Saturday, May 03, 2008

இருட்டை வெறும் இருட்டு என்றுதான் நினைத்திருந்தேன் - வண்ணதாசனுக்கு நன்றி!

திருச்சியின் மையப்பகுதியில் செருப்பு தைப்பவரைத்தேடி அலைந்து ஏழு எட்டு மணி அளவில் பிரதான சாலை ஒன்றில் ஒருவரைத் தரிசித்தேன். நீர்த்தேங்கியிருந்த பள்ளமான சாலைப்பகுதியைத் தாண்டி அவர் அமர்ந்திருந்தார். நான் சென்ற நேரம் அன்றைய அவரது பொழுதின் முடிவுக்காலமாதலால் எல்லா உபகரணங்களையும் மூட்டை கட்டிவிட்டி வெளியிலிருந்து பார்க்க நன்கு இறுக்கி நையப்பட்ட ஒரு குப்பைத்தொட்டியைப்போன்ற தோரணையுள்ள ஒரு இடமாக்கிவிட்டு எழுந்து நகரவிருந்தார். நான் வந்து அவரிடம் சேர்ந்தபொழுது அவர் என்னை வெகு எளிதாய் உதாசீனப்படுத்தியிருக்கக்கூடும். ஏனெனில் நான் வேண்டியது அத்தனை மூட்டையையும் பிரித்து எடுத்து செய்யத்தகுந்த வருமானம் தரக்கூடிய வேலையில்லை. ஆனாலும் சாலைத்தூசிகள் சூழ்ந்த உலகில் வண்டிச்சத்தங்களும் இரைச்சலும் முண்டியடிக்கும் வெளிச்சத்துக்கு ஏமாந்த அவ்வேளையில் ஒட்டுமொத்த மூட்டைகளையும் பிரித்து குத்தூசியையும் நூலையில் எடுத்து அவர் அவ்வேலையைச்செய்தார். இரண்டு விஷயங்கள் என்னை வசீகரித்தன. அவ்வேலையைச் செய்ய அவர் காட்டிய முனைப்பும் அக்கறையும் ஒன்று. மற்றொன்று எங்களிடையே சிறு மின்னலைப்போல தோன்றி மறைந்த நாங்கள் இருவரும் திருப்தியடைந்த ஒரு தருணம்! பெரும் மின்னல் ஒன்று வெட்டிச்சென்றபின் அதைச் சார்ந்து ஒரு வெளிச்சம் பரவிக்கிடந்து மறையுமே அதைப்போல அது இன்றுவரை மறைந்தும் மறையாததாய் இருக்கிறது. பல்வேறு பிரிவுத்துவம் வாய்ந்த இவ்வாழ்வில் எதையும் சாராது வரும் பூரணத்துவம் மிகுந்த அந்தத் திருப்தியானது எத்தகைய புனைவும் எளிதில் தராத ஒன்று. வண்ணதாசன் கதைகளில் அம்மின்னலும் அதன் தாக்கமும் எனக்கு நிறைந்திருக்கிறது.

வண்ணதாசனின் சிறுகதைத்தொகுப்புகளில் 'நடுகை' (பாதிமட்டுமே) மற்றும் 'கிருஷ்ணன் வைத்த வீடு' ஆகிய இரண்டை மட்டும் வாசிக்கும் பாக்கியம் இக்காலத்தில் எனக்கு கிட்டியிருந்தது.

தனது திருமணத்திற்கு மேளம் வாசித்தவரைப் பற்றிய ஒரு கதை, அமரர் ஊர்தியைப் பின்தொடருபவனைப் பற்றிய இன்னொரு கதை, தனது மாமரத்திலிருந்து சிறுகுச்சி ஒன்று ஒடிக்கப்படுவதை உணர்ந்து வீட்டிலிருந்து எழுந்து வரும் கிழவியின் கதை, வெறும் மின்மினிப்பூச்சிகளின் வெளிச்சத்தில் அலசப்படும் "தாழம்பூ" தாத்தாவின் கதை, நகர வாழ்க்கையில் நிலை தடுமாறி ஊர் திரும்ப ஏங்கும் 'நெல்லை சிவாஜி' குத்தாலிங்கம் அண்ணாச்சியின் கதை என கதை என்ற பெயரில் நிகழ்வுகள் பதியப்படுவதை நெகிழ்ச்சியுடன் ஆமோதிக்கிறேன்.

நினைவில் ஒரே மாதிரியாகத்தான் நகர்ந்து போகிறார்கள் - மேளம் வாசிப்பவர்கள் அனைவரும் எனக்கு; தரையில் சிந்தும் பூக்களைத் தவிர்த்துக்கொண்டே அமரர் ஊர்தியைப் பின் தொடர்ந்து சென்றவர்களில் நானும் ஒருவன்; கிழவியினுடைய மாமர குச்சியின் வாசனையை குழந்தையின் காதுக்கடியில் கிடைக்கும் பால்வாசனையாய் உணர நேர்ந்தமையில் ததும்பிய மகிழ்வு; நீளமான கூந்தலைக்கொண்ட தலையில் தவழும் தாழம்பூவின் நறுமணத்தில் தாத்தாவை விட நான் திளைத்திருந்தமையில் கிடைத்த மோகம்; சில பேருடைய குடிவாசனை மட்டும் எப்போதுமே எனக்கு பிடித்திருந்தாய் இருக்கும் நிலைமை என மனம் இளகும் உயிர் நெகிழும் ஐம்புலன்களும் ஏங்கும் இலக்கிய சுகத்தை சில கதைகள் ஏற்படுத்திச்சென்றிருக்கின்றன.

அடுக்கி வைக்கும் செங்கல்களைப்போல நிகழ்வுகளால் கதையைக் கட்டமைக்கும் கலையைக் காண நேருவதுண்டு. ஒரே ஒரு செங்கல்லைக்கொண்டு தாஜ்மஹாலையே கட்ட முயலும் சம்பவத்திற்கிணையான இலக்கியங்களுமுண்டு. செங்கல்லையே காட்டாது அதைப்பற்றிய உலகை அலசும் கதைகளுமுண்டு. ஒரே ஒரு செங்கல்லைத் திரும்ப திரும்பப் பார்த்து அதன் செம்மைத்தனத்தை பதிய முற்படுவதும் உண்டு. வண்ணதாசனின் கதைகள் இதை அடிப்படையாகக்கொண்டது என நினைக்கிறேன். பலமுறை பார்ப்பதால் உண்டாகும் இயற்கையான சலிப்பையும் மீறி ஏதோ ஒன்று தர முயலுவது இவரது படைப்புகளின் வெற்றிக்கதையாகும்.

'யாருக்கும் தெரியாது என்று நினைத்திருந்த', நடந்து பார்க்காத சசிப்பெண்ணின் பாதத்தை துணியால் வேலைக்காரன் மூடுவதை மறக்க நினைத்தும் முடியாத 'கிருஷ்ணன் வைத்த வீடு' மறக்க முடியாத ஒரு கதை மட்டுமல்ல; செவ்வியல் சிறுகதையின் கட்டுமான வடிவத்திற்கு மிகச்சிறந்த ஒரு உதாரணமும் என்பேன். சிறந்த வாசகனை இக்கதை தத்தெடுத்துக்கொள்ளும் என்பதை உணர நேருகையில் மகிழ்கிறேன்.

அப்போது எனக்கு பத்து வயதிருக்கும். மாமா வீட்டிற்கு எதற்காகவோ சென்றிருந்தேன். அங்கு என்ன நடந்தது என்பதும் ஞாபகமில்லை. ஆனால் நான் திரும்ப வேண்டும். இரவு எட்டு-ஒன்பது மணிக்கு காட்டின் வழியே எனது வீட்டுக்கு நான் திரும்பவரவேண்டிய சூழ்நிலை. யாரும் துணைக்கு இல்லை. எதற்கு துணை என்று இப்போது நினைத்தாலும் அன்று அந்த இருளைக் கடந்து வீட்டுக்கு வந்துசேர்ந்த சம்பவத்தையே நான் அடைந்த மிகப்பெரிய வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாக இன்றுவரை நினைத்துக்கொண்டிருக்கிறேன். வெற்றி என்றால் யாரை எதிர்த்து? இருட்டையா? இருட்டு எனக்கு என்ன செய்தது? இருட்டு எப்படி எனக்கு எதிரியானது? இருட்டை ஜெயித்தேன் என்றால் இருட்டுக்கா நான் பயந்தேன்? இல்லை இருட்டின் அடையாளங்களுக்கா? இருட்டின் அடையாளங்கள்தான் என்ன? பூச்சி, பாம்பு, பேய், பூதம், திருடர்கள்? அதுசரி, இருட்டின் அடையாளங்கள் இவைகள் மட்டும் தானா?

இருட்டை தேர்ந்த புகைப்படக்கலைஞனைப்போல, ஓவியனைப்போல அடிக்கடி அலசுகிறார் வண்ணதாசன். சாலாச்சி அக்காவும், திலகா அக்காவும், சந்திமுனைப் பிள்ளையாரும் இருளும் வெளிச்சமும் போல எங்கும் நிறைந்திருக்கிறார்கள்.

இவ்விரு தொகுப்புகளிலும் கதைகளை எங்கும் நான் காணவில்லை. வெறும் புனைவு மட்டுமே கதை என்று கொண்டோமானால் அவைகள் எவற்றையும் இத்தொகுப்புகளில் நான் காணவில்லை. புனைவுகளின் தட்டையான தடங்களை எங்கும் நான் தரிசிக்கவில்லை. வாழ்க்கை, வாழ்க்கை, வாழ்க்கை மட்டுமே கதைக்களங்களில் விரவிக்கிடக்கின்றன.

நண்பர் மானசாஜென்னிடம் பேசிக்கொண்டிருந்தபொழுது 'நிலை' என்று வண்ணதாசனின் ஒரு கதை இருப்பதாய்ச் சொன்னார். நான் இப்போது அதைப்படிக்கவில்லை. ஆனால் 'நிலை' என்ற பெயரில் ஏறக்குறைய ஏழுவருடங்களுக்கு முன் ஒரு கதை படித்தேன். சிறந்த சிறுகதைகளாய் யாரோ ஒருவர் தொகுத்த அத்தொகுப்பில் அதுவும் ஒன்று. நள்ளிரவு வரை வேலை செய்துவிட்டு தீபாவளிக்கு முந்தைய இரவில் வீடு திரும்பும் ஒருவனின் கதை அது. அந்தக் கதையும் அதில் வரும் லாரியில் அடிபட்டுச் செத்துக்கிடக்கும் ஒரு எலியும் இன்றுவரை நினைவிலாடுகின்றன.

இரண்டு விஷயங்களுக்காய் திரு. வண்ணதாசனுக்கு நான் நன்றி சொல்ல விழைவது எதார்த்தமானது என நினைக்கிறேன்.

ஒன்று, நேற்றுவரை இருட்டு, வெறும் இருட்டாகவே எனக்கு இருந்திருக்கிறது - இப்போது அது, நெருங்கிய ஒரு உறவாகி விட்டிருக்கிறது -

இரண்டாவது, எப்போதும் பார்வையிலிருந்து எளிதாய் நகர்ந்துவிடும் எந்த ஒன்றையும், இப்போது மீண்டும் ஒருமுறையாவது பார்க்க ஆரம்பித்திருக்கிறேன் - வண்ணதாசனால்!

அன்பன்,
எம்.கே.குமார்.

நன்றி: வாசகர் வட்டம், சிங்கப்பூர்.http://vasagarvattam.blogspot.com/

5 comments:

ஷைலஜா said...

வண்ணதாசனின் கதைகள் ஒவ்வொன்றுமே வண்ணமாய் இருக்கும்...இப்போ உங்க கைவண்ணத்தில் மேலும் மிளிர்கிறது
அன்புடன்
ஷைலஜா(நினைவிருக்கலாம்?:)

எம்.கே.குமார் said...

நன்றி பஞ்சவர்ணக்கிளி அவர்களே!

நினைவிருக்கும் வரை, நெஞ்சம் மறப்பதில்லை!

எம்.கே.

வனம் said...

வணக்கம்

நானும் படித்து இருக்கின்றேன் வண்ணதாசனின் கதைகளை அவைகள் கதைகளாய் இருப்பதில்லை நமக்குள் ஓடும் வாழ்கையாய் இருக்கும்

எனக்கு மிகவும் பிடித்த கதை '' அப்பாவை கொண்றவன்''

நன்றி

இராஜராஜன்

மாதங்கி said...

வாழ்த்துகள் குமார்

காலச்சுவடு சிறுகதைப்போட்டியிட்டில் முதல் பரிசு பெற்றதற்கு

எம்.கே.குமார் said...

வருகைக்கும் பின்பதிவுக்கும் நன்றி திரு. ராஜராஜன்.

பாராட்டுக்கு மிக்க நன்றி மாதங்கி.

அன்பன்
எம்.கே.

Search This Blog