Friday, October 14, 2005

நோய்க்கூறு சிந்தனை = எஸ்.ஜே.சூர்யாஹ்?

இந்தமாத காலச்சுவடின் சினிமா பகுதியில், திரு. அ.ராமசாமி எழுதியிருக்கும் இக்கட்டுரை எஸ்.ஜே.சூர்யாஹ்வையும் அவரது சினிமா மற்றும் தமிழக ரசிகர்களின் நாடிபிடிப்புப்புலமையையும் வெளிச்சமிட்டுக் காட்ட முயல்கிறது.

முதலில் அக்கட்டுரையிலிருந்து சில வரிகள்:

ஒரு ஆணும் பெண்ணும் படுக்கையறையில் மிக நெருக்கமாக இருக்கும் காட்சிகளை சுவரொட்டிகளாக்குவதன் மூலம் தனது படம் படுக்கை அறைக் காட்சிகள் நிரம்பிய படம் எனச்சொல்ல விரும்புகிறார் சூர்யா. எப்படிப்பட்ட படுக்கையறைக்காட்சிகள் என்பதை மேலும் விளக்க அவர் பயன்படுத்தும் உத்திதான் B.F அதாவது அ.ஆ.

அந்தப்படத்தின் சுவரொட்டியை மிக அருகில் சென்று வாசித்தால் மட்டுமே 'அன்பே ஆருயிரே' என்பதும் 'Best Friend' என்பதும் உங்களது கண்களுக்குப்புலப்படும். அப்படிச் சுவரொட்டியின் மிக அருகில் சென்று பார்க்கும்போது மிகக் கவனமாகச்செல்லவேண்டும். உங்களூக்குத்தெரிந்தவர்கள் யாராவது பார்த்தால் சுவரொட்டியில் ஆணும் பெண்ணும் உறவு கொள்ளும் மோகநிலைக்காட்சியை அருகில் பார்க்கச்செல்கிறீர்கள் எனக் கருத இடமுண்டு. மேலும் அதன் மூலம் நீங்கள் ஒரு நீலப்பட விரும்பி என நினைத்துக்கொள்ளவும் வாய்ப்புண்டு. உங்களூக்கு உங்கள் ஆளுமை மீது கவலையில்லை என்றால் அச்சுவரொட்டிகளையும் எஸ்.ஜே.சூர்யாவின் படங்களையும் பார்க்கலாம்.

இதற்கு முன்பு வந்த அவரது வாலி, குஷி, நியூ என எல்லாப்படங்களுமே எஸ்.ஜே.சூர்யாவின் இரட்டை அர்த்த மோக வசனங்களைக் கொண்டதாகவே இருக்கின்றன என்பதைத் தனியாகச்சொல்லவேண்டியதில்லை.

'வாளிப்பான உடல்களைக் காட்டுவதும் அவற்றில் பொதிந்துள்ள ரகசியங்களைத் தேட எதிர்ப்பாலினர் முயல்வதைச் சொல்லாடலாக மாற்துவதும் மட்டுமே பார்வையாளர்களுக்குப் போதுமானது' என்பதுதான் இயக்குனர் சூர்யாவிற்கு வந்துள்ள நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் பேரிலேயே தனது மூன்றாவது நான்காவது படங்களில் தானே நாயக நடிகராகவும் ஆகியுள்ளார்.

தனது முதல் படமான வாலியில் ஒரு இயக்குனராய் வசனம், பாடல் காட்சியமைப்புகளின் ஒழுங்கு மற்றும் காமிராகோணங்கள் ஆகியவற்றை ஓரளவு சரியாகச்செய்த சூர்யா தனது நான்காவது படத்தில் இவற்றையெல்லாம் தவறவிடுகிறார் என்றால் பார்வையாளர்களுக்குத் தேவை எதிர் பால் உடல்களின் நெருக்கமும் அவைகளைப் பற்றிய பேச்சும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் என்றுதானே அர்த்தம். இந்த முடிவு, குடிப்பவர்களூக்குத் தேவை போதை மட்டுமே என நினைத்துச்செயல்படும் கள்ளச்சாராய வியாபாரிகளின் நோக்கம் போன்றதுதான்.

சூர்யாவின் நான்கு திரைப்படங்களூம் ஒரே சட்டகத்தின் மேல் உருவாக்கப்பட்டுள்ள திரைக்கதைகள் தான்.

உடல்பற்றிய ரகசியங்களை முன்வைக்கும்பொழுது பார்வையாளர்களின் மனமோ உடலோ வேறு எதையும் எதிர்பார்க்காது என்றும்கூட அவர் நம்புகிறார். வழக்கமாகத் தமிழ் சினிமாக்கள் நம்பிக்கை வைக்கும் காமெடிக்காட்சிகள், சண்டைக்காட்சிகளில் சூர்யா அதிகம் நம்பிக்கை வைத்திருப்பதாகத்தெரியவில்லை. படத்தின் நாயகி புதுமுகமானாலும் பரவாயில்லை; இளமையும் வாளிப்பும் கொண்ட உடலும் அதை வெளிப்படுத்தத் தயங்காத மனமும் கொண்டவராக இருந்தால் மட்டுமே போதும் என்பதும் அவரது நம்பிக்கையாக இருக்கிறது. உடல் - அதிலும் பெண்ணுடல் பற்றிய பரவசம், அதுதான் அவரது ஒரே ஆதாயம்.

கலைகளின் பெயரால் சில உடல்கள் விற்கப்படுவதும் அதனைக் காசுகொடுத்துப் பார்ப்பதன் மூலம் நுகரும் சில பார்வையான உடல்களும் மனங்களூம் நோய்க்கூறுகளுக்குள் நுழைய நேரிடும் என்றால் கூடுதல் கவனம் செலுத்தத்தானே வேண்டும்.
*******
அண்மையில் அ.ஆ படத்தை நானும் பார்த்தேன். படத்தைப் பற்றி விமர்சனம் எழுதி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.


தமிழ் சினிமாக்களில் ஒரு பாடல்காட்சிக்கு மட்டும், அதிலும் ஹீரோவை/வில்லனை மயக்கவோ அல்லது வில்லன்கள் கூடும் இடத்தை ஹீரோ கண்காணிக்கும்பொழுதோ அல்லது ஹீரோ எசகுபிசகாக மாட்டிக்கொள்ளும் ஆதிவாசிகள் மத்தியிலோ என சிலுக்கு சுமிதாவையோ அனுராதாவையோ அல்லது காலை இறுக்கிப்பிடிக்கும் வகையில் உடை போட்ட நடனப்பெண்மணிகள் ஆடும் நாட்டியத்தையோ கொண்ட சினிமா வியாபார அச்சாரத்திற்கு இன்றைய எஸ்.ஜே.சூர்யாஹ் போன்றவர்கள் செய்துகொள்ளும் சமரசம் திரு. அ.ராமசாமி சொன்ன கள்ளச்சாராய வியாபாரத்திற்கு ஒத்ததுதான்.

வாலி, குஷி, நியூ மற்றும் அ.ஆ படங்களின் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாஹ்வைப் பற்றி புரியாதவர்கள் யாரும் இருந்துவிடப்போகிறார்கள் என்ற அவரது எண்ணத்தை உடைக்கும் வகையில், 'அ.ஆ' படத்தில் அவராகவே, "இந்த நாய்க்கு என்ன பிடிக்கும் என்று இவங்களூக்குத்தெரியாதா" என்று உங்களைக் கைகாண்பிக்கிறார். அது ஒன்றே அடுத்து வரப்போகும் நான்கைந்து படங்களின் வெற்றிக்கு அச்சாணி என்பதை தமிழ்நாட்டு 'பி, சி' ரசிகர்கள் தங்களது சீழ்கை மூலம் உறுதி செய்யாமலா இருந்துவிடப்போகின்றனர்.

'வாலி' படத்தில் சிம்ரனின் அறிமுகக் காட்சியின் காமிரா கோணமே 'திரு.கர்ணன்' அவர்களுடையதற்கு இணையாக எப்படி ஆரம்பிக்கும் என்பதை யாரும் மறக்க முடியாது. இதே ராமாயணக்கதையையே இந்தளவுக்கு 'பெண்ணுடல் பரவசம்' இன்றி வெளிப்படத்திய இதற்கு முந்தைய வெளியீட்டுப்படமான மு.களஞ்சியத்தின் 'பூமணி', பெரிய அளவு வெற்றி பெறாததும் சூர்யா தனது ரசிகர்கள் மேல் கொண்ட நம்பிக்கையை தெளிவாக்குகிறது.

'குஷி' படத்தின் அடிப்படை கருத்துக்கு அப்படம் பத்து நாட்கள் கூட ஓடியிருக்கக்கூடாது. ஆனால் வெள்ளிவிழா காண்கிறது என்றால் 'கட்டிப்புடிடாவை'யும் கவனத்தில் கொள்ளாமல் விடமுடியாது. 'நியூ' படத்தில், 'மடிசார்' பெண்ணுடலை அவரின் நம்பிக்கையாளர்களுக்கும் 'தாய்மை-பாசம்' என ஒரு பத்து நிமிடம் அத்தகைய நம்பிக்கையாளர்களுக்கும் தீனியாய் போட்டு வெற்றிபெற்றதை யாரும் மறைக்க முடியாது.

எஸ்.ஜே சூர்யாஹ்வின் சினிமா மீதான முழுப்பரிணாமத்தையும் கவனமாக உற்று நோக்கும் யாருக்கும் இன்னொன்று தோன்ற வாய்ப்பிருக்கிறது. மக்களின் அல்லது சராசரி ரசிகர்களின் மனத்தைப்புரிந்துகொண்டவர்களாக இவர்கள் நடத்தும் விளையாட்டு தொடர்ந்து இப்படியே நடந்து, நிறைய வசதியும் அறிமுகமும் வந்தபிறகு இதே 'தரத்தைக் கொண்ட' பக்திப்படங்களை எடுத்து பெயர் காப்பாற்றிக்கொண்டு (அல்லது அப்படி நடித்து) ஏதாவது ஒரு இயக்கத்திலோ அல்லது அரசியலிலோ சேர்ந்து சமூகத்தொண்டாற்றவும் கூட்டமாய் இவர்கள் கிளம்பக்கூடும். (இதற்கு தற்போதைய உதாரணங்கள் நிறைய இருக்கின்றன!)

சமுதாயத்தின் அடிப்படையில் வக்கிரத்தை முளையிட்டு வாழ நினைக்கும் இத்தகைய பாவிகளின் வாழ்தலானது கேடுகெட்ட அரசியல்வாதிகள், கந்துவட்டிக்காரர்கள், கள்ளச்சாராய வியாபாரிகள் மற்றும் வன்புணர்பாலியல் குற்றவிலங்குகளின் வாழ்வை விட எதிலும் மேம்பட்டதுமில்லை; நியாயமனதுமில்லை. வன்மையாக கண்டிக்கப்படவேண்டியவர்கள் இவர்கள்!

எம்.கே.

7 comments:

அன்பு said...

நான் இன்னும் குமுதம், ஆவி அளவிலேயே இருப்பதால்... நேற்றுவ்ரை திரு அ.ராமசாமி யாரென்று தெரியாது. நேற்றுத்தான் அவர் இதுபோன்று திரைப்படங்கள் தொடர்பாக எழுதியிருந்த காலச்சுவடு, உயிர்மை, இன்ன பிற பத்திரிக்கையில் வந்த கட்டுரைகளின் தொகுப்பை நூலகத்தில் பார்த்தேன் - எடுக்கவில்லை.

இன்று இந்த பதிவுக்கு நன்றி.

அண்மையில் அ.ஆ படத்தை நானும் பார்த்தேன். படத்தைப் பற்றி விமர்சனம் எழுதி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

நீங்க விமர்சித்தால் என்ன, விமர்சிக்காவிட்டால் என்ன - குறைந்தபட்சம் அவருடைய படங்களையெல்லாம், ஒவ்வொருபடத்திலும் எந்தெந்தவிதமான அறிமுகங்கள், வேறு என்னென்ன செய்கைகள், வசனங்கள் என்று ஊர்ந்து கவனித்து விடுகின்றீர்கள்.

அவருக்கு, உங்களைபோன்ற ரசிகர்கள்தானே வேண்டும். தொடர்ந்து (விமர்சனம் எழுத விரும்பாமல்) விமர்சனக்கண்ணோட்டத்தோடு படம் பார்த்து விட்டு இது மாதிரி 4 நல்ல படங்கள் போடுங்கள்.

மிக்க நன்றி.

எம்.கே.குமார் said...

//இது மாதிரி 4 நல்ல படங்கள் போடுங்கள்.///

அன்பின் அன்பு,
பின்னூட்டத்திற்கு நன்றி.

இக்கட்டுரையின் கருத்துக்கும் இப்படங்களுக்கும் தொடர்பில்லை என்றால் அவற்றை நீக்குவதில் எனக்கு எவ்வித தடங்கலும் இல்லை.

எம்.கே.

ஜெ. ராம்கி said...

//அவருக்கு, உங்களைபோன்ற ரசிகர்கள்தானே வேண்டும்//

correct. avoid pannirukkalam!

Mookku Sundar said...

எம்.கே,

ரொம்ப ஜுடாயிட்டீங்க போலிருக்கு.
இந்த "ஒரு மாதிரி" படங்கள் ஆதி காலத்திலேர்ந்து ஓடிக்கிட்டு இருக்கு அண்ணே. ஆனா, இவனுகளால ஒண்ணும் பேர் போட முடியாது. ஆடுற வரைக்கும் ஆடிட்டு, அகப்பட்டதை சுருட்டிகிட்டு, முடில ஏதாவது கட்சில்யில் ஐக்கியமாயிடுவனுங்க.

நமக்கு என்ன புடிச்சா பாப்போம். இல்லாட்டி, படிக்கலையின்னு சொல்றதுக்காக கட்டாயம் ஒரு முறை பாத்துடுவம் :-)

கூல் டவுன் ப்ளீஸ்...

எம்.கே.குமார் said...

///correct. avoid pannirukkalam///

யோவ், ர.ரா, எதையா அவாய்ட் பண்ண்யிருக்கலாம்? படம் பாத்ததையா?
படம் பாக்காட்டி எப்படிய்யா உங்களையெல்லாம் அதைப்பாக்கவேண்டாம்ன்னு சொல்லுறது?

அன்பு மூக்கு,

////நமக்கு என்ன புடிச்சா பாப்போம். இல்லாட்டி, படிக்கலையின்னு சொல்றதுக்காக கட்டாயம் ஒரு முறை பாத்துடுவம்///

அதேதான், நம்ம தலையைக்கொடுத்தாவது நாலு பேரைக் காக்க முடிஞ்சாச்சரி! சரியா மூக்கு? ;-)
அதெல்லாம் இருக்கட்டும், நான் விட்டாலும் கூல் ஆனாலும் தமிழ் நாட்டு வழக்கறிஞர்களும் பொதுமக்களும் விடமாட்டாங்க போல.
கள்வனின் காதலி படத்துக்கும் ஏதோ எதிர்ப்பு.

இது மறுபக்கம் நல்ல விளம்பரமாகவும் போயுடுது அவருக்கு. ;-(

பின்னூட்டங்களுக்கு நன்றி ர.ரா மற்றும் மூக்கு.

எம்.கே.

Anonymous said...

சில விசயங்களப் பத்திப் படமே எடுக்கக்கூடாது என்று எதிர்ப்புக்காட்டுவதுதான் நோய்க்கூறின் பிறப்பிடம்.

ஜோ/Joe said...

//அவர் இதுபோன்று திரைப்படங்கள் தொடர்பாக எழுதியிருந்த காலச்சுவடு, உயிர்மை, இன்ன பிற பத்திரிக்கையில் வந்த கட்டுரைகளின் தொகுப்பை நூலகத்தில் பார்த்தேன் - எடுக்கவில்லை.//

அன்பு,
எந்த கிளையில் பார்த்தீர்கள்?

Search This Blog