Monday, December 20, 2004

'மாலன்' மற்றும் 'இருவர்' -விழாக்கள்!

மாலன் மற்றும் வெங்கடேஷ் - புத்தக வெளியீட்டு விழாக்கள்.

இடம்: சிங்கப்பூர்.

முதல் நாள்: 13/12/2004 மாலனின் புத்தக வெளீயீடு.

கூட்டம் தொடங்க அரைமணித்துளிகள் இருந்த வேளையில் நான் உள்ளே நுழைந்தேன். எனக்கு சற்று முன்னால் சென்ற ஜெயந்தி சங்கரி அப்போது மாலனிடம் பேசிக்கொண்டிருந்தார். படியை விட்டுக் கீழே இறங்கும்போதே என்னைப் பார்த்துவிட்ட மாலன், இனிய புன்னகையோடு எனக்கு 'பதில் வணக்கம்' சொன்னார். அறிமுகப்படுத்திக்கொண்டேன்.

இளமையாக இருக்கிறார் மனிதர். இனிமையாகப் பேசுகிறார். அழகாக புன்னகைக்கிறார். பாரதியை மூச்சாகக் கொண்ட ஒரு மனிதருக்கு முன்னால் நாம் நிற்பதே ஒரு பெருமைதானே! நேற்றுத்தான் மின்வெளியில் பாரதி மணி மண்டபம் திறந்ததைப் பற்றிச்சொன்னார். இரண்டு நாட்கள் நடந்து முடிந்த இணைய மாநாடு பற்றியும் பேசினார். முக்கியமான ஒரு கேள்வியை அவரிடம் கேட்க வேண்டும் என்றிருந்தேன். என்ன கேள்வி என்பது தெரிந்தால் நீங்களும் கூட ஆர்வமாகிவிடுவீர்கள். அதற்குள் சாப்பாட்டு அயிட்டங்கள் (உளுந்துவடை, லட்டு, பெயர் தெரியாத கார அயிட்டம் ஒன்று, உப்புமா, சட்னி, கா·பி, டீ. இதுதான் மெனு. மு. மேத்தா வந்திருந்த பொழுது 'கேசரியும்' வைத்திருந்தார்கள். இப்போது இல்லை. தனிப்பட்ட முறையில் எனக்கு இதில் வருத்தம்!) மெதுவாக வர ஆரம்பித்திருக்க முதலில் வயிற்றுக்குணவு என்று அதனை நோக்கி நடந்தோம்.

சிங்கப்பூர் தமிழ்ச்சூழலின் அனைத்து பெரிய தலைகளும் தவறாமல் ஆஜராயிருந்தார்கள். மூத்த பத்திரிகை ஆசிரியரும் சிங்கப்பூர் தமிழ்ச்சூழலின் முக்கிய கர்த்தாக்களில் ஒருவரும் இந்தமாத 'காலச்சுவடி'ல் கவர் ஸ்டோரியாய் சிங்கப்பூரின் தமிழ் சார்ந்த சூழல் பற்றி பேட்டி காணப்பட்டிருப்பவருமான திரு.வை. திருநாவுக்கரசு அவர்கள், 'உத்தமம்' அமைப்பின் தலைவரும் இணைய மாநாட்டைத் தலைமையேற்று நடத்தியவருமான திரு. அருண் மகிழ்நன் (எவ்வளவு அருமையான பெயர்! இவரைப்பற்றி எப்போதாவது ஒரு தனிக்கட்டுரை வரைவேன் என்று தோன்றுகிறது!), 'ஒலி 96.8'ன் தலைவர் திரு. அழகிய பாண்டியன், தேசிய நூலகச் சேவைகளுக்கான தலைமைப்பொறுப்பு பொறுப்பு வகிக்கும் திருமதி. புஷ்பலதா, எழுத்தாளரும் வழக்கறிஞருமான திரு.உதுமான் கனி, எழுத்தாளரும் கலைஞர் எம்ஜிஆரின் முன்னிலையில் சீர்திருத்தத் திருமணம் செய்துகொண்டவரும் பாலச்சந்தரிடம் உதவியாளராய் இருந்தவரும் தற்போதைய தொழிலதிபருமாகிய மா.அன்பழகன், 'முரசு அஞ்சல்' நிறுவனர் முத்து நெடுமாறன் அவர்கள், தேசியப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியரான திரு. திண்ணப்பன், சிறந்த உள்ளூர் கவிஞரான திரு.க.து.மு இக்பால், கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ மற்றும் இன்னபிற எல்லா முக்கியத்தமிழர்களும் இலக்கிய ஆர்வலர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

"கங்கைக்கரைத் தோட்டம் ...கூட்டம்... கண்ணன் நடுவினிலே.." என்ற பாடல்தான் நினைவுக்கு வந்தது ஆர். வெங்கடேஷ் அவர்களைப் பார்த்தபோது. பிரபல இணைய மகளிரணி கூட்டம் கொஞ்ச நேரத்திற்கு அவரை மொய்த்திருந்தது. பத்ரி தன் மனைவியோடும் மகளோடும் ஆடைக்குறைப்போடும் வந்திருந்தார். எம்.கே.குமார் என்று அறிமுகப்படுத்திக்கொண்டவுடன் ஏனோ கொஞ்சம் பின் வாங்கியது போலிருந்தது. என்ன காரணமோ தெரியவில்லை.

ஒருவழியாக வெங்கடேஷ் அவ்வளையத்தை விட்டு வெளியே வந்தார். அறிமுகப்படுத்திக்கொண்டேன். ஈழநாதனும் சேர்ந்துகொண்டார். பேச்சு அவரது வலைக்குறிப்பு பக்கமாய்த் திரும்பியது. கமலைப் பற்றிய அவரது ஒரு பதிவுக்கு வந்திருந்த பின்னூட்டங்கள் பற்றிப்பேசினோம். பிறகு பத்ரியும் இணைந்துகொண்டார். இந்தியாவிலிருந்து புத்தகங்கள் தருவிப்பது பற்றி பேச்சு நிலவியது. முடிவாக எல்லோரும் அரங்கத்திற்குள் நுழைய ஆரம்பிக்க, அப்போதுதான் பார்த்தேன். ஜெயந்தி சங்கரியும் ரம்யா நாகேஸ்வரனும் வியாபாரத்தில் வெற்றிக்கொடி நாட்டிக்கொண்டிருந்தார்கள். 'சொல்லாத சொல்லும் சிறுகதைத் தொகுப்புகளும்' குறைந்த விலைக்கு விற்கப்பட்டன.

கூட்டம் ஆரம்பித்தது. கவிஞர் நெப்போலியன் (நானும் எனது கருப்புக்குதிரையும் கவிதைத் தொகுதியின் ஆசிரியர்.) நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். திருமதி புஷ்பலதா, திருவாளர்கள்.அருண் மகிழ்நன், அழகிய பாண்டியன், உதுமான் கனி, திண்ணப்பன், க.து.மு.இக்பால், ஆர்.வெங்கடேஷ் மற்றும் ஜெர்மனியிலிருந்து வந்திருந்த சுபாஷினி கனகசுந்தரம் ஆகியோர் 'வாழ்த்தியும் வாழ்த்தியும் வாழ்த்தியும்' (தட்டுறான், தட்டுறான், தட்டிக்கிட்டே இருக்குறான்னு எழுத்தாளர் பைரவன் சொல்றது மாதிரி படிச்சுக்குங்க!) பேசினார்கள். மாலனே அவ்வப்போது கொஞ்சம் வெட்கத்தில் குறுகிக்கொண்டிருந்தார். 'இரண்டாம் பாரதிதாசனே' என்றழைத்தார் திரு.இக்பால்.!

மரத்தடி நண்பர்கள் பலரையும் பார்க்கும் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஈழநாதன், அருள்குமரன், ஜெயந்தி, ரம்யா, மூர்த்தி (வேலைப்பணி காரணமாக தாமதமாக வந்து என்னுடன் சீக்கிரமாக கிளம்பி விட்டார்) , பத்ரி, நம்பி, (நிறைய பேச வேண்டும் என நினத்திருந்தேன். எழுந்து கிளம்பும்போதுதான் கவனித்தேன்.) வலைப்பூ நண்பர் அன்பு எல்லோரிடமும் பேச வாய்ப்புக் கிடைத்தது. கூட்டத்தை திறம்பட முன்னின்று நடத்திக்கொண்டிருந்த திருமதி. ரமா சங்கரன் அவர்களுக்கு என்னிடம் பேச நேரமில்லை. என்னையும் தெரியவில்லை.

எல்லாவற்றிற்கும் அடிப்படையான 'நேரம்' சீக்கிரம் நழுவிக்கொண்டிருக்க, மாலனின் ஏற்புரை தாமதமாகவே, நான் இரவுப்பணி செல்ல வேண்டி இருந்ததால் 2035க்கு கிளம்பி விட்டேன். மாலனின் உரையை நான் இழப்பது ஒரு பக்கம் வேதனையாய் இருந்தாலும் அந்நேரத்தில் கிளம்பியுமே கடைசியில் டாக்ஸி பிடிக்க வேண்டி வந்துவிட்டது. இவையெல்லாம் போக அவரிடம் நான் கேட்கவேண்டிய கேள்வியையும் கேட்க முடியவில்லையே என்ற வருத்தம் வேறு மண்டைக்குள் குடைந்துகொண்டேயிருந்தது.

அதனால் என்ன? இப்போது கேட்டு விடுகிறேன், கேள்வி இதுதான். 'விருமாண்டிக்கு தூக்கு தண்டனை ரத்தாகி விட்டதா சார்?'

இதுபோன்ற ஒவ்வொரு கூட்டத்தில் நான் கலந்துகொள்ளும் போதும் ஏதோ ஒரு வெற்றிடம் எங்கோ நிரப்பப்படுவது போலத்தான் இருக்கிறது. அது வயிறாகக் கூட இருக்கலாம்.!

*******************
ஆர்.வெங்கடேஷ் அவர்களின் புத்தக வெளியீடு.

நாள்:14/12/2004

நானும் நண்பர் மானஸசென்னும் அம்மோக்கியோ நூலக அரங்கத்திற்குள் நுழைந்த நேரம் ஏறக்குறைய சிற்றுண்டி அயிட்டங்கள் தீர்ந்திருந்தன. இம்மாதிரிக் கூட்டங்களுக்கு இதுக்காகவேணும் இனிமேல் முதலிலேயே செல்லவேண்டும் என்பதை உணர்ந்துகொண்டு கண்ணில் தெரிந்த எல்லா நண்பர்களையும் நலம் விசாரித்துக்கொண்டிருந்தேன். நேற்று மாலன் புத்தக வெளியீட்டு விழாவில் என்னைப்பார்த்திருந்த 'இன்றைய விழா நாயகர்' ஆர். வெங்கடேஷ், 'வாங்க குமார்' என்று பெயரைச் சொல்லி அழைத்தார். சிங்கப்பூரின் சில பெரிய தலைகளும் பெரிய கவிஞர்களுமாய் களை கட்டியிருந்த கூட்டம் 'நேசமுடன்' புத்தகம் வாங்குதலிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தது.

வழக்கம் போல புத்தக விற்பனைப் பிரிவை மகளிர் அணி கைப்பற்றிக்கொண்டது. ஜெயந்தி சங்கரியும் ரம்யா நாகேஸ்வரனும் காரியத்தில் கண்ணாயிருந்தார்கள்; காசாயிருந்தார்கள்.

கூட்டம் ஆரம்பிக்க, மேடையில் இருந்தவர்கள் திருவாளர்கள் முத்து நெடுமாறன், உதுமான் கனி மற்றும் சிங்கப்பூர் வசந்தம் சென்ட்ரல் தொலைக்காட்சி தலைவர் முகமது அலி ஆகியோர். புத்தகத்தை முத்து நெடுமாறன் வெளியிட முகமது அலி பெற்றுக்கொண்டார். வரவேற்புரையை உதுமான் கனி ஆற்ற, அவர் தனக்கு இதற்கு இருக்கும் தகுதி என்ன என்பதை மீண்டும் இரண்டாம் முறையாகச் சொன்னார். அமரர் நா.கோவிந்தசாமி அவர்களுக்கு இவர் நன்றி சொல்லியாகவேண்டுமாம்.

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய பிச்சினிக்காடு இளங்கோ அவர்கள் (கவிஞர், இரவின் நரை கவிதை நூலுக்குச் சொந்தக்காரர். பட்டுக்கோட்டைக்காரர்) கவிதை எழுதுவது சுலபம் கட்டுரை எழுதுவதுதான் கடினம் என்றார். அப்படித்தானா என்பதை ஆர்.வெங்கடேஷ் சொலியிருக்கலாம். அவரே முதலில் கவிஞர் அல்லவா?. பிறகுதானே இதெல்லாம்.

வாழ்த்தியவர்களின் பேச்சுகளுக்குப் பிறகு நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக அமைந்த கலந்துரையாடல் நடைபெற்றது. அண்மையில் 'திசைகள்' பேட்டியில் அவர் சொல்லியிருந்ததை மீண்டும் 'ஒலி அன் ஒளி' பரப்பினார் வெங்கடேஷ். தான் மிகவும் சந்தோசமாகவும் மனத்திருப்தியோடும் இருப்பதாக சொன்னார் ஒரு கேள்விக்கான பதிலாக. (உண்மையிலேயே நல்ல உற்சாகத்தோடுதான் இருந்தார்.) 'பாரா' (பா.ராகவன்) வின் படைப்பு வேகத்தை மெச்சினார். வலைப்பூக்களின் எதிர்காலம் குறித்தான போக்கு எப்படியாகவும் அமையலாம் என்றார். இலக்கியப்படைப்புகள் எதுவும் இணையத்தில் இல்லை என்றே இவரும் சொன்னார். (எழுத்தாளர் பா. ராகவன் அவர்களும் இதையே ஒரு பேட்டியில் சொல்லியிருந்ததை நினைவு கூறவும்!) இணையத்தில் வரும் மறுமொழிகளுக்கு எப்போதும் தான் முக்கியத்துவம் தருவதில்லை என்றும் தனது கட்டுரை கருத்து சார்ந்து அது இருக்கும் வரை அதுவே தனக்கு மகிழ்ச்சி தருவதாகவும் சொன்னார். கார்ஸியா மார்குவேஸ் பற்றியும் (ஒரு) கருத்து சொன்னார். எனக்கு கார்ஸியாவையும் கார்ஸியாவுக்கு என்னையும் தெரியாததால் நான் இதில் தலையிடவில்லை.

பெரிய தலைகள் போக, மரத்தடி நண்பர்கள் பலரும் வந்திருந்தனர். நம்பி வரவில்லை, மூர்த்தி வந்ததை நான் கவனிக்க வில்லை.
அருள்குமரன் தனது குடும்பத்தோடு வந்திருந்தார். 'தமிழ் இனியனு'க்கு மேடைப்பேச்சில் அவ்வளவு ஆர்வமில்லை போலும். தயங்காமல் தடங்கலை ஏற்படுத்தினார். (தமிழ் இனியன் அருள்குமரனின் அப்பாவுக்கு பேரன்.)

நிகழ்ச்சி முடிந்தபின் ஆர்.வெங்கடேஷ், காலச்சுவடு சிபிச்செல்வன், ரமா சங்கரன், புஷ்பலதா, ஜெயந்தி சங்கர், ரம்யா நாகேஸ்வரன், மானஸஜென், ஈழநாதன், பனசை நடராஜன் (மரத்தடியில் 'நட்டு') ஆகியோர் பேசிக்கொண்டிருந்தோம். நூலகம் மூடும் நேரம் முடிந்தும் உள்ளே இலக்கியம் பேசிக்கொண்டிருந்த எங்களை நூலகப்பெண் பரிதாபத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார். பாவம் அவருக்கு என்ன அவசரமோ?

சிபிச்செல்வன் கொடுத்த காலச்சுவடு காலண்டர், ஜே.கிருஷ்ணமூர்த்தி, மறைந்த எம்.எஸ் அம்மா, அபுல்கலாம் ஆசாத், ஈ.வெ.ரா, சி.வி.தாமோதரம் பிள்ளை, குமரப்பா, காந்தி, அம்பேத்கர், என்.எஸ்.கே போன்ற மிக அழகானவர்களின் அழகான ஓவியங்களோடு இருந்தது. கிடைத்தால் விடாதீர்கள்!
நன்றி வணக்கம்.
எம்.கே.


7 comments:

ஜெ. ராம்கி said...

/பத்ரி தன் மனைவியோடும் மகளோடும் ஆடைக்குறைப்போடும் வந்திருந்தார். எம்.கே.குமார் என்று அறிமுகப்படுத்திக்கொண்டவுடன் ஏனோ கொஞ்சம் பின் வாங்கியது போலிருந்தது. என்ன காரணமோ தெரியவில்லை /

பத்ரியை பார்த்து நீங்க பின்வாங்கியதா எனக்கொரு செய்தி. கண்ணா மூச்சி ஆட்டம் நல்லாத்தான் கீதுப்பா!

Badri Seshadri said...

இந்த விளையாட்டுக்கு நான் வரவில்லை. குமார்: உங்களுக்கு நான் சடாரென பின்வாங்கியது போலிருந்தால் அதற்காக மன்னிக்கவும். உள்நோக்கம் எதுவும் இருந்ததாக எனக்கு இப்பொழுது ஞாபகமில்லை.

எம்.கே.குமார் said...

அடடே! என்ன தலை, இதுக்கெல்லாம் போயி பெரிய வார்த்தை சொல்லிக்கிட்டு? அப்படியே இருந்தாலும் ஒண்ணும் தப்பு கிடையாது தலை! எல்லாத்துக்கும் உங்களுக்கு உரிமை உண்டு.

யாருக்கும் யாரையும் முதல் தடவை பாக்கும்போது (அதுவும் அவங்க எழுத்து வழியா முகம் தெரியாம பழகிட்டு) கட்டாயம் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியோ இல்லை அதிர்ச்சி கலந்த ஆச்சரியமோ வர வாய்ப்ப்பிருக்கு. இல்லை ஆச்சரியமும் அதிர்ச்சியும் தனித்தனியா கூட வர வாய்ப்பிருக்கு. இதெல்லாம் ஒண்ணும் பெருசும் இல்லை புதுசும் இல்லை தலை!

எனக்கென்ன வருத்தம்ன்னா, நீங்க வாறது பத்தி உங்க பிளாக்ல எழுதியிருக்கீங்க, முன்னாடியே நான் பாத்திருந்தா உங்களையும் ஒரு பேட்டி எடுத்திருக்கலாமே மிஸ் பண்ணிட்டோமேங்கிறதுதான்.

காமதேனு சி(க)றக்க வாழ்த்துகள்!

எம்.கே.

Anonymous said...

// இதுபோன்ற ஒவ்வொரு கூட்டத்தில் நான் கலந்துகொள்ளும் போதும் ஏதோ ஒரு வெற்றிடம் எங்கோ நிரப்பப்படுவது போலத்தான் இருக்கிறது. அது வயிறாகக் கூட இருக்கலாம்.! //

Brilliant observation MKK! நானும் தற்போது சிங்கப்பூர் வாசம்தான். சந்திக்க ஆவலாக உள்ளேன். Mail me at clementi.central at gmail.com.

dondu(#11168674346665545885) said...

"பேச்சு அவரது வலைக்குறிப்பு பக்கமாய்த் திரும்பியது. கமலைப் பற்றிய அவரது ஒரு பதிவுக்கு வந்திருந்த பின்னூட்டங்கள் பற்றிப்பேசினோம்."

என்ன பேசினீர்கள் என்பதைக் குறிப்பிட இயலுமா?

வெங்கடேஷ் வலைப்பூக்களில் நான் பார்த்த வரை அவர் பின்னூட்டங்களுக்குப் பதில் அளிப்பதில்லை. முக்கியமாக 100க்கும் அதிகமாகப் பின்னூட்டங்கள் வந்தக் கமல் பற்றிய வலைப்பூவுக்கும் அதே நிலைதான்.

ஆகவே அவர் இந்தப் பின்னூட்டங்களைப் பற்றி உங்களிடம் ஏதாவதுக் கருத்துக் கூறியிருந்தால் அதைப் பற்றி இங்கு கூற இயலுமா? அதாவது ரகசியம் ஒன்றும் இல்லாத பட்சத்தில்.

அதே விழாவுக்கு வந்த "வழிப்போக்கன்" மூர்த்தியிடமும் இதைப் பற்றிப் பேசினீர்களா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

Hi testing...

Anonymous said...

Hi testing...

Search This Blog