Sunday, January 30, 2005

ஒரு அனுதாபமும் ஒரு அஞ்சலியும்!

எதற்கும் வளையாத நடுநிலை நாயகங்களாய் தங்களைக் காட்டிக்கொள்ள விழையும் சில வணங்காமுடிகளைக் கூட 'அதெல்லாம் இல்லை, இப்போ பாரு எப்படி படக்குன்னு பல்டியடிப்பான்னு' காட்டுவதற்காக இயற்கை சில நேரங்களில் சந்தர்ப்பங்களைக் கொடுத்து கவிழ்த்துக்காட்டும்! அந்த சந்தர்ப்பத்திற்காக சிலரை எப்போதும் நான் கவனித்துக்கொண்டே இருப்பதுண்டு! வணங்காமுடிகளின் வளைவும் குனிவும் அழகானதுதானே!

இந்தவார துக்ளக் அட்டைப்படம் எனக்கு அதைத்தான் ஞாபகப்படுத்தியது. இந்த விஷயத்தைப் பற்றி நான் இரு வாரங்களுக்கு முன் எழுத நினைத்தாலும் நேரம் கிடைக்கவில்லை. இப்போது துக்ளக் அட்டைப்படம் அதைச் சொல்லத்தூண்டி விட்டு விட்டது.

சங்கரராமன்கொலை வழக்கின் குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் ஒப்படைத்துவிட்டு வந்த விசாரணை அதிகாரி பிரேம்குமார் எஸ்பி யிடம், 'இவ்வழக்கு வெற்றி பெறுமா' என்று ஒரு பத்திரிகை நிருபர் கேட்க, அவர் ரொம்பவும் அமைதியாகவும் அடக்கமாகவும் சொன்னார், 'இக்கொலை, வரதராஜ பெருமாள் கோவிலுக்குள்ளே நடந்திருக்கிறது. கடவுளுக்கு முன்பே நடந்திருக்கிறது. அவர்தான் அனைத்திற்கும் சாட்சி. ஆக பெருமாளுக்கும் காஞ்சி மடத்துக்கும் நடக்கும் வழக்கு இது. நாமெல்லாம் வெறும் கருவிகள் தான்'.

ஒரு போலீஸ் அதிகாரி என்பதைத் தாண்டி எனக்கு அவர்மேல் ஒரு மரியாதை வந்துவிட்டது மனதில். 'கொலை நடந்திருப்பது உண்மை! அதுவும் கோவிலுக்குள் நடந்திருப்பது உண்மை! குற்றவாளிகள் யாரென்பதை எனக்குத் தெரிந்தவரை விசாரித்து ஒப்படைத்துவிட்டேன். இனி நிஜத்தின் வழி நடப்பது நடக்கட்டும்! எது சரி என்று கடவுள் நினைக்கிறாரோ அது நடக்கட்டும்.' என்பதாய் இதை நான் எடுத்துக்கொண்டேன். இதில் என்ன தவறு?

இந்து மக்களின் உணர்வுகளுக்கு சமாதி கட்டி அதற்கு மேலே அடிக்கடி மேல்பூச்சு பூசிக்கொண்டிருக்கும் கலைஞர் (வெட்கங்கெட்ட அவர்களுக்கு இது தேவைதான்!) கேவலமாய் கிண்டல் அடித்தார். 'ஆக, பெருமாள் வருவாரா சாட்சி சொல்ல? அவருக்கும் சம்மன் வழங்கப்படுமோ?'

வயதால் முதிர்ந்த ஒருவர் எவ்வளவுதான் நாத்திகவாதியாயினும் எவ்வளவுதான் சமயச்சார்பற்ற கூட்டணி படைத்து சாதித்தவராயினும் பலநூறாயிரம் மக்களின் உணர்வுகளை இப்படியெல்லாம் புண்படுத்தலாமா? இன்னும் புண்படுத்தவேண்டுமா?

ஒரு போலீஸ் அதிகாரி எப்படிச் சொல்லலாம்? அதுவும் இவ்வழக்கில் மட்டும்? என்றும் சிலர் கேட்கிறார்கள். கொலை நடந்தது கோயிலுக்குள்! எல்லா கொலை வழக்கு விசாரணையிலும் 'என் பணி முடிந்துவிட்டது இனி எது நடக்க வேண்டுமோ அது நடக்கட்டும். அது எனக்கு சம்பந்தமில்லை' என்று விசாரணை அதிகாரி சொல்லலாம். ஆனால் இக்கொலை கோயிலுக்குள் நடந்ததால் பெருமாளையும் சேர்க்க வேண்டி வந்திருக்கிறது. ஆக, வழக்கின் முடிவில் அவர் நிரபராதி என்று வந்தால், 'பெருமாள் தவறான தீர்ப்பை அல்லவா சொல்லிவிட்டார்' என்றல்லவா நினைக்கத்தோன்றும் என்றும் சிலர் நினைக்கலாம். அப்போது மட்டும் இந்து மக்களுடைய உணர்வுகள் பாதிக்கப்படாதா என்றும் தோன்றலாம். 'ஒரு காரியத்தைச் செய்யும் வரை முழு நிலையோடிரு. பிறகு நடப்பது எதுவும் உனக்கானதில்லை' என்ற பகவத் கீதையின் முழக்கம் எப்படி இவர்களுக்குத் தெரியாமல் போனது?

இந்நிலையில் துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் இதே பாணியில் 'குண்டர் சட்டத்தில் போட்டுவிடுவார்களோ' என்று கடவுளே பயந்து கொண்டிருப்பதாய் அட்டைப்படம் போட்டிருக்கிறார். (ஜெயலலிதா இவ்விசாரணையில் முழு நிதானத்தைக் கடைபிடிக்கிறாரா? குண்டர் சட்டம் அவசியம் தானா என்பதெல்லம் இரண்டாம் கேள்விகள்!)

'நேரத்திற்குத் தகுந்ததாய் மாறிக்கொள்ள விழையும் சோ அவர்களை இப்போது பார்' என்று இயற்கை எனக்கு ஒரு சந்தர்ப்பம் அளிப்பதாகவே எனக்கு இப்போது தோன்றுகிறது. பிரேம்குமார் எஸ்பி. சொல்லிய வார்த்தைகளின் உட்பொருள் அறியத் தெரியாவதவரா திரு. சோ அவர்கள்? தமக்கு 'இஷ்டமில்லாத' ஒரு நல்ல காரியத்தை யார் சொன்னாலும் தவறா? இப்படியொரு 'இரண்டாம் நிலையில்' இருந்துகொண்டு 'ஹிந்து மஹா சமுத்திரம்' என்று ஹிந்து மதத்தின் அருமை பெருமைகளை எழுதப்போகிறாராம் இவர்?! அப்போதாவது, 'கீதை சங்கரமடத்திற்கும் மேலானது' என்பது இவருக்குத் தெரியட்டும்!

ஆக இனிமேலும் இவர்கள் அடிக்கப்போகும் வார்த்தை பல்டிகளுக்கும் செயலுக்கும் இப்போதே எனது அனுதாபங்கள்!

ஒரு அஞ்சலி!

இதுவும் தாமதமாகத்தான் வருகிறது.

முன்னால் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு. மு.மு. இஸ்மாயில் அவர்களுக்கு எனது இதய அஞ்சலிகள்!

நீதித்துறையில் இவருடைய பணி சிறப்பானது என்று யார் யாரோ சொல்லக் கேட்டிருக்கிறேன். அதில் இவர் எனக்குப் பரிட்சயமாகவில்லை. ஆனால் கம்பர் வழி பரிட்சயமானார்.

தான் ஒரு இஸ்லாமிய இனத்தவராய் இருந்தாலும் கம்ப ராமாயணத்தின் பால் மிகுந்த வேட்கை கொண்டு அதில் பல்பெருகிக்கிடக்கும் இலக்கியச்சுவைகளூக்குள் கிடந்து வாழ்ந்தவர். உருண்டவர்! கம்பராமாயணத்தில் மிகவும் ரசிக்கந்தகுந்ததாய் இவர் எழுதிய சில புத்தகங்களைச் சில வருடங்களுக்கு முன்பு படித்திருக்கிறேன். (அப்புத்தகங்களை எனக்கு அறிமுகப்படுத்திய எனது முந்தைய சக தொழிலாளி சகோதரர் திரு. முருகேசன். ஆறுமுகனேரி, தூத்துக்குடி மாவட்டம் அவர்களை இப்போது நன்றியோடு நினைக்கிறேன்.)

கம்பராமாயண விஷயங்களை மிகவும் இனிமையாய் எழுதியிருப்பார் மு.மு இஸ்மாயில் அவர்கள். 'கண்டேன் சீதையை' என்ற வார்த்தையின் ஜீவனைக் கூட இவர்வழிதான் படித்தேன் என நினைக்கிறேன்!

ஒரு தேர்ந்த இலக்கிய ரசனாவாதிக்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகள்!

எம்.கே.குமார்.

2 comments:

Balaji-Paari said...

intha pathivu nandru.
Thiru. Ismaail avargalai patriya kurippum nandru. Ippathivirku nandrigal

எம்.கே.குமார் said...

தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி பாலாஜி பாரி.
நன்றி மீண்டும் வருக!

Search This Blog