Thursday, December 04, 2014

வசந்த பாலனுக்கு ஒரு கடிதம்..


அன்புள்ள அண்ணன் வசந்தபாலன் அவர்களுக்கு,

தாங்கள் இதுவரை இயக்கிய நான்கு படங்களுக்கும் ரசிகன் நான். அரவான் பார்த்துவிட்டு என்னுடைய வலைப்பதிவில் விமர்சனம் எழுதியிருந்தேன். விமர்சனத்திற்குப் பதில் இக்கடிதத்தை எழுதியிருக்கவேண்டுமோ என இப்போது நினைக்கிறேன்.

தாங்கள் இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும். இயக்குனர் ஷங்கரின் ஆஸ்தான சீடர்களுல் ஒருவர் என்பதும் உங்களது இரண்டாவது படத்தை அவரே தயாரித்தார் என்பதும்  அவரே உங்களது குரு என்பதும் எல்லோருக்கும் தெரியும்.

திரைப்பட இயக்கம் என்பது போராட்டமும், வலியும் வேதனையும், ஏமாற்றமும், நிறைந்தது என இப்போதெல்லாம் சாதாரண பார்வையாளராகிய நாங்களும்  இப்போதெல்லாம் அறிந்திருக்கிறோம்.

அதிலும் தன் இலட்சிய வாழ்வின் முதற்படியாய் எதன் பொருட்டு சில பல வருடங்களாக உணவு, உறக்கம், இளமை, குடும்பம் முதலியவற்றையெல்லாம் இழந்து கடலில் போராடி கரைதட்டி காலை ஊன்றி நிற்கும் நிலைக்கு ஒப்ப வெளியாகும் ஒரு இயக்குனரின் முதல்படம் எப்படி மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதும் ஒரு இயக்குநருடைய வாழ்வை அது எபப்டியெல்லாம்  தீர்மானிக்கும் என்பதும் உணரத்தக்கதே.

அந்த வகையில் உங்களுக்கு, உங்களது கடின உழைப்புக்கு, உங்களது முதற்படம் நன்றாயிருந்தாலும் கூட, எனக்கும் பிடித்திருந்தது என்றாலும் கூட, மாபெரும் தோல்வி அடைந்தததும் அதற்குப்பிறகு ஏறக்குறைய பத்து வருடங்கள் நீங்கள் பட்ட அவமானங்களும் துயரங்களும் வார்த்தைகளில் அடங்காதது. கடின உழைப்பும் முயற்சியும் கொடுத்தபின்பும் காரணமே இல்லாது ஏற்படும் தோல்வி ஏற்படுத்தும் வலி சொல்லித்தெரியக்கூடியதல்ல.

மேலேறி வந்தீர்கள். ’வெயில்’ என்றொரு படம் கொடுத்தீர்கள். வாழ்வு கொடுக்கும் வெற்றி தோல்விகளின் சதுரங்க ஆட்டங்களை அழகாய் முன்வைத்தீர்கள். இன்றுவரை அப்படத்தின் தாக்கம் என் மனதுக்குள்ளே இருக்கிறது. ஒரு சராசரி பார்வையாளனாய்க் கூட, உருகுதே மருகுதே பாடலின் கடைசிக்காட்சியில் ஃபில்ம் சுருள் கருகி உருகும் காட்சி ஒரு தீராத வேதனையைக் கவிதையாய்க் காட்சிப்படுத்திச் சென்றிருக்கிறது.

’அங்காடித்தெரு’விற்கு வந்தீர்கள். சொல்லப்படாத கதைக்களம். யாரும் தொடத்தயங்கும் முயற்சி. வெற்றி பெற்றீர்கள். அத்தளத்தில் பணியாற்றும் இலட்சக்கணக்கான தொழிலாளர்களில் ஒருவருக்காவது அதன் மூலம் ஒரு பரிவோ பாசமோ மதிப்போ மரியாதையோ கிடைத்திருந்தால் கூட படம் வெற்றிதான். கண்டிப்பாய் கிடைத்திருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். நானும் ஒரு சராசரி ரசிகனாக அத்தகையவற்றிற்கு முயற்சி செய்திருக்கிறேன்.

அடுத்ததாய் ’அரவான்’ என்றொரு படம். என்னைப்பொறுத்தவரைக்கும் மிக முக்கியமான முயற்சி. கடினமான உழைப்பைத் தந்து உருவாக்கிய படம். அப்படத்தில் நடிகர்கள் அணியும் வேட்டி செய்யும் முறையைப்பற்றி படித்தபோதே திரைப்பட இயக்குனரின் வேலைகள் பற்றி ஆச்சரியம் அடைந்தேன். அது வெற்றிபெற்றிருக்கவேண்டிய படம். அதில் என்ன குறை என்பதை சினிமாவில் இயக்குநராக முயற்சிக்கும் ஒவ்வொருவரும் விவாதிக்கவேண்டும்.

இப்போது ’காவியத்தலைவன்’. படத்தைப்பற்றி எனது பார்வையில் எனது பின்னூட்டத்தில் இப்படிச்சொல்லியிருந்தேன். ஒரு நாவலைப்போல பல்வேறு தளங்களில் இப்படம் விரிகிறது என்று. அதுதான் உண்மை. காட்சியமைப்பிலும், திரைக்கதையிலும் அதைக் குறையின்றி செய்யமுடிந்தது உங்களால். ஆனால், முழுப்படமாக அதை வெற்றிகரமாகக் கொண்டுவரமுடியவில்லை.

ஏஆர் ரகுமான் தனது எல்லாப் படங்களையும் விட இதில் மிகவும் சிறப்பாய்ப் பண்ணியிருக்கிறார். இளையர்களை படத்தை நோக்கிவரச்செய்ததில் முக்கியப்பங்கு அவருக்கு இருக்கிறது. ஆனால், கதையின் காலத்திற்கும் பின்னணிக்கும் வரவேண்டிய வாத்தியங்கள் வந்திருக்கின்றனவா என்று கேட்டால், இல்லை என்று தான் சொல்வேன்.

இரு நடிகர்கள் நடிக்கும் காட்சி. அக்காட்சி மட்டும் மனதில் தங்கியிருந்தால் இருவரும் நன்றாய் நடித்தார்கள் என்றோ, ஒளிப்பதிவு நேர்த்தியாய் கண்ணுக்குள் 
சொருகிக்கொண்டது என்றோ சொல்லிவிடலாம். ஆனால், நாடகம் சம்பந்தப்பட்ட ஒரு படத்திற்கு வசனம் எவ்வளவு முக்கியம். நாடகக்காரர்கள் வெளிப்பேச்சிலும் அப்படியே அல்லவா பேசிக்கொள்வார்கள். குறிப்பாய் நாசர் பேசும் காட்சிகளின் வசனம் வெகு இயல்பாய் நறுக்கென்று இருந்தது. சித்தார்த்–ப்ருத்விராஜ் பேசும்காட்சிகளில் இன்னும் மேம்பட்டிருக்கலாம்.

தான் அமர்ந்திருக்கும் இடத்தை மறந்துவிட்டு இன்னொரு உலகத்திற்குள் கொண்டுசெல்வதுதான் இலக்கியம் அல்லது கலை. அங்காடித்தெருவில் ஒருமிகைக்காட்சி. ஏழ்மையின் பரிதாபத்தைக் காண்பிக்க, டாகுமெண்டரி படங்களைப்போல பிச்சைக்காரர்களை மட்டும் காட்டிச்சென்றீர்கள். ஒரு உலகத்திலிருந்து இன்னொரு உலகத்திற்கு மாறுவதைப்போல உணர்வுக்காய் மாறும் காட்சி இயல்பில் தோற்றுவிடுகிறது.

அதே தவறு காவியத்தலைவனிலும். காளி சுதந்திரப்போராட்டத்திற்காய் பாடுபடும் இடங்களுக்கிடையில் காந்தியின் வீடியோ வருகிறது. இது நேர்த்தியா?  தயவுசெய்து இதுபற்றி பரிசீலனை செய்யுங்கள்.

கடைசிக்காட்சியும் அதுபோலவே, கோமதி, காளியின் அஸ்தியைக்கரைக்க கங்கைக்கரையில் நிற்பதாய் வரும் காட்சி இன்று நடப்பதுபோல அதிக வெளிச்சத்தில், புதியதாய் வந்து நிற்கிறது. கதையின் படி ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன்னால் வரும் ஒரு காட்சி.

யார் குழந்தையை சுமக்கவேண்டும் என்பதை நான் தான் முடிவுசெய்யவேண்டும் என்ற அழகிய பெண்ணியல் சார்ந்த சிந்தனையும் அதைத் தக்கவைத்துக்கொள்ள தொடர்ந்துசெல்லவிருக்கும் எல்லையற்ற போராட்டங்களுக்குத்தயாராய் ஒரு பெண்ணின் கதை அழகாய் நிறுத்தப்படுகிறது.

யாருக்கும் யாரும் புத்தி சொல்லமுடியாது. இதுதான் வெற்றிக்கான ஃபார்முலா என்று எழுதமுடியாது. குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கும் ஒரு திரைப்படத்தைத் தரும் தொடர்ந்த உங்களது முயற்சி ஆசீர்வதிக்கப்பட்டது.

வெற்றியின் சூத்திரம் அறிந்துகொள்ள முயற்சிக்கும் வேகம் ஒருபுறம், ஒரு சாதாரண முயற்சியாய் இருந்துவிடக்கூடாதே என்கிற அக்கறை மறுபுறம். இரண்டும் கலந்து உங்களை ஆட்டிவைத்துக்கொண்டே இருக்கின்றன. இன்னும் சில முயற்சிகளில் இரண்டும் இணையும் அந்த இடம் உங்களுக்கு பிடிபட்டே தீரும். வாழ்த்துகள்.


எம்.கே.குமார்

Friday, October 03, 2014

அதிகம் அறியப்படாத அரசியல் கொலை - லால்பகதூர் சாஸ்திரி

லால் பகதூர் சாஸ்திரி, பாகிஸ்தான், ரஷ்யா அதிகாரிகளுடன்,  இறப்பதற்கு சில மணித்துளிகள்முன்.

***
அக்டோபர் 2 ல் பிறந்த முக்கிய ஆளுமைகளுல் இன்னொருவர் லால்பகதூர் சாஸ்திரி. காந்தியின் சத்திய சீடர்களுல் ஒருவர். இந்தியாவின் இரண்டாம் பிரதமர்.

1965ல் இந்தியா-பாகிஸ்தான் போரில் இந்தியா முன்னேறியதற்கு காரணம் சாஸ்திரிதான். அப்போரை ஒரு நிறுத்தம் நோக்கி கொண்டுவர இந்தியாவையும் பாகிஸ்தானையும் ரஷ்யா அழைத்திருந்தது.

ரஷ்யாவிற்குச் சென்ற சாஸ்திரி பிணமாக வந்தார். ஹார்ட் அட்டாக் என்று இன்றுவரை கூவிக்கொண்டிருக்கின்றன அனைத்து அரசாங்கங்களும். ஆனால் நடந்தென்ன?

  1. ரஷ்யாவிற்குச் செல்லும் முன் சாஸ்திரிக்கு உடல்நலத்தில் எந்தப்பிரச்சனையுமில்லை.
  2. இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் கையெழுத்துவிட்டு இரவு ஓய்வுக்குச் செல்கிறார். இரவு 10 மணிக்கு அறைக்கு வருகிறார்.
  3. இந்தியத்தூதர் டி.என்.கவுல் வீட்டிலிருந்து அவரது சமையற்காரர் ஜான் முகமது சமைத்த உணவு வருகிறது. கொஞ்சம் போல சாப்பிடுகிறார்.
  4. படுக்கையிலிருந்து மகளுக்கு போன் செய்து ’பாலருந்திவிட்டு தூங்கப்போகிறேன் அம்மா’, என்கிறார்.
  5. 1.20 மணிக்கு நெஞ்சு வலிப்பதாக தனது உதவியாளர் ஜகன்நாத் இருக்கும் அறைக்கதவைத்தட்டி தண்ணீர் கேட்கிறார். தண்ணீர் குடித்துவிட்டு படுக்கையில் அமரும்போதே மூர்ச்சையற்று விடுகிறார். சிறிது நேரத்தில் மரணம். அருகில் தெர்மோபிளாஸ்க் உருண்டு கிடைக்கிறது.
  6. அடுத்த பதினைந்து நிமிடங்களில் அவர் இறந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
  7. அவரது உடல் போஸ்ட்-மார்ட்டம் செய்யப்படவேயில்லை. இந்தியா-ரஷ்யா என இரு அரசாங்கங்களும் இதற்கு ஆர்வம் காட்டவில்லை
  8. உடல் நீல நிறத்திலும் ஆங்காங்கு காயங்கள் இருந்ததாகவும் அவரது மனைவி சொல்லியிருக்கிறார்.
  9. 1970, அக்டோபர் 2, தனது கணவர் மரணம் தொடர்பாக நீதி விசாரணை கேட்கிறார் திருமதி சாஸ்திரி.
  10. இவரது மரணம் பற்றி இந்திய அரசு அதற்கு மேல் எந்த அக்கறையையும் காட்டவில்லை, பெயருக்கென்று ஒரு விசாரணைக் கமிஷனை அமைத்தது. ராஜ் நரைன் விசாரணைக்குழு.
  11. ராஜ் நரைன் விசாரணைக்குழுவின் ஒரு விசாரணை சம்பந்தப்பட்ட ஒரு தகவல் கூட இந்திய பாராளுமன்ற நூலகத்தில் இல்லை
  12. 2009ல் தகவல் அறியும் உரிமைச் சட்டம் வாயிலாக இது பற்றிக்கேட்டபோது, ஒரே ஒரு அறிக்கை மட்டுமே  உள்ளது. ஆனால் அது, நாட்டு இறையாண்மை சம்பந்தப்பட்டதால் வெளியிட முடியாது என்று பதில் அளித்துவிட்டது பிரதமர் அலுவலகம்.
  13. 1977ல், சாஸ்திரியின் மரணம் குறித்து அறிந்த இரண்டு பேரை விசாரணைக்கு அழைத்தது பராளுமன்ற கூட்டு சபை. ஒருவர் ஆர்.என்.சுஹா, சாஸ்திரியின் மருத்துவர். ரஷ்யாவில் அவருடன் இருந்தவர். விசாரணைக்கு டெல்லி நோக்கி வந்துகொண்டிருந்தபோது ட்ர்க் லோரியால் மோதப்பட்டு சாலையில் மரணம் அடைந்தார். இது தற்செயலா?
  14. இன்னொருவர், ராம்நாத். சாஸ்திரியின் வேலைக்காரர். ரஷ்யாவில் உடன் இருந்தவர். “இதுவரை மனதை வதைத்துக் கொண்டிருந்ததையெல்லாம் இன்று சொல்லிவிடுகிறேன் அம்மா”, என்று சாஸ்திரியின் மனைவியிடம் சொல்லிவிட்டு, பார்லிமெண்டுக்கு நடந்து வந்தவரை இன்னொரு லோரி அடித்து கால்களை இழந்து நினைவையும் இழந்ததார். இதுவும் தற்செயலானதாய் இருக்கமுடியுமா?

எம்.கே.குமார்

Thursday, October 02, 2014

இன்று நினைவுக்கு வந்த காந்தி



இன்று நினைவுக்கு வந்த காந்தி
எனக்கருகில் இருந்தார்.
இப்படியே இருந்துவிடுங்கள் அய்யா.


எம்.கே.குமார்

****
பாஸிவ் ரெஸிஸ்டென்ஸ் (Passive resistance) என்று முதலில் சொல்லிப்பார்த்திருக்கிறார். ‘சாத்வீக எதிர்ப்பு’ என்ற பொருள் தரும் அது, பலவீனங்களின் ஆயுதமாகவும், பகைமைக்கு இடம் தருவதாகவும், பின்னர் பலாத்காரமாக மாறிவிடவும் வாய்ப்புண்டு என்று காந்தி உணர்ந்தார். அதற்கொரு சொல் தேடினார். ‘இந்தியன் ஒப்பீனியன்’ பத்திரிகை மூலம் போட்டியைக்கூட அறிவித்தார். மகன்லால், சதாக்கிரகம் (சத்+ஆக்கிரகம்) என்ற சொல்லைப் பரிந்துரைத்துப் பரிசு வென்றார். இந்தச் சொல்லை மேலும் தெளிவாக்கி, சத்தியாக்கிரகம் என்று காந்தி மாற்றினார். வாழ்நாள் முழுவதும் அதையே பயன்படுத்தினார். இதை சத்திய சோதனையில் விவரித்துள்ளார்.

கடவுளைத் தவிர்த்து, மனசாட்சியின் பேரால் அரசாங்க உறுதிமொழிகள் அமையும் நடை முறைக்குக் காரணமானவர் சார்லஸ் பிராட்லா (1833-1891). இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந் தெடுக்கப்பட்ட அவர், ‘கடவுள் பேரால்’ உறுதி மொழி ஏற்க மறுத்துவிட்டார். நாடாளுமன்ற விதி, உறுதி ஏற்காமல் அவரை அவையில் அமர அனுமதிக்கவில்லை. அவரும் உறுதியாக நின்றார். தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. மறபடியும் நின்றார். மறுபடியும் மறுத்தார். இப்படி மூன்றுமுறை நடந்த பிறகு வேறு வழியில்லாமல் நாடாளுமன்றச் சட்டத்தைத் திருத்தி அவரை உறுப்பினராக்கிக்கொண்டது அரசு. மனசாட்சி முறை இப்படித்தான் உலகத்தில் தொடங்கியது. பெர்னார்ட்ஷா உட்பட பலர் பிராட்லாவின் பக்கம் நின்றனர். 1891-ல் காலமான பிராட்லாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட 3,000 பேரில் நம்முடைய 22 வயது காந்தியும் ஒருவர்.

ன்று தமிழ் இந்துவில் வெளிவந்த பழ.அதியமான் எழுதிய கட்டுரையில் என்னைக் கவர்ந்த சில செய்திகள்.











Monday, September 22, 2014

காலச்சுவடு கட்டுரையை முன்வைத்து- அரவாணிகள் பற்றிய கடிதம்

பாலியல் அரசியலின் கோமாளித்தனத்தை அனிருத்தன் வாசுதேவன் அவர்களின் கட்டுரை வேட்டையாடி விளையாடியிருக்கிறது.

ஓரின, ஈரின ஈர்ப்புடையோர் மற்றும் அரவாணிகள் பற்றிய உண்மைக்குப் புறம்பான அல்லது ஆரோக்கியமற்ற ஊடகங்களது சித்தரிப்புகள், அறியத்தராத ஒரு அவலநிலையை அல்லது அடிமை நிலையை அவர்களின்பால் ஏற்றிக்கொண்டேயிருக்கும் என்பதை ஊடக ராஜகன்னியான திரையகம் சார்ந்து சொல்லி இவர் வேட்டையாடியிருப்பது வரவேற்கத்தக்கது ஆகும்.

அதே ஊடகங்களில் தொன்றுதொட்டு வந்துகொண்டிருக்கும் இதுவரையான அக்கேடுகளை அறியத்தராமல் அல்லது தொட்டுணர்த்தாமல் நேற்றிலிருந்து இது புகுந்திருப்பதைப்போல இவர் 'வேட்டையாடு விளையாட்'டிலிருந்து உரைத்து வெறுமனே விளையாடியிருப்பது சிந்திக்கவேண்டியது ஆகும்.

அரவாணிகளை ஒரு நலிந்த இனமாக வெறுமனே கிளுகிளுப்பூட்ட அல்லது நகைப்பூட்ட ஏதுவாய் திரையுலகத்தினர் மேற்கொண்ட உத்திகள் நேற்று இன்று பிறந்தவை அல்ல. பாடலின் நடுவில் வந்து கதாநாயகர்களைக் கிண்டல் பண்ணிச்செல்வதிலும் பெண்புணர்த்தலில் தீராத வேட்கைகொள்ளும் ஒருவனை அரவாணியக்கொண்டு திகைக்கவைப்பதிலும் என திரை நுகர்வோருக்கு செறிவற்ற தன்மைகொண்டு வெறுமனே களிப்பூட்ட மட்டும் இத்தகு அரவாணிக் கொள்கைகளை நெடுங்காலமாய் திரையுலகம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. சமூக, கல்வி, பொருளாதார, அரசியல்துறைகளில் மேம்பட்ட நிலையை நோக்கி அவர்கள் நகரும் வேளையிலும் அக்கூறுகளையே அடிப்படையாகக்கொண்டு அது இன்றும் கேலி பேசியபடியே இருக்கிறது. பெண்ணிய, தலித்திய மற்றும் அங்கஹீனத் தாழ்மைகளை அகற்ற புரட்சியும் விடுதலையும் பேசிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் பிறப்பு சார்ந்த, பொருளாதாரம் சார்ந்த வாழ்வியல் அங்கங்களை அடிப்படையாகக் கொண்ட இவைகளின் மூலம் அது நகைப்பூட்ட முற்படுவது அநாகரிகமே அன்றி வேறல்ல!

நல்ல கலைஞரின்(கமல்), நல்ல கலைநய காட்சி அமைப்பு இயக்குனரின்(கௌதம்) வேட்டையாடு விளையாடு சார்ந்ததாய் மட்டுமே இவரால் இதைப்பார்க்க முடிந்திருக்கிறது. கமலும் கௌதமும் செய்தால் மட்டுமல்ல; யார் செய்தாலும் இது வருத்ததிற்குரியதே. இதே காலகட்டத்து திரைப்படைப்பான 'சில்லுன்னு ஒரு காதலி'ல் கூட ஆரோக்கியமற்ற வெறும் கிளுகிளுப்பூட்ட கலக்கப்பட்ட காட்சியாகவே இது பரிணமித்திருக்கிறது.

தேவையற்றவைகளைக் கொண்டிருக்கும் ஒன்று முழுமையான கலைப்படைப்பாகாது என்றும் இத்திரைப்படத்திற்கு ஓரின உறவைச்சொல்லும் காட்சிகள் அவசியமற்றது என்பதையும் முன்மொழிந்திருக்கும் இக்கட்டுரையை வரவேற்கிறேன். ஆனால் கமல்-ஜோதிகா உறவு, உரிமையாளர்-சொத்து என்றாவதை இவர் சுட்டிக்காட்டுவது இங்கு அவசியமற்றது. அது எளிதில் மாற்றியிருக்ககூடிய வசனத்தின் வெளிப்பாடேயன்றி அதை பொருட்கொள்ளுதல் தகாது. இப்படிச் சுட்டிக்காட்ட முயன்றால் ஒட்டுமொத்த தமிழ்த் திரையையும் இவர் சாடவேண்டியிருக்கும். தவறான வசனம் வேறு; அவசியமற்ற காட்சி வேறு!

கலைப்படைப்பிற்கு மட்டுமின்றி வெறும் 'களிப்புதரும்' படைப்பிற்கும் கூட இத்தகு வலிமையற்ற இனங்களின் வாழ்க்கையை அவலமாக்குதல் அவசியமன்று. ஆண்கள் பெண்கள் மட்டுமின்றி அரவாணிகளுக்கும் தார்மீக வாழ்க்கை நெறிகள் உள்ளன. எனவே இப்போதையத் தேவை அரவாணிகளை நோக்கிய ஒரு முழுமையான புரிந்துகொள்ளல் மற்றும் கூடி வாழுதல் சார்ந்த ஒரு அறம்! இதைக் கேலிக்குள்ளாக்கும் படைப்பு திரைப்படைப்பு மட்டுமின்றி எப்படைப்பாயினும் கண்டிக்கப்படவேண்டியது ஆகும்.

கூத்தாண்டவர் கோயில் திருவிழாவின் போது நிறையப்பேருந்துகள் விடுவதும் அதனைச்சுற்றி விடுதிகள்/கழிப்பறைகள் கட்டுவதும், அழகுப்போட்டி மற்றும் பட்டிமன்றங்கள் வைப்பதும் அல்லது விழுப்புரத்தில் வியாபாரஸ்தலத்தை உருவாக்குவதும் போன்ற காரியங்களைத் தாண்டி உண்மையான உணர்வுகளைக் கொண்டு இவர்களை யாவரும் அணுகுவது நலம்.

உடற்குறையுள்ளவர்களை யார் கேலி செய்தாலும் அது தவறுதான்; தலித்துகளை யார் சாதிசொல்லி திட்டினாலும் தண்டனை உண்டு; பெண்களின் பால் எத்தகு வரம்புமீறலெனினும் குற்றமே; மிருகங்களை எப்படித் துன்புறுத்தினும் மிருகவதைச் சங்கம் கேட்கும் என்பதைப்போல இதற்கும் தகுந்த சமூக அறிவுறுத்தல்களும் அரசியலைப்புகளும் உடனடி அவசரத் தேவை.

எம்.கே.குமார்.
சிங்கப்பூர்

http://www.kalachuvadu.com/issue-83/letters.asp
நன்றி: காலச்சுவடு

சிங்கப்பூர் பெண்கவிஞர்களின் கவிதைத்தொகுப்பு

நண்பர்களே, சிங்கப்பூர் வாசகர் வட்டம் புதுப்பொலிவுடன் பல்வேறு இலக்கிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதை அறிந்திருப்பீர்கள்.

அந்த வகையில், சிங்கப்பூர்ப் பெண்படைப்பாளர்களை ஊக்குவிக்கும்பொருட்டும் சிங்கப்பூர்த் தமிழ்க்கவிதைப் பரப்பினை உலகுக்கு அறிமுகப்படுத்தும் பொருட்டும் சிங்கப்பூர் பெண்கவிஞர்களின் கவிதைத்தொகுப்பு ஒன்றை வாசகர் வட்டம் வெளியிட இருக்கிறது. முழுக்க முழுக்க பெண் கவிஞர்களின் படைப்புகளைக் கொண்ட இத்தொகுப்பில் 15 பெண்கவிஞர்கள் பங்குபெறுவார்கள். பாடுபொருள் எதுவேண்டுமானாலும் இருக்கலாம். குறைந்தது ஐந்து முதல் 10 பக்கங்களுக்கு ஒவ்வொரு கவிஞர்களின் கவிதைகளும், அவர்களைப்பற்றிய சிறு குறிப்புடன் தொகுப்பில் இடம்பெறும். புதியதாகவோ, நாளிதழ், வார, இணைய இதழ்களிலோ வெளியானதாக இருக்கலாம், ஏற்கனவே புத்தகமாக பிரசுரிக்கப்பட்ட படைப்புகளைத் தவிர்க்கவும்.
பெண் கவிஞர்கள் தங்கள் படைப்புகளை 
singaporepoet@gmail.com என்ற இணையமுகவரிக்கு வரும் 30 செப்டம்பர் தேதிக்குள் அனுப்பவேண்டுகிறோம். தொகுப்பாசிரியரால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் மட்டுமே பிரசுரிக்கப்படும்.
அன்புடன்
எம்.கே
வாசகர் வட்டம் சார்பாக.
  

Monday, June 23, 2014

பெண் எழுத்தாளர்களின் கூட்டறிக்கை – ஒரு பார்வை

ஜெயமோகனுக்கு எதிரான பெண் எழுத்தாளர்களின் கூட்டறிக்கையை வாசித்தேன். (ஜெயமோகனுக்கு எதிரான என்றுதான் சொல்லவேண்டும். ஜெயமோகனின் கருத்துக்கு எதிர்வினையாற்றிய என்று சொல்வது பெரிய அபத்தமாய் இருக்கும்.) சேற்றில் கல் எறியக்கூடாது என்பது ஜெயமோகனுக்கு இப்போது தெரிந்திருக்கும். பெயரிடப்பட்ட படைப்பாளிகளில் சிலர் எனது முகநூலிலும் நண்பர்கள் என்பதைப் பார்த்தபோது அதிர்ச்சியாய் இருந்தது.

பெண் எழுத்தார்களே, ஜெயமோகன் எந்தவொரு பெண்ணையும் இதன்மூலம் அவமானப்படுத்தவில்லை. அவர்களின் இலக்கியப்பங்களிப்பும் அதன் மூலம் மட்டுமே உருவானதாகச் சொல்லப்படும் அவர்களின்  அங்கீகாரங்களையும் யோசிக்கச்சொல்கிறார். இலகுவாகக் கொள்ளப்படும் புதுக்கவிதை வடிவங்களைத் தாண்டி வேறொரு இலக்கியத்தளத்தில் அவர்களின் படைப்புகள் என்ன என்கிறார்.

இத்தகைய ஒரு படைப்பு/விமர்சன இயங்கு தளத்தில் உரையாற்றத் திராணியற்றவர்களாக, கவிதை மொழிக்குப் பயன்படுத்தும் அதே மொழியைக் கொண்டு (இதைக் கூட கவனிக்க இயலாத மொழிவளம் கொண்ட(?) படைப்பாளிகள்!) ஒரு கூட்டறிக்கை என்ற பெயரில் பெண்ணியத்தை அவமானப்படுத்தும் ஜெயமோகனை அவமானப்படுத்தும் போலிபாசாங்கில் அல்லது புரிந்துகொள்ள இயலாத பின்புத்தியில், அவர்களை அவர்களே அவமானப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றே இந்த அறிக்கையின் மூலம் எனக்குத் தோன்றுகிறது.

நிறையப் பெண்கள் எழுதவேண்டும். சமகால இலக்கிய உலகில் அவர்கள் இன்னும் ஆழமாகவும் அகலாமகவும் வேறூன்ற அவர்களை அவர்களே சோதனைசெய்துகொள்வது ஒன்றே பொருத்தமானதாக இருக்கும். அதை நோக்கிய முன் உந்துதலாகவே ஜெயமோகன் செய்தார். ஆனால் நடந்திருப்பது வேறு. இது அவர்களின் மிக மோசமான இன்னும் சொல்லப்போனால் அரைவேக்காட்டுத்தனமான புறப்பாடாகவே அல்லது உளறல்களாக இதை நான் பார்க்கிறேன்.

இந்த கூட்டறிக்கையின் மூலம் இரண்டு விஷயங்கள் தமிழ் கூறும் நல்லுலகத்திற்குக் கிடைத்திருக்கின்றன

ஒன்று தமிழில் எழுதும் பெண்கள் என்று நிறையப்பேர் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. பல பெயர்களை முகநூலில் மட்டுமே பார்த்திருக்கிறேன். (இதில் முக்காலெ மூணு வீசம் கவிஞர்களே!)

இரண்டு, யாருமே ஜெயமோகனைப் படித்ததில்லை. அவருடைய படைப்புத்திறனிலும் படைப்புகளின் தரத்தையும் உள்வாங்கிக் கொள்ளவேயில்லை. கூட்டறிக்கையில் பெயரிட்ட அத்தனை பேரில் ஒரே ஒருவர், அவருடைய படைப்புகளில் பெண்களில் நிலையை அல்லது நிஜத்தில் பெண்சார்ந்த அவரது நடவடிக்கைகளில் ஒரு சிறுபகுதியையேனும் அலசி ஆராய்ந்திருந்தால் கூட இப்படிப்பட்ட ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கமாட்டார்கள்.

அண்மையில் சிங்கப்பூர் வந்திருந்த பெருமாள் முருகனிடம் இதுசம்பந்தமாக ஒரு கேள்வியை முன்வைத்தபோது ’யாருடைய இடத்தையும் பிடுங்கிக்கொள்ளாமல் அவர்களே முன்னுக்குச் சென்றால் அல்லது முன்னிறுத்தப்பட்டால் இருக்கட்டுமே’ என்றும், ’இப்பொழுதுதான் பெண்கள் எழுத வந்திருக்கிறார்கள், முழுமையாக வரட்டுமே, பிறகு தரம் பற்றிப்பேசுவோம்’ என்றும் சொன்னார். ஆக, தரம் என்னும் அடையாளப்படுத்தும் தளத்துக்குள், இப்போது முன்னிலைப்படுத்தப்பட்டவர்கள் வரவில்லையெனினும் அவர்களை வரவேற்போம் என்றாலும் இது சார்ந்த முன்னெடுப்புகளின் ஒரு பகுதிதான் அல்லது தரவுதான் இந்த விவாதம் என்றே நான் நினைக்கிறேன்.

ஜெயமோகன் அளவுக்கு பல தளங்களில் விரியும் இலக்கியப் படைப்புகளைக் கொண்ட உச்சங்களை பெண் எழுத்தாளர்கள் படைக்க இயலாது என அவர்களே முடிவுகட்டிக்கொண்டாலும் (அறிக்கையிலிருந்து அதுதான் தெரிகிறது!) பெண் உலகம் சார்ந்த சில அற்புதங்களை சிறந்த படைப்புகளை பெண் எழுத்தாளர்களே படைக்கமுடியும் என்பதை உறுதியாக நான் நம்புகிறேன்.

அதற்கு வேண்டிய உழைப்பும் மெனக்கெடலும் கொண்ட பெண் எழுத்தாளர்களை வரவேற்போம், வாழ்த்துவோம்; வெறுமனே அறிக்கை என்ற பெயரில் தங்களைத் தாங்களே கொச்சைப்படுத்தும் பெண் எழுத்தார்களையல்ல.


எம்.கே.குமார்

சிங்கப்பூர்

பிகு. சாரு நிவேதிதாவின் இந்த அறிக்கை குறித்தான பதிவையும் படிக்கவும்.

Search This Blog