Sunday, June 26, 2005

ஏர் இந்தியா விமானச்சேவையும் சில எரிச்சல்களும்!

பி.கே.எஸ் சிவக்குமார் அண்மையில் இந்தியா வந்துவிட்டுச் சென்றபோது, ஏர் இந்தியா விமானத்தின் வாயிலாக மும்பையில் அவர் அனுபவித்த கொடுமைகளையும் வேதனைகளையும் ஒரு பதிவில் கூறியிருந்தார். அவருடன் வந்த அவரது நண்பர் ஒருவரின் கஷ்டத்தையும் அவரது எண்ணத்தையும் அதில் குறிப்பிட்டிருந்தார். ஏர் இந்தியா விமானச்சேவை எப்படியெல்லாம் இந்தியாவின் பெயரைக் கெடுக்கிறது; கேவலப்படுத்துகிறது என்பதை ஆங்காங்கு சில இணையத்தளங்களிலும் படிக்க நேர்ந்தது.

இப்போது நான் சொல்லப்போவது கடந்த வாரத்திற்கு முந்தைய வாரத்தில் ஒருநாள், இங்கு நடந்தது. நண்பர் ஒருவர் தனது தந்தையை வழியனுப்ப சிங்கப்பூரின் 'சாங்கி' விமானநிலையத்திற்கு அதிகாலையிலேயே கிளம்பிவிட்டார். சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு காலை 09.35க்கு கிளம்ப வேண்டிய ஏர் இந்தியா விமானம் அது. விமான நிலையத்திற்குச்சென்று விசாரித்தவுடன்தான் தெரிந்தது, ஏர் இந்தியா விமானம் தாமதமாக வரும் என்பது. அரைமணி நேரமா ஒரு மணி நேரமா? எவ்வளவு நேரம் தாமதம் என்று கேட்காதீர்கள்! காலை ஒன்பதரைக்குக் கிளம்ப வேண்டிய விமானம் இரவு 10.30க்கு கிளம்பும் என்று சொல்லப்பட்டது. தாமதம் எவ்வளவு மணி நேரம்? 13 மணி நேரம்.! உருப்படுமா இது?

அந்த 13 மணி நேரத்தில், சென்னைக்கு வருபவர் அங்கிருந்து கோயமுத்தூரிலோ மதுரையிலோ நடைபெறும் திருமணத்தில் கலந்துகொண்டுவிட்டு மீண்டும் சிங்கப்பூருக்கே கூட போய் விடவேண்டிய அவசரம் இருக்கலாம். அல்லது ஏதேனும் அவசர, துயர காரியங்களாகக்கூட இருக்கலாம். வழியனுப்ப வந்தவர்களுக்கும் எவ்வளவு அலைச்சல் பாருங்கள்! சென்னையிலிருந்து 200கிலோமீட்டர் தொலைவிலிருந்து வந்து, வரவேற்க அல்லது கூட்டிச்செல்ல காத்திருப்பவர்களின் நிலை என்ன? இந்தியாவின் அரசு விமானத்தின் நிலையைப் பாருங்கள். இது ஏர் இந்தியாவிற்கு முதல் தடவையா என்றால் சத்தியமாய் அதெல்லாம் இல்லை!

ஏறக்குறைய பலதடவை இப்படித்தான் நடந்திருக்கிறது. இதோ நேற்று சென்னையில்! (தயாநிதிமாறன் தலையிட்டு விமானம் விரைவில் வர ஏற்பாடு செய்தாராமே!)
என்ன காரணம் என்று கேட்டால், ஏதோ மீன் கருவாடு ஆகும் கதையைப்போல இயந்திரக்கோளாறு, தொழிட்நுட்பக்கோளாறு என்று ஒற்றைவார்த்தையில் எளிதாகச் சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். அந்த ஒரே ஒரு வார்த்தையில் இருநூறு பேரின் உயிர்களும் அவர்களின் குடும்பங்களும் எவ்வாறு ஊசலாடுகின்றன என்பதை எப்போது அவர்கள் புரிந்துகொள்வார்கள்?

'இந்தியாவில், அன்பைக் காட்டுவதற்குக்கூட சுனாமி வரவேண்டும்' என்று யாரோ அண்மையில் சொன்னார்கள். கண்ணுக்கு எதிரில் இருக்கும் அலட்சியங்களையும் ஆபத்துகளையும் நாம் உணர்வதற்குக்கூட விபத்துகள் வரவேண்டும் போலிருக்கிறது! (அரசு சார்ந்த சேவையான) சிங்கப்பூர் ஏர்லைன்ஸையெல்லாம் பார்க்கும்போது பொறாமையும் பெருமூச்சும் தான் மிஞ்சுகிறது! என்னமோ போங்க!

எம்.கே.குமார்

Friday, June 24, 2005

அந்நியன் - எனது பார்வையில்!

(முன்குறிப்பு: அல்வாசிட்டி அண்ணாச்சி ஒழிக! :-) முழுக்கதையைச் சொன்னதற்கும், ஜிகிர்தண்டாவையும் கேஎ·ப்சி சிக்கனையும் (காதலையும் அந்நியனையும்) ஒப்பிட்டதற்கும்! )

ஷங்கருக்கு இது மறுபடியும் முதல்படம்! அதன் பிரதிபலிப்பு ·பிரேம் பை ·பிரேம் தெரியும் கவனமும் ஆழமும்! காட்சியமைப்புகளில் நிதானமும் பரபரப்பும்! கதைக்கோர்ப்பில் பழைய வெற்றிகளின் வாசனை! தரத்தில் பிரம்மாண்டம்! மொத்தத்தில் மிரட்டல்! படம் முடிந்து வெளிவருகையில் குப்பை போடத் தயங்கும் மனசு! அந்நியன் நம் எல்லோருக்குள்ளும்!

ஜென்டில்மேனின் நான்காம் பாகம், இந்தியனின் மூன்றாம் பாகம், முதல்வனின் இரண்டாம் பாகம் என்பவர்களுக்கெல்லாம் எனது ஒரே கேள்வி, 'வி.ஐ.பி' படத்தில் காட்டிய சிம்ரனின் சேலை மறைக்கும் மார்பை அல்லது இடுப்பை, எப்படி அதற்கடுத்து வந்த ஐம்பது படங்களிலும் உங்களால் ஆர்வத்துடன் காணமுடிந்தது? எத்தனை முறை பார்த்தாலும் சிம்ரனும் ஒருவர்தான் அவரது மார்பும் (நிஜமானாலும் நகலானாலும்) இடுப்பும் அதேதானே அல்லது பழையதுதானே?!'

இந்தியா முழுக்கப் பிரச்சனைகள்! இப்படியே போனால் இன்னும் இருபது வருடங்களில் குடிநீருக்குக் கொலைகள் நடக்கலாம்; கை நிறைய பணத்தை அள்ளிக்கொடுத்து அரிசி வாங்குவதற்கு வரிசையில் நிற்கலாம். பணக்காரர்கள் இந்தோனேசியாவிலும் தாய்லாந்திலும் வீடுகள் வாங்கி பயிர் செய்யலாம். இந்தியாவில் திருவாளர் லல்லுவும் அவரது சக தோழர்களும் அரச அரியணையில் அமர்ந்து புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருப்பார்கள்; எதிரில் மாடுகள் அசைபோடும்!

'ஜென்டில்மேன்' பார்த்துவிட்டு வந்து கௌதமியைப் புகழ்ந்துகொண்டிருந்தவர்களல்லவா நாம்? 'இந்தியன்' பார்த்துவிட்டு வந்து ஜாகீர் உசேனின் தபேலாவை ஞாபகம் வைத்திருப்பவர்களல்லவா நாம்? முதல்வன் பார்த்துவிட்டு வந்த கண்ணோடு ஐம்பது ரூபாய் சேலைக்கும் வேட்டிக்கும் ஓட்டுப்போட்டவர்களல்லவா நாம்? எப்படி இருப்போம்?

சந்திரமுகி வருவதற்குமுன் வந்திருக்கவேண்டிய படம்; வந்திருந்தால் வசூலில் இமாலய சாதனை நிகழ்த்தியிருக்கும். தமிழக மக்களுக்கு இப்போது இந்த 'மல்டிபிள் பெர்சனாலிட்டி தியரி' எல்லாம் கொழுக்கட்டைக்குள் இனிப்பு வைக்கும் சமாச்சாரம். நாசர் முதுகு வளைத்து சொல்லித்தரும் விஷயமெல்லாம் ஜோதிகா, வினீத்தின் கையைப்பிடித்து அழைத்துச்சென்றதில் எப்போதோ அவர்களுக்குப் புரிந்துபோனது. விவேக்கிற்கும் 'மல்டிபிள் பெர்சனாலிட்டியோ' என்ற சந்தேகம் வந்தது படத்தின் ஆரம்பத்தில். திரைக்கதையில் தொய்வு!

அம்பியாக அப்பாவியாகவும் ரெமோவாக குதூகலமாகவும் அந்நியனாக ஆக்ரோஷமாகவும் முகம் மாற்றி உடல் மாற்றி குரல் மாற்றி நடிக்க இன்னொரு கமல் வந்திருக்கிறார். பிரகாஷ்ராஜ் உடனான காட்சிக்கு விக்ரமிற்கு அவார்டு கிடைக்கலாம். லகலகல ஜோதிகமுகிக்கு இணையாக மிரட்டுகிறார் ஒரு கட்டத்தில்!

விக்ரம்தான் ஹீரோ என்பதில் எனக்கு இரண்டாம் கருத்து இல்லை. ஆனால் இன்னொரு ஹீரோவும் இருக்கிறார், அது பீட்டர் ஹெய்ன்! இவரது மகுடத்தில் சிகரம் இப்படம்! விதவிதமான மோதல்கள். ஹாலிவுட் படங்களைப் பார்ப்பது போலிருந்தது.

சதா அழகாயிருக்கிறார். விஜய் படத்து த்ரிஷாக்களை விட சில காட்சிகளிலாவது அதிகம் வருகிறார். பரவாயில்லை. பட்டுப்புடவையிலும் ஐயங்கார் வீட்டு அழகாகவும் கண்ணுக்கு விருந்தளிக்கிறார்.

நாசர், பிரகாஷ்ராஜ்(அண்ணனின் இறப்பில் இவரது ஆக்டிங் கிளாஸ்! கையை ஆட்டி அல்லது நீட்டி நடிப்பதை எப்போது விடப்போறீங்க தலை?!), ஷண்முகராஜன், நல்லது செய்பவர்கள், கெட்டது செய்பவர்கள் என நிறையப்பட்டாளம். கிளைமேக்ஸில் தங்கையின் கொலையாளியையே தேர்ந்தெடுத்தது புத்திசாலித்தனம். விவேக் காமெடி செய்கிறாரா அல்லது மற்றவர்களைக் கிண்டல் செய்கிறாரா?

இரு கேமிராமேன்கள். ஒப்படைத்த வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்கள். எவ்வளவு நேரம் தான் ஒரு இடத்தையே (ஸ்டெல்லா மேரீஸ் காலேஜாகவே இருக்கட்டும்; பொழுது போகும் வரை அங்கேயே நின்றுகொண்டிருந்தால் பசிக்காமலா போகும்?) காட்டுவது? முதல் பாடலில் பூக்களின் பின்னணி முதலில் ஆச்சரியமும் பிறகு அலுப்பும் உண்டாக்குகிறது. ஐயங்கார் பாடல் மற்றும் காதல் யானை, நோக்கியா பாடல்களை விடுத்து கடைசிப்பாடலுக்கு 'அக்மார்க் ஷங்கர்' பிரமாண்டமாய் உருவெடுக்கிறார். ரோடு, மலை, கார், பேருந்து, லாரி, மனிதர்கள் எல்லாவற்றிலும் பணம்!

வசனகர்த்தாவே (சுஜாதா) ஒரு 'மல்டிபிள் பெர்சனாலிட்டி' கொண்டவராகையால் வசனத்தில் அடைமழை! இசை சில இடங்களில் மிரட்டல். பாடல்கள் பாதிப்பரவசம்.

கதை, திரைக்கதை, டைரக்ஷன் ஷங்கரைப் பற்றி பாராட்ட ஒன்றுமில்லை. பெர்பெக்ஷனிஸ்ட்.! புதுமை விரும்பி, பிரம்மாண்டம் விரும்பி! 'ஜீன்ஸி'ற்குப்பிறகு டபுள் ரோல் செய்வது எப்படி தமிழ் சினிமாவில் எடுபடவில்லையோ அதுபோல இனிமேல் யாரும் இந்த 'ஸ்பிளிட் பெர்சனாலிட்டி' பற்றி ஒன்றும் பேசமுடியாது. சதாவை அந்நியன் துரத்தும்போது எனக்கு 'ஆளவந்தான்' ஞாபகம் வந்தது தவிர்க்க இயலாதது.

மாறுவேடத்தில் புலனாய்வுப்போலீசார் உலாவருவதும், நாயகி பாடுவார் என்பதைக்காட்ட குன்னக்குடி, சுதாரகுநாதன் தலைமையில் கூட்டம் சேர்த்துச் செலவு செய்ததும் திரைக்கதைப்பஞ்சம்; பணவிரயம்! சட்டம் வரை படித்த இந்திய நடுத்தர குடும்பத்து வாலிபனுக்கு, அவன் சட்டம் படிக்கும்வரை உலகம் நேர்மையாக இருந்ததா என்ன? திடீரென்று வானத்திலிருந்து குதித்து தமிழ்நாட்டில் விழுந்தது போல அம்பி 'பிஹேவ்' பண்ணுவது அசடு!!

கிளைமேக்ஸ் லட்டுக்குள் வைத்துத்தந்த மூக்குத்தி.

கொஞ்சம் குறைத்திருக்கவேண்டிய கிராபிக்ஸ், கொஞ்சம் தவிர்த்திருக்கவேண்டிய ஷங்கரின் பழைய ஆனால் இந்தியாவின் மார்க்கண்டேய விஷயங்கள், கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கவேண்டிய போலீஸ் சார்ந்த திரைக்கதை, கொஞ்சம் ஞாபகத்தில் வைத்திருந்திருக்கவேண்டிய சுஜாதாவின் செல்ல கிறுக்குத்தனம் ('டேய் பாடு' என்று கூப்பிடுகிறார் அந்நியன்! அருமையான அக்காரவடிசலில் ஆங்காங்கு தென்படும் கற்களைப்போல!), கொஞ்சம் (சந்திரமுகிக்கு) முன்னால் ரிலீஸ் செய்திருக்கவேண்டிய தருணம்! இவைகளைக் கவனத்தில் கொண்டிருந்தால் வசூலில் மெகா சாதனை படைத்திருக்கவேண்டிய அந்நியன் இப்போது கையைக்கடிக்காமல் பயணிப்பான்.

இரண்டாம் முறை படத்தைப்பார்க்க தியேட்டருக்குப் புறப்பட்ட நண்பரிடம், இந்தியாவிற்குச் செல்லும் போது குப்பை போடாமல் இருக்க முயலுங்கள் என்றேன், பார்க்கலாம் என்றார்! 'அந்நியன்'தான் பார்க்கவேண்டும்!

எம்.கே.குமார்.

Thursday, June 09, 2005

புத்தகத் தோணியில் நான்!

எச்சரிக்கை: 1. தனக்குப் பிடித்தவர்களாய் அழைத்து அவர்களுக்கும் முதுகு சொறிந்து தானும் சுகமாய் சொறிந்து கொள்ள நினைப்பவர்களுக்கு!

எச்சரிக்கை: 2. தனது வட்டத்தை விட்டு வெளியே வராத குறுகிய மனப்பான்மையோடு 'எங்கிட்டே இம்புட்டு இருக்கு; உங்கிட்டெ என்ன இருக்காம்?' என்று தற்பெருமை 'கணக்கு' காட்ட முனைபவர்களுக்கு!

எச்சரிக்கை: 3. 'நம்மையும் யாராவது அழைப்பார்கள்; பிறகு எழுதலாம்' என்று காத்திருப்பவர்களுக்கு!

எச்சரிக்கை: 4. ஆங்கிலப்பெயர்களுக்கும் புத்தகங்களுக்கும் கடகடவென்று கூகுளைத் தட்டும் நண்பர்களுக்கு.!

எச்சரிக்கை: 5. எல்லாம் படித்து முடித்து 'இவரு மட்டும் எதுக்கு பத்துப்பேரை கூப்பிட்டுருக்காரு?!' என்று முனகுபவர்களுக்கு!
***************************

நன்றி:1. பித்தளை மற்றும் மண் சாமான் சட்டிகளை, சுருங்கிய தனது பாவாடையை மடித்து உள்ளே அள்ளிப்போட்டு, 'அதெல்லாம் உஞ்சாமான், இதெல்லாம் எஞ்சாமான்; வெளையாடுறவரைக்கும் வெச்சுக்க, அப்பொறம் குடுத்துறணும் சரியா' என்று கேட்டு கூட்டாஞ்சோறு வெளையாட்டில் என்னையும் கூட்டு சேர்த்த, 'பால்யகால பருவகால' சில குழந்தைத்தெய்வங்களுக்கு!

நன்றி: 2. ஒரு அறை முழுவதையும் புத்தகத்துக்கு ஒதுக்கி மினி லைப்ரேரியாய் தனது இல்லத்தை வைத்திருக்கும் அவ்வப்போது புத்தகங்களையும் அன்பளிப்பு தரும்
நண்பர் மானாஸாஜென்னுக்கு!

நன்றி: 3. 'வா, வா! இப்போ புத்தகத்தால் வெளையாடலாம். இதெல்லாம் நான் படிச்சேன்; எதெல்லாம் நீ படிச்சாய்!' என்று ஆர்வத்தோடு அழைத்த
இனிய தோழி ஜெயந்தி சங்கருக்கு!
********************

எனது படுக்கையறையைச்சுற்றி இன்று புத்தகமாய் கிடப்பவைகளின் எண்ணிக்கை, ஏறக்குறைய அறுபது + இருக்கும். இந்தியாவில் ஒரு 50+. (பாதி ஓஸியில் போய்விட்டது!) ஆங்கிலம் தமிழ் எல்லாம் சேர்த்துத்தான்.

1.ஸ்ரீ மத் பகவத் கீதை-சுவாமி சித்பவானந்தா உரையுடன்
பகவத் கீதை- தமிழில் பாரதியார்
2. இஸ்லாம் ஒரு எளிய அறிமுகம்- ரூமி
3.சித்தர் பாடல்களின் மொத்த தொகுப்பு.
4. தமிழ் இலக்கிய வரலாறு-.மு.வ
5.பாரதியார் கவிதைகள் -2
6.பாரதியின் சரித்திரம்-செல்லம்மாள் பாரதி எழுதியது.
7.சத்திய சோதனை-
மகாத்மாவின் மொழிகள்
8.காலச்சுவடு கவிதைகள்
9. காலச்சுவடு நேர்காணல்கள்
10. ஜே ஜே சில குறிப்புகள்
11. உப பாண்டவம், துணையெழுத்து
12.கலாப்ரியா கவிதைகள் தொகுப்பு 2
13.அசோகமித்திரனின் கட்டுரைத்தொகுப்பு (காலக்கண்ணாடி)
14. 18 வது அட்சக்கோடு அசோகமித்திரன்
15.திலீப்குமாரின் சிறுகதைத்தொகுப்பு
16.இரா.முருகனின் நாவல் மற்றும் சிறுகதைத்தொகுப்பு.
17.பாராவின் கட்டுரைத்தொகுப்பு, நாவல், சிறுகதைத்தொகுப்பு,
18.சேவியர் கவிதைகள்
19. சொக்கனின் 'சச்சின்' மற்றும் சில புத்தகங்கள்
20.கிராவின் 'வயது வந்தவர்களுக்கு மட்டும்'
21.காலச்சுவடு கண்ணனின் 'வன்முறை வாழ்க்கை'
22.ஜெ கே யின் 'அறிந்ததினின்றும் விடுதலை!'
23.பொன்னியின் செல்வன்
24.Eight Keys to Greatness-GENE. Landrum
25.The laws of nature
26.How to become a successful speaker-DOn Aslett.
and some 'HOT' novels!

இது போக இன்னும் பல புத்தகங்கள்!

அண்மையில் படித்தவை!

1. புயலிலே ஒரு தோணி ப.சிங்காரம். (விரைவில் எனது பார்வை வரும்!)

2.பால் நிலாப்பாதை -இளையராஜா (பாரதிராஜா,கமலஹாசனின் முன்னுரை!)

3.பால்வீதி-அப்துல் ரகுமான் (வேலிக்கு வெளியே தலையை நீட்டிய என் கிளைகளை வெட்டிய தோட்டக்காரனே! வேலிக்கு அடியில் நழுவும் என் வேர்களை என்ன செய்வாய்?)

4.தமிழில் ஒரு முழுமையான பாலியல் நூல்- டாக்டர். மாத்ருபூதம். (பெயர் மறந்து போச்சு! நன்றாக எழுதப்பட்ட ஒரு நூலில் ஆங்காங்கு தமிழ் சினிமாப்பாடல் வரிகள் வந்து வெறுப்பேத்துகின்றன!)

5.அகிரா குரோசோவா-சுயசரிதை (பாதியில் நிற்கிறது!)

6.மூத்த தமிழ் எழுத்தாளர்களைப் பற்றிய ஜெயமோகனின் விமர்சனக்கட்டுரைகள் (3 பேரூக்கு ஒரு புத்தகமாய் வெளியிட்டிருக்கிறார்!)

7. மாலதி மைத்ரியின் அண்மைய கவிதைத்தொகுப்பு

8.குட்டி இளவரசன்

9. கிராவின் முழு சிறுகதைத்தொகுதி-அகரம் வெளியீடு

10.புதுமைப்பித்தனின் கடிதங்கள்- தனது மனைவிக்கு!

எனக்குப்பிடித்த புத்தகங்கள்!

1. மோகமுள், செம்பருத்தி, அம்மா வந்தாள் மற்றும் மரப்பசு -தி.ஜானகிராமன்
2. புயலிலே ஒரு தோணி ப. சிங்காரம்
3. ஜே.ஜே சில குறிப்புகள்- சுந்தர ராமசாமி
4. உப பாண்டவம்- எஸ்.ரா
6.திசைகளின் நடுவே-ஜெயமோகன்
7. குட்டி இளவரசன்
8.பொன்னியின் செல்வன் கல்கி
9.பிரிவோம் சந்திப்போம் சுஜாதா
10. மெர்க்குரிப்பூக்கள் பாலகுமாரன்
11. ஜண கண மண-மாலன்
12. எண்ணங்கள்- எம்.எஸ்.உதயமூர்த்தி


அடிக்கடி புரட்டும் நூல்கள்:

1.சித்தர் பாடல்கள்
2.பாரதியார் கவிதைகள்(வாரம் ஒருமுறை!)
3. அசோகமித்திரனின் காலக்கண்னாடி
4. திருக்குறளின் ஆங்கிலப் பதிப்பு

ஒரு தொடருக்காக படித்துக்கொண்டிருக்கும் நூல்கள்:
1. முன்னாள் தலை மகன் லீ குவான் இயூ
2. The singapore story
3.From third world to first!
4. the leaders of singapore
5. சிங்கப்பூரில் தமிழ் வளர்ச்சி குறித்தான ஆய்வுகள்
6.Management of Success-singapore story.

இனி நான் அழைக்கப்போகும் சிலர்:

1.ஈழநாதன்
2.மானஸாஜென்
3.எல்.ஏ.ராம்
3.அருண் வைத்தியநாதன்
4.குழலி
5.மூர்த்தி
6.டிசே தமிழன்
7.கார்த்திகேயன் ராமசாமி
8.செல்வராஜ்
9.முத்து
10.நாராயணன்
11.துளசி கோபால்
12.செல்வநாயகி

Search This Blog