Sunday, October 31, 2004

அரசியல் கண்ணா அரசியல்!

ஜெயலலிதா அம்மையார் கரன் தப்பாருடன் பேசிய போது, 'சினிமாவில் மட்டுமே நடிக்கத்தெரிந்த எனக்கு அரசியலில் நடிக்கத்தெரியவில்லை' என்றார். இதைச் சொல்வது ஜெயலலிதா அம்மையார் என்பதால் வழக்கம்போல அப்படியே புறந்தள்ளிவிடக்கூடாது. அம்மையாரின் (இன்றைய தவறு உட்பட) அனைத்துத் தவறுகளுக்கும் இந்த அரைகுறைப்பழக்கமும் ஒரு காரணம் என்பதை அரசியல் பார்வையாளர்கள் உணர்வார்கள்.

நேரில் பேசமுடியாத சில விஷயங்களை முரசொலி வழிக் கிண்டல் செய்யவும் வேறுபடுத்தி நடிக்கவும் அம்மையாருக்குத் தெரியவில்லை. நேரில் இனிமையாகப் பேசி, பிறகு பொம்மைக்கத்தியைக் காட்டி மிரட்டியது போல சிரித்துக்கொண்டே புகைப்படம் எடுக்கச்சொல்லிவிட்டு படக்கென்று பொம்மைக்கத்தியை நிஜமாய் உருவி முதுகில் குத்தத் தெரிந்திருக்க வேண்டும். இவையெல்லாம் அம்மையாருக்குச் சொல்லித்தர நெருக்கமான யாருமில்லை. எப்போதாவது 'சோ' மாதிரி சொந்தங்கள் வந்து 'அட..இப்படிப் பண்ணும்மா..'என்று 'எடுத்து'க்கொடுத்துவிட்டுப் போனால் உண்டு. இல்லாவிட்டால் கலைஞரின் 'கீதை வழி'ச்சொந்தங்கள் யாராவது வந்து 'ஹோம் ஒர்க்' செய்யவேண்டும். இதெல்லாம் செய்தாலும் காரியத்தின் இறுதியில் காரியமே கெட்டுவிடுவது போல் அம்மையாரின் பிறவிக்குணம் வந்து முன் நின்று விடும். இப்படியெல்லாம் இருந்தாலும் சிம்மராசியும் நட்சத்திரமும் ஜோவியலாக அம்மையாரை ஆட்கொண்டிருக்கிறது. அது ஆடும் ஆட்டம்; அத்தனையும்!

இதெல்லாமிருக்கட்டும். அரசியலில் அடிப்படைத்தேவைகள் என்ன என்பதை வெறும் ஊடகங்கள் வழியாக செய்திகளாகவும் நகைச்சுவைத் துணுக்குகளாகவும் நாம் பார்த்திருக்கக்கூடும். கண்டு நகைத்திருக்கக்கூடும். ஆனால் நிஜமாய் அங்கு நடப்பதுதான் என்ன? அரசியலில் அவ்வளவாய் ஜொலிக்காத தமிழருவி மணியன் சொல்கிறார். அது முழுக்க முழுக்க நிஜம் என்பதை ஒரு 'தேர்தலின் வழி அனுபவித்தவன்' என்ற முறையில் நான் மிக நன்றாக அறிவேன்.

79 வயதிலும், பையன்களே பதவிக்காகச் சண்டை போடும் நிலையிலும் இன்றுவரை அதிகாலை 3 மணிக்கு எழுகிறார், முரசொலியில் எழுதுகிறார், வட்டத்தலைவர்களைக் கூட நினைவில் வைத்து பேசுகிறார், சாமர்த்தியமாக சிலரைப் பழிவாங்குகிறார் என்றால் இவை அனைத்துக்கும் காரணமென்ன என்பதை ஒருநிமிடம் யோசித்துக்கொள்ளுங்கள். தகுதிகள் தெரிகிறதா இப்போது? 'இன்றைய அரசியலில்' நிலைத்து நிற்க வேண்டும் என ஒருவன் விரும்புவானாகில், அவன் கைகொள்ள வேண்டியதும் கடைபிடிக்கவேண்டியதும் கலைஞரின் ராஜதந்திரங்களைத்தான்! அதற்கு அடுத்து எம்.ஜி.ஆர்! கவனியுங்கள்..இன்றைய அரசியலில்..இன்றைய அரசியலுக்காக!

அண்மையில் மத்திய உள்துறை அமைச்சருடான உரையாடலைப் பதிவு செய்து வெளியிட்டதும் கூட அம்மையாரின் அத்தகைய குணங்களுல் ஒன்று என்றுதான் சொல்வேன். 'வீ£ரப்பனைச் சுட்டுக்கொள்வதற்கு சில மணித்துளிகள் முன்னால் விஜயகுமாருக்கும் ஜெ.மேடத்திற்கும் நடந்த உரையாடல்' எனக்கு வேண்டும். அம்மையார் வெளியிடுவாரா?

சுயவிருப்பங்களில் பொதுத்திட்டங்களை நகர்த்துவதும் பொதுத்திட்டங்களில் சுய நலத்தைக் காட்டுவதும் தவிர்க்கவேண்டிய ஒன்றல்ல, இன்றைய அரசியலில். ஆனால் அவை இரண்டையும் எப்போது சரிவிகிதத்தில் கலந்துகொள்ளவேண்டும் எப்போது ஒன்றைவிட்டு மற்றொன்றைப் பிரித்து வைத்திருக்க வேண்டும் என்பவைதான் அரசியலில் ஒருவன் கற்றுக்கொள்ள வேண்டிய பாலபாடம். இன்னும் அம்மையார் அதைக் கற்றுக்கொள்ளாததே அவரின் பாஸிட்டுவானதும் நெகட்டிவானதுமாகும்.
ரஜினிகாந்த் இன்றும் அரசியலில் நிலை தடுமாறித்திரிவதும் எம்.எஸ் உதயமூர்த்தி சுரம் குறைந்து போனதும் ராஜாஜியின் பேரன் காங்கிரஸில் பின்னிறுத்தப்படுவதும் ஏன் வைக்கோவையும் கூட இந்த லிஸ்டில் சேர்த்துக்கொள்ளலாம். (அன்பு அண்ணனிடம் இன்னும் அவர் கற்கவேண்டியது எவ்வளவோ இருக்கிறது.) முகம் தெரியாது பெயர் தெரியாது அரசியல் களத்தில் நின்று தொலைந்து போய்விட்டவர்கள் இன்னும் ஏராளம்பேர்!இப்போது தமிழருவி மணியனும் இவர்களில் ஒருவர். வலம்புரி ஜானும் ஒருவர்.

இதற்கு எதிரான களத்தில் வெற்றிகரமாக நிற்பவர்கள் என்றால் கலைஞரை விடுங்கள், அவர் பல்கலைக்கழகம். ராமதாஸ் அய்யாவை எடுத்துக்கொள்ளுங்கள். நடிகர்களில் விஜயகாந்திற்கு அத்திறமை கொஞ்சம் இருப்பதாக எனக்குத்தோன்றுவதுண்டு. கவிஞர்களில் கவிப்பேரரசு கொஞ்சம் அறிவார் அவ்வித்தையை! பிற அரசியல் தலைவர்களில் 'எங்க ஊர் ஆள்' திருநாவுக்கரசருக்கு 100% அந்தத்திறமை உண்டு. இன்னும் நிறையப்பேரைச்சொல்லலாம். திருமாவளவனையும் சேர்த்துக்கொள்ளுங்கள். ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு அதில் சமத்து பத்தாது.

தமிழருவி மணியனின் கட்டுரையில் சிங்கும் கலாமும் வேறுபட்டவர்கள் என்பதாய் வருகிறது. உண்மைதான். மதம் வந்தபோது திறமை வந்தது. மதம் வராயிருக்காவிட்டால் திறமையும் வராது. திறமை இருந்தாலும் தெரிந்தாலும் வராது. வேற்றுநாட்டவரா என்ற பிரச்சனையால் சிங் வரமுடிந்தது. அதாவது திறமை! இந்நிலையில் ஒன்றை மட்டும் யோசியுங்கள்..கலாம் இஸ்லாமிய இனத்தவராய் இல்லாவிட்டால் எவ்வளவுதான் திறமையானவராய் இருந்தாலும் ஜனாதிபதியாகி இருப்பாரா? மிகவும் மேலானவர் அவர்! இதைவிட நல்லபதவியாக கிடைத்திருக்கும், நாலு ஏழைக்குழந்தைக்கு வாத்தியாராக!

ஆக அரசியலில் முதலில் விளையாடுவது ஜாதீயமும் மதங்களுமே! (அதானாலேயே தூத்துக்குடியில் ஒரு நாடாரையும் திருநெல்வேலியில் ஒரு நாடார் அல்லது தேவரையும் நாகர்கோவிலில் ஒரு கிறித்துவரையும் (கிறித்துவ நாடார்) வேலூரில் ஒரு பாயையும் விழுப்புரத்தில் ஒரு வன்னியரையும் ராமநாதபுரம், மன்னார்குடி, தேனிப்பகுதிகளில் ஒரு முக்குலத்தோரையும் நிறுத்துகிறது கழகங்கள்; கட்சிகள்! ஜெயலலிதா எப்படி வேலூரில் ஒரு இந்துவை நிறுத்தி ஜெயிக்கவைக்க முடிந்ததென்றால் அப்போது கலைஞர் பி.ஜே.பி. குழுமத்தில் இருந்தார். அதானாலேயே அவரின் மகமதிய நபர் கூடத்தோல்வியைத் தழுவ நேரிட்டது.)

இப்போது தமிழருவி மணியன் சொல்வதைப் பாருங்கள். உண்மையான இந்தியநாட்டு நல விரும்பியாய் நீங்கள் இருந்தால் அடுத்தமுறை ஓட்டுப்போடும்போது இவ்வார்த்தைகளையும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். அல்லது அரசியலில் நுழைந்தால் அனைத்தையும் கற்றுக்கொண்டு தெளிவா(க்)க் வாருங்கள்! வாழ்த்துகள்!

எம்.கே.


"இன்றைய அரசியல் உலகத்தின் பொது இலக்கணம் என்ன?

உள்ளுக்குள் வஞ்சம் வளர்த்து உதடுகளில் புன்முறுவலைப் பூசிக்கொள்ள வேண்டும். பொய் முகங்களோடு போலியாகப் பழகத் தெரிய வேண்டும். இல்லாத திறமைகளை யும், பெருமைகளையும் இருப்பதாகச் சொல்லி, விதம் விதமாய் பூச்சொரிந்து பல்லிளிக்க வேண்டும், பணத்துக்கும், அதிகாரத்துக்கும், பணிந்து நடக்க வேண்டும். எங்கே வளைய வேண்டுமோ அங்கே வளைந்து, எவருக்கு முதுகு சொறிய வேண்டுமோ அவருக்கு முதுகு சொறிந்து, கைகூப்பி வாய் பொத்தி நிற்க வேண்டும். குறைந்த பட்சம் கள்ளச் சாராயம்காய்ச்சி யாவது கணிசமாகப் பணம் வைத்திருக்க வேண்டும். கட்டைப் பஞ்சாயத்துக் கலையைக் கற்றுத் தேர்ந்திருந்தால் இன்னும் நல்லது. சாதிக் கட்டுமானம் பின்புலமாக இருப்பது மேலும் நல்லது. இந்திய அரசியலில் இன்று வெற்றிபெற அடிப்படை அரிச்சுவடி இதுதான். இதுதான் பொது விதி. அப்துல் கலாமும், மன்மோகன் சிங்கும் பெற்ற வெற்றிகள் விதிவிலக்குகள்."

தமிழருவி மணியன்.

நன்றி: விகடன்.

2 comments:

Kasi Arumugam said...

நல்ல அலசல். விரக்தியாக இருக்கிறது குமார்.
-காசி

Mookku Sundar said...

தனி வாழக்கையில் ஏமாற்றுக்காரன் என்று சொல்லப்படுபவர்கள்தான், பொது வாழ்க்கையில் ராஜதந்திரி.
அரசியலில் ஏமாற்றுவது தவறல்ல - அது தேவை அங்கே.

இதைத்தான் சொல்ல வர்றீங்க..??

Search This Blog