Friday, October 14, 2011

தங்கமீன் – இணைய இதழ் ஆண்டு விழா - ஒரு பகிர்வு

தங்கமீன் இணைய இதழின் முதலாம் ஆண்டு நிறைவு மற்றும் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா, சிங்கப்பூரின் உட்லாண்ட்ஸ் நூலக அரங்கில் கடந்த 9 அக்டோபர் அன்று இனிதே நடந்தேறியது. கேசரி-வடையைத் தாண்டியும் விழாவில் இனிமை சேர்த்தன பலவிஷயங்கள்.

சிங்கப்பூர் தமிழ் விழாக்களில் சில ”கிளிஷேக்களை” நீங்கள் எப்போதும் காணமுடியும்.

 1. முதலில் ’கேசரி – வடை – காஃபி’. கேசரி எப்படியிருந்தாலும் இனிப்பிருந்தால் போதும், குறையொன்றும் சொல்லமாட்டார்கள்; வடை அப்படியில்லை. மெத்து மெத்தென்ற அத்தை மகளின் கன்னம் போல இருக்கவேண்டும், அதுதான் வடை (நான் சொல்லவில்லை; நண்பரொருவர் சொன்னது!).

 2. ’வியாபாரத்தில் வெற்றி பெற்ற தமிழார்வம் மிக்க ஒருவர்’ அந்த விழாவுக்குத் தலைமை தாங்குவார். இதில் எனக்கு சந்தோசமே! உண்மையில் சிங்கப்பூரைப்போல இந்த அளவுக்கு நாட்டம் கொண்டு செயல்படும் தமிழார்வம் கொண்ட வியாபாரஸ்தர்கள், வேறொரு நாட்டில் இருப்பார்களா என்பது சந்தேகமே!

 3. மூன்றாவது, அவ்வாறு தலைமை தாங்குபவர்கள் “நாம் தாங்க முடியாத” அளவுக்கு தலைமைப்பேச்சில் அல்லது சிறப்புப்பேச்சில் ’மொக்கை’ போடுவார்கள். இது ஒரு காலக்கொடுமை!

இத்தகைய கிளிஷேக்களிடையேயும், இந்த விழாவில் சில நிறைவுகள் இருந்தன.

விழாவில் தலைமையேற்ற ’வினாயகா எக்ஸ்போர்ட்ஸ்’ இயக்குனர் திரு.ஜோதி மாணிக்கவாசகம் வெகு இயல்பான நகைச்சுவையில் கவர்ந்தார். இவரது பேச்சை இப்போதுதான் கேட்கிறேன். மொக்கை வகையில் இது சேறாது.

அடுத்ததாய், செல்வன் பார்கவ் ஸ்ரீகணேஷ். சிங்கப்பூரின் இளைய தலைமுறை, ’டமில்’ பேசக் காணக்கிடைப்பதற்கே தானதவம் செய்திருக்கவேண்டும். அதிலும் இந்த நண்பர் அருமையான தமிழில் அளவாடினார். சினிமாவையும் அரசியலையும் சிறிது சாடினார். இன்னும் இருபது வருடங்களில் ஒரு தமிழ் மந்திரி அல்லது சிண்டா, குண்டா என ஏதாவதொன்றிற்கு இவர் சி.இ.ஓ ஆகத் தகுதியுள்ளது விளையும் பயிராய்த் தெரிகிறது.

எதிர்வீட்டு அழகி கொடுத்த எதிர்பார்பாரா முத்தம் போல எதிர்பாரா இன்ப அதிர்ச்சி ’தென்றல்’ ஆசிரியர் வித்யாசாகரிடமிருந்து எனக்கு. தென்றலைப் படித்தபோது எனக்குத் தெரியும், இவர் சினிமாவை ரசிப்பவர் என்று. அன்று மேடையில் எனது சினிமா விமர்சனத்தைப் புகழ்ந்தார். ரசித்ததைப் பகிர்ந்தார். கூட, ’சினிமா கதாநாயகன் போல இருக்கிறார் இந்த சினிமா விமர்சகர்’ என்று வேறு என்னைக் கொஞ்சம் பூரித்தார். தவிர, வழக்கம் போல நகைச்சுவையை வீசினார். கூட்டத்தைத் தன் பக்கம் அள்ளினார். கேட்கும் கூட்டம் சிரிப்பதைப் பார்த்து தன் மனம் புளகாங்கிதப்படும் பேச்சாளன், இன்னும் நகையாய்ப் பேசுவான். அந்த வகை இவர்! அருமையான மனிதர்.

கமல்ஹாசனின் பாடி லாங்குவேஜ்ஜையும் குரலையும் வார்த்தைகளையும் தேர்ந்து வெளிப்படுத்திய திரு.ஆர்.இராஜாராம் (துணைத் தலைவர், வளர்தமிழ் இயக்கம்) ஒரு இனிய வித்தியாசம்.

தினேஷ் – மலர்விழி நிலாப்பாடல்களை பாட முயற்சித்தார்கள். வெகுசிறப்பாய் இல்லாவிட்டாலும் கேட்பதற்கு இனிமையாய் இருந்தன.

மணிமாறன் குழுவினரின் நடனம் நன்றாய் இருந்தது. எடுத்துச் சேர்ப்பதற்கு உபகரணங்கள் இல்லாததால் நிறைவாகத் தெரியவில்லை.

அடிக்கடி ’கடி’ கொடுத்த மைக்கையும் தாண்டி நிகழ்ச்சியை இனிமையாகவே நடத்தினார் வசந்தம் புகழ் ஜி டி மணி.

கைக்குக் கிடைத்த விழாமலர் தரம்; புகழ் நிரந்தரம். கண்ணுக்கு கிடைத்த நட்பு வட்டாரங்கள், வாய்க்குக் கிடைத்த கேசரி, காதுக்குக் கிடைத்த தீந்தமிழ் என எல்லாம் இனிமை மயம்; இன்பமயம்.

தங்கமீன் தொடர்ந்து சிறக்க வாழ்த்துகள்.

எம்.கே.குமார்

Search This Blog