்ன கோபம்! என்ன வெறி! என்ன அப்பாவித்தனம்! என்ன நரித்தனம்! ஆஹா! கமலின் பிடியில் சிக்கி தன்னுடைய சரக்கைக் கச்சிதமாக வெளியெடுத்திருக்கிறார் பசுபதி.

கதாநாயகியாய் வந்தாலும் தேனி ஏரியாவில் பார்க்கும் ஒரு கிராமத்து தேவதையாக+ கட்டையாக வந்து கலக்குகிறார் அபிராமி. சிணுங்கல்களும் கொஞ்சல்களும் கோபங்களும் சில உண்மைகளை மாட்டைப்போலவே ஒன்றும் தெரியாத விருமாண்டியிடம் தெளிவாகச் சொல்லும்போதும் இப்போவே ரெண்டு பேரும் போயிடலாம் என்னும்போதும் முதலிரவிலும் குளத்துக்குள்ளும் காட்டும் வேகமான மோகத்திலும் தாலியை இன்னொருவன் தொட்டுத்தீண்டி அமங்கலப்படுத்தும்போதும் இரட்டை அர்த்த வசனங்களைக் கமலிடம் கிராமத்துப்பெண்ணாக எதிர்க்கும்போதும் அங்கீகரிக்கும்போதும் கமலின் கைவண்ணம் ஒரு நல்ல நடிகையை அடையாளம் காட்டியிருக்கிறது. வாழ்த்துகள் அபிராமி.

அடுத்ததாய் அஞ்சலா காத்தமுத்து ரோகிணி. ஒரே ஒரு காட்சியில் குளோஸ் அப்பில் வந்து போகும் அவரின் முகம் நமது கண்களைக் கலங்க வைக்கிறது. தெளிவான நடிப்பு.

நல்லம்ம நாயக்கராக நெப்போலியனும் ஜெயில் அதிகாரியாக நாசரும் அப்பத்தாவாக (கமலின் ஆஸ்தான) எஸ் என். லட்சுமியும் கலக்குகிறார்கள். இன்னபிற வில்லன்களும் துணை நடிகர்களும் வேடத்துக்கேற்றவாறு பொருந்துகிறார்கள். ( பொய் சாட்சி சொல்லும் அந்த நபர் நல்ல தேர்வு. )

படத்தின் டாப் 3 யில் முதலில் இயக்குனர் கமல். ஒரே சம்பவத்தை இருவரது பார்வையில் போகவிட்டு இயல்பாக அவற்றைக்கலந்திருப்பதில் மிகத்தெளிவு. தேனிவாடை வசனங்களும் இரட்டை அர்த்த நகைச்சுவை வசனமாகவும் கமலின் பேனா(வும்) முழங்கியிருக்கிறது. பாட்டு வரிகளிலும். படம் ஆரம்பித்து சில நிமிடங்கள் என்ன நடக்கிறது என்றே புரியாத நிலையில் படக்கென வந்து மின்கம்பத்தில் உட்கார்ந்து களத்தில் குதிக்கும் கமல் அடுத்த பதினைந்து நிமிடங்களில் தியேட்டரை அலற வைக்கிறார் இயக்குனராக. இவ்வளவு நேர்த்தியாக ஜல்லிக்கட்டை யாரும் காட்டியது இல்லை.

அடுத்தது இளையராஜா. பாட்டைத் தனியாகக்கேட்கும்பொழுது எப்படி இவற்றைக்கதையில் பொருத்தப்போகிறார் என்று மிகுந்த எதிர்பார்ப்பு இருந்ததை கமல் ஏமாற்றவில்லை. பாட்டு தேனாகத் தித்திக்கிறது. ஜல்லிக்கட்டின் போதும் சரி, கமல் ருத்ரதாண்டவமாய் பழி வாங்கும்போதும் சரி, அன்னலஷ்மி தூக்குப்போடும்போதும் சரி பின்னணி இசையில் மனதுக்குள் திடும் திடுமென்கிறது. கமலுக்கு மிகப்பெரிய பலம் கொடுத்திருப்பவர் இளையராஜா.

மூன்றாவதும் மிக பிரமிக்கத்தக்கதுமானது கேமரா. கேசவ் பிரகாஷ். ரவி.கே.சந்திரனின் உதவியாளராம். கேமிரா ஓடுகிறது. நடக்கிறது. குழந்தையாய்த் தவழ்கிறது. சிங்கமாய் முழங்குகிறது. மாட்டின் கொம்புகளில் சிக்கிச் சுழல்கிறது. ஒன்னை விட பாட்டுக்காட்சியில் முழுநிலவின் பின்னணியில் மிக ரம்மியமாக நகர்கிறது கேமிரா. அந்த ஒரு பாட்டுக்கு மட்டுமே அவருக்கு விருது வழங்கலாம்.

எடிட்டர் கமலுக்குக் கை கொடுத்திருக்கிறார். அவருக்கும் கமலுக்கும் சண்டை ஏதாவ்து கூட வந்திருக்கலாம். நிறைய இடங்களில் வெட்டு தெளிவாகத்தெரிகிறது. ஆனால் அந்த வெட்டும் இல்லை என்றால் இன்னொரு ஹேராம் மாதிரி இருந்திருக்கும். (வழ வழா!) எந்த இடத்திலும் தொய்வில்லாத கட்டிங் நமக்கு நல்லது செய்திருக்கிறது. அலுப்பெதுவுமில்லை. காட்சிகள் அடிக்கடி மாறி படம், அரிவாளும் கத்தியும் காதலும் முத்தமும் கிணறும் தீபமும் காண்டாமணியுமாக அலைவது ஈர்ப்பை அதிகமாக்குகிறது.

கிளைமேக்ஸ் ரொம்ப நேரம். கொஞ்சம் குறைத்திருக்கலாமோ எனத்தோன்றியது. அபிராமியை டீச்சராகக்காட்ட முனைந்திருப்பது வெட்டிய பகுதியில் போயிருக்கவேண்டும்! நல்லதுதான்.

கொலை செய்யாத விருமாண்டிக்குத்தூக்குத்தண்டனை வேண்டாம். அஞ்சலா அப்பாவுக்கும்.! ஆனால் இனிக்க இனிக்கக் கொலை செய்த கொத்தாளத்தேவருக்கு? விடிய விடிய ராமாயணம் பார்த்து என்காதீர்கள். :)

மரண தண்டனையை தூக்கிவிட்டு வேண்டுமானால் 300, 400 வருடங்கள் சிறைத்தண்டனை தரலாம். எவருடைய பிறந்த நாளுக்கும் கழித்துக்கொள்ளாமல். என்ன செய்வது கமல் சொல்லிவிட்டாரே!

தேவர் மகனை விட இரண்டு மடங்கு வன்முறை, ரொமான்ஸ். ஆனால் நான்கு மடங்கு யோசிக்க வேண்டிய விஷயங்கள் படத்தில். அன்பே சிவ தரத்திலிருந்து குறையாமல் பார்த்துக்கொண்டு விலைபோகச் சில விஷயங்களையும் சேர்த்துக்கொண்டிருக்கிறார்.

கமலின் கதையில் ஏகப்பட்ட கதைகள் இருக்கலாம். கரு ஒன்றுதான். "வேண்டாம் மரண தண்டனை."

ஏகப்பட்ட வன்முறைகள் படத்தில். செய்முறை இல்லாமல் செய்யவேண்டாததைத் தெளிவாகச்சொல்ல முடியாது என்றார் கமல் ஒரு பேட்டியில். பரதன் தான் மிகப்பெரிய வன்முறை டயரெக்டராம். கமல் அந்தப்பெயரைத்தட்டிப்பறித்துவிட்டார்.

எம்.கே.குமார்.

Tuesday, December 23, 2003

விருமாண்டி உருவான கதை.

அண்மையில் சன் டிவியில் இது பற்றி பேசினார் கமல்.

இப்படியெல்லாம் பரபரப்பாய்ப் பேசி படம் பார்ப்பதற்கு ஆர்வத்தை உண்டு பண்ணி, கடைசியில் அதிக எதிர்பார்ப்பிலும் படம் ஊத்திக்கொள்வதை நான் விரும்பவில்லை. ஒருவேளை வியாபாரத்திற்கு இது ஒரு காரணி என்றால் இட்ஸ் ஓகே.

ஆனால் ரோகிணி ( நிருபராய் வருகிறாராம்.) சம்பந்தப்பட்ட காட்சிகள், மரண தண்டனையையே கேள்வி கேட்கிறார் (என்று எங்காவது படிக்கும்போது) என்று இதையெல்லாம் பார்க்கும்போது அய்யோ! தமிழ் கூறும் நல்லுலகம் அந்த அளவிற்கா அவரை அரவணைத்துக்கொள்ளும் என்று புலம்பத்தொடங்கிவிட்டேன். எல்லோரும் சொன்னார்கள். "கடவுளை வணங்குகிறோம். இந்தப்படம் வெற்றி பெறவேண்டும் என்று". எல்லோருக்கும் வந்த பயம்தான் எனக்கும். கடவுள்தான் காப்பாற்றவேண்டும்!

இன்னொரு பயமும் வந்துவிட்டது. கமல் டைரக்ஷன் என்றாலே மொகஞ்சதாரோவில் எலும்பைத் தோண்டிப்பார்க்கும் காட்சியை பத்து நிமிடங்கள் (அதற்கும் கூடவா?) வைப்பாரே. அப்படி இப்படி எதையாவது வைத்து 100% பெர்·பெக்ஷனிஸ்டாய் சொதப்பி விடப்போகிறார் என்று..

'சத்யா' படம் அண்மையில் பார்த்தேன். கிரேட். அந்தப்படம் இப்போ வந்தால் இன்னும் கொஞ்சம் ஓடும் என நினைக்கிறேன். (குணா, மைக்கேல் மதன..., மஹாநதி என எல்லாவற்றிற்கும் இப்போது அப்படித்தான் தோணுகிறது என்பது வேறு விஷயம்.!)

படம் பார்த்து முடிக்கும்போது, 'கிரேட். சான்சே இல்லை. கண்டிப்பா அவார்டு கிடைக்கும்' என்று எப்போதும் சொல்வதை மட்டும் இந்த தடவையும் நான் சொல்லக்கூடாது என்றும் கடவுளை நான் வேண்டிக்கொள்கிறேன்.

எம்.கே.குமார்.
ஒரு பொன் மாலைப்பொழுது.

'ஆத்மரச்மி' என்றொரு பெயரை விகடனிலும் கணையாழியிலும் நீங்கள் பார்த்திருக்கக்கூடும். '88 வாக்கில் கதை எழுத ஆரம்பித்த இவர் ஆனந்த விகடன், கணையாழி, தினமணி கதிர் போன்ற பத்திரிகைகளில் நிறைய கதைகள் எழுதியிருக்கிறார். 1991 ல் இவரது குறுநாவல் ஒன்று (வலி உணரும் தந்திகள்.) தி. ஜா நினைவு குறுநாவல் போட்டியில் கணையாழியால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அருமையான ஒரு குறுநாவலாக அது வடிவெடுத்திருக்கிறது. (இந்தக்கதை வெளியான அந்த இதழில்தான் பா. ரா தனது இருபத்தைந்தாவது வயதில் முதன் முதலாய் (அவளுக்கு ஒரு அம்மா) எழுதியிருக்கிறார். அமுதசுரபி விக்கிரமன் வளர்க்கும் கன்று என்று பாராவுக்கு முன்னுரைக்கப்பட்டிருக்கிறது.)

அதற்குப்பிறகு ஆத்மரச்மி நிறைய சிறுகதைத்தொகுப்புகளுக்கும் நாவல்களுக்கும் அட்டைப்பட ஓவியம் வரைந்திருக்கிறார். 'கிரீஷ் கர்னாட்'டின் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 'நாக மண்டலத்'திற்கும் 'நிழல்களின் உரையாடல்' என்ற 'அமர்ந்த்தி'யின் புத்தகத்திற்கும் இவரே அட்டைப்பட ஓவியர். இதுதவிர காலச்சுவடு, தமிழ் அரசி போன்றவற்றிலும் கதைகளுக்கு ஓவியங்கள் வரைந்திருக்கிறார்.

சிறிது காலம் கதையெழுதுவதை ஒத்தி போட்ட இவர் மிக அருமையான ஓவியராகத்தன்னை அதற்குள் ப்¢ரகடனப்படுத்திக்கொண்டிருக்கிறார். காலச்சுவடு ஓவியங்கள் அதை நமக்குச்சொல்கின்றன. அதைப்போல கிட்டத்தட்ட 40 கவிதைகளையும் எழுதியிருக்கிறார். கவிதைகளில் அவரது அக்னிப்பிரவேசம் கட்டவிழ்த்த ஆறாக அவதாரம் எடுத்திருக்கிறது. சில கவிதைகள் மிகவும் ஆழம். கலாப்ரியா, கல்யாண்ஜி, மனுஷயபுத்திரன், பிரமிள் வகையில் யோசிக்கவைக்கின்றன.

அந்த 'ஆத்மரச்மி'யின் உண்மையான பெயர் சுப்பிரமணியன் ரமேஷ். சிங்கப்பூரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். வார்த்தைகளை எண்ணிக்கையில் பேசுகிறார். மிகவும் பண்பட்டதாய் வருகிறது பேச்சு. இலக்கிய உலகச் சண்டைகள் பற்றிக்கேட்டால் மென்மையாக சிரிக்கிறார். 'ஜெயமோகனிடம் கொஞ்சமாய் பழகியிருந்தாலும் அவரது திறமையை யாரும் குறைத்து மதிப்பிட்டுப் பேசமுடியாது' என்கிறார். விவாதங்கள் மாட்டை விட்டு விலகி தென்னைமரத்துக்குச் செல்வதைச் சொல்லி, வருந்தி நமக்கும் ஞாபகப்படுத்துகிறார்.

வரவேற்பறையில் இருக்கும் 'enchanting' பெண்ணின் ஓவியம் அவரது திறமைக்கு இன்னொரு எடுத்துக்காட்டு. அதேபோல சிவனின் ஓவியமும். மகாத்மாவின் பொக்கைச்சிரிப்பில் இருக்கும் பிரமிப்பு ஏனோ இப்போது இந்தமாதிரி ஓவியங்களிலும் எனக்கு வருகிறது.
புத்தக அலமாரி ஒரு நூலகத்தையே எனக்குக் காட்டுகிறது. நிறைய ஆங்கிலப்புத்தகங்கள்.

'An autobiogrpy of an yogi' புத்தகத்தை விவரித்துப்பேசுகிறார். சமையலறைக்குள் புகுந்து அவரே சமைக்கிறார். 'தனது மனைவியின் சமையலுக்கு முன்னால் இதெல்லாம் தூசு' என்றாலும் நன்றாகத்தான் இருக்கிறது அவரது சமையல். மனைவி சமையல் மட்டுமின்றி ஓவியம் வரைவதிலும் மிளிர்வதை பெருமையோடு சொல்கிறார்.

அண்மையில் திண்ணையிலும் திசைகளிலும் இவரது கவிதைகள் வெளியாகியிருக்கின்றன. அண்மையில் நடைபெற்ற சிங்கப்பூர் சிறுகதைப்போட்டி ஒன்றில் முதற்பரிசைப்பெற்றார். கவிதைக்கு மூன்றாம் பரிசு. இரு ஓவியக்கண்காட்சிகளை நடத்தியுள்ளார்.

தற்போது இணையத்தளங்களில் குளோபல் தமிழ், தமிழா. காம் உட்பட பலவற்றிற்கு முதன்மையான தனது பங்குகளை மேம்படுத்திக்கொண்டிருக்கிறார். கலாப்ரியா, சிவகாமி போன்றவர்களோடு உரையாடிய அனுபவத்தைச் சிலாகிக்கிறார். சுஜாதாவின் கடிதத்தை ரசித்துச்சொல்கிறார். சாரு நிவேதிதாவுடன் பழகிய பழைய ஞாபகங்களைக்கிளறுகிறார்.

"சோம்பேறித்தனமே தவிர்க்கமுடியாத எனது முதல் எதிரி" என்கிறார் சிரித்துக்கொண்டு. எழுதிக்கொண்டிருக்கும் ஒரு கதையைக்காட்டுகிறார். இன்னும் ஒரு சில வாரங்களுக்குள் விகடனில் பார்க்கலாமா என்றால், 'சொல்லமுடியாது முடிக்கவே ஒரு சில மாதங்களாகும் ' எனச்சிரிக்கிறார்.

இன்னொரு அருமையான கவிதையைப்பற்றிச்சொல்ல மறந்துவிட்டேன். அது, அழகான ஒரு ஓவியத்தை (அப்பாவும் புலி. அம்மாவும் புலி..குட்டி மட்டும்?) வரைந்து 'இதுதான் அப்பா- அம்மா' என்னும் சினேகா. அப்பாவின் பங்கையும் அப்படியே எடுத்துக்கொண்டு நிமிடத்திற்கு நூறு வார்த்தை பேசுகிறாள். ஓவியத்தைப்பார்த்துக்கொண்டிருந்த என்னிடம் அந்த கேள்வியைக்கேட்கிறாள். தனது கையிலிருக்கும் அந்த பொம்மையை வைத்துக்கொண்டு, 'இதற்கு என்ன பெயரை வைக்கலாம்?'

ரேகா, உமா, நூர்ஜஹான் என நானும் என்னென்னவோ சொல்ல, ரொம்பக்கூலாக சொல்கிறாள், சிண்ட்ரெல்லான்னு வைக்கலாம்.

அவர் எழுதிய கவிதைகளில் அருமையானது இதுதான் என நினைத்துக்கொண்டு வயிறார சாப்பிட்டும் விட்டு வந்தேன்.

எம்.கே.குமார்.

Tuesday, November 18, 2003

ஒரு விழியோரத்து நினைவுகள்.-3

சொமை!

சோத்தைக்காணாத வவுறு
சோவமாய் சுருங்கிப்போய்க்கெடக்க
வவுத்துப்பிரச்சனையைச்சொல்லி
வழிகாட்ட வேணுமாய்
சாமிகிட்டெ சொல்லி
சப்பரந்தூக்கினேன்.

பொணமாட்டம் கணக்குறான்
பொங்கச்சோத்து ஐயர்பய!

எம்.கே.குமார்.

ஒரு விழியோரத்து நினைவுகள்.-2

எச்சில்.

நிம்மதியாக
கனவு கூட இல்லாமல் தூங்கிய இரவுகள்
என்றதும்

காரணம் தெரியாமல்
நினைவுக்கு
வர மறுக்கிறது.
தற்கொலையில் முடிந்த
எனது
கடைசி இரவு.

எம்.கே.குமார்.

ஒரு விழியோரத்து நினைவுகள்.-1

அவள்.

குளிரில் பற்கள் நடுங்குகின்றன.
இரவின் திகில்
என்னையும் சிதிலமாக்க
அசாதாரண நிசப்தக்காட்டில்
மஞ்சள் பல்பின்
அப்பிய சோகத்தில்
துர்நாற்ற சதைகளின் உயிரோட்டமாய்
என் சுவாசமிருக்க
தேடிக்கொண்டிருக்கிறேன்.

என்
மனைவியின்
தொலைந்து போன மெட்டியை...
பிணவறையில்.

எம்.கே.குமார்.

Search This Blog