Friday, September 21, 2012

சிங்கப்பூர் டைம்ஸ் 2012

அரசியல், சினிமா என்கிறவகையில் பொழுதுபோக்குக்கு பஞ்சம் என்பதால் வெளிநாட்டு ஊழியர்கள், பணிப்பெண்கள் தொடர்பான விஷயம் எப்போதும் பரபரப்பாக பேசப்படும் சிங்கப்பூரில். அத்தகு செய்திகள் இரண்டு, சென்றமாதம் சிங்கப்பூரைப் பரபரப்பாக்கின.

சிங்கப்பூரில் இருக்கும் 200,000 வெளிநாட்டுப் பணிப்பெண்களுக்கும் 2013 ஆன் ஆண்டிலிருந்து வார விடுமுறை அளித்து சட்டமியற்றி இருக்கிறது சிங்கப்பூர் அரசு. வீட்டுவேலைக்கென வந்த பெண்களை குறிப்பிட்ட வேலைநேரம், ஓய்வுநேரம் என எதுவுமே இல்லாமல் வேலைவாங்கிக்கொள்வதையே குறியாய்க் கொண்டு ’அடிமைகள்’ என நினைத்தே செயல்படும் சிலருக்கு இது எரிச்சலை ஏற்படுத்தலாம். ஆனால் நியாயமான எல்லா உழைப்பாளிகளையும் போலவே அவர்களையும் நாம் அணுகவேண்டும்.

பணிப்பெண்கள் விஷயத்தில் அண்மையில் வாங்கிக்கட்டிக்கொண்ட நாடு மலேஷியா. பணிப்பெண்களை மலேஷியா தரக்குறைவாக நடத்தியதற்காக ஒட்டு மொத்தமாக பணிப்பெண்களை அங்கு அனுப்புவதை நிறுத்தியது இந்தோனேஷியா. இப்போது சில சட்டப் பாதுகாப்பு இறுக்கமாக்களுக்குப்பின் மீண்டும் அனுப்ப முன்வந்துள்ளது. சவூதி அரேபியா, தாய்லாந்து, தென்கொரியா, எமிரேட்ஸ் மற்றும் மலேஷியா நாடுகளில் மட்டுமே பணிப்பெண்களுக்கு விடுமுறை இல்லை. அதிலும்  மலேஷியாவில் தற்போது சில சட்ட மாற்றங்கள்.

இனி ஞாயிற்றுக்கிழமைகளில் தேக்காவிலும், ஆர்ச்சர்ட் ரோட்டிலும், லக்கி ப்ளாசாவிலும் நடக்கவே முடியாத அளவிற்கு இவர்கள் குவிந்துவிடுவார்கள். விளைவு, கருத்தரிப்பும் கள்ளத்தொடர்புகளும் கொலைகளும் பெருகும் என்றெல்லாம் ஒரு சிலர் இப்போதே புலம்ப ஆரம்பித்துவிட்டனர்.

இந்த பணிப்பெண் விடுமுறைச்செய்தியை கேள்விக்குள்ளாக்கியது அதே வாரம் நடந்த இந்த சம்பவம்.

மார்ச் 4 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு கேலாங் பகுதி பட்ஜெட் விடுதியொன்றில் ’பங்களாதேஷைச் சேர்ந்த 22வயது திரு. முகமது ருமோன்’ மற்றும் ’பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 33வயது மிஸ் ரெஸிலின் வினிகஸ்’ இருவரும் இரவு 11.30 மணிவாக்கில் கழுத்தறுபட்டு வெட்டுக்காயங்களோடு ரத்தவெள்ளத்தில் பிணமாய்க்கிடந்தார்கள். ருமோன் கட்டிடவேலைக்கும் ரெஸிலின் வீட்டு வேலைக்கும் நாடுவிட்டு நாடு வந்தவர்கள்.

ஆறுமாதத்திற்கு முன் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி ஒருவரையொருவர் காதலித்ததாகவும் மோதிரம் மாற்றிக்கொண்டதாகவும் நண்பர்கள் சொல்ல, இருவரும் இணைந்திருந்த புகைப்படங்களையும் அப்பெண் தனது ஃபேஸ்புக்கில் போட்டிருந்தார்.

அப்பையனைச் சந்திக்கச்சென்ற அந்த மாலையில் அதாவது ஒரு மணிநேரத்திற்கு முன்பு கூட தனது முகப்பக்கத்தில் தனது புகைப்படத்தைப் போட்டுவிட்டு ஜாலியாகச் சென்ற அந்தப்பெண் இறந்துபோயிருந்தார். அப்பையன் வழக்கத்திற்கு மாறாக அன்று காலைமுதல் அமைதியாக இருந்ததாகவும் மசூதிக்கும் சென்றதாகவும்  அறை நண்பர்கள் சொல்கிறார்கள்.

இரு தற்கொலை, ஒரு கொலை-ஒரு தற்கொலை, இரு கொலை என வெவ்வேறு யூகங்கள் ஆட்டிப்படைக்கின்றன. "Go for someone whose not only proud and glad to have u, but will also take the risk and effort just to be with u என்பதுதான் தனது பேஸ்ஃபுக்கில் எழுதியிருந்த கடைசி வாக்கியம்.

இருவரது குடும்பத்தாருக்கும் எனது அனுதாபங்கள்.

@@@
கங்கை அமரனுக்கு ’வாழ்நாள் சாதனையாளர்’ விருது, வெங்கட் பிரபுவிற்கு ’சிறந்த இயக்குனர்’ விருது, பிரேம்ஜி அமரனுக்கு ’துணைநடிகர் விருது’ என கங்கைஅமரனின் ’கலைக்குடும்ப விழாவாக’ கலக்கியது சிங்கப்பூரில் நடந்த ’அனைத்துல தமிழ்ப்பட விருது’ (International Tamil Film Awards – 2012) விழா. ’மங்காத்தாவும்’ சிறந்த படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

சூர்யா, ஆர்யா, சிம்பு, அமலாபால், சந்தானம் வருவார்கள் என நடுநாக்கை ’தக்காளிச்சாஸில்’ நனைத்துக்கொண்டு வந்தவர்களை எமாற்றினார்கள் வந்திருந்த ஒரே ஒரு ஹீரோ ’ஜெய்’ மற்றும் ஹீரோயின்ஸ் ’ஸ்ரேயா’ மற்றும் ’ஹன்ஷிஹா..!

வந்தவர்களுக்குத்தான் விருது என்று ஏதும் சொன்னார்களோ என்னவோ? ஜெய்க்கு சிறந்தநடிகர் விருதும் ஸ்ரேயாவிற்கு சிறந்தநடிகை விருதும் கொடுக்கப்பட்டது.

அடுத்தமுறை ”இண்டெர்னேஷனல் ஆஸ்கார் தமிழ்ப்பட விருது” என்ற ஒன்றை யாராவது ஏற்பாடு செய்து, அதை உலகநாயகன் கமலஹாசனுக்கு கொடுத்து  அவரை ”ஆஸ்கார் வென்ற நாயகன்” என்றாக்கும்படி விருது வழங்கும் கமிட்டியை ”பெடோக் நீர்த்தேக்க ஆவிநண்பர்கள் குழு” சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.

வசந்தம் தொலைக்காட்சியில் “மெகா ஸ்டார் புரடக்‌ஷன்ஸ்” சார்பில் வரப்போகும் ”கேட்டது கிடைக்கும் - 2” நிகழ்ச்சிக்கு ’audition’ நடந்தது. Auditionக்கு வந்தவர்களுக்கு வந்தநேரத்தைக்கொண்டு வரிசை எண் தரப்பட்டது. இறுதியில் அகரவரிசைப்படி பெயரைக் கூப்பிட்டுக் கேள்விகேட்டார்கள்.
                                                                                                      
சென்றமுறை நடந்த இந்நிகழ்ச்சியில் இறுதிப்போட்டியில் தங்கமும் பரிசுகளும் வென்றவருக்குக் கேட்கப்பட்ட கேள்வி  ”முத்து திரைப்படத்தின் தயாரிப்பாளர் யார்” என்பதாகும்! அவருக்கும் விடைதெரியாமல் அவருடைய போட்டியாளரும் தெரியாமல் முழிக்க, அந்தக்கேள்விக்கு கொஞ்சம் ”concession” வழங்கி ’முத்து படத்தின் இயக்குனர் யார்’ என்று கேட்கப்பட்டு இறுதியாக தங்கம் வழங்கப்பட்டிருந்தது வேறு எனக்கு கொஞ்சம் ஆசை காட்டியது.

’இந்தமுறை அப்படியெல்லாம் செய்து எங்களை நாங்களே அசிங்கப்படுத்திக் கொள்ளமாட்டோம்’ என்று, தயாரிப்பாளர் திரு கலைச்செல்வன் சொல்லி முதல் அதிர்ச்சியைக் கொடுத்தார் எனக்கு. சென்றமுறை வென்ற தள்ளுவண்டிக்குழந்தையோடு வந்த குடும்பமும் இந்தமுறை கலந்துகொண்டு இறுதிப்போட்டிக்குச் செல்லும் உத்வேகத்தோடு இருந்ததைக் கண்டு கொஞ்சம் கலவரம் ஆனேன்.

20கேள்விகளைக் கொண்ட ஒரு வினாத்தாளில் சில கேள்வி- பதில்கள் என்னைக் கவர்ந்தன. ’சிங்கப்பூரின் கோடு எண் எது’ என்ற கேள்விக்கு ஒரு  நண்பர் ’64’ என்று எழுதியிருந்தார். அவர் சிங்கப்பூரிலே பிறந்துவளர்ந்தவர், தெரிந்திருக்க நியாமில்லை. வெளிநாட்டிலிருந்து அழைத்தால்தானே அந்த எண் தேவைப்படும்? முத்தமிழ் யாவை என்ற கேள்விக்கு அப்படியென்றால் என்ன என்று கேட்டார் ஒரு இளம்பெண். ’மூன்று தமிழ்’ என்று கேட்டிருந்தால் எழுதியிருப்பேன் என்றும் சொன்னார். அடடா, வடை போச்சே!

நிறைய இளையர்களைக் கண்டது உற்சாகமாய் இருப்பதாய் திரு கலைச்செல்வனும் சொன்னார். நானும் சொல்கிறேன்.

Audition இறுதியில் எல்லோரிடமும் கேட்கப்பட்ட முக்கிய கேள்வி, ’நிகழ்ச்சி நடக்கும் கூட்டத்திற்கு எத்தனை பேரைக் கூட்டிவருவீர்கள்?’ என்பதுதான். அந்தக்கேள்விதான் ஒரு கோடி பரிசு வெல்லப்போகும் கேள்வி என்பது எனக்கு அப்போது தெரியவில்லை. எத்தனை பேர் வேண்டும் என்று ஒருவர் திருப்பிக்கேட்டார். ஆள் சப்ளை செய்யும் வியாபாரம் எதுவும் செய்கிறார் போலும்!  அடுத்த ’எலக்‌ஷனுக்கு’ இந்த நபர் தேவைப்படுவார்; தேடி வைத்துக்கொள்ளவேண்டும் என நினைத்தேன்.

20பேருக்கு மேலே என்று சொல்லியவர்களை திரு கலைச்செல்வம் குறித்துக்கொண்டார்.  நான் என்ன சொன்னேன் என்று எனக்கே ஞாபகமில்லை.

”கேட்டது கிடைக்கும்” என்ற நிகழ்ச்சிக்குச் சென்ற எனக்கு ’இரண்டு கேள்விகள் கிடைத்தன’. ஒன்று, A, b என்ற அகர வரிசையில் பெயரைக் கூப்பிடுவதற்கு எதற்கு வரிசை எண் சீட்டு கொடுத்தார்கள்? (12மணிக்குச் சென்ற நான், 4 மணிக்கு நாக்கு வெளியே தொங்க, பசியோடு வெளியே ஓடிவரவேண்டியதாயிற்று).

இரண்டாவது கேள்வி, ’எத்தனை பேரைக்கூட்டி வரமுடியும், சரி. டிக்கெட்டு விலை எவ்வளவு?’ - நிகழ்ச்சியைப் பார்க்கக் காத்திருக்கிறேன்.

அரவான் திரைப்படம் அண்மையில் நான் மிகவும் ரசித்துப்பார்த்த படம். ’கோல்டன் டிஜிட்டர்’ தியேட்டரில் படம் பார்க்கையில் என் மனம் வழக்கத்திற்கு மாறாய் குதூகலித்திருந்தது. காரணம் தெரியாத குதூகலம் இது. வருவதும் போவதும் அதிசயம்தான்.

படம் முடிந்து வெளியே வரும்போது ஒரே ஒரு வார்த்தையில் அந்த ஒட்டுமொத்த உணர்வையும் மழுங்கடித்துவிட்டுச் சென்றுவிட்டார் என் முன்னால் சென்ற ஒரு கொலைகாரப்பாவி.’அவனும் கழுத்த அறுத்துக்கிட்டு நம்மளையும் அறுத்துட்டாண்டா!’

நல்லவேளை என் கையில் கத்தி இல்லை.

எம்.கே.குமார்.

Thanks: Thangameen.com

Tuesday, July 03, 2012

கோடியக்கரை & வேதாரண்யம் - தொட்டுவிடும் தூரத்தில் தொலையும் அடையாளம்

எனது நம்பிக்கையை கிஞ்சித்தும் பொய்யாக்கவில்லை இந்திய அரசியல்வாதிகள். எந்த நாட்டுக்குச்சென்றாலும் எத்தனையோ முறை அடடா, இதைவிட அருமையான படகுப்பயணம் ஒன்று தமிழநாட்டில் நடத்தாலாமே, இடம் இருக்கிறதே, இதைவிட அருமையான ஒரு சிற்றாறு ஒன்றை திருநெல்வேலி நவ திருப்பதிப்பக்கம் பார்த்திருக்கிறோமோ, இதைவிட அருமையான கடற்கரை விருந்தை நமது ஊர் கடற்கரையில் நடத்தலாமே என்று ஏங்கிய தருணங்கள் எத்தனையோ முழுகிப்போய்விட்டன. சரி, நவீன வளர்ச்சியால் பொருளாதார மேம்பாட்டால் இதையாவது உருப்படியாய் வைத்திருப்பார்களோ என்ற நப்பாசையிருந்தாலும் அவர்களின் சுற்றுச்சூழல் குறித்த அறிவின் மீதும் அக்கறையின் மீதும் கொண்ட நம்பிக்கையோடு சென்ற எனக்கு எமது ஆட்சியாளர்கள் எப்போதும் எமது மக்களின் நம்பிக்கையைக் குலைக்கமாட்டார்கள் எனக் காட்டிவிட்டார்கள்.

அண்மையில் ஊருக்கு வந்தபோது, சொந்த அலுவல் காரணமாய் திருத்துறைப்பூண்டி பக்கம் செல்ல வேண்டிவந்தது. வேளாங்கண்ணிக்கு செல்லும்போது அங்கு செல்வது வழக்கம். அதுவும் ஏறக்குறைய பத்து பதினைந்து வருடங்களாகிவிட்டது. திருச்சியிலிருந்து தஞ்சாவூர், மன்னார்குடி வழியே திருத்துறைப்பூண்டி பயணம். ஏறக்குறைய நான்கு மணிநேரப்பயணத்தில் இரண்டு நண்பர்களின் ஞாபகம் தவிர்க்கமுடியாமல் வந்தது. ஒருவர் வடுவூர் குமார்
. சிங்கப்பூரில் வசிக்கும் அவர் பெயரில் இருக்கும் வடுவூர் வழியே பஸ் சென்றதும் "ஓ, இதுதான் அவர் ஊரா" எனக் கேட்டுக்கொண்டேன். (வடுவூர் குமார் இதைப் படித்தால், அது வேறு ஒரு வடுவூர் என்று சொல்லாமல் இருந்தால் சரி). இன்னொருவர் நண்பர் சுப்புரத்தினம். திருத்துறைப்பூண்டியை அடுத்த ஆயக்காரன்புலத்தைச் சேர்ந்தவர். தூத்துக்குடியில் ஒன்றாக வேலை செய்தோம். இப்போது மத்தியகிழக்கு நாடு ஒன்றில் பணிபுரிகிறார். 'சிங்கப்பூரை விட உலகம் பெரியது; வெளியில் வாருங்கள் குமார்' என்று அடிக்கடி ஆஃப்லைனில் செய்தி கொடுத்துவிட்டுசெல்வார்.

திருத்துறைப்பூண்டி வரை வந்துவிட்டீர்கள், அருகிலிருக்கும் வேதாரண்யமும் கோடியக்கரையும் சென்றுவிட்டுச் செல்லலாமே; பிறகு எப்போது பார்க்கமுடியும் அவைகளை' என்று ஏதோ மாயமாகப்போகும் பொருளைப்பற்றி பேசுவது போன்ற நண்பரின் வேண்டுகோளை அரைகுறை மனதாய் ஏற்றேன். வேதாரண்யம் என்றதும் உப்புச்சத்தியாகிரகம் செய்த இடம் என்பது மட்டுமே ஞாபகம் வருகிறது. அதேபோல கோடியக்கரை என்றதும் வெகு அருகிலே யாழ்ப்பாணம் என்பதும் கோடியக்கரை சண்முகம் அவர்களும் ஞாபகத்திற்கு வருகிறார்கள், கூட சில தவிர்க்க முடியாத சம்பவங்களும்.

திருத்துறைப்பூண்டியிலிருந்து வேதாரண்யம் எவ்வளவு தூரம் என்ற கேள்விக்கு அட, பத்து நிமிஷந்தான் என்றதும் அங்கிருந்து கோடிக்கரை, அட, அங்கிருந்து கோடிக்கரை நடக்கும் தூரம்தான் என்பதும் தமிழர்களின் தூரத்து அளவிடும் முறையைக் காட்டுகின்றன என்றுதான் சொல்லவேண்டும். வேதாரண்யம் 31கி.மீ என்பதும் அங்கிருந்து கோடிக்கரை 14கி.கீ என்பதும் அங்கு செல்லும்போதுதான் தெரிந்தது.

(திருமறைக்காடு) வேதாரண்யம் கோயில் நான்கு வீதிகளுடன் அழகாய் இருக்கிறது. உள்ளே இருக்கும் வேதாரண்யீசுவரர் மாமன்னராம் கலைஞரின் ஆட்சியிலும் சந்தோசமாய் இருப்பாரென நம்புகிறேன். பஸ் நிலையத்திற்கு முந்தைய சாலை 'வழக்கம்போல்' இருக்கிறது.

பார்ப்பதற்கு வேறென்ன முக்கியமான இடங்கள் வேதாரண்யத்தில், என்ற கேள்விக்கு அம்பாசமுத்திரம் அம்பானி பார்க்கலாம், தியேட்டர் இருக்கிறது, என்றவரை நாம் கோபிக்கக்கூடாது. அதுவும் தற்கால தமிழனின் அடையாளம் தான் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

கோடியக்கரையின் உள்ளே நுழையும்போதே இடதுபுறத்தில் கையைக் காட்டிய நண்பர், 'உள்ளேதான் சண்முகம் வீடு' என்றார். பரவாயில்லை, கேட்காமலேயே சொல்லிவிட்டார். கோடியக்கரை (கள்ளிமேடு முனையாம், Point Calimere) சுனாமிக்கு முன்னாடியும் இப்படித்தான் இருந்ததா என்று கேட்டேன். சுனாமியடித்த தடம் இன்னும் மாறாதது போலவே இன்றும் இருக்கிறது. சாதாரண ஓட்டுவீடுகளும் ஆங்காங்கு சில வெளிநாட்டு ஊழியத்தின் பலனாய் முளைத்திருக்கும் கான்கிரீட் வீடுகளுக்கும் (கலைஞரும், ஈவிகேஎஸ்இளங்கோவனும் கோபித்துக்கொள்ளக்கூடாது, இந்திரா காந்தி அல்லது கலைஞர் கான்கிரீட் வீடு திட்டத்தால் வந்ததா இவை என எனக்குத்தெரியவில்லை; வீட்டின் உரிமையாளர்கள் இந்த திட்டத்தின் ஒப்பந்தக்காரர்களாயும் இருக்கலாம்) மத்தியில் ஊருக்கே கட்டியம் கூறுவது போல ஒரு மூன்றுமாடிக்கட்டிடம். ஆச்சரியமாய்ப் பார்த்தேன். இந்திய சுங்கத்துறை! அப்படிப்போடு. என்னவாம் என்றேன். 'எல்டிடியீ' நிறைய கடத்துறாங்கன்னு கட்டுனதாம்' என்றார் நண்பர். வயிறு எரிகிறது.

சரி, கோடியக்கரை கடற்கரையைப் பார்க்கலாமா? பொன்னியின் செல்வனில் ஏதோ இதுபற்றி படித்ததாய் ஞாபகம் என்றேன். பூங்குழலி எங்களை மன்னித்துவிடு. அயர்ந்து படுத்திருக்கும் குடியானவனைப்போல நாலைந்து சிறு படகுகள் அலையடியில் கிடக்கின்றன. தமிழ்நாட்டின் வரைபடத்தில் குறுக்கு வெட்டாய் கிழக்கிலிருந்து மேற்காய் திரும்பும் ஒரு துறைமுகம் கிடைக்கும் கோலத்தைப் பார்த்தால் என்ன சொல்வது?




அடுத்தது கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம். 1967ல் உருவாக்கப்பட்டதாம் இது. உலர்பசுமைக் காடுகளும், மாங்குரோவ் காடுகளும், வெட்லாண்ட்ஸ் எனச்சொல்லப்படும் சதுப்புநிலப்பகுதிகளையும் உள்ளடக்கியதாம் இது. மொத்தம் 377 சதுரகிலோமிட்டர்களாம். (தகவல்கள் வனவிலங்கு சரணாலயத்தில் கிடைத்தவை அல்ல! இணையம்)

பொது நுழைவாயிலைப் பூட்டிவைத்திருக்கிறார்கள். வண்டி வரும்போது நுழைவுச்சீட்டு கொடுத்துவிட்டு திறந்துவிடுகிறார்கள். நுழைவுச்சீட்டு வழங்குமிடத்துக்கும் நுழைவாயிலுக்கும் 100 மீட்டர் தூரம். நாம் போய் காத்து இருக்கவேண்டும். எப்போதாவது வரும் வண்டிக்கு ஏன் நுழைவாயிலேயே காத்து இருக்க்வேண்டும் என்பதால் அங்கு போய் விடுவார்களென நினைக்கிறேன். அதிகாரி வந்து நேரத்தைக் குறித்துக்கொண்டு உள்ளே அனுப்புவார். திரும்பி வரும்போது சமைத்த அல்லது பச்சை மான்கறி ஏதும் இருக்கிறதா என எப்போதும் ஆராய்வார்களாம். திரும்பி வரும் நேரத்தைப் பொறுத்ததாம் அது.

வெட்லாண்ஸ் பகுதியில் பாதிக் காட்டை அழித்துவிட்டார்களென நினைக்கிறேன். வரண்டு கிடைக்கிறது மொத்தப்பகுதியும். மான்கள் பொட்டை வெயிலிலும் ஆங்காங்கு நடமாடுகின்றன. இக்காலத்தில், அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் மீறி, மான்களை இன்னும் அங்கு பார்க்க நேருவது சந்தோசமாக இருக்கிறது. குதிரைகள் எருதுகளும் உலவுகின்றன. குதிரைகள் காட்டுக்குதிரைகளா இல்லை வளர்ப்புக்குதிரைகளா எனத்தெரியவில்லை. ஏனெனில் ராமர் பாதம் அருகில் உள்ள உப்பளங்களில் குதிரைகளை சிலர் கட்டிவைத்திருந்தார்கள்.

தண்ணீர்த்தொட்டி வைத்திருக்கிறார்கள். அவைகள் கிடக்கும் அவலத்தைப் பாருங்கள்.




திரும்பி வரும்போது சாப்பிடலாமா எனக்கேட்டேன். சூப்பர் மான்கறிபிரியாணிக் கடை ஒன்று இருக்கிறது போகலாமா என்றார் நண்பர். ம்ஹ்ஹூம், வேண்டாம், 'அசைவம்' சாப்பிட்டு சாப்பிட்டு நாக்குச்செத்துக்கிடக்கிறது, நல்ல சைவ ஹோட்டல் ஏதாவது என்றேன் நான்.

வேதாரண்யம் பேருந்து நிலையம் அருகில், இடதுபுறத்தில் திரும்பி ஒரு மெஸ்ஸுக்கு அழைத்துசென்றார்.

கீரை இங்கு நன்றாயிருக்கும் என்பதால் இவரை இங்கு கூட்டிவந்தேன், கீரை இல்லையா இன்று என்று கேட்டார் நண்பர் அந்த மெஸ் உரிமையாளரிடம். கீரை இப்போதெல்லாம் அவ்வளவாய் கிடைப்பதில்லை. அதுதான் கத்தரிக்காய் கூட்டு என்றார் அவர். ம்ம், அடுத்து "கீரை விவசாயியின் காவியம்" என்று ஒன்று எழுதலாம் என இருக்கிறேன்.


பிகு: கோடிக்கரையா அல்லது கோடியக்கரையா? எனக்கே குழப்பம். அதுதாம் இரண்டையும் ஆங்காங்கு பயன்படுத்தியிருக்கிறேன். அறிவிப்புப்பலகைகள், பேருந்து அனைத்திலும் இரண்டையும் பார்த்ததாய் ஞாபகம்.


அன்பன்
எம்.கே.குமார்

ஜெயமோகன மதன காவியம் – 'கொஞ்சம் பழசு!'

ஜெயமோகன்  படலம்

ஜெயமோகன் எழுதிய ’கற்பழித்ததா இந்திய ராணுவம்?’ என்ற குறிப்பு அவல அதிர்ச்சியலைகளை உலகுக்கு  அறிமுகப்படுத்தியிருக்கிறது. உண்மையில், அக்குறிப்பை விட,  அதற்கு பதில் எழுதிய கவிஞர் திருமாவளவனுக்கு, ஜெயமோகன் எழுதிய புதிய பதிலில்தான் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அடுக்கி நிற்கிறது.

காந்தி, கலைஞர், எம்ஜிஆர், சிவாஜி, சுந்தர ராமசாமி, சுஜாதா என்ற ’மக்களின் மன மல்டிபிளெக்ஸ் கார்டுகளை’ பொதுவெளியில் வைத்து அகம்-புறம் என அநாவசிய நாகரிகம் பார்க்காமல் பிரித்துமேய்ந்து பிம்பம் களைப்பதை ’மாலையில் ஒரு மல்லிக் காஃபி’ குடிப்பதைப்போல இலகுவாய்ச் செய்துவிட்டுப்போனாலும் ஏதாவது ஒருவரியில் இத்துனூண்டு அறவியல் இருக்கும் எப்போதும், அட்லீஸ்ட், முடித்துவைக்கும்போதாவது.

ஆனால், நேற்று சாப்பிட்டது தயிர்சாதமா இல்லை புளிச்சாதமா என்பது போல ஒரு குறிப்பை எழுதிவிட்டு சாதாரணமாய் எழுந்துபோய்விட்டார்.

கலைஞர் டெசோவை கையில் எடுத்ததும் ஜெயமோகனும் ஈழத்தை எடுத்துவிட்டார் என நினைக்கிறேன்.

பொதுவெளியில் பேசும்போது கவனமாக இருப்பார் ஜெயமோகன். அதுவும் இதுபோன்ற வரலாற்றுத் திரித்தல்களின் அடையாளத்தைக் கவனமாக முன்வைப்பார். பாவம், தூக்கத்தில் எழுந்துவந்து அட்டைக்கத்தியுடன் போரிட்டதைப்போல பின்வாங்குகிறார், இதில்.

’தனது நெடுநாள் வாசகர்’ சொல்வதற்காகவே, ’இந்திய ராணுவம் கற்பழிக்கவில்லை’ என்று அதை முன்மொழிய முயலும் போது அவரது அறவியல் நேர்மை நடுங்கவைக்கிறது. தூக்கத்திலேயே எழுதிவிட்டாரோ என்றும் யோசிக்கவைக்கிறது. செத்தால்தான் தெரியும் சாவு என்பது என்ன வாழ்வைய்யா?

நல்லவேளை, ஷோபாசக்தியும் திருமாவளவனும் பெண்களாய் பிறந்து வன்கலவியில் சிக்கி சாவாது போய்விட்டார்கள்; தாங்களே சாட்சி என்று நேரே வந்து நின்று பேச அவர்களும் இல்லையெனில் இவ்விவாதம் என்ன ஆகியிருக்குமோ என்று அஞ்சவைக்கிறது.

தான் மிகவும் நேசிக்கும் படைப்புத்திறன் கொண்ட இருவர், சிறுகுறிப்புகளுடன் ’நடமாடும் சாட்சிகளாக’ குறுக்கே வந்தபின் குறுகுறுப்பு கொள்கிறார்;  சாமன்யனாகிறார்; சறுக்கிவிட்டதாகச்சொல்கிறார்; இந்தியாவையே அவர்கள் மன்னிக்கவேண்டும் என்கிறார்.

மிகவும் மதிக்கப்பட்ட இந்த இருவரையும் பொதுவெளியில் அதிதீவிரமாய் பந்திவைத்து பிம்பத்தைக் கரைத்துக் காயடித்தபின், குறுக்கே வர சாட்சிகளும் இல்லாத தேசத்தில் இந்திய ராணுவத்தினர் கற்பழிக்கவே லாயக்கில்லாதவர்கள் என்று வரலாற்றுத்திரிபு நடந்தால் என் செய்வது?

அமைதிப்படை அங்கே போர்க்கொடுமைகளைச் செய்யவில்லை என்று சொல்ல வரவில்லை’ என்று ஒரு சப்பைக்கட்டு வேறு. 

கவிஞர் வா மணிகண்டன் சொல்வது போல ’சர்ச்சையில் இருக்கிறது தன் இலக்கிய இருப்பிடம்’  என்று அவர் முடிவெடுத்துவிட்டால் என்னைப்போன்றவர்களுக்கும் வருத்தமே மிஞ்சுகிறது.

என்னாச்சு ஜெயமோகன்?

தீர்ப்புகள் திருத்தப்படலாம். ஐயத்தின் வீரியத்தில் அவலமாக்கிய வாழ்வைத் திருப்பித்தர யார் இயலும்?

மதன் அத்தியாயம்

கார்ட்டூன், கட்டுரை, ஜோக்ஸ், சின்னத்திரை,பெரிய திரை என்று எல்லாவற்றிலும் ரவுண்டு கட்டி அடிக்கும் மாடபூசி கிருஷ்ணஸ்வாமி கோவிந்தகுமாரைத்’ தெரியாதவர்களுக்குக் கூட ’மதன்’ என்றால் யார் எனத்தெரியும். இதில் ஆனந்தவிகடன் பங்களிப்பு என்பது நான்குக்கு நாலே முக்கால் சதவீதம் என்பது நல்லுலகிற்குத் தெரியும்.

தான் எழுதிய ஒரு பதிலுக்கு (ஆனந்தவிகடன் பாணியில் சொல்வதானால்) சுவாரஸ்யம் கூட்ட சேர்க்கப்பட்ட, ’உட்கார்ந்திருக்கும் ஜெயலலிதாவின் காலடியில் தலைவணங்கி  ஒரு தொண்டர்’ ஆசிவாங்கும் படம் அவருக்கு அதிர்ச்சியையும் தேவையற்ற மனச்சோர்வையும் கொடுத்ததாய்ச்சொல்லி ’அது தன்னுடைய வேலையல்ல’ என்று ஒரு அறிவிப்பு வேண்டுமெனக் கேட்டிருக்கிறார்.

’டிவி’ வேலை போய்விடுமே என்று பயப்படும் ’பத்திரிகையாளர் மதன்’ அரசியல் சார்பற்று நடுநிலைமையுடன் கேள்விபதிலையும் சரி, கார்ட்டூனையும் சரி காபந்து பண்ணமாட்டார் என்று விகடனே அவருக்கு ’குட்பை’ சொல்லிவிட்டது.

இத்துனூண்டு சம்பவம் இது என்று நினைக்கமுடியவில்லை. மதனின் கேள்வி-பதில் சுவாரஸ்யமற்றுப்போய் பல மாதங்கள் ஆகிவிட்டன. வலைப்பூக்களில் வரும் கார்ட்டூனாவது பரவாயில்லை, அந்த அளவிற்குக்கூட அவரது கார்ட்டூன்களில் “காரம்” இல்லை.

மாற்றம் ஒன்றே மாறாதது என்பதில் விகடன் எப்போதும் நடுநிலைமை. மாற்றம் தேடிக் காத்திருந்தவேளையில் ’படம் நழுவிக் காலில் விழுந்து’ பாதகம் செய்துவிட்டது மதனுக்கு.

விகடன் வாசகர்கள் ஏறக்குறைய எல்லோருமே விகடன் செய்தது சரிதான் என்று தீர்ப்புச்சொல்லிவிட்டார்கள்

ஒரு முகபுத்தக நண்பர், ’உட்கார்ந்திருப்பது ஜெயலலிதா; குனிந்து வணங்குபவர் மதன்’ என்றும் இன்னொருவர், “ரஃபி பெரனார்டுப்போல அதிமுகவின் அடுத்த எம்.பி மதன் தான்” என்றும் சொல்லிவிட்டார்கள்.

எனக்கு இரண்டு விஷயங்கள் தொண்டையை அடைக்கின்றன.

ஒன்று, ஆ.வி. வாசகர்களின் பார்வையில் ’அடுத்த சுஜாதா’ என்ற “அரை-பிம்பத்தில்” இருந்த மதன் மாயச்சுழலில் சிக்கிவிழுந்துவிட்டார். இனி சராசரிகளில் ஒரு சராசரியாய் சிக்கக்கூடும். (’சான்ஸ் கிடைச்சா தான் சார் சச்சின் டெண்டுல்கரே’ என்ற டயலாக்கில் எனக்கு நம்பிக்கையுண்டு.)

இரண்டு, மதனை நினைக்கும்போது உண்மையில் எனக்கு, ’மாட்டுக்கறி திங்கும் மாமி’ என்று அட்டைப்படத்தில் போடுமளவுக்கு ’தில்’ இருக்கும் ’நக்கீரனைப்’ பார்க்க திகில்லாயிருக்கிறது.

எம்.கே.குமார்.

Tuesday, May 29, 2012

சிங்கப்பூர் வாசக வட்டத்தின் ’மே’ மாத கலந்துரையாடல் - ஒரு பகிர்வு!


சிங்கப்பூர் வாசக வட்டத்தின் மே மாத கலந்துரையாடலானது கடந்த மே 20 அன்று சிங்கப்பூரின் அங் மோ கியோ தேசிய நூலகத்தில் புனைவு அல்லாதவை அல்லது அ-புனைவு படைப்புகள் என்பன குறித்து நடைபெற்றது.

கடல் போன்ற பெருவெளி கொண்டது அ-புனைவு இலக்கியம். பத்தி எழுத்து, பக்க எழுத்து, புனைவில் புகழ்பெற்றவர்களின் அ-புனைவு எழுத்து, அ-புனைவால் எழுச்சியை உருவாக்கிய எழுத்து, கடைசி பக்க எழுத்து, பயண எழுத்து, பகடி எழுத்து என எந்தவித பேதமும் இல்லாமல் கலந்துரையாடலில் கடலாடி விட்டிருந்தன அக்கடலில் கிளம்பிய அலைகள்.

கார்ல்மார்க்ஸ், ஐன்ஸ்டீன் ஆகியோரிலிருந்து ஆரம்பித்தார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திருமதி சித்ரா ரமேஷ். தொலைந்த கனவு குறித்த பார்வையைப் பகிர்ந்தார் திரு. இராம கண்ணபிரான்.

கலைஞர் மு.கவின் உடன்பிறப்பு படைப்புகள், குல்தீப் நய்யாரின் எமெர்ஜென்ஸி படைப்புகள், தினமணியின் அறிவியல் மலரில் எழுதிய நெல்லை சு முத்து, தீம்தரிகிட ஞானி, சுஜாதா, சுப்புடு, வெங்கட் சாமிநாதன், க.நா.சு, அவரின் மருமகன் பாரதிமணி அவர்கள், அண்மைய அவருடைய மாமனார் கட்டுரை, கி.ரா, புனைவிலும் அ-புனைவிலும் வெற்றிபெற்ற எஸ் ராமகிருஷ்ணன், அ-புனைவின் அதிபதி சாரு நிவேதிதா, அமரகாவியம் ஜெயமோகன், வருடிச்செல்லும் வண்ணதாசன் கடிதங்கள், அ.முத்துலிங்கம் என்னும் வாழ்க்கை வழிப்போக்கன் என எல்லைகளற்று பரவி விரிந்தது அ-புனைவு வானம்.

வால்கா முதல் கங்கை வரை, வந்தார்கள் வென்றார்கள், சங்கச்சித்திரங்கள், ஏன் எதற்கு எப்படி, எனது இந்தியா, கதாவிலாசம், கணையாழியின் கடைசி பக்கங்கள் என தொடர்ந்தன அ-புனைவு சிலாகிப்புகள்.

பத்தி எழுத்தின் தரம், பத்தி எழுத்தாளர்களின் போக்கு, எளிமையுடன் கூடிய பொருண்மை ஆகியவையும் விவாதிக்கப்பட்டு விசாலமடைந்தன.
தாயார் சன்னதி, மூங்கில் மூச்சு சுகா, ஆனந்த விகடன் வட்டியும் முதலும் முருகன், சிங்கப்பூரின் குறிப்ப்பிடத்தக்க அ-புனைவு எழுத்தான ஷா-நவாஸின் ஒரு முட்டை பரோட்டாவும் சாதா பரோட்டாவும், சிங்கப்பூர் தமிழ்முரசு எழுதும் தற்போதைய தலையங்கம் ஆகிவையும் விவாதத்தில் வந்தன.

காலில் விழாத மதன், கற்பழிக்காத ஜெயமோகன், ஆசிட் வீச்சுவழக்கு, வருடா வருடம் மாறும் வரலாறு என இம்மையை தொட்டுச்சென்றன சில பகிர்வுகள்.

இராம கண்ணபிரான், ஜெயந்திசங்கர், கேஜே ரமேஷ், ஷாநவாஸ், பூங்குன்ற பாண்டியன், மாதங்கி, ஹேமா, எம்.கே.குமார், ஆனந்தகுமார் இவர்களோடு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார் சித்ரா ரமேஷ். வழக்கம் போல அ-புனைவின் புனைவாய் கேசரியும் வடையும்!

காரல் மார்க்சின் கடும் தோழராய் இருந்தாலும் சரி, கம்பனின் காவிய தாசனாய் இருந்தாலும் சரி, மு.வ வின் முரட்டு பக்தராய் இருந்தாலும் சரி, சாரு நிவேதிதாவின் சரச சல்லாப சகலையாய் இருந்தாலும் சரி, சுந்தர ராமசாமி சுவாசித்த காற்றைச் சுவாசிப்பவராய் இருந்தாலும் சரி – உட்கார்ந்து காதுகொடுத்துக்கொண்டிருக்கும் அந்த சில மணித்துளிகளில் அடையாது அடையும் ஒரு ரசிக-வாசக புலனுகர்வு-மனப்பகிர்வு இன்பத்திற்காகவாவது கண்டிப்பாய் வரலாம் மாதம் ஒருமுறை அங்மோகியோ நூலகத்திற்கு.

சிங்கப்பூர் வாசகர் வட்டம் வழங்கும் அடுத்த கலந்துரையாடல் வரும் ஜூன் 3 அன்று மாலை 5.30மணிக்கு அங்மோகியோ நூலகத்தில். திரு வேங்கடாசலபதி சிறப்பிப்பார்.

Thursday, May 10, 2012

வழக்கு எண் 18/9(ம் எனது வக்காலத்து எண் 15/9ம்) – ஒரு பகிர்வு

படத்தின் குறிப்பிடத்தகுந்தவை :-
  1. தேர்ந்த செதுக்கியெடுத்த கதாபாத்திரத்தேர்வு, கதையில் வரும் அத்தனை பேரும் இப்படியாகவே வாழ்கிறார்கள் என்னும் நம்பகத்தன்மை தரும் தேர்ச்சி.
  2. வெகு வெகு இயல்பான நேர்த்தியான திரைக்கதை
  3. காட்சிகள் ஒவ்வொன்றிலும் வைக்கவேண்டிய விசயங்களுக்கு மெனக்கெட்டு உழைத்திருப்பது (பிளாஸ்டிக் கப், திருக்குறள், பாலன், தூரத்தில் தெறியும் பள்ளி, பட போஸ்டர் என)
  4. அகிரா குரோசோவா (அ) விருமாண்டி வகை கதைசொல் பாணி
  5. சலிப்பு ஏற்படாத வகையில் விளிம்புநிலை மனிதர்களை கதையில் இணைத்த போக்கு
  6. சின்னச்சாமி – தொலையும் கலைகளின் சாட்சியாய்.
  7. ’ஒரே கதையை இருவர் சொல்லும் முறையில்’ வேறொரு முழு கதையை முன்வைத்தல்
  8. கந்துவட்டி, விவசாயி கிட்னியை விற்று குடும்பம் காக்கவேண்டிய நிர்ப்பந்தம், விவசாய நிலங்கள் அழிப்பு என இந்தியாவின் இருதயமான கிராமக்கதைகளை இயம்புதல்
  9. முறுக்குகடை ஓனராக வரும் ஐயா (மனைவியை இழந்து, குழந்தைகள் இன்றி வாடும், பாலாஜி சக்திவேல் அவர்களின் நண்பர் அவர். அண்மையில் “நீயா நானா”வில் மனம் குமுறிக் குமுறி அழுதவர்; மனதைத் தாக்கியவர்) எவ்வளவு கொடூரமானவராக நடிக்கிறார்?!
  10. சினிமாவில் முதன் முதலாக ‘முகம் மறைக்கப்பட்ட மந்திரி’ – நிஜ உணர்வைத் தருகிறது.
  11. இரண்டுஅருமையான பாடல்கள்! இளையராஜா பாடும் உணர்வைத்தரும் ஒரு பாட்டு.
  12. தமிழ்சினிமாவில் இதுவரை வராத எதிர்பார்க்காத கோணங்களில் வைக்கப்பட்ட கேமிரா. (சிறியதால் இருந்ததால் இது சாத்தியம்.)
  13. தற்கால இளையர்களின் வாழ்வியல் தாக்கங்கள், பெற்றோர்கள் கையாளும் முறையில் அறிவிக்கப்படாத சில பதிவுகள்.
  14. சினிமா மீது விருப்பம் கொண்ட அனைவரும் குறைந்தது மூன்று தடவையாவது மீண்டும் மீண்டும் இப்படத்தைப் பார்த்து தெரிந்துகொள்ள விஷயங்கள் இருக்கின்றன.
  15. சினிமாவின் மீது ஆசையும் சமூகத்தின் மீது அக்கறையும் கொண்ட ஒரு படைப்பாளியாய் எழுந்து நிற்கும் இயக்குனர் திரு. பாலாஜிசக்திவேல்.


படத்தில் மேம்படுத்தியிருக்கவேண்டியவை:-
  1. நகைச்சுவையை ஏன் இவர் வெறுக்கிறாரோ தெரியவில்லை. (’காதலி’ல் கரட்டாண்டி, இதில் சின்னச்சாமி - இவர்களைவைத்து இன்னும் என்னென்னவோ செய்திருக்கலாம்! இரண்டிலுமே மிஸ்ஸிங்.) சில காட்சிகளுக்கு முனைந்திருப்பதைதவிர.
  2. சில குறும்படங்களை இணைத்த உணர்வாய் மட்டுமே முடியும் நெகிழ்ச்சி (முழுப்படமாய் மனதில் பின்தங்குகிறது)
  3. ஒரே கதையை இருவர் சொல்லும் முறையில், இரு வேறு கதையாய் ஆகிவிட்டமை.
  4. வேலுவின் முன்கதைச்சுருக்கம் ’அங்காடித்தெரு’ படத்தை நினைவுபடுத்துதல்.
  5. வேலுவின் முன்கதைச்சுருக்கம் ஒரு துன்பியலை மட்டுமே முன்னிறுத்துவதற்காய் வந்துபோகிறது! அப்பாவுக்காக அவன் எதையும் செய்வான் என்பதை ஒரு சில காட்சிகளில் ஆழப்படுத்தியிருக்கலாம்.
  6. காசுவோடு போய்விட்ட பாலியல் தொழிலாளி அக்கா. மீண்டும் கதையில் எங்காவது நுழைத்திருக்கலாம்.
  7. இரண்டு வரியாய் முதலில் வந்துவிடுவதால் பாடல்கள் முழுமையாய் வரும்போது ஒரு தாக்கம் இல்லை.
  8. பின்னணி இசை
  9. காட்சி எடிட்டிங்கில் ஏதோ குறைவு. கதாபாத்திரத்தின் பின்னணியைச் சுழற்றும் காட்சிகளில் சில கார்ட்டூனைப்போல! 
எம். கே.குமார்

Thursday, March 01, 2012

மன்மதன் (அம்பு) கமலின் புதுக்கவிதை!

கண்ணோடு கண்ணைக் கலந்தாளென்றால்
களங்கம் உள்ளவள் எச்சரிக்கை
உடனே கையுடன் கைகோர்த்தாளா?
ஒழுக்கம் கெட்டவள் எச்சரிக்கை


ஆடை களைகையில் கூடுதல் பேசினால்
அனுபவம் மிக்கவள் எச்சரிக்கை
கலவி முடிந்தபின் கிடந்து பேசினால்
காதலாய் மாறலாம் எச்சரிக்கை


கவிதை இலக்கியம் பேசினளாயின்
காசை மதியாள் எச்சரிக்கை
உன்னுடன் இருப்பது சுகமென்றாளா
உறுதியாய் சிக்கல் எச்சரிக்கை


அறுவடை கொள்முதல் என்றே காமம்
அமைவது பொதுவே நலமாகக்கோள்
கூட்டல் ஒன்றே குறியென்றானபின்
கழிப்பது காமம் மட்டும் எனக்கொள்


உன்னை மங்கையர் என்னெனக் கொள்வர்?
யோசிக்காமல் வருவதை எதிர்கொள்
முன்னும் பின்னும் ஆட்டும் சகடை
ஆணும் பெண்ணும் அதுவேயெனக்கொள்


காமமெனப்படும் பண்டைச் செயலில்
காதல் கலவாது காத்துக்கொள்
இப்பெண்ணுரைக்கெதிராய் ஆணுரை ஒன்று
இயற்றத் துணியும்
அணி சேர்த்துக்கொள்.


கலவி செய்கையில் காதில் பேசி
கனிவாய் மெலிதாய்க் கழுத்தைக் கவ்வும்
வெள்ளை பளிச்சிடும் பற்கள் வேண்டும்
குழந்தை வாயை முகர்ந்தது போலக்
கடும் நாற்றமில்லாத வாயும் வேண்டும்


காமக் கழிவுகள் கழுவும் வேளையும் கூட
நின்றவன் உதவிட வேண்டும்
சமயலின் போதும் உதவிட வேண்டும்
சாய்ந்து நெகிழ்ந்திடத் திண்தோள் வேண்டும்


மோதிக் கோபம் தீர்க்க வசதியாய்
பாறைப் பதத்தில் நெஞ்சும் வேண்டும்
அதற்குப் பின்னால் துடிப்புள்ள இதயமும்
அது ரத்தம் பாய்ச்சி நெகுழ்திய சிந்தயும்
மூளை மடிப்புக்கள் அதிகம் உள்ள
மேதாவிலாச மண்டையும் வேண்டும்


வங்கியில் இருப்பு வீட்டில் கருப்பென
வழங்கிப் புழங்கிட பணமும் வேண்டும்
நேர்மை வேண்டும் பக்தியும் வேண்டும்
எனக்கெனச் சுதந்திரம் கேட்கும் வேளையில்
பகுத்தறிகின்ற புத்தியும் வேண்டும்


இப்படிக் கணவன் வரவேண்டும் என
ஒன்பது நாட்கள் நோம்பு இருந்தேன்
வரந்தருவாள் என் வரலட்சுமியென
கடும் நோம்பு முடிந்ததும் தேடிப் போனேன்


பொடி நடைபோட்டே இடை மெலியவெனக்
கடற்கரை தோறும் காலையும் மாலையும்
தொந்தி கணபதிகள் திரிவது கண்டேன்
முற்றும் துறந்து மங்கையரோடு
அம்மணத் துறவிகள் கூடிடக் கண்டேன்


மூத்த அக்காள் கணவனுக்கு முக்கால் தகுதிகள் இருந்தும் கூட
அக்காளில்லா வேளையிலே அவன் சக்காளத்தி வேண்டும் என்றான்
எக்குலமானால் என்ன என்று வேற்று மதம் வரை தேடிப்போனேன்


வரவரப் புருஷ லட்சணம் உள்ளவர்
திருமணச் சந்தயில் மிகமிகக் குறைவு
வரம்தரக் கேட்ட வரலட்சுமியுனக்கு வீட்டுக்காரர் அமைந்தது எப்படி?
நீ கேட்ட வரங்கள் எதுவரை பலித்தது?


உறங்கிக் கொண்டே இருக்கும் உந்தன் அரங்கநாதன் ஆள் எப்படி?
பிரபந்தம் சொல்லும் அத்தனை சேட்டையும் வாஸ்தவமாக நடப்பது உண்டோ?
அதுவும் இதுவும் உதுவும் செய்யும் இனிய கணவர் யார்க்குமுண்டோ?
உனக்கேனுமது அமையப்பெற்றால் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான் நீ
அதுபோல் எனக்கும் அமையச் செய்யேன்


ஸ்ரீ வரலக்ஷமி நமோஸ்துதே.


****


எனக்குப்பிடித்த சிலவரிகள் இருக்கின்றன......குறிப்பாய் 7வது வரியும் 8 வது வரியும்! :-)

சிங்கப்பூரின் சங்கரன்கோவில்!


பெண் என்றால் பூ என்பார்கள், அதிலும் பெண் விவகாரம் என்றால் வெறும் பூ-விவகாரம் என்று சொல்லிவிட்டுப்போகமுடிவதில்லை. அண்மையில் அத்தகைய ஒரு விவகாரம் சிங்கப்பூர் அரசியலில் பூ வைக்கவில்லை, புயலடித்துவிட்டுச்சென்றிருக்கின்றன.

சிங்கப்பூரின் பிரதான எதிர்க்கட்சிகளில் ஒன்றான பாட்டாளிக் கட்சியின் முக்கியப்பொறுப்பில் இருந்தவரும் ’ஹௌகாங்’ தொகுதியின் எம்பியுமான ’திரு ஷின் லியாங்’ அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருப்பது ஆளுங்கட்சிக்கே அதிர்ச்சியைக்கொடுத்திருக்கும். ஏறக்குறைய பத்துவருடங்களாக கட்சியின் முக்கிய தூண்களில் ஒன்றாக இருந்தவர். தனிப்பட்ட வாழ்வின் பெண்-விவகாரம் ஒன்றில் சம்பந்தப்பட்டிருந்ததால் அவர் நீக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

1991ஆம் ஆண்டிலிருந்து ஆளுங்கட்சியை  வயித்தெரிச்சலில் வாட்டிக்கொண்டிருந்த தொகுதி இந்த ’ஹௌகாங்’. 1991, 1997, 2001, 2006 என எல்லாத்தேர்தல்களிலும் எதிர்க்கட்சி வெற்றிபெற்ற ஒரு முக்கியத்தொகுதி இத்தொகுதி. ஒவ்வொரு வெற்றியும் ஆளுங்கட்சி வேட்பாளர் வாங்கிய ஓட்டு, வித்தியாசமாய் பெற்ற வெற்றி. இடைத்தேர்தல் இப்போதைக்கு இல்லை என்று சொல்லப்பட்டாலும் ஆளுங்கட்சிக்கு சவால் விடும் சிங்கப்பூரின் சங்கரன்கோவில் இது! பார்க்கலாம் என்ன நடக்கும் என்பதை!

எம்.கே.குமார்.

Thursday, February 09, 2012

மௌனகுரு – ’த்ரில்’ குரு!


Mouna Guru will rock: Arulnidhi
தரமான சினிமாவின் ஆதார ஸ்ருதியாய்க்கொள்ளப்படும் சிறந்த திரைக்கதை மற்றும் குறைவான வசனங்கள் ஆகியவற்றை முன்னிறுத்தி வெளிவந்திருக்கும் படம் மௌனகுரு.

இந்திய போலீஸ் என்பது ஆண்டாண்டு கால பண்ணைத்தனத்தின் எதேச்சதிகாரத்தின் மிச்சமிருக்கும் எச்சம். அந்த எச்சம் ஒரு சாமன்யனை என்ன வேண்டுமானாலும் செய்யும். நீதி நேர்மை சத்தியம் அதன் முன் நிற்கவே முடியாது என்பதை மீண்டும் அழுத்தமாய்ச் சொல்கிறது இப்படம்.

அருள்நிதி சும்மாவே மௌனகுருவாகத்தான் இருப்பார். அப்படி ஒரு கேரக்டரும் அமைந்துவிட்டால்.? ’கருணாகரன்’ என்ற இந்த கதாபாத்திரத்திற்கு  அவரின் உடல்மொழியும் கேரக்டரும் மிகப்பொருத்தமாக அமைந்துவிட இந்தக்கதைக்கு வேறு எந்த கதாநாயகனுக்கும் இப்படி ஒரு சங்கமம் நேராது. தான் பைத்தியம் இல்லை என்று தன் அண்ணன், அம்மா மற்றும் காதலியிடம் நெக்குருகும் காட்சியில் கண்ணில் நிற்கிறார். கொல்லப்படப்போகிறோம் என்கிற பல இடங்களில் கண்களில் காட்டும் பயம், அதிர்வு மற்றும் தொக்கிக்கொண்டிருக்கும் உயிராசை ஆகிவற்றில் இவருக்கு இது முதல்படம்.

காதலியாக, மருத்துவம் படிக்கும் இனியா. கொடுத்த வாய்ப்புக்கு நிறைவாக வந்துபோகிறார். மருத்துவம் படிக்கும் பெண் ஆதலால், நாயகன் மனநல மருத்துவமனையில் கையாளப்படுதலை இன்னும் கொஞ்சம் எடுத்தாண்டிருக்கலாம். எதார்த்த காட்சிகள் குறைவு.

ஜான் விஜய் ’ஓரம்போ’ படத்திலிருந்து இவருக்கு நான் ரசிகன். அலட்டாத வில்லத்தனம் இவரது ஸ்பெஷல். அஸிஸ்டெண்ட் கமிஷனர் மாரிமுத்து என்ற காதாபாத்திரத்தை இவ்வளவு சிறப்பாய் வேறு யாரும் செய்திருக்கமுடியாது.

கர்ப்பிணி போலீஸ் அதிகாரி பழனியம்மாளாக உமா ரியாஸ்கான். நெஞ்சில் உரமும் நேர்மையும் இருக்குமிடத்தில் இருக்கும் மேம்பட்ட மிரட்டல் நடிப்பு இவரிடமிருந்து. சபாஷ்!

மனநல மருத்துவமனையில் கிடைக்கும் நண்பனாய் (ஆடுகள தனுஷின் நண்பன்) முருகதாஸ். ’ரொம்ப மெதுவா வளர்ற போலயிருக்கு’ என்று எதார்த்தமாய் கிண்டல் செய்வதும் ’சொல்லிட்டுப்போறது ரொம்ப கஷ்டம், சொல்லாமப்போறது கொஞ்சம் கஷ்டம்’ என்று தப்பிக்க வழி கூறுவதும் இவரை ஒரு ’கேரக்டர் ஆர்டிஸ்டா’க்கியிருக்கிறது.

தலைமுடியில் ஸ்டைல் செய்திருக்கும் கல்லூரி விடுதி நண்பரொருவர் வார்டனிடம் அதற்கு சொல்லும் காரணத்தை ’மிஸ்’ செய்துவிடாதீர்கள்.

மாரிமுத்து (ஜான் விஜய்), இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் (மது), சப் இன்ஸ்பெகடர் செல்வம் (பாலகிருஷ்ண்)  மற்றும் ஏட்டு பெருமாள்சாமி (கிருஷ்ணமூர்த்தி) ஆகிய நால்வரின் கயமைத்தனத்தில் மாட்டிக்கொண்ட அப்பாவி கருணாகரனுக்கு ஏதும் ஆகிவிடாதக்கூடாதே என பார்வையாளன் பதறும் வேளையில் கர்ப்பிணி போலீஸ் அதிகாரி பழனியம்மாளை ஏதும் செய்துவிடுவார்களோ என மனப்பறையில் அதிர்ந்துகொண்டேயிருப்பது திரைக்கதையின் நல்ல உத்தி.

பாதிரியாரின் கதை யாரும் எதிர்பார்க்காத இன்னொரு திரைக்கதை திருப்பம்.

வசனங்கள் மிகப்பெரிய பலம். காட்சிக்கும் திரைக்கதைக்கும், காமெடிக்கும்.

நிறைய என்கவுண்டர் வாய்ப்புகளிலிருந்து கருணாகரன் தப்பிப்பதில் ஹீரோத்தனம் ஏதுமில்லாமல் ஆண்டவனே அந்த வாய்ப்புகளை கொடுப்பது போலிருப்பது எதார்த்தமாய் இருந்தாலும் ’இத்தனை வாய்ப்பா’ என்ற சிறிய நெருடல் மேலிடுகிறது.

திரில் கலந்த திரைக்கதைக்கேற்ற ஒளிப்பதிவில் மகேஷ் முத்துசாமி பின்னியிருக்கிறார். இசையமைப்பாளர் தமனின் பின்னணி இசை குறிப்பிடத்தக்க ஒன்று.

இடைவேளைக்கு முன் வரும் அந்த 10 நிமிட காட்சியை எடுக்க ஐந்து நாட்கள் கஷ்டப்பட்டதை தனது படைப்பின் மேலுள்ள நம்பிக்கையின் வெளிப்பாடாய்ச் சொல்கிறார் அறிமுக இயக்குனர் சாந்தகுமார்.

எதிர்பார்ப்புடன் கூடிய ஒன்றோடொன்று பின்னப்பட்ட திரைக்கதை, அதற்கேற்ற வசனங்கள், இறுதிவரை விறுவிறுப்பு குறையாமல் கொண்டு செல்லும் திரில் இயக்கம் என முதல் படத்தில் முத்திரை பதித்திருக்கிறார் இயக்குனர் சாந்தகுமார்.

நல்ல கதையும் அதைச்சொல்லும் மேம்பட்ட திரைக்கதையும் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கும் ஒளிப்பதிவும், பின்னணி இசையும், திரைக்கதைக்கேற்ற நடிகர்களையும் கொண்ட ஒரு சினிமா முயற்சி வெற்றியைத்தக்கவைக்கும் என்ற பாரம்பரியமிக்க எதார்த்தத்தை மீண்டும் நிரூபணம் செய்கிறது இந்த மௌனகுரு.


எம்.கே.குமார்.

Search This Blog