Tuesday, August 24, 2004

ஐத்தான்....

வெண்ணிலா(ப்ரியன்)

ஆச வெச்ச ஐத்தானே அரும்பு மனசு ஐத்தானே
மீச வெச்ச ஐத்தானே மெட்டி போட்ட ஐத்தானே
காசு மால வாங்கித்தந்த ஏங் கண் நெறஞ்ச ஐத்தானே
நேசம் மறந்து நெலை மறந்து போனதெங்கே ஐத்தானே

தோளு பட்ட நம்பட்டியும் ஒங்ககாலு பட்ட தோல்செருப்பும்
வாளு பட்ட வாழ மரமா வாழ்வழிஞ்சி கெடக்குதைத்தான்
ஆளு நீங்க நடக்கயில ஆறடி போயி நின்னவன்ல்லாம்
தேளு மாதிரி வேட்டி தூக்கி தெருவுக்குள்ளே போறானுக

ஊருக்குள்ளெ ஒங்க மொகம் பாக்காத செடியும் கொடியும்
சேறுக்குள்ளெ ஒங்க பாதம் தழுவாத நாத்தும் நடவும்
தேருக்குள்ளெ இருந்தாலும் தெருவுலெ கெடந்தாலும்
மாருக்குள்ளே என்னப்போல உங்க மனசெ வெச்சிக் காத்துருக்கு

போன எடம் சொல்லலியே பொரண்டு படுத்தா விடியலியே
ஆன மட்டும் சொல்லிப்பாத்தும் அழுத மாரு தூங்கலியே
போன கதை வந்த கதை பொழுது சாஞ்சி பாத்த கதை
வானம் பாத்த நெஞ்சில் சாஞ்சு வசதியாத்தான் பேசலியே

அழுக்கு திண்ணா அயிர கொழம்பும் முருங்கப்பூ ரசமும் வெச்சி
பழுப்பில்லாத முல்லப்பூவா புது அரிசிச் சோறும் வெச்சி
முழு நெலவு ராத்திரில கண் விழிச்சிக் காத்திருக்கேன்
முழுகாம இருக்கு மனசு முங்கிக் குளிக்க ஆச ஐத்தான்

ஆத்துக்கர ஆலமரம் ஏம் முதுகு தொட்ட ஆலம்பழம்
ஒத்தவீட்டு மாட்டுவண்டி அது ஏத்தி வந்த வெக்கெ கட்டு
மத்தியான வெய்யிலிலே எம்மாரு பாத்த மாங்கா மரம்
பத்த வெச்சி விட்டுட்டீகளே இனி எம்புட்டு ரா கூப்பாடோ

அச்சப்படும் பச்சக்கிளி கோபக்கார மச்சாங்கிளி
இச்சையோட தவிக்கையில எம்மனசு ஊருதைத்தான்
எச்சி பட்டு பூத்த பூவு ஏகத்துக்கும் ஏங்குதைத்தான்
மச்சான் நீங்க வந்தீயன்னா மறுபடியும் நா வயசுக்கு வாறேன்

வெண்ணிலா(ப்ரியன்)

No comments:

Search This Blog