Tuesday, January 25, 2011

சென்னை டைம்ஸ் 2015 இதழில் இருந்து

பொங்கல் பண்டிகை உற்சாகக் கொண்டாட்டம்.

மதுரை. ஜன. 15. (இந்தியா) தமிழ்நாட்டின் தெற்கு மாவட்டமான மதுரையின் தல்லாகுளம் பகுதியில் நேற்று பொங்கல் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் பதினான்கு மற்றும் பதினைந்து தேதிகளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. மதுரை தல்லாகுளத்தில் நேற்று முன்தினம் ரேஷன் அரிசிக்கடை திடீர் என்று பூட்டப்பட்டதால் இப்பகுதிகளில் பொங்கல் பண்டிகை 'கொண்டாடப்படுமோ படாதோ' என்ற சந்தேகம் 'சமுதாய கவனிப்பாளர்களின்' பார்வையில் இருந்தது. மாவட்ட ஆட்சியாளரிடம் இதுபற்றி மக்கள் முறையிட்டுக்கொண்டிருந்த நேரம், அவர் இடமாற்றம் குறித்து செய்தி வந்த நிலையில் அவர் அப்பேச்சினை முடிக்காமல் எழுந்து சென்றுவிட்டார்.

இந்நிலையில் நேற்றிரவு திடீரென்று வந்த மர்மக்கும்பல் ஒன்று ஒவ்வொரு தெருவுக்கும் இரண்டு மூட்டை அரிசியினை வீசிவிட்டுச்சென்றது. இதை அள்ளிக்கொண்ட மக்கள் சந்தோச பெருக்கோடு பொங்கலைக் கொண்டாட ஆரம்பித்தனர். பொங்கலில் போடுவதற்கு சர்க்கரை மூட்டைகளை வீசாத அம் மர்மக்கும்பலின் மேல் விசனப்பட்டும் அவர்களில் சிலர் திட்டித்தீர்த்தனர்.


இதற்கிடையே வீடுகளுக்கு 'குடிநீர் பாக்கெட்' போடும் தண்ணீர்வண்டி நேற்று வராததைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். 'வீட்டிற்கு மூன்று பாக்கெட் இலவச தண்ணீர்' என்ற திட்டத்தைச் சொல்லி ’ஆட்சிக்கு வந்தவர்கள்’ இன்று அதைச் செயல்படுத்தவில்லை என்றும் அவர்களில் சிலர் கூறினர். மேலும் சிலர், சென்ற வாரம் கொடுத்த ’தண்ணீர் பாக்கெட்டின்’ அளவு குறைந்திருந்தது என்றும் புகார் செய்தனர்.



2005ல் எழுதியது

சென்னை டைம்ஸ் 2015 இதழில் இருந்து

சென்னை. மே 10. சென்னையின் முக்கியச் சாலையில் நடைபெற்ற போராட்டம் ஒன்றில் நேற்று, 'முதலமைச்சரும் மந்திரிகளும்' கலந்துகொண்டனர். பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலையை மத்திய அரசு குறைக்கவேண்டும் என்று அவர்கள் இப்போராட்டம் நடத்தினர்.

இந்தியாவில் பெட்ரோலியப்பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் சமீப காலமாய் எகிறி வந்துகொண்டிருந்தது நாம் அறிந்ததே! உலக கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்கள், கச்சா எண்ணையின் விலையை ஏற்றியதை ஒட்டி இந்தியாவிலும் பெட்ரோலியப்பொருட்களின் விலையை மறுபரிசீலனை செய்வது குறித்து இரண்டு நாட்களுக்கு முந்தைய அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதனால், அரசாங்கம் பெட்ரோலியப்பொருட்களுக்குத் தந்த மானியத்தை முழுமையாக நிறுத்தியபிறகும், தொடரும் கச்சா எண்ணெய் விலையேற்றம் அரசுக்கு பெரும் சவாலாக இருப்பதாகவும் அதனால் பெட்ரோல் விலையை உயர்த்துவதைத் தவிர அரசுக்கு வேறு வழியில்லை எனவும் முடிவு செய்யப்பட்டதாக அறிக்கையில் சொல்லப்பட்டது.

இதன்படி பெட்ரோல் விலையில், லிட்டர் ஒன்றுக்கு 5.80 (ஐந்து ரூபாய் எண்பது காசுகள்) ஏற்றப்படுவதாகவும் இனி பெட்ரோலின் விலை 'தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது ரூபாய் எண்பது காசுக்கு (ரூபாய் 999.80)' விற்கப்படும் என்றும், டீசல் விலை பத்து ரூபாய்(ரூபாய் 10.00) ஏற்றப்பட்டு, 'எழுநூற்று எண்பது ரூபாய் முப்பதுகாசுக்கு (ரூபாய் 780.30)' விற்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

(2005ல் எழுதியது.)

சென்னை டைம்ஸ் 2015 இதழில் இருந்து

தமிழகம் வந்தார் பிரதமர்!

சென்னை. மே 20. சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கருகில், கடலுக்கடியில் ஏற்பட்ட அதிபயங்கர நில அதிர்வினால், 'சுனாமி' எனப்படும் ஆழிப்பேரலைகள் உருவாகி, இந்தோனேசியா, இந்தியா, இலங்கை, மலேசியா மற்றும் தாய்லாந்து பகுதிகளை மிகவும் கொடூரமாகத் தாக்கியது பலருக்கும் நினைவிருக்கலாம். இந்தியாவில் இது, தமிழ்நாட்டின் கிழக்குப்பகுதியான நாகப்பட்டினம் மாவட்டத்தில் கோரத்தாண்டவம் ஆடியதில் ஏராளமானோர் தங்களது உயிர்களையும் உடமைகளையும் இழந்தனர். இந்திய அரசும் இந்திய மக்களும் இதன் மீட்புப்பணியில் அப்போது மிகத் தீவிரமாக ஈடுபட்டு சிறந்த செயலாற்றினர்.

இந்நிலையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட அம்மக்களுக்கென, அதி நவீன வசதிகளைக்கொண்ட அடுக்குமாடி வீடுகளை இந்திய அரசும் தமிழக அரசும் இப்போது கட்டி முடித்திருக்கின்றன. இவைகளைத் திறந்து வைப்பதற்கும் பாதிக்கப்பட்ட மக்களூக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும் இந்தியாவின் பிரதமர் நேற்று சென்னை வந்தார். வீடுகளை மக்களுக்கு அளித்த அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், 'புயலாலும் கடலலைகளாலும் எளிதில் தாக்கமுடியாத அளவிற்கு ஜப்பானிய அரசின் திட்ட உதவியோடு இவ்வீடுகள் அமைந்திருக்கின்றன' என்று சொன்னார்.

இதற்கிடையில், நேற்றிரவு சன் டிவி செய்திகளில், 'நாகப்பட்டினத்திற்கு அருகேயுள்ள, காணாம்பட்டினம் கிராமத்தில் 'சுனாமி' தாக்கி பத்தாண்டுகள் கடந்தும் இதுவரை எந்தவித நலத்திட்ட உதவியும் வழங்கப்படவில்லை' எனவும் 'ஆட்சியிலிருக்கும் அரசு இவற்றையெல்லாம் கண்டுகொள்ளவில்லை' எனவும் காட்டப்பட்டது.

முன்னதாக, விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் அவர்களுக்கு, கட்சியில் ஒரு கோஷ்டிக்கு ஆதரவாகச் செயல்படும் தமிழக கட்சித்தலைவரை பதவியிலிருந்து நீக்க வலியுறுத்தி கட்சியின் மற்றொரு கோஷ்டியைச் சேர்ந்தவர்கள், பிரதமருக்கு கறுப்புக்கொடி காட்டினார்கள்.

(2005ல் எழுதியது!)

Saturday, January 01, 2011

மன்மதன் அம்பு - எய்தவன் ஏமாற்றம்

அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த 2011ம் வருடமானது தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எல்லா நலங்களையும் வளங்களையும் அளிக்க இயற்கையை வணங்குகிறேன். மன்மதன் அம்பு படத்துக்கான எனது எண்ணங்களை இந்தமாத "தங்க மீன்" இதழில் பதிந்துள்ளேன். ஒரே வார்த்தையில் அப்படம் பற்றிச் சொல்வதானால் கமலின் மீது ஏமாற்றமே வருகிறது. http://www.thangameen.com/Default.aspx

Search This Blog