Wednesday, June 23, 2004

ஒரு பெப்சி நேரம்....

ஹெல்லோ பெப்சி உங்கள் ஜாய்ஸ்....

ஹெல்லோ யாருங்க..உமாங்களா? பெப்சி உமாங்களா? சன் டிவி பெப்சி உமாங்களா? உண்மையாத்தானே சொல்லுறீங்க, ஐயோ சந்தோசமா இருக்கே! ஏங்க, உண்மையிலே பெப்சி உமாங்களா? ஐயோ..நிஜமாவே பெப்சி உமாங்களா?

ஹா ஹா ஹா (சிரிக்கிறார்)

ஆமாங்க, நான் தான். சொல்லுங்க, உங்க பேரு என்ன? எங்கேயிருந்து பேசுறீங்க. என்ன பண்ணிண்டுருக்கேள்?

ஐயோ..சந்தோசமா இருக்கே! ஏலே சொக்கா, இங்க வாங்கடா, உமாடா..நம்ம உமாடா, ஐயோ சந்தோசத்துலெ கை காலெல்லாம் டைப்படிக்குதே!

சார், உங்களுக்கே இது நல்லாயிருக்கா? முதல்லே பேர் சொல்லுங்க. எங்கேயிருந்து பேசுறேன்னு சொல்லுங்க.

ஐயோ!! மேடம் நீங்க அழகா சிரிக்கிறீங்க, அழகா இருக்கீங்க, உங்க குரல் ரொம்ப இனிமை மேடம். ஐயோ!! ஏங்க பொய் சொல்லிடாதிங்க, நீங்க பெப்சி உமாதானுங்களே! நம்பமுடியலையே!

ரொம்ப தாங்க்ஸ்ங்க. ரொம்ப ரொம்ப ரொம்ப தாங்க்ஸ். இன்னுமா நம்ப முடியலை? பெப்சி உமாதான்.

ரொம்ப நாளா உங்ககிட்டே பேசணுமுன்னு இருந்தேன். இப்போதான் கெடைச்சிருக்கு. ஐயோ இன்னும் நம்ப முடியலையே! பெப்சி உமாங்களா? உண்மையைத்தானே சொல்லுறீங்க?

ஏங்க, இதெல்லாம் கொஞ்சம் ஓவராத்தெரியலை! பெப்சி உமாதான். உங்களுக்குக் கல்யாணம் ஆகிடுத்தா? எத்தனை குழந்தைகள்?

ஐயோ அதெல்லாம் இருக்கட்டும். நீங்க பெப்சி உமாதானுங்களே! உங்க பையன் ஆதர்ஷ் எப்படியிருக்குறான், அவரோட அப்பா எப்படி இருக்கார்? உங்க ஆத்துக்காரர் நல்லாயிருக்காரா?

சார். எல்லாம் நல்லா இருக்கா. நீங்க சொல்லுங்க, நீங்க சமத்தா, அசடா?

சமத்தா? அப்படின்னா? அதிருக்கட்டும். ஐயோ பெப்சி உமா தானுங்களே! பெப்சி உமா எங்கூட பேசுறாங்களே! ஐயோ இந்த நேரம் பாத்து வீட்டுல யாரும் இல்லையே!!!!!!!

சரி, சொல்லுங்க. என்ன பாட்டு வேணும்?

இருங்க, இப்ப பாட்டா முக்கியம். ஐயோ பெப்சி உமா பேசுறாங்களே! உங்க புடவை ரொம்ப நல்லாயிருக்கும்ன்னு எல்லாரும் சொல்லுறாங்க. நீங்க அழகா சிரிப்பீங்க. உங்க வாய்ஸ் ரொம்ப ஸ்வீட். ஐயோ.. பெப்ப்சி உமா எங்கூட பேசுறாங்களே! எத்தனை தடவை உங்ககூட பேசணுமுன்னு நெனைச்சேன். கடைசியா பேசிட்டேன்.

ரொம்ப ரொம்ப தாங்க்ஸ்ங்க. இதெல்லாத்துக்கும் நீங்கதான் காரணம். உங்களோட அன்பு. உங்களோட ஆதரவு. இந்த நிகழ்ச்சிக்கு நீங்க கொடுக்குற ஆதரவும் அனுசரனையும்தான் காரணம். ரொம்ப ரொம்ப தாங்க்ஸ். டிரை பண்ணிண்டே இருங்க. டிரை. டிரை...கீப் ஆன் டிரையிங்க். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

(பின்குரல்: ஏம்மா, இதையே எத்தனை தடவைதான் சொல்லிண்டு இருப்பே? எல்லாம் சரி. அந்த புடவைத்தலைப்பை பிராண்டிண்டு இருக்கியே! அதை மட்டும் விடக்கூடாதா?)

இல்லேங்க. பெஸ்ட் லக் திஸ் டைம். கிடைச்சிருச்சே! உங்க கூட பேசிட்டேனே...ஆஹா! ஏங்க, கடைசியா உண்மையாச்சொல்லுங்க. நீங்க பெப்சி உமாதானுங்களே!

போன் அறைந்து சாத்தப்படுகிறது.

எம்.கே.குமார்.

Saturday, June 12, 2004

தம்பிக்கு ஒரு கடிதம்...

உடன்பிறப்பே,

நலம்தானே! நலமில்லாமல் எப்படி இருக்கும்? வலிவுடைய நம் தோள்கள் நிலைநிறுத்திருக்கும் ஆட்சியல்லவா இது! மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழி என்பதை அறியாத மூடர்களா நாம்? நாற்பதிலும் வென்று நான்கிரண்டு திசைகளிலும் வெற்றி முரசு கொட்டியல்லவா நாம் வீற்றிருக்கிறோம். நமது ஆட்சி நாடெங்கும் நம் புகழ் பரப்பும் ஆட்சியாக அல்லவா நடந்துகொண்டிருக்கிறது! எப்படி நமக்கில்லாமல் போகும் நலம்? நெஞ்சினிக்கும் இவ்வேளையில் தமிழ் வாழும் செய்தி கேட்டு நலமில்லாமல் இருப்பாயா நீ? தமிழென்றால் நலம்தானே! நாமென்றால் தமிழ்தானே!

எத்தனை சதிக்கூட்டங்கள்? பழுவூர் சதியாலாசனைகளைக் குழிதோண்டிக் குப்புறப் புதைக்கும் அளவுக்கல்லவா அதைவிட பெரிய சதியாலோசனைகள் இங்கே நடைபெற்றன. சதிகாரத் தலைவிகளின் சவுரி முடி கூட நம்மை ஒன்றும் செய்ய முடியாது என்பதைத் தெள்ளிய நீரோடை போலல்லவா நாற்பதும் நமக்குக்காட்டியது! பேதைப் பெண்பூச்சிகளின் ஆதிக்கச் சூத்திரங்கள். நியாயங்கள் அறியாத நடுநாயகங்கள். பிராமணத்துவங்களின் பெருங்கூட்டங்கள். காவிகளின் மயானக்கூக்குரல்கள். நாமென்ன வரலாறியாத வெள்ளாடுகளா? வீரமில்லாத விட்டில் பூச்சிகளா? நயவஞ்சக நரிக்கூட்டங்களா? நாற்பதும் பறை சாற்றியதே நமது வீரத்தை! புறமுதுகு காட்டியல்லவா ஓடினார்கள் பெண்புலிகள்! அந்தோ! அஞ்சறைப்பெட்டியாடிய கைகள் ஆட்சிக்கட்டிலில் நடத்திய இடுகைகளெல்லாம் இதோ இன்று ஒன்றன் பின் ஒன்றாகவல்லவா புறமுதுகிட்டு ஓடுகின்றன்.

இதோ! வங்காள விரிகுடா எழுந்து வருகிறதே! அரபிக்கடலின் மீன்கள் கூட்டம் மொத்தமாக முத்தமிட்டுக் கொண்டல்லவா ஆடிப்பாடி சந்தோசத்தில் முழங்குகின்றன. தென்திசையிலிருந்து அதோ! வருகிறது! வருகிறது! அண்டார்டிக்கா கண்டம் வான் பிளந்து நமக்கு வாழ்த்துச்சொல்ல வருகிறது! இந்தியப்பெருங்கடல் போடும் முழக்கம் என்னவென்று கேட்கிறதா உனக்கு? வருகிறார்கள், மொத்தமாக வருகிறார்கள். வள்ளுவப்பெருந்தகை முதல் வாரியார் வரை வெற்றிக்களிப்பில் அவர்கள் ஆடிப்பாடி அகமகிழும் வாழ்த்தொலி கேட்கிறதா உனக்கு? வானமே எழுந்து வந்து வாழ்த்தும் குரல் கேட்கிறதா உனக்கு?

காவியங்கள் கொண்டதும் காவியங்கள் படைத்ததுமான நம் தமிழுக்கு வந்துவிட்டது அது. நேற்றுப்பெய்த மழையில் இன்று பூத்த காளானல்ல அது. எத்தனை தியாகம் செய்திருக்கிறோம் என்பதை நீ அறிவாயா தம்பி? 6-6-66 ல் அண்ணா அவர்கள் ஆரணியில் பேசிய கூட்டத்திலே எழுப்பிய அத்தீர்மானத்திற்கு எழுந்த ஆதரவுகளை இமயமலையிலும் எழுதமுடியாது தம்பி. இடிமுழக்கமென எத்தனை விண்ணைப்பிளக்கும் வாழ்த்துகள் எழுந்தது தெரியுமா உனக்கு? நெஞ்சு நெருப்பினிலே எரிந்த காலமல்லவா அது!

காவியத்தமிழில் இனி ஓவியங்கள் படைக்கலாம் வா. நடுவண் அரசு நம்முடையதாக இருக்கையில் எத்தனை இடையூறுகள் வந்து இவைகளைத்தடுத்து விடும் பார்க்கலாம். நாற்பது கோடி கொடுத்த பேசமுடியாத சமஸ்கிருதத்தை விட வாயினிக்கும் மொழியினிக்கும் வையகமாளும் தமிழுக்கு எப்படியும் அதன் இருமடங்காவது கிடைக்குமல்லவா? வையகத்தை கதைகளாலும் கவிதைகளாலும் கட்டுரைகளாலும் பெருக்கி இன்பத்தமிழுக்கு இன்னுயிர் கூட்டி வானம் வரைக்கும் அதன் புகழ் பரப்பலாம் வா.

திருப்பதிநாயகர் நேசமுடன் ஆங்கிலம் படிக்கப்போகலாம், காஞ்சிபுர கடவுளர்கள் அரசாங்கத்தை நடத்த ஆசைப்படலாம். இதெல்லாம் எவ்வகையில் நம் கொள்கைகளை கோலமிழக்கசெய்யும்.? கொடிபிடிக்கும் தடியர்கள் தமிழை விட்டு ஆங்கிலம் படிக்கப்போனால் என்ன? கோலெடுத்தால் நடனமாடும் இக்கோமான்கள் படிக்காவிட்டால் என்ன? தமிழ் வளர்ந்துவிடாதா? இல்லை கோடிகள்தான் கிடைக்காதா? கனடா முதல் கைலாயம் வரை செம்மொழியை சேர்க்காமல் நாம் சோர்ந்து விடுவோமா என்ன? சிந்திய ரத்தத்தில் சிலப்பதிகாரம் எழுதி இமயமலை வரை அடுக்கி வைத்திருக்கலாமே தம்பி! செம்மொழியை இகழ்ந்து வெம்மொழியை படித்தால் கோட்டையைப்பிடித்து விட முடியுமா இவர்களால்? கொள்கைக்கோமான்களா இவர்கள்? கோபுரத்தூசி தம்பி இவர்கள்!

சிந்திய குருதியில் ஹிந்தியை அழித்தோமே! செப்பு மொழியாளுக்காகத்தானே தம்பி! சீற்றம் கொண்ட காளைகளாய் அன்று நாம் கொண்ட புரட்சி, பிணம் தின்னும் பேய்களை தண்டவாளயங்களை விட்டல்லவா விரட்டி அடித்தோம்! தலை வைத்தல்லவா காத்தோம் அதை! இன்று இதோ செப்பு மொழி நம் மொழி. சாதித்து விட்டோமடா தம்பி நாம் சாதித்து விட்டோமடா! ஹிந்தி வேண்டாம், வேற்று மொழிக்கு விசிறியாக வேண்டாம். காதலிப்போம் தமிழை. காப்போம் செம்மொழியை. பெறுவோம் பேறுகளையும் கோடிகளையும்!

ஹிந்தி அழித்ததற்காக நாம் என்ன கோட்டை வாயிலிலேயே நின்று விட்டோம்? செங்கோட்டை நமக்கு வெறுங்கோட்டை ஆகிவிட்டதா? நிதியும் வனமும் கிடைக்காமலா போய்விட்டது? தொலைத்தொடர்பும் கப்பலும் இல்லாமலா ஆகிவிட்டோம்? நமக்கு வேண்டாம் தம்பி அது. தமிழைப்படிப்போம். தமிழால் இணைவோம். தரணி போற்றும் தமிழ் என் தாயினுடையது என்போம். தாயை இகழ்ந்தவனை தமிழ் தடுத்தாலும் விடோம். தமிழை இகழ்ந்தவனை தாய் தடுத்தாலும் விடோம்.

முரசொலி மாறன் தமிழ் வளர்க்கப் பட்டபாடு தெரியுமல்லவா உனக்கு. செம்மொழியாக்கிப் பார்க்க அன்னாருக்குக் கொடுத்து வைக்கவில்லையே தம்பி! இதோ சேரமானின் வழித்தொன்றலாய் வந்துவிட்டானே தயாநிதி. விடுவானா தமிழை. தொடுப்பானா பிழையை.? எடுத்தானே! முடிப்பானே! கோடிகளல்லவா! கொடுத்து வைத்தவர்கள் நாமல்லவா? வருவது தமிழால்தானே! நாம் வாழ்வதும் அதனால்தானே!
வேண்டுமா பிறமொழி? கொடுக்குமா அது வெகுமதி?

வா தம்பி! உன் வாரிசுகளுக்காகவே தமிழாசிரியர்களை நியமிக்கிறேன். அவர்களின் வாசிப்புக்காகவே மாநகராட்சிப்பள்ளிகள் நின்றுகொண்டிருக்கின்றன. தமிழால் வா. தமிழ் படித்து வா. ஆங்கிலம் என்ன தரும்? ஹிந்தி என்ன தரும்? சப்பாத்திகள் செய்வதற்கு ஹிந்தி எதற்கு? சம்பாத்தியங்கள் தருவதற்கு அதெல்லாம் வேண்டுமா என்ன? நாம் வாழவில்லையா? வேட்டிக்குள்ளே புகுந்த வேங்கையை விரலால் கொன்றவர்களல்லவா நாம்! தமிழைப்படி. மடிப்பிச்சை எடுத்தாகிலும் தமிழைப்படி. மடிப்பிச்சை மட்டுமே வாழ்வாகும் பரவாயில்லை. மடிப்பிச்சை எடுத்து மடிப்பிச்சையால் மட்டுமே வாழ தமிழ் படி. எக்களம் கண்டாலும் வெறுங்கையோடு திரும்புமா வேங்கை?

கண்ணிலே கோளாறு சிலருக்கு. ஹிந்தி வேண்டுமாம். ஆங்கிலம் வேண்டுமாம். அதெல்லாம் எதற்கு? ஆங்கிலக்கல்வியிலா படித்தோம் நீயும் நானும்? பொன்னர் சங்கரும் புலவர் தொல்லும் ஹிந்தி படித்தா நாட்டையாண்டார்கள்? பண்பாடற்றவர்கள் பகலுவார்கள் அப்படி! காதிலே வாங்கினாலும் பாவம் தம்பி! காலைக்கடன் முடித்தவுடன் காலைக்கழுவுவது போல காதைக் கழுவி விடு தம்பி! செம்மொழி கேட்கும் இக்காதுகளுக்கு அம்மொழி வேண்டாம், அறிவுரைத்துவிடு.

காலம் போயினும் ஞாலம் அழியினும் ஞாயிறு காணும் பகலைப்போல தமிழைப்பார்த்து வளர்வோம் தம்பி. தமிழைக்காக்க வாழ்வோம் தம்பி!

அன்புடன்,
ம.கா.(கு)

மத்தியப்பிரதேசம்.

இருபத்தைந்து வயதுக்கு உட்பட்டவரா/ மேற்பட்டவரா நீங்கள்?

திருமணம் முடித்தவரா/ முடிக்காதவரா (ஹனிமூன் முடிந்து இப்போதுதான் வந்திருப்பவரா) நீங்கள்?

சிவாஜி கோட் போட்டுக்கொண்டு நடித்த 'லாரி டிரைவர் ராஜாக்கண்ணு' மாதிரியான படங்களை விரும்புவரா/ வெறுப்பவரா நீங்கள்?

அனுபவித்ததை, தான் பெற்ற உடற்செல்வங்களை, மறைக்க முடியாத விஷயங்களை மற்றவர்களுக்கும் சொல்ல விரும்புவரா/ விரும்பாதவரா நீங்கள்?

நேராக நிமிர்ந்து நின்றுகொண்டிருக்கும்பொழுது உங்களது கால் கட்டைவிரலைப் பார்க்க முடிந்தவரா/ முடியாதவரா நீங்கள்?

வாங்க! வாங்க! உங்களைப்பத்தித்தான் பேசுறோம். படிச்சுட்டு உங்க கருத்தைச்சொல்லுங்க.


மத்தியப்பிரதேசம்.

காஷ்மீரை தலையாக்கி விட்டு கன்யாகுமரியை பாதமாக இந்தியாவை நிற்கவைத்துப் பார்த்தோமாகில் மத்தியப்பிரதேசம் என்னவாகும் என்று நான் சொல்லாமல் உங்களுக்கு விளங்கிவிடும். மத்தியப்பிரதேசம் சில சமயங்களில் செழிப்பான வளமான பகுதி. சில சமயங்களில் மெலிந்திருந்தாலும் தாகமூட்டும் பிரம்மனின் கஞ்சத்தனம் வழுக்கியோடும் வளைவுப்பகுதி. இயற்கையின் நியதியில் 'இது போதும்' என்று 'பிடி' மட்டுமே கொடுக்கும் படைப்புகள் கூட வஞ்சகமில்லாமல் வாழ்வை ரசிக்க வைப்பன என்பதற்கு இதுவும் ஒரு சான்று. இனி மத்தியப்பிரதேசத்திற்கு வருவோம்.

மத்தியப்பிரதேசத்தின் எல்லைகள் நாமறிந்ததுதான். மேலே மேடான பகுதிகளையும் கீழே சரிவான பகுதிகளையும் கொண்ட இத் தக்காணபீடபூமி உருவானது எப்படி அறிவியலாரும் ஆன்மீகரும் ஆளுக்கொரு தியரிகளைச் சொல்லிக்கொண்டிருந்தாலும் திலீப்குமார் சொல்வது மிகவும் எளிமையானதும் சரியாகப்பொருந்தும் என நினைக்கிறேன். மேல் பாகத்தில் ரகசியமாய்த்துவங்கி, அமைதியாய் முன் எழுந்து, அவசரமில்லாமல் முன் வட்டம் போட்டு, பின் வெடுக்கென்று இறங்கிச்சரிந்து உருவாகியிருக்குமாம் அது. உருவாகும் தருணம் எது தெரியுமா? வைகறைக்கு முன்பான அந்த இளம் இருட்டில் ஒளியின் முதல் கீற்று சந்தடியின்றி திடீரென்று இழைந்து பகலாக்கி விடுவதைப்போன்றதாம் அத்தருணம். உண்மைதானா? வருவதறியாமல் வருவதா அது? காதல் மட்டும் தான் 'அப்படி' என்று படித்ததும் படங்களில் பார்த்ததும் தவறா? இல்லை காதல் தான் தவறா? காதல் தவறெனில் காதல் மூலம் வருவதனைத்தும் தவறா? மனைவியிடம் 'விழுவதறியாமல் விழுவதைப்போல' வருவதறியாமல் வந்து வற்ற மறுக்கிறதா அது? மனைவியிடம் மாட்டியவர்கள் வற்றிப்போகிறார்களே! இது மட்டும் எப்படி?

மோதகம், தலையில் குட்டு, அருகம்புல், மாம்பழம், தந்தம் என்பதையெல்லாம் தாண்டி மத்தியப்பிரதேசம்தான் நினைவுக்கு வரும் அவனைக் காணும் பொழுதும் நினைக்கும் பொழுதும் எனக்கு. 'அது' கொஞ்சம் அழகுதானோ என்று உள்ளுணர்வில் தோன்றுவதும் கூட அவனால் தானோ என நினைக்கிறேன். செல்லமாய்த்தட்டி அதை அசைத்துப்பார்க்கவேண்டும் என அவ்வப்பொழுது வரும் ஆசையையும் உண்மையில் மறைக்கமுடியாது. தட்டிப்பார்க்கவேண்டும் என்று ஆசை வருவதே தவறு. இன்று இங்கே வரும் 'தட்டிப்பார்க்கும் ஆசை', நாளை சென்னைப் பேருந்தில் வந்தால்? மோதகம், தலையில் குட்டு இதுமட்டுமில்லாமல் இன்னபிற 'வீங்கு' 'உள்காய வெளிக்காய' சமாச்சாரங்களும் இலவசமாய்க் கிடைத்துவிடும் ஆன் தி ஸ்பாட். இதெல்லாம் தேவையா? தட்டிப்பார்ப்பது அவ்வளவு நல்லதில்லை என்றுதான் உடம்பு சொல்கிறது..மனது? எருதின் நோய் காக்கைக்குத்தெரியுமா? அதுவும் கருங்காக்கைக்கு?

காக்கையைக் கூட இம்மாதிரி விஷயங்களுக்கு இழுப்பதெல்லாம் தவறு. எந்தக்காக்கை பேருந்தில் பயணிக்கும் பக்கத்து சீட்காரனுக்கு இடமில்லாமல் வயிற்றை வைத்து நிரப்பிக்கொண்டிருக்கிறது? எந்தக்காக்கை தூக்கிக்கொண்டு பறக்க முடியாமல் அதிகாலை மெரீனாவில் வாக்கிங் போகிறது அதைக்குறைக்க? எந்தக்காக்கை மல்லாக்கப் படுத்துக்கொண்டிருக்கும்பொழுது குழந்தைகள் ஏறி சறுக்கு விளையாட்டு விளையாடுகிறார்கள் அதன்மீது?

எப்படி உருவாகிறது என்பதைச் சுருக்கமாக நாம் சொல்லிகொண்டாலும் மத்தியப்பிரதேசத்தை விலாவாரியாக விரித்துப்பேச நம்மால் இயலும். இளம் மத்தியப்பிரதேசம் அழகானது என்று நகரத்திலே சொல்லிகொள்கிறார்கள். நடிகர் ஒருவருக்கு அதுவே அழகு என்றும் இளம் நடிகைக்கு அதுவே அவலம் என்றும் உழைப்பின் ஊதியத்தை அதை வைத்தும் கணிக்கிறார்கள். லேசாக அசைத்தால் நடிகை என்றும் நன்றாய் அசைத்தால் நாட்டியசுந்தரி என்றும் அதுவே பெயரை அறிவிக்கிறது. நடன இயக்குனருக்கும் நடிகைக்கும் காதல் வருவதில் கூட காரணமாகி விடுகிறது அது. பிறகு பிரிவுகள். பிரச்சனைகள்.

ரேமண்ட், ஆல்லென் சோலி, பீட்டர் இங்கிலாண்ட், ஆரோ, டெனிம் இன்னபிற இத்தியாதிகள் தராத இமேஜைக்கூட 'இளம் மத்தியப்பிரதேசம்' தந்து விடுவதுண்டு. அயலூரிலிருந்து வீடு திரும்பும்போதோ அயல்நாட்டிலிருந்து நாடு திரும்பும்போதோ 'சம்பந்தப்பட்ட பகுதிகள்' மப்பும் மந்தாரமுமாய் செழிப்பாயிருந்தால் 'பயல் செழுப்பம். பொண்ணு குடுக்கலாம்' என்பார்கள் எனது ஊரில். மத்தியப்பிரதேசத்தைப்பார்த்து மயங்குகிறார்கள் இப்படி. பொண்ணு படும் பாடு இவர்கள் அறிவார்களா தெரியவில்லை.

இதெல்லாம் ஒரு புறமிருக்க இல்லத்தரசிகள் பலருக்கு இதுவென்றால் அலர்ஜி என்கிறது ஒரு ஆதாரம் தராத தகவல் களம். காலையில் ஐந்து மணிக்கு கட்டிலை விட்டு எழுப்பி சாலையோரமும் கடலோரமும் ஓட வைப்பதில் பரங்கியர்களைப்போல இரக்கமில்லாமல் கணவர்கள்மேல் அவர்கள் நடந்துகொள்வதாகவும் அத்தகவல்களம் சொல்கிறது. சிலபெண்கள் அவ்வளவெல்லாம் கஷ்டப்படுத்தாமல், போனால் போகிறதென்று சமைப்பது, வீடு கிளீன் செய்வது, குழந்தைகளைக் கவனித்துக்கொள்வது, சென்னையாய் இருந்தால் நள்ளிரவு இரண்டு மணிக்கு ஷகீலாவோடு புரண்டு கொண்டிருந்த கணவரை புரட்டி, எழுப்பி பத்து குடம் (மட்டுமே) 'அடித்து' எடுக்க வைப்பது போன்ற 'எளிதான' வீட்டு வேலைகளை மட்டும் செய்யச்சொல்லி விடுகிறார்களாம். 'மத்தளமாவது பரவாயில்லை எங்களுக்கு எல்லா பக்கமும்' என்கிறது ஆணுரிமைச்சங்க தகவல்களை மேற்கோள் காட்டிய அத்தகவல்களம். நிஜத்தில் அப்படியெல்லாம் இருக்கிறதா? எத்தனை பேர் உண்மையை ஒத்துக்கொள்வார்கள்?

தேனிலவு முடிந்து வரும்பொழுதே அதற்கான அறிகுறிகள் தெரிந்துவிடுவதாக ஒரு தரப்பு சொல்கிறது. எவ்வளவு நிஜமிருக்கிறது இக்கூற்றில்? ஒரு இன்னிங்ஸ் மட்டுமே முடிந்த வேளையில் இத்தகைய சமாசாரங்கள் எப்படி நிஜமாகும் என்பதைத் தெரிந்தவர்கள் சொல்லலாம். அப்படியே நிஜமானாலும் இத்தகைய நிகழ்வுகளுக்கு எவை முக்கியக் காரணமாயிருக்கின்றன? திடீரென்று வந்து சேர்ந்த சந்தோசங்களும் சொந்தங்களுமா? இல்லை முழு நேரமும் சும்மாயிருந்து(!?) மாமியாரின் அன்புக்கட்டளைக்கு ஆட்பட்டு நடக்கும் வரவேற்புகளிலினாலா? இல்லை 'மச்சினி கிச்சினி' சம்பந்தபட்ட வேறெதுவும் காரணங்களா?

நிலைமை இப்படியிருக்க, சீன நண்பனொருவன், 'இந்தியப்பெண்களுக்கு மட்டும் எப்படி ஆண்களுக்கு நிகராக 'மேலே சொன்ன மேட்டர்' விரைவில் வளர்ந்து சீக்கிரமாக செழிப்பாகிவிடுகிறது என ஒரு சந்தேகத்தை என்னிடம் வைத்தான். யோசிக்க வேண்டியதுதான். ஜோதிகாக்களையும் கிரண்களையும் பேட்டி எடுத்துப்பார்க்கலாம். மும்தாஜ்வேறு எந்த வாய்ப்புகளும் இல்லாமலிருக்கிறாராம். ஏதாவது கலைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யுங்களேன் என்று யாரையும் கேட்க நமக்குத்தைரியம் இல்லாத வேளையில் வெறுமனே பேட்டி எடுத்து ம.பி மட்டுமின்றி அருணாச்சல, உத்தரப்பிரதேச, ஹிமாச்சல 'மலை'ப்பிரதேசம் பற்றியும் நலம் விசாரிக்கலாம்.

குற்றவாளிகளையும் 'அன்பளிப்பு'களையும் கையாளுவதில் மட்டுமில்லாமல் இந்தமாதிரி விஷயத்திற்கும் எடுத்துக்காட்டாய் எப்போதும் நமக்கு உணர்த்தப்படுபவர்கள் காவல்துறை நண்பர்கள். இதை வைத்துக்கூட நாம் ஒருமாதிரி காரணங்களை யோசிக்க முடியும். ஊரான் காசில் உடம்பு வளர்த்தால் இப்படியெல்லாம் நடக்க வாய்ப்பிருக்கிறதா, நின்றுகொண்டே எந்த வேலை பார்த்தாலும் இதுமாதிரி வர வாய்ப்பிருக்கிறதா? இல்லை இவையெல்லாம் காரணமில்லையெனில் என்னதான் காரணம் என்று காவல்துறையின் மத்தியப்பிரதேசத்தைக் களமாக்கி காமெடி செய்யும் விவேக நடிகரைக்கேட்கலாம். விவேக நடிகருக்கும் உற்சாகபானத்தின் காரணமாக அண்மையில் அப்படி இப்படி ம.பி வளர்ந்து வருவதாக ஒரு நாளேட்டு வாரச்செய்திமலரில் கருப்புப்பூனை சொல்கிறது. ஆக அனைத்திற்கும் உற்சாக பானம் தான் காரணமா? இல்லை உற்சாகம் காரணமா.? யோசிக்க வேண்டியதுதான்.

திருமணம் முடியாத நண்பனொருவனுக்கும் இடைப்பகுதி செழிப்பாகி வருகிறது என்ற ஆச்சரிய செய்தி கேட்டு ஆடிக்காற்றில் சருகு போல பறந்து சென்றேன். காரணம் யாதுவென்று விசாரித்தேன். சரியான காரணங்கள் இல்லை. ஆக தேனிலவு மட்டுமே ம.பி. செழிப்பாவதற்கு காரணமில்லை என்பது மட்டும் புரிகிறது. வேறு என்னதான் காரணம். (பி.கு: நண்பன் என்றால் நண்பன்தான்) நண்பன் தாய்லாந்துப்பக்கம் கூட செல்லவில்லை என்பது அவனிடமிருந்து நான் பெற்ற உபரி தகவல். இதற்கிடையில் கொடியிடை நூலிடை பற்றியெல்லாம் விசாரித்து பெண்பார்க்கபோவதாக அவன் சொல்லியபோது 'மைக்ரோ அவனில்' பாப் கார்ன் வெடித்தது எனக்குள். என்ன செய்ய?

எப்படித்தான் வருகிறது இது? எங்கிருந்து உதயமாகிறது? கிழக்கு எப்போது வெளுக்கிறது? மறையுமா இது? வழி இருக்கிறதா இதற்கு? நிமிர்ந்து நின்று கட்டை விரலைக் கூட பார்க்க முடியாதவாறு படுத்தும் இதற்கு என்னதான் தீர்வு? வருமுன் காப்பவன் அறிவாளியாம், அவ்வைப்பாட்டி சொல்லிவிட்டாள். எப்படிக் காப்பது? வந்த பின் எப்படிக்குறைப்பது? உங்களிடம் இது எப்போவாவது மாட்டியிருக்கிறதா? வந்து விட்டுப்போயிருக்கிறதா? போய் விட்டு வந்திருக்கிறதா? வருவதாகச்சொல்லியிருக்கிறதா? மத்தியப்பிரதேசத்தை செழிப்பாக்குவதுதான் எங்கள் ஆட்சியின் குறிக்கோள் என்கிறார் செல்வி உமாபாரதி. சீன நண்பன் ஞாபகத்துக்கு வருகிறான் எனக்கு. உங்களுக்கு?

ஒரு இளம்பிராயத்து ம.பி வாசி.

Monday, June 07, 2004

குடிமுந்திரி மற்றும் ஒன்பது ரூபாய் நோட்டு.

புத்தகப் பார்வை-- குடிமுந்திரி மற்றும் ஒன்பது ரூபாய் நோட்டு. தங்கர்பச்சான்.

எம்.கே.குமார்.

அழகி படத்தைப்பார்த்துவிட்டு நண்பர்களில் சிலர் 'ஓகேடா..'என்றவாறு போக நான், 'உன் குத்தமா' பாடலிலும் இன்னும் ஒரு இடத்திலும் கண்கலங்கினேன். மனதைப்பாதித்த சிறுவயது ஞாபகங்கள் அலைகளாய் ஓடிவந்து நின்றன. குழந்தைப்பருவத்தில் விளையாடியவர்களுக்கு மட்டும்தான் அந்த இழப்பின் வலி தெரியும். அதன் வீரியம் தெரியும்.

சென்ற மாதத்தில் ஒருநாள் நண்பர் ஒருவர், அந்தப்புத்தகத்தைக்கொடுத்தார். சிறுகதைத்தொகுப்பு. ஐந்து அல்லது ஆறு கதைகள் இருந்தன அவற்றில். ஒரு சில பக்கங்களைப்புரட்டியபோது நான் எங்களது 'வாழ்க்கைமீட்டான்' வயலின் மேலவரப்பில் ஓடிக்கொண்டிருந்தேன். அப்பா தூக்கமுடியாமல் கால் தாங்கிக்கொண்டு நெல்லுக்கட்டை தூக்கிக்கொண்டு நடக்கிறார். அது எனது பள்ளிக்குப் பணம் கட்டுவதற்காக வயலிலிருந்து வீட்டிற்குச்செல்லாமல் விற்பனைக்குச்செல்லும் கருதுக்கட்டு.

நெல்லுக்கட்டுக்கும் முந்திரி மரத்துக்கும் ரொம்ப வித்தியாசமில்லை. வாழ்க்கையை சுமந்து செல்லும் ஒரு முந்திரி மரத்தை வெட்டி விற்று தன் மகன் மிகவும் ஆசைப்பட்டவாறு புதிய ஷ¥ ஒன்றை வாங்கித்தருகிறார் அவனது அப்பா. எத்தனை வீடு மாறிய போதிலும் எதற்கும் உதவாது என்ற நிலையிலும் அந்த ஷ¥க்களை தாங்கிக்கொண்டே போகிறான் அவரது மகன். இது குடிமுந்திரியின் கதை.

அறிஞர் அண்ணாவின் சிறுகதை ஒன்று செவ்வாழை. குடியானவன் ஒருவனது வீட்டில் மிகவும் அன்போடு வளர்க்கப்படும் ஒரு செவ்வாழை மரம். ஒவ்வொரு நாளும் அதிகாலை எழுந்து செவ்வாழை மரத்தைப்பார்த்து எப்படா காய் காய்க்கும் என்று ஆவலோடு இருப்பார்கள் குடியானவனின் பிள்ளைகள். செவ்வாழையும் வயதுக்கு வந்து ஒரு நாள் குலை ஒன்றும் தள்ளிவிடும். அவ்வளவுதான். அடுத்து வரும் நாட்கள் அத்தனையும் குழந்தைகளுக்கு செவ்வாழைப்பழ கனவுதான். அவனுக்கும் மனைவிக்கும் சந்தோசம் தாங்கமுடியாது. குழந்தைகள் பக்கத்துவீட்டு பிள்ளைகளுடன் திடீர் ஒப்பந்தம் செய்துகொள்வார்கள். அவர்களின் மதிப்பு திடீரென்று கூடிவிடும். காயாகியதைக்கண்டு கனியாகும் நாளை எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்திருக்க, அதிகாலை ஒன்றில் வந்து அறுத்துக்கொண்டு போய்விடுவார் குடியானவனின் முதலாளி. கதை முடிந்தது.

கி. ரா அவர்களின் 'கதவு' என்றொரு கதை. ஏறக்குறைய இதே போன்றதொரு சூழ்நிலை கதை முடியும்பொழுது.

மனத்தின் வலி பார்ப்பவர்களுக்குப்புரியாது. குடிமுந்திரியின் நிகழ்வும் அப்படித்தான். கதை முடியும்போது கண் கலங்கி விடுகிறது. 'அழகி'கள் போல அப்பாக்கள் வந்துபோகிறார்கள். வாழ்க்கைத்தோப்பில் இறைவன் விளையாடுவதைப்போல முந்திரித்தோப்பில் ஒளிந்து விளையாடுகிறான் ஒரு படங்காட்டி...கதைசொல்லி வழியாக. தான் என்ன தொழில் செய்கிறேன் என்றே தெரியாமல் மறைந்துபோன தன் அப்பாவுக்கு சமர்ப்பிக்கிறார் 'குடிமுந்திரி' என்ற இச்சிறுகதைத்தொகுப்பை.

குடிமுந்திரியில் இன்னும் இருக்கும் கதைகளில் இரண்டு கதைகள் மனதுக்கு நல்ல கதையைப்படித்த திருப்தியைத் தருகின்றன.
அவற்றில் ஒன்று 'பசு.'

கல்யாணம் செய்துகொள்ளாமல் வாழும் ராயன் செத்துப்போகிறான் ஒருநாள். ராத்திரியிலே ஒண்ணுக்கிருக்க வந்தவர் வழி தவறி கெணத்துக்குள்ளெ விழுந்துவிட்டதாக ஊரார் நினைக்க, அதன் காரணம் அவனுக்கு மட்டும் தெரிகிறது. காரணம் ஜீரணிக்கமுடியாதது. மிகவும் அதிர்ச்சிதரக்கூடியது. இந்த மனுட வாழ்வில் இப்படியெல்லாம் நடக்குமா என்று நாம் யோசித்தாலும் 'உண்மை சுடும்' என்கிறார் ஆசிரியர்.

முடிவு? சுபமில்லை. சிவக்கொழுந்தும் செத்துப்போகிறான். அடிவாங்கிய பசு பிடரி சரிந்து கால் தாங்கித்தாங்கி நடந்துபோகிறது.

இரா.முருகன் அவர்களின் கதைகளில் ஒன்று அது. பெயர் மறந்துவிட்டது. தியேட்டரில் வேலை பார்க்கும் மேனேஜர் ஒருவர், படம் பார்க்க வந்த சீமாட்டிகள் இருவரின் உதவியாளிடம் தியேட்டர் சைக்கிளைக்கொடுத்து தனது வீட்டில் போய் முறுக்கு வாங்கி வரச்சொல்வார். முதலில் முடியாது என்று மறுக்கும் அவனிடம் அப்படி இப்படி சொல்லி அனுப்புவார். படம் முடிந்தும் அவன் திரும்பி வராத நிலையில் போலீசு மேனேஜரைத்தேடி வரும். அவன் ஏரிக்கரையில் லாரியில் அடிபட்டு இறந்து கிடப்பதாக. சைக்கிளை வைத்து தியேட்டருக்கு வந்தததாக.

மேனேஜர் படக்கென்று சொல்வார். அவன் தியேட்டர் சைக்கிளைத்திருடிக்கொண்டு போய்விட்டவன் என்று. செத்துப்போனவனா வந்து இல்லை, இவர்தான் முறுக்கு எடுத்து வர அனுப்பினார் என்று சொல்லப்போகிறான் என்று நினைத்துக்கொண்டு. ஆனால் விதி வேறு ரூபத்தில் வரும் அவருக்கு. எப்போதும் அவர் மதிக்காத தியேட்டரின் சிப்பந்திக்கு எல்லாம் விவரமும் தெரிந்து அவர் முன் மிகப்பிரமாண்டமாய் நிற்பான்.

யாருக்கும் தெரியாத தவறுதான் எப்போதும் ஆபத்து நிறைந்தது. எதிர்பார்க்காத நேரத்தில் எதிர்பாராது வெடிக்கும் இயல்புடையது. அந்த தவறின் நி¢ஜ இயல்பை நாம் தெரிந்துகொள்வதில்லை. தெரிந்துகொள்ளும்போது அந்த வெடிப்பை நம்மால் தாங்க முடிவதில்லை. மறைத்துவைத்த குண்டு வெடிக்காது என்று யார் சொல்லமுடியும்?

பசு கதையை படித்து முடிக்கும்போது நமது கண்களில் ஒரு கலக்கம். யாருடைய தவறு இது? எப்போது எவ்வளவு பெரிய மனிதர்களும் சறுக்குகிறார்கள் என்று ஆயிரக்கணக்கான கேள்விகள். மிக அருமையான கதை.(புத்தகத்தில் பக்கங்கள் மாறியுள்ளன.)

கதையில் குடித்துவிட்டு கோழிக்கறிக்காகச்சண்டை போடும் எமன் இருக்கிறான். காத்தவராயன் இருக்கிறான். கோயில் கிணத்தை தூறு எடுக்கும்போது அதன் நாற்றம் தாங்கமுடியாமல் யாருக்கும் தெரியாமல் அதில் ஒண்ணுக்கடித்து விடும் சாதாரணன் இருக்கிறான்.

கதையில் நாடகம் வரும் பகுதிகள் நகைச்சுவை.

அடுத்து வரும் கதைகளில் ஏழ்மை எழுத்தாளன் அவன் வயிற்றுப்பாட்டுக்கு வழிதேடி லண்டன் செல்லும் கதையும் ஒன்று. கதை முழுவதும் கதையாசிரியரின் வாழ்க்கையின் ஏழ்மை குறித்தான அங்கலாய்ப்புகள் தொடர்கின்றன.

இன்னொரு கதையில் தமிழ் மாநாடுகளின் உண்மைத்தோற்றம் என்ன என்பதைத்தர முயல்கிறார் ஆசிரியர். ஆசிரியருக்கு அதன் பால் மிஞ்சியது வெறும் ஊசிப்போகாத சாப்பாடு மட்டும்தான். அதுவாவது மிஞ்சுகிறதே என்று கிடைக்கும் ஒருவன் மகிழ்ச்சியோடு செல்கிறான்.

கதைகளில் வெறுமனே கற்பனைகள் மட்டுமே பயணிக்கவில்லை. எதார்த்தங்கள் இயல்பான வடிவிலே வந்து பிரச்சனைகளை நமக்குச்சொல்லிச்செல்கின்றன. ஆசிரியரின் உண்மையான வருத்தங்கள் அருமையாக பிரதிபலிக்கின்றன. சொல்ல வந்ததை வட்டார வழக்குகளோடும் சொல்லி முடிக்கின்றன.

இந்த வாரம் படிக்க நேர்ந்த தங்கர் பச்சானின் இன்னொரு படைப்பு. ஒன்பது ரூபாய் நோட்டு. நாவல்.

மிரட்டும் கதைக்களங்கள் இல்லை. சொந்தங்களாய் பந்தங்களாய் வந்து குழப்பும் பாத்திரப்படைப்புகள் இல்லை. கதாநாயகன் இல்லை. கதாநாயகியும் இல்லை. பேருந்திலே பயணிக்கும் ஒரு எழுபது பிளஸ் வயதுடைய மாதவப்படையாட்சியின் வாழ்க்கை கதை. கதை ஆரம்பம் கொஞ்சம் இழுப்பது போல இருந்தாலும் சில பக்கங்களைத்தாண்டிய பிறகு ஜெட் வேகத்தில் பறக்கிறது.

தன் மானம் கருதி சில நொடிகளில் ஒரு முடிவை எடுத்துவிட்ட பெரிய மனிதர் ஒருவர் அதனின்று மீள முடியாமல் போக, அனைத்தையும் இழந்து மீண்டும் வாழ்ந்த மண்ணுக்கே வருகிறார்..மண்ணோடு மனம் மகிழ்ந்து உறவு கொண்டாடும் வேளையில் அவரது சிதறிப்போன குடும்பம் நெஞ்சைக்கிள்ளுகிறது. தான் நட்ட பலா மரத்திற்கு அடியில் அதிகாலையில் அவரைப்பார்க்கிறார்கள் பிணமாக.

பேருந்தில் வரும் உரையாடல்களும் பயணங்களின் சகிப்பதற்கற்ற போக்குகளும் உணர்ந்து எழுதப்பட்டிருக்கின்றன. கதையெங்கும் பத்திரக்கோட்டை, புலியூர் மண்ணின் மணம் பலாப்பழச்சுவையாய் இனிக்கிறது. மாதவப்படையாட்சி மனதில் நிற்கிறார்.

ஒருசில இடங்களில் நகரம் வான்வில்லாய் வந்து போனாலும் முந்திரித்தோப்புகளும் புத்தம் புதிய சிவப்பு நிற மாங்காய்களும் முள் விரிந்து மணம் பரப்பக்காத்திருக்கும் பலாக்களுமாய் கதை முழுவதும் அவைகளின் வாசனை.

படங்காட்டி ஒளிந்துகொண்டிருக்கிறார். வெளியில் வந்தால் இன்னும் 95% வாசனை வெளியே வரலாம்.

வணக்கங்களுடனும் நன்றிகளுடனும்,
எம்.கே.குமார்.
தாடியாரு.

எனக்கும் அவருக்கும் ரொம்ப வயசு வித்தியாசம். தாடியத்தடவிக்கிட்டே அவரு பேசுறக்கேக்குறதுன்னா எனக்கு அப்படி ஒரு சந்தோசம். ஆனா இன்னக்கி அப்படி ஒரு சந்தோசமே என்கிட்டே இல்லை. மனசு கஷ்டமாகத்தான் இருந்தது. தாடியாரும் வந்தார்.

என்னவே...என்ன பண்ணுதெ?

வருத்தத்தைக்கலைத்துக்கொண்டு அவர் பக்கம் திரும்பி ஒண்ணுமில்லெ, சும்மா உக்காந்திருக்கேன்னேன்.

இல்லையே..மக்கா மொகத்துலெ என்னமோ தெரியுதே. என்னலே பிரச்சனையின்னார்.

இல்லே..ஒரு தப்பு பண்ணிட்டேன். வருத்தமா இருக்குன்னேன்.

தப்பு பண்னிட்டேலெ. விட்டுடு. வருத்தமும் படுறேலெ..அது போதும். ஆனா என்ன காரணமுன்னு மட்டும் நெனச்சி பொழச்சிக்கோன்னார்.

காரணத்தை அவரிடம் சொன்னேன். காலதாமதத்தால் வந்த வெனையின்னேன்.

வழக்கம்போல ஆரம்பிச்சார்.

ஏலே..காலம் ரொம்ப முக்கியமானதுலெ. நா இருப்பேன். போயிருவேன். நீ இருப்பே போயிருவே. காலம் இருக்குமுடோய். நேத்தக்கின்னு சொல்லுறோமே என்னலெ அது? நாளக்கின்னு சொல்லுறோமே என்னலெ அது. வயசாருச்சின்னு சொல்லுறோமே என்னலெ அது? எளமையின்னு சொல்லுறோமே என்னலெ அது? எல்லாமே காலமிலெ. காலந்தான் முக்கியம்ன்னார்.

மேலே தொடர்ந்தவர், கொக்கெ பாத்திருக்கியாலே? ஆத்தோரத்திலெ அதுபாட்டுக்கு நின்னுக்கிட்டே இருக்கும். பாக்க ஒனக்கு அப்படித்தான் இருக்கும். ஆனா பட்டென்னு கொத்துமுல்லெ, மீனைக் கண்டவோடனே.

காக்கையப்பாத்திருக்கியாலெ, பகல்லே..கோட்டானை வெரட்டி வெரட்டிக்கொத்தும். ஆனா ராத்திரின்னு ஒன்னு வரும் பாத்தியா. அதுக்காகத்தான் காத்திருக்கும் கோட்டான். ராத்திர்லெ வெச்சித்திருப்பிக்கொடுக்கும். காலத்தை நோக்கிக்காத்திருக்கணுமில்லெ. கரெக்டா கொத்திடனும். விட்டுப்போச்சின்னோ வரவேயில்லையினோ வருத்தப்படக்கூடாது.

இப்பொ பேசி என்ன பண்ண? எல்லாந்தான் முடிஞ்சிப்போச்சேன்னேன். எடமறிச்சிப்பேசினாரு.

ஏலெ, செல நேரத்துலெ முட்டாப்பயலுக செயிச்சுருவானுக. அதெல்லாம் எப்புடின்னு நெனக்கிறெ? காலம் பாத்து குத்துன கத்திலெ. வேலைய நேரத்தோடு கட்டிப்போட்ட கயிறுலெ. அதுலதான் ஜெயிச்சானுக. ஏன்லெ கலங்குறெ? ஏன் கலங்குறெ? வந்தது போகும்லெ. போனது வரும்லெ. முடியாததுன்னு ஒன்னு இல்லவே இல்லைலெ. ஒலகம் உன் கைக்கி வரணுமாலெ? எல்லாத்தையும் எடுத்துக்குட்டு ரெடியா இருலெ. வரும்போது அடிலெ. நீ ஜெயிப்பே.

செலபேரப்பாரு. அமைதியா இருப்பானுவ. என்னதான் தேருன்னாலும் பாருன்னாலும் மொகத்தத்திருப்ப மாட்டானுவெ. என்னன்னு நெனக்கிறெ? நேரம் வரும்போது பாருலெ. மொத்த ஆம்பளத்தனத்தையும் காட்டுவானுவ. ஜெயிப்பானுவ. அது அடக்கமுல்லலெ. எதிர்பாத்துக்காத்திருக்கது. குறிவெச்சி அடிக்கிறது. ஒன்னை விட பலமான ஒருத்தன் உன்ன அடிக்க வாரானா, அடிவாங்கிட்டுப்போலெ. ஆனால் மறந்துறாதெலெ. நேரம் வரும்போது திருப்பி அடிலெ. புழுங்கணுமுல்லெ. ஜெயிக்கிறவரைக்கும் அடங்கி இருக்கனுமுல்லெ. ஆனா அந்தக்காலம் வந்து உன் கையிலெ நிக்குது பாரு., அப்போ மட்டும் விட்டுறாதெலெ. தொவச்சிரு. காலத்தே ஜெயிச்சுருலே....ன்னு என்னன்னமோ சொல்லிட்டுப்போனாரு மனுசர்.

நா வானத்தையே பாத்துக்குட்டு இருந்தேன்.

The whole world is his who chooses the right time and right place.

எம்.கே.குமார்.

Thursday, June 03, 2004

அது மலரும் நேரமிது!

வெண்ணிலாப்ரியன்.

என் காலுக்கடியில்
சாம்பல்மண்நிறத்தில் ஒரு ஒளிவட்டம்
தாய்மடி தேடும் ஆர்வத்தோடு
வரும்--போகும்.

எச்சில் பட்ட புறங்கை
எப்போதும் இனிக்கும் அதற்கு.
ஒற்றைக்காலில்
வன வாசம் போகும் நேரம்
என்னைச்சிறிது புணரும்.

வயதாகிப்போனதாய் உணரும் வேளையில்
இயலாமை வெறுக்கும்--இருப்பு தேடும்
நொந்த வெந்த நெஞ்சோடு
கழிவிரக்கத்தாயின் கருப்பையில்
நிராதரவாய் சூழ் கொள்ளும்.

மெல்ல மோகச்சூரியன் எட்டிப்பார்க்க
மீண்டும் ஓடி வரும் இறந்ததறியாமல்.
இறந்தவை இறந்தபடியிருக்க
எப்போதும் தெரிவதில்லை அதற்கு
ஒவ்வொரு முறையும்
எப்படி இறந்தோம் என்பது.

என்றாவது ஒருநாள்
கன்னிப்பெண்கள் இல்லாத நாளில்
கனவில் பெண்கள் வராத இரவில்
உணர்ந்துகொள்ளும்
எப்படி இறக்கிறோம் என்பதை!

அதுவரை தினமும் மலரும்!

வெண்ணிலாப்ரியன்.



>>>>
எஸ்.எஸ்.எல்.சி.தேர்வில் புதுக்கோட்டை மாவட்டத்தில்
முதல் இடம் பெற்ற மாணவி சரண்யா பேட்டி
டாக்டருக்கு படிக்க விரும்புகிறேன்


புதுக்கோட்டை, மே.28-

எஸ்.எஸ்.எல்.சி.தேர்வில் புதுக்கோட்டை மாவட் டத்தில் முதல் இடம் பெற்ற திருப்புனவாசல் மாணவி எம்.சரண்யா டாக்டருக்கு படிக்க விரும்புவதாக தெரிவித் தார்.

முதல் மாணவி

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் ஆவுடையார்கோவில் அருகே உள்ள திருப்புன வாசல் ராமகிருஷ்ண வித் யாலயா மேல் நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி எம்.சரண்யா 486 மார்க்கு பெற்று புதுக்கோட்டை மாவட்டத்திலேயே முதலா வதாக தேர்ச்சி பெற்றுள்ளார்.

அவர் பெற்ற மார்க்கு விவரம் பாடம் வாரியாக வருமாறு:-

தமிழ்_96,

ஆங்கிலம்_94,

கணிதம்_99,

அறிவியல்_99,

சமூக அறிவியல்_98,

மொத்தம்_486

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாவட்ட அளவில் முதல் இடம் பிடித்தது பற்றி மாணவி எம்.சரண்யா `தினத்தந்தி' நிருபரிடம் கூறியதாவது:-

எனது தாயார் பெயர் ராணி, விவசாய கூலி வேலை செய்து வருகிறார். தந்தை க.மணிமுத்து திருப்பூரில் உள்ள ஆவின் பால் பூத்தில் வேலை செய்து வருகிறார். நான் மாநிலத்தில் முதலிடம் பெறுவேன் என்று நினைத்து இருந்தேன். ஆனால் மாவட் டத்தில் முதலிடம் கிடைத்து இருக்கிறது. பள்ளியில் நான் தொடர்ந்து முதல் மார்க்கு பெற்று வந்தேன். நான் பிளஸ்-1ல் சேர்ந்து தொடர்ந்து படித்து டாக்ட ராகி கிராமமக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித் தார்.

2-வது இடம்

ஆலங்குடி அருகே உள்ள வேங்கிட குள
>>>>>>>>>>>>>>>>>
நன்றி தினத்தந்தி.

Search This Blog