Tuesday, May 10, 2005

நெடு பயணத்தில் ஓர்நாள்-குறும்பட இயக்குனர் அஜீவன்!

அஜீவனுக்கும் ஊடகத்திற்குமான புரிதல் பதின்ம வயதினிலே ஆரம்பித்திருக்கிறது. இலங்கையில் பிறந்து, இயந்திர பட்டப்படிப்பு பயின்று, ஊடகம் சுழலும் வாழ்வில் மனம் நுழைந்து கிடந்தாலும் சிங்கப்பூருக்கு வந்து சில ஆண்டுகள் படிப்பு சார்ந்த வேதியியல் தொழிற்நுட்பத்தில் பிழைத்து, பிறகு சில ஆண்டுகள் நிரந்தரமாக தன்னை தனக்குப் பிடித்த வேலைக்குள் இழைத்திருக்கிறார். சீன முதலாளியிடம் வேலை செய்ய, நேர்மை, நம்பிக்கை மற்றும் திறமை ஆகியவற்றை அதிகமாகக் கொண்டிருக்கவேண்டியதன் அவசியத்தைச் சொல்லும் அவர், தனது பழைய முதலாளி 14 வருடங்கள் கழிந்தும் இன்னும் தன் மேல் கொண்டிருக்கும் அன்புக்கு அவற்றை சாட்சியாக்குகிறார். அஜீவனின் அன்றைய வழிகாட்டுதல் அந்த சீனரின் இன்றைய மாபெரும் வெற்றி!
Image hosted by Photobucket.com

'கல்யாணத்தில் வீடியோ எடுப்பதற்கும் விதவிதமான உடைகளில் மரத்தைச் சுற்றி வந்து காதல் புரியும் கலைக்கும் எனக்கும் வெகு தூரம். அதற்கெல்லாம் அப்பால் மனித உணர்வுகளுக்கு மத்தியில் நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.' என்கிறார். 'அரசியல் போராட்டங்களோ அது சார்ந்த சூழ்நிலைகளோ இந்தக் கலைஞனுக்கு அவசியமில்லை. அவைகளுக்கு மத்தியில் எனக்கு வேலையில்லை. எனது தலைவிதியை சரியாக நான் வைத்துக்கொண்டால் அதுவே எனது வாழ்தல். நான்கு பேரைத் திருத்துவதற்கோ நாட்டைத்திருத்துவதற்கோ என்னால் முடியாது. அது எனது வேலையும் இல்லை. தான் வாழும் குறும்பட உலகிலும் அத்தகைய சூழ்நிலை நிலவுவது எனக்குப்பிடிக்காது.' கேமிராவின் பார்வை நீண்ட சாலையைத் தேடுகிறது.

'லண்டன் குறும்பட விழாவுக்கு' நடுவராய் வந்த திரு. தங்கர்பச்சானை மிகவும் இகழ்கிறார் அஜீவன். அவருக்கு இப்படங்களைப் பற்றி என்ன தெரியும் என்றும் கேட்கிறார். 'எதுவும் தெரியாமல் சிறந்ததைத் தேர்ந்தெடுத்த அவரது நடுநிலைமையின் பின்னே ஏதோ நிழலாடுகிறது' என்கிறார். நிழல் நிஜமாகி இப்போது அது மறைந்ததும் எல்லோருக்கும் தெரிந்துவிட்டது என்கிறார் நிஜமான வேதனையுடன்.

லீலா மணிமேகலையின் 'கனவுப்பட்டறை'க்கும் தனக்கும் நிகழ்ந்த பிரச்சனைகள் எந்தவொரு அப்பாவிக்கும் நேரக்கூடாது என்கிறார். அது பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது என்பது பற்றியும் தான் எப்படி அங்கே புறக்கணிக்கப்பட்டேன் என்பதையும் வருத்தமாகச் சொல்கிறார். இலக்கியத்தில் 'ஒற்றையிலை(யென)', வியாபாரத்தில் இவ்வளவு படுத்துமா என்று யோசிக்க நேருகிறது.

குறும்படம் மட்டுமல்ல, சினிமா உலகிலும் கொடிகட்டிப்பறக்கும் பெண்போகங்களுக்கும் அது தொடர்பான விஷயங்களுக்கும் தனது கடுமையான கோபத்தை முன் வைக்கிறார். 'பதினைந்து டாலருக்கு' தாராளமாய் கிடைக்கும் 'வெளிச்சமாச்சாரம்' ஒன்றை, இங்கே வந்து ஏன் தேடுகிறார்கள் என்று விசனப்படுகிறார். தயவுசெய்து அதற்கெல்லாம் இங்கு வராதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறார். கேமராவிற்கும் பெண்போகத்திற்கும் இருக்கும் தவறான சிந்தனைகள் களையப்படவேண்டும் என்கிறார்.

சிங்கப்பூரில் தமிழர்களின் வாழ்வியலில் நடைபெறும் சமூகச்சீரழிவுகளை குறும்படமாக எடுத்து வெளியிடலாமே என்ற தனது நண்பரின் கோரிக்கையைத் திட்டவட்டமாக நிராகரிக்கிறார். 'சமூகச்சீரழிவுகள் எங்குதான் இல்லை? அவற்றை மட்டும் காண்பிப்பது அநாகரிகம். மறுமுறை நான் சிங்கப்பூருக்கு வரமுடியுமா? எனது உலகில், போராட்டத்தின் உக்கிரமோ சமூகச்சீரழிவுகள் அல்லது அதற்கு என் போதனைகள் ஆகியனவெல்லாம் இல்லவே இல்லை. இது ஒருவரின் அல்லது இருவரின் தனிமன விதிகளின் விளையாட்டுக்களம்' என்கிறார்.

'இலங்கையிலிருந்து வந்த ஆண்கள் என்றாலே ஓரின உறவுக்காரர்கள் என்று எண்ணும் சுவிஸ், அங்கு பிழைக்க வரும் இலங்கை ஆடவர்கள், அல்லது அவர்கள் துரத்தும் பெண்களின் பாடுகள், அல்லது வெள்ளைக்காரன் வந்து உடைந்த வீட்டையும் பிணங்களையும் அப்புறப்படுத்த அவற்றை வேடிக்கை பார்க்கும் சுனாமியின் உள்ளூர்வாசிகள்- இவைகளுக்குப்பின்னே சில இதயங்கள் கிடந்து குமுறலாம். அவைகள்தாம் எனது களம்' என்கிறார். இலங்கையில் சுனாமியின் கோரத்தை டாகுமெண்டரியாக்கியும் குறும்படமாக்கியும் அதனுடன் 'என் ஜி ஓ'க்களோடு இணைந்து சுவிஸிலிருந்து வந்து நிவாரணப்பணிகளில் பங்குகொண்டதையும் குறிப்பிடுகிறார்.

'சிங்களம் வழியில் படித்து வந்தமையால் சிங்கப்பூரில்தான், தமிழ் எழுதப் படிக்க கற்றுக்கொண்டேன். அதில் எனக்குப் புலமை கிடையாது. சிங்களம் நன்றாகப் பேசுவேன். விமான நிலையத்தில், 'தமிழ்ச்செல்வன்' என்ற எனது பெயரைப் படித்துவிட்டு நிமிர்ந்து அவர் பார்க்கும்பொழுது நான் சிங்களம் பேசுவது இனிமையாய் இருக்கிறது. இலங்கையில் பிறந்த அனைவருக்கும் சிங்களம் தெரிந்திருப்பது நல்லது' என்கிறார்.

'ஜெர்மானியர்களுடன் வேலை செய்யும் அனுபவம் அலாதியானது. மோதல் இல்லை; ஈகோ இருக்காது. எனக்குத்தெரியாததை அவர்களிடம் கேட்கலாம்; அவர்களுக்குத்தெரியாததை நம்மிடம் கேட்பார்கள். பரஸ்பரம் கருத்துப்பரிமாற்றம் இருக்கும். ஏராளமான ஜெர்மன் படங்களுக்கு ஒளிப்பதிவு, எடிட்டிங், கோ-டைரக்ஷன் செய்திருக்கும்/செய்யும் ரகசியம் அதுதான்! ஒரு சின்ன விஷயத்திற்கு ஆயிரம் கேள்விகளும் விவாதங்களும் செய்யும் நம்மாட்கள் சிலருடன் எனக்கு எப்போதும் ஒத்துவராது. பெரியவர்களை விட மாணவர்களையும் இளைஞர்களையும் என்னிடம் விட்டால் நன்றாகச் செயல்படமுடியும்' என்று தனது ஆதங்கத்தையும் விருப்பத்தையும் வெளிப்படுத்துகிறார்.

கமலுடன் வேலை செய்த அனுபவங்கள், கன்னட படத்தில் பணிபுரிந்தது, திரையுல தனது நண்பர்கள், ஆபாவாணன் டீமில் வேலை செய்த தனது சிநேகிதர்கள் பற்றியெல்லாம் நம்மிடம் அளவளாகிறார். தான் நிறைய ஜெர்மன் படங்களில் வில்லனாக நடித்திருப்பதையும் மாணவர்களின் குறும்பட இயக்கத்தில் தனது ஈடுபாட்டையும், சுவிஸ் பட கழகத்தில் தனது பங்கு மற்றும் ஜூரியாக தான் ஆற்றிவரும் பணியைப் பற்றியும் குறிப்பிடுகிறார்.

ஆங்கிலத்திலும் ஜெர்மன்மொழியிலும், தான் இப்போது குறும்படங்கள் தயார் செய்வது பற்றியும் சிங்களத்தில் ஒரு படம் செய்து அதைத் தமிழில் மொழிமாற்றம் செய்வது குறித்தும் பேசுகிறார். 'தமிழில் அல்லது தமிழ்நாட்டினருக்கென படம் செய்வது பெரியவிஷயமா என்ன' என்று கேட்கிறார். (ஹி..ஹி, மன்னிச்சுக்குங்க மானஸஜென்!)
'சிங்கப்பூரில் குறும்படங்கள் தயாரிப்பது தொடர்பாக, என்னால் எல்லாவித உதவிகளையும் வழங்கமுடியும்' என்கிறார் ஆர்வமாக. 'கதைகளைத் தயார் செய்துகொண்டு, திரைக்கதையை எனக்கு அனுப்பி வையுங்கள், என்னால் முடிந்த உதவிகளை உங்களுக்குச் செய்கிறேன், கதைகளில் நிறைய பாத்திரங்கள் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்' என்கிறார். சிங்கப்பூரில், 1981 வாக்கில், சிங்கப்பூர் பிராட்கேஸ்டிங் கார்ப்பொரேஷனிலும் (SBC), தமிழ் முரசில் சினிமா செய்திகள் எழுதியதையும், வானொலியில் பங்குபெற்றதையும் இனிமையாகப் பகிர்ந்துகொள்கிறார்.

சிங்கப்பூரில் அவருக்கு நடிகர்-நடிகைகள் தேவை எனச்சொன்னார்! அப்படியே மென்பொருள் வல்லுனராய் இன்னொரு பெண்ணும் பார்க்கிறாராம்! முன்னது 'தான் இயக்க', பின்னது 'தன்னை இயக்க'வாம்! அட்டகாசச் சிரிப்புடன் சொல்கிறார் பிரம்மச்சாரியான அஜீவன் தமிழ்ச்செல்வன்!

(நேரிடையாக உரையாடியதன் ஞாபகத்திலிருந்து எழுதியவை. கருத்துகளோ வார்த்தைகளோ மாறியிருக்கலாம்!)

எம்.கே.குமார்

Tuesday, April 26, 2005

டாக்டர். ரெ. கார்த்திகேசு -- ஒரு விமர்சன முகத்துடன்!

கடந்த ஞாயிறு அன்று மாலை 4.30 மணிக்கு சிங்கப்பூரின் உட்லாண்ட்ஸ் நூலக கலையரங்கில், மலேசியாவின் மாபெரும் எழுத்தாளர்களில் ஒருவரும் பல்வேறு படைப்புத்தளங்களின் வழியாக இலக்கிய உலகில் அரும்பணி ஆற்றிவரும் அறுபது வயது இளைஞருமாகிய டாக்டர். ரெ.கார்த்திகேசு அவர்களுடைய இரு புத்தகங்கள் வெளியீட்டு விழாவும் மற்றும் வாசக எழுத்தாளர்களுடான ரெ.கா அவர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை திருமதி. ரமா சங்கரன் கவனித்துக்கொள்ள, சிங்கை முரசு மற்றும் சிங்கை கலை இலக்கிய குழுவின் அங்கத்தினர்கள் கூட்டத்தை ஒருங்கிணைக்க, தேசிய நூலக வாரியம் விழாவை நடத்த உதவியது.

கூட்டத்தில் சிங்கப்பூரின் பிரபலங்கள் பலரும் ஆர்வமுடன் கலந்துகொண்டு மகிழ்ந்தனர். நிகழ்ச்சியில், திருமதி .ரெ.கார்த்திகேசு அவர்களைத்தவிர, 'உத்தமம்' அமைப்பின் தலைவர் திரு. அருண் மகிழ்நன், அவரது சகோதரியும் மலாய பல்கலைக்கழக பேராசிரியையுமாகிய திருமதி. முல்லை அவர்கள், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக பேராசிரியர் சுப. திண்ணப்பன், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தலைவர் கவிஞரேறு அமலதாஸ், முதுபெரும் 'ஆசியான்' கவிஞர் திரு. க.து.மு. இக்பால், முரசு நிறுவனர் திரு. முத்து நெடுமாறன், விகடன் புகழ் ஜே.எம்.சாலி, தேசிய பல்கலைக்கழக ஆய்வலர் திரு. இராம. கண்ணபிரான், தேசிய நூலக வாரிய தலைவர் திருமதி. புஷ்பா, வசந்தம் சென்ட்ரல் தொலைக்காட்சியின் முன்னாள் நிகழ்ச்சி அமைப்பாளர் திரு. பாஸ்கரன், சிங்கப்பூர் கவிஞர்களில் குறிப்பிடத்தகுந்தவர்களில் ஒருவரான திரு. இந்திரஜித், எழுத்தாளரும் கவிஞருமான திரு. ரெ.பாண்டியன், மானசஸென் ரமேஷ், ஒலி 96.8ன் மீனாட்சி சபாபதி, நடன ஆசிரியை அருண் பிரியலதா அவர்கள், திரு ரமேஷ், திருமதி சித்ரா ரமேஷ், திருமதி ஜெயந்தி சங்கரி, திருவாளர்கள் பாலு மணிமாறன், பனசை நடராஜன், மூர்த்தி, அருள் குமரன், 'குழலி' வலைப்பூவின் புருஷோத்தமன், திரு. சாந்தன் என ஏராளமானோரும் இன்னும் தமிழாசிரியர்கள் மற்றும் வாசக ஆர்வலர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
Image hosted by Photobucket.com

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதோடு வரவேற்புரையையும் நிகழ்த்தினார் நண்பர் ஈழநாதன். வரவேற்புரையைத் தொடர்ந்து ரெ.கார்த்திகேசு அவர்களின் 'விமர்சன முகம்' கட்டுரைத்தொகுப்பும் 'ஊசியிலை காடுகள்' சிறுகதைத்தொகுப்பும் வெளியிடப்பட்டன. அதனைத்தொடர்ந்து ரெ.கா அவர்களது படைப்புளைப்பற்றிய தனது கருத்துகளைச் சொல்ல வந்தார் நண்பர் திரு. அருள்குமரன். 'சூரியனுக்கு டார்ச் அடிக்கும் சுண்டெலியாய்' தன்னை உருவகப்படுத்திக்கொண்ட அவர், ரெ.காவின் அறிவியல் புனைகதைப்பற்றியும் சொன்னார். ஏதோ ஒரு கதையில், 'ஏனய்யா அவரைக்கொன்றுவிட்டீர்கள்' என்று கண்ணீர் மல்காத குறையாக வருத்தம் தெரிவித்தார்.
Image hosted by Photobucket.com

அவரைத்தொடர்ந்து வந்தார் அறுபது வயது இளைஞர் திரு. அருண் மகிழ்நன். ரெ.காவின் நெருங்கிய நண்பரான இவரைப் பேச வைப்பதற்கு பின்னிருக்கும் காரணமாய், ஈழநாதன், "ரெ.காவின் படைப்புகளைப் பற்றிப் பேச எல்லோரும் இருக்கிறார்கள், ரெ.காவைப்பற்றிப்பேச அவரது நண்பரான நீங்கள் தான் சிறந்தவர்" என்று சொல்லி அப்படியே திருமதி. முல்லை அவர்களையும் பேசவைத்தார். 'எழுத்தை மட்டும் படித்துவிட்டு அப்படியே விட்டுவிட வேண்டிய எழுத்தாளர்களை ஏராளமாய் பார்த்ததாகச்சொல்லிய அருண்மகிழ்நன் அவர்கள், ரெ.கா வை தமது 40 ஆண்டுகால நண்பர்' என்றார். மிகச்சிறந்த மனிதர் என்றும் சொன்னார். அதையே வழி மொழிந்தார்கள் அவரது தங்கையாரும்.

கலந்துரையாடலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக இருந்ததால் வாழ்த்துரை மற்ற உரைகளெல்லாம் தவிர்க்கப்பட்டிருந்தன. ஏற்புரைக்கு வந்தார் திரு. ரெ.கா. அவருக்கு மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்றார் திருமதி சித்ரா ரமேஷ்.
தனது ஏற்புரையில் சிங்கப்பூர் மலேசிய உறவைப் பற்றிக் குறிப்பிட்ட ரெ.கா, மலேசியாவின் தற்போதைய இலக்கியப் போக்கு குறித்தான தனது பார்வையைச் சொன்னார். கலந்துரையாடல் தொடங்கியது.

ஒட்டுமொத்த கலந்துரையாடலிலும் கேட்கப்பட்ட கேள்விகள் ஐந்திலிருந்து ஆறுக்குள் இருக்கலாம். கேள்விகள் மிகப்பெரிய பதில்களுக்குள்ளே புகுந்து கலந்து கொண்டிருந்ததால் எல்லாம் சில குறிப்பிட்ட விஷயங்களுக்குள்ளே சுற்றிச் சுற்றி வந்தன. சிங்கப்பூரின் தற்போதைய இலக்கியப்போக்கு குறித்து அறிந்துகொள்ள விரும்பிய ரெ.காவுக்கு, திரு. அமலதாஸ் அவர்கள் தன்னால் முடிந்தவரை எல்லாம் எடுத்துச்சொன்னார். சுப. திண்ணப்பன் அவர்கள், "மலேசியாவில் தமிழை தமிழர்கள் வளர்க்கிறார்கள், சிங்கப்பூரில் அரசாங்கம் வளர்க்கிறது" என்று சொன்னார்.
Image hosted by Photobucket.com

சூழ்ந்துகொண்டிருந்த முக்கிய விடயங்கள்:

1. சிங்கப்பூர் அல்லது மலேசிய இலக்கியம் (வரலாறு) என்பது (சொல்வது) என்ன? புலம் பெயர்ந்த படைப்பாளர்களின் படைப்பு இத்தகைய சிப்பிக்குள் அடைபடுமா? அவர்களது படைப்புகள் அந்தந்த வாழும் நாட்டு இலக்கியத்தைச் சேருமா? இல்லை சொந்த நாட்டையா? இல்லை பயணக்கட்டுரை தவிர்த்து சிங்கப்பூரைப் பற்றி கதையோ நாவலோ எழுதியிருந்தால் அது சிங்கப்பூர் இலக்கியத்துக்குள் சேருமா? இல்லையா?அகிலனின் நாவலில் ஆரம்பித்து புயலிலிலே ஒரு தோணி வரை பேச்சு சென்றது. 'சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்து எழுதுபவர்களது படைப்புகள் மட்டுமே சிங்கப்பூர் இலக்கியம்' என்று யாரோ ஓரிருவர் சொன்னார்கள்.

2. இணையம் தொடர்பான பேச்சுகள்: நாடு மறைத்து, நாட்டின் எல்லை மறைத்து, மக்களின் பிரிவுகொண்ட மனம் மறைத்து எல்லா இடைவெளிகளையும் எல்லைகளையும் விலக்கி புது இலக்கியம் படைத்துக்கொண்டிருப்பவை இணையத்தமிழ் என்றார் திரு. ரெ.கா. இணையத்தில் இலக்கியத்தரமான விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன என்றார். அச்சு ஊடகமெல்லாம் ஆடிப்போகும் அளவுக்கு நல்ல படைப்புகளும் ஏராளமான விஷயங்களும் இங்கு இருப்பதாகச்சொன்னார். வருங்கால இணையம் தமிழுக்கு படைக்கப்போகும் நன்கொடை மிகச்சிறப்பாக இருக்கலாம் என்றார். இணைய உறவுகளை நேரில் சந்திக்கும் போது கிடைக்கும் இன்பம் பற்றியும் சொன்னார்.
3. மலேசியாவில் 'காவ்யன்' என்ற தமிழ் எழுத்தாளர்களைக் கொண்ட அமைப்பு, தமிழில் கதைகள் எழுதுவதைக் குறைத்துக்கொண்டு மலாய் மொழியில் நிறைய எழுதுவதாகச் சொல்லி வருத்தப்பட்டார். 'நமது கலாசாரத்தை அவர்களும் அறிந்துகொள்ளும் வண்ணம் மலாய் மொழியில் எழுதுவது நல்லதுதானே, அதை ஏன் தவறு என்கிறீர்கள்' என்று ஒரு வாசகி கேட்டார்.

4. சிங்கப்பூர் தமிழ் இலக்கிய வளர்ச்சி (பிறப்பு வளர்ப்பு இணைந்து!)- அதன் திறனாய்வு பற்றிய (அவநம்பிக்கை) கருத்துகள்- தமிழ்முரசு தமிழுக்கு ஒதுக்கும் பக்கம் குறைவது- என இவ்விஷயங்கள் விவாதத்தில் பெரும் பங்கு பெற்றிருக்க, 'சிங்கப்பூரில் இருக்கும் மிக இளைய எழுத்தாளருக்கு வயது 42. அந்தளவுக்கு இங்கு தமிழ் வளர்ச்சி இருக்கிறது.' என்று தனது வேதனையைப் பகிர்ந்துகொண்டார் ஒரு வாசகர். இக்கேள்விக்குப் பதிலை கவிஞரேறு அமலதாஸ் சொல்லியது பின்வருமாறு இருந்தது. "இதற்குக்காரனம் சமூகம் தானே ஒழிய அரசாங்கம் இல்லை! அரசாங்கம் இதோ இப்போது நடக்கும் போட்டிக்குக் கூட பத்தாயிரம் வெள்ளி கொடுக்க முன்வந்திருக்கிறது!'

இக்கேள்விக்கு சிறு விளக்கமாய் உள்ளே வந்த அருண்மகிழ்நன் அவர்கள், 'ஒரு உரசல் இல்லாமல், எத்தகைய படைப்புமோ இலக்கிய வளர்ச்சியோ நடைபெற வாய்ப்பில்லாது இருக்கலாம்; வாய்ப்புக்குறைவாக இருக்கலாம். ஆனால் பொருளியலிலோ கருத்திலோ, தனிமனித படைப்புகளிலோ ஒரு உரசல் இருக்கும்பொழுது எழுத்தாளர்களும் உருவாகலாம்; படைப்புகளும் உருவாகும்' என்றார்.

5. இணைய இதழ் மற்றும் அச்சு இதழ்களின் தரமும் அதன் இலக்கியப் பங்கும் வெகுவாக விமர்சிக்கப்பட்டன. அடிக்கடி ஜெயமோகன் என்ற வார்த்தையையும் சுந்தர ராமசாமி என்ற வார்த்தையையும் கையாண்டு மேற்கோள் காட்டினார் திரு. ரெ.கா. பின் நவீனத்துவம் சிங்கப்பூருக்கோ மலேசியாவுக்கோ வந்தால் தன்னைப்போன்றவர்களின் பாடு திண்டாட்டமே என்றார் கிண்டலாக. மலேசியாவில் அடுத்த தலைமுறையில் யாரும் குறிப்பிடும்படியான எழுத்தாளர்கள் இல்லை என்பதையும் வருத்தத்தோடு சொன்னார். புதுக்கவிதை மட்டுமே வாழலாம் என்றும் சொன்னார்.

6. அறிவியல் புனைகதைகளைப் பற்றி அளவளாவப் பேசினார் ரெ.கா. அருள்குமரனும் தான் படித்த எல்லாக் கதைகளிலிருந்தும் பல கேள்விகளைக்கேட்டார். அறிவியல் புனைகதை மட்டுமின்றி எல்லா கதை- இலக்கிய வட்டங்களையும் புகுந்து நுழைந்து வந்தார் ரெ.கா.
கூட்டத்தின் முடிவில் திருமதி. புஷ்பா நன்றி சொல்ல, கூட்டம் கலைந்தது. இந்நிகழ்வினை முதன்முறையாக நடத்திய கலை இலக்கிய குழு பற்றி ஒரு முழுமையான அறிமுகத்தை பார்வையாளர்களுக்கு வழங்கினார் ஈழநாதன். கைகோர்த்து செய்ல்படவே இக் 'கலை இலக்கிய குழு' என்பதைத் திட்டவட்டமாக எடுத்துரைத்தார். வலைப்பூ பற்றியும் சொன்னார்.

ஒட்டுமொத்த நிகழ்வின் மழையில் அனுபவமின்மையின் உருவம் சில இடங்களில் நனைந்து வெளிப்பட்டது. பேச வந்த கருத்துகள் அனைத்தும் கடல் போலிருக்க, கட்டு மரத்தைப் பற்றியே கொஞ்சம் அதிகமாக பேசியது போலிருந்தது. சில முக்கியப் 'பிரச்சனை முதலைகள்' தலையை நீட்டிப் பார்த்துவிட்டு மீண்டும் கடலுக்குள் புகுந்துகொண்டன. எல்லாம் ஆரம்பிக்கும் முன்பும், முடிந்த பின்பும் 'சுவீட் காரம் கா·பி' வழங்கப்பட்டது.

திரு. ரெ.கா அவர்களைப்பற்றி, அவரது இலக்கியவாழ்க்கை பற்றி, மலேசிய- சிங்கப்பூர் இலக்கியப்போக்கு குறித்தான அவரது பார்வை பற்றி, இணையம் பற்றி, இணையத்தில் அவருடைய படைப்பு பற்றி என விரிவான ஒரு அறிமுகத்துக்கு இச்சந்திப்பு உதவியது என்பதில் கொஞ்சம் கூட சந்தேகமில்லை.

அரங்கத்தின் ஒரு மூலையில் இருந்த அந்த நிழல் கொஞ்சம் சிரித்து, "எக்ஸ்யூஸ் மி சீமான்களே! சீமாட்டிகளே!! நீலகண்ட சாஸ்திரி வந்திருக்கிறார், கொஞ்சம் பார்த்துவிட்டுச் செல்லுங்கள்!" என்பது போலிருந்தது எனக்கு! அது பிரமையாகக் கூட இருக்கலாம்!

எம்.கே.குமார்.

(அனைத்தும் நினைவிலிருந்து எழுதியவை! சில கருத்துகளோ வார்த்தைகளோ மாறியிருக்கலாம்!)

நன்றி: திருமதி. ரமா சங்கரன்
தேசிய நூலக வாரியம்
சிங்கை கலை இலக்கிய குழு.

Sunday, April 17, 2005

மும்பை எக்ஸ்பிரஸ்-விமர்சனம்!

மும்பையின் சர்க்கஸ் ஒன்றில் மரணக்கிணற்றுக்குள், 'மும்பை எக்ஸ்பிரஸ்' பைக் ஓட்டும் அப்பாவி- அவினாசி (கமல்). அக்காவின்(கோவை சரளா) அரவணைப்பை மட்டுமே கண்ட அவன் அவளுக்காக மட்டும் எப்போதும் மனம் இறங்குகிறான். அவள் கண் கலங்குவதை காணச்சகியாத அவன், அவளுக்காக அவளுடைய கணவருக்காக, சிறு குழந்தைகளைக் கடத்தி பணம் பறிக்கும் (குதிரையை சவாரிக்கு விட்டும் பிழைக்கும்!) கும்பலிடம், ஒரு சந்தர்ப்பத்தில் சேர நேர்கிறது. அக்கும்பலில் ஏற்கனவே தலைமை நிர்வாகி 'பெர்சன்' 'ஏ', பசுபதி. அவருக்குத் துணையாள், ஏற்கனவே ஆறு குதிரையும் இரண்டும் பெண்டாட்டியும் வைத்திருந்தவரின் மகனான 'பெர்சன்' 'பி' வையாபுரி. இக்கூட்டத்தில் அக்காவின் கணவருக்குப் பதில், பெர்சன் 'புது' 'சி' யாகச் சேர்கிறார் கமல்.

குழந்தை கடத்தல் வைபவத்திற்கு முன் அவர்களது காரில் அடிபட்டு அவர்களோடு சேர்ந்துகொள்கிறான் ஒரு தெலுங்கு பேசும் இன்சூரன்ஸ் ஏஜண்ட்(ரமேஷ் அரவிந்த்!). குழந்தை கடத்தி முடிக்கப்பட (கடத்துவதற்குள் பெரும்பாடு ஆகிவிடுகிறது), கடத்திய குழந்தை வேறொன்றாகவும் கடத்தியதாக பணம் வசூலித்த குழந்தை வெறொன்றும் ஆகிவிடுகிறது. குழந்தை கடத்தப்பட்டதாக பணம் கொடுத்தவர் ஒரு கோடீச்வர செட்டியார் (சந்தானபாரதி!). கடத்திய குழந்தை, போலீஸ் உயரதிகாரியான நாசரின் ஆசைநாயகிக்கு பிறந்த பையன். அந்த ஆசை நாயகி மனீஷா கொய்ராலா.

பணத்தைக் கொடுத்து குழந்தையை மீட்க சந்தானபாரதியிடம் கொடுக்கச்சொல்லி நாசர், ரகசிய போலீசான சக்சேனாவிடம் கொடுத்தனுப்ப, சந்தானபாரதி, அவினாசிதான் ரகசிய போலிஸ் என அவரிடம் ஏமாந்து நிற்க, இனிமேல் நாசரை நம்பிப்பயனில்லை என 'அகல்யா' மனீஷா(அக்கு என்று கமல் ஆசையாகக் கூப்பிடுகிறார்!) நினைத்து, பணத்தோடு வேறெங்காவது சென்று செட்டில் ஆகிவிட மும்பை எக்பிரஸ¤க்குச் செல்ல, பணத்தைத் தேடி சந்தானபாரதி சக்சேனாவோடு பறக்க, தனது கூட்டாளி 'புது சி' தங்களை ஏமாற்றிவிட்டதாக பசுபதி அன் கோ தேட, கமலையே தனது தந்தை ஸ்தானத்தில் வைத்து அன்புக்கு ஏங்கும் குட்டிப்பையன் மனீஷாவை கமலோடு சேர்க்க முயற்சி பண்ண கடைசியில் கிடைத்த பணத்தை வைத்து எல்லோருடைய பிரச்சனையும் தீர்ந்து, சொந்த பிஸினஸாக மரணக்கிணற்றை வாங்கி சர்க்கஸ் நடத்துகிறார்கள் அவினாசி அன் கோ.

மும்பை எக்ஸ்பிரஸ் என்ன, ஜப்பான் எக்ஸ்பிரஸ் வேகத்திற்கு பறக்கிறது கதை! அம்மாவின் பாசத்திற்கு ஏங்கும் தன்னின் இன்னொரு வடிவமாக கமல் அச்சிறுபையனை காணும் கணங்களில் மட்டும் (இடைவேளைக்குப்பிறகு கொஞ்ச நேரம்!) கதை லேசாக நகர்வது போலிருக்கிறது. அதுவும் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகும் தொடர் தருணத்திற்கு இது ஒரு இடைவேளையாகவே இருக்கிறது.

இத்துனூண்டு ஊறுகாயை வைத்துக்கொண்டு ஒரு ·புல் பாட்டில் சரக்கை உள்ளே ஏற்றுவதைப்போல திரைக்கதை பின்னியிருக்கிறார் கமல். ஆள்மாறாட்ட திரைக்கதையில் கமலுக்கு இணை இனி இல்லை என்றே சொல்லுமளவுக்கு இருக்கிறது திரைக்கதை. வசனத்தில் தன்னிடம் வசனம் எழுதிய எல்லோரிடமும் கற்றுக்கொண்டதை வைத்து நல்ல மார்க்கே வாங்கியிருக்கிறார் கமல். கிரேஸி மோகனின் சாயல் பல இடங்களில் பளிச்சிட்டாலும் கிரேசி மோகன் எழுதியிருந்தால் இன்னும் தூக்கிச்சாப்பிட்டிருப்பார் என்று தோன்றுகிறது; ஆனால் கிரேசி மோகன் எழுதாதது படம் ஓடுவதற்கு இன்னும் கொஞ்சம் பலம் என்றே நான் நினைக்கிறேன். நொடிக்கு ஒரு டயலாக் காமெடியென தொடர்ந்து வரும் கிரேசி மோகனின் காமெடி எல்லோராலும் புரிந்துகொள்ள முடியாமல் (தொடர்ந்து வெடித்துக்கொண்டேயிருக்கும் காமெடி வெடி!) காதலா காதலா கதை ஆகிவிட்டிருக்கலாம்! கமல் எழுதியதால் அது தவிர்க்கப்பட்டிருகிறது. கமலுக்கு வசனத்திற்கு அறுபது மதிப்பெண்கள் தாராளமாய் வழங்கலாம்.

யார் யாரிடம் என்னென்ன திறமைகள் இருக்கின்றன என்பதைக்கண்டறிந்து அவர்களை முழுமையாகப்பயன்படுத்திக்கொள்வதற்கு சினிமாவில் மிகத்திறமை வேண்டும். அது கமலிடம் இருக்கிறது என்பதெல்லாம் நான் இங்கு சொல்லவேண்டிய அவசியம் இல்லை. பட்டாசு பாலாவாகவும், எம்.எல்.ஏவின் ரௌடித் தம்பியாகவும், கொத்தாளத்தேவராகவும் திரிந்த பசுபதியை வைத்து இவ்வளவு அழகான காமெடி செய்யமுடியும் என்பதை கமலைத்தவிர யாரும் யோசிக்க மாட்டார்கள். சந்தானபாரதி, வையாபுரி மற்றும் ரமேஷ் அரவிந்தையும் சரியாக பொருத்தி விட்டிருக்கிறார் கமல். பணம் விளையாடும் சீரியஸான காமெடி கதையில் இன்சூரன்ஸ் ஏஜெண்டுகளின் பாதிப்பை மிக அழகாக இணைத்துகலக்கியிருக்கிறார். ரமேஷ் அரவிந்த நன்றாகப்பண்ணுகிறார். படத்தின் பின்பாதியில் கொஞ்சம் நேரம் வயிறு வலிக்கும் அளவுக்கு 'செம' காமெடி.

நாசர், ராஜ்கமல் பிலிம்ஸின் ரெகுலர் கஸ்டமர் ஆக்டர். அவர் கேரக்டரை யாரை வைத்து வேண்டுமானாலும் பண்ணலாம் என்பதால் நாசர் நடிப்புக்கு ஏற்ற தீனி கிடைக்கவில்லை. அவரின் ஆசைநாயகியாக வரும் 'முன்னாள் கிளப் டான்சர்' மனீஷா பணத்திலேயே குறியாய் இருக்கிறார் எனினும் அதுதானே அவர்களுக்கு வாழ்க்கை! கிளைமேக்ஸ் வரை அவர் 'பணம் பணம்' என்பதிலே மனதை வைத்து இருப்பதால் கமலோடு அவர் மனதாலும் இணைகிறாரா என்பது நமக்கும் ஒரு கேள்வி!

தமிழிலும் சக்சேனா காரெக்டரை அவரே செய்தது நன்றாக இருக்கிறது. இந்தமாதிரி சீரியஸ் கம் காமெடி காட்சிக்கு அவர் மிகச்சரியான ஆள். டிரா·பிக் போலீஸ் மற்றும் கோவை சரளாவின் கணவராய் (வரும் தீனா; அறிமுகம். கமல் இவருக்கு குரல் கொடுத்திருக்கிறார்!) வரும் ஹிந்தி நடிகர்களும் சிரிக்க வைக்கிறார்கள். குரங்கும் குதிரையும் கூட நடிக்கின்றன. குதிரை ஓகே. பல காமெடிக்காட்சிகள் குதிரையால் வருகின்றன.

இத்தகைய ஒரு படத்துக்கு என்ன பெரிதாய் பாடல்கள் வைக்கமுடியும் என்பதால் பாடலில் முக்கிய கவனம் செலுத்தாதது போல இருக்கிறது. பையனின் 'அப்பா-அம்மா' செண்டிமெண்டுக்கும் கமலின் குரங்கு சேட்டைகளுக்கும் என இரு பாடல். பின்னணி இசையில் இசைராஜா இரு இடங்களில் தனித்து இனிமையாகத் தெரிந்தார்.

கமலுக்கு காது கேட்காது என்பதும் அவர் அனாதை என்பதும் அவர் சொல்ல நினைக்கும் கருத்துகளுக்கு பின்புலம் சேர்க்கின்றன. மரணத்தைப் பற்றியும் வாழ்க்கையைப் பற்றியும் கூட கமல் வசனங்களில் வருகின்றன. பையன் 'ஹர்திக்' கலக்கல். கமல் சில காட்சிகளில் ரிஸ்க் எடுத்திருக்கிறார். எடிட்டிங் செய்தவரும் கஷ்டப்பட்டிருப்பார் போல!

டிஜிட்டல் தொழிட்நுட்பம் திருட்டு விசிடியில் படம் பார்ப்பது போன்ற நடப்பைத் தருகிறது. உண்மையிலேயே இது இப்படித்தான் இருக்குமா இல்லை தியேட்டரில் ஏதாவது செய்யவேண்டுமா? சில இடங்களில் (குறிப்பாக லாங் ஷாட்) மிக மோசம். பொருட்செலவு அவ்வளவாய் ஆகியிருக்காது என்பது என் எண்ணம். மும்பை எக்ஸ்பிரஸ் என்ற பெயரின் காரணமாக ஏற்படும் காமெடி காட்சிக்கு, தமிழர் பாதுகாப்பு சபையினர் சிரிக்காமல் வெளியே எழுந்து வந்தால் படத்தின் பெயரை நானும் மாற்றச்சொல்கிறேன்.

டிவியிலோ திரை விமர்சனத்திலோ துண்டு துண்டாகக் காட்சிகளை நீங்கள் பார்த்தீர்களானால் 'என்னய்யா படம் இது' என்று நினைக்கத்தோன்றலாம். ஆனால் திரையில் முழு நீள படத்தில் காட்சிகள் அனைத்திலும் காமெடி.

கமலின் ரசிகன் என்பதால் சொல்லவில்லை, காமெடியின் ரசிகன் என்பதால் சொல்கிறேன், இந்தப்படத்துக்கு நான் கியாரண்டி. குழந்தைகளோடு செல்லுங்கள். மிகவும் ரசித்துச் சிரித்துவிட்டு வரலாம்.

எம்.கே.குமார்.

Tuesday, April 12, 2005

இந்தியா- வல்லரசாகிறதா?

திடீர் பணக்காரனைக் கல்யாணம் செய்தவளின் அல்லது புதிதாய் 'ஸ்டார்' ஆனவனின் பொலிவான முகத்தைப்போல ஜிவ்வென்றிருக்கிறது இந்தியா. 'இந்த வாரம் இவர்', 'அடுத்த மாதம் அவர் மற்றும் இவர்' என இந்தியாவிற்கு விஜயம் செய்யும் பெரிய (நாட்டு மற்றும் குட்டி நாட்டு) தலைகளின் பெயர்கள் இப்போதெல்லாம் கண்களில் நிறைந்து போகின்றன. விடாமல் கை குலுக்கிக்கொள்ளும் காட்சிகளும் கூட அரசியல் அரங்கில் நிறைய காணக்கிடைக்கின்றன. இவை எல்லாம் சொல்லும் சேதிகள்தாம் என்ன? 'சின்ன' அண்ணனாகிறது இந்தியா!

'இந்தமாதம் வந்த நிலவாய்' இந்தவாரம் இந்தியா வந்தவர் சீனாவின் புது அதிபர் திரு.வென். மன்மோகன்சிங் அவர்களின் கைகளைக் கெட்டியாகப்பிடித்துக்கொண்டு இப்போது இந்தியத்தலைமை என் கைகளுக்குள் இருக்கிறது என்று சொன்னாரா தெரியவில்லை. ஆனால் இரண்டு மாதம் அல்லது இரண்டு வருடம் போனால் தெரியும்; சொல்ல மறந்தாரா இல்லை சொல்ல விரும்பவில்லையா என்று!

15 ஒப்பந்தகள் கையெழுத்தாகியிருக்கிறதாம் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே. மிகவும் நல்ல சேதி! 'இரண்டு கைகள் நான்கானால் இருவருக்கும் எதிர்காலம், மேற்கத்தியர்களே நில்லுங்கள் மேடையை விட்டு ஓடுங்கள்...' என்று பாடல் மட்டும்தான் பாடவில்லை திரு. வென். மத்தபடி அவர் ஆசை அனைத்தையும் சொன்னார்.

மென்பொருளின் உலக (புலி) ராஜாவும் வன்பொருளின் உலக (சப்பைமூக்கு) ராணியும் இணைந்தால் உலகையே ஆட்டிவைக்கலாம் என்று அவர் மிகுந்த ஆவலோடுதான் சொல்லியிருக்கிறார்.

இவற்றையெல்லாம் கூரிய நாசியோடு மோப்பம் பிடித்துக்கொண்டிருக்கின்றன அமெரிக்க புலனாய்வுப் புலிகள். எங்கே இடித்தால் இவர்களுக்கு வலிக்கச்செய்யலாம் என்பது அவர்களின் நேரடியான தற்போதைய இலக்கு. அண்மையில் வந்துவிட்டுச்சென்ற அமெரிக்காவின் புதிய தற்காப்பு அமைச்சர் காண்டோலீசா ரைஸ்ஸ¤க்கு (அவரே ஒரு பெண்புலி!) மோப்பம் பிடிப்பது ஒன்றும் கஷ்டமான வேலையாக இல்லை. வீட்டிற்கு வந்த மருமகள் விளக்கு வைப்பதைப்போல இந்தியா வந்துவிட்டுச்சென்றதும் உடனே விளக்கைப் பற்ற வைத்தார் அவர். பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் விற்பனை! பலே லேடி பலே!

இப்போது வென்னின் பயணம் மிகவும் உன்னிப்பாய்க் கவனிக்கப்படுகிறது. பரம்பரை பரம்பரையாய் அடித்துக்கொண்டு செத்த பங்காளிகள் கூட இப்போதெல்லாம் மனதளவில் இல்லாவிட்டாலும் 'வரும்படிக்காகவாவது' சமாதானமாகி வருவதை உலகின் எல்லா திசைகளிலும் காணமுடிகிறது. தைவான்- சீனா, சிங்கப்பூர்-மலேசியா, வடகொரியா-தென்கொரியா, இந்தியா-பாகிஸ்தான், அமெரிக்கா-சீனா, ஆஸ்திரேலியா-நியூஸிலாந்து என நமது கண்களே அதற்குச்சாட்சி.

இந்நிலையில் உலகப்பொருளியலில் கவனிக்கத்தக்க மாற்றம் பெற்று வரும் இவர்கள் 'இருவரும்' ஒன்று சேர்ந்தால் சிக்கல்கள் ஆகிவிடுமே என்று 'பெரிய அண்ணன்கள்' நினைத்து பயப்படுவது தெளிவாகிறது. இதற்கு வலு சேர்ப்பது போல சிக்கலான பிரச்சனைகளையெல்லாம் பெரிய மூட்டையாய்க் கட்டி 'பிறகு பார்த்துக்கொள்ளலாம்' என்று இவர்களும் உதறிவிட்டு, 'வரும்படி' வேலையை கவனிக்க ஆரம்பித்துவிட்டார்கள்! எல்லாம் நல்ல படியாய் நடக்கும்வரை நல்லவைதான்.!

இதற்கிடையே இந்தமாதக் கடைசியில் இந்தியா வருகிறார் ஜப்பானிய பிரதமர்! ஆஹா அடுத்த பெருசு! 'வென்'னின் வருகையே அவரைக் கொஞ்சம் யோசிக்க வைத்துவிட்டதாம். முன்னால் போனவர் எல்லா சீட்டையும் பிடித்துவிடுவாரோ என்ற பயமாயிருக்கலாம்; ஆனால் "எங்களுக்கும் இந்தியாவிற்கும் நீண்டநாள் நல்ல தொடர்பு. இதற்கும் அதற்கும் சம்பந்தமுமில்லை; பாதிப்புமில்லை" என்று சொல்லிவிட்டாரவர். விஷயமறிந்தவர்!

ஆசியாவில், சீனாவும் ஜப்பானும் பிற்காலத்தில் பெரிய எதிரிகளாகலாம். (இரண்டாம் உலகப்போரை மறக்கவில்லை சீனா!) இந்தியாவிற்கு ஜப்பான் எப்போதும் நண்பன். சீனா தற்போதைய நண்பன். 'வீட்டோ' சட்டை போட்டிருப்பவனை விட 'அச்சட்டைக்காய்' நம்மோடு வீதியில் போராடும் ஆள்தான் நம்முடைய தற்போதைய இலக்கு. இவ்விஷயத்தில் ஜப்பானை எதிர்த்து நேற்றுகூட பெரிய கலவரம் சீனாவில்!

எல்லாம் பார்க்கும்பொழுது இந்தியா 'லைம்லைட்டில்' இருப்பது தெரிகிறது. தக்கவைப்பது நம் தருதலைகளின்...சாரி, நம் தலைவர்களின் கையில் இருக்கிறது! மேடையில் ஏறுவார்களா? இல்லை வழக்கம் போல மேடைக்கு விளக்குப்பிடிப்பார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

எம்.கே.குமார்

Monday, April 11, 2005

மாலனுக்கு ஒரு கடிதம்! பி.கே.எஸ்ஸுக்கும்!

அன்பு மாலன் அவர்களுக்கு,

வலைப்பூக்களின் ஆரம்பம் முதல் அவற்றில் தாங்கள் காட்டிவரும் காட்டிவரும் ஆர்வமும், தொண்டும் பாராட்டப்படக்கூடியது. உண்மையில், ''அட! மாலனெல்லாம் நமக்கு பின்னூட்டமிடுகிறாரே என்று வலைப்பூக்கள் ஆரம்பித்தவர்கள் இங்கே அதிகம்!'

புற்றீசல்கள் போல கிளம்பி வளரும் இவற்றில் இனிமேல் எதையும் படீக்கவோ எழுதவோ நேரமிருக்காது. (உருப்படியாய் இருக்குமா என்பது பெரிய கேள்வி!) (ஏற்கனவே பல மடற்குழுக்கள் படித்து மாதமாகிறது!) காசி, இப்போதே சிறந்ததையும் அதிக மார்க்கு வாங்கியதையும் போட ஆரம்பித்துவிட்டார். காலை பத்து மணிக்கு போட்ட பதிவு பதினொரு மணிக்கு கீழே சென்றுவிடுகிறது! {:-)} அடுத்து வேறு ஏதேனும் கொண்டு வருவார். இப்படிப்போகும் நிலைமையில் ஒருநாள் எல்லாவற்றையும் இழுத்து மூட்டை கட்டிவிட்டு பொண்டாட்டியையும் பிள்ளையயும் கோர்ட் வாசலில் இருந்து கூட்டி வரவேண்டிய நிலைமை வரலாம். :-)

இணையத்தில் எழுதுபவர்களுக்கு இலக்கியத்தோடு கொஞ்சம் பாலம் ஏற்படுத்துவதில் சுஜாதா, பாரா(பொறுத்துப்பொறுத்துப்பார்த்தார், நேரவிரயம் கண்டு நிம்மதியாய் ஓடிவிட்டார்!), இரா.மு, ஜெ.மோ(ரொம்ப அடக்கி வாசிப்பார் இந்த கச்சடாவெல்லாம் கவைக்குதவாது என்பது தெரியும்!), ஞானி வரிசையில் நீங்களும் இருந்தீர்கள். நான் எதிர்பார்த்த மாதிரியே நடந்துவிட்டது!

எப்போதாவது ஒரு இன்லெண்ட் லெட்டரில் வரும், 'ஒரு பிடி சேற்றை' அள்ளி தூர எறிந்துவிட்டு, எழுத ஆரம்பித்துவிடுபவர்களுக்கு இப்படி முகத்திற்கெதிராய் அளவுக்கதிகமாய் சேற்றை பார்ப்பது அதிர்ச்சியாகத்தான் இருக்கும்!தாமரை இலை தண்ணீர் போல 'ஒட்டாமல் வாழ்ந்தால்' நிற்கலாம் என நினைக்கிறேன். தண்ணீர் இருந்தால்தான் வாழ முடியும் என்றிருந்தாலும் தண்ணீரோடு கலந்து உறவாடி வாழ வேண்டியது அதற்கு அவசியமில்லை.

உங்களது 180 நிமிடங்கள் இருக்கட்டும். உங்களுக்கும் ஜெ.மோ வுக்கும் எப்படி இவ்வளவு நேரம் கிடைக்கிறது என்று நான் மண்டை காய்ந்து போகிறேன்.
இணணயத்திலும் சரி மற்ற அலுவல்களிலும் சரி.

இந்த பிரிவு மற்ற சில ஆக்கபூர்வ விஷயங்களுக்கு உங்களுக்கு உதவுமாயின் சென்று வாருங்கள். கண்டதெற்கெல்லாம் பதில் சொல்லி காலம் கழிப்பது விரயத்தின் உச்சம்!

அண்மையில் அனுராக் வலைப்பதிவில் தங்களது பேட்டியைப் படித்தேன். 'பழைய ஜெயகாந்தனைப் பிடிக்கும்' என்று நீங்கள் சொல்லியிருந்ததையும் அதற்கு சில நாட்களுக்கு முன் நான் ஆர்வமுடன் வாங்கிப்படித்த 'ஹரஹரசங்கர' நாவலின் ஒற்றுமையையும் நினைத்து (சாரு, ஒரு கூட்டத்தில், ஹரஹரசங்கராவை ஜெகே எழுதினாரா? அவர் எழுதுற வேலயை விட்டு ரொம்பநாளாச்சுங்க என்று ஒரு பதில் சொன்னார்!) இதனை ஒரு பதிவாக எழுத எண்ணியிருந்தேன். (எழுதிவிட்டேன், போடவில்லை!) நிற்க.

இதற்கிடையில் பி.கே.எஸ் பதிவை இப்போதுதான் நான் படித்தேன்.ஜெகேவை 'முழுமையாக' இன்னும் படிக்க்வில்லையாதலால் உங்கள் இருவருடைய கருத்துமோதல்களிலும் நிஜம் தெரியவில்லை எனக்கு. ஆனால் தனிமனித தாக்குதல்களுக்கு கொஞ்சம் கூட பஞ்சமில்லை என்றே தோன்றியது.

ஜெகேயைப் பற்றி நீங்கள் எழுதியதில் அளவுக்கதிகமான "யாரையோ திருப்திப்படுத்தும் நோக்கு" இருக்கிறது என்று பி.கே.எஸ் நினப்பாரானால், பி.கே.எஸ்சினுடைய பதிவில் "கொஞ்சம் ரசிகத்தன்மை" இருப்பது என்னால் உணர்ந்துகொள்ளமுடிகிறது!

ஹர ஹர சங்கராவை ஜெயகாந்தன் எழுதியதுபோல 'ஹர ஹர ஜெயகாந்தா'வை பி.கே.எஸ் எழுதியிருப்பது தெரிந்தது. (ஆனால் பி.கே.எஸ் ஜெ.கேயைப் பற்றி நிறைய தெரிந்தவர். அவரைப்படித்தவர்)

ஆகையால் தனிமனித தாக்குதல்களுக்கும் படைப்புகளின் பொதுமதிப்பீடுகளுக்கும் யாரும் இடம் கொடுக்காதீர்கள் என்பதே என் வேண்டுகோள்!நன்றி, மீண்டும் வருக!

எம்.கே.குமார்
*****

அன்பு பி.கே.எஸ்,

இலக்கிய உலகு என்ன, 'எல்லா இடத்திலும் அரசியல்தான்' என்பது இன்றைய உலகில் யாருக்கும் தெரியாமல் இல்லை. சில பெரிய விருதுகளுக்குக்கூட சில நல்ல எழுத்தாளர்கள், கட்சிக்கரை வேட்டி கட்டவேண்டிய காலமாகிவிட்டது. இதிலெல்லாம் புதிது என்று எதுவுமில்லை. (சில சிற்றிதழ் 'சிங்கங்களெல்லாம்' கூட வார இதழ்களில் மண்டியிட்டுக் கிடக்கிறார்கள்!)அதெல்லாம் இருக்கட்டும்.

ஜே.கே.யின் சிகரங்களைக் காட்டுகிறேன் என்று ஜெயஜெய சங்கராவை,
அ.மியையும் கோவை ஞானியையும் கொண்டு காட்டியிருப்பது சரியானதல்ல என்பது என் கருத்து. அதே நாவலை மிகக்கேவலமாக இகழ்ந்தவர்கள் என்று ஒரு இலக்கியவாதிகள் லிஸ்ட் நான் தரட்டுமா? (அ.மி பயங்கரமான கிண்டல் பேர்வழி என்பது வேறு விஷயம்!)

எனது கருத்துப்படி, அந்த நாவல் நடுநில விமர்சனப்பார்வையில் எழுதப்பட்டது அல்ல. (அது கட்டுரை இல்லையே, நாவல் தானே! புனனவடிவம் தானே! அதிலென்ன நடுநிலைப்பார்வை என்று நீங்கள் கேட்டால் அது உண்மை என்பேன்.!)அதற்கு சங்கரரை வைத்து எழுதாமல் யாராவது 'புதுச்சாமியார்' அல்லது 'புதிதாக சாமியாரனவர்' பற்றி கதை எழுதியிருந்தால் பதினைந்து ரூபாய்க்கு பரவாயில்லை என்று விட்டிருக்கலாம்.

சர்ச்சைக்குரிய நேரத்தில் சர்ச்சைக்குரியவரைப் பற்றி சர்ச்சைக்குப்பெயர்போன நாவலாசிரியர் இப்படி, அதாவது 'அவரது தரத்தில்' எழுதாதுதான் வருத்தமளிக்கிறது. (படிக்கும்போது அப்படி நினக்கத் தோன்றுவது வேறு வருத்தமான விஷயம்!) கதையின் ஆரம்பத்தில் "என்ன நடந்தாலும் ஹீரோ நல்லவன்" என்ற முடிவோடு கதையின் போக்கு எழுதப்பட்டதாகவே எனக்குத் தோன்றியது. இது எனது விமர்சனம். இதுதான் சரி என்று சொல்லவில்லை.

இந்த விஷயத்தில் மாலனின் வரிகள் எனக்குப்பிடித்தன. தீப்பொறி பறக்கும் ஜெயகாந்தன் எங்கே? இவர் எங்கே? என்றுதான் நானும் நினைத்தேன். நிற்க.

இப்பதிவில் ஜெகேயை தூக்கிப்பிடிக்கிறேன் பேர்வழி என்று மாலனை, ஒண்ணுந்தெரியாத பாப்பா' ரேஞ்சுக்கு கொண்டு சென்றிருப்பது தவறென நினைக்கிறேன். தமிழ் எழுத்துலகில் அவருக்கும் ஒரு நல்ல இடம் இருக்கிறது!

உங்களது வாதப்படி, மாலன், ஜெகேயைப் பற்றி அப்படி எழுதியது தவறானால், நீங்கள், மாலனைப் பற்றி இப்படி எழுதுவதும் எவ்விதத்திலும் சரியாகாது என்பதும் நீங்கள் இருவரும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள்தானோ என்பதும் நடுநிலைமையாளர்களின் இன்னொரு பார்வை!மற்றபடி மாலனியத்தியலோ ஜெயகாந்தியத்திலோ உங்களளவுக்கு எதுவ்ம் தெரியாது எனக்கு!

எம்.கே.குமார்.

Tuesday, April 05, 2005

அவலம் கண்ணா அவலம்!

தண்ணீருக்குள்ளே ஒரு ஊரு நம்ம பணமும் கெடக்கு பாரு!

"வீட்டைக் கட்டிப்பார் கல்யாணத்தைச்செய்துபார்" இது நமக்கான பழமொழி! அரசியல்வாதிகளுக்கு இது எப்படி மாறும் தெரியுமா? "வீட்டைக்கட்டிப்பார் கணக்கில் காசு சேரும் பார்."

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதிக்கு உட்பட்ட 'துரையரசபுரம்' கிராமத்தில், வீடு வேண்டும் என்று யார் கேட்டார்களோ தெரியாது. நான்கு வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட 500 தொகுப்பு வீடுகள். பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதி திராவிட மக்களுக்காக அரசாங்கம் கட்டியவை தாம் இவைகள். அரசாங்கம் கட்டிவிட்டு அபப்டியே கால்நடையாய் போய்விட்டது. காசு கணக்கில் ஏறியபின், எது நடந்தால்தான் என்ன; நடக்காவிட்டால்தான் என்ன?

வீடு கட்டுகிறார்கள் சரி. வீட்டை என்ன 'கண்மாயிலா' கட்டவேண்டும்? (கண்மாய் என்றால் தெரியும் தானே?! பெரிய நீர்நிலை. ஏரி!) மொத்தமாய் நீருக்குள்ளே மூழ்கி முத்தெடுக்கவா ஏரிக்குள்ளே கட்டினார்கள்? வீட்டைக் கட்ட உத்தரவிட்டார்களே ஏன் அதைத் திறந்துவைக்கவில்லை? மக்களுக்காகத் தானேயய்யா அது? மக்கள் எங்கே இருக்கிறார்கள்? கண்மாய்க்குள் கரையும் நம் காசுகள்!

பாருங்கள் ஐயா பாருங்கள்! அவலங்களைப் பாருங்கள்.
Image hosted by Photobucket.com
"அம்மா ஆட்சியாம் இதில் அவர்களையே கேளுங்கள்"--ஐயா கட்சி.
Image hosted by Photobucket.com
"ஐயா கட்சி போட்ட திட்டம்; அவர்களையே கேளுங்கள்"-- அம்மா கட்சி.
Image hosted by Photobucket.com
"எனக்கு வேலை கிடக்கு; என்னை விட்டு விடுங்கள்."---அறந்தாங்கித் தொகுதியின் நீண்ட நாள் எம்.எல்.ஏ தற்போதைய எம்.பி: திருநாவுக்கரசர்!

பாரு தம்பி பாரு! பணமும் கெடக்கு பாரு! வாயைப்பொளந்து தூங்கு தம்பி! வல்லரசா ஆயிருவோம்!

எம்.கே.குமார்

Thursday, March 31, 2005

இலங்கை- நான் நினைத்தது சரிதானா?

இலங்கை என்ற நாடு உலக வரைபடத்தில் உதித்த நாளிலிருந்து இன்றுவரை அங்கு நிம்மதியான, நிலையான ஆட்சி என்பதே இல்லை எனவும் இது பரமசிவனின் போக்கால் கோபம் கொண்ட பார்வதியோ இல்லை ஏதோ ஒரு தேவதையோ போட்ட சாபமாகும் எனவும் ரஜினி முன்பொரு "அரசியல் கதாநாயக" மேடையில் கதையாகச் சொன்னார்.

ரஜினியின் அரசியல் பிரவேஷங்களும் அது தொடர்பான பேச்சுகளும் இன்று முடிவுக்கு வந்த நிலையில் அந்த கதையை மட்டும் என்னால் மறக்கமுடியவில்லை.

மறக்கமுடியாததற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அது, அன்றைய காலத்தில் அதாவது ரஜினி அக்கதையைச் சொல்லிய காலத்தில் நான் இலங்கையின் அரசியல் வரலாறு பற்றிய புத்தகமொன்றை படித்துக்கொண்டிருந்தேன். அதிலும் அப்படித்தான் இருந்தது.

தந்தையை வெட்டிக் கொலை செய்துவிட்டு அண்ணன் ஆட்சிக்கு வருவது; தம்பியின் ஆட்கள் அண்ணனை வெட்டிக்கொலை செய்வது; தாய்மாமனின் ஆட்சி. அதுவும் துர்கொலைகளால் முடிவுக்கு வருவது. இப்படியாகத்தொடர்ந்து படுகொலைகள், துரோகங்கள், ஆட்சிக்கவிழ்ப்புகள் என கிபி. 5 ஆம் நூற்றாண்டு தொடங்கி ஒரு நிலையான ஆட்சி என்பது அங்கு இல்லை என்பதை உணரமுடிந்தது.

அண்மையில் ஊருக்குச் சென்றபோது இலங்கை வழியாகச் செல்லநேர்ந்தது. தாவணி போட்ட பெண்கள் அனைவருமே அழகாய் இருப்பதைப்போல இலங்கையும் வானத்திலிருந்து பார்க்க மிக அழகாய் இருந்தது. பண்டாரநாயகா சர்வதேச விமானநிலையத்தில் கால் வைத்தபோது அதன் அழகையும் சுறுசுறுப்பையும் ரசிக்கும் ஆவலையும் மீறி இந்த 'ஆட்சி பற்றிய எண்ணங்களே' என்னுள் வந்து நின்றன.

இப்போதுதான் விமான நிலையம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் மிகவும் அழகாக எல்லாவித வசதிகளையும் கொண்ட ஒரு விமான நிலையமாய் நேர்த்தியாக வடிவமைத்து முடியும் தருவாயில் இருக்கிறது அதன் கடைசிகட்ட வேலைகள். அழகான எல்லாவித வசதிகளையும் கொண்ட ஒரு கட்டிடமாய் விமான நிலையம் இருந்தால் மட்டும் போதுமா? அங்கே வேலை செய்வதற்கு சிங்கப்பூரிலிருந்தா ஆட்களை அனுப்பமுடியும்?

ஆம்! இமிக்ரேஷனில் இருப்பவர்கள் அனைவரும் ஒருமாதிரியாகத்தான் என்னைப் பார்த்தார்கள். வேறு ஏதாவது ஜாடை(!) என்மீது இருக்கிறதா எனவும் நான் கண்ணாடியில் பார்த்துவிட்டேன். அப்படியெல்லாம் ஒன்றும் தெரியவில்லை. வழக்கமான 'மூஞ்சியாக' த்தான் இருந்தது. நான் சென்ற இமிக்ரேஷன் கவுண்டரில் இருந்தவரும் அதை உண்மை என்றே நிரூபித்தார். மூஞ்சியை 'உராங் உடான்' போல வைத்திருந்தார் அவர். ( அவர் பெயரும் பணி எண்ணும் இன்னும் ஞாபகத்தில் இருக்கின்றன.!)

விண்ணப்பப்படிவத்தில் ஹோட்டல் பெயரை ஒரு கட்டம் விட்டு எழுதவில்லை என்பதற்காக 16 கேள்விகள் கேட்டார். ' டிரான்ஸிட் பயணி' என்பதைச் சொல்லியும் முடிந்த அளவுக்கு கேவலப்படுத்திவிட்டுத்தான் என்னை வெளியில் விட்டார். போதாதற்கு சிங்கப்பூரில் நான் பணி்புரியும் 'வேலை உரிமைச் சீட்டைக்கூட' கேட்டு வாங்கிப்பார்த்தார். வெளியில் இருந்தவர்கள் ஏதோ எதிரி முகாமிலிருந்து நேரே புறப்பட்டு வந்தவனைப்போல என்னைப் பார்வையால் குடைந்துவிட்டார்கள்.

தமிழனின் அடையாள உணர்வோடு(!) வீரநடை போட்டு வெளியே வந்து ஹோட்டலுக்குச் செல்வதற்குள் 'நாக்கு' தள்ளிவிட்டது. பேசாமல் சென்னை சென்று அங்கிருந்தே திருச்சி சென்றிருக்கலாமோ எனவும் யோசித்தேன். டிக்கெட் விலையும் ரொம்பவெல்லாம் அப்போது வித்தியாசமில்லை. (சிங்கப்பூரிலிருந்து கொழும்பு வழியாக திருச்சிக்கு நேர்பயணம்!)

ஒரு பயணியை தகுந்த காரணங்கள் இன்றி இந்த அளவுக்கு அவமதிக்கும் அவரது செய்கை எனக்கு நியாயமாகப்படவில்லை. எனது பாஸ்போர்ட்டிலோ அல்லது வேறெதிலுமோ அவருக்குச் சந்தேகம் வந்து கேட்டிருந்தால் கூட அமைதியாக இருந்திருப்பேன். (தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் என பல முத்திரைகள் இருக்கின்றன அதில்! எங்கும் இத்தகைய அனுபவம் நேர்ந்ததில்லை!) அவர் பேசிய விதமும் எந்தளவிலும் சரியாக இல்லை.

'எந்தவொரு சுற்றுலாப் பயணியையும் இப்படி நடத்தாதீர்கள்' என்ற ஒரு வேண்டுகோளையும் வேதனையையும் மட்டும் 'பெட்டியில்' எழுதிப்போட்டுவிட்டு வந்து விட்டேன். இந்தியாவாயிருந்தால் 'Goடா Hair!' என்று அலட்சியமாக வந்திருப்பேன். இலங்கை, கொஞ்சம் முயன்றால் சிங்கப்பூரைப் போல அது என்ன, அதை விட செல்வம் கொழிக்க வாய்ப்பிருக்கும் நாடு என்று ஒரு மரியாதையோடு காலடி வைத்தேன்.

முதல் அனுபவம் இப்படி முடிந்ததில் மிகவும் வருத்தம். ஏற்கனவே மனதில் இருந்ததோ என்னவோ 'இவ்வளவு அடிப்படை வசதிகளையும் வாய்ப்புகளையும் கொண்டு இன்னும் முன்னேறாமல் அப்படியே நீங்கள் வைத்துக்கொண்டிருப்பதை விட இலங்கை முன்னேற வேண்டுமென்பதில் மிகவும் சிரத்தையும் ஆர்வமும் கொண்டிருக்கும் சக நாட்டவர்கள் 'யாரிடமாவது' விட்டுக்கொடுத்துவிடலாமே!' என என்னையும் அறியாமல் ஒரு எண்ணம் வந்து நின்றது. 'துரோகங்களுக்காகப் பழிவாங்குதலைத்' தவிர இத்தகைய காரியங்கள் எதையும் 'அவர்கள்' செய்யமாட்டார்கள் என்பதும் நாடு முன்னேறுவதில் நேர்மையாக உழைப்பார்கள் என்பதும் என் மனதில் மலர்ந்திருக்கும் இன்னொரு எண்ணம்.

பாவம்! சாரை சாரையாக, பாவப்பட்ட பெண்கள் மத்தியக் கிழக்கு நாடுகளுக்கும் மற்ற நாடுகளுக்கும் வீட்டு வேலைக்குச் செல்வதைப்பார்த்தபோது இன்னும் கொஞ்சம் கோபம் வந்தது உண்மை! கையாளாகாத கோபம்! யார் மீது என்று தெரியவில்லை. தூங்கியும் தூங்காத கண்களோடு வாழ்க்கையின் அவல நிலைகளை வெளிச்சம் போட்டவாறு கையில் எளிய ஒரு பெட்டியோடு வாழ்க்கை தேடிச்செல்லும் அவர்களைப் பார்த்து கண்ணீர் வந்தது உண்மை!

ஆனால் ஒருமாதம் கழித்து அதே வழியில் திரும்பி வந்தபொழுது எனது கடவுச்சீட்டை சோதித்தவர் ஒரு பெண்மணி! 20 வினாடிக்குள் வேலையை முடித்து அனுப்பிவைத்தார், அவர் பெயரைப் பார்த்தேன் வசந்தா அல்லது வசந்தி! இலங்கைக்கு வாழ்வு தரும் வசந்திகள்! வாழ்க நீவிர்!!

எம்.கே.குமார்!

Tuesday, March 29, 2005

சாருவை டென்ஷனாக்கிய அந்த 'ரஞ்சிதா' யார்?

'சிங்கப்பூர் எலீசா' சொல்ற கிசுகிசுவைக் கேளுங்க!

சாரு சிங்கப்பூர் வந்தபொழுது, எதேச்சையாக அவருடன் நான் 'சாட்' செய்ய, அவர் சிங்கப்பூரில் அவருடைய நண்பர் ராபின் வீட்டில் தான் தங்கியிருக்கிறார் என்பது எனக்குத் தெரியவந்தது. (ராபினை ஒரு கவிஞராக ஏற்கனவே எனக்குத்தெரியும். திண்ணையில் கவிதைகள் எழுதியிருக்கிறார்.) இருமுறை தொலைபேசினேன். இருமுறை சந்திக்க முயற்சி செய்தேன், அவருக்கு உடம்பு சரியில்லை என்று பதில் வந்ததால் முடியவில்லை. பிறகு உட்லாண்ஸ் நூலகத்தில் நடந்த கலந்துரையாடலில் அவரைச்சந்தித்தேன் கேள்விகளும் கேட்டு அவரைத் தொந்தரவும் செய்தேன். இதெல்லாம் இருக்கட்டும்.

"நேற்றுவரை "சும்மாவும் பிஸியாவும்" இருக்கும்போதெல்லாம் சாருவிடம் பேசிவிட்டு இன்று மட்டும் சாரு "சும்மா" இருக்கும்போது, வேலை இருக்கிறதென்று அந்த நபர் பேசாமல் போனால் எப்படி? ஒரு இலக்கியவாதி என்ன அந்தளவுக்கா இழிநிலைக்குப் போய்விட்டான்.?" அண்மைக்காலமாக சாரு இப்படி அடிக்கடி எழுதுவது போல ஒரு எண்ணம் தோன்றியது. இதுவும் இருக்கட்டும்.

இந்நிலையில் சிங்கப்பூருக்கு வந்திருந்த அவரிடம், "ராபின்-- ஸ்ரீகணேஷ்--அரவிந்தன்(அந்தப்பெண்ணை யாரோ தெரியவில்லை என்கிறாராம். விட்டுவிடலாம் இவரை!)--ஒரு நண்பர்-- ''அவர்''-- லியோ---சாரு நிவேதிதா---" இப்படியானதொரு வட்டத்திற்குள் உலவும் 500 மடல்களும் அடிக்கடி 'சாட்டும்' செய்த (எத்தனை மணி, நிமிட, நொடித்துளிகள்? தெரியவில்லை! சாரு ஞாபகம் வைத்திருப்பார்!) ஒரு பெண் நாகரிகமில்லாமல் நடந்துகொண்டாராம். சாருவின் பக்கத்தில் இப்படி எழுதியிருக்கிறார்.

இடையில் நடப்பது என்னவென்று யாருக்கும் தெரியவில்லை. இவருக்கு வேண்டியதை இவரும் அவருக்கு வேண்டியதை அவரும் பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் திரிவதாக எனக்கு இதைப் படிக்கும்பொழுது தோன்றியது. எது உண்மையோ தெரியவில்லை. இந்நிலையில் யார் அந்தப்பெண் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

http://charuonline.com/kp130.html

//சிங்கப்பூர் ஒரு சின்ன ஊர். அதிலும் இலக்கியம் வாசிப்பவர்கள் நூறு பேர். அந்த நூறு பேருக்குள் இத்தனை விளையாட்டு விளையாடினால் அது சாத்தியமா? "ராபினோடு பேசி ஒரு ஆண்டு ஆகிறது."-- ரஞ்சிதா. "போன வாரம் கூட ரஞ்சிதா இங்கு வந்தார்களே!"--- லியோ. (ராபினின் சகஅறைவாசி!) /// -- சாருநிவேதிதா.

அத்தனை பேரையும் ஒரு 'சுத்து சுத்தி' ரவுண்டில் விடும் பெண்ணைப்போல அப்பெண்ணைச் சித்தரித்து சாரு எழுதியிருக்கிறார். அப்பெண்ணின் உண்மையான நிலை என்னவோ? யார் அவர் என்பது எனக்குத்தெரிந்தால் நிம்மதியாகத்தூங்குவேன் என நினைக்கிறீர்களா? நமக்கெதுக்கு அது? யாராயிருந்தால் எனக்கென்ன? என் வேலை எழுதிக்கிடப்பதே!

எம்.கே.குமார்.

Monday, March 28, 2005

புதுமைப்பித்தன் யார்?

"புதுமைப்பித்தன் என்ற நபரை நான் அறிந்துகொள்ளும்பொழுது எனக்கு வயது 8. கையில் பெரிய வாளுடன் கம்பீரமாக நின்ற அவரைத்தான் புதுமைப்பித்தன் என்று அப்போது நான் உணர்ந்துகொண்டேன். பிறகுதான் அவர் புதுமைப்பித்தன் இல்லை 'தலீவர் எம்ஜிஆர்' என்று எனக்குத்தெரிந்தது." இப்படி இயல்பான நகையோடு தனது பேச்சை ஆரம்பித்தார் திரு.ரமேஷ் (மானசஸென்).

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் மாதமொருமுறை 'கதையும் காட்சியும்' என்றொரு 'கண்ணுக்கும்-காதுக்குமான' நிகழ்ச்சி ஒன்றை நடத்திவருகிறது. புகழ்பெற்ற எழுத்தாளர்களின் கதையைக்கொண்ட திரைப்படத்திலிருந்து சில காட்சிகளை ஒளிபரப்பி அவரின் மற்ற கதைகளையும் அவற்றின் இயங்குதளங்களைப் பற்றிய அறிமுகத்தையும் சிங்கப்பூரின் படைப்பாளர்கள்/ வாசகர்களுக்கு, விஷயமறிந்த ஒருவரைக்கொண்டு கலந்துரையாட வைத்து திறம்பட நடத்தி வருகிறது.

ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் அகிலன் முதல் அனுராதாரமணன் வரை பல பெயர்பெற்ற எழுத்தாளர்களைப் பற்றிய கலந்துரையாடல் நடந்திருக்கிறதாம்.

இந்நிலையில் நேற்று நடந்த அவ்விழாவில் 'புதுமைப்பித்தன்' எடுத்துக்கொள்ளப்பட்டார். அவரின் 'சிற்றன்னை' கதையை மூலக்கதையாகக் கொண்ட 'உதிரிப்பூக்கள்' திரைப்படம் காட்சிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

Image hosted by Photobucket.com

கரும்பைத் தின்ன கூலியெதற்கு என்பதாய் தனக்கு தரப்பட்ட வேலையை இன்பமுடன் ரமேஷ் எடுத்துக்கொண்டார் போலும். கத்தை கத்தையாய் பேசுவதற்கு தயார் செய்யப்பட்ட குறிப்புகள் மேஜையை ஆக்ரமிக்க, எழுந்து, "உங்களது பொன்னான இந்த மாலைப்பொழுதை இதுபோன்ற நல்ல நிகழ்ச்சிகளுக்காய் பயன்படுத்திக்கொண்டு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் எனது வணக்கங்களும் நன்றிகளும்" என்று ஆரம்பித்தார்.

புதுமைப்பித்தனைப் பற்றி ஒருவார்த்தையில் சொல்லவேண்டுமானால், நக்கல் என்றார். இரண்டு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் நக்கலோ நக்கல் என்றார். நக்கல், கேலி, குறும்பு, கிண்டல், நையாண்டி ( இன்னும் இதுபோல நிறைய சொன்னார்! எனக்கு மறந்துபோய் விட்டது!) இவற்றிற்கு என்னென்ன வார்த்தைகள் இருக்கின்றனவோ அவற்றையெல்லாம் புதுமைப்பித்தனுக்கு மொத்தமாக நாம் அர்ப்பணித்து விடலாமாம். அவைகளின் மொத்தம் தான் புதுமைப்பித்தனின் படைப்புகள் என்றார்.
Image hosted by Photobucket.com
"வாழ்க்கையில் நாம் காணும் ஒட்டுமொத்த முரண்பாடுகளின் மொத்த வடிவமாய் இருக்கிறது அவரின் படைப்புகளைக்கொண்டு நமக்கு அறிமுகமாகும் அவரது குணம். இத்தகைய முரண்பாடுகளைக் கொண்ட ஒருவன் இலக்கிய உலகில் முன்னுக்கு வருவதற்கு மிகப்பெரிய மேதமை வேண்டும். மேதைமையோடு நேர்மையும் புதுமைப்பித்தனிடம் இருந்திருக்கிறது, அதனால் அவர் ஜெயிக்க முடிந்திருக்கிறது.
Image hosted by Photobucket.com

ஒரு வெள்ளைத்தாளில் நீங்கள் காட்டக்கூடிய மிகப்பெரிய வெளிச்சமானது அதன் இயல்பான எதுவும் எழுதாத வெண்மையே ஆகும். அதற்கு மேலே அதைக்கொண்டு வெறுமனே அதிக வெளிச்சம் எதுவும் காட்டமுடியாது. அதைத் தருவிக்க வேண்டுமெனில் அதில் கருப்பு நிறத்திலான பரப்பை வரைய வேண்டும். இப்போது இன்னும் கொஞ்சம் வெளிச்சம் போல அதைக் காட்டமுடியும்; உணர்த்தமுடியும். அல்லது கருப்பு நிறத்திலான அப்பரப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெண்மையை எளிதாக உணரும்படி கொண்டுவரமுடியும். இதைத்தான் புதுமைப்பித்தன் செய்திருக்கிறார்." என்று தனது ஓவிய வாழ்வில் இருந்து மிகவும் எளிதாக விளங்கிக்கொள்ளும்படி ஒரு உதாரணத்தை எடுத்து வைத்தார்.

"ஜாதிக்குள்ளே நடக்கும் திருமணம் பற்றி கதை எழுதிய அவர், ஜாதிவிட்டு நடக்கும் திருமணங்களைப் பற்றியும் கதை எழுதியிருக்கிறார். இரண்டிலும் திருமண வாழ்வின் நிதர்சனங்களை முன் வைக்கிறார். இதற்கு ஜாதீயவாதி என்ற முத்திரையை அவர்மேல் குத்தமுடியாது" என்றார்.

"எல்லா முரண்பாடுகளையும் தனக்குள்ளே கொண்டவரைப்போல இருந்த அவர் எத்திசையையும் எக்கருத்துகளையும் சார்ந்து வாழாது தன் ஆத்மரசனைக்கு மட்டுமே அடிபணிந்து வேறெதற்கும் சாயாது வாழ்ந்திருக்கிறார். அதுவே அவருடைய வாழ்க்கைக்கும் படைப்புகளுக்கும் வெற்றியின் சாட்சியாக இப்போதும் சிறந்துவிளங்கி வருகிறது. புதுமைப்பித்தனுக்கு கதை எழுதுவதற்கென்று இருந்த வரம்புகளெல்லாம் ஏட்டுச்சுரைக்காயாகவே இருந்திருக்கிறது. அதை அவர் ஒரு பொருட்டாக எப்படைப்பிலும் எடுத்துக்கொள்ளவில்லை. இப்படித்தான் ஆரம்பிக்கவேண்டுமென்றோ இப்படித்தான் முடிக்கவேண்டுமென்றோ எந்த இடையூறும் இல்லை அவருடைய மனதுக்குள். நீண்ட அறிமுகத்தைக் கொடுத்துவிட்டு படக்கென்று கதையை முடிக்கும் தைரியமும் துணிவும் அவருக்கு இருந்திருக்கிறது.

தமிழ் இலக்கிய வரலாற்றில் மொழியை நவீனப்படுத்துதலில் ஆளுமையை அதிகமாக்கியதில் அவருக்கு மிகப்பெரிய பாராட்டும் பங்கும் இருக்கிறது. நடைமுறை விஷயங்களை எழுதுவதில் கௌரவக்குறைச்சல் ஒன்றும் இல்லை. சென்னை நகர வாழ்க்கையில் தான் கண்டவைகளைச் சார்ந்தே அவரது கதைகள் இருக்கின்றன. நகர வாழ்க்கை ஒரு அவலமாகவே அவருக்குள் தொக்கி நின்றிருக்கிறது. அதற்கு மாறாக, நெல்லைப்பகுதி கிராம வாழ்க்கை ஒரு மிகப்பெரிய ஏக்கமாகவே அவருக்குள் போராடிக்கொண்டிருந்திருக்கிறது. அவருடைய கதைகளில் பலவற்றில் அவ்வேதனையும் ஏக்கமும் தவழ்ந்து கிடக்கின்றன. கதை சொல்வதில் புதிய புதிய யுக்திகளையும் சொல்வதை நவீனமாகச் சொல்வதிலும் மிகுந்த அக்கறை கொண்டிருந்திருக்கிறார்.

இன்றைய இலக்கியவாதிகள் பலர் புதுமைப்பித்தனை வித வித கோணங்களில் பிரித்து எடுத்துகொண்டார்கள். 'விந்தன், ஜெயகாந்தன், சு.ரா, சுஜாதா, கு.அழகிரிசாமி, கி.ரா, அசோகமித்திரன், நா.முத்துச்சாமி, வண்ணநிலவன், எம்.வி.வெங்கட்ராமன்' என பலபேர் அவரிலிருந்து தமக்கான வழிகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள்."

"சிற்றன்னை கதைக்கும் உதிரிப்பூக்கள் படத்துக்கும் இருக்கும் ஒரே சம்பந்தம் இரு படைப்பாளிகளின் ஒத்த எண்ண அலைகளே தவிர கதைப்படி எதுவுமில்லை. சிற்றன்னை கதையின் ஃபிளாஸ்பேக்காக உதிரிப்பூக்களை மகேந்திரன் எழுதி இயக்கியிருந்தாலும் சிற்றன்னை கதையை தமது படத்தின் மூலக்கதை என்று குறிப்பிட்டது இன்றைய காலகட்டத்தில் சினிமா உலகில் நாம் காணக்கிடைக்காத, மகேந்திரனின் பெருந்தன்மை மட்டுமே" என்று முத்தாய்ப்பாய் முடித்தார் ரமேஷ்.

நிகழ்ச்சியை கவரேஜ் செய்துகொண்டிருந்த உள்ளூர் தொலைக்காட்சியான 'வசந்தம் சென்ரல்' நேற்றிரவு செய்திகளில் அதைக்காட்டியது.

Image hosted by Photobucket.com

புதுமைப்பித்தனின் பல்வேறு முகங்களையும் அவருடைய படைப்புகளின் விதவிதமான இயங்குதளங்களையும் விரிவாக சிறப்பாக அறிந்து கொள்ள முடிந்ததில் மனமும் மகிழ்ந்தது . இந்நிகழ்ச்சியை முதலிலிருந்து முன்னின்று நடத்தி வரும் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகமும் நிகழ்ச்சியின் அமைப்பாளர் திருமதி.சித்ரா ரமேஷ்ம் பாராட்டுக்குரியவர்கள்.

நன்றி: சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம்
திரு. ரமேஷ் (மானசஸென்)
திரு. இந்திரஜித் (மீடியாகார்ப்ஸ் தொலைக்காட்சி)

(செவி வழி கேட்டதிலிருந்து எழுதியவை. வார்த்தைகளும் பொருளும் முன்பின் மாறியிருக்கலாம்.)

அன்புடன்
எம்.கே.குமார்

விட்டகுறை தொட்ட குறை: காலச்சுவடு பதிப்பித்த புதுமைப்பித்தனின் சிறு கதைகள் தொகுப்பு மிகவும் நேர்த்தியாக இருப்பதாக ரமேஷ் உட்பட பலரும் பேசிக்கொண்டது காதில் விழுந்தது.

இளையபாரதி தொகுத்த 'கண்மணி கமலாவுக்கு' என்ற புத்தகம் 'ஒரு அந்தரங்க டயி்ரியைப் படிப்பது போலவும் எல்லோருக்கும் உள்ளார்ந்த ஒரு வேதனையையே தருவதாகவும்' கூட்டத்துக்குப் பிந்தைய பேச்சுகளில் பலரும் சொன்னார்கள்.

நீங்கள் அப்புத்தகம் படிக்காதவராயின் அது, அவர் 'தனது மனைவிக்கு எழுதிய அந்தரங்க கடிதங்களின் தொகுப்பு' என்பதை அறிவீர்களாக! இத்தகைய படைப்புகள் தமிழ் இலக்கியத்துக்குள் அமைவது சரியா தவறா என்பதையும் பின்னூட்டமிட்டுச் செல்வீர்களாக!

நன்றி!

Sunday, March 27, 2005

வணக்கம்... வணக்கம்... வணக்கம்!

வணக்கம் நண்பர்களே! நீண்ட நாட்களுக்குப்பிறகு மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. ஒரு மாதம் கழித்து வந்தபொழுதில் இங்கே நிறைய படைப்புகளையும் பதிவுகளையும் காணமுடிகிறது. தமிழ்மணம் காசி அவர்கள், புதிதாய்த் தொடங்கப்பட்ட வலைப்பதிவுகளில் நம்பிக்கை அளிக்கும் இருபது வலைப்பதிவுகளைக் குறிப்பிட்டுள்ளார். சிங்கப்பூரிலிருந்து கலக்கிக்கொண்டிருக்கும் நண்பர்கள் அல்வாசிட்டி விஜய், பாலுமணிமாறன் சிங்கப்பூர்-மலேசிய நண்பர் மூர்த்தி, அண்மைய சிங்கப்பூர் விருந்தினர் துளசியக்கா ஆகியோருடைய பதிவுகளும் அவற்றில் இடம்பிடித்திருந்தது கண்டு மெத்த மகிழ்ச்சி. வாழ்த்துகள். அதிலும் நண்பர் பாலு மணிமாறன் நான் இந்தியாவிற்குச்செல்லும் பொழுதுதான் ஒரு பதிவு போட்டிருக்கிறேன், படித்துவிட்டுச்சொல்லுங்கள் என்று முதல் பதிவைப் போட்டுவிட்டிருந்தார். ஒருமாதம் கழித்து வந்து பார்க்கும் பொழுது 'குட்டியும் குழுவானுமாய், கவர்ச்சிநடிகையும் கனவுமாய், அத்தையும் ·பிகருமாய்' ஏகப்பட்ட பதிவுகள்! கலக்கியிருக்கிறார் மனிதர்.

ஊரிலிருந்து வந்தவுடன் எல்லோருக்கும் தோன்றுவதைப்போலத்தான் எனக்கும் இரண்டு விஷயங்கள் தோன்றின. ஒன்று ஊரில் பார்த்த நிறைய விஷயங்களை எழுதவேண்டும் என்பது! இரண்டாவது அதற்கு நேர்மாறாய் வேலைப்பளு அழுத்துவது! :-)

ஊரிலிருந்து வந்தவுடன் சிங்கப்பூர் இணைய நண்பர்கள் கூட்டம் துளசியக்காவின் வருகையை ஒட்டி நடப்பதாய் ஒரு இனிப்பான செய்தி கேட்டு அதிலும் கலந்துகொண்டேன். இரண்டாவது கூட்டம் இது. இக்கூட்டத்தின் உருப்படியான சில விஷயங்கள் விரைவில் சிங்கப்பூரிலிருந்து இணைய உலகில் பிரகாசிக்கலாம். ஏற்பாடுகள் நடக்கின்றன.

துளசியக்கா, ஜெயந்திசங்கரி கொண்டு வந்த கேசரியைப்போல மிகவும் இனிமையானவராக இருந்தார். முதல்கூட்டத்தைத் தவறவிட்ட மானஸசென் ரமேஷ் இதில் நிறை(வாக)ய பேசினார். 'குப்பை-குப்பை மட்டுமல்ல' அன்பு உருப்படியாய் ஒரு காரியம் செய்தார். அவள் விகடன் சமையல் முதல் ஆங்கிலம்-தமிழ் அகராதி, கம்பராமாயணம், தினம் ஒரு கவிதை, புதிய திரைப்பாடல்கள், 'நிலாமுகத்து' நயனதாரா, 'காதல்'-சந்தியா வரை நிறைய விஷயங்களை ஒரு குறுந்தகட்டில் போட்டு அடைத்துக் கொடுத்தார், வாழ்க நீர் ஜெம்குப்பை!

'முக்கிய பேச்சுகள்' இருந்தால் மட்டுமே வருவதாக அறிவித்திருந்த திரு. மா.கோவிந்தராஜ் (நிறைய யாஹ¥ குழுமங்கள் வைத்திருக்கிறார்) 'தமிழா' என்றொரு புத்தகத்தை 10 டாலருக்கு பரிமாறினார். புத்தகத்தை வாங்கியவர்கள் நேற்று கூட முணுமுணுத்தார்கள். நல்ல புத்தகம் போலும். முன்னுரையும் நன்றியுரையும் மட்டும் பல பக்கங்களுக்கு எழுதப்பட்டிருந்ததைக் கண்டு எனக்கு பேராச்சரியம் எற்பட்டது. இப்போதேல்லாம் யார் இப்படி தமக்கு உதவியவரை நன்றியோடு நினைவு கூறுகிறார்கள். 'தமிழா'வின் ஆசிரியர் தமிழாசிரியர். திரு.சிவசாமி அவர்கள் மாகோ வின் நண்பர் போலும். மாகோ அவர்கள் இன்னொரு 'முக்கிய வேலை' இருப்பதாக உடனே கிளம்பிவிட்டார்.

எழுத்தாளர் ரம்யாநாகேஸ்வரன், எழுத்தாளர்-கவிஞர் பனசை நடராஜன் ஆகியோர் முதன்முறையாக கலந்துகொண்டார்கள். எழுத்தாளர் துளசிகோபால் அவர்களின் மகளான கவிஞர் மதுமிதா (ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதியிருக்கிறாராம்!) தமிழைக் 'கொன்சம் கொன்சம்' மட்டுமே புரிந்துகொள்வாராம். ஆங்கிலத்தில் 'ஸ்வீட்டாக' பேசுகிறார்.

ஒரு இனிய மாலைப்பொழுதாக நிறைவாக இருந்தது அது! ஊரிலிருந்து வந்த 10 நாட்களுக்குள் 8 நாட்கள் வேலை போக இரு நாளில் ஒரு இனிய மாலை இது. இன்னும் ஒரு இனிய மாலை நேற்று அமைந்தது. அடுத்தது அது!

எம்.கே.குமார்.

Thursday, February 17, 2005

'ஜி' சொல்லும் சேதி!

தமிழ் சினிமா வரலாற்றில் நல்ல டைரக்டர்கள் கூட ஏதோ நடுராத்திரியில் பதறியடித்து எழுந்து உட்கார்ந்தவர்களைப்போல அதீதமாய் சில அரசியல் படங்கள் எடுப்பதுண்டு!

கே.பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம், விக்கிரமன் இப்படி நிறைய பெரிய ஆட்கள் கூட எதிர்பார்த்த அளவு அதில் வெற்றியடையவில்லை. இந்த வரிசையில் இப்போது ஆனந்தம் லிங்குசாமியும் சேர்ந்திருக்கிறார்.

கீரோ, அரசியலில் நாயகனாய் நின்று ஜெயித்து கோட்டைக்குப்போவதாய் காட்டி அதை ஓடவைப்பதற்கு பலபேர் கரணம் போட்டும் பார்த்துவிட்டாலும் அதில் மிகச்சிலர் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

ஒரு அரசியல் படம் ஆந்திராவில் ஓடுவதைப்போல இங்கு ஓடாதா? ஓடும்!

தகுந்த அளவு மசாலா சரியான கலவையில் இருந்தால் சாதிக்கலாம் என்று தலைவர் எம்ஜிஆர் எப்போதே செய்து காட்டி விட்டார். அரசியல் படம் எடுத்து ஓடுகிறது என்றால் அதில் இருக்கவேன்டிய காரம், மணம் அனைத்தும் சரியாய் இருக்கவேன்டும்.

அமைதிப்படையில் கூட கதாநாயகன் முதல்வராக ஆகமுடிவதில்லை.

முதல்வராய் ஆகவேண்டும் என்றால் அவருக்கு உப்புக்கருவாட்டையும் ஊறவெச்ச சோத்தையும் சொல்லிக்கொடுக்கவேண்டும் என்பதை ஷங்கர் கண்டு கொண்டிருந்தார். அதனால் அவரால் அதில் வெற்றி பெறமுடிந்தது.

இந்நிலையில் இதெல்லாம் தெரிந்தும் எந்த நம்பிக்கையில் இப்படியொரு படத்தை லிங்குசாமி எடுத்தார் என்பது புரியவில்லை.

மைனஸ்: கதை
திரைக்கதை
டைரக்ஷ்ன்
திரிஷா
அஜித்
சுத்தமாக காமெடியே இல்லை!


பிளஸ்: கொஞ்சம் டயலாக்ஸ்
தாவணி போட்ட பெண்கள்! :-)
ஒரு பாட்டு
விஜயகுமார் (கெட்டப்)
எவ்வளவு தேடியும் வேறெதுவும் கிடைக்கவில்லை.


எம்.கே.குமார்

Saturday, February 12, 2005

சாருவுடன் ஒரு பொன் மாலை!

சாருவும் நானும்!


_______________
அருள்குமரன், எம்.கே.கே, சாரு மற்றும் ஈழநாதன்

__________________
"புதுமைப்பித்தன் ஒன்றும் இவர்களெல்லாம் புகழ்வது போல பெரிய ஆள் கிடையாது. ஜாதீயத்தையும் அது சார்ந்த கட்டுப்பாடுகளையும் விட்டு வெளிவந்து அவரால் எதுவும் படைக்கமுடியவில்லை" --சாரு.

_____________________
"சுஜாதாவின் வெகுஜன எழுத்து எனக்குப்பிடிக்கும், ஆனால் அதை வைத்து அவர் எதையும் சாதிக்கவில்லை. ஆரம்பத்திலேயே அவர் நின்றுகொண்டிருந்தார். அதைவிட்டு அவர் நகராததில் எனக்கு வருத்தம். உண்மையில் சொன்னால், கமல், வெகுஜன ஊடகமான சினிமாவில் செய்துபார்த்த நவீனத்துவம் எதையும் இவர்களில் யாரும் எழுத்தில் செய்யவில்லை!"--சாரு.

எம்.கே.குமார்.

சிங்கை நண்பர்கள் சந்திப்பு.

சிங்கை நண்பர்கள் சந்திப்பு.

எத்தகைய நீண்ட பயணமும் ஒரு முதல் அடியிலிருந்துதான் துவங்கும்!

முதல் அடிக்கு வித்திட்ட நண்பர்கள் மூர்த்தி, அன்பு, திறம்பட நடத்திக்காட்டிய (இரவு உணவையும் இனிமையாக சரவணபவனில் வழங்கிய) திரு மற்றும் திருமதி சித்ரா ரமேஷ், உடல்நிலைக்குறைவையும் பொருட்படுத்தாது (கையில் குளோப் ஜாமூனோடு) கலந்து கொண்ட எழுத்தாளர் ஜெயந்தி சங்கரி, திடீர் வரவாய் யாரும் எதிர்பாரா வண்ணம் வந்து கலந்து அசத்திய திரு. நா. கண்ணன், அவரை அழைத்து வந்த நண்பர் ஈழநாதன், எதிர்பாராவிதமாய் கலந்துகொண்ட திரு. மாகோ, திரு. அருள்குமரன், திரு.பாலு மணிமாறன், திரு.விஜய், திரு. செந்தில்நாதன், திரு. தாமரைக்கண்ணன் மற்றும் இடவசதி மற்றும் சூடாக டீயும் பரிமாறி எல்லா விதத்திலும் உதவிய திரு. திருமதி ராம்ஜி ஆகிய அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

நண்பர்கள் இச்சந்திப்பு பற்றி விரிவாக வலைப்பூக்களில் பதிந்துள்ளதால் நான் இப்போதைக்கு ஒன்றும் எழுதப்போவதில்லை. தவறிய விஷயம் ஏதும் இருப்பின் பிறகு எழுதுகிறேன்.

நான்கு மணி நேரங்கள் ஏதோ நான்கு நிமிடங்கள் போல கடந்து போக இனிமையான மாலையை நண்பர்களோடு பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகளும் வணக்கங்களும்!

எல்லாம் வல்ல இயற்கையின் அருளால் மீண்டும் விரைவில் இணைவோம்.
நன்றி!

எம்.கே.குமார்.

Sunday, February 06, 2005

சிங்கப்பூர் இணைய நட்புகளின் சந்திப்பு!

சிங்கப்பூர் இணைய அன்பு நெஞ்சங்களே!

ஏற்கனவே தனிமடல்களில் நாம் பேசியவாறு, வருகிற வியாழன் மாலை 4.30 க்கு நமது இணைய நட்புகளின் முதல் கூட்டம் நடக்க இருக்கிறது.

இடம்: ஃபேரர் பார்க் எம் ஆர் டி அருகில் உள்ள கான்டோமினியம். (திருமதி.சித்ரா ரமேஷ் அவர்களின் சகோதரர் இல்லம்)

நேரம்: மாலை மணி 4:30

கண்டிப்பாக அனைவரும் கலந்துகொன்டு இச்சந்திப்பை இனிமையானதாக உருவாக்குங்கள்.

நமது வலைப்பூ மற்றும் மரத்தடி நண்பர்கள் பலர் இதில் பங்கேற்க உள்ளனர்.
பொதுவான அறிமுகங்கள், படித்துச் சுவைத்த புத்தகங்கள், கவிதைகள் தமிழ் இணைய உலகின் அண்மைய விவாதங்கள், மரத்தடி மற்றும் வலைப்பூ பற்றிய கலந்துரையாடல்கள் ஆகியனவும் இடம்பெறும்.

சித்ரா ரமேஷ், ஜெயந்தி சங்கரி, நம்பி, ஈழநாதன், அருள்குமரன், அன்பு, மூர்த்தி, விஜய், பாலு மணிமாறன், குமார் மற்றும் பலர் கலந்துகொள்கிறார்கள்.

மானஸசென் ரமேஷ் மற்றும் ரமா சங்கரன் அவர்களும் கலதுகொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.

அனைவரும் வாருங்கள்! ஒரு இனிமையான மாலையை உருவாக்குங்கள்!

எம்.கே.குமார்.

Tuesday, February 01, 2005

சூப்பர் தலைவி சூப்பர்!

தமிழக முதல்வர் ஜெ.ஜெ அவர்கள் இரு நாட்களுக்கு முன்பு ஒரு அறிக்கை விட்டிருக்கிறார். அறிக்கையா அது? அடி! நெத்தி அடி!

கமல், 'விருமாண்டி' படம் எடுத்துக்கொண்டிருந்த பொழுது "சண்டியர்" என்ற அதன் அப்போதைய பெயரும் கதையும் ஜாதிப்பிரச்சனையைக் கிளப்புவதாகக்கூறி தற்கொலைத் தாக்குதல் நடத்துப்படும் என்று படப்பிடிப்பை தடுத்தார் 'ஜாதி உத்தமர்' திரு. கிருஷ்ணசாமி. படம் ஆரம்பித்த நிலையில் வெறுமனே ஒரு அடி கூட நகராமல் கமலுக்கு அதன் மூலம் வந்த இழப்பு ஒரு கோடி ரூபாயாம்! ஒரு நல்ல நடிகருக்கும் தயாரிப்பாளருக்கும் அதன் மூலம் ஏற்பட்ட இழப்புக்கு படத்தைப் பார்த்தபிறகாவது கிருஷ்ணசாமி அவர்கள் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று எனது முந்தைய பதிவில் எழுதியிருந்தேன்.

முதல்வரின் கவனத்துக்குப் போன பிறகு தலைப்பை மட்டும் மாற்றும் படி கமலிடம் கோரப்பட்டது. அது கூட முதல்வருக்காகத்தான் செய்தார் கமல்!

அதிலிருந்து ஆரம்பித்துவிட்டது இவர்களின் அராஜகம்! ரஜினிக்கு, விஜயகாந்திற்கு, கமலுக்கு இப்போது எல்லா நடிகர்களுக்கும் எதிராக ஏதோ இவர்கள் தான் தமிழைக் கட்டிக் காக்க வந்த கோமான்கள் மாதிரி 'சினிமாரசியல்' பண்ண ஆரம்பித்துவிட்டார்கள். அப்படியாவது நமது பேர் நாலு பத்திரிகையில் வரவேண்டும் என்பதையடுத்து இதன்மூலம் இவர்களுக்கு என்னதான் பெரிதாய் கிடைக்கப்போகிறது? அந்த அல்பத்திற்காக இப்படியெல்லாம் ஆடவேண்டுமா?

இன்னொரு வேலை வெட்டி இல்லாத இருவர் தமிழைக் காக்க முயற்சிகள் மேற்கொள்கிறார்களாம். அவர்களது வேலையில் இப்போது சுபமில்லை. ஒருவருக்கு இனிமேல்தான் மரம் வளர்ந்துவரவேண்டும். (இப்போதுதான் பசுமைத்தாயகமாய் மரம் நடுகிறார்கள்; அது வளரவேண்டாமா? அதுவரைக்கும் சும்மாவா இருக்கமுடியும்?!) இன்னொருவரின் அடிவயிற்றிலே கை வைத்து அவரது அந்தரத்தைக் கிழித்து விட்டார் டாக்டர். இனி அரசியல் பண்ணுவது ரொம்பவும் கடினம். என்ன செய்வது? பிடித்துக்கொண்டார் சினிமா வாலை!

முதலாமவர் 'முதலில் பெயரை அவர் பெயரை மாற்றட்டும்' என்றார் ஜெ. அவருக்கு சாட்டையடியாய்! இரண்டாமவருக்கு 'பேனாவும் ஆயுதமும்' தமிழ் வார்த்தைகளா என்று கேட்டிருக்கிறார்.

முதலில் இவர்கள் திருந்தட்டும்! பிறகு திருத்துவதற்கு வரட்டும்!

எம்.கே.குமார்

Sunday, January 30, 2005

நண்பனுக்கு ஒரு வெண்பா வாழ்த்து!

எம்.கே.குமார்.

மணமகன்: கே வி ராஜா.
மணமகள்: எம். கோமதி.

நாள் : 27 ஜனவரி. 2005

1. ஐங்கரத்தான் ஆசியால் அறியாமை நீக்கி
அருங்கொடை இல்லறத்தாள் பைங்கரம் பற்றி
செழுங்கரம் பெற்று சிறப்புடன் வாழ
பெருங்குடையான் வாழ்த்தட்டும் இன்று!

2. அன்பராம் ராஜா அருமையாம் தன்னி
பண்பராம் பெற்றோர் பரிவுடன் வாழ்த்த
கண்கள்தாம் கொண்ட கவிஇன்பக் காதலுக்குள்
அன்புடன் சேர்ந்தனர் அணைத்து!

3. கலப்பு மணங்கொண்டாய் காதல் மணங்கொண்டாய்
காலத்து நீரில் கணக்காய் பயிர்செய்தாய்
சேலத்து மாம்பழமாய் செந்தமிழ் தேன்கொண்டு
ஞாலத்தில் வாழ்க திளைத்து!

4. கோமதி ராஜா குறிப்பறிந்து வாழ்ந்து
குலமதி வாழும் பொழுதாய் நிறைந்து
முழுமதி தேசம் முழுதும் படைத்து
நிலமதில் வாழ்க நிலைத்து!

வாழ்க வளமுடன்!

ஒரு அனுதாபமும் ஒரு அஞ்சலியும்!

எதற்கும் வளையாத நடுநிலை நாயகங்களாய் தங்களைக் காட்டிக்கொள்ள விழையும் சில வணங்காமுடிகளைக் கூட 'அதெல்லாம் இல்லை, இப்போ பாரு எப்படி படக்குன்னு பல்டியடிப்பான்னு' காட்டுவதற்காக இயற்கை சில நேரங்களில் சந்தர்ப்பங்களைக் கொடுத்து கவிழ்த்துக்காட்டும்! அந்த சந்தர்ப்பத்திற்காக சிலரை எப்போதும் நான் கவனித்துக்கொண்டே இருப்பதுண்டு! வணங்காமுடிகளின் வளைவும் குனிவும் அழகானதுதானே!

இந்தவார துக்ளக் அட்டைப்படம் எனக்கு அதைத்தான் ஞாபகப்படுத்தியது. இந்த விஷயத்தைப் பற்றி நான் இரு வாரங்களுக்கு முன் எழுத நினைத்தாலும் நேரம் கிடைக்கவில்லை. இப்போது துக்ளக் அட்டைப்படம் அதைச் சொல்லத்தூண்டி விட்டு விட்டது.

சங்கரராமன்கொலை வழக்கின் குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் ஒப்படைத்துவிட்டு வந்த விசாரணை அதிகாரி பிரேம்குமார் எஸ்பி யிடம், 'இவ்வழக்கு வெற்றி பெறுமா' என்று ஒரு பத்திரிகை நிருபர் கேட்க, அவர் ரொம்பவும் அமைதியாகவும் அடக்கமாகவும் சொன்னார், 'இக்கொலை, வரதராஜ பெருமாள் கோவிலுக்குள்ளே நடந்திருக்கிறது. கடவுளுக்கு முன்பே நடந்திருக்கிறது. அவர்தான் அனைத்திற்கும் சாட்சி. ஆக பெருமாளுக்கும் காஞ்சி மடத்துக்கும் நடக்கும் வழக்கு இது. நாமெல்லாம் வெறும் கருவிகள் தான்'.

ஒரு போலீஸ் அதிகாரி என்பதைத் தாண்டி எனக்கு அவர்மேல் ஒரு மரியாதை வந்துவிட்டது மனதில். 'கொலை நடந்திருப்பது உண்மை! அதுவும் கோவிலுக்குள் நடந்திருப்பது உண்மை! குற்றவாளிகள் யாரென்பதை எனக்குத் தெரிந்தவரை விசாரித்து ஒப்படைத்துவிட்டேன். இனி நிஜத்தின் வழி நடப்பது நடக்கட்டும்! எது சரி என்று கடவுள் நினைக்கிறாரோ அது நடக்கட்டும்.' என்பதாய் இதை நான் எடுத்துக்கொண்டேன். இதில் என்ன தவறு?

இந்து மக்களின் உணர்வுகளுக்கு சமாதி கட்டி அதற்கு மேலே அடிக்கடி மேல்பூச்சு பூசிக்கொண்டிருக்கும் கலைஞர் (வெட்கங்கெட்ட அவர்களுக்கு இது தேவைதான்!) கேவலமாய் கிண்டல் அடித்தார். 'ஆக, பெருமாள் வருவாரா சாட்சி சொல்ல? அவருக்கும் சம்மன் வழங்கப்படுமோ?'

வயதால் முதிர்ந்த ஒருவர் எவ்வளவுதான் நாத்திகவாதியாயினும் எவ்வளவுதான் சமயச்சார்பற்ற கூட்டணி படைத்து சாதித்தவராயினும் பலநூறாயிரம் மக்களின் உணர்வுகளை இப்படியெல்லாம் புண்படுத்தலாமா? இன்னும் புண்படுத்தவேண்டுமா?

ஒரு போலீஸ் அதிகாரி எப்படிச் சொல்லலாம்? அதுவும் இவ்வழக்கில் மட்டும்? என்றும் சிலர் கேட்கிறார்கள். கொலை நடந்தது கோயிலுக்குள்! எல்லா கொலை வழக்கு விசாரணையிலும் 'என் பணி முடிந்துவிட்டது இனி எது நடக்க வேண்டுமோ அது நடக்கட்டும். அது எனக்கு சம்பந்தமில்லை' என்று விசாரணை அதிகாரி சொல்லலாம். ஆனால் இக்கொலை கோயிலுக்குள் நடந்ததால் பெருமாளையும் சேர்க்க வேண்டி வந்திருக்கிறது. ஆக, வழக்கின் முடிவில் அவர் நிரபராதி என்று வந்தால், 'பெருமாள் தவறான தீர்ப்பை அல்லவா சொல்லிவிட்டார்' என்றல்லவா நினைக்கத்தோன்றும் என்றும் சிலர் நினைக்கலாம். அப்போது மட்டும் இந்து மக்களுடைய உணர்வுகள் பாதிக்கப்படாதா என்றும் தோன்றலாம். 'ஒரு காரியத்தைச் செய்யும் வரை முழு நிலையோடிரு. பிறகு நடப்பது எதுவும் உனக்கானதில்லை' என்ற பகவத் கீதையின் முழக்கம் எப்படி இவர்களுக்குத் தெரியாமல் போனது?

இந்நிலையில் துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் இதே பாணியில் 'குண்டர் சட்டத்தில் போட்டுவிடுவார்களோ' என்று கடவுளே பயந்து கொண்டிருப்பதாய் அட்டைப்படம் போட்டிருக்கிறார். (ஜெயலலிதா இவ்விசாரணையில் முழு நிதானத்தைக் கடைபிடிக்கிறாரா? குண்டர் சட்டம் அவசியம் தானா என்பதெல்லம் இரண்டாம் கேள்விகள்!)

'நேரத்திற்குத் தகுந்ததாய் மாறிக்கொள்ள விழையும் சோ அவர்களை இப்போது பார்' என்று இயற்கை எனக்கு ஒரு சந்தர்ப்பம் அளிப்பதாகவே எனக்கு இப்போது தோன்றுகிறது. பிரேம்குமார் எஸ்பி. சொல்லிய வார்த்தைகளின் உட்பொருள் அறியத் தெரியாவதவரா திரு. சோ அவர்கள்? தமக்கு 'இஷ்டமில்லாத' ஒரு நல்ல காரியத்தை யார் சொன்னாலும் தவறா? இப்படியொரு 'இரண்டாம் நிலையில்' இருந்துகொண்டு 'ஹிந்து மஹா சமுத்திரம்' என்று ஹிந்து மதத்தின் அருமை பெருமைகளை எழுதப்போகிறாராம் இவர்?! அப்போதாவது, 'கீதை சங்கரமடத்திற்கும் மேலானது' என்பது இவருக்குத் தெரியட்டும்!

ஆக இனிமேலும் இவர்கள் அடிக்கப்போகும் வார்த்தை பல்டிகளுக்கும் செயலுக்கும் இப்போதே எனது அனுதாபங்கள்!

ஒரு அஞ்சலி!

இதுவும் தாமதமாகத்தான் வருகிறது.

முன்னால் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு. மு.மு. இஸ்மாயில் அவர்களுக்கு எனது இதய அஞ்சலிகள்!

நீதித்துறையில் இவருடைய பணி சிறப்பானது என்று யார் யாரோ சொல்லக் கேட்டிருக்கிறேன். அதில் இவர் எனக்குப் பரிட்சயமாகவில்லை. ஆனால் கம்பர் வழி பரிட்சயமானார்.

தான் ஒரு இஸ்லாமிய இனத்தவராய் இருந்தாலும் கம்ப ராமாயணத்தின் பால் மிகுந்த வேட்கை கொண்டு அதில் பல்பெருகிக்கிடக்கும் இலக்கியச்சுவைகளூக்குள் கிடந்து வாழ்ந்தவர். உருண்டவர்! கம்பராமாயணத்தில் மிகவும் ரசிக்கந்தகுந்ததாய் இவர் எழுதிய சில புத்தகங்களைச் சில வருடங்களுக்கு முன்பு படித்திருக்கிறேன். (அப்புத்தகங்களை எனக்கு அறிமுகப்படுத்திய எனது முந்தைய சக தொழிலாளி சகோதரர் திரு. முருகேசன். ஆறுமுகனேரி, தூத்துக்குடி மாவட்டம் அவர்களை இப்போது நன்றியோடு நினைக்கிறேன்.)

கம்பராமாயண விஷயங்களை மிகவும் இனிமையாய் எழுதியிருப்பார் மு.மு இஸ்மாயில் அவர்கள். 'கண்டேன் சீதையை' என்ற வார்த்தையின் ஜீவனைக் கூட இவர்வழிதான் படித்தேன் என நினைக்கிறேன்!

ஒரு தேர்ந்த இலக்கிய ரசனாவாதிக்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகள்!

எம்.கே.குமார்.

Tuesday, January 25, 2005

டாக்டராய் நடித்தவர் இப்போது டாக்டர்!

சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் இனி தனக்கு பெருமை மாலை போட்டுக்கொள்ளலாம். ஒரு நல்ல கலைஞனுக்கு ஒரு நல்ல காரியம் செய்திருக்கிறது. ஜேப்பியாரின் கையில் துண்டு போட்டு விலை பேசப்போகிறவர்கள் இருப்பார்கள்; இருக்கட்டும். அது நமக்கு அவசியமில்லை. இது மிகவும் நல்ல செய்தி.

'ஒரு மிகச்சிறந்த நடிகர், நல்ல படங்களின் தயாரிப்பாளர், கதையாசிரியர், வசனகர்த்தா, இயக்குனர், பாடகர் மற்றும் நல்ல எழுத்தாளர் என பல்வேறு முகங்களைக் கொண்ட ஒரு மனிதனுக்கு ஏன் டாக்டர் (ஹானர்ஸ்) பட்டம் வழங்கக்கூடாது' என்று அண்மையில் ஒரு மேடையில் வைரமுத்து கேட்டாராம். வைரமுத்து எதை நினைத்து கேட்டாரோ தெரியவில்லை. ஆனால் அவரது வாய் முகூர்த்தம் இப்போது பலித்திருக்கிறது.

'வாழும் சினிமா அகராதி' கமலுக்கு சத்யபாமா நிகர்நிலை பல்கலைகழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவப்படுத்தியிருக்கிறது. பட்டம் வந்த வழி சாதாரணமாய் இருக்கலாம். பெரிதாய் பேசப்படாததாய் இருக்கலாம். (இதன்மூலம் அது அதற்கு கிடைக்கட்டும்!) ஆனால் பட்டம் பெற்றவர் சகல(கலா) மரியாதைக்கும் உரியவர். திறமையானவர். இன்னும் பலப்பல ஆண்டுகளுக்குப்பின்னும் தமிழ் சினிமா பற்றி யார் பேசினாலும் அதில் 'கமலாயனம்' இல்லாமல் இருக்கமுடியாது என்பது என் கணிப்பு.

'தேவர் மகனில்' ஒரு காட்சி.

"இன்னக்கி நா மரம் வெப்பேன், அது பெருசா வளரும், காய்க்கிம், கனியும். ஆனா அத சாப்புட நா இருக்க மாட்டேம்பு, நீங்க சாப்பீடுவீய, உங்க மகன் சாப்பிடுவாக! அவுங்க மகன் சாப்பிடுவாக! வழி வழியா வாறவக எல்லாரும் சாப்பிடுவாக. நா சாப்பிடலையேங்குறதுக்காக நா மரம் வெக்காமெ போக முடியுமா? வருத்தப்படமுடியுமா? எல்லாம் அப்புடித்தாம்பு. ஒரே நாளையில எல்லாம் நடக்கணுமுன்னு பாத்தா வேலைக்கு ஆகாதுப்பு. அப்படித்தானே வந்துச்சி, அப்படித்தாம்பு போகணும்! படிப்படியாத்தாம்பு எல்லாம் மாறணும்!"

இன்றைக்கு சமுதாயத்தில் நடக்கும் சாதிக்கொடுமைகளுக்கு இதைவிட யாரும் நல்ல முடிவாய்ச் சொல்ல முடியாது. சமுதாயத்தின் கீழ்த்தட்டில் இருப்பவன் வேண்டுமானால் எல்லாம் உடனே நடக்கவேண்டும் என ஆசைப்படலாம். ஆனால் மேல்தட்டிலிருப்பவன் என்ன யோசிப்பான்? இப்பிரச்சனை எப்படித் தீரும்? எப்படித் தீர்க்கமுடியும்?

"ஆமாம், சந்திரபோஸ் எங்க சதம் அடிப்பாரு? அவரு வெள்ளக்காரனைத்தான் அடிப்பாரு, அதுக்குத்தான் அவரு லாயக்கு. பாவம்!"

'விருமாண்டி'யில், ஒரு மறந்துபோனவனை ஞாபகப்படுத்தும் முயற்சி இது. ஒரு கிராமத்து பெண்ணுக்கு கிடைத்த சச்சினின் பிரபல்யம் ஏன் சந்திரபோஸ¤க்கு கிடைக்கவில்லை என்பதை ஒவ்வொரு இந்தியனையும் எண்ணிப்பார்க்கவைக்கும் தந்திரம் இது.

"நீ இன்னைக்கி ஜெயிச்சிருக்கலாம் தம்பி. தோத்தாலும் நா போயி நைட்டு நிம்மதியா தூங்கிடுவேன். ஆனா பொய் சொல்லி ஜெயிச்சிட்டு நீ போயி நிம்மதியா தூங்க முடியுமா?"

இதைவிட ஏது கடவுள்? இதைவிட ஒருவனை மனிதனாக்க என்ன பெரிதாய் எழுதவேண்டும்? மீண்டும் 'விருமாண்டி'யிலிருந்து!

இந்த வசனங்களை எழுதியவர் திரு. கமல்ஹாசன். இப்படி ஒவ்வொரு படத்திலிருந்தும் எத்தனையோ வசனங்களை எடுத்து மனித மனங்களுக்கு உரமேற்ற முடியும் கமல் படங்களிலிருந்து. 'இன்றும் நேற்றும் நாளையும்' எப்போதும் பளிச்சென்று துளிர்விடும் எழுத்து அவருடையது. வாழ்க டாக்டர் கமல் அவர்கள்.

"படித்தவர்களெல்லாம் சேர்ந்து இப்பாமரனை கௌரவிக்கிறார்கள். அதற்காக நான் மகிழ்கிறேன்" என்கிறார் கமல் மிக அடக்கமாக!

'இதப்பத்தியும் உம்மைப்பத்தியும் அய்யன் எங்களுக்கு எப்பவோ சொல்லிட்டுப்போயிட்டான்வெ. நீரு மனீஷாவைப் பாரும்! சீக்கிரமா ரெடி பண்ணி அனுப்பும், எல்லாரும் நல்லா சிரிக்கிற (ரசிக்கிற) மாதிரி'ன்னு சொல்லுறாரு நம்ம சித்தப்பு! கமல் சார் கண்டுக்குங்க!

பி.கு: வலைப்பதிகளில் எங்கும் இச்செய்தி குறித்து பதிவுகளைக் கண்டது போல எனக்குத் தெரியவில்லை. என்ன காரணம்?

எம்.கே.குமார்.



Sunday, January 23, 2005

சிங்கை இணைய நண்பர்களுக்கு..

இனிய சிங்கை நண்பர்களே,

வருகிற சீனப்புத்தாண்டு (பிப்ருவரி 9 மற்றும் 10) விழாவை முன்னிட்டு எல்லோருக்கும் குறைந்தபட்சம் இருநாட்கள்(ளாவது) விடுமுறை இருக்கும் என நினைக்கிறேன். (எனக்கு 8, 9, 10 என மூன்று நாட்கள் விடுமுறை) சிங்கப்பூரிலிருந்து இணையத்தில் பங்காற்றிக்கொண்டிருக்கும் நண்பர்கள் நாம் யாவரும் அந்நாட்களில் ஏதாவது ஒன்றில், ஓரிடத்தில் ஒன்றிணைந்து இணையவிஷயங்களும் இன்னபிற விஷயங்களுமாய் பேசி கலந்து அளவளாவிக்கொள்ளலாம் என்று தோணுகிறது. இணைய நண்பர்கள் என்ன சொல்கிறீர்கள்?

நண்பர் மூர்த்தியும் இதுபற்றி சிலநாட்களுக்கு முன் அவரது பதிவில் எழுதியதாய் ஞாபகம். அன்பு, ஈழநாதன் மற்றும் வீரமணி இளங்கோ ஆகியோர் அதில் இசைவும் தெரிவித்திருந்தார்கள். இப்பிரபலங்களைத்தவிர ஜெயந்திசங்கர், நம்பி, மானஸசென் ரமேஷ், அருள்குமரன், சித்ரா ரமேஷ், பனசை நடராஜன் இன்னும் பல 'விஐபிக்கள்' மரத்தடி உறுப்பினர் மற்றும் வலைப்பதிவர்களாக இணைய உலகில் இருக்கிறார்கள். எல்லோரும் முன்வந்தால் இனிய இணைய உறவுகளின் சந்திப்பாய் அதை நாம் உருவாக்கிக்கொள்ளமுடியும்.

எனவே நண்பர்கள் அனைவரும் முன்வந்து அவரவர்க்கு ஏற்ற நேரத்தையும் தேதியையும் சொன்னால் அவற்றில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து மேற்படி கலந்துரையாடலை நாம் நடத்தலாம். தங்களின் கருத்துகளுக்கு பின்னூட்டுங்கள். நன்றி!

அன்பன்,எம்.கே.குமார்.

Tuesday, January 18, 2005

நம்பிக்கையிழக்கவைக்கும் இரு முடிவுகள்.

ரயில்வே அமைச்சரான லல்லு அவர்கள் நியமித்த முன்னால் நீதிபதி 'பானர்ஜீ' தலைமையிலான விசாரணைக்குழு, தமது விசாரணையின் முடிவில் 'கோத்ரா' ரயில் எரிப்புச் சம்பவத்தை ஒரு விபத்து 'மட்டுமே' என்று அறுதியிட்டுக்கூறியிருக்கிறது. ஆனால் இதற்கு முன் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நியமித்த இன்னொரு உயர்மட்ட குழுவானது, அது கரசேவை முடிந்து சமர்மதி எக்ஸ்பிரஸில் ஊர் திரும்பிக்கொண்டிருந்த 'கரசேவர்களைக்' குறிவைத்து 'வெளியாட்கள்' யாரோ பெட்ரோலைக் கொண்டு எரியூட்டியதாக ஆய்வறிக்கை வெளியிட்டது. இரண்டுக்கும் எவ்வளவு வித்தியாசம் பாருங்கள். எது இங்கே உண்மை?

ஆக இரண்டு வெவ்வேறு அரசுகள் ஆட்சிக்கு வந்தால் 'உயர்மட்டக்குழு ஆட்கள்' கூட அதற்குத்தகுந்ததாய் மாறிக்கொள்வார்கள் என்பது வருத்தமளிக்கும் விஷயம். இவ்வாறு அரசுக்குத் தகுந்ததாய் ஆய்வறிக்கைகளும் கூட மாறும்போது இந்தியாவும் இந்திய ஆட்சியாளர்களும் உருப்படுவதாய் உருப்படப்போவதாய் யாருக்கும் தோன்றாது.

காங்கிரஸ் அரசுக்குக் கீழேயான இவ்வறிக்கை உண்மையென்று லல்லு அவர்கள் அதன் தலைவராய் இருக்கும்வரை யாராலும் நம்பமுடியாது. ஏனெனில் திரு. லல்லுவைப் பற்றி எல்லா அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் தெரியும். எத்தகைய தவறையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் மிகச்சிறந்த 'அரசியல்வாதி' என்பது அனைவருக்கும் தெரியும். பி.ஜே.பி தலைமையிலான அரசு 'கோத்ரா' சம்பவத்தை வைத்து அரசியல் பண்ணியிருக்கலாம் என்றாலும் அப்போது கரசேவர்கள் விஷயம் பெரிதாக பிரச்சனை தரும்படியே இருந்தது. எனவே அப்படியும் நடந்திருக்கலாம் என்று யூகிக்கும்படியாகவே நிலைமை இருந்தது. இந்நிலையில் பி.ஜே.பி அதை வைத்து அரசியல் பண்ணவில்லை என்றும் நாம் சொல்லமுடியாது. ஏனெனில் பி.ஜே.பியின் கொள்கை கடந்தகால பாதைகள் அப்படி. இங்கே எது நிஜம் என்பதை தீ பகவான் மட்டுமே வந்து சொல்லமுடியும் போல இருக்கிறது. பொய் சொல்பவர்களையும் அவர் கொளுத்தி விட்டுப்போகட்டும்.

இரண்டாவது, லல்லு அவர்கள் தனது மடியிலிருந்து ஒவ்வொரு நோட்டாய் எடுத்து நீட்டிக்கொண்டிருந்த செயல் தவறுதான் என்றாலும் மன்னித்துவிடுகிறதாம் தேர்தல் ஆணையம். இது எப்படி இருக்கிறது?

இச்சலுகை எல்லோருக்கும் உண்டா என்றும் அதே தேர்தல் ஆணையம் சொல்லவேண்டும். முதல் தேர்தலிலோ அல்லது ஒவ்வொரு தேர்தலிலுமோ 'முதன் முறையாக செய்யும் தவறு தவறில்லை' என்று அது கொஞ்சம் விளக்கிச்சொல்லிவிட்டுச் செல்லலாம். இத்தகையவைகளே பின்னாளில் ஏதாவது ஒரு முக்கிய வழக்கின் போது முன்மாதிரியாய் அமைந்து அங்கேயும் இன்னொரு குற்றவாளி தப்புவதற்கு ஆயுதமாகிவிடுகிறது. ஆக லல்லு அவர்கள் செய்தால் அது தவறில்லை. மற்றவர்கள் யாராவது செய்தால் தவறாகி விடும்?

வாயைப் பிளந்துகொண்டிருங்கள்! இந்தியா வல்லரசாகி விடும்!

Wednesday, January 12, 2005

'காதல்' - ஒரு காவியம்.

எதேச்சையாக பார்க்க நேரிடும் ஒருசில நிமிடங்களில் பறந்துபோகும் பட்டாம்பூச்சியின் நிழல் போல படக்கென்று வந்து, பறந்து போகும், சில உள்ளம் கொள்ளும் பதிவுகள். ஏதோ ஒரு காய்கறி (முட்டைக்கோஸ் என நினைக்கிறேன்) சமையலுக்காய் நறுக்கிக்கொண்டிருந்த நேரம் செல்பேசி அழைக்க, அதை எடுப்பதற்காக என் அறைக்கு வந்தேன். ஹாலில் இருந்த தொலைக்காட்சியில் சன் டிவியின் 'மறுநாளைய திரைவிமர்சன'த்திற்காய் இப்படத்திலிருந்து சில காட்சிகள் காட்டப்பட்டன. முதல் முறை பார்த்தபோது பட்டாம்பூச்சியின் நிழல் கண்களில் நின்று போனது. எல்லா காட்சிகளையும் பார்த்துவிட்டுத்தான் முட்டைக்கோஸ¤க்கு போனேன்.

மதுரையின் பிஸியான தெரு ஒன்றில் மெக்கானிக்காக இருக்கிறான் ஹீரோ. மூன்று முறை அவனை தவறுதலாக விபத்திற்குள்ளாக்குகிறாள் ஹீரோயின். அதை அவள் ஹாஸ்யமாக எடுத்துக்கொண்டுவிட்டுப்போக ஹீரோவுக்கு எரிச்சலாகிறது. மோதுகிறான் அவளோடு. மோதல் காதலாகிறது. பிளஸ் டு படிக்கும் அப்பெண் தான் 'பெண்மையடைவது உணரும் கணம்' அம்மோதல் காதலாகிறது. பிறகென்ன? கவிதையாக எடுக்கப்பட்டிருக்கின்றன அக்காட்சிகள்.

செல்வம் கொழிக்கும் பிராந்திக்கடைக்காரரின் ஒரே மகள் தான் ஹீரோயின். வறுமையை போக்க பழனிக்கு பாதயாத்திரை போகும் தாயின் மகன் ஹீரோ. காதல் எப்படி ஜெயிக்கும்? வீட்டிற்கு இவையெல்லாம் தெரியும் முன்னே நாயகிக்கு நிச்சயமாகும் திருமணத்தைத் தவிர்க்க நாயகனும் நாயகியும் மதுரையிலிருந்து வீடியோ கோச் பஸ்ஸில் சென்னைக்கு வருகிறார்கள் வீடியோ பார்த்துக்கொண்டே வாழ்க்கையை ஆரம்பிக்க! வாழ்க்கை ஒன்றும் வீடியோ படம் அல்லவே? சென்னையில் அவர்கள் சந்திக்கும் நபர்கள் யார்? அதன்பிறகு அவர்கள் என்ன ஆகிறார்கள்? காதல் ஜெயிக்கிறதா என்பதுதான் படம்.

நிஜங்களைக் காட்சிகளாகக் கொட்டி கவிதையாய்ப் படம் எடுத்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க யதார்த்தம். படைப்பாளிகளை அறிமுகப்படுத்தும்பொழுதே தாலாட்டுடன் ஆரம்பிக்கிறது படம். மதுரை நகர் வீதிகளையும் மனிதர்களையும் சிங்கப்பூரிலிருந்து பார்க்கும் பொழுது சில கணங்களில் அதிர்ச்சியும் பல கணங்களில் சந்தோசத்தையும் உணர முடிந்தது.

முகமெல்லாம் அம்மை போட்டதன் தழும்பாய் பார்க்கும் கணத்தில் பயமுறுத்தி கொஞ்சம் நேரம் மென்மை காட்டி பிறகு சுயரூபம் காட்டி 'கேரக்டர்க்கு' உயிரூற்றுகிறார் நாயகியின் அப்பா. உள்ளத்தின் கொடூரத்தை 'ஒரு கையில்' மறைத்து மென்மை பேசி கண்கள் வழி சாதிய அதிகாரத்தின் வாழ்க்கை காட்டுகிறார் அவரது தம்பி நாயகியின் சித்தப்பா. இருவரையும் சரியாக உள்வாங்கிக்கொண்டு 'மெட்டி ஒலி' பார்த்தாலும் அடங்குவதற்கு அடங்கி எப்போதும் புலம்பிக்கொண்டிருக்கும் மாமியார்க் கிழவியை அதட்டி குடும்பத்தை நடத்துகிறார்கள் அவர்களின் மனைவியர். பிராந்திக்கடையைத் தொழிலாகக் கொண்டவர்களின் போக்கு அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.

இக்குடும்பத்திலிருந்து அதுவும் பணபலமும் சாதீய பலமும் நிறைந்த ஒரு குடும்பத்தில் ஒற்றை மகளாய் ஒரு பெண் இருந்தால் அவருடைய செல்வாக்கு பற்றிச் சொல்லவா வேண்டும்? ஐஸ்வர்யா என்று பெயரிட்டு அன்பைக்கொட்டி வளர்க்கிறார்கள். பேத்தி இன்னும் வீட்டுக்கு வரவில்லை என்பதை அவள் அணிந்து வரும் செருப்பைத் தடவிக்கண்டுபிடித்து புலம்பும் கிழவிக்கு நிகரான யதார்த்த மனிதர்களும் காட்சிகளும் ஏராளம். இவர்களின் மீது தாராள அன்பு கொண்டிருந்தாலும் நாயகி பார்த்த கணத்தில் உயிருக்குள் கலந்துகொள்கிறான் அழுக்குச்சட்டையும் கிரீஸ் கலந்த கன்னமுமாய் ஒருபக்கம் சாய்ந்துகொண்டு பைக் ஓட்டும் சாதாரணமாய் தெருக்களில் நாம் பார்க்கும் ஒரு மெக்கானிக் பையன். பரத்துக்கு நமது இருக்கையிலிருந்து எழுந்து வந்து கை கொடுக்கலாம். அவ்வளவு இயல்பான நடிப்பு. நாயகி ஜிகிர்தண்டா கேட்க அவளது அப்பாவோடு வரும் நேரம் வியர்த்து விறுவிறுத்துப்போனவனாய் பின்வாங்குவது மிகவும் எதார்த்தம். நம்மிலும் 'பலபேர் பின்வாங்கியிருப்பார்கள்.'

நாயகி சந்தியாவுக்கு இது முதல் படமாம். கையில் சூடம் கொழுத்திப்போட்டாலும் நம்ப முடியாது. காட்சிகளின் வழி கரைந்து போகிறாள். உருகிப்போகிறாள். நிஜமாய் ஒரு பதின்ம வயதுப்பெண்ணையும் அவளின் விபரீதமறியா 'ஒரே சிந்தனை' கொண்ட காதலால் ஆன வாழ்க்கையையும் கண்முன்னே காணமுடிகிறது. வரும் அத்தனை காட்சிகளிலும் நிஜமாய் வாழ்ந்துவிட்டு அழுகிறாள். காதலின், காதலனின் முடிவைப் பார்த்து அவள் கண்ணீர் விட்டுக் கதறும் தருணங்கள் அவள் பத்தாம் வகுப்பு படிக்கும் பெண்தானா என்பதை யோசிக்க வைக்கிறன.

மூன்றாவது இடத்திலிருப்பவன் கரட்டாண்டியாய் வரும் (கோபால கிருஷ்ணன்?!) மெக்கானிக் செட் எடுபிடி பையன். அச்சு அசலாய் அதே மாதிரிப் பையன்களை நாம் காணமுடிவதால் இவனும் நடிப்பதாகவே தெரியவில்லை. மதுரையில் ஏழாம் வகுப்பு படிக்கிறானாம். மதுரைப்பாஷை அப்படியே ஓடுகிறது.

நாயகனின் அம்மா, ஜோசப்பாக வரும் நண்பன் சுகுமார் (வடிவேலு போன்றிருப்பவர்), அந்த மேன்சனின் இனிமையான வித்தியாசமான சில மனிதர்கள், மற்றும் காட்சிகள் அனைத்தும் கண்ணுக்குள் நிற்கின்றன.

இயக்குனர் பாலாஜி சக்திவேல் மனம் நிறைந்த பாராட்டுகளுக்குரியவர். ஒரு நிஜ வாழ்வினை காட்சி, இசை, எடிட்டிங் என முழுமை கொஞ்சும் அழகான எதார்த்தங்களோடு கொடுத்திருக்கிறார். பதிவுத்திருமணம் செய்துகொள்ள என்ன வேண்டும் என்பது கூடத் தெரியாதவர்களுக்கு அதையும் சினிமா வழி சொல்கிறார். நல்ல விஷயம். வயதுக்கு வந்ததைக் கொண்டாடும் விழாவில் வரும் குடி-சாப்பாடு- ஒன்று கலந்த அன்பு-சண்டை- காட்சிகள், மாலை எடுத்துப்போட வரும் மாமன் போதையில் தடுமாறுவது என அனைத்தும் அக்மார்க் வில்லேஜ் விருமாண்டிச்சமாச்சாரங்கள். அழகாகப் பதிவு செய்திருக்கிறார். சித்தப்பா வில்லன் மென்மையாகப்பேசி காரியம் சாதிக்கும் போதெல்லாம்அவரது நிஜத்தைச் சொல்வது போல வருகிறது பின்னணி இசை. இயக்குனருக்கும் இசையமைப்பாளருக்கும் பாராட்டுகள்.

காட்சிகளும் இசையும் மனதைத் தொடுகின்றன. காட்சிகள் அப்படியே பட்டாம்பூச்சியின் ரசனையான பறத்தலை நம் கண்ணுக்குள்ளும் மனதுக்குள் உள்வாங்கச்செய்கின்றன. ஜோஷ்வா ஸ்ரீதர் இசை. அறிமுகம். பூப்புனித நீராட்டு விழாவில் வரும் பாடலுக்கும் இடையிடையே அப்பாட்டில் வரும் மென்மையான இசைக்கும் 'தொட்டுத்தொட்டு' பாடலுக்கும் நிறையவே பாராட்டலாம். நா. முத்துக்குமார் சில இடங்களில் தனித்துத் தெரிகிறார்.

இயக்குனருக்கு இது இரண்டாவது படமாம். சாமுராய் எடுத்து வாழ்க்கையைத் தொலைத்திருந்தவருக்கு ஷங்கர் கை கொடுத்திருக்கிறார். நிறையவே யோசித்து இந்த படத்திற்கு தயாரிப்பாளராயிருக்கிறார். இயக்குனராய் 'ஐந்து பையன்களை' வைத்து (பாவம் பண்ணியதற்கு) தான் சொல்ல வந்ததை ஒரே ஒரு பையனைக் காட்டி தயாரிப்பாளராகி பாப விமோசனம் தேடிக்கொண்டிருக்கிறார்.

பிளஸ் டூ படிக்கும் பெண்ணாய் சீருடையில் கதாநாயகி வருவது, வளர்ந்து வரும் பெண்குழந்தைகளின் தந்தைகளில் சிலருக்கும் இன்னும் சில நண்பர்களுக்கும் பிடிக்கவில்லை என்பதாய்ச் சொன்னார்கள். சினிமாவில் வரும் யதார்த்தத்திற்கும் நிஜ வாழ்க்கைக்கும் இடையிலான உறவின் சரியான அணுகுமுறை தெரிந்திருக்கவேண்டும் எல்லோருக்கும். சுனாமியும் நிலநடுக்கமும் எடுத்துக்கொண்டு போகும் வாழ்வில் இனிமேலாவது காதலுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் எல்லா சாதிகளும் சனங்களும்.

மேன்சன் பாடலை தவிர்த்துவிட்டு (படம் இடையில் தடுமாறுவது தவிர்க்க) கரட்டாண்டியைப் பயன்படுத்தி இன்னும் கொஞ்சம் நகைச்சுவை பண்ணியிருக்கலாம். ஸ்கோப் இருக்கின்றன கதையில். ஷங்கரும் சந்தோசப்பட்டிருப்பார். செயற்கையாக இருக்கிறது.

சன் டிவியின் விமர்சனத்தில் 'சூப்பரா, நல்லா, ஒருதடவை பாக்கலாம், அட்டகாசமா, கெளப்பிட்டாங்க'ளாய் சொல்லிவிட்டுப்போனவர்களின் கருத்துக்களை வழக்கம்போல நான் கண்டுகொள்ளவில்லை. விமர்சனத்தின் முடிவில் படத்தின் முடிவையும் அவர் சொன்னபோது நிஜமாய் அதிர்ந்தேன். அது தவிர்க்கப்படவேண்டும். எப்போதும் கிளைமேக்ஸ் நோக்கிய எதிர்பார்ப்பு கொஞ்சமாவது இருக்கவேண்டும். வெற்றிக்காக இல்லாவிட்டாலும் முடிவில் படம் ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் தொடர்ந்த ரசனைகளுக்காவது இது கொஞ்சம் அவசியம். மற்றும் 'டாப் டென்'னிலும் இதற்கு இரண்டாவது இடமாம். நம்பமுடியவில்லை.

எப்படியாயினும், உண்மையில்- 'காதல்' ஒரு காவியம்.


Tuesday, January 04, 2005

ஆத்மா சாந்தியடையட்டும்!

எதுவும் நிச்சயமில்லை. நேற்று மாலை 6 மணிக்கு ஆரம்பித்த நேரடி ஒளிபரப்பான "சூப்பர் நண்பர்கள் 2004/05" நிகழ்ச்சிக்கு பொறுப்பேற்ற ஐந்து நடுவர்களில் தலைமையானவராக 'டை'யோடு இருந்தார் அவர். முதல் இரண்டு சுற்றுகள் முடிந்து, இருபதில் பத்து, பத்தில் ஐந்து என ஐந்து ஜோடி நண்பர்கள் கடைசிச் சுற்றுக்காக காத்திருந்தார்கள்.

ஐந்து ஜோடிகளும் ஐந்து நடுவர்களில் எவரையாவது ஒருவரை எடுத்துக்கொள்ளவேண்டும். அந்த நடுவர் கேட்கும் கேள்விக்கு அச்சோடி பதில் சொல்லவேண்டும். இதுதான் கடைசிச் சுற்று.

நான்கு நடுவர்கள் முடிந்துவிட்டார்கள். ஐந்தாவது நடுவரிடம் கேள்வி வந்தது. 'டை' யை இழுத்துவிட்டு, அவர் அக்கேள்வியைக் கேட்டார்.'இந்த சூப்பர் நண்பர்கள் என்பதெல்லாம் வெறும் போலித்தனம் என்று நான் நினைக்கிறேன். இதை இல்லையென்று எப்படி மறுப்பீர்கள்.?' இதுதான் கேள்வி.
"என்னம்மா கேட்டாரு பாருய்யா கேள்வி.! வக்கீல்ன்னா சும்மாவா இருக்கு? மத்தவங்க கேட்டதெல்லாம் கேள்வியா" என்று எனதருகில் இருந்த சக அறைவாசியிடம் சொல்லிக்கொண்டே நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

நிகழ்ச்சி முடிந்து வெற்றிபெற்றவர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் நடுவர்கள் எழுவது வரை பார்த்துக்கொண்டிருந்தேன். பிறகு 'லைவ்' முடிந்ததால் டிவியில் அடுத்த நிகழ்ச்சி தொடங்க இருந்த தருணத்தில் சூப்பர் நண்பர்கள் நிகழ்ச்சிக்கு சென்றிருந்த நண்பரிடமிருந்து அழைப்பு. 'உதுமான் கனி காலமாகிவிட்டார்.'
அவர் கேள்வி கேட்ட தோரணையையும் அந்த மென்மையான புன்முறுவலையும் சற்றுமுன் வரை ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு எப்படி இருந்திருக்கும்?

இதோ கைகளில் தவழ்கிறது சென்றவாரம் தேசிய நூலகத்திலிருந்து நான் எடுத்து வந்த "அ·றிணை உயர்திணை" என்ற அவரது சிறுகதைத் தொகுதி. இருகதைகளையும் முன்னுரையையும் மட்டுமே இதுவரை படித்திருந்தேன். அவர் எழுதிய கதையை படிப்பதற்குள் அவர் கதை முடியுமென்று எப்படி நினைக்கமுடியும் என்னால்?

1957 ஆம் ஆண்டு டிசம்பர் 28, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒப்பிலான் என்ற கிராமத்தில் பிறந்து ஐந்து வயதில் சிங்கை வந்து வழக்குரைஞருக்கு படித்து, லண்டன் சென்றும் படித்து வந்து 'உதுமான் கனி & அசோசியேட்ஸ்' என்று வழக்குரைஞர் பணி செய்து, இனியவன் என்ற பெயரில் சில காலமும் பிறகு 'இளையவன்' என்ற பெயரில் 12 சிறுகதைகளும் எழுதியவர்.

அண்மையில் நடந்த மாலன் மற்றும் வெங்கடேஷ் புத்தக வெளியீட்டு விழாக்களில் மட்டுமே எனக்கு அவர் பரிச்சயமாகியிருந்தாலும் இதோ அந்த மென்மையான யாருக்கும் தீங்கிழைக்காத தன்மை கொண்ட நகையும் எளிமையாக பேசிய வார்த்தைகளும் கண்ணுக்குள்ளேயும் நெஞ்சுக்குள்ளேயும் நின்றுகொண்டிருக்கின்றன.

"தற்போது ஆங்கிலம் பேசித்தான் பிழைக்கிறேன். தினமும் தமிழில் தான் சுவாசிக்கிறேன். ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன நான் முதன்முதலாக சிறுகதை எழுதத்துவங்கி. என்னை எழுதத்தூண்டியவர் இன்று என்னோடு இல்லை. என் எழுத்தில் அம்பலத்தில் ஏற்றிப்பெருமிதம் கொண்டவனும் என்னுடன் இல்லை. இன்றைய நிலைமை இப்படித்தான் இருக்கும் என்று நான் அன்று கற்பனை செய்தது இல்லை. நிஜ வாழ்க்கை கற்பனையை விட அதீதமான திருப்பங்கள் நிறைந்தது என்பதை அனுபவப்பூர்வமாக கற்றிருக்கிறேன். நான் ஒரு தமிழ் வெறியன் அல்ல. தமிழ்ப்பிரியன் என்று அடையாளம் காட்டவே ஆசைப்படுகிறேன்"

அ·றிணைகளும் உயர்திணைகளும் அடங்கிய ஒன்றுக்கு அவரின் முன்னுரை!

கற்பனையை விட, பலமடங்கு கொடுமையான திருப்பங்களும் கொண்டதய்யா வாழ்க்கை! இதோ இன்றும் உணர்ந்துகொண்டேன்!

உங்களின் ஆத்மா சாந்தியடையட்டும். இருவேறு மதங்கள் இணைந்த உமது வாழ்வில் 'இன்று நடப்பன' இருக்கட்டும். உமது ஆத்மா சாந்தியடையட்டும்!
எம்.கே.குமார்.


Sunday, December 26, 2004

ஒரு உயிரும் ஒரு பிளாக்கும்! (A Blog with A Soul!)

கடந்த வாரங்களில் ஒருநாள் சி·பி தளம், சமாச்சார் ஆகியவற்றின் ஆசிரியர் ஆர்.வெங்கடேஷ் சிங்கப்பூருக்கு வந்திருந்தார். இங்கு நடந்தஅவரது 'நேசமுடன்' புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துரையாடலும் இடம்பெற்றிருந்தது. (இதையெல்லாம் பற்றி எழுதியிருக்கிறேன் இதற்கு முந்தைய பதிவில்!) கலந்துரையாடலில் 'இணையம்' வந்து 'பிளாக்குகளில்' கலந்த போது, நான் எழுந்து அக்கேள்வியைக் கேட்டேன். 'ஆளாளுக்கு இப்படிப் பிளாக்குகளைப் பதிவுசெய்துகொண்டு எழுத ஆரம்பித்தால் இந்த பிளாக்குகளால் என்ன தான் பெரிதான நன்மை இருந்துவிடக்கூடும்? பிளாக்கு..பிளாக்குகள் பிளாக்குகளின் கூட்டம் இப்படியாய் இது தொடர்ந்தால் இதன் முடிவு என்னவாய் இருக்கும்? எழுதுகிற எல்லோரும் வருகிற எதிர்வினைகளைக் கண்டு (அடிப்படையான விவாதம்) கொள்ளாமல் இப்படியே எழுதிக்கொண்டு போவதின் முடிவுதான் என்ன?'

ஆர்.வெங்கடேஷ் என்ன பதில் சொன்னார் என்பது இருக்கட்டும். இக்கேள்விக்கு எனக்கு இவ்வளவு சீக்கிரத்தில் கடவுள், மனம் கசியும் படி பதிலைக்காட்டுவார் என்று நான் நினைக்கவேயில்லை. ஒருவரின் அந்தரங்கமான டயிரியை 'மேற்கோளாய்' காட்டி விடைளித்திருக்கிறார் அவர்.

சிங்கப்பூர் சீனப்பெண்மனி அவர். சிங்கப்பூரில் மாஸ்டர்ஸ் முடித்து டச்சுக்காரர் ஒருவரை மணந்து நெதர்லாண்ட்லில் வாசமாகிவிட்டார். இணையத்தில் அவ்வப்போது எழுதி வந்த 32 வயதான அவர், தன்னைப்பற்றி கொஞ்சம் ஏனோ எழுதவேண்டும் என்று தோன்ற, ஒரு 'பிளாக்' ஆரம்பித்து இதோ மொத்தம் 11 பதிவுகள். அதிலும் பத்து மட்டுமே அவருடையது. பதினோராவது பதிவை முடித்துவைக்க அவரால் முடியவில்லை.

மிகவும் அமைதியான முறையில் கடந்த வாரத்தில் மரணமடைந்து விட்டார். பத்தே பதிவுகள்! இன்று உலகம் முழுவதும் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்படுகிறது!
http://dyingis.blogspot.com/

டச்சு நாட்டுப்பிரஜையாகிவிட்ட அவர் தனது வேதனைகள் பற்றி 169 பக்கங்களில் புத்தகம் ஒன்றையும் எழுதி முடித்திருக்கிறார். அது இங்கே! http://www.gracechow.info/

அகால மரணமைடைந்த 'கிரேஸ் சோ' விற்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்!
சக வலைப்பதிவாளன்.

Monday, December 20, 2004

'மாலன்' மற்றும் 'இருவர்' -விழாக்கள்!

மாலன் மற்றும் வெங்கடேஷ் - புத்தக வெளியீட்டு விழாக்கள்.

இடம்: சிங்கப்பூர்.

முதல் நாள்: 13/12/2004 மாலனின் புத்தக வெளீயீடு.

கூட்டம் தொடங்க அரைமணித்துளிகள் இருந்த வேளையில் நான் உள்ளே நுழைந்தேன். எனக்கு சற்று முன்னால் சென்ற ஜெயந்தி சங்கரி அப்போது மாலனிடம் பேசிக்கொண்டிருந்தார். படியை விட்டுக் கீழே இறங்கும்போதே என்னைப் பார்த்துவிட்ட மாலன், இனிய புன்னகையோடு எனக்கு 'பதில் வணக்கம்' சொன்னார். அறிமுகப்படுத்திக்கொண்டேன்.

இளமையாக இருக்கிறார் மனிதர். இனிமையாகப் பேசுகிறார். அழகாக புன்னகைக்கிறார். பாரதியை மூச்சாகக் கொண்ட ஒரு மனிதருக்கு முன்னால் நாம் நிற்பதே ஒரு பெருமைதானே! நேற்றுத்தான் மின்வெளியில் பாரதி மணி மண்டபம் திறந்ததைப் பற்றிச்சொன்னார். இரண்டு நாட்கள் நடந்து முடிந்த இணைய மாநாடு பற்றியும் பேசினார். முக்கியமான ஒரு கேள்வியை அவரிடம் கேட்க வேண்டும் என்றிருந்தேன். என்ன கேள்வி என்பது தெரிந்தால் நீங்களும் கூட ஆர்வமாகிவிடுவீர்கள். அதற்குள் சாப்பாட்டு அயிட்டங்கள் (உளுந்துவடை, லட்டு, பெயர் தெரியாத கார அயிட்டம் ஒன்று, உப்புமா, சட்னி, கா·பி, டீ. இதுதான் மெனு. மு. மேத்தா வந்திருந்த பொழுது 'கேசரியும்' வைத்திருந்தார்கள். இப்போது இல்லை. தனிப்பட்ட முறையில் எனக்கு இதில் வருத்தம்!) மெதுவாக வர ஆரம்பித்திருக்க முதலில் வயிற்றுக்குணவு என்று அதனை நோக்கி நடந்தோம்.

சிங்கப்பூர் தமிழ்ச்சூழலின் அனைத்து பெரிய தலைகளும் தவறாமல் ஆஜராயிருந்தார்கள். மூத்த பத்திரிகை ஆசிரியரும் சிங்கப்பூர் தமிழ்ச்சூழலின் முக்கிய கர்த்தாக்களில் ஒருவரும் இந்தமாத 'காலச்சுவடி'ல் கவர் ஸ்டோரியாய் சிங்கப்பூரின் தமிழ் சார்ந்த சூழல் பற்றி பேட்டி காணப்பட்டிருப்பவருமான திரு.வை. திருநாவுக்கரசு அவர்கள், 'உத்தமம்' அமைப்பின் தலைவரும் இணைய மாநாட்டைத் தலைமையேற்று நடத்தியவருமான திரு. அருண் மகிழ்நன் (எவ்வளவு அருமையான பெயர்! இவரைப்பற்றி எப்போதாவது ஒரு தனிக்கட்டுரை வரைவேன் என்று தோன்றுகிறது!), 'ஒலி 96.8'ன் தலைவர் திரு. அழகிய பாண்டியன், தேசிய நூலகச் சேவைகளுக்கான தலைமைப்பொறுப்பு பொறுப்பு வகிக்கும் திருமதி. புஷ்பலதா, எழுத்தாளரும் வழக்கறிஞருமான திரு.உதுமான் கனி, எழுத்தாளரும் கலைஞர் எம்ஜிஆரின் முன்னிலையில் சீர்திருத்தத் திருமணம் செய்துகொண்டவரும் பாலச்சந்தரிடம் உதவியாளராய் இருந்தவரும் தற்போதைய தொழிலதிபருமாகிய மா.அன்பழகன், 'முரசு அஞ்சல்' நிறுவனர் முத்து நெடுமாறன் அவர்கள், தேசியப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியரான திரு. திண்ணப்பன், சிறந்த உள்ளூர் கவிஞரான திரு.க.து.மு இக்பால், கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ மற்றும் இன்னபிற எல்லா முக்கியத்தமிழர்களும் இலக்கிய ஆர்வலர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

"கங்கைக்கரைத் தோட்டம் ...கூட்டம்... கண்ணன் நடுவினிலே.." என்ற பாடல்தான் நினைவுக்கு வந்தது ஆர். வெங்கடேஷ் அவர்களைப் பார்த்தபோது. பிரபல இணைய மகளிரணி கூட்டம் கொஞ்ச நேரத்திற்கு அவரை மொய்த்திருந்தது. பத்ரி தன் மனைவியோடும் மகளோடும் ஆடைக்குறைப்போடும் வந்திருந்தார். எம்.கே.குமார் என்று அறிமுகப்படுத்திக்கொண்டவுடன் ஏனோ கொஞ்சம் பின் வாங்கியது போலிருந்தது. என்ன காரணமோ தெரியவில்லை.

ஒருவழியாக வெங்கடேஷ் அவ்வளையத்தை விட்டு வெளியே வந்தார். அறிமுகப்படுத்திக்கொண்டேன். ஈழநாதனும் சேர்ந்துகொண்டார். பேச்சு அவரது வலைக்குறிப்பு பக்கமாய்த் திரும்பியது. கமலைப் பற்றிய அவரது ஒரு பதிவுக்கு வந்திருந்த பின்னூட்டங்கள் பற்றிப்பேசினோம். பிறகு பத்ரியும் இணைந்துகொண்டார். இந்தியாவிலிருந்து புத்தகங்கள் தருவிப்பது பற்றி பேச்சு நிலவியது. முடிவாக எல்லோரும் அரங்கத்திற்குள் நுழைய ஆரம்பிக்க, அப்போதுதான் பார்த்தேன். ஜெயந்தி சங்கரியும் ரம்யா நாகேஸ்வரனும் வியாபாரத்தில் வெற்றிக்கொடி நாட்டிக்கொண்டிருந்தார்கள். 'சொல்லாத சொல்லும் சிறுகதைத் தொகுப்புகளும்' குறைந்த விலைக்கு விற்கப்பட்டன.

கூட்டம் ஆரம்பித்தது. கவிஞர் நெப்போலியன் (நானும் எனது கருப்புக்குதிரையும் கவிதைத் தொகுதியின் ஆசிரியர்.) நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். திருமதி புஷ்பலதா, திருவாளர்கள்.அருண் மகிழ்நன், அழகிய பாண்டியன், உதுமான் கனி, திண்ணப்பன், க.து.மு.இக்பால், ஆர்.வெங்கடேஷ் மற்றும் ஜெர்மனியிலிருந்து வந்திருந்த சுபாஷினி கனகசுந்தரம் ஆகியோர் 'வாழ்த்தியும் வாழ்த்தியும் வாழ்த்தியும்' (தட்டுறான், தட்டுறான், தட்டிக்கிட்டே இருக்குறான்னு எழுத்தாளர் பைரவன் சொல்றது மாதிரி படிச்சுக்குங்க!) பேசினார்கள். மாலனே அவ்வப்போது கொஞ்சம் வெட்கத்தில் குறுகிக்கொண்டிருந்தார். 'இரண்டாம் பாரதிதாசனே' என்றழைத்தார் திரு.இக்பால்.!

மரத்தடி நண்பர்கள் பலரையும் பார்க்கும் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஈழநாதன், அருள்குமரன், ஜெயந்தி, ரம்யா, மூர்த்தி (வேலைப்பணி காரணமாக தாமதமாக வந்து என்னுடன் சீக்கிரமாக கிளம்பி விட்டார்) , பத்ரி, நம்பி, (நிறைய பேச வேண்டும் என நினத்திருந்தேன். எழுந்து கிளம்பும்போதுதான் கவனித்தேன்.) வலைப்பூ நண்பர் அன்பு எல்லோரிடமும் பேச வாய்ப்புக் கிடைத்தது. கூட்டத்தை திறம்பட முன்னின்று நடத்திக்கொண்டிருந்த திருமதி. ரமா சங்கரன் அவர்களுக்கு என்னிடம் பேச நேரமில்லை. என்னையும் தெரியவில்லை.

எல்லாவற்றிற்கும் அடிப்படையான 'நேரம்' சீக்கிரம் நழுவிக்கொண்டிருக்க, மாலனின் ஏற்புரை தாமதமாகவே, நான் இரவுப்பணி செல்ல வேண்டி இருந்ததால் 2035க்கு கிளம்பி விட்டேன். மாலனின் உரையை நான் இழப்பது ஒரு பக்கம் வேதனையாய் இருந்தாலும் அந்நேரத்தில் கிளம்பியுமே கடைசியில் டாக்ஸி பிடிக்க வேண்டி வந்துவிட்டது. இவையெல்லாம் போக அவரிடம் நான் கேட்கவேண்டிய கேள்வியையும் கேட்க முடியவில்லையே என்ற வருத்தம் வேறு மண்டைக்குள் குடைந்துகொண்டேயிருந்தது.

அதனால் என்ன? இப்போது கேட்டு விடுகிறேன், கேள்வி இதுதான். 'விருமாண்டிக்கு தூக்கு தண்டனை ரத்தாகி விட்டதா சார்?'

இதுபோன்ற ஒவ்வொரு கூட்டத்தில் நான் கலந்துகொள்ளும் போதும் ஏதோ ஒரு வெற்றிடம் எங்கோ நிரப்பப்படுவது போலத்தான் இருக்கிறது. அது வயிறாகக் கூட இருக்கலாம்.!

*******************
ஆர்.வெங்கடேஷ் அவர்களின் புத்தக வெளியீடு.

நாள்:14/12/2004

நானும் நண்பர் மானஸசென்னும் அம்மோக்கியோ நூலக அரங்கத்திற்குள் நுழைந்த நேரம் ஏறக்குறைய சிற்றுண்டி அயிட்டங்கள் தீர்ந்திருந்தன. இம்மாதிரிக் கூட்டங்களுக்கு இதுக்காகவேணும் இனிமேல் முதலிலேயே செல்லவேண்டும் என்பதை உணர்ந்துகொண்டு கண்ணில் தெரிந்த எல்லா நண்பர்களையும் நலம் விசாரித்துக்கொண்டிருந்தேன். நேற்று மாலன் புத்தக வெளியீட்டு விழாவில் என்னைப்பார்த்திருந்த 'இன்றைய விழா நாயகர்' ஆர். வெங்கடேஷ், 'வாங்க குமார்' என்று பெயரைச் சொல்லி அழைத்தார். சிங்கப்பூரின் சில பெரிய தலைகளும் பெரிய கவிஞர்களுமாய் களை கட்டியிருந்த கூட்டம் 'நேசமுடன்' புத்தகம் வாங்குதலிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தது.

வழக்கம் போல புத்தக விற்பனைப் பிரிவை மகளிர் அணி கைப்பற்றிக்கொண்டது. ஜெயந்தி சங்கரியும் ரம்யா நாகேஸ்வரனும் காரியத்தில் கண்ணாயிருந்தார்கள்; காசாயிருந்தார்கள்.

கூட்டம் ஆரம்பிக்க, மேடையில் இருந்தவர்கள் திருவாளர்கள் முத்து நெடுமாறன், உதுமான் கனி மற்றும் சிங்கப்பூர் வசந்தம் சென்ட்ரல் தொலைக்காட்சி தலைவர் முகமது அலி ஆகியோர். புத்தகத்தை முத்து நெடுமாறன் வெளியிட முகமது அலி பெற்றுக்கொண்டார். வரவேற்புரையை உதுமான் கனி ஆற்ற, அவர் தனக்கு இதற்கு இருக்கும் தகுதி என்ன என்பதை மீண்டும் இரண்டாம் முறையாகச் சொன்னார். அமரர் நா.கோவிந்தசாமி அவர்களுக்கு இவர் நன்றி சொல்லியாகவேண்டுமாம்.

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய பிச்சினிக்காடு இளங்கோ அவர்கள் (கவிஞர், இரவின் நரை கவிதை நூலுக்குச் சொந்தக்காரர். பட்டுக்கோட்டைக்காரர்) கவிதை எழுதுவது சுலபம் கட்டுரை எழுதுவதுதான் கடினம் என்றார். அப்படித்தானா என்பதை ஆர்.வெங்கடேஷ் சொலியிருக்கலாம். அவரே முதலில் கவிஞர் அல்லவா?. பிறகுதானே இதெல்லாம்.

வாழ்த்தியவர்களின் பேச்சுகளுக்குப் பிறகு நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக அமைந்த கலந்துரையாடல் நடைபெற்றது. அண்மையில் 'திசைகள்' பேட்டியில் அவர் சொல்லியிருந்ததை மீண்டும் 'ஒலி அன் ஒளி' பரப்பினார் வெங்கடேஷ். தான் மிகவும் சந்தோசமாகவும் மனத்திருப்தியோடும் இருப்பதாக சொன்னார் ஒரு கேள்விக்கான பதிலாக. (உண்மையிலேயே நல்ல உற்சாகத்தோடுதான் இருந்தார்.) 'பாரா' (பா.ராகவன்) வின் படைப்பு வேகத்தை மெச்சினார். வலைப்பூக்களின் எதிர்காலம் குறித்தான போக்கு எப்படியாகவும் அமையலாம் என்றார். இலக்கியப்படைப்புகள் எதுவும் இணையத்தில் இல்லை என்றே இவரும் சொன்னார். (எழுத்தாளர் பா. ராகவன் அவர்களும் இதையே ஒரு பேட்டியில் சொல்லியிருந்ததை நினைவு கூறவும்!) இணையத்தில் வரும் மறுமொழிகளுக்கு எப்போதும் தான் முக்கியத்துவம் தருவதில்லை என்றும் தனது கட்டுரை கருத்து சார்ந்து அது இருக்கும் வரை அதுவே தனக்கு மகிழ்ச்சி தருவதாகவும் சொன்னார். கார்ஸியா மார்குவேஸ் பற்றியும் (ஒரு) கருத்து சொன்னார். எனக்கு கார்ஸியாவையும் கார்ஸியாவுக்கு என்னையும் தெரியாததால் நான் இதில் தலையிடவில்லை.

பெரிய தலைகள் போக, மரத்தடி நண்பர்கள் பலரும் வந்திருந்தனர். நம்பி வரவில்லை, மூர்த்தி வந்ததை நான் கவனிக்க வில்லை.
அருள்குமரன் தனது குடும்பத்தோடு வந்திருந்தார். 'தமிழ் இனியனு'க்கு மேடைப்பேச்சில் அவ்வளவு ஆர்வமில்லை போலும். தயங்காமல் தடங்கலை ஏற்படுத்தினார். (தமிழ் இனியன் அருள்குமரனின் அப்பாவுக்கு பேரன்.)

நிகழ்ச்சி முடிந்தபின் ஆர்.வெங்கடேஷ், காலச்சுவடு சிபிச்செல்வன், ரமா சங்கரன், புஷ்பலதா, ஜெயந்தி சங்கர், ரம்யா நாகேஸ்வரன், மானஸஜென், ஈழநாதன், பனசை நடராஜன் (மரத்தடியில் 'நட்டு') ஆகியோர் பேசிக்கொண்டிருந்தோம். நூலகம் மூடும் நேரம் முடிந்தும் உள்ளே இலக்கியம் பேசிக்கொண்டிருந்த எங்களை நூலகப்பெண் பரிதாபத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார். பாவம் அவருக்கு என்ன அவசரமோ?

சிபிச்செல்வன் கொடுத்த காலச்சுவடு காலண்டர், ஜே.கிருஷ்ணமூர்த்தி, மறைந்த எம்.எஸ் அம்மா, அபுல்கலாம் ஆசாத், ஈ.வெ.ரா, சி.வி.தாமோதரம் பிள்ளை, குமரப்பா, காந்தி, அம்பேத்கர், என்.எஸ்.கே போன்ற மிக அழகானவர்களின் அழகான ஓவியங்களோடு இருந்தது. கிடைத்தால் விடாதீர்கள்!
நன்றி வணக்கம்.
எம்.கே.


Friday, December 10, 2004

'இஸ்லாம்- ஒரு எளிய அறிமுகம்' -- எனது பார்வை!

எம்.கே.

"எனது பால்ய காலத்து நெருங்கிய நண்பன் ஒரு இஸ்லாமியன். எனது பக்கத்துவீட்டுக்காரர் கூட முஸ்லீம் நண்பர்தான். இன்றும் கூட எனக்கு நான்கைந்து இஸ்லாமிய நண்பர்கள் இருக்கிறார்கள். எனது அலுவலகத்தில் எனக்கு நெருக்கமானவர்கள் முஸ்லீம் அன்பர்கள் தான். நான் வளர்ந்த எனது பெரியம்மாவின் வீட்டருகில் சர்க்கரைவள்ளிக்கிழங்கு விற்று பிழைப்பை நடத்தினாலும் எனக்கும் ரெண்டு இனாமாய்த் தரும் கிழவியைக் கூட நாங்கள் துலுக்கர் வீட்டு 'அம்மா' என்றுதான் அழைப்போம். அவ்வளவு ஏன் இன்றும் இணையத்தில் ஐந்து இஸ்லாமிய நண்பர்கள் எனக்கு இருக்கிறார்கள்!" இப்படியெல்லாம் சொல்லிவிட்டுத்தான் 'இஸ்லாம் - ஒரு எளிய அறிமுகம்' புத்தகத்துக்கான எனது பார்வையை இங்கு நான் எழுதவேண்டுமென்றால் மன்னித்துக்கொள்ளுங்கள் சகோதரரே, நீங்கள் இஸ்லாம் சொல்லும் 'நிஜத்தின்' படி முழுமையாக வாழவில்லை என்றுதான் என்னால் சொல்ல இயலும். ஏனெனில் இதுவரை நானும் ஓரளவிற்காவது இறைவனின் சொல்படிதான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பது இப்போது எனக்குத்தெரிகிறது. இறைவனுக்கு நன்றி.

'அட! யானை ரொம்பப் பெரியது என்றார்கள், வால் சின்னதாக இருக்கிறதே?!', 'என்னப்பா இது.. யானைக்காது இப்படியா இருக்கும்?' 'இதெல்லாம் பொய், இவ்ளோ பெரிய யானை இத்தனூண்டு வாழைப்பழத்தையா சாப்பிடும்?' 'யானையால் வேகமாக ஓட முடியாதா? அதற்கெதுக்கு இவ்வளோ பெரிய கால்?' 'யானை வரும் முன் மணிச்சத்தம் வருமென்றார்கள், அப்படி எதுவும் கேட்கவில்லை?!' 'ஓஹோ..நாலு காலும் ஒரு தும்பிக்கையும் இருக்கிறது. இதுதான் யானை போல!' 'இல்லை இல்லை நாலு கால்கள் எல்லாவற்றிற்கும் தான் இருக்கிறது, தந்தம் இருந்தால் தான் அது யானை!' இப்படியாய் குருடர்கள் யானையைப் பற்றித் தடவிப் பார்த்து பேசிக்கொண்டிப்பது போலத்தான் மதிப்பிற்குரிய பெருமானார் அருளிய இஸ்லாம் பற்றி நாம் எல்லோரும் பேசிக்கொண்டிருப்பதும்.

கடற்கரையில் தான் நிற்கிறேன். இங்கிருந்து கடலின் ஆழம் சொல்வது அபத்தமாயினும் கடலுக்குள் கொஞ்சமேனும் பயணம் செய்துவிட்டு வந்தவர்களின் அனுபவ வழி அதன் பிரமிப்போடு காலடி நனைக்கிறேன். கடலுக்குள் போய் வந்தார்கள் சரி. நிஜமான ஆழம் தெரியுமா அவர்களுக்கு என்ற சந்தேகமும் கொஞ்சம் எட்டிப்பார்த்து போனாலும் அதை அப்படியே விட்டு விட்டும் நாம் கடலின் ஆழத்தைப் பற்றிப்பேசிக்கொண்டிருக்க முடியாது. எல்லாம் நம்பிக்கையின் அடிப்படையில் தான் என்ற ஒரு வாக்கியத்தோடு எதையும் முடித்து விடலாம். தாயின் கற்பிலிருந்து இறந்த பின் வரும் வாழ்க்கை வரை! ஆனால் நம்பிக்கைக்கும் ஒரு காலவெளி இடவெளி இருக்கிறதல்லவா?

ஏறக்குறைய முன்னுரையிலேயே தனது புத்தகத்தின் தலைப்பை முடித்து விட்டார் திரு.ரூமி அவர்கள். அதற்குப்பின் வருபவன யாவும் என்னைப் பொருத்த வரை புத்தகத்தலைப்புக்குச் சம்பந்தம் இல்லாதவைகளாகும். நபி(ஸல்) கண்ட இஸ்லாம் இன்று வாழ்கிறதா? என்று புதுத்த¨லைப்பை வைத்து விவாதிக்கலாம்.

'இதோ..பாருங்கள், வால்! இதுதான் முதலை! இதை வைத்துக்கொண்டு எப்படி இது ஆளை விழுங்கும்?' என்று ஆச்சரியத்துடனான கேள்வியோடு ஆரம்பிக்கும் ரூமி அவர்கள் மெல்ல உடலுக்கு வந்து 'பாவம் கரடுமுரடாய் இருக்கிறது இதைப்போய் இப்படிப்பேசுகிறார்களே!' என்று இரக்கப்படுகிறார். பிறகு அகலமான வாய்ப்பகுதிக்கு வந்தவுடன், 'பாருங்கள், மனிதர்களை விழுங்கவா இது? ஏதாவது சாப்பிட வேண்டுமல்லவா அதற்குத்தான் இந்த வாய்..பாவம் இதுவும் உயிர் வாழ வேண்டுமல்லவா?' என்ற இயற்கையின் அபிமானியாய் முதலையின் படைப்பிலக்கணம் பேசுகிறார்.

மேலே சொன்ன உதாரணம் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் தீவிரவாதம் பற்றியது. ரூமி அவர்களே ஓரிடத்தில் சொல்லியிருக்கும்படி 'இஸ்லாத்தில் தீவிரவாதம் என்பதே இல்லை. நபி (ஸல்) அவர்களின் வாழ்வும் வாக்கும் அடங்கிய ஹதீதுகள் அதைத்தான் சொல்கின்றன' என்று சொல்லிவிட்டுப் பிறகு அதற்கான எதிர்முனைப்புக்கான காரணத்தை ஏதாவது ஒரு பத்திரிகையின் எட்டாம்பத்தி மூலைச் செய்தியை எடுத்துக்கொண்டு வலு சேர்க்கும் வித்தை படைப்பது நியாயமான உணர்வுடையதாய் இல்லை. தன்னைக்கொல்ல தன் எதிரே வாளோடு நிற்பவனையே நேசித்து மனிதராக்கிய மதிப்பிற்குரிய பெருமானார் எங்கே? இவர்கள் எங்கே? யாராயினும் சரி தான் வாழ்ந்து வரும் நம்பிக்கைகளில் சப்பைக்கட்டு கட்டுவது இம்மைக்கு வேண்டுமானால் விளைச்சல் தருவதாய் அமையும். மறுமைக்கு? 'நீங்கள் வரம்பு கடந்து விடவேண்டாம், ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறியவர்களை நேசிப்பதில்லை' (சூரா பகரா. 02:190) என்று சொல்லும் பெருமானாரா இத்தகைய வன்முறைகளுக்கும் வானுயர கோபுரங்களுக்கு விமான முத்தம் கொடுக்கும் செயலுக்கும் துணை நிற்கப்போகிறார்? இதை ஏன் ரூபி அவர்கள் அடிக்கடி தலையைச் சுற்றி வந்து முக்கைத் தொடப்பார்க்கிறார் என்று தெரியவில்லை.

திருமறை அருளப்பட்ட ஒன்று. மிக நேர்த்தியான கட்டமைப்போடு 23 வருடங்களாய்த் தொகுத்த ஒன்றுதான் திருமறையாம். வானவர் ஜிப்ரயீல் ஹீராகுகையில் தனிமையில் இருந்த நபி (ஸல்) அவர்களிடம் வந்து 'வஹி' (இந்து மதத்தில் ஞானதீட்சை) மூலம் ஆரம்ப ஐந்து வசனங்கள் அவருக்குச் சொல்லியதும் பிறகு அவ்வப்பொழுது அவருக்குச் சொல்லப்பட்டதையெல்லாம் அவரது நண்பர்கள் மனதிலும் கையில் இருந்த பொருட்களனைத்திலுமாக எழுதிக்கொண்டனர் என்றும் கூறப்படுகிறது. பிறகு வந்த நபி(ஸல்) அவர்களின் தோழர்களும் மனைவிமாரும் அவைகளை திறம்படத் தொகுத்திருக்கின்றனர்.

சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்கிற மனநிலைதான் தூய்மையான மனநிலை என்றும் அதையே இறைவன் விரும்புகிறார் என்றும் ஒரு திடமான 'விமர்சன-சுய சிந்தனையின்' ஏற்பு கொள்ளாத வெளிகளால் சூழப்பட்ட தளத்திலே இயங்குவதை நாம் உணர்ந்துகொள்ள முடிகிறது. ஜிகாத் என்கிற அருமையான ஒரு வார்த்தையும் பொருளும் இப்படித்தான் மாற்றுரு கொண்டு விட்டது போலும். ஜிகாத் என்ற வார்த்தைக்கு 'அமைதியான மனப்போராட்டம்' என்பதுதான் திருமறை சொல்லும் பொருளாம்! தனக்குத்தானே தீமைக்கெதிராய் ஒருவர் கொள்ளும் மனப்போராட்டம் என்பது இன்று எப்படி ஆகியிருக்கிறது பாருங்கள். இந்த மாற்றுருவுக்கு ரூமி அவர்கள் கொடுக்கும் வாதங்கள் பாசாங்குத்தன்மை கொண்டிருக்கின்றன.

சமயம் என்ற வார்த்தைக்கு பொருள் தரும் அர்த்தம் எதுவும் இல்லை எனச் சொல்லும் ருமி அவர்கள் மார்க்கம் என்கிறார். சமயம் என்பது சமைதல் என்ற வார்த்தையிலிருந்து வந்திருக்க வேண்டும். தகுதிப்படுத்துதல், வழிப்படுத்துதல், ஏற்றதாக்குதல் என்பதெல்லாம் இதற்கு சரிவராது என்று எப்படித்தோன்றியது? மனிதனை நெறிப்படுத்துவதற்காகத்தானே மதங்களும் இறையச்ச உணர்வுகளும் தோன்றின. '(இவ்வுலகில்) நேர்மையும் இறையச்சமும் கொண்டவர்களுக்கே அவ்வுலகம்' என்றுதானே திருமறையும் சொல்கிறது.

எந்த மதத்தோடும் ஒப்பிட்டு இஸ்லாமிற்கு பெருமையும் தகுதியும் மேன்மையும் தர வேண்டிய அவசியம் இல்லை என்னும் திரு.ருமி அவர்கள், பிறகு ஏன் அடிக்கடி சிலைகளை வைத்து வணங்குபவர்களையும் சிலுவைகளை வைத்துக்கொண்டிருப்பவர்களையும் இன்னபிற யூதர்களையும் விவாதக்களத்திற்கு கொண்டு வந்திருக்கிறார் என்று தெரியவில்லை. வாளால் இஸ்லாம் வாழவில்லை, பரப்பப்படவில்லை என்பதைச்சொல்ல படாதபாடு பட்ட போதும் அதைச் சொல்வதற்கு போர்களையும் ஔரங்கசீப், திப்பு சுல்தான்களையும் சார்ந்து வருகிறார். கஜினி, கோரி முகமதுகள் திறமையாக மறைக்கப்பட்டிருக்கிறார்கள். பாபரையும் காணவில்லை. மூன்று சகோதரர்க¨யும் தந்தையையும் காவலில் வைத்த ஔரங்கசீப் நல்லவராகிவிட்டார். வரலாற்றாசிரியர்கள் கெட்டவர்களாகவும் வினோதமானவர்களாகவும் ஆக்கப்பட்டிருக்கின்றனர். (இவை எல்லாம் வாளால் வெல்லவில்லை என்பதைச் சொல்லவும் சமய சகிப்புத்தன்மைக்கும் இஸ்லாம் பரவ வழிவகுத்தவர்களுக்காகவும் சொல்லப்பட்டிருக்கின்றன. வேண்டியவர்கள் வேண்டிய உதாரணங்களுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.)

இஸ்லாம் பரவிய விதத்திற்கு ஏ.ஆர். ரகுமானும் காந்தியின் மகனும் கூட விளம்பரமாக வருகிறார்கள். இவைகளெல்லாம் தான் சொல்ல வந்த கருத்திற்கு எவ்வகையில் அவசியமாய் இருக்கிறது என்று ரூமி அவர்கள் சொல்லலாம். ஏனெனில் 1400 ஆண்டுகளாக வாழும், இன்னும் அசுரவேகத்தில் மனித இதயத்தில் குடிகொள்ளும் இஸ்லாத்திற்கு இவர்களெல்லாம் எவ்வகையில் உதாரண புருஷர்கள்? இவர்களையெல்லாம் காட்டி ரூமி அவர்கள் என்ன சொல்ல வருகிறார்? இவர்களையெல்லாம் (தனிமனிதர்களையெல்லாம்) வைத்தா இஸ்லாம் புனிதமானது என்று சொல்லவேண்டும்?

சமுதாய ஏற்றத்தாழ்வுகள் இஸ்லாம் சமுதாயத்தில் இல்லை என்பதை இஸ்லாத்தின் பரவுதலுக்கும் உலக மக்களுக்கு மிகவும் ஏற்றத்தக்கதாய் சொல்வதற்கும் அச்சாணியாய் பயன்படுத்திக்கொண்டிருக்கும் ஆசிரியர் ஈராக்கிலும் பாகிஸ்தானிலும் நடக்கும் சன்னி, ஷியா கலவரங்களுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்?

இறைத்தூதராகிய நபி(ஸல்)களின் தவறுகளைக்கூட வான்தூதராகிய ஜிப்ரயீல் (வான்தூதர்) கண்டித்திருக்கிறார். (அக்கண்டிப்புகளைக் கூட நபி(ஸல்) அவர்கள் திருமறையில் தொகுத்திருக்கிறார் இது மிகவும் நல்ல விஷயம்.) இதிலிருந்து தவறு செய்பவர் எவராயினும் தண்டனைக்கு உரியவரே என்னும் இறைவனின் போக்கும் உணர்த்துதலும் எல்லோரும் உணர்ந்துகொள்ளவேண்டிய இன்னொரு உண்மை.

நவீன விஞ்ஞானம் கண்டுபிடித்த சில அறிய செய்திகளை திருமறையில் அன்றே இறைவன் சொல்லியிருக்கிறான் என்பதாய்ச் சில விஷயங்களைச் சொல்லியிருக்கிறார் ரூமி அவர்கள். குழந்தை பிறப்பு பற்றி (துளி நீரால் படைத்தோம்.), வானம் பூமி அதனதன் பாதையில் சுழல்வது பற்றி [அவனே இரவையும் பகலையும் (உண்டாக்கினான்.) சூரியனையும் சந்திரனையும் சிருஷ்டித்தான். இவை வானத்தில் (தங்களுடைய வட்டவரையறைக்குள்) நீந்திச்செல்கின்றன. (சூரா அல் அன்பியா 21: 33)], நிழல்கள் தோன்றுவது பற்றி [(நபியே) உம் இறைவன் நிழலை எவ்வாறு (குறைக்கவும்) கூட்டவும் செய்கிறான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அவன் நாடியிருந்தால் அதனை நிலை பெறச்செய்திருக்க முடியும். சூரியனை நிழலுக்கு முன்னோடியாக நாம் தான் ஆக்கினோம். (சூரா ·புர்கான் 25:45)] இப்படியாக விஞ்ஞானத்தை சுமார் 1425 ஆண்டுகளுக்கு முன் உரைத்திருப்பதாக ரூமி அவர்கள் எடுத்துக்காட்டியிருக்கிறார்.

இத்தகைய இறை வசனங்கள் மேன்மையானதுதான். ஆனால் அவற்றை இருவிதமாக நாம் பார்க்க வேண்டும். ஒன்று அவை அருளப்பட்ட காலத்திற்கு முன்பாகவே எகிப்து நாகரிங்களிலும் சிந்து சமவெளி நாகரிங்களிலும் மக்கள் இவை எல்லாம் உணர்ந்து தெளிந்து வாழ்ந்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் எப்போது எத்தனை மணிக்கு சூரிய ஒளி இக்குகையில் விழும் என்பதைக்கூட உணர்ந்து கோபுரங்களையும் பிரபிடுகளையும் கட்டியிருக்கிறார்கள். கி.மு வில் வாழ்ந்த திருவள்ளுவர் கூட மிகத்தெளிவான சில கருத்துக்களைக் கூறியிருக்கிறார். அதேபோல சித்தர்களும் (பிற) ஞானிகளும் கூட குழந்தை பிறப்பையும் உலக இம்மை மறுமை வாழ்க்கையையும் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். எனவே இவைகளில் பிரமிப்பு உண்டாக்கும் வகையில் எதுவும் இருக்கிறதா எனவும் ரூமி அவர்கள் சொல்லலாம். இரண்டாவது, திருமறையின் இக்கருத்துகளில் ஒருவித மேலோட்டத்தன்மையே நிறைய காணக்கிடைக்கிறது. இரு பொருள்களில் அர்த்தம் தரும் வகையில் (பகவத் கீதையிலும் பைபிளிலும் இது போல நிறைய இருக்கின்றன.) இங்கு அதிகம் காணப்படுவதால் இறைவன் எல்லாவற்றுக்கும் பொருந்தும்படியாகவே இக்கருத்துகளை அளித்திருக்கிறான் என்றும் ஏற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.
'நம்பிக்கை' என்ற ஒற்றை வார்த்தைக்குள் இவ்வுலகின் எல்லா விவாதத்திற்குறிய விஷயங்களையும் அடைத்து அமைதியாய் இருந்துவிடலாம். ஆனால் விளக்கம் எதுவும் அறியாது தவறான வழியில் போய்க்கொண்டிருப்பவர்களை அவை சம்பந்தப்பட்ட தெளிவான விவாதங்கள் மீட்டுக்கொண்டு வரும் அல்லவா? அதுதானே எத்தகைய நேர்மையான வாழ்வியலுக்கான உறுதியான நிலைப்பாடும்.?! நேர்மையாக விவாதிப்பதால் அத்தகைய அர்த்தமுள்ள விவாதங்கள் எதுவும் யாரையும் எப்போதும் நம்பிக்கை இழக்க வைப்பதில்லை என்பதை எல்லோரும் உணர்ந்துகொள்ளவேண்டும். அத்தகைய 'மாற்றுக்கருத்துகளற்ற நம்பிக்கை' என்னும் வட்டத்தின் வெளி வந்து நின்று கொண்டு வட்டத்தின் செயல்பாடுகளையும் கோட்பாடுகளையும் பேசப்போகிறோம். நல்லதுதானே இது? ஆனால் நண்பர்களில் சிலர் (ஏன் இந்து மதத்தில் கூட அண்மையில் கைது செய்யப்பட்ட துறவி ஒருவரின் பிரச்சனையில் ஒருசிலர் அத்தகைய ஒரு வட்ட நிலைப்பாட்டைக் தமது நிலையாகக் கொண்டிருந்தனர்! இதுவும் தவறுதான்!) அது பற்றிப் பேசினாலே இறைத்தூதர்கள் சொல்லும் வழியை விட்டு கோபத்தின் வழி வெகு தூரம் போய்விடுகிறார்கள். அதுவே சரியானதாயும் சிலர் எண்ணுகிறார்கள்.

எவ்வாறு இந்து மதத்தில் சிலர் அதன் அடிப்படையான விஷயங்களை மறந்து அடிப்படையின் வெளி நிலைகளில் நேசம் கொண்டு அதையே முதன்மையானதாய் ஆக்கிக்கொண்டாடுகிறார்களோ அதே நிலை இன்றைய உலகின் எல்லா மதங்களிலும் ஆட்டுவித்துக்கொண்டிருக்கிறது என்பதை ரூமி அவர்களின் எழுத்து, நாமும் ஆங்காங்கு உணர்ந்து கொள்ள ஏதுவாகிறது. நபி(ஸல்) அவர்கள் சொன்னதின் அடிப்படையான கருத்துகள் தடம் மாறி விட்டனவோ என்பதும் இப்புத்தகத்தைப் படித்தபின் எனக்குத்தோன்றிய இன்னொரு கிளை எண்ணம்.

இறைவனுக்கு நன்றி.

எம்.கே.குமார்.

நன்றி:
திரு. நாகூர் ரூமி அவர்கள் ஆசிரியர், "இஸ்லாம் ஒரு எளிய அறிமுகம்"


கிழக்குப் பதிப்பகம், மைலாப்பூர். சென்னை.



Search This Blog