Monday, August 22, 2005

ஜனநாயகமும் 'சன் டிவி' குழுமமும்!

ஒலி, ஒளிபரப்பு, அச்சு மற்றும் அரசியல் என அனைத்து துறைகளிலும் சன் டிவி குழுமத்தின் அதிகாரப்போக்கை இந்திய அச்சுப்பதிப்பு உலகில் முதன் முறையாக கொஞ்சம் காட்டமாகவே கண்டித்துள்ளது காலச்சுவடு. இந்தமாத காலச்சுவடின் தலையங்கப் (பக்கத்திற்கு பக்கத்துப்) பக்கத்தில் 'சூரியன் விழுங்கும் நாடு' என்று தலைப்பிட்டு விளக்கமாகவும் காரமாகவும் எழுதியுள்ளார் காலச்சுவடு கண்ணன்.

உண்மையில் அக்கட்டுரையின் தன்மை 100 % ஏற்றுக்கொள்ளப்படவேண்டியதே! முரசொலி மாறனின் இந்திய நற்பணிகளில் ஆரம்பித்து அவருக்காக அல்லது அவருடைய லாபத்திற்காக, தி.மு.கவின் கொள்கைகளை 'சங் பரிவாரோடு' பறக்கவிட்டு, 'கமாலாலயம்' பக்கத்தில் படுத்து கைகோர்த்துக்கொண்டது வரை அரசியல் சார்ந்தும், ஒரு ஒளிபரப்பு ஊடகமாக அப்போது அப்பாவின் தயவால் ஆரம்பிக்கப்பட்டு, இப்போது ஒளிபரப்பு ஊடகங்களாக விரவிக்கிடப்பதும் ஒலிபரப்புத்துறையில் விரிந்து போய்க்கொண்டிருப்பதும் அத்துடன் விட்டுவைக்காது 'பராசக்தி' கொண்ட 'குங்கும'த்தைக் கவர்ந்து தனது எல்லாக்கரங்கள் கொண்டும் அதை விற்று வருவது வரையென நீளும் அதன் போக்கு எல்லோரையுமே உள்ளுக்குள் அசைத்துப்பார்க்க ஆரம்பித்துவிட்டது.

அடுத்த முறை 'வணக்கம் தமிழகத்திற்கு' தங்களை அழைத்தாலும் அழைப்பார்கள் எதற்கு இப்போது ஏதாவதுசொல்லி அதில் கொள்ளிவைத்துக்கொள்ளவேண்டுமென்றோ இல்லை 'விளம்பரமோ தொடர்நாடகமோ படவிமர்சனமோ' போட்டு நாலு காசு பார்க்கலாம் அதையேன் கெடுத்துக்கொள்ளவேண்டுமென்றோ இல்லை உலகத்தமிழர்களிடையே உறவை இணைக்கும் பாலமாக இருக்கிற ஒன்றில்(!?) இடறுகள் செய்து தமிழ்த்தாயின் குரல்வளையைப்பிடித்து ஏன் நெறிக்கவேண்டும் என்றோ அமைதியாய் இருந்துவிட்டார்கள் தமிழர்களில் பலர். இன்னும் சிலர், 'சன்' யானைக்காலில் மிதிபட்டு 'வைகோ' போன்ற 'புலி'களெல்லாம் காணாமல் போய்விட்டார்கள், எங்களைப்போன்ற எலிகளெல்லாம் எம்மாத்திரம் அவர்களுக்கு? என்று அமைதியாய் இருந்துவிட, இந்தப் பூனைக்கு மணிகட்ட ஏன் இவ்வளவு தயக்கம் என்று தயங்காமல் முன் வந்து மணியையும் கட்டிவிட்டிருக்கிறது 'எஸ். ஆர். எஸ்' (கண்ணன்) என்ற எலி.

உண்மைதான், அண்மையில் படித்தேன். பினாமி மற்றும் போலிப்பெயரில் கடன் கொடுத்து ஊழல் செய்துவிட்ட கூட்டுறவு சங்க அலுவவலர்களை காவல்துறை கைது செய்ய, அதை, 'விவசாயிகள் கைது' என்று சன் டிவி அரசுக்கு எதிராக முழக்கமிட்டதாம். இதைப்பற்றி ஜு.வி யிலோ துக்ளக்கிலோ படித்ததாக ஞாபகம். இதுமட்டுமா? ஒரு பேச்சுக்குச் சொல்லவில்லை, இன்று இரவு சன் செய்தியைப்பாருங்கள்! எத்தனை போராட்டங்கள், ஊர்வலங்கள், உண்ணாவிரதங்கள், கருப்புக்கொடிகாட்டுதல், பேருந்தை வழிமறித்தல் மற்றும் அரசு அலுவலர்களை 'கேரோ' செய்த காட்சி (என்று நால்வர் நின்று பேசிக்கொண்டிருப்பதைக் காண்பிப்பார்கள்.) என்று தமிழ்நாட்டில் ஏதாவது 'முக்கு முடுக்கில்' நடக்கும் அரசுக்கெதிரான மாபெரும் (!?) போராட்டங்களைக் காட்டுவார்கள், எண்ணிக்கையில் இவற்றை வைத்துக்கொள்ளுங்கள்! எலக்ஷன் நெருங்கும்போது இது இரண்டு, நான்கு அல்லது பதினாறு மடங்காகளாம்!

அடுத்து தினகரன் வந்துவிட்டது. இனி நாளுக்கு 24*60/10 தடவை, வாங்கிவிட்டீர்களா தினகரன்? மும்தாஜ் கர்ப்பமா, திரிஷா தமிழ்ப்பெயரில்லையா? சிவகாசி ஜெயலட்சுமியின் உண்மைக்கதையை அவரே எழுதுகிறார்! பக்கத்திற்குப்பக்கம் இலவச இணைப்பு.! என்று விளம்பரங்கள் வரலாம். (இனாமாய் தரப்படும் பொருட்களின்) விற்பனையில் தினகரன் டாப்புக்கு வரலாம். தினகரன் வசந்தத்தில் வரும் கேள்விக்கு பதில் சொல்லி இமயமலைக்கு ரஜினியுடன் சென்றுவிட்டு வரலாம்! இன்னும் என்னென்ன இருக்கிறதோ?

குங்குமத்தை என் வாழ்க்கையில் நான் காசுகொடுத்து வாங்கியதே கிடையாது, அப்படிப்பட்ட என்னையே 'ரஜினியின் அடுத்தபடம் ஆதிசேஷா, கௌதமி பற்றி கமல் பதில்!' என்ற இரண்டு வாக்கியங்களைச்சொல்லி வாங்க வைத்துவிட்டார்கள். (கடைசியில் இரண்டும் ஒருவரிச்செய்திகள் உள்ளே! இந்தப்பாவம் அவர்களைச் சும்மா விடாது!)

அரசியல் துறையில், தி.மு.கவின் எதிர்காலம் இருக்கட்டும். தளபதி ஸ்டாலினின் எதிர்காலம் முழுவதும் சன் டி வின் செய்திகளுக்குப்பின்னே தான் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும் நிலையிலும், குறைந்தது இன்னும் நாற்பது ஆண்டுகளுக்கு அதாவது தயாநிதி மாறன் வாய் குழறி நடை பிறளும் வரை டெல்லி அதிகாரத்தில் எப்பாடு பட்டாவது (எவர் கொள்கையை பட்டத்தில் விட்டு அல்லது ஏதாவது மாலையை எவர் படத்தில் மாட்டிவிட்டாவது) இருப்பார் என்ற நிலையிலும் சன் டி வி குழுமத்தின் அதிகாரம் இப்போது முடிவுக்கு வருவது அல்லது நேர்கோட்டுக்கு வருவது அசாத்தியம் என்பதும் எல்லோரும் அறிந்திருக்கும் விஷயம்.!

இந்நிலையில் அச்சு ஊடகமும் முழுவதும் அவர்களால் வளைக்கப்பட்டுவிட்ட (இப்போது கால்கட்டைவிரல் மாட்டிவிட்டது!) சூழ்நிலை வருமாயின் அது தமிழக அரசியலுக்கு மட்டுமின்றி இந்திய அரசியல் மற்றும் இந்திய ஜனநாயகத்திற்கும் கூட ஆபத்தாய் இருக்கலாம் என்பதும் அப்போது இருட்டை மட்டுமே கக்கும் சூரியனாய் கூட அது மாறிவிடலாம் என்பதும் காலச்சுவடு மட்டுமல்ல நாம் எல்லோரும் கூட அறிந்துகொள்ள உணர்ந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்!

எம்.கே.குமார்

Thursday, August 18, 2005

கீரிப்பட்டி & பாப்பாபட்டி - தீர்வுதான் என்ன?

சென்ற வாரத்தில் ஒருநாள், விஜய் டிவியின் "குற்றம்- நடந்தது என்ன?" நிகழ்ச்சியில், மதுரை-மேலூர் பகுதியைச்சேர்ந்த கீரிப்பட்டி, பாப்பாபட்டி மற்றும் நாட்டார் மங்கலம் ஆகிய கிராம ஊராட்சிகளில் நடக்கும் பிரச்சனைகள் பற்றிக் காண்பித்தார்கள். ஆதிக்க சாதியினரின் அடக்குமுறைகளையும் அவர்களது வெறிச்செயல்களையும் மக்களுக்குக் காட்டி, ஆதிக்க சாதியினரின் அடக்குமுறைகளை எதிர்ப்பவர்களையும் அதற்காகப் போராடுபவர்களையும் மகிழச்செய்வார்கள், மக்களுக்கு உண்மையைப் புரியவைப்பார்கள் என்று நிகழ்ச்சியைப்பார்க்க ஆரம்பித்தேன். ஆனால் 'நடந்தது என்ன?'

ஆதிக்க சாதியினரின் அட்டகாசம், கொலைவெறிகள், மிரட்டல் இப்படியெல்லாம் அறியத்தரப்பட்டிருந்த அப்பிரச்சனையின் தன்மையை வெகு அழகாக அலசினார்கள் அவர்கள். தமிழ்நாட்டில் தனித்தொகுதிகள் ஆரம்பிக்கப்பட்ட வரலாறு, அப்போதிருந்த மக்களின் சராசரி விகிதம் அவர்கள் சார்ந்திருந்த இனங்கள் இவற்றையெல்லாம் விலாவாரியாக விளக்கியவர்கள், இப்போதிருக்கும் இம்மூன்று ஊராட்சிகளின் நிலையையும் சொன்னார்கள்.

அதன்படி, கீரிப்பட்டியில் இருக்கும் மொத்த ஓட்டுக்களில் மூன்றில் ஒருபங்கு மட்டுமே தாழ்த்தப்பட்ட மக்களின் ஓட்டுகள் என்பதையும் மீதமுள்ள ஓட்டுகள் மற்றசாதிகளைச் சார்ந்தவர்கள் என்பதையும் கூறினார்கள் அவர்கள். இரு விகிதத்தாரிடேயும் கலந்து பேசியபோது, தாழ்த்தப்பட்ட மக்களே இவற்றை ஒப்புக்கொண்டார்கள். மேலும் 'இவற்றாலெல்லாம் எங்களுக்கோ எங்களது பிள்ளை குட்டிகளுக்கோ கிடைப்பது, கிடைக்கப்போவது எதுவுமில்லை' என்பதையும் இப்போதுள்ள இப்பிரச்சனைகளால் அவர்களது தற்போதைய வாழ்வும் கருகிக்கொண்டிருக்கிறது என்பதையும் வேதனையாக முன்வைத்தார்கள். ஆக அவர்களைப்பொறுத்தவரை ஆதிக்க சாதியினரின் அடக்குமுறைகளுக்குப்பயப்படுவது என்பதைவிட தற்போதுள்ள உண்மைச்சூழலை உள்வாங்கிக்கொள்வது என்பதில் அவர்கள் அக்கறையாக இருக்கிறார்கள் என்று சொல்வதே சரியாகப்படும் போலிருந்தது.

அடுத்த ஊரான பாப்பாபட்டிக்குச் சென்று அங்கிருக்கும் நிலைமையையும் தெளிவாக விளக்கினார்கள் இவர்கள். அனைத்து இன மக்களிடமும் பேசிப்பார்த்ததில் இவ்வூரிலும் அதேபோல தாழ்த்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை, மொத்த கிராம மக்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்குதான். தாழ்த்தப்பட்ட இன முன்னால் தேர்தல் போட்டியாளர்கள் மற்றும் உயர்சாதியின இளைஞர்கள் ஆகியோரிடமும் பேசிப்பார்த்தார்கள். தாழ்த்தப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிடாததற்கு 'சாமி குத்தம்' ஏற்படுவதும் ஒரு காரணம் என்றும் சொன்னார்கள். தேர்தலில் நின்ற பலருக்கு அவ்வாறு 'தெய்வ குத்தம்' ஏற்பட்டு அவர்களின் 'ஆடுமாடுகள்' இறந்ததையும் முன்னுதாரணமாய் சில இளைஞர்கள் சொன்னார்கள். இந்த 'குத்தம் - கித்தம்' கதையெல்லாம் இருக்கட்டும்; உண்மை நிலவரம் அங்கு தாழ்த்தப்பட்ட இனத்தினர் குறுகிய அளவில் இருப்பதே!

'ஆதிக்க சாதியினத்தினர் இந்த அளவுக்கு வெறியோடு, 'இதில்' இயங்கத்தான் வேண்டுமா?' என்ற கேள்வி எழும்போது, 'நிலைமை தலைகீழாய் இருக்கும்போது தாழ்த்தப்பட்டவர்கள் இங்கு போட்டியிடத்தான் வேண்டுமா?' என்ற கேள்வியும் அவர்களது பேச்சின் உள்ளாடல்களிலிருந்து நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.

"எலக்ஷனும் வேண்டாம்; ஒரு எளவும் வேண்டாம். பிழைக்கக்கூட வழியில்லை; இருக்கும் பிள்ளை குட்டிகளோடு இருப்பதை வைத்து, எப்போதும்போல சந்தோசமாக வாழவிரும்புகிறோம் எங்களை வாழவிடுங்கள்!" என்பதாக இருந்தது போராடியவர்களின் எண்ணங்கள். "இருக்கும் நிலைமையைச் சரிவரப்புரிந்துகொண்டு பிறகு புத்திசொல்ல வாருங்கள் ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள் எல்லோரும்!" என்பதாயிருந்தது தனித்தொகுதியை எதிர்ப்பவர்களின் குரல்கள்.

இக்கிராம மக்களுடன் நில்லாது, சில பல அரசியல் தலைவர்களையும் இந்நிகழ்ச்சியினூடே பேட்டி கண்டார்கள் விஜய் டிவியினர். பேசியவர்கள் எல்லோரும், ஆட்சியாளர்களுக்கும் அமைச்சர்களுக்கும் 'ஜனநாயகத்தை வாழவிடுங்கள்; நியாயத்தை ஆட்சிக்கட்டிலில் ஏற்றுங்கள்' என்பதைப்போன்ற 'யாருக்கும் தெரியாத கோரிக்கைகளையும் உலகமறியாத நியாயத்தையும்' எடுத்துச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். இருந்தாலும் நிகழ்ச்சியின் முடிவை பின்வருமாறு சொன்னது நிகழ்ச்சியைப் படைத்த குழு.

"சில பத்தாண்டுகளுக்கு முன், தமிழகத்திலிருந்த நிலைமையை கணக்கில் கொண்டு தயாரிக்கப்பட உள்ளாட்சி, ஊராட்சி சட்டங்கள் மற்றும் வரையறைகள் இன்றுவரை திருத்தப்படாமலே இருந்துவருகின்றன. அதனால், அதனடிப்படையில் உருவாக்கப்பட்ட சில தனித்தொகுதிகளின் சூழல் தற்போது முழுவதுமாக மாறிவிட்டிருக்கிற பின்னும், இன்னும் அது அப்படியே கடைபிடிக்கப்பட்டுவருவதால் இப்பிரச்சனைகள் தோன்றியிருக்கின்றன. இச்சட்டங்களையும் வரையறைகளையும் மீண்டும் திருத்தி இன்றுள்ள அடிப்படைகளின் படி ஊராட்சி சட்டங்கள் மற்றும் வரையறைகள் கொண்டுவருவதால் இப்பிரச்சனைகளை எளிமையாக தீர்த்துவைக்கமுடியும்!"
இப்படியாய் அமைந்தது அந்த நிகழ்ச்சியின் முடிவு.

ஆக இன்றுவரை அதை தனித்தொகுதியாய் வைத்திருப்பது யாருடைய தவறு? சமாதானம் பேசச் செல்லும் அரசியல்வாதிகளுக்கு எது எளிது என்பது தெரியாமலா நடந்துகொள்கின்றனர்? அதையெல்லாம் விடுங்கள், சில ஆதிக்க சாதியினருக்கும் தலித்திய போராளிகளுக்கும் இனிமேலாவது அங்கு என்ன நடக்கிறது என்பது தெரியவந்தால் மெத்த சந்தோசம்!

எம்.கே.குமார்

Tuesday, August 16, 2005

பொன்னியின் செல்வனும் தேவி தியேட்டரும்!

கடந்த 12 ஆம் தேதி மாலை 5.30 மணி. சென்னை தேவி தியேட்டர் வாசலில் அங்குமிங்கும் அலைந்துகொண்டிருக்கிறார் அவர். கையில் செல்பேசி காதுக்கு சேதி சொல்லிக்கொண்டிருக்கிறது. ஐம்பது ரூபாய் டிக்கெட் இரண்டு எடுத்துவிட்டு வந்து 6.45 மணிக்காட்சிக்காய் காத்திருக்கும் போது அவரைக் காண நேருகிறது. எனது இரண்டாம் டிக்கெட்டுக்குரியவர், 'அவரை இப்படி பார்த்துக்கொண்டே இருப்பதால் என்ன பயன், ஒரு வார்த்தை பேசிவிடலாமே', என அவரருகில் நெருங்கி பேச ஆரம்பிக்கிறார்.

ஒரு சில தலையசைப்புகளுக்குப்பின் புன்முறுவலுக்குப்பின் அவர், TN 10 AF 100 (ஏ, எஃப் தவறாயிருக்கலாம்) என்ற எண்ணுடைய காரில் ஏறி பறந்துவிடுகிறார். நாங்கள் தியேட்டரை நோக்கித் திரும்புகிறோம்.

அவர், சூர்யா மூவீஸ் ஏ.எம்.ரத்னம்! பொன்னியின் செல்வன் படத்தயாரிப்பாளர். நடிகர் ரவிகிருஷ்ணாவின் தந்தை! 'பொன்னியின் செல்வன்' படம் அன்று அத்தியேட்டரில் ரிலீஸ்!

சரி, இனி பொன்னியின் செல்வனைப் பார்ப்போம்.

முகத்தில் பாதி (வெந்நீர் பட்டதால்) விகாரமுடைய ஒரு இளைஞன், சமுதாயத்தில் நிறைய வேதனைகளைச் சந்திக்க நேருகிறது. விளைவாக சுய தாழ்மையுணர்ச்சிக்குள் ஆட்பட்டுக்கொள்கிறான் அவன். அதிலிருந்து மீள, நிறைய சம்பாதித்து முகத்தைச் சரி செய்துகொள்ளவேண்டும் என முடிவு செய்து இராப்பகலாய் உழைக்க ஆரம்பிக்கிறான். சொந்த பணப்பிரச்சனைகளும் மற்ற பிரச்சனைகளும் அவனை வேறு திசைக்குள் துரத்த, இறுதியில் எதை அடைகிறான் அவன் என்பதுதான் படம் சொல்லும் கதை!

படத்தின் கதையை இயக்குநர், தயாரிப்பாளரிடம் சொன்னபோது ஏகத்துக்கும் கண்ணீர் விட்டு கதையைப்பற்றிக் கதறியழுது (சான்ஸை வாங்கி) விட்டிருப்பார் போலும்! படம் முழுக்க சோகத்தையும் செண்டிமெண்டையும் வாரியிறைக்க முயன்றிருக்கிறார்கள். ஊனமுற்ற ஒருவனைக் கதாநாயகனாகக் கொண்டு அல்லது பாவப்பட வைக்கும் ஒருவனைப்பற்றிய கதையைக் கொண்டு படமொன்றை எடுத்தால், அப்படத்தை வெற்றிப்படமாக்கிவிடலாம் என அவர்கள் நினைத்திருந்தால் அவர்களுக்கு இப்படம் பெரிய அடியாய்க் கொடுக்கும்.

அடுத்து என்ன காட்சி வரும் என்பதை எவரும் சொல்லிவிடலாம். அவ்வளவு அபத்தம் நிறைய இடங்களில். 'அழகிய தீயே' ராதாமோகனுக்கு என்ன ஆனதென்று தெரியவில்லை.

ஹீரோவாய் வரும் ரவிகிருஷ்ணா, தனக்கு பாவப்பட்ட கேரக்டர்கள் நன்றாய் ஒத்துவருமென்று எவரோ சொல்லக்கேட்டு (கெட்டுப்)போயிருக்கிறார். டக்கென்று ஏதாவது நாலு படங்களில் ஆக்ஷன் செய்து நமது எண்ணத்தை இவர் மாற்றலாம். ஏதோ ஒன்று குறைகிறது இவரிடம். குரலா? என்ன எளவோ தெரியவில்லை!

இசை வித்யாசாகராம். முதல்முறையாய் கேட்டேன். ஒன்றும் நிற்கவும் இல்லை; நிலைக்கவும் இல்லை. ஒளிப்பதிவு பரவாயில்லை ரகம்.

படத்தின் கதாநாயகியாய் வரும் கோபிகா, வருகிறார்; சிரிக்கிறார்; சீ என்கிறார்; ஜோக்கடிக்கிறார்; அழுகிறார் அப்புறம் கதாநாயகனுடன் சேர்ந்து நடக்கிறார். இவரது குடும்பம் எங்கிருக்கிறது, என்ன செய்கிறார்கள், இவர் அவரைக் காதலிப்பதை குடும்பத்தார் கண்டுகொள்ளவேயில்லையா இப்படியெல்லாம் கேள்வி கேட்பது ராதாமோகனுக்கு பிடிக்காது போலிருக்கிறது. ஒரே ஒரு காட்சியில், கோபிகாவின் பெயரைச்சொல்லி 'அவளா? உள்ளே இருக்கா போங்க' என்று கோபிகாவின் அப்பா டயலாக் பேசுகிறார். இவர்தான் அவருடைய அப்பாவா என்பதும் எனக்கு சரியாகத்தெரியவில்லை. மன்னித்துக்கொள்ளவும்.

ரேவதி பாவம். நண்பர்களாக வருபவர்கள், காமெடிக்காட்சிக்கு அல்லது ஜோக்குக்காகவே வருகிறார்கள்; போகிறார்கள். பிரகாஷ்ராஜ் மேக்கப் இல்லாமல் வந்து தத்துவம் பேசிவிட்டுப்போகிறார். புது ஹீரோயின் 'அளவான' கட்டழகி. இன்னும் சில மாதங்களில் ஒரு பாடலுக்கும் அப்புறம் வடிவேலுக்கும் ஜோடியாகலாம்.

இத்தனை களேபரத்துக்கிடையிலும் கொடுத்த பணத்திற்கு மோசம் வைக்காமல், போரடிக்கவும் விடாமல் ஒற்றை ஆளாய் படத்தைத் தனது தலையில் சுமந்து செல்வது வசனகர்த்தா (திரு.விஜி) மட்டுமே! (அழகிய தீயிலும் இவராய்த்தான் இருக்கவேண்டும். அதேபோன்ற ஜோக்குகள்.) தத்துவம் காமெடி இரண்டுக்கும் ஈடுகொடுத்து ரசிகர்களுக்கும் கொஞ்சம் தீனி போடுவது இவர் மட்டுமே. படம் கொஞ்சம் ஓடினால் அது சிரிக்க வைக்கும் வசனங்களுக்காக மட்டுமே இருக்கும்.

மிகப்பெரிய விஷயமான, படத்தின் தலைப்பை விட்டுவிட்டோமே! படத்தின் ஹீரோ ரவிகிருஷ்ணா ரேவதியின் பையன், அதாவது 'பொன்னியம்மா'வின் பையன். அதனால் தான் பொன்னியின் செல்வன். அடப்பாவிகளா! எவ்வளவு அருமையான காவியம் கொண்ட தலைப்பு. கெடுத்துவிட்டார்கள்! இன்றிரவு வந்தியத்தேவன் வந்து அவர்கள் வயிற்றில் குத்தட்டும்!

ஏ எம் ரத்னம் சார் பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!

எம்.கே.குமார்.

புதிய புகைப்படம்!

அண்மையில் எடுத்த புகைப்படம் இது. எந்த ஊர் அணைக்கட்டு இது என்று சொல்பவர்களுக்கு ஆயிரம் செம்பொன் காசுகள். பொன்னியின் செல்வன் ரவி கிருஷ்ணா தருவார்.

Sunday, June 26, 2005

ஏர் இந்தியா விமானச்சேவையும் சில எரிச்சல்களும்!

பி.கே.எஸ் சிவக்குமார் அண்மையில் இந்தியா வந்துவிட்டுச் சென்றபோது, ஏர் இந்தியா விமானத்தின் வாயிலாக மும்பையில் அவர் அனுபவித்த கொடுமைகளையும் வேதனைகளையும் ஒரு பதிவில் கூறியிருந்தார். அவருடன் வந்த அவரது நண்பர் ஒருவரின் கஷ்டத்தையும் அவரது எண்ணத்தையும் அதில் குறிப்பிட்டிருந்தார். ஏர் இந்தியா விமானச்சேவை எப்படியெல்லாம் இந்தியாவின் பெயரைக் கெடுக்கிறது; கேவலப்படுத்துகிறது என்பதை ஆங்காங்கு சில இணையத்தளங்களிலும் படிக்க நேர்ந்தது.

இப்போது நான் சொல்லப்போவது கடந்த வாரத்திற்கு முந்தைய வாரத்தில் ஒருநாள், இங்கு நடந்தது. நண்பர் ஒருவர் தனது தந்தையை வழியனுப்ப சிங்கப்பூரின் 'சாங்கி' விமானநிலையத்திற்கு அதிகாலையிலேயே கிளம்பிவிட்டார். சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு காலை 09.35க்கு கிளம்ப வேண்டிய ஏர் இந்தியா விமானம் அது. விமான நிலையத்திற்குச்சென்று விசாரித்தவுடன்தான் தெரிந்தது, ஏர் இந்தியா விமானம் தாமதமாக வரும் என்பது. அரைமணி நேரமா ஒரு மணி நேரமா? எவ்வளவு நேரம் தாமதம் என்று கேட்காதீர்கள்! காலை ஒன்பதரைக்குக் கிளம்ப வேண்டிய விமானம் இரவு 10.30க்கு கிளம்பும் என்று சொல்லப்பட்டது. தாமதம் எவ்வளவு மணி நேரம்? 13 மணி நேரம்.! உருப்படுமா இது?

அந்த 13 மணி நேரத்தில், சென்னைக்கு வருபவர் அங்கிருந்து கோயமுத்தூரிலோ மதுரையிலோ நடைபெறும் திருமணத்தில் கலந்துகொண்டுவிட்டு மீண்டும் சிங்கப்பூருக்கே கூட போய் விடவேண்டிய அவசரம் இருக்கலாம். அல்லது ஏதேனும் அவசர, துயர காரியங்களாகக்கூட இருக்கலாம். வழியனுப்ப வந்தவர்களுக்கும் எவ்வளவு அலைச்சல் பாருங்கள்! சென்னையிலிருந்து 200கிலோமீட்டர் தொலைவிலிருந்து வந்து, வரவேற்க அல்லது கூட்டிச்செல்ல காத்திருப்பவர்களின் நிலை என்ன? இந்தியாவின் அரசு விமானத்தின் நிலையைப் பாருங்கள். இது ஏர் இந்தியாவிற்கு முதல் தடவையா என்றால் சத்தியமாய் அதெல்லாம் இல்லை!

ஏறக்குறைய பலதடவை இப்படித்தான் நடந்திருக்கிறது. இதோ நேற்று சென்னையில்! (தயாநிதிமாறன் தலையிட்டு விமானம் விரைவில் வர ஏற்பாடு செய்தாராமே!)
என்ன காரணம் என்று கேட்டால், ஏதோ மீன் கருவாடு ஆகும் கதையைப்போல இயந்திரக்கோளாறு, தொழிட்நுட்பக்கோளாறு என்று ஒற்றைவார்த்தையில் எளிதாகச் சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். அந்த ஒரே ஒரு வார்த்தையில் இருநூறு பேரின் உயிர்களும் அவர்களின் குடும்பங்களும் எவ்வாறு ஊசலாடுகின்றன என்பதை எப்போது அவர்கள் புரிந்துகொள்வார்கள்?

'இந்தியாவில், அன்பைக் காட்டுவதற்குக்கூட சுனாமி வரவேண்டும்' என்று யாரோ அண்மையில் சொன்னார்கள். கண்ணுக்கு எதிரில் இருக்கும் அலட்சியங்களையும் ஆபத்துகளையும் நாம் உணர்வதற்குக்கூட விபத்துகள் வரவேண்டும் போலிருக்கிறது! (அரசு சார்ந்த சேவையான) சிங்கப்பூர் ஏர்லைன்ஸையெல்லாம் பார்க்கும்போது பொறாமையும் பெருமூச்சும் தான் மிஞ்சுகிறது! என்னமோ போங்க!

எம்.கே.குமார்

Friday, June 24, 2005

அந்நியன் - எனது பார்வையில்!

(முன்குறிப்பு: அல்வாசிட்டி அண்ணாச்சி ஒழிக! :-) முழுக்கதையைச் சொன்னதற்கும், ஜிகிர்தண்டாவையும் கேஎ·ப்சி சிக்கனையும் (காதலையும் அந்நியனையும்) ஒப்பிட்டதற்கும்! )

ஷங்கருக்கு இது மறுபடியும் முதல்படம்! அதன் பிரதிபலிப்பு ·பிரேம் பை ·பிரேம் தெரியும் கவனமும் ஆழமும்! காட்சியமைப்புகளில் நிதானமும் பரபரப்பும்! கதைக்கோர்ப்பில் பழைய வெற்றிகளின் வாசனை! தரத்தில் பிரம்மாண்டம்! மொத்தத்தில் மிரட்டல்! படம் முடிந்து வெளிவருகையில் குப்பை போடத் தயங்கும் மனசு! அந்நியன் நம் எல்லோருக்குள்ளும்!

ஜென்டில்மேனின் நான்காம் பாகம், இந்தியனின் மூன்றாம் பாகம், முதல்வனின் இரண்டாம் பாகம் என்பவர்களுக்கெல்லாம் எனது ஒரே கேள்வி, 'வி.ஐ.பி' படத்தில் காட்டிய சிம்ரனின் சேலை மறைக்கும் மார்பை அல்லது இடுப்பை, எப்படி அதற்கடுத்து வந்த ஐம்பது படங்களிலும் உங்களால் ஆர்வத்துடன் காணமுடிந்தது? எத்தனை முறை பார்த்தாலும் சிம்ரனும் ஒருவர்தான் அவரது மார்பும் (நிஜமானாலும் நகலானாலும்) இடுப்பும் அதேதானே அல்லது பழையதுதானே?!'

இந்தியா முழுக்கப் பிரச்சனைகள்! இப்படியே போனால் இன்னும் இருபது வருடங்களில் குடிநீருக்குக் கொலைகள் நடக்கலாம்; கை நிறைய பணத்தை அள்ளிக்கொடுத்து அரிசி வாங்குவதற்கு வரிசையில் நிற்கலாம். பணக்காரர்கள் இந்தோனேசியாவிலும் தாய்லாந்திலும் வீடுகள் வாங்கி பயிர் செய்யலாம். இந்தியாவில் திருவாளர் லல்லுவும் அவரது சக தோழர்களும் அரச அரியணையில் அமர்ந்து புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருப்பார்கள்; எதிரில் மாடுகள் அசைபோடும்!

'ஜென்டில்மேன்' பார்த்துவிட்டு வந்து கௌதமியைப் புகழ்ந்துகொண்டிருந்தவர்களல்லவா நாம்? 'இந்தியன்' பார்த்துவிட்டு வந்து ஜாகீர் உசேனின் தபேலாவை ஞாபகம் வைத்திருப்பவர்களல்லவா நாம்? முதல்வன் பார்த்துவிட்டு வந்த கண்ணோடு ஐம்பது ரூபாய் சேலைக்கும் வேட்டிக்கும் ஓட்டுப்போட்டவர்களல்லவா நாம்? எப்படி இருப்போம்?

சந்திரமுகி வருவதற்குமுன் வந்திருக்கவேண்டிய படம்; வந்திருந்தால் வசூலில் இமாலய சாதனை நிகழ்த்தியிருக்கும். தமிழக மக்களுக்கு இப்போது இந்த 'மல்டிபிள் பெர்சனாலிட்டி தியரி' எல்லாம் கொழுக்கட்டைக்குள் இனிப்பு வைக்கும் சமாச்சாரம். நாசர் முதுகு வளைத்து சொல்லித்தரும் விஷயமெல்லாம் ஜோதிகா, வினீத்தின் கையைப்பிடித்து அழைத்துச்சென்றதில் எப்போதோ அவர்களுக்குப் புரிந்துபோனது. விவேக்கிற்கும் 'மல்டிபிள் பெர்சனாலிட்டியோ' என்ற சந்தேகம் வந்தது படத்தின் ஆரம்பத்தில். திரைக்கதையில் தொய்வு!

அம்பியாக அப்பாவியாகவும் ரெமோவாக குதூகலமாகவும் அந்நியனாக ஆக்ரோஷமாகவும் முகம் மாற்றி உடல் மாற்றி குரல் மாற்றி நடிக்க இன்னொரு கமல் வந்திருக்கிறார். பிரகாஷ்ராஜ் உடனான காட்சிக்கு விக்ரமிற்கு அவார்டு கிடைக்கலாம். லகலகல ஜோதிகமுகிக்கு இணையாக மிரட்டுகிறார் ஒரு கட்டத்தில்!

விக்ரம்தான் ஹீரோ என்பதில் எனக்கு இரண்டாம் கருத்து இல்லை. ஆனால் இன்னொரு ஹீரோவும் இருக்கிறார், அது பீட்டர் ஹெய்ன்! இவரது மகுடத்தில் சிகரம் இப்படம்! விதவிதமான மோதல்கள். ஹாலிவுட் படங்களைப் பார்ப்பது போலிருந்தது.

சதா அழகாயிருக்கிறார். விஜய் படத்து த்ரிஷாக்களை விட சில காட்சிகளிலாவது அதிகம் வருகிறார். பரவாயில்லை. பட்டுப்புடவையிலும் ஐயங்கார் வீட்டு அழகாகவும் கண்ணுக்கு விருந்தளிக்கிறார்.

நாசர், பிரகாஷ்ராஜ்(அண்ணனின் இறப்பில் இவரது ஆக்டிங் கிளாஸ்! கையை ஆட்டி அல்லது நீட்டி நடிப்பதை எப்போது விடப்போறீங்க தலை?!), ஷண்முகராஜன், நல்லது செய்பவர்கள், கெட்டது செய்பவர்கள் என நிறையப்பட்டாளம். கிளைமேக்ஸில் தங்கையின் கொலையாளியையே தேர்ந்தெடுத்தது புத்திசாலித்தனம். விவேக் காமெடி செய்கிறாரா அல்லது மற்றவர்களைக் கிண்டல் செய்கிறாரா?

இரு கேமிராமேன்கள். ஒப்படைத்த வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்கள். எவ்வளவு நேரம் தான் ஒரு இடத்தையே (ஸ்டெல்லா மேரீஸ் காலேஜாகவே இருக்கட்டும்; பொழுது போகும் வரை அங்கேயே நின்றுகொண்டிருந்தால் பசிக்காமலா போகும்?) காட்டுவது? முதல் பாடலில் பூக்களின் பின்னணி முதலில் ஆச்சரியமும் பிறகு அலுப்பும் உண்டாக்குகிறது. ஐயங்கார் பாடல் மற்றும் காதல் யானை, நோக்கியா பாடல்களை விடுத்து கடைசிப்பாடலுக்கு 'அக்மார்க் ஷங்கர்' பிரமாண்டமாய் உருவெடுக்கிறார். ரோடு, மலை, கார், பேருந்து, லாரி, மனிதர்கள் எல்லாவற்றிலும் பணம்!

வசனகர்த்தாவே (சுஜாதா) ஒரு 'மல்டிபிள் பெர்சனாலிட்டி' கொண்டவராகையால் வசனத்தில் அடைமழை! இசை சில இடங்களில் மிரட்டல். பாடல்கள் பாதிப்பரவசம்.

கதை, திரைக்கதை, டைரக்ஷன் ஷங்கரைப் பற்றி பாராட்ட ஒன்றுமில்லை. பெர்பெக்ஷனிஸ்ட்.! புதுமை விரும்பி, பிரம்மாண்டம் விரும்பி! 'ஜீன்ஸி'ற்குப்பிறகு டபுள் ரோல் செய்வது எப்படி தமிழ் சினிமாவில் எடுபடவில்லையோ அதுபோல இனிமேல் யாரும் இந்த 'ஸ்பிளிட் பெர்சனாலிட்டி' பற்றி ஒன்றும் பேசமுடியாது. சதாவை அந்நியன் துரத்தும்போது எனக்கு 'ஆளவந்தான்' ஞாபகம் வந்தது தவிர்க்க இயலாதது.

மாறுவேடத்தில் புலனாய்வுப்போலீசார் உலாவருவதும், நாயகி பாடுவார் என்பதைக்காட்ட குன்னக்குடி, சுதாரகுநாதன் தலைமையில் கூட்டம் சேர்த்துச் செலவு செய்ததும் திரைக்கதைப்பஞ்சம்; பணவிரயம்! சட்டம் வரை படித்த இந்திய நடுத்தர குடும்பத்து வாலிபனுக்கு, அவன் சட்டம் படிக்கும்வரை உலகம் நேர்மையாக இருந்ததா என்ன? திடீரென்று வானத்திலிருந்து குதித்து தமிழ்நாட்டில் விழுந்தது போல அம்பி 'பிஹேவ்' பண்ணுவது அசடு!!

கிளைமேக்ஸ் லட்டுக்குள் வைத்துத்தந்த மூக்குத்தி.

கொஞ்சம் குறைத்திருக்கவேண்டிய கிராபிக்ஸ், கொஞ்சம் தவிர்த்திருக்கவேண்டிய ஷங்கரின் பழைய ஆனால் இந்தியாவின் மார்க்கண்டேய விஷயங்கள், கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கவேண்டிய போலீஸ் சார்ந்த திரைக்கதை, கொஞ்சம் ஞாபகத்தில் வைத்திருந்திருக்கவேண்டிய சுஜாதாவின் செல்ல கிறுக்குத்தனம் ('டேய் பாடு' என்று கூப்பிடுகிறார் அந்நியன்! அருமையான அக்காரவடிசலில் ஆங்காங்கு தென்படும் கற்களைப்போல!), கொஞ்சம் (சந்திரமுகிக்கு) முன்னால் ரிலீஸ் செய்திருக்கவேண்டிய தருணம்! இவைகளைக் கவனத்தில் கொண்டிருந்தால் வசூலில் மெகா சாதனை படைத்திருக்கவேண்டிய அந்நியன் இப்போது கையைக்கடிக்காமல் பயணிப்பான்.

இரண்டாம் முறை படத்தைப்பார்க்க தியேட்டருக்குப் புறப்பட்ட நண்பரிடம், இந்தியாவிற்குச் செல்லும் போது குப்பை போடாமல் இருக்க முயலுங்கள் என்றேன், பார்க்கலாம் என்றார்! 'அந்நியன்'தான் பார்க்கவேண்டும்!

எம்.கே.குமார்.

Thursday, June 09, 2005

புத்தகத் தோணியில் நான்!

எச்சரிக்கை: 1. தனக்குப் பிடித்தவர்களாய் அழைத்து அவர்களுக்கும் முதுகு சொறிந்து தானும் சுகமாய் சொறிந்து கொள்ள நினைப்பவர்களுக்கு!

எச்சரிக்கை: 2. தனது வட்டத்தை விட்டு வெளியே வராத குறுகிய மனப்பான்மையோடு 'எங்கிட்டே இம்புட்டு இருக்கு; உங்கிட்டெ என்ன இருக்காம்?' என்று தற்பெருமை 'கணக்கு' காட்ட முனைபவர்களுக்கு!

எச்சரிக்கை: 3. 'நம்மையும் யாராவது அழைப்பார்கள்; பிறகு எழுதலாம்' என்று காத்திருப்பவர்களுக்கு!

எச்சரிக்கை: 4. ஆங்கிலப்பெயர்களுக்கும் புத்தகங்களுக்கும் கடகடவென்று கூகுளைத் தட்டும் நண்பர்களுக்கு.!

எச்சரிக்கை: 5. எல்லாம் படித்து முடித்து 'இவரு மட்டும் எதுக்கு பத்துப்பேரை கூப்பிட்டுருக்காரு?!' என்று முனகுபவர்களுக்கு!
***************************

நன்றி:1. பித்தளை மற்றும் மண் சாமான் சட்டிகளை, சுருங்கிய தனது பாவாடையை மடித்து உள்ளே அள்ளிப்போட்டு, 'அதெல்லாம் உஞ்சாமான், இதெல்லாம் எஞ்சாமான்; வெளையாடுறவரைக்கும் வெச்சுக்க, அப்பொறம் குடுத்துறணும் சரியா' என்று கேட்டு கூட்டாஞ்சோறு வெளையாட்டில் என்னையும் கூட்டு சேர்த்த, 'பால்யகால பருவகால' சில குழந்தைத்தெய்வங்களுக்கு!

நன்றி: 2. ஒரு அறை முழுவதையும் புத்தகத்துக்கு ஒதுக்கி மினி லைப்ரேரியாய் தனது இல்லத்தை வைத்திருக்கும் அவ்வப்போது புத்தகங்களையும் அன்பளிப்பு தரும்
நண்பர் மானாஸாஜென்னுக்கு!

நன்றி: 3. 'வா, வா! இப்போ புத்தகத்தால் வெளையாடலாம். இதெல்லாம் நான் படிச்சேன்; எதெல்லாம் நீ படிச்சாய்!' என்று ஆர்வத்தோடு அழைத்த
இனிய தோழி ஜெயந்தி சங்கருக்கு!
********************

எனது படுக்கையறையைச்சுற்றி இன்று புத்தகமாய் கிடப்பவைகளின் எண்ணிக்கை, ஏறக்குறைய அறுபது + இருக்கும். இந்தியாவில் ஒரு 50+. (பாதி ஓஸியில் போய்விட்டது!) ஆங்கிலம் தமிழ் எல்லாம் சேர்த்துத்தான்.

1.ஸ்ரீ மத் பகவத் கீதை-சுவாமி சித்பவானந்தா உரையுடன்
பகவத் கீதை- தமிழில் பாரதியார்
2. இஸ்லாம் ஒரு எளிய அறிமுகம்- ரூமி
3.சித்தர் பாடல்களின் மொத்த தொகுப்பு.
4. தமிழ் இலக்கிய வரலாறு-.மு.வ
5.பாரதியார் கவிதைகள் -2
6.பாரதியின் சரித்திரம்-செல்லம்மாள் பாரதி எழுதியது.
7.சத்திய சோதனை-
மகாத்மாவின் மொழிகள்
8.காலச்சுவடு கவிதைகள்
9. காலச்சுவடு நேர்காணல்கள்
10. ஜே ஜே சில குறிப்புகள்
11. உப பாண்டவம், துணையெழுத்து
12.கலாப்ரியா கவிதைகள் தொகுப்பு 2
13.அசோகமித்திரனின் கட்டுரைத்தொகுப்பு (காலக்கண்ணாடி)
14. 18 வது அட்சக்கோடு அசோகமித்திரன்
15.திலீப்குமாரின் சிறுகதைத்தொகுப்பு
16.இரா.முருகனின் நாவல் மற்றும் சிறுகதைத்தொகுப்பு.
17.பாராவின் கட்டுரைத்தொகுப்பு, நாவல், சிறுகதைத்தொகுப்பு,
18.சேவியர் கவிதைகள்
19. சொக்கனின் 'சச்சின்' மற்றும் சில புத்தகங்கள்
20.கிராவின் 'வயது வந்தவர்களுக்கு மட்டும்'
21.காலச்சுவடு கண்ணனின் 'வன்முறை வாழ்க்கை'
22.ஜெ கே யின் 'அறிந்ததினின்றும் விடுதலை!'
23.பொன்னியின் செல்வன்
24.Eight Keys to Greatness-GENE. Landrum
25.The laws of nature
26.How to become a successful speaker-DOn Aslett.
and some 'HOT' novels!

இது போக இன்னும் பல புத்தகங்கள்!

அண்மையில் படித்தவை!

1. புயலிலே ஒரு தோணி ப.சிங்காரம். (விரைவில் எனது பார்வை வரும்!)

2.பால் நிலாப்பாதை -இளையராஜா (பாரதிராஜா,கமலஹாசனின் முன்னுரை!)

3.பால்வீதி-அப்துல் ரகுமான் (வேலிக்கு வெளியே தலையை நீட்டிய என் கிளைகளை வெட்டிய தோட்டக்காரனே! வேலிக்கு அடியில் நழுவும் என் வேர்களை என்ன செய்வாய்?)

4.தமிழில் ஒரு முழுமையான பாலியல் நூல்- டாக்டர். மாத்ருபூதம். (பெயர் மறந்து போச்சு! நன்றாக எழுதப்பட்ட ஒரு நூலில் ஆங்காங்கு தமிழ் சினிமாப்பாடல் வரிகள் வந்து வெறுப்பேத்துகின்றன!)

5.அகிரா குரோசோவா-சுயசரிதை (பாதியில் நிற்கிறது!)

6.மூத்த தமிழ் எழுத்தாளர்களைப் பற்றிய ஜெயமோகனின் விமர்சனக்கட்டுரைகள் (3 பேரூக்கு ஒரு புத்தகமாய் வெளியிட்டிருக்கிறார்!)

7. மாலதி மைத்ரியின் அண்மைய கவிதைத்தொகுப்பு

8.குட்டி இளவரசன்

9. கிராவின் முழு சிறுகதைத்தொகுதி-அகரம் வெளியீடு

10.புதுமைப்பித்தனின் கடிதங்கள்- தனது மனைவிக்கு!

எனக்குப்பிடித்த புத்தகங்கள்!

1. மோகமுள், செம்பருத்தி, அம்மா வந்தாள் மற்றும் மரப்பசு -தி.ஜானகிராமன்
2. புயலிலே ஒரு தோணி ப. சிங்காரம்
3. ஜே.ஜே சில குறிப்புகள்- சுந்தர ராமசாமி
4. உப பாண்டவம்- எஸ்.ரா
6.திசைகளின் நடுவே-ஜெயமோகன்
7. குட்டி இளவரசன்
8.பொன்னியின் செல்வன் கல்கி
9.பிரிவோம் சந்திப்போம் சுஜாதா
10. மெர்க்குரிப்பூக்கள் பாலகுமாரன்
11. ஜண கண மண-மாலன்
12. எண்ணங்கள்- எம்.எஸ்.உதயமூர்த்தி


அடிக்கடி புரட்டும் நூல்கள்:

1.சித்தர் பாடல்கள்
2.பாரதியார் கவிதைகள்(வாரம் ஒருமுறை!)
3. அசோகமித்திரனின் காலக்கண்னாடி
4. திருக்குறளின் ஆங்கிலப் பதிப்பு

ஒரு தொடருக்காக படித்துக்கொண்டிருக்கும் நூல்கள்:
1. முன்னாள் தலை மகன் லீ குவான் இயூ
2. The singapore story
3.From third world to first!
4. the leaders of singapore
5. சிங்கப்பூரில் தமிழ் வளர்ச்சி குறித்தான ஆய்வுகள்
6.Management of Success-singapore story.

இனி நான் அழைக்கப்போகும் சிலர்:

1.ஈழநாதன்
2.மானஸாஜென்
3.எல்.ஏ.ராம்
3.அருண் வைத்தியநாதன்
4.குழலி
5.மூர்த்தி
6.டிசே தமிழன்
7.கார்த்திகேயன் ராமசாமி
8.செல்வராஜ்
9.முத்து
10.நாராயணன்
11.துளசி கோபால்
12.செல்வநாயகி

Tuesday, May 24, 2005

உங்களுக்கு ஒரு வேண்டுகோள்- கமலஹாசனிடமிருந்து(ம்)!

சன் டிவியின் 'மே தின' சிறப்பு நிகழ்ச்சியில் கமல் அவர்கள் பேசியதைப் பார்த்திருப்பீர்கள்! இரண்டு வாரத்திற்கு முன் வந்த வந்த கல்கி பத்திரிகையில் அவரது பேட்டியையும் படித்திருப்பீர்கள்! இந்த இரண்டிலிருந்து மட்டுமல்ல; அண்மையில் அவர் கொடுத்த தெலுங்கு பத்திரிகைப் பேட்டியிலும் கூட, கமல் என்ற ஒரு கலைஞனின் மனதிற்குள்ளேயான தொழிலியல் நடைமுறை இயலாமைகளும் அவனது வாழ்வு மீதான அடக்குமுறைகளின் வீரியமும் வருத்தத்தின் விழிகளில் தொக்கி நின்றதை நம்மால் கண்டிருக்க முடியும். 'ஒரு சாதிக்கும் கலைஞனுக்கு சமுதாயத்தின் மரியாதைப் பங்களிப்பு இறப்புக்குப் பின் தானா இன்னும்' என்று இன்றும் வருத்தப்படவைக்கின்றன இவைகள்.

காந்தியைச் சுடச்சொல்லி ஆளனுப்பி காரியம் முடிந்தபின் அவருக்கு ஆங்காங்கு ஒரு சிலை வைத்துவிட்டோம். 'பாரதி' என்ற 'பா பைத்தியக்காரனுக்கு அன்று சாப்பாடு போடக்கூட விரும்பாமல் இறுதிக் காரியத்திலும் கூட இணைந்துகொள்ள அருவருத்து ஒதுங்கி நின்றுவிட்டு இன்று அவனைத் 'தேசியக்கவி' ஆக்கிவிட்டோம். அது யாரப்பா புதுமைப்பித்தனா? ரேஷன் கார்டு வைத்திருக்கிறாயா? இது யார் வலம்புரி ஜானா? உடம்புக்கு சரியில்லையின்னு ஆஸ்பத்திரிக்கி வரியேப்பா, கையில காசு வெச்சுருக்கியா? ஏய் தம்பி, குடும்பம் குட்டியெல்லாத்தையும் விட்டுபுட்டு வெள்ளக்காரனுக்கு குண்டு வெச்சி தூக்குல தொங்குறீயே? தேவையாவெ உனக்கு இது? பகத்சிங்காம் பகத்சிங்கு, பைத்தியசிங்கா நீ?

ஏம்பா முக்கோண வெண்தாடி நாதா, செவாலியேவெல்லாம் வாங்கியிருக்கியாமே, ஹிந்தி தெரியுமா உனக்கு? அது யாருப்பா அந்தப்பக்கம் மதிய உணவுத்திட்ட நாயகனா? வெட்டி வேலையப்பா உன்னது!

உங்களது கரங்கள் பெரியதாய் என்ன செய்துவிடப்போகின்றன? அடிக்கடி முதுகில் குத்தும் அல்லது ஒரே ஒருமுறை ஒருத்தருக்கு என, பல மலர் வளையங்கள் வைக்கும். உங்களது இதழ் எப்போது திறந்து மூடப்போகின்றன? மலர் வளையம் வைத்த கையோடு மைக் பிடிக்கும் உங்களுக்கு, இரண்டே இரண்டு வார்த்தைகள் புகழ்ந்து பேசுவதற்கு திறந்து மூடும்.

ஆயிரம் மலர் வளையங்களை விட ஒரே ஒரு மலர்மாலையும் மனம் நிறைந்த பாராட்டும் சாதிக்கக்கூடியவை எத்தனை எத்தனை நண்பர்களே!

இறந்த பின் மட்டும் வெளியில் காட்டுவதற்கென உங்கள் கைகளும் வாயும் இருந்தால் இனிமேல் அவை இரண்டும், அவற்றுக்கு(ம்) பயன்படாமல் போகட்டும்!

கல்கி பேட்டியிலிருந்து....

"தனிப்பட்ட முறையில் பிராமணர்கள் பால் எந்தவித காழ்ப்பும் பெரியாருக்கு இல்லை"

"பகுத்தறிவுப்பாதையை பெரியார் மட்டும் தான் கொண்டு வரவேண்டுமென்பதில்லை. சுபிட்சமே கொண்டு வரும்"

"மேஜை மீது கிடக்கிற தண்ணீரை தள்ளிவிட்டால் மற்றொரு பக்கம் போய்விடும். அப்படித்தான் மும்பை முழுவதுமே இப்போது தாராவியாகிவிட்டது"

"ஆபத்தின் விளிம்புவரை சென்று எட்டிப்பார்க்கும் ஒரு முனைப்பு எனக்கு எப்போதும் உண்டு."

"வர்த்தகக் கோட்பாடுகளிலிருந்து தமிழ் சினிமாவின் திரைக்கதையை மீட்டெடுக்கவில்லை. சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டெஸ்ட்! அதில் கொஞ்சம் தீவிரம் இருக்கத்தான் செய்யும்; கொஞ்சம் ரத்தம் கசியத்தான் செய்யும். நோ பெயின் நோ கெயின்! புத்தர் சொன்னதாக எடுத்துக்கொண்டாலும் சரி; ஆர்நால்டு சொன்னாலும் சரி. வலி இல்லாமல் வாழ்க்கை இல்லை! "

"இது ஒரு தொழிலாக வியாபாரமாக இருக்கும்போது, புரட்சிகளில் ஈடுபடும் தியாகம் என்னிடமில்லை."

"நேர்மை ஜெயிக்குமா என்று தெரியாது. ஆனால் நியாயம் கண்டிப்பாக உலகத்துக்குப் புரியும். நேர்மை புரிய கொஞ்சம் நேரம் ஆகும். நேர்மமயானவனா இல்லையா என்பதை அவன் வாழ்ந்துதான் காட்டவேண்டும். அது ஒரு பெரிய கொடுமை!"

"மாற்றம் வேண்டும், மாற்றம் வேண்டும் என்று கேட்காதே..அந்த மாற்றமாக நீயே மாறி விடு!
என்பார் காந்தி. நான் காந்தியின் மிகப்பெரிய ரசிகன். கொடுமை என்னவென்றால், காந்தியைப் பற்றி நான் தப்பாக படம் எடுத்தேன் என்கிறார்கள். காந்தியின் உருவத்தைச் சிதைக்கும் படமா ஹேராம்?"

"தமிழர்கள் எனக்கு கைதட்டாவிட்டாலும் பரவாயில்லை. இப்படி எதிர்பாராத நேரத்தில் அதுவும் பின்புரத்திலிருந்து பொறடியில் தட்டாமல் இருக்கலாம் இல்லையா? முதுகில் குத்துவதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?"

"அழும் கோழைத்தனம் எனக்கு இல்லை. ஆனால் சிரிக்கும் பக்குவத்தை மட்டும் நான் இழந்துவிட்டேன் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்'

"கலைஞன் என்பவன் சாந்தமான மனநிலையில் இருந்துகொண்டு செயல்படவேண்டும். வேலை செய்கிற உச்சகட்டத்தில் என்னைத் தொந்தரவு பண்ணிவிட்டு, ஓய்வு பெறும்போது நீங்கள் பாராட்டுவது எனக்கு வேண்டாம்."

கடைசி வரிகள் நமக்கு மிகவும் முக்கியம் நண்பர்களே! இனிமேலும் இறந்த காலத்திற்காய் ஏங்காதீர்! நிகழ்காலத்தின் சக சாதனையளர்களை போற்றுங்கள், மதியுங்கள்!

எம்.கே.குமார்

நன்றி: கல்கி!

Wednesday, May 11, 2005

சொல்லாடல்!

காலங்காலமா
கையிடுக்குத் துண்டு
செட்டியாரு
கலியாணத்து
ரெண்டாம் பந்தில
உக்காந்தவனை
சொக்கா பிடிச்சி எழுப்பிவிட்டது.
வெசனத்துல
போதையில
வண்ணான் முதல்
வாத்தியார் வரை
ஊர்லெ எல்லார்ட்டேயும்
படுத்து வருவாளுக
அவனைச் சுமந்தவளும்
அவனதைச் சுமந்தவளும்.
சாராயத்து மானியத்துல
அவென்
பொண்டாட்டி புட்டக்கதை
பொண்ணோட மாருக்கதை
எல்லாஞ் சொல்ல
ரசிச்சிப் போகும்
என்னோட சேந்த செட்டு.
முன்னடியாஞ் சாமிக்கு
மொதப்பூசாரி அவந்தான்
சாமி வர சொணக்கமானா
சாராய மீதி
சம்சார மீதி
சகவாச மீதின்னு
கேலிக்கி ஆளாவான்
சாமிக்கி முன்னாடி.
அத்தனையும் மனசுல வெச்சி
எதிர்ல நாம வரும்போது
எப்படியிருக்கீங்கய்யான்னு கேப்பான்
அனுசரனையா வெட்டியான்,
எப்படா அங்கெ வருவேன்னு
வாய்க்குள்ளே மட்டும் கேட்டு!

வெண்ணிலாப்ரியன்.

நன்றி: அமுதசுரபி மே 2005

Tuesday, May 10, 2005

நெடு பயணத்தில் ஓர்நாள்-குறும்பட இயக்குனர் அஜீவன்!

அஜீவனுக்கும் ஊடகத்திற்குமான புரிதல் பதின்ம வயதினிலே ஆரம்பித்திருக்கிறது. இலங்கையில் பிறந்து, இயந்திர பட்டப்படிப்பு பயின்று, ஊடகம் சுழலும் வாழ்வில் மனம் நுழைந்து கிடந்தாலும் சிங்கப்பூருக்கு வந்து சில ஆண்டுகள் படிப்பு சார்ந்த வேதியியல் தொழிற்நுட்பத்தில் பிழைத்து, பிறகு சில ஆண்டுகள் நிரந்தரமாக தன்னை தனக்குப் பிடித்த வேலைக்குள் இழைத்திருக்கிறார். சீன முதலாளியிடம் வேலை செய்ய, நேர்மை, நம்பிக்கை மற்றும் திறமை ஆகியவற்றை அதிகமாகக் கொண்டிருக்கவேண்டியதன் அவசியத்தைச் சொல்லும் அவர், தனது பழைய முதலாளி 14 வருடங்கள் கழிந்தும் இன்னும் தன் மேல் கொண்டிருக்கும் அன்புக்கு அவற்றை சாட்சியாக்குகிறார். அஜீவனின் அன்றைய வழிகாட்டுதல் அந்த சீனரின் இன்றைய மாபெரும் வெற்றி!
Image hosted by Photobucket.com

'கல்யாணத்தில் வீடியோ எடுப்பதற்கும் விதவிதமான உடைகளில் மரத்தைச் சுற்றி வந்து காதல் புரியும் கலைக்கும் எனக்கும் வெகு தூரம். அதற்கெல்லாம் அப்பால் மனித உணர்வுகளுக்கு மத்தியில் நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.' என்கிறார். 'அரசியல் போராட்டங்களோ அது சார்ந்த சூழ்நிலைகளோ இந்தக் கலைஞனுக்கு அவசியமில்லை. அவைகளுக்கு மத்தியில் எனக்கு வேலையில்லை. எனது தலைவிதியை சரியாக நான் வைத்துக்கொண்டால் அதுவே எனது வாழ்தல். நான்கு பேரைத் திருத்துவதற்கோ நாட்டைத்திருத்துவதற்கோ என்னால் முடியாது. அது எனது வேலையும் இல்லை. தான் வாழும் குறும்பட உலகிலும் அத்தகைய சூழ்நிலை நிலவுவது எனக்குப்பிடிக்காது.' கேமிராவின் பார்வை நீண்ட சாலையைத் தேடுகிறது.

'லண்டன் குறும்பட விழாவுக்கு' நடுவராய் வந்த திரு. தங்கர்பச்சானை மிகவும் இகழ்கிறார் அஜீவன். அவருக்கு இப்படங்களைப் பற்றி என்ன தெரியும் என்றும் கேட்கிறார். 'எதுவும் தெரியாமல் சிறந்ததைத் தேர்ந்தெடுத்த அவரது நடுநிலைமையின் பின்னே ஏதோ நிழலாடுகிறது' என்கிறார். நிழல் நிஜமாகி இப்போது அது மறைந்ததும் எல்லோருக்கும் தெரிந்துவிட்டது என்கிறார் நிஜமான வேதனையுடன்.

லீலா மணிமேகலையின் 'கனவுப்பட்டறை'க்கும் தனக்கும் நிகழ்ந்த பிரச்சனைகள் எந்தவொரு அப்பாவிக்கும் நேரக்கூடாது என்கிறார். அது பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது என்பது பற்றியும் தான் எப்படி அங்கே புறக்கணிக்கப்பட்டேன் என்பதையும் வருத்தமாகச் சொல்கிறார். இலக்கியத்தில் 'ஒற்றையிலை(யென)', வியாபாரத்தில் இவ்வளவு படுத்துமா என்று யோசிக்க நேருகிறது.

குறும்படம் மட்டுமல்ல, சினிமா உலகிலும் கொடிகட்டிப்பறக்கும் பெண்போகங்களுக்கும் அது தொடர்பான விஷயங்களுக்கும் தனது கடுமையான கோபத்தை முன் வைக்கிறார். 'பதினைந்து டாலருக்கு' தாராளமாய் கிடைக்கும் 'வெளிச்சமாச்சாரம்' ஒன்றை, இங்கே வந்து ஏன் தேடுகிறார்கள் என்று விசனப்படுகிறார். தயவுசெய்து அதற்கெல்லாம் இங்கு வராதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறார். கேமராவிற்கும் பெண்போகத்திற்கும் இருக்கும் தவறான சிந்தனைகள் களையப்படவேண்டும் என்கிறார்.

சிங்கப்பூரில் தமிழர்களின் வாழ்வியலில் நடைபெறும் சமூகச்சீரழிவுகளை குறும்படமாக எடுத்து வெளியிடலாமே என்ற தனது நண்பரின் கோரிக்கையைத் திட்டவட்டமாக நிராகரிக்கிறார். 'சமூகச்சீரழிவுகள் எங்குதான் இல்லை? அவற்றை மட்டும் காண்பிப்பது அநாகரிகம். மறுமுறை நான் சிங்கப்பூருக்கு வரமுடியுமா? எனது உலகில், போராட்டத்தின் உக்கிரமோ சமூகச்சீரழிவுகள் அல்லது அதற்கு என் போதனைகள் ஆகியனவெல்லாம் இல்லவே இல்லை. இது ஒருவரின் அல்லது இருவரின் தனிமன விதிகளின் விளையாட்டுக்களம்' என்கிறார்.

'இலங்கையிலிருந்து வந்த ஆண்கள் என்றாலே ஓரின உறவுக்காரர்கள் என்று எண்ணும் சுவிஸ், அங்கு பிழைக்க வரும் இலங்கை ஆடவர்கள், அல்லது அவர்கள் துரத்தும் பெண்களின் பாடுகள், அல்லது வெள்ளைக்காரன் வந்து உடைந்த வீட்டையும் பிணங்களையும் அப்புறப்படுத்த அவற்றை வேடிக்கை பார்க்கும் சுனாமியின் உள்ளூர்வாசிகள்- இவைகளுக்குப்பின்னே சில இதயங்கள் கிடந்து குமுறலாம். அவைகள்தாம் எனது களம்' என்கிறார். இலங்கையில் சுனாமியின் கோரத்தை டாகுமெண்டரியாக்கியும் குறும்படமாக்கியும் அதனுடன் 'என் ஜி ஓ'க்களோடு இணைந்து சுவிஸிலிருந்து வந்து நிவாரணப்பணிகளில் பங்குகொண்டதையும் குறிப்பிடுகிறார்.

'சிங்களம் வழியில் படித்து வந்தமையால் சிங்கப்பூரில்தான், தமிழ் எழுதப் படிக்க கற்றுக்கொண்டேன். அதில் எனக்குப் புலமை கிடையாது. சிங்களம் நன்றாகப் பேசுவேன். விமான நிலையத்தில், 'தமிழ்ச்செல்வன்' என்ற எனது பெயரைப் படித்துவிட்டு நிமிர்ந்து அவர் பார்க்கும்பொழுது நான் சிங்களம் பேசுவது இனிமையாய் இருக்கிறது. இலங்கையில் பிறந்த அனைவருக்கும் சிங்களம் தெரிந்திருப்பது நல்லது' என்கிறார்.

'ஜெர்மானியர்களுடன் வேலை செய்யும் அனுபவம் அலாதியானது. மோதல் இல்லை; ஈகோ இருக்காது. எனக்குத்தெரியாததை அவர்களிடம் கேட்கலாம்; அவர்களுக்குத்தெரியாததை நம்மிடம் கேட்பார்கள். பரஸ்பரம் கருத்துப்பரிமாற்றம் இருக்கும். ஏராளமான ஜெர்மன் படங்களுக்கு ஒளிப்பதிவு, எடிட்டிங், கோ-டைரக்ஷன் செய்திருக்கும்/செய்யும் ரகசியம் அதுதான்! ஒரு சின்ன விஷயத்திற்கு ஆயிரம் கேள்விகளும் விவாதங்களும் செய்யும் நம்மாட்கள் சிலருடன் எனக்கு எப்போதும் ஒத்துவராது. பெரியவர்களை விட மாணவர்களையும் இளைஞர்களையும் என்னிடம் விட்டால் நன்றாகச் செயல்படமுடியும்' என்று தனது ஆதங்கத்தையும் விருப்பத்தையும் வெளிப்படுத்துகிறார்.

கமலுடன் வேலை செய்த அனுபவங்கள், கன்னட படத்தில் பணிபுரிந்தது, திரையுல தனது நண்பர்கள், ஆபாவாணன் டீமில் வேலை செய்த தனது சிநேகிதர்கள் பற்றியெல்லாம் நம்மிடம் அளவளாகிறார். தான் நிறைய ஜெர்மன் படங்களில் வில்லனாக நடித்திருப்பதையும் மாணவர்களின் குறும்பட இயக்கத்தில் தனது ஈடுபாட்டையும், சுவிஸ் பட கழகத்தில் தனது பங்கு மற்றும் ஜூரியாக தான் ஆற்றிவரும் பணியைப் பற்றியும் குறிப்பிடுகிறார்.

ஆங்கிலத்திலும் ஜெர்மன்மொழியிலும், தான் இப்போது குறும்படங்கள் தயார் செய்வது பற்றியும் சிங்களத்தில் ஒரு படம் செய்து அதைத் தமிழில் மொழிமாற்றம் செய்வது குறித்தும் பேசுகிறார். 'தமிழில் அல்லது தமிழ்நாட்டினருக்கென படம் செய்வது பெரியவிஷயமா என்ன' என்று கேட்கிறார். (ஹி..ஹி, மன்னிச்சுக்குங்க மானஸஜென்!)
'சிங்கப்பூரில் குறும்படங்கள் தயாரிப்பது தொடர்பாக, என்னால் எல்லாவித உதவிகளையும் வழங்கமுடியும்' என்கிறார் ஆர்வமாக. 'கதைகளைத் தயார் செய்துகொண்டு, திரைக்கதையை எனக்கு அனுப்பி வையுங்கள், என்னால் முடிந்த உதவிகளை உங்களுக்குச் செய்கிறேன், கதைகளில் நிறைய பாத்திரங்கள் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்' என்கிறார். சிங்கப்பூரில், 1981 வாக்கில், சிங்கப்பூர் பிராட்கேஸ்டிங் கார்ப்பொரேஷனிலும் (SBC), தமிழ் முரசில் சினிமா செய்திகள் எழுதியதையும், வானொலியில் பங்குபெற்றதையும் இனிமையாகப் பகிர்ந்துகொள்கிறார்.

சிங்கப்பூரில் அவருக்கு நடிகர்-நடிகைகள் தேவை எனச்சொன்னார்! அப்படியே மென்பொருள் வல்லுனராய் இன்னொரு பெண்ணும் பார்க்கிறாராம்! முன்னது 'தான் இயக்க', பின்னது 'தன்னை இயக்க'வாம்! அட்டகாசச் சிரிப்புடன் சொல்கிறார் பிரம்மச்சாரியான அஜீவன் தமிழ்ச்செல்வன்!

(நேரிடையாக உரையாடியதன் ஞாபகத்திலிருந்து எழுதியவை. கருத்துகளோ வார்த்தைகளோ மாறியிருக்கலாம்!)

எம்.கே.குமார்

Tuesday, April 26, 2005

டாக்டர். ரெ. கார்த்திகேசு -- ஒரு விமர்சன முகத்துடன்!

கடந்த ஞாயிறு அன்று மாலை 4.30 மணிக்கு சிங்கப்பூரின் உட்லாண்ட்ஸ் நூலக கலையரங்கில், மலேசியாவின் மாபெரும் எழுத்தாளர்களில் ஒருவரும் பல்வேறு படைப்புத்தளங்களின் வழியாக இலக்கிய உலகில் அரும்பணி ஆற்றிவரும் அறுபது வயது இளைஞருமாகிய டாக்டர். ரெ.கார்த்திகேசு அவர்களுடைய இரு புத்தகங்கள் வெளியீட்டு விழாவும் மற்றும் வாசக எழுத்தாளர்களுடான ரெ.கா அவர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை திருமதி. ரமா சங்கரன் கவனித்துக்கொள்ள, சிங்கை முரசு மற்றும் சிங்கை கலை இலக்கிய குழுவின் அங்கத்தினர்கள் கூட்டத்தை ஒருங்கிணைக்க, தேசிய நூலக வாரியம் விழாவை நடத்த உதவியது.

கூட்டத்தில் சிங்கப்பூரின் பிரபலங்கள் பலரும் ஆர்வமுடன் கலந்துகொண்டு மகிழ்ந்தனர். நிகழ்ச்சியில், திருமதி .ரெ.கார்த்திகேசு அவர்களைத்தவிர, 'உத்தமம்' அமைப்பின் தலைவர் திரு. அருண் மகிழ்நன், அவரது சகோதரியும் மலாய பல்கலைக்கழக பேராசிரியையுமாகிய திருமதி. முல்லை அவர்கள், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக பேராசிரியர் சுப. திண்ணப்பன், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தலைவர் கவிஞரேறு அமலதாஸ், முதுபெரும் 'ஆசியான்' கவிஞர் திரு. க.து.மு. இக்பால், முரசு நிறுவனர் திரு. முத்து நெடுமாறன், விகடன் புகழ் ஜே.எம்.சாலி, தேசிய பல்கலைக்கழக ஆய்வலர் திரு. இராம. கண்ணபிரான், தேசிய நூலக வாரிய தலைவர் திருமதி. புஷ்பா, வசந்தம் சென்ட்ரல் தொலைக்காட்சியின் முன்னாள் நிகழ்ச்சி அமைப்பாளர் திரு. பாஸ்கரன், சிங்கப்பூர் கவிஞர்களில் குறிப்பிடத்தகுந்தவர்களில் ஒருவரான திரு. இந்திரஜித், எழுத்தாளரும் கவிஞருமான திரு. ரெ.பாண்டியன், மானசஸென் ரமேஷ், ஒலி 96.8ன் மீனாட்சி சபாபதி, நடன ஆசிரியை அருண் பிரியலதா அவர்கள், திரு ரமேஷ், திருமதி சித்ரா ரமேஷ், திருமதி ஜெயந்தி சங்கரி, திருவாளர்கள் பாலு மணிமாறன், பனசை நடராஜன், மூர்த்தி, அருள் குமரன், 'குழலி' வலைப்பூவின் புருஷோத்தமன், திரு. சாந்தன் என ஏராளமானோரும் இன்னும் தமிழாசிரியர்கள் மற்றும் வாசக ஆர்வலர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
Image hosted by Photobucket.com

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதோடு வரவேற்புரையையும் நிகழ்த்தினார் நண்பர் ஈழநாதன். வரவேற்புரையைத் தொடர்ந்து ரெ.கார்த்திகேசு அவர்களின் 'விமர்சன முகம்' கட்டுரைத்தொகுப்பும் 'ஊசியிலை காடுகள்' சிறுகதைத்தொகுப்பும் வெளியிடப்பட்டன. அதனைத்தொடர்ந்து ரெ.கா அவர்களது படைப்புளைப்பற்றிய தனது கருத்துகளைச் சொல்ல வந்தார் நண்பர் திரு. அருள்குமரன். 'சூரியனுக்கு டார்ச் அடிக்கும் சுண்டெலியாய்' தன்னை உருவகப்படுத்திக்கொண்ட அவர், ரெ.காவின் அறிவியல் புனைகதைப்பற்றியும் சொன்னார். ஏதோ ஒரு கதையில், 'ஏனய்யா அவரைக்கொன்றுவிட்டீர்கள்' என்று கண்ணீர் மல்காத குறையாக வருத்தம் தெரிவித்தார்.
Image hosted by Photobucket.com

அவரைத்தொடர்ந்து வந்தார் அறுபது வயது இளைஞர் திரு. அருண் மகிழ்நன். ரெ.காவின் நெருங்கிய நண்பரான இவரைப் பேச வைப்பதற்கு பின்னிருக்கும் காரணமாய், ஈழநாதன், "ரெ.காவின் படைப்புகளைப் பற்றிப் பேச எல்லோரும் இருக்கிறார்கள், ரெ.காவைப்பற்றிப்பேச அவரது நண்பரான நீங்கள் தான் சிறந்தவர்" என்று சொல்லி அப்படியே திருமதி. முல்லை அவர்களையும் பேசவைத்தார். 'எழுத்தை மட்டும் படித்துவிட்டு அப்படியே விட்டுவிட வேண்டிய எழுத்தாளர்களை ஏராளமாய் பார்த்ததாகச்சொல்லிய அருண்மகிழ்நன் அவர்கள், ரெ.கா வை தமது 40 ஆண்டுகால நண்பர்' என்றார். மிகச்சிறந்த மனிதர் என்றும் சொன்னார். அதையே வழி மொழிந்தார்கள் அவரது தங்கையாரும்.

கலந்துரையாடலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக இருந்ததால் வாழ்த்துரை மற்ற உரைகளெல்லாம் தவிர்க்கப்பட்டிருந்தன. ஏற்புரைக்கு வந்தார் திரு. ரெ.கா. அவருக்கு மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்றார் திருமதி சித்ரா ரமேஷ்.
தனது ஏற்புரையில் சிங்கப்பூர் மலேசிய உறவைப் பற்றிக் குறிப்பிட்ட ரெ.கா, மலேசியாவின் தற்போதைய இலக்கியப் போக்கு குறித்தான தனது பார்வையைச் சொன்னார். கலந்துரையாடல் தொடங்கியது.

ஒட்டுமொத்த கலந்துரையாடலிலும் கேட்கப்பட்ட கேள்விகள் ஐந்திலிருந்து ஆறுக்குள் இருக்கலாம். கேள்விகள் மிகப்பெரிய பதில்களுக்குள்ளே புகுந்து கலந்து கொண்டிருந்ததால் எல்லாம் சில குறிப்பிட்ட விஷயங்களுக்குள்ளே சுற்றிச் சுற்றி வந்தன. சிங்கப்பூரின் தற்போதைய இலக்கியப்போக்கு குறித்து அறிந்துகொள்ள விரும்பிய ரெ.காவுக்கு, திரு. அமலதாஸ் அவர்கள் தன்னால் முடிந்தவரை எல்லாம் எடுத்துச்சொன்னார். சுப. திண்ணப்பன் அவர்கள், "மலேசியாவில் தமிழை தமிழர்கள் வளர்க்கிறார்கள், சிங்கப்பூரில் அரசாங்கம் வளர்க்கிறது" என்று சொன்னார்.
Image hosted by Photobucket.com

சூழ்ந்துகொண்டிருந்த முக்கிய விடயங்கள்:

1. சிங்கப்பூர் அல்லது மலேசிய இலக்கியம் (வரலாறு) என்பது (சொல்வது) என்ன? புலம் பெயர்ந்த படைப்பாளர்களின் படைப்பு இத்தகைய சிப்பிக்குள் அடைபடுமா? அவர்களது படைப்புகள் அந்தந்த வாழும் நாட்டு இலக்கியத்தைச் சேருமா? இல்லை சொந்த நாட்டையா? இல்லை பயணக்கட்டுரை தவிர்த்து சிங்கப்பூரைப் பற்றி கதையோ நாவலோ எழுதியிருந்தால் அது சிங்கப்பூர் இலக்கியத்துக்குள் சேருமா? இல்லையா?அகிலனின் நாவலில் ஆரம்பித்து புயலிலிலே ஒரு தோணி வரை பேச்சு சென்றது. 'சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்து எழுதுபவர்களது படைப்புகள் மட்டுமே சிங்கப்பூர் இலக்கியம்' என்று யாரோ ஓரிருவர் சொன்னார்கள்.

2. இணையம் தொடர்பான பேச்சுகள்: நாடு மறைத்து, நாட்டின் எல்லை மறைத்து, மக்களின் பிரிவுகொண்ட மனம் மறைத்து எல்லா இடைவெளிகளையும் எல்லைகளையும் விலக்கி புது இலக்கியம் படைத்துக்கொண்டிருப்பவை இணையத்தமிழ் என்றார் திரு. ரெ.கா. இணையத்தில் இலக்கியத்தரமான விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன என்றார். அச்சு ஊடகமெல்லாம் ஆடிப்போகும் அளவுக்கு நல்ல படைப்புகளும் ஏராளமான விஷயங்களும் இங்கு இருப்பதாகச்சொன்னார். வருங்கால இணையம் தமிழுக்கு படைக்கப்போகும் நன்கொடை மிகச்சிறப்பாக இருக்கலாம் என்றார். இணைய உறவுகளை நேரில் சந்திக்கும் போது கிடைக்கும் இன்பம் பற்றியும் சொன்னார்.
3. மலேசியாவில் 'காவ்யன்' என்ற தமிழ் எழுத்தாளர்களைக் கொண்ட அமைப்பு, தமிழில் கதைகள் எழுதுவதைக் குறைத்துக்கொண்டு மலாய் மொழியில் நிறைய எழுதுவதாகச் சொல்லி வருத்தப்பட்டார். 'நமது கலாசாரத்தை அவர்களும் அறிந்துகொள்ளும் வண்ணம் மலாய் மொழியில் எழுதுவது நல்லதுதானே, அதை ஏன் தவறு என்கிறீர்கள்' என்று ஒரு வாசகி கேட்டார்.

4. சிங்கப்பூர் தமிழ் இலக்கிய வளர்ச்சி (பிறப்பு வளர்ப்பு இணைந்து!)- அதன் திறனாய்வு பற்றிய (அவநம்பிக்கை) கருத்துகள்- தமிழ்முரசு தமிழுக்கு ஒதுக்கும் பக்கம் குறைவது- என இவ்விஷயங்கள் விவாதத்தில் பெரும் பங்கு பெற்றிருக்க, 'சிங்கப்பூரில் இருக்கும் மிக இளைய எழுத்தாளருக்கு வயது 42. அந்தளவுக்கு இங்கு தமிழ் வளர்ச்சி இருக்கிறது.' என்று தனது வேதனையைப் பகிர்ந்துகொண்டார் ஒரு வாசகர். இக்கேள்விக்குப் பதிலை கவிஞரேறு அமலதாஸ் சொல்லியது பின்வருமாறு இருந்தது. "இதற்குக்காரனம் சமூகம் தானே ஒழிய அரசாங்கம் இல்லை! அரசாங்கம் இதோ இப்போது நடக்கும் போட்டிக்குக் கூட பத்தாயிரம் வெள்ளி கொடுக்க முன்வந்திருக்கிறது!'

இக்கேள்விக்கு சிறு விளக்கமாய் உள்ளே வந்த அருண்மகிழ்நன் அவர்கள், 'ஒரு உரசல் இல்லாமல், எத்தகைய படைப்புமோ இலக்கிய வளர்ச்சியோ நடைபெற வாய்ப்பில்லாது இருக்கலாம்; வாய்ப்புக்குறைவாக இருக்கலாம். ஆனால் பொருளியலிலோ கருத்திலோ, தனிமனித படைப்புகளிலோ ஒரு உரசல் இருக்கும்பொழுது எழுத்தாளர்களும் உருவாகலாம்; படைப்புகளும் உருவாகும்' என்றார்.

5. இணைய இதழ் மற்றும் அச்சு இதழ்களின் தரமும் அதன் இலக்கியப் பங்கும் வெகுவாக விமர்சிக்கப்பட்டன. அடிக்கடி ஜெயமோகன் என்ற வார்த்தையையும் சுந்தர ராமசாமி என்ற வார்த்தையையும் கையாண்டு மேற்கோள் காட்டினார் திரு. ரெ.கா. பின் நவீனத்துவம் சிங்கப்பூருக்கோ மலேசியாவுக்கோ வந்தால் தன்னைப்போன்றவர்களின் பாடு திண்டாட்டமே என்றார் கிண்டலாக. மலேசியாவில் அடுத்த தலைமுறையில் யாரும் குறிப்பிடும்படியான எழுத்தாளர்கள் இல்லை என்பதையும் வருத்தத்தோடு சொன்னார். புதுக்கவிதை மட்டுமே வாழலாம் என்றும் சொன்னார்.

6. அறிவியல் புனைகதைகளைப் பற்றி அளவளாவப் பேசினார் ரெ.கா. அருள்குமரனும் தான் படித்த எல்லாக் கதைகளிலிருந்தும் பல கேள்விகளைக்கேட்டார். அறிவியல் புனைகதை மட்டுமின்றி எல்லா கதை- இலக்கிய வட்டங்களையும் புகுந்து நுழைந்து வந்தார் ரெ.கா.
கூட்டத்தின் முடிவில் திருமதி. புஷ்பா நன்றி சொல்ல, கூட்டம் கலைந்தது. இந்நிகழ்வினை முதன்முறையாக நடத்திய கலை இலக்கிய குழு பற்றி ஒரு முழுமையான அறிமுகத்தை பார்வையாளர்களுக்கு வழங்கினார் ஈழநாதன். கைகோர்த்து செய்ல்படவே இக் 'கலை இலக்கிய குழு' என்பதைத் திட்டவட்டமாக எடுத்துரைத்தார். வலைப்பூ பற்றியும் சொன்னார்.

ஒட்டுமொத்த நிகழ்வின் மழையில் அனுபவமின்மையின் உருவம் சில இடங்களில் நனைந்து வெளிப்பட்டது. பேச வந்த கருத்துகள் அனைத்தும் கடல் போலிருக்க, கட்டு மரத்தைப் பற்றியே கொஞ்சம் அதிகமாக பேசியது போலிருந்தது. சில முக்கியப் 'பிரச்சனை முதலைகள்' தலையை நீட்டிப் பார்த்துவிட்டு மீண்டும் கடலுக்குள் புகுந்துகொண்டன. எல்லாம் ஆரம்பிக்கும் முன்பும், முடிந்த பின்பும் 'சுவீட் காரம் கா·பி' வழங்கப்பட்டது.

திரு. ரெ.கா அவர்களைப்பற்றி, அவரது இலக்கியவாழ்க்கை பற்றி, மலேசிய- சிங்கப்பூர் இலக்கியப்போக்கு குறித்தான அவரது பார்வை பற்றி, இணையம் பற்றி, இணையத்தில் அவருடைய படைப்பு பற்றி என விரிவான ஒரு அறிமுகத்துக்கு இச்சந்திப்பு உதவியது என்பதில் கொஞ்சம் கூட சந்தேகமில்லை.

அரங்கத்தின் ஒரு மூலையில் இருந்த அந்த நிழல் கொஞ்சம் சிரித்து, "எக்ஸ்யூஸ் மி சீமான்களே! சீமாட்டிகளே!! நீலகண்ட சாஸ்திரி வந்திருக்கிறார், கொஞ்சம் பார்த்துவிட்டுச் செல்லுங்கள்!" என்பது போலிருந்தது எனக்கு! அது பிரமையாகக் கூட இருக்கலாம்!

எம்.கே.குமார்.

(அனைத்தும் நினைவிலிருந்து எழுதியவை! சில கருத்துகளோ வார்த்தைகளோ மாறியிருக்கலாம்!)

நன்றி: திருமதி. ரமா சங்கரன்
தேசிய நூலக வாரியம்
சிங்கை கலை இலக்கிய குழு.

Sunday, April 17, 2005

மும்பை எக்ஸ்பிரஸ்-விமர்சனம்!

மும்பையின் சர்க்கஸ் ஒன்றில் மரணக்கிணற்றுக்குள், 'மும்பை எக்ஸ்பிரஸ்' பைக் ஓட்டும் அப்பாவி- அவினாசி (கமல்). அக்காவின்(கோவை சரளா) அரவணைப்பை மட்டுமே கண்ட அவன் அவளுக்காக மட்டும் எப்போதும் மனம் இறங்குகிறான். அவள் கண் கலங்குவதை காணச்சகியாத அவன், அவளுக்காக அவளுடைய கணவருக்காக, சிறு குழந்தைகளைக் கடத்தி பணம் பறிக்கும் (குதிரையை சவாரிக்கு விட்டும் பிழைக்கும்!) கும்பலிடம், ஒரு சந்தர்ப்பத்தில் சேர நேர்கிறது. அக்கும்பலில் ஏற்கனவே தலைமை நிர்வாகி 'பெர்சன்' 'ஏ', பசுபதி. அவருக்குத் துணையாள், ஏற்கனவே ஆறு குதிரையும் இரண்டும் பெண்டாட்டியும் வைத்திருந்தவரின் மகனான 'பெர்சன்' 'பி' வையாபுரி. இக்கூட்டத்தில் அக்காவின் கணவருக்குப் பதில், பெர்சன் 'புது' 'சி' யாகச் சேர்கிறார் கமல்.

குழந்தை கடத்தல் வைபவத்திற்கு முன் அவர்களது காரில் அடிபட்டு அவர்களோடு சேர்ந்துகொள்கிறான் ஒரு தெலுங்கு பேசும் இன்சூரன்ஸ் ஏஜண்ட்(ரமேஷ் அரவிந்த்!). குழந்தை கடத்தி முடிக்கப்பட (கடத்துவதற்குள் பெரும்பாடு ஆகிவிடுகிறது), கடத்திய குழந்தை வேறொன்றாகவும் கடத்தியதாக பணம் வசூலித்த குழந்தை வெறொன்றும் ஆகிவிடுகிறது. குழந்தை கடத்தப்பட்டதாக பணம் கொடுத்தவர் ஒரு கோடீச்வர செட்டியார் (சந்தானபாரதி!). கடத்திய குழந்தை, போலீஸ் உயரதிகாரியான நாசரின் ஆசைநாயகிக்கு பிறந்த பையன். அந்த ஆசை நாயகி மனீஷா கொய்ராலா.

பணத்தைக் கொடுத்து குழந்தையை மீட்க சந்தானபாரதியிடம் கொடுக்கச்சொல்லி நாசர், ரகசிய போலீசான சக்சேனாவிடம் கொடுத்தனுப்ப, சந்தானபாரதி, அவினாசிதான் ரகசிய போலிஸ் என அவரிடம் ஏமாந்து நிற்க, இனிமேல் நாசரை நம்பிப்பயனில்லை என 'அகல்யா' மனீஷா(அக்கு என்று கமல் ஆசையாகக் கூப்பிடுகிறார்!) நினைத்து, பணத்தோடு வேறெங்காவது சென்று செட்டில் ஆகிவிட மும்பை எக்பிரஸ¤க்குச் செல்ல, பணத்தைத் தேடி சந்தானபாரதி சக்சேனாவோடு பறக்க, தனது கூட்டாளி 'புது சி' தங்களை ஏமாற்றிவிட்டதாக பசுபதி அன் கோ தேட, கமலையே தனது தந்தை ஸ்தானத்தில் வைத்து அன்புக்கு ஏங்கும் குட்டிப்பையன் மனீஷாவை கமலோடு சேர்க்க முயற்சி பண்ண கடைசியில் கிடைத்த பணத்தை வைத்து எல்லோருடைய பிரச்சனையும் தீர்ந்து, சொந்த பிஸினஸாக மரணக்கிணற்றை வாங்கி சர்க்கஸ் நடத்துகிறார்கள் அவினாசி அன் கோ.

மும்பை எக்ஸ்பிரஸ் என்ன, ஜப்பான் எக்ஸ்பிரஸ் வேகத்திற்கு பறக்கிறது கதை! அம்மாவின் பாசத்திற்கு ஏங்கும் தன்னின் இன்னொரு வடிவமாக கமல் அச்சிறுபையனை காணும் கணங்களில் மட்டும் (இடைவேளைக்குப்பிறகு கொஞ்ச நேரம்!) கதை லேசாக நகர்வது போலிருக்கிறது. அதுவும் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகும் தொடர் தருணத்திற்கு இது ஒரு இடைவேளையாகவே இருக்கிறது.

இத்துனூண்டு ஊறுகாயை வைத்துக்கொண்டு ஒரு ·புல் பாட்டில் சரக்கை உள்ளே ஏற்றுவதைப்போல திரைக்கதை பின்னியிருக்கிறார் கமல். ஆள்மாறாட்ட திரைக்கதையில் கமலுக்கு இணை இனி இல்லை என்றே சொல்லுமளவுக்கு இருக்கிறது திரைக்கதை. வசனத்தில் தன்னிடம் வசனம் எழுதிய எல்லோரிடமும் கற்றுக்கொண்டதை வைத்து நல்ல மார்க்கே வாங்கியிருக்கிறார் கமல். கிரேஸி மோகனின் சாயல் பல இடங்களில் பளிச்சிட்டாலும் கிரேசி மோகன் எழுதியிருந்தால் இன்னும் தூக்கிச்சாப்பிட்டிருப்பார் என்று தோன்றுகிறது; ஆனால் கிரேசி மோகன் எழுதாதது படம் ஓடுவதற்கு இன்னும் கொஞ்சம் பலம் என்றே நான் நினைக்கிறேன். நொடிக்கு ஒரு டயலாக் காமெடியென தொடர்ந்து வரும் கிரேசி மோகனின் காமெடி எல்லோராலும் புரிந்துகொள்ள முடியாமல் (தொடர்ந்து வெடித்துக்கொண்டேயிருக்கும் காமெடி வெடி!) காதலா காதலா கதை ஆகிவிட்டிருக்கலாம்! கமல் எழுதியதால் அது தவிர்க்கப்பட்டிருகிறது. கமலுக்கு வசனத்திற்கு அறுபது மதிப்பெண்கள் தாராளமாய் வழங்கலாம்.

யார் யாரிடம் என்னென்ன திறமைகள் இருக்கின்றன என்பதைக்கண்டறிந்து அவர்களை முழுமையாகப்பயன்படுத்திக்கொள்வதற்கு சினிமாவில் மிகத்திறமை வேண்டும். அது கமலிடம் இருக்கிறது என்பதெல்லாம் நான் இங்கு சொல்லவேண்டிய அவசியம் இல்லை. பட்டாசு பாலாவாகவும், எம்.எல்.ஏவின் ரௌடித் தம்பியாகவும், கொத்தாளத்தேவராகவும் திரிந்த பசுபதியை வைத்து இவ்வளவு அழகான காமெடி செய்யமுடியும் என்பதை கமலைத்தவிர யாரும் யோசிக்க மாட்டார்கள். சந்தானபாரதி, வையாபுரி மற்றும் ரமேஷ் அரவிந்தையும் சரியாக பொருத்தி விட்டிருக்கிறார் கமல். பணம் விளையாடும் சீரியஸான காமெடி கதையில் இன்சூரன்ஸ் ஏஜெண்டுகளின் பாதிப்பை மிக அழகாக இணைத்துகலக்கியிருக்கிறார். ரமேஷ் அரவிந்த நன்றாகப்பண்ணுகிறார். படத்தின் பின்பாதியில் கொஞ்சம் நேரம் வயிறு வலிக்கும் அளவுக்கு 'செம' காமெடி.

நாசர், ராஜ்கமல் பிலிம்ஸின் ரெகுலர் கஸ்டமர் ஆக்டர். அவர் கேரக்டரை யாரை வைத்து வேண்டுமானாலும் பண்ணலாம் என்பதால் நாசர் நடிப்புக்கு ஏற்ற தீனி கிடைக்கவில்லை. அவரின் ஆசைநாயகியாக வரும் 'முன்னாள் கிளப் டான்சர்' மனீஷா பணத்திலேயே குறியாய் இருக்கிறார் எனினும் அதுதானே அவர்களுக்கு வாழ்க்கை! கிளைமேக்ஸ் வரை அவர் 'பணம் பணம்' என்பதிலே மனதை வைத்து இருப்பதால் கமலோடு அவர் மனதாலும் இணைகிறாரா என்பது நமக்கும் ஒரு கேள்வி!

தமிழிலும் சக்சேனா காரெக்டரை அவரே செய்தது நன்றாக இருக்கிறது. இந்தமாதிரி சீரியஸ் கம் காமெடி காட்சிக்கு அவர் மிகச்சரியான ஆள். டிரா·பிக் போலீஸ் மற்றும் கோவை சரளாவின் கணவராய் (வரும் தீனா; அறிமுகம். கமல் இவருக்கு குரல் கொடுத்திருக்கிறார்!) வரும் ஹிந்தி நடிகர்களும் சிரிக்க வைக்கிறார்கள். குரங்கும் குதிரையும் கூட நடிக்கின்றன. குதிரை ஓகே. பல காமெடிக்காட்சிகள் குதிரையால் வருகின்றன.

இத்தகைய ஒரு படத்துக்கு என்ன பெரிதாய் பாடல்கள் வைக்கமுடியும் என்பதால் பாடலில் முக்கிய கவனம் செலுத்தாதது போல இருக்கிறது. பையனின் 'அப்பா-அம்மா' செண்டிமெண்டுக்கும் கமலின் குரங்கு சேட்டைகளுக்கும் என இரு பாடல். பின்னணி இசையில் இசைராஜா இரு இடங்களில் தனித்து இனிமையாகத் தெரிந்தார்.

கமலுக்கு காது கேட்காது என்பதும் அவர் அனாதை என்பதும் அவர் சொல்ல நினைக்கும் கருத்துகளுக்கு பின்புலம் சேர்க்கின்றன. மரணத்தைப் பற்றியும் வாழ்க்கையைப் பற்றியும் கூட கமல் வசனங்களில் வருகின்றன. பையன் 'ஹர்திக்' கலக்கல். கமல் சில காட்சிகளில் ரிஸ்க் எடுத்திருக்கிறார். எடிட்டிங் செய்தவரும் கஷ்டப்பட்டிருப்பார் போல!

டிஜிட்டல் தொழிட்நுட்பம் திருட்டு விசிடியில் படம் பார்ப்பது போன்ற நடப்பைத் தருகிறது. உண்மையிலேயே இது இப்படித்தான் இருக்குமா இல்லை தியேட்டரில் ஏதாவது செய்யவேண்டுமா? சில இடங்களில் (குறிப்பாக லாங் ஷாட்) மிக மோசம். பொருட்செலவு அவ்வளவாய் ஆகியிருக்காது என்பது என் எண்ணம். மும்பை எக்ஸ்பிரஸ் என்ற பெயரின் காரணமாக ஏற்படும் காமெடி காட்சிக்கு, தமிழர் பாதுகாப்பு சபையினர் சிரிக்காமல் வெளியே எழுந்து வந்தால் படத்தின் பெயரை நானும் மாற்றச்சொல்கிறேன்.

டிவியிலோ திரை விமர்சனத்திலோ துண்டு துண்டாகக் காட்சிகளை நீங்கள் பார்த்தீர்களானால் 'என்னய்யா படம் இது' என்று நினைக்கத்தோன்றலாம். ஆனால் திரையில் முழு நீள படத்தில் காட்சிகள் அனைத்திலும் காமெடி.

கமலின் ரசிகன் என்பதால் சொல்லவில்லை, காமெடியின் ரசிகன் என்பதால் சொல்கிறேன், இந்தப்படத்துக்கு நான் கியாரண்டி. குழந்தைகளோடு செல்லுங்கள். மிகவும் ரசித்துச் சிரித்துவிட்டு வரலாம்.

எம்.கே.குமார்.

Tuesday, April 12, 2005

இந்தியா- வல்லரசாகிறதா?

திடீர் பணக்காரனைக் கல்யாணம் செய்தவளின் அல்லது புதிதாய் 'ஸ்டார்' ஆனவனின் பொலிவான முகத்தைப்போல ஜிவ்வென்றிருக்கிறது இந்தியா. 'இந்த வாரம் இவர்', 'அடுத்த மாதம் அவர் மற்றும் இவர்' என இந்தியாவிற்கு விஜயம் செய்யும் பெரிய (நாட்டு மற்றும் குட்டி நாட்டு) தலைகளின் பெயர்கள் இப்போதெல்லாம் கண்களில் நிறைந்து போகின்றன. விடாமல் கை குலுக்கிக்கொள்ளும் காட்சிகளும் கூட அரசியல் அரங்கில் நிறைய காணக்கிடைக்கின்றன. இவை எல்லாம் சொல்லும் சேதிகள்தாம் என்ன? 'சின்ன' அண்ணனாகிறது இந்தியா!

'இந்தமாதம் வந்த நிலவாய்' இந்தவாரம் இந்தியா வந்தவர் சீனாவின் புது அதிபர் திரு.வென். மன்மோகன்சிங் அவர்களின் கைகளைக் கெட்டியாகப்பிடித்துக்கொண்டு இப்போது இந்தியத்தலைமை என் கைகளுக்குள் இருக்கிறது என்று சொன்னாரா தெரியவில்லை. ஆனால் இரண்டு மாதம் அல்லது இரண்டு வருடம் போனால் தெரியும்; சொல்ல மறந்தாரா இல்லை சொல்ல விரும்பவில்லையா என்று!

15 ஒப்பந்தகள் கையெழுத்தாகியிருக்கிறதாம் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே. மிகவும் நல்ல சேதி! 'இரண்டு கைகள் நான்கானால் இருவருக்கும் எதிர்காலம், மேற்கத்தியர்களே நில்லுங்கள் மேடையை விட்டு ஓடுங்கள்...' என்று பாடல் மட்டும்தான் பாடவில்லை திரு. வென். மத்தபடி அவர் ஆசை அனைத்தையும் சொன்னார்.

மென்பொருளின் உலக (புலி) ராஜாவும் வன்பொருளின் உலக (சப்பைமூக்கு) ராணியும் இணைந்தால் உலகையே ஆட்டிவைக்கலாம் என்று அவர் மிகுந்த ஆவலோடுதான் சொல்லியிருக்கிறார்.

இவற்றையெல்லாம் கூரிய நாசியோடு மோப்பம் பிடித்துக்கொண்டிருக்கின்றன அமெரிக்க புலனாய்வுப் புலிகள். எங்கே இடித்தால் இவர்களுக்கு வலிக்கச்செய்யலாம் என்பது அவர்களின் நேரடியான தற்போதைய இலக்கு. அண்மையில் வந்துவிட்டுச்சென்ற அமெரிக்காவின் புதிய தற்காப்பு அமைச்சர் காண்டோலீசா ரைஸ்ஸ¤க்கு (அவரே ஒரு பெண்புலி!) மோப்பம் பிடிப்பது ஒன்றும் கஷ்டமான வேலையாக இல்லை. வீட்டிற்கு வந்த மருமகள் விளக்கு வைப்பதைப்போல இந்தியா வந்துவிட்டுச்சென்றதும் உடனே விளக்கைப் பற்ற வைத்தார் அவர். பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் விற்பனை! பலே லேடி பலே!

இப்போது வென்னின் பயணம் மிகவும் உன்னிப்பாய்க் கவனிக்கப்படுகிறது. பரம்பரை பரம்பரையாய் அடித்துக்கொண்டு செத்த பங்காளிகள் கூட இப்போதெல்லாம் மனதளவில் இல்லாவிட்டாலும் 'வரும்படிக்காகவாவது' சமாதானமாகி வருவதை உலகின் எல்லா திசைகளிலும் காணமுடிகிறது. தைவான்- சீனா, சிங்கப்பூர்-மலேசியா, வடகொரியா-தென்கொரியா, இந்தியா-பாகிஸ்தான், அமெரிக்கா-சீனா, ஆஸ்திரேலியா-நியூஸிலாந்து என நமது கண்களே அதற்குச்சாட்சி.

இந்நிலையில் உலகப்பொருளியலில் கவனிக்கத்தக்க மாற்றம் பெற்று வரும் இவர்கள் 'இருவரும்' ஒன்று சேர்ந்தால் சிக்கல்கள் ஆகிவிடுமே என்று 'பெரிய அண்ணன்கள்' நினைத்து பயப்படுவது தெளிவாகிறது. இதற்கு வலு சேர்ப்பது போல சிக்கலான பிரச்சனைகளையெல்லாம் பெரிய மூட்டையாய்க் கட்டி 'பிறகு பார்த்துக்கொள்ளலாம்' என்று இவர்களும் உதறிவிட்டு, 'வரும்படி' வேலையை கவனிக்க ஆரம்பித்துவிட்டார்கள்! எல்லாம் நல்ல படியாய் நடக்கும்வரை நல்லவைதான்.!

இதற்கிடையே இந்தமாதக் கடைசியில் இந்தியா வருகிறார் ஜப்பானிய பிரதமர்! ஆஹா அடுத்த பெருசு! 'வென்'னின் வருகையே அவரைக் கொஞ்சம் யோசிக்க வைத்துவிட்டதாம். முன்னால் போனவர் எல்லா சீட்டையும் பிடித்துவிடுவாரோ என்ற பயமாயிருக்கலாம்; ஆனால் "எங்களுக்கும் இந்தியாவிற்கும் நீண்டநாள் நல்ல தொடர்பு. இதற்கும் அதற்கும் சம்பந்தமுமில்லை; பாதிப்புமில்லை" என்று சொல்லிவிட்டாரவர். விஷயமறிந்தவர்!

ஆசியாவில், சீனாவும் ஜப்பானும் பிற்காலத்தில் பெரிய எதிரிகளாகலாம். (இரண்டாம் உலகப்போரை மறக்கவில்லை சீனா!) இந்தியாவிற்கு ஜப்பான் எப்போதும் நண்பன். சீனா தற்போதைய நண்பன். 'வீட்டோ' சட்டை போட்டிருப்பவனை விட 'அச்சட்டைக்காய்' நம்மோடு வீதியில் போராடும் ஆள்தான் நம்முடைய தற்போதைய இலக்கு. இவ்விஷயத்தில் ஜப்பானை எதிர்த்து நேற்றுகூட பெரிய கலவரம் சீனாவில்!

எல்லாம் பார்க்கும்பொழுது இந்தியா 'லைம்லைட்டில்' இருப்பது தெரிகிறது. தக்கவைப்பது நம் தருதலைகளின்...சாரி, நம் தலைவர்களின் கையில் இருக்கிறது! மேடையில் ஏறுவார்களா? இல்லை வழக்கம் போல மேடைக்கு விளக்குப்பிடிப்பார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

எம்.கே.குமார்

Monday, April 11, 2005

மாலனுக்கு ஒரு கடிதம்! பி.கே.எஸ்ஸுக்கும்!

அன்பு மாலன் அவர்களுக்கு,

வலைப்பூக்களின் ஆரம்பம் முதல் அவற்றில் தாங்கள் காட்டிவரும் காட்டிவரும் ஆர்வமும், தொண்டும் பாராட்டப்படக்கூடியது. உண்மையில், ''அட! மாலனெல்லாம் நமக்கு பின்னூட்டமிடுகிறாரே என்று வலைப்பூக்கள் ஆரம்பித்தவர்கள் இங்கே அதிகம்!'

புற்றீசல்கள் போல கிளம்பி வளரும் இவற்றில் இனிமேல் எதையும் படீக்கவோ எழுதவோ நேரமிருக்காது. (உருப்படியாய் இருக்குமா என்பது பெரிய கேள்வி!) (ஏற்கனவே பல மடற்குழுக்கள் படித்து மாதமாகிறது!) காசி, இப்போதே சிறந்ததையும் அதிக மார்க்கு வாங்கியதையும் போட ஆரம்பித்துவிட்டார். காலை பத்து மணிக்கு போட்ட பதிவு பதினொரு மணிக்கு கீழே சென்றுவிடுகிறது! {:-)} அடுத்து வேறு ஏதேனும் கொண்டு வருவார். இப்படிப்போகும் நிலைமையில் ஒருநாள் எல்லாவற்றையும் இழுத்து மூட்டை கட்டிவிட்டு பொண்டாட்டியையும் பிள்ளையயும் கோர்ட் வாசலில் இருந்து கூட்டி வரவேண்டிய நிலைமை வரலாம். :-)

இணையத்தில் எழுதுபவர்களுக்கு இலக்கியத்தோடு கொஞ்சம் பாலம் ஏற்படுத்துவதில் சுஜாதா, பாரா(பொறுத்துப்பொறுத்துப்பார்த்தார், நேரவிரயம் கண்டு நிம்மதியாய் ஓடிவிட்டார்!), இரா.மு, ஜெ.மோ(ரொம்ப அடக்கி வாசிப்பார் இந்த கச்சடாவெல்லாம் கவைக்குதவாது என்பது தெரியும்!), ஞானி வரிசையில் நீங்களும் இருந்தீர்கள். நான் எதிர்பார்த்த மாதிரியே நடந்துவிட்டது!

எப்போதாவது ஒரு இன்லெண்ட் லெட்டரில் வரும், 'ஒரு பிடி சேற்றை' அள்ளி தூர எறிந்துவிட்டு, எழுத ஆரம்பித்துவிடுபவர்களுக்கு இப்படி முகத்திற்கெதிராய் அளவுக்கதிகமாய் சேற்றை பார்ப்பது அதிர்ச்சியாகத்தான் இருக்கும்!தாமரை இலை தண்ணீர் போல 'ஒட்டாமல் வாழ்ந்தால்' நிற்கலாம் என நினைக்கிறேன். தண்ணீர் இருந்தால்தான் வாழ முடியும் என்றிருந்தாலும் தண்ணீரோடு கலந்து உறவாடி வாழ வேண்டியது அதற்கு அவசியமில்லை.

உங்களது 180 நிமிடங்கள் இருக்கட்டும். உங்களுக்கும் ஜெ.மோ வுக்கும் எப்படி இவ்வளவு நேரம் கிடைக்கிறது என்று நான் மண்டை காய்ந்து போகிறேன்.
இணணயத்திலும் சரி மற்ற அலுவல்களிலும் சரி.

இந்த பிரிவு மற்ற சில ஆக்கபூர்வ விஷயங்களுக்கு உங்களுக்கு உதவுமாயின் சென்று வாருங்கள். கண்டதெற்கெல்லாம் பதில் சொல்லி காலம் கழிப்பது விரயத்தின் உச்சம்!

அண்மையில் அனுராக் வலைப்பதிவில் தங்களது பேட்டியைப் படித்தேன். 'பழைய ஜெயகாந்தனைப் பிடிக்கும்' என்று நீங்கள் சொல்லியிருந்ததையும் அதற்கு சில நாட்களுக்கு முன் நான் ஆர்வமுடன் வாங்கிப்படித்த 'ஹரஹரசங்கர' நாவலின் ஒற்றுமையையும் நினைத்து (சாரு, ஒரு கூட்டத்தில், ஹரஹரசங்கராவை ஜெகே எழுதினாரா? அவர் எழுதுற வேலயை விட்டு ரொம்பநாளாச்சுங்க என்று ஒரு பதில் சொன்னார்!) இதனை ஒரு பதிவாக எழுத எண்ணியிருந்தேன். (எழுதிவிட்டேன், போடவில்லை!) நிற்க.

இதற்கிடையில் பி.கே.எஸ் பதிவை இப்போதுதான் நான் படித்தேன்.ஜெகேவை 'முழுமையாக' இன்னும் படிக்க்வில்லையாதலால் உங்கள் இருவருடைய கருத்துமோதல்களிலும் நிஜம் தெரியவில்லை எனக்கு. ஆனால் தனிமனித தாக்குதல்களுக்கு கொஞ்சம் கூட பஞ்சமில்லை என்றே தோன்றியது.

ஜெகேயைப் பற்றி நீங்கள் எழுதியதில் அளவுக்கதிகமான "யாரையோ திருப்திப்படுத்தும் நோக்கு" இருக்கிறது என்று பி.கே.எஸ் நினப்பாரானால், பி.கே.எஸ்சினுடைய பதிவில் "கொஞ்சம் ரசிகத்தன்மை" இருப்பது என்னால் உணர்ந்துகொள்ளமுடிகிறது!

ஹர ஹர சங்கராவை ஜெயகாந்தன் எழுதியதுபோல 'ஹர ஹர ஜெயகாந்தா'வை பி.கே.எஸ் எழுதியிருப்பது தெரிந்தது. (ஆனால் பி.கே.எஸ் ஜெ.கேயைப் பற்றி நிறைய தெரிந்தவர். அவரைப்படித்தவர்)

ஆகையால் தனிமனித தாக்குதல்களுக்கும் படைப்புகளின் பொதுமதிப்பீடுகளுக்கும் யாரும் இடம் கொடுக்காதீர்கள் என்பதே என் வேண்டுகோள்!நன்றி, மீண்டும் வருக!

எம்.கே.குமார்
*****

அன்பு பி.கே.எஸ்,

இலக்கிய உலகு என்ன, 'எல்லா இடத்திலும் அரசியல்தான்' என்பது இன்றைய உலகில் யாருக்கும் தெரியாமல் இல்லை. சில பெரிய விருதுகளுக்குக்கூட சில நல்ல எழுத்தாளர்கள், கட்சிக்கரை வேட்டி கட்டவேண்டிய காலமாகிவிட்டது. இதிலெல்லாம் புதிது என்று எதுவுமில்லை. (சில சிற்றிதழ் 'சிங்கங்களெல்லாம்' கூட வார இதழ்களில் மண்டியிட்டுக் கிடக்கிறார்கள்!)அதெல்லாம் இருக்கட்டும்.

ஜே.கே.யின் சிகரங்களைக் காட்டுகிறேன் என்று ஜெயஜெய சங்கராவை,
அ.மியையும் கோவை ஞானியையும் கொண்டு காட்டியிருப்பது சரியானதல்ல என்பது என் கருத்து. அதே நாவலை மிகக்கேவலமாக இகழ்ந்தவர்கள் என்று ஒரு இலக்கியவாதிகள் லிஸ்ட் நான் தரட்டுமா? (அ.மி பயங்கரமான கிண்டல் பேர்வழி என்பது வேறு விஷயம்!)

எனது கருத்துப்படி, அந்த நாவல் நடுநில விமர்சனப்பார்வையில் எழுதப்பட்டது அல்ல. (அது கட்டுரை இல்லையே, நாவல் தானே! புனனவடிவம் தானே! அதிலென்ன நடுநிலைப்பார்வை என்று நீங்கள் கேட்டால் அது உண்மை என்பேன்.!)அதற்கு சங்கரரை வைத்து எழுதாமல் யாராவது 'புதுச்சாமியார்' அல்லது 'புதிதாக சாமியாரனவர்' பற்றி கதை எழுதியிருந்தால் பதினைந்து ரூபாய்க்கு பரவாயில்லை என்று விட்டிருக்கலாம்.

சர்ச்சைக்குரிய நேரத்தில் சர்ச்சைக்குரியவரைப் பற்றி சர்ச்சைக்குப்பெயர்போன நாவலாசிரியர் இப்படி, அதாவது 'அவரது தரத்தில்' எழுதாதுதான் வருத்தமளிக்கிறது. (படிக்கும்போது அப்படி நினக்கத் தோன்றுவது வேறு வருத்தமான விஷயம்!) கதையின் ஆரம்பத்தில் "என்ன நடந்தாலும் ஹீரோ நல்லவன்" என்ற முடிவோடு கதையின் போக்கு எழுதப்பட்டதாகவே எனக்குத் தோன்றியது. இது எனது விமர்சனம். இதுதான் சரி என்று சொல்லவில்லை.

இந்த விஷயத்தில் மாலனின் வரிகள் எனக்குப்பிடித்தன. தீப்பொறி பறக்கும் ஜெயகாந்தன் எங்கே? இவர் எங்கே? என்றுதான் நானும் நினைத்தேன். நிற்க.

இப்பதிவில் ஜெகேயை தூக்கிப்பிடிக்கிறேன் பேர்வழி என்று மாலனை, ஒண்ணுந்தெரியாத பாப்பா' ரேஞ்சுக்கு கொண்டு சென்றிருப்பது தவறென நினைக்கிறேன். தமிழ் எழுத்துலகில் அவருக்கும் ஒரு நல்ல இடம் இருக்கிறது!

உங்களது வாதப்படி, மாலன், ஜெகேயைப் பற்றி அப்படி எழுதியது தவறானால், நீங்கள், மாலனைப் பற்றி இப்படி எழுதுவதும் எவ்விதத்திலும் சரியாகாது என்பதும் நீங்கள் இருவரும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள்தானோ என்பதும் நடுநிலைமையாளர்களின் இன்னொரு பார்வை!மற்றபடி மாலனியத்தியலோ ஜெயகாந்தியத்திலோ உங்களளவுக்கு எதுவ்ம் தெரியாது எனக்கு!

எம்.கே.குமார்.

Tuesday, April 05, 2005

அவலம் கண்ணா அவலம்!

தண்ணீருக்குள்ளே ஒரு ஊரு நம்ம பணமும் கெடக்கு பாரு!

"வீட்டைக் கட்டிப்பார் கல்யாணத்தைச்செய்துபார்" இது நமக்கான பழமொழி! அரசியல்வாதிகளுக்கு இது எப்படி மாறும் தெரியுமா? "வீட்டைக்கட்டிப்பார் கணக்கில் காசு சேரும் பார்."

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதிக்கு உட்பட்ட 'துரையரசபுரம்' கிராமத்தில், வீடு வேண்டும் என்று யார் கேட்டார்களோ தெரியாது. நான்கு வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட 500 தொகுப்பு வீடுகள். பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதி திராவிட மக்களுக்காக அரசாங்கம் கட்டியவை தாம் இவைகள். அரசாங்கம் கட்டிவிட்டு அபப்டியே கால்நடையாய் போய்விட்டது. காசு கணக்கில் ஏறியபின், எது நடந்தால்தான் என்ன; நடக்காவிட்டால்தான் என்ன?

வீடு கட்டுகிறார்கள் சரி. வீட்டை என்ன 'கண்மாயிலா' கட்டவேண்டும்? (கண்மாய் என்றால் தெரியும் தானே?! பெரிய நீர்நிலை. ஏரி!) மொத்தமாய் நீருக்குள்ளே மூழ்கி முத்தெடுக்கவா ஏரிக்குள்ளே கட்டினார்கள்? வீட்டைக் கட்ட உத்தரவிட்டார்களே ஏன் அதைத் திறந்துவைக்கவில்லை? மக்களுக்காகத் தானேயய்யா அது? மக்கள் எங்கே இருக்கிறார்கள்? கண்மாய்க்குள் கரையும் நம் காசுகள்!

பாருங்கள் ஐயா பாருங்கள்! அவலங்களைப் பாருங்கள்.
Image hosted by Photobucket.com
"அம்மா ஆட்சியாம் இதில் அவர்களையே கேளுங்கள்"--ஐயா கட்சி.
Image hosted by Photobucket.com
"ஐயா கட்சி போட்ட திட்டம்; அவர்களையே கேளுங்கள்"-- அம்மா கட்சி.
Image hosted by Photobucket.com
"எனக்கு வேலை கிடக்கு; என்னை விட்டு விடுங்கள்."---அறந்தாங்கித் தொகுதியின் நீண்ட நாள் எம்.எல்.ஏ தற்போதைய எம்.பி: திருநாவுக்கரசர்!

பாரு தம்பி பாரு! பணமும் கெடக்கு பாரு! வாயைப்பொளந்து தூங்கு தம்பி! வல்லரசா ஆயிருவோம்!

எம்.கே.குமார்

Thursday, March 31, 2005

இலங்கை- நான் நினைத்தது சரிதானா?

இலங்கை என்ற நாடு உலக வரைபடத்தில் உதித்த நாளிலிருந்து இன்றுவரை அங்கு நிம்மதியான, நிலையான ஆட்சி என்பதே இல்லை எனவும் இது பரமசிவனின் போக்கால் கோபம் கொண்ட பார்வதியோ இல்லை ஏதோ ஒரு தேவதையோ போட்ட சாபமாகும் எனவும் ரஜினி முன்பொரு "அரசியல் கதாநாயக" மேடையில் கதையாகச் சொன்னார்.

ரஜினியின் அரசியல் பிரவேஷங்களும் அது தொடர்பான பேச்சுகளும் இன்று முடிவுக்கு வந்த நிலையில் அந்த கதையை மட்டும் என்னால் மறக்கமுடியவில்லை.

மறக்கமுடியாததற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அது, அன்றைய காலத்தில் அதாவது ரஜினி அக்கதையைச் சொல்லிய காலத்தில் நான் இலங்கையின் அரசியல் வரலாறு பற்றிய புத்தகமொன்றை படித்துக்கொண்டிருந்தேன். அதிலும் அப்படித்தான் இருந்தது.

தந்தையை வெட்டிக் கொலை செய்துவிட்டு அண்ணன் ஆட்சிக்கு வருவது; தம்பியின் ஆட்கள் அண்ணனை வெட்டிக்கொலை செய்வது; தாய்மாமனின் ஆட்சி. அதுவும் துர்கொலைகளால் முடிவுக்கு வருவது. இப்படியாகத்தொடர்ந்து படுகொலைகள், துரோகங்கள், ஆட்சிக்கவிழ்ப்புகள் என கிபி. 5 ஆம் நூற்றாண்டு தொடங்கி ஒரு நிலையான ஆட்சி என்பது அங்கு இல்லை என்பதை உணரமுடிந்தது.

அண்மையில் ஊருக்குச் சென்றபோது இலங்கை வழியாகச் செல்லநேர்ந்தது. தாவணி போட்ட பெண்கள் அனைவருமே அழகாய் இருப்பதைப்போல இலங்கையும் வானத்திலிருந்து பார்க்க மிக அழகாய் இருந்தது. பண்டாரநாயகா சர்வதேச விமானநிலையத்தில் கால் வைத்தபோது அதன் அழகையும் சுறுசுறுப்பையும் ரசிக்கும் ஆவலையும் மீறி இந்த 'ஆட்சி பற்றிய எண்ணங்களே' என்னுள் வந்து நின்றன.

இப்போதுதான் விமான நிலையம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் மிகவும் அழகாக எல்லாவித வசதிகளையும் கொண்ட ஒரு விமான நிலையமாய் நேர்த்தியாக வடிவமைத்து முடியும் தருவாயில் இருக்கிறது அதன் கடைசிகட்ட வேலைகள். அழகான எல்லாவித வசதிகளையும் கொண்ட ஒரு கட்டிடமாய் விமான நிலையம் இருந்தால் மட்டும் போதுமா? அங்கே வேலை செய்வதற்கு சிங்கப்பூரிலிருந்தா ஆட்களை அனுப்பமுடியும்?

ஆம்! இமிக்ரேஷனில் இருப்பவர்கள் அனைவரும் ஒருமாதிரியாகத்தான் என்னைப் பார்த்தார்கள். வேறு ஏதாவது ஜாடை(!) என்மீது இருக்கிறதா எனவும் நான் கண்ணாடியில் பார்த்துவிட்டேன். அப்படியெல்லாம் ஒன்றும் தெரியவில்லை. வழக்கமான 'மூஞ்சியாக' த்தான் இருந்தது. நான் சென்ற இமிக்ரேஷன் கவுண்டரில் இருந்தவரும் அதை உண்மை என்றே நிரூபித்தார். மூஞ்சியை 'உராங் உடான்' போல வைத்திருந்தார் அவர். ( அவர் பெயரும் பணி எண்ணும் இன்னும் ஞாபகத்தில் இருக்கின்றன.!)

விண்ணப்பப்படிவத்தில் ஹோட்டல் பெயரை ஒரு கட்டம் விட்டு எழுதவில்லை என்பதற்காக 16 கேள்விகள் கேட்டார். ' டிரான்ஸிட் பயணி' என்பதைச் சொல்லியும் முடிந்த அளவுக்கு கேவலப்படுத்திவிட்டுத்தான் என்னை வெளியில் விட்டார். போதாதற்கு சிங்கப்பூரில் நான் பணி்புரியும் 'வேலை உரிமைச் சீட்டைக்கூட' கேட்டு வாங்கிப்பார்த்தார். வெளியில் இருந்தவர்கள் ஏதோ எதிரி முகாமிலிருந்து நேரே புறப்பட்டு வந்தவனைப்போல என்னைப் பார்வையால் குடைந்துவிட்டார்கள்.

தமிழனின் அடையாள உணர்வோடு(!) வீரநடை போட்டு வெளியே வந்து ஹோட்டலுக்குச் செல்வதற்குள் 'நாக்கு' தள்ளிவிட்டது. பேசாமல் சென்னை சென்று அங்கிருந்தே திருச்சி சென்றிருக்கலாமோ எனவும் யோசித்தேன். டிக்கெட் விலையும் ரொம்பவெல்லாம் அப்போது வித்தியாசமில்லை. (சிங்கப்பூரிலிருந்து கொழும்பு வழியாக திருச்சிக்கு நேர்பயணம்!)

ஒரு பயணியை தகுந்த காரணங்கள் இன்றி இந்த அளவுக்கு அவமதிக்கும் அவரது செய்கை எனக்கு நியாயமாகப்படவில்லை. எனது பாஸ்போர்ட்டிலோ அல்லது வேறெதிலுமோ அவருக்குச் சந்தேகம் வந்து கேட்டிருந்தால் கூட அமைதியாக இருந்திருப்பேன். (தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் என பல முத்திரைகள் இருக்கின்றன அதில்! எங்கும் இத்தகைய அனுபவம் நேர்ந்ததில்லை!) அவர் பேசிய விதமும் எந்தளவிலும் சரியாக இல்லை.

'எந்தவொரு சுற்றுலாப் பயணியையும் இப்படி நடத்தாதீர்கள்' என்ற ஒரு வேண்டுகோளையும் வேதனையையும் மட்டும் 'பெட்டியில்' எழுதிப்போட்டுவிட்டு வந்து விட்டேன். இந்தியாவாயிருந்தால் 'Goடா Hair!' என்று அலட்சியமாக வந்திருப்பேன். இலங்கை, கொஞ்சம் முயன்றால் சிங்கப்பூரைப் போல அது என்ன, அதை விட செல்வம் கொழிக்க வாய்ப்பிருக்கும் நாடு என்று ஒரு மரியாதையோடு காலடி வைத்தேன்.

முதல் அனுபவம் இப்படி முடிந்ததில் மிகவும் வருத்தம். ஏற்கனவே மனதில் இருந்ததோ என்னவோ 'இவ்வளவு அடிப்படை வசதிகளையும் வாய்ப்புகளையும் கொண்டு இன்னும் முன்னேறாமல் அப்படியே நீங்கள் வைத்துக்கொண்டிருப்பதை விட இலங்கை முன்னேற வேண்டுமென்பதில் மிகவும் சிரத்தையும் ஆர்வமும் கொண்டிருக்கும் சக நாட்டவர்கள் 'யாரிடமாவது' விட்டுக்கொடுத்துவிடலாமே!' என என்னையும் அறியாமல் ஒரு எண்ணம் வந்து நின்றது. 'துரோகங்களுக்காகப் பழிவாங்குதலைத்' தவிர இத்தகைய காரியங்கள் எதையும் 'அவர்கள்' செய்யமாட்டார்கள் என்பதும் நாடு முன்னேறுவதில் நேர்மையாக உழைப்பார்கள் என்பதும் என் மனதில் மலர்ந்திருக்கும் இன்னொரு எண்ணம்.

பாவம்! சாரை சாரையாக, பாவப்பட்ட பெண்கள் மத்தியக் கிழக்கு நாடுகளுக்கும் மற்ற நாடுகளுக்கும் வீட்டு வேலைக்குச் செல்வதைப்பார்த்தபோது இன்னும் கொஞ்சம் கோபம் வந்தது உண்மை! கையாளாகாத கோபம்! யார் மீது என்று தெரியவில்லை. தூங்கியும் தூங்காத கண்களோடு வாழ்க்கையின் அவல நிலைகளை வெளிச்சம் போட்டவாறு கையில் எளிய ஒரு பெட்டியோடு வாழ்க்கை தேடிச்செல்லும் அவர்களைப் பார்த்து கண்ணீர் வந்தது உண்மை!

ஆனால் ஒருமாதம் கழித்து அதே வழியில் திரும்பி வந்தபொழுது எனது கடவுச்சீட்டை சோதித்தவர் ஒரு பெண்மணி! 20 வினாடிக்குள் வேலையை முடித்து அனுப்பிவைத்தார், அவர் பெயரைப் பார்த்தேன் வசந்தா அல்லது வசந்தி! இலங்கைக்கு வாழ்வு தரும் வசந்திகள்! வாழ்க நீவிர்!!

எம்.கே.குமார்!

Tuesday, March 29, 2005

சாருவை டென்ஷனாக்கிய அந்த 'ரஞ்சிதா' யார்?

'சிங்கப்பூர் எலீசா' சொல்ற கிசுகிசுவைக் கேளுங்க!

சாரு சிங்கப்பூர் வந்தபொழுது, எதேச்சையாக அவருடன் நான் 'சாட்' செய்ய, அவர் சிங்கப்பூரில் அவருடைய நண்பர் ராபின் வீட்டில் தான் தங்கியிருக்கிறார் என்பது எனக்குத் தெரியவந்தது. (ராபினை ஒரு கவிஞராக ஏற்கனவே எனக்குத்தெரியும். திண்ணையில் கவிதைகள் எழுதியிருக்கிறார்.) இருமுறை தொலைபேசினேன். இருமுறை சந்திக்க முயற்சி செய்தேன், அவருக்கு உடம்பு சரியில்லை என்று பதில் வந்ததால் முடியவில்லை. பிறகு உட்லாண்ஸ் நூலகத்தில் நடந்த கலந்துரையாடலில் அவரைச்சந்தித்தேன் கேள்விகளும் கேட்டு அவரைத் தொந்தரவும் செய்தேன். இதெல்லாம் இருக்கட்டும்.

"நேற்றுவரை "சும்மாவும் பிஸியாவும்" இருக்கும்போதெல்லாம் சாருவிடம் பேசிவிட்டு இன்று மட்டும் சாரு "சும்மா" இருக்கும்போது, வேலை இருக்கிறதென்று அந்த நபர் பேசாமல் போனால் எப்படி? ஒரு இலக்கியவாதி என்ன அந்தளவுக்கா இழிநிலைக்குப் போய்விட்டான்.?" அண்மைக்காலமாக சாரு இப்படி அடிக்கடி எழுதுவது போல ஒரு எண்ணம் தோன்றியது. இதுவும் இருக்கட்டும்.

இந்நிலையில் சிங்கப்பூருக்கு வந்திருந்த அவரிடம், "ராபின்-- ஸ்ரீகணேஷ்--அரவிந்தன்(அந்தப்பெண்ணை யாரோ தெரியவில்லை என்கிறாராம். விட்டுவிடலாம் இவரை!)--ஒரு நண்பர்-- ''அவர்''-- லியோ---சாரு நிவேதிதா---" இப்படியானதொரு வட்டத்திற்குள் உலவும் 500 மடல்களும் அடிக்கடி 'சாட்டும்' செய்த (எத்தனை மணி, நிமிட, நொடித்துளிகள்? தெரியவில்லை! சாரு ஞாபகம் வைத்திருப்பார்!) ஒரு பெண் நாகரிகமில்லாமல் நடந்துகொண்டாராம். சாருவின் பக்கத்தில் இப்படி எழுதியிருக்கிறார்.

இடையில் நடப்பது என்னவென்று யாருக்கும் தெரியவில்லை. இவருக்கு வேண்டியதை இவரும் அவருக்கு வேண்டியதை அவரும் பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் திரிவதாக எனக்கு இதைப் படிக்கும்பொழுது தோன்றியது. எது உண்மையோ தெரியவில்லை. இந்நிலையில் யார் அந்தப்பெண் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

http://charuonline.com/kp130.html

//சிங்கப்பூர் ஒரு சின்ன ஊர். அதிலும் இலக்கியம் வாசிப்பவர்கள் நூறு பேர். அந்த நூறு பேருக்குள் இத்தனை விளையாட்டு விளையாடினால் அது சாத்தியமா? "ராபினோடு பேசி ஒரு ஆண்டு ஆகிறது."-- ரஞ்சிதா. "போன வாரம் கூட ரஞ்சிதா இங்கு வந்தார்களே!"--- லியோ. (ராபினின் சகஅறைவாசி!) /// -- சாருநிவேதிதா.

அத்தனை பேரையும் ஒரு 'சுத்து சுத்தி' ரவுண்டில் விடும் பெண்ணைப்போல அப்பெண்ணைச் சித்தரித்து சாரு எழுதியிருக்கிறார். அப்பெண்ணின் உண்மையான நிலை என்னவோ? யார் அவர் என்பது எனக்குத்தெரிந்தால் நிம்மதியாகத்தூங்குவேன் என நினைக்கிறீர்களா? நமக்கெதுக்கு அது? யாராயிருந்தால் எனக்கென்ன? என் வேலை எழுதிக்கிடப்பதே!

எம்.கே.குமார்.

Monday, March 28, 2005

புதுமைப்பித்தன் யார்?

"புதுமைப்பித்தன் என்ற நபரை நான் அறிந்துகொள்ளும்பொழுது எனக்கு வயது 8. கையில் பெரிய வாளுடன் கம்பீரமாக நின்ற அவரைத்தான் புதுமைப்பித்தன் என்று அப்போது நான் உணர்ந்துகொண்டேன். பிறகுதான் அவர் புதுமைப்பித்தன் இல்லை 'தலீவர் எம்ஜிஆர்' என்று எனக்குத்தெரிந்தது." இப்படி இயல்பான நகையோடு தனது பேச்சை ஆரம்பித்தார் திரு.ரமேஷ் (மானசஸென்).

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் மாதமொருமுறை 'கதையும் காட்சியும்' என்றொரு 'கண்ணுக்கும்-காதுக்குமான' நிகழ்ச்சி ஒன்றை நடத்திவருகிறது. புகழ்பெற்ற எழுத்தாளர்களின் கதையைக்கொண்ட திரைப்படத்திலிருந்து சில காட்சிகளை ஒளிபரப்பி அவரின் மற்ற கதைகளையும் அவற்றின் இயங்குதளங்களைப் பற்றிய அறிமுகத்தையும் சிங்கப்பூரின் படைப்பாளர்கள்/ வாசகர்களுக்கு, விஷயமறிந்த ஒருவரைக்கொண்டு கலந்துரையாட வைத்து திறம்பட நடத்தி வருகிறது.

ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் அகிலன் முதல் அனுராதாரமணன் வரை பல பெயர்பெற்ற எழுத்தாளர்களைப் பற்றிய கலந்துரையாடல் நடந்திருக்கிறதாம்.

இந்நிலையில் நேற்று நடந்த அவ்விழாவில் 'புதுமைப்பித்தன்' எடுத்துக்கொள்ளப்பட்டார். அவரின் 'சிற்றன்னை' கதையை மூலக்கதையாகக் கொண்ட 'உதிரிப்பூக்கள்' திரைப்படம் காட்சிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

Image hosted by Photobucket.com

கரும்பைத் தின்ன கூலியெதற்கு என்பதாய் தனக்கு தரப்பட்ட வேலையை இன்பமுடன் ரமேஷ் எடுத்துக்கொண்டார் போலும். கத்தை கத்தையாய் பேசுவதற்கு தயார் செய்யப்பட்ட குறிப்புகள் மேஜையை ஆக்ரமிக்க, எழுந்து, "உங்களது பொன்னான இந்த மாலைப்பொழுதை இதுபோன்ற நல்ல நிகழ்ச்சிகளுக்காய் பயன்படுத்திக்கொண்டு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் எனது வணக்கங்களும் நன்றிகளும்" என்று ஆரம்பித்தார்.

புதுமைப்பித்தனைப் பற்றி ஒருவார்த்தையில் சொல்லவேண்டுமானால், நக்கல் என்றார். இரண்டு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் நக்கலோ நக்கல் என்றார். நக்கல், கேலி, குறும்பு, கிண்டல், நையாண்டி ( இன்னும் இதுபோல நிறைய சொன்னார்! எனக்கு மறந்துபோய் விட்டது!) இவற்றிற்கு என்னென்ன வார்த்தைகள் இருக்கின்றனவோ அவற்றையெல்லாம் புதுமைப்பித்தனுக்கு மொத்தமாக நாம் அர்ப்பணித்து விடலாமாம். அவைகளின் மொத்தம் தான் புதுமைப்பித்தனின் படைப்புகள் என்றார்.
Image hosted by Photobucket.com
"வாழ்க்கையில் நாம் காணும் ஒட்டுமொத்த முரண்பாடுகளின் மொத்த வடிவமாய் இருக்கிறது அவரின் படைப்புகளைக்கொண்டு நமக்கு அறிமுகமாகும் அவரது குணம். இத்தகைய முரண்பாடுகளைக் கொண்ட ஒருவன் இலக்கிய உலகில் முன்னுக்கு வருவதற்கு மிகப்பெரிய மேதமை வேண்டும். மேதைமையோடு நேர்மையும் புதுமைப்பித்தனிடம் இருந்திருக்கிறது, அதனால் அவர் ஜெயிக்க முடிந்திருக்கிறது.
Image hosted by Photobucket.com

ஒரு வெள்ளைத்தாளில் நீங்கள் காட்டக்கூடிய மிகப்பெரிய வெளிச்சமானது அதன் இயல்பான எதுவும் எழுதாத வெண்மையே ஆகும். அதற்கு மேலே அதைக்கொண்டு வெறுமனே அதிக வெளிச்சம் எதுவும் காட்டமுடியாது. அதைத் தருவிக்க வேண்டுமெனில் அதில் கருப்பு நிறத்திலான பரப்பை வரைய வேண்டும். இப்போது இன்னும் கொஞ்சம் வெளிச்சம் போல அதைக் காட்டமுடியும்; உணர்த்தமுடியும். அல்லது கருப்பு நிறத்திலான அப்பரப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெண்மையை எளிதாக உணரும்படி கொண்டுவரமுடியும். இதைத்தான் புதுமைப்பித்தன் செய்திருக்கிறார்." என்று தனது ஓவிய வாழ்வில் இருந்து மிகவும் எளிதாக விளங்கிக்கொள்ளும்படி ஒரு உதாரணத்தை எடுத்து வைத்தார்.

"ஜாதிக்குள்ளே நடக்கும் திருமணம் பற்றி கதை எழுதிய அவர், ஜாதிவிட்டு நடக்கும் திருமணங்களைப் பற்றியும் கதை எழுதியிருக்கிறார். இரண்டிலும் திருமண வாழ்வின் நிதர்சனங்களை முன் வைக்கிறார். இதற்கு ஜாதீயவாதி என்ற முத்திரையை அவர்மேல் குத்தமுடியாது" என்றார்.

"எல்லா முரண்பாடுகளையும் தனக்குள்ளே கொண்டவரைப்போல இருந்த அவர் எத்திசையையும் எக்கருத்துகளையும் சார்ந்து வாழாது தன் ஆத்மரசனைக்கு மட்டுமே அடிபணிந்து வேறெதற்கும் சாயாது வாழ்ந்திருக்கிறார். அதுவே அவருடைய வாழ்க்கைக்கும் படைப்புகளுக்கும் வெற்றியின் சாட்சியாக இப்போதும் சிறந்துவிளங்கி வருகிறது. புதுமைப்பித்தனுக்கு கதை எழுதுவதற்கென்று இருந்த வரம்புகளெல்லாம் ஏட்டுச்சுரைக்காயாகவே இருந்திருக்கிறது. அதை அவர் ஒரு பொருட்டாக எப்படைப்பிலும் எடுத்துக்கொள்ளவில்லை. இப்படித்தான் ஆரம்பிக்கவேண்டுமென்றோ இப்படித்தான் முடிக்கவேண்டுமென்றோ எந்த இடையூறும் இல்லை அவருடைய மனதுக்குள். நீண்ட அறிமுகத்தைக் கொடுத்துவிட்டு படக்கென்று கதையை முடிக்கும் தைரியமும் துணிவும் அவருக்கு இருந்திருக்கிறது.

தமிழ் இலக்கிய வரலாற்றில் மொழியை நவீனப்படுத்துதலில் ஆளுமையை அதிகமாக்கியதில் அவருக்கு மிகப்பெரிய பாராட்டும் பங்கும் இருக்கிறது. நடைமுறை விஷயங்களை எழுதுவதில் கௌரவக்குறைச்சல் ஒன்றும் இல்லை. சென்னை நகர வாழ்க்கையில் தான் கண்டவைகளைச் சார்ந்தே அவரது கதைகள் இருக்கின்றன. நகர வாழ்க்கை ஒரு அவலமாகவே அவருக்குள் தொக்கி நின்றிருக்கிறது. அதற்கு மாறாக, நெல்லைப்பகுதி கிராம வாழ்க்கை ஒரு மிகப்பெரிய ஏக்கமாகவே அவருக்குள் போராடிக்கொண்டிருந்திருக்கிறது. அவருடைய கதைகளில் பலவற்றில் அவ்வேதனையும் ஏக்கமும் தவழ்ந்து கிடக்கின்றன. கதை சொல்வதில் புதிய புதிய யுக்திகளையும் சொல்வதை நவீனமாகச் சொல்வதிலும் மிகுந்த அக்கறை கொண்டிருந்திருக்கிறார்.

இன்றைய இலக்கியவாதிகள் பலர் புதுமைப்பித்தனை வித வித கோணங்களில் பிரித்து எடுத்துகொண்டார்கள். 'விந்தன், ஜெயகாந்தன், சு.ரா, சுஜாதா, கு.அழகிரிசாமி, கி.ரா, அசோகமித்திரன், நா.முத்துச்சாமி, வண்ணநிலவன், எம்.வி.வெங்கட்ராமன்' என பலபேர் அவரிலிருந்து தமக்கான வழிகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள்."

"சிற்றன்னை கதைக்கும் உதிரிப்பூக்கள் படத்துக்கும் இருக்கும் ஒரே சம்பந்தம் இரு படைப்பாளிகளின் ஒத்த எண்ண அலைகளே தவிர கதைப்படி எதுவுமில்லை. சிற்றன்னை கதையின் ஃபிளாஸ்பேக்காக உதிரிப்பூக்களை மகேந்திரன் எழுதி இயக்கியிருந்தாலும் சிற்றன்னை கதையை தமது படத்தின் மூலக்கதை என்று குறிப்பிட்டது இன்றைய காலகட்டத்தில் சினிமா உலகில் நாம் காணக்கிடைக்காத, மகேந்திரனின் பெருந்தன்மை மட்டுமே" என்று முத்தாய்ப்பாய் முடித்தார் ரமேஷ்.

நிகழ்ச்சியை கவரேஜ் செய்துகொண்டிருந்த உள்ளூர் தொலைக்காட்சியான 'வசந்தம் சென்ரல்' நேற்றிரவு செய்திகளில் அதைக்காட்டியது.

Image hosted by Photobucket.com

புதுமைப்பித்தனின் பல்வேறு முகங்களையும் அவருடைய படைப்புகளின் விதவிதமான இயங்குதளங்களையும் விரிவாக சிறப்பாக அறிந்து கொள்ள முடிந்ததில் மனமும் மகிழ்ந்தது . இந்நிகழ்ச்சியை முதலிலிருந்து முன்னின்று நடத்தி வரும் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகமும் நிகழ்ச்சியின் அமைப்பாளர் திருமதி.சித்ரா ரமேஷ்ம் பாராட்டுக்குரியவர்கள்.

நன்றி: சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம்
திரு. ரமேஷ் (மானசஸென்)
திரு. இந்திரஜித் (மீடியாகார்ப்ஸ் தொலைக்காட்சி)

(செவி வழி கேட்டதிலிருந்து எழுதியவை. வார்த்தைகளும் பொருளும் முன்பின் மாறியிருக்கலாம்.)

அன்புடன்
எம்.கே.குமார்

விட்டகுறை தொட்ட குறை: காலச்சுவடு பதிப்பித்த புதுமைப்பித்தனின் சிறு கதைகள் தொகுப்பு மிகவும் நேர்த்தியாக இருப்பதாக ரமேஷ் உட்பட பலரும் பேசிக்கொண்டது காதில் விழுந்தது.

இளையபாரதி தொகுத்த 'கண்மணி கமலாவுக்கு' என்ற புத்தகம் 'ஒரு அந்தரங்க டயி்ரியைப் படிப்பது போலவும் எல்லோருக்கும் உள்ளார்ந்த ஒரு வேதனையையே தருவதாகவும்' கூட்டத்துக்குப் பிந்தைய பேச்சுகளில் பலரும் சொன்னார்கள்.

நீங்கள் அப்புத்தகம் படிக்காதவராயின் அது, அவர் 'தனது மனைவிக்கு எழுதிய அந்தரங்க கடிதங்களின் தொகுப்பு' என்பதை அறிவீர்களாக! இத்தகைய படைப்புகள் தமிழ் இலக்கியத்துக்குள் அமைவது சரியா தவறா என்பதையும் பின்னூட்டமிட்டுச் செல்வீர்களாக!

நன்றி!

Sunday, March 27, 2005

வணக்கம்... வணக்கம்... வணக்கம்!

வணக்கம் நண்பர்களே! நீண்ட நாட்களுக்குப்பிறகு மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. ஒரு மாதம் கழித்து வந்தபொழுதில் இங்கே நிறைய படைப்புகளையும் பதிவுகளையும் காணமுடிகிறது. தமிழ்மணம் காசி அவர்கள், புதிதாய்த் தொடங்கப்பட்ட வலைப்பதிவுகளில் நம்பிக்கை அளிக்கும் இருபது வலைப்பதிவுகளைக் குறிப்பிட்டுள்ளார். சிங்கப்பூரிலிருந்து கலக்கிக்கொண்டிருக்கும் நண்பர்கள் அல்வாசிட்டி விஜய், பாலுமணிமாறன் சிங்கப்பூர்-மலேசிய நண்பர் மூர்த்தி, அண்மைய சிங்கப்பூர் விருந்தினர் துளசியக்கா ஆகியோருடைய பதிவுகளும் அவற்றில் இடம்பிடித்திருந்தது கண்டு மெத்த மகிழ்ச்சி. வாழ்த்துகள். அதிலும் நண்பர் பாலு மணிமாறன் நான் இந்தியாவிற்குச்செல்லும் பொழுதுதான் ஒரு பதிவு போட்டிருக்கிறேன், படித்துவிட்டுச்சொல்லுங்கள் என்று முதல் பதிவைப் போட்டுவிட்டிருந்தார். ஒருமாதம் கழித்து வந்து பார்க்கும் பொழுது 'குட்டியும் குழுவானுமாய், கவர்ச்சிநடிகையும் கனவுமாய், அத்தையும் ·பிகருமாய்' ஏகப்பட்ட பதிவுகள்! கலக்கியிருக்கிறார் மனிதர்.

ஊரிலிருந்து வந்தவுடன் எல்லோருக்கும் தோன்றுவதைப்போலத்தான் எனக்கும் இரண்டு விஷயங்கள் தோன்றின. ஒன்று ஊரில் பார்த்த நிறைய விஷயங்களை எழுதவேண்டும் என்பது! இரண்டாவது அதற்கு நேர்மாறாய் வேலைப்பளு அழுத்துவது! :-)

ஊரிலிருந்து வந்தவுடன் சிங்கப்பூர் இணைய நண்பர்கள் கூட்டம் துளசியக்காவின் வருகையை ஒட்டி நடப்பதாய் ஒரு இனிப்பான செய்தி கேட்டு அதிலும் கலந்துகொண்டேன். இரண்டாவது கூட்டம் இது. இக்கூட்டத்தின் உருப்படியான சில விஷயங்கள் விரைவில் சிங்கப்பூரிலிருந்து இணைய உலகில் பிரகாசிக்கலாம். ஏற்பாடுகள் நடக்கின்றன.

துளசியக்கா, ஜெயந்திசங்கரி கொண்டு வந்த கேசரியைப்போல மிகவும் இனிமையானவராக இருந்தார். முதல்கூட்டத்தைத் தவறவிட்ட மானஸசென் ரமேஷ் இதில் நிறை(வாக)ய பேசினார். 'குப்பை-குப்பை மட்டுமல்ல' அன்பு உருப்படியாய் ஒரு காரியம் செய்தார். அவள் விகடன் சமையல் முதல் ஆங்கிலம்-தமிழ் அகராதி, கம்பராமாயணம், தினம் ஒரு கவிதை, புதிய திரைப்பாடல்கள், 'நிலாமுகத்து' நயனதாரா, 'காதல்'-சந்தியா வரை நிறைய விஷயங்களை ஒரு குறுந்தகட்டில் போட்டு அடைத்துக் கொடுத்தார், வாழ்க நீர் ஜெம்குப்பை!

'முக்கிய பேச்சுகள்' இருந்தால் மட்டுமே வருவதாக அறிவித்திருந்த திரு. மா.கோவிந்தராஜ் (நிறைய யாஹ¥ குழுமங்கள் வைத்திருக்கிறார்) 'தமிழா' என்றொரு புத்தகத்தை 10 டாலருக்கு பரிமாறினார். புத்தகத்தை வாங்கியவர்கள் நேற்று கூட முணுமுணுத்தார்கள். நல்ல புத்தகம் போலும். முன்னுரையும் நன்றியுரையும் மட்டும் பல பக்கங்களுக்கு எழுதப்பட்டிருந்ததைக் கண்டு எனக்கு பேராச்சரியம் எற்பட்டது. இப்போதேல்லாம் யார் இப்படி தமக்கு உதவியவரை நன்றியோடு நினைவு கூறுகிறார்கள். 'தமிழா'வின் ஆசிரியர் தமிழாசிரியர். திரு.சிவசாமி அவர்கள் மாகோ வின் நண்பர் போலும். மாகோ அவர்கள் இன்னொரு 'முக்கிய வேலை' இருப்பதாக உடனே கிளம்பிவிட்டார்.

எழுத்தாளர் ரம்யாநாகேஸ்வரன், எழுத்தாளர்-கவிஞர் பனசை நடராஜன் ஆகியோர் முதன்முறையாக கலந்துகொண்டார்கள். எழுத்தாளர் துளசிகோபால் அவர்களின் மகளான கவிஞர் மதுமிதா (ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதியிருக்கிறாராம்!) தமிழைக் 'கொன்சம் கொன்சம்' மட்டுமே புரிந்துகொள்வாராம். ஆங்கிலத்தில் 'ஸ்வீட்டாக' பேசுகிறார்.

ஒரு இனிய மாலைப்பொழுதாக நிறைவாக இருந்தது அது! ஊரிலிருந்து வந்த 10 நாட்களுக்குள் 8 நாட்கள் வேலை போக இரு நாளில் ஒரு இனிய மாலை இது. இன்னும் ஒரு இனிய மாலை நேற்று அமைந்தது. அடுத்தது அது!

எம்.கே.குமார்.

Thursday, February 17, 2005

'ஜி' சொல்லும் சேதி!

தமிழ் சினிமா வரலாற்றில் நல்ல டைரக்டர்கள் கூட ஏதோ நடுராத்திரியில் பதறியடித்து எழுந்து உட்கார்ந்தவர்களைப்போல அதீதமாய் சில அரசியல் படங்கள் எடுப்பதுண்டு!

கே.பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம், விக்கிரமன் இப்படி நிறைய பெரிய ஆட்கள் கூட எதிர்பார்த்த அளவு அதில் வெற்றியடையவில்லை. இந்த வரிசையில் இப்போது ஆனந்தம் லிங்குசாமியும் சேர்ந்திருக்கிறார்.

கீரோ, அரசியலில் நாயகனாய் நின்று ஜெயித்து கோட்டைக்குப்போவதாய் காட்டி அதை ஓடவைப்பதற்கு பலபேர் கரணம் போட்டும் பார்த்துவிட்டாலும் அதில் மிகச்சிலர் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

ஒரு அரசியல் படம் ஆந்திராவில் ஓடுவதைப்போல இங்கு ஓடாதா? ஓடும்!

தகுந்த அளவு மசாலா சரியான கலவையில் இருந்தால் சாதிக்கலாம் என்று தலைவர் எம்ஜிஆர் எப்போதே செய்து காட்டி விட்டார். அரசியல் படம் எடுத்து ஓடுகிறது என்றால் அதில் இருக்கவேன்டிய காரம், மணம் அனைத்தும் சரியாய் இருக்கவேன்டும்.

அமைதிப்படையில் கூட கதாநாயகன் முதல்வராக ஆகமுடிவதில்லை.

முதல்வராய் ஆகவேண்டும் என்றால் அவருக்கு உப்புக்கருவாட்டையும் ஊறவெச்ச சோத்தையும் சொல்லிக்கொடுக்கவேண்டும் என்பதை ஷங்கர் கண்டு கொண்டிருந்தார். அதனால் அவரால் அதில் வெற்றி பெறமுடிந்தது.

இந்நிலையில் இதெல்லாம் தெரிந்தும் எந்த நம்பிக்கையில் இப்படியொரு படத்தை லிங்குசாமி எடுத்தார் என்பது புரியவில்லை.

மைனஸ்: கதை
திரைக்கதை
டைரக்ஷ்ன்
திரிஷா
அஜித்
சுத்தமாக காமெடியே இல்லை!


பிளஸ்: கொஞ்சம் டயலாக்ஸ்
தாவணி போட்ட பெண்கள்! :-)
ஒரு பாட்டு
விஜயகுமார் (கெட்டப்)
எவ்வளவு தேடியும் வேறெதுவும் கிடைக்கவில்லை.


எம்.கே.குமார்

Search This Blog