Tuesday, December 23, 2003

விருமாண்டி உருவான கதை.

அண்மையில் சன் டிவியில் இது பற்றி பேசினார் கமல்.

இப்படியெல்லாம் பரபரப்பாய்ப் பேசி படம் பார்ப்பதற்கு ஆர்வத்தை உண்டு பண்ணி, கடைசியில் அதிக எதிர்பார்ப்பிலும் படம் ஊத்திக்கொள்வதை நான் விரும்பவில்லை. ஒருவேளை வியாபாரத்திற்கு இது ஒரு காரணி என்றால் இட்ஸ் ஓகே.

ஆனால் ரோகிணி ( நிருபராய் வருகிறாராம்.) சம்பந்தப்பட்ட காட்சிகள், மரண தண்டனையையே கேள்வி கேட்கிறார் (என்று எங்காவது படிக்கும்போது) என்று இதையெல்லாம் பார்க்கும்போது அய்யோ! தமிழ் கூறும் நல்லுலகம் அந்த அளவிற்கா அவரை அரவணைத்துக்கொள்ளும் என்று புலம்பத்தொடங்கிவிட்டேன். எல்லோரும் சொன்னார்கள். "கடவுளை வணங்குகிறோம். இந்தப்படம் வெற்றி பெறவேண்டும் என்று". எல்லோருக்கும் வந்த பயம்தான் எனக்கும். கடவுள்தான் காப்பாற்றவேண்டும்!

இன்னொரு பயமும் வந்துவிட்டது. கமல் டைரக்ஷன் என்றாலே மொகஞ்சதாரோவில் எலும்பைத் தோண்டிப்பார்க்கும் காட்சியை பத்து நிமிடங்கள் (அதற்கும் கூடவா?) வைப்பாரே. அப்படி இப்படி எதையாவது வைத்து 100% பெர்·பெக்ஷனிஸ்டாய் சொதப்பி விடப்போகிறார் என்று..

'சத்யா' படம் அண்மையில் பார்த்தேன். கிரேட். அந்தப்படம் இப்போ வந்தால் இன்னும் கொஞ்சம் ஓடும் என நினைக்கிறேன். (குணா, மைக்கேல் மதன..., மஹாநதி என எல்லாவற்றிற்கும் இப்போது அப்படித்தான் தோணுகிறது என்பது வேறு விஷயம்.!)

படம் பார்த்து முடிக்கும்போது, 'கிரேட். சான்சே இல்லை. கண்டிப்பா அவார்டு கிடைக்கும்' என்று எப்போதும் சொல்வதை மட்டும் இந்த தடவையும் நான் சொல்லக்கூடாது என்றும் கடவுளை நான் வேண்டிக்கொள்கிறேன்.

எம்.கே.குமார்.
ஒரு பொன் மாலைப்பொழுது.

'ஆத்மரச்மி' என்றொரு பெயரை விகடனிலும் கணையாழியிலும் நீங்கள் பார்த்திருக்கக்கூடும். '88 வாக்கில் கதை எழுத ஆரம்பித்த இவர் ஆனந்த விகடன், கணையாழி, தினமணி கதிர் போன்ற பத்திரிகைகளில் நிறைய கதைகள் எழுதியிருக்கிறார். 1991 ல் இவரது குறுநாவல் ஒன்று (வலி உணரும் தந்திகள்.) தி. ஜா நினைவு குறுநாவல் போட்டியில் கணையாழியால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அருமையான ஒரு குறுநாவலாக அது வடிவெடுத்திருக்கிறது. (இந்தக்கதை வெளியான அந்த இதழில்தான் பா. ரா தனது இருபத்தைந்தாவது வயதில் முதன் முதலாய் (அவளுக்கு ஒரு அம்மா) எழுதியிருக்கிறார். அமுதசுரபி விக்கிரமன் வளர்க்கும் கன்று என்று பாராவுக்கு முன்னுரைக்கப்பட்டிருக்கிறது.)

அதற்குப்பிறகு ஆத்மரச்மி நிறைய சிறுகதைத்தொகுப்புகளுக்கும் நாவல்களுக்கும் அட்டைப்பட ஓவியம் வரைந்திருக்கிறார். 'கிரீஷ் கர்னாட்'டின் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 'நாக மண்டலத்'திற்கும் 'நிழல்களின் உரையாடல்' என்ற 'அமர்ந்த்தி'யின் புத்தகத்திற்கும் இவரே அட்டைப்பட ஓவியர். இதுதவிர காலச்சுவடு, தமிழ் அரசி போன்றவற்றிலும் கதைகளுக்கு ஓவியங்கள் வரைந்திருக்கிறார்.

சிறிது காலம் கதையெழுதுவதை ஒத்தி போட்ட இவர் மிக அருமையான ஓவியராகத்தன்னை அதற்குள் ப்¢ரகடனப்படுத்திக்கொண்டிருக்கிறார். காலச்சுவடு ஓவியங்கள் அதை நமக்குச்சொல்கின்றன. அதைப்போல கிட்டத்தட்ட 40 கவிதைகளையும் எழுதியிருக்கிறார். கவிதைகளில் அவரது அக்னிப்பிரவேசம் கட்டவிழ்த்த ஆறாக அவதாரம் எடுத்திருக்கிறது. சில கவிதைகள் மிகவும் ஆழம். கலாப்ரியா, கல்யாண்ஜி, மனுஷயபுத்திரன், பிரமிள் வகையில் யோசிக்கவைக்கின்றன.

அந்த 'ஆத்மரச்மி'யின் உண்மையான பெயர் சுப்பிரமணியன் ரமேஷ். சிங்கப்பூரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். வார்த்தைகளை எண்ணிக்கையில் பேசுகிறார். மிகவும் பண்பட்டதாய் வருகிறது பேச்சு. இலக்கிய உலகச் சண்டைகள் பற்றிக்கேட்டால் மென்மையாக சிரிக்கிறார். 'ஜெயமோகனிடம் கொஞ்சமாய் பழகியிருந்தாலும் அவரது திறமையை யாரும் குறைத்து மதிப்பிட்டுப் பேசமுடியாது' என்கிறார். விவாதங்கள் மாட்டை விட்டு விலகி தென்னைமரத்துக்குச் செல்வதைச் சொல்லி, வருந்தி நமக்கும் ஞாபகப்படுத்துகிறார்.

வரவேற்பறையில் இருக்கும் 'enchanting' பெண்ணின் ஓவியம் அவரது திறமைக்கு இன்னொரு எடுத்துக்காட்டு. அதேபோல சிவனின் ஓவியமும். மகாத்மாவின் பொக்கைச்சிரிப்பில் இருக்கும் பிரமிப்பு ஏனோ இப்போது இந்தமாதிரி ஓவியங்களிலும் எனக்கு வருகிறது.
புத்தக அலமாரி ஒரு நூலகத்தையே எனக்குக் காட்டுகிறது. நிறைய ஆங்கிலப்புத்தகங்கள்.

'An autobiogrpy of an yogi' புத்தகத்தை விவரித்துப்பேசுகிறார். சமையலறைக்குள் புகுந்து அவரே சமைக்கிறார். 'தனது மனைவியின் சமையலுக்கு முன்னால் இதெல்லாம் தூசு' என்றாலும் நன்றாகத்தான் இருக்கிறது அவரது சமையல். மனைவி சமையல் மட்டுமின்றி ஓவியம் வரைவதிலும் மிளிர்வதை பெருமையோடு சொல்கிறார்.

அண்மையில் திண்ணையிலும் திசைகளிலும் இவரது கவிதைகள் வெளியாகியிருக்கின்றன. அண்மையில் நடைபெற்ற சிங்கப்பூர் சிறுகதைப்போட்டி ஒன்றில் முதற்பரிசைப்பெற்றார். கவிதைக்கு மூன்றாம் பரிசு. இரு ஓவியக்கண்காட்சிகளை நடத்தியுள்ளார்.

தற்போது இணையத்தளங்களில் குளோபல் தமிழ், தமிழா. காம் உட்பட பலவற்றிற்கு முதன்மையான தனது பங்குகளை மேம்படுத்திக்கொண்டிருக்கிறார். கலாப்ரியா, சிவகாமி போன்றவர்களோடு உரையாடிய அனுபவத்தைச் சிலாகிக்கிறார். சுஜாதாவின் கடிதத்தை ரசித்துச்சொல்கிறார். சாரு நிவேதிதாவுடன் பழகிய பழைய ஞாபகங்களைக்கிளறுகிறார்.

"சோம்பேறித்தனமே தவிர்க்கமுடியாத எனது முதல் எதிரி" என்கிறார் சிரித்துக்கொண்டு. எழுதிக்கொண்டிருக்கும் ஒரு கதையைக்காட்டுகிறார். இன்னும் ஒரு சில வாரங்களுக்குள் விகடனில் பார்க்கலாமா என்றால், 'சொல்லமுடியாது முடிக்கவே ஒரு சில மாதங்களாகும் ' எனச்சிரிக்கிறார்.

இன்னொரு அருமையான கவிதையைப்பற்றிச்சொல்ல மறந்துவிட்டேன். அது, அழகான ஒரு ஓவியத்தை (அப்பாவும் புலி. அம்மாவும் புலி..குட்டி மட்டும்?) வரைந்து 'இதுதான் அப்பா- அம்மா' என்னும் சினேகா. அப்பாவின் பங்கையும் அப்படியே எடுத்துக்கொண்டு நிமிடத்திற்கு நூறு வார்த்தை பேசுகிறாள். ஓவியத்தைப்பார்த்துக்கொண்டிருந்த என்னிடம் அந்த கேள்வியைக்கேட்கிறாள். தனது கையிலிருக்கும் அந்த பொம்மையை வைத்துக்கொண்டு, 'இதற்கு என்ன பெயரை வைக்கலாம்?'

ரேகா, உமா, நூர்ஜஹான் என நானும் என்னென்னவோ சொல்ல, ரொம்பக்கூலாக சொல்கிறாள், சிண்ட்ரெல்லான்னு வைக்கலாம்.

அவர் எழுதிய கவிதைகளில் அருமையானது இதுதான் என நினைத்துக்கொண்டு வயிறார சாப்பிட்டும் விட்டு வந்தேன்.

எம்.கே.குமார்.

Tuesday, November 18, 2003

ஒரு விழியோரத்து நினைவுகள்.-3

சொமை!

சோத்தைக்காணாத வவுறு
சோவமாய் சுருங்கிப்போய்க்கெடக்க
வவுத்துப்பிரச்சனையைச்சொல்லி
வழிகாட்ட வேணுமாய்
சாமிகிட்டெ சொல்லி
சப்பரந்தூக்கினேன்.

பொணமாட்டம் கணக்குறான்
பொங்கச்சோத்து ஐயர்பய!

எம்.கே.குமார்.

ஒரு விழியோரத்து நினைவுகள்.-2

எச்சில்.

நிம்மதியாக
கனவு கூட இல்லாமல் தூங்கிய இரவுகள்
என்றதும்

காரணம் தெரியாமல்
நினைவுக்கு
வர மறுக்கிறது.
தற்கொலையில் முடிந்த
எனது
கடைசி இரவு.

எம்.கே.குமார்.

ஒரு விழியோரத்து நினைவுகள்.-1

அவள்.

குளிரில் பற்கள் நடுங்குகின்றன.
இரவின் திகில்
என்னையும் சிதிலமாக்க
அசாதாரண நிசப்தக்காட்டில்
மஞ்சள் பல்பின்
அப்பிய சோகத்தில்
துர்நாற்ற சதைகளின் உயிரோட்டமாய்
என் சுவாசமிருக்க
தேடிக்கொண்டிருக்கிறேன்.

என்
மனைவியின்
தொலைந்து போன மெட்டியை...
பிணவறையில்.

எம்.கே.குமார்.

Wednesday, October 29, 2003

pithamagan

பிதாமகன்:

தூங்கிக்கொண்டிருக்கும் போது திடீரென்று, ரைட் ரைட் போகலாம் என்கும் கண்டக்டர் , 'உனது ரோஜா இதழ்கள் எப்போது என் முத்தத்தை என்னிடம் பிரதிபலிக்கும் என் அன்பு டைப்பிஸ்ட் கனகாவே' என்று மனைவியின் மூக்கை தடவிக்கொண்டிருக்கும் கனகாவின் காதலன், 'அதெல்லாம் இப்போ முடியாது போயிட்டு நாளைக்கி வாங்க. எனக்கு அர்ஜெண்டா வேலையிருக்கு..'என்று எதிரில் நிற்கும் நம்மை சிறிதும் சீண்டாமல் கடிகாரத்தைப்பார்த்துக்கொண்டு அய்யோ நாலு மணி ஆச்சா என்று டிரா வைத்த மேஜையை இழுத்து பூட்டும் அரசாங்க உத்தியோகஸ்தர், 'யோவ் மாசக்கடைசியா, பாத்து செய்யி..'என்று நடைபாதைக்கடைக்காரனிடம் மாமுல் வாங்கும் போலீஸ்காரர் வரை அனிச்சையாய்ப்பேசும் சிலரை நாம் பார்த்திருக்க வாய்ப்பிருக்கிறது.
அப்படி ஒரு அனிச்சையாய், "ம்ம். மொகத்தைப்பாக்காதவங்களாம் கடைசியா மொகத்தைப்பாத்துக்குங்க.......மூடப்போறேன்" என்று பிணத்தை எரிப்பதற்கு முன் அவனிடமிருந்த வரும் வார்த்தைகள் மயானத்துக்கும் அவனுக்கும் உள்ள ஒட்டுமொத்த உறவையும் சொல்ல அறிமுகமாகிறான் சித்தன்.

ஓ போட்டு, கதாநாயகியின் மார்பில் தலைவைத்து மெலோடியஸ் பாடி, அவளது புடவையை அல்லது அது சார்ந்த பகுதிகளை மொத்தமாய் இழுத்து ஒரு மார்கழிக்குளிர் பாடலைப்பாடி, நான்கு தடியர்களை பொட் பொட்டென்று தட்டி, கடைசியில் போலீசின் உதவியோடு படத்தை முடித்துவைக்கும் ஹீரோவுக்கு இப்படி ஆரம்ப காட்சியிலிருந்து கடைசிக்காட்சி வரை ஒரே மாதிரி மாக்கான் கணக்காய் முகத்தை வைத்துக்கொண்டு இரண்டு உதடுகளை ஒரு மாதிரி விரித்து காவிப்பற்கள் வழிந்தோட அதைத்தான் சிரிப்பென்று நினைக்கவைத்து மொத்தமாய் ஆக்ரோஷம் வந்தால் சிங்கம் மாதிரி என்ன, சிங்கமாகவே கர்ஜிக்கும் கைதேர்ந்த நடிப்புக்கலையும் ஒரு ஹீரோவுக்கு இருப்பது மிகவும் ஆச்சரியம்.

கண்களில் கொலைவெறி தாண்டவமாட பழிக்குப்பழி வாங்கும் வேகத்தில் உடல் இயங்க நந்தாவில் கலங்கடித்த அந்தச்சிறுவன், இதில் போடி நாயக்கணூர் கிராமத்து இளைஞனாய் லுங்கியைக் கட்டிக்கொண்டு பேச்சில் அசரவைக்கும் வியாபாரதந்திரத்தைக் கைகொண்டு, நவரச பாவத்தையும் முகத்தில் காட்டி, காதலி நெஞ்சில் மட்டுமல்லாமல் நம் நெஞ்சிலும் முழுவதுமாக இடம் பிடித்து அழ வைக்கும் ஷக்தியாய் வந்து படம் முடிந்தும் நினைவில் நிற்கும் சிரிப்பைத்தந்தவனாய் ஆகிப்போவது அற்புதம்.

காட்சிக்குக்காட்சி கவிதையாய் கொஞ்சம் முயன்றால் ஊர்வசியின் இடத்தைக்கூட பிடித்துவிடும் அளவுக்கு மஞ்சு. 'அப்படி அவகிட்டெ என்ன இருக்கு, ஏதோ அவகிட்ட மட்டும்தான் இடுப்பு இருக்க மாதிரி' என்று சிம்ரனைத்தாக்கும், வெறும் கவிதைகளில் கதைகளில் மட்டுமே வரும் நம்மில் சிலரது ஆதர்ச கதாநாயகியாய் வரும், பொறி உருண்டையையும் 'நாளைக்கி எங்க பாலிடெக்க்னிக்கு வாரீங்களா வெளையாடலாம்' என்று தன் அப்பாவி முகத்தை வைத்து அபிநயம் பிடிக்கும் அந்த மஞ்சுவை இப்படி அழகான பாத்திரங்களில் அள்ளி ஊத்தி தண்ணிருக்கு வடிவத்தைக்கொடுத்திருக்கிறார் பாலா.

மயானத்துக்கும் வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பு நம் கண் முன்னே காட்சியாகவும் கருத்தாகவும் வந்துபோகிறது. வாழ்க்கையில் சொந்தபந்த சாவு என்பதையே கண்டிராத அவன் முதன்முதலாய் தன்னை வளர்த்த சாமியார் சாவும்போது எத்தகைய உணர்வையும் முகத்தில் காட்ட தெரிந்துகொள்ளாமல் ஆனாலும் ஏதோ ஒன்று இழந்துபோனது அறிந்து பாடும் அந்தப்பாடல் கண்களை பனிக்கப்போவது நிஜம்.
ஆனால் அவனே தனக்காக ஒருவன் தன்னிடம் பாசம் காட்டிய ஒருவன் இறந்துபோகும்போது அதே பாடலைப்பாடி தனக்குள் இருக்கும் அந்த இழப்பைக்கண்களால் காட்டி கோரதாண்டவம் ஆடி இருப்பது அசத்தல்.

படம் பாதி வரை என்ன பாதிக்கும் மேலே வரை மிகவும் காமெடியாய் நகர்கிறது. பாலாவை இந்தக்கோணத்தில் யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். சீரியஸான கதையையே இப்படி நகைச்சுவையாக நகர்த்தியத்தியதில் படத்தின் வெற்றி முகம் ஓங்கி நிற்கிறது.

படம் பார்க்கும்போது, ஷக்தியை மட்டுமே சுற்றி கதை நகர்கிறதே இரு ஹீரோ பிரச்சனை எதுவும் வந்திருக்காதோ என்னும்போது அப்படியே ஒரு ஹீரோ கதையை முடித்து சமப்படுத்திவிடுகிறார்.

படம் இடைவேளை வரை ஷக்தி - மஞ்சு-கருவாயா- அத்தான் கூட்டணி நம்மைச்சிதற அடிக்கிறது நகைச்சுவை வெடியால். மேல்தட்டு மக்களுக்காகவே கமல் பண்ணிவிடும் சில காமெடிகள் அவருக்கு தோல்வியை ஏற்படுத்திக்கொடுத்துவிடும் அபாயம் இதில் பாலாவுக்கு இல்லை. படத்தில் கஞ்சாவை அடக்கிக்கொண்டு சீக்கிரம் நானும் உன் இடத்துக்கு வந்துருவேன், கட்டையை எரிக்கும்போது நெஞ்சிலே போட்டு அடிக்காதப்போய்...என்று வெட்டியான் சித்தனிடம் சொல்லும் பாத்திரங்களும் இருக்கிறார்கள். சிம்ரனை அழைத்து வந்து ஆட்டம் போடும் ஒரு பதினைந்து நிமிட நகைச்சுவை+ கதை நகர்த்தல் காட்சிகளும் இருக்கிறது. இவையெல்லாம் தரை டிக்கெட்டில் அமர்ந்து பீடியை இழுத்துக்கொண்டு படத்தைப்பார்த்துக்கொண்டிருக்கும் அவனுக்கும் புரியும் என்பதால் பாலாவிற்கு அங்கும் தோல்வியில்லை.

தன் அகப்பையில் அகப்பட்டதைத்தேடி தடவி எடுத்துக்கொடுத்திருக்கிறார் இளையராஜா. பேசமால் படத்துக்கு பின்னணியை மட்டும் அவர் பார்த்துக்கொண்டு நந்தாவில் வெளுத்து வாங்கிய யுவனிடம் விட்டிருக்கலாம். எங்கெங்கோ....கால்கள் செல்லும் பாதையையோ, எங்கே செல்லும் இந்தப்பாதையையையோ நாம் பெறாமல் வருந்துகிறோம். வரும் அவைகளும் அந்த அளவுக்கு அழுகையைத்தரவில்லை.

படத்தின் ஒளிப்பதிவாளர் (ரத்னவேலுதானா? நந்தா, சேதுவுக்கு அவர்தான்) பெயரை நான் பார்க்கவில்லை. தயாரிப்பு போடும்போதுதான் உள்ளே சென்றேன். காட்சிகள் அருமை. ரயிலில் முதன்முதலில் பயணிக்கும் வெட்டியானின் பார்வை போகும் வண்ணம் காமிரா அணில்குஞ்சாய் மரத்திற்கு மரம் கிளைக்குக்கிளை தாவுகிறது. மயானத்தின் கோரத்தை அழகாய்க்காட்டும்போதும் சரி, லைலாவை கவிதையாய் கண்முன்னே நிறுத்தும்போது சரி அசத்துகிறார் மனிதர்.

பாலாவின் டச் நிறையவே இருக்கிறது. தலையில் முட்டி மூளை கலங்குவதும் ஆணுறுப்பை அறுப்பதும்போன்று குரல்வளையை கடிக்கிறான் மனிதன். நெய்முறுக்கு போன்று பொறி உருண்டை. ஆனால் ராஜசிறீயை விட்டுவிட்டார். என்னாச்சு?

படத்தில் ரசிகாவா? ஒரு அக்கா வருகிறார். மலையாள வில்லன் போல ஒருத்தர். பெயர் தெரியவில்லை. நந்தாவில் வந்த ராஜ்கிரண் போல கெட்டப். ஓஹோ...இதுதான் கஞ்சாச்செடியா? கஞ்சாப்பொடி பார்த்திருக்கிறேன். செடியை இப்போதுதான்.

படம் பார்க்கும்போது, சில நினைவுகள் என்னையும் அறியாமல் எனக்குள் வந்துபோயின.
மகாநதி ஜெயில் சண்டை, எங்க ஊர் கோயில் திருவிழா சக்கிரி, ஒரு மயான கவிதை, நெஞ்சுக்கூடு மட்டும் எம்பி மேலே எழும் எரியும் பிணம், என்னைப்பெரிதும் வாட்டிய என் பெரியம்மாவின் மரணம் அது சம்பந்தப்பட்ட சுடுகாட்டு சம்பவங்கள். வாழ்க்கை கனவுதான். ஆனால் நிஜமான கனவுகள்.

கதையில் ஒரு சில இடங்களில் சின்ன சின்ன ஓட்டைகள் இருக்கின்றன. எதுவுமே தெரியாத அப்பாவி போல பார்ப்பவர்களுக்கு தோன்றும் சித்தன், ஷக்தியைக்கொன்றது அவன்தான் என்று எப்படி வில்லனைத் தெரிந்துகொண்டான் என்பன போன்ற கேள்விகள் கேட்கப்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால் அனைத்தையும் அமைதியாக நோட்டமிடும் சித்தனுக்கு இது தெரியாதா என்ன என்றும் நாம் பதில் சொல்லிவிடும் படியும் வாய்ப்பிருக்கிறது.

பாலாவின் பட தர வரிசையில் என்னைப்பொருத்தவரை மூன்று படங்களும் அதற்குரிய இடத்தையே பெறுகின்றன. ஆனால் வெற்றிப்பாதையில் இது முதல் இடத்தைப்பெறும் என்பது என் கணிப்பு.

சில படங்களை மட்டுமே திரையில் பார்ப்பது என்ற என் கொள்கையில் அன்பே சிவத்துக்கு அடுத்ததாய் இது. காசு வீணாகவில்லை.

வணக்கங்களுடனும் நன்றிகளுடனும்
எம்.கே.குமார்.


Friday, October 17, 2003

kadavu

கடவு- எனது வாசிப்பும் ரசிப்புகளும்.

கடவு
திலீப் குமார்.


ஒரு இரண்டு மூன்று வருடத்திற்கு முன்னால் அந்த புத்தகத்தைப்படிக்க நேர்ந்தது என்னால். இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த தமிழ் சிறுகதைகளாய் சா. கந்தசாமி அவர்கள் தொகுத்த முதல் பாகம் அது.

மொத்தம் பதினைந்து அல்லது இருபது கதைகள் இருந்தன அவற்றில். முழுவதுமாக படித்தேன். ஜெயமோகனைப்பற்றியோ இல்லை திலீப் குமார் பற்றியோ எனக்கு 'அ' கூட தெரியாத காலம் அது.

அந்தத்தொகுப்பில் சுஜாதா அவர்களின் கதையும் பாலாவின் ஒரு கதையும் கூட இருந்ததாய் நினைவு. ஆனால் என்ன கதை அவற்றின் கரு என்ன என்பது கூட எனக்கு ஞாபகமில்லை. ஆனால் பெயர் எனக்கு அப்போது பரிச்சயமில்லாத சிலர் எழுதிய கதைகள் பசு மரத்தாணி போல் மனதுக்குள் பதிந்து இன்றுவரை என்னை அந்த நினைவில் தொலைத்துப்போவதுண்டு.

அவற்றில் முதலில் ஜெயமோகன் கதை ஒன்று. திசைகளின் நடுவே தொகுப்பிலும் அந்தக்கதை உள்ளது. தனது மனத்துக்குள் உள்ள இந்த உலக லௌகீக இச்சைகளையும் பிச்சை புகிர்ந்து வாழும் சில பிராமண வாழ்க்கையைக்கண்டித்தும் உலக ஈஷித்தல் வாழ்க்கையின் அவலங்களையும் வெறுக்கும் ஒரு சாதா மனிதனின் நிலையை எண்ணத்தை, சாமியார் ஒருவர் அப்படி வெளியே பேசித்திரிய, அவரை ராஜாங்க காவலர்கள் இழுத்துச்சென்று தீக்குள் தூக்கிப்போடும்போது இந்த சாதாரண மனிதனின் காலடியில் அவர் விட்டுச்சென்ற அந்த சாமியாரின் கைத்தடி தட்டுப்படும். அது மறக்கமுடியாத கதை.

அடுத்தது இது. ஒரு மனிதன் வேலை முடிந்து லேட்நைட்டில் வீடு திரும்பும்போது அவனது பார்வையில் தெரு மிகவும் சாந்தமாகவும் ஆரவாரமாகவும் இருக்கும். காரணம் அடுத்த நாள் வரும் தீபாவளி. அவனது வீட்டில் அந்த லேட்நைட்டில் நடக்கும் சுரம் குறைந்த உரையாடல்கள் நம்மை ஒரு நிமிடம் வறுமையின் உச்சத்தில் கொண்டு போய் நிறுத்தும். அந்தக்கதை இனி.

ஆனால் அதற்கு முன்னால் இன்னும் இரண்டு கதைகளும் மறக்கமுடியாததாய் அதில் இருந்தன. ஒன்று வண்ணநிலவனோ இல்லை வண்ணதாசனோ எழுதியது. குறவன் குறத்தி வாழ்க்கை பற்றியதாய்.

அடுத்தது, எழுதியவர் பெயர் நினைவில் இல்லை. ஆனால் அது ஒரு வரலாற்றுச்சிறுகதை. மிகவும் அட்டகாசமாய் மந்திரி மகளான தன் மீது ஆசை வைக்கும் ராஜாவை பழிதீர்த்துக்கொள்ளும் ஒரு பெண்ணின் கதை.

இந்த நான்கு கதைகளும் இன்றுவரை நினைவில் இருந்தாலும் இப்போது எதிர்பாரா விதமாக அவற்றில் சிலவற்றைப்படிக்க நேரும்போது முதல் வரியைப்படித்த உடனே எனக்கு பொறி தட்டியது என்று நினைக்கும்போது கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

கடந்த சில வாரமாக திரு. ஆனந்த ராகவ் அவர்கள் இவர் கதை பற்றி இங்கு எழுதிவருகிறார். அதற்கு முன்னே நான் படிக்க ஆரம்பித்திருந்தாலும் இந்த மடல்களுக்குப்பின் என் வாசிப்பின் வேகம் அதிகமானது என்பது உண்மை.

சரி. இனி அந்த கதைத்தொகுப்பு பற்றிய எனது வாசிப்பும் ரசிப்புகளும்.

கடவு. இது அந்தத்தொகுப்பின் பெயரும் முதல் கதையும் இரண்டும்.

அப்பட்டமாய் ஒரு ஆபாச கதை. ஆனால் படிக்கும்போது உங்களுக்கு அப்படித்தோன்றினால் அதை நாம் எட்டாவது அதிசயமாக்கிக்கொள்ளலாம். அப்படி ஒரு நடை. எழுத்து. வெள்ளக்காரனும் கூட என் மேலே படுத்துருக்காண்டி என்று சாதாரணமாய்ச்சொல்லும் அந்த கங்குப் பாட்டி. தன் கையைக்கூட தன்னால் மடக்கமுடியாத நிலையில் தன்னிடம் வந்து லெஸ்பியனிசம் பேசும் பெண்ணுக்கு இரண்டும்கெட்ட தன் நினைப்பைச்சொல்லாமல் வெறுமனே திட்டும் கங்குப்பாட்டி. அப்படியே ரிக்ஷாவில் ஏறி பீச்சுக்குப்போவதுபோல சட்டென்று சாய்ந்து செத்துப்போகும் சாவு. வாழ்க்கையின் எதார்த்தத்தை இவ்வளவு லேசாய் யாரும் சொல்லிவிடமுடியாது.

படித்து முடிக்கும்போது ஒரு பாய்ஸ் படத்தை சென்சார் கண்ணோடு பார்த்த திருப்தி. ஆனால் சந்தேகமே இல்லாமல் நாம் U கொடுத்துவிடுகிறோம். அதற்காகத்தானே அவரும் எழுதியிருக்கிறார். எழுத்தின் வெற்றி.

கானல்:

"ஒரு அழகிய விலங்கைப்போல தகித்து உருகி குழந்தையாய் ஆடைகளைக்களைந்த அவள் அந்த நிகழ்ச்சிக்குப்பிறகு ஒரு உலர்ந்த மரத்துண்டைப்போலக்கிடந்தாள்."

கதை புரிந்துவிட்டிருக்கவேண்டுமே!

ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களோடு உறவுகளில் ஈடுபட நேரும் ஒரு பெண்ணுக்கு இந்த மாதிரி எண்ணங்கள் வர வாய்ப்பிருக்குமா என்பது பொதுவான ஒரு சந்தேகம்.

அதை முடிவில் அந்தப்பெண்ணே சொல்லும் வார்த்தைகளின் மூலம் விளக்குகிறார் திலீப் குமார் அவர்கள்.

கடிதம்:

கடிதத்தில் மிட்டு மாமாவின் லௌகீக விஷயங்கள் அலசப்படுகின்றன. அவரே சொல்லும் ஒரு கடிதத்தின் வாயிலாக. 70 வயதானாலும் கை காலில் சிரங்கு கனத்து நீர்த்தாலும் இன்னும் மஹேஷ்வரி பவன் பூரி கிழங்குக்கு ஆசைப்படும் மிட்டு மாமா. கையில் ஒரு ரூபாய்க்கு வழியில்லாமல் இருந்தாலும் குழலூதும் கண்ணனுக்கு தினம் அம்பீஸ் கபே தோசையை நைவேத்தியம் படைக்கும் மிட்டு மாமா. ரிக்ஷாக்காரன் காத்தவராயனுக்கும் கடன் பாக்கி. கவர்னர் என்று வாயில் எதார்த்தமாக வந்தாலும் உடனே பிரபுதாஸ் பட்வாரி வந்துவிடுகிறார். அதைத்தொடர்ந்து இந்திராகாந்தியும்.

தற்கொலைக்கு வழியைத்தேடும் மிட்டு மாமா, சென்ற வாரம் அங்கு நடந்த ஒரு நிகழ்ச்சியில் மகாக்கஞ்சன் ஜீவன் லாலின் எட்டு வயது மகன் மாடியிலிருந்து கீழே விழுந்ததைச்சொல்கிறார். அதுவும் கீழே போய்க்கொண்டிருந்த ஒரு பொதி கழுதையின் மீது. பாவம். கழுதைக்குத்தான் எலும்பு முறிவாம். சொல்லும்போதே நமக்கு சிரிப்பு வந்துவிடுகிறது. சத்தமே இல்லாமல் நகை வெடியை உண்டு பண்ணுவதில் திலீப்குமார் வல்லவர் போல.

கடைசியில் கடிதம் எழுதி முடிக்கும்போது பின் குறிப்பில் கடிதத்தின் முக்கிய நோக்கமாகிய 100 ரூபாயை அனுப்பச்சொல்கிறார்.

ஆனால் கதையின் முடிவு அவருக்கு இரு மடங்கு சோகமாக ஆகிவிடுகிறது.

அடுத்த கதையான நிகழ மறுத்த அற்புதம் முழுக்க முழுக்க ஒரு மனோ தத்துவ கதை.

தன்னை விட்டு விலகிப்போகும் தனது மனைவியின் தரப்பு நியாத்தை உணர்ந்தவனாய் ஒருவன் தன்னிலையில் இருந்து கூறும் கதை. அதற்கு காரணத்தையும் 'அவள் ஒன்றுமே சொல்லாமல்' தானே சொல்லிக்கொள்வது இக்கதையின் இன்னொரு சிறப்பம்சம்.

இரண்டு பேர் சம்பந்தப்பட்ட இந்த வாழ்க்கையின் எல்லா தருணங்களையும் மிக அழகாக அலசுகிறார் திலீப்குமார் அவர்கள்.

மனத்தின் ஆழத்திலிருந்து உருவி எடுக்கப்பட்ட சில வார்த்தைகளாய் வரும் அவனின் வெளிப்பாடுகள் நம்மை அதிசயிக்கவைக்கின்றன.

முதலிரவில் தன் மீது சிவந்த திரட்சியான சர்ப்பம் போலே படர்ந்திருந்த தன் மனைவி - அருகில் வதங்கிய கொடியைப்போல கிடக்கும் அவளிடம் அதிருப்தியில் எ·குத்துண்டைப்போல அவன். தான் மலடனானதில் சமூக சேவை செய்ய குடிப்பது தடையாய் இருக்க கழிவிரக்கத்தில் கவிதை எழுதும் அவன். எல்லாரிடத்திலும் எல்லாவற்றிலும் பழிப்படைந்த அவனுக்கு எல்லாவற்றிற்கும் காரணமாய் இருந்து இன்னும் அவனை மலடனாய் காட்டுவதிலேயே குறியாய் இருக்கும் அவளின் அழகிய அடிவயிறு. தன் கோபத்தைக்கிளறும் அதிலேயும் ஒரு உதை விடும் அவன்.

அவளை அடித்தாலும் அவளின் சுகங்களை அடியோடு அழித்தாலும், அவளின் கவிதை மனதை கவனித்து பாராட்டும் அவன். அவளின் ரசிப்புகளாய் அவன் சொல்லும் ஒவ்வொரு நிகழ்வும் அப்படியே எடுத்துக்கொள்ள முடிந்த சிறு சிறு கவிதைகள். மழையில் நனையும் காகமும், சோற்றுப்பருக்கையை வாயில் திணித்து முழித்து முழித்துப்பார்க்கும் சுண்டெலி, அசையாமல் கிடக்கும் கர்ப்பிணிப்பல்லி, தேங்காயை இழந்தாலும் மழை நாட்களில் 16 வயதாய் உடல் வனப்பை பெறும் அந்தத்தென்னை மரம் என்று அத்தனையும் கவிதை.

முதுமைக்கோளம் அவர்களை இணைக்கிறது. மீண்டும் சிறு சிறு கொடிகளாய் அருகருகில் அவர்களை இணைத்துப்பார்க்கிறது.

வயதுக்கு வருவது தெரியும் போது வயதாவதும் தெரிய வேண்டுமல்லவா?

அது எப்படி வருகிறதாம் தெரியுமா?

வைகறைக்கு முன்பான அந்த இளம் இருட்டில் ஒளியின் முதல் கீற்று சந்தடியின்றி திடீரென்று இழைந்து விடுவதைப்போன்றதாம் அது.

சிந்திக்க வைக்கும் நல்ல கதை.

அடுத்த கதையான மனம் எனும் தோணி பற்றி ஒரு நாட்டில் உள்ள நடுத்தரவர்க்கத்து புதுக்கவிஞர்களில் ஒருவரது கதை.
தற்கொலை செய்துகொள்ளக் காத்திருக்கும் அவனை படக்கென்று நாம் சொல்லிவிடலாமாம். அவன் ஒரு கவிஞன் என்று. லேசான கிண்டலாக நமக்குத்தெரிந்தாலும் அடுத்துள்ள சில வரிகள் அதை இன்னும் அதிகமாக்கி உண்மையிலேயே அப்படித்தானா என நம்மைக்கொஞ்சம் யோசிக்க வைக்கின்றன.

வறுமையின் பின்னணியில் அவன் காணும் கனவுகள் எல்லாம் வெறும் கனவுகளாகத்தான் இருக்கமுடியும் என்ற ஆசிரியரின் வரிகள் நிதர்சனத்தைச்சொல்கின்றன.

அவனது வாழ்க்கையிலும் அவனது கவிதையை வழக்கம்போல புரிந்துகொள்ளாத காதலி, ஒரு ராஜகுமாரியாய். காதலிக்கிறாள்; காதலிக்காததால் வருந்தி விலகிப்போகிறாள்; வாழ்க்கை அவனை விரட்ட தற்கொலைக்கு ஓடுகிறான். அங்கே வருகிறாள் அவள். இருவரும் பத்து நிமிடங்களுக்குள் ஒன்று சேர்ந்து ஒன்றாய்க்கலந்து வீட்டுக்குச்செல்ல எழுகிறார்கள். வாழ்க்கை விளையாட்டு அவனைப்பார்த்து பாவம் என நம்மைச்சொல்ல வைக்கிறது.

நல்ல கதை.

அக்ரகாரத்தில் பூனையை படித்து முடிக்கும்போது ஒரு சின்ன த்சொ மட்டுமே சொல்லமுடிவதில்லை நம்மால். அதற்கும் மேலே நம்மை மனிதாபிமானம் பற்றியும் பிற உயிர்களிடத்தில் நாம் காட்டும் அன்பு பற்றியும் யோசிக்க வைக்கிறது இந்தக்கதை.

தங்கசாலையில் ஏகாம்பரேஷ்வரர் அக்ரகாரத்தில் நீண்ட நாட்கள் இருந்திருப்பார் போலும் ஆசிரியர். இரண்டு கதைகளில் அந்தப்பகுதியின் வர்ணனைகள் அதிகமாக வருகின்றன. லேசான குஜராத்தி வாழ்க்கை கலந்த இந்த கதைகளைப்படிக்கையில் அவற்றின் வழியே நாமும் ஒன்றிப்போகிறோம்.

முதுமைக்கோளம் என்றொரு கதை.

தனிமைச்சிறையில் தவித்து மனம் தகித்து வாழ்வும் உறைந்துவிட்ட ஒரு தாயின், கடைசி நேர ஆசைகளும் வெறும் நிராசையாகவே போக கண்கலங்கி கண்ணை மூடுகிறாள் அவள்.

அவளின் மகன் சாலமன் பனித்தகண்களுடன் தனக்குள் மனம் வாடுகிறான்.

மனிதத்தன்மை இன்னும் இருக்கிறதா என்பதற்கு அவளுடைய எண்ணங்களும் மனித வாழ்வின் நிலையில் இது எவ்வளவு தூரம் சாத்தியம் என்பதற்கு அவனது வருத்தமான வார்த்தைகளும் நம்மை யோசிக்கவைக்கின்றன.

முழுமையான ஒரு கதை.


நிலை:

இந்தக்கதைதான் எனக்கு நினைவிருக்கும் கதைகளில் ஒன்றாக நான் சொல்லிய சா.கந்தசாமி அவர்களின் தொகுப்புக்கதை.

ஒரு சாதாரண, வறுமையின் பிடியில் இருக்கும் ஒருவனது வாழ்க்கையை கண்முன்னே படம் பிடித்துக்காட்டியிருக்கும் ஆசிரியர் அவனது எண்ணங்களைக்கோட்டையேற்றிக்காண்பிக்கிறார்.

மிகவும் சாதாரணமாக ஆரம்பிக்கும் கதை முடியும்போது நம்மை கனக்கச்செய்துவிடுகிறது. அதுவும் இறுதியில் வரும் சுரம் குறைந்த தன் தாயுடனான அவனது உரையாடல்கள் வறுமையின் வலியை நமக்குக்கூட்டுகின்றன.

பகலில் பரபரப்பாய் இயங்கிய தெரு இப்போது உறங்குகிறதாம் ஒரு விலைமாதரைப்போல. உணர்வுப்பூர்வமாய் உணரச்செய்யும் வரிகள்.

நடுத்தர மக்களின் தூக்கங்களைக்கற்பனை செய்கிறான். ஒரு சில புலம்பல்களைக்கேட்கிறான். துரத்திப்பார்த்தும் அசராதவனின் நடையை நாயும் வெறுத்து விலக, அவனது ஒரு சமீபத்திய கனவும் அவனுக்குள் வருகிறது. யானை புணர்ந்துகொள்ளும் நேரத்தில் ஒரு முயலின் குடலையும் வயிறையும் கிழித்து இழுக்கும் ஒரு காட்டெருமை.

நடுரோட்டில் நசுங்கிக்கிடக்கும் ஒரு பெருச்சாளியின் அருகில் அமர்ந்து யோசிக்கிறான் அவன். வால் நசுங்கி தலை தப்பிய அதன் இறப்பில் அந்த இடைப்பட்ட காலத்துகளில் எவ்வளவு வலியையும் வேதனையையும் பயத்தையும் அது உணர்ந்திருக்கும் என எண்ணுகிறான். அப்படியே அவற்றிற்கும் மனித இறப்புக்கும் உள்ள் வேறுபாடுதான் என்ன எனவும் யோசிக்கிறான்.

மிகுந்த பசியோடு நள்ளிரவு தாண்டி அந்த குடிசைக்குள் நுழைந்ததும் அடுப்பைப்பார்க்கும் அவனுக்கு அதன் புதிய வெள்ளை நிறம்
எரிச்சலாய் இருக்கிறது. எவரிடம் தன் கோபத்தை நம்மால் எப்போதும் காண்பிக்கமுடியுமோ அதே தாயிடம் அவனும் கோபத்தைக்காட்டுகிறான். ஆயினும் அவளது ஒரே ஒரு வருடலில் மொத்த நிகழ்வும் மறந்துபோய் ஒரு குழந்தையாய் உறங்க ஆரம்பிக்கிறான்.

அருமையான கதை.

நாம் அன்றாடம் தெருவின் ஓரத்திலோ இல்லை ஏதாவது ஒரு பெரிய மரத்தின் அடியிலோ காணும் ஒரு குடும்பத்தின் கதை, கண்ணாடி.

டீத்தண்ணிக்கு வளி பண்ணச்சொல்லும் மாரியப்பன் அவளால் அது முடியாது என்கிறபோது பொசுக்கென்று அடித்து உதைக்கிறான் அவளை. பிறகு அவனே குடித்து தூங்கி எழுந்து விழித்து தன் குழந்தையிடம் 'வளர்த்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா' பாணியில் பீடிக்கும் டீத்தண்ணிக்கும் பழனியம்மாளிடம் கெஞ்சுவது வேடிக்கை.

சண்டை போட்டு அடி வாங்கிய அவளே தான் ஈயம்பூசிய காசில் அவனுக்காக ஒரு பீடிக்கட்டு வாங்கி வைப்பது பொதுவாக பெண்களின் குணத்தை எடுத்துக்கூறும் சிறப்பு.

பழனியம்மாளூக்கு தன் முழு உடலைக்கண்ணாடியில் பார்த்து வரும் வேதனையை அவளது பழைய நிலையை நமக்குச்சொல்லாமல் உணர வைத்து கதையை முடிக்கிறார் ஆசிரியர்.

இயல்பான கதை.

மூங்கில் குருத்து கதை படித்து முடிக்கும்போது முரசில்லாமல் நாம் உரக்கச்சொல்கிறோம் கிண்டல் மன்னர் திலீப் குமார் வாழ்க என்று.

நடையெங்கும் கிண்டல்கள்.

ஒரு கதையை எழுதும்போது என்ன மூடில் அமர்ந்து எழுத ஆரம்பிக்கிறோமோ அது சார்ந்துதான் இந்த கிண்டலும் நக்கலும் கதையில் ஊடுருவுமா என்பது என் சந்தேகம். இல்லை என்றால் போன கதைகளில் சொல்லாத ( இதே போன்ற நையாண்டிக்கு ஏற்றதாய் சில இடங்கள் அதிலும் வந்துபோன போதிலும்) கிண்டல் எப்படி இதில் மட்டும் எல்லா இடத்திலும் கொட்டி இறைக்க அவரால் முடிந்தது என்பது ஆச்சரியம்.

கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிக்கும் முன்பே கோயம்பத்தூர் தையல் கடைக்காரர்கள் வாரக்கூலியைக் கண்டுபிடித்துவிட்டார்களாம்.
ஒரு நாளைக்கு முப்பது தடவை மலம் கழிப்பாளாம் கடை ஓனரின் பொண்ணு. அந்தக்கால புகழ்பெற்ற நடிகையின் மூக்கில் கோட்டை விட்ட போஸ்டர் வரைந்தவன் அதை நடிகையின் முலையில் சரிக்கட்டி இருந்தானாம். அண்ணாவும் கலைஞரும் கொடிகட்டி ஆண்ட காலத்தில் அரிசி எளிதாய்க்கிடைக்க மக்கள் லாட்டரிக்கு அலைந்தார்களாம். இப்படியாய்த்தொடர்கிறது அவரது கிண்டல்கள்.

மேல் வயிற்றில் ரகசியமாய்த்துவங்கி, அமைதியாய் முன் எழுந்து, அவசரமில்லாமல் முன் வட்டம் போட்டு, பின் வெடுக்கென்று இறங்கிச்சரிந்து இருக்குமாம் அது. அது எது தெரியுமா?

மதுக்கிண்ண வார்ப்புகளுக்கு மாதிரியாய் ராஜ வம்சத்து அரசிகளின் மார்பை அளவு எடுத்து சரித்திரம் படைத்த கலைஞானிகளுக்கு இவனது கடை ஓனர் ராவின் தொந்தி பற்றித்தெரியாதது நியாயமில்லை என்று வருத்தமாக 'அதை'ப்பற்றிச் சொல்கிறார்.

பாக்கெட்டில் இருந்த பத்து பைசாவுக்கு டீயும் பீடியும் போட்டி போட்டு பீடி ஜெயித்தது, சிவப்பு விளக்கு பதித்த கடவுள் படத்துக்கு கீழ் ஊதுபத்திகள் எரிய இடமெங்கும் குருதி வாசனை கசாப்புக்கடையில்.

இப்படி எல்லாம் செல்லும் கதை கடைசியில் அப்பாவின் திவசத்திற்காக வைத்திருந்த அம்மாவின் பிரிய மூங்கில் குருத்தை எடுத்து அவள் இவன் மீது தூக்கி எரியும் வேகத்தோடு முடிகிறது. எல்லாமே அதுக்காகத்தான் என்னும்போது வாழ்க்கை அவனுக்கு அர்த்தமற்று இருப்பதாக நினைக்கிறான்.

எங்கெங்கோ சென்று சரியாகத்திரும்பிய கதை.

ஐந்து ரூபாயும் அழுக்குச்சட்டைக்காரரும்:

ஜெயமோகனின் 'பின்தொடரின் நிழலின் குரல்' நாவலில் கே.கே.எம் என்று ஒரு கம்யூனிச தலைவர் வருவார். அவருக்கு நண்பராய் இன்னொரு தலைவர் (தோழர்) வருவார். காலப்போக்கில் நண்பரது தனித்தன்மையான கொள்கைகள் இவர்களை வாட்ட திட்டம் போட்டே அவரை வெளியில் தள்ளி அந்தத்திறமையானவரை ஏதோ ஒன்றுக்காக கம்யூனிசம் தவிர்த்துக்கொள்ளும்படி செய்துவிடுவார்கள். அவர் நல்லதுக்கும் கெட்டதுக்கும் நாயாய் அலைந்து அர்த்தமற்று முழுமை பெறாத வாழ்வு வாழ்ந்து செத்துப்போய்விட்டதாய்ச்சொல்வார் ஜெயமோகன். இது உண்மையாய்க்கூட இருக்கலாம். ஏனெனில் அந்தக்கதையில் ஜெயமோகனும் வருவார். சுந்தர ராமசாமி அவர்களும் வருவார்கள். ஜே.ஜே.சில குறிப்புகளும் வரும்.

ஆனால் கடைசியில் அதே நிலையில் தானும் இருப்பதாக கே.கே.எம். உணர்வார். கதையின் நாயகனும் உணர்வார்.

அந்தக்கதையின் நண்பரது வாழ்க்கை போல இந்தக்கதை. ஏறக்குறைய ஒன்றுதான்.

தெரிந்தவனிடம் தனது பெருமைகளையும் ஏழ்மையையும் சொல்லி இரண்டு ரூபாய் அன்போடு கேட்கும் அவர்கள் அது மறுக்கப்படும்போது இல்லை தாமதிக்கப்படும்போது கோபப்படுகிறார்கள். கொடுத்து வைத்தவர்கள் போல அடிக்கிறார்கள். சட்டையைப்பிடிக்கிறார்கள்.

சிறிது நேரம் கழித்து கோபம் தணிந்து தன்னிலை உணர்கிறார்கள். வருந்துகிறார்கள். அப்படியே மன்னிப்பும் கேட்கிறார்கள்.

இந்தக்கதையிலும் அதே கதைதான்.

வீட்டுக்கிணற்றுக்குள் எலி விழுந்துவிட்டால் என்ன செய்வீர்கள்? நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதை விடுங்கள். திலீப் குமார் அதை கதையாக எழுதுவார்.

அந்தக்கதையின் கிண்டலும் நக்கலும் இதிலும் அப்படியே தொடர்கிறது. முன்று மணி நேரம் போக்கு காட்டிய எலியை எடுப்பதில் அவரவர் தங்களது திறமையைக்காட்டுகிறார்கள்.

கடைசியில் கிணற்றுத்தண்ணீரைப்புனிதமாக்கவேண்டுமல்லவா? அதற்கும் பலப்பல ஐடியாக்கள். எல்லாம் முடிந்து பாட்டி, கங்காஜலத்தைக்கிணற்றில் தெளித்து அதைப்புனிதமாக்குவதோடு முடிகிறது கதை.

மீண்டும் தங்கசாலைத்தெரு. ஏகாம்பரேஷ்வரர் கோயில்.

கடைசி கதையான தடம், வாழ்க்கைக்கும் மரணத்திற்குமான அழியாத தடங்களை, வீடு திரும்புவோம் என்கிற நம்பிக்கையில்லாத ஒரு கைதியின் எண்ணம் மற்றும் வாழ்க்கை வழியே வெளிப்படுத்துகிறது.

நிதானமான நடையில் நல்ல கதை.

வணக்கங்களுடனும் நன்றிகளுடனும்
அன்பன்,
எம்.கே.குமார்.






Wednesday, September 24, 2003

iLamaikkolai kathai

இளமைக்கொலை....

எம்.கே.குமார்.


வெளிச்சம் என்பது ஏதோ ஒரு மூலையில் இருந்து மெல்ல அந்த அறைக்குள் வியாபித்திருந்தது. அதன் வருகை கூட அங்கு சுதந்திரமாய் இல்லை. எப்படியோ திருட்டுத்தனமாக அது உள்ளே நுழைந்திருந்தது. அதன் வருகையில் மனம் லயிக்க விடவில்லை அவனை. கையில் இருக்கும் காரியத்திலே மனது ஈடுபட்டுக்கொண்டிருந்தது. வெளிச்சத்தை மிகவும் ரசித்தபோதும் இன்றிருந்த நிலையில் அதை ரசிக்க அந்த சுகத்தை அனுபவிக்க ஏனோ அவனுக்கு மனம் வரவில்லை.

அவனது கையில் இன்றைய நாளிதழ் இருந்தது. சாணி நிறத்திலான அந்தப்பத்திரிக்கையின் முதல் பக்கத்தை 'வரட்டு வரட்டெ'ன்று கையின் கூர்மையான நகத்தால் கிழித்துக்கொண்டிருந்தான் அவன். அதன் கணம் குறைந்து இப்போது அது கிழிந்து விடும்போல் இருந்தது. ஆனாலும் அவன் கண்களில் கண்ட கூர்மை அதை விடுவதாய் இல்லை. தொடர்ந்து அதைச்சேதப்படுத்திக்கொண்டே இருந்தான். அது அவன் உள்ளத்தை ஏனோ கொஞ்சம் ஆசுவாசப்படுத்துவதாய் இருந்தது.

திடீரென்று அவன் கண்களில் தீப்பொறி. மனம் முழுவதும் கொலை வெறி. உடல் ஜிவ்வென்று துடித்தது அவனுக்குள்ளே. எழுந்தான். எதையோ நடத்தப்போகிறான் என்ற எச்சரிக்கை உணர்வு நமக்குள் வந்து நின்றது. அருகில் எதையோ தேடினான். அவன் முகத்தில் ஏற்பட்ட திடீர்ப்பிரகாசம் அவனது எண்ணம் ஈடேறப்போவதாய் நமக்கு சொல்லியது. தேடியது கிடைத்ததுவிட்டது போலும். கண்களில் ஏற்பட்ட வெளிச்சம் இன்னும் அந்த அறையைக்கொஞ்சம் வெளிச்சமாக்கியது.

படக்கென்று இழுத்தான் அவன். ஒரு தீக்குச்சியில் இருந்து வந்தது தீ. அந்தப்பத்திரிக்கையின் முதல் பக்கத்தை அது தீண்டப்போகும் நேரத்தில் யாரோ கதவைத்தட்டும் சத்தம்.

தீக்குச்சியை அணைத்துவிட்டு பத்திரிக்கையை ஓரமாக வீசிவிட்டு எழுந்து 'யார்?' என்று கேட்டான்.

'சகா...நான் தான்' என்றது குரல்.

கொஞ்சம் நிம்மதியாய் மூச்சை இழுத்துவிட்டு 'ஓ.. ராம்' என்றபடி வந்து கதவை மெல்லத்திறந்தான் அவன்.
கதவு முழுவதும் திறக்கப்படவில்லை. ஒருக்களித்து திறக்கப்பட்ட கதவின் வழியே உள்ளே வந்தவனைக்கட்டி அணைத்து வரவேற்றான் அவன்.

'என்ன சகா எப்படியிருக்கிறீர்கள்........நாம் எப்படி இருக்கிறோம்.......நலம்தானே? நம்மவர்களெல்லாம் நலம்தானே.....?'

'என்ன சகா இப்படிக்கேட்கிறீர்கள்...நம்மவர்களுக்கு நாமெல்லாம் இருக்கும்வரை என்ன குறை வந்துவிடப்போகிறது.? அதுவுமில்லாமல் நம்மவர்கள் முன்னம் மாதிரியெல்லாம் இல்லை இப்போது தெரியுமா.........நமக்கே கற்றுத்தருவார்கள் போல இருக்கிறது.'

'சந்தோசம்தானே........சகா. அதுதானே வேண்டும். இதோ இந்த வெளிச்சத்தை, இந்த காற்றை நான் என் ஐம்புலன்களால் உணர்ந்து உயிரால் வணங்கி சிராவணன் போல என் தாய்தந்தையரை என் தோள்களில் தூக்கிக்கொண்டு தேரோடும் நம் கோயில் நகர வீதிகளில் சந்தோசமாக நடந்துபோகவேண்டும். ஹரே ராம் என்று என் தாய் சொல்ல அதை என் தந்தையும் சொல்ல அந்த இன்பத்தில் என் அன்னையின் ஸ்பரிஸம் போன்ற இந்தக் காற்றை நான் ஆசைதீர அனுபவிக்கவேண்டும். அதற்குத்தானே இந்த அத்தனையும் சகா......'

'உண்மைதான் சகா. கொஞ்சம் இருங்கள். இதோ வருகிறேன்.....' சொல்லியவன் இன்னொரு கதவைத்திறந்து உள்ளே சென்றான்.
உள்ளே சென்றவன் எதையோ தேடுவது போல் இருந்தது அங்கே.

'என்ன சகா தேடுகிறீர்கள்? என்னிடம் சொல்லக்கூடாத ரகசியமா ...... என்ன..?'

'இல்லை சகா.. இன்று காலையில் வந்த பத்திரிக்கையில் அந்த நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு வந்திருப்பதாகச்சொன்னார் ஒரு சகா. அதைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன் சகா.'

'அதுவா? அது இதோ என்னிடம் இருக்கிறது சகா.'

'அதைவைத்துக்கொண்டு நீங்கள் என்ன செய்கிறீர்கள் சகா........உங்களது கோபத்தை அதில் காட்டி கிழித்துவிடாதீர்கள். அந்த பத்திரிக்கைசெய்தி மிகவும் அவசியம் நமக்கு.' அக்கறையோடு சொன்னான் அவன்.

'இல்லை சகா. பார்த்துக்கொண்டிருந்தேன். இந்த ஈனநாய்க்கு என் கையில்தான் சாவு சகா. அது நிச்சயம். என் தாய் என்னை சுயமரியாதையோடுதான் வளர்த்திருக்கிறாள் என்பது உண்மையானால் நான் இதை செய்யாமல் விடமாட்டேன்.' அவன் கண்களில் தீஜுவாலை வந்து நின்று போனது.

'அவசரப்படாதே.....ராஜ். அதைத்தான் நாம் செய்யப்போகிறோம். ஆசாத் அண்ணாவைப்பார்த்தாயா? என்ன சொன்னார் அவர்? நமது திட்டங்கள் எல்லாம் எப்படி இருக்கிறது.?'

'மெதுவாகப்பேசு கோபால். இது சங்கத்தில் நம்நால்வருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். சகா தோரணையில் பேசினால்தான் குரல் உயர்ந்துவிடுகிறது என்றால் நண்பனாய் பேசும்போதும் அப்படித்தான் பேசுகிறாய்.'

'என்ன செய்யச்சொல்கிறாய் ராஜ்? என் சுபாவமே அப்படித்தானே....! சரி அதை விடு. ஆசாத் அண்ணா வந்தாரா? திட்டமெல்லாம் எப்படிப்போய்க்கொண்டிருக்கிறது?'

'அதெல்லாம் இப்போதைக்கு கனகச்சிதம். அவனை இதோ என் விரல்களின் நரம்புகள்தான் சுட்டு வீழ்த்தப்போகின்றன. நான் அதற்காகவே பிறந்திருக்கிறேன். என்றவன் மெல்ல ஆசுவாசமாகி, 'ஆசாத் அண்ணா வந்தார். இந்தநிகழ்ச்சியில் வைத்து அவனைக்கொலை செய்வது அவ்வளவு எளிதில்லை என்கிறார்.'

'பிறகு...........?' கோபமாக இழுத்தான் கோபால்.

'நானும் அதையேதான் கேட்டேன். ஒரு தடவை முயற்சிக்கலாம் என்று. ஆனால் அவர் வேண்டாம் என்கிறார். முயற்சியே இருக்கக்கூடாது. நேரிடையாய் ஜெயிக்கவேண்டும் என்கிறார். முயற்சி தோல்வி அடைந்தால் அந்த சூப்பரிண்டெண்ட் தப்பிவிடுவான். சுதாரித்துக்கொள்வான். நமக்குத்தான் சிக்கல் என்கிறார். அவர் சொல்வதும் சரிதான் எனப்படுகிறது.........ஆனால்.....'

'என்ன இழுக்கிறாய்? அவருக்கு வயதான அளவுக்கு புத்தியும் மங்கிப்போய்விட்டதுபோல. எவ்வளவு முக்கியமான காரியம் இது? நமது மானசீகத்தலைவரை அந்த சூப்பரிண்டெண்ட் நாய் அடித்துக்கொன்றிருக்கிறான். அவனைப்போய் பாவ புண்ணியம் பார்த்துக்கொண்டிருப்பது. என்ன சொல்கிறார் இவர்?'

'இல்லை கோபால் பொறு. உன்னைவிட எனக்குத்தான் இதில் பொறுப்பு இருக்கிறது. நான் தான் அவனை சுட்டுக்கொல்லவேண்டும் என்று நமது அன்னையால் பொறுப்பேற்றிருக்கிறேன். அவனை நான் கொல்வேன். காலம் வரட்டும். கதாயுதத்தால் துரியோதனின் தொடையைக்கிழித்து பீமன் போல அவன் உயிரை அழிப்பேன்; சுட்டு வீழ்த்துவேன்.'

'எல்லாவற்றையும் இப்படி பேசிக்கொண்டிருந்தால் மட்டும் போதுமா? நமது திட்டம் என்ன?'

'விளக்கமாகச்சொல்கிறேன் கேள். நாளை நடைபெறும் அந்த நிகழ்ச்சிக்கு அந்த சௌந்தர் வருகிறான். சூப்பரிண்டெண்ட். நாமும் அந்த நிகழ்ச்சிக்குச்செல்கிறோம். கொலை செய்வதற்கு அல்ல. ஒரு பார்வையாளனாக. அதற்காக எல்லாம் தயார். பள்ளியின் ஆசிரியைகளில் ஒருவரான சகோதரி ஒருவர் நமது பிஎஸ்க்கு தூரத்து சொந்தம். அதனால் உள்ளே நுழைய எந்தத்தடையும் இல்லை. நாம் இருவரும் மட்டுமே செல்கிறோம். பிஎஸ்ஸோ ஆசாத் அண்ணாவோ வரவில்லை. அவனை அவனது நடவடிக்கைகளைத்துல்லியமாக ஆராய்கிறோம். சரியா? காரில் வந்தானாகில் யார் முதலில் இறங்குகிறார்கள்; எந்தப்பக்கம் அவன் இறங்குகிறான்; முன்னாலும் பின்னாலும் யாராவது செல்கிறார்களா? எவ்வளவுதூரத்தில் நாம் இருக்கிறோம்; துப்பாக்கியை பயன்படுத்தமுடியுமா? அத்தனையையும் நாம் பார்க்கவேண்டும்.....பின் நிகழ்ச்சி முடியும் போது அவன் அருகில் சென்று அந்தக்கொடூரனை நமது தலைவனைக்கொன்ற அந்த அயோக்கியனை ஒரு நிமிடம் நான் பார்க்கவேண்டும்.'

'எல்லாம் சரிதான். கடைசிவரை நாம் எதற்கு அங்கு இருக்கவேண்டும்? அதுவும் அவன் அருகில் வேறு போய்ப்பார்க்கவேண்டும் என்கிறாய்...அது ஆபத்து ராஜ். கொஞ்சம் யோசித்துப்பார். அவன் கண்கள் பயங்கரமானது. நம்மை எளிதில் அவன் அடையாளம் கண்டுபிடித்துவிடுவான். பிறகு அது ஆபத்தாகிவிடும். அல்லது வெறுமனே நம்மை வேவு பார்க்க ஒரு ஆளை நம் பின்னால் அனுப்பி வைத்தால் கூட போதும். நமது இடம் தெரிந்துபோய்விடும். அது அதைவிட ஆபத்து. யோசித்துப்பார். வேண்டாம். நாம் உடனே வந்துவிடலாம். வழியில் ஏதாவது பிரச்சனை என்றால் கூட எனக்கோ உனக்கோ உடம்பு சரியில்லை, வயிற்று வலி என்று சொல்லிவந்துவிடலாம். ஆனால் முக்கியமான ஒரு செய்தி. தயவுசெய்து மறுபடியும் அந்தத்தவறை செய்துவிடாதே. நாம் எளிதாக மாட்டிக்கொள்வோம்.'

'என்ன தவறு கோபால்..........? நான் செய்தேனா என்ன?'

'ஆம். நீதான். சென்றமுறை காவல் நிலைய கட்டிடத்துக்குள் நாம் செல்லும்போது யாருக்கும் தெரியாமல் உனது கைத்துப்பாக்கியைக்கொண்டுவந்தாயே......அன்று பகவான் நம்மைக்காக்காவிட்டால் இந்நேரம் அவ்வளவுதான். நமது உயிர் எங்காவது வானவீதியில் பறந்துகொண்டிருக்கும்.............'

'மன்னித்துக்கொள் கோபால். அன்று எனக்கிருந்த வெறி அது. ஆசாத் அண்ணன் எவ்வளவோ சொல்லியும் யாருக்கும் தெரியாமல் நான் எடுத்துக்கொண்டு வந்தேன், அவனைச்சுட்டு வீழ்த்த. அன்று பிஎஸ்ஸ¤க்கும் என்னைப்போலவே கோபம். அவனை விட்டால் அன்று அந்த போலீஸ் நாயை அடித்தே கொன்றிருப்பான். ஆனால் இன்று கொஞ்சம் அனுபவம் வந்திருக்கிறது. பொறுமையாக இதையெல்லாம் செய்யவேண்டும். ஆசாத் அண்ணன் பிளான் தவறாகாது'

'சரி......ராஜ். கொஞ்சம் இரு. வயிறு சரியில்லாததுபோல் இருக்கிறது. கொஞ்சம் போய்விட்டு வருகிறேன்.'

'அட.............என்னடா..சௌந்தர் பற்றிப்பேசியதும் வயிற்றைக்கலக்கிவிட்டதா. பெரிய ஆளுதான் போல அவன்.' பெரிதாகச்சிரித்தான் ராஜ்.
கள்ளமில்லாத சிரிப்பு அது.

எல்லா ஒத்திகைகளும் தெளிவாக அரங்கேறின. பள்ளி நிகழ்ச்சியில் தலைமையேற்ற போலீஸ் சூப்பரிண்டெண்ட் சௌந்தர் ஆரவாரமாக இருந்தான். ஆறரை அடி உயரம். உயரத்தைப்பார்த்ததும் ராஜ் சிரித்தான். 'என்னடா' என்றான் கோபால். 'பரவாயில்லை நல்ல உயரம். எப்படியும் குண்டு வயிற்றில் இல்லை எனினும் வேறு எங்காவது பாய்ந்துவிடும் 'என்றான். அதைக்கேட்ட கோபாலும் புன்முறுவலித்தான். இப்படி இவர்கள் பேசுவதை பக்கத்தில் இருந்த காவலன் ஒருவன் கவனித்ததை அவர்கள் கவனிக்கவில்லை.

சூப்பரிண்டெண்ட் உஷாரானான். செய்தி சொன்ன காவலனை அழைத்து பளார் என்று விட்டான் ஒன்று. 'என்ன செய்து கொண்டிருந்தாய்......அங்கே. அவர்களைப்பிடித்திருக்கலாம் அல்லவா? இல்லை பின்தொடர்ந்து சென்றிருக்கலாமல்லவா?'

செய்தியைக்கொண்டுவந்து தலைமைக்காவலன் மீது கைபோட்டபடியே மெதுவாக ஏதோ பேசிக்கொண்டு நடந்து போய்க்கொண்டிருந்தான். அடிபட்டவன் கன்னத்தில் கையை வைத்துக்கொண்டிருந்தான்.

ஒரு மாதம் வெகு வேகமாக ஓடியது.

அதிகாலை 5 மணிக்கு எழுந்துவிட்டான் ராஜ். முதலிலேயே எழுந்து அனைத்தையும் சரி செய்திருந்தான் பிஎஸ். ஆசாத் அண்ணன் குளித்துவிட்டு வந்தார். கோபால் இன்னும் தூங்கிக்கொண்டிருந்தான்.

'அவன் ஒரு சோம்பேறி அவனை விட்டு விடலாம் . நாம் செல்வோம்' என்றான் ராஜ்.

'என்ன பேசுகிறாய் நீ ராஜ்? அவனை விட்டு விட்டு நாம் மட்டும் எப்படி செல்லமுடியும்? நால்வரும் தான் பொறுப்பேற்றிருக்கிறோம்.
அவனை எழுப்பு. அவனை இங்கேயே விட்டு விட்டு சென்றால்கூட ஆபத்துதான். எங்கேயாவது சென்று லேசாக உளறினால்கூட சந்தேகம் வந்துவிடும். அவன்மீது. ஏற்கனவே அவனை அந்த தலைமைக்காவலன் நன்றாக தெரியும் என்று சொல்லியிருக்கிறான். அவனை வெளியே விடுவதே தவறு. நம்மோடு வரட்டும். சபதம் வென்று செத்தாலும் பரவாயில்லை.' இது பிஎஸ்.

'என்ன? இன்னும் கிளம்பவில்லையா?' கேட்டுக்கொண்டே வந்தார் ஆசாத்

'எல்லாம் ஆகிவிட்டது. கோபால்தான் தூங்கிக்கொண்டிருக்கிறான்.'

'அவனை எழுப்பு முதலில். அவன் எதிலுமே இப்படித்தான். யூஸ்லெஸ்.'


இடம்: போலீஸ் ஹெட்குவாட்ட்ரஸ்.

வாசலுக்கு வெளியே எதிரே இருந்தார்கள் அவர்கள் நால்வரும். கோபாலுக்கு கைகால்கள் நடுங்கிக்கொண்டிருந்தன. ராஜ்ஜின் கண்களில் கொலை வெறி வந்துவிட்டிருந்தது. ஆசாத் அண்ணன் முகம் தீர்க்கமாக இருந்தது. பிஎஸ் கடைசியாக கைத்துப்பாக்கியை சரிபார்த்துக்கொண்டிருந்தான். ஆசாத் அண்ணன் கையிலும் இன்னொரு துப்பாக்கி இருந்தது. வெளியே அந்த வளைவுக்குப்பின்னால் அவர்கள் மறைந்திருந்தார்கள். ராஜ் தன் மூச்சுக்காற்றை இழுத்து மெதுவாக விட்டு தான் தயார் என்பது போல பிஎஸ் பக்கம் திரும்பினான்.
அவன் கையில் அதைக்கொடுத்தான் பிஎஸ்.

அதே ஆரவார நடையோடு வெளியே வந்தான் போலீஸ் சூப்பரின்டெண்ட் சௌந்தர்.

திடீரென்று 'ஐய்யோ 'என்றான் கோபால்.

'என்ன......ஏன் கத்துகிறாய்?' ஆசாத் அண்ணன்.

'இல்லை....அவன் இன்று காரில் போகமாட்டான் போல இருக்கிறதே...........வாசலில் கார் வேறு இல்லை.....'

'மடையா அவன் எதில் போனா என்ன? வாசலை விட்டு அவன் தாண்டமாட்டான்.................விதி முடிந்து விட்டது.'..தீர்மானமாக சொன்னான் ராஜ்.

அடுத்த நிமிடம் அது நடந்தது. வாசலை விட்டு வெளியே வந்த சௌந்தர் அமர்க்களமாக காலைத்தூக்கிப்போட்டு பைக்கை ஸ்டார்ட் செய்தான். தன் வாழ்வில் கற்ற அத்தனை திறமையயும் தன் கைவிரலுக்குக்கொண்டுவந்தான் ராஜ்.

சீறிப்பாய்ந்ததுகுண்டு.

'ஓ........காட் 'என்றபடி கீழே விழுந்தான் சௌந்தர்.

குண்டு வந்த திசைபார்த்து 'ஹே..............'.என்று வேகமாக ஓடி வந்தான் தலைமைக்காவலன்.

'ம்ம்.....ராஜ். ஓடு. வேறு யாரையும் நாம் சுட வேண்டாம். நம் பழி தீர்ந்து விட்டது. ஓடு...........பகத், கோபால் ஓடூங்கள்.......' ஆசாத் அண்ணன் பேச்சில் ஆளுக்கொரு பக்கம் பறந்தார்கள்.

கோபால், ராஜ், பிஎஸ் ஆகியோர் ஓடியபக்கம்தான் ஓடி வந்தான் அந்தத்தலைமைக்காவலன். அவர்களை விடாதவாறு கையில் துப்பாக்கி வேறு. எப்படியும் சுட்டு விடுவான் போல இருந்தது.

ஆசாத் அண்ணன் யோசித்தார். தீர்மானத்திற்கு வந்தார்.

தலைமைக்காவலன் செத்து விழுந்தான்.

நால்வரும் ஓடி தப்பித்தார்கள்.

இது நடந்த முன்று நாட்கள் கழித்து அந்த ரயிலின் இரண்டாவது பெட்டியில் அந்த விசாரணையை நடத்திக்கொண்டிருந்தான் ஒரு காவலன்.

"இவர் யார்?"

"என் வீட்டு வேலைக்காரன்...."

"அப்போ...இது....?"

"என்..மனைவி.அது என் குழந்தை........சொந்த ஊருக்கு போகிறோம்........."'

கொஞ்சம் சந்தேகமாகவே பார்த்துவிட்டு சென்றான் அந்தக்காவலன்.

"மன்னித்துக்கொள்ளுங்கள் சகோதரி. உங்களை என் மனைவி என்று சொல்லியதற்கு......... ராஜ் நீயும் என்னை மன்னித்துக்கொள். உன்னை என் வீட்டு வேலைக்காரன் என்று சொல்லியதற்கும். நான் லக்னோ வில் இறங்கிக்கொள்கிறேன்..........சகோதரி உங்களையும் வீட்டில் விட்டு விடுகிறேன். நண்பர் பகவதி சரணுக்கு என் வாழ்க்கை முழுவதும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். அவரிடம் சொல்லிவிடுங்கள்."

"ராஜ்..இனிமேல் தான் நீ கவனமாக இருக்கவேண்டும். அடிக்கடி உன்னோடு தொடர்பு கொள்கிறேன்........ஜெய்கிந்த்."

சரியாக பத்து மாதங்கள் கழித்து தூங்கிக்கொண்டிருக்கும்போது ராஜ் கைது செய்யப்பட்டான். அதிலிருந்து ஐந்து மாதங்கள் கழித்து அவனும் பிஎஸ் எனப்படும் பகத்சிங்கும் தூக்கிலிடப்பட்டார்கள் தன் இன்னொரு நண்பன் சுக்தேவ் உடன்.

அப்புரூவராய் மாறியவர்களில் ஒருவன்.............கோபால் எனப்படும் ஜெய்கோபால்.

சுதந்திரக்காற்றை சுவாசிக்காமல் தூக்கில் தொங்கிய ராஜ் எனப்படும் ஷிவ் ராம் ராஜகுருவுக்கு அப்போது வயது 23.



oru kaditham!

இது ஒரு கடிதம். எதிர்வாதக்கடிதம். உள்ளங்கை அளவுக்கு மிகைப்படுத்தப்பட்டிருந்தாலும் அதில் நெல்லிக்காய் அளவுக்கு உண்மை இருப்பது உண்மை. அந்த உண்மையை வைத்து படைக்கப்பட்ட கடிதம் இது.

சொர்க்கத்திற்குக்கடிதம். கடிதம் 1.


அன்புள்ள அண்ணாவிற்கு,
ஆத்மார்த்தமான வணக்கங்கள். வெளியே நானும் நலமாய் இருக்கிறேன்.
'தூண்டிற் புழுவினைப்போல்-வெளியே
சுடர் விளக்கினைப்போல்
நீண்ட பொழுதாக- எனது
நெஞ்சந்துடிப்பது' யாருக்கும் தெரியாது. இந்தியாவின் நூறு கோடி முகங்களில் வருடத்திற்கு குறைந்தபட்சம் ஆயிரம் பழகிய முகங்கள் கொல்லப்படுகின்றன. முப்பது கோடி முகத்தை நூறு கோடி ஆக்கியவர்களின் தீரம் மற்ற வீரச்செயல்களில் இங்கே எடுபடவில்லை. நதிகளை இணைக்கவே நடிகர்கள் தேவைப்படுகிறார்கள். தனியரு மனிதனுக்கு உணவென்ன? தவளையும் எலிகளுமே கிடைக்கவில்லை. தண்ணீர் வேறு. சொல்லவா வேண்டும்?

இதெல்லாம் இருக்கட்டும். இது தெரிந்தகதை. உலகம் அறிந்த கதை. நம் கதைக்கு வருகிறேன்.

ஏன் இப்படிச்செய்தீர்கள்? நீங்கள் எப்படிச்செய்யலாம் இப்படி? நீங்கள் சுதந்திரத்திற்காக பாடுபட்டீர்களோ இல்லை தமிழுக்காக பாடுபட்டீர்களோ எனக்குத்தெரியாது. அதெல்லாம் இந்நாட்டில் அவசியமே இல்லாததாய் ஆகிவிட்டது. நான் கேட்கப்போவது அதுவன்று. எப்படி நீங்கள், தங்களை நம்பி வந்த பெண்ணை கஷ்டப்படுத்தி ஒரு நல்ல குடும்பத்தலைவனாய் இல்லாமல் போகலாம்? ஞான மார்க்கத்தை அடைய எது சிறந்த வழி என்ற கேள்விக்கு நல் இல்லானாய் இருப்பதே என்பதை எல்லா மதங்களும் சொல்லிக்கொண்டிருக்க எப்படி நீங்கள் அதிலிருந்து மற்ற 'வெட்டி வேலைகளுக்காக' விலகி குடும்ப உறுப்பினர்களின் சுகங்களை மேம்படுத்தாமல் மொத்தமாய் அவர்களை துக்கத்தில் ஆழ்த்தலாம்? இது ஒன்றுதான் எனக்கு உங்கள்மேல் இன்னும் கோபத்தை வரவழைத்துக்கொண்டிருக்கிறது.

'பராபகாராத்தம் இதம் சரீரம்' என்றறிந்த தங்களுக்கு எப்படி தன் இல்லாளுக்கும் குழந்தைகளுக்கும் உறவினர்களுக்கும் அது பொருந்தும் என்பது தெரியாமல் போயிற்று?

மிகுந்த திறமை மிகுந்தவரான தங்களது தந்தை பணக்கஷ்டத்தினால் வருந்தி இறந்த பின் கூட தங்களுக்கு அதை நினைத்து பணத்தின் மேல் வெறுப்பு வந்ததே தவிர அதுவேதான் வாழ்க்கையின் அஸ்திவாரம் என்பது எப்படி தெரியாமல் போயிற்று? ஆயினும் தாங்கள் கடைசிவரை பணத்தாசையைக்குறைத்துக்கொண்டாலும் கூட உடை நடைகளில் புதுமையையும் விதவிதங்களையும் விரும்பியவராய் இருந்தீர்களே அது எப்படி? இது இல்லாமல் அது எப்படி இருக்க முடியும் என்றபோதாவது தாங்கள் அதைப்பற்றி யோசிக்க முயன்றிருக்கவேண்டாமா?
நாளன்று போவதற்குள் நான் பட்ட பாடனைத்தும் தாளம் படுமோ தறி படுமோ யார் படுவார்' என்றும் ஜீவியத்துக்காக திணறி, ஒரு வார்த்தையும் பேசாமல் நித்திரையும் செய்யாமல் தெருத்திண்ணையில் உட்கார்ந்து, ' தெய்வமே! ஒரு வழியுமில்லையா?" என்று அனுபவித்த தாங்கள் எப்படி இரண்டாம் நாளில் அத்தனையையும் மறந்து போனீர்கள்?

'தேடக்கிடையாத சொர்ணமே, உயிர்ச்சித்திரமே,
மடவன்னமே, அரோசிக்குது பால் தயிரன்னமே,
மாரன் - சிலைவேல்களை - கொலைவேலென - விரி
மார்பினில்- நடுவே தொளை
செய்வது கண்டிலை யின்னமே- என்ன
செய்தேனோ நான் பழி முன்னமே?
கன்னத்தில் குயிற்சத்தமே கேட்கக்கன்றுது பார்
எந்தன் சித்தமே, மயக்கம் செய்யுதே காமப்பித்தமே,
உடல் கனலேறிய மெழுகாயினும் உம் மடி பாதகி
கட்டியணைத்தொரு முத்தமே தந்தால்
கைதொழுவேன் உன்னை நித்தமே'

என்று கட்டிய மனைவிமேல் காதல் கணைகள் வீசிய தாங்கள் எப்படி " ஓர் உயர்ந்த அதிர்ஷ்டம் எனக்குக்கிடைத்தும் அதை அனுபவிக்கக்கொடுத்து வைக்க்காமற்போகுமோ" என்று அவள் புலம்பும்படி ஆக்கிவைத்தீர்கள்?

மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கையை உதறிய நீங்கள் எப்படி மனைவி நோக வாழ்ந்து பார்த்தீர்கள்?

பூரண கர்ப்பிணியான அவரை விடுத்து எப்படித்திரிந்தீர்கள் உலகை சுற்றும் எண்ணத்தோடு?

சிறீ சங்கரகிருஷ்ணனை ஞாபகம் இருக்கிறதா? தினம் தண்டால் எடுத்து பஸ்கி பழகி கட்டுமஸ்தான உடம்போடு காரியம் மேற்கொள்ளும் அவனையும் அல்லவா கெடுத்தீர்கள்? கலெக்டர் ஆஷ் கொலை வழக்கில் உள்ளே போன அவன் திரும்பி வரும் வரை அவன் இளம் மனைவி தாய் தந்தையர் பட்ட கஷ்டம் எப்படித்தெரியும் உங்களுக்கு? வெளியில் வந்து சில நாளில் இறந்து போய் விட வறுமைப்பேய் அவர்களை வாட்டியது மறக்கமுடியுமா? என்ன பலன் கண்டீர்கள்? அவரை எத்தனை பேருக்குத்தெரியும் இன்று?

தனக்கே ஆகாரத்திற்கு அடுக்களையில் பூனை விரட்டியபடி இருக்கும் மனைவியிடம் போய் 35 பேருக்கு தினமும் சமைக்கச்சொன்னால் எப்படி முடியும் அண்ணா? அண்ணி என்ன அள்ள அள்ளக்குறையாத பாத்திரமா வைத்திருந்தார்?

சங்கர கிருஷ்ணனும் மற்ற 35 பேர்களுமா கஷ்டப்பட்டார்கள் உங்களால்? செல்லம்மா அண்ணியின் அண்ணன் ரங்கூனில் இருந்து வந்தார் அவரையும் அல்லவா போலீஸ் கைது செய்தது. அதுமட்டுமா அவரது தங்கை கணவர் பம்பாயில் படித்து வீட்டுக்கு வந்தபோது அவரையுமல்லவா கைது செய்து அக்குடும்பத்தை திக்குமுக்காடச்செய்தார்கள். 'மாப்பிள்ளை புதுச்சேரிக்கு போய்விட்டார், பிள்ளையும் தீவாந்திரம் போய்விட்டான், மற்றொரு மாப்பிள்ளையும் அப்படித்தான் அதேகதிதான்' என ஊரே அக்குடும்பத்தை எள்ளி நகையாட அல்லவா செய்தீர்கள்?கோயிலுக்குப்போகும் அவரது அம்மாவைக்கூட இரு போலீசார் அல்லவா பின் தொடர்ந்தார்கள்?

வாசலில் 15 பேர் காவலுக்கும் புறக்கடைக்கப்புறம் 15 பேருமாக காவல் காக்க அவர்கள் எப்படித்தூங்கியிருக்கமுடியும் நிம்மதியாக? வ.வே.சு.ஐயர் அவர்களின் மனைவி சிறீ மதி பாக்கியலஷ்மி அம்மாள் பட்ட கஷ்டங்கள்தான் எத்தனை?

அரிசி இல்லை என்று சொல்லாதே, அகரம் இகரம் என்று சொல் என்றால் எப்படிச்சொல்வாள் அண்ணி? அகரம் இகரம் பசி தீர்க்குமா அண்ணா?

செல்லம்மா! உன்னால்தான் உன் கணவன் கெட்டுப்போகிறான் அவன் எள் என்பதற்கு முன் நீ எண்ணையாக இருக்கிறாயே, என ஊர்ப்பெண்கள் அவரைத்தூஷிக்கும்போது அவரை உங்களால் முழுவதுமாக புரிந்துகொள்ளமுடியாவில்லையா அண்ணா?

எப்படி உங்களுக்கு இப்படித்தோணியது? சிங்கத்திற்கு இரையை இரண்டு நாட்கள் நிறுத்தியிருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

சிங்கத்திற்கு நல்ல புத்தியைக்கொடு என மனைவி வெங்கடாசலபதியை வேண்டிக்கொள்ள, "மிருகராஜா! கவிராஜா வந்திருக்கிறேன். உனது லாவக சக்தியையும் வீரத்தையும் எனக்குக்கொடுக்கமாட்டாயா? இவர்கள் எல்லோரும் நீ பொல்லாதவன் என்று பயப்படுகிறார்கள். உங்கள் இனந்தான் மனிதரைப்போல உள்ளன்று வைத்துப்புறமொன்று செய்யும் சுபாவம் இல்லாதது என்பதையும் அன்பு கொண்டோரை வருத்த மாட்டீர்கள் என்பதையும் இங்கிருப்போர் தெரிந்துகொள்ளும்படி உன் கர்ஜனையின் மூலம் தெரியப்படுத்து ராஜா" என எப்படிச்சொன்னீர்கள்?
அது என்ன தேவர் ?பிலிம்ஸின் சிங்கமா அண்ணா?

தங்களைச்சந்தித்த பழைய நண்பர் ஒருவர், என்ன சுவாமி, இப்படிப்பாட்டு பாடிக்கொண்டு காலம் கழிக்கிறீகள், நான் வாழ்நாள் முழுவதும் அப்படி இப்படி பாடிவிட்டு பாரத நாட்டின் விடுதலைக்காக உழைத்து இன்று சாப்பாட்டிற்கே வழியில்லாமல் ஏதேனும் கொடிய செயலில் இறங்கலாமா என மனம் யோசிக்கத்தூண்டுகிறது. தர்ம சிந்தனையால் பசி ஆறாது என்பது திண்ணம், எங்காவது திருட்டோ கொள்ளையோ செய்யத்துணியட்டுமா என கேட்ட போதும் அது உங்கள் மனதுக்குள் வலிக்கவில்லையா அண்ணா? வழி ஏதும் யோசிக்கவில்லையா?

கடைசிக்காலமும் உங்களுக்கு அப்படித்தானே வந்தது! எப்படி நெருங்கலாம் மதம் கொண்ட யானையை நீங்கள்? மனிதர்கள் விலங்குகளைப்போல நடந்துகொள்கையில் விலங்குகள் கூட மனிதர்கள் மாதிரி நடந்துகொள்ளும் என்பது எப்படி உங்களுக்குத்தெரியாமல் போயிற்று?

இருந்தவரை கஷ்டப்பட்டீர்கள். இருப்போரைக்கஷ்டப்படுத்தினீர்கள். எல்லாம் விழலுக்கிறைத்த நீராய் இருக்கையில் அண்ணி பட்ட கஷ்டங்கள் மட்டும் கடலலையாய் எனக்குள் பொங்குகிறதே என்ன செய்யட்டும் அண்ணா?

உங்கள் படைப்பைக்காசாக்கிவிட்டார்கள், ஒருவர் குத்தகை கூட எடுத்திருந்தார். உங்களைப்பற்றி எழுதிவிட்டு காரில் போகிறார்கள். மேல் நாட்டு நாகரிகம் பார்க்கிறார்கள். பாரதி பெயர்க்காரணம் ஆராய்ந்துவிட்டு வாசலில் நிற்கும் பிச்சைக்காரனை அடித்துவிரட்டிவிட்டு காரில் பெருமையோடு போய்விடுகிறார்கள் அண்ணா!

எத்தனை கண்ட போதும் அண்ணியை நினைக்கையில் நெஞ்சு பொறுக்குதில்லையே அண்ணா, நெஞ்சு பொறுக்குதில்லையே!
ஒரு பிடி அரிசிக்காய் அழுத அண்ணியை நான் மறக்கமுடியுமா அண்ணா?

அன்புத்தம்பியாய்,
எம்.கே.குமார்.

Wednesday, September 17, 2003

154 kilobyte vimarsanam

155வது கிலோபைட்:

ஐம்பது பைசாவிற்கு நான்கு பக்க பேப்பர் வாங்கி ஒரு பக்கத்தில் மட்டும் எழுதி, அடுத்து மூன்றாவது பக்கத்திலும் எழுதி மீண்டும் படித்து பார்க்கையில் கும்பிடு இல்லாத அம்மாவின் மேடை போல ஏதோ குறைவதாக உறுத்த, மீண்டும் மறுபடி இடையில் அந்த வார்த்தையை சேர்த்து திரும்ப படிக்கும்போது வாசன் கோஷ்டி போல ஏதோ முரண்பாடாக உணர, அதையும் அடித்து திருத்தி மறுபடியும் எழுதி அந்த பேப்பர் ஐய்யோ விடுடா என்று கதறி அழும்வரை அடித்து கசக்கி, மறுபடி பேப்பர் வாங்கி மறுபடியும் இவ்வளவையும் புதிதாக எழுத வேண்டுமா எனத்தோணும்போது அதிகாலை ஐந்துமணிக்கு ஷி·ப்ட்க்கு போகவேண்டியது தெய்வாதீனமாய் ஞாபகம் வந்து சோம்பேறித்தம்பியை புத்துயிராக்க, அப்பாடா என்று பேனாவை மூடி வைத்துவிட்டு பாயில் குப்புறப்படுத்து தலையணையில் முகம் புதைத்து யோசிக்கும்போதுதான் தெரிகிறது பக்கம் பக்கமாய் எழுதிச்சாதித்தவர்களின் கஷ்டங்கள். அப்படி எழுதியவர்களில் பெரும்பான்மையினர் சொல்வது, "எழுது. கைக்கு ஓய்வில்லாமல் எழுது. ஒருநாளைக்கு 20ல் இருந்து 200 பக்கமாவது எழுது என்பதுதான்." எங்கே? போங்க சாமிகளா!

இன்று சுழல் நாற்காலியில் சாய்வாக உட்கார்ந்துகொண்டு சாம்சங் கீபோர்டை மயிலிரகால் தடவுவது போல விரல்களால் முத்தமிட்டு, அதை இதை எழுதி, தேவைப்படும்போது திருத்தி, அடித்து, மாற்றி சேமித்து மீண்டும் அதைக் குறைத்து பதப்படுத்தி எழுதி முடிப்பது என எல்லாம் வல்ல தொழிட்நுட்பத்தால் அனைத்தும் மிகவும் எளிதாக இருக்கும் நிலையிலும் அதோ அந்த சோம்பல் தம்பி எட்டிப்பார்த்து தூங்கச்சொல்லும் நிலையில் எனக்குத்தோணுவது இதில்லாமல் வேறு என்னவாக இருக்கமுடியும்? "நீயெல்லாம் எங்கெ உருப்படப்போறெ?"

பேனாக்களின் காலம் போய் கீபோர்டுகளின் காலம் வந்துவிட்டது. இதைத்தான் 155 வது கிலோபைட்டில் சொல்கிறார் பாரா.

1.பாபா ப்ளாக்ஷீப்:

ஒரு படத்தின் வெற்றி தோல்விக்கு டாப் டென் காரணங்களை தொலைக்காட்சி நிறுவனங்கள் சொல்லலாம். பத்திரிக்கைகள் அடுக்கலாம். ஆனால் ரஜினி படத்தின் தோல்விக்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்கமுடியும். அதை யாரறிந்திருக்கிறார்களோ இல்லையோ ரஜினி அறிய வேண்டும். அப்போதுதான் அவர் வெற்றி பெற முடியும்.

ஒருவரை படைப்பதும் அழிப்பதும் பிரம்மா-சிவன் என்பது உங்களுக்கும் எனக்கும் சரி. ரஜினிக்கு அதில்லை. கூட இன்னொன்றும் இருக்கிறது. மீடியாக்கள்தான் அவை. பாவம் ரஜினி.

சரி, ரஜினி தோற்றதற்கு காரணம் இருக்கமுடியும். அன்பே சிவனுக்கு?

2. பாபா பிளாக்ஷீப் 2:

இந்தக்கட்டுரையை படித்து முடிக்கும்போது பரமஹம்ச யோகானந்தரின் 'autobiagraphy of a yogi' புத்தகத்தை தெளிவாக படித்து முடித்த திருப்தி ஏற்படுகிறது. விஷயங்களை லாவகமாகக்கையாண்டு தெளிவாக எழுத முடிந்தவர்களாலே இது சாத்தியமாகும். எவ்வளவோ கஷ்டப்பட்டு எழுதிய கதை கவிதை பற்றிய எந்தக்கட்டுரைக்கும் அவ்வளவாக கேள்வி கேட்டு மறு மொழி வராத நேரத்தில் இந்தக்கட்டுறைக்கு வந்திருப்பதாய் அவர் சொல்வதே மக்கள் எவ்வளவு ஆழ்ந்து இந்தக்கட்டுரைகளைப்படித்திருக்கின்றனர் என்பது புரிகிறது.

மரத்தடியின் ரமேஷ் அப்பாத்துரை அவர்களின் சங்கதி இது. சூட்சும உலகம் பற்றி இன்னும் நாம் தெரிந்துகொள்ளத்தான் வேண்டும். அப்படியே சாமியின் ஆங்கிலப்புலமையையும். ரமேஷ் அவர்களுக்கு நல்ல தீனி.

3. சொல்வேட்டைக்காரன்:

இந்தப்பகுதியை படித்துமுடித்தபோது நான் ஒரு சிறு புழுவாக என்னை உணர்ந்துகொண்டது உண்மை. காரணம் லா.ச.ராவின் எழுத்து வாசனையைக்கொஞ்சம் கூட முகர்ந்து பார்க்காத ஒரு மனிதனாய் வலம் வந்து விட்டோமே என்பதுதால்தான். நா.பா, தி.ஜா, கல்கி, ஜேகே, சுஜாதா, பாலா என்று நீண்டு விட்ட பட்டியலில் அவரைச்சேர்க்க முடியாமல் வருந்துவதற்கு காரணம் இருக்கிறது.
பின்வரும் பாரா ஒன்றை பாரா எழுதியிருக்கிறார்.

"உவமைகளில் ஒரு பிரும்ம ராட்சஸன் அவர். திடீரென்று கண்ணாடித்தம்ளரின் அடியில் கரையாமல் உருளும் ஐஸ் கட்டி போல் அடக்கிய சிரிப்பு என்பார். கண்ணாடியில் விழும் பிம்பத்தின் ஒலிகூட எனக்குக்கேட்கிறது என்பார். தெருவில் வெற்றிலை விற்றுக்கொண்டு போனான், மாதிரிக்கு கையில் ஒரு கவுளி - உடைந்த சிறகு மாதிரி என்பார். மழையில் நனைந்ததில் மார்பில் கொலுசு என்பார்."

கடைசி உவமை என்னை மிரமிக்க வைத்தது. மழையில் நனைந்ததால் மார்பில் கொலுசாம். ஆஹா. வார்த்தைகளை உள்வாங்கி கண்ணுக்குள் செலுத்தி முப்பரிணமாக்கி காட்சியைப் பார்க்க விழைகிறேன். ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது.

மழைத்தூறல்.
முதற்துளி
அவள் மார்பில்
பிறவிப்பயன்!

ஆஹா, கேட்கும்போதே அமர்க்களமாய் இருக்கிறதே! இப்போது அசோகமித்திரன் என்னை ஆட்டிவைத்துக்கொண்டிருக்கிறார். அடுத்து லா.ச.ரா எனக்குள் குறைந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலத்தை உருவாக்கலாம். முன்பு ஒருதடவை கிளப்பில் இவர் பற்றி பேச்சு வந்தபோது வாயைப்பார்த்துக்கொண்டு இருந்தது நினைவுக்கு வருகிறது.

4. 2 நோய்கள்:

எந்தவொரு படைப்பாக இருக்கட்டும். ஒரு குண்டுமணி அளவுக்காவது அது படிப்பவர் மனதில் தங்காமல் தாக்கத்தை ஏற்படுத்தாமல் போகுமானால் அதனால் விளையப்போகும் நன்மைதான் என்ன? அது இலக்கியமே ஆனாலும்.

இரண்டு நோய்கள் கட்டுரை நமக்கு சிந்தனை தருகிறது. எதிலிருந்து எது தோன்றுகிறது. எதை எப்படி முடித்துவைப்பது? யோசிக்க வைக்கிறது. புயல் தாக்கமாய் வரும் அந்த சிந்தனைகளுக்கிடையே மெல்லிய தென்றலாய் வீசும் நகைச்சுவை மிகவும் ரசிக்கவைக்கிறது.

ஏற்கனவே இந்தக்கட்டுரையை நான் கிளப்பில் படித்து வாய் பிளந்து நின்றேன்.

5.கவிதையைத்தூக்கி கிடப்பில் போடு.:

நமது கதை இது. பத்து வரிக்கு மேல் இருந்தால் அதை படிக்கமாட்டேன் என வேண்டாத பொண்டாட்டி போல விரட்டி அடித்து, trash ல் கூட வைக்க மனமில்லாமல் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்வதுபோல செயல்படும் நண்பர்களுக்கு எப்படியாவது நாலு பேர் படிக்கவேண்டும் என கதை, கவிதை என எதையாவது எழுதும் நமது வருத்தம் இது. அதேபோல புரியும்படி இருந்தால்தான் கதையை படிப்பேன் என இருக்கும் சிலருக்கும் பாரா சொல்லும் செய்தி இது. படிப்பவர்களுக்கு மட்டுமா? படிப்பவர்களை, தோலுரித்துக்கொடுத்தும்கூட வாழைப்பழத்தைத் தின்னத்தெரியாத பிள்ளைகளைப்போல நமது வாசகர்களை எண்ணும் சில ஆசிரியப்பெருமக்களுக்கும்.

குழந்தை வளர்ப்பு பற்றிய நண்பர் ஒருவரின் கதைக்கு ஏற்பட்ட கதை ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது.

6.உருப்படாத எழுத்தாளனும் உதவாத ஞாயிற்றுக்கிழமையும்:

அக்பர், நெப்போலியன், நேரு ஆகியோருக்கு ஓய்வு ஒரு நாளில் 3 மணி நேரமாம். வயிறு எரிகிறது. எப்படி உருப்படுவது? 7 நாட்கள் வீட்டிலிருந்துகொண்டு இன்னும் முன்று கதைகளை முடிக்காமல் வைத்து இருக்கும் என்னை இதைவிட எப்படித் திட்டிக்கொள்வது எனத்தெரியவில்லை.

நகைச்சுவை கொப்பளிக்கும் சில இடங்கள் கட்டுரையில் இருக்கின்றன. முருகு இராசேந்திரன் வழி.

எல்லா எழுத்தாளர்களுக்கும் இந்த நிலைதான் போல. நல்லவேளை! நமக்கு அந்த மனச்சஞ்சலத்தை உருவாக்கும் பாக்கியவதி இன்னும் வந்து சேரவில்லை. அதற்குள் எப்படியாவது இந்த ஞாயிற்றுக்கிழமைகளை நன்கு பயன்படுத்திக்கொள்ளவேண்டும். விடாமல் தூங்கிப்பார்க்கவேண்டும். ஆறு மணியிருந்து ஆறு மணிவரை. இது இரவு என்று நீங்கள் நினைத்துக்கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.

7.விட்ட குறை விடாத குறை:

ஏற்கனவே சொன்ன சமாச்சாரம்தான். சூட்சும மேட்டர். ஏ.ஆர் ரகுமான் அப்பாவுக்கு நேர்ந்த நிலையை நாம் அனைவரும் அறிந்திருந்தாலும் இன்னும் கூட நானே அதைக்கண்கூடாக பார்த்து அதிர்ச்சியடைந்தபோதும்( நான் பார்த்தவர் வீட்டில் அவர் சாப்பிட உட்கார்ந்தால் அதில் மலம் கிடந்தது ஐயா! நிஜம்) இந்த சூட்சுமங்கள் புரியவில்லை. கொஞ்ச நாளைக்கு சூட்சும உலகில் ஆவியாய் அலைந்து பார்த்துத்தான் இதைப்பற்றி எழுதவேண்டும் என நினைக்கிறேன்.

அது சரி, திருச்சி பக்கத்தில் பேய் நிற்கும் புகைப்படம் பிரபலமாய் இருக்கிறதே........அடடா, நம்மாட்களைப்போல வதந்திகளைப்பரப்ப உலகத்தில் வேறு எந்தக்கொம்பனும் இல்லை போலயிருக்கிறது.

பின் தொடரும் நிழலின் குரலில் ஜெயமோகன் சொல்லுவது இந்த சூட்சும உலகிற்கு கொஞ்சம் பொறுத்தமாய் இருப்பது போல இருக்கிறது. ஒருவன் சுய இன்பம் அனுபவிக்கும்போது அதை அந்த எண்ணத்தை தோன்ற வைத்து ஊக்குவிப்பது அனுபவிப்பது எல்லாம் இந்த சூட்சும உலகில் இருக்கும் துர்தேவதைகளாய் கூட இருக்கலாமாம். பெரிய சிக்கலான விஷயமிது. படக்கென்று சொல்லி எந்தவொரு தவறான சிந்தனைக்கும் யாரையும் நாம் ஆளாக்கக்கூடாது. இன்னும் நிறைய படிக்கவேண்டும்.

பார்த்தீர்களா? மற்ற கட்டுரைகளை விட இது எவ்வளவு ஆர்வத்தை வளர்த்துவிட்டது என்று. இதுதான் விட்டகுறை விடாத குறை.

8. தமிழ் வாழ்க்கை இங்கிலீஸ் வாழ்க்கை:

சுயசரிதத்தில் தான் என்கிற நான் இல்லாமல் பூரணமாக எழுதுவது மிகவும் கஷ்டமான காரியம். சாமி நாத ஐயரின் என் சரித்திரம் அந்த சிறப்பைப்பெற்றிருக்கிறதாம். ஒரு பக்கத்தில் ஒருமுறை உபயோகித்த வார்த்தையை அவர் அடுத்த நான்கு பக்ககங்களுக்கு கொண்டுவருவதே இல்லையாம். நூறு மாற்றுச்சொற்களைக்கொண்டு ஒரே விஷயத்தை அவர் மாற்றிச்சொன்னாலும் அது புரியாமல் போவதே இல்லையாம். பெரிய விஷயம் தான். என் சரித்திரத்தைப்படிக்கவேண்டும்.

9.தனுஷ்கோடி:
பாவம் தீர்க்க ராமேஷ்வரம் போகும் நமக்கு இந்த தனுஷ்கோடி பற்றித்தெரிந்திருப்பது குறைவாகத்தான் இருக்கும். இந்தக்கட்டுரை¨ உடித்தவிதம்

10. பாதி வித்வான்:

கதை எப்படி வரும்? இந்தக்கேள்விக்கு எத்தனை விடைகளை நாம் சொல்லமுடிந்தாலும் இந்தப்பதிலும் ஒன்று என்பதை நாம் மறுக்க முடியாது. பாரா அவர்கள் சொல்லும் அந்தப்பதில்,' உள்ளே கொஞ்சம் சரக்கும் ஒரு சிறிய புற நெருக்கடியும் இருந்தால் எழுத்து எப்படியும் வந்தே தீரும்'.

இல்லையென்று யாராவது சொல்லமுடியுமா? பிரபலமான எழுத்தாளர்கள் பாடலாசிரியர்கள் எத்தனை பேர் இந்த நெருக்கடிக்கு மாட்டிக்கொண்டு சில முத்துக்களை பெற்றெடுத்திருக்கிறார்கள்.

பன்முக திறமைகொண்டவர் பாரா என்பது இந்தக்கட்டுரையின் முடிவில் நமக்கு விளங்குகிறது. நாம் தான் அந்த ரேவதி ராகத்தை பாண்டிச்சேரி வானொலியில் கேட்கவில்லையே. பிறகு, உண்மையைச்சொல்வதற்கென்ன?:)

11. பாவம் செய்தவர்கள்:

இது இந்தியாவின் தலைவிதி. ஓட்டுப்போட கொடுக்கும் லீவில் வீட்டில் அமர்ந்து டிவியையோ அல்லது அன்றுதான் புதிதாய் வந்த திரைப்படத்தை திருட்டு விசிடியிலோ பார்த்துக்கொண்டிருப்பவர்கள் படுத்தும் பாடு இது. ஏதாவது கேட்கப்போனால் படக்கென்று ஆங்கிலத்தில் வந்து நம்மைக்குதறும் வார்த்தைகள். ஏதோ இவர்களுக்காகவே ஆங்கிலத்தை, கோபப்படும்போது பேச வெள்ளைக்காரன் கற்றுக்கொடுத்தது போல.
இந்தக்கட்டுரையின் இந்த இரண்டு பாராக்களில் அந்த பாவம் செய்தவர்கள் படுத்தும் பாடு நம்மை பாவப்பட்டவர்கள் ஆக்குவதைத்தெளிவாகச் சொல்கிறது..

'உட்கார வாய்ப்புக்கிடைத்த பிரகஸ்பதிகளுக்கு கம்யூனிஷ்டுகள் எதிர்க்காமலே ஜனாதிபதி ஆகிவிட்டது போல் ஒரு அழகிய திமிர் எப்படியோ உண்டாகிவிடுகிறது. ஹிந்துவை விஸ்தாரமாகப்பிரித்து 16 காலத்தையும் ஒரே பார்வையில் விழுங்கிவிடுவதைப்போல ஆழ்ந்துபோய்விடுவார்கள். ஆனால் நம் சுண்டுவிரலோ சட்டை நுனியோ அவர்கள் மேல் பட்டால் அவ்வளவுதான்.

நீங்க உக்காருங்க சார்! பிளீஸ் பி ஸீட்டட். நான் நின்னுக்குறேன் என்று கொலைவெறிக்கண்களோடு எழுந்து ஒரு சின்ன ஓரங்க நாடகமே நடத்திவிடுவார்கள். அந்தச்சிறிய கம்பார்ட்மெண்டில் உள்ள அத்தனை கனவான்களும் என்னமோ ஏதோ என்று எட்டிப்பார்ப்பதோடல்லாமல், அவரவர் தம் மேலான கருத்துக்களையும் சொல்லத்தொடங்கிவிடுவார்கள். மேனர்ஸ், டீசன்ஸி, டெலிகேட், அர்ரகன்ஸ் போன்ற சொற்களை வேண்டிய அளவுக்கு உபயோகித்து நிரோத் போல ஜன்னலுக்கு வெளியே வீசி விடுவார்கள்.'

அனுபவித்த பாவப்பட்ட பாக்கியசாலிகள் யாராவது இருக்கிறீர்களா?

12. சாமியார் ராசி:

குமுதம் இணையத்தில் வந்த சுண்டெலி சமாச்சாரம் இது. நான் படிக்கவில்லை. இப்போது தேடிக்கொண்டிருக்கிறேன்.

ஒரு காலகட்டத்தில் நாம் விரும்பியும் விரும்பாமலும் அடுத்தடுத்த நிகழும் சில சம்பவங்கள் நம்மைப்பதப்படுத்திவிட்டுச்செல்லும் இல்லையா?
ஏழை பணக்காரன் என்ற பாகுபாடெல்லாம் இல்லாமல் ஜாதியம் எல்லாம் மறந்து வந்து தொலைக்கும் இந்த வாழ்க்கையின் அத்தியாயங்களில் மூழ்கி எழாதவர் யார்தான் இருக்கமுடியும்?

பாரா அவர்கள் தான் சந்தித்த சாமியார் பற்றிச் சொல்கிறார்.

13. பயம்:

பயம் பற்றிய நல்ல கட்டுரை இது. இன்று இதை பெரிய எழுத்தாளர்கள் சிலர் மறைக்கலாம். ஆனால் எந்த வொரு துறையிலும் இது தோன்றுவது இயல்பு. எட்டாம் வகுப்பில் இருந்து ஒன்பதாம் வகுப்பிற்கு வேறு பள்ளிக்குச்சென்று சேரும்போது அங்கிருக்கும் முதல் தர மாணவனைக்கண்டு பயம்வருவதில்லையா?( நாம் அதுவரை அந்த பழைய பள்ளியில் முதல் தரம் எடுத்திருந்தால் மட்டும். மற்றபடி வரும் பயம் அவன் பெரிய பையனாய் இருந்தால்!)

அதுபோல வரும் பயம் இது. டாக்டர் ரூமி அவர்களின் குட்டிப்பாப்பா ஏற்படுத்திய தாக்கமாம். நமக்கும் அவ்வப்போது வருவதில்லையா இந்தப்பயம்?

14. மனைவி ஜாதி:

என் தருணம் வந்துவிட்டது. எழுத்தாளர்களின் மனைவி படும் அவஸ்தைகளைச்சொல்லும் கட்டுரை. எழுத்தாளர்கள் நம்மை மட்டுமின்றி தத்தம் மனைவிமாரையும் படுத்தும் பாடு இது. :)

"கரும்புத்தோட்டத்தில், தெற்குமாகடலுக்கு நடுவினில் கண்ணற்ற தீவில், தனிக்காட்டில் புழுங்கும் பெண்களைக்குறித்து பாரதியார் உருகி எழுதிக்கொண்டிருந்தபோது, ' முதலில் இந்த வீட்டுப்பெண்னைக்கொஞ்சம் கவனிக்க மாட்டீர்களா?' என்று அவர் மனைவி செல்லம்மாள் வெடித்தது பற்றி நாம் அறிவோம்."

பாரதியாருக்கே இந்த ரியாக்ஷன் என்றால் இந்தக்கட்டுரையை எழுதியதற்காக அவரின் மனைவியிடமிருந்து என்ன ரியாக்ஷன் வந்திருக்கும்.? எல்லாம் அவருக்கே வெளிச்சம்.

15. வாழ்விலே ஒருமுறை:

ஆஹா, வந்துவிட்டது. விரும்பிய தகவல்கள் அடங்கிய அடுத்த கட்டுரை. திருவான்மியூர் தியகாராஜா, ஆலந்தூர் ராமகிருஷ்னா, பரங்கிமலை ஜோதி, சைதாப்பேட்டை நூர்ஜகான், தாம்பரம் எம் ஆர், ராதாநகர் வேந்தர் என அவர் சொல்லிக்கொண்டு போகும்போது திருவெற்றியூர் வெங்கடேஸ்வராவும் தூத்துக்குடி ஸ்பிக் நகர் முருகனும் அநியாயத்திற்கு ஓரமாய் எட்டிப்பார்த்து புன்னகைப்பது எனக்குத்தெரிகிறது.

முதன்முதலில் அந்தப்புண்ணியத்தளத்துக்குள் நான் நுழைந்தபோது அநியாயத்திற்கு வியர்த்து கைகால் நடுங்கி நெற்றி விபூதியை அழித்துக்கொண்டது ஞாபகத்திற்கு வருகிறது.

பாய்ஸ் படத்தில் இதையெல்லாம் காட்டுகிறார்களாப்பா? அப்படிக்காட்டுனா அது கெட்ட படம்.:)

இந்தக்கட்டுரையில் மனதுவிட்டு சிரிக்க நிறைய இடம் இருக்கிறது. என்ன இருந்தாலும் பழைய தப்புகள் அல்லவா? இப்போது சிரிப்புத்தானே தரும் அப்போது மாட்டிக்கொள்ளாமலிருந்தால்.

16.பெர்முடா போடாத பெருமாள்;

இந்திரா சௌந்தரராஜன் மதுரையிலிருந்து நடந்துபோய்விட்டு வருகிறாராம் திருப்பதிக்கு. ஆச்சரியமாய் இருக்கிறது. கீழிருந்து மேலே நானும் ஒருதடவை நடந்தேன். மனதுக்கு இனிமையாகத்தான் இருக்கிறது, காலகளுக்குத்தான் கஷ்டமாம். புலம்பித்தீர்க்கின்றன.

கையில் பார்வை நேரமெல்லாம் கட்டி அனுப்புகிறார்கள். ஏற்பாடுகளெல்லாம் நல்லமுறையில்தான் இருக்கின்றன. சாமியை பார்ப்பதுதான் கஷ்டமாயிருக்கிறது. நாம் பார்க்காவிட்டால் என்ன? அவர் பார்க்கிறார் அல்லவா? அது போதும். திருப்பம் நேரும்.

17. வெற்றிகரமான தோல்வி:

கன்னத்தில் முத்தமிட்டால் தோல்விதான் கிடைக்கும் என்பது மணிரத்னத்திற்குத்தெரிந்திருக்கும். காதல் சடுகுடு ஆடுவதுதான் வெற்றிக்கு வழி. நிஜமாகவே எனக்கு இதுதான் தோன்றியது படம் பார்த்தபிறகு.

பிரச்சனைகளைச்சொல்ல குழந்தைத் தத்தெடுப்பை வைத்தெல்லாம் வெற்றிபெறமுடியாது தமிழ்நாட்டில். அவருக்கும் இது தெரிந்திருக்கவேண்டும். அதனால்தானே காஷ்மீர் பிரச்சனையை புதுக்கணவன் மனைவி காதலிலும், பம்பாய் பிரச்சனையை இன்னொரு காதலிலும் எடுக்காட்டி ஜெயிக்கமுடிந்தது அவரால்.

பாரா அவர்களின் கோணம் வேறாய் இருக்கிறது. 'புலிகளை, தீவிரவாதிகளாக மட்டுமே மெஜாரிட்டித்தமிழர்கள் அறிவார்கள்.குறிப்பாக ராஜீவ் காந்தி படுகொலைக்குப்பிறகு. இந்நிலையில் ஒரு போராளி பெற்ற குழந்தை பற்றிப்படமெடுப்பதில் உள்ள அபாயம் குறித்துச்சற்று சிந்தித்திருக்கலாம். ' என்கிறார். எந்தச்சார்பும் எடுக்காத திரைக்கதை கவனத்தை ரசிக்கமுடியுமே தவிர 'ஒன்ற' முடியாது- சராசரி மக்களால் என்கிறார். சரிதானா என யோசிக்கவைக்கிறது.

18. பார்ட் டைம் டைரக்டர்:

பாரா அவர்களின் கனவுத்தொழிற்சாலை சமாச்சாரம். நல்ல வேளை படம் ஓடவில்லை. இல்லையேல் இவர் ஏதாவது சொல்லி அந்தப்படம் ஓடியிருந்தால் அவ்வளவுதான். இவரை அந்த டைரக்டர் விட்டு விட்டிருக்கமாட்டார். நாமும் இந்த சமாசாரங்களைப்படிக்க முடியாது . அதுவுமில்லாமல் அந்தப்படங்களைவேறு பார்த்துத்தொலைக்கவேண்டும்:) தமிழ்த்திரை பாரா அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது.:)
கடைசியில் அவரது கேள்வி நம்மையும் சிந்திக்கவைக்கிறது.

19. மடங்கள்:

ஒருகாலத்தில் ஆதீனங்களின் பணி இபப்டி ( sepillng mstiake இல்லை human mind!) இருக்க, இன்றைய ஆதீனங்கள் செய்வதுதான் என்ன என்று யோசிக்கிறோம். பதவிச்சண்டைகளும் ஊழல்களுமாய் அரசியல் அளவிற்குத்தரம் தாழ்ந்து விட்டதை நினைக்கும்போது வேதனை மிஞ்சுகிறது.

'திசைகளின் நடுவே' சிறுகதைத்தொகுப்பில் ஜெயமோகன் அவர்களின் கதை ஒன்று வருகிறது. ஒரு மடம் பற்றி . குறு நாவல் போல. அந்த மடம் முழுவதும் பலதரப்பட்ட ஓலைச்சுவடிகள் மக்கிப்போய்க்கிடக்க தலைமைச்சாமியாரின் காலுக்கு விஷம் வைப்பார் துணைச்சாமியார். அது போல் தான் இருக்கிறது இன்றைய நிலை. ஒருவேளை அது உண்மையாகக்கூட இருக்கலாம்.

வருத்தத்திற்குரிய விஷயம்.

20.ஒரு வெகுஜனக்கவலை:

ஒரு ஒலிதரும் (ஒலி தருமா என்ன? இதுவேறு சந்தேகம் எனக்கு!) கால் அணிகலனின் தொடரை நண்பன் தொடர்ந்து பார்ப்பது வழக்கம். என்ன காரணம் என்று கேட்டேன் நான். "ஒவ்வொரு நாள் முடிவிலும் அடுத்த நாளுக்கென்று ஏதாவது முடிச்சு வைக்கிறார்கள் . அதை எங்கே எப்படி வைக்கிறார்கள் என்று பார்க்கத்தான். அதில்லாமல் அதில் நிறையப்பெண்கள் வேறு நடிக்கிறார்கள். அழகான பெண்கள்."

இதைவிட அந்தத்தொடருக்கு வேறு என்ன வேண்டும்? ஆக முடிவை ஆவலோடு எதிர்ப்பார்க்கும் வழக்கம் தொடர்களுக்குப்போய்விட்டது. சிறுகதைகளையும் அப்படித்தான் அமைக்கவேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் என்னய்யா இது...என்று delete பண்ணிவிட வாய்ப்பிருக்கிறது.

ஆசிரியரின் கவலையும் அதுதான். அது பத்திரிக்கைகளையும் ஆட்டிப்பிடித்திருப்பதுதான் நம்முடைய கவலை.

விகடனில் கடந்த ஒருசில வாரங்களாக சிறுகதை எதுவும் வருவது போலத்தெரியவில்லையே? என்னானது? ஆஸ்தானவர் தவிர்த்து.

21. தீராதப்பிரச்சனையும் ஒரு தேவக்காகமும்.:

"என்ன புத்தகம் வாங்கினீர்கள்" என்றார் அவர்.

நான், அந்தப்புத்தகத்தின் பெயரைச்சொன்னேன்.

"த்த்ஸொ" என்றவர் " யோவ்..எதுக்குய்யா பணத்தை வேஸ்ட் பண்றே.".என்று திட்டிவிட்டு யோசித்தார்.

"என்ன சார் யோசிக்கிறீர்கள்" என்று கேட்டேன்.

"உன்னை எப்படி மந்திரிப்பது எங்கிருந்து தொடங்குவது என்றுதான் யோசிக்கிறேன்" என்றார்.

"வேறு வழி மந்திரித்துத்தானே ஆகவேண்டியிருக்கிறது? எப்படியாவது மந்திரித்துவிடுங்கள்" என்றேன் நான்.

கொஞ்சம் யோசித்து "ம்ம். எழுதிக்கொள் "என்றார்.

கஷ்டமான காரியம் தான். நல்ல பொண்ணைத்தேடி கண்டுபிடிப்பது கூட எளிது, நல்ல புத்தகத்தைக்கண்டுபிடிப்பது?

ஒரு புத்தக கண்காட்சிக்கு நான் செல்லும்போது உடனே புத்தகம் எதுவும் வாங்குவதில்லை. கொஞ்சம் தாடி வைத்தவரோ, இல்லை முழுக்கைச்சட்டையை மடக்கி விட்டிருப்பவரோ இல்லை நெற்றியில் திருநீறு இட்டவரோ இல்லை வறுமை லட்சுமி தாண்டவமாடும் எவரோ கண்ணில் பட்டால் அவர் பின்னாலெயே நான் போவது வழக்கம். அவர்கள் வாங்கும் புத்தகங்களை எல்லாம் பார்த்துவிட்டு ( சிலசமயம் அவர்கள் வாங்காமல் கூட போவதுண்டு!) கடைசியில் வயது வந்தவர்களுக்கு மட்டும் புத்தகத்தில் ஒரு கதையை நின்றுகொண்டே படித்துவிட்டு பேசாமல் வந்துவிடுவது வழக்கம்.

நம் எல்லோருடைய பிரச்சனை இதுதான்.

ஒரு புத்தகம் நம் வாழ்வில் அல்லது சிந்தனையில் ஒரு அங்குலமாவது உயர்த்துமாயின் அது நல்ல புத்தகமாம். சரி. நானும் அதைத்தான் நினைத்து புத்தகம் வாங்குகிறேன். ஆனால் படித்து முடித்து அப்படி எதுவும் தோணாதபோது அந்தபுத்தகக்கடைக்காரரிடம் திருப்பிக்கொடுத்தால் அவர் வாங்கிக்கொள்ளமாட்டேன் என்கிறாரே என்ன செய்ய?:)

22. சரித்திரச்சிக்கல்கள்:

குமுதத்தில் வந்த அந்தத்தொடருக்காக நான் நண்பரிடம் அப்போது குமுதம் வாங்கிப்படித்ததுண்டு. என்னவென்று தெரியாமல் வெறுமனே காஷ்மீர் பிரச்சனை காஷ்மீர் பிரச்சனை என்று சொல்லிக்கொண்டிருப்பது எவ்வளவு கேவலமானது என்பது எனக்கு அப்போதுதான் தெரிந்தது. அந்தத்தொடர் பாகிஸ்தான்..ஒரு புதிரின் சரிதம்! அப்போதுதான் பா. ராகவன் என்ற பெயரை முதன்முதலாகக்கேள்விப்பட்டேன் அவர் இதற்கு முன் இரண்டு நாவல்கள், சிறுகதைத்தொகுப்பு வெளியிட்டிருந்தும் கூட!

இந்தக்கட்டுரையைப்படிக்கும்போது இன்னும் அது எந்தவிதமான சிக்கல்களைக்கொண்டிருக்கிறது என்பது தெரிகிறது. இப்போது அமெரிக்கா வரலாறு.

இந்தியாவே மிகச்சிறந்த நாடு என்பதில் எப்போதும் நமக்குச்சந்தேகமில்லை. பின்னே, வரிசையாய் நிற்கவைத்து ஆணுறுப்பையும் தலையையும் வெட்டியவர்களைக்கூட நாம் மன்னித்து அனுப்பி, அவர்களும் இன்றுபோய் நாளையாய் திரும்பி வந்து வெட்டினார்களே!

அந்த மன்னிப்புக்கு நாம் எக்காலத்திலும் சிறந்து நிற்போம்!

பித்தளைக்கிரீடங்களைச்சுமந்த மாகாராஜாக்களின் கதையைப்படித்துவிட்டு நாம் சரித்திரம் படித்தவராக நம்புவது எத்தனை அபத்தமானது ?

நிஜம் தான்.

23. சர்மா என்றொரு ..

இதைப்படிக்காவிட்டால் எனக்கும்கூட சர்மாவைத்தெரியுமா என்பது சந்தேகம். எப்போதாவது கிளப்பில் அல்லது மரத்தடியில் பேசப்பட்டால் மூக்கைச்சொரிந்துகொண்டு கேட்டுக்கொண்டிருக்கலாம்.

அவரின் ஒரு தலையங்கம் இது.

"வெறித்த பார்வை, தளர் நடை, தன்னம்பிக்கையில்லாப்பேச்சு, பல்லை இளித்தோ, தலையைச்சொறிந்தோ, வயிற்றைக்காட்டியோ எப்படியாவது காரியத்தைச்சாதித்துக்கொள்ளவேண்டும் என்ற மனப்பான்மை, உலகம் எந்தப்போக்கில் போனால் நமக்கென்ன என்று ஒதுங்கி வாழும் சுபாவம் முதலியவனெல்லாம் நமக்குப்பிடிப்பதேயில்லை.
சந்தோஷம் எங்கேயிருக்கிறது? போராட்டத்திலே என்றான் மார்க்ஸ். வாழ்க்கையே ஒரு போராட்டம்தானே....." இப்படிப்போகிறது அந்தத்தலையங்கம்.

படித்து முடிக்கும்போது எழும் இயல்பான கேள்வி. நாம் வாழ்கிறோமா?

24. உலகத்தொலைக்காட்சிகளில்...........

கிளப்பில் படித்த கட்டுரை என்று நினைக்கிறேன். வரிக்கு வரி நகைச்சுவை. யோசிக்கவும் வைக்கிறது.

25. நிர்வாணம் பரம.....

உண்மையை எழுதும்போது ஜோடனைகள் கூடாது. உண்மைக்கு ஏற்ற உடை நிர்வாணம் என்று எழுதியவர் மலையாள எழுத்தாளர் பஷீர் அவர்கள். அவரைப்பற்றிய கட்டுரை இது.

உண்மைகள் எழுதுவதற்கு நாம் தயாராக இருக்கும்பட்சத்தில் முதுகையும் தயாராக வைத்துக்கொள்ளவேண்டும்.
அல்லது ஒரு அடைமொழியைச்சுமக்கவாவது.

26. கேட்டுக்கிட்டே இருங்க..

ரேடியோவில் விவசாய செய்திகள் கேட்பதெல்லாம் அந்தக்காலம். இப்போது வேறு..

பொன்னியின் செல்வனைத்தொடர்ந்து மூன்று வாரம் படித்து அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொன்னால் எந்தப்பத்திரிக்கை நம்மை கொச்சிக்கு இலவசமாக அழைத்துச்செல்கிறது?

இல்லை, புத்தகம் வாங்கினால் வெள்ளி தம்ளர் தரும் பதிப்பகம் ஏதாவது இருக்கிறதா என்ன?

சாத்தான்கள் சர்க்கரையைத்தேனில் கரைத்துக்கொடுக்கும். நமக்கு எப்போதாவதுதான் இது தெரியும்.

27. படித்தேன் ரசித்தேன்:

யோசிக்க வைக்கும் நல்ல கட்டுரை இது. வெண்பாவில் இருந்து வேதம் வரை நாம் கற்றுக்கொள்ள வேண்டியது பற்றி உரைக்கிறது.

28.கோப்பை........

இந்தக்கட்டுரையைப்படித்தபோது அசோகமித்திரனின் 18வது அட்சக்கோடு முதல்மூன்று பகுதிகளைப்படித்தபோது ஏற்பட்ட அநுபவம் ஏற்பட்டது. ஹாண்ட்சம் சொல்லும் பெண்கள் கண்ணுக்குள் வந்துபோனார்கள் பதினாறு வயது மயிலோடு மாட்டு வண்டி மேலே நின்று திருவிழாவை ரசிக்கும் பெண்கள் போல.

சிரிக்க வைத்ததில் முதலிடம் இதற்கு. இந்தக்கட்டுரைக்கு.

29.அசோகமித்திரன்.....

மேலே சொன்னேன் அல்லவா, "எழுதிக்கொள்" என்று ஒரு புத்தகத்தின் பெயரை அவர் சொன்னார் என்று. ( 21. தீராத பிரச்சனை.....)
அந்தப்புத்தகம்,

"ஒற்றன்."

முதலில் ஒரு நாவலைப்போல படித்துவிட்டு மறுபடி பத்தாம் அத்தியாயத்திலிருந்து படித்தேன். பத்திலிருந்து கடைசி அத்தியாயத்தைப்படித்தேன். கடைசி படித்துவிட்டு முதல் அத்தியாயத்தைப்படித்தபோது எனக்குக்கொஞ்சம் கூட குழப்பமில்லை.

அவ்வளவு ஒரு அருமையான எழுத்து என்று பாரா அவர்கள் சொன்னது பொய்யாகவில்லை. மீண்டும் மீண்டும் படித்துக்கொண்டிருக்கிறேன்.

இப்போது 18 வது அட்சக்கோடும்.

30. ஒரு நம்பிக்கைத்துரோகம்..

மன்னிக்கமுடியாத குற்றம் இது என்று சொல்வதில் இரண்டாம் கருத்து இருக்கமுடியாது. அப்படி இருக்க, இந்த குற்றத்திற்கு தண்டனை ஒன்று இருக்கிறதா என்ன என்று கேட்டால், இதோ இந்தக்கட்டுரை பதில்.

அது, இறக்கும் வரை நாம் படும் மனவருத்தம் தான்.

உணரும்போது கடவுளாலும் மன்னிக்கப்படுகிறோம்.

*************************
மூவர் என்றொரு கதை. ரயிலில் ஒரு அழகான பெண் பயணித்துக்கொண்டிருப்பாள். அவள் எதிரே ராணுவத்திலிருந்து திரும்பும் மூன்று இளைஞர்கள் இருப்பார்கள். ஒருவன் கையில் பேப்பர் இருக்கும். இன்னொருவன் தூங்கிக்கொண்டிருப்பான். மூன்றாமவன் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பான்.

ரயில் ஒரு மலைக்குகையை கடக்கும் ஒரு பத்து வினாடி இருளில் அது நடந்துவிடும். அவளது மென்மையான உதடுகளில் இன்னொரு உதடின் உரசல். பிரமை போல இருந்தாலும் நிஜம்.

யார் அது? என்பதுதான் அவளது கேள்வி.

மூவரும் அவரவர் வேலைகளில் கவனமாக இருப்பார்கள். முகம் தெரியா அந்த எதிரியை நினைத்து அவள் அடையும் வேதனை இருக்கிறதே!
அதுதான் மிகப்பெரிய தோல்வியாகத்தெரியும் அவளுக்கு.

இது அவரின் 'மூவர்' தொகுப்பில் முதல் கதை. மிகவும் யோசிக்க வைத்த கதை அது.

*******************************
சிலவிஷயங்கள் புரிகிறது.

கட்டுரை எழுதுவதற்கு என்ன வேண்டும்?

உண்மைச்சம்பவங்களை நகைச்சுவையோடு சொல்லத்தெரிய வேண்டும். தற்போதுள்ள உலக நிலையைத்தெளிவாகத்தெரிந்து இரண்டையும் கலக்கத்தெரியவேண்டும். புத்தி சொல்லும்போதும் கூட பட்டதைச்சொல்லி விட்டுவிடவேண்டும். சொல்லும்போது ரொம்ப ரொம்ப எளிதாகத்தான் இருக்கிறது.

எழுதுவது எவ்வளவு கஷ்டம் என்று இப்போதுதான் தெரிகிறது.

*****************************
இதை விமர்சித்துள்ள மற்றொரு சிறந்த கட்டுரையாளர் பிரகாஷ் அவர்கள், காமெடி பண்ணுவதில் வல்லவர். இல்லையேல் நடு சென்டரில் என்ற எளிய வார்த்தைமூலம் நகையை வரவைத்திருக்கமுடியுமா?

அன்பன்,
எம்.கே.குமார்.

Search This Blog