Sunday, January 30, 2005

நண்பனுக்கு ஒரு வெண்பா வாழ்த்து!

எம்.கே.குமார்.

மணமகன்: கே வி ராஜா.
மணமகள்: எம். கோமதி.

நாள் : 27 ஜனவரி. 2005

1. ஐங்கரத்தான் ஆசியால் அறியாமை நீக்கி
அருங்கொடை இல்லறத்தாள் பைங்கரம் பற்றி
செழுங்கரம் பெற்று சிறப்புடன் வாழ
பெருங்குடையான் வாழ்த்தட்டும் இன்று!

2. அன்பராம் ராஜா அருமையாம் தன்னி
பண்பராம் பெற்றோர் பரிவுடன் வாழ்த்த
கண்கள்தாம் கொண்ட கவிஇன்பக் காதலுக்குள்
அன்புடன் சேர்ந்தனர் அணைத்து!

3. கலப்பு மணங்கொண்டாய் காதல் மணங்கொண்டாய்
காலத்து நீரில் கணக்காய் பயிர்செய்தாய்
சேலத்து மாம்பழமாய் செந்தமிழ் தேன்கொண்டு
ஞாலத்தில் வாழ்க திளைத்து!

4. கோமதி ராஜா குறிப்பறிந்து வாழ்ந்து
குலமதி வாழும் பொழுதாய் நிறைந்து
முழுமதி தேசம் முழுதும் படைத்து
நிலமதில் வாழ்க நிலைத்து!

வாழ்க வளமுடன்!

ஒரு அனுதாபமும் ஒரு அஞ்சலியும்!

எதற்கும் வளையாத நடுநிலை நாயகங்களாய் தங்களைக் காட்டிக்கொள்ள விழையும் சில வணங்காமுடிகளைக் கூட 'அதெல்லாம் இல்லை, இப்போ பாரு எப்படி படக்குன்னு பல்டியடிப்பான்னு' காட்டுவதற்காக இயற்கை சில நேரங்களில் சந்தர்ப்பங்களைக் கொடுத்து கவிழ்த்துக்காட்டும்! அந்த சந்தர்ப்பத்திற்காக சிலரை எப்போதும் நான் கவனித்துக்கொண்டே இருப்பதுண்டு! வணங்காமுடிகளின் வளைவும் குனிவும் அழகானதுதானே!

இந்தவார துக்ளக் அட்டைப்படம் எனக்கு அதைத்தான் ஞாபகப்படுத்தியது. இந்த விஷயத்தைப் பற்றி நான் இரு வாரங்களுக்கு முன் எழுத நினைத்தாலும் நேரம் கிடைக்கவில்லை. இப்போது துக்ளக் அட்டைப்படம் அதைச் சொல்லத்தூண்டி விட்டு விட்டது.

சங்கரராமன்கொலை வழக்கின் குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் ஒப்படைத்துவிட்டு வந்த விசாரணை அதிகாரி பிரேம்குமார் எஸ்பி யிடம், 'இவ்வழக்கு வெற்றி பெறுமா' என்று ஒரு பத்திரிகை நிருபர் கேட்க, அவர் ரொம்பவும் அமைதியாகவும் அடக்கமாகவும் சொன்னார், 'இக்கொலை, வரதராஜ பெருமாள் கோவிலுக்குள்ளே நடந்திருக்கிறது. கடவுளுக்கு முன்பே நடந்திருக்கிறது. அவர்தான் அனைத்திற்கும் சாட்சி. ஆக பெருமாளுக்கும் காஞ்சி மடத்துக்கும் நடக்கும் வழக்கு இது. நாமெல்லாம் வெறும் கருவிகள் தான்'.

ஒரு போலீஸ் அதிகாரி என்பதைத் தாண்டி எனக்கு அவர்மேல் ஒரு மரியாதை வந்துவிட்டது மனதில். 'கொலை நடந்திருப்பது உண்மை! அதுவும் கோவிலுக்குள் நடந்திருப்பது உண்மை! குற்றவாளிகள் யாரென்பதை எனக்குத் தெரிந்தவரை விசாரித்து ஒப்படைத்துவிட்டேன். இனி நிஜத்தின் வழி நடப்பது நடக்கட்டும்! எது சரி என்று கடவுள் நினைக்கிறாரோ அது நடக்கட்டும்.' என்பதாய் இதை நான் எடுத்துக்கொண்டேன். இதில் என்ன தவறு?

இந்து மக்களின் உணர்வுகளுக்கு சமாதி கட்டி அதற்கு மேலே அடிக்கடி மேல்பூச்சு பூசிக்கொண்டிருக்கும் கலைஞர் (வெட்கங்கெட்ட அவர்களுக்கு இது தேவைதான்!) கேவலமாய் கிண்டல் அடித்தார். 'ஆக, பெருமாள் வருவாரா சாட்சி சொல்ல? அவருக்கும் சம்மன் வழங்கப்படுமோ?'

வயதால் முதிர்ந்த ஒருவர் எவ்வளவுதான் நாத்திகவாதியாயினும் எவ்வளவுதான் சமயச்சார்பற்ற கூட்டணி படைத்து சாதித்தவராயினும் பலநூறாயிரம் மக்களின் உணர்வுகளை இப்படியெல்லாம் புண்படுத்தலாமா? இன்னும் புண்படுத்தவேண்டுமா?

ஒரு போலீஸ் அதிகாரி எப்படிச் சொல்லலாம்? அதுவும் இவ்வழக்கில் மட்டும்? என்றும் சிலர் கேட்கிறார்கள். கொலை நடந்தது கோயிலுக்குள்! எல்லா கொலை வழக்கு விசாரணையிலும் 'என் பணி முடிந்துவிட்டது இனி எது நடக்க வேண்டுமோ அது நடக்கட்டும். அது எனக்கு சம்பந்தமில்லை' என்று விசாரணை அதிகாரி சொல்லலாம். ஆனால் இக்கொலை கோயிலுக்குள் நடந்ததால் பெருமாளையும் சேர்க்க வேண்டி வந்திருக்கிறது. ஆக, வழக்கின் முடிவில் அவர் நிரபராதி என்று வந்தால், 'பெருமாள் தவறான தீர்ப்பை அல்லவா சொல்லிவிட்டார்' என்றல்லவா நினைக்கத்தோன்றும் என்றும் சிலர் நினைக்கலாம். அப்போது மட்டும் இந்து மக்களுடைய உணர்வுகள் பாதிக்கப்படாதா என்றும் தோன்றலாம். 'ஒரு காரியத்தைச் செய்யும் வரை முழு நிலையோடிரு. பிறகு நடப்பது எதுவும் உனக்கானதில்லை' என்ற பகவத் கீதையின் முழக்கம் எப்படி இவர்களுக்குத் தெரியாமல் போனது?

இந்நிலையில் துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் இதே பாணியில் 'குண்டர் சட்டத்தில் போட்டுவிடுவார்களோ' என்று கடவுளே பயந்து கொண்டிருப்பதாய் அட்டைப்படம் போட்டிருக்கிறார். (ஜெயலலிதா இவ்விசாரணையில் முழு நிதானத்தைக் கடைபிடிக்கிறாரா? குண்டர் சட்டம் அவசியம் தானா என்பதெல்லம் இரண்டாம் கேள்விகள்!)

'நேரத்திற்குத் தகுந்ததாய் மாறிக்கொள்ள விழையும் சோ அவர்களை இப்போது பார்' என்று இயற்கை எனக்கு ஒரு சந்தர்ப்பம் அளிப்பதாகவே எனக்கு இப்போது தோன்றுகிறது. பிரேம்குமார் எஸ்பி. சொல்லிய வார்த்தைகளின் உட்பொருள் அறியத் தெரியாவதவரா திரு. சோ அவர்கள்? தமக்கு 'இஷ்டமில்லாத' ஒரு நல்ல காரியத்தை யார் சொன்னாலும் தவறா? இப்படியொரு 'இரண்டாம் நிலையில்' இருந்துகொண்டு 'ஹிந்து மஹா சமுத்திரம்' என்று ஹிந்து மதத்தின் அருமை பெருமைகளை எழுதப்போகிறாராம் இவர்?! அப்போதாவது, 'கீதை சங்கரமடத்திற்கும் மேலானது' என்பது இவருக்குத் தெரியட்டும்!

ஆக இனிமேலும் இவர்கள் அடிக்கப்போகும் வார்த்தை பல்டிகளுக்கும் செயலுக்கும் இப்போதே எனது அனுதாபங்கள்!

ஒரு அஞ்சலி!

இதுவும் தாமதமாகத்தான் வருகிறது.

முன்னால் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு. மு.மு. இஸ்மாயில் அவர்களுக்கு எனது இதய அஞ்சலிகள்!

நீதித்துறையில் இவருடைய பணி சிறப்பானது என்று யார் யாரோ சொல்லக் கேட்டிருக்கிறேன். அதில் இவர் எனக்குப் பரிட்சயமாகவில்லை. ஆனால் கம்பர் வழி பரிட்சயமானார்.

தான் ஒரு இஸ்லாமிய இனத்தவராய் இருந்தாலும் கம்ப ராமாயணத்தின் பால் மிகுந்த வேட்கை கொண்டு அதில் பல்பெருகிக்கிடக்கும் இலக்கியச்சுவைகளூக்குள் கிடந்து வாழ்ந்தவர். உருண்டவர்! கம்பராமாயணத்தில் மிகவும் ரசிக்கந்தகுந்ததாய் இவர் எழுதிய சில புத்தகங்களைச் சில வருடங்களுக்கு முன்பு படித்திருக்கிறேன். (அப்புத்தகங்களை எனக்கு அறிமுகப்படுத்திய எனது முந்தைய சக தொழிலாளி சகோதரர் திரு. முருகேசன். ஆறுமுகனேரி, தூத்துக்குடி மாவட்டம் அவர்களை இப்போது நன்றியோடு நினைக்கிறேன்.)

கம்பராமாயண விஷயங்களை மிகவும் இனிமையாய் எழுதியிருப்பார் மு.மு இஸ்மாயில் அவர்கள். 'கண்டேன் சீதையை' என்ற வார்த்தையின் ஜீவனைக் கூட இவர்வழிதான் படித்தேன் என நினைக்கிறேன்!

ஒரு தேர்ந்த இலக்கிய ரசனாவாதிக்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகள்!

எம்.கே.குமார்.

Tuesday, January 25, 2005

டாக்டராய் நடித்தவர் இப்போது டாக்டர்!

சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் இனி தனக்கு பெருமை மாலை போட்டுக்கொள்ளலாம். ஒரு நல்ல கலைஞனுக்கு ஒரு நல்ல காரியம் செய்திருக்கிறது. ஜேப்பியாரின் கையில் துண்டு போட்டு விலை பேசப்போகிறவர்கள் இருப்பார்கள்; இருக்கட்டும். அது நமக்கு அவசியமில்லை. இது மிகவும் நல்ல செய்தி.

'ஒரு மிகச்சிறந்த நடிகர், நல்ல படங்களின் தயாரிப்பாளர், கதையாசிரியர், வசனகர்த்தா, இயக்குனர், பாடகர் மற்றும் நல்ல எழுத்தாளர் என பல்வேறு முகங்களைக் கொண்ட ஒரு மனிதனுக்கு ஏன் டாக்டர் (ஹானர்ஸ்) பட்டம் வழங்கக்கூடாது' என்று அண்மையில் ஒரு மேடையில் வைரமுத்து கேட்டாராம். வைரமுத்து எதை நினைத்து கேட்டாரோ தெரியவில்லை. ஆனால் அவரது வாய் முகூர்த்தம் இப்போது பலித்திருக்கிறது.

'வாழும் சினிமா அகராதி' கமலுக்கு சத்யபாமா நிகர்நிலை பல்கலைகழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவப்படுத்தியிருக்கிறது. பட்டம் வந்த வழி சாதாரணமாய் இருக்கலாம். பெரிதாய் பேசப்படாததாய் இருக்கலாம். (இதன்மூலம் அது அதற்கு கிடைக்கட்டும்!) ஆனால் பட்டம் பெற்றவர் சகல(கலா) மரியாதைக்கும் உரியவர். திறமையானவர். இன்னும் பலப்பல ஆண்டுகளுக்குப்பின்னும் தமிழ் சினிமா பற்றி யார் பேசினாலும் அதில் 'கமலாயனம்' இல்லாமல் இருக்கமுடியாது என்பது என் கணிப்பு.

'தேவர் மகனில்' ஒரு காட்சி.

"இன்னக்கி நா மரம் வெப்பேன், அது பெருசா வளரும், காய்க்கிம், கனியும். ஆனா அத சாப்புட நா இருக்க மாட்டேம்பு, நீங்க சாப்பீடுவீய, உங்க மகன் சாப்பிடுவாக! அவுங்க மகன் சாப்பிடுவாக! வழி வழியா வாறவக எல்லாரும் சாப்பிடுவாக. நா சாப்பிடலையேங்குறதுக்காக நா மரம் வெக்காமெ போக முடியுமா? வருத்தப்படமுடியுமா? எல்லாம் அப்புடித்தாம்பு. ஒரே நாளையில எல்லாம் நடக்கணுமுன்னு பாத்தா வேலைக்கு ஆகாதுப்பு. அப்படித்தானே வந்துச்சி, அப்படித்தாம்பு போகணும்! படிப்படியாத்தாம்பு எல்லாம் மாறணும்!"

இன்றைக்கு சமுதாயத்தில் நடக்கும் சாதிக்கொடுமைகளுக்கு இதைவிட யாரும் நல்ல முடிவாய்ச் சொல்ல முடியாது. சமுதாயத்தின் கீழ்த்தட்டில் இருப்பவன் வேண்டுமானால் எல்லாம் உடனே நடக்கவேண்டும் என ஆசைப்படலாம். ஆனால் மேல்தட்டிலிருப்பவன் என்ன யோசிப்பான்? இப்பிரச்சனை எப்படித் தீரும்? எப்படித் தீர்க்கமுடியும்?

"ஆமாம், சந்திரபோஸ் எங்க சதம் அடிப்பாரு? அவரு வெள்ளக்காரனைத்தான் அடிப்பாரு, அதுக்குத்தான் அவரு லாயக்கு. பாவம்!"

'விருமாண்டி'யில், ஒரு மறந்துபோனவனை ஞாபகப்படுத்தும் முயற்சி இது. ஒரு கிராமத்து பெண்ணுக்கு கிடைத்த சச்சினின் பிரபல்யம் ஏன் சந்திரபோஸ¤க்கு கிடைக்கவில்லை என்பதை ஒவ்வொரு இந்தியனையும் எண்ணிப்பார்க்கவைக்கும் தந்திரம் இது.

"நீ இன்னைக்கி ஜெயிச்சிருக்கலாம் தம்பி. தோத்தாலும் நா போயி நைட்டு நிம்மதியா தூங்கிடுவேன். ஆனா பொய் சொல்லி ஜெயிச்சிட்டு நீ போயி நிம்மதியா தூங்க முடியுமா?"

இதைவிட ஏது கடவுள்? இதைவிட ஒருவனை மனிதனாக்க என்ன பெரிதாய் எழுதவேண்டும்? மீண்டும் 'விருமாண்டி'யிலிருந்து!

இந்த வசனங்களை எழுதியவர் திரு. கமல்ஹாசன். இப்படி ஒவ்வொரு படத்திலிருந்தும் எத்தனையோ வசனங்களை எடுத்து மனித மனங்களுக்கு உரமேற்ற முடியும் கமல் படங்களிலிருந்து. 'இன்றும் நேற்றும் நாளையும்' எப்போதும் பளிச்சென்று துளிர்விடும் எழுத்து அவருடையது. வாழ்க டாக்டர் கமல் அவர்கள்.

"படித்தவர்களெல்லாம் சேர்ந்து இப்பாமரனை கௌரவிக்கிறார்கள். அதற்காக நான் மகிழ்கிறேன்" என்கிறார் கமல் மிக அடக்கமாக!

'இதப்பத்தியும் உம்மைப்பத்தியும் அய்யன் எங்களுக்கு எப்பவோ சொல்லிட்டுப்போயிட்டான்வெ. நீரு மனீஷாவைப் பாரும்! சீக்கிரமா ரெடி பண்ணி அனுப்பும், எல்லாரும் நல்லா சிரிக்கிற (ரசிக்கிற) மாதிரி'ன்னு சொல்லுறாரு நம்ம சித்தப்பு! கமல் சார் கண்டுக்குங்க!

பி.கு: வலைப்பதிகளில் எங்கும் இச்செய்தி குறித்து பதிவுகளைக் கண்டது போல எனக்குத் தெரியவில்லை. என்ன காரணம்?

எம்.கே.குமார்.



Sunday, January 23, 2005

சிங்கை இணைய நண்பர்களுக்கு..

இனிய சிங்கை நண்பர்களே,

வருகிற சீனப்புத்தாண்டு (பிப்ருவரி 9 மற்றும் 10) விழாவை முன்னிட்டு எல்லோருக்கும் குறைந்தபட்சம் இருநாட்கள்(ளாவது) விடுமுறை இருக்கும் என நினைக்கிறேன். (எனக்கு 8, 9, 10 என மூன்று நாட்கள் விடுமுறை) சிங்கப்பூரிலிருந்து இணையத்தில் பங்காற்றிக்கொண்டிருக்கும் நண்பர்கள் நாம் யாவரும் அந்நாட்களில் ஏதாவது ஒன்றில், ஓரிடத்தில் ஒன்றிணைந்து இணையவிஷயங்களும் இன்னபிற விஷயங்களுமாய் பேசி கலந்து அளவளாவிக்கொள்ளலாம் என்று தோணுகிறது. இணைய நண்பர்கள் என்ன சொல்கிறீர்கள்?

நண்பர் மூர்த்தியும் இதுபற்றி சிலநாட்களுக்கு முன் அவரது பதிவில் எழுதியதாய் ஞாபகம். அன்பு, ஈழநாதன் மற்றும் வீரமணி இளங்கோ ஆகியோர் அதில் இசைவும் தெரிவித்திருந்தார்கள். இப்பிரபலங்களைத்தவிர ஜெயந்திசங்கர், நம்பி, மானஸசென் ரமேஷ், அருள்குமரன், சித்ரா ரமேஷ், பனசை நடராஜன் இன்னும் பல 'விஐபிக்கள்' மரத்தடி உறுப்பினர் மற்றும் வலைப்பதிவர்களாக இணைய உலகில் இருக்கிறார்கள். எல்லோரும் முன்வந்தால் இனிய இணைய உறவுகளின் சந்திப்பாய் அதை நாம் உருவாக்கிக்கொள்ளமுடியும்.

எனவே நண்பர்கள் அனைவரும் முன்வந்து அவரவர்க்கு ஏற்ற நேரத்தையும் தேதியையும் சொன்னால் அவற்றில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து மேற்படி கலந்துரையாடலை நாம் நடத்தலாம். தங்களின் கருத்துகளுக்கு பின்னூட்டுங்கள். நன்றி!

அன்பன்,எம்.கே.குமார்.

Tuesday, January 18, 2005

நம்பிக்கையிழக்கவைக்கும் இரு முடிவுகள்.

ரயில்வே அமைச்சரான லல்லு அவர்கள் நியமித்த முன்னால் நீதிபதி 'பானர்ஜீ' தலைமையிலான விசாரணைக்குழு, தமது விசாரணையின் முடிவில் 'கோத்ரா' ரயில் எரிப்புச் சம்பவத்தை ஒரு விபத்து 'மட்டுமே' என்று அறுதியிட்டுக்கூறியிருக்கிறது. ஆனால் இதற்கு முன் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நியமித்த இன்னொரு உயர்மட்ட குழுவானது, அது கரசேவை முடிந்து சமர்மதி எக்ஸ்பிரஸில் ஊர் திரும்பிக்கொண்டிருந்த 'கரசேவர்களைக்' குறிவைத்து 'வெளியாட்கள்' யாரோ பெட்ரோலைக் கொண்டு எரியூட்டியதாக ஆய்வறிக்கை வெளியிட்டது. இரண்டுக்கும் எவ்வளவு வித்தியாசம் பாருங்கள். எது இங்கே உண்மை?

ஆக இரண்டு வெவ்வேறு அரசுகள் ஆட்சிக்கு வந்தால் 'உயர்மட்டக்குழு ஆட்கள்' கூட அதற்குத்தகுந்ததாய் மாறிக்கொள்வார்கள் என்பது வருத்தமளிக்கும் விஷயம். இவ்வாறு அரசுக்குத் தகுந்ததாய் ஆய்வறிக்கைகளும் கூட மாறும்போது இந்தியாவும் இந்திய ஆட்சியாளர்களும் உருப்படுவதாய் உருப்படப்போவதாய் யாருக்கும் தோன்றாது.

காங்கிரஸ் அரசுக்குக் கீழேயான இவ்வறிக்கை உண்மையென்று லல்லு அவர்கள் அதன் தலைவராய் இருக்கும்வரை யாராலும் நம்பமுடியாது. ஏனெனில் திரு. லல்லுவைப் பற்றி எல்லா அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் தெரியும். எத்தகைய தவறையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் மிகச்சிறந்த 'அரசியல்வாதி' என்பது அனைவருக்கும் தெரியும். பி.ஜே.பி தலைமையிலான அரசு 'கோத்ரா' சம்பவத்தை வைத்து அரசியல் பண்ணியிருக்கலாம் என்றாலும் அப்போது கரசேவர்கள் விஷயம் பெரிதாக பிரச்சனை தரும்படியே இருந்தது. எனவே அப்படியும் நடந்திருக்கலாம் என்று யூகிக்கும்படியாகவே நிலைமை இருந்தது. இந்நிலையில் பி.ஜே.பி அதை வைத்து அரசியல் பண்ணவில்லை என்றும் நாம் சொல்லமுடியாது. ஏனெனில் பி.ஜே.பியின் கொள்கை கடந்தகால பாதைகள் அப்படி. இங்கே எது நிஜம் என்பதை தீ பகவான் மட்டுமே வந்து சொல்லமுடியும் போல இருக்கிறது. பொய் சொல்பவர்களையும் அவர் கொளுத்தி விட்டுப்போகட்டும்.

இரண்டாவது, லல்லு அவர்கள் தனது மடியிலிருந்து ஒவ்வொரு நோட்டாய் எடுத்து நீட்டிக்கொண்டிருந்த செயல் தவறுதான் என்றாலும் மன்னித்துவிடுகிறதாம் தேர்தல் ஆணையம். இது எப்படி இருக்கிறது?

இச்சலுகை எல்லோருக்கும் உண்டா என்றும் அதே தேர்தல் ஆணையம் சொல்லவேண்டும். முதல் தேர்தலிலோ அல்லது ஒவ்வொரு தேர்தலிலுமோ 'முதன் முறையாக செய்யும் தவறு தவறில்லை' என்று அது கொஞ்சம் விளக்கிச்சொல்லிவிட்டுச் செல்லலாம். இத்தகையவைகளே பின்னாளில் ஏதாவது ஒரு முக்கிய வழக்கின் போது முன்மாதிரியாய் அமைந்து அங்கேயும் இன்னொரு குற்றவாளி தப்புவதற்கு ஆயுதமாகிவிடுகிறது. ஆக லல்லு அவர்கள் செய்தால் அது தவறில்லை. மற்றவர்கள் யாராவது செய்தால் தவறாகி விடும்?

வாயைப் பிளந்துகொண்டிருங்கள்! இந்தியா வல்லரசாகி விடும்!

Wednesday, January 12, 2005

'காதல்' - ஒரு காவியம்.

எதேச்சையாக பார்க்க நேரிடும் ஒருசில நிமிடங்களில் பறந்துபோகும் பட்டாம்பூச்சியின் நிழல் போல படக்கென்று வந்து, பறந்து போகும், சில உள்ளம் கொள்ளும் பதிவுகள். ஏதோ ஒரு காய்கறி (முட்டைக்கோஸ் என நினைக்கிறேன்) சமையலுக்காய் நறுக்கிக்கொண்டிருந்த நேரம் செல்பேசி அழைக்க, அதை எடுப்பதற்காக என் அறைக்கு வந்தேன். ஹாலில் இருந்த தொலைக்காட்சியில் சன் டிவியின் 'மறுநாளைய திரைவிமர்சன'த்திற்காய் இப்படத்திலிருந்து சில காட்சிகள் காட்டப்பட்டன. முதல் முறை பார்த்தபோது பட்டாம்பூச்சியின் நிழல் கண்களில் நின்று போனது. எல்லா காட்சிகளையும் பார்த்துவிட்டுத்தான் முட்டைக்கோஸ¤க்கு போனேன்.

மதுரையின் பிஸியான தெரு ஒன்றில் மெக்கானிக்காக இருக்கிறான் ஹீரோ. மூன்று முறை அவனை தவறுதலாக விபத்திற்குள்ளாக்குகிறாள் ஹீரோயின். அதை அவள் ஹாஸ்யமாக எடுத்துக்கொண்டுவிட்டுப்போக ஹீரோவுக்கு எரிச்சலாகிறது. மோதுகிறான் அவளோடு. மோதல் காதலாகிறது. பிளஸ் டு படிக்கும் அப்பெண் தான் 'பெண்மையடைவது உணரும் கணம்' அம்மோதல் காதலாகிறது. பிறகென்ன? கவிதையாக எடுக்கப்பட்டிருக்கின்றன அக்காட்சிகள்.

செல்வம் கொழிக்கும் பிராந்திக்கடைக்காரரின் ஒரே மகள் தான் ஹீரோயின். வறுமையை போக்க பழனிக்கு பாதயாத்திரை போகும் தாயின் மகன் ஹீரோ. காதல் எப்படி ஜெயிக்கும்? வீட்டிற்கு இவையெல்லாம் தெரியும் முன்னே நாயகிக்கு நிச்சயமாகும் திருமணத்தைத் தவிர்க்க நாயகனும் நாயகியும் மதுரையிலிருந்து வீடியோ கோச் பஸ்ஸில் சென்னைக்கு வருகிறார்கள் வீடியோ பார்த்துக்கொண்டே வாழ்க்கையை ஆரம்பிக்க! வாழ்க்கை ஒன்றும் வீடியோ படம் அல்லவே? சென்னையில் அவர்கள் சந்திக்கும் நபர்கள் யார்? அதன்பிறகு அவர்கள் என்ன ஆகிறார்கள்? காதல் ஜெயிக்கிறதா என்பதுதான் படம்.

நிஜங்களைக் காட்சிகளாகக் கொட்டி கவிதையாய்ப் படம் எடுத்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க யதார்த்தம். படைப்பாளிகளை அறிமுகப்படுத்தும்பொழுதே தாலாட்டுடன் ஆரம்பிக்கிறது படம். மதுரை நகர் வீதிகளையும் மனிதர்களையும் சிங்கப்பூரிலிருந்து பார்க்கும் பொழுது சில கணங்களில் அதிர்ச்சியும் பல கணங்களில் சந்தோசத்தையும் உணர முடிந்தது.

முகமெல்லாம் அம்மை போட்டதன் தழும்பாய் பார்க்கும் கணத்தில் பயமுறுத்தி கொஞ்சம் நேரம் மென்மை காட்டி பிறகு சுயரூபம் காட்டி 'கேரக்டர்க்கு' உயிரூற்றுகிறார் நாயகியின் அப்பா. உள்ளத்தின் கொடூரத்தை 'ஒரு கையில்' மறைத்து மென்மை பேசி கண்கள் வழி சாதிய அதிகாரத்தின் வாழ்க்கை காட்டுகிறார் அவரது தம்பி நாயகியின் சித்தப்பா. இருவரையும் சரியாக உள்வாங்கிக்கொண்டு 'மெட்டி ஒலி' பார்த்தாலும் அடங்குவதற்கு அடங்கி எப்போதும் புலம்பிக்கொண்டிருக்கும் மாமியார்க் கிழவியை அதட்டி குடும்பத்தை நடத்துகிறார்கள் அவர்களின் மனைவியர். பிராந்திக்கடையைத் தொழிலாகக் கொண்டவர்களின் போக்கு அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.

இக்குடும்பத்திலிருந்து அதுவும் பணபலமும் சாதீய பலமும் நிறைந்த ஒரு குடும்பத்தில் ஒற்றை மகளாய் ஒரு பெண் இருந்தால் அவருடைய செல்வாக்கு பற்றிச் சொல்லவா வேண்டும்? ஐஸ்வர்யா என்று பெயரிட்டு அன்பைக்கொட்டி வளர்க்கிறார்கள். பேத்தி இன்னும் வீட்டுக்கு வரவில்லை என்பதை அவள் அணிந்து வரும் செருப்பைத் தடவிக்கண்டுபிடித்து புலம்பும் கிழவிக்கு நிகரான யதார்த்த மனிதர்களும் காட்சிகளும் ஏராளம். இவர்களின் மீது தாராள அன்பு கொண்டிருந்தாலும் நாயகி பார்த்த கணத்தில் உயிருக்குள் கலந்துகொள்கிறான் அழுக்குச்சட்டையும் கிரீஸ் கலந்த கன்னமுமாய் ஒருபக்கம் சாய்ந்துகொண்டு பைக் ஓட்டும் சாதாரணமாய் தெருக்களில் நாம் பார்க்கும் ஒரு மெக்கானிக் பையன். பரத்துக்கு நமது இருக்கையிலிருந்து எழுந்து வந்து கை கொடுக்கலாம். அவ்வளவு இயல்பான நடிப்பு. நாயகி ஜிகிர்தண்டா கேட்க அவளது அப்பாவோடு வரும் நேரம் வியர்த்து விறுவிறுத்துப்போனவனாய் பின்வாங்குவது மிகவும் எதார்த்தம். நம்மிலும் 'பலபேர் பின்வாங்கியிருப்பார்கள்.'

நாயகி சந்தியாவுக்கு இது முதல் படமாம். கையில் சூடம் கொழுத்திப்போட்டாலும் நம்ப முடியாது. காட்சிகளின் வழி கரைந்து போகிறாள். உருகிப்போகிறாள். நிஜமாய் ஒரு பதின்ம வயதுப்பெண்ணையும் அவளின் விபரீதமறியா 'ஒரே சிந்தனை' கொண்ட காதலால் ஆன வாழ்க்கையையும் கண்முன்னே காணமுடிகிறது. வரும் அத்தனை காட்சிகளிலும் நிஜமாய் வாழ்ந்துவிட்டு அழுகிறாள். காதலின், காதலனின் முடிவைப் பார்த்து அவள் கண்ணீர் விட்டுக் கதறும் தருணங்கள் அவள் பத்தாம் வகுப்பு படிக்கும் பெண்தானா என்பதை யோசிக்க வைக்கிறன.

மூன்றாவது இடத்திலிருப்பவன் கரட்டாண்டியாய் வரும் (கோபால கிருஷ்ணன்?!) மெக்கானிக் செட் எடுபிடி பையன். அச்சு அசலாய் அதே மாதிரிப் பையன்களை நாம் காணமுடிவதால் இவனும் நடிப்பதாகவே தெரியவில்லை. மதுரையில் ஏழாம் வகுப்பு படிக்கிறானாம். மதுரைப்பாஷை அப்படியே ஓடுகிறது.

நாயகனின் அம்மா, ஜோசப்பாக வரும் நண்பன் சுகுமார் (வடிவேலு போன்றிருப்பவர்), அந்த மேன்சனின் இனிமையான வித்தியாசமான சில மனிதர்கள், மற்றும் காட்சிகள் அனைத்தும் கண்ணுக்குள் நிற்கின்றன.

இயக்குனர் பாலாஜி சக்திவேல் மனம் நிறைந்த பாராட்டுகளுக்குரியவர். ஒரு நிஜ வாழ்வினை காட்சி, இசை, எடிட்டிங் என முழுமை கொஞ்சும் அழகான எதார்த்தங்களோடு கொடுத்திருக்கிறார். பதிவுத்திருமணம் செய்துகொள்ள என்ன வேண்டும் என்பது கூடத் தெரியாதவர்களுக்கு அதையும் சினிமா வழி சொல்கிறார். நல்ல விஷயம். வயதுக்கு வந்ததைக் கொண்டாடும் விழாவில் வரும் குடி-சாப்பாடு- ஒன்று கலந்த அன்பு-சண்டை- காட்சிகள், மாலை எடுத்துப்போட வரும் மாமன் போதையில் தடுமாறுவது என அனைத்தும் அக்மார்க் வில்லேஜ் விருமாண்டிச்சமாச்சாரங்கள். அழகாகப் பதிவு செய்திருக்கிறார். சித்தப்பா வில்லன் மென்மையாகப்பேசி காரியம் சாதிக்கும் போதெல்லாம்அவரது நிஜத்தைச் சொல்வது போல வருகிறது பின்னணி இசை. இயக்குனருக்கும் இசையமைப்பாளருக்கும் பாராட்டுகள்.

காட்சிகளும் இசையும் மனதைத் தொடுகின்றன. காட்சிகள் அப்படியே பட்டாம்பூச்சியின் ரசனையான பறத்தலை நம் கண்ணுக்குள்ளும் மனதுக்குள் உள்வாங்கச்செய்கின்றன. ஜோஷ்வா ஸ்ரீதர் இசை. அறிமுகம். பூப்புனித நீராட்டு விழாவில் வரும் பாடலுக்கும் இடையிடையே அப்பாட்டில் வரும் மென்மையான இசைக்கும் 'தொட்டுத்தொட்டு' பாடலுக்கும் நிறையவே பாராட்டலாம். நா. முத்துக்குமார் சில இடங்களில் தனித்துத் தெரிகிறார்.

இயக்குனருக்கு இது இரண்டாவது படமாம். சாமுராய் எடுத்து வாழ்க்கையைத் தொலைத்திருந்தவருக்கு ஷங்கர் கை கொடுத்திருக்கிறார். நிறையவே யோசித்து இந்த படத்திற்கு தயாரிப்பாளராயிருக்கிறார். இயக்குனராய் 'ஐந்து பையன்களை' வைத்து (பாவம் பண்ணியதற்கு) தான் சொல்ல வந்ததை ஒரே ஒரு பையனைக் காட்டி தயாரிப்பாளராகி பாப விமோசனம் தேடிக்கொண்டிருக்கிறார்.

பிளஸ் டூ படிக்கும் பெண்ணாய் சீருடையில் கதாநாயகி வருவது, வளர்ந்து வரும் பெண்குழந்தைகளின் தந்தைகளில் சிலருக்கும் இன்னும் சில நண்பர்களுக்கும் பிடிக்கவில்லை என்பதாய்ச் சொன்னார்கள். சினிமாவில் வரும் யதார்த்தத்திற்கும் நிஜ வாழ்க்கைக்கும் இடையிலான உறவின் சரியான அணுகுமுறை தெரிந்திருக்கவேண்டும் எல்லோருக்கும். சுனாமியும் நிலநடுக்கமும் எடுத்துக்கொண்டு போகும் வாழ்வில் இனிமேலாவது காதலுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் எல்லா சாதிகளும் சனங்களும்.

மேன்சன் பாடலை தவிர்த்துவிட்டு (படம் இடையில் தடுமாறுவது தவிர்க்க) கரட்டாண்டியைப் பயன்படுத்தி இன்னும் கொஞ்சம் நகைச்சுவை பண்ணியிருக்கலாம். ஸ்கோப் இருக்கின்றன கதையில். ஷங்கரும் சந்தோசப்பட்டிருப்பார். செயற்கையாக இருக்கிறது.

சன் டிவியின் விமர்சனத்தில் 'சூப்பரா, நல்லா, ஒருதடவை பாக்கலாம், அட்டகாசமா, கெளப்பிட்டாங்க'ளாய் சொல்லிவிட்டுப்போனவர்களின் கருத்துக்களை வழக்கம்போல நான் கண்டுகொள்ளவில்லை. விமர்சனத்தின் முடிவில் படத்தின் முடிவையும் அவர் சொன்னபோது நிஜமாய் அதிர்ந்தேன். அது தவிர்க்கப்படவேண்டும். எப்போதும் கிளைமேக்ஸ் நோக்கிய எதிர்பார்ப்பு கொஞ்சமாவது இருக்கவேண்டும். வெற்றிக்காக இல்லாவிட்டாலும் முடிவில் படம் ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் தொடர்ந்த ரசனைகளுக்காவது இது கொஞ்சம் அவசியம். மற்றும் 'டாப் டென்'னிலும் இதற்கு இரண்டாவது இடமாம். நம்பமுடியவில்லை.

எப்படியாயினும், உண்மையில்- 'காதல்' ஒரு காவியம்.


Tuesday, January 04, 2005

ஆத்மா சாந்தியடையட்டும்!

எதுவும் நிச்சயமில்லை. நேற்று மாலை 6 மணிக்கு ஆரம்பித்த நேரடி ஒளிபரப்பான "சூப்பர் நண்பர்கள் 2004/05" நிகழ்ச்சிக்கு பொறுப்பேற்ற ஐந்து நடுவர்களில் தலைமையானவராக 'டை'யோடு இருந்தார் அவர். முதல் இரண்டு சுற்றுகள் முடிந்து, இருபதில் பத்து, பத்தில் ஐந்து என ஐந்து ஜோடி நண்பர்கள் கடைசிச் சுற்றுக்காக காத்திருந்தார்கள்.

ஐந்து ஜோடிகளும் ஐந்து நடுவர்களில் எவரையாவது ஒருவரை எடுத்துக்கொள்ளவேண்டும். அந்த நடுவர் கேட்கும் கேள்விக்கு அச்சோடி பதில் சொல்லவேண்டும். இதுதான் கடைசிச் சுற்று.

நான்கு நடுவர்கள் முடிந்துவிட்டார்கள். ஐந்தாவது நடுவரிடம் கேள்வி வந்தது. 'டை' யை இழுத்துவிட்டு, அவர் அக்கேள்வியைக் கேட்டார்.'இந்த சூப்பர் நண்பர்கள் என்பதெல்லாம் வெறும் போலித்தனம் என்று நான் நினைக்கிறேன். இதை இல்லையென்று எப்படி மறுப்பீர்கள்.?' இதுதான் கேள்வி.
"என்னம்மா கேட்டாரு பாருய்யா கேள்வி.! வக்கீல்ன்னா சும்மாவா இருக்கு? மத்தவங்க கேட்டதெல்லாம் கேள்வியா" என்று எனதருகில் இருந்த சக அறைவாசியிடம் சொல்லிக்கொண்டே நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

நிகழ்ச்சி முடிந்து வெற்றிபெற்றவர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் நடுவர்கள் எழுவது வரை பார்த்துக்கொண்டிருந்தேன். பிறகு 'லைவ்' முடிந்ததால் டிவியில் அடுத்த நிகழ்ச்சி தொடங்க இருந்த தருணத்தில் சூப்பர் நண்பர்கள் நிகழ்ச்சிக்கு சென்றிருந்த நண்பரிடமிருந்து அழைப்பு. 'உதுமான் கனி காலமாகிவிட்டார்.'
அவர் கேள்வி கேட்ட தோரணையையும் அந்த மென்மையான புன்முறுவலையும் சற்றுமுன் வரை ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு எப்படி இருந்திருக்கும்?

இதோ கைகளில் தவழ்கிறது சென்றவாரம் தேசிய நூலகத்திலிருந்து நான் எடுத்து வந்த "அ·றிணை உயர்திணை" என்ற அவரது சிறுகதைத் தொகுதி. இருகதைகளையும் முன்னுரையையும் மட்டுமே இதுவரை படித்திருந்தேன். அவர் எழுதிய கதையை படிப்பதற்குள் அவர் கதை முடியுமென்று எப்படி நினைக்கமுடியும் என்னால்?

1957 ஆம் ஆண்டு டிசம்பர் 28, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒப்பிலான் என்ற கிராமத்தில் பிறந்து ஐந்து வயதில் சிங்கை வந்து வழக்குரைஞருக்கு படித்து, லண்டன் சென்றும் படித்து வந்து 'உதுமான் கனி & அசோசியேட்ஸ்' என்று வழக்குரைஞர் பணி செய்து, இனியவன் என்ற பெயரில் சில காலமும் பிறகு 'இளையவன்' என்ற பெயரில் 12 சிறுகதைகளும் எழுதியவர்.

அண்மையில் நடந்த மாலன் மற்றும் வெங்கடேஷ் புத்தக வெளியீட்டு விழாக்களில் மட்டுமே எனக்கு அவர் பரிச்சயமாகியிருந்தாலும் இதோ அந்த மென்மையான யாருக்கும் தீங்கிழைக்காத தன்மை கொண்ட நகையும் எளிமையாக பேசிய வார்த்தைகளும் கண்ணுக்குள்ளேயும் நெஞ்சுக்குள்ளேயும் நின்றுகொண்டிருக்கின்றன.

"தற்போது ஆங்கிலம் பேசித்தான் பிழைக்கிறேன். தினமும் தமிழில் தான் சுவாசிக்கிறேன். ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன நான் முதன்முதலாக சிறுகதை எழுதத்துவங்கி. என்னை எழுதத்தூண்டியவர் இன்று என்னோடு இல்லை. என் எழுத்தில் அம்பலத்தில் ஏற்றிப்பெருமிதம் கொண்டவனும் என்னுடன் இல்லை. இன்றைய நிலைமை இப்படித்தான் இருக்கும் என்று நான் அன்று கற்பனை செய்தது இல்லை. நிஜ வாழ்க்கை கற்பனையை விட அதீதமான திருப்பங்கள் நிறைந்தது என்பதை அனுபவப்பூர்வமாக கற்றிருக்கிறேன். நான் ஒரு தமிழ் வெறியன் அல்ல. தமிழ்ப்பிரியன் என்று அடையாளம் காட்டவே ஆசைப்படுகிறேன்"

அ·றிணைகளும் உயர்திணைகளும் அடங்கிய ஒன்றுக்கு அவரின் முன்னுரை!

கற்பனையை விட, பலமடங்கு கொடுமையான திருப்பங்களும் கொண்டதய்யா வாழ்க்கை! இதோ இன்றும் உணர்ந்துகொண்டேன்!

உங்களின் ஆத்மா சாந்தியடையட்டும். இருவேறு மதங்கள் இணைந்த உமது வாழ்வில் 'இன்று நடப்பன' இருக்கட்டும். உமது ஆத்மா சாந்தியடையட்டும்!
எம்.கே.குமார்.


Search This Blog