Sunday, December 26, 2004

ஒரு உயிரும் ஒரு பிளாக்கும்! (A Blog with A Soul!)

கடந்த வாரங்களில் ஒருநாள் சி·பி தளம், சமாச்சார் ஆகியவற்றின் ஆசிரியர் ஆர்.வெங்கடேஷ் சிங்கப்பூருக்கு வந்திருந்தார். இங்கு நடந்தஅவரது 'நேசமுடன்' புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துரையாடலும் இடம்பெற்றிருந்தது. (இதையெல்லாம் பற்றி எழுதியிருக்கிறேன் இதற்கு முந்தைய பதிவில்!) கலந்துரையாடலில் 'இணையம்' வந்து 'பிளாக்குகளில்' கலந்த போது, நான் எழுந்து அக்கேள்வியைக் கேட்டேன். 'ஆளாளுக்கு இப்படிப் பிளாக்குகளைப் பதிவுசெய்துகொண்டு எழுத ஆரம்பித்தால் இந்த பிளாக்குகளால் என்ன தான் பெரிதான நன்மை இருந்துவிடக்கூடும்? பிளாக்கு..பிளாக்குகள் பிளாக்குகளின் கூட்டம் இப்படியாய் இது தொடர்ந்தால் இதன் முடிவு என்னவாய் இருக்கும்? எழுதுகிற எல்லோரும் வருகிற எதிர்வினைகளைக் கண்டு (அடிப்படையான விவாதம்) கொள்ளாமல் இப்படியே எழுதிக்கொண்டு போவதின் முடிவுதான் என்ன?'

ஆர்.வெங்கடேஷ் என்ன பதில் சொன்னார் என்பது இருக்கட்டும். இக்கேள்விக்கு எனக்கு இவ்வளவு சீக்கிரத்தில் கடவுள், மனம் கசியும் படி பதிலைக்காட்டுவார் என்று நான் நினைக்கவேயில்லை. ஒருவரின் அந்தரங்கமான டயிரியை 'மேற்கோளாய்' காட்டி விடைளித்திருக்கிறார் அவர்.

சிங்கப்பூர் சீனப்பெண்மனி அவர். சிங்கப்பூரில் மாஸ்டர்ஸ் முடித்து டச்சுக்காரர் ஒருவரை மணந்து நெதர்லாண்ட்லில் வாசமாகிவிட்டார். இணையத்தில் அவ்வப்போது எழுதி வந்த 32 வயதான அவர், தன்னைப்பற்றி கொஞ்சம் ஏனோ எழுதவேண்டும் என்று தோன்ற, ஒரு 'பிளாக்' ஆரம்பித்து இதோ மொத்தம் 11 பதிவுகள். அதிலும் பத்து மட்டுமே அவருடையது. பதினோராவது பதிவை முடித்துவைக்க அவரால் முடியவில்லை.

மிகவும் அமைதியான முறையில் கடந்த வாரத்தில் மரணமடைந்து விட்டார். பத்தே பதிவுகள்! இன்று உலகம் முழுவதும் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்படுகிறது!
http://dyingis.blogspot.com/

டச்சு நாட்டுப்பிரஜையாகிவிட்ட அவர் தனது வேதனைகள் பற்றி 169 பக்கங்களில் புத்தகம் ஒன்றையும் எழுதி முடித்திருக்கிறார். அது இங்கே! http://www.gracechow.info/

அகால மரணமைடைந்த 'கிரேஸ் சோ' விற்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்!
சக வலைப்பதிவாளன்.

Monday, December 20, 2004

'மாலன்' மற்றும் 'இருவர்' -விழாக்கள்!

மாலன் மற்றும் வெங்கடேஷ் - புத்தக வெளியீட்டு விழாக்கள்.

இடம்: சிங்கப்பூர்.

முதல் நாள்: 13/12/2004 மாலனின் புத்தக வெளீயீடு.

கூட்டம் தொடங்க அரைமணித்துளிகள் இருந்த வேளையில் நான் உள்ளே நுழைந்தேன். எனக்கு சற்று முன்னால் சென்ற ஜெயந்தி சங்கரி அப்போது மாலனிடம் பேசிக்கொண்டிருந்தார். படியை விட்டுக் கீழே இறங்கும்போதே என்னைப் பார்த்துவிட்ட மாலன், இனிய புன்னகையோடு எனக்கு 'பதில் வணக்கம்' சொன்னார். அறிமுகப்படுத்திக்கொண்டேன்.

இளமையாக இருக்கிறார் மனிதர். இனிமையாகப் பேசுகிறார். அழகாக புன்னகைக்கிறார். பாரதியை மூச்சாகக் கொண்ட ஒரு மனிதருக்கு முன்னால் நாம் நிற்பதே ஒரு பெருமைதானே! நேற்றுத்தான் மின்வெளியில் பாரதி மணி மண்டபம் திறந்ததைப் பற்றிச்சொன்னார். இரண்டு நாட்கள் நடந்து முடிந்த இணைய மாநாடு பற்றியும் பேசினார். முக்கியமான ஒரு கேள்வியை அவரிடம் கேட்க வேண்டும் என்றிருந்தேன். என்ன கேள்வி என்பது தெரிந்தால் நீங்களும் கூட ஆர்வமாகிவிடுவீர்கள். அதற்குள் சாப்பாட்டு அயிட்டங்கள் (உளுந்துவடை, லட்டு, பெயர் தெரியாத கார அயிட்டம் ஒன்று, உப்புமா, சட்னி, கா·பி, டீ. இதுதான் மெனு. மு. மேத்தா வந்திருந்த பொழுது 'கேசரியும்' வைத்திருந்தார்கள். இப்போது இல்லை. தனிப்பட்ட முறையில் எனக்கு இதில் வருத்தம்!) மெதுவாக வர ஆரம்பித்திருக்க முதலில் வயிற்றுக்குணவு என்று அதனை நோக்கி நடந்தோம்.

சிங்கப்பூர் தமிழ்ச்சூழலின் அனைத்து பெரிய தலைகளும் தவறாமல் ஆஜராயிருந்தார்கள். மூத்த பத்திரிகை ஆசிரியரும் சிங்கப்பூர் தமிழ்ச்சூழலின் முக்கிய கர்த்தாக்களில் ஒருவரும் இந்தமாத 'காலச்சுவடி'ல் கவர் ஸ்டோரியாய் சிங்கப்பூரின் தமிழ் சார்ந்த சூழல் பற்றி பேட்டி காணப்பட்டிருப்பவருமான திரு.வை. திருநாவுக்கரசு அவர்கள், 'உத்தமம்' அமைப்பின் தலைவரும் இணைய மாநாட்டைத் தலைமையேற்று நடத்தியவருமான திரு. அருண் மகிழ்நன் (எவ்வளவு அருமையான பெயர்! இவரைப்பற்றி எப்போதாவது ஒரு தனிக்கட்டுரை வரைவேன் என்று தோன்றுகிறது!), 'ஒலி 96.8'ன் தலைவர் திரு. அழகிய பாண்டியன், தேசிய நூலகச் சேவைகளுக்கான தலைமைப்பொறுப்பு பொறுப்பு வகிக்கும் திருமதி. புஷ்பலதா, எழுத்தாளரும் வழக்கறிஞருமான திரு.உதுமான் கனி, எழுத்தாளரும் கலைஞர் எம்ஜிஆரின் முன்னிலையில் சீர்திருத்தத் திருமணம் செய்துகொண்டவரும் பாலச்சந்தரிடம் உதவியாளராய் இருந்தவரும் தற்போதைய தொழிலதிபருமாகிய மா.அன்பழகன், 'முரசு அஞ்சல்' நிறுவனர் முத்து நெடுமாறன் அவர்கள், தேசியப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியரான திரு. திண்ணப்பன், சிறந்த உள்ளூர் கவிஞரான திரு.க.து.மு இக்பால், கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ மற்றும் இன்னபிற எல்லா முக்கியத்தமிழர்களும் இலக்கிய ஆர்வலர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

"கங்கைக்கரைத் தோட்டம் ...கூட்டம்... கண்ணன் நடுவினிலே.." என்ற பாடல்தான் நினைவுக்கு வந்தது ஆர். வெங்கடேஷ் அவர்களைப் பார்த்தபோது. பிரபல இணைய மகளிரணி கூட்டம் கொஞ்ச நேரத்திற்கு அவரை மொய்த்திருந்தது. பத்ரி தன் மனைவியோடும் மகளோடும் ஆடைக்குறைப்போடும் வந்திருந்தார். எம்.கே.குமார் என்று அறிமுகப்படுத்திக்கொண்டவுடன் ஏனோ கொஞ்சம் பின் வாங்கியது போலிருந்தது. என்ன காரணமோ தெரியவில்லை.

ஒருவழியாக வெங்கடேஷ் அவ்வளையத்தை விட்டு வெளியே வந்தார். அறிமுகப்படுத்திக்கொண்டேன். ஈழநாதனும் சேர்ந்துகொண்டார். பேச்சு அவரது வலைக்குறிப்பு பக்கமாய்த் திரும்பியது. கமலைப் பற்றிய அவரது ஒரு பதிவுக்கு வந்திருந்த பின்னூட்டங்கள் பற்றிப்பேசினோம். பிறகு பத்ரியும் இணைந்துகொண்டார். இந்தியாவிலிருந்து புத்தகங்கள் தருவிப்பது பற்றி பேச்சு நிலவியது. முடிவாக எல்லோரும் அரங்கத்திற்குள் நுழைய ஆரம்பிக்க, அப்போதுதான் பார்த்தேன். ஜெயந்தி சங்கரியும் ரம்யா நாகேஸ்வரனும் வியாபாரத்தில் வெற்றிக்கொடி நாட்டிக்கொண்டிருந்தார்கள். 'சொல்லாத சொல்லும் சிறுகதைத் தொகுப்புகளும்' குறைந்த விலைக்கு விற்கப்பட்டன.

கூட்டம் ஆரம்பித்தது. கவிஞர் நெப்போலியன் (நானும் எனது கருப்புக்குதிரையும் கவிதைத் தொகுதியின் ஆசிரியர்.) நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். திருமதி புஷ்பலதா, திருவாளர்கள்.அருண் மகிழ்நன், அழகிய பாண்டியன், உதுமான் கனி, திண்ணப்பன், க.து.மு.இக்பால், ஆர்.வெங்கடேஷ் மற்றும் ஜெர்மனியிலிருந்து வந்திருந்த சுபாஷினி கனகசுந்தரம் ஆகியோர் 'வாழ்த்தியும் வாழ்த்தியும் வாழ்த்தியும்' (தட்டுறான், தட்டுறான், தட்டிக்கிட்டே இருக்குறான்னு எழுத்தாளர் பைரவன் சொல்றது மாதிரி படிச்சுக்குங்க!) பேசினார்கள். மாலனே அவ்வப்போது கொஞ்சம் வெட்கத்தில் குறுகிக்கொண்டிருந்தார். 'இரண்டாம் பாரதிதாசனே' என்றழைத்தார் திரு.இக்பால்.!

மரத்தடி நண்பர்கள் பலரையும் பார்க்கும் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஈழநாதன், அருள்குமரன், ஜெயந்தி, ரம்யா, மூர்த்தி (வேலைப்பணி காரணமாக தாமதமாக வந்து என்னுடன் சீக்கிரமாக கிளம்பி விட்டார்) , பத்ரி, நம்பி, (நிறைய பேச வேண்டும் என நினத்திருந்தேன். எழுந்து கிளம்பும்போதுதான் கவனித்தேன்.) வலைப்பூ நண்பர் அன்பு எல்லோரிடமும் பேச வாய்ப்புக் கிடைத்தது. கூட்டத்தை திறம்பட முன்னின்று நடத்திக்கொண்டிருந்த திருமதி. ரமா சங்கரன் அவர்களுக்கு என்னிடம் பேச நேரமில்லை. என்னையும் தெரியவில்லை.

எல்லாவற்றிற்கும் அடிப்படையான 'நேரம்' சீக்கிரம் நழுவிக்கொண்டிருக்க, மாலனின் ஏற்புரை தாமதமாகவே, நான் இரவுப்பணி செல்ல வேண்டி இருந்ததால் 2035க்கு கிளம்பி விட்டேன். மாலனின் உரையை நான் இழப்பது ஒரு பக்கம் வேதனையாய் இருந்தாலும் அந்நேரத்தில் கிளம்பியுமே கடைசியில் டாக்ஸி பிடிக்க வேண்டி வந்துவிட்டது. இவையெல்லாம் போக அவரிடம் நான் கேட்கவேண்டிய கேள்வியையும் கேட்க முடியவில்லையே என்ற வருத்தம் வேறு மண்டைக்குள் குடைந்துகொண்டேயிருந்தது.

அதனால் என்ன? இப்போது கேட்டு விடுகிறேன், கேள்வி இதுதான். 'விருமாண்டிக்கு தூக்கு தண்டனை ரத்தாகி விட்டதா சார்?'

இதுபோன்ற ஒவ்வொரு கூட்டத்தில் நான் கலந்துகொள்ளும் போதும் ஏதோ ஒரு வெற்றிடம் எங்கோ நிரப்பப்படுவது போலத்தான் இருக்கிறது. அது வயிறாகக் கூட இருக்கலாம்.!

*******************
ஆர்.வெங்கடேஷ் அவர்களின் புத்தக வெளியீடு.

நாள்:14/12/2004

நானும் நண்பர் மானஸசென்னும் அம்மோக்கியோ நூலக அரங்கத்திற்குள் நுழைந்த நேரம் ஏறக்குறைய சிற்றுண்டி அயிட்டங்கள் தீர்ந்திருந்தன. இம்மாதிரிக் கூட்டங்களுக்கு இதுக்காகவேணும் இனிமேல் முதலிலேயே செல்லவேண்டும் என்பதை உணர்ந்துகொண்டு கண்ணில் தெரிந்த எல்லா நண்பர்களையும் நலம் விசாரித்துக்கொண்டிருந்தேன். நேற்று மாலன் புத்தக வெளியீட்டு விழாவில் என்னைப்பார்த்திருந்த 'இன்றைய விழா நாயகர்' ஆர். வெங்கடேஷ், 'வாங்க குமார்' என்று பெயரைச் சொல்லி அழைத்தார். சிங்கப்பூரின் சில பெரிய தலைகளும் பெரிய கவிஞர்களுமாய் களை கட்டியிருந்த கூட்டம் 'நேசமுடன்' புத்தகம் வாங்குதலிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தது.

வழக்கம் போல புத்தக விற்பனைப் பிரிவை மகளிர் அணி கைப்பற்றிக்கொண்டது. ஜெயந்தி சங்கரியும் ரம்யா நாகேஸ்வரனும் காரியத்தில் கண்ணாயிருந்தார்கள்; காசாயிருந்தார்கள்.

கூட்டம் ஆரம்பிக்க, மேடையில் இருந்தவர்கள் திருவாளர்கள் முத்து நெடுமாறன், உதுமான் கனி மற்றும் சிங்கப்பூர் வசந்தம் சென்ட்ரல் தொலைக்காட்சி தலைவர் முகமது அலி ஆகியோர். புத்தகத்தை முத்து நெடுமாறன் வெளியிட முகமது அலி பெற்றுக்கொண்டார். வரவேற்புரையை உதுமான் கனி ஆற்ற, அவர் தனக்கு இதற்கு இருக்கும் தகுதி என்ன என்பதை மீண்டும் இரண்டாம் முறையாகச் சொன்னார். அமரர் நா.கோவிந்தசாமி அவர்களுக்கு இவர் நன்றி சொல்லியாகவேண்டுமாம்.

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய பிச்சினிக்காடு இளங்கோ அவர்கள் (கவிஞர், இரவின் நரை கவிதை நூலுக்குச் சொந்தக்காரர். பட்டுக்கோட்டைக்காரர்) கவிதை எழுதுவது சுலபம் கட்டுரை எழுதுவதுதான் கடினம் என்றார். அப்படித்தானா என்பதை ஆர்.வெங்கடேஷ் சொலியிருக்கலாம். அவரே முதலில் கவிஞர் அல்லவா?. பிறகுதானே இதெல்லாம்.

வாழ்த்தியவர்களின் பேச்சுகளுக்குப் பிறகு நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக அமைந்த கலந்துரையாடல் நடைபெற்றது. அண்மையில் 'திசைகள்' பேட்டியில் அவர் சொல்லியிருந்ததை மீண்டும் 'ஒலி அன் ஒளி' பரப்பினார் வெங்கடேஷ். தான் மிகவும் சந்தோசமாகவும் மனத்திருப்தியோடும் இருப்பதாக சொன்னார் ஒரு கேள்விக்கான பதிலாக. (உண்மையிலேயே நல்ல உற்சாகத்தோடுதான் இருந்தார்.) 'பாரா' (பா.ராகவன்) வின் படைப்பு வேகத்தை மெச்சினார். வலைப்பூக்களின் எதிர்காலம் குறித்தான போக்கு எப்படியாகவும் அமையலாம் என்றார். இலக்கியப்படைப்புகள் எதுவும் இணையத்தில் இல்லை என்றே இவரும் சொன்னார். (எழுத்தாளர் பா. ராகவன் அவர்களும் இதையே ஒரு பேட்டியில் சொல்லியிருந்ததை நினைவு கூறவும்!) இணையத்தில் வரும் மறுமொழிகளுக்கு எப்போதும் தான் முக்கியத்துவம் தருவதில்லை என்றும் தனது கட்டுரை கருத்து சார்ந்து அது இருக்கும் வரை அதுவே தனக்கு மகிழ்ச்சி தருவதாகவும் சொன்னார். கார்ஸியா மார்குவேஸ் பற்றியும் (ஒரு) கருத்து சொன்னார். எனக்கு கார்ஸியாவையும் கார்ஸியாவுக்கு என்னையும் தெரியாததால் நான் இதில் தலையிடவில்லை.

பெரிய தலைகள் போக, மரத்தடி நண்பர்கள் பலரும் வந்திருந்தனர். நம்பி வரவில்லை, மூர்த்தி வந்ததை நான் கவனிக்க வில்லை.
அருள்குமரன் தனது குடும்பத்தோடு வந்திருந்தார். 'தமிழ் இனியனு'க்கு மேடைப்பேச்சில் அவ்வளவு ஆர்வமில்லை போலும். தயங்காமல் தடங்கலை ஏற்படுத்தினார். (தமிழ் இனியன் அருள்குமரனின் அப்பாவுக்கு பேரன்.)

நிகழ்ச்சி முடிந்தபின் ஆர்.வெங்கடேஷ், காலச்சுவடு சிபிச்செல்வன், ரமா சங்கரன், புஷ்பலதா, ஜெயந்தி சங்கர், ரம்யா நாகேஸ்வரன், மானஸஜென், ஈழநாதன், பனசை நடராஜன் (மரத்தடியில் 'நட்டு') ஆகியோர் பேசிக்கொண்டிருந்தோம். நூலகம் மூடும் நேரம் முடிந்தும் உள்ளே இலக்கியம் பேசிக்கொண்டிருந்த எங்களை நூலகப்பெண் பரிதாபத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார். பாவம் அவருக்கு என்ன அவசரமோ?

சிபிச்செல்வன் கொடுத்த காலச்சுவடு காலண்டர், ஜே.கிருஷ்ணமூர்த்தி, மறைந்த எம்.எஸ் அம்மா, அபுல்கலாம் ஆசாத், ஈ.வெ.ரா, சி.வி.தாமோதரம் பிள்ளை, குமரப்பா, காந்தி, அம்பேத்கர், என்.எஸ்.கே போன்ற மிக அழகானவர்களின் அழகான ஓவியங்களோடு இருந்தது. கிடைத்தால் விடாதீர்கள்!
நன்றி வணக்கம்.
எம்.கே.


Friday, December 10, 2004

'இஸ்லாம்- ஒரு எளிய அறிமுகம்' -- எனது பார்வை!

எம்.கே.

"எனது பால்ய காலத்து நெருங்கிய நண்பன் ஒரு இஸ்லாமியன். எனது பக்கத்துவீட்டுக்காரர் கூட முஸ்லீம் நண்பர்தான். இன்றும் கூட எனக்கு நான்கைந்து இஸ்லாமிய நண்பர்கள் இருக்கிறார்கள். எனது அலுவலகத்தில் எனக்கு நெருக்கமானவர்கள் முஸ்லீம் அன்பர்கள் தான். நான் வளர்ந்த எனது பெரியம்மாவின் வீட்டருகில் சர்க்கரைவள்ளிக்கிழங்கு விற்று பிழைப்பை நடத்தினாலும் எனக்கும் ரெண்டு இனாமாய்த் தரும் கிழவியைக் கூட நாங்கள் துலுக்கர் வீட்டு 'அம்மா' என்றுதான் அழைப்போம். அவ்வளவு ஏன் இன்றும் இணையத்தில் ஐந்து இஸ்லாமிய நண்பர்கள் எனக்கு இருக்கிறார்கள்!" இப்படியெல்லாம் சொல்லிவிட்டுத்தான் 'இஸ்லாம் - ஒரு எளிய அறிமுகம்' புத்தகத்துக்கான எனது பார்வையை இங்கு நான் எழுதவேண்டுமென்றால் மன்னித்துக்கொள்ளுங்கள் சகோதரரே, நீங்கள் இஸ்லாம் சொல்லும் 'நிஜத்தின்' படி முழுமையாக வாழவில்லை என்றுதான் என்னால் சொல்ல இயலும். ஏனெனில் இதுவரை நானும் ஓரளவிற்காவது இறைவனின் சொல்படிதான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பது இப்போது எனக்குத்தெரிகிறது. இறைவனுக்கு நன்றி.

'அட! யானை ரொம்பப் பெரியது என்றார்கள், வால் சின்னதாக இருக்கிறதே?!', 'என்னப்பா இது.. யானைக்காது இப்படியா இருக்கும்?' 'இதெல்லாம் பொய், இவ்ளோ பெரிய யானை இத்தனூண்டு வாழைப்பழத்தையா சாப்பிடும்?' 'யானையால் வேகமாக ஓட முடியாதா? அதற்கெதுக்கு இவ்வளோ பெரிய கால்?' 'யானை வரும் முன் மணிச்சத்தம் வருமென்றார்கள், அப்படி எதுவும் கேட்கவில்லை?!' 'ஓஹோ..நாலு காலும் ஒரு தும்பிக்கையும் இருக்கிறது. இதுதான் யானை போல!' 'இல்லை இல்லை நாலு கால்கள் எல்லாவற்றிற்கும் தான் இருக்கிறது, தந்தம் இருந்தால் தான் அது யானை!' இப்படியாய் குருடர்கள் யானையைப் பற்றித் தடவிப் பார்த்து பேசிக்கொண்டிப்பது போலத்தான் மதிப்பிற்குரிய பெருமானார் அருளிய இஸ்லாம் பற்றி நாம் எல்லோரும் பேசிக்கொண்டிருப்பதும்.

கடற்கரையில் தான் நிற்கிறேன். இங்கிருந்து கடலின் ஆழம் சொல்வது அபத்தமாயினும் கடலுக்குள் கொஞ்சமேனும் பயணம் செய்துவிட்டு வந்தவர்களின் அனுபவ வழி அதன் பிரமிப்போடு காலடி நனைக்கிறேன். கடலுக்குள் போய் வந்தார்கள் சரி. நிஜமான ஆழம் தெரியுமா அவர்களுக்கு என்ற சந்தேகமும் கொஞ்சம் எட்டிப்பார்த்து போனாலும் அதை அப்படியே விட்டு விட்டும் நாம் கடலின் ஆழத்தைப் பற்றிப்பேசிக்கொண்டிருக்க முடியாது. எல்லாம் நம்பிக்கையின் அடிப்படையில் தான் என்ற ஒரு வாக்கியத்தோடு எதையும் முடித்து விடலாம். தாயின் கற்பிலிருந்து இறந்த பின் வரும் வாழ்க்கை வரை! ஆனால் நம்பிக்கைக்கும் ஒரு காலவெளி இடவெளி இருக்கிறதல்லவா?

ஏறக்குறைய முன்னுரையிலேயே தனது புத்தகத்தின் தலைப்பை முடித்து விட்டார் திரு.ரூமி அவர்கள். அதற்குப்பின் வருபவன யாவும் என்னைப் பொருத்த வரை புத்தகத்தலைப்புக்குச் சம்பந்தம் இல்லாதவைகளாகும். நபி(ஸல்) கண்ட இஸ்லாம் இன்று வாழ்கிறதா? என்று புதுத்த¨லைப்பை வைத்து விவாதிக்கலாம்.

'இதோ..பாருங்கள், வால்! இதுதான் முதலை! இதை வைத்துக்கொண்டு எப்படி இது ஆளை விழுங்கும்?' என்று ஆச்சரியத்துடனான கேள்வியோடு ஆரம்பிக்கும் ரூமி அவர்கள் மெல்ல உடலுக்கு வந்து 'பாவம் கரடுமுரடாய் இருக்கிறது இதைப்போய் இப்படிப்பேசுகிறார்களே!' என்று இரக்கப்படுகிறார். பிறகு அகலமான வாய்ப்பகுதிக்கு வந்தவுடன், 'பாருங்கள், மனிதர்களை விழுங்கவா இது? ஏதாவது சாப்பிட வேண்டுமல்லவா அதற்குத்தான் இந்த வாய்..பாவம் இதுவும் உயிர் வாழ வேண்டுமல்லவா?' என்ற இயற்கையின் அபிமானியாய் முதலையின் படைப்பிலக்கணம் பேசுகிறார்.

மேலே சொன்ன உதாரணம் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் தீவிரவாதம் பற்றியது. ரூமி அவர்களே ஓரிடத்தில் சொல்லியிருக்கும்படி 'இஸ்லாத்தில் தீவிரவாதம் என்பதே இல்லை. நபி (ஸல்) அவர்களின் வாழ்வும் வாக்கும் அடங்கிய ஹதீதுகள் அதைத்தான் சொல்கின்றன' என்று சொல்லிவிட்டுப் பிறகு அதற்கான எதிர்முனைப்புக்கான காரணத்தை ஏதாவது ஒரு பத்திரிகையின் எட்டாம்பத்தி மூலைச் செய்தியை எடுத்துக்கொண்டு வலு சேர்க்கும் வித்தை படைப்பது நியாயமான உணர்வுடையதாய் இல்லை. தன்னைக்கொல்ல தன் எதிரே வாளோடு நிற்பவனையே நேசித்து மனிதராக்கிய மதிப்பிற்குரிய பெருமானார் எங்கே? இவர்கள் எங்கே? யாராயினும் சரி தான் வாழ்ந்து வரும் நம்பிக்கைகளில் சப்பைக்கட்டு கட்டுவது இம்மைக்கு வேண்டுமானால் விளைச்சல் தருவதாய் அமையும். மறுமைக்கு? 'நீங்கள் வரம்பு கடந்து விடவேண்டாம், ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறியவர்களை நேசிப்பதில்லை' (சூரா பகரா. 02:190) என்று சொல்லும் பெருமானாரா இத்தகைய வன்முறைகளுக்கும் வானுயர கோபுரங்களுக்கு விமான முத்தம் கொடுக்கும் செயலுக்கும் துணை நிற்கப்போகிறார்? இதை ஏன் ரூபி அவர்கள் அடிக்கடி தலையைச் சுற்றி வந்து முக்கைத் தொடப்பார்க்கிறார் என்று தெரியவில்லை.

திருமறை அருளப்பட்ட ஒன்று. மிக நேர்த்தியான கட்டமைப்போடு 23 வருடங்களாய்த் தொகுத்த ஒன்றுதான் திருமறையாம். வானவர் ஜிப்ரயீல் ஹீராகுகையில் தனிமையில் இருந்த நபி (ஸல்) அவர்களிடம் வந்து 'வஹி' (இந்து மதத்தில் ஞானதீட்சை) மூலம் ஆரம்ப ஐந்து வசனங்கள் அவருக்குச் சொல்லியதும் பிறகு அவ்வப்பொழுது அவருக்குச் சொல்லப்பட்டதையெல்லாம் அவரது நண்பர்கள் மனதிலும் கையில் இருந்த பொருட்களனைத்திலுமாக எழுதிக்கொண்டனர் என்றும் கூறப்படுகிறது. பிறகு வந்த நபி(ஸல்) அவர்களின் தோழர்களும் மனைவிமாரும் அவைகளை திறம்படத் தொகுத்திருக்கின்றனர்.

சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்கிற மனநிலைதான் தூய்மையான மனநிலை என்றும் அதையே இறைவன் விரும்புகிறார் என்றும் ஒரு திடமான 'விமர்சன-சுய சிந்தனையின்' ஏற்பு கொள்ளாத வெளிகளால் சூழப்பட்ட தளத்திலே இயங்குவதை நாம் உணர்ந்துகொள்ள முடிகிறது. ஜிகாத் என்கிற அருமையான ஒரு வார்த்தையும் பொருளும் இப்படித்தான் மாற்றுரு கொண்டு விட்டது போலும். ஜிகாத் என்ற வார்த்தைக்கு 'அமைதியான மனப்போராட்டம்' என்பதுதான் திருமறை சொல்லும் பொருளாம்! தனக்குத்தானே தீமைக்கெதிராய் ஒருவர் கொள்ளும் மனப்போராட்டம் என்பது இன்று எப்படி ஆகியிருக்கிறது பாருங்கள். இந்த மாற்றுருவுக்கு ரூமி அவர்கள் கொடுக்கும் வாதங்கள் பாசாங்குத்தன்மை கொண்டிருக்கின்றன.

சமயம் என்ற வார்த்தைக்கு பொருள் தரும் அர்த்தம் எதுவும் இல்லை எனச் சொல்லும் ருமி அவர்கள் மார்க்கம் என்கிறார். சமயம் என்பது சமைதல் என்ற வார்த்தையிலிருந்து வந்திருக்க வேண்டும். தகுதிப்படுத்துதல், வழிப்படுத்துதல், ஏற்றதாக்குதல் என்பதெல்லாம் இதற்கு சரிவராது என்று எப்படித்தோன்றியது? மனிதனை நெறிப்படுத்துவதற்காகத்தானே மதங்களும் இறையச்ச உணர்வுகளும் தோன்றின. '(இவ்வுலகில்) நேர்மையும் இறையச்சமும் கொண்டவர்களுக்கே அவ்வுலகம்' என்றுதானே திருமறையும் சொல்கிறது.

எந்த மதத்தோடும் ஒப்பிட்டு இஸ்லாமிற்கு பெருமையும் தகுதியும் மேன்மையும் தர வேண்டிய அவசியம் இல்லை என்னும் திரு.ருமி அவர்கள், பிறகு ஏன் அடிக்கடி சிலைகளை வைத்து வணங்குபவர்களையும் சிலுவைகளை வைத்துக்கொண்டிருப்பவர்களையும் இன்னபிற யூதர்களையும் விவாதக்களத்திற்கு கொண்டு வந்திருக்கிறார் என்று தெரியவில்லை. வாளால் இஸ்லாம் வாழவில்லை, பரப்பப்படவில்லை என்பதைச்சொல்ல படாதபாடு பட்ட போதும் அதைச் சொல்வதற்கு போர்களையும் ஔரங்கசீப், திப்பு சுல்தான்களையும் சார்ந்து வருகிறார். கஜினி, கோரி முகமதுகள் திறமையாக மறைக்கப்பட்டிருக்கிறார்கள். பாபரையும் காணவில்லை. மூன்று சகோதரர்க¨யும் தந்தையையும் காவலில் வைத்த ஔரங்கசீப் நல்லவராகிவிட்டார். வரலாற்றாசிரியர்கள் கெட்டவர்களாகவும் வினோதமானவர்களாகவும் ஆக்கப்பட்டிருக்கின்றனர். (இவை எல்லாம் வாளால் வெல்லவில்லை என்பதைச் சொல்லவும் சமய சகிப்புத்தன்மைக்கும் இஸ்லாம் பரவ வழிவகுத்தவர்களுக்காகவும் சொல்லப்பட்டிருக்கின்றன. வேண்டியவர்கள் வேண்டிய உதாரணங்களுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.)

இஸ்லாம் பரவிய விதத்திற்கு ஏ.ஆர். ரகுமானும் காந்தியின் மகனும் கூட விளம்பரமாக வருகிறார்கள். இவைகளெல்லாம் தான் சொல்ல வந்த கருத்திற்கு எவ்வகையில் அவசியமாய் இருக்கிறது என்று ரூமி அவர்கள் சொல்லலாம். ஏனெனில் 1400 ஆண்டுகளாக வாழும், இன்னும் அசுரவேகத்தில் மனித இதயத்தில் குடிகொள்ளும் இஸ்லாத்திற்கு இவர்களெல்லாம் எவ்வகையில் உதாரண புருஷர்கள்? இவர்களையெல்லாம் காட்டி ரூமி அவர்கள் என்ன சொல்ல வருகிறார்? இவர்களையெல்லாம் (தனிமனிதர்களையெல்லாம்) வைத்தா இஸ்லாம் புனிதமானது என்று சொல்லவேண்டும்?

சமுதாய ஏற்றத்தாழ்வுகள் இஸ்லாம் சமுதாயத்தில் இல்லை என்பதை இஸ்லாத்தின் பரவுதலுக்கும் உலக மக்களுக்கு மிகவும் ஏற்றத்தக்கதாய் சொல்வதற்கும் அச்சாணியாய் பயன்படுத்திக்கொண்டிருக்கும் ஆசிரியர் ஈராக்கிலும் பாகிஸ்தானிலும் நடக்கும் சன்னி, ஷியா கலவரங்களுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்?

இறைத்தூதராகிய நபி(ஸல்)களின் தவறுகளைக்கூட வான்தூதராகிய ஜிப்ரயீல் (வான்தூதர்) கண்டித்திருக்கிறார். (அக்கண்டிப்புகளைக் கூட நபி(ஸல்) அவர்கள் திருமறையில் தொகுத்திருக்கிறார் இது மிகவும் நல்ல விஷயம்.) இதிலிருந்து தவறு செய்பவர் எவராயினும் தண்டனைக்கு உரியவரே என்னும் இறைவனின் போக்கும் உணர்த்துதலும் எல்லோரும் உணர்ந்துகொள்ளவேண்டிய இன்னொரு உண்மை.

நவீன விஞ்ஞானம் கண்டுபிடித்த சில அறிய செய்திகளை திருமறையில் அன்றே இறைவன் சொல்லியிருக்கிறான் என்பதாய்ச் சில விஷயங்களைச் சொல்லியிருக்கிறார் ரூமி அவர்கள். குழந்தை பிறப்பு பற்றி (துளி நீரால் படைத்தோம்.), வானம் பூமி அதனதன் பாதையில் சுழல்வது பற்றி [அவனே இரவையும் பகலையும் (உண்டாக்கினான்.) சூரியனையும் சந்திரனையும் சிருஷ்டித்தான். இவை வானத்தில் (தங்களுடைய வட்டவரையறைக்குள்) நீந்திச்செல்கின்றன. (சூரா அல் அன்பியா 21: 33)], நிழல்கள் தோன்றுவது பற்றி [(நபியே) உம் இறைவன் நிழலை எவ்வாறு (குறைக்கவும்) கூட்டவும் செய்கிறான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அவன் நாடியிருந்தால் அதனை நிலை பெறச்செய்திருக்க முடியும். சூரியனை நிழலுக்கு முன்னோடியாக நாம் தான் ஆக்கினோம். (சூரா ·புர்கான் 25:45)] இப்படியாக விஞ்ஞானத்தை சுமார் 1425 ஆண்டுகளுக்கு முன் உரைத்திருப்பதாக ரூமி அவர்கள் எடுத்துக்காட்டியிருக்கிறார்.

இத்தகைய இறை வசனங்கள் மேன்மையானதுதான். ஆனால் அவற்றை இருவிதமாக நாம் பார்க்க வேண்டும். ஒன்று அவை அருளப்பட்ட காலத்திற்கு முன்பாகவே எகிப்து நாகரிங்களிலும் சிந்து சமவெளி நாகரிங்களிலும் மக்கள் இவை எல்லாம் உணர்ந்து தெளிந்து வாழ்ந்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் எப்போது எத்தனை மணிக்கு சூரிய ஒளி இக்குகையில் விழும் என்பதைக்கூட உணர்ந்து கோபுரங்களையும் பிரபிடுகளையும் கட்டியிருக்கிறார்கள். கி.மு வில் வாழ்ந்த திருவள்ளுவர் கூட மிகத்தெளிவான சில கருத்துக்களைக் கூறியிருக்கிறார். அதேபோல சித்தர்களும் (பிற) ஞானிகளும் கூட குழந்தை பிறப்பையும் உலக இம்மை மறுமை வாழ்க்கையையும் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். எனவே இவைகளில் பிரமிப்பு உண்டாக்கும் வகையில் எதுவும் இருக்கிறதா எனவும் ரூமி அவர்கள் சொல்லலாம். இரண்டாவது, திருமறையின் இக்கருத்துகளில் ஒருவித மேலோட்டத்தன்மையே நிறைய காணக்கிடைக்கிறது. இரு பொருள்களில் அர்த்தம் தரும் வகையில் (பகவத் கீதையிலும் பைபிளிலும் இது போல நிறைய இருக்கின்றன.) இங்கு அதிகம் காணப்படுவதால் இறைவன் எல்லாவற்றுக்கும் பொருந்தும்படியாகவே இக்கருத்துகளை அளித்திருக்கிறான் என்றும் ஏற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.
'நம்பிக்கை' என்ற ஒற்றை வார்த்தைக்குள் இவ்வுலகின் எல்லா விவாதத்திற்குறிய விஷயங்களையும் அடைத்து அமைதியாய் இருந்துவிடலாம். ஆனால் விளக்கம் எதுவும் அறியாது தவறான வழியில் போய்க்கொண்டிருப்பவர்களை அவை சம்பந்தப்பட்ட தெளிவான விவாதங்கள் மீட்டுக்கொண்டு வரும் அல்லவா? அதுதானே எத்தகைய நேர்மையான வாழ்வியலுக்கான உறுதியான நிலைப்பாடும்.?! நேர்மையாக விவாதிப்பதால் அத்தகைய அர்த்தமுள்ள விவாதங்கள் எதுவும் யாரையும் எப்போதும் நம்பிக்கை இழக்க வைப்பதில்லை என்பதை எல்லோரும் உணர்ந்துகொள்ளவேண்டும். அத்தகைய 'மாற்றுக்கருத்துகளற்ற நம்பிக்கை' என்னும் வட்டத்தின் வெளி வந்து நின்று கொண்டு வட்டத்தின் செயல்பாடுகளையும் கோட்பாடுகளையும் பேசப்போகிறோம். நல்லதுதானே இது? ஆனால் நண்பர்களில் சிலர் (ஏன் இந்து மதத்தில் கூட அண்மையில் கைது செய்யப்பட்ட துறவி ஒருவரின் பிரச்சனையில் ஒருசிலர் அத்தகைய ஒரு வட்ட நிலைப்பாட்டைக் தமது நிலையாகக் கொண்டிருந்தனர்! இதுவும் தவறுதான்!) அது பற்றிப் பேசினாலே இறைத்தூதர்கள் சொல்லும் வழியை விட்டு கோபத்தின் வழி வெகு தூரம் போய்விடுகிறார்கள். அதுவே சரியானதாயும் சிலர் எண்ணுகிறார்கள்.

எவ்வாறு இந்து மதத்தில் சிலர் அதன் அடிப்படையான விஷயங்களை மறந்து அடிப்படையின் வெளி நிலைகளில் நேசம் கொண்டு அதையே முதன்மையானதாய் ஆக்கிக்கொண்டாடுகிறார்களோ அதே நிலை இன்றைய உலகின் எல்லா மதங்களிலும் ஆட்டுவித்துக்கொண்டிருக்கிறது என்பதை ரூமி அவர்களின் எழுத்து, நாமும் ஆங்காங்கு உணர்ந்து கொள்ள ஏதுவாகிறது. நபி(ஸல்) அவர்கள் சொன்னதின் அடிப்படையான கருத்துகள் தடம் மாறி விட்டனவோ என்பதும் இப்புத்தகத்தைப் படித்தபின் எனக்குத்தோன்றிய இன்னொரு கிளை எண்ணம்.

இறைவனுக்கு நன்றி.

எம்.கே.குமார்.

நன்றி:
திரு. நாகூர் ரூமி அவர்கள் ஆசிரியர், "இஸ்லாம் ஒரு எளிய அறிமுகம்"


கிழக்குப் பதிப்பகம், மைலாப்பூர். சென்னை.



Sunday, October 31, 2004

அரசியல் கண்ணா அரசியல்!

ஜெயலலிதா அம்மையார் கரன் தப்பாருடன் பேசிய போது, 'சினிமாவில் மட்டுமே நடிக்கத்தெரிந்த எனக்கு அரசியலில் நடிக்கத்தெரியவில்லை' என்றார். இதைச் சொல்வது ஜெயலலிதா அம்மையார் என்பதால் வழக்கம்போல அப்படியே புறந்தள்ளிவிடக்கூடாது. அம்மையாரின் (இன்றைய தவறு உட்பட) அனைத்துத் தவறுகளுக்கும் இந்த அரைகுறைப்பழக்கமும் ஒரு காரணம் என்பதை அரசியல் பார்வையாளர்கள் உணர்வார்கள்.

நேரில் பேசமுடியாத சில விஷயங்களை முரசொலி வழிக் கிண்டல் செய்யவும் வேறுபடுத்தி நடிக்கவும் அம்மையாருக்குத் தெரியவில்லை. நேரில் இனிமையாகப் பேசி, பிறகு பொம்மைக்கத்தியைக் காட்டி மிரட்டியது போல சிரித்துக்கொண்டே புகைப்படம் எடுக்கச்சொல்லிவிட்டு படக்கென்று பொம்மைக்கத்தியை நிஜமாய் உருவி முதுகில் குத்தத் தெரிந்திருக்க வேண்டும். இவையெல்லாம் அம்மையாருக்குச் சொல்லித்தர நெருக்கமான யாருமில்லை. எப்போதாவது 'சோ' மாதிரி சொந்தங்கள் வந்து 'அட..இப்படிப் பண்ணும்மா..'என்று 'எடுத்து'க்கொடுத்துவிட்டுப் போனால் உண்டு. இல்லாவிட்டால் கலைஞரின் 'கீதை வழி'ச்சொந்தங்கள் யாராவது வந்து 'ஹோம் ஒர்க்' செய்யவேண்டும். இதெல்லாம் செய்தாலும் காரியத்தின் இறுதியில் காரியமே கெட்டுவிடுவது போல் அம்மையாரின் பிறவிக்குணம் வந்து முன் நின்று விடும். இப்படியெல்லாம் இருந்தாலும் சிம்மராசியும் நட்சத்திரமும் ஜோவியலாக அம்மையாரை ஆட்கொண்டிருக்கிறது. அது ஆடும் ஆட்டம்; அத்தனையும்!

இதெல்லாமிருக்கட்டும். அரசியலில் அடிப்படைத்தேவைகள் என்ன என்பதை வெறும் ஊடகங்கள் வழியாக செய்திகளாகவும் நகைச்சுவைத் துணுக்குகளாகவும் நாம் பார்த்திருக்கக்கூடும். கண்டு நகைத்திருக்கக்கூடும். ஆனால் நிஜமாய் அங்கு நடப்பதுதான் என்ன? அரசியலில் அவ்வளவாய் ஜொலிக்காத தமிழருவி மணியன் சொல்கிறார். அது முழுக்க முழுக்க நிஜம் என்பதை ஒரு 'தேர்தலின் வழி அனுபவித்தவன்' என்ற முறையில் நான் மிக நன்றாக அறிவேன்.

79 வயதிலும், பையன்களே பதவிக்காகச் சண்டை போடும் நிலையிலும் இன்றுவரை அதிகாலை 3 மணிக்கு எழுகிறார், முரசொலியில் எழுதுகிறார், வட்டத்தலைவர்களைக் கூட நினைவில் வைத்து பேசுகிறார், சாமர்த்தியமாக சிலரைப் பழிவாங்குகிறார் என்றால் இவை அனைத்துக்கும் காரணமென்ன என்பதை ஒருநிமிடம் யோசித்துக்கொள்ளுங்கள். தகுதிகள் தெரிகிறதா இப்போது? 'இன்றைய அரசியலில்' நிலைத்து நிற்க வேண்டும் என ஒருவன் விரும்புவானாகில், அவன் கைகொள்ள வேண்டியதும் கடைபிடிக்கவேண்டியதும் கலைஞரின் ராஜதந்திரங்களைத்தான்! அதற்கு அடுத்து எம்.ஜி.ஆர்! கவனியுங்கள்..இன்றைய அரசியலில்..இன்றைய அரசியலுக்காக!

அண்மையில் மத்திய உள்துறை அமைச்சருடான உரையாடலைப் பதிவு செய்து வெளியிட்டதும் கூட அம்மையாரின் அத்தகைய குணங்களுல் ஒன்று என்றுதான் சொல்வேன். 'வீ£ரப்பனைச் சுட்டுக்கொள்வதற்கு சில மணித்துளிகள் முன்னால் விஜயகுமாருக்கும் ஜெ.மேடத்திற்கும் நடந்த உரையாடல்' எனக்கு வேண்டும். அம்மையார் வெளியிடுவாரா?

சுயவிருப்பங்களில் பொதுத்திட்டங்களை நகர்த்துவதும் பொதுத்திட்டங்களில் சுய நலத்தைக் காட்டுவதும் தவிர்க்கவேண்டிய ஒன்றல்ல, இன்றைய அரசியலில். ஆனால் அவை இரண்டையும் எப்போது சரிவிகிதத்தில் கலந்துகொள்ளவேண்டும் எப்போது ஒன்றைவிட்டு மற்றொன்றைப் பிரித்து வைத்திருக்க வேண்டும் என்பவைதான் அரசியலில் ஒருவன் கற்றுக்கொள்ள வேண்டிய பாலபாடம். இன்னும் அம்மையார் அதைக் கற்றுக்கொள்ளாததே அவரின் பாஸிட்டுவானதும் நெகட்டிவானதுமாகும்.
ரஜினிகாந்த் இன்றும் அரசியலில் நிலை தடுமாறித்திரிவதும் எம்.எஸ் உதயமூர்த்தி சுரம் குறைந்து போனதும் ராஜாஜியின் பேரன் காங்கிரஸில் பின்னிறுத்தப்படுவதும் ஏன் வைக்கோவையும் கூட இந்த லிஸ்டில் சேர்த்துக்கொள்ளலாம். (அன்பு அண்ணனிடம் இன்னும் அவர் கற்கவேண்டியது எவ்வளவோ இருக்கிறது.) முகம் தெரியாது பெயர் தெரியாது அரசியல் களத்தில் நின்று தொலைந்து போய்விட்டவர்கள் இன்னும் ஏராளம்பேர்!இப்போது தமிழருவி மணியனும் இவர்களில் ஒருவர். வலம்புரி ஜானும் ஒருவர்.

இதற்கு எதிரான களத்தில் வெற்றிகரமாக நிற்பவர்கள் என்றால் கலைஞரை விடுங்கள், அவர் பல்கலைக்கழகம். ராமதாஸ் அய்யாவை எடுத்துக்கொள்ளுங்கள். நடிகர்களில் விஜயகாந்திற்கு அத்திறமை கொஞ்சம் இருப்பதாக எனக்குத்தோன்றுவதுண்டு. கவிஞர்களில் கவிப்பேரரசு கொஞ்சம் அறிவார் அவ்வித்தையை! பிற அரசியல் தலைவர்களில் 'எங்க ஊர் ஆள்' திருநாவுக்கரசருக்கு 100% அந்தத்திறமை உண்டு. இன்னும் நிறையப்பேரைச்சொல்லலாம். திருமாவளவனையும் சேர்த்துக்கொள்ளுங்கள். ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு அதில் சமத்து பத்தாது.

தமிழருவி மணியனின் கட்டுரையில் சிங்கும் கலாமும் வேறுபட்டவர்கள் என்பதாய் வருகிறது. உண்மைதான். மதம் வந்தபோது திறமை வந்தது. மதம் வராயிருக்காவிட்டால் திறமையும் வராது. திறமை இருந்தாலும் தெரிந்தாலும் வராது. வேற்றுநாட்டவரா என்ற பிரச்சனையால் சிங் வரமுடிந்தது. அதாவது திறமை! இந்நிலையில் ஒன்றை மட்டும் யோசியுங்கள்..கலாம் இஸ்லாமிய இனத்தவராய் இல்லாவிட்டால் எவ்வளவுதான் திறமையானவராய் இருந்தாலும் ஜனாதிபதியாகி இருப்பாரா? மிகவும் மேலானவர் அவர்! இதைவிட நல்லபதவியாக கிடைத்திருக்கும், நாலு ஏழைக்குழந்தைக்கு வாத்தியாராக!

ஆக அரசியலில் முதலில் விளையாடுவது ஜாதீயமும் மதங்களுமே! (அதானாலேயே தூத்துக்குடியில் ஒரு நாடாரையும் திருநெல்வேலியில் ஒரு நாடார் அல்லது தேவரையும் நாகர்கோவிலில் ஒரு கிறித்துவரையும் (கிறித்துவ நாடார்) வேலூரில் ஒரு பாயையும் விழுப்புரத்தில் ஒரு வன்னியரையும் ராமநாதபுரம், மன்னார்குடி, தேனிப்பகுதிகளில் ஒரு முக்குலத்தோரையும் நிறுத்துகிறது கழகங்கள்; கட்சிகள்! ஜெயலலிதா எப்படி வேலூரில் ஒரு இந்துவை நிறுத்தி ஜெயிக்கவைக்க முடிந்ததென்றால் அப்போது கலைஞர் பி.ஜே.பி. குழுமத்தில் இருந்தார். அதானாலேயே அவரின் மகமதிய நபர் கூடத்தோல்வியைத் தழுவ நேரிட்டது.)

இப்போது தமிழருவி மணியன் சொல்வதைப் பாருங்கள். உண்மையான இந்தியநாட்டு நல விரும்பியாய் நீங்கள் இருந்தால் அடுத்தமுறை ஓட்டுப்போடும்போது இவ்வார்த்தைகளையும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். அல்லது அரசியலில் நுழைந்தால் அனைத்தையும் கற்றுக்கொண்டு தெளிவா(க்)க் வாருங்கள்! வாழ்த்துகள்!

எம்.கே.


"இன்றைய அரசியல் உலகத்தின் பொது இலக்கணம் என்ன?

உள்ளுக்குள் வஞ்சம் வளர்த்து உதடுகளில் புன்முறுவலைப் பூசிக்கொள்ள வேண்டும். பொய் முகங்களோடு போலியாகப் பழகத் தெரிய வேண்டும். இல்லாத திறமைகளை யும், பெருமைகளையும் இருப்பதாகச் சொல்லி, விதம் விதமாய் பூச்சொரிந்து பல்லிளிக்க வேண்டும், பணத்துக்கும், அதிகாரத்துக்கும், பணிந்து நடக்க வேண்டும். எங்கே வளைய வேண்டுமோ அங்கே வளைந்து, எவருக்கு முதுகு சொறிய வேண்டுமோ அவருக்கு முதுகு சொறிந்து, கைகூப்பி வாய் பொத்தி நிற்க வேண்டும். குறைந்த பட்சம் கள்ளச் சாராயம்காய்ச்சி யாவது கணிசமாகப் பணம் வைத்திருக்க வேண்டும். கட்டைப் பஞ்சாயத்துக் கலையைக் கற்றுத் தேர்ந்திருந்தால் இன்னும் நல்லது. சாதிக் கட்டுமானம் பின்புலமாக இருப்பது மேலும் நல்லது. இந்திய அரசியலில் இன்று வெற்றிபெற அடிப்படை அரிச்சுவடி இதுதான். இதுதான் பொது விதி. அப்துல் கலாமும், மன்மோகன் சிங்கும் பெற்ற வெற்றிகள் விதிவிலக்குகள்."

தமிழருவி மணியன்.

நன்றி: விகடன்.

Friday, October 29, 2004

வாழ்க நீர் எம்மான்!

"என்னப்பா டியூன் இது??? இதுக்கு என்னத்தை எழுதுறது? எப்படி எழுத முடியும்? மூணாங்கிளாஸ் வாய்ப்பாட்டைத் திருப்பிப் போட்டு வாசிக்கிறமாதிரி இருக்கு?"

"சார் அப்படில்லாம் சொல்லாதீங்க! மியூசிக் டைரக்டர் கேட்டா கோபிச்சுக்கப்போறாரு!"

"கிழிச்சான்! எம் எஸ் வி, ராஜா, தேவா, சந்திரபோஸ், கங்கை அமரன் எல்லாரையும் மிக்ஸ் பண்ணி ஒரு டியூனு போட்டு வெச்சிருக்கான்! இதுக்கு பல்லவி எப்படி எழுத முடியும்?"

"ஆரியமாலா ஆரியமாலான்னு ஏதாவது போடச்சொல்லு. இல்லாட்டி மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன்னு ஏதாச்சும் போடச்சொல்லு. டென்ஷன் பண்ணுறாங்கெ!"
****
மியூசிக் டைரக்டர் உதவியாளரைக் கூப்பிடுகிறார்.

"யோவ்..இந்த ஆளு சரி வரமாட்டான். அவரைக்கூப்பிடு. அவர்தான் லாயக்கு."

"சார் அவரு வயசானவரு."

"இருக்கட்டுமேய்யா!"

"இல்லே சார்! இது காதலைச் சொல்லி அவஸ்தை படுகிற காதலன் பாடுற பாட்டு. அவருக்கு முடியுமா?"

"யோவ்..'தொட்டால் பூ மலரும்' யார் தெரியுமா? 'மல்லிகை என் மன்னன் மயங்கும்', 'நீ எங்கே..என் நினைவுகள் அங்கே', 'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம், அட! 'நான் ஆணையிட்டால்' கூட அவருதான்யா எழுதுனது."

"அப்படியா சார்? இருந்தாலும் இதெல்லாம் பழைய படம் சார். புதுப்படம்ன்னு.."

"யோவ்...எழுபத்தி மூணுலயும் இளமையோடு இருக்க ஆளுய்யா அவரு. விகடன் படிக்கிறியா? நளதமயந்தி, ஹேராம், பாய்ஸ், காமராஜ், மின்னலே இன்னும் எத்தனை படம்ய்யா வேணும். எல்லாம் அவருதான். இன்னிக்கும் எழுத்துல இளமையை ஊத்தி எழுதுற ஆளு!"

"அப்படியா சார்? நடு நடுவுலே இங்கிலீஸ் வார்த்தையெல்லாம் போடணும். தேவைப்பட்டா தத்துவத்தையும் எழுதணும் சார்."

"அட! 'தரைமேல் பிறக்க வைத்தான்'னு எழுதணுமா? கலக்குவார்யா அவரு. 'சமஞ்சது எப்படி'ன்னு எழுதணுமா அசத்துவாருய்யா அவரு. இல்லை 'ஓ..மரியா ஓ..மரியா'ன்னு ரம்மியமா எழுதணுமா? இல்லை 'கட்டம் கட்டி கலக்கணு'மா? இல்லை 'சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது'ன்னு இன்னிக்கும் எழுதுவாருய்யா."

"அவ்வளவு பெரியாளா சார் அவரு?"

"என்னய்யா இப்படிக் கேட்டுட்டே? இன்னக்கி 73 வயசாம் அவருக்கு. வாழ்கன்னு மனதார வாழ்த்திட்டு இந்தப்பாட்டை அவரை வெச்சே எழுத வெச்சிடுவோம். என்னய்யா சொல்லுறே?"

"கண்டிப்பா சார். வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்ன்னு நான் சொன்னதா சொல்லிட்டு கூப்பிடுங்க சார்."

எம்.கே.

எஸ்கேப் கண்ணா எஸ்கேப்!

உதவியாளர் உள்ளே வருகிறார்.

நேரம்: 25 அக்டோபர். மாலை 6 மணி.

உதவியாளர்: குட் ஈவ்னிங் சார்.

கங்கூலி: குட் ஈவ்னிங். என்னாச்சு நான் சொன்ன மேட்டர்?

உதவி: ரொம்ப பிஸியா இருந்தார் சார். பேசிட்டு வந்துட்டேன்.

கங்கூலி: என்ன சொன்னார்? பாஸிட்டிவா? நெகட்டிவா?

உதவியாளர்: ரொம்ப ரொம்ப ரொம்ப நெகட்டிவ் சார். பிட்ச், பேஸ் பௌலிங்குக்கு கன்னா பின்னான்னு ஒர்க் அவுட் ஆகுமாம். 100 வது மேட்ச் ஆடுறாரு மெக்ராத். கில்லெஸ்பி, காஸ்புரோவிச் வேற. மூணு எம்டன் சார். பொளந்து புடுவானுக. ஏற்கனவே 35 வருச ரெக்கார்டு பிரேக் வேறயாம். குச்சி பறக்குங்குறாரு கிஷோர் பிரதான். (நம்ம நாட்டோட பிட்ச் மேன்.) யோசிச்சுங்குங்க சார்.

கங்கூலி: என்ன பயமுறுத்துருறீங்க? எனக்கே பேஸ் பௌலிங்கா? சும்மா அப்படி ஆ·ப் சைட்ல பேட்டைச் சுத்துனா நாலு பேருக்கும் இடையில பந்து பறக்கும்யா பவுண்டரிக்கு.

உதவியாளர், அந்தப்பக்கம் திரும்பி மையமாக சிரிக்கிறார்.

உதவி: சார், ஒண்ணுக்கு நாலு தடவை யோசிச்சுங்குங்க. 35 வருஷ ரெகார்டு உங்க கேப்டைன்ஸில போகணுமா? நமக்குத்தான் பலி ஆடு ஒண்ணு எப்பவும் இருக்கே சார். தள்ளிவிட்டுட்டுப்போங்க. ஏற்கனவே 1-0 ந்னு முன்னாடி இருக்குறானுவ. புலி மாதிரிப் பாய்வானுக. போதாதுக்கு சச்சின் வேற இருக்கார். பிரச்சனையே இல்லை. முக்கியமான மேட்சில அவர் அடிக்கமாட்டாருன்னு எல்லாரும் சொல்லுறது மாதிரி இந்த மேட்சிலேயும் அவர் மேலேயும் பழியைப் போடலாம். எதுக்கு சார் வேண்டாத வேலை.? இன்னக்கி தேதில இந்தியன் டீம்ல கேப்டன்ஸிக்கு உங்களை விட்டா ஆளே இல்லை. எத்தனை மேட்ச் சும்மா வந்துட்டுப்போனாலும் நீங்கதான் கேப்டன். அந்த நிலைமையில இருக்கு. எதுக்கு வீண் ரிஸ்க்?

கங்கூலி: (கண்ணை மூடி யோசிக்கிறார்.) அய்யோ..அம்மா..அய்யோ...அம்மா...

உதவி: சார்..சார்..என்னாச்சு? என்னாச்சு சார்? ஏன் கத்துறீங்க?

கங்கூலி: (ஒற்றைக்கண்ணால் பார்த்துக்கொண்டே,) பயந்துட்டியா உதவி? எல்லாம் நம்ம 'நக்மா' டிரையினிங். வயித்து வலி மாதிரி நடிச்சேன். எப்படி நம்ம நடிப்பு?

உதவி: ஹா..ஹா..நான் கூட பயந்துட்டேன் சார். தமிழ்நாட்டுல யாரோ கமலாம். அவர்கூட இப்படி நடிக்க மாட்டாரு சார். பின்னிப்புட்டீங்க. அப்போ உங்களுக்கு வயித்து வலி!? கரெக்டா சார்.?

கங்கூலி: யோவ்.. இப்படி பொத்தாம்பொதுவா சொல்லி வைக்காதே! தொடை மஸில் பிடிச்சுகிச்சுன்னு சொல்லு. ஹிப் மஸில்லயும் பெயின்ன்னு சொல்லு.

உதவி: ஓகேசார். டன்!

(செய்தி: திராவிட் பாவம்!)

எம்.கே.

Monday, October 25, 2004

நிஜமா கண்ணா நிஜமா?

வாசலில் வீரப்பனின் மகள்கள் வித்யாராணியும், பிரபாவும் நின்றுக் கொண்டிருக்க... அவர்களிடம் பேச்சு கொடுத்தோம். பிரபா நம்மிடம்,

"டாடியை போலீஸ் அங்கிள்ஸ் சுட்டுக் கொன்னுட்டாங்க. டாடியை போட்டோவுல தான் மம்மி காட்டினாங்க. இப்போதான் நேர்ல பார்த்தேன். எங்க டாடிகிட்ட மான், யானையெல்லாம் இருந்திருக்கு. மம்மி கூட்டிக்கிட்டுப் போய் காட்டுறதா சொன் னாங்க. காட்டவே இல்ல. எங்க டாடியை நான் பார்க்கலனாலும் அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். எங்க டாடியைக் கொன்ன போலீஸ் அங்கிள்ஸை நான் பெரிய பொண்ணாகி டுமீல்னு சுட்டுக் கொல்லுவேன் என திக்கித்திணறி சொன்னாள்."

"தமிழ் துப்பறியும் இதழ்களுக்குத் தாங்கள் எழுதும் எதைப்பற்றியும் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஜேம்ஸ் பாண்ட் போலக்கொல்வதற்கான உரிமம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒருவரைப் பற்றி -- பரபரப்பாக எழுதினால் விற்பனை அதிகமாகும் என்ற வணிக நோக்கத்தினால் - அவை செய்திகளை உருவாக்குகின்றன.
இன்று தமிழகத்தில் செய்திகளை ஆய்வு செய்தும் எழுதும் எழுத்திற்கான தேவைதான் உள்ளது. கதாசிரியர்களை வைத்து செய்திப்பத்திரிகை நடத்தும் போக்கு செத்து ஒழிய வேண்டும்"

---'காலச்சுவடு' கண்ணன் ஒரு கட்டுரையில்.

இந்த இரண்டு துணுக்குகளுக்கும் ஏதாவது சம்பந்தமிருப்பதுபோல் தோணவேண்டும் உங்களுக்கும். தோணுகிறதா?

பத்தாவது படிக்கிறாராம் வீரப்பன் மகள் திவ்யா. அவரை விட மூத்தவர் வித்யா ராணி. ஆனால் மேலே சொல்லப்பட்ட வீரப்பன் மகளின் வாக்குமூலம் ஒரு எல்.கே.ஜி படிக்கும் குழந்தையின் வாக்குமூலத்திற்கு நிகராயிருக்கிறது. இது நிஜமாகவே நடந்திருக்கக்கூடியதா? 'போலீஸ் அங்கிள்ஸ், அவரை நான் பெரியவளாகி சுடுவேன்' என்பதெல்லாம் அழ. வள்ளியப்பாவின் கதைகளில் வரும் காட்சிகள் போலல்லவா இருக்கிறது?

ஊடகங்கள் வழியாகப் பார்த்தபோது அப்பெண்களிருவரும் சுற்றியிருந்தவர்கள் அழுததாலேயே கண்கள் கலங்கினர். அதுவுமில்லாமல் பிறந்ததிலிருந்து இன்றுவரை எப்போதும் பார்த்திராத பேசியிராத அப்பா என்பவரைக் காட்டி செத்துப்போய் விட்டார் என்று சொன்னால் என்ன உணர்வு வரும்? ஏதோ திடீரென்று தங்கள் மீது வந்து விழும் ஊடக ஒளியிலும் பாடுகளிலும் தடுமாறி திருவிழாவில் தடுமாறும் குழந்தைகளைப் போலவே அவர்கள் என் கண்களில் நின்றனர். ஆனால் பத்திரிகைகள் அப்படியா எழுதுகினறன?

எம். கே.


Thursday, October 21, 2004

தவறு கண்ணா தவறு!

"சிரிப்பே அறியா சிடுமூஞ்சிக்கு மைனா போல் ஒரு பொண்டாட்டி. வந்தான் ஹீரோ பாட்டோட வடுகப்பட்டி ரோட்டோட!" இப்படி ஆரம்பிக்கும் ஒரு விளம்பரத்தை நீங்கள் அடிக்கடி பார்க்க நேர்ந்திருக்கும். பார்த்திருக்கிறீர்களா? முதல் வரிப்பாட்டுக்குள் தூங்கும் கணவனுடனான (அழகான) அவளின் புகைப்படத்தைக் காட்டி, சேலையை பின்னிழுத்துச் செருகி 'கை வலிக்குது கை வலிக்குது மாமா' ரேஞ்சில் அவள் மிளகாய் அரைத்துக் கொண்டிருப்பதையும் காட்டுவார்கள். அப்போதுதான் வருவான் 'வடுகப்பட்டி ராஜா!' (வைர முத்து இல்லப்பா. நிழல்கள் சந்திரசேகர் மாதிரி!) ஓஹோ...வென்று பின்னணி இசையோடு ஹிப்பித் தலையுடன் அழகான வேலைப்பாடுள்ள சைக்கிளுடன்! இரண்டாம் வரிப்பாட்டுக்குள், கிழவர் கடையிலே 'மிண்ட்-ஓ-பிரஷ்' வாங்கித்தின்றுவிட்டு பாட்டு முடியும்போது சைக்கிளில் அவளையும் கூட்டிகொண்டு போய்விடுவான். இருவரும் போவதைத் தன் கண்ணாடியைத் துடைத்து மாட்டிப் பார்த்து விழிப்பார் முதியவர்.

நான் முதலில் அவ்விளம்பரத்தைக் காண நேர்ந்த போது கொஞ்சம் ஆடித்தான் போனேன். கேட்சிங் வாசகங்களோடும் இசையோடும் வந்த அவ்விளம்பரத்தின் சில விஷயங்கள் பிடித்திருந்தாலும் விளம்பரத்திற்காக எடுத்துக்கொண்ட செய்தி சரிதானா? உகந்ததுதானா எனவும் யோசித்தேன். என்ன இருந்தாலும் இந்தியாவில் இப்படியெல்லாம் காண்பிப்பது சரியில்லை எனத்தான் நினைத்துக்கொண்டேன். விளம்பரத்தைத் தயாரித்தவர்களின் எண்ணப்படி எனது நிலையும் இப்போது எழுதும் நிலையும் வெற்றியின் அறிகுறியாகவே இருக்கலாம். ஆனால் விளம்பரத்தின் கண்ணோட்டம் தவறானது தானே! (ஏம்ப்பா...இப்போ வாற சீரியல்லாம் பாக்குறியா? அதை விடவா இதுல மோசமா காமிக்கிறாங்கன்னு என் மனசாட்சி சொல்லும். கண்டுக்காதீங்க!)

ஒன்றுமில்லை. அவ்விளம்பரத்தில் காண்பிக்கும் அத்திருமண புகைப்படத்தை மட்டும் காண்பிக்காமல் இருந்தால் அவளுடைய கணவன், அப்பாவாகவும் இருக்கலாம் என்ற நிலை இருக்குமல்லவா? கொஞ்சம் யோசிக்கிற மாதிரியே விடலாமே! விளம்பர நிர்வாகிகளே இப்படியும் கொஞ்சம் யோசிங்க!
அதிருக்கட்டும், நீங்க என்ன யோசிக்கிறீங்க? சொல்லுங்க!
எம்.கே.

Tuesday, October 19, 2004

மனதைப் பாதித்த சம்பவம் 1.

சினிமா நடிகைகளின் வாழ்வுபற்றி கிசுகிசுவைத்தவிர நான் என்ன எழுதினாலும் அது யாருக்கும் புதிதாய் இருக்கப்போவதில்லை. கிசுகிசு ஒன்றுதான் மார்க்கண்டேயத்தனம் கொண்டது. தமிழ் சினிமாவில் நடித்த முதல்பெண்மணியிலிருந்து இன்றைய புது ஹீரோயின் வரை, எம்.கே.டி யிலிரூந்து சிம்பு, ஜெய் ஆகாஷ் வரை எல்லோருக்கும் கிசுகிசு இருக்கிறது. அதெல்லாம் இருக்கட்டும். வாழ்வில் அதெல்லாமில்லாவிட்டால் சுவையிருக்குமா?

நான் சொல்ல வந்தது, நடிகைகளின் வாழ்வு பற்றி. உறவுகளின் பண ஆசையோ, அன்பென்றால் விலை என்ன என்று கேட்கும் குடும்பத்தார்களோ, இதுதான் சந்தர்ப்பமென்று உள்ளே புகுந்து காதல் நாடகமாடி, கர்ப்பமாக்கிவிட்டு தவறான கிசுகிசுவை பரப்பிவிட்டு, எனது குடும்பத்தினர் சொல்லியதால் வேறு பெண்ணை மணந்துகொண்டேன் என்று சொல்லும் சக திரைத்தொழிலாளர்களோ இவர்களால் அல்லது இவைகளால் எப்படி ஒரு நடிகை நிஜத்தில் சீரழிகிறாள் என்பதுதான் அது.

எல்லாம் நம்பிக்கைகளும் முடியும் தருணத்தில் என்ன செய்வார்கள் இந்த அபலைகள்? எல்லாப் பெண்களுக்கும் உள்ள ஒரே வழி! நடிகைகளானாலும் இவர்களும் பெண்கள்தானே? தற்கொலை! போ. இனிமேல் இவர்கள் யாரிடம் பணம் வாங்குகிறார்கள் பார்க்கலாம்? யாரிடம் தா தா என்று பிடுங்கப்போகிறார்கள்? அவனும்கூட துரோகம் செய்துவிட்டான்? அவனுக்கும் எனது உடல்தான் பிரதானமா? இனி எதன் மேல்புரண்டு படுப்பான்? இந்த உலகத்தில் யாருக்குமே நான் மனுஷி என்று தெரியவில்லையா? பணம்,பணம்,பணம்..மேலும் உடல்!

எதுவும் வேண்டாம் போ! இப்படித்தான் நடந்து முடிகிறது அவர்களின் வாழ்வு. கவர்ச்சி நடிகையாய் இருந்தாலும் சரி குடும்ப நடிகையாய் இருந்தாலும் சரி, தேசியவிருது வாங்கிய நடிகையாயிருந்தாலும் சரி. இதுதான் கதி.

மீராஜாஸ்மின் எனக்குப்பிடித்த நடிகைகளில் ஒருவர். நடிப்பிலும் சரி இன்னபிற ஊடகங்களாலும் சரி! அண்மையிலொரு விருது வழங்கும்மேடையில் அச்சின்னஞ்சிறிய தேவதை கண்ணீர் கலங்கி அழுகிறது. காரணமென்ன இருக்கமுடியும்? மேற்சொன்ன துரதிஷ்டங்கள்தான்! பாவம். நடிப்பில் தேசிய விருதுபெற்ற அழகான நடிகை! உறவினர்களைப் பிடித்து கழுத்தை நெறித்துக் கொலை செய்யவேண்டும் போல எனக்குக் கோபம் வருகிறது. தேவதைகள் அழலாமா? அல்லது அழத்தான் விடலாமா?

எம்.கே.

Wednesday, October 13, 2004

அதிர்ஷ்டக்காத்து அடிக்குது வாருங்கள்!

எம்.கே.குமார்.

வாருங்கள், வணக்கம்! குருபகவான் நல்லது செய்ய ஆரம்பித்துவிட்டான். இந்தக் குருப்பெயர்ச்சியானது சகல செல்வங்களையும் உங்களுக்கு கொண்டு வரப்போகிறது. அதன் முதற்படியாகத்தான் இதோ இந்தக்கட்டுரையைப் படிக்க ஆரம்பித்துவிட்டீர்கள். இதுதான் ஆரம்பம். இன்று மிக நல்ல நாள், மிகவும் அதிர்ஷ்டமான நேரம் இது! சொல்லப்போகும் செய்தி அப்படிப்பட்டது. முதலில் மூச்சை இழுத்துவிட்டுக்கொள்ளுங்கள். மேலே போகலாமா?

சொல்லப்போகும் அனைத்தும் என் நண்பரொருவர் எனக்குச்சொன்னது. அந்த அதிர்ஷ்டக்காரக் குபேரர்களில் நானும் ஒருவனாகப்போகிறேன்.என் நண்பரைப் போல நானும், ஏன் நீங்களும் விரைவில் அப்படி ஆகலாம். அதற்குத்தானே ஆசைப்படுகிறோம் நண்பர்களே! வாருங்கள், அந்த அலுவலமும் விரைவில் ஆளெடுக்கப்போகும் செய்தி மெதுவாக கசிந்துகொண்டிருக்கிறது, தயாராகுங்கள்.

முதலிலேயே சொல்லிவிடுகிறேன், உங்களுக்கு அரசாங்கத்தில் வேலை! என்ன வேலை என்பதையெல்லாம் இப்போது கேட்காதீர்கள். இருக்கட்டும் அது. எந்தவித ஸ்டிரைக்கும் எதிர்காலத்தில் செய்யவேண்டிய அவசியம் இல்லாமல் அனைத்து வசதிகளையும் அள்ளித்தரப்போகும் அட்சயபாத்திர அலுவலகத்தில் என்ன வேலையாய் இருந்தால் என்ன? வேலை செய்யும்படியாகவா வேலை இருக்கப்போகிறது அதுவும் அரசாங்க அலுவலகத்தில்! அப்படியே இருந்தாலும் நமக்கென்ன பைத்தியமா வேலை செய்வதற்கு? அதுவும் அரசாங்க அலுவலகத்தில்?!

இந்தியாவின் தலைநகரில்தான் இருக்கிறது அந்த அலுவலகம். பயப்படாதீர்கள், எந்தவித அரசியல்வாதிகளின் குறுக்கீடும் இல்லாமல் ஆண்டவன் புண்ணியத்தில் வேலை நல்லபடியாய் நடக்கும். பயத்தையெல்லாம் விடுத்து கொஞ்சம் கவனமாய்ப்படியுங்கள். நத்தையின் வயிற்றிலும் முத்து பிறக்கும், டெல்லியிலும் நமக்கு நல்லது நடக்கும். தயாராகிவிட்டீர்களா? ம்ம். நல்லது.

முப்பது நாள் கொண்ட மாதத்தில் முப்பது நாட்களும் மக்களுக்காக உழைக்கப்போகிறோம் இல்லையா? எனவே முதலில் சம்பளத்திலிருந்து ஆரம்பிப்போம். ஒரு மாதச்சம்பளம், இந்திய ரூபாயில் பன்னிரெண்டாயிரம் மட்டும். சம்பளம் போக அவ்வப்போது நடைபெறும் அலுவலக கூட்டங்களில் கலந்துகொள்வதற்கு நாளுக்கு ஐந்நூறு ரூபாய் உங்களுக்கு. போதுமா.? திடீரென்று வந்து கலந்துகொண்டுவிட்டுப் போய் விட்டால் பிறகு கூட்டத்து விஷயங்களில் ·பாலோ அப் இல்லாமல் போய் விடுமல்லவா? அதற்காகத்தான் இது. குறைந்தபட்சம் மூன்று நாட்களாவது கலந்துகொள்ள வேண்டும். வேறென்ன வேலை? போய் அமர்ந்து சிறிது நேரத்தில் கூச்சல் ஆரம்பித்த பிறகு எழுந்து வருவதுதானே! ஐந்நூறு ஓகேதான். விடுங்கள்.

இப்படியே போனால் நல்ல சம்பளத்தில் அமைதியாக திளைத்து உட்கார்ந்து விடுவீர்கள்! சொந்தக்காரர்களையும் மிச்ச மீதி இருக்கும் ஊரையும் கவனிக்கவேண்டுமல்லவா? அதற்குத்தான் மாதாமாதம் 'மேம்பாட்டு படி'யாய் பத்தாயிரம் ரூபாய். இந்தத்தொகை நீங்கள் பதவியில் இருக்கும் முழுக்காலத்திற்கும் மாதாமாதம் வழங்கப்படும். கவலை இல்லைதானே! எல்லா ஊரையும் இதை வைத்து வளைத்து விடலாமே! அவகாசமும் இருக்கிறது.!

இதுபோக, வேலைக்குச்சேர்ந்த உங்களில் சிலர் படிக்காமல் இருக்கலாம், பேனா வைத்திருப்பீர்கள் அல்லவா? அது போதும்! அதற்குப் பணம் தருகிறார்கள். மாதம் மூவாயிரம் ரூபாய். இதுபோகவும் கடித செலவுகளுக்கென்று மாதம் ஆயிரம் ரூபாய். சந்தோசம்தானே! எல்லாம் இருந்தாலும் இவற்றைக் கவனிக்க ஒரு உதவியாளர் இருந்தால் நன்றாய் இருக்குமே என்று நினைப்பவரா நீங்கள்? சோகம் வேண்டாம்! அவரை நிர்ணயம் செய்வதற்கு ஆகும் செலவும் சம்பளமும் அரசாங்கமே கொடுக்கிறது. மாதம் பத்தாயிரம் ரூபாய். நாமே கூட அதில் பாதியைச் சுருட்டிக்கொள்ளலாம். எப்படி வசதி?
மொத்தமாக இதுவரை மாதம் எவ்வளவு தேறும் என்பதை நீங்களே கணக்கில் வைத்துக்கொண்டிருப்பீர்கள். அடுத்து பயணப்படி பக்கம் வருவோம்.

தனது சொந்த ஊரின் வீட்டிலிருந்து டெல்லியில் அலுவலகம் வரை செல்வதற்கும் அல்லது தன் வீட்டிலிருந்து அலுவலகக் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு நீங்கள் செல்லும் பயணத்திற்கும், பயணம் செய்யும் வழிகளைக் கணக்கில் கொண்டு பயணக்கட்டணம் தரப்படும்.ரயில் வழியாக நீங்கள் பயணித்திருந்தால் 'குளிரூட்டப்பட்ட முதல் வகுப்பு' கட்டணம் ஒன்றும் 'ஒரு இரண்டாம் வகுப்பு' கட்டணமும் (எதற்கு இது என்றெல்லாம் கேட்காதீர்கள்; கொடுக்கிறார்கள் வாங்கிக்கொள்ளுங்கள்) கொடுக்கப்படும். இதற்கு எந்த வகுப்பில் பயணம் செய்தோம் என்பதெல்லாம் அவசியமில்லை. அப்படிப்போடு என்பீர்களே! அதேதான். அவசரப்படாதீர்கள்.

எத்தனை நாளைக்குத்தான் ரயிலிலேயே பயணிக்க முடியும்? நியாயம்தானே! அலுவலக வேலையில் கலந்துகொள்ள வான் வழியாகப் பயணிக்கப்போறீர்களா? விமானக்கட்டணத்தின் 'ஒண்ணேகால் பகுதி' கட்டணம் உங்களுக்குத் திருப்பித்தரப்படும். இதுபோக கடல்வழியாகப் பயணிப்பவர்களும் இருப்பார்கள் அல்லவா? அவர்களுக்கு கட்டணத்தின் முழுப்பகுதியும் அதுபோக ஐந்தில் மூன்று பங்கு சேர்த்தும் வழங்கப்படும்.

சாலை வழியே பயணிக்கும் எளிமையான மனிதரா நீங்கள்? உங்களுக்கு 'கிலோமீட்டருக்கு ஆறு ரூபாய்' கணக்கில் மொத்தமாக கணக்கிட்டுக் கொடுக்கப்படும். அதற்காக மீட்டரை நான்கு நான்காய் ஓட வைத்தெல்லாம் ஏமாற்றமுடியாது சார். இந்தியாவுக்குள் எல்லா இடத்துக்கும் எங்கிருந்து எங்கு எவ்வளவு தூரம் என்பது எல்லோருக்கும் தெரியும்.

இருக்கட்டும். டெல்லி விமான நிலையம் வரை வந்து இறங்கியாகி விட்டது, அங்கிருந்து அலுவலகம் வருவதற்கு? அல்லது அலுவலகத்திலிருந்து ஏரோடிராம் போவதற்கு யார் கொடுப்பார்களாம்? அதற்குத்தான் ஒரு சவாரிக்கு 120 ரூபாய். புரிந்ததா? இப்போது எல்லாம் ஓகேதானே!
பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை இந்தியாவின் எந்த மூலைக்கும் நீங்கள் அலுவலக நிமித்தம் சென்று வரலாம். ஒரு முதல் வகுப்பு ரயில் பயணக்கட்டணம் அல்லது ஒரு முழு விமானக்கட்டணம் உங்களுக்குத் திருப்பித்தரப்படும். இது என்ன கொசுறு!? இருக்கிறது இன்னொரு பெரிய நலத்திட்டம் பாருங்கள்! ஆஹா!

இந்தியாவின் எந்த மூலையிலிருந்து எந்த மூலைக்கும் வருடத்திற்கு 32 முறை நீங்கள் இலவசமாக விமானத்தில் பயணிக்கலாம். அதிக வேளைப்பளு காரணமாக உங்களால் இவ்வசதியைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியாவிட்டால் கவலையே படாதீர்கள். அந்த 32 ஐ அடுத்த வருடங்களுக்கும் கொண்டு செல்லலாம். பாதுகாப்பு மற்றும் இயற்கை காரணிகளால் சொந்த இல்லத்திற்கு திரும்ப முடியாவிட்டால் உங்களது ஊருக்கு வான் வழியாக பயணித்தால் எது நெருங்கிய இடமோ அதுவரை விமானக் கட்டணம் இலவசம். இதற்கு மேல் என்ன வேண்டும்?

கண்பார்வையற்ற அல்லது உடல் ஊனமுற்றவரா நீங்கள்? உங்களோடு இன்னொருவரையும் துணைக்கு அழைத்துச்செல்லலாம் அலுவலகத்திற்கு. இருவருக்கும் விமானக்கட்டணம் இலவசம்; ரயில் கட்டணமும் இலவசம். (இதற்காக சும்மாவாச்சும் அரவிந்த் ஆஸ்பத்திரில் ஆபரேஷன் செய்துகொள்ளக்கூடாது!)

சரி டெல்லிக்குப் பயணித்து விட்டீர்கள். சில பல காரணங்களால் நடந்துகொண்டிருந்த ஒரு முக்கிய கூட்டம் பாதியில் முடிகிறது அல்லது ஒரு கூட்டம் முடிந்து அடுத்த கூட்டம் ஆரம்பிக்க சிறிது நாளாகிறது. இப்போது என்ன செய்வது? ஒன்றும் பிரச்சனை இல்லை.
இரு கூட்டத்தொடர்களுக்கும் இடையே ஏழு நாட்களுக்குள் இருந்தால் அந்த ஏழுநாட்களுக்கும் தினத்துக்கு ஐந்நூறு ரூபாய் கொடுக்கப்படும். அல்லது அந்த ஏழு நாட்களுக்குள் எங்காவது நீங்கள் குட்டி டிரிப் அடித்துவிட்டு வந்தால் கூட அந்த விமானக்கட்டணமும் இலவசம். இது எப்படி இருக்கு?
சரி, உள்நாடு வேண்டாம். வெளிநாட்டுக்குச் செல்லும் ஆசை வந்துவிட்டதா? செல்லுங்கள். தனது கடமையைச்செவ்வனே செய்வதற்காக நீ£ங்கள் செய்யும் வெளிநாட்டுப்பயணச்செலவு அனைத்துக்கும் அரசாங்கம் பொறுப்பேற்றுக்கொள்ளும். ஜஸ்ட் எஞ்சாய் மேன்!

விமானத்துறை இருக்கட்டும். இந்த ரயில்வே நிர்வாகத்திற்குத்தான் நம்மீது என்னே கருணை பாருங்கள்! ஒரு அலுவலர், இந்தியாவின் எந்த மூலைக்கும் எந்த ரயிலிலும் 'குளிரூட்டிய முதல் வகுப்பு' மற்றும் 'எக்ஸிக்யூட்டிவ் வகுப்பு'களில் தனக்கு 'இன்னொரு துணை'யுடன் எப்போது வேண்டுமானாலும் பயணிக்கலாமாம். ரயில்வே நிர்வாகம் அந்த 'பாஸ்' வழங்குகிறது. போதுமா சார்? எத்தனை வீடு இருந்தாலும் கவலை இல்லைதானே!

அதுமட்டுமா? உங்களது மனைவி அல்லது உறவினர் ஒருவர், வருடத்திற்கு 8 முறை இதே போன்றதொரு 'குளிரூட்டிய முதல்வகுப்பில்' தனது சொந்த ஊரிலிருந்து டெல்லிக்குப் பயணிக்கலாம். இந்த சலுகை விமானத்திலும் தொடரும். (பாருங்கள் சார், நெல்லுக்கு இறைத்த நீர்..மாமனார் மாமியாருக்கும் பரவுகிறது...ம்ம்)

ஊர் சுற்றியது போதுமா? அங்குமிங்கும் அலைந்ததில் காய்ச்சல், தண்ணீர்ப்பிரச்சனையால் சளிப்பிரச்சனை, அல்லது வேறு ஏதேனும் தொந்தரவு; நோயா? கவலை இல்லை. வாருங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் எவ்வளவு செலவாகியது மருத்துவத்தில்? கைமேல் காசு! திருப்பித்தருகிறது அரசாங்கம்.

வேலைக்குச்சேர்ந்த நாளிலிருந்து ஒரு சில நாட்கள்வரை உங்களுக்கு நல்ல இருப்பிடம் இல்லையா? இலவசமாகத் தருகிறது அரசாங்கம்.டெல்லியின் எந்தத் தெருவில் வேண்டும் உங்களுக்கு? அதற்குப்பிறகு டெல்லியில் இருக்கும் 84 பங்களாக்கள், 143 அடுக்குமாடி வீடுகள் மற்றும் ஹாஸ்டல்- ஹோட்டல்களில் எங்கு வேண்டுமானாலும் நீங்கள் தங்கலாம்.

வீடு மட்டும் தந்தால் போதுமா? பொறுங்கள், கோபப்படாதீர்கள்! எல்லாவற்றிற்கும் வசதி செய்து தரமாட்டோமா?

வருடத்திற்கு 25000 யூனிட் மின்சாரம் இலவசம், அனுபவியுங்கள். ஏசியை அரவணைத்துத் தூங்குங்கள். தண்ணீர்..அது வேண்டாமா? எவனாவது எங்காவது தண்ணீர் இல்லாமல் நாக்கு வரண்டு இறந்தால்...நமக்கென்ன? 2000 கிலோலிட்டர் வருடத்திற்கு. அள்ளிக்குளியுங்கள். ஆடுங்கள். பாடுங்கள். ஆனந்தமாயிருங்கள்.

உங்களது பெயர் மஸ்டர் ரோலில் சேர்ந்துவிட்டதா? போதும்! பிடியுங்கள், இரண்டு தொலைபேசி இலவசம் உங்களுக்கு, உங்களது பெயரில். வருடத்திற்கு ஒரு லட்சம் அழைப்புகள் இலவசம். யப்ப்பா!

போதவில்லையா? இண்டர்நெட் இருந்தால் வசதிப்படும் என நினைக்கிறீர்களா? இதோ..இலவச கம்ப்யூட்டர். இணைய வசதியோடு. போதுமல்லவா? பல நாடுகளுடன் எளிதாகத் தொடர்பு கொள்ளலாம், அடிப்படை வசதிகளைப் பெருக்கலாம். அன்னிய முதலீடுகளையும் அன்னியச்செலாவணியையும் பெருக்கலாம். எப்படி வசதி? என்ன சொல்கிறீர்கள்?
கன்வேயன்ஸ் அல்லவன்ஸ் வேண்டுமா? ஒரு லட்சம் போதுமா? ஆனால் இது திருப்பிப் பிடித்துக்கொள்ளப்படும். பரவாயில்லையா?

'சரி, இப்போது எல்லாம் செய்வார்கள். ரிடயர்டு ஆனால்? எப்படி? என்ன செய்து தரும் இந்த அரசாங்கக் கம்பெனி?' என்ன சகோதரரே, இவ்வளவு செய்து கொடுக்கும் செல்வச்சீமான்கள் அதற்கும் ஒரு நல்வழி காட்ட மாட்டார்களா? மனசாட்சி இல்லையா அவர்களுக்கு? கேளுங்கள்!

நான்கு வருடங்கள் நீங்கள் வேலை பார்த்தால் போதும். உங்களுக்கு மாதம் 3000 ரூபாய் பென்ஷன் கடைசிக் காலம் வரை. அதற்கு மேல் நீங்கள் ஆண்டு அனுபவித்த ஒவ்வொரு வருடத்திற்கும் 600 ரூபாய் சேரும். இல்லை குறைந்தது இரு ஐந்து வருடங்கள் அலுவலக வேலை பார்த்தீர்களா? அடித்தது லக்கிப்பிரைஸ். பத்தாயிரத்து ஐந்நூறு ரூபாய் மாதம். போதுமா பென்ஷன்?! இருங்கள், தலை சுற்றிக் கீழே விழுந்து விடாதீர்கள். எடுத்தவுடன் 'ரிடயர்டு' ஆக்க முடியாது உங்களை. தயவுசெய்து யாரும் அடம் பிடிக்காதீர்கள்.

சரி, வேலைக்காலத்திலே தகாத முறையில் ஏதாவது ஆகி இறந்துவிட்டோம் எனில்.. கவலையே இல்லை. நமது மனைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு. போதாதா?
பெருமூச்சு விட்டு முடிந்தாகிவிட்டதா? ஆசுவாசப்படுத்திக்கொள்ளுங்கள். இனி உங்களுக்குத்தான் அத்தனையும். எப்போது இவையெல்லாம் கிடைக்கும் என்கிறீர்களா? அவசரப்படாதீர்கள்!

எல்லாவற்றிற்கும் காலம் வரவேண்டாமா? மாயாவதிகளுக்கும் லல்லுகளுக்கும் முலாயம்களுக்கும் மற்றும் இன்னபிற தேசத்தலைவர்களுக்கும் "மூடு" வரவேண்டாமா? உடனேயா கவிழ்க்க முடியும்.?
அடுத்த எம்.பி நீங்களாய் இருக்க எல்லாம் வல்ல அரசியல் கடவுளைப் பிராத்தியுங்கள். குருபகவான் உங்களைக் கைவிடமாட்டார்.

வாழ்க ஜனநாயகம்! வளர்க லோக் சபா ராஜ்ய சபா உறுப்பினர்கள்!


Saturday, October 02, 2004

மகாத்மாவுக்கு ஒரு மனிதனின் அஞ்சலி.

மகானே!

மீண்டும் பிறந்து வா!
குண்டுகளுக்கும்
தோட்டாகளுக்கும் பயப்படாதவன் நீ!
ஆகையால்
மீண்டும் பிறந்து வா!

தலைவனை இழந்து துயரப்படும்
குழந்தைகள் நாங்கள்!

'இன்று' எங்களுக்கு
எல்லாவற்றையும் கற்றுத்தருகிறது

அம்மை அப்பனை
முதியோர் இல்லத்தில் சேர்க்க!
சகோதரனை சொத்துக்காக
ஹர சம்ஹாரம் செய்ய!
மனைவியை மந்தையாக்க!
எதிரிகளை முதுகில் குத்த!

என எல்லாவற்றையும்
இன்றைய இன்று எங்களுக்குக் கற்றுத்தருகிறது.

விலைமகளிடம் போய்விட்டு
விலை போகாமல் வந்தவன் நீ!

இன்று விலைமகளிடம் போய்விட்டு
விலைகொடுத்து வாங்கி வருகிறோம் நாங்கள்!
காலத்தைப் பார்த்தாயா மகானே!

வா! வந்து படித்த சிலருக்கேனும்
வாழும் வகையைச் சொல்லிவிட்டுப்போ!

ஏனெனில்
இவர்களெல்லாம்
ராமாயாணத்தையும் படித்துவிட்டு
கோயிலையும் இடிக்கிறார்கள்!
குரானையும் படித்துவிட்டு
குண்டும் வைக்கிறார்கள்!

மீண்டும் வா!
இன்னொரு கோட்சே எங்காவது இருப்பான்!
அவனிடம்இம்முறை என் முறை சாக என்கிறேன்!
பயப்படாமல் வா!
உனது தோளுக்கு காவலாகவும்
கொள்கைக்கு கோட்டையாகவும்
இன்று நானும் இருக்கிறேன்.

எம்.கே.

ஒரு ஷாம்பும் ஒரு நிகழ்வும்

சென்ற வாரத்தில் ஜெயலட்சுமி எத்தனை முறை தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் வந்தார் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். (தெரியவேண்டுமல்லவா?! சரித்திரத்தில் இடம் பிடிக்கும் முக்கிய நிகழ்வு அல்லவா அது?) ஜெயலட்சுமி கமகமவென்று ஷாம்பு போட்டு குளித்து கூந்தல், காற்றில் மோகனராகம் பாட பளிச்சென்று காட்டன் சேலையில் வந்து விரிந்த இதழ்களோடு சென்னை உயர்நீதிமன்றத்தில் இறங்கிய செய்தியை படித்தபோதும் பார்த்தபோதும் எரிச்சல் அதிகமாக, அட! என்னமா (இன்னும்) இருக்காய்யா என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள் சக அறைவாசிகள். அதெல்லாம் இன்றைய இன்றுக்கு நிரம்ப முக்கியம் பாருங்கள்! இனி என்ன ஷாம்பூ போட்டார், எப்போது குளித்தார், எத்தனை முறை குளித்தார் என்றெல்லாம் விளம்பரம் வரலாம். சினிமாவில் நடிப்பீர்களா என்று வேறு அந்த மாதுவிடம் கேட்கிறார்கள்!

அதெல்லாம் பற்றி நான் சொல்ல வரவில்லை.

ராஜா ராமண்ணா என்றொருவர் கடந்த வாரம் இறந்து போனார் அது எத்தனை பேருக்குத் தெரியும் இங்கே? அந்த ராஜா ராமண்ணா யார் தெரியுமா?

1925 ல் கர்நாடகாவில் பிறந்தவர். சென்னைப் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்று லண்டன் சென்று ஆராய்ச்சியில் டாக்டர் பட்டம் பெற்று மீண்டும் இந்தியாவிற்கு வந்து (கவனிக்கவும், மீண்டும் இந்தியாவிற்கு வந்து) டாக்டர் பாபா ஆராய்ச்சிக்கூடத்தில் இணைந்தவர்.

1965 முதல் 1968 வரை இந்திய அணுகுண்டு வளர்ச்சியில் முக்கியப்பங்காற்றியவர்.

1974ல் இந்தியா முதல் அணுகுண்டு சோதனை நடத்தியபோது (இந்திராவின் ஆட்சிக்காலத்தில்) முக்கிய பொறுப்பில் இருந்தவர்களில் அவரும் ஒருவர்.

1990களில் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு தொழில்நுட்ப ஆலோசகராகவும் இருந்தவர்.

எல்லாவற்றிற்கும் மேலாக நமது பாரத முதல் குடிமகனின் ஆசான் வேறு!

அப்படிப்பட்டவர் இறந்து போன செய்தி ஜெயலட்சுமியின் கூந்தல் வாசத்தில் தடம் பிறழ்ந்து போகிறது! என்னே மரபு இது! கேவலம்!

எம்.கே.

ஒரு கவிதை

என் நண்பன் யாரென்று சொன்னால்
என்னைப் பற்றிச் சொல்வேன்என்றார்கள்.

குருதி தோய்ந்த காயங்களை
மௌனம் தைத்த உதடுகளுக்குள்
புதைத்துவிட்டு,
வார்த்தைகள் இழந்து
ஜன்னலின் இந்தப் பக்கம் நான்!

வைத்துக்கொள்ள ஏதுமின்றி
எல்லாம் கொட்டித் தீர்க்கும்
ஜன்னலின் அந்தப் பக்கம் மழை!

அறுக்க முடியாத ஆயிரமாண்டு இழை
நீடிக்கிறது மழைக்கும் பெண்களுக்கும்!


இந்த கவிதையை எழுதியவர் தாமரை! கவிதையில் பூதாகரம் காட்டும் விஷயம் எதுவுமில்லை என்னும் போதிலும் ஒரு நிமிடம் கவிதை ரசிக்க வைக்கிறது. இந்த வார விகடனில் தாமரையின் மற்ற கவிதைகளை விட இது கொஞ்சம் பரவாயில்லை.
எம்.கே.

Thursday, September 23, 2004

எனக்குப்பிடித்த மனிதர்களில் ஒருவர்.

தெருவில் ஐஸ் அல்லது பொறி உருண்டை விற்றுச்செல்பவரைப் போலத்தான் உங்களுக்கும் ஏன் எனக்கும் கூட அவரைப்பார்த்தால் தோன்றும். அன்னாருடைய தோற்றம் அப்படி. தோற்றம் மட்டுமே எப்படி ஒரு மனிதனுக்குத் தவறான முதல் முகவரியையோ அல்லது முதல் அபிமானத்தையோ தரவல்லது என்பதை அவரைக்கொண்டும் நான் அறிந்துகொள்ளும்படி இயற்கை எனக்கு கற்றுவித்திருக்கிறது.
மாதத்தின் முப்பது நாட்களில் இருபத்தைந்து நாட்கள் வெளியூர்ப்பயணம். தொடர்ந்த சிலமணி நேர பயணங்களுக்கே நாமெல்லாம் நொந்து நூலாகிப்போகிறோம். தண்ணீர் முதல் வாந்தி எடுத்தால் பிடித்து வைப்பதற்கு பிளாஸ்டிக் கவர் வரை சேகரித்துக்கொண்டு கிளம்புகிறோம். இதற்கிடையில் ஜன்னலோர இருக்கைகளுக்காக குருஷேத்திரங்களையும், பாபர், அக்பர்களை மிஞ்சும் வகையில் பானிபட்டுகளையும் கூட நம்மில் பலர் நடத்துகிறோம். ஆனால் இவர்?
அறுபத்தொன்பது வயது. உடலுக்குத்தான் அது. மனதுக்கு? இருபத்தைந்துதான் இருக்க வேண்டும். கோட்டை முதல் குமரி வரைஇன்னும் பொதுக்கூட்டங்கள், பேரணிகள்; ஊர்வலங்கள். கலைஞரைப்போல வயதுக்குகந்த கார்களையோ இருக்கைகளையோ பயன்படுத்துவதில்லை இவர். கார்களைப் பயன்படுத்தும் அளவுக்கு வசதியும் இல்லாதவர், அவற்றைக்கொடுக்கும் நிதி படைத்த கட்சிகளையும் சாராதவர். பதினெட்டு வயதிலிருந்து ஒரே கட்சி கம்யூனிஸ்ட் கட்சி; ஒரே பணி மக்கள் பணி. வாரிசுகளை ஓட்டுச்சாவடிக்கே செல்லவிடாமல் மத்திய மந்திரிகளாக்கும் மரபு தலைவிரித்தாடும் வகையில் இவர் எல்லா அரசியல்வாதிகளையும் விட புனிதமானவர்.
அண்மையில் அவருடைய மனைவியின் பேட்டி ஒன்றைப் பத்திரிகைகளில் படித்தேன். செல்லம்மாவின் வழி வாரிசுகளில் இன்னும் ஒருவர். அறுபத்தொன்பது வயதிலும் மக்கள் பணியாற்றும் ஒரு மகானுக்கு மனைவி. நல்லதுக்கும் கெட்டதுக்கும் கணவன் அருகினிலே இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கும் சராசரிப்பெண்களின் ஒருத்தியாய் எதிர்பார்த்து வந்திருப்பார். நடப்பதை முழுமனதோடு ஏற்றுக்கொண்டு எங்கிருந்தாலும் உடம்பைக் கொஞ்சம் கவனித்துக்கொள்ளுங்கள் என்றவாறு அன்போடு அரவணைத்துப்போகும் இல்லத்தரசியாய் இப்போது அவர். நான்கு வேட்டிகள் மட்டுமே தன் கணவர் வைத்திருப்பதாகச் சொன்னார். நான்கு வேட்டிகள்! கம்பிகளில் தொங்கும் ஆடை வகைகளைக் கொஞ்சம் பார்த்தபடி இதை நாமும் கொஞ்சம் யோசிக்கவேண்டும்.
இலக்கியவாதிகளின் பின்பாகத்தையும் அரசியல்வாதிகளின் முன்பாகத்தையும் கொண்டு அரசியலில் நீச்சலடிப்பார் பலர். வெஞ்சினத்தைப் பின்புறம் வைத்து வெற்றிச்சிரிப்பை முன்புறம் வைத்தும் அரசியல் நடத்துவார் சிலர். எப்போதும் ஆணவத்தின் முகமாக தலைநிமிர்ந்து அகங்காரத்தின் உருவமாக இருப்போரும் கூட அரசியலில் இருக்கிறார்கள். ஆனால் இவர்?
ஆத்மார்த்தமாக நாம் ஆசைப்படும் எந்த நல்லவிஷயமும் நமது முயற்சியின்றியும் கூட நம்மிடம் வந்துசேருமாம்; நடக்குமாம்.
எப்போதாவது இவரைச் சந்திப்பேன் என நினைத்துக்கொண்டே இருக்கிறேன். அப்போது சாஷ்டாங்கமாய் காலில் விழுந்து வணங்க வேண்டும்.மக்கள் மனங்களின் மந்திரி திரு. நல்லகண்ணு அவர்களுக்கு என் வணக்கங்கள்.
எம்.கே.

Thursday, September 16, 2004

எனக்குப்பிடித்த நாட்களில் ஒன்று.

எம்.கே.
செப்டம்பர் மாதத்தில் எனக்கு எப்போதும் பிடித்த நாட்கள் இரண்டு. ஒன்று ஈஸ்வரன் சாருடைய மூத்த பையன் தினமாக வரும் சதுர்த்தி நாள். அன்று பெரிதாக ஏதும் செய்யாவிட்டாலும் கொஞ்ச நேரமாவது 'சும்மா' உட்காந்திருப்பேன். இரண்டாவது நாள் செப்டம்பர் பதினாறு.
இந்த பதினாறுக்கென்று எப்போதும் ஒரு 'கிக்கு' உண்டு. பன்னிக்குட்டி கூட பமீலா ஆண்டர்சன் மாதிரி தெரியுமாம் 16 ல். (நன்றி: ரங்கண்ணா) நான் பார்த்ததில்லை. அதுபற்றியும் ஏதும் தெரியாது. பதினாறு வயதில் வந்துபோன சீப்புக்கொடுத்த 'மயில்கள்' தெரியும். கோபாலகிருஷ்ணன் என்று எனக்கு பெயர் வைக்க வரவில்லை அந்த மயில்கள். சப்பாணி என்று வைக்க (அட! செல்லமாத்தான்ப்பா!) வந்த மயில்கள் அவை. மயில்கள் இருக்கட்டும், அது எப்போதும் வரும்; போகும்; இருக்கும். கதைக்கு வருவோம்.
செப்டம்பர் பதினாறில் அப்படி என்ன விஷேசம்? தி.மு.க வருடா வருடம் முப்பெரும் விழா கொண்டாடுகிறதே அதுதான் ஸ்பெசலா? செப்டம்பர் 15 ல் பிறந்தார் ஒரு அண்ணா தெரியுமா? அந்த அண்ணா பண்ணிய நல்ல வேலைகளில் ஒன்று 17 ல் நடந்தது. திராவிட முன்னேற்ற கழகம் பிறந்தது. பிற்காலத்தில் கீதைக்கு புது விளக்கம் சொல்லும் அளவுக்கு(!?) பல நல்ல தலைவர்களை உருவாக்கி விடும் அளவுக்கு கழகம் வளர்ந்தது. ஆக செப்டம்பர் 15 அண்ணா, செப். 17 திமுக. முப்பெரும் விழாவுக்கு இருகாரணங்கள் ரெடி. மூன்றாம் காரணம் வேண்டாமா? வந்தாரய்யா வந்தார் வெண்தாடி வேந்தர். தி.மு.க பிறந்த அதே 'செப்டம்பர் 17' ல் பிறந்தார். தி.மு.க வுக்கு முப்பெரும் விழா. அது சரிப்பா. 16 க்கு என்ன விஷேசம்?
இந்தியாவின் பொருளாதரப்புலி மன்மோகன்சிங். அவருக்கடுத்த பொருளாதார 'அஸிஸ்டண்ட் புலி'யான ப.சிதம்பரம் செப் 16 ல் பிறந்தார். புதிய பொருளாதாரக்கொள்கை பிறந்தது. பெப்சி வந்தது. சரி சந்தோசம். அது மட்டும்தானா?
அட! அதையெல்லாம் விடுங்கள். மீராவைத்தெரியுமா உங்களுக்கு? மீராவாக நடித்த எம்.எஸ்.எஸ் அம்மாவை? கேட்காத காதுகளிலும் புகுந்து செவியின்பம் தரவல்ல பாரதரத்னா எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா பிறந்த நாளாம் இன்று. ஆஹா! பாரதரத்னாவா? ம்ம். வேறு ஏதேனும்?
இருக்கிறதே, இந்திய காளைகளின் ஒரு காலத்து கனவு கன்னியும் இன்றைக்கு ஜப்பானிய இளவல்களின் கனவுலா நாயகியுமான 'கண்ணே மீனா, மீனே கண்ணா?' கவிதையின் மீன் கண்கள் நாயகி மீனா செப்டம்பர் 16 ல் பிறந்தாராம். ஆஹா! கொடுத்த வைத்த பதினாறய்யா! வேறு ஏதும் இருக்கிறதா? இருக்கத்தான் வேண்டுமா? அட! அவசரப்படாதீங்க!
இதெல்லாம் ரெக்கார்டுகள் சொல்வது. எனக்குத்தெரிந்த (ஆனால் அவருக்கு என்னைத் தெரியாத) ஒருவருக்கும் இன்றைக்குத்தான் பிறந்த நாளாம். சிங்கப்புராவை சிங்கப்பூராக்கியவர். இப்படி ஒருவர்தான் இப்போது இந்தியாவுக்கு வேண்டும் என்று நான் நினைக்கும் மிகச்சிறந்த தலைவர்களில் ஒருவரான மூத்த அமைச்சர் லீ குவான் கியூ. ஆஹா! இந்த தினத்தில் ஏதோ விஷயமிருக்கிறது! அது நிச்சயம் தெரிகிறது. ஆனால்..?
'அட...எல்லாம் சரிப்பா! இன்றைய இன்று உனக்கேன் பிடித்தது? அதற்கு காரணம் சொல்லு!?' என்று நீங்கள் கேக்கலாம். என்ன சொல்வது? ஏதோ பிடித்திருக்கிறது.
(பின்னணியில், 'எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்...'பாடல் ஒலிக்கிறது!)
எம்.கே.

Wednesday, September 15, 2004

திருந்துங்கள் தந்தைகளே!

கடந்த ஒரு வார காலத்தில் நான் படிக்கும் இரண்டாவது செய்தி இது. காதலித்துத் திருமணம் செய்துகொண்ட தனது பெண்ணின் தலையை வெட்டிய தந்தையர்கள். காரணம் என்ன பெரிதாய் இருக்கப்போகிறது? வேற்று ஜாதிகள். வேறு உறவுமுறைகள்.
கம்ப்யூட்டரில் பார்த்து கம்ப்யூட்டர் வழியே பேசி கண்டம் விட்டு கண்டம் தாண்டியெல்லாம் திருமணம் நடந்துகொண்டிருக்கும் இக்காலத்தில் இன்னும் காதலுக்குப் பகைவர்களாய் இருந்துகொண்டிருக்கும் இவர்களை நினைத்தால் அய்யோ பாவம் என்றும் அவர்கள் செய்யும் செயலை நினைத்தால் ஆத்திரமும் கோபமும் வருகிறது.
அண்மையில் சென்னை விமான நிலையத்தில் ஒரு காட்சி என்னைக் கொஞ்சம் சுவாரஸ்மாக்கியது. ஐரோப்பிய தேசத்துப்பெண் டார்க்புளூ ஜீன்ஸ¤ம் வெளிர் ஊதா டிஷர்ட்டும் போட்டுகொண்டு மலங்க மலங்க விழித்துக்கொண்டிருக்கிறார். மலங்க மலங்க விழித்தலில் பயமோ அல்லது வேறு எந்த நடுநடுக்கமோ இல்லை. பார்க்கும் எல்லோரிடமும் சின்ன வாஞ்சையோடு அல்லது எதிர்பார்க்கும் உறவுப் பாளமான சிறிய புன்னகையோடும் நிற்கிறார். அருகில் நின்றிருக்கும் வாலிபர் முகத்தில் 'ஹாலிவுட் படத்தை டைரக்ட் செய்யும் பொறுப்பு' வந்துவிட்டதைப்போன்று முதிர்வு. புன்னகையை எதிர்பார்த்துக்காத்திருக்கும் அவருக்கு அங்கீகரிக்கப்பட்டதன் அடையாளமாக நானும் ஒரு மெல்லிய புன்னகையை நழுவி விட்டுச் செல்கிறேன். அவருக்குப் பெருமை. தனது கணவரின் முகத்தைப் பார்த்துவிட்டு டார்க்புளூ டி ஷர்ட்டுக்கு மேலே தொங்கும் மஞ்சள் நிறத்தாலியை விரல்களால் இதமாகத் தடவிக்கொள்கிறார். ஆஹா!
மேல்தட்டு மக்கள். வாழ்க்கையில் எது முக்கியம் என்பதைப் புரிந்துகொண்டவர்கள். இச்சமுதாயத்தின் வாய்ப்பூச்சுகளுக்கும் வாய்ப்பேச்சுகளுக்கும் 'ஸீயு' என்ற ஒற்றை வார்த்தையைப் பதிலாக்கி விட்டுச்செல்பவர்கள். வெளிநாடுகளில் இருந்து வரும்பொழுது ஏதும் வாங்கிவராவிட்டாலும் வாங்கி வந்தாலும் ஏதாவது குறை சொல்லும் இவர்களைப் பற்றி அவர்களுக்கு நன்றாகத்தொ¢ந்திருக்கிறதன் விளைவே இந்த ஜஸ்ட் ஸீயூ.
சாராயக்கடையின் நேற்றைய பாக்கியை ஓடிப்போன மகளின் வழி சொல்லிக்கேட்டிருப்பான் சாராயக்கடைக்காரன். அவனை ஒன்றும் செய்யமுடியாது. வீட்டில் வந்து மூளை சாய்ந்த நிலையில் நல்ல பசி மயக்கத்தில் திடுமென்று ஆவேசம் வந்து எழுந்து அரிவாளை எடுத்திருப்பார்கள். பொத்தி பொத்தி வளர்த்த கணங்கள் கண்ணுக்குள் வராது. வயிற்றின் நாளைய கூப்பாடுகளும் தேடுதல் தேவைகளும் அப்போது தோணாது.
வெட்டிய பிறகு அவரது நிலையில் அதிரடி மாற்றங்களோ அல்லது மனசு சமாதானக்கூண்டாகவோ ஆகிவிடாது. அல்லது அவரை அந்நிலைக்குத்தள்ளிய இச்சமுதாயத்தின் வாயிலும் அடப்பாவி என்ற ஆச்சரியக்குறியும் பழிச்சொல்லும் மட்டுமே வந்து நிற்கப்போகிறது. அப்படியிருக்க என்ன காரணத்தினால் இப்படிச்செய்கிறோம் என்பதை அவர்கள் ஒரு நிமிடம் யோசித்தால் போதாதா?
அட, என்னய்யா வேண்டும் உமக்கு? நன்றாய் உமது மகள் வாழவேண்டும் அவ்வளவுதானே? கூப்பிடு. உனது பெண் காதலிக்கும் பையனைக் கூப்பிடு. மனதாரப் பேசு. அவளை வளர்த்த கதையைச்சொல். கஷ்டத்தைச் சொல். உனது தேவையைச் சொல். புரிந்துகொள்கிறானா பார். உனது மகளின் மனதைப் பக்குவப்படுத்து. நிதானமாகப் பேசு. இதிலெல்லாமா உனது மகளிடம் நீ பேசக்கூடாது?
காதல் என்பது என்ன ஐயா? அழகான உணர்வுகளின் நீட்சி இல்லையா? உனது உண்மையான உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமலா இருப்பாள் நீ பதினைந்து வருடங்கள் பொத்திப்பொத்தி வளர்ப்பவள்? காதல் உணர்ச்சி கொண்டவள்? ஜாதி மாறிப்போவதைச் சாடி ஏசும் சமுதாய மாக்களா உனக்குச் சோறு போடப்போகிறார்கள்? உனக்கு நல்லது கெட்டது செய்யப்போகிறார்கள்?
ஒரே ஒரு நிமிட யோசனை எவ்வளவு அழகான வாழ்வை நிர்மாணிக்கிறது பாருங்கள்!
எம்.கே.

Monday, September 13, 2004

புதுசா கண்ணா புதுசா?

எம்.கே.
ஆனந்த விகடனின் பின் தொடரும் வாசிப்பாளர்களுக்கு நான் சொல்லாவிட்டாலும் கூட அழகான மயிற்தோகையில் ஆங்காங்கு வெளுத்த நிறம் மருகி மிகுந்து வருவது போல ஒரு நுழைவு மனதில் ஏற்படக்கூடும். இந்த வெளுப்பு ஏதோ திடீரென்று தோன்றியதாயல்லாமல் சாயம் போவது போன்று காலத்தோடும் பயன்பாட்டோடும் பின்னிப்பிணைந்து உருமாறி வருகிறது என்பதைக் கொஞ்சம் ஆழ்ந்து கவனிக்க வேண்டியுள்ளது.
அட்டை டு அட்டை வரை கிளுகிளுப்புப்படங்களையும் அதுசார்ந்த விவரிப்புகளையும் தாங்கி வந்த பத்திரிகைகளின் வரிசையிலிருந்து கொஞ்சமேனும் விலகி 'நாடார் கடையில் வாங்கும் விளம்பரமற்ற தரம் படைத்த பொருட்கள்' போல இருந்து வந்த அதன் இடம் இப்போது சராசரிக்கடையை ஒத்திருக்கிறது. சிலசமயங்களில் சாக்கடையையும்.
சிறுகதைகளைக் குறுக்காக வெட்டி புதுச்சிறுகதைகளைப் படைக்க ஆரம்பித்துவிட்டார்கள். படிக்கவே வெறுப்பாயிருக்கிறது. ஹாலிவுட், ரொமான்ஸ், விகடன் க·பே மற்றும் இன்னபிற நாகரீக தலைப்புகளின் வழியே இன்றைய மல்லுக்கட்டுக்குள் அவர்களும் தாவிக்குதித்து விட்டார்கள். செய்தி இல்லாமல் வரும் பின் அப் படங்களும் கூட ஏதாவது வழிந்தோடும் விமர்சனத்தோடு வளைய வர ஆரம்பித்துவிட்டன. இதுபோக மற்றவைகளும் சினிமா வழியாய் டிவி வழியாய் அனு அக்கா ஆன்ட்டி வழியாய் எளிதாக மேலாடையின்றி நடனமாடத் துவங்கிவிட்டன.
இந்த மல்லுக்கட்டுக்கிடையில் இலக்கிய உலகிலும் நிற்பதாய் காட்டவேண்டிய அவசியம் அதற்கு. ஜெயமோகனும் எஸ் ராமகிருஷ்ணனும் கொஞ்ச காலம் அந்த வேலையைச் சிறப்பாகச்செய்தார்கள். இதுபோக சன் டிவியில் மாதச்சம்பளம் வாங்கும் சாலமன் அய்யா போல விகடனில் சுஜாதா தாத்தா கண்ணில் கிடைத்ததை, காதில் கிடைத்ததை மற்றும் இன்னபிற அ, ஆ கதைகளையும் நடப்புகளையும் எழுதி இலக்கியப் பங்கு படைத்து வருகிறார். (இருமகன்கள் அமெரிக்காவில் இருக்கிறார்கள். எழுபதாயிரத்துக்கு இந்த இதழ் வழி கையேந்துகிறார்!)
இந்த இலக்கியப்பங்கை இன்னும் சிறப்பாகச்செய்ய அவ்வப்போது முயன்று கேவலப்படுத்திக்கொள்கிறது விகடன். இதன் தொடர்ச்சியாய் இப்போது பிரபல கவிஞர்களின் கவிதைகள் வாரா வாரம் வருகின்றன. அந்த வரிசையில் கபிலன், யுகபாரதி, பழனி பாரதி இன்னும் சிலரது கவிதைகளைப் படைக்கும் வாய்ப்புக் கிடைத்தது அண்மையில். எப்படிசொல்வது? கேவலம். சில கவிதைகளைக் கவிதைகள் என்று சொல்வதற்கே மனம் கூசுகிறது. மிகவும் சாதாரண வரிகளாய் ஒப்புக்கு மாவிடிக்கும் உப்பாத்தா போல வந்து போகின்றன அவை. கவிதைகள் வேண்டும் என்று கவிஞர்களிடம் கேடபதற்கு முன்னால் சற்று காலம் கொடுத்தாவது நல்ல கவிதைகளாய்க் கொடுங்கள் என்று கூற வேண்டாமா?
அன்மையில் நான் படித்த சில மரத்தடிக்கவிதைகள் கூட இந்த வரிசையில் மிக உயரத்தில் நன்றாக இருப்பதாய்த்தோணுகிறது. குறிப்பிடத்தகுந்தவர்களாய்ச் சொல்லவேண்டுமெனில் மீனாக்ஸ்ஸினுடையதும் ஷக்தியினுடையதும் ஆகும். இதுபோக இணையத்தில் இன்னும் சில எதிர்பாராத இடங்களில் செந்தாமரைகள் போலக் காணக்கிடைக்கின்றன சில அழகான கவிதைகள். இந்த வரிசையில் கவிதைகள் மட்டுமின்றி கட்டுரைகளும் உண்டு.
அவை பற்றிப் பிறகு பேசலாம். இப்போது விகடனுக்கு வருவோம். என்ன ஆனது விகடனுக்கு? இருப்பவர்கள் எல்லோர் பெயரும் ஏதாவதொரு ஆசிரியப்பொறுப்பில் இருக்கின்றன. எல்லா நிருபர்களையும் ஆசிரியராக்கிவிட்டார்களா? என்ன நடக்கிறது என்பது புரியவில்லை.
பின்னொரு நாளில் தொகுப்பாய் விற்றுக் காசு பண்ணும் வகையில் விகடனுக்கே உரிய புதுப்புது தொடர் கட்டுரைகளில் மட்டுமே அதிக கவனம் எடுத்து வரும் விகடன் இதுபோன்ற மற்ற விஷயங்களிலும் கொஞ்சம் கவனமெடுத்துச் செய்யவேண்டும். ஒரு சாதாரண வாசகனின் விருப்பம் அதுதான்.

Tuesday, August 24, 2004

ஐத்தான்....

வெண்ணிலா(ப்ரியன்)

ஆச வெச்ச ஐத்தானே அரும்பு மனசு ஐத்தானே
மீச வெச்ச ஐத்தானே மெட்டி போட்ட ஐத்தானே
காசு மால வாங்கித்தந்த ஏங் கண் நெறஞ்ச ஐத்தானே
நேசம் மறந்து நெலை மறந்து போனதெங்கே ஐத்தானே

தோளு பட்ட நம்பட்டியும் ஒங்ககாலு பட்ட தோல்செருப்பும்
வாளு பட்ட வாழ மரமா வாழ்வழிஞ்சி கெடக்குதைத்தான்
ஆளு நீங்க நடக்கயில ஆறடி போயி நின்னவன்ல்லாம்
தேளு மாதிரி வேட்டி தூக்கி தெருவுக்குள்ளே போறானுக

ஊருக்குள்ளெ ஒங்க மொகம் பாக்காத செடியும் கொடியும்
சேறுக்குள்ளெ ஒங்க பாதம் தழுவாத நாத்தும் நடவும்
தேருக்குள்ளெ இருந்தாலும் தெருவுலெ கெடந்தாலும்
மாருக்குள்ளே என்னப்போல உங்க மனசெ வெச்சிக் காத்துருக்கு

போன எடம் சொல்லலியே பொரண்டு படுத்தா விடியலியே
ஆன மட்டும் சொல்லிப்பாத்தும் அழுத மாரு தூங்கலியே
போன கதை வந்த கதை பொழுது சாஞ்சி பாத்த கதை
வானம் பாத்த நெஞ்சில் சாஞ்சு வசதியாத்தான் பேசலியே

அழுக்கு திண்ணா அயிர கொழம்பும் முருங்கப்பூ ரசமும் வெச்சி
பழுப்பில்லாத முல்லப்பூவா புது அரிசிச் சோறும் வெச்சி
முழு நெலவு ராத்திரில கண் விழிச்சிக் காத்திருக்கேன்
முழுகாம இருக்கு மனசு முங்கிக் குளிக்க ஆச ஐத்தான்

ஆத்துக்கர ஆலமரம் ஏம் முதுகு தொட்ட ஆலம்பழம்
ஒத்தவீட்டு மாட்டுவண்டி அது ஏத்தி வந்த வெக்கெ கட்டு
மத்தியான வெய்யிலிலே எம்மாரு பாத்த மாங்கா மரம்
பத்த வெச்சி விட்டுட்டீகளே இனி எம்புட்டு ரா கூப்பாடோ

அச்சப்படும் பச்சக்கிளி கோபக்கார மச்சாங்கிளி
இச்சையோட தவிக்கையில எம்மனசு ஊருதைத்தான்
எச்சி பட்டு பூத்த பூவு ஏகத்துக்கும் ஏங்குதைத்தான்
மச்சான் நீங்க வந்தீயன்னா மறுபடியும் நா வயசுக்கு வாறேன்

வெண்ணிலா(ப்ரியன்)

Monday, August 23, 2004

முதல் அனுபவம்..

எம்.கே.

நேரம் மதியம் இரண்டு மணி. முதல் அனுபவம். கொஞ்சம் படபடப்பு இருக்கிறது.

பின்னாலிருந்து என் தோள் மீது விழுகிறது கை. சிரித்துக்கொண்டே சிநேகமாய் அவர். எதிர்பார்த்தவர்தான். புது அறிமுகமாய் ஒரு சிலர். நேரம் ஆகிறது. அந்த அறையின் குளிரூட்டிகள் தற்காலிகமாய் யிரூட்டப்படுகின்றன. அவரவர் மனநிலைக்கேற்றவாறு இருக்கைகள் நிரம்புகின்றன. இரண்டாவது இடத்தில் அமர்ந்திருக்கிறேன் நான். கடைசியில் இருந்து இரண்டாவது இடம்.

சுற்றும் முற்றும் பார்த்த பிறகு தெரிந்த முகங்களாய், எங்கேயோ பார்த்த முகங்களாய் சிலர். படக்கென்று வந்தமர்கிறது 'கல்கி' கூட்டணி. வெற்றிக்கூட்டணி. என்னோடு இருந்தவருடன் அறிமுகங்கள் நடக்கின்றன. நான் அமைதியாக இருக்கிறேன். ஒருசில நிமிடங்களுக்குப்பிறகு வரவேண்டிய வி.ஐ.பி.வருகிறார்.

எல்லா இருக்கைகளும் நிரம்புகின்றன. வட்டமேஜை மாநாடாய் இருக்கிறது அறை. ஆடியோ பதிவுக்கருவிகளும் புகைப்படக்கருவிகளும் ஆயத்தப்படுகின்றன. அருகில் வந்தமர்கிறது கூட்டம். இக்கூட்டத்தை சந்திப்பை ஒருங்கிணைத்த திரு. ரெ.பாண்டியன் பேசுகிறார். தெளிவான ஆரம்பத்தோடு பேச்சு. நான் நிமிர்ந்து உட்காருகிறேன்.

முன்னுரை முடிந்த கையோடு நமக்குள் நாமே அறிமுகம் செய்துகொள்ளலாமே என்று ரெ.பாண்டியன் சொல்ல, கூட்டம் கடிகாரச்சுற்றில் அறிமுகப்படுத்திக்கொள்கிறது. தெளிவான ஈழத்தமிழில் திரு.ஈழநாதன். அடுத்து சிங்கப்பூரின் பத்திரிக்கை ஆசிரியர் சிலர், கட்டுரையாளர்கள் சிலர். அவர்களைத்தொடர்ந்து கலைஞரின் மருமகன்..திரு.அரவிந்தன். அவரைத்தொடர்ந்து வருகிறது கல்கி கூட்டணி. திருமதி. ஜெயந்தி ஷங்கர் மற்றும் திருமதி.ரம்யா நாகேஸ்வரன். கடந்த கல்கி கதைப்போட்டியில் பரிசு பெற்ற கதைகளை எழுதியவர்கள். அவர்களைத் தொடர்ந்து புன்னகையும் சிரிப்புமாய் கணவரோடு வந்திருந்த மரத்தடியின் புதுவரவு திருமதி. சித்ரா ரமேஷ்.

அறிமுகப்படலத்தின் இறுதிப்பகுதியை நெருங்குகிறது நேரம். என் தோளில் கை போட்ட நண்பர், தன்னை அருள் குமரன் என்றும் இனிமேல்தான் காலம் ஒதுக்க வேண்டியிருக்கிறது காலச்சுவடு படிப்பதற்கு என்பதாயும் அறிமுகம் செய்து கொள்கிறார். அடுத்தது கஜேந்திரன் என்றொரு அருப்புக்கோட்டை நண்பர். சிறிது காலம் 'சும்மா' என்றொரு சிறுபத்திரிகை நடத்தியவர்.

இறுதியில் அந்த வி.ஐ.பி, தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறார். கண்ணன். காலச்சுவடு இதழின் எடிட்டர். உலகத்தமிழ்.காமிலும் எழுதுபவர்.

நிகழ்ச்சி முறைப்படி ஆரம்பிக்க, காலச்சுவடு இதழ் பற்றிய தனது எண்ணங்களையும் அது சார்ந்த விமர்சனங்களையும் தனது இனிய ஈழத்தமிழில் நிறைவாக எடுத்து வைத்துப்பேசுகிறார் ஈழநாதன். பேச்சில் நிரம்பி ததும்பி வழிகிறது இனிமையான ஈழத்தமிழ். கேட்கவே சுகமாயிருக்கிறது. செய்திகளின் சாராம்சத்தைக் குறித்துக்கொண்டு பதில் சொல்ல வருகிறார் திரு. கண்ணன்.

அடுத்து திரு.கண்ணபிரான். சிங்கப்பூரின் கட்டுரையாளர். இனிய தமிழில் வாயார வாசிக்கிறார். கமலின் குருவான பாலச்சந்தரின் நினைவை எழுப்புகிறது அவரது குரல். 1988 ஆம் ஆண்டு வெளிவந்த முதல் காலச்சுவடின் ஆசிரியர் பக்கத்தில் காலச்சுவடு ஆரம்பிக்கப்படும் நோக்கம் பற்றி திரு.சுந்தர ராமசாமியின் கட்டுரையின் ஒரு பகுதி வாசிக்கப்படுகிறது. தீர்க்கமான ஒரு முடிவின் ஆரம்பம் மிகத்தெளிவாய் இருக்கிறது அவற்றில்.

மூன்றாவதாய் வாசிக்க வருகிறார் திருமதி.சித்ரா ரமேஷ். ஆங்காங்கு நையாண்டித்தூறல்களையும் கிண்டல்களையும் தெளித்துவிட்டு சொல்ல வந்த கருத்துகளுக்கு உரமூட்டி நிமிர்கிறார். கேள்விகள் சுகிர்தா ராணியையும் அது சார்ந்த பாலியல் கவிதைகளையும் பிற விமர்சனங்களை உள்ளடக்கியதாயும் இருக்கிறது. கண்ணன் பதிலளிக்க வேண்டிய தருணம் இது.
கேள்விகள் சூழ்ந்துகொண்டன. சூழ்ந்திருந்தது புயலானாலும் பதில்கள் தெளிவாய் வருகின்றன.

முதலில் கேள்விகளின் சாராம்சம்.

1. காலச்சுவடின் முதன்மையான நோக்கம் என்ன? இன்றைய இளைய தலைமுறைக்காக ஏதேனும் செய்கிறதா அது?
2. காலச்சுவடில் ஒரு பக்கம் சார்ந்த குழு மனப்பான்மை இருப்பது போலிருக்கிறதே..நிஜம் தானா இது? எப்படி இடமளிக்கிறீர்கள்?
3. அண்மையில் வெளியான சுகிர்தராணியின் பாலியல் கவிதை வெறுமனே விரசமாய் எழுதப்பட்ட கவிதையே அன்றி வேறொன்றுமில்லை. காலச்சுவடு எப்படி இதை அனுமதிக்கிறது? பாலியல் சம்பந்தப்பட்ட கவிதைகளும் கதைகளுமே நிறைய இருப்பதாகத்தோன்றுகிறது? ஏன் இப்படி?
4. சாகித்ய அகாடமி கொடுக்கப்பட்டதற்காக வைரமுத்துவை வாங்கு வாங்கென்று வாங்கிவிட்டது காலச்சுவடு. ஏன் இதற்கு அவர்மேல் இத்தனை கடுப்பு? அவர் தகுதியற்றவரா? சாகித்ய அகாடமியின் வரையறைகள்தான் என்ன??
5. மூன்று இதழில் ஒருமுறையேனும் ஜெயமோகனைத் தொடாமல் எழுதமுடிவதில்லையே..என்ன காரணம்?
6. சுஜாதா எழுதிய புறநானூற்று உரையின் மேல் காலச்சுவடுக்கு என்ன கோபம்? ஏன் இப்படித் தாளிக்கிறது? (உண்மையில் அந்த உரையில் சில தவறுகள் இருப்பதை கேள்வியாரே ஒப்புக்கொள்கிறார்.)
7. கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போகலாமா பாடலை எழுதிய சினேகன் மன்னிப்புக்கேட்டது தவறு என்கிறீர்கள்..அப்படியானால் அது நல்ல பாடலா?
8. உலகத்தமிழ். காமில் இன்னும் கொஞ்சம் சிறப்புகள் செய்யலாமே?!
9. இணையத்து எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பிதழ் ஏதும் கொண்டு வரும் திட்டம் இருக்கிறதா?
10. இளைஞர்களுக்கு காலச்சுவடில் இடமளிப்பீர்களா?
11. ஒரு எழுத்தாளர் என்பதை விடுத்து தங்களது தந்தையாய் அவரிடம் தங்களுக்குப் பிடித்ததைப் பற்றிச்சொல்ல முடியுமா?

பதில்களின் சாராம்சம்.

கேள்விகள் பெரிதாய்த் தோன்றினாலும் மூன்று விஷயங்கள் மட்டும் விவாதத்தில் சூடு பறக்குமளவுக்கு முன்னேற்றம் கண்டன.

1. பாலியல் தொடர்பு கதை/கவிதை
2. வைரமுத்து-சாகித்ய அகாடமி
3. சுஜாதா- புறநானூறு

இனி விரிவான பதிலகளைப் பார்ப்போம்.

காலச்சுவடு ஆரம்பிக்கட்டதன் நோக்கம் இன்றுவரை அதன் முதல் பதிப்பில் சொல்லப்பட்டது போல கலை, கலாசார, சமுதாய மேம்பாடுகளை மேம்படுத்துவதில் முழுக்கவனமும் எடுத்து திறம்பட செயலாற்றி வருகிறது. மொத்தம் இதுவரை வந்துள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட எல்லா இதழிலும் ஒரு புதிய இளைஞருக்காவது வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

காலச்சுவடில் எப்போதும் ஒருதலைப்பட்சமான குழுமனப்பானமை இருந்ததில்லை. ஆசிரியர் குழுக்கள் அடிக்கடி மாற்றப்படுகின்றன. கதைகளைத்தேர்ந்தெடுப்பவர்களும் கவிதைகளைத்தேர்ந்தெடுப்பவர்களும் கூட மாறுவார்கள். நானறிந்தவரை அப்படி இல்லை என நிச்சயமாகச்சொல்லமுடியும். இருப்பினும் கேள்வியாளர் உறுதியோடு சொல்வதால் கவனிக்கிறேன்.

பாலியல் பற்றிய கருத்து நிதர்சனமான ஒரு கருத்து அல்ல. கோயில் சிற்பங்களிலிருந்து ஆண்டாள் வரை கம்பரிலிருந்து நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர்கள் வரை எல்லாமே இங்கு வெளிச்சம். எல்லா கருத்துக்களும் எப்போதும் சொல்லப்பட்டு வருகின்றன. இப்போது மட்டுமே இக்கூச்சல்கள் எழுவது வேடிக்கை மட்டுமேயன்றி வேறொன்றுமில்லை.
கலாப்ரியா எழுதாத பாலியல் வார்த்தைகள் இல்லை. அப்போது யாரும் எதுவும் சொல்வதும் இல்லை. ஆனால் ஒரு சுகிர்தரானியோ ஒரு மாலதி மைத்ரியோ ஒரு சல்மாவோ என்றால் கட்டையைத்தூக்கிக்கொண்டு வருகிறார்கள். ஏன் பெண்கள் அப்படியெல்லாம் எழுதக்கூடாது?புதுமைப்பெண்களாய் காட்டிக்கொள்ளும் மாதர் சங்கங்கள்தான் இன்னும் இச்சண்டைக்கு புடவையைத் தூக்கிக்கொண்டு வருகின்றன. காரணம் என்ன தெரியவில்லை.

சுகிர்தராணியின் கவிதையில் ஒன்றுமில்லை என்பதாய் சொல்வது சரியானது அல்ல. கவிதை என்பது ஒரு வாசிப்பில் புரிதல் நிகழ்ந்துவிடக்கூடிய அல்லது எல்லொருக்குமே புரிதல் ஏற்படுத்தக்கூடிய வரையறை கொண்டது அல்ல. படைத்தவரின் பார்வையில் ஒரு அர்த்தமோ, தேர்ந்தெடுத்தவரின் பார்வையில் வேறொரு அர்த்தமோ படிப்பவர்களின் மனதில் வேறொரு புரிதல்களையோ ஏற்படுத்தக்கூடியன. ஒன்றுமேயில்லை என்பது சரியில்லை. இது குறித்த திலகபாமாவின் கடிதம் எனக்கு வந்தது, அடுத்த காலச்சுவடில் அது இடம்பெறலாம்.

சாகித்ய அகாடமியின் வரையறைகள் யாருக்கும் தெரிவதில்லை. அது ஒரு அரசாங்கத்தால் நிறுவப்பட்ட அமைப்பு. ஆனால் சாகித்ய அகாடமியில் தேர்ந்தெடுக்கப்பட்டவரின் கதை 22 மொழிகளில் மொழிபெயர்ப்பாகும். அத்தகைய சூழ்நிலையில் தமிழில் தேர்ந்தெடுக்கப்படும் நூலுக்கு நல்ல தகுதிகள் இருக்கவேண்டும். தேர்ந்தெடுக்கப்படுபவரும் நல்ல இலக்கியவாதியாக இருந்தால் எல்லோருக்கும் சந்தோசம் காலச்சுவடுக்கும் சந்தோசம். கள்ளிக்காட்டு இதிகாசம் நல்ல புத்தகம். ஆனால் அந்த வரிசையில் இதை விட நல்ல புத்தகங்கள் இருக்கின்றன. நாவல்கள் வந்திருக்கின்றன. மேலும் வைரமுத்து சினிமாவிலிருந்து வந்தவர். இன்னும் சொல்லப்போனால் அவர் எழுதிய முதல் நாவலே இதுதான். இந்த தகுதிகளை முன்னிறுத்தி கட்டுரைகள் எழுதுகிறது காலச்சுவடு. மற்றபடி யாரையும் வெறுமனே தூற்ற வேண்டிய அவசியம் காலச்சுவடூக்கு இல்லை.

ஜெயமோகனின் சிலகருத்துகள் எப்போதும் விமர்சனத்துக்கு உட்பட்டன. அவற்றை எடுத்துக்காட்டுகிறது காலச்சுவடு. இதில் வேறெதுவுமில்லை.

சுஜாதாவின் புறநானூறு உரை ஏகப்பட்ட பிழைகளைக் கொண்டிருக்கிறது என்பதை நான் சொல்லவில்லை. இந்தியாடுடேயில் தொ.பரமசிவன் எழுதினார். இன்னும் அறிஞர்கள் பெரியவர்கள் எத்தனையோ பேர் சொல்லிவிட்டார்கள். அவற்றின் தரம் குறித்து சமுதாயத்திற்கு உணர்த்தவேண்டிய பொறுப்பு காலச்சுவடுக்கு இருக்கிறது. இதில் எந்த கல்லெறிதலும் இல்லை. அதிலும் முதற்பாகம் போட்டுவிட்டு, இரண்டாம் பாகம் போடாமல், முழுப்பாகத்தையும் கொண்டு வந்தது இன்னும் ஒரு பெரிய தவறு. இதற்காகத்தான் அவர் எழுதப்படுகிறாரே தவிர வேறொன்றுமில்லை.

கல்யானந்தான் பாடலால் தான் கெட்டுப்போய் விட்டதாக யாரும் சொல்ல மாட்டார்கள். ஈவ் டீசிங்கிற்கு வழி வகுக்கும் என்பதிலும் முழு உண்மை இல்லை. இதற்கு முன் எத்தனையோ பாடல்கள் வந்துவிட்டன. எம்.ஜி.ஆர் தன் பாடல்களில் காட்டிய அழகிய தமிழ் மகள்களை விட இது எவ்வளவோ பரவாயில்லை. ஆனால் அவை எம்.ஜி.ஆர் தனது கனவில் செய்வார். இப்போது அபப்டி இல்லை.

இதற்காக சினேகன் மன்னிப்புக்கேட்டது தவறுதான் எனினும் அதே பேட்டியில் பாலியல் கவிதைகளை எழுதும் பெண்களை தீயில் போட்டு பொசுக்க வேண்டும் என்று அவர் சொன்னது சினிமாக்காரர்களின் பிழைப்புக்கேற்ற நிலைதானே தவிர வேறெதுவும் சொல்ல முடியாது.

இணையத்து எழுத்தார்களுக்கான சிறப்பிதழ் போடுவது பற்றி யோசிக்கப்படும். உலகத்தமிழ்.காமில் எதிர்வினைகள் வருவது சுத்தமாக இல்லை. அதனால் அதை மேம்படுத்த இயலவில்லை. கடந்த ஐம்பது இதழ்களிலும் காலச்சுவடு புதிது புதிதான இளைஞர்களுக்கு வாய்ப்பு அளித்து வருகிறது இனிமேலும் அது தொடரும். தந்தையைப் பற்றி இங்கு பேச முடியாது. அதற்காக நாம் இங்கே அமர்ந்திருக்கவில்லை.

எல்லாம் முடிந்து எழுந்தபின் கண்ணன் எழுதிய 'வன்முறை வாழ்க்கை' அவரது கையெழுத்துடன் இலவசமாக வினியோகிக்கப்பட்டது.

இதில் எழுதப்பட்ட கட்டுரைகளில் ஜான் டேவிட் பற்றிய கட்டுரை ஒன்று இருக்கிறது. நக்கீரனும் ஜூனியர் விகடனும் நினைத்தால் எப்படி ஒரு சுவாரஸ்யமான கதை எழுதி ஒரு அப்பாவியை கொலையாளியாகவும் ஒரு கொலையாளியை நல்லவனாகவும் மாற்ற முடியும் என்பதைத் தெளிவாக சொல்கிறார் கண்ணன் அதில்.

எம்.கே.

நன்றி: திரு. ரெ.பாண்டியன். அமைப்பாளர், வாசகர் வட்டம். சிங்கப்பூர்.

(கேள்வி மற்றும் பதில்கள் அனைத்தும் செவிவழி கேட்டு எழுதிய விஷயங்கள். வார்த்தைகள் மாறியிருக்கலாம்.)

Friday, July 02, 2004

மீண்டும் சந்திப்போம்.

வணக்கம் நண்பர்களே!
ஆண்டு விடுமுறைக்கு இந்தியா செல்கிறேன். இணையத்துக்கும் என் இருப்பிடத்துக்கும் இருபது மைல் தொலைவு. முக்கியமான மடல்கள் மட்டுமே பார்க்க முடியும் படிக்கமுடியும்.

ஆகையால் இன்றிலிருந்து ஒரு முப்பது நாட்களுக்கு எனது வலைக்குறிப்பில் பெரிதாய் ஏதும் செய்திகள் இருக்காது என்பதை வருத்தமுடன் தெரிவித்துக்கொள்கிறேன். (இப்போ மட்டும் எழுதிக் கிழிக்கிறியாக்கும்!?).

முக்கியமான விஷயங்கள் இருப்பின் வலைப்பூ வழி ஆஜராகிறேன். எனது பக்கத்திற்கு வந்து பழைய கஞ்சியை வேண்டுமானால் பார்த்து விட்டுச்செல்லுங்கள்.:)

அடிக்கடி வந்து பார்த்து எவரும் ஏமாற வேண்டாம் என்பதால் இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன்.

வாய்ப்புகளுக்கு நன்றி.
வாழ்க வளமுடன்.
மீண்டும் சந்திப்போம்.

எம்.கே.குமார்.

Wednesday, June 23, 2004

ஒரு பெப்சி நேரம்....

ஹெல்லோ பெப்சி உங்கள் ஜாய்ஸ்....

ஹெல்லோ யாருங்க..உமாங்களா? பெப்சி உமாங்களா? சன் டிவி பெப்சி உமாங்களா? உண்மையாத்தானே சொல்லுறீங்க, ஐயோ சந்தோசமா இருக்கே! ஏங்க, உண்மையிலே பெப்சி உமாங்களா? ஐயோ..நிஜமாவே பெப்சி உமாங்களா?

ஹா ஹா ஹா (சிரிக்கிறார்)

ஆமாங்க, நான் தான். சொல்லுங்க, உங்க பேரு என்ன? எங்கேயிருந்து பேசுறீங்க. என்ன பண்ணிண்டுருக்கேள்?

ஐயோ..சந்தோசமா இருக்கே! ஏலே சொக்கா, இங்க வாங்கடா, உமாடா..நம்ம உமாடா, ஐயோ சந்தோசத்துலெ கை காலெல்லாம் டைப்படிக்குதே!

சார், உங்களுக்கே இது நல்லாயிருக்கா? முதல்லே பேர் சொல்லுங்க. எங்கேயிருந்து பேசுறேன்னு சொல்லுங்க.

ஐயோ!! மேடம் நீங்க அழகா சிரிக்கிறீங்க, அழகா இருக்கீங்க, உங்க குரல் ரொம்ப இனிமை மேடம். ஐயோ!! ஏங்க பொய் சொல்லிடாதிங்க, நீங்க பெப்சி உமாதானுங்களே! நம்பமுடியலையே!

ரொம்ப தாங்க்ஸ்ங்க. ரொம்ப ரொம்ப ரொம்ப தாங்க்ஸ். இன்னுமா நம்ப முடியலை? பெப்சி உமாதான்.

ரொம்ப நாளா உங்ககிட்டே பேசணுமுன்னு இருந்தேன். இப்போதான் கெடைச்சிருக்கு. ஐயோ இன்னும் நம்ப முடியலையே! பெப்சி உமாங்களா? உண்மையைத்தானே சொல்லுறீங்க?

ஏங்க, இதெல்லாம் கொஞ்சம் ஓவராத்தெரியலை! பெப்சி உமாதான். உங்களுக்குக் கல்யாணம் ஆகிடுத்தா? எத்தனை குழந்தைகள்?

ஐயோ அதெல்லாம் இருக்கட்டும். நீங்க பெப்சி உமாதானுங்களே! உங்க பையன் ஆதர்ஷ் எப்படியிருக்குறான், அவரோட அப்பா எப்படி இருக்கார்? உங்க ஆத்துக்காரர் நல்லாயிருக்காரா?

சார். எல்லாம் நல்லா இருக்கா. நீங்க சொல்லுங்க, நீங்க சமத்தா, அசடா?

சமத்தா? அப்படின்னா? அதிருக்கட்டும். ஐயோ பெப்சி உமா தானுங்களே! பெப்சி உமா எங்கூட பேசுறாங்களே! ஐயோ இந்த நேரம் பாத்து வீட்டுல யாரும் இல்லையே!!!!!!!

சரி, சொல்லுங்க. என்ன பாட்டு வேணும்?

இருங்க, இப்ப பாட்டா முக்கியம். ஐயோ பெப்சி உமா பேசுறாங்களே! உங்க புடவை ரொம்ப நல்லாயிருக்கும்ன்னு எல்லாரும் சொல்லுறாங்க. நீங்க அழகா சிரிப்பீங்க. உங்க வாய்ஸ் ரொம்ப ஸ்வீட். ஐயோ.. பெப்ப்சி உமா எங்கூட பேசுறாங்களே! எத்தனை தடவை உங்ககூட பேசணுமுன்னு நெனைச்சேன். கடைசியா பேசிட்டேன்.

ரொம்ப ரொம்ப தாங்க்ஸ்ங்க. இதெல்லாத்துக்கும் நீங்கதான் காரணம். உங்களோட அன்பு. உங்களோட ஆதரவு. இந்த நிகழ்ச்சிக்கு நீங்க கொடுக்குற ஆதரவும் அனுசரனையும்தான் காரணம். ரொம்ப ரொம்ப தாங்க்ஸ். டிரை பண்ணிண்டே இருங்க. டிரை. டிரை...கீப் ஆன் டிரையிங்க். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

(பின்குரல்: ஏம்மா, இதையே எத்தனை தடவைதான் சொல்லிண்டு இருப்பே? எல்லாம் சரி. அந்த புடவைத்தலைப்பை பிராண்டிண்டு இருக்கியே! அதை மட்டும் விடக்கூடாதா?)

இல்லேங்க. பெஸ்ட் லக் திஸ் டைம். கிடைச்சிருச்சே! உங்க கூட பேசிட்டேனே...ஆஹா! ஏங்க, கடைசியா உண்மையாச்சொல்லுங்க. நீங்க பெப்சி உமாதானுங்களே!

போன் அறைந்து சாத்தப்படுகிறது.

எம்.கே.குமார்.

Saturday, June 12, 2004

தம்பிக்கு ஒரு கடிதம்...

உடன்பிறப்பே,

நலம்தானே! நலமில்லாமல் எப்படி இருக்கும்? வலிவுடைய நம் தோள்கள் நிலைநிறுத்திருக்கும் ஆட்சியல்லவா இது! மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழி என்பதை அறியாத மூடர்களா நாம்? நாற்பதிலும் வென்று நான்கிரண்டு திசைகளிலும் வெற்றி முரசு கொட்டியல்லவா நாம் வீற்றிருக்கிறோம். நமது ஆட்சி நாடெங்கும் நம் புகழ் பரப்பும் ஆட்சியாக அல்லவா நடந்துகொண்டிருக்கிறது! எப்படி நமக்கில்லாமல் போகும் நலம்? நெஞ்சினிக்கும் இவ்வேளையில் தமிழ் வாழும் செய்தி கேட்டு நலமில்லாமல் இருப்பாயா நீ? தமிழென்றால் நலம்தானே! நாமென்றால் தமிழ்தானே!

எத்தனை சதிக்கூட்டங்கள்? பழுவூர் சதியாலாசனைகளைக் குழிதோண்டிக் குப்புறப் புதைக்கும் அளவுக்கல்லவா அதைவிட பெரிய சதியாலோசனைகள் இங்கே நடைபெற்றன. சதிகாரத் தலைவிகளின் சவுரி முடி கூட நம்மை ஒன்றும் செய்ய முடியாது என்பதைத் தெள்ளிய நீரோடை போலல்லவா நாற்பதும் நமக்குக்காட்டியது! பேதைப் பெண்பூச்சிகளின் ஆதிக்கச் சூத்திரங்கள். நியாயங்கள் அறியாத நடுநாயகங்கள். பிராமணத்துவங்களின் பெருங்கூட்டங்கள். காவிகளின் மயானக்கூக்குரல்கள். நாமென்ன வரலாறியாத வெள்ளாடுகளா? வீரமில்லாத விட்டில் பூச்சிகளா? நயவஞ்சக நரிக்கூட்டங்களா? நாற்பதும் பறை சாற்றியதே நமது வீரத்தை! புறமுதுகு காட்டியல்லவா ஓடினார்கள் பெண்புலிகள்! அந்தோ! அஞ்சறைப்பெட்டியாடிய கைகள் ஆட்சிக்கட்டிலில் நடத்திய இடுகைகளெல்லாம் இதோ இன்று ஒன்றன் பின் ஒன்றாகவல்லவா புறமுதுகிட்டு ஓடுகின்றன்.

இதோ! வங்காள விரிகுடா எழுந்து வருகிறதே! அரபிக்கடலின் மீன்கள் கூட்டம் மொத்தமாக முத்தமிட்டுக் கொண்டல்லவா ஆடிப்பாடி சந்தோசத்தில் முழங்குகின்றன. தென்திசையிலிருந்து அதோ! வருகிறது! வருகிறது! அண்டார்டிக்கா கண்டம் வான் பிளந்து நமக்கு வாழ்த்துச்சொல்ல வருகிறது! இந்தியப்பெருங்கடல் போடும் முழக்கம் என்னவென்று கேட்கிறதா உனக்கு? வருகிறார்கள், மொத்தமாக வருகிறார்கள். வள்ளுவப்பெருந்தகை முதல் வாரியார் வரை வெற்றிக்களிப்பில் அவர்கள் ஆடிப்பாடி அகமகிழும் வாழ்த்தொலி கேட்கிறதா உனக்கு? வானமே எழுந்து வந்து வாழ்த்தும் குரல் கேட்கிறதா உனக்கு?

காவியங்கள் கொண்டதும் காவியங்கள் படைத்ததுமான நம் தமிழுக்கு வந்துவிட்டது அது. நேற்றுப்பெய்த மழையில் இன்று பூத்த காளானல்ல அது. எத்தனை தியாகம் செய்திருக்கிறோம் என்பதை நீ அறிவாயா தம்பி? 6-6-66 ல் அண்ணா அவர்கள் ஆரணியில் பேசிய கூட்டத்திலே எழுப்பிய அத்தீர்மானத்திற்கு எழுந்த ஆதரவுகளை இமயமலையிலும் எழுதமுடியாது தம்பி. இடிமுழக்கமென எத்தனை விண்ணைப்பிளக்கும் வாழ்த்துகள் எழுந்தது தெரியுமா உனக்கு? நெஞ்சு நெருப்பினிலே எரிந்த காலமல்லவா அது!

காவியத்தமிழில் இனி ஓவியங்கள் படைக்கலாம் வா. நடுவண் அரசு நம்முடையதாக இருக்கையில் எத்தனை இடையூறுகள் வந்து இவைகளைத்தடுத்து விடும் பார்க்கலாம். நாற்பது கோடி கொடுத்த பேசமுடியாத சமஸ்கிருதத்தை விட வாயினிக்கும் மொழியினிக்கும் வையகமாளும் தமிழுக்கு எப்படியும் அதன் இருமடங்காவது கிடைக்குமல்லவா? வையகத்தை கதைகளாலும் கவிதைகளாலும் கட்டுரைகளாலும் பெருக்கி இன்பத்தமிழுக்கு இன்னுயிர் கூட்டி வானம் வரைக்கும் அதன் புகழ் பரப்பலாம் வா.

திருப்பதிநாயகர் நேசமுடன் ஆங்கிலம் படிக்கப்போகலாம், காஞ்சிபுர கடவுளர்கள் அரசாங்கத்தை நடத்த ஆசைப்படலாம். இதெல்லாம் எவ்வகையில் நம் கொள்கைகளை கோலமிழக்கசெய்யும்.? கொடிபிடிக்கும் தடியர்கள் தமிழை விட்டு ஆங்கிலம் படிக்கப்போனால் என்ன? கோலெடுத்தால் நடனமாடும் இக்கோமான்கள் படிக்காவிட்டால் என்ன? தமிழ் வளர்ந்துவிடாதா? இல்லை கோடிகள்தான் கிடைக்காதா? கனடா முதல் கைலாயம் வரை செம்மொழியை சேர்க்காமல் நாம் சோர்ந்து விடுவோமா என்ன? சிந்திய ரத்தத்தில் சிலப்பதிகாரம் எழுதி இமயமலை வரை அடுக்கி வைத்திருக்கலாமே தம்பி! செம்மொழியை இகழ்ந்து வெம்மொழியை படித்தால் கோட்டையைப்பிடித்து விட முடியுமா இவர்களால்? கொள்கைக்கோமான்களா இவர்கள்? கோபுரத்தூசி தம்பி இவர்கள்!

சிந்திய குருதியில் ஹிந்தியை அழித்தோமே! செப்பு மொழியாளுக்காகத்தானே தம்பி! சீற்றம் கொண்ட காளைகளாய் அன்று நாம் கொண்ட புரட்சி, பிணம் தின்னும் பேய்களை தண்டவாளயங்களை விட்டல்லவா விரட்டி அடித்தோம்! தலை வைத்தல்லவா காத்தோம் அதை! இன்று இதோ செப்பு மொழி நம் மொழி. சாதித்து விட்டோமடா தம்பி நாம் சாதித்து விட்டோமடா! ஹிந்தி வேண்டாம், வேற்று மொழிக்கு விசிறியாக வேண்டாம். காதலிப்போம் தமிழை. காப்போம் செம்மொழியை. பெறுவோம் பேறுகளையும் கோடிகளையும்!

ஹிந்தி அழித்ததற்காக நாம் என்ன கோட்டை வாயிலிலேயே நின்று விட்டோம்? செங்கோட்டை நமக்கு வெறுங்கோட்டை ஆகிவிட்டதா? நிதியும் வனமும் கிடைக்காமலா போய்விட்டது? தொலைத்தொடர்பும் கப்பலும் இல்லாமலா ஆகிவிட்டோம்? நமக்கு வேண்டாம் தம்பி அது. தமிழைப்படிப்போம். தமிழால் இணைவோம். தரணி போற்றும் தமிழ் என் தாயினுடையது என்போம். தாயை இகழ்ந்தவனை தமிழ் தடுத்தாலும் விடோம். தமிழை இகழ்ந்தவனை தாய் தடுத்தாலும் விடோம்.

முரசொலி மாறன் தமிழ் வளர்க்கப் பட்டபாடு தெரியுமல்லவா உனக்கு. செம்மொழியாக்கிப் பார்க்க அன்னாருக்குக் கொடுத்து வைக்கவில்லையே தம்பி! இதோ சேரமானின் வழித்தொன்றலாய் வந்துவிட்டானே தயாநிதி. விடுவானா தமிழை. தொடுப்பானா பிழையை.? எடுத்தானே! முடிப்பானே! கோடிகளல்லவா! கொடுத்து வைத்தவர்கள் நாமல்லவா? வருவது தமிழால்தானே! நாம் வாழ்வதும் அதனால்தானே!
வேண்டுமா பிறமொழி? கொடுக்குமா அது வெகுமதி?

வா தம்பி! உன் வாரிசுகளுக்காகவே தமிழாசிரியர்களை நியமிக்கிறேன். அவர்களின் வாசிப்புக்காகவே மாநகராட்சிப்பள்ளிகள் நின்றுகொண்டிருக்கின்றன. தமிழால் வா. தமிழ் படித்து வா. ஆங்கிலம் என்ன தரும்? ஹிந்தி என்ன தரும்? சப்பாத்திகள் செய்வதற்கு ஹிந்தி எதற்கு? சம்பாத்தியங்கள் தருவதற்கு அதெல்லாம் வேண்டுமா என்ன? நாம் வாழவில்லையா? வேட்டிக்குள்ளே புகுந்த வேங்கையை விரலால் கொன்றவர்களல்லவா நாம்! தமிழைப்படி. மடிப்பிச்சை எடுத்தாகிலும் தமிழைப்படி. மடிப்பிச்சை மட்டுமே வாழ்வாகும் பரவாயில்லை. மடிப்பிச்சை எடுத்து மடிப்பிச்சையால் மட்டுமே வாழ தமிழ் படி. எக்களம் கண்டாலும் வெறுங்கையோடு திரும்புமா வேங்கை?

கண்ணிலே கோளாறு சிலருக்கு. ஹிந்தி வேண்டுமாம். ஆங்கிலம் வேண்டுமாம். அதெல்லாம் எதற்கு? ஆங்கிலக்கல்வியிலா படித்தோம் நீயும் நானும்? பொன்னர் சங்கரும் புலவர் தொல்லும் ஹிந்தி படித்தா நாட்டையாண்டார்கள்? பண்பாடற்றவர்கள் பகலுவார்கள் அப்படி! காதிலே வாங்கினாலும் பாவம் தம்பி! காலைக்கடன் முடித்தவுடன் காலைக்கழுவுவது போல காதைக் கழுவி விடு தம்பி! செம்மொழி கேட்கும் இக்காதுகளுக்கு அம்மொழி வேண்டாம், அறிவுரைத்துவிடு.

காலம் போயினும் ஞாலம் அழியினும் ஞாயிறு காணும் பகலைப்போல தமிழைப்பார்த்து வளர்வோம் தம்பி. தமிழைக்காக்க வாழ்வோம் தம்பி!

அன்புடன்,
ம.கா.(கு)

மத்தியப்பிரதேசம்.

இருபத்தைந்து வயதுக்கு உட்பட்டவரா/ மேற்பட்டவரா நீங்கள்?

திருமணம் முடித்தவரா/ முடிக்காதவரா (ஹனிமூன் முடிந்து இப்போதுதான் வந்திருப்பவரா) நீங்கள்?

சிவாஜி கோட் போட்டுக்கொண்டு நடித்த 'லாரி டிரைவர் ராஜாக்கண்ணு' மாதிரியான படங்களை விரும்புவரா/ வெறுப்பவரா நீங்கள்?

அனுபவித்ததை, தான் பெற்ற உடற்செல்வங்களை, மறைக்க முடியாத விஷயங்களை மற்றவர்களுக்கும் சொல்ல விரும்புவரா/ விரும்பாதவரா நீங்கள்?

நேராக நிமிர்ந்து நின்றுகொண்டிருக்கும்பொழுது உங்களது கால் கட்டைவிரலைப் பார்க்க முடிந்தவரா/ முடியாதவரா நீங்கள்?

வாங்க! வாங்க! உங்களைப்பத்தித்தான் பேசுறோம். படிச்சுட்டு உங்க கருத்தைச்சொல்லுங்க.


மத்தியப்பிரதேசம்.

காஷ்மீரை தலையாக்கி விட்டு கன்யாகுமரியை பாதமாக இந்தியாவை நிற்கவைத்துப் பார்த்தோமாகில் மத்தியப்பிரதேசம் என்னவாகும் என்று நான் சொல்லாமல் உங்களுக்கு விளங்கிவிடும். மத்தியப்பிரதேசம் சில சமயங்களில் செழிப்பான வளமான பகுதி. சில சமயங்களில் மெலிந்திருந்தாலும் தாகமூட்டும் பிரம்மனின் கஞ்சத்தனம் வழுக்கியோடும் வளைவுப்பகுதி. இயற்கையின் நியதியில் 'இது போதும்' என்று 'பிடி' மட்டுமே கொடுக்கும் படைப்புகள் கூட வஞ்சகமில்லாமல் வாழ்வை ரசிக்க வைப்பன என்பதற்கு இதுவும் ஒரு சான்று. இனி மத்தியப்பிரதேசத்திற்கு வருவோம்.

மத்தியப்பிரதேசத்தின் எல்லைகள் நாமறிந்ததுதான். மேலே மேடான பகுதிகளையும் கீழே சரிவான பகுதிகளையும் கொண்ட இத் தக்காணபீடபூமி உருவானது எப்படி அறிவியலாரும் ஆன்மீகரும் ஆளுக்கொரு தியரிகளைச் சொல்லிக்கொண்டிருந்தாலும் திலீப்குமார் சொல்வது மிகவும் எளிமையானதும் சரியாகப்பொருந்தும் என நினைக்கிறேன். மேல் பாகத்தில் ரகசியமாய்த்துவங்கி, அமைதியாய் முன் எழுந்து, அவசரமில்லாமல் முன் வட்டம் போட்டு, பின் வெடுக்கென்று இறங்கிச்சரிந்து உருவாகியிருக்குமாம் அது. உருவாகும் தருணம் எது தெரியுமா? வைகறைக்கு முன்பான அந்த இளம் இருட்டில் ஒளியின் முதல் கீற்று சந்தடியின்றி திடீரென்று இழைந்து பகலாக்கி விடுவதைப்போன்றதாம் அத்தருணம். உண்மைதானா? வருவதறியாமல் வருவதா அது? காதல் மட்டும் தான் 'அப்படி' என்று படித்ததும் படங்களில் பார்த்ததும் தவறா? இல்லை காதல் தான் தவறா? காதல் தவறெனில் காதல் மூலம் வருவதனைத்தும் தவறா? மனைவியிடம் 'விழுவதறியாமல் விழுவதைப்போல' வருவதறியாமல் வந்து வற்ற மறுக்கிறதா அது? மனைவியிடம் மாட்டியவர்கள் வற்றிப்போகிறார்களே! இது மட்டும் எப்படி?

மோதகம், தலையில் குட்டு, அருகம்புல், மாம்பழம், தந்தம் என்பதையெல்லாம் தாண்டி மத்தியப்பிரதேசம்தான் நினைவுக்கு வரும் அவனைக் காணும் பொழுதும் நினைக்கும் பொழுதும் எனக்கு. 'அது' கொஞ்சம் அழகுதானோ என்று உள்ளுணர்வில் தோன்றுவதும் கூட அவனால் தானோ என நினைக்கிறேன். செல்லமாய்த்தட்டி அதை அசைத்துப்பார்க்கவேண்டும் என அவ்வப்பொழுது வரும் ஆசையையும் உண்மையில் மறைக்கமுடியாது. தட்டிப்பார்க்கவேண்டும் என்று ஆசை வருவதே தவறு. இன்று இங்கே வரும் 'தட்டிப்பார்க்கும் ஆசை', நாளை சென்னைப் பேருந்தில் வந்தால்? மோதகம், தலையில் குட்டு இதுமட்டுமில்லாமல் இன்னபிற 'வீங்கு' 'உள்காய வெளிக்காய' சமாச்சாரங்களும் இலவசமாய்க் கிடைத்துவிடும் ஆன் தி ஸ்பாட். இதெல்லாம் தேவையா? தட்டிப்பார்ப்பது அவ்வளவு நல்லதில்லை என்றுதான் உடம்பு சொல்கிறது..மனது? எருதின் நோய் காக்கைக்குத்தெரியுமா? அதுவும் கருங்காக்கைக்கு?

காக்கையைக் கூட இம்மாதிரி விஷயங்களுக்கு இழுப்பதெல்லாம் தவறு. எந்தக்காக்கை பேருந்தில் பயணிக்கும் பக்கத்து சீட்காரனுக்கு இடமில்லாமல் வயிற்றை வைத்து நிரப்பிக்கொண்டிருக்கிறது? எந்தக்காக்கை தூக்கிக்கொண்டு பறக்க முடியாமல் அதிகாலை மெரீனாவில் வாக்கிங் போகிறது அதைக்குறைக்க? எந்தக்காக்கை மல்லாக்கப் படுத்துக்கொண்டிருக்கும்பொழுது குழந்தைகள் ஏறி சறுக்கு விளையாட்டு விளையாடுகிறார்கள் அதன்மீது?

எப்படி உருவாகிறது என்பதைச் சுருக்கமாக நாம் சொல்லிகொண்டாலும் மத்தியப்பிரதேசத்தை விலாவாரியாக விரித்துப்பேச நம்மால் இயலும். இளம் மத்தியப்பிரதேசம் அழகானது என்று நகரத்திலே சொல்லிகொள்கிறார்கள். நடிகர் ஒருவருக்கு அதுவே அழகு என்றும் இளம் நடிகைக்கு அதுவே அவலம் என்றும் உழைப்பின் ஊதியத்தை அதை வைத்தும் கணிக்கிறார்கள். லேசாக அசைத்தால் நடிகை என்றும் நன்றாய் அசைத்தால் நாட்டியசுந்தரி என்றும் அதுவே பெயரை அறிவிக்கிறது. நடன இயக்குனருக்கும் நடிகைக்கும் காதல் வருவதில் கூட காரணமாகி விடுகிறது அது. பிறகு பிரிவுகள். பிரச்சனைகள்.

ரேமண்ட், ஆல்லென் சோலி, பீட்டர் இங்கிலாண்ட், ஆரோ, டெனிம் இன்னபிற இத்தியாதிகள் தராத இமேஜைக்கூட 'இளம் மத்தியப்பிரதேசம்' தந்து விடுவதுண்டு. அயலூரிலிருந்து வீடு திரும்பும்போதோ அயல்நாட்டிலிருந்து நாடு திரும்பும்போதோ 'சம்பந்தப்பட்ட பகுதிகள்' மப்பும் மந்தாரமுமாய் செழிப்பாயிருந்தால் 'பயல் செழுப்பம். பொண்ணு குடுக்கலாம்' என்பார்கள் எனது ஊரில். மத்தியப்பிரதேசத்தைப்பார்த்து மயங்குகிறார்கள் இப்படி. பொண்ணு படும் பாடு இவர்கள் அறிவார்களா தெரியவில்லை.

இதெல்லாம் ஒரு புறமிருக்க இல்லத்தரசிகள் பலருக்கு இதுவென்றால் அலர்ஜி என்கிறது ஒரு ஆதாரம் தராத தகவல் களம். காலையில் ஐந்து மணிக்கு கட்டிலை விட்டு எழுப்பி சாலையோரமும் கடலோரமும் ஓட வைப்பதில் பரங்கியர்களைப்போல இரக்கமில்லாமல் கணவர்கள்மேல் அவர்கள் நடந்துகொள்வதாகவும் அத்தகவல்களம் சொல்கிறது. சிலபெண்கள் அவ்வளவெல்லாம் கஷ்டப்படுத்தாமல், போனால் போகிறதென்று சமைப்பது, வீடு கிளீன் செய்வது, குழந்தைகளைக் கவனித்துக்கொள்வது, சென்னையாய் இருந்தால் நள்ளிரவு இரண்டு மணிக்கு ஷகீலாவோடு புரண்டு கொண்டிருந்த கணவரை புரட்டி, எழுப்பி பத்து குடம் (மட்டுமே) 'அடித்து' எடுக்க வைப்பது போன்ற 'எளிதான' வீட்டு வேலைகளை மட்டும் செய்யச்சொல்லி விடுகிறார்களாம். 'மத்தளமாவது பரவாயில்லை எங்களுக்கு எல்லா பக்கமும்' என்கிறது ஆணுரிமைச்சங்க தகவல்களை மேற்கோள் காட்டிய அத்தகவல்களம். நிஜத்தில் அப்படியெல்லாம் இருக்கிறதா? எத்தனை பேர் உண்மையை ஒத்துக்கொள்வார்கள்?

தேனிலவு முடிந்து வரும்பொழுதே அதற்கான அறிகுறிகள் தெரிந்துவிடுவதாக ஒரு தரப்பு சொல்கிறது. எவ்வளவு நிஜமிருக்கிறது இக்கூற்றில்? ஒரு இன்னிங்ஸ் மட்டுமே முடிந்த வேளையில் இத்தகைய சமாசாரங்கள் எப்படி நிஜமாகும் என்பதைத் தெரிந்தவர்கள் சொல்லலாம். அப்படியே நிஜமானாலும் இத்தகைய நிகழ்வுகளுக்கு எவை முக்கியக் காரணமாயிருக்கின்றன? திடீரென்று வந்து சேர்ந்த சந்தோசங்களும் சொந்தங்களுமா? இல்லை முழு நேரமும் சும்மாயிருந்து(!?) மாமியாரின் அன்புக்கட்டளைக்கு ஆட்பட்டு நடக்கும் வரவேற்புகளிலினாலா? இல்லை 'மச்சினி கிச்சினி' சம்பந்தபட்ட வேறெதுவும் காரணங்களா?

நிலைமை இப்படியிருக்க, சீன நண்பனொருவன், 'இந்தியப்பெண்களுக்கு மட்டும் எப்படி ஆண்களுக்கு நிகராக 'மேலே சொன்ன மேட்டர்' விரைவில் வளர்ந்து சீக்கிரமாக செழிப்பாகிவிடுகிறது என ஒரு சந்தேகத்தை என்னிடம் வைத்தான். யோசிக்க வேண்டியதுதான். ஜோதிகாக்களையும் கிரண்களையும் பேட்டி எடுத்துப்பார்க்கலாம். மும்தாஜ்வேறு எந்த வாய்ப்புகளும் இல்லாமலிருக்கிறாராம். ஏதாவது கலைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யுங்களேன் என்று யாரையும் கேட்க நமக்குத்தைரியம் இல்லாத வேளையில் வெறுமனே பேட்டி எடுத்து ம.பி மட்டுமின்றி அருணாச்சல, உத்தரப்பிரதேச, ஹிமாச்சல 'மலை'ப்பிரதேசம் பற்றியும் நலம் விசாரிக்கலாம்.

குற்றவாளிகளையும் 'அன்பளிப்பு'களையும் கையாளுவதில் மட்டுமில்லாமல் இந்தமாதிரி விஷயத்திற்கும் எடுத்துக்காட்டாய் எப்போதும் நமக்கு உணர்த்தப்படுபவர்கள் காவல்துறை நண்பர்கள். இதை வைத்துக்கூட நாம் ஒருமாதிரி காரணங்களை யோசிக்க முடியும். ஊரான் காசில் உடம்பு வளர்த்தால் இப்படியெல்லாம் நடக்க வாய்ப்பிருக்கிறதா, நின்றுகொண்டே எந்த வேலை பார்த்தாலும் இதுமாதிரி வர வாய்ப்பிருக்கிறதா? இல்லை இவையெல்லாம் காரணமில்லையெனில் என்னதான் காரணம் என்று காவல்துறையின் மத்தியப்பிரதேசத்தைக் களமாக்கி காமெடி செய்யும் விவேக நடிகரைக்கேட்கலாம். விவேக நடிகருக்கும் உற்சாகபானத்தின் காரணமாக அண்மையில் அப்படி இப்படி ம.பி வளர்ந்து வருவதாக ஒரு நாளேட்டு வாரச்செய்திமலரில் கருப்புப்பூனை சொல்கிறது. ஆக அனைத்திற்கும் உற்சாக பானம் தான் காரணமா? இல்லை உற்சாகம் காரணமா.? யோசிக்க வேண்டியதுதான்.

திருமணம் முடியாத நண்பனொருவனுக்கும் இடைப்பகுதி செழிப்பாகி வருகிறது என்ற ஆச்சரிய செய்தி கேட்டு ஆடிக்காற்றில் சருகு போல பறந்து சென்றேன். காரணம் யாதுவென்று விசாரித்தேன். சரியான காரணங்கள் இல்லை. ஆக தேனிலவு மட்டுமே ம.பி. செழிப்பாவதற்கு காரணமில்லை என்பது மட்டும் புரிகிறது. வேறு என்னதான் காரணம். (பி.கு: நண்பன் என்றால் நண்பன்தான்) நண்பன் தாய்லாந்துப்பக்கம் கூட செல்லவில்லை என்பது அவனிடமிருந்து நான் பெற்ற உபரி தகவல். இதற்கிடையில் கொடியிடை நூலிடை பற்றியெல்லாம் விசாரித்து பெண்பார்க்கபோவதாக அவன் சொல்லியபோது 'மைக்ரோ அவனில்' பாப் கார்ன் வெடித்தது எனக்குள். என்ன செய்ய?

எப்படித்தான் வருகிறது இது? எங்கிருந்து உதயமாகிறது? கிழக்கு எப்போது வெளுக்கிறது? மறையுமா இது? வழி இருக்கிறதா இதற்கு? நிமிர்ந்து நின்று கட்டை விரலைக் கூட பார்க்க முடியாதவாறு படுத்தும் இதற்கு என்னதான் தீர்வு? வருமுன் காப்பவன் அறிவாளியாம், அவ்வைப்பாட்டி சொல்லிவிட்டாள். எப்படிக் காப்பது? வந்த பின் எப்படிக்குறைப்பது? உங்களிடம் இது எப்போவாவது மாட்டியிருக்கிறதா? வந்து விட்டுப்போயிருக்கிறதா? போய் விட்டு வந்திருக்கிறதா? வருவதாகச்சொல்லியிருக்கிறதா? மத்தியப்பிரதேசத்தை செழிப்பாக்குவதுதான் எங்கள் ஆட்சியின் குறிக்கோள் என்கிறார் செல்வி உமாபாரதி. சீன நண்பன் ஞாபகத்துக்கு வருகிறான் எனக்கு. உங்களுக்கு?

ஒரு இளம்பிராயத்து ம.பி வாசி.

Monday, June 07, 2004

குடிமுந்திரி மற்றும் ஒன்பது ரூபாய் நோட்டு.

புத்தகப் பார்வை-- குடிமுந்திரி மற்றும் ஒன்பது ரூபாய் நோட்டு. தங்கர்பச்சான்.

எம்.கே.குமார்.

அழகி படத்தைப்பார்த்துவிட்டு நண்பர்களில் சிலர் 'ஓகேடா..'என்றவாறு போக நான், 'உன் குத்தமா' பாடலிலும் இன்னும் ஒரு இடத்திலும் கண்கலங்கினேன். மனதைப்பாதித்த சிறுவயது ஞாபகங்கள் அலைகளாய் ஓடிவந்து நின்றன. குழந்தைப்பருவத்தில் விளையாடியவர்களுக்கு மட்டும்தான் அந்த இழப்பின் வலி தெரியும். அதன் வீரியம் தெரியும்.

சென்ற மாதத்தில் ஒருநாள் நண்பர் ஒருவர், அந்தப்புத்தகத்தைக்கொடுத்தார். சிறுகதைத்தொகுப்பு. ஐந்து அல்லது ஆறு கதைகள் இருந்தன அவற்றில். ஒரு சில பக்கங்களைப்புரட்டியபோது நான் எங்களது 'வாழ்க்கைமீட்டான்' வயலின் மேலவரப்பில் ஓடிக்கொண்டிருந்தேன். அப்பா தூக்கமுடியாமல் கால் தாங்கிக்கொண்டு நெல்லுக்கட்டை தூக்கிக்கொண்டு நடக்கிறார். அது எனது பள்ளிக்குப் பணம் கட்டுவதற்காக வயலிலிருந்து வீட்டிற்குச்செல்லாமல் விற்பனைக்குச்செல்லும் கருதுக்கட்டு.

நெல்லுக்கட்டுக்கும் முந்திரி மரத்துக்கும் ரொம்ப வித்தியாசமில்லை. வாழ்க்கையை சுமந்து செல்லும் ஒரு முந்திரி மரத்தை வெட்டி விற்று தன் மகன் மிகவும் ஆசைப்பட்டவாறு புதிய ஷ¥ ஒன்றை வாங்கித்தருகிறார் அவனது அப்பா. எத்தனை வீடு மாறிய போதிலும் எதற்கும் உதவாது என்ற நிலையிலும் அந்த ஷ¥க்களை தாங்கிக்கொண்டே போகிறான் அவரது மகன். இது குடிமுந்திரியின் கதை.

அறிஞர் அண்ணாவின் சிறுகதை ஒன்று செவ்வாழை. குடியானவன் ஒருவனது வீட்டில் மிகவும் அன்போடு வளர்க்கப்படும் ஒரு செவ்வாழை மரம். ஒவ்வொரு நாளும் அதிகாலை எழுந்து செவ்வாழை மரத்தைப்பார்த்து எப்படா காய் காய்க்கும் என்று ஆவலோடு இருப்பார்கள் குடியானவனின் பிள்ளைகள். செவ்வாழையும் வயதுக்கு வந்து ஒரு நாள் குலை ஒன்றும் தள்ளிவிடும். அவ்வளவுதான். அடுத்து வரும் நாட்கள் அத்தனையும் குழந்தைகளுக்கு செவ்வாழைப்பழ கனவுதான். அவனுக்கும் மனைவிக்கும் சந்தோசம் தாங்கமுடியாது. குழந்தைகள் பக்கத்துவீட்டு பிள்ளைகளுடன் திடீர் ஒப்பந்தம் செய்துகொள்வார்கள். அவர்களின் மதிப்பு திடீரென்று கூடிவிடும். காயாகியதைக்கண்டு கனியாகும் நாளை எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்திருக்க, அதிகாலை ஒன்றில் வந்து அறுத்துக்கொண்டு போய்விடுவார் குடியானவனின் முதலாளி. கதை முடிந்தது.

கி. ரா அவர்களின் 'கதவு' என்றொரு கதை. ஏறக்குறைய இதே போன்றதொரு சூழ்நிலை கதை முடியும்பொழுது.

மனத்தின் வலி பார்ப்பவர்களுக்குப்புரியாது. குடிமுந்திரியின் நிகழ்வும் அப்படித்தான். கதை முடியும்போது கண் கலங்கி விடுகிறது. 'அழகி'கள் போல அப்பாக்கள் வந்துபோகிறார்கள். வாழ்க்கைத்தோப்பில் இறைவன் விளையாடுவதைப்போல முந்திரித்தோப்பில் ஒளிந்து விளையாடுகிறான் ஒரு படங்காட்டி...கதைசொல்லி வழியாக. தான் என்ன தொழில் செய்கிறேன் என்றே தெரியாமல் மறைந்துபோன தன் அப்பாவுக்கு சமர்ப்பிக்கிறார் 'குடிமுந்திரி' என்ற இச்சிறுகதைத்தொகுப்பை.

குடிமுந்திரியில் இன்னும் இருக்கும் கதைகளில் இரண்டு கதைகள் மனதுக்கு நல்ல கதையைப்படித்த திருப்தியைத் தருகின்றன.
அவற்றில் ஒன்று 'பசு.'

கல்யாணம் செய்துகொள்ளாமல் வாழும் ராயன் செத்துப்போகிறான் ஒருநாள். ராத்திரியிலே ஒண்ணுக்கிருக்க வந்தவர் வழி தவறி கெணத்துக்குள்ளெ விழுந்துவிட்டதாக ஊரார் நினைக்க, அதன் காரணம் அவனுக்கு மட்டும் தெரிகிறது. காரணம் ஜீரணிக்கமுடியாதது. மிகவும் அதிர்ச்சிதரக்கூடியது. இந்த மனுட வாழ்வில் இப்படியெல்லாம் நடக்குமா என்று நாம் யோசித்தாலும் 'உண்மை சுடும்' என்கிறார் ஆசிரியர்.

முடிவு? சுபமில்லை. சிவக்கொழுந்தும் செத்துப்போகிறான். அடிவாங்கிய பசு பிடரி சரிந்து கால் தாங்கித்தாங்கி நடந்துபோகிறது.

இரா.முருகன் அவர்களின் கதைகளில் ஒன்று அது. பெயர் மறந்துவிட்டது. தியேட்டரில் வேலை பார்க்கும் மேனேஜர் ஒருவர், படம் பார்க்க வந்த சீமாட்டிகள் இருவரின் உதவியாளிடம் தியேட்டர் சைக்கிளைக்கொடுத்து தனது வீட்டில் போய் முறுக்கு வாங்கி வரச்சொல்வார். முதலில் முடியாது என்று மறுக்கும் அவனிடம் அப்படி இப்படி சொல்லி அனுப்புவார். படம் முடிந்தும் அவன் திரும்பி வராத நிலையில் போலீசு மேனேஜரைத்தேடி வரும். அவன் ஏரிக்கரையில் லாரியில் அடிபட்டு இறந்து கிடப்பதாக. சைக்கிளை வைத்து தியேட்டருக்கு வந்தததாக.

மேனேஜர் படக்கென்று சொல்வார். அவன் தியேட்டர் சைக்கிளைத்திருடிக்கொண்டு போய்விட்டவன் என்று. செத்துப்போனவனா வந்து இல்லை, இவர்தான் முறுக்கு எடுத்து வர அனுப்பினார் என்று சொல்லப்போகிறான் என்று நினைத்துக்கொண்டு. ஆனால் விதி வேறு ரூபத்தில் வரும் அவருக்கு. எப்போதும் அவர் மதிக்காத தியேட்டரின் சிப்பந்திக்கு எல்லாம் விவரமும் தெரிந்து அவர் முன் மிகப்பிரமாண்டமாய் நிற்பான்.

யாருக்கும் தெரியாத தவறுதான் எப்போதும் ஆபத்து நிறைந்தது. எதிர்பார்க்காத நேரத்தில் எதிர்பாராது வெடிக்கும் இயல்புடையது. அந்த தவறின் நி¢ஜ இயல்பை நாம் தெரிந்துகொள்வதில்லை. தெரிந்துகொள்ளும்போது அந்த வெடிப்பை நம்மால் தாங்க முடிவதில்லை. மறைத்துவைத்த குண்டு வெடிக்காது என்று யார் சொல்லமுடியும்?

பசு கதையை படித்து முடிக்கும்போது நமது கண்களில் ஒரு கலக்கம். யாருடைய தவறு இது? எப்போது எவ்வளவு பெரிய மனிதர்களும் சறுக்குகிறார்கள் என்று ஆயிரக்கணக்கான கேள்விகள். மிக அருமையான கதை.(புத்தகத்தில் பக்கங்கள் மாறியுள்ளன.)

கதையில் குடித்துவிட்டு கோழிக்கறிக்காகச்சண்டை போடும் எமன் இருக்கிறான். காத்தவராயன் இருக்கிறான். கோயில் கிணத்தை தூறு எடுக்கும்போது அதன் நாற்றம் தாங்கமுடியாமல் யாருக்கும் தெரியாமல் அதில் ஒண்ணுக்கடித்து விடும் சாதாரணன் இருக்கிறான்.

கதையில் நாடகம் வரும் பகுதிகள் நகைச்சுவை.

அடுத்து வரும் கதைகளில் ஏழ்மை எழுத்தாளன் அவன் வயிற்றுப்பாட்டுக்கு வழிதேடி லண்டன் செல்லும் கதையும் ஒன்று. கதை முழுவதும் கதையாசிரியரின் வாழ்க்கையின் ஏழ்மை குறித்தான அங்கலாய்ப்புகள் தொடர்கின்றன.

இன்னொரு கதையில் தமிழ் மாநாடுகளின் உண்மைத்தோற்றம் என்ன என்பதைத்தர முயல்கிறார் ஆசிரியர். ஆசிரியருக்கு அதன் பால் மிஞ்சியது வெறும் ஊசிப்போகாத சாப்பாடு மட்டும்தான். அதுவாவது மிஞ்சுகிறதே என்று கிடைக்கும் ஒருவன் மகிழ்ச்சியோடு செல்கிறான்.

கதைகளில் வெறுமனே கற்பனைகள் மட்டுமே பயணிக்கவில்லை. எதார்த்தங்கள் இயல்பான வடிவிலே வந்து பிரச்சனைகளை நமக்குச்சொல்லிச்செல்கின்றன. ஆசிரியரின் உண்மையான வருத்தங்கள் அருமையாக பிரதிபலிக்கின்றன. சொல்ல வந்ததை வட்டார வழக்குகளோடும் சொல்லி முடிக்கின்றன.

இந்த வாரம் படிக்க நேர்ந்த தங்கர் பச்சானின் இன்னொரு படைப்பு. ஒன்பது ரூபாய் நோட்டு. நாவல்.

மிரட்டும் கதைக்களங்கள் இல்லை. சொந்தங்களாய் பந்தங்களாய் வந்து குழப்பும் பாத்திரப்படைப்புகள் இல்லை. கதாநாயகன் இல்லை. கதாநாயகியும் இல்லை. பேருந்திலே பயணிக்கும் ஒரு எழுபது பிளஸ் வயதுடைய மாதவப்படையாட்சியின் வாழ்க்கை கதை. கதை ஆரம்பம் கொஞ்சம் இழுப்பது போல இருந்தாலும் சில பக்கங்களைத்தாண்டிய பிறகு ஜெட் வேகத்தில் பறக்கிறது.

தன் மானம் கருதி சில நொடிகளில் ஒரு முடிவை எடுத்துவிட்ட பெரிய மனிதர் ஒருவர் அதனின்று மீள முடியாமல் போக, அனைத்தையும் இழந்து மீண்டும் வாழ்ந்த மண்ணுக்கே வருகிறார்..மண்ணோடு மனம் மகிழ்ந்து உறவு கொண்டாடும் வேளையில் அவரது சிதறிப்போன குடும்பம் நெஞ்சைக்கிள்ளுகிறது. தான் நட்ட பலா மரத்திற்கு அடியில் அதிகாலையில் அவரைப்பார்க்கிறார்கள் பிணமாக.

பேருந்தில் வரும் உரையாடல்களும் பயணங்களின் சகிப்பதற்கற்ற போக்குகளும் உணர்ந்து எழுதப்பட்டிருக்கின்றன. கதையெங்கும் பத்திரக்கோட்டை, புலியூர் மண்ணின் மணம் பலாப்பழச்சுவையாய் இனிக்கிறது. மாதவப்படையாட்சி மனதில் நிற்கிறார்.

ஒருசில இடங்களில் நகரம் வான்வில்லாய் வந்து போனாலும் முந்திரித்தோப்புகளும் புத்தம் புதிய சிவப்பு நிற மாங்காய்களும் முள் விரிந்து மணம் பரப்பக்காத்திருக்கும் பலாக்களுமாய் கதை முழுவதும் அவைகளின் வாசனை.

படங்காட்டி ஒளிந்துகொண்டிருக்கிறார். வெளியில் வந்தால் இன்னும் 95% வாசனை வெளியே வரலாம்.

வணக்கங்களுடனும் நன்றிகளுடனும்,
எம்.கே.குமார்.
தாடியாரு.

எனக்கும் அவருக்கும் ரொம்ப வயசு வித்தியாசம். தாடியத்தடவிக்கிட்டே அவரு பேசுறக்கேக்குறதுன்னா எனக்கு அப்படி ஒரு சந்தோசம். ஆனா இன்னக்கி அப்படி ஒரு சந்தோசமே என்கிட்டே இல்லை. மனசு கஷ்டமாகத்தான் இருந்தது. தாடியாரும் வந்தார்.

என்னவே...என்ன பண்ணுதெ?

வருத்தத்தைக்கலைத்துக்கொண்டு அவர் பக்கம் திரும்பி ஒண்ணுமில்லெ, சும்மா உக்காந்திருக்கேன்னேன்.

இல்லையே..மக்கா மொகத்துலெ என்னமோ தெரியுதே. என்னலே பிரச்சனையின்னார்.

இல்லே..ஒரு தப்பு பண்ணிட்டேன். வருத்தமா இருக்குன்னேன்.

தப்பு பண்னிட்டேலெ. விட்டுடு. வருத்தமும் படுறேலெ..அது போதும். ஆனா என்ன காரணமுன்னு மட்டும் நெனச்சி பொழச்சிக்கோன்னார்.

காரணத்தை அவரிடம் சொன்னேன். காலதாமதத்தால் வந்த வெனையின்னேன்.

வழக்கம்போல ஆரம்பிச்சார்.

ஏலே..காலம் ரொம்ப முக்கியமானதுலெ. நா இருப்பேன். போயிருவேன். நீ இருப்பே போயிருவே. காலம் இருக்குமுடோய். நேத்தக்கின்னு சொல்லுறோமே என்னலெ அது? நாளக்கின்னு சொல்லுறோமே என்னலெ அது. வயசாருச்சின்னு சொல்லுறோமே என்னலெ அது? எளமையின்னு சொல்லுறோமே என்னலெ அது? எல்லாமே காலமிலெ. காலந்தான் முக்கியம்ன்னார்.

மேலே தொடர்ந்தவர், கொக்கெ பாத்திருக்கியாலே? ஆத்தோரத்திலெ அதுபாட்டுக்கு நின்னுக்கிட்டே இருக்கும். பாக்க ஒனக்கு அப்படித்தான் இருக்கும். ஆனா பட்டென்னு கொத்துமுல்லெ, மீனைக் கண்டவோடனே.

காக்கையப்பாத்திருக்கியாலெ, பகல்லே..கோட்டானை வெரட்டி வெரட்டிக்கொத்தும். ஆனா ராத்திரின்னு ஒன்னு வரும் பாத்தியா. அதுக்காகத்தான் காத்திருக்கும் கோட்டான். ராத்திர்லெ வெச்சித்திருப்பிக்கொடுக்கும். காலத்தை நோக்கிக்காத்திருக்கணுமில்லெ. கரெக்டா கொத்திடனும். விட்டுப்போச்சின்னோ வரவேயில்லையினோ வருத்தப்படக்கூடாது.

இப்பொ பேசி என்ன பண்ண? எல்லாந்தான் முடிஞ்சிப்போச்சேன்னேன். எடமறிச்சிப்பேசினாரு.

ஏலெ, செல நேரத்துலெ முட்டாப்பயலுக செயிச்சுருவானுக. அதெல்லாம் எப்புடின்னு நெனக்கிறெ? காலம் பாத்து குத்துன கத்திலெ. வேலைய நேரத்தோடு கட்டிப்போட்ட கயிறுலெ. அதுலதான் ஜெயிச்சானுக. ஏன்லெ கலங்குறெ? ஏன் கலங்குறெ? வந்தது போகும்லெ. போனது வரும்லெ. முடியாததுன்னு ஒன்னு இல்லவே இல்லைலெ. ஒலகம் உன் கைக்கி வரணுமாலெ? எல்லாத்தையும் எடுத்துக்குட்டு ரெடியா இருலெ. வரும்போது அடிலெ. நீ ஜெயிப்பே.

செலபேரப்பாரு. அமைதியா இருப்பானுவ. என்னதான் தேருன்னாலும் பாருன்னாலும் மொகத்தத்திருப்ப மாட்டானுவெ. என்னன்னு நெனக்கிறெ? நேரம் வரும்போது பாருலெ. மொத்த ஆம்பளத்தனத்தையும் காட்டுவானுவ. ஜெயிப்பானுவ. அது அடக்கமுல்லலெ. எதிர்பாத்துக்காத்திருக்கது. குறிவெச்சி அடிக்கிறது. ஒன்னை விட பலமான ஒருத்தன் உன்ன அடிக்க வாரானா, அடிவாங்கிட்டுப்போலெ. ஆனால் மறந்துறாதெலெ. நேரம் வரும்போது திருப்பி அடிலெ. புழுங்கணுமுல்லெ. ஜெயிக்கிறவரைக்கும் அடங்கி இருக்கனுமுல்லெ. ஆனா அந்தக்காலம் வந்து உன் கையிலெ நிக்குது பாரு., அப்போ மட்டும் விட்டுறாதெலெ. தொவச்சிரு. காலத்தே ஜெயிச்சுருலே....ன்னு என்னன்னமோ சொல்லிட்டுப்போனாரு மனுசர்.

நா வானத்தையே பாத்துக்குட்டு இருந்தேன்.

The whole world is his who chooses the right time and right place.

எம்.கே.குமார்.

Search This Blog