Thursday, December 04, 2014

வசந்த பாலனுக்கு ஒரு கடிதம்..


அன்புள்ள அண்ணன் வசந்தபாலன் அவர்களுக்கு,

தாங்கள் இதுவரை இயக்கிய நான்கு படங்களுக்கும் ரசிகன் நான். அரவான் பார்த்துவிட்டு என்னுடைய வலைப்பதிவில் விமர்சனம் எழுதியிருந்தேன். விமர்சனத்திற்குப் பதில் இக்கடிதத்தை எழுதியிருக்கவேண்டுமோ என இப்போது நினைக்கிறேன்.

தாங்கள் இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும். இயக்குனர் ஷங்கரின் ஆஸ்தான சீடர்களுல் ஒருவர் என்பதும் உங்களது இரண்டாவது படத்தை அவரே தயாரித்தார் என்பதும்  அவரே உங்களது குரு என்பதும் எல்லோருக்கும் தெரியும்.

திரைப்பட இயக்கம் என்பது போராட்டமும், வலியும் வேதனையும், ஏமாற்றமும், நிறைந்தது என இப்போதெல்லாம் சாதாரண பார்வையாளராகிய நாங்களும்  இப்போதெல்லாம் அறிந்திருக்கிறோம்.

அதிலும் தன் இலட்சிய வாழ்வின் முதற்படியாய் எதன் பொருட்டு சில பல வருடங்களாக உணவு, உறக்கம், இளமை, குடும்பம் முதலியவற்றையெல்லாம் இழந்து கடலில் போராடி கரைதட்டி காலை ஊன்றி நிற்கும் நிலைக்கு ஒப்ப வெளியாகும் ஒரு இயக்குனரின் முதல்படம் எப்படி மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதும் ஒரு இயக்குநருடைய வாழ்வை அது எபப்டியெல்லாம்  தீர்மானிக்கும் என்பதும் உணரத்தக்கதே.

அந்த வகையில் உங்களுக்கு, உங்களது கடின உழைப்புக்கு, உங்களது முதற்படம் நன்றாயிருந்தாலும் கூட, எனக்கும் பிடித்திருந்தது என்றாலும் கூட, மாபெரும் தோல்வி அடைந்தததும் அதற்குப்பிறகு ஏறக்குறைய பத்து வருடங்கள் நீங்கள் பட்ட அவமானங்களும் துயரங்களும் வார்த்தைகளில் அடங்காதது. கடின உழைப்பும் முயற்சியும் கொடுத்தபின்பும் காரணமே இல்லாது ஏற்படும் தோல்வி ஏற்படுத்தும் வலி சொல்லித்தெரியக்கூடியதல்ல.

மேலேறி வந்தீர்கள். ’வெயில்’ என்றொரு படம் கொடுத்தீர்கள். வாழ்வு கொடுக்கும் வெற்றி தோல்விகளின் சதுரங்க ஆட்டங்களை அழகாய் முன்வைத்தீர்கள். இன்றுவரை அப்படத்தின் தாக்கம் என் மனதுக்குள்ளே இருக்கிறது. ஒரு சராசரி பார்வையாளனாய்க் கூட, உருகுதே மருகுதே பாடலின் கடைசிக்காட்சியில் ஃபில்ம் சுருள் கருகி உருகும் காட்சி ஒரு தீராத வேதனையைக் கவிதையாய்க் காட்சிப்படுத்திச் சென்றிருக்கிறது.

’அங்காடித்தெரு’விற்கு வந்தீர்கள். சொல்லப்படாத கதைக்களம். யாரும் தொடத்தயங்கும் முயற்சி. வெற்றி பெற்றீர்கள். அத்தளத்தில் பணியாற்றும் இலட்சக்கணக்கான தொழிலாளர்களில் ஒருவருக்காவது அதன் மூலம் ஒரு பரிவோ பாசமோ மதிப்போ மரியாதையோ கிடைத்திருந்தால் கூட படம் வெற்றிதான். கண்டிப்பாய் கிடைத்திருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். நானும் ஒரு சராசரி ரசிகனாக அத்தகையவற்றிற்கு முயற்சி செய்திருக்கிறேன்.

அடுத்ததாய் ’அரவான்’ என்றொரு படம். என்னைப்பொறுத்தவரைக்கும் மிக முக்கியமான முயற்சி. கடினமான உழைப்பைத் தந்து உருவாக்கிய படம். அப்படத்தில் நடிகர்கள் அணியும் வேட்டி செய்யும் முறையைப்பற்றி படித்தபோதே திரைப்பட இயக்குனரின் வேலைகள் பற்றி ஆச்சரியம் அடைந்தேன். அது வெற்றிபெற்றிருக்கவேண்டிய படம். அதில் என்ன குறை என்பதை சினிமாவில் இயக்குநராக முயற்சிக்கும் ஒவ்வொருவரும் விவாதிக்கவேண்டும்.

இப்போது ’காவியத்தலைவன்’. படத்தைப்பற்றி எனது பார்வையில் எனது பின்னூட்டத்தில் இப்படிச்சொல்லியிருந்தேன். ஒரு நாவலைப்போல பல்வேறு தளங்களில் இப்படம் விரிகிறது என்று. அதுதான் உண்மை. காட்சியமைப்பிலும், திரைக்கதையிலும் அதைக் குறையின்றி செய்யமுடிந்தது உங்களால். ஆனால், முழுப்படமாக அதை வெற்றிகரமாகக் கொண்டுவரமுடியவில்லை.

ஏஆர் ரகுமான் தனது எல்லாப் படங்களையும் விட இதில் மிகவும் சிறப்பாய்ப் பண்ணியிருக்கிறார். இளையர்களை படத்தை நோக்கிவரச்செய்ததில் முக்கியப்பங்கு அவருக்கு இருக்கிறது. ஆனால், கதையின் காலத்திற்கும் பின்னணிக்கும் வரவேண்டிய வாத்தியங்கள் வந்திருக்கின்றனவா என்று கேட்டால், இல்லை என்று தான் சொல்வேன்.

இரு நடிகர்கள் நடிக்கும் காட்சி. அக்காட்சி மட்டும் மனதில் தங்கியிருந்தால் இருவரும் நன்றாய் நடித்தார்கள் என்றோ, ஒளிப்பதிவு நேர்த்தியாய் கண்ணுக்குள் 
சொருகிக்கொண்டது என்றோ சொல்லிவிடலாம். ஆனால், நாடகம் சம்பந்தப்பட்ட ஒரு படத்திற்கு வசனம் எவ்வளவு முக்கியம். நாடகக்காரர்கள் வெளிப்பேச்சிலும் அப்படியே அல்லவா பேசிக்கொள்வார்கள். குறிப்பாய் நாசர் பேசும் காட்சிகளின் வசனம் வெகு இயல்பாய் நறுக்கென்று இருந்தது. சித்தார்த்–ப்ருத்விராஜ் பேசும்காட்சிகளில் இன்னும் மேம்பட்டிருக்கலாம்.

தான் அமர்ந்திருக்கும் இடத்தை மறந்துவிட்டு இன்னொரு உலகத்திற்குள் கொண்டுசெல்வதுதான் இலக்கியம் அல்லது கலை. அங்காடித்தெருவில் ஒருமிகைக்காட்சி. ஏழ்மையின் பரிதாபத்தைக் காண்பிக்க, டாகுமெண்டரி படங்களைப்போல பிச்சைக்காரர்களை மட்டும் காட்டிச்சென்றீர்கள். ஒரு உலகத்திலிருந்து இன்னொரு உலகத்திற்கு மாறுவதைப்போல உணர்வுக்காய் மாறும் காட்சி இயல்பில் தோற்றுவிடுகிறது.

அதே தவறு காவியத்தலைவனிலும். காளி சுதந்திரப்போராட்டத்திற்காய் பாடுபடும் இடங்களுக்கிடையில் காந்தியின் வீடியோ வருகிறது. இது நேர்த்தியா?  தயவுசெய்து இதுபற்றி பரிசீலனை செய்யுங்கள்.

கடைசிக்காட்சியும் அதுபோலவே, கோமதி, காளியின் அஸ்தியைக்கரைக்க கங்கைக்கரையில் நிற்பதாய் வரும் காட்சி இன்று நடப்பதுபோல அதிக வெளிச்சத்தில், புதியதாய் வந்து நிற்கிறது. கதையின் படி ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன்னால் வரும் ஒரு காட்சி.

யார் குழந்தையை சுமக்கவேண்டும் என்பதை நான் தான் முடிவுசெய்யவேண்டும் என்ற அழகிய பெண்ணியல் சார்ந்த சிந்தனையும் அதைத் தக்கவைத்துக்கொள்ள தொடர்ந்துசெல்லவிருக்கும் எல்லையற்ற போராட்டங்களுக்குத்தயாராய் ஒரு பெண்ணின் கதை அழகாய் நிறுத்தப்படுகிறது.

யாருக்கும் யாரும் புத்தி சொல்லமுடியாது. இதுதான் வெற்றிக்கான ஃபார்முலா என்று எழுதமுடியாது. குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கும் ஒரு திரைப்படத்தைத் தரும் தொடர்ந்த உங்களது முயற்சி ஆசீர்வதிக்கப்பட்டது.

வெற்றியின் சூத்திரம் அறிந்துகொள்ள முயற்சிக்கும் வேகம் ஒருபுறம், ஒரு சாதாரண முயற்சியாய் இருந்துவிடக்கூடாதே என்கிற அக்கறை மறுபுறம். இரண்டும் கலந்து உங்களை ஆட்டிவைத்துக்கொண்டே இருக்கின்றன. இன்னும் சில முயற்சிகளில் இரண்டும் இணையும் அந்த இடம் உங்களுக்கு பிடிபட்டே தீரும். வாழ்த்துகள்.


எம்.கே.குமார்

No comments:

Search This Blog