Saturday, December 24, 2005

நினைவஞ்சலி-காவியத்தலைவன்!

Image hosted by Photobucket.com Image hosted by Photobucket.com Image hosted by Photobucket.comImage hosted by Photobucket.comImage hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com


தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை!

உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகை நீ ஆளலாம்!

அச்சம் என்பது மடமையடா! அஞ்சாமை திராவிடர் உடைமையடா!


நெஞ்சைவிட்டும் நினைவைவிட்டும் அகலாது என்றும் வாழும் தலைவனுக்கு!

அன்பன்
எம்.கே.

Tuesday, December 20, 2005

தவமாய் தவமிருந்து- யுகங்களின் கதை!

சில நாட்களுக்கு முன்பு 'சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமிக்கு' விமர்சனம் எழுத ஆசைப்பட்டேன். நான் ஆசைப்பட்டாலும் எனது கைக்கு அகப்படாத நேரம், என்னை 'சிங்கபுரத்தில் ஒரு அப்பாவிச்சாமி' என்றாக்கிவிட்டு எங்கோ ஓடிப்போய்விட, இதோ தவமாய் தவமிருந்து பிடித்துக்கொண்டு வருகிறேன் கடந்துபோன அக்காலங்களை! ஒரு யுகங்களின் கதைகளுக்காக!

படம் பார்க்காதவர்கள் என்னைப்போல இந்த விமர்சனத்தையும் படிக்காதீர்கள். படம் பார்ப்பதற்கு முன் எத்தகைய அனுமானங்களையும் ஏற்படுத்திக்கொள்ளாமல் செல்வது நல்லது.

கடந்தமாதம் அண்ணனது கைப்பேசிக்கு அழைக்கிறேன் சிங்கப்பூரிலிருந்து. என்னிடம் பேசிவிட்டு, 'அப்பாவிடம் பேசு' என்று தருகிறார் அவர். இன்றும் யோசித்துக்கொண்டிருக்கிறேன். அப்பா எப்படி வாங்கியிருப்பார் அதை? உரம் போட்டுக்கொண்டிருந்த கைகளை அருகில் ஓடும் வாய்க்கால் நீரில் சளக்கென்று கழுவியா? இடுப்பிலிருந்த துண்டில் கையை துடைத்துவிட்டா? இல்லை துண்டில் போத்தியா? காதுக்கும் வாய்க்கும் இருக்கும் தொலைவு சரியாக படிந்திருக்குமா அவருக்கு?

"அப்பா...." இது நானல்ல; அவர்!

"அப்பா..சொல்லுங்கப்பா, நல்லாயிருக்கீங்களா?"

இருபக்க நலமும் அறிந்து பிறகு விரிகிறது அப்புன்னகை. ஆழ்கடலின் அலைகளறியா ஆழம்போன்ற புன்னகை. கடல்கடந்து நிலம்கடந்து மனிதக்குடிகளின் வாசத்திற்கு அப்பால் ஒரு வயலில் காட்டுவிளைநிலத்தில் உரம்போட்டுக்கொண்டிருந்தவனிடம் பேசவைக்கமுடிந்த அந்த விஞ்ஞானத்திற்குக்கிடைத்த ஒரு உழவனின் அங்கீகாரமாய் அப்புன்னகை. நானும் சிரிக்க அவரும் சிரிக்க இடைவெளிகளை சுகமாக நிரப்பிச்செல்கிறது நினைவுகள்.

சுகங்களை மட்டுமா நிரப்பிச்செல்லும் நினைவுகள்? திருவிழாச்செலவுக்கென்று அன்று அதிகாலையில் விறகுவெட்ட அப்பா போன விவரம் புரியாத வயதில், வீதி நண்பர்களுடன் மரத்திலிருந்து குதித்து கையை ஒடித்துக்கொண்டு கட்டுப்போட அவருக்காக காத்திருந்த நேரத்தில் கொண்டு வந்த பணம் கைச்செலவுக்கா, கையுடைந்த செலவுக்கா என்று தவித்துக்கொண்டிருந்த காலம் மறந்துபோகுமா அப்பா? 'மரம் வெட்டி வந்தகாசு மரத்தாலே போனது' என்பதை இப்போதும் இருவரும் உணர்ந்துகொள்வதும் உண்டுதானே!

பத்து வயதில் ஆடுகளுடன் உதித்த உலகம். மாடுகள், மரம் வெட்டல், வயல், விவசாயம், கூலிவேலை, மறுபடியும் மரம் வெட்டுதல்; மழை வரும்போது மட்டும் விவசாயம்; மற்றநாட்களில் கூலிவேலை! எங்கும் எப்போதும் நிழலை உணர்த்தாத நேர்மை! மகன்களிடம் கூட 'அப்பா' என்பதற்கு அடுத்த வார்த்தை இல்லாத மனம், அத்தனை வறுமைச்சூறாவளியிலும் பள்ளியைக்காட்டிய விவேகம்; பொறுப்பு. கைகளில் இருக்கும் காய்ப்புகளும் சிராய்ப்புகளும் காலில் இருக்கும் ஆறாத அப்புண்ணும் வாழ்க்கையின் வீரியத்தையும் வாரிசுகளின் வெற்றிகளையும் எக்கணமும் இசைத்துக்கொண்டேயல்லவா இருக்கின்றன!

மாடுகளின் பின்னே புழுதி உழவு முடிந்து வீட்டிற்கு வந்தபொழுதில் மகன்களுக்கு காலை அழுத்தி எண்ணெய் தேய்த்துவிடும் அன்பை எப்படி உணர்த்தமுடியும் மற்றவர்களுக்கு? தீபாவளிக்கு முதல்நாள் உடனடி கூலிவரும் இறால் பண்ணையின் எழும்புதல்களுக்கு, மண் சுமக்க அதிகாலையில் இருவரும் எழுந்து பத்து கிலோமீட்டர் சைக்கிளில் அழுந்திக்கொண்டு போனகதை எந்த வகையப்பா? ஒவ்வொரு சுமைக்குப்பிறகும் அப்பா..அப்பா...என்று முதுகுக்குப்பின்னால் வரும் உற்சாகவேதனைகளுக்கு எதையப்பா உவமையாய்க்காட்டமுடியும்?

அதிகாலைப்பனிமுதல் இரவின் தேரைச்சத்தங்கள் வரை அவையறியும் உங்களது இன்றுவரையான உழைப்பும் நிழலைக்கண்டுபிடிக்கமுடியாத அந்த நீண்ட நேர்மையும் எத்தனை இலக்கியங்கள் அப்பா! இந்தியவீடுகளில்தான் எத்தனை மகாத்மாக்கள்!

அப்பாவின் அவசர உடல்நலக்குறைவு காரணமாக மதுரையிலிருந்து மருத்துவமனை வரும் மகன் ராமலிங்கத்தின் நினைவலைகளில் எழும்புகிறது படம். உழைத்து உழைத்து ஓடாய்த்தேயும் அப்பா, அவரைச்சுற்றியே வாழ்ந்துவரும் பூமியாய் அம்மா, கெட்டுப்போகும் வாய்ப்புகளை அப்பாவிகளுக்காக கடைவிரித்துக்கொண்டிருக்கும் நகரத்திற்கு வரும் மூத்தமகன், கெடப்போகும் குடும்பத்திற்கு வரம் வாங்கி வரும் மூத்தமருமகள், குடும்பச்சுமையறியாது இளமைச்சுமையை ஏற்க முனையும் இரண்டாவது மகன், அத்திபூத்தாற்போல ஏதாவது தவத்தின் பலனாய் கிடைக்கும் நல்ல மருமகள்! இவர்களுக்குப்பின்னே வாழ்க்கையாய் ஓடுகிறது எதார்த்தம் படச்சுருளுக்குள்.

சினிமாவிற்குள் இலக்கியம் படைக்க முனைபவர்களில் சேரனுக்கு முக்கிய இடம் எப்போதும் உண்டு. அப்பணியில் இங்கே இன்னும் மிளிர்ந்திருக்கிறார். அவரது நடிப்புக்கில்லையெனினும் இயக்குதலுக்கு விருதுகள் இருக்கலாம். கதையின் நாயகன் ராஜ்கிரனுக்கு கண்டிப்பாய் விருது. முதுமையின் குடுகுடு நிலைமையில் இவரது நடிப்பு கொஞ்சம் பிசிறுகிறது.

ராஜ்கிரன், சரண்யா, மூத்தபையன், மூத்த மருமகள் (இவரைப்போன்ற மருமகள்கள் படம் சொல்லப்பட்ட ஏரியாவில் மிகவும் பிரசித்தம்), சேரன், பத்மலட்சுமி இவர்களைப்பற்றி விமர்சனத்தில் எல்லோரும் சொல்லிவிட்டார்கள். பெரிதாய் நன்றாய் நடித்திருக்கிறார்கள் என்று நானும் சொல்வதாயில்லை. வாழ்ந்திருக்கிறார்கள்.

இதுதவிர, மூன்று சம்பவங்களை இங்கே குறிப்பிட்டாகவேண்டும். மலை போல மிகப்பெரிய துயரம் நம் கண்ணெதிரே நின்றுகொண்டிருக்கும்பொழுது அதை எப்படித்தாண்டுவது அல்லது தாங்கிக்கொள்வது என்ற நிலைமையில், வீட்டிலிருக்கும் பெரியவர்கள் எப்படி ஒரு புல்லைக் கிள்ளுவது போல அதைக்கிள்ளிவிட்டுச் சென்றுவிடுகின்றனர் என்பதைக் காணும்பொழுது அவர்களின் அருகாமையின் அவசியம் நமக்குள் ஊருகிறது.

1. பத்மலட்சுமி காதலனுடன் ஓடிப்போய்விட்டு கையில் குழந்தையுடன் அவளது வீட்டிற்குத் திரும்பிவரும்பொழுது, 'வராதடி போ, இங்கெ யாரும் உனக்காக இல்லை' என்று அவரது தந்தை அழுதுகொண்டிருக்க, யாரையும் எதிர்பார்க்காமல் எத்தகைய வார்த்தையும் பேசாமல் விடுவிடுவென நேரே வந்து அவளது குழந்தையை வாங்கி, கொஞ்சிக்கொண்டு உள்ளே செல்லும் அப்பாட்டிக்கு என்ன பெயர் வைப்பீர்கள் நீங்கள்?

2. அனாதையாய் விட்டுவிட்டு ஒரே ஒரு ஆதரவும் சென்றுவிட்ட சூழ்நிலையில் எல்லாவற்றுக்கும் இரந்து பிழைத்து வந்த தன்னைப்பார்க்க ஓடிப்போன மகன் திரும்பி வந்தால் எப்படி அதை எதிர்கொள்வாள் அத்தாய்? அல்லது ஒரே ஒரு தூணான தான், பிழைப்பு என்று பொய்சொல்லிவிட்டு காதலியுடன் சென்றுவிட்ட சூழ்நிலையில் தன்னைப்பார்க்க வந்து அமர்ந்திருக்கும் தந்தையிடம் என்ன சொல்லமுடியும்? அவ்வளவு பெரிய துயரத்தை ஒரு வார்த்தையில் எம்பி தட்டிவிட்டுப்போய்விடுகிறார் தந்தை.

3. அச்சக சிப்பந்தியாய் காது சரியாகக் கேளாதவராய் வரும் ஒளிப்பதிவாளர் இளவரசு. (சாருநிவேதிதா தம்பி?) அப்பாவுக்கும் தந்தைக்குமான புரிந்துகொள்ளலை, முதலாளிக்கும் தீபாவளிச்செலவுப்பணத்திற்குமான மோதலை எவ்வளவு எளிதாய் முடித்துவிட்டுப்போகிறார்? இவர்களுக்கெல்லாம் வாழ்க்கையை கற்றுக்கொடுப்பது எது?

இதுபோன்ற காவியங்களுக்கு இளையராஜா இணைந்தால் நன்றாயிருக்குமல்லவா?

தனது இரு குழந்தைகளை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு பிழைப்பை ஓட்டும் அச்சகத்திற்கு 1970+ஸில் ராஜ்கிரன் பயணமாகிற அதே மண்சாலை 2005லும் மகன் ராமலிங்கத்தின் ·போர்ட் கார் செல்லும் பொழுதும் அப்படியே இருப்பது நிகழ்கால அவலத்தைச்சொல்ல பின்வருகிறது.

படம் ஆரம்பித்து சில நிமிடங்களுக்குள் ஆரம்பித்த எனது கண்கலங்குதல் படம் முடியும்வரை தொடர்ந்துகொண்டே இருந்தது. என்னருகில் இருந்த அந்த முதியவர், பிரிந்துபோன தந்தையும் மகளும் இணையும் இடத்தில் பெருங்குரலெடுத்தே அழத்தொடங்கினார். என்னை அவரும் அவரை நானும் ஏதோ ஒரு அர்த்தத்தில் பார்த்துக்கொண்டோம்.

காரைக்குடிக்கு கடந்த ஆகஸ்டில் வந்திருந்தபொழுது எந்த லாட்ஜிலும் இடமில்லை என்று சொன்னார்கள், காரணம் அவ்வளவும் ஷ¥ட்டிங்கிற்குப் புக்காகிவிட்டதாம். சிவகாசியில் பாதி, மஜாவில் பாதி, தவமாய் தவமிருந்து முக்கால்படம் என நம்ம ஏரியா (காரைக்குடி தேவகோட்டை) ஏரியா இப்போது பிரபலமாகியிருப்பது சந்தோசத்தைத்தருகிறது.

அப்பா, அம்மாவோடு குன்றக்குடி முருகன் கோவிலின் உச்சியில் நின்றிருப்பதாய் வரும் காட்சியை இருவருடங்களுக்கு முன் நான் எடுத்திருக்கிறேன். சேரன் காப்பியடித்திருக்கிறார். சேரனுக்கு காரைக்குடி ஏரியா அதுவும் அந்த கோயிலும் குளமும் (சதுரவடிவில் கற்களால் கட்டப்பட்ட ஒன்று) ரொம்பப்பிடித்திருக்கிறது என நினைக்கிறேன். தேசியகீதம் படத்திலும் பார்த்தேன்.

காரைக்குடியின் பழைய பஸ் ஸ்டாண்டிற்கு அருகில் இருக்கும் ஒரு எஸ்டிடி பூத்/செராக்ஸ் கடை அது. இருவருடங்களுக்கு முன் அவரிடம் பேசியிருக்கிறேன். ஒவ்வொரு கேள்வியாய் கேளுங்க சார் என்று கடுப்படித்திருக்கிறார். அவரது கடையில் எல்லா நடிகர்களுடனும் அவரது போட்டோ இருக்கும். மருதநாயகத்துடனும் ஐஸ்வர்யாராயுடனும் இருக்கும் அந்த 'தாடிவாலா' போட்டோவைப் பார்க்கும் பொழுதெல்லாம் எனக்கு கடுப்பாகும். ஏதோ திரைப்படங்களுக்கு தயாரிப்பு உதவியாளராகவோ லொகேஷன் இன்சார்ஜ்சாகவோ இருப்பதாய் அக்கடையில் பணிபுரியும் பெண் சொன்னார். இப்போது அவர் காட்டில் மழை என நினைக்கிறேன். இப்படத்திலும் தீபாவளிக்கு ராஜ்கிரண் மளிகைச்சாமான் வாங்கச்செல்லும் போது அம்மளிகைக்கடை ஓனராய் அவர் நடித்திருக்கிறார்.

படத்துக்கு நீண்ட விமர்சனம் எழுதிய "தண்டோரா விக்னேஷ்" என்பவரது விமர்சனம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டது. அதற்கு மேல் சொல்லக்கூடாது, சொல்லவும் ஒன்றுமில்லை. எனினும் யோசிக்க நிறைய விஷயம் இருக்கிறது, யோசித்தால் இதன் தொடர்ச்சியாய் பதிவு மட்டுமல்ல படமும் எடுக்கலாம்.

1. சேரனின் மனைவி அவ்வளவு படித்தும் மாமனார்/மாமியாருக்கு அன்புகாட்டுபவராக நடந்துகொள்கிறார். அப்படி இல்லாமல் அம்மருமகளும் மூத்த மருமகளைப்போல இருந்தால்?

2. முதியவர்களான அப்பா அம்மாவிற்கு கட்டிடக்கூண்டிற்குள் பேத்தியோடு மகனோடு இருப்பது இங்கு பிடித்திருக்கிறது, எல்லோருக்குமா? (எனது அப்பா சென்னை/தூத்துக்குடி வந்தால் அதிகபட்சம் ஒருவாரம்தான். உடனே ஊருக்குப்போய்விடவேண்டும்.)

3. பேரன் பேத்திகளுக்கும் தாத்தா/பாட்டியோடு விளையாடுவதும் பேசுவதும் பிடித்திருக்கிறது. 'தாத்தா பாட்டி பக்க போனாவே ஒரு மாதிரி ஸ்மெல்ப்பா' என்று விலகியோடும் பேரன்/பேத்திகளை வைத்துக்கொண்டு அப்பா அம்மாவை என்ன செய்வது?

4. ஒரு இலட்சம் ரூபாய் ஒருமுறை கேட்கும் அண்ணன்/உறவினர் இருந்தால் பரவாயில்லை. அவ்வளவு சம்பாதிக்கிறாயே கொடுத்தாலென்ன என்று கேட்டுக்கொண்டே இருக்கும் அவ்வகையறாக்களை எந்த வகையில் சேர்ப்பது.?

இப்படி நிறையப்போகும். ஆனால் மூன்று மணி நேரத்திற்குள் நிறையத்தான் சொல்ல ஆசையில்லை பேராசை பட்டிருக்கிறார் சேரன். சென்னையில் சென்று முளைவிட ஆசைப்படும் விதையென காதலர்கள் படும் அவஸ்தையை கொஞ்சம் சுருக்கியிருக்கலாம். "காதல்" படம் நச்சென்று சொல்லிவிட்டது. (விழுப்புரத்தில் பேருந்தில் சந்தித்த, குடும்பம் வெறுத்துவிட்ட அந்த ஜோடி (பிரிண்டிங் டெக்னாலஜி படித்த பையன் - புருவமுடி இணைந்திருந்த அப்பெண்) என்னிடம் பகிர்ந்துகொண்ட வேதனை நடுமூளையில் நச்சென்று அடிக்கிறது இப்போதும். இறைவா நலமாக இருக்கவேண்டும் அவர்கள்.)

'·பிளாஸ்பேக்' என்பதற்கு தமிழில் 'சேரன்' என்று யாரும் அர்த்தம் கொடுக்க முன்வருவதற்கு முன் சேரன் அடுத்த படத்தையும் இப்படி ஆரம்பிக்கக்கூடாது. ஆனால், ஒரு மகாத்மா என்ன ஓராயிரம் உண்மையான ஹீரோக்களின் வாழ்க்கையை அச்சுஅசலாய் கொடுக்க முனைந்ததற்கு சிரம் தாழ்ந்தி வணக்கங்கள்.

குடும்பம், கூட்டுக்குடும்பம், சகோதர பாசம், மனைவிக்கும் கணவனுக்குமான புரிந்துணர்வுகள் ('ஒருமுறைதான் ஒருமுறைதான்' பாடலைக்கேட்டு அயல்நாட்டில் வசிக்கும் தமிழ்ச்சமுதாயத்தினர் சிரித்திருப்பார்கள். இன்று அவர்கள்; நாளை நாம்!), மாமியார்/மாமனாரைப் பேணும் கட்டுப்பாடுள்ள ஒழுக்கங்கள், மூதாதையரின் பெயர் வைக்கும் வழக்கங்கள் இவையெல்லாவற்றையும் இழந்துவருதலுக்கு சாட்டையடியாய் புதுவித கிளைமேக்ஸ் வைத்திருக்கும் இயக்குநர் சேரனுக்கு மனம் கொண்ட பாராட்டுகள்.

அன்புடன்,
எம்.கே.

Thursday, December 08, 2005

திரு.தேவன் நாயர் மறைவு.

சிங்கப்பூரின் இன்றைய வெற்றிகர வளர்ச்சிக்கு வித்திட்டவர்களில் ஒருவரும் சிறந்த தொழிற்சங்கவாதியும் போராட்டகுணத்தில் இரும்பு மனிதராகவும் விளங்கிய திரு. தேவன் நாயர், கனடாவிலுள்ள ஹாமில்டன் நகரில் நேற்று மறைந்துவிட்டார். சிங்கப்பூரின் மூன்றாவது அதிபராகவும் திரு.லீ குவான் இயூ அவர்களுக்கு நீண்டகால நெருங்கிய நண்பராகவும் விளங்கியவர் அவர்.

இடதுசாரிகளிடமிருந்தும் ஆங்கிலேயர்களிடமிருந்தும் நாட்டை மீட்டு வெற்றிப்பாதையில் செலுத்தவேண்டிய அவசர தருணத்தில், திரு. லீ குவான் யூ அவர்களுடன் இவர் ஆற்றிய பணி மகத்தானது.

இவ்வாண்டின் ஆரம்பத்தில் தனது மனைவியை இழந்த அவருக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர். திரு.தேவன் நாயர் அவர்களது ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்.

தேவன் நாயர் பற்றிய எனது கட்டுரை: (தமிழோவியத்தில் வெளிவந்தது.)

http://tamiloviam.com/unicode/04280504.asp

http://tamiloviam.com/unicode/05050504.asp

எம்.கே.

Tuesday, November 22, 2005

வாழ்க பீகார் மக்கள்!

அப்பாடா..! விடிவெள்ளி வந்துவிட்டது. மீண்டும் பலகோடிகளை விழலுக்கிறைக்காமல் பீகாரிச்சகோதரசகோதரிகள் இம்முறை ஒரு முடிவோடு வெளிவந்திருப்பது மழை கொண்ட மேட்ச் சோகத்தையும் மீறி மனதுக்குள் நிம்மதியையும் மகிழ்வையும் தருகிறது.

15 ஆண்டுகால குடும்ப ஆட்சியை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தது பீகார் மக்களின் 'அதிரடி ஷாட்' என்றால் பலமான 'ராஷ்டிரிய காங்கிரஸ இடதுசார' கூட்டணியும் 'உடனடி (பஸ்வான்) முஸ்லீக் லீக்'காக ஒரு கட்சியும் தேர்தலில் குதித்திருந்த நெருக்கடித்தருணத்தில் அதைக் கொண்டுவந்தது அவர்களின் 'லவ்லி ஷாட்'.

தேர்தலில் நிற்காத நிதிஷ் குமார் கையில் பூமாலை, தனிமெஜாரிட்டியில் கிடைத்திருக்கிறது. வெற்றிமாலையைச் சூட்டி பீகாரை அழகுபடுத்துவாரா இல்லை குறுக்குசால் ஓட்டிவிடுவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

'பொய்யானது, பணம் விளையாடிவிட்டது, வன்முறை தாண்டவமாடிவிட்டது, மக்கள் விலைபோய்விட்டனர்' என்றெல்லாம் மு.தனமாய்ப் பேசாமல் 'மக்களின் முடிவை மனதார ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன்' என்றுசொன்ன லாலுவுக்கும் 'இத்தேர்தலில் வெற்றி பெற்றாலும் தலைவர் பதவியிலிருந்து விலகுவதில் பின்வாங்கப்போவதில்லை' என்ற அத்வாணிஜீக்கும் இந்நேரத்தில் நன்றிசொல்லத்தோன்றுவது ஏனோ ஆச்சரியமாயிருக்கிறது.

தலித் முஸ்லீம்களுக்கு ஏதோ சலுகைகள் தரப்போவதாய்ச் சொன்னாராம் நிதிஷ், பீகார் மக்களுக்கு எப்படியோ நல்லது நடக்கவேண்டும். நடந்தால் சரி!

எம்.கே.

Monday, November 07, 2005

பிறந்தநாள் வாழ்த்துகள்!

Image hosted by Photobucket.comImage hosted by Photobucket.comImage hosted by Photobucket.comImage hosted by Photobucket.comImage hosted by Photobucket.com


'ஸமத்வம் யோக உச்யதே'
'யோகஸ்த: குரு கர்மாணி'

பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

அன்பன்
எம்.கே.

Friday, October 14, 2005

எனது தாடி நண்பர்!

எனக்கும் அவருக்கும் ரொம்ப வயசு வித்தியாசம். தாடியத்தடவிக்கிட்டே அவரு பேசுறதக் கேக்குறதுன்னா எனக்கு அப்படி ஒரு சந்தோசம்.

ஆனா இன்னக்கி அப்படி ஒரு சந்தோசமே என்கிட்டே இல்லை. மனசு கஷ்டமாகத்தான் இருந்தது. தாடியாரும் வந்தார்.

என்னவே...என்ன பண்ணுதெ?

வருத்தத்தைக்கலைத்துக்கொண்டு அவர் பக்கம் திரும்பி ஒண்ணுமில்லெ, சும்மா உக்காந்திருக்கேன்னேன்.

இல்லையே..மக்கா மொகத்துலெ என்னமோ தெரியுதே. என்னலே பிரச்சனையின்னார்.

இல்லே..ஒரு தப்பு பண்ணிட்டேன். வருத்தமா இருக்குன்னேன்.

தப்பு பண்னிட்டேலெ. விட்டுடு. வருத்தமும் படுறேலெ..அது போதும். ஆனா என்ன காரணமுன்னு மட்டும் நெனச்சி பொழச்சிக்கோன்னார்.

காரணத்தை அவரிடம் சொன்னேன். காலதாமதத்தால் வந்த வெனையின்னேன்.

வழக்கம்போல ஆரம்பிச்சார்.ஏலே..காலம் ரொம்ப முக்கியமானதுலெ. நா இருப்பேன். போயிருவேன். நீ இருப்பே போயிருவே. காலம் இருக்குமுடோய். நேத்தக்கின்னு சொல்லுறோமே என்னலெ அது? நாளக்கின்னு சொல்லுறோமே என்னலெ அது. வயசாருச்சின்னு சொல்லுறோமே என்னலெ அது? எளமையின்னு சொல்லுறோமே என்னலெ அது? எல்லாமே காலமிலெ. காலந்தான் முக்கியம்ன்னார்.

மேலே தொடர்ந்தவர், கொக்கெ பாத்திருக்கியாலே? ஆத்தோரத்திலெ அதுபாட்டுக்கு நின்னுக்கிட்டே இருக்கும். பாக்க ஒனக்கு அப்படித்தான் இருக்கும். ஆனா பட்டென்னு கொத்துமுல்லெ, மீனைக் கண்டவோடனே.

காக்கையப்பாத்திருக்கியாலெ, பகல்லே..கோட்டானை வெரட்டி வெரட்டிக்கொத்தும். ஆனா ராத்திரின்னு ஒன்னு வரும் பாத்தியா. அதுக்காகத்தான் காத்திருக்கும் கோட்டான். ராத்திர்லெ வெச்சித்திருப்பிக்கொடுக்கும். காலத்தை நோக்கிக்காத்திருக்கணுமில்லெ. கரெக்டா கொத்திடனும். விட்டுப்போச்சின்னோ வரவேயில்லையினோ வருத்தப்படக்கூடாது.

இப்பொ பேசி என்ன பண்ண? எல்லாந்தான் முடிஞ்சிப்போச்சேன்னேன். எடமறிச்சிப்பேசினாரு.

ஏலெ, செல நேரத்துலெ முட்டாப்பயலுக செயிச்சுருவானுக. அதெல்லாம் எப்புடின்னு நெனக்கிறெ? காலம் பாத்து குத்துன கத்திலெ. வேலைய நேரத்தோடு கட்டிப்போட்ட கயிறுலெ. அதுலதான் ஜெயிச்சானுக. ஏன்லெ கலங்குறெ? ஏன் கலங்குறெ? வந்தது போகும்லெ. போனது வரும்லெ. முடியாததுன்னு ஒன்னு இல்லவே இல்லைலெ. ஒலகம் உன் கைக்கி வரணுமாலெ? எல்லாத்தையும் எடுத்துக்குட்டு ரெடியா இருலெ. வரும்போது அடிலெ. நீ ஜெயிப்பே.

செலபேரப்பாரு. அமைதியா இருப்பானுவ. என்னதான் தேருன்னாலும் பாருன்னாலும் மொகத்தத்திருப்ப மாட்டானுவெ. என்னன்னு நெனக்கிறெ? நேரம் வரும்போது பாருலெ. மொத்த ஆம்பளத்தனத்தையும் காட்டுவானுவ. ஜெயிப்பானுவ. அது அடக்கமுல்லலெ. எதிர்பாத்துக்காத்திருக்கது. குறிவெச்சி அடிக்கிறது. ஒன்னை விட பலமான ஒருத்தன் உன்ன அடிக்க வாரானா, அடிவாங்கிட்டுப்போலெ. ஆனால் மறந்துறாதெலெ. நேரம் வரும்போது திருப்பி அடிலெ. புழுங்கணுமுல்லெ. ஜெயிக்கிறவரைக்கும் அடங்கி இருக்கனுமுல்லெ. ஆனா அந்தக்காலம் வந்து உன் கையிலெ நிக்குது பாரு., அப்போ மட்டும் விட்டுறாதெலெ. தொவச்சிரு. காலத்தே ஜெயிச்சுருலே..
..ன்னு என்னன்னமோ சொல்லிட்டுப்போனாரு மனுசர்.

நா வானத்தையே பாத்துக்குட்டு இருந்தேன்.

"The whole world is his who chooses the right time and right place."

கலைஞரைக் கேக்கணுமுன்னா இங்கே போங்க! http://www.thedmk.org/thirukural/49.htm

எம்.கே.குமார்.

மறுபதிப்பு.

நோய்க்கூறு சிந்தனை = எஸ்.ஜே.சூர்யாஹ்?

இந்தமாத காலச்சுவடின் சினிமா பகுதியில், திரு. அ.ராமசாமி எழுதியிருக்கும் இக்கட்டுரை எஸ்.ஜே.சூர்யாஹ்வையும் அவரது சினிமா மற்றும் தமிழக ரசிகர்களின் நாடிபிடிப்புப்புலமையையும் வெளிச்சமிட்டுக் காட்ட முயல்கிறது.

முதலில் அக்கட்டுரையிலிருந்து சில வரிகள்:

ஒரு ஆணும் பெண்ணும் படுக்கையறையில் மிக நெருக்கமாக இருக்கும் காட்சிகளை சுவரொட்டிகளாக்குவதன் மூலம் தனது படம் படுக்கை அறைக் காட்சிகள் நிரம்பிய படம் எனச்சொல்ல விரும்புகிறார் சூர்யா. எப்படிப்பட்ட படுக்கையறைக்காட்சிகள் என்பதை மேலும் விளக்க அவர் பயன்படுத்தும் உத்திதான் B.F அதாவது அ.ஆ.

அந்தப்படத்தின் சுவரொட்டியை மிக அருகில் சென்று வாசித்தால் மட்டுமே 'அன்பே ஆருயிரே' என்பதும் 'Best Friend' என்பதும் உங்களது கண்களுக்குப்புலப்படும். அப்படிச் சுவரொட்டியின் மிக அருகில் சென்று பார்க்கும்போது மிகக் கவனமாகச்செல்லவேண்டும். உங்களூக்குத்தெரிந்தவர்கள் யாராவது பார்த்தால் சுவரொட்டியில் ஆணும் பெண்ணும் உறவு கொள்ளும் மோகநிலைக்காட்சியை அருகில் பார்க்கச்செல்கிறீர்கள் எனக் கருத இடமுண்டு. மேலும் அதன் மூலம் நீங்கள் ஒரு நீலப்பட விரும்பி என நினைத்துக்கொள்ளவும் வாய்ப்புண்டு. உங்களூக்கு உங்கள் ஆளுமை மீது கவலையில்லை என்றால் அச்சுவரொட்டிகளையும் எஸ்.ஜே.சூர்யாவின் படங்களையும் பார்க்கலாம்.

இதற்கு முன்பு வந்த அவரது வாலி, குஷி, நியூ என எல்லாப்படங்களுமே எஸ்.ஜே.சூர்யாவின் இரட்டை அர்த்த மோக வசனங்களைக் கொண்டதாகவே இருக்கின்றன என்பதைத் தனியாகச்சொல்லவேண்டியதில்லை.

'வாளிப்பான உடல்களைக் காட்டுவதும் அவற்றில் பொதிந்துள்ள ரகசியங்களைத் தேட எதிர்ப்பாலினர் முயல்வதைச் சொல்லாடலாக மாற்துவதும் மட்டுமே பார்வையாளர்களுக்குப் போதுமானது' என்பதுதான் இயக்குனர் சூர்யாவிற்கு வந்துள்ள நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் பேரிலேயே தனது மூன்றாவது நான்காவது படங்களில் தானே நாயக நடிகராகவும் ஆகியுள்ளார்.

தனது முதல் படமான வாலியில் ஒரு இயக்குனராய் வசனம், பாடல் காட்சியமைப்புகளின் ஒழுங்கு மற்றும் காமிராகோணங்கள் ஆகியவற்றை ஓரளவு சரியாகச்செய்த சூர்யா தனது நான்காவது படத்தில் இவற்றையெல்லாம் தவறவிடுகிறார் என்றால் பார்வையாளர்களுக்குத் தேவை எதிர் பால் உடல்களின் நெருக்கமும் அவைகளைப் பற்றிய பேச்சும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் என்றுதானே அர்த்தம். இந்த முடிவு, குடிப்பவர்களூக்குத் தேவை போதை மட்டுமே என நினைத்துச்செயல்படும் கள்ளச்சாராய வியாபாரிகளின் நோக்கம் போன்றதுதான்.

சூர்யாவின் நான்கு திரைப்படங்களூம் ஒரே சட்டகத்தின் மேல் உருவாக்கப்பட்டுள்ள திரைக்கதைகள் தான்.

உடல்பற்றிய ரகசியங்களை முன்வைக்கும்பொழுது பார்வையாளர்களின் மனமோ உடலோ வேறு எதையும் எதிர்பார்க்காது என்றும்கூட அவர் நம்புகிறார். வழக்கமாகத் தமிழ் சினிமாக்கள் நம்பிக்கை வைக்கும் காமெடிக்காட்சிகள், சண்டைக்காட்சிகளில் சூர்யா அதிகம் நம்பிக்கை வைத்திருப்பதாகத்தெரியவில்லை. படத்தின் நாயகி புதுமுகமானாலும் பரவாயில்லை; இளமையும் வாளிப்பும் கொண்ட உடலும் அதை வெளிப்படுத்தத் தயங்காத மனமும் கொண்டவராக இருந்தால் மட்டுமே போதும் என்பதும் அவரது நம்பிக்கையாக இருக்கிறது. உடல் - அதிலும் பெண்ணுடல் பற்றிய பரவசம், அதுதான் அவரது ஒரே ஆதாயம்.

கலைகளின் பெயரால் சில உடல்கள் விற்கப்படுவதும் அதனைக் காசுகொடுத்துப் பார்ப்பதன் மூலம் நுகரும் சில பார்வையான உடல்களும் மனங்களூம் நோய்க்கூறுகளுக்குள் நுழைய நேரிடும் என்றால் கூடுதல் கவனம் செலுத்தத்தானே வேண்டும்.
*******
அண்மையில் அ.ஆ படத்தை நானும் பார்த்தேன். படத்தைப் பற்றி விமர்சனம் எழுதி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.


தமிழ் சினிமாக்களில் ஒரு பாடல்காட்சிக்கு மட்டும், அதிலும் ஹீரோவை/வில்லனை மயக்கவோ அல்லது வில்லன்கள் கூடும் இடத்தை ஹீரோ கண்காணிக்கும்பொழுதோ அல்லது ஹீரோ எசகுபிசகாக மாட்டிக்கொள்ளும் ஆதிவாசிகள் மத்தியிலோ என சிலுக்கு சுமிதாவையோ அனுராதாவையோ அல்லது காலை இறுக்கிப்பிடிக்கும் வகையில் உடை போட்ட நடனப்பெண்மணிகள் ஆடும் நாட்டியத்தையோ கொண்ட சினிமா வியாபார அச்சாரத்திற்கு இன்றைய எஸ்.ஜே.சூர்யாஹ் போன்றவர்கள் செய்துகொள்ளும் சமரசம் திரு. அ.ராமசாமி சொன்ன கள்ளச்சாராய வியாபாரத்திற்கு ஒத்ததுதான்.

வாலி, குஷி, நியூ மற்றும் அ.ஆ படங்களின் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாஹ்வைப் பற்றி புரியாதவர்கள் யாரும் இருந்துவிடப்போகிறார்கள் என்ற அவரது எண்ணத்தை உடைக்கும் வகையில், 'அ.ஆ' படத்தில் அவராகவே, "இந்த நாய்க்கு என்ன பிடிக்கும் என்று இவங்களூக்குத்தெரியாதா" என்று உங்களைக் கைகாண்பிக்கிறார். அது ஒன்றே அடுத்து வரப்போகும் நான்கைந்து படங்களின் வெற்றிக்கு அச்சாணி என்பதை தமிழ்நாட்டு 'பி, சி' ரசிகர்கள் தங்களது சீழ்கை மூலம் உறுதி செய்யாமலா இருந்துவிடப்போகின்றனர்.

'வாலி' படத்தில் சிம்ரனின் அறிமுகக் காட்சியின் காமிரா கோணமே 'திரு.கர்ணன்' அவர்களுடையதற்கு இணையாக எப்படி ஆரம்பிக்கும் என்பதை யாரும் மறக்க முடியாது. இதே ராமாயணக்கதையையே இந்தளவுக்கு 'பெண்ணுடல் பரவசம்' இன்றி வெளிப்படத்திய இதற்கு முந்தைய வெளியீட்டுப்படமான மு.களஞ்சியத்தின் 'பூமணி', பெரிய அளவு வெற்றி பெறாததும் சூர்யா தனது ரசிகர்கள் மேல் கொண்ட நம்பிக்கையை தெளிவாக்குகிறது.

'குஷி' படத்தின் அடிப்படை கருத்துக்கு அப்படம் பத்து நாட்கள் கூட ஓடியிருக்கக்கூடாது. ஆனால் வெள்ளிவிழா காண்கிறது என்றால் 'கட்டிப்புடிடாவை'யும் கவனத்தில் கொள்ளாமல் விடமுடியாது. 'நியூ' படத்தில், 'மடிசார்' பெண்ணுடலை அவரின் நம்பிக்கையாளர்களுக்கும் 'தாய்மை-பாசம்' என ஒரு பத்து நிமிடம் அத்தகைய நம்பிக்கையாளர்களுக்கும் தீனியாய் போட்டு வெற்றிபெற்றதை யாரும் மறைக்க முடியாது.

எஸ்.ஜே சூர்யாஹ்வின் சினிமா மீதான முழுப்பரிணாமத்தையும் கவனமாக உற்று நோக்கும் யாருக்கும் இன்னொன்று தோன்ற வாய்ப்பிருக்கிறது. மக்களின் அல்லது சராசரி ரசிகர்களின் மனத்தைப்புரிந்துகொண்டவர்களாக இவர்கள் நடத்தும் விளையாட்டு தொடர்ந்து இப்படியே நடந்து, நிறைய வசதியும் அறிமுகமும் வந்தபிறகு இதே 'தரத்தைக் கொண்ட' பக்திப்படங்களை எடுத்து பெயர் காப்பாற்றிக்கொண்டு (அல்லது அப்படி நடித்து) ஏதாவது ஒரு இயக்கத்திலோ அல்லது அரசியலிலோ சேர்ந்து சமூகத்தொண்டாற்றவும் கூட்டமாய் இவர்கள் கிளம்பக்கூடும். (இதற்கு தற்போதைய உதாரணங்கள் நிறைய இருக்கின்றன!)

சமுதாயத்தின் அடிப்படையில் வக்கிரத்தை முளையிட்டு வாழ நினைக்கும் இத்தகைய பாவிகளின் வாழ்தலானது கேடுகெட்ட அரசியல்வாதிகள், கந்துவட்டிக்காரர்கள், கள்ளச்சாராய வியாபாரிகள் மற்றும் வன்புணர்பாலியல் குற்றவிலங்குகளின் வாழ்வை விட எதிலும் மேம்பட்டதுமில்லை; நியாயமனதுமில்லை. வன்மையாக கண்டிக்கப்படவேண்டியவர்கள் இவர்கள்!

எம்.கே.

Monday, October 03, 2005

பாபு யோகேஸ்வரனும் கே.எஸ்.அதியமானும்!

நூன் ஷோ!

டைரக்டர் பாபு யோகேஸ்வரன் யார்? இது நீங்கள் பதில் சொல்லவேண்டிய கேள்வி! நான் சொல்லப்போவது, டைரக்டர் பாபு யோகேஸ்வரனைப் பாராட்டுவதற்கு பத்து காரணங்கள். அவை யாவன?

1. மிகப்பெரிய பூதாகரமான சமூகப் பிரச்சனைகளையெல்லாம் படத்தின் கமர்சியல் தன்மையில் எவ்வித குறைபாடும் இல்லாமல் எளிதாக ஆனால் காட்டமாகச் சொல்ல முடியும் என்று நிரூபித்ததற்காக.!

2. 'கரணம் தப்பினால் கொட்டகை காலி; தியேட்டர் காலி!' என்றாகிவிடக்கூடிய கதையை தனது முதல் படமாய்க்கொண்டதற்காக!

3. சிறுபான்மை இன கதாநாயகனை பெரும்பாலும் (அதுவும் அவன் புரட்சிக்காரனாக இருந்தால் முற்றிலும்) ஏற்றுக்கொள்ளாத தமிழ் சினிமா ரசிக உலகில் அப்படி இயக்கி, வெற்றியும் பெற முடியும் என்று சாதித்ததற்காக!

4. விரலை வைத்தே கண்ணைக் குத்துவது போல பிரச்சனைகளின் முளைகளை அதனதன் பிறப்பிடத்தில் வைத்தே தோலுரித்ததற்காக!

5. எதற்கும், எத்தகைய விமர்சனங்களுக்கும் அஞ்சாமல் எல்லா மதங்களின் உள்ளழகையும் வசனங்களின் மூலம் எடுத்துச்சொல்ல முனைந்ததற்காக!

6. சேரிக்கும் (எப்போது) தேர் வரும் என்ற (புகழ்பெற்ற) கவிதையை காட்சியாக்கி காட்டும் தீரத்தை வெளிப்படுத்தியதற்காக!

7. படத்தில் கவர்ச்சியையோ ஆபாசத்தையோ எங்கும் பெரிதாக நம்பாமல் கதையையும் அதன் அழகான நகர்த்தலையும் நம்பியதற்காக!

8. இனிமையான பாடல்களை யுவனிடம் இருந்து பெற்றதற்காக! அப்படியே அவற்றை ஒளியோவியமாக்கியதற்காக! அப்படியே ஒரு ஹோம்லி ஹீரோயினை அறிமுகப்படுத்தியதற்காக(வும்)! (சம்பந்தப்பட்டவர்களுக்கும் சாரும்!)

9. படத்தின் பெரும்பாலான ஓட்டைகளை மறைக்க முயன்றளவு முயற்சி செய்தது தெரிந்தாலும் அதையெல்லாம் மீறி ஒரு கருத்து சொல்லும் படத்தை இயக்கியதற்காக!

10. கை நிறைய ரிஸ்க்குகள் இருந்தாலும் அவற்றைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் இதை வெற்றிப்படமாக்கமுடியும் என்று இறங்கியதற்காக! (மக்களுக்கும் நன்றி!)

பாபு யோகேஸ்வரன், வெற்றிகரமான "தாஸ்" படத்தின் இயக்குனர். சமுதாயத்தின் புரையோடிக்கிடக்கும் பழக்கவழக்கங்களான ஜாதி ஆதிக்கம், காதல் எதிர்ப்பு, இந்து முஸ்லீம் மதவெறி, குண்டு கலாச்சாரம், அரசு அலுவலர்களின் ஒரு சார்பு நிலை என அத்தனை பிரச்சனைகளையும் கண் எதிரே காலில் உதைத்து கோல் வளைக்குள் விளாசியிருக்கும் இளைஞர்!

ஆங்காங்கு பெரிய ஓட்டைகள், உயிரை வதைக்கவேண்டிய காட்சிகளில் உயிரூட்ட குறைபாடுகள் என்பதையெல்லாம் மறந்து இவருக்கு கண்டிப்பாக கை கொடுக்கலாம்! வாழ்த்துகள்!

****************************
ஈவ்னிங் ஷோ!

ஈவ்னிங் ஷோவில் என்னைக் கவர்ந்த படம் பிரியசகி. தாமதமாக பார்க்க நேர்ந்தாலும் மிகவும் ரசிக்க வைத்தது என்னை!

படத்தில் மாதவனும் சதாவும் ஏதோ நம் எதிர் ·பிளாட்டில் குடியிருக்கும் குடும்பத்தினரைப்போல நமக்குள்ளே ஒன்றிப்போகிறார்கள்.

படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் மட்டுமே ஒரு திரைப்படத்தைப் பார்க்கிறோம் என்ற உணர்வு வரும் அளவுக்கு மிக இயல்பாக ஒரு கணவன்- மனைவி- குடும்பக் கதை. அருமையாக படமாக்கிய இன்னொரு (தொட்டாச்சிணுங்கி) இயக்குனர் கே.எஸ்.அதியமான் திறமையானவர் என்பதில் சந்தேகமில்லை!

எம்.கே.

Tuesday, September 27, 2005

குடிமுந்திரி & ஒன்பது ரூபாய் நோட்டு -தங்கர்பச்சான்.

சென்ற மாதத்தில் ஒருநாள் நண்பர் ஒருவர், அந்தப்புத்தகத்தை என்னிடம் கொடுத்தார். சிறுகதைத்தொகுப்பு. ஐந்து அல்லது ஆறு கதைகள் இருந்தன அவற்றில். ஒரு சில பக்கங்களைப்புரட்டியபோது நான் எங்களது 'வாழ்க்கைமீட்டான்' வயலின் மேலவரப்பில் ஓடிக்கொண்டிருந்தேன். அப்பா தூக்கமுடியாமல் கால் தாங்கிக்கொண்டு நெல்லுக்கட்டை தூக்கிக்கொண்டு நடக்கிறார். அது எனது பள்ளிக்குப் பணம் கட்டுவதற்காக வயலிலிருந்து வீட்டிற்குச்செல்லாமல் விற்பனைக்குச் செல்லும் நெற்கருதுக்கட்டு.

நெல்லுக்கட்டுக்கும் முந்திரி மரத்துக்கும் ரொம்ப வித்தியாசமில்லை. வாழ்க்கையை சுமந்து செல்லும் ஒரு முந்திரி மரத்தை வெட்டி விற்று தன் மகன் மிகவும் ஆசைப்பட்டவாறு புதிய ஷ¥ ஒன்றை வாங்கித்தருகிறார் அவனது அப்பா. எத்தனை வீடு மாறிய போதிலும் எதற்கும் உதவாது என்ற நிலையிலும் அந்த ஷ¥க்களை தாங்கிக்கொண்டே போகிறான் அவரது மகன். இது குடிமுந்திரியின் கதை.

அறிஞர் அண்ணாவின் சிறுகதை ஒன்று செவ்வாழை. குடியானவன் ஒருவனது வீட்டில் மிகவும் அன்போடு வளர்க்கப்படும் ஒரு செவ்வாழை மரம். ஒவ்வொரு நாளும் அதிகாலை எழுந்து செவ்வாழை மரத்தைப்பார்த்து எப்படா காய் காய்க்கும் என்று ஆவலோடு இருப்பார்கள் குடியானவனின் பிள்ளைகள்.

செவ்வாழையும் வயதுக்கு வந்து ஒரு நாள் குலை ஒன்றும் தள்ளிவிடும். அவ்வளவுதான். அடுத்து வரும் நாட்கள் அத்தனையும் குழந்தைகளுக்கு செவ்வாழைப்பழ கனவுதான். அவனுக்கும் மனைவிக்கும் சந்தோசம் தாங்கமுடியாது. குழந்தைகள் பக்கத்துவீட்டு பிள்ளைகளுடன் திடீர் ஒப்பந்தம் செய்துகொள்வார்கள். அவர்களின் மதிப்பு திடீரென்று கூடிவிடும்.

காயாகியதைக்கண்டு கனியாகும் நாளை எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்திருக்க, அதிகாலை ஒன்றில் வந்து அறுத்துக்கொண்டு போய்விடுவார் குடியானவனின் முதலாளி. கதை முடிந்தது.

கி. ரா அவர்களின் 'கதவு' என்றொரு கதை. ஏறக்குறைய இதே போன்றதொரு சூழ்நிலை கதை முடியும்பொழுது.

மனத்தின் வலி பார்ப்பவர்களுக்குப் புரியாது. குடிமுந்திரியின் நிகழ்வும் அப்படித்தான். கதை முடியும்போது கண் கலங்கி விடுகிறது. 'அழகி'கள் போல அப்பாக்கள் வந்துபோகிறார்கள். வாழ்க்கைத்தோப்பில் இறைவன் விளையாடுவதைப்போல முந்திரித்தோப்பில் ஒளிந்து விளையாடுகிறான் ஒரு படங்காட்டி...கதைசொல்லி வழியாக.

தான் என்ன தொழில் செய்கிறேன் என்றே தெரியாமல் மறைந்துபோன தன் அப்பாவுக்கு சமர்ப்பிக்கிறார் 'குடிமுந்திரி' என்ற இச்சிறுகதைத்தொகுப்பை.

குடிமுந்திரியில் இன்னும் இருக்கும் கதைகளில் இரண்டு கதைகள் மனதுக்கு நல்ல கதையைப்படித்த திருப்தியைத் தருகின்றன. அவற்றில் ஒன்று 'பசு.'

கல்யாணம் செய்துகொள்ளாமல் வாழும் ராயன் செத்துப்போகிறான் ஒருநாள். ராத்திரியிலே ஒண்ணுக்கிருக்க வந்தவர் வழி தவறி கெணத்துக்குள்ளெ விழுந்துவிட்டதாக ஊரார் நினைக்க, அதன் காரணம் அவனுக்கு மட்டும் தெரிகிறது. காரணம் ஜீரணிக்கமுடியாதது. மிகவும் அதிர்ச்சிதரக்கூடியது. இந்த மனுட வாழ்வில் இப்படியெல்லாம் நடக்குமா என்று நாம் யோசித்தாலும் 'உண்மை சுடும்' என்கிறார் ஆசிரியர். முடிவு? சுபமில்லை. சிவக்கொழுந்தும் செத்துப்போகிறான். அடிவாங்கிய பசு பிடரி சரிந்து கால் தாங்கித்தாங்கி நடந்துபோகிறது.

இரா.முருகன் அவர்களின் கதைகளில் ஒன்று அது. பெயர் மறந்துவிட்டது. தியேட்டரில் வேலை பார்க்கும் மேனேஜர் ஒருவர், படம் பார்க்க வந்த சீமாட்டிகள் இருவரின் உதவியாளிடம் தியேட்டர் சைக்கிளைக்கொடுத்து தனது வீட்டில் போய் முறுக்கு வாங்கி வரச்சொல்வார். முதலில் முடியாது என்று மறுக்கும் அவனிடம் அப்படி இப்படி சொல்லி அனுப்புவார். படம் முடிந்தும் அவன் திரும்பி வராத நிலையில் போலீசு மேனேஜரைத்தேடி வரும். அவன் ஏரிக்கரையில் லாரியில் அடிபட்டு இறந்து கிடப்பதாக. சைக்கிளை வைத்து தியேட்டருக்கு வந்தததாக. மேனேஜர் படக்கென்று சொல்வார். அவன் தியேட்டர் சைக்கிளைத்திருடிக்கொண்டு போய்விட்டவன் என்று. செத்துப்போனவனா வந்து இல்லை, இவர்தான் முறுக்கு எடுத்து வர அனுப்பினார் என்று சொல்லப்போகிறான் என்று நினைத்துக்கொண்டு. ஆனால் விதி வேறு ரூபத்தில் வரும் அவருக்கு. எப்போதும் அவர் மதிக்காத தியேட்டரின் சிப்பந்திக்கு எல்லாம் விவரமும் தெரிந்து அவர் முன் மிகப்பிரமாண்டமாய் நிற்பான்.

யாருக்கும் தெரியாத தவறுதான் எப்போதும் ஆபத்து நிறைந்தது. எதிர்பார்க்காத நேரத்தில் எதிர்பாராது வெடிக்கும் இயல்புடையது. அந்த தவறின் நி¢ஜ இயல்பை நாம் தெரிந்துகொள்வதில்லை. தெரிந்துகொள்ளும்போது அந்த வெடிப்பை நம்மால் தாங்க முடிவதில்லை. மறைத்துவைத்த குண்டு வெடிக்காது என்று யார் சொல்லமுடியும்?

பசு கதையை படித்து முடிக்கும்போது நமது கண்களில் ஒரு கலக்கம். யாருடைய தவறு இது? எப்போது எவ்வளவு பெரிய மனிதர்களும் சறுக்குகிறார்கள் என்று ஆயிரக்கணக்கான கேள்விகள். மிக அருமையான கதை.(புத்தகத்தில் பக்கங்கள் மாறியுள்ளன.)

கதையில் குடித்துவிட்டு கோழிக்கறிக்காகச்சண்டை போடும் எமன் இருக்கிறான். காத்தவராயன் இருக்கிறான். கோயில் கிணத்தை தூறு எடுக்கும்போது அதன் நாற்றம் தாங்கமுடியாமல் யாருக்கும் தெரியாமல் அதில் ஒண்ணுக்கடித்து விடும் சாதாரணன் இருக்கிறான்.

கதையில் நாடகம் வரும் பகுதிகள் நகைச்சுவை. அடுத்து வரும் கதைகளில் ஏழ்மை எழுத்தாளன் அவன் வயிற்றுப்பாட்டுக்கு வழிதேடி லண்டன் செல்லும் கதையும் ஒன்று. கதை முழுவதும் கதையாசிரியரின் வாழ்க்கையின் ஏழ்மை குறித்தான அங்கலாய்ப்புகள் தொடர்கின்றன. இன்னொரு கதையில் தமிழ் மாநாடுகளின் உண்மைத்தோற்றம் என்ன என்பதைத்தர முயல்கிறார் ஆசிரியர். ஆசிரியருக்கு அதன் பால் மிஞ்சியது வெறும் ஊசிப்போகாத சாப்பாடு மட்டும்தான். அதுவாவது மிஞ்சுகிறதே என்று கிடைக்கும் ஒருவன் மகிழ்ச்சியோடு செல்கிறான். கதைகளில் வெறுமனே கற்பனைகள் மட்டுமே பயணிக்கவில்லை. எதார்த்தங்கள் இயல்பான வடிவிலே வந்து பிரச்சனைகளை நமக்குச்சொல்லிச்செல்கின்றன. ஆசிரியரின் உண்மையான வருத்தங்கள் அருமையாக பிரதிபலிக்கின்றன. சொல்ல வந்ததை வட்டார வழக்குகளோடும் சொல்லி முடிக்கின்றன.

இந்த வாரம் படிக்க நேர்ந்த தங்கர் பச்சானின் இன்னொரு படைப்பு. ஒன்பது ரூபாய் நோட்டு. நாவல். மிரட்டும் கதைக்களங்கள் இல்லை. சொந்தங்களாய் பந்தங்களாய் வந்து குழப்பும் பாத்திரப்படைப்புகள் இல்லை. கதாநாயகன் இல்லை. கதாநாயகியும் இல்லை.

பேருந்திலே பயணிக்கும் ஒரு எழுபது பிளஸ் வயதுடைய மாதவப்படையாட்சியின் வாழ்க்கை கதை. கதை ஆரம்பம் கொஞ்சம் இழுப்பது போல இருந்தாலும் சில பக்கங்களைத்தாண்டிய பிறகு ஜெட் வேகத்தில் பறக்கிறது. தன் மானம் கருதி சில நொடிகளில் ஒரு முடிவை எடுத்துவிட்ட பெரிய மனிதர் ஒருவர் அதனின்று மீள முடியாமல் போக, அனைத்தையும் இழந்து மீண்டும் வாழ்ந்த மண்ணுக்கே வருகிறார்..மண்ணோடு மனம் மகிழ்ந்து உறவு கொண்டாடும் வேளையில் அவரது சிதறிப்போன குடும்பம் நெஞ்சைக்கிள்ளுகிறது. தான் நட்ட பலா மரத்திற்கு அடியில் அதிகாலையில் அவரைப்பார்க்கிறார்கள் பிணமாக.

பேருந்தில் வரும் உரையாடல்களும் பயணங்களின் சகிப்பதற்கற்ற போக்குகளும் உணர்ந்து எழுதப்பட்டிருக்கின்றன. கதையெங்கும் பத்திரக்கோட்டை, புலியூர் மண்ணின் மணம் பலாப்பழச்சுவையாய் இனிக்கிறது. மாதவப்படையாட்சி மனதில் நிற்கிறார்.

ஒருசில இடங்களில் நகரம் வான்வில்லாய் வந்து போனாலும் முந்திரித்தோப்புகளும் புத்தம் புதிய சிவப்பு நிற மாங்காய்களும் முள் விரிந்து மணம் பரப்பக்காத்திருக்கும் பலாக்களுமாய் கதை முழுவதும் அவைகளின் வாசனை. படங்காட்டி ஒளிந்துகொண்டிருக்கிறார். வெளியில் வந்தால் இன்னும் 95% வாசனை வெளியே வரலாம்.

வணக்கங்களுடனும் நன்றிகளுடனும்,
எம்.கே.குமார்.

மறுபதிப்பு.

புத்தக அறிமுகம்: பாலிதீன் பைகள்.

'படித்தவுடன் மனதில் நிற்பதைப்போன்ற ஒரு புத்தகத்தின் பெயரைச் சொல்லுங்கள், உடனே நான் படிக்கவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறு உங்களூக்கு இருந்தால் அதற்காக நான் பரிந்துரைக்கும் நூலின் பெயர் இதுதான்.

பீ அள்ளூம் சமூகத்திலிருந்து வந்த அவனும் புரோகிதம் சார்ந்த சமூகத்திலிருந்து வந்த அவளும் காதலித்து மணம் புரிகிறார்கள். மணம் புரிவதற்கு முன் அவர்கள் வாழ்ந்து வந்திருக்கும் சமூகத்தை ஒரு மீள்பார்வை செய்கிறார்கள். செய்வதின் விளைவு இந்நாவல்.

மணிரத்னத்தின் சில படங்களைப்போல கதை சொல்லல் முன்னும் பின்னும் நகர்ந்து நகர்ந்து செல்கிறது. அது ஒரு புதுமையாகவும் கதையின் எளிமையை அசாதரணமாகவும் சொல்ல முற்பட்டிருக்கிறது.

நாவலின் தலைப்பு சொல்ல வந்ததைச் சுருக்கெனச் சொல்லிச் செல்கையில் அதற்காக இவ்வளவு பிரயத்தனப்பட்டு அடிக்கடி அதை விளக்க முயன்றிருக்க ஆசிரியருக்கு அவசியம் இல்லை.

கழிவறையில் பிறந்த தன் நண்பனுக்கு இந்நூலை அர்ப்பணிக்கிறார் ஆசிரியர். கதையில் வரலாற்றுப்பின்னணிகளும் நிறைந்திருக்கின்றன. இன்னும் கொஞ்சம் விரிவாக ஒரு முழு வரலாற்றுச்சாதனமாக இந்நூலை அவர் எழுதியிருக்கலாமோ என்று எனக்குத்தோன்றியது.

படித்துப்பாருங்கள்.

நூலின் பெயர்: பாலிதீன் பைகள்
ஆசிரியர்: இரா.நடராசன்
வெளியீடு: காவ்யா
16, 17 இ கிராஸ்,
இந்திரா நகர்
பெங்களூர்.
நூலின் விலை: ரூபாய் 65.


அன்பன்.
எம்.கே.

Tuesday, September 20, 2005

எம்ஜிஆரும் காமராஜரும் இறந்துவிட்டனர்!

மன்னிக்கவும், உங்களைத்தொந்தரவு செய்யவில்லை. நீங்கள் உங்களது வேலையைத்தொடருங்கள்! ஆச்சரியப்படுவதற்கோ வினாடிகள் சில யோசித்து அஞ்சலி செலுத்துவதற்கோ இது நமக்கு புதிதல்ல. கால ஓட்டத்தில் இவையெல்லாம் பணத்தையும் அது தரும் வாழ்க்கையையும் விடவும் பெரிதாகத் தெரிய வேண்டிய அவசியமுடன் இருக்கிறதா என்ன?

எம்.ஜி.ஆர் என்றதும் சிலருக்கு, 'காயா இது பழமா கொஞ்சம் தொட்டுப்பாக்கட்டுமா?' என்பதோ இல்லை கையை முகவாயில் கொடுத்து பேனாவுடனும் புன்சிரிப்புடனும் இருக்கும் சுருட்டைமுடிக்காரரையோ இல்லை இரட்டை விரலைக்காட்டி தொப்பி கண்ணாடி சகிதம் கம்பீர புன்னகை தருபவராகவோ இருந்துவிட்டுப்போவதில் எனக்கு ஆட்சேபனையில்லை.

கையில் சாட்டையுடன், 'நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்' என்று கட்டளையிடப்போகும் காலத்தை உணர்ந்து நிற்கும் அவர்தான் என் கண்களூக்குள் எப்போதும் வருவார். நான் இன்றும் ரசிக்கும் காவியத்தலைவரும் அவர்தான். ஒரு ஏழைத்தாயின் மகனாகப்பிறந்து ஏதோ ஒரு நூலிழையில் தொங்கிய வாழ்க்கையை நம்பிக்கையோடு கெட்டியாகப்பிடித்து முன்னேறி அதையே ஒரு வழியாக்கி மக்கள் மனதிலும் நீண்ட காலம் ஆட்சி செலுத்தியவர்; செலுத்திக்கொண்டிருப்பவர்.

வாழ்க்கையை வெற்றிகொள்ளத் திணரும் பலருக்கும் 'நான் ஏன் பிறந்தேன்' (என்ற கேள்வி) அவசியமானது. அத்தகைய கேள்வியிலிருந்து துவங்கியதுதான் இன்னொருவருடைய வாழ்க்கையும்!

தாமரைக்கனி. முன்வழுக்கை போக மோதிரத்திற்கும் தன்னம்பிக்கைக்கும் பெயர்பெற்றவர். இங்கும் ஏழ்மைக்கதைதான். வாழவைத்தது தன்னம்பிக்கை. படம் பார்த்து உருப்படாமல் சுற்றித்திரிந்ததால் மந்திரியானாரோ கலாட்டா அல்லது பதவிவெறியில் அரசியலில் ஜொலித்தாரோ எனக்குத் தெரியாது. தன்னம்பிக்கை உள்ள மனிதர். அனைத்தையும் சாக்கடையாக்கிவிடும் அரசியலின் இயல்பிலிருந்து தப்பிக்க திறமையுள்ள சாக்கடைவாசி இல்லை இவர். சராசரியான மனிதர். கொஞ்சம் மூர்க்கத்தனம் நிறைந்த அப்பாவி. தமிழகத்தை உலுக்கிப்போட்ட அரசியல் நடவடிக்கைகளில் தேர்தல் முடிவுகளில் இவரது தன்னமிக்கை இவருக்கு வெற்றி கொடுத்தது.

சில மாதங்களூக்கு முன் கூட, "இதோ எழுந்து நடமாடிவிட்டேன்; வருவேன், மீண்டும் வருவேன். கலைஞரை ஆட்சிக்கட்டிலில் அமரவைக்காமல் இறந்துபோகமாட்டேன்" என்று உற்சாகம் ததும்ப பேசிய இவருக்கு காலன் இட்ட காலக்கெடு தெரியுமா என்ன?
*************************************

ரிச்சர்ட் மதுரம். 70 வயது. முன்னாள் அரசு அதிகாரி. சென்னை மற்றும் திருச்சி விமான நிலையங்களீல் உயர் அலுவலராகப் பணியாற்றிவிட்டு ஓய்வுபெற்றவர். ஊட்டியில் அவரது மகள் வீட்டில் இருந்துவந்திருக்கிறார். எதேச்சையாக ஒரு நபரை ஊட்டியில் ஒருநாள் சந்திக்க, அந்நபருக்கும் உடனே ஏதோ ஒரு பொறி தட்ட, வெளியில் வந்தார் கிங் மேக்கர். 'பொறி தட்டிய நபர்' தயாரிப்பாளர்-இயக்குனர் பாலகிருஷ்ணன். 'தட்டிய பொறி' காமராஜர் பிறந்து வந்தது.

'காமராஜ்' படத்தில் 'அய்யா காமராஜராக' நடித்தவர் அமரர் ரிச்சர்ட் மதுரம். பார்த்தவுடன் நிதானிக்கவைக்கும் கூரிய பார்வையும் எளிமைக்குச் சான்றாய் விளங்கும் தோற்றமுடையவருமாய் காமராஜ் படத்தில் நடித்திருந்தார், இல்லை மீண்டும் பிறந்து வந்தார். அவரது நடிப்பைப்பற்றி எதையாவது கூறி அப்பிம்பத்தை அனாவசியமாய் சிதைக்க விரும்பவில்லை. எனக்குப்பிடித்திருந்தது. கட்டபொம்மனும் பாரதியும் நினைவிலாடுவதைப்போல காமராஜரையும் இப்படி நினைவுக்குக்கொண்டு வரும் புத்திக்கு விளக்கங்கள் சொல்லி விளங்கவைக்கமுடியாது.

'அசைவம் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சுப்பு, இன்னக்கி சாப்பிடணுங்குறேன், ரெண்டு முட்டை வாங்கியாரச்சொல்லுப்பு' என்று அவர் சொன்னபோது காமராஜரின் மேல் இன்னும் ஒரு மதிப்பு வந்தது மறக்கமுடியாதது. அந்த உருவம் இன்னும் கன்ணுக்குள் நின்றுகொண்டிருக்கும்போது 'ஊட்டியின் கல்லறை' என் கண்ணுக்கு மயக்க ஊசி போட்டு மறக்கவைத்துவிடுமா என்ன?

பி.கு: இன்று அதாவது செப் 20, இளையோருக்கு வழிவிட எண்ணி தனது முதல்வர் பதவியை துறந்தாராம் காமராஜர். ம்ம். ! இவையெல்லாம் இருக்கட்டும், (வெறும் சிலைகலையும் சமாதிகளையுமே கட்டிவிட்டுச்செல்லாமல்) நான் படித்த கல்வி நிலையத்தைக் கட்டியதற்காகவாவது அவரும் திரு.சி.சுப்பிரமணியம் அவர்களும் என்றும் எனது நன்றிக்குரியவர்களாயிருப்பர். அவர்களால் இன்று வயிற்றுப்பிழைப்பு நகர்கிறது பாருங்கள்!

அன்பன்,
எம்.கே.

Monday, September 19, 2005

உடன்பிறப்புக்கு ஒரு கடிதம்!

உடன்பிறப்பே,

நலம்தானே! நலமில்லாமல் எப்படி இருக்கும்? வலிவுடைய நம் தோள்கள் நிலைநிறுத்திருக்கும் ஆட்சியல்லவா இது! மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழி என்பதை அறியாத மூடர்களா நாம்? நாற்பதிலும் வென்று நான்கிரண்டு திசைகளிலும் வெற்றி முரசு கொட்டியல்லவா நாம் வீற்றிருக்கிறோம். நமது ஆட்சி நாடெங்கும் நம் புகழ் பரப்பும் ஆட்சியாக அல்லவா நடந்துகொண்டிருக்கிறது! எப்படி நமக்கில்லாமல் போகும் நலம்? நெஞ்சினிக்கும் இவ்வேளையில் தமிழ் வாழும் செய்தி கேட்டு நலமில்லாமல் இருப்பாயா நீ? தமிழென்றால் நலம்தானே! நாமென்றால் தமிழ்தானே!

எத்தனை சதிக்கூட்டங்கள்? பழுவூர் சதியாலாசனைகளைக் குழிதோண்டிக் குப்புறப் புதைக்கும் அளவுக்கல்லவா அதைவிட பெரிய சதியாலோசனைகள் இங்கே நடைபெற்றன. சதிகாரத் தலைவிகளின் சவுரி முடி கூட நம்மை ஒன்றும் செய்ய முடியாது என்பதைத் தெள்ளிய நீரோடை போலல்லவா நாற்பதும் நமக்குக்காட்டியது! பேதைப் பெண்பூச்சிகளின் ஆதிக்கச் சூத்திரங்கள். நியாயங்கள் அறியாத நடுநாயகங்கள். பிராமணத்துவங்களின் பெருங்கூட்டங்கள். காவிகளின் மயானக்கூக்குரல்கள். நாமென்ன வரலாறியாத வெள்ளாடுகளா? வீரமில்லாத விட்டில் பூச்சிகளா? நயவஞ்சக நரிக்கூட்டங்களா? நாற்பதும் பறை சாற்றியதே நமது வீரத்தை! புறமுதுகு காட்டியல்லவா ஓடினார்கள் பெண்புலிகள்! அந்தோ! அஞ்சறைப்பெட்டியாடிய கைகள் ஆட்சிக்கட்டிலில் நடத்திய இடுகைகளெல்லாம் இதோ இன்று ஒன்றன் பின் ஒன்றாகவல்லவா புறமுதுகிட்டு ஓடுகின்றன்.

இதோ! வங்காள விரிகுடா எழுந்து வருகிறதே! அரபிக்கடலின் மீன்கள் கூட்டம் மொத்தமாக முத்தமிட்டுக் கொண்டல்லவா ஆடிப்பாடி சந்தோசத்தில் முழங்குகின்றன. தென்திசையிலிருந்து அதோ! வருகிறது! வருகிறது! அண்டார்டிக்கா கண்டம் வான் பிளந்து நமக்கு வாழ்த்துச்சொல்ல வருகிறது! இந்தியப்பெருங்கடல் போடும் முழக்கம் என்னவென்று கேட்கிறதா உனக்கு? வருகிறார்கள், மொத்தமாக வருகிறார்கள். வள்ளுவப்பெருந்தகை முதல் வாரியார் வரை வெற்றிக்களிப்பில் அவர்கள் ஆடிப்பாடி அகமகிழும் வாழ்த்தொலி கேட்கிறதா உனக்கு? வானமே எழுந்து வந்து வாழ்த்தும் குரல் கேட்கிறதா உனக்கு?

காவியங்கள் கொண்டதும் காவியங்கள் படைத்ததுமான நம் தமிழுக்கு வந்துவிட்டது அது. நேற்றுப்பெய்த மழையில் இன்று பூத்த காளானல்ல அது. எத்தனை தியாகம் செய்திருக்கிறோம் என்பதை நீ அறிவாயா தம்பி? 6-6-66 ல் அண்ணா அவர்கள் ஆரணியில் பேசிய கூட்டத்திலே எழுப்பிய அத்தீர்மானத்திற்கு எழுந்த ஆதரவுகளை இமயமலையிலும் எழுதமுடியாது தம்பி. இடிமுழக்கமென எத்தனை விண்ணைப்பிளக்கும் வாழ்த்துகள் எழுந்தது தெரியுமா உனக்கு? நெஞ்சு நெருப்பினிலே எரிந்த காலமல்லவா அது!

காவியத்தமிழில் இனி ஓவியங்கள் படைக்கலாம் வா. நடுவண் அரசு நம்முடையதாக இருக்கையில் எத்தனை இடையூறுகள் வந்து இவைகளைத்தடுத்து விடும் பார்க்கலாம்.

நாற்பது கோடி கொடுத்த பேசமுடியாத சமஸ்கிருதத்தை விட வாயினிக்கும் மொழியினிக்கும் வையகமாளும் தமிழுக்கு எப்படியும் அதன் இருமடங்காவது கிடைக்குமல்லவா? வையகத்தை கதைகளாலும் கவிதைகளாலும் கட்டுரைகளாலும் பெருக்கி இன்பத்தமிழுக்கு இன்னுயிர் கூட்டி வானம் வரைக்கும் அதன் புகழ் பரப்பலாம் வா.

திருப்பதிநாயகர் நேசமுடன் ஆங்கிலம் படிக்கப்போகலாம், காஞ்சிபுர கடவுளர்கள் அரசாங்கத்தை நடத்த ஆசைப்படலாம். இதெல்லாம் எவ்வகையில் நம் கொள்கைகளை கோலமிழக்கசெய்யும்.? கொடிபிடிக்கும் தடியர்கள் தமிழை விட்டு ஆங்கிலம் படிக்கப்போனால் என்ன? கோலெடுத்தால் நடனமாடும் இக்கோமான்கள் படிக்காவிட்டால் என்ன? தமிழ் வளர்ந்துவிடாதா? இல்லை கோடிகள்தான் கிடைக்காதா? கனடா முதல் கைலாயம் வரை செம்மொழியை சேர்க்காமல் நாம் சோர்ந்து விடுவோமா என்ன? சிந்திய ரத்தத்தில் சிலப்பதிகாரம் எழுதி இமயமலை வரை அடுக்கி வைத்திருக்கலாமே தம்பி! செம்மொழியை இகழ்ந்து வெம்மொழியை படித்தால் கோட்டையைப்பிடித்து விட முடியுமா இவர்களால்? கொள்கைக்கோமான்களா இவர்கள்? கோபுரத்தூசி தம்பி இவர்கள்!

சிந்திய குருதியில் ஹிந்தியை அழித்தோமே! செப்பு மொழியாளுக்காகத்தானே தம்பி! சீற்றம் கொண்ட காளைகளாய் அன்று நாம் கொண்ட புரட்சி, பிணம் தின்னும் பேய்களை தண்டவாளயங்களை விட்டல்லவா விரட்டி அடித்தோம்! தலை வைத்தல்லவா காத்தோம் அதை! இன்று இதோ செப்பு மொழி நம் மொழி. சாதித்து விட்டோமடா தம்பி நாம் சாதித்து விட்டோமடா! ஹிந்தி வேண்டாம், வேற்று மொழிக்கு விசிறியாக வேண்டாம். காதலிப்போம் தமிழை. காப்போம் செம்மொழியை. பெறுவோம் பேறுகளையும் கோடிகளையும்!

ஹிந்தி அழித்ததற்காக நாம் என்ன கோட்டை வாயிலிலேயே நின்று விட்டோம்? செங்கோட்டை நமக்கு வெறுங்கோட்டை ஆகிவிட்டதா? நிதியும் வனமும் கிடைக்காமலா போய்விட்டது? தொலைத்தொடர்பும் கப்பலும் இல்லாமலா ஆகிவிட்டோம்? நமக்கு வேண்டாம் தம்பி அது. தமிழைப்படிப்போம். தமிழால் இணைவோம். தரணி போற்றும் தமிழ் என் தாயினுடையது என்போம். தாயை இகழ்ந்தவனை தமிழ் தடுத்தாலும் விடோம். தமிழை இகழ்ந்தவனை தாய் தடுத்தாலும் விடோம்.

முரசொலி மாறன் தமிழ் வளர்க்கப் பட்டபாடு தெரியுமல்லவா உனக்கு. செம்மொழியாக்கிப் பார்க்க அன்னாருக்குக் கொடுத்து வைக்கவில்லையே தம்பி! இதோ சேரமானின் வழித்தொன்றலாய் வந்துவிட்டானே தயாநிதி. விடுவானா தமிழை. தொடுப்பானா பிழையை.? எடுத்தானே! முடிப்பானே! கோடிகளல்லவா! கொடுத்து வைத்தவர்கள் நாமல்லவா? வருவது தமிழால்தானே! நாம் வாழ்வதும் அதனால்தானே!வேண்டுமா பிறமொழி? கொடுக்குமா அது வெகுமதி?

வா தம்பி! உன் வாரிசுகளுக்காகவே தமிழாசிரியர்களை நியமிக்கிறேன். அவர்களின் வாசிப்புக்காகவே மாநகராட்சிப்பள்ளிகள் நின்றுகொண்டிருக்கின்றன. தமிழால் வா. தமிழ் படித்து வா. ஆங்கிலம் என்ன தரும்? ஹிந்தி என்ன தரும்? சப்பாத்திகள் செய்வதற்கு ஹிந்தி எதற்கு? சம்பாத்தியங்கள் தருவதற்கு அதெல்லாம் வேண்டுமா என்ன? நாம் வாழவில்லையா?

வேட்டிக்குள்ளே புகுந்த வேங்கையை விரலால் கொன்றவர்களல்லவா நாம்! தமிழைப்படி. மடிப்பிச்சை எடுத்தாகிலும் தமிழைப்படி. மடிப்பிச்சை மட்டுமே வாழ்வாகும் பரவாயில்லை. மடிப்பிச்சை எடுத்து மடிப்பிச்சையால் மட்டுமே வாழ தமிழ் படி. எக்களம் கண்டாலும் வெறுங்கையோடு திரும்புமா வேங்கை?

கண்ணிலே கோளாறு சிலருக்கு. ஹிந்தி வேண்டுமாம். ஆங்கிலம் வேண்டுமாம். அதெல்லாம் எதற்கு? ஆங்கிலக்கல்வியிலா படித்தோம் நீயும் நானும்? பொன்னர் சங்கரும் புலவர் தொல்லும் ஹிந்தி படித்தா நாட்டையாண்டார்கள்? பண்பாடற்றவர்கள் பகலுவார்கள் அப்படி! காதிலே வாங்கினாலும் பாவம் தம்பி! காலைக்கடன் முடித்தவுடன் காலைக்கழுவுவது போல காதைக் கழுவி விடு தம்பி! செம்மொழி கேட்கும் இக்காதுகளுக்கு அம்மொழி வேண்டாம், அறிவுரைத்துவிடு.காலம் போயினும் ஞாலம் அழியினும் ஞாயிறு காணும் பகலைப்போல தமிழைப்பார்த்து வளர்வோம் தம்பி. தமிழைக்காக்க வாழ்வோம் தம்பி!
அன்புடன்,
ம.கா.(கு)

மறுபதிப்பு.

இந்த வாரம் இவை!

இந்தவார ( நடுநிலைச்)செய்தி: தமிழகத்தில் மேலும் ஒரு அரசியல் கட்சி துவக்கப்பட்டது. ஏற்கனவே தேர்தல் வாரிய அங்கீகாரம் பெற்றதாய் பத்து கட்சிகளும் அங்கீகாரம் பெறாமல் 100 கட்சிகளுக்கும் மேல் இருக்கும் தமிழகத்தில், இன்று இன்னும் ஒரு புதுக்கட்சி துவக்கப்பட்டது. இதனை ரமணா, புலன்விசாரணை போன்ற படங்களில் நடித்த நடிகர் விஜயகாந்த் துவக்கியுள்ளார். (சன் டிவி செய்தி!)

இந்தவார கமெண்ட்:

அனாமிகா: "பீகார் தேர்தலுக்குப்பின் கட்சித்தலைவர் பதவியில் இருந்து விலகி புதியவர்களுக்கு வழிவிடுவேன்'னு அத்வாணீ சொல்லியிருக்கார் போல!"

சுனாமிகா: "நீ வேற, இப்படி சுத்தி வளச்சிச் சொல்லாம, பீகார் எலக்ஷன்லே தோத்ததுக்கு பொறுப்பு ஏத்து பதவி விலகுவேன்னு சுருக்கமா சொல்லியிருக்கலாம்"


இந்தவாரப்போராட்டம்: எவ்வளவு தைரியமும் ஆணாதிக்கமும் இருந்தால் எங்களைப் போய் இந்த சினிமா நடிகைகளோடு ஒப்பிட்டு பேசியிருப்பார் இந்த தங்கர்பச்சான்? என்று பாலியல்தொழிலாளர்கள் கொதிப்படைந்துள்ளனர். ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செய்யப்போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


இந்தவார ஆரூடம்: எம்ஜிஆரின் தீவிரத்தொண்டரும் அவரது மந்திரிசபையில் பணீயாற்றியவருமான பண்ருட்டி ராமச்சந்திரன், தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தில் விரைவில் இணைவார். அவருடன் ஆயிரம் அதி.மு.க.வினரும் அதில் இணைவார்கள்.

'இந்தவார' நிருபர் அப்புசாமி!

Tuesday, September 13, 2005

நல்ல காலம் பிறக்குது!

வாருங்கள், வணக்கம்! குருபகவான் நல்லது செய்ய ஆரம்பித்துவிட்டான். இந்தக் குருப்பெயர்ச்சியானது சகல செல்வங்களையும் உங்களுக்கு கொண்டு வரப்போகிறது. அதன் முதற்படியாகத்தான் இதோ இந்தக்கட்டுரையைப் படிக்க ஆரம்பித்துவிட்டீர்கள். இதுதான் ஆரம்பம். இன்று மிக நல்ல நாள், மிகவும் அதிர்ஷ்டமான நேரம் இது! சொல்லப்போகும் செய்தி அப்படிப்பட்டது. முதலில் மூச்சை இழுத்துவிட்டுக்கொள்ளுங்கள். மேலே போகலாமா?

சொல்லப்போகும் அனைத்தும் என் நண்பரொருவர் எனக்குச்சொன்னது. அந்த அதிர்ஷ்டக்காரக் குபேரர்களில் நானும் ஒருவனாகப்போகிறேன். என் நண்பரைப் போல நானும், ஏன் நீங்களும் விரைவில் அப்படி ஆகலாம். அதற்குத்தானே ஆசைப்படுகிறோம் நண்பர்களே! வாருங்கள், அந்த அலுவலமும் விரைவில் ஆளெடுக்கப்போகும் செய்தி மெதுவாக கசிந்துகொண்டிருக்கிறது, தயாராகுங்கள்.

முதலிலேயே சொல்லிவிடுகிறேன், உங்களுக்கு அரசாங்கத்தில் வேலை! என்ன வேலை என்பதையெல்லாம் இப்போது கேட்காதீர்கள். இருக்கட்டும் அது. எந்தவித ஸ்டிரைக்கும் எதிர்காலத்தில் செய்யவேண்டிய அவசியம் இல்லாமல் அனைத்து வசதிகளையும் அள்ளித்தரப்போகும் அட்சயபாத்திர அலுவலகத்தில் என்ன வேலையாய் இருந்தால் என்ன? வேலை செய்யும்படியாகவா வேலை இருக்கப்போகிறது அதுவும் அரசாங்க அலுவலகத்தில்! அப்படியே இருந்தாலும் நமக்கென்ன பைத்தியமா வேலை செய்வதற்கு? அதுவும் அரசாங்க அலுவலகத்தில்?!

இந்தியாவின் தலைநகரில்தான் இருக்கிறது அந்த அலுவலகம். பயப்படாதீர்கள், எந்தவித அரசியல்வாதிகளின் குறுக்கீடும் இல்லாமல் ஆண்டவன் புண்ணியத்தில் வேலை நல்லபடியாய் நடக்கும். பயத்தையெல்லாம் விடுத்து கொஞ்சம் கவனமாய்ப்படியுங்கள். நத்தையின் வயிற்றிலும் முத்து பிறக்கும், டெல்லியிலும் நமக்கு நல்லது நடக்கும். தயாராகிவிட்டீர்களா? ம்ம். நல்லது.

முப்பது நாள் கொண்ட மாதத்தில் முப்பது நாட்களும் மக்களுக்காக உழைக்கப்போகிறோம் இல்லையா? எனவே முதலில் சம்பளத்திலிருந்து ஆரம்பிப்போம். ஒரு மாதச்சம்பளம், இந்திய ரூபாயில் பன்னிரெண்டாயிரம் மட்டும். சம்பளம் போக அவ்வப்போது நடைபெறும் அலுவலக கூட்டங்களில் கலந்துகொள்வதற்கு நாளுக்கு ஐந்நூறு ரூபாய் உங்களுக்கு. போதுமா.? திடீரென்று வந்து கலந்துகொண்டுவிட்டுப் போய் விட்டால் பிறகு கூட்டத்து விஷயங்களில் பாலோ அப் இல்லாமல் போய் விடுமல்லவா? அதற்காகத்தான் அடுத்த வரும் சட்டம். குறைந்தபட்சம் மூன்று நாட்களாவது கலந்துகொள்ள வேண்டும். வேறென்ன வேலை? போய் அமர்ந்து சிறிது நேரத்தில் கூச்சல் ஆரம்பித்த பிறகு எழுந்து வருவதுதானே! ஐந்நூறு ஓகேதான். விடுங்கள்.

இப்படியே போனால் நல்ல சம்பளத்தில் அமைதியாக திளைத்து உட்கார்ந்து விடுவீர்கள்! சொந்தக்காரர்களையும் மிச்ச மீதி இருக்கும் ஊரையும் கவனிக்கவேண்டுமல்லவா? அதற்குத்தான் மாதாமாதம் 'மேம்பாட்டு படி'யாய் பத்தாயிரம் ரூபாய். இந்தத்தொகை நீங்கள் பதவியில் இருக்கும் முழுக்காலத்திற்கும் மாதாமாதம் வழங்கப்படும். கவலை இல்லைதானே! எல்லா ஊரையும் இதை வைத்து வளைத்து விடலாமே! அவகாசமும் இருக்கிறது.!

இதுபோக, வேலைக்குச்சேர்ந்த உங்களில் சிலர் படிக்காமல் இருக்கலாம், பேனா வைத்திருப்பீர்கள் அல்லவா? அது போதும்! அதற்குப் பணம் தருகிறார்கள். மாதம் மூவாயிரம் ரூபாய். இதுபோகவும் கடித செலவுகளுக்கென்று மாதம் ஆயிரம் ரூபாய். சந்தோசம்தானே! எல்லாம் இருந்தாலும் இவற்றைக் கவனிக்க ஒரு உதவியாளர் இருந்தால் நன்றாய் இருக்குமே என்று நினைப்பவரா நீங்கள்? சோகம் வேண்டாம்! அவரை நிர்ணயம் செய்வதற்கு ஆகும் செலவும் சம்பளமும் அரசாங்கமே கொடுக்கிறது. மாதம் பத்தாயிரம் ரூபாய். நாமே கூட அதில் பாதியைச் சுருட்டிக்கொள்ளலாம். எப்படி வசதி?

மொத்தமய் இதுவரை மாதம் எவ்வளவு தேறும் என்பதை நீங்களே கணக்கில் வைத்துக்கொண்டிருப்பீர்கள். அடுத்து பயணப்படி பக்கம் வருவோம்.

தனது சொந்த ஊரின் வீட்டிலிருந்து டெல்லியில் அலுவலகம் வரை செல்வதற்கும் அல்லது தன் வீட்டிலிருந்து அலுவலகக் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு நீங்கள் செல்லும் பயணத்திற்கு, பயணம் செய்யும் வழிகளைக் கணக்கில் கொண்டு பயணக்கட்டணம் தரப்படும்.ரயில் வழியாக நீங்கள் பயணித்திருந்தால் 'குளிரூட்டப்பட்ட முதல் வகுப்பு' கட்டணம் ஒன்றும் 'ஒரு இரண்டாம் வகுப்பு' கட்டணமும் (எதற்கு இது என்றெல்லாம் கேட்காதீர்கள்; கொடுக்கிறார்கள் வாங்கிக்கொள்ளுங்கள்) கொடுக்கப்படும். இதற்கு எந்த வகுப்பில் பயணம் செய்தோம் என்பதெல்லாம் அவசியமில்லை. அப்படிப்போடு என்பீர்களே! அதேதான். அவசரப்படாதீர்கள்.

எத்தனை நாளைக்குத்தான் ரயிலிலேயே பயணிக்க முடியும்? நியாயம்தானே! அலுவலக வேலையில் கலந்துகொள்ள வான் வழியாகப் பயணிக்கப்போறீர்களா?

விமானக்கட்டணத்தின் 'ஒண்ணேகால் பகுதி' கட்டணம் உங்களுக்குத் திருப்பித்தரப்படும். இதுபோக கடல்வழியாகப் பயணிப்பவர்களும் இருப்பார்கள் அல்லவா? அவர்களுக்கு கட்டணத்தின் முழுப்பகுதியும் அதுபோக ஐந்தில் மூன்று பங்கு சேர்த்தும் வழங்கப்படும்.சாலை வழியே பயணிக்கும் எளிமையான மனிதரா நீங்கள்? உங்களுக்கு 'கிலோமீட்டருக்கு ஆறு ரூபாய்' கணக்கில் மொத்தமாக கணக்கிட்டுக் கொடுக்கப்படும். அதற்காக மீட்டரை நான்கு நான்காய் ஓட வைத்தெல்லாம் ஏமாற்றமுடியாது சார். இந்தியாவுக்குள் எல்லா இடத்துக்கும் எங்கிருந்து எங்கு எவ்வளவு தூரம் என்பது எல்லோருக்கும் தெரியும்.இருக்கட்டும்.

டெல்லி விமான நிலையம் வரை வந்து இறங்கியாகி விட்டது, அங்கிருந்து அலுவலகம் வருவதற்கு? அல்லது அலுவலகத்திலிருந்து ஏரோடிராம் போவதற்கு யார் கொடுப்பார்களாம்? அதற்குத்தான் ஒரு சவாரிக்கு 120 ரூபாய். புரிந்ததா? இப்போது எல்லாம் ஓகேதானே!

பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை இந்தியாவின் எந்த மூலைக்கும் நீங்கள் அலுவலக நிமித்தம் சென்று வரலாம். ஒரு முதல் வகுப்பு ரயில் பயணக்கட்டணம் அல்லது ஒரு முழு விமானக்கட்டணம் உங்களுக்குத் திருப்பித்தரப்படும். இது என்ன கொசுறு!? இருக்கிறது இன்னொரு பெரிய நலத்திட்டம் பாருங்கள்! ஆஹா!

இந்தியாவின் எந்த மூலையிலிருந்து எந்த மூலைக்கும் வருடத்திற்கு 32 முறை நீங்கள் இலவசமாக விமானத்தில் பயணிக்கலாம். அதிக வேளைப்பளு காரணமாக உங்களால் இவ்வசதியைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியாவிட்டால் கவலையே படாதீர்கள். அந்த 32 ஐ அடுத்த வருடங்களுக்கும் கொண்டு செல்லலாம். பாதுகாப்பு மற்றும் இயற்கை காரணிகளால் சொந்த இல்லத்திற்கு திரும்ப முடியாவிட்டால் உங்களது ஊருக்கு வான் வழியாக பயணித்தால் எது நெருங்கிய இடமோ அதுவரை விமானக் கட்டணம் இலவசம்.
இதற்கு மேல் என்ன வேண்டும்?

கண்பார்வையற்ற அல்லது உடல் ஊனமுற்றவரா நீங்கள்? உங்களோடு இன்னொருவரையும் துணைக்கு அழைத்துச்செல்லலாம் அலுவலகத்திற்கு. இருவருக்கும் விமானக்கட்டணம் இலவசம்; ரயில் கட்டணமும் இலவசம். (இதற்காக சும்மாவாச்சும் அரவிந்த் ஆஸ்பத்திரில் ஆபரேஷன் செய்துகொள்ளக்கூடாது!)

சரி டெல்லிக்குப் பயணித்து விட்டீர்கள். சில பல காரணங்களால் நடந்துகொண்டிருந்த ஒரு முக்கிய கூட்டம் பாதியில் முடிகிறது அல்லது ஒரு கூட்டம் முடிந்து அடுத்த கூட்டம் ஆரம்பிக்க சிறிது நாளாகிறது. இப்போது என்ன செய்வது? ஒன்றும் பிரச்சனை இல்லை.இரு கூட்டத்தொடர்களுக்கும் இடையே ஏழு நாட்களுக்குள் இருந்தால் அந்த ஏழுநாட்களுக்கும் தினத்துக்கு ஐந்நூறு ரூபாய் கொடுக்கப்படும். அல்லது அந்த ஏழு நாட்களுக்குள் எங்காவது நீங்கள் குட்டி டிரிப் அடித்துவிட்டு வந்தால் கூட அந்த விமானக்கட்டணமும் இலவசம். இது எப்படி இருக்கு?

சரி, உள்நாடு வேண்டாம். வெளிநாட்டுக்குச் செல்லும் ஆசை வந்துவிட்டதா? செல்லுங்கள். தனது கடமையைச்செவ்வனே செய்வதற்காக நீ£ங்கள் செய்யும் வெளிநாட்டுப்பயணச்செலவு அனைத்துக்கும் அரசாங்கம் பொறுப்பேற்றுக்கொள்ளும். ஜஸ்ட் எஞ்சாய் மேன்!

விமானத்துறை இருக்கட்டும். இந்த ரயில்வே நிர்வாகத்திற்குத்தான் நம்மீது என்னே கருணை பாருங்கள்! ஒரு அலுவலர், இந்தியாவின் எந்த மூலைக்கும் எந்த ரயிலிலும் 'குளிரூட்டிய முதல் வகுப்பு' மற்றும் 'எக்ஸிக்யூட்டிவ் வகுப்பு'களில் தனக்கு 'இன்னொரு துணை'யுடன் எப்போது வேண்டுமானாலும் பயணிக்கலாமாம். ரயில்வே நிர்வாகம் அந்த 'பாஸ்' வழங்குகிறது. போதுமாசார்? 'எத்தனை வீடு' இருந்தாலும் கவலை இல்லைதானே!அதுமட்டுமா?

உங்களது மனைவி அல்லது உறவினர் ஒருவர், வருடத்திற்கு 8 முறை இதே போன்றதொரு 'குளிரூட்டிய முதல்வகுப்பில்' தனது சொந்த ஊரிலிருந்து டெல்லிக்குப் பயணிக்கலாம். இந்த சலுகை விமானத்திலும் தொடரும். (பாருங்கள் சார், நெல்லுக்கு இறைத்த நீர்..மாமனார் மாமியாருக்கும் பரவுகிறது...ம்ம்)

ஊர் சுற்றியது போதுமா? அங்குமிங்கும் அலைந்ததில் காய்ச்சல், தண்ணீர்ப்பிரச்சனையால் சளிப்பிரச்சனை, அல்லது வேறு ஏதேனும் தொந்தரவு; நோயா? கவலை இல்லை. வாருங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் எவ்வளவு செலவாகியது மருத்துவத்தில்? கைமேல் காசு! திருப்பித்தருகிறது அரசாங்கம்.

வேலைக்குச்சேர்ந்த நாளிலிருந்து ஒரு சில நாட்கள்வரை உங்களுக்கு நல்ல இருப்பிடம் இல்லையா? இலவசமாகத் தருகிறது அரசாங்கம்.

டெல்லியின் எந்தத் தெருவில் வேண்டும் உங்களுக்கு? அதற்குப்பிறகு டெல்லியில் இருக்கும் 84 பங்களாக்கள், 143 அடுக்குமாடி வீடுகள் மற்றும் ஹாஸ்டல்- ஹோட்டல்களில் எங்கு வேண்டுமானாலும் நீங்கள் தங்கலாம்.வீடு மட்டும் தந்தால் போதுமா? பொறுங்கள், கோபப்படாதீர்கள்! எல்லாவற்றிற்கும் வசதி செய்து தரமாட்டோமா?

வருடத்திற்கு 25000 யூனிட் மின்சாரம் இலவசம், அனுபவியுங்கள். ஏசியை அரவணைத்துத் தூங்குங்கள். தண்ணீர்..அது வேண்டாமா? எவனாவது எங்காவது தண்ணீர் இல்லாமல் நாக்கு வரண்டு இறந்தால்...நமக்கென்ன? 2000 கிலோலிட்டர் வருடத்திற்கு. அள்ளிக்குளியுங்கள். ஆடுங்கள். பாடுங்கள். ஆனந்தமாயிருங்கள்.

உங்களது பெயர் மஸ்டர் ரோலில் சேர்ந்துவிட்டதா? போதும்! பிடியுங்கள், இரண்டு தொலைபேசி இலவசம் உங்களுக்கு, உங்களது பெயரில். வருடத்திற்கு ஒரு லட்சம் அழைப்புகள் இலவசம். யப்..ப்..ப்..பா!போதவில்லையா?

இண்டர்நெட் இருந்தால் வசதிப்படும் என நினைக்கிறீர்களா? இதோ..இலவச கம்ப்யூட்டர். இணைய வசதியோடு. போதுமல்லவா? பல நாடுகளுடன் எளிதாகத் தொடர்பு கொள்ளலாம், அடிப்படை வசதிகளைப் பெருக்கலாம். அன்னிய முதலீடுகளையும் அன்னியச்செலாவணியையும் பெருக்கலாம். எப்படி வசதி? என்ன சொல்கிறீர்கள்?

கன்வேயன்ஸ் அல்லவன்ஸ் வேண்டுமா? ஒரு லட்சம் போதுமா? ஆனால் இது திருப்பிப் பிடித்துக்கொள்ளப்படும். பரவாயில்லையா?'

சரி, இப்போது எல்லாம் செய்வார்கள். ரிடயர்டு ஆனால்? எப்படி? என்ன செய்து தரும் இந்த அரசாங்கக் கம்பெனி?'

என்ன சகோதரரே, இவ்வளவு செய்து கொடுக்கும் செல்வச்சீமான்கள் அதற்கும் ஒரு நல்வழி காட்ட மாட்டார்களா?மனசாட்சி இல்லையா அவர்களுக்கு?

கேளுங்கள்!நான்கு வருடங்கள் நீங்கள் வேலை பார்த்தால் போதும். உங்களுக்கு மாதம் 3000 ரூபாய் பென்ஷன் கடைசிக் காலம் வரை. அதற்கு மேல் நீங்கள் ஆண்டு அனுபவித்த ஒவ்வொரு வருடத்திற்கும் 600 ரூபாய் சேரும்.

இல்லை குறைந்தது 'இரு' ஐந்து வருடங்கள் அலுவலக வேலை பார்த்தீர்களா? அடித்தது லக்கிப்பிரைஸ். பத்தாயிரத்து ஐந்நூறு ரூபாய் மாதம். போதுமா பென்ஷன்?! இருங்கள், தலை சுற்றிக் கீழே விழுந்து விடாதீர்கள். எடுத்தவுடன் 'ரிடயர்டு' ஆக்க முடியாது உங்களை. தயவுசெய்து யாரும் அடம் பிடிக்காதீர்கள்.

சரி, வேலைக்காலத்திலே அகாலமாய் ஏதாவது ஆகி இறந்துவிட்டோம் எனில்..? கவலையே இல்லை. நமது மனைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு. போதாதா?பெருமூச்சு விட்டு முடிந்தாகிவிட்டதா?
ஆசுவாசப்படுத்திக்கொள்ளுங்கள்.

இனி உங்களுக்குத்தான் அத்தனையும். எப்போது இவையெல்லாம் கிடைக்கும் என்கிறீர்களா? அவசரப்படாதீர்கள்! எல்லாவற்றிற்கும் காலம் வரவேண்டாமா? மாயாவதிகளுக்கும் லல்லுகளுக்கும் முலாயம்களுக்கும் மற்றும் இன்னபிற தேசத்தலைவர்களுக்கும் "மூடு" வரவேண்டாமா? உடனேயா கவிழ்க்க முடியும்.?

அடுத்த எம்.பி நீங்களாய் இருக்க எல்லாம் வல்ல அரசியல் கடவுளைப் பிராத்தியுங்கள். குருபகவான் உங்களைக் கைவிடமாட்டார்.

வாழ்க ஜனநாயகம்! வளர்க லோக்சபா ராஜ்யசபா உறுப்பினர்கள்!

எம்.கே.குமார்.

மறுபதிப்பு.

எழுதத்தூண்டிய மதுமிதாவுக்கு நன்றி.
(http://madhumithaa.blogspot.com/2005/09/blog-post_08.html)

Friday, September 02, 2005

ஒரு கடிதம்!

வலைப்பூவிற்கு அறிமுகமாகி இரண்டு வருடங்கள். இரண்டு வருட வலைப்பூ வாழ்க்கையும் பதிவுகளும் ஆத்ம விசாரணைக்கு உட்படட்டும். அதுவரை..!
..................................................................................!

இது ஒரு கடிதம். உள்ளங்கை அளவுக்கு மிகைப்படுத்தப்பட்டிருந்தாலும் அதில் நெல்லிக்காய் அளவுக்கு உண்மை இருப்பது உண்மை. அந்த உண்மையை ஆதாரமாக வைத்து படைக்கப்பட்ட கடிதம் இது.

சொர்க்கத்திற்குக்கடிதம்.

அன்புள்ள அண்ணாவிற்கு,
ஆத்மார்த்தமான வணக்கங்கள். வெளியே நானும் நலமாய் இருக்கிறேன்.

'தூண்டிற் புழுவினைப்போல்-வெளியேசுடர் விளக்கினைப்போல்நீண்ட பொழுதாக- எனதுநெஞ்சந்துடிப்பது' யாருக்கும் தெரியாது.

இந்தியாவின் நூறு கோடி முகங்களில் வருடத்திற்கு குறைந்தபட்சம் ஆயிரம் பழகிய முகங்கள் கொல்லப்படுகின்றன. முப்பது கோடி முகத்தை நூறு கோடி ஆக்கியவர்களின் தீரம் மற்ற வீரச்செயல்களில் இங்கே எடுபடவில்லை. நதிகளை இணைக்கவே நடிகர்கள் தேவைப்படுகிறார்கள். தனியரு மனிதனுக்கு உணவென்ன? தவளையும் எலிகளுமே கிடைக்கவில்லை. தண்ணீர் வேறு. சொல்லவா வேண்டும்?இதெல்லாம் இருக்கட்டும். இது தெரிந்தகதை. உலகம் அறிந்த கதை. நம் கதைக்கு வருகிறேன்.

ஏன் இப்படிச்செய்தீர்கள்? நீங்கள் எப்படிச்செய்யலாம் இப்படி? நீங்கள் சுதந்திரத்திற்காக பாடுபட்டீர்களோ இல்லை தமிழுக்காக பாடுபட்டீர்களோ எனக்குத்தெரியாது. அதெல்லாம் இந்நாட்டில் அவசியமே இல்லாததாய் ஆகிவிட்டது. நான் கேட்கப்போவது அதுவன்று. எப்படி நீங்கள், தங்களை நம்பி வந்த பெண்ணை கஷ்டப்படுத்தி ஒரு நல்ல குடும்பத்தலைவனாய் இல்லாமல் போகலாம்?

ஞான மார்க்கத்தை அடைய எது சிறந்த வழி என்ற கேள்விக்கு நல் இல்லானாய் இருப்பதே என்பதை எல்லா மதங்களும் சொல்லிக்கொண்டிருக்க எப்படி நீங்கள் அதிலிருந்து மற்ற 'வெட்டி வேலைகளுக்காக' விலகி குடும்ப உறுப்பினர்களின் சுகங்களை மேம்படுத்தாமல் மொத்தமாய் அவர்களை துக்கத்தில் ஆழ்த்தலாம்? இது ஒன்றுதான் எனக்கு உங்கள்மேல் இன்னும் கோபத்தை வரவழைத்துக்கொண்டிருக்கிறது.'

பராபகாராத்தம் இதம் சரீரம்' என்றறிந்த தங்களுக்கு எப்படி தன் இல்லாளுக்கும் குழந்தைகளுக்கும் உறவினர்களுக்கும் அது பொருந்தும் என்பது தெரியாமல் போயிற்று?மிகுந்த திறமை மிகுந்தவரான தங்களது தந்தை பணக்கஷ்டத்தினால் வருந்தி இறந்த பின் கூட தங்களுக்கு அதை நினைத்து பணத்தின் மேல் வெறுப்பு வந்ததே தவிர அதுவேதான் வாழ்க்கையின் அஸ்திவாரம் என்பது எப்படி தெரியாமல் போயிற்று? ஆயினும் தாங்கள் கடைசிவரை பணத்தாசையைக்குறைத்துக்கொண்டாலும் கூட உடை நடைகளில் புதுமையையும் விதவிதங்களையும் விரும்பியவராய் இருந்தீர்களே அது எப்படி? இது இல்லாமல் அது எப்படி இருக்க முடியும் என்றபோதாவது தாங்கள் அதைப்பற்றி யோசிக்க முயன்றிருக்கவேண்டாமா?

நாளன்று போவதற்குள் நான் பட்ட பாடனைத்தும் தாளம் படுமோ தறி படுமோ யார் படுவார்' என்றும் ஜீவியத்துக்காக திணறி, ஒரு வார்த்தையும் பேசாமல் நித்திரையும் செய்யாமல் தெருத்திண்ணையில் உட்கார்ந்து, ' தெய்வமே! ஒரு வழியுமில்லையா?" என்று அனுபவித்த தாங்கள் எப்படி இரண்டாம் நாளில் அத்தனையையும் மறந்து போனீர்கள்?

'தேடக்கிடையாத சொர்ணமே, உயிர்ச்சித்திரமே,மடவன்னமே, அரோசிக்குது பால் தயிரன்னமே,மாரன் - சிலைவேல்களை - கொலைவேலென - விரிமார்பினில்- நடுவே தொளைசெய்வது கண்டிலை யின்னமே- என்னசெய்தேனோ நான் பழி முன்னமே?கன்னத்தில் குயிற்சத்தமே கேட்கக்கன்றுது பார்எந்தன் சித்தமே, மயக்கம் செய்யுதே காமப்பித்தமே,உடல் கனலேறிய மெழுகாயினும் உம் மடி பாதகிகட்டியணைத்தொரு முத்தமே தந்தால்கைதொழுவேன் உன்னை நித்தமே' என்று கட்டிய மனைவிமேல் காதல் கணைகள் வீசிய தாங்கள் எப்படி " ஓர் உயர்ந்த அதிர்ஷ்டம் எனக்குக்கிடைத்தும் அதை அனுபவிக்கக்கொடுத்து வைக்க்காமற்போகுமோ" என்று அவள் புலம்பும்படி ஆக்கிவைத்தீர்கள்?

மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கையை உதறிய நீங்கள் எப்படி மனைவி நோக வாழ்ந்து பார்த்தீர்கள்?பூரண கர்ப்பிணியான அவரை விடுத்து எப்படித்திரிந்தீர்கள் உலகை சுற்றும் எண்ணத்தோடு?

சிறீ சங்கரகிருஷ்ணனை ஞாபகம் இருக்கிறதா? தினம் தண்டால் எடுத்து பஸ்கி பழகி கட்டுமஸ்தான உடம்போடு காரியம் மேற்கொள்ளும் அவனையும் அல்லவா கெடுத்தீர்கள்? கலெக்டர் ஆஷ் கொலை வழக்கில் உள்ளே போன அவன் திரும்பி வரும் வரை அவன் இளம் மனைவி தாய் தந்தையர் பட்ட கஷ்டம் எப்படித்தெரியும் உங்களுக்கு? வெளியில் வந்து சில நாளில் இறந்து போய் விட வறுமைப்பேய் அவர்களை வாட்டியது மறக்கமுடியுமா? என்ன பலன் கண்டீர்கள்? அவரை எத்தனை பேருக்குத்தெரியும் இன்று?

தனக்கே ஆகாரத்திற்கு அடுக்களையில் பூனை விரட்டியபடி இருக்கும் மனைவியிடம் போய் 35 பேருக்கு தினமும் சமைக்கச்சொன்னால் எப்படி முடியும் அண்ணா? அண்ணி என்ன அள்ள அள்ளக்குறையாத பாத்திரமா வைத்திருந்தார்?சங்கர கிருஷ்ணனும் மற்ற 35 பேர்களுமா கஷ்டப்பட்டார்கள் உங்களால்?

செல்லம்மா அண்ணியின் அண்ணன் ரங்கூனில் இருந்து வந்தார் அவரையும் அல்லவா போலீஸ் கைது செய்தது. அதுமட்டுமா அவரது தங்கை கணவர் பம்பாயில் படித்து வீட்டுக்கு வந்தபோது அவரையுமல்லவா கைது செய்து அக்குடும்பத்தை திக்குமுக்காடச்செய்தார்கள். 'மாப்பிள்ளை புதுச்சேரிக்கு போய்விட்டார், பிள்ளையும் தீவாந்திரம் போய்விட்டான், மற்றொரு மாப்பிள்ளையும் அப்படித்தான் அதேகதிதான்' என ஊரே அக்குடும்பத்தை எள்ளி நகையாட அல்லவா செய்தீர்கள்?கோயிலுக்குப்போகும் அவரது அம்மாவைக்கூட இரு போலீசார் அல்லவா பின் தொடர்ந்தார்கள்?வாசலில் 15 பேர் காவலுக்கும் புறக்கடைக்கப்புறம் 15 பேருமாக காவல் காக்க அவர்கள் எப்படித்தூங்கியிருக்கமுடியும் நிம்மதியாக?

வ.வே.சு.ஐயர் அவர்களின் மனைவி சிறீ மதி பாக்கியலஷ்மி அம்மாள் பட்ட கஷ்டங்கள்தான் எத்தனை?

அரிசி இல்லை என்று சொல்லாதே, அகரம் இகரம் என்று சொல் என்றால் எப்படிச்சொல்வாள் அண்ணி? அகரம் இகரம் பசி தீர்க்குமா அண்ணா?

செல்லம்மா! உன்னால்தான் உன் கணவன் கெட்டுப்போகிறான் அவன் எள் என்பதற்கு முன் நீ எண்ணையாக இருக்கிறாயே, என ஊர்ப்பெண்கள் அவரைத்தூஷிக்கும்போது அவரை உங்களால் முழுவதுமாக புரிந்துகொள்ளமுடியாவில்லையா அண்ணா?

எப்படி உங்களுக்கு இப்படித்தோணியது? சிங்கத்திற்கு இரையை இரண்டு நாட்கள் நிறுத்தியிருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?சிங்கத்திற்கு நல்ல புத்தியைக்கொடு என மனைவி வெங்கடாசலபதியை வேண்டிக்கொள்ள, "மிருகராஜா! கவிராஜா வந்திருக்கிறேன். உனது லாவக சக்தியையும் வீரத்தையும் எனக்குக்கொடுக்கமாட்டாயா? இவர்கள் எல்லோரும் நீ பொல்லாதவன் என்று பயப்படுகிறார்கள். உங்கள் இனந்தான் மனிதரைப்போல உள்ளன்று வைத்துப்புறமொன்று செய்யும் சுபாவம் இல்லாதது என்பதையும் அன்பு கொண்டோரை வருத்த மாட்டீர்கள் என்பதையும் இங்கிருப்போர் தெரிந்துகொள்ளும்படி உன் கர்ஜனையின் மூலம் தெரியப்படுத்து ராஜா" என எப்படிச்சொன்னீர்கள்?அது என்ன தேவர் ?பிலிம்ஸின் சிங்கமா அண்ணா?

தங்களைச்சந்தித்த பழைய நண்பர் ஒருவர், என்ன சுவாமி, இப்படிப்பாட்டு பாடிக்கொண்டு காலம் கழிக்கிறீகள், நான் வாழ்நாள் முழுவதும் அப்படி இப்படி பாடிவிட்டு பாரத நாட்டின் விடுதலைக்காக உழைத்து இன்று சாப்பாட்டிற்கே வழியில்லாமல் ஏதேனும் கொடிய செயலில் இறங்கலாமா என மனம் யோசிக்கத்தூண்டுகிறது. தர்ம சிந்தனையால் பசி ஆறாது என்பது திண்ணம், எங்காவது திருட்டோ கொள்ளையோ செய்யத்துணியட்டுமா என கேட்ட போதும் அது உங்கள் மனதுக்குள் வலிக்கவில்லையா அண்ணா? வழி ஏதும் யோசிக்கவில்லையா?

கடைசிக்காலமும் உங்களுக்கு அப்படித்தானே வந்தது! எப்படி நெருங்கலாம் மதம் கொண்ட யானையை நீங்கள்? மனிதர்கள் விலங்குகளைப்போல நடந்துகொள்கையில் விலங்குகள் கூட மனிதர்கள் மாதிரி நடந்துகொள்ளும் என்பது எப்படி உங்களுக்குத்தெரியாமல் போயிற்று?

இருந்தவரை கஷ்டப்பட்டீர்கள். இருப்போரைக்கஷ்டப்படுத்தினீர்கள். எல்லாம் விழலுக்கிறைத்த நீராய் இருக்கையில் அண்ணி பட்ட கஷ்டங்கள் மட்டும் கடலலையாய் எனக்குள் பொங்குகிறதே என்ன செய்யட்டும் அண்ணா?

உங்கள் படைப்பைக்காசாக்கிவிட்டார்கள், ஒருவர் குத்தகை கூட எடுத்திருந்தார். உங்களைப்பற்றி எழுதிவிட்டு காரில் போகிறார்கள். மேல் நாட்டு நாகரிகம் பார்க்கிறார்கள். பாரதி பெயர்க்காரணம் ஆராய்ந்துவிட்டு வாசலில் நிற்கும் பிச்சைக்காரனை அடித்துவிரட்டிவிட்டு காரில் பெருமையோடு போய்விடுகிறார்கள் அண்ணா!

எத்தனை கண்ட போதும் அண்ணியை நினைக்கையில் நெஞ்சு பொறுக்குதில்லையே அண்ணா, நெஞ்சு பொறுக்குதில்லையே! ஒரு பிடி அரிசிக்காய் அழுத அண்ணி
யை மறக்கமுடியுமா அண்ணா?

அன்புத்தம்பியாய்,
எம்.கே.குமார்.

மறுபதிவு.
முதற்பதிவு: செப் 2003

Monday, August 22, 2005

ஜனநாயகமும் 'சன் டிவி' குழுமமும்!

ஒலி, ஒளிபரப்பு, அச்சு மற்றும் அரசியல் என அனைத்து துறைகளிலும் சன் டிவி குழுமத்தின் அதிகாரப்போக்கை இந்திய அச்சுப்பதிப்பு உலகில் முதன் முறையாக கொஞ்சம் காட்டமாகவே கண்டித்துள்ளது காலச்சுவடு. இந்தமாத காலச்சுவடின் தலையங்கப் (பக்கத்திற்கு பக்கத்துப்) பக்கத்தில் 'சூரியன் விழுங்கும் நாடு' என்று தலைப்பிட்டு விளக்கமாகவும் காரமாகவும் எழுதியுள்ளார் காலச்சுவடு கண்ணன்.

உண்மையில் அக்கட்டுரையின் தன்மை 100 % ஏற்றுக்கொள்ளப்படவேண்டியதே! முரசொலி மாறனின் இந்திய நற்பணிகளில் ஆரம்பித்து அவருக்காக அல்லது அவருடைய லாபத்திற்காக, தி.மு.கவின் கொள்கைகளை 'சங் பரிவாரோடு' பறக்கவிட்டு, 'கமாலாலயம்' பக்கத்தில் படுத்து கைகோர்த்துக்கொண்டது வரை அரசியல் சார்ந்தும், ஒரு ஒளிபரப்பு ஊடகமாக அப்போது அப்பாவின் தயவால் ஆரம்பிக்கப்பட்டு, இப்போது ஒளிபரப்பு ஊடகங்களாக விரவிக்கிடப்பதும் ஒலிபரப்புத்துறையில் விரிந்து போய்க்கொண்டிருப்பதும் அத்துடன் விட்டுவைக்காது 'பராசக்தி' கொண்ட 'குங்கும'த்தைக் கவர்ந்து தனது எல்லாக்கரங்கள் கொண்டும் அதை விற்று வருவது வரையென நீளும் அதன் போக்கு எல்லோரையுமே உள்ளுக்குள் அசைத்துப்பார்க்க ஆரம்பித்துவிட்டது.

அடுத்த முறை 'வணக்கம் தமிழகத்திற்கு' தங்களை அழைத்தாலும் அழைப்பார்கள் எதற்கு இப்போது ஏதாவதுசொல்லி அதில் கொள்ளிவைத்துக்கொள்ளவேண்டுமென்றோ இல்லை 'விளம்பரமோ தொடர்நாடகமோ படவிமர்சனமோ' போட்டு நாலு காசு பார்க்கலாம் அதையேன் கெடுத்துக்கொள்ளவேண்டுமென்றோ இல்லை உலகத்தமிழர்களிடையே உறவை இணைக்கும் பாலமாக இருக்கிற ஒன்றில்(!?) இடறுகள் செய்து தமிழ்த்தாயின் குரல்வளையைப்பிடித்து ஏன் நெறிக்கவேண்டும் என்றோ அமைதியாய் இருந்துவிட்டார்கள் தமிழர்களில் பலர். இன்னும் சிலர், 'சன்' யானைக்காலில் மிதிபட்டு 'வைகோ' போன்ற 'புலி'களெல்லாம் காணாமல் போய்விட்டார்கள், எங்களைப்போன்ற எலிகளெல்லாம் எம்மாத்திரம் அவர்களுக்கு? என்று அமைதியாய் இருந்துவிட, இந்தப் பூனைக்கு மணிகட்ட ஏன் இவ்வளவு தயக்கம் என்று தயங்காமல் முன் வந்து மணியையும் கட்டிவிட்டிருக்கிறது 'எஸ். ஆர். எஸ்' (கண்ணன்) என்ற எலி.

உண்மைதான், அண்மையில் படித்தேன். பினாமி மற்றும் போலிப்பெயரில் கடன் கொடுத்து ஊழல் செய்துவிட்ட கூட்டுறவு சங்க அலுவவலர்களை காவல்துறை கைது செய்ய, அதை, 'விவசாயிகள் கைது' என்று சன் டிவி அரசுக்கு எதிராக முழக்கமிட்டதாம். இதைப்பற்றி ஜு.வி யிலோ துக்ளக்கிலோ படித்ததாக ஞாபகம். இதுமட்டுமா? ஒரு பேச்சுக்குச் சொல்லவில்லை, இன்று இரவு சன் செய்தியைப்பாருங்கள்! எத்தனை போராட்டங்கள், ஊர்வலங்கள், உண்ணாவிரதங்கள், கருப்புக்கொடிகாட்டுதல், பேருந்தை வழிமறித்தல் மற்றும் அரசு அலுவலர்களை 'கேரோ' செய்த காட்சி (என்று நால்வர் நின்று பேசிக்கொண்டிருப்பதைக் காண்பிப்பார்கள்.) என்று தமிழ்நாட்டில் ஏதாவது 'முக்கு முடுக்கில்' நடக்கும் அரசுக்கெதிரான மாபெரும் (!?) போராட்டங்களைக் காட்டுவார்கள், எண்ணிக்கையில் இவற்றை வைத்துக்கொள்ளுங்கள்! எலக்ஷன் நெருங்கும்போது இது இரண்டு, நான்கு அல்லது பதினாறு மடங்காகளாம்!

அடுத்து தினகரன் வந்துவிட்டது. இனி நாளுக்கு 24*60/10 தடவை, வாங்கிவிட்டீர்களா தினகரன்? மும்தாஜ் கர்ப்பமா, திரிஷா தமிழ்ப்பெயரில்லையா? சிவகாசி ஜெயலட்சுமியின் உண்மைக்கதையை அவரே எழுதுகிறார்! பக்கத்திற்குப்பக்கம் இலவச இணைப்பு.! என்று விளம்பரங்கள் வரலாம். (இனாமாய் தரப்படும் பொருட்களின்) விற்பனையில் தினகரன் டாப்புக்கு வரலாம். தினகரன் வசந்தத்தில் வரும் கேள்விக்கு பதில் சொல்லி இமயமலைக்கு ரஜினியுடன் சென்றுவிட்டு வரலாம்! இன்னும் என்னென்ன இருக்கிறதோ?

குங்குமத்தை என் வாழ்க்கையில் நான் காசுகொடுத்து வாங்கியதே கிடையாது, அப்படிப்பட்ட என்னையே 'ரஜினியின் அடுத்தபடம் ஆதிசேஷா, கௌதமி பற்றி கமல் பதில்!' என்ற இரண்டு வாக்கியங்களைச்சொல்லி வாங்க வைத்துவிட்டார்கள். (கடைசியில் இரண்டும் ஒருவரிச்செய்திகள் உள்ளே! இந்தப்பாவம் அவர்களைச் சும்மா விடாது!)

அரசியல் துறையில், தி.மு.கவின் எதிர்காலம் இருக்கட்டும். தளபதி ஸ்டாலினின் எதிர்காலம் முழுவதும் சன் டி வின் செய்திகளுக்குப்பின்னே தான் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும் நிலையிலும், குறைந்தது இன்னும் நாற்பது ஆண்டுகளுக்கு அதாவது தயாநிதி மாறன் வாய் குழறி நடை பிறளும் வரை டெல்லி அதிகாரத்தில் எப்பாடு பட்டாவது (எவர் கொள்கையை பட்டத்தில் விட்டு அல்லது ஏதாவது மாலையை எவர் படத்தில் மாட்டிவிட்டாவது) இருப்பார் என்ற நிலையிலும் சன் டி வி குழுமத்தின் அதிகாரம் இப்போது முடிவுக்கு வருவது அல்லது நேர்கோட்டுக்கு வருவது அசாத்தியம் என்பதும் எல்லோரும் அறிந்திருக்கும் விஷயம்.!

இந்நிலையில் அச்சு ஊடகமும் முழுவதும் அவர்களால் வளைக்கப்பட்டுவிட்ட (இப்போது கால்கட்டைவிரல் மாட்டிவிட்டது!) சூழ்நிலை வருமாயின் அது தமிழக அரசியலுக்கு மட்டுமின்றி இந்திய அரசியல் மற்றும் இந்திய ஜனநாயகத்திற்கும் கூட ஆபத்தாய் இருக்கலாம் என்பதும் அப்போது இருட்டை மட்டுமே கக்கும் சூரியனாய் கூட அது மாறிவிடலாம் என்பதும் காலச்சுவடு மட்டுமல்ல நாம் எல்லோரும் கூட அறிந்துகொள்ள உணர்ந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்!

எம்.கே.குமார்

Thursday, August 18, 2005

கீரிப்பட்டி & பாப்பாபட்டி - தீர்வுதான் என்ன?

சென்ற வாரத்தில் ஒருநாள், விஜய் டிவியின் "குற்றம்- நடந்தது என்ன?" நிகழ்ச்சியில், மதுரை-மேலூர் பகுதியைச்சேர்ந்த கீரிப்பட்டி, பாப்பாபட்டி மற்றும் நாட்டார் மங்கலம் ஆகிய கிராம ஊராட்சிகளில் நடக்கும் பிரச்சனைகள் பற்றிக் காண்பித்தார்கள். ஆதிக்க சாதியினரின் அடக்குமுறைகளையும் அவர்களது வெறிச்செயல்களையும் மக்களுக்குக் காட்டி, ஆதிக்க சாதியினரின் அடக்குமுறைகளை எதிர்ப்பவர்களையும் அதற்காகப் போராடுபவர்களையும் மகிழச்செய்வார்கள், மக்களுக்கு உண்மையைப் புரியவைப்பார்கள் என்று நிகழ்ச்சியைப்பார்க்க ஆரம்பித்தேன். ஆனால் 'நடந்தது என்ன?'

ஆதிக்க சாதியினரின் அட்டகாசம், கொலைவெறிகள், மிரட்டல் இப்படியெல்லாம் அறியத்தரப்பட்டிருந்த அப்பிரச்சனையின் தன்மையை வெகு அழகாக அலசினார்கள் அவர்கள். தமிழ்நாட்டில் தனித்தொகுதிகள் ஆரம்பிக்கப்பட்ட வரலாறு, அப்போதிருந்த மக்களின் சராசரி விகிதம் அவர்கள் சார்ந்திருந்த இனங்கள் இவற்றையெல்லாம் விலாவாரியாக விளக்கியவர்கள், இப்போதிருக்கும் இம்மூன்று ஊராட்சிகளின் நிலையையும் சொன்னார்கள்.

அதன்படி, கீரிப்பட்டியில் இருக்கும் மொத்த ஓட்டுக்களில் மூன்றில் ஒருபங்கு மட்டுமே தாழ்த்தப்பட்ட மக்களின் ஓட்டுகள் என்பதையும் மீதமுள்ள ஓட்டுகள் மற்றசாதிகளைச் சார்ந்தவர்கள் என்பதையும் கூறினார்கள் அவர்கள். இரு விகிதத்தாரிடேயும் கலந்து பேசியபோது, தாழ்த்தப்பட்ட மக்களே இவற்றை ஒப்புக்கொண்டார்கள். மேலும் 'இவற்றாலெல்லாம் எங்களுக்கோ எங்களது பிள்ளை குட்டிகளுக்கோ கிடைப்பது, கிடைக்கப்போவது எதுவுமில்லை' என்பதையும் இப்போதுள்ள இப்பிரச்சனைகளால் அவர்களது தற்போதைய வாழ்வும் கருகிக்கொண்டிருக்கிறது என்பதையும் வேதனையாக முன்வைத்தார்கள். ஆக அவர்களைப்பொறுத்தவரை ஆதிக்க சாதியினரின் அடக்குமுறைகளுக்குப்பயப்படுவது என்பதைவிட தற்போதுள்ள உண்மைச்சூழலை உள்வாங்கிக்கொள்வது என்பதில் அவர்கள் அக்கறையாக இருக்கிறார்கள் என்று சொல்வதே சரியாகப்படும் போலிருந்தது.

அடுத்த ஊரான பாப்பாபட்டிக்குச் சென்று அங்கிருக்கும் நிலைமையையும் தெளிவாக விளக்கினார்கள் இவர்கள். அனைத்து இன மக்களிடமும் பேசிப்பார்த்ததில் இவ்வூரிலும் அதேபோல தாழ்த்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை, மொத்த கிராம மக்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்குதான். தாழ்த்தப்பட்ட இன முன்னால் தேர்தல் போட்டியாளர்கள் மற்றும் உயர்சாதியின இளைஞர்கள் ஆகியோரிடமும் பேசிப்பார்த்தார்கள். தாழ்த்தப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிடாததற்கு 'சாமி குத்தம்' ஏற்படுவதும் ஒரு காரணம் என்றும் சொன்னார்கள். தேர்தலில் நின்ற பலருக்கு அவ்வாறு 'தெய்வ குத்தம்' ஏற்பட்டு அவர்களின் 'ஆடுமாடுகள்' இறந்ததையும் முன்னுதாரணமாய் சில இளைஞர்கள் சொன்னார்கள். இந்த 'குத்தம் - கித்தம்' கதையெல்லாம் இருக்கட்டும்; உண்மை நிலவரம் அங்கு தாழ்த்தப்பட்ட இனத்தினர் குறுகிய அளவில் இருப்பதே!

'ஆதிக்க சாதியினத்தினர் இந்த அளவுக்கு வெறியோடு, 'இதில்' இயங்கத்தான் வேண்டுமா?' என்ற கேள்வி எழும்போது, 'நிலைமை தலைகீழாய் இருக்கும்போது தாழ்த்தப்பட்டவர்கள் இங்கு போட்டியிடத்தான் வேண்டுமா?' என்ற கேள்வியும் அவர்களது பேச்சின் உள்ளாடல்களிலிருந்து நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.

"எலக்ஷனும் வேண்டாம்; ஒரு எளவும் வேண்டாம். பிழைக்கக்கூட வழியில்லை; இருக்கும் பிள்ளை குட்டிகளோடு இருப்பதை வைத்து, எப்போதும்போல சந்தோசமாக வாழவிரும்புகிறோம் எங்களை வாழவிடுங்கள்!" என்பதாக இருந்தது போராடியவர்களின் எண்ணங்கள். "இருக்கும் நிலைமையைச் சரிவரப்புரிந்துகொண்டு பிறகு புத்திசொல்ல வாருங்கள் ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள் எல்லோரும்!" என்பதாயிருந்தது தனித்தொகுதியை எதிர்ப்பவர்களின் குரல்கள்.

இக்கிராம மக்களுடன் நில்லாது, சில பல அரசியல் தலைவர்களையும் இந்நிகழ்ச்சியினூடே பேட்டி கண்டார்கள் விஜய் டிவியினர். பேசியவர்கள் எல்லோரும், ஆட்சியாளர்களுக்கும் அமைச்சர்களுக்கும் 'ஜனநாயகத்தை வாழவிடுங்கள்; நியாயத்தை ஆட்சிக்கட்டிலில் ஏற்றுங்கள்' என்பதைப்போன்ற 'யாருக்கும் தெரியாத கோரிக்கைகளையும் உலகமறியாத நியாயத்தையும்' எடுத்துச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். இருந்தாலும் நிகழ்ச்சியின் முடிவை பின்வருமாறு சொன்னது நிகழ்ச்சியைப் படைத்த குழு.

"சில பத்தாண்டுகளுக்கு முன், தமிழகத்திலிருந்த நிலைமையை கணக்கில் கொண்டு தயாரிக்கப்பட உள்ளாட்சி, ஊராட்சி சட்டங்கள் மற்றும் வரையறைகள் இன்றுவரை திருத்தப்படாமலே இருந்துவருகின்றன. அதனால், அதனடிப்படையில் உருவாக்கப்பட்ட சில தனித்தொகுதிகளின் சூழல் தற்போது முழுவதுமாக மாறிவிட்டிருக்கிற பின்னும், இன்னும் அது அப்படியே கடைபிடிக்கப்பட்டுவருவதால் இப்பிரச்சனைகள் தோன்றியிருக்கின்றன. இச்சட்டங்களையும் வரையறைகளையும் மீண்டும் திருத்தி இன்றுள்ள அடிப்படைகளின் படி ஊராட்சி சட்டங்கள் மற்றும் வரையறைகள் கொண்டுவருவதால் இப்பிரச்சனைகளை எளிமையாக தீர்த்துவைக்கமுடியும்!"
இப்படியாய் அமைந்தது அந்த நிகழ்ச்சியின் முடிவு.

ஆக இன்றுவரை அதை தனித்தொகுதியாய் வைத்திருப்பது யாருடைய தவறு? சமாதானம் பேசச் செல்லும் அரசியல்வாதிகளுக்கு எது எளிது என்பது தெரியாமலா நடந்துகொள்கின்றனர்? அதையெல்லாம் விடுங்கள், சில ஆதிக்க சாதியினருக்கும் தலித்திய போராளிகளுக்கும் இனிமேலாவது அங்கு என்ன நடக்கிறது என்பது தெரியவந்தால் மெத்த சந்தோசம்!

எம்.கே.குமார்

Tuesday, August 16, 2005

பொன்னியின் செல்வனும் தேவி தியேட்டரும்!

கடந்த 12 ஆம் தேதி மாலை 5.30 மணி. சென்னை தேவி தியேட்டர் வாசலில் அங்குமிங்கும் அலைந்துகொண்டிருக்கிறார் அவர். கையில் செல்பேசி காதுக்கு சேதி சொல்லிக்கொண்டிருக்கிறது. ஐம்பது ரூபாய் டிக்கெட் இரண்டு எடுத்துவிட்டு வந்து 6.45 மணிக்காட்சிக்காய் காத்திருக்கும் போது அவரைக் காண நேருகிறது. எனது இரண்டாம் டிக்கெட்டுக்குரியவர், 'அவரை இப்படி பார்த்துக்கொண்டே இருப்பதால் என்ன பயன், ஒரு வார்த்தை பேசிவிடலாமே', என அவரருகில் நெருங்கி பேச ஆரம்பிக்கிறார்.

ஒரு சில தலையசைப்புகளுக்குப்பின் புன்முறுவலுக்குப்பின் அவர், TN 10 AF 100 (ஏ, எஃப் தவறாயிருக்கலாம்) என்ற எண்ணுடைய காரில் ஏறி பறந்துவிடுகிறார். நாங்கள் தியேட்டரை நோக்கித் திரும்புகிறோம்.

அவர், சூர்யா மூவீஸ் ஏ.எம்.ரத்னம்! பொன்னியின் செல்வன் படத்தயாரிப்பாளர். நடிகர் ரவிகிருஷ்ணாவின் தந்தை! 'பொன்னியின் செல்வன்' படம் அன்று அத்தியேட்டரில் ரிலீஸ்!

சரி, இனி பொன்னியின் செல்வனைப் பார்ப்போம்.

முகத்தில் பாதி (வெந்நீர் பட்டதால்) விகாரமுடைய ஒரு இளைஞன், சமுதாயத்தில் நிறைய வேதனைகளைச் சந்திக்க நேருகிறது. விளைவாக சுய தாழ்மையுணர்ச்சிக்குள் ஆட்பட்டுக்கொள்கிறான் அவன். அதிலிருந்து மீள, நிறைய சம்பாதித்து முகத்தைச் சரி செய்துகொள்ளவேண்டும் என முடிவு செய்து இராப்பகலாய் உழைக்க ஆரம்பிக்கிறான். சொந்த பணப்பிரச்சனைகளும் மற்ற பிரச்சனைகளும் அவனை வேறு திசைக்குள் துரத்த, இறுதியில் எதை அடைகிறான் அவன் என்பதுதான் படம் சொல்லும் கதை!

படத்தின் கதையை இயக்குநர், தயாரிப்பாளரிடம் சொன்னபோது ஏகத்துக்கும் கண்ணீர் விட்டு கதையைப்பற்றிக் கதறியழுது (சான்ஸை வாங்கி) விட்டிருப்பார் போலும்! படம் முழுக்க சோகத்தையும் செண்டிமெண்டையும் வாரியிறைக்க முயன்றிருக்கிறார்கள். ஊனமுற்ற ஒருவனைக் கதாநாயகனாகக் கொண்டு அல்லது பாவப்பட வைக்கும் ஒருவனைப்பற்றிய கதையைக் கொண்டு படமொன்றை எடுத்தால், அப்படத்தை வெற்றிப்படமாக்கிவிடலாம் என அவர்கள் நினைத்திருந்தால் அவர்களுக்கு இப்படம் பெரிய அடியாய்க் கொடுக்கும்.

அடுத்து என்ன காட்சி வரும் என்பதை எவரும் சொல்லிவிடலாம். அவ்வளவு அபத்தம் நிறைய இடங்களில். 'அழகிய தீயே' ராதாமோகனுக்கு என்ன ஆனதென்று தெரியவில்லை.

ஹீரோவாய் வரும் ரவிகிருஷ்ணா, தனக்கு பாவப்பட்ட கேரக்டர்கள் நன்றாய் ஒத்துவருமென்று எவரோ சொல்லக்கேட்டு (கெட்டுப்)போயிருக்கிறார். டக்கென்று ஏதாவது நாலு படங்களில் ஆக்ஷன் செய்து நமது எண்ணத்தை இவர் மாற்றலாம். ஏதோ ஒன்று குறைகிறது இவரிடம். குரலா? என்ன எளவோ தெரியவில்லை!

இசை வித்யாசாகராம். முதல்முறையாய் கேட்டேன். ஒன்றும் நிற்கவும் இல்லை; நிலைக்கவும் இல்லை. ஒளிப்பதிவு பரவாயில்லை ரகம்.

படத்தின் கதாநாயகியாய் வரும் கோபிகா, வருகிறார்; சிரிக்கிறார்; சீ என்கிறார்; ஜோக்கடிக்கிறார்; அழுகிறார் அப்புறம் கதாநாயகனுடன் சேர்ந்து நடக்கிறார். இவரது குடும்பம் எங்கிருக்கிறது, என்ன செய்கிறார்கள், இவர் அவரைக் காதலிப்பதை குடும்பத்தார் கண்டுகொள்ளவேயில்லையா இப்படியெல்லாம் கேள்வி கேட்பது ராதாமோகனுக்கு பிடிக்காது போலிருக்கிறது. ஒரே ஒரு காட்சியில், கோபிகாவின் பெயரைச்சொல்லி 'அவளா? உள்ளே இருக்கா போங்க' என்று கோபிகாவின் அப்பா டயலாக் பேசுகிறார். இவர்தான் அவருடைய அப்பாவா என்பதும் எனக்கு சரியாகத்தெரியவில்லை. மன்னித்துக்கொள்ளவும்.

ரேவதி பாவம். நண்பர்களாக வருபவர்கள், காமெடிக்காட்சிக்கு அல்லது ஜோக்குக்காகவே வருகிறார்கள்; போகிறார்கள். பிரகாஷ்ராஜ் மேக்கப் இல்லாமல் வந்து தத்துவம் பேசிவிட்டுப்போகிறார். புது ஹீரோயின் 'அளவான' கட்டழகி. இன்னும் சில மாதங்களில் ஒரு பாடலுக்கும் அப்புறம் வடிவேலுக்கும் ஜோடியாகலாம்.

இத்தனை களேபரத்துக்கிடையிலும் கொடுத்த பணத்திற்கு மோசம் வைக்காமல், போரடிக்கவும் விடாமல் ஒற்றை ஆளாய் படத்தைத் தனது தலையில் சுமந்து செல்வது வசனகர்த்தா (திரு.விஜி) மட்டுமே! (அழகிய தீயிலும் இவராய்த்தான் இருக்கவேண்டும். அதேபோன்ற ஜோக்குகள்.) தத்துவம் காமெடி இரண்டுக்கும் ஈடுகொடுத்து ரசிகர்களுக்கும் கொஞ்சம் தீனி போடுவது இவர் மட்டுமே. படம் கொஞ்சம் ஓடினால் அது சிரிக்க வைக்கும் வசனங்களுக்காக மட்டுமே இருக்கும்.

மிகப்பெரிய விஷயமான, படத்தின் தலைப்பை விட்டுவிட்டோமே! படத்தின் ஹீரோ ரவிகிருஷ்ணா ரேவதியின் பையன், அதாவது 'பொன்னியம்மா'வின் பையன். அதனால் தான் பொன்னியின் செல்வன். அடப்பாவிகளா! எவ்வளவு அருமையான காவியம் கொண்ட தலைப்பு. கெடுத்துவிட்டார்கள்! இன்றிரவு வந்தியத்தேவன் வந்து அவர்கள் வயிற்றில் குத்தட்டும்!

ஏ எம் ரத்னம் சார் பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!

எம்.கே.குமார்.

புதிய புகைப்படம்!

அண்மையில் எடுத்த புகைப்படம் இது. எந்த ஊர் அணைக்கட்டு இது என்று சொல்பவர்களுக்கு ஆயிரம் செம்பொன் காசுகள். பொன்னியின் செல்வன் ரவி கிருஷ்ணா தருவார்.

Sunday, June 26, 2005

ஏர் இந்தியா விமானச்சேவையும் சில எரிச்சல்களும்!

பி.கே.எஸ் சிவக்குமார் அண்மையில் இந்தியா வந்துவிட்டுச் சென்றபோது, ஏர் இந்தியா விமானத்தின் வாயிலாக மும்பையில் அவர் அனுபவித்த கொடுமைகளையும் வேதனைகளையும் ஒரு பதிவில் கூறியிருந்தார். அவருடன் வந்த அவரது நண்பர் ஒருவரின் கஷ்டத்தையும் அவரது எண்ணத்தையும் அதில் குறிப்பிட்டிருந்தார். ஏர் இந்தியா விமானச்சேவை எப்படியெல்லாம் இந்தியாவின் பெயரைக் கெடுக்கிறது; கேவலப்படுத்துகிறது என்பதை ஆங்காங்கு சில இணையத்தளங்களிலும் படிக்க நேர்ந்தது.

இப்போது நான் சொல்லப்போவது கடந்த வாரத்திற்கு முந்தைய வாரத்தில் ஒருநாள், இங்கு நடந்தது. நண்பர் ஒருவர் தனது தந்தையை வழியனுப்ப சிங்கப்பூரின் 'சாங்கி' விமானநிலையத்திற்கு அதிகாலையிலேயே கிளம்பிவிட்டார். சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு காலை 09.35க்கு கிளம்ப வேண்டிய ஏர் இந்தியா விமானம் அது. விமான நிலையத்திற்குச்சென்று விசாரித்தவுடன்தான் தெரிந்தது, ஏர் இந்தியா விமானம் தாமதமாக வரும் என்பது. அரைமணி நேரமா ஒரு மணி நேரமா? எவ்வளவு நேரம் தாமதம் என்று கேட்காதீர்கள்! காலை ஒன்பதரைக்குக் கிளம்ப வேண்டிய விமானம் இரவு 10.30க்கு கிளம்பும் என்று சொல்லப்பட்டது. தாமதம் எவ்வளவு மணி நேரம்? 13 மணி நேரம்.! உருப்படுமா இது?

அந்த 13 மணி நேரத்தில், சென்னைக்கு வருபவர் அங்கிருந்து கோயமுத்தூரிலோ மதுரையிலோ நடைபெறும் திருமணத்தில் கலந்துகொண்டுவிட்டு மீண்டும் சிங்கப்பூருக்கே கூட போய் விடவேண்டிய அவசரம் இருக்கலாம். அல்லது ஏதேனும் அவசர, துயர காரியங்களாகக்கூட இருக்கலாம். வழியனுப்ப வந்தவர்களுக்கும் எவ்வளவு அலைச்சல் பாருங்கள்! சென்னையிலிருந்து 200கிலோமீட்டர் தொலைவிலிருந்து வந்து, வரவேற்க அல்லது கூட்டிச்செல்ல காத்திருப்பவர்களின் நிலை என்ன? இந்தியாவின் அரசு விமானத்தின் நிலையைப் பாருங்கள். இது ஏர் இந்தியாவிற்கு முதல் தடவையா என்றால் சத்தியமாய் அதெல்லாம் இல்லை!

ஏறக்குறைய பலதடவை இப்படித்தான் நடந்திருக்கிறது. இதோ நேற்று சென்னையில்! (தயாநிதிமாறன் தலையிட்டு விமானம் விரைவில் வர ஏற்பாடு செய்தாராமே!)
என்ன காரணம் என்று கேட்டால், ஏதோ மீன் கருவாடு ஆகும் கதையைப்போல இயந்திரக்கோளாறு, தொழிட்நுட்பக்கோளாறு என்று ஒற்றைவார்த்தையில் எளிதாகச் சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். அந்த ஒரே ஒரு வார்த்தையில் இருநூறு பேரின் உயிர்களும் அவர்களின் குடும்பங்களும் எவ்வாறு ஊசலாடுகின்றன என்பதை எப்போது அவர்கள் புரிந்துகொள்வார்கள்?

'இந்தியாவில், அன்பைக் காட்டுவதற்குக்கூட சுனாமி வரவேண்டும்' என்று யாரோ அண்மையில் சொன்னார்கள். கண்ணுக்கு எதிரில் இருக்கும் அலட்சியங்களையும் ஆபத்துகளையும் நாம் உணர்வதற்குக்கூட விபத்துகள் வரவேண்டும் போலிருக்கிறது! (அரசு சார்ந்த சேவையான) சிங்கப்பூர் ஏர்லைன்ஸையெல்லாம் பார்க்கும்போது பொறாமையும் பெருமூச்சும் தான் மிஞ்சுகிறது! என்னமோ போங்க!

எம்.கே.குமார்

Friday, June 24, 2005

அந்நியன் - எனது பார்வையில்!

(முன்குறிப்பு: அல்வாசிட்டி அண்ணாச்சி ஒழிக! :-) முழுக்கதையைச் சொன்னதற்கும், ஜிகிர்தண்டாவையும் கேஎ·ப்சி சிக்கனையும் (காதலையும் அந்நியனையும்) ஒப்பிட்டதற்கும்! )

ஷங்கருக்கு இது மறுபடியும் முதல்படம்! அதன் பிரதிபலிப்பு ·பிரேம் பை ·பிரேம் தெரியும் கவனமும் ஆழமும்! காட்சியமைப்புகளில் நிதானமும் பரபரப்பும்! கதைக்கோர்ப்பில் பழைய வெற்றிகளின் வாசனை! தரத்தில் பிரம்மாண்டம்! மொத்தத்தில் மிரட்டல்! படம் முடிந்து வெளிவருகையில் குப்பை போடத் தயங்கும் மனசு! அந்நியன் நம் எல்லோருக்குள்ளும்!

ஜென்டில்மேனின் நான்காம் பாகம், இந்தியனின் மூன்றாம் பாகம், முதல்வனின் இரண்டாம் பாகம் என்பவர்களுக்கெல்லாம் எனது ஒரே கேள்வி, 'வி.ஐ.பி' படத்தில் காட்டிய சிம்ரனின் சேலை மறைக்கும் மார்பை அல்லது இடுப்பை, எப்படி அதற்கடுத்து வந்த ஐம்பது படங்களிலும் உங்களால் ஆர்வத்துடன் காணமுடிந்தது? எத்தனை முறை பார்த்தாலும் சிம்ரனும் ஒருவர்தான் அவரது மார்பும் (நிஜமானாலும் நகலானாலும்) இடுப்பும் அதேதானே அல்லது பழையதுதானே?!'

இந்தியா முழுக்கப் பிரச்சனைகள்! இப்படியே போனால் இன்னும் இருபது வருடங்களில் குடிநீருக்குக் கொலைகள் நடக்கலாம்; கை நிறைய பணத்தை அள்ளிக்கொடுத்து அரிசி வாங்குவதற்கு வரிசையில் நிற்கலாம். பணக்காரர்கள் இந்தோனேசியாவிலும் தாய்லாந்திலும் வீடுகள் வாங்கி பயிர் செய்யலாம். இந்தியாவில் திருவாளர் லல்லுவும் அவரது சக தோழர்களும் அரச அரியணையில் அமர்ந்து புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருப்பார்கள்; எதிரில் மாடுகள் அசைபோடும்!

'ஜென்டில்மேன்' பார்த்துவிட்டு வந்து கௌதமியைப் புகழ்ந்துகொண்டிருந்தவர்களல்லவா நாம்? 'இந்தியன்' பார்த்துவிட்டு வந்து ஜாகீர் உசேனின் தபேலாவை ஞாபகம் வைத்திருப்பவர்களல்லவா நாம்? முதல்வன் பார்த்துவிட்டு வந்த கண்ணோடு ஐம்பது ரூபாய் சேலைக்கும் வேட்டிக்கும் ஓட்டுப்போட்டவர்களல்லவா நாம்? எப்படி இருப்போம்?

சந்திரமுகி வருவதற்குமுன் வந்திருக்கவேண்டிய படம்; வந்திருந்தால் வசூலில் இமாலய சாதனை நிகழ்த்தியிருக்கும். தமிழக மக்களுக்கு இப்போது இந்த 'மல்டிபிள் பெர்சனாலிட்டி தியரி' எல்லாம் கொழுக்கட்டைக்குள் இனிப்பு வைக்கும் சமாச்சாரம். நாசர் முதுகு வளைத்து சொல்லித்தரும் விஷயமெல்லாம் ஜோதிகா, வினீத்தின் கையைப்பிடித்து அழைத்துச்சென்றதில் எப்போதோ அவர்களுக்குப் புரிந்துபோனது. விவேக்கிற்கும் 'மல்டிபிள் பெர்சனாலிட்டியோ' என்ற சந்தேகம் வந்தது படத்தின் ஆரம்பத்தில். திரைக்கதையில் தொய்வு!

அம்பியாக அப்பாவியாகவும் ரெமோவாக குதூகலமாகவும் அந்நியனாக ஆக்ரோஷமாகவும் முகம் மாற்றி உடல் மாற்றி குரல் மாற்றி நடிக்க இன்னொரு கமல் வந்திருக்கிறார். பிரகாஷ்ராஜ் உடனான காட்சிக்கு விக்ரமிற்கு அவார்டு கிடைக்கலாம். லகலகல ஜோதிகமுகிக்கு இணையாக மிரட்டுகிறார் ஒரு கட்டத்தில்!

விக்ரம்தான் ஹீரோ என்பதில் எனக்கு இரண்டாம் கருத்து இல்லை. ஆனால் இன்னொரு ஹீரோவும் இருக்கிறார், அது பீட்டர் ஹெய்ன்! இவரது மகுடத்தில் சிகரம் இப்படம்! விதவிதமான மோதல்கள். ஹாலிவுட் படங்களைப் பார்ப்பது போலிருந்தது.

சதா அழகாயிருக்கிறார். விஜய் படத்து த்ரிஷாக்களை விட சில காட்சிகளிலாவது அதிகம் வருகிறார். பரவாயில்லை. பட்டுப்புடவையிலும் ஐயங்கார் வீட்டு அழகாகவும் கண்ணுக்கு விருந்தளிக்கிறார்.

நாசர், பிரகாஷ்ராஜ்(அண்ணனின் இறப்பில் இவரது ஆக்டிங் கிளாஸ்! கையை ஆட்டி அல்லது நீட்டி நடிப்பதை எப்போது விடப்போறீங்க தலை?!), ஷண்முகராஜன், நல்லது செய்பவர்கள், கெட்டது செய்பவர்கள் என நிறையப்பட்டாளம். கிளைமேக்ஸில் தங்கையின் கொலையாளியையே தேர்ந்தெடுத்தது புத்திசாலித்தனம். விவேக் காமெடி செய்கிறாரா அல்லது மற்றவர்களைக் கிண்டல் செய்கிறாரா?

இரு கேமிராமேன்கள். ஒப்படைத்த வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்கள். எவ்வளவு நேரம் தான் ஒரு இடத்தையே (ஸ்டெல்லா மேரீஸ் காலேஜாகவே இருக்கட்டும்; பொழுது போகும் வரை அங்கேயே நின்றுகொண்டிருந்தால் பசிக்காமலா போகும்?) காட்டுவது? முதல் பாடலில் பூக்களின் பின்னணி முதலில் ஆச்சரியமும் பிறகு அலுப்பும் உண்டாக்குகிறது. ஐயங்கார் பாடல் மற்றும் காதல் யானை, நோக்கியா பாடல்களை விடுத்து கடைசிப்பாடலுக்கு 'அக்மார்க் ஷங்கர்' பிரமாண்டமாய் உருவெடுக்கிறார். ரோடு, மலை, கார், பேருந்து, லாரி, மனிதர்கள் எல்லாவற்றிலும் பணம்!

வசனகர்த்தாவே (சுஜாதா) ஒரு 'மல்டிபிள் பெர்சனாலிட்டி' கொண்டவராகையால் வசனத்தில் அடைமழை! இசை சில இடங்களில் மிரட்டல். பாடல்கள் பாதிப்பரவசம்.

கதை, திரைக்கதை, டைரக்ஷன் ஷங்கரைப் பற்றி பாராட்ட ஒன்றுமில்லை. பெர்பெக்ஷனிஸ்ட்.! புதுமை விரும்பி, பிரம்மாண்டம் விரும்பி! 'ஜீன்ஸி'ற்குப்பிறகு டபுள் ரோல் செய்வது எப்படி தமிழ் சினிமாவில் எடுபடவில்லையோ அதுபோல இனிமேல் யாரும் இந்த 'ஸ்பிளிட் பெர்சனாலிட்டி' பற்றி ஒன்றும் பேசமுடியாது. சதாவை அந்நியன் துரத்தும்போது எனக்கு 'ஆளவந்தான்' ஞாபகம் வந்தது தவிர்க்க இயலாதது.

மாறுவேடத்தில் புலனாய்வுப்போலீசார் உலாவருவதும், நாயகி பாடுவார் என்பதைக்காட்ட குன்னக்குடி, சுதாரகுநாதன் தலைமையில் கூட்டம் சேர்த்துச் செலவு செய்ததும் திரைக்கதைப்பஞ்சம்; பணவிரயம்! சட்டம் வரை படித்த இந்திய நடுத்தர குடும்பத்து வாலிபனுக்கு, அவன் சட்டம் படிக்கும்வரை உலகம் நேர்மையாக இருந்ததா என்ன? திடீரென்று வானத்திலிருந்து குதித்து தமிழ்நாட்டில் விழுந்தது போல அம்பி 'பிஹேவ்' பண்ணுவது அசடு!!

கிளைமேக்ஸ் லட்டுக்குள் வைத்துத்தந்த மூக்குத்தி.

கொஞ்சம் குறைத்திருக்கவேண்டிய கிராபிக்ஸ், கொஞ்சம் தவிர்த்திருக்கவேண்டிய ஷங்கரின் பழைய ஆனால் இந்தியாவின் மார்க்கண்டேய விஷயங்கள், கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கவேண்டிய போலீஸ் சார்ந்த திரைக்கதை, கொஞ்சம் ஞாபகத்தில் வைத்திருந்திருக்கவேண்டிய சுஜாதாவின் செல்ல கிறுக்குத்தனம் ('டேய் பாடு' என்று கூப்பிடுகிறார் அந்நியன்! அருமையான அக்காரவடிசலில் ஆங்காங்கு தென்படும் கற்களைப்போல!), கொஞ்சம் (சந்திரமுகிக்கு) முன்னால் ரிலீஸ் செய்திருக்கவேண்டிய தருணம்! இவைகளைக் கவனத்தில் கொண்டிருந்தால் வசூலில் மெகா சாதனை படைத்திருக்கவேண்டிய அந்நியன் இப்போது கையைக்கடிக்காமல் பயணிப்பான்.

இரண்டாம் முறை படத்தைப்பார்க்க தியேட்டருக்குப் புறப்பட்ட நண்பரிடம், இந்தியாவிற்குச் செல்லும் போது குப்பை போடாமல் இருக்க முயலுங்கள் என்றேன், பார்க்கலாம் என்றார்! 'அந்நியன்'தான் பார்க்கவேண்டும்!

எம்.கே.குமார்.

Thursday, June 09, 2005

புத்தகத் தோணியில் நான்!

எச்சரிக்கை: 1. தனக்குப் பிடித்தவர்களாய் அழைத்து அவர்களுக்கும் முதுகு சொறிந்து தானும் சுகமாய் சொறிந்து கொள்ள நினைப்பவர்களுக்கு!

எச்சரிக்கை: 2. தனது வட்டத்தை விட்டு வெளியே வராத குறுகிய மனப்பான்மையோடு 'எங்கிட்டே இம்புட்டு இருக்கு; உங்கிட்டெ என்ன இருக்காம்?' என்று தற்பெருமை 'கணக்கு' காட்ட முனைபவர்களுக்கு!

எச்சரிக்கை: 3. 'நம்மையும் யாராவது அழைப்பார்கள்; பிறகு எழுதலாம்' என்று காத்திருப்பவர்களுக்கு!

எச்சரிக்கை: 4. ஆங்கிலப்பெயர்களுக்கும் புத்தகங்களுக்கும் கடகடவென்று கூகுளைத் தட்டும் நண்பர்களுக்கு.!

எச்சரிக்கை: 5. எல்லாம் படித்து முடித்து 'இவரு மட்டும் எதுக்கு பத்துப்பேரை கூப்பிட்டுருக்காரு?!' என்று முனகுபவர்களுக்கு!
***************************

நன்றி:1. பித்தளை மற்றும் மண் சாமான் சட்டிகளை, சுருங்கிய தனது பாவாடையை மடித்து உள்ளே அள்ளிப்போட்டு, 'அதெல்லாம் உஞ்சாமான், இதெல்லாம் எஞ்சாமான்; வெளையாடுறவரைக்கும் வெச்சுக்க, அப்பொறம் குடுத்துறணும் சரியா' என்று கேட்டு கூட்டாஞ்சோறு வெளையாட்டில் என்னையும் கூட்டு சேர்த்த, 'பால்யகால பருவகால' சில குழந்தைத்தெய்வங்களுக்கு!

நன்றி: 2. ஒரு அறை முழுவதையும் புத்தகத்துக்கு ஒதுக்கி மினி லைப்ரேரியாய் தனது இல்லத்தை வைத்திருக்கும் அவ்வப்போது புத்தகங்களையும் அன்பளிப்பு தரும்
நண்பர் மானாஸாஜென்னுக்கு!

நன்றி: 3. 'வா, வா! இப்போ புத்தகத்தால் வெளையாடலாம். இதெல்லாம் நான் படிச்சேன்; எதெல்லாம் நீ படிச்சாய்!' என்று ஆர்வத்தோடு அழைத்த
இனிய தோழி ஜெயந்தி சங்கருக்கு!
********************

எனது படுக்கையறையைச்சுற்றி இன்று புத்தகமாய் கிடப்பவைகளின் எண்ணிக்கை, ஏறக்குறைய அறுபது + இருக்கும். இந்தியாவில் ஒரு 50+. (பாதி ஓஸியில் போய்விட்டது!) ஆங்கிலம் தமிழ் எல்லாம் சேர்த்துத்தான்.

1.ஸ்ரீ மத் பகவத் கீதை-சுவாமி சித்பவானந்தா உரையுடன்
பகவத் கீதை- தமிழில் பாரதியார்
2. இஸ்லாம் ஒரு எளிய அறிமுகம்- ரூமி
3.சித்தர் பாடல்களின் மொத்த தொகுப்பு.
4. தமிழ் இலக்கிய வரலாறு-.மு.வ
5.பாரதியார் கவிதைகள் -2
6.பாரதியின் சரித்திரம்-செல்லம்மாள் பாரதி எழுதியது.
7.சத்திய சோதனை-
மகாத்மாவின் மொழிகள்
8.காலச்சுவடு கவிதைகள்
9. காலச்சுவடு நேர்காணல்கள்
10. ஜே ஜே சில குறிப்புகள்
11. உப பாண்டவம், துணையெழுத்து
12.கலாப்ரியா கவிதைகள் தொகுப்பு 2
13.அசோகமித்திரனின் கட்டுரைத்தொகுப்பு (காலக்கண்ணாடி)
14. 18 வது அட்சக்கோடு அசோகமித்திரன்
15.திலீப்குமாரின் சிறுகதைத்தொகுப்பு
16.இரா.முருகனின் நாவல் மற்றும் சிறுகதைத்தொகுப்பு.
17.பாராவின் கட்டுரைத்தொகுப்பு, நாவல், சிறுகதைத்தொகுப்பு,
18.சேவியர் கவிதைகள்
19. சொக்கனின் 'சச்சின்' மற்றும் சில புத்தகங்கள்
20.கிராவின் 'வயது வந்தவர்களுக்கு மட்டும்'
21.காலச்சுவடு கண்ணனின் 'வன்முறை வாழ்க்கை'
22.ஜெ கே யின் 'அறிந்ததினின்றும் விடுதலை!'
23.பொன்னியின் செல்வன்
24.Eight Keys to Greatness-GENE. Landrum
25.The laws of nature
26.How to become a successful speaker-DOn Aslett.
and some 'HOT' novels!

இது போக இன்னும் பல புத்தகங்கள்!

அண்மையில் படித்தவை!

1. புயலிலே ஒரு தோணி ப.சிங்காரம். (விரைவில் எனது பார்வை வரும்!)

2.பால் நிலாப்பாதை -இளையராஜா (பாரதிராஜா,கமலஹாசனின் முன்னுரை!)

3.பால்வீதி-அப்துல் ரகுமான் (வேலிக்கு வெளியே தலையை நீட்டிய என் கிளைகளை வெட்டிய தோட்டக்காரனே! வேலிக்கு அடியில் நழுவும் என் வேர்களை என்ன செய்வாய்?)

4.தமிழில் ஒரு முழுமையான பாலியல் நூல்- டாக்டர். மாத்ருபூதம். (பெயர் மறந்து போச்சு! நன்றாக எழுதப்பட்ட ஒரு நூலில் ஆங்காங்கு தமிழ் சினிமாப்பாடல் வரிகள் வந்து வெறுப்பேத்துகின்றன!)

5.அகிரா குரோசோவா-சுயசரிதை (பாதியில் நிற்கிறது!)

6.மூத்த தமிழ் எழுத்தாளர்களைப் பற்றிய ஜெயமோகனின் விமர்சனக்கட்டுரைகள் (3 பேரூக்கு ஒரு புத்தகமாய் வெளியிட்டிருக்கிறார்!)

7. மாலதி மைத்ரியின் அண்மைய கவிதைத்தொகுப்பு

8.குட்டி இளவரசன்

9. கிராவின் முழு சிறுகதைத்தொகுதி-அகரம் வெளியீடு

10.புதுமைப்பித்தனின் கடிதங்கள்- தனது மனைவிக்கு!

எனக்குப்பிடித்த புத்தகங்கள்!

1. மோகமுள், செம்பருத்தி, அம்மா வந்தாள் மற்றும் மரப்பசு -தி.ஜானகிராமன்
2. புயலிலே ஒரு தோணி ப. சிங்காரம்
3. ஜே.ஜே சில குறிப்புகள்- சுந்தர ராமசாமி
4. உப பாண்டவம்- எஸ்.ரா
6.திசைகளின் நடுவே-ஜெயமோகன்
7. குட்டி இளவரசன்
8.பொன்னியின் செல்வன் கல்கி
9.பிரிவோம் சந்திப்போம் சுஜாதா
10. மெர்க்குரிப்பூக்கள் பாலகுமாரன்
11. ஜண கண மண-மாலன்
12. எண்ணங்கள்- எம்.எஸ்.உதயமூர்த்தி


அடிக்கடி புரட்டும் நூல்கள்:

1.சித்தர் பாடல்கள்
2.பாரதியார் கவிதைகள்(வாரம் ஒருமுறை!)
3. அசோகமித்திரனின் காலக்கண்னாடி
4. திருக்குறளின் ஆங்கிலப் பதிப்பு

ஒரு தொடருக்காக படித்துக்கொண்டிருக்கும் நூல்கள்:
1. முன்னாள் தலை மகன் லீ குவான் இயூ
2. The singapore story
3.From third world to first!
4. the leaders of singapore
5. சிங்கப்பூரில் தமிழ் வளர்ச்சி குறித்தான ஆய்வுகள்
6.Management of Success-singapore story.

இனி நான் அழைக்கப்போகும் சிலர்:

1.ஈழநாதன்
2.மானஸாஜென்
3.எல்.ஏ.ராம்
3.அருண் வைத்தியநாதன்
4.குழலி
5.மூர்த்தி
6.டிசே தமிழன்
7.கார்த்திகேயன் ராமசாமி
8.செல்வராஜ்
9.முத்து
10.நாராயணன்
11.துளசி கோபால்
12.செல்வநாயகி

Tuesday, May 24, 2005

உங்களுக்கு ஒரு வேண்டுகோள்- கமலஹாசனிடமிருந்து(ம்)!

சன் டிவியின் 'மே தின' சிறப்பு நிகழ்ச்சியில் கமல் அவர்கள் பேசியதைப் பார்த்திருப்பீர்கள்! இரண்டு வாரத்திற்கு முன் வந்த வந்த கல்கி பத்திரிகையில் அவரது பேட்டியையும் படித்திருப்பீர்கள்! இந்த இரண்டிலிருந்து மட்டுமல்ல; அண்மையில் அவர் கொடுத்த தெலுங்கு பத்திரிகைப் பேட்டியிலும் கூட, கமல் என்ற ஒரு கலைஞனின் மனதிற்குள்ளேயான தொழிலியல் நடைமுறை இயலாமைகளும் அவனது வாழ்வு மீதான அடக்குமுறைகளின் வீரியமும் வருத்தத்தின் விழிகளில் தொக்கி நின்றதை நம்மால் கண்டிருக்க முடியும். 'ஒரு சாதிக்கும் கலைஞனுக்கு சமுதாயத்தின் மரியாதைப் பங்களிப்பு இறப்புக்குப் பின் தானா இன்னும்' என்று இன்றும் வருத்தப்படவைக்கின்றன இவைகள்.

காந்தியைச் சுடச்சொல்லி ஆளனுப்பி காரியம் முடிந்தபின் அவருக்கு ஆங்காங்கு ஒரு சிலை வைத்துவிட்டோம். 'பாரதி' என்ற 'பா பைத்தியக்காரனுக்கு அன்று சாப்பாடு போடக்கூட விரும்பாமல் இறுதிக் காரியத்திலும் கூட இணைந்துகொள்ள அருவருத்து ஒதுங்கி நின்றுவிட்டு இன்று அவனைத் 'தேசியக்கவி' ஆக்கிவிட்டோம். அது யாரப்பா புதுமைப்பித்தனா? ரேஷன் கார்டு வைத்திருக்கிறாயா? இது யார் வலம்புரி ஜானா? உடம்புக்கு சரியில்லையின்னு ஆஸ்பத்திரிக்கி வரியேப்பா, கையில காசு வெச்சுருக்கியா? ஏய் தம்பி, குடும்பம் குட்டியெல்லாத்தையும் விட்டுபுட்டு வெள்ளக்காரனுக்கு குண்டு வெச்சி தூக்குல தொங்குறீயே? தேவையாவெ உனக்கு இது? பகத்சிங்காம் பகத்சிங்கு, பைத்தியசிங்கா நீ?

ஏம்பா முக்கோண வெண்தாடி நாதா, செவாலியேவெல்லாம் வாங்கியிருக்கியாமே, ஹிந்தி தெரியுமா உனக்கு? அது யாருப்பா அந்தப்பக்கம் மதிய உணவுத்திட்ட நாயகனா? வெட்டி வேலையப்பா உன்னது!

உங்களது கரங்கள் பெரியதாய் என்ன செய்துவிடப்போகின்றன? அடிக்கடி முதுகில் குத்தும் அல்லது ஒரே ஒருமுறை ஒருத்தருக்கு என, பல மலர் வளையங்கள் வைக்கும். உங்களது இதழ் எப்போது திறந்து மூடப்போகின்றன? மலர் வளையம் வைத்த கையோடு மைக் பிடிக்கும் உங்களுக்கு, இரண்டே இரண்டு வார்த்தைகள் புகழ்ந்து பேசுவதற்கு திறந்து மூடும்.

ஆயிரம் மலர் வளையங்களை விட ஒரே ஒரு மலர்மாலையும் மனம் நிறைந்த பாராட்டும் சாதிக்கக்கூடியவை எத்தனை எத்தனை நண்பர்களே!

இறந்த பின் மட்டும் வெளியில் காட்டுவதற்கென உங்கள் கைகளும் வாயும் இருந்தால் இனிமேல் அவை இரண்டும், அவற்றுக்கு(ம்) பயன்படாமல் போகட்டும்!

கல்கி பேட்டியிலிருந்து....

"தனிப்பட்ட முறையில் பிராமணர்கள் பால் எந்தவித காழ்ப்பும் பெரியாருக்கு இல்லை"

"பகுத்தறிவுப்பாதையை பெரியார் மட்டும் தான் கொண்டு வரவேண்டுமென்பதில்லை. சுபிட்சமே கொண்டு வரும்"

"மேஜை மீது கிடக்கிற தண்ணீரை தள்ளிவிட்டால் மற்றொரு பக்கம் போய்விடும். அப்படித்தான் மும்பை முழுவதுமே இப்போது தாராவியாகிவிட்டது"

"ஆபத்தின் விளிம்புவரை சென்று எட்டிப்பார்க்கும் ஒரு முனைப்பு எனக்கு எப்போதும் உண்டு."

"வர்த்தகக் கோட்பாடுகளிலிருந்து தமிழ் சினிமாவின் திரைக்கதையை மீட்டெடுக்கவில்லை. சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டெஸ்ட்! அதில் கொஞ்சம் தீவிரம் இருக்கத்தான் செய்யும்; கொஞ்சம் ரத்தம் கசியத்தான் செய்யும். நோ பெயின் நோ கெயின்! புத்தர் சொன்னதாக எடுத்துக்கொண்டாலும் சரி; ஆர்நால்டு சொன்னாலும் சரி. வலி இல்லாமல் வாழ்க்கை இல்லை! "

"இது ஒரு தொழிலாக வியாபாரமாக இருக்கும்போது, புரட்சிகளில் ஈடுபடும் தியாகம் என்னிடமில்லை."

"நேர்மை ஜெயிக்குமா என்று தெரியாது. ஆனால் நியாயம் கண்டிப்பாக உலகத்துக்குப் புரியும். நேர்மை புரிய கொஞ்சம் நேரம் ஆகும். நேர்மமயானவனா இல்லையா என்பதை அவன் வாழ்ந்துதான் காட்டவேண்டும். அது ஒரு பெரிய கொடுமை!"

"மாற்றம் வேண்டும், மாற்றம் வேண்டும் என்று கேட்காதே..அந்த மாற்றமாக நீயே மாறி விடு!
என்பார் காந்தி. நான் காந்தியின் மிகப்பெரிய ரசிகன். கொடுமை என்னவென்றால், காந்தியைப் பற்றி நான் தப்பாக படம் எடுத்தேன் என்கிறார்கள். காந்தியின் உருவத்தைச் சிதைக்கும் படமா ஹேராம்?"

"தமிழர்கள் எனக்கு கைதட்டாவிட்டாலும் பரவாயில்லை. இப்படி எதிர்பாராத நேரத்தில் அதுவும் பின்புரத்திலிருந்து பொறடியில் தட்டாமல் இருக்கலாம் இல்லையா? முதுகில் குத்துவதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?"

"அழும் கோழைத்தனம் எனக்கு இல்லை. ஆனால் சிரிக்கும் பக்குவத்தை மட்டும் நான் இழந்துவிட்டேன் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்'

"கலைஞன் என்பவன் சாந்தமான மனநிலையில் இருந்துகொண்டு செயல்படவேண்டும். வேலை செய்கிற உச்சகட்டத்தில் என்னைத் தொந்தரவு பண்ணிவிட்டு, ஓய்வு பெறும்போது நீங்கள் பாராட்டுவது எனக்கு வேண்டாம்."

கடைசி வரிகள் நமக்கு மிகவும் முக்கியம் நண்பர்களே! இனிமேலும் இறந்த காலத்திற்காய் ஏங்காதீர்! நிகழ்காலத்தின் சக சாதனையளர்களை போற்றுங்கள், மதியுங்கள்!

எம்.கே.குமார்

நன்றி: கல்கி!

Wednesday, May 11, 2005

சொல்லாடல்!

காலங்காலமா
கையிடுக்குத் துண்டு
செட்டியாரு
கலியாணத்து
ரெண்டாம் பந்தில
உக்காந்தவனை
சொக்கா பிடிச்சி எழுப்பிவிட்டது.
வெசனத்துல
போதையில
வண்ணான் முதல்
வாத்தியார் வரை
ஊர்லெ எல்லார்ட்டேயும்
படுத்து வருவாளுக
அவனைச் சுமந்தவளும்
அவனதைச் சுமந்தவளும்.
சாராயத்து மானியத்துல
அவென்
பொண்டாட்டி புட்டக்கதை
பொண்ணோட மாருக்கதை
எல்லாஞ் சொல்ல
ரசிச்சிப் போகும்
என்னோட சேந்த செட்டு.
முன்னடியாஞ் சாமிக்கு
மொதப்பூசாரி அவந்தான்
சாமி வர சொணக்கமானா
சாராய மீதி
சம்சார மீதி
சகவாச மீதின்னு
கேலிக்கி ஆளாவான்
சாமிக்கி முன்னாடி.
அத்தனையும் மனசுல வெச்சி
எதிர்ல நாம வரும்போது
எப்படியிருக்கீங்கய்யான்னு கேப்பான்
அனுசரனையா வெட்டியான்,
எப்படா அங்கெ வருவேன்னு
வாய்க்குள்ளே மட்டும் கேட்டு!

வெண்ணிலாப்ரியன்.

நன்றி: அமுதசுரபி மே 2005

Tuesday, May 10, 2005

நெடு பயணத்தில் ஓர்நாள்-குறும்பட இயக்குனர் அஜீவன்!

அஜீவனுக்கும் ஊடகத்திற்குமான புரிதல் பதின்ம வயதினிலே ஆரம்பித்திருக்கிறது. இலங்கையில் பிறந்து, இயந்திர பட்டப்படிப்பு பயின்று, ஊடகம் சுழலும் வாழ்வில் மனம் நுழைந்து கிடந்தாலும் சிங்கப்பூருக்கு வந்து சில ஆண்டுகள் படிப்பு சார்ந்த வேதியியல் தொழிற்நுட்பத்தில் பிழைத்து, பிறகு சில ஆண்டுகள் நிரந்தரமாக தன்னை தனக்குப் பிடித்த வேலைக்குள் இழைத்திருக்கிறார். சீன முதலாளியிடம் வேலை செய்ய, நேர்மை, நம்பிக்கை மற்றும் திறமை ஆகியவற்றை அதிகமாகக் கொண்டிருக்கவேண்டியதன் அவசியத்தைச் சொல்லும் அவர், தனது பழைய முதலாளி 14 வருடங்கள் கழிந்தும் இன்னும் தன் மேல் கொண்டிருக்கும் அன்புக்கு அவற்றை சாட்சியாக்குகிறார். அஜீவனின் அன்றைய வழிகாட்டுதல் அந்த சீனரின் இன்றைய மாபெரும் வெற்றி!
Image hosted by Photobucket.com

'கல்யாணத்தில் வீடியோ எடுப்பதற்கும் விதவிதமான உடைகளில் மரத்தைச் சுற்றி வந்து காதல் புரியும் கலைக்கும் எனக்கும் வெகு தூரம். அதற்கெல்லாம் அப்பால் மனித உணர்வுகளுக்கு மத்தியில் நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.' என்கிறார். 'அரசியல் போராட்டங்களோ அது சார்ந்த சூழ்நிலைகளோ இந்தக் கலைஞனுக்கு அவசியமில்லை. அவைகளுக்கு மத்தியில் எனக்கு வேலையில்லை. எனது தலைவிதியை சரியாக நான் வைத்துக்கொண்டால் அதுவே எனது வாழ்தல். நான்கு பேரைத் திருத்துவதற்கோ நாட்டைத்திருத்துவதற்கோ என்னால் முடியாது. அது எனது வேலையும் இல்லை. தான் வாழும் குறும்பட உலகிலும் அத்தகைய சூழ்நிலை நிலவுவது எனக்குப்பிடிக்காது.' கேமிராவின் பார்வை நீண்ட சாலையைத் தேடுகிறது.

'லண்டன் குறும்பட விழாவுக்கு' நடுவராய் வந்த திரு. தங்கர்பச்சானை மிகவும் இகழ்கிறார் அஜீவன். அவருக்கு இப்படங்களைப் பற்றி என்ன தெரியும் என்றும் கேட்கிறார். 'எதுவும் தெரியாமல் சிறந்ததைத் தேர்ந்தெடுத்த அவரது நடுநிலைமையின் பின்னே ஏதோ நிழலாடுகிறது' என்கிறார். நிழல் நிஜமாகி இப்போது அது மறைந்ததும் எல்லோருக்கும் தெரிந்துவிட்டது என்கிறார் நிஜமான வேதனையுடன்.

லீலா மணிமேகலையின் 'கனவுப்பட்டறை'க்கும் தனக்கும் நிகழ்ந்த பிரச்சனைகள் எந்தவொரு அப்பாவிக்கும் நேரக்கூடாது என்கிறார். அது பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது என்பது பற்றியும் தான் எப்படி அங்கே புறக்கணிக்கப்பட்டேன் என்பதையும் வருத்தமாகச் சொல்கிறார். இலக்கியத்தில் 'ஒற்றையிலை(யென)', வியாபாரத்தில் இவ்வளவு படுத்துமா என்று யோசிக்க நேருகிறது.

குறும்படம் மட்டுமல்ல, சினிமா உலகிலும் கொடிகட்டிப்பறக்கும் பெண்போகங்களுக்கும் அது தொடர்பான விஷயங்களுக்கும் தனது கடுமையான கோபத்தை முன் வைக்கிறார். 'பதினைந்து டாலருக்கு' தாராளமாய் கிடைக்கும் 'வெளிச்சமாச்சாரம்' ஒன்றை, இங்கே வந்து ஏன் தேடுகிறார்கள் என்று விசனப்படுகிறார். தயவுசெய்து அதற்கெல்லாம் இங்கு வராதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறார். கேமராவிற்கும் பெண்போகத்திற்கும் இருக்கும் தவறான சிந்தனைகள் களையப்படவேண்டும் என்கிறார்.

சிங்கப்பூரில் தமிழர்களின் வாழ்வியலில் நடைபெறும் சமூகச்சீரழிவுகளை குறும்படமாக எடுத்து வெளியிடலாமே என்ற தனது நண்பரின் கோரிக்கையைத் திட்டவட்டமாக நிராகரிக்கிறார். 'சமூகச்சீரழிவுகள் எங்குதான் இல்லை? அவற்றை மட்டும் காண்பிப்பது அநாகரிகம். மறுமுறை நான் சிங்கப்பூருக்கு வரமுடியுமா? எனது உலகில், போராட்டத்தின் உக்கிரமோ சமூகச்சீரழிவுகள் அல்லது அதற்கு என் போதனைகள் ஆகியனவெல்லாம் இல்லவே இல்லை. இது ஒருவரின் அல்லது இருவரின் தனிமன விதிகளின் விளையாட்டுக்களம்' என்கிறார்.

'இலங்கையிலிருந்து வந்த ஆண்கள் என்றாலே ஓரின உறவுக்காரர்கள் என்று எண்ணும் சுவிஸ், அங்கு பிழைக்க வரும் இலங்கை ஆடவர்கள், அல்லது அவர்கள் துரத்தும் பெண்களின் பாடுகள், அல்லது வெள்ளைக்காரன் வந்து உடைந்த வீட்டையும் பிணங்களையும் அப்புறப்படுத்த அவற்றை வேடிக்கை பார்க்கும் சுனாமியின் உள்ளூர்வாசிகள்- இவைகளுக்குப்பின்னே சில இதயங்கள் கிடந்து குமுறலாம். அவைகள்தாம் எனது களம்' என்கிறார். இலங்கையில் சுனாமியின் கோரத்தை டாகுமெண்டரியாக்கியும் குறும்படமாக்கியும் அதனுடன் 'என் ஜி ஓ'க்களோடு இணைந்து சுவிஸிலிருந்து வந்து நிவாரணப்பணிகளில் பங்குகொண்டதையும் குறிப்பிடுகிறார்.

'சிங்களம் வழியில் படித்து வந்தமையால் சிங்கப்பூரில்தான், தமிழ் எழுதப் படிக்க கற்றுக்கொண்டேன். அதில் எனக்குப் புலமை கிடையாது. சிங்களம் நன்றாகப் பேசுவேன். விமான நிலையத்தில், 'தமிழ்ச்செல்வன்' என்ற எனது பெயரைப் படித்துவிட்டு நிமிர்ந்து அவர் பார்க்கும்பொழுது நான் சிங்களம் பேசுவது இனிமையாய் இருக்கிறது. இலங்கையில் பிறந்த அனைவருக்கும் சிங்களம் தெரிந்திருப்பது நல்லது' என்கிறார்.

'ஜெர்மானியர்களுடன் வேலை செய்யும் அனுபவம் அலாதியானது. மோதல் இல்லை; ஈகோ இருக்காது. எனக்குத்தெரியாததை அவர்களிடம் கேட்கலாம்; அவர்களுக்குத்தெரியாததை நம்மிடம் கேட்பார்கள். பரஸ்பரம் கருத்துப்பரிமாற்றம் இருக்கும். ஏராளமான ஜெர்மன் படங்களுக்கு ஒளிப்பதிவு, எடிட்டிங், கோ-டைரக்ஷன் செய்திருக்கும்/செய்யும் ரகசியம் அதுதான்! ஒரு சின்ன விஷயத்திற்கு ஆயிரம் கேள்விகளும் விவாதங்களும் செய்யும் நம்மாட்கள் சிலருடன் எனக்கு எப்போதும் ஒத்துவராது. பெரியவர்களை விட மாணவர்களையும் இளைஞர்களையும் என்னிடம் விட்டால் நன்றாகச் செயல்படமுடியும்' என்று தனது ஆதங்கத்தையும் விருப்பத்தையும் வெளிப்படுத்துகிறார்.

கமலுடன் வேலை செய்த அனுபவங்கள், கன்னட படத்தில் பணிபுரிந்தது, திரையுல தனது நண்பர்கள், ஆபாவாணன் டீமில் வேலை செய்த தனது சிநேகிதர்கள் பற்றியெல்லாம் நம்மிடம் அளவளாகிறார். தான் நிறைய ஜெர்மன் படங்களில் வில்லனாக நடித்திருப்பதையும் மாணவர்களின் குறும்பட இயக்கத்தில் தனது ஈடுபாட்டையும், சுவிஸ் பட கழகத்தில் தனது பங்கு மற்றும் ஜூரியாக தான் ஆற்றிவரும் பணியைப் பற்றியும் குறிப்பிடுகிறார்.

ஆங்கிலத்திலும் ஜெர்மன்மொழியிலும், தான் இப்போது குறும்படங்கள் தயார் செய்வது பற்றியும் சிங்களத்தில் ஒரு படம் செய்து அதைத் தமிழில் மொழிமாற்றம் செய்வது குறித்தும் பேசுகிறார். 'தமிழில் அல்லது தமிழ்நாட்டினருக்கென படம் செய்வது பெரியவிஷயமா என்ன' என்று கேட்கிறார். (ஹி..ஹி, மன்னிச்சுக்குங்க மானஸஜென்!)
'சிங்கப்பூரில் குறும்படங்கள் தயாரிப்பது தொடர்பாக, என்னால் எல்லாவித உதவிகளையும் வழங்கமுடியும்' என்கிறார் ஆர்வமாக. 'கதைகளைத் தயார் செய்துகொண்டு, திரைக்கதையை எனக்கு அனுப்பி வையுங்கள், என்னால் முடிந்த உதவிகளை உங்களுக்குச் செய்கிறேன், கதைகளில் நிறைய பாத்திரங்கள் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்' என்கிறார். சிங்கப்பூரில், 1981 வாக்கில், சிங்கப்பூர் பிராட்கேஸ்டிங் கார்ப்பொரேஷனிலும் (SBC), தமிழ் முரசில் சினிமா செய்திகள் எழுதியதையும், வானொலியில் பங்குபெற்றதையும் இனிமையாகப் பகிர்ந்துகொள்கிறார்.

சிங்கப்பூரில் அவருக்கு நடிகர்-நடிகைகள் தேவை எனச்சொன்னார்! அப்படியே மென்பொருள் வல்லுனராய் இன்னொரு பெண்ணும் பார்க்கிறாராம்! முன்னது 'தான் இயக்க', பின்னது 'தன்னை இயக்க'வாம்! அட்டகாசச் சிரிப்புடன் சொல்கிறார் பிரம்மச்சாரியான அஜீவன் தமிழ்ச்செல்வன்!

(நேரிடையாக உரையாடியதன் ஞாபகத்திலிருந்து எழுதியவை. கருத்துகளோ வார்த்தைகளோ மாறியிருக்கலாம்!)

எம்.கே.குமார்

Search This Blog